Monday, March 20, 2006

எழிற் கொள்ளை

பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணைப் பாவனையில், கலிப்பா பாடுவது நம்மவருக்கு வழக்கம். அதன் தொடர்ச்சியாய், இந்தக் காலத் திரைப் பாக்கள் பலவற்றிலும் கூடக் கலிப்பாவின் தாக்கம் உண்டு. பலர் பாடும் இசைப் பாக்களும், இறைவனைப் பற்றிய கீர்த்தனைப் பாக்களும் கூடக் கலிப்பாவில் கிளைத்தவையே! (கலித்தம்>கயித்தம்>கீத்தம்>கீதம்; கீத்தம்>கீர்த்தம்>கீர்த்தனை.) அகத்திணைப் பொருளுக்கு மாறாக, ஒரு கலிப்பாவில், புறத்திணைப் பொருளை, புவியோடு நடக்கும் ஓர் உரையாடலை, அதுவும் கொள்ளை போகும் ஒன்றைப் பற்றிய அலசலை, "ஏன் வியந்தும் ஓர்ந்தும் சொல்லக் கூடாது?" என்ற உந்தலில், எழுந்த முயற்சி இது. சந்தவசந்தம் மடற்குழுக் கவியரங்கில் பாடியது.

"எது எழில்?" என்ற ஆறடித் தரவிற் தொடங்கி, (தரவு என்பது கலிப்பாவின் முதல் உறுப்பு; இது ஒரு preamble போல, கலிப்பாவில் முதலில் வந்து நிற்கும். தந்தது, தரப்பட்டது - எனவே இது தரவு. இந்தக் காலத்தில் புதிய விளக்கம் பெற்று, data என்ற சொல்லுக்கு இணையாய் தரவு என்ற சொல் ஆளப் படுகிறது.) பின்னர் தாழிசை வழி (இது தான் இந்தக் காலச் சரணங்கள்; தாழப்பட்ட இசை தாழிசை; தோய்ந்து, ஆழ்ந்து பாடப்படும் இசை; சரணம் என்ற பொருளும் இது தான்.), பல்வேறு கேள்விகளைத் தொடுத்து, எழிலின் அடியோசையான ஒழுங்கின் பங்கை ஓதி, "மாந்தன் இடை உறாவிடின் (இடையுறுதல் = to intervene) எந்த ஒழுங்குமே தன் கட்டுக் குலைந்து, முடிவில் கொள்ளை போகும்" என்ற கருத்தை விதந்து சொல்லி, மாந்தப் பட்டறிவாகிய தெறுமத் துனவியல் (thermodynamics) இரண்டாம் விதியை அடிநிலையாக்கி, அம்போதரங்கமாய், (அம்போ தரங்கம் = கடற்கரையில் மாறி மாறிக் கரை தேடி வரும் நீர் அலைகள்; அவற்றின் அளவு பெரியதில் இருந்து சிறியதாய்க் குறைந்து கொண்டே வரும்.) ஆடி, அசைந்து, நுரைத்து, பெரிதில் இருந்து சிறிது சிறிதாய், மீண்டு மீண்டும் கரை தொடும் எண்களாய்(1)ச் சுரித்து (சுரிதல் = சுழித்தல்; கடலில் அலை சுழித்து வருகிறது, பாருங்கள் அது போல; சுழிப்பு - சுரிப்பு - என்பதைத் தான் surge என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.) வந்து, சுரிதகத்தில் இற்றி (இற்றுதல் = to end; ஈறு = end), எழிலின் ஐநிலைச் சுழற்சியை உரைத்து, தெளிவது நம் விதப்பு என்று சொல்லி, இந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா முடிகிறது. பலருக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால், பொருள் புரிவதற்காக, கலிப்பாவின் சீர்களை இங்கு புணர்ச்சி பிரித்தே கொடுத்துள்ளேன்; அதே பொழுது புணர்ச்சி சேர்ந்தால் தான், உள்ளே இருக்கும் துள்ளலோசை புலப்படும். பாவின் முடிவில் கீழே, அதன் அடி நிலைக் கருவும், அருஞ் சொல் அடைவும், கொடுக்கப் பட்டுள்ளன. பாவை ஒரு முறைக்குப் பல முறை படியுங்கள்; கொஞ்சம் பலாப் பழம் போல இருக்கக் கூடும்; பொதுவாக, மெனக் கெடாமல் பலாவைச் சாப்பிட முடியாது. ஆனாலும் பலா இனியது. கலிப்பாவும் அப்படித் தான்.

(தரவு)

ஒழுங்கு அற்ற மனை துலக்கி, ஒட்டடையின் மடை(2) ஒழித்து,
அழுங்கு உற்ற கறை தொலைத்து, அடர் துகளைத் துடைத்து எறிந்து,
எளியதுவோ, பலக்கிய(3)தோ, இடைப் படவே உகப்பு(4) எடுத்து,
உளது அனையும் அடங்கல்(5) இட்டும், ஒளி கூட்டிப் பொலிவு உறவே,
விழையோர்கள் மயல் உறவே, வியல்(6) எங்கும் செயல் அறவே,
எழில் என்று இவண் தரவே, ஏல்ந்தனையோ இது வரையே!

(தாழிசை)

குறையாது ஓர் அண்ணம்(7), மிகையாது ஓர் அண்ணம்,
நறுவியதாய்(8)ச் செய்நேர்த்தி(9) நாட்டுவதால், எழிலாமோ?
உறு நேர்த்தி உணருதலும், ஒரு வகையில் எழிலாமோ?
குறுகு இலக்கில் (10) ஒழுங்கு அமைந்தால், கோளகை(11)யில் எழிலாமோ?

இயலுவதும்(12), வழக்கு ஊன்றின், எமை ஈர்க்காது எனும் போது,
இயலுகின்ற அனைத்திற்கும் ஒளி கூட்டின், எழிலாமோ?
புது மழையும், கதிர்த் தோற்றும், புழை நீரும், கதிர்ச் சாய்வும்
முது கொன்றை விழி மலர, முகிழ்ப்பதுவும் எழிலாமோ?

கவன முறை குறையாமல், கட்டு குலை ஆகாமல்(13),
சிவணுகிற(14) பட்டவங்கள்(15), செறிவதுவும் எழிலாமோ?
அழகியதாய் உள எல்லாம் அழிவதுவே நிலை என்றால்,
பழகியதாய்க் கணப் பொழுதில் படும் உணர்வே எழிலாமோ?

(அம்போதரங்கம்)

(பேரெண்)

தெறுமிய துனைவியல்(16) திகை(17) தரும் விதி வழி,
குறைவது எழில் எனில், குலைவது ஒழுங்கமை(18);
இடம் எது? இருப்பு எது? இலகு இடும் திணை எது?
இடை உற மனிதர்கள் இல எனில், எழில் இலை(19);

(சிற்றெண்)

கொளுவதும் இகுவதும்(20) கொள்ளையில் இரு வகை;
கொளுவது மகிழ் எனில் கொடு தரல் துயரமோ?
எழில் தனைக் கொளுவதால் ஏற்படும் வெறிச்சியே!
சுழிவதும் நெகிழ்வதும் சூழமை(21)ச் சிக்கலோ?

(இடையெண்)

புனை(22) தொறும் பிறப்பதோ?
வினை தொறும் செறிவதோ?
மனந் தொறும் நிறைவதோ?
கணந் தொறும் அகல்வதோ?

(அளவெண்)

எல்லையோ(23)? அழகிதோ(23)? இலகிதோ(23)? குழகிதோ(23)?
ஒல்லையோ(23)? உலகிதோ(23)? ஒளியதோ(23)? கொழியதோ(23)?

(தனிச்சொல்)

எனவாங்கு

(சுரிதகம்)

"எழிலெது?" வினவின், ஏற்பவர் விழியில்(24);
"எழிலெது?" பரவின், இயல்பவர் கரத்தில்(25);
"எழிலெது?" தொடுவின், இழுப்பது நொசியில்(26);
"எழிலெது?" நுகரின், எழுவது இதழில்(27);
"எழிலெது?" முரலின், இணைவது செவியில்(28);
எழில் இவண் சுழற்சி இயல்பென(29) ஆகக்
கொழிவதும்(30) தெளிவதும் கொள்பவர் விதப்பே!

பாவின் அடிநிலைக் கரு:

Entropie der welt strebt einem maximum zu.
உலகின் உட்திரிப்பு(31) ஒரு மீ நிலை(32)யை எட்டுகிறது.

- ருடால்வ் கிளாசியசு Rudolph Clausius (1822-1888)

அன்புடன்,
இராம.கி.

அருஞ்சொல் அடைவு:

1. எள்>எண் = எடுப்பு, எழுப்பு. எள்+து = எட்டு = step; அலை எழுகிறது; அலை எட்டுகிறது என்ற சொல்லாட்சிகளை ஓர்ந்து பார்க்கலாம். அம்போதரங்கத்தில் எண்கள் வருவது இப்படி எட்டுவதால் தான். அலைகள் என இங்கு அடிகள் எட்டி எட்டி வருகின்றன. அலைகளின் அளவைக் குறிப்பது போல் எண் கணக்கும் உள்ளிருப்பது இன்னொரு பார்வை.
2. மடை = மடங்கிப் பெருகியிருப்பது (மடை மடையாக் கிடக்கு, பார்த்தியா? - என்பார்கள்)
3. பலக்கியது = complex (மாறாக எளியது என்பது இங்கு elementary/simple என்பதைக் குறிக்கும்.)
4. உகப்பு = option
5. அடங்கல், அடங்கு = arrangement
6. வியல் = வெளி = space
7. ஓரண்ணம் = one measure; அண்ணம் என்ற சொல் இன்றும் மலையாளத்தில் பயில்வது
8. நறுவியது என்பதை நறுவிசு என்று சிவகங்கைப் பக்கம் பேச்சு வழக்கில் சொல்லுவார்கள்; கிட்டத்தட்ட cut and right or perfection என்ற ஆங்கில சொற்றொடருக்குப் பொருந்தக் கூடிய சொல்லாட்சி
9. செய்நேர்த்தி = efficiency; பலபோதுகளில் நேர்த்தி என்ற சொல்லே சாலும். செய் என்னும் முன்னொட்டுத் தேவையில்லை.
10. குறுகு இலக்கு = narrow local region.
11. கோளகை = global; பகுவல் தேற்றின் படி, குறுகிய இலக்களவில் ஒழுங்கு அமைந்தால், அந்த ஒழுங்கு வெவ்வேறு படிமானங்களில் திரும்பத் திரும்ப அமையுமானால், அழகான பட்டவங்கள் கோளகை அளவில் ஏற்படும் என்று சொல்லுவார்கள். (according to fractal theory, if there is order in the local region, and when the order repeats at various levels of magnitude, you get globally beautiful patterns). மலையும், மடுவும், ஆறும், அருவியும், குளமும், ஏரியும், காடும், வயலும், கடலும், கரையும், மொத்தத்தில் ஐந்திணைகளையும், ஏன் இந்தப் பேரண்டத்தையுமே, பகுவலாய்ப் (பகுவல் = fractal) பார்ப்பது அண்மைக்கால அறிவியற் போக்கு.
12. இயலுவது = one which happens; இங்கே இயற்கை, செயற்கை என்ற பாகுபாடு காட்டாமல் பொதுவாகப் பேசப்படுகிறது.
13. கட்டுக் குலைதல் = disintegration
14. சிவணுதல் = பொருந்துதல்
15. பட்டவங்கள் = patterns
16. தெறுமத் துனவியல் = thermo dynamics; (தெறுமத் துனைமவியல் என்பதை தெறுமத் துனவியல்  என்று சுருக்கினேன். துனைவு>துனவு = விரைவு; "கதழ்வும் துனைவும் விரைவின் பொருள" (தொல்.சொ:8:7, "துனைவு நொறிலும் விசையும் முடுகலும் வேகமும் விரைவே" பிங்கலம் : 2194)
17. திகை = direction
18. ஒழுங்கமை = orderliness; ஒழுங்காமை = disorderliness;
19. It may look surprising; but without human intervention, there is no beauty.
20. இகுதல்>ஏகுதல் = போதல்; to go என்ற ஆங்கில வினையோடு இணையாக உள்ள சொல்.
21. சூழமை = environment
22. புனைதல் = to imagine
23. எல்லை, இலங்கு > இலகு, குழகு, ஒல்லை, உலோகு > உலகு, கொழிது - என்று இங்கு கூறப்படும் எல்லாமே ஒளியைக் குறிக்கும் மாற்றுச் சொற்கள். மாந்தப் பட்டறிவின்படி, ஒளிகூடிய எல்லாமே எழிலானவையாக ஒரு சாயலில் தென்படுவது உண்டு. எழில் என்ற சொல்லுக்கே ஒளியுள்ளது என்ற பொருள்தான் உண்டு. That which is bright is எழில். எல்>எழு>எழில்
24. beauty is in the eye of the beholder.
25. பரவுதல்>பார்த்தல்; when you see beauty, you understand the dexterity of hands that stand behind it.
26. one can smell a beauty, if there is one; நுதி>நுசி>நொசி = மூக்கு; நொசி நாசியாய் (nose) இந்தையிரோப்பிய மொழிகளில் திரியும்.
27. when you smell a beauty, your saliva swells
28. when you describe a beauty, your ears are attentive. முரலுதல் = சொல்லுதல், பேசுதல், ஓசை எழுப்புதல்
29. beauty is in the nature of going round and round in a circle as above
30. கொழிதல் = panning; வீடுகளில் அரிசி, பருப்பைச் சுளகில் போட்டுப் புடைக்கிறோமே, அதுவும் கொழித்தல் தான். தங்கம் காண்பதும் கொழித்தல் தான். கொன்றை பற்றிய என் முன்னாள் கட்டுரையில் இதைப் பேசியிருக்கிறேன்.
31. உட்திரிப்பு = entropy - 1868, from Ger. Entropie "measure of the disorder of a system," coined 1865 (on analogy of Ger. Energie) by physicist Rudolph Clausius (1822-1888) from Gk. entropia "a turning toward," from en- "in" + trope "a turning."
உட்திரிப்பு என்ற சொல்லை விளக்கும் போது ஒழுங்காமை (= disorderliness) என்றும் சொல்லலாம்; உள்ளாற்றல் = internal energy.
32. மீநிலை = maximum

2 comments:

பூங்குழலி said...

அன்பின் இராம.கி அவர்களுக்கு,

தங்களின் தமிழ்ப்பணிக்கு வணக்கங்கள்.

தங்களது பதிவுகளைப் படித்து எனது தமிழ் மொழி சொல்லாடல் தொகுப்பை வளர்த்து வர முயற்சி செய்கிறேன்.

இத்தகு மொழிச்சொற்கள் இயல்பாய் வர/ அந்நிலையை எட்டிப்பிடிக்க இன்னும் சிலகாலம் ஆகலாம்.

மற்றபடி, எனக்கு மிகச் சிறிதளவே வெண்பா இலக்கணம் தெரியும், அதைக்கொண்டு அதிகப்படியாய் எழுத முயற்சிக்கிறேன்.

ஆனால் அகத்தினை பாடல்கள் எழுத, மற்ற பாவகைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசை.
இதற்காக யாப்பருங்கலக் காரிகை வாங்கிப் படித்தால், அதைப் புரிந்துகொள்ளவே கடினமாய் இருக்கிறது.

புரிந்தாலும் புரியாததுபோல் இருக்கிறது.
ஐயந்திரிபர கற்றல் கடினமே.

தயை கூர்ந்து, பா வகைகளின் இலக்கணம் பற்றிய தகவல்களை கொடுக்கமுடியுமா?

நன்றி,

இராம.கி said...

அன்பிற்குரிய பூங்குழலி,

வருகைக்கு நன்றி. யாப்பருங்கலக் காரிகைக்குப் போகும் முன்னால்,

அ.கி.பரந்தாமனாரின், "கவிஞராக" - பரிநிலையம் வெளியீடு,

புலவர் குழந்தையின் "யாப்பதிகாரம்" "தொடையதிகாரம்" என்ற இரு நூல்கள் - முல்லை நிலையம், பாரி நிலையம் வெளியீடு,

கி.வா.ஜ.வின் "கவி பாடலாம்" - அல்லயன்ஸ் வெளியீடு

ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கும்.

இவையெல்லாம் வெறும் இலக்கணப் பொத்தகங்கள்; அவற்றை வைத்து வடிவப்பிழையைக் கண்டுபிடிக்கலாம்; மெருகேற்றலாம். அவ்வளவே.

பா என்பது உங்களுக்கு உள்ளே இருந்து வருவது.
உள்ளீடு என்று அதற்காகாகத் தான் சொல்லுகிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.