Monday, July 09, 2018

அனு

அவன், அவள், அவர், அது, அவையெனுஞ் சொற்களைப் புழங்குகையில் முதலில் வருவது ’அ’ எனும் சேய்மைச்சுட்டே. அதேபோல் (காலத்தைக் குறிக்கும் ’அன்று’ என்பதில் வருவதும் சேய்மைச் சுட்டே. அந்த, அப்படி, அவ்வளவு என்பதிலும் சுட்டுண்டு. அ>அன்>அன்ன என்பதில் ’அத்தன்மைய, அத்தகைய, ஒத்த, போன்ற’ சுட்டுப்பொருள் கொள்கிறோம். அ>அன்>அனை> அனைத்து என்பதில், ’அதோடு சேர்ந்த எல்லாம்’ எனும் பன்மைப்பொருள் குறிக்கிறோம். அனைய= அதோடு சேர்ந்தவை, அத்தன்மைய. அனைவரும்= அதோடு/அவரோடு சேர்ந்த எல்லாவரும். அல்லாவரும் என்பதே எ/யகரத் திரிவில் எல்லாவரும் என்றாயிற்று. அல்லாமும்= எல்லாமும். இப்படிப் பல மாற்றங்களும், பொருள்நீட்சியும் சுட்டுவழக்கில் நடந்துள்ளன. தவிர, உல்> ஒல்>அல் எனுந் திரிவால் நெருங்கல், கலத்தல், அடுத்தல், பொருந்தல், முடைதல், பின்னல் எனும் பொருள்களும் ’அல்தலுக்கு’ அமையும். ’அல்கல்’ என்பதும் தங்கற்பொருளைச் காட்டும். இவ்வளவு ஏன்? இருவேறு உள்ளங்கள் பொருந்தலைக் குறிக்க நாம் அல்>அன்>அன்பு என்கிறோமே?. அன்பு மட்டும் அல்ல. தென்பு, நன்பு, வன்பென்ற சொற்களும் கூடத் தமிழ்ச் சொல்லாக்கங்கள் தான். இப்படி இரு வேறு கருத்தீடுகள் (சேய்மைச்சுட்டு, அல்லுதற் சொல்) ஊறிக் கலந்து மேலும் பல புதுச்சொற்களை உருவாக்கும்.

இனி அல்லின் நீட்சி அள். அல்>அள்>அள்ளுதல்= நெருங்குதல், செறிதல், பொருந்துதல். அள்>அளி=அன்பு, அருள்; அள்>அர்>அருள்=இரக்கங்காட்டுதல் (அருளென்ற சொல்லேற்படும்முறை புதிதல்ல; தெள்>தெர்>தெருள் எனும் காட்டையும் பாருங்கள்.) எல்படும் நேரம் (1400-1800 மணி. எற்பாடு எனும் அழகிய சொல்லைத் தொலைத்துவிட்டோம்.) மாறி ஒளியுமிருளும் மலங்கும்/மயங்கும் மாலை (1800 -2200) தொடங்குவதை அந்தியென்பர். அந்து>அந்தி = எற்பாடும் மாலையும் கலக்கும் நேரம். அந்துதல்=கலத்தல். 2/3 தெருக்கள் கூடும் சந்தியையையும் அந்தி என்போம். உம்முதல்>உந்து> அந்து>அந்தி என்றிதைப் புரிந்தாலுஞ் சரி தான். அள்>அண்> அண்டு>அண்டல்=நெருங்கல்; அண்டை அண்மை, அயல் என்பன அருகிலுள்ள இடங்கள். அண்ணல், அண்ணித்தல், அணத்தல், அணவுதல், அணுகுதல் என்பன நெருங்கலையும் பொருந்தலையுங் குறிக்கும். இத்தனையும் தமிழெனில் முதலிற் சொன்ன அன்னுதலும் தமிழல்லவா? அன்னுதல்=நெருங்கல், கலத்தல், அடுத்தல், பொருந்தல், முடைதல், பின்னுதல். ஆர்தல் = பொருந்தல்; ஆர்வம்=அன்பு. இந்த வளர்ச்சியில் பல்வேறு ”அனு”- தொடர்பான சொற்களைப் பார்க்க இருக்கிறோம்.

அனுவெனும் முன்னொட்டில் தமிழ்ச் சொற்களுமுண்டு. இருபிறப்பிகளும் உண்டு. முற்றிலும் சங்கதச் சொற்களுமுண்டு. அடையாளந் தெரிய விடாது எப்பேர்ப்பட்டவரையும் கவிழ்த்துவிடுந் தன்மை சில சொற்களுக்குண்டு. நான் சொல்வதை மறுத்தும் சிலரெழுத முடியும். அதற்காக எனக்குப்பட்டதை நான் சொல்லாதிருக்க முடியாது. இச்சொற்களில் முடிந்த முடிவு இன்னும் எட்ட வில்லை. சங்கதத்திற்கும் தமிழுக்குமான உறவு நாட்பட்டது. அதைத் தூக்கித் தள்ளவும் முடியாது. எடுத்து உறவாடவும் முடியாது. முகநூல் சொல்லாய்வுக் குழுவில் பலரும் துவளும் பான்மையில் (defeatist mentality) எதை எடுத்தாலுஞ் சங்கதமென்று சொல்லி இருக்குந் தமிழையும் தொலைத்து விடுவார் போலவே உள்ளது. அந்தப் போக்கு தவறு. இருக்குஞ் சிக்கல்களை நேரடியாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். சாதிப் போர்வையும், மதச்சாயலும் போர்த்திய நிலவுடைமைக் குமுகாயம் சங்கதத்தைத் தூக்கிவைத்தது. நாம் எல்லோரும் கூடிப் போராடித் தான் ஒவ்வொன்றையுஞ் சரி செய்ய வேண்டும்.]

முதலில் வருவது அன்னுவயம். இதன் பொருள் அடுத்தவரோடு கொள்ளும் வயம்/உறவு/பற்று என்பதாகும். இது தமிழே. அன்னுவயித்தல்= அடுத்தவரைப் பின்பற்றல். அன்னியன்= அடுத்தவன் எனவே பிறன். அடுத்தவன்/அயலானோடு கொள்ளும் ஒற்றுமை அன்னிய ஒன்னியம். ஒன்னியமென்பது ஒன்றியத்தில் கிளைத்தது. அன்னிய ஒன்னியம் என்பது சங்கதப்புணர்ச்சியில் அன்னியோன்னியம் ஆனது. ஆனால் சொல்லின் உள் இலங்குவது தமிழே. தமிழ்ப்புணர்ச்சியில் உடம்படுமெய் ஊடுவந்து அன்னியவொன்னியமாகும். அன்னுதல்= அதுபோலாதல். இதற்குப் படியெனப் பொருள் கொள்வார். தமிழ்ச் சொல்லான ’படி’, சங்கதத்தில் ப்ரதியாகும். பல்வேறு முகன (=நவீன) எழுத்தாளருக்கும் ப்ரதியை பிரதியென எழுதுவதில் கொள்ளை ஆசை. என்னைக் கேட்டால் சங்கதப் ப்ரதியைத் தூக்கியெறிந்து தமிழ்ப் “படி”யை வைத்துக்கொள்ளலாம். அனுக்காட்டல்= குறிப்புக்காட்டல். ஒன்றின் இருப்புக் காட்டுவது அனுக்காட்டல். இதுபோற் பலசொற்களில் ’அனு’வை அடுத்ததெனப் பொருள்கொள்ளலாம்.

அனுக்கிரகம் = அருள், இரக்கம். ஒருவரோடு அருகிருப்பதால் ஏற்படும் நெகிழ்வு. இதுவோர் இருபிறப்பிச் சொல். அனுக்கருமம் = ஒழுங்குமுறை, அடுத்தடுத்துச் செய்யும் முறை. தமிழ்ச்சொல் கருமம் சங்கதத்தில் க்ரமம் ஆகும். காரியஞ் செய்யும் முறையையே (காரியம் கருமத்தின் இன்னொரு சங்கதத்திரிவு.) க்ரமமென்பார். அனுக்கை = அடுத்திருக்கும் நிலை. அதற்கான இசைவு, அனுமதி. இனி, அனுச்சை, அனுஞ்ஞை என்ற சொற்கள் அனுக்கையின் திரிவுகள். அனுகதம்= அடுத்துவருவது. கதித்துவருவது, துள்ளிவருவது. ஒருகாலத்தில் 1960 களில் நாங்களெல்லாம் கதியை velocity க்கு இணையாகப் பயன்படுத்தினோம். இன்றும் அதைப் பயன்படுத்தலாம். அது என்னவோ தெரியவில்லை. இற்றை இளைஞர் ’கதி’யைத் தொலைத்து விட்டார். பலரும் இன்று சொல்லும் திசைவேகம் என்பது சுற்றி வளைத்துச் சொல்வது. அனுகதம் என்பது அடுத்துவரும் ஓசையெனப் பொருள்கொள்ளும். கதம் = ஓசை. பேச்சு அனுகம்பம் = இரக்கம். கம்பம்= நடுக்கம். இரக்கமென்பது கம்பத்திற்கு நெருங்கிய உணர்வு. இரக்கங்கூடியவர் நடுங்கவுஞ் செய்வார். அனுகமனம்= உடன்கட்டையேறல். கமத்தல்= பரவுதல்; கமனம்= செல்லல். உடன்கட்டையேறும் முட்டாள்பழக்கம் இது தமிழரிடமும் இருந்திருக்கிறது. புறநானூற்றில் பூதப்பெண்டு உடன்கட்டையேற முற்பட்டாளே? நாமேதொ, உயர்த்தி என்று எண்ணிக்கொள்ளவேண்டாம். மற்ற இந்தியர்போல முட்டாள் பழக்கங்கள் நம்மிடமும் இருந்துள்ளன.

அனுகரணம்= ஒன்றின்செயல்போற் செய்வது. கருமத்திற்கு இன்னொரு தமிழ்ச்சொல் கரணம். அனுகரணவோசை=ஒலிக்குறிப்பு ஒன்றைப்போல் இன்னொன்றைச் செய்வதால் வரும் மெல்லொலிக் குறிப்பு. ஓமின் இம்மை நீட்டி ஏற்படுமோசை. (இத்தப் பழக்கம் இசைபாடுவோரிடம் உண்டு. ”ஊம்ம்ம்ம்ம்ம்ம்......” என்று பாடத்தொடங்குமுன் இழுப்பார்கள். வடமொழி எழுத்தில் அம்மெனும் உயிரெழுத்தின் ஈற்றில் வரும் ஓசை. தமிழைக் காட்டிலும் வடமொழிப்பங்கே பெரிதும் ஆனது. அனுகரித்தல் = ஒன்றினைப் போல் ஒழுகுதல். கருத்தல்/கரித்தல் = செய்தல். அனுகூலம்= உதவி. அடிப்படையில் கூலம் = தானியம் (தானியம் என்பது வடசொல். அதற்கு இணையான கூலம் தமிழ்) வேளாண்மையில் உடன்வேலை செய்பவர்க்கு கூலங் கொடுத்ததால் அது கூலி ஆயிற்று,. கூலச்சொல் என்பது செய்யும் வேலைக்கும் கூடப் பெயராயிற்று. அனுகூலம் = செய்யும் முகனவேலையில் (main work) உதவியாவது.. அனு சந்தானம் = இடையறாது ஓதுகை. இருபிறப்பிச் சொல்.

இற்றை இலாகூருக்கருகில் பழகிய, பாணினியின் வட்டார மொழிக்குச் சந்தமென்ற பெயருண்டு. பாணினி காலத்தில் சங்கதமென்ற பெயரே கிடையாது. (முகநூல் சொல்லாய்வுக்குழுவில் ஓர் அன்பர் சங்கதமென்று சொல்லக் கூடாது. சம்ஸ்க்ருதமே சரியென்றார். இதெல்லாம் நாம் சங்கதத்தின் மேற்கொள்ளும் தேவையற்ற வழிபாட்டுப் பழக்கம். கதத்தின் முதல் அகரவொலியை விடுத்து ’ரு’ எனும் வடமொழி உயிரொலியைச் சேர்த்தால் கதம் க்ருதமாகும். இது வடமேற்கிந்திய வட்டாரப் பலுக்குமுறை. சம்முக்கும் க்ருதத்திற்கும் இடையில் ஸ் எனும் இடைநிலையைச் சேர்த்தால் சம்ஸ்க்ருதம் ஆகும். இதெல்லாம் அந்தூர் வட்டார வழக்கு. சங்கதம் என்பது தென்னக வழக்கு. ”நம்மூர் வழக்கு தப்பு, வடமேற்கு இலாகூர் வழக்குத்தான் சரி” என்பது அடிமைப் புத்தி. நம் வழக்கில் எந்தக் குறைச்சலும் இல்லை. இதை ஆனானப்பட்ட ஞானசம்பந்தரே தேவாரத்தில் சங்கதம் என்று பயன் உறுத்தியுள்ளார். பிறகென்ன? சம்ஸ்க்ருதம் என்று சொல்வது, ”ஆங்கிலந் தப்பு, இங்கிலீஷே சரி” என்பது போலுள்ளது. நமக்கெது வாகோ/தோதோ அதைச் சொல்வதில் தவறென்ன? தமிழராகிய நாம் ஏன் இப்படிப் பெருமிதமில்லாது இருக்கிறோம்? தமிழென்றால் மட்டமா?)

பிற்காலத்தில் மகத அரசுகளின் காலத்தில் சிறப்புற்ற மாகதம்/பாகதம்= பெரியபேச்சு/பரவியபேச்சு, அருத்த மாகதம் (= பாதி மாகதம்) என்ற வட்டார மொழிகளோடு சந்தம்/பாஷா கலந்து சம்+கதம் (கலப்புப் பேச்சு) என்பது உருவானது. சந்த மொழி அதிகமிருந்து மற்ற வட்டார மொழி வழக்குகள் குறைந்தால் அது செங்கதம் (செம்மையான பேச்சு) எனப்பட்டது. எப்படி மதுரை சுற்றிய பேச்சு ஒரு காலத்தில் செந்தமிழெனப் பட்டதோ அதுபோல் செங்கதம் என்பது தரமான மொழியாகக் கொள்ளப்பட்டது; அவ்வளவு தான். எப்படிச் செந்தமிழிலிருந்து தமிழெழாதோ, அதேபோல் செங்கதத்திலிருந்து வடமொழி எழாது. வடமொழி திருந்திச் செங்கதமானது என்பதே சரி. ’வடமொழி’ என்றசொல் செங்கதத்தைக் குறிக்கவில்லை. அது மாகதம், பாகதம், அருத்த மாகதம், பாலி எனப் பல்வேறு பேச்சுக்களை ஒரேயொரு ஒற்றைச்சொல்லால் பழந்தமிழிற் குறித்தது. தன்நூலில் சந்தஸ் மொழிக்கும் தம் வட்டாரப்பேச்சு (பேச்சு>basha) மொழிக்குமே பாணினி இலக்கணமெழுதினான். இருக்கு வேதம் சந்த மொழியில் இருந்ததாகவே சொல்லலாம். பல்வேறு மந்திரங்களை இதன் காரணமாகவே சந்தானமென்பர். சந்தத்திற் சொல்வது சந்தானம். மந்திரங்கள் என்ற பயன்பாட்டுப் பொருள் வரும்.

அனுசரணம், அனுசரணை, அனுசரித்தல் = சார்ந்தொழுகுதல். சாரணம், சாரணை, சாரித்தல் என்பவை வடநாட்டுப் பலுக்கலில் அப்படியானது. சாகாரம் வந்தால் அவை தமிழாகி விடும். அனுத்தல் = சார்தல்; அனு சாரி = பின்பற்றுபவன். அனுசன் = அடுத்தவன்; அனுசை = அடுத்தவள். அனியன், அனியத்தி என்றும் மலையாளத்தில் வழங்கும். அடிப்படையில் இது தமிழே. சட்டெனப் பார்க்கையில் வடமொழித் தோற்றங் காட்டுகிறது. இராமனுக்கு அனுசன் இராமனுசன். இச்சொல் இலக்குவனைக் குறிக்கும் பெயராகும். அனுசாகை = கிளைக்கு அடுத்தது; கிளைக்குள் கிளை மறவாதீர் சகுத்தது சாகை. நல்ல தமிழ். சகுத்தல்>செகுத்தல்= பிரித்தல், வெட்டுதல். இருக்கு, யசுர், சாமம் போன்ற வற்றில் பல்வேறு சாகை பிரிப்பர். பெருமானருள் இன்ன கூட்டம்>கோத்தம்>கோத்ரம், இன்ன சாகை என்றும் பிரிவு சொல்வர். அனுசாகை = கிளைக்குள் கிளை. பயன்பாடு சங்கதத்திலும், இதன் உள்வேர் தமிழிலும் இருக்கிறது.

அனுசாசனம் = அறிவுரை, அறவுரை. சாசனம் என்பது அரசனின் சீர்த்தி சொல்லி ”இப்படியிப்படி நடக்கவேண்டுமெ”ன்று பொதுமக்களுக்கு உரைக்கும் வடசொல். கட்டளையிடுவது என்று பொருள் கொள்ளும். சாற்றம் என்பது அதிகாரத்தோடு சொல்வதற்கான நல்ல தமிழ்ச்சொல். சுருதி என்பது செவிமடுப்பது. செவியோடு தொடர்புடைய செவுதி என்ற சொல், ரகரஞ் சேர்த்து ஸ்ருதியாயிற்று. எழுதாக்கிளவி என்று சங்கநூற்கள் இதைச் சொல்லும். சுருதி என்பவை மனப்பாடமாய்க் கேட்டப்பட்டவை. அனுசுருதி. மனப்பாடங் கேட்பவையோடு சேர்ந்தவை. துணைக்கு உதவும் சில செய்திகள். அனு சுருதி= சுருதியைச் சேர்ந்தது. .அனுசூதம்= இடைவிடாது சூழ்ந்திருப்பது. அனு சூதன் = விடாது தொடர்ந்திருப்பவன். சூழ்தல்>சூதமாகும். சூழ்தன் சூதனாவன். ழகரம் வந்துவிட்டால் உள்ளிருக்கும் தமிழ்மை புரிந்துவிடும். இங்கே ழகரம் மறைந்து நிற்பதால், உள்ளிருக்கும் தமிழ்மை சட்டெனப் புரியவில்லை. அனுத்தானம் = அனு+தானம் = ஒழுக்கம். இதை வலுக் கட்டாயமாய் அனுட்டானம், அனுட்டித்தல் என்றாக்கிச் சிவநெறியார் (சைவர்) பழகுவர். அனுத்தானம் என்று சொல்லிவிட்டால் முற்றிலும் தமிழாகிப் போகும். அனுத்தானித்தல் = ஒழுகுதல் தானத்தை த்யானம் என்று இன்னொரு முறையில் திரித்து சிந்தனையொழுங்கைக் குறிப்பிடுவார். நாமோ த்யானம் என்ற வடமொழிப் பலுக்கைப் பிடித்துத் தொங்குவோம். தானம் என்று சொல்லிப்பழகுங்கள். உள்ளேயிருக்கும் அழகுதமிழ் விளங்கிப்போகும். எத்தனை தமிழ்ச்சொற்களை இப்படி இழந்திருக்கிறோம், தெரியுமா? 

அனுத்தாவம் = இரக்கம்; தவிப்பது தாவம். மீண்டும் நல்ல தமிழ். தவிக்கும் வினை தமிழ்தானே? அனுதாவம்>அனுதாபம் என்றாக்கிப் பகரவோசை பழகுவது வடமொழித்தோற்றங் காட்டுவதற்குத்தான். தினம் என்ற தமிழ்ச் சொல்லில் தகரத்தை d எனவொலித்து வடசொல்லாக்கி அனுதினம் =அடுத்தடுத்த நாள் என்றாக்குவதும் சங்கதத்தாக்கம் தான். (தீ = ஒளி. அன்றாட வொளியைத் தினம் என்றோம். அனுத்தினம் என்பது தமிழ். அனுபந்தம் = உறவின் முறை, பிற்சேர்க்கை. பந்தம் என்பது உறவு. இதுவும் நல்ல தமிழ்ச் சொல்லே. இதன் பகரத்தை b என்றொலிப்பதே தவறு. அனுப்பந்தம் என்பது தமிழ். பல்லவி என்பது வடசொல். எடுப்பு என்பது அதற்கு இணையானது. அனுபல்லவி என்பது இருபிறப்பி. தொடுப்பு என்பது அதற்கு இணையான சொல். பவத்தல் என்பது படுத்தல் பொருள் கொண்டது. பவத்திலின் நீட்சியாய்ப் பாவித்தல் என்றசொல்லை ஈழத்தார் பயில்வார். அனுபவம் = பட்டறிவு. அனுபூதி = பட்டறிவு. பூது = physical என்ற பொருள் கொண்ட நல்ல தமிழ்ச்சொல். இதைக்கொண்டு தான் இயல்பியலுக்கு மாற்றாய்ப் பூதியல் என்று உரைத்தேன். (நாடெல்லாம் பரவிக் கிடக்கும் இயல்பியலை 1967-68 களில் மொழிந்தவனும் அடியேனே. எப்படியோ அது இயற்பியலென்று தவறாக நிலைபெற்றுவிட்டது. ஒருவர் கூட இன்னுங் கேள்வி கேட்கக் காணோம். இயற்பென்ற சொல்லே தமிழிற் கிடையாது தெரியுமோ? இயல்பே சரி. ஆனாலும் இயற்பியல் என்ற தவறான சொல் புழங்கிக்கொண்டே இருக்கிறது.  சொல் படைத்தவன் நிறுத்திவிட்டேன்.) பூதியலின் விளக்கம் பெரியது. ”பூதியல் இராம.கி” என்று இணைத்துவைத்துக் கூகுள் பண்ணிப் பாருங்கள் ஏராளங் கிடைக்கும்.

அனுமதி = அன்னோடு (அதோடு) நெருங்குவதற்குக் கொடுக்கும் இசைவு/ஒப்புதல்; அனுமானம் = அதோடு சேர்த்து கருதல்; அனுமோனை = அதோடு சேர்ந்த மோனை; அனுவட்டம் = அதோடு சேர்ந்த (கிட்டத்தட்ட) வட்டம்; அனுவுரு = அதோடு சேர்ந்த உரு, அனுவெதுகை = அதோடு சேர்ந்த எதுகை. அனுப்பு = அதோடு சேர்த்துப் போகச்செய்தல். இது அன்றாடம் அஞ்சல் அனுப்பும் போது நாம் பழகும் வினைச்சொல்

அனுவோடு சேராத ஒரு பொருள் நொகை (negative) ப்பொருள் கோட்டும். அல்லுதல். ”அது அல்ல”  என்கிறோமே? அந்தப்பொருள் அன்றுதல் = மாறுபடுதல். இன்னொரு அசைவுச் சொல்லும் உண்டு. அல்>அலு>அலுங்கு>அனுங்கு>அனுக்கு>அனுக்கம் = அசைவு.

அன்புடன்,
இராம.கி.

No comments: