Thursday, March 02, 2006

சோறூட்டு

முன்னிரவு நேரம்; பூரணநிலா;
வானமெங்கும் பொறிமீன்கள்;
வீடெல்லாம் போக்குக் காட்டி,
உறவைக் காட்டித் "தென்றல்"
குழந்தைக்குச் சோறூட்டத்
தாய் பாடும் பாட்டு
----------------------------------------------------------------
"சோறூட்டு"

தங்கக் குட்டி சிரிச்சதுக்கு - ஒரு வாயி
தாவிவந்து அணைச்சதுக்கு - ஒரு வாயி
நங்கி நங்கி நடந்ததுக்கு - ஒரு வாயி
நாவை நீட்டித் தொறந்ததுக்கு - ஒரு வாயி

பொங்குநிலா பார்த்ததுக்கு - ஒரு வாயி
பொறிமீன்கள் புடிச்சதுக்கு- ஒரு வாயி
தங்குமடி அமர்ந்ததுக்கு - ஒரு வாயி
தவ்வியெனை உவந்ததுக்கு - ஒரு வாயி

செங்கமல இதழுக்காக - ஒரு வாயி
சிறியமுத்துப் பல்லுக்காக - ஒரு வாயி
எங்கேஉந்தன் கையைநீட்டு - ஒரு வாயி
எடுத்துள்ளே போட்டுவிடு - ஒருவாயி

எங்கவீட்டு தென்றலுக்காய் - ஒரு வாயி
எதுத்தவீட்டு அக்கைக்காக - ஒரு வாயி
பங்குதரும் சித்தப்பாவுக் - கொரு வாயி
பரிசுதரும் சித்திக்காக - ஒரு வாயி

அங்கேவரும் அப்பாவுக்காய் - ஒரு வாயி
ஆடுகட்டில் கிட்டுத்தாத்தா - ஒரு வாயி
இங்கேபாரு சாலாபாட்டி - ஒரு வாயி
இனியஅம்மா எனக்காக - ஒரு வாயி

சங்கூதும் நேரமாச்சு - ஒரு வாயி
சாமிகோயில் மூடுறாங்க - ஒருவாயி
தங்கக்கட்டி சாப்பிட்டாச்சு - ஒருவாயி
சோறெல்லாம் முடிஞ்சுபோச்சு - செல்லக்கண்ணே!

என் செல்லம்! என் தங்கம்! என் ராசாத்தி!
என் தென்றல் பெண்ணே! ம்ம்ம்! உச்!
----------------------------------
தாயின் கொஞ்சலில் நாம் இடையூறலாமோ?
கிளம்பலாம், வாருங்கள்

அன்புடன்,
இராம.கி.

10 comments:

வசந்தன்(Vasanthan) said...

அப்பாடா!
23 வாய் சாப்பிட்டாச்சு.
போகலாம் வாருங்கள்.

RS said...

Very very pleasant to read :)

Anonymous said...

¸¢ðÎ ³Â¡ ¬Î¸ðÊÖìÌ ÅóÐÅ¢ð¼¡÷¸Ç¡?
¬ÚÓ¸ò¾Á¢Æý

இராம.கி said...

வசந்தன், RS,

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.

ஆறுமுகம்,

கிட்டு அய்யா ஆடுகட்டிலுக்கு அருகில் வந்துவிட்டார்கள்! ;-)

அன்புடன்,
இராம.கி.

Thangamani said...

//கிட்டு அய்யா ஆடுகட்டிலுக்கு அருகில் வந்துவிட்டார்கள்! ;-)//

unga paeththiya? :)

இராம.கி said...

அன்பிற்குரிய தங்கமணி,

மேலே கண்சிமிட்டும் ஓவத்தைப் (icon) பார்த்தீர்கள் தானே?

ஆறுமுகம் என்னை உரிமையோடு கிண்டல் செய்ய, நான் அளித்த மறுமொழி அது. ஆடுகட்டில் நிலைக்கு அருகில் வந்தாயிற்று என்றுதான் என் அகவை சொல்லுகிறது.

சோறூட்டுப் பாட்டு, இன்னும் உலகுக்கு வந்து சேராத, ஆனால் வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்கும், எங்கள் பேத்தி பற்றியது தான். மகனும் மருமகளும் எங்கள் எதிர்பார்ப்பைப் பார்த்து புன்முறுவல் கொள்ளுகிறார்கள்.

சவுதியில் இருந்தபோது, திடீரென்று தோன்றியது. எழுதினேன். இப்பொழுது அதைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மீண்டும் மனத்தில் ஊன்றிக் கொண்டது.

சுவையான நினைவுகளில் தோயும் போது அவை பாவாகத் தெறிப்பது எனக்கு எப்போதாவது ஏற்படும் நிகழ்வு.

அன்புடன்,
இராம.கி.

மஞ்சூர் ராசா said...

அய்யா
இதுபோல குழந்தைகளுக்கான
பாடல்களை நீங்கள் நிறைய எழுதவேண்டும்.

உங்கள் அனுமதியோடு முத்தமிழ் குழுமத்திலும் இதை இடுகிறேன்.
நன்றி

மஞ்சூர் ராசா said...

அய்யாவுக்கு, இந்தப்பாடல் முத்தமிழ் குழுமத்தில் இட்டிருக்கிறேன். உங்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

Anonymous said...

vERY NICE TO READ AND TO RECITE.ALL THE SONGS RECITE BY MOTHERS IN TAMILNADU ARE CONVENTIONAL ONE. THIS INSPIRES ME ALSO WRITE SUCH ONE WITH SIMPLE WORDS. VAZHGA VALAMUDAN.THANGAM

Mani Narayanan said...

பாப்பாவுக்குக் கதை சொல்லி சோறு ஊட்டும் பாங்கு அருமை.குழுந்தைக்குப் பல உறவுகளும் இயற்கை வளமும் பாடம் போதாப்பதைப் போல் அமைகிறது. குழந்தையின் கேள்வி ஞானம் அதிகரிக்கும்.ஞாபகச்சக்தியும் வரிவடையும். கடைசியில் அம்மாவுக்காக ஓரு வாயி சோறு! அருமையான கவிதை. காதால் கேட்கக் கேட்க குழுந்தைக்குப் பாடல் வரிகள் மனப்பாடம் ஆகிவிடும். கல் ஒன்று. மாங்காய்கள் பல! பலே!பலே!