Thursday, July 05, 2018

சாத்தன் - 2


வேதமறுப்பு நெறிகள் அடிப்படையில் கடவுள் மறுப்பு நெறிகளே. தம்முள் அவை வேறுபடினும், சில பொது ஒர்மைகளைச் சுட்டின. பொ.உ.மு.500 களில் வேதமறுப்பு ஆசான்களின் பாதப்படிமங்கள் வைத்தும், பின் உருவங்கள் வைத்தும் மக்கள் தொழத்தொடங்கினர். கொஞ்சங்கொஞ்சமாய் பள்ளிகள் கோயிற் கருத்தீட்டுள் வந்தன. இனக்குழுப் படையல்கள், பழக்கவழக்கங்கள், கொண்டாட்டங்கள், நினைவேந்தல்கள் பள்ளிகளில் நடக்கத்தொடங்கின. (நிக்கந்தநாதர்/ மகாவீரர் உட்பட்ட) செயினத் தீர்த்தங்கரர், அற்றுவிகத்தின் மற்கலி கோசாளர் (மகாவீரர் தவிர்த்த தீர்த்தங்கரர் அனைவரும் அற்றுவிகத்திற்கும் ஏற்றவரே), பூரணகாயவர், பக்குடுக்கை நன்கணியார், நரிவெரூஉத் தலையார் (எனப்பட்ட அஜிதகேச கம்பலர்), சஞ்சய பேலட்ட புத்தர், (இன்று நாமெல்லோரும் அறிந்த) கோதம புத்தர் (முந்தைய 23 தீர்த்தங்கரர் பற்றிப் புத்தருங் கேள்வி கேட்கமாட்டார்.) ஆகியோர் அனைவரும் நாளாவட்டத்தில் ”ஐயன்= ஆத்தன்/ஆதன்/ ஆசான்/ஆசன்/ ஆஸ்ரியன்” என அறியப்பட்டார்.  (தமிழ் ஐயனும் பாகதப் பகவானும் ஒரே பொருளன) இக்காலத்தில் சில பெருமானரை ஐயரென்கிறோம் இல்லையா? பெருமானரே கூடத் தம் ஆசானை உவ ஆத்தன்> உபஆத்யன்> உபாத்யன்> வாத்யான் என்றழைப்பர். நாளாவட்டத்தில் ஆத்தனுக்கு மாறாய்ச் ”சாமான்யம் ஆனவன்” என்ற பொருளும் சாத்தனுக்கு ஏற்பட்டது. காட்டாக நீலகேசி மொக்கல வாதம் 413 ஆம் பாட்டில்,

ஆத்தன் உரைத்த பொருள் தன்னை அவ்வாகமத்தால்
சாத்தன் பயின்றால் அறியாவிடுந் தன்மை உண்டோ?
வீரத்து இங்குரைத்த பல தம்முள் ஒன்று இன்னதென்ன
ஓத்தின் வகையால் பெயரொடு உணர்வின்மைக்கு என்றாள்

என்று வரும். 50 ஆண்டுகள் முன் நம்மூரில் ’குப்பன், சுப்பன்’ பழகியது போல் (இப்போது இஷ்/புஷ் என்று பொருள்புரியாது வடமொழிப்பெயர் இடுகிறார்.) சங்ககாலத்தில் கண்ணன், சாத்தன், ஆதன், அத்தன், ஆந்தை, சேந்தன், நாகன், தேவன், பூதன் போன்ற பெயர்களே மிக்கிருந்தன. இன்றைக்கும் மிச்ச சொச்சங்களாய், திருச்சிக்குத் தெற்கில் தென்பாண்டியில் சாத்தையா, சாத்தப்பன் எனவுண்டு.]

நந்தர் காலத்தில், அவர் தவிர்த்த வடபுலத்தரசர் வடமேற்கிருந்து வந்த வேத நெறியால் கவரப்பட்டு ஏராளம் வேள்விகளை பென்னம்பெரிதாய்ச் செய்யத் தொடங்கினார். பல்வேறு விலங்குகள் குறிப்பாய் ஆடு, மாடு, குதிரைகள் ஆகுதிகளாகின. கொஞ்சம் அசந்தால் இவற்றை அரசச் சேவுகர் பிடித்துப் போகும் நிலை ஏற்பட்டது. கால்நடைகள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் தேவையான குமுகாயத்தில் இந்நடவடிக்கை பெரும் இடரை ஏற்படுத்தியது. மக்கள் கொதித்தெழுந்தார். பார்சுவ நாதர் கூற்று பொதுமக்களுக்குப் பெரிதானது. கொல்லாமை பெரும் அறமாய் நாடெங்கும் போதிக்கப்பட்டது. ஓரிடந்தங்காது ஊரூராய் பரிவரைந்து அலைந்த பரிவரையர் (>பரிவ்ராஜக) சொல்வது வட இந்தியாவெங்கணும் எடுபட்டது. வேதநெறி தாக்கிற்கு இலக்கானது. வேதநெறியைக் கேள்விமேல் கேள்விகேட்டு கொக்கி போட்ட எழுவரும் சம்மணங்கூட்டித் தானத்தில் (த்யானத்தில் ஆழ்ந்ததால் சமணர் எனப்பட்டார். இவரைப் பின்பற்றியோரும் சமணரானார். பொ.உ. 800 க்கு அருகிற்றான் சமணர்>ஸ்ரமண என்பது செயினரை மட்டும் விதப்பாய்க் குறித்தது. (ஒருகாலத்தில் புத்தரையே சமண என்றார்.)

சமணருக்குச் சாத்தரே (பொதுமக்களே) பெருமாதரவு. நந்தரை எதிர்த்து எழுந்த மோரியருக்கு வேறுவழியில்லை. அவரும் வேதமறுப்பு நெறிகளையே சார வேண்டியிருந்தது. வேதநெறியை முற்றிலும் சாடாது, அதேபோது வேத மறுப்பு நெறிகளைப் புரந்து மோரியர் ஆட்சிநடத்தினார். வேதநெறியினர் மோரியரின் கீழிருந்த படைவல்லுநரின் உதவிநாடிக் காத்திருந்தார். சுங்கரும், கனகரும் மகதத்தில் அரசேறிய காலத்தில் தான் வேதநெறி மீண்டும் தழைக்கத் தொடங்கியது. இவ்விரு குலத்தாரும் மோரியருக்கு அப்படியே தலைகீழாய் மாறினர். வேதமறுப்பு நெறிகளை முற்றிலும் சாடாது, அதேபொழுது வேதநெறியைப் புரந்துவந்தார். நந்தர்/மோரியர் காலத்தில் தாம் தம் இயக்கவெளி வடக்கே குறைந்த காலத்தில் தமிழகம் நோக்கியும் வேதநெறியார் நடந்து வந்தார். (மகதம் கெட்டால் தமிழகம், தமிழகம் கெட்டால் மகதம் என்பதே அன்றைக்கிருந்த போக்கு.)

சங்க இலக்கியத்தில், உலகாய்தம், சாங்கியம், ஞாயம், விதப்பியம், அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய நெறிகளின் கருத்துகளோடு வேத நெறியும் இழையும். இப்பொதுமையை முழுதும் உணராது சங்ககாலக் குமுகாயம் ஒருநெறியை மட்டுமே சார்ந்ததென்பது குறை அவதானிப்பு. சங்ககாலத்தில் சிவ, விண்ணவ வழிபாடுகளுண்டு. ஆனால் சிவ, விண்ணவ நெறிகள் இங்கு கிடையா. சங்கம் மருவிய காலத்திற்றான் அவை சமயநெறியாய் எழுந்தன. ஆழ்ந்து நோக்கின் அவை இளைய நெறிகள் தாம்; அவை தனிப்பட்டு எழுந்தவையாகவும் தெரியவில்லை. வேத நெறியின் அடிதொட்டு அதன் மேற்கட்டுமானமாய்ச் சிவ, விண்ணவ வழிபாடுகளைக் கொண்டு, பின்னாற்றான் தம் மெய்யியல்களை இந்நெறிகள் எழுப்பின. நானறிய மாணிக்கவாசகரும் (அவரைநான் 4/5 ஆம் நூற்றாண்டாய்க் கொள்வேன். நானெழுதிய ’மாணிக்கவாசகர் காலம்’ தொடர்கட்டுரை இன்னும் முடிபடாதிருக்கிறது) திருமூலருமே சிவநெறி மெய்யியலுக்கு வழி வகுத்ததில் முதன்மையானவர். மணிமேகலையே (பொ.உ.450) சிவநெறியின் இருப்பை முதன்முறையாகத் தமிழிற் சொல்லும். (மணிமேகலையைச் சிவ நெறியாளர் படித்து இவ்வுண்மையைப் புரிந்துகொள்ளட்டும்.)

இனி வாணிகத்தைப் பார்ப்போம். அற்றை மக்கள் ஊடாட்டத்தில், வடபுலத்தில்/தக்கணத்தில் பொருள் பரிமாறும் வாணிகத்தில் பெரிதாய் இருந்தவை 3 பகுதிகளே. ஒன்று மகத நகரங்கள், இன்னொன்று தக்க சீலம், மூன்றாவது நூற்றுவர் கன்னரின் (சதகர்ணிகளின்) படித்தானம்/Paithaan nearer to Modern Aurangabad (மேலும் அது அழைத்துச்செல்லும் தமிழக நகரங்கள்.) இருவேறு வாணிகப்பாதைகள் அன்று இயல்பாய் எழுந்தன. (”சிலம்பின் காலம்” நூலில் விரிவாய்ப் பேசினேன். ஆர்வலர் அதைப் போய்ப் படியுங்கள்.) உத்தரப்பாதை, மகதத்தைத் தக்கசீலத்தோடு கணுத்தும் (connect). தக்கணப் பாதை மகதத்தைக் கோதாவரிக் கரையின் படித்தானத்தோடு இணைக்கும். படித்தானத்திலிருந்து இற்றை கற்நாடக ஐஹோலெ (=ஐம்பொழில்) வழி தகடூருக்கு நீட்சி ஏற்பட்டது. மூவேந்தர் நகர்களிலிருந்து தகடூருக்குத் தனித்தனிச் சாலைகள் இருந்தன. மூவேந்தருக்குச் சமமாய் வடக்கே அதியமான் (சத்யபுத்ரன் என்று) சிறப்புப் பெற்றது பூகோளத்தால் மட்டுமே. தெற்கிருந்து கிளம்பும் சாத்துக்கள் தகடூர், ஐம்பொழில், படித்தானம் போய் மகதம் போகும். தமிழகத்தில் உருவான ஏதொன்றையும் விற்கவேண்டும் எனில் உள்ளூரை விட்டால் மகதமே போகவேண்டும். இல்லையேல் கலமேறி கடல்கடந்த வெளிநாடுகள் போகவேண்டும்.

[சிலப்பதிகாரத்தில் கோவலன் தந்தை மாசாத்துவான் உள்நாட்டு வாணிகன். சிலம்பு முழுக்க அவன் இயற்பெயர் தெரியவே தெரியாது. அவன் தொழிற் பெயர் பாண்டிநாட்டிலும் தெரிந்திருக்க வேண்டும். அதனாற்றான் பாண்டிய அவையில் கண்ணகி தன்னை அறிமுகப்படுத்துகையில் “மாசாத்தன் மருமகள்” என்று சொல்கிறாள். கோவலன் அவ்வளவாய் அடையாளந் தெரியாத ஆள். கண்ணகியின் தந்தை பெருங்கடலோடி. (மாநாய்கன்/மாநாவிகன். பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன்.. நாவுதல்=கொழித்தல், கப்பலோட்டல். பல தமிழாசிரியரும் தவறாக அவனைக் கடல் வாணிகன் என்றே அறியாது சொல்வார். அவ்வளவு பேரெடுக்காது, தன் வாணிகத்தைச் சரியே கவனிக்காது கோட்டைவிட்ட கோவலனே உண்மையில் கடல் வாணிகன்.]

சங்க இலக்கியத்தில் 50 விழுக்காட்டுப் பாட்டுகள் பாலைப் பாட்டுகளே. அதில் வரும் பாலை இன்றும் பெரிதாய்ச் சொல்லப்படும் இராயல சீமையே. ஐம்பொழில், இற்றை பெல்லாரி மாவட்டத்திற்கு இட்டுச்செல்லும். அதை ஒட்டிய இற்றை ஆந்திரக் கர்நூல், கடப்பா மாவட்டங்களும் இதிற் சேரும். இவற்றின் விவரிப்பும் சங்க இலக்கியங்களிலுண்டு. சாத்து வேலை என்பது அவ்வளவு எளிதானதல்ல. முதலில் கடினவேலை என்று பொருள்பட்டுப் பின் பல்வேறு சாத்தரும் தக்கணப் பாதையின் நெளிவுசுளிவு தெரிந்து போய்வந்த காரணத்தால் சாத்தார வேலையானது. (சாத்தம்> சாத்தாரம்> சாத்தாரன்> சாதாரண். இதன் இற்றைப்பொருள் சாதாரணம்= எளிமை என்பதே) இதற்கு இன்னொரு பெயருமுண்டு. சமண>சாமாண> சாமண்ய>சாமான்ய வேலை. வேடிக்கை என்னவெனில், சமணர் என்ற சொல் பொதுமக்களையே குறித்திருக்கிறது என்பதுதான். சாதாரணம், சாமான்யம் என்ற இரு சொற்களும் வடமொழி போல் தோற்றம் கொண்டாலும் அவற்றின் அடிப்படை தமிழிற்றான் உள்ளது.     
 
இனி சாத்தாரின் கோயில்களுக்கு வருவோம். இன்றைக்கு நாம் பார்க்கும் பல்வேறு ஐயனார் கோயில்களிற் சில பார்சுவருக்கு எழுந்தவை சில மற்கலிக்கு எழுந்தவை, சில பூரணருக்கு எழுந்தவை சில பக்குடுக்கை நன்கணியாருக்கு எழுந்தவை, சில நிக்கந்த நாதருக்கு எழுந்தவை, சில கோதம புத்தருக்கு எழுந்தவை. (தென்பாண்டி நாட்டில் பல்வேறு சாத்தருக்கு இன்றுங்கூட ஐயனார் கோயில்களும் காளி கோயில்களுமே குலதெய்வக் கோயில்களாகும். எங்கள் குடும்பத்தாருக்கு சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்துக்கு அடுத்தாற்போலுள்ள கத்தப்பட்டு சேவுகப்பெருமாள் ஐயனாரே குலதெய்வம். இப்படி அந்தப்பக்கம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இடங்கள் குலதெய்வக் கோயில்கள் உண்டு.) சாத்தன் கோயில்களைச் சாஸ்தா கோயில் என்று சங்கதஞ் சொல்லும். பொ.உ.500-900 களில் எழுந்த பக்தியியக்கத்தின் வாயிலாய், இவைபோன்ற ஐயனார் கோயில்களிற் பலவும் சிவன் கோயிலாகவும், சில விண்ணவன் கோயிலாகவும் மாறின. (அவற்றை நானிங்கு சொன்னால் பலருக்கும் வியப்பாகும்.) சில இரண்டுங் கெட்டான் ஆயின (ஐயனார் கோயிலில் ஐயனாருக்குமுன் யானை வாகனமும், அதற்குச் சற்று பின்னால் இலிங்கமும் வைக்கப்பட்டிருக்கும்.) முந்நாளைய நடைமுறைகள் திரிந்து, இப்போது ஐயனாருக்கு தீவங்காட்டித் திருநீறு கொடுப்பார்.

ஆனாலும் இன்னொரு பக்கம் இக்கோயில்களுக்கே சிறப்பாய் உள்ளதாய்ப் பெரியகருப்பர், சின்னக்கருப்பர், பதினெட்டாம்படிக் கருப்பர், தொட்டியக் கருப்பரெனப் பல்வேறு காவல்தெய்வங்களுமுண்டு. காவல் தெய்வங்களுக்கு எனக் களிமண் புரவி, களிறு பொம்மைகள் வைக்கப்படும். புரவியின்முன் அரிவாளேந்திய கத்தியரும், வேலேந்திய சூலத்தாரும் காட்சி தருவர். ஆண்டுக்கொருமுறை ஊரில் யாரேனும் வேண்டிப் புதிய புரவியெடுப்புகள் நடக்கும். ஆண்டுக்கொருமுறை சிவன் இராத்திரி அன்று படையல் கொடுக்கப்படும். கருப்பருக்கு அலங்காரஞ் செய்வர். கோழி, ஆடு படைப்பர், ஆனால் ஐயனார் திருநிலைக்குமுன் திரைபோட்டு மறைத்துவிடுவார். ஏனெனில் ஐயனார் முற்றிலும் மரக்கறி அல்லவா? அவருக்குக் கறி ஆகாது.

கொஞ்சம் ஆழப் பார்த்தாலே இற்றை வேதநெறி தழுவிய சிவநெறிக்கும், விண்ணவநெறிக்கும் புறம்பான பல செய்முறைகள் ஐயனார் கோயில்களில் நடைபெறுவது தென்படும். ஆனாலும் எல்லாமே மேலோட்டச் சிவநெறிப் பூச்சுக் கொள்ளும். ஓவென்று பெரிதாயெழுந்த சிவநெறிக்குமுன் தம் அடையாளங்களை மூடிமறைத்து வெளித்தோற்றங் காட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளோ இவை என நம்மை எண்ணவைக்கும். எத்தனை ஊர்களில் மகாவீரருக்கும், பார்சுவருக்கும்., நேமிநாதருக்கும், ஆதிநாதருக்கும். புத்தருக்கும் மற்கலிக்கும், பூரணருக்கும், நன்கணியாருக்கும் நெற்றியில் திருநீறு பூசி துணிசுற்றி இன்னும் இரு கைகளைசுதைப்பூச்சில் வலிந்து ஏற்படுத்திக் கலிகாலத்தில் காப்பாற்றினாரோ? தெரியாது. சில வேதமறுப்பு நூல்கள் கூட அங்குமிங்கும் வேதம் போற்றும் சில சொலவங்களை, பாட்டுக்களைத் தம் பாயிரத்திலும், உள்ளிலும் தூவிக்கொண்டு, தம்மைக் காப்பாற்றிக் கொண்டன. 2600 ஆண்டுகளிற் சிலபோதுகளில் சாத்தார மதங்களால் (வேதமறுப்பு நெறிகளால்) தம்வளர்ச்சி தடைப்பட்டதால், வேதநெறிக்கு இந்நெறிகளின் மீது பெரும் முரண்பாடுகள் உண்டு. ”இச்சாத்தான்கள் நம்மைச் சாடுகிறாரே?” என்ற கோவமும் கூட வருவதுண்டு. வேதநெறிப்பட்ட சிவநெறியும், விண்ணவநெறியுங் கூட வேதமறுப்பு நெறிகளைத் தம் எதிரிகளாகவே பார்த்தன. பொ.உ.500-இலிருந்து பொ.உ.1000 வரை தெற்கே நம்மிடை நடந்த பக்தி இயக்கம் சாத்தாரமானதில்லை. இதுபற்றிய ஆய்வுங் கூடக் குறைவு. ”இந்துத்துவம்” கூடியுள்ள இந்நாளில் இதையெல்லாஞ் செய்யப் பலரும் தயங்குகிறார். (பலருக்கு உண்மையும் தெரிவதில்லை. ஏராளம் மிகைப்படுத்தலும் கூட இருக்கின்றன. ஒரேயடியாய்ச் சிவநெறி, விண்ணெறிகளைச் சாடுவதும் தவறு; சமணநெறிகளைச் சாடுவதும் தவறு. இவை இரண்டிற்கும் இடையில் தாம் சரியான புரிதல் இருக்கிறது. இரண்டின் விரவல் தாம் இற்றைத் தமிழ் மக்கள்.  குல்தெய்வங்களும் பெரும்தெய்வங்களும் நம்மின் இரு முனைகள். இரண்டையுமே நம் பொதுமக்கள் சார்ந்துதாம் உள்ளார்.

அடுத்தது சாட்டுதல். சால்>சாள் என்பது இன்னொருவகையில் சார்தலை/சார்த்தலைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்டு அடையாளங் காட்டுவது சாட்டுதலாகும். சாட்டுதல் = பிறனிடம் சார்த்துதல், குற்றஞ் சுமத்தல், அடித்தல். ஏதோவொன்று விரும்பியவகையில் நடக்காமற் போவதற்கு ஒருவன் காரணனென்று பேசுவது சாடுதலாகும். to accuse என்று ஆங்கிலத்தில் பொருள்கொள்ளும். சாடுதல் = அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், ஆசைதல், ஒருகட்சிக்குச் சார்பாய் இருத்தல். சாட்டியம் = வஞ்சகம், பொய். சாத்தான் என்ற சொல்லிற்கு மேலை நாகரிகங்களில் தொடக்கமில்லை. அது யூத வழக்கத்திலிருந்து மேலை நாகரிகத்திற்கு வந்தது. தேவனை ஏற்காதவர் சாத்தர் எனப்பட்டார். சாத்தரின் தலைவன் சாத்தான் எனப்பட்டான். சாத்தான் தேவனைச் சாடுகிறானாம் என்றே மேலையரின் கிறித்தவ, யூதச் சிந்தனை இருந்தது. நம்மூர்ச் சாடலும், மேலையர் சாடலும் ஒன்று போலவே தெரிகிறது. இரு நிலங்களிலும் இருந்த சாத்தான் -சாடல் தொடர்பு காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா? அல்லது இரண்டிற்கும் ஏதோவொரு காலத்தில் தொடர்புண்டா? தெரியாது. வரலாற்றின் எத்தனையோ கதவுகள் நமக்குத் திறக்காமலேயே போயுள்ளன. அவற்றில் இதுவொன்றோ?.  சாத்தான் என்ற வேதமறுப்புத் தலைவருக்கும் சாத்தான் என்கிற மெல்லைச் சிந்தனையின் devil குறிப்பும் நம்மைத் தடுமாற வைக்கின்றன என்பது உண்மை தான்.

அன்புடன்,
இராம.கி.


No comments: