Tuesday, July 10, 2018

வங்கி

வங்கி என்ற சொல்லின் பெயர்க்காரணத்தை வினவிக் கீழ்க்கண்டவாறு திரு. மணி மணிவண்ணன் முகநூல் சொல்லாய்வுக் குழுவில் ஒருமுறை எழுதி யிருந்தார்.
------------------------------------------
பாங்கி, வங்கி, பாங்கு என்ற சொற்கள் bank என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம். உண்டியல் என்ற சொல்லையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்கால வங்கியின் மூலம் தமிழகத்தின் (நாட்டுக்கோட்டைச்) செட்டியார்களின் கடைகளிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்தை அமெரிக்கப் பொருளாதாரக் கட்டுரைகளில் படித்திருக்கிறேன். அதற்கு அவர்கள் தமிழில் என்ன பெயரிட்டு அழைத்தார்கள் என்று பார்க்க வேண்டும்.

என். சொக்கன் எழுதியிருந்தார்:

'Bank' (வங்கி) என்பதைக் கன்னடத்தில் எப்படிச் சொல்வது என்று கேட்டிருந்தேன். பலரும் 'கன்னடத்தில் இதற்கென்று தனிச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் Bank என்றுதான் பேச்சுவழக்கில் சொல்கிறோம்' என்று பதில் எழுதியிருந்தார்கள். தமிழிலும் நிலைமை அதுதான். பெரும்பாலானோர் 'அந்த பேங்க் பக்கத்துல வீடு' என்றுதான் பேசுகிறார்கள். 'வங்கி' என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் மிகச்சிலரே. ஆனால், பெரும்பான்மையினர் பேசுகிறார்கள் என்பதால் அது சரியாகிவிடாதல்லவா? இதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டால் நாளைக்கு ஒரு நல்ல சொல்லை இழக்க நேரிடும். அதுபோல, கன்னடத்திலும் வங்கிக்கு ஒரு சொல் இருக்கும் என்று உறுதியாகத் தோன்றியது. தொடர்ந்து தேடினேன். நண்பர் ஶ்ரீகாந்த் லட்சுமணன் 'ಹಣಮನೆ' (ஹணமனெ) என்ற சொல்லைக் குறிப்பிட்டார். இன்னும் சில நண்பர்களிடம் அதைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன். 'ಹಣ' என்றால் பணம், 'ಮನೆ' என்றால் வீடு, 'ஹணமனெ' என்றால், 'பணவீடு'. அழகாக இருக்கிறது!

'வங்கி' என்ற சொல்லின் பெயர்க்காரணம் என்ன?
--------------------------------------------
இதற்கான என் நீண்ட மறுமொழியை முகநூலில் இடாது, முதலில் மடற் குழுக்களில் இட்டேன். இது பலருக்கும் தெரியவேண்டிய பொதுச்செய்தி. முகநூலில் மடற்குழுச் சுட்டி மட்டுங் கொடுத்தேன். இப்போது சேமிப்பிற்காக வேண்டி, என் வலைப்பதிவில் இடுகிறேன்.

தமிழில் வங்கியென்ற சொல் தவிரப் பணவாணிகம், வட்டிக்கடை போன்ற சொற்களுமுண்டு. தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தாரிடம் ”கொண்டு விற்றல்” என்ற சொல்லுமுண்டு. [’உண்டியல்’ என்பது வங்கிக்கு மாற்றான சொல் அல்ல. அதன் பொருள் வேறு. அதன் சொற்பிறப்புப் புரியாது மேலை யாசிரியர் அதைச் சங்கதமென்பார். (இப்படிப் பல தமிழ்ச்சொற்கள் இனம் புரியாமற் சங்கதத்திற் சேர்க்கப் படுகின்றன.) உள் (வி.) = இருத்து, வை, இடு. உள்+ந்+து= உண்டு = இருந்தது. உண்டி = இட்டுவைக்கும் பணம். உண்டிகை/உண்டியல் = பணம் இட்டுவைக்கும் பெட்டி/குடுவை.

உண்டிச் சீட்டு (bill of exchange) என்பது 1930 களில் 2 வகையாய்க் கொள்ளப் பட்டது  ஒன்று வரைவோலை (bank draft) என இன்று சொல்லப்படும் தெரியன (தெரிசன) உண்டி. இன்னொன்று பரிமாற்றச்சீட்டு (bills of  exchange) போன்றது. இவற்றிற்கான மிக நுட்பமான விளக்கங்களை இங்கு எழுதுவது பெரிய வேலை. ஆழமாய் அறிய, ”THE CHETTIARS IN BURMA - Sean Turnell, sturnell@efs.mq.edu.au” என்ற நூலையும், pdf வடிவில் ”caste and capitalism in colonial India - The Nattukottai chettiars - David Wset Rudner” என்ற நூலையும் இணையத்திற் பாருங்கள். இன்னும் பல எடுகோள்கள் (references) இப்புலனத்தில் உள்ளன. இங்கு நான் இரண்டை மட்டுஞ் சொன்னேன்.]

வங்கியென்ற சொல்லின் பொருள் புரியாது, அது Bank இன் தற்பவமோ என்றெண்ணித் தனித்தமிழன்பர் ”வைப்பகத்தைப்” பரிந்துரைப்பார். தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் கீழ் அச்சொல் பரவியது. காரணம் புரியாது இன்றும் ’வங்கி’யை ஒதுக்குவாருண்டு. வங்கியின் அடிப்படைப் பணிகள் இருவகை.

1. பணம் வைத்திருப்போரிடம் பணம் வாங்குவது.
2. பணம் கேட்போருக்குப் பணங் கொடுப்பது.

இவைபோகப் பணப் பட்டுவாடு (remittance of money), உண்டியற் கழிவு (discounting of bills of exchange), வெளியிலிருந்து வரும் காசோலைகளை மதித்துப் பணங் கொடுத்தல் (honoring cheques issuued elsewhere, காசோலைகளை ஒரு காலத்தில் நடப்பு உண்டி என்றுஞ் சொன்னார்), பணத்தாள் மாற்றம் (currency exchange), சொத்து அடைமானம் (gold, property and valubles depository), நகைச் சேமக்கலன் (safe-keeping of jewels) போன்ற பல்வேறு பணிகளையும் இக்கால வங்கிகள் செய்து தம் பொலுவைக் (profit) கூட்டிக் கொள்கின்றன.
:
வைப்பாளர்/பொதிப்பாளரிடம் (depositors) பணம் வாங்கி வட்டி கொடுத்து, கேட்பாளர்/கடனாளரிடம் (debtors) கடன் கொடுத்து வட்டி வாங்கி ஒரு வங்கி செயற்படுகிறது. கேட்புவீதம் வைப்புவீதத்தை விட சற்று அதிகமாய் இருக்கும். (காட்டாக, வைப்பு வட்டி 6.5% எனில், கேட்பு வட்டி 8.5/9.0 % ஆகலாம்). அப்போது தான் பரிமாற்றச் செலவு (transaction costs) போக வங்கிக்கு மேல்வருமானங் கிட்டும். பரிமாற்றச் செலவில் வாடிக்கையாளரின் தகுதி பற்றிய ஆய்வுச் செலவு, கடன் ஆவணங்களை உருவாக்க ஆகுஞ் செலவு, கடன் பணத்தைத் திருப்பிக் கட்டுகையில் வங்கிக்கு ஆகுஞ் செலவு, அடை மானம் இருந்தால் அதையொட்டிய செலவு, கடனைத் திரும்பக் கட்டாவிடில் ஆகுஞ் செலவு, அடையாப் பணம் (கட்டப்படாத கடன்பணம். இன்று இது distrssed loan என்று சொல்லப் படும்) போன்றவை அடங்கும். இச்செலவுகள் கடன்தொகை அளவைப் பொறுத்தவையல்ல. சிறுகடன்களுக்கு இச்செலவு பெருஞ் சுமையாகும். 

சரி. வட்டி என்பதென்ன? இதைப் புரிந்து கொள்ள, இன்னொருவர் வீட்டிற்கு மாத வாடகை கொடுப்பதை எண்ணுங்கள். ஓராண்டுத் தங்கலுக்கு வீடு எடுத்தால் 12 முறை வாடகை தருவதாய் ஒப்பந்தம் போட்டிருப்போம். எண்ணிப் பார்க்க: வாடு/வாட்டி = turn; ”எத்தனை வாட்டி உனக்குச் சொல்வது?” என்ற வாசகம் நினைவிற்கு வருகிறதா? வாட்டில்/வாட்டியில் கட்டுவது வாடகை. (=வாடு+அகை; அகைத்தல்=செலுத்துதல்). இன்னொருவர் வீட்டை நாம் வைத்திருக்கும் வரை வாடகை கட்டத்தான் வேண்டும். வட்டி என்பதும் ஒரு வகையில் வாடகை போற்றான். இன்னொருவர் முதலை நாம் வைத்திருக்கும் வரை வாட்டி>வட்டிப்பணம் கட்டத்தான் வேண்டும்  (வாட்டிப் பணம்>வட்டிப்பணமும் ”வாட்டிற்” பிறந்ததே) சிச்சிறிதாய் முதற்பணம் திருப்பிக் கட்டக் கட்ட, வட்டிப் பணம் குறையும். வட்டிப் பணம் என நீட்டாது (ஒரு பெயரடையே பெயராவது போல்) வட்டியெனச் சுருக்குகிறோம். வட்டியைப் பொலிசையென்றும் பழங்காலத்திற் சொல்வார். (பொலி = ஓராண்டு நெல்விளைச்சல். அறுவடை அன்றைக்குக் களத்து மேட்டில் ”பொலியோ பொலி” என்ற கூச்சல் வானம் பிளக்கும்) பணம் பயன்பாட்டில் பொலிகிறதென்று (= பெருகுதல்) கொண்டு இங்கே பொலிசை யாயிற்று.

மொத்தத்தில் பணவணிகம் இதில் நடக்கிறது. இதில் பணமே சரக்கு. அதுவே வருமானமுங் கூட. இன்னொரு தொழிலில் சரக்கும் வருமானமும் வெவ்வேறு ஆகலாம். இவ்வணிகத்திற்கு வருமானம் வட்டியால் வருவதால் இது வட்டிக் கடையாயிற்று. வைப்பைக் கொண்டு கடன் விற்பதால் இது கொண்டுவிற்றலும் ஆயிற்று. ”மூணு வருசம் கொண்டுவிக்றதுக்குப் பர்மா போயிருக்காரு”. என்பது இற்றைப் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 1930/40 களில் புழங்கிய பேச்சாகும்.. .மற்ற தொழில்களோடு ஒப்பிட்டால், பணம் வைப்பை இயல்பொருளாயும் (raw material), கடனை, மானுறுத்திய புதுக்கு (manufactured product) போலவுங் கொள்ளலாம். இத் தொழிலில் பணங்கேட்பு விற்றலுக்கும் (sale), பணம்வைப்பு, கொள்ளலுக்கும் (procurement) சமம். முடிவில் உருவாகும் ஐந்தொகைச் சிட்டையையும் (balance sheet), பொலுவு நட்டத் தேற்றத்தையும் (profit and loss statement) பார்த்தால் ஒரு வங்கியின் நிலைமை விளங்கிப்போகும். இப்படிப் பார்த்தால், அக்கால வட்டிக் கடைகளுக்கும் இக்கால வங்கிகளுக்கும் பெருத்த வேறுபாடு ஒன்றுங் கிடையாது. நடைமுறைகளில் மட்டுமே அவை வேறுபட்டன. நிலவுடைமைக் குமுகாய (feudal society) விளைஞருக்கும், வினைஞருக்கும் தேவையான எல்லா நிதித் தேவைகளையும் வட்டிக் கடைகள் ஒருகாலத்தில் நிறைவு செய்தன.

இங்கொன்றைச் சொல்லவேண்டும். வட்டிக்கடைகள் என்பவை ஏதோ தனித்தனிக் கட்டிடங்களில் இருந்தவையல்ல. ஒரு கட்டின் முகப்பறையில், 10/15 வட்டிக்கடைகள்கூட அக்காலம் இருந்திருக்கலாம். (இத்தனை கடைகள் சேர்ந்திருக்கும் மனையைத்தான் பணமனை என்று கன்னடத்தில் அழைத்தாரோ? தெரியாது.) வட்டிக்கடையை மேற்பார்ப்பவர் முதலி (propreiter) ஆகவும் இருக்கலாம். 3 ஆண்டு ஒப்பந்தம் போட்டுவந்த முதலாளாகவும் (agent; இவரைப் பகராளி/முகவரென இக்காலஞ் சொல்கிறோம். 30/40 ஆண்டுகளுக்கு முன்கூட agent என்ற சொல் வங்கிகளில் பரவியிருந்தது), மேலாளாகவும் (manager) இருக்கலாம் முதலாள்/மேலாள் என்பவர் குறிப்பிட்ட காலத்திற்குக் கடையைக் கவனிப்பவர் என்பது இங்கே விளங்கிக்கொள்ள வேண்டியது.. இவர் முதலியுடன் போட்ட ஒப்பந்தத்தோடு, கடை தொடர்பான வழக்கு வியவகாரங்களில் முதலி போலவே தோற்றும் படி ஓர் அதிகாரப் புயவையும் (power of attorny) முதலியிடமிருந்து பெற்றுவந்திருப்பார். கடையின் பொலுவு-நட்டத்தில் (profit and loss) இவருக்கும் ஒரு குறிப்பிட்ட பங்குண்டு.

ஒருகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்த ஒவ்வொரு வட்டிக் கடையிலும் வாங்குப் பலகை (சாய்வுப் பலகை) பொருத்திய, மரப்பெட்டி, சிறிய இருப்புப்பெட்டி, மேலாளுக்குப்பின் பேரேடுகள் (ledgers) அடங்கிய பேழைகள் (cupboards) இருக்கும். மேலாளுக்குதவ அடுத்தாள்கள் (aasistants), காட்டுக் கணக்குப்பிள்ளைகள் (field staffs; காடு = field) இருப்பார் (இன்றுங்கூட இந்தியாவின்  பழைய அஞ்சலகங்களில் வாடிக்கையாளர் எழுதுவதற்கு வாங்குப்பலகை போட்டுவைத்திருப்பார்.) இதை வங்குப்பலகை என்றுஞ் சொல்வர். விடாது எழுதுவோரின் கணுக்கையில் வலி தெரியாமல் எழுத (இக்கால மடிக்கணியில் விடாது பொத்தான் தட்டும் கணியாளருக்கும் வலி தெரியாது தட்டச்ச) வாகானது வாங்குப்பலகையாகும்..

தவிர உடனடித் தேவைக்கான பணம், பேரெடுகள், எழுது பொருள்கள் வைக்கப் பயன்படும் பெட்டியின் மூடியாகவும் இவ் வாங்குப்பலகை அமையும். வாடிக்கையாளர் பக்கம் உயர்ந்தும் (வாடிக்கைச் சொற்பிறப்பும் வாட்டிலிருந்து அமையும். திரும்பத்திரும்ப வருபவர் வாடிக்கையாளர்.) மேலாள் பக்கம் தாழ்ந்தும் பலகையின் சாய்வு இருக்கும். மூடி திறக்கையில் மேலாளுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தடுப்பாகவும் இந்த வாங்குப்பலகை இருக்கும். பலகை மூடிய பெட்டியினுள்ளே “என்ன ஆவணம் இருக்கிறது, எவ்வளவு நடப்புப் பணம் (current cash) மேலாள் வைத்திருக்கிறார்” என்பதில் ஓரளவு தனிநிலை (privacy) காட்டமுடியும். வட்டிக்கடையின் தனி அடையாளம் வட்டிக்கடை என்பதற்கு இந்த வங்கே. அடையாளமாகி, வாங்கு> வங்கு>வங்கி என்றும் ஆனது. ”என்ன தம்பி, முடிஞ்சா எங்க வங்குப் பக்கம் வாங்க.”

மொத்த வணிக வங்கிகள் (அடத்திக் கடைகள். அடத்தம்= மொத்தம்) ஏற்பட்ட பின், தனிக்கட்டடம், பெட்டக ஏந்துகள் (locker facity), ஆவணக் காப்பகம் போன்றவை வங்கிகளில் எழுந்தன. ஆனால் வங்கி எனும் பெயர் வழக்கில் மறையவில்லை. வட்டிக்குவிடும் பழக்கம் பெருஞ்சோழர் காலத்திற்கும் முன்பே இருந்திருக்கலாம். இதை மேலையரே முதலில் கொணர்ந்தாரென்பது வெறுஞ் சொல்விப்பு. . ஏனெனில் வங்கி நுட்பத்தை இரோப்பியர் அரபுகளிடம் இருந்தே கற்றார். அரபுகள் இந்தியரிடமும் சீனரிடமுமிருந்துங் கற்றிருக்கலாம். ”இக்கற்றல் எப்படி நடந்தது?” என யாரும் ஆயவில்லை. ஆனால் வியன்னா காட்சியகத்தில், (பொ.உ. 1-3 ஆம் நூற்றாண்டு) கிரேக்க மொழி ஆவணத்தில், முசிறியில் மிளகேற்றி எகிப்துப் பெரினிசுக்குக் கப்பல்மூலங் கொணர்ந்து பின் வண்டிவழியே அலெக்சாந்திரியா வரை நகர்த்தி, மீளக் கடல்வழி உரோமுக்குக் கொண்டுசென்ற வணிகத்தில், வங்கிவழிப் பணம்பெற்றதும், வட்டிகட்டியதும் முன்சொன்ன உண்டி போன்றதும் பேசப்படுகிறது. எனவே கப்பல் வணிகத்திற்கு உதவ, யூத வங்கிகள் செயற்பட்டது தெரிகிறது. ”யூதருக்கும் தமிழருக்கும் என்னமாதிரி உறவுகளிருந்தன?” தெரியாது. இவ்வங்கிமுறை மிளகேற்றிய தமிழருக்குத் தெரியாது போய்விடுமா, என்ன?     

ஒவ்வொரு நகரத்தார் வங்கியின் முதல் (capital) என்பது, ஆச்சிமார் பணத்தாலும், தனது முறைப் பணத்தாலும், கோயில்/தருமப் பணத்தாலும், அடத்திகடைப் பணத்தாலும், வாடிக்கையாளர் தந்த முதல்களாலும், வெள்ளைக்காரன் பணத்தாலும் ஆனது [வெள்ளைக்காரன் பணம் என்ற விந்தைப்பெயர் ன்று சொல்லப்பட்டது. இம்பீரியல் வங்கி (Imperial Bank) ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி (அக்கால Charted Bank; இக்கால Standard Charted Bank), ஃகொங்காங் சாங்கை வங்கி (Hongkong and Sanghai  Bank) ஆகியவற்றில் இருந்து பெற்றதாகலாம்.] இது தவிர, தவணைப் (term deposits) பணங்களும் கடன்கொடுக்கப் பயன்பட்டன. முதல்களைக் காட்டிலும், தவணைக் கணக்குப் பணமே வங்கி நடத்தப் பெரிதும் பயன்பட்டது.   

வங்கியின் நடைமுறையில் வட்டிவீதத்தை நிருணயிப்பது முகன்மையான விதயம். இதில் இருவேறு வட்டி வீதங்கள் புழக்கத்திலிருந்தன. முதல்வகை வட்டி, நடப்பு வட்டி எனப்பட்டது. இது இரங்கூன், கொழும்பு, பினாங்கு, சிங்கப்பூர், செய்கோன், கல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் நகரத்தார் வங்கிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட பணங்களுக்கு அவர்கள் கொடுத்த வட்டி வீதம். இது இக்கால LIBOR (London Inter-Bank Operating Rate) போன்றது. 2 ஆம் வகையைத் தவணை வட்டிவீதம் என்பார்; தவணைப் பணங்களுக்குக் கொடுக்கப்படும் வட்டி வீதம். நடப்பு வட்டியையும், தனது கடைக்கு ஆகுஞ்செலவையும், மற்ற போட்டி வங்கிகளின் நடைமுறைகளையும் பொறுத்து இது அமையும். நடப்பு வட்டிவீதமும், தவணை வட்டிவீதமும் 15 நாட்களுக்கு ஒருமுறை வங்கிகளின் மேலாள்களால் ஊரின் பெரிய கோயிலிற் கூடி முடிவுசெய்யப் பட்டது. கடனுக்கான வட்டிவீதம் தவணை வட்டிவீதத்தைக் காட்டிலும் கூட இருக்கும்.

இவ்வளவு சொல்லிய நான் வாங்குப் பலகையின் சொற்பிறப்பு பற்றியுஞ் சொல்லவேண்டும். ஆங்கிலத்தில் bank (n.1) "financial institution," late 15c., originally "money-dealer's counter or shop," from either Old Italian banca or Middle French banque (itself from the Italian word), both meaning "table," from a Germanic source (such as Old High German bank "bench, moneylender's table"), from Proto-Germanic *bankiz- "shelf," *bankon- (see bank (n.2)). The etymonlogical notion is of the moneylender's exchange table. As "institution for receiving and lending money" from 1620s. In games of chance, "the sum of money held by the proprietor or one who plays against the rest," by 1720. Bank holiday is from 1871, though the tradition is as old as the Bank of England. To cry all the way to the bank was coined 1956 by U.S. pianist Liberace (1919- 1987), after a Madison Square Garden concert that was panned by critics but packed with patrons. என்ற வரையறையைச் சொல்வர். இனி வாங்கு என்ற சொல்லின் பழமைக்கு வருகிறேன்.,

வல்லெனும் வேர் கோணற்பொருளையும், வளைபொருளையும் குறிக்கும். வல்>வலயம் என்பதை நினைவுகொள்ளுங்கள். வடிவியலில் (geometry) கிடைக்கோடு (horizontal line) கோணி விட்டால், சரிவு (slope) மாறியதாய்க் குறிக்கிறோமில்லையா? கோணம் (angle) = சரிவு (slope). சரிவு தொடர்ந்து மாறினால் (if the slope contiually changes), கோடு வளைந்து சுருவி (curve) விட்டது என்போம். எனவே கிடையிலிருந்து கோணம், வளைவு, சுருவை, வட்டம் என மாறும் இயல்பைப் புரிந்துகொள்ளுங்கள். வல்>வள் எனத்திரிந்து வளைவு என்ற சொல்லையாக்கும். வள்ளிற் பிறந்தது வட்டம். வள்ளிற் பிறந்த சொற்கள் 200 க்கும் மேலிருக்கும். வள்>வர்>வாரம் என்பது சாய்வைக் குறிக்கும். 'தாழ்வாரம்' என்றசொல் நினைவிற்கு வருகிறதா? ஒரு வீட்டு முற்றத்தில் சாய்நிலையில் சட்டங்கள் அடித்து அதன்மேல் ஓடுவேய்ந்து தாழ்வாரம் அமைக்கிறோமே? வள்>வண்>வணங்கு = வளைநிலை. ’வணக்கம்’ என்று நாம் சொல்லும்போது வளைநிலையில் இருந்து கைகள் கூப்பும் பழக்கத்தை உணர்கிறோம். .

வள்>வாள் வளையக்கூடிய பட்டாக்கத்தி. வாள்>வாள்ங்கு>வாங்கு = கோணிய, வளைந்த பொருள். ”வாங்குகதிர் வரகின் - முல்லைப்பாட்டு 98”. வாங்கரிவாள் = வளைந்த அரிவாள். வாங்கற்கழுத்து = கோணற்கழுத்து. ”இம்மனை ஈசானிய மூலையில் வாங்கலாயுள்ளது” - கோணியுள்ளது. ”இந் நிலம் வாங்கலாய் உள்ளதால் வழுக்குகிறது.” (அதன் சரிவால் வழுக்குகிறது.). ”அக் கடைக்கதவு வாங்கியுள்ளது” - சற்று திறந்தாற் போலிருக்கிறது. வங்கா/வாங்கா = வளைந்த நாரை. ஊதுகொம்பு, வாங்கிற்கு இன்னும் பல பொருள்கள் உண்டு. வங்கம் = விலாவெலும்புபோல் வளைந்த சட்டங்கள் கொண்ட கடலிற் செல்லத்தக்க பெருங்கலம், அலையென்றும் பொருளுண்டு. வங்கர் = கலம் ஓட்டத்தெரிந்த நெய்தல்நில மாக்கள். வங்கரை = வளைகை, கோணுகை. “வங்கரை கொங்கரையாய் மாட்டிக்கொண்டான்.” வங்கன் = வறுமையாளன். (குனிந்து நிற்பவன்; “வங்கப்பயலுக்கு வாய்ப்பேச்சிற் குறைவில்லை.”); வங்கி = நெளிந்து காணும் தோளனி, நெளி வளையம், நெளி மோதிரம், நெளிவாள். வங்குக்கால் = சில மேசைகளுக்கு அமையும் வளை கால், கப்பலின் விலாப்பலகைகளை அடிக்கத்தோதான மரச்சட்டம்; விலா எலும்பு போன்றது.

வங்கின் திரிவாய் (வங்கு>அங்கு) அங்கு+அணம் = அங்கணம் என்ற சொல் எழுந்து சாய்க்கடையைக் குறிப்பிடும். அங்கு என் றசொல் வளைவைக் குறிப்பதாய் கலித்தொகை 80 ஆம் பாடலில் “திகழொளி முத்தங்கு அரும்பாகத் தைஇ” என்றுவரும்  அங்குசமென்பது வளைவுப்பொருளில் யானைகட்டுங் கருவியைக் (திருமுரு.110) குறிக்கும். கோணத்திற்கு இணையான angle க்குக் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள். angle (n.) "space or difference in direction between intersecting lines," late 14c., from Old French angle "an angle, a corner" (12c.) and directly from Latin angulus "an angle, a corner," a diminutive form from PIE root *ang-/*ank- "to bend" (source also of Greek ankylos "bent, crooked," Latin ang(u)ere "to compress in a bend, fold, strangle;" Old Church Slavonic aglu "corner;" Lithuanian anka "loop;" Sanskrit ankah "hook, bent," angam "limb;" Old English ancleo "ankle;" Old High German ango "hook"). மீண்டும் மீண்டுஞ் சொல்கிறேன். தமிழிய மொழிகளுக்கும் இந்தை யிரோப்பிய மொழிகளுக்கும் இடையே எங்கோவொரு தொடர்புள்ளது. நம்பத்தான் பலரும் தயங்குகிறார். . 

இனி வாங்கல் வினைக்கு வருவோம். ஈ, தா, கொடு என்ற 3 நிலையிலும் (ஈ = உயர்ந்தோனிடம் தாழ்ந்தோன் கூறி இரக்கும் சொல். தா = தன்னையொத்த ஒருவனிடம் இரக்கும் போது கூறுஞ்சொல். கொடு = தாழ்ந்தோனிடம் உயர்ந்தோன் இரக்கையிற் கூறுஞ்சொல்) கைகளைச்சாய்த்துப் பொருள் பெறுவது வாங்கலாகும். (சாய்தலின்றி வாங்கலில்லை.) நம் வீட்டுச்சுவரின் மேற்பகுதியில், வருவோன் போவோனெல்லாம் உட்காரக் கூடாதென்று, மேற்பகுதியைக் கிடையாய் அமைக்காமல் வாங்காயமைப்பர். இதேபோல் திண்ணையில் விருந்தாளிகள் முதுகுசாய்க்கவும், துயில்கையிற் தலை மாட்டிற்கும் தோதாக வாங்குத்திண்டு அமைப்பர். எனவே வாங்குபலகை/வங்குப்பலகை உறுதியாகச் சாய்வுப்பலகை தான். சாய்பலகை கொண்ட பெட்டிக்குள் வட்டிக்கடைக்குத் தேவையான எல்லாவற்றையும் வைத்து இருந்ததால் ”வங்கி” என்று அதைக் குறிப்பதற்கு எந்தத் தடையும் கிடையாது. முடிக்குமுன் 2004 இல் எழுதிப் பின் 2014 இல் என் வலைப்பதிவில் மீள வெளியிட்ட இன்னொரு கட்டுரையையும் படிக்குமாறு அழைக்கிறேன். அது. சிவகங்கை மாவட்டப் பேச்சுநடையில் அமைந்தது. பேச்சுமொழியிலும் நிதியியலை பேசமுடியும் என்பதற்காய் அதையெழுதினேன்.

http://valavu.blogspot.in/2014/08/blog-post_29.html

அன்புடன்,
இராம.கி..

மேலேயுள்ள கட்டுரை சொல்லாய்வுக் குழுவில் வந்தபோது நண்பர் “துரை. மாணிக்கம்” கீழ்க்கண்ட முன்னிகையை அளித்திருந்தார்.
----------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் கருத்துக்களை வைத்து தமிழில் அதை மொழி பெயர்ப்பு செய்வதாக உள்ளது ஐயா. வங்கியின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து முன் வைத்து அதற்கான விளக்கமும் சிறப்பாக உள்ளது எனினும் பணம் என்பது உழைப்பை பரிமாற்றம் செய்யும் கருவி என்ற அடிப்படை கூறுகளை மறந்து விட்டீர்களோ என்ற ஐயம் எழுகிறது. டிராப்ட் / செக் / கிரெடிட் / டெபிட் போன்ற அனைத்தும் வைப்பகத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு இட்ட பெயர்கள் தாமே..? வட்டி என்ற வழக்கமே தமிழ் கலாச்சாரத்தின் இருப்பதாக திறியவில்லையே உழைக்காமல் சேர்த்துவைத்து அதை வட்டிக்கு விட்டு பிழைப்பு சிய்வதை இந்த தமிழ் சமூகம் எற்றதாக வரலாறு இல்லை ஆதலால் தான் இன்னும் தமிழர்கள் வைப்பகம் வைத்திருக்க வில்லை போலும். நம் உழைப்பை சேமித்து வைக்க பயண்படுவதே வைப்பு + அகம் = வைப்பகம் என்பது என்னுடைய கருத்து.
---------------------------------------------------------------------------------------
அவருக்கு நானளித்த மறுமொழி வருமாறு:

நண்பரே! என் கட்டுரைகளில் கலைச்சொற்கள் எப்போதுமே கணிசமாகத் தான் இருக்கும். இவை புழக்கத்தில் வரவேண்டும் என்பதற்காக ஆங்கிலச் சொற்களைப் பிறைக்குறிக்குள் கொடுப்பதும் என் வழக்கம். 1000 சொற்கள் இருக்குங் கட்டுரையில் 50 கலைச்சொற்கள் இருந்தால் அது 5% என்று தோற்றும். இப்படிச் சற்று மொழிபெயர்ப்புத் தோற்றங் காட்டத் தான் செய்யும். அக்கட்டுரையை இன்னும் நீட்டி முழக்கி 5000 சொற்களிற் சொன்னால் கலைச்சொற்களின் கணக்கு 1% ஆகிவிடுவதால் படிப்போரை ஒன்றும் உறுத்தாது.இப்படித் தான் கட்டுரையின் அளவு சுருங்கச் சுருங்க, கலைச்சொற்களைத் தவிர்க்கமுடியா நிலையில், பார்வையில் இப்படித் தோற்றுவதை என்னால் தவிர்க்கமுடிவதில்லை..

உங்களின் கனிவிற்கு நன்றி.

”பணம், உழைப்பைப் பரிமாற்றஞ் செய்யுங் கருவி” என்பதை என் ”பணம் - பாலபாடம்” என்ற கட்டுரையில் உணர்த்தியுள்ளேன். அதையும் படிக்கச் சொல்லி இக்கட்டுரையிற் சொல்லியிருந்தேன். அதை நீங்கள் படிக்கவில்லை போலும். டிராப்ட் / செக் / கிரெடிட் / டெபிட் போன்ற சொற்களை இனிமேலாவது தமிழிற் சொல்வோமென்றுதான் வரைவோலை, காசோலை, கிட்டிப்பு, கடவிப்பு என்றவற்றைப் பரிந்துரை செய்கிறோம். (பார்க்க: http://valavu.blogspot.in/2007/12/blog-post.html).

வட்டிப் பழக்கம் தமிழர் நாகரிகத்தில் கட்டாயமுண்டு. வியன்னாக் காட்சி யகத்திலுள்ள கிரேக்கமொழி ஆவணம் பற்றிச் சொல்லியிருந்தேன். முசிறியிலிருந்து உரோமுக்கு மிளகேற்றிப் போனபோது ஒரு வங்கி கடன் கொடுத்ததையும், வட்டி, உண்டி, பணமுதலீடு பற்றியெலாஞ் அந்த ஆஅணம் பேசியதையுஞ் சொன்னேனே? படிக்கவில்லையா/? இணையத்தில் அந்த ஆவணங் கிடைக்கும் நன்கு தேடிப் பாருங்கள். நம்மைப் பற்றியறியத் தமிழாவணம் மட்டும் பற்றாது ஐயா. பிறமொழி ஆவணங்களையும் பார்க்க வேண்டும். கீழடித் தொல்லாய்வால் தமிழர் நகர நாகரிகம் அடைந்திருந்தார் என்று சொல்ல விழையும் நாம், இதுபோல் கப்பல் வணிக ஆவணங்களையும் படிக்கவேண்டும். இதுவும் நம் நகர நாகரிகத்திற்குச் சான்று தானே? ஒன்றைப் பார்ப்போம், இன்னொன்றைப் பார்க்கமாட்டோமா?

”உழைக்காமற் சேர்த்து வைத்து வட்டிக்குவிட்டுப் பிழைப்புச் செய்வதை இத் தமிழ்ச் சமூகம் ஏற்றதாக வரலாறில்லை” என்று நீங்கள் எழுதுவதைக் கண்டு என்னால் வியக்காதிருக்க முடியவில்லை. நீங்கள் ஏதோவொரு கற்பனை உலகில் உள்ளீர்கள் போலும். இதுபோல் இப்போதெல்லாம் யாரும் பேசுவதில்லை. இணையம் வந்தபிறகு நுட்பியல், பொருளியல், அறிவியல், பகுத்தறிவு என்ற பலவும் எல்லார்க்கும் எல்லா நேரத்திலும் கிடைக்கின்றன. புரிகின்றன. நாம் கொண்ட கொள்கைக்காக வரலாற்றை மாற்றிவிட முடியாது. வரலாற்றைப் படித்து நம் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புதுப் பழம்வரலாறு தெரியும்போது, நம் கொள்கைகளைத் தான் மறு ஆய்வு செய்யவேண்டும்.

வாடகையில்லாது இன்னொருவர் வீட்டில் நாம் குடியிருந்து விட முடியுமா? அது போல வட்டியில்லாது ஒரு கடன் வாங்கிவிடமுடியுமா? வட்டியே இல்லாது தமிழர் வாழ்ந்தது பொ.உ.மு.600 களுக்கும் முந்தைய நிலையாகும். சங்க காலத்திலேயே (பொ.உ.மு.600-பொ.உ.220) நிறுவனப்படுத்தப்பட்ட நிலவுடைமையும், நகர நாகரிகமும் இங்கு வந்துவிட்டன. ”எவ்வளவு வட்டி வாங்குவது? வரி வாங்குவது” என்ற அளவிற்றான் பொருளியலாளர் தமக்குள் வேறு பட்டாரே ஒழிய வட்டியே தவறென்று யாருஞ் சொல்லவில்லை. கடன் கட்டுவாரிடம் அதிக வட்டி கேட்கக் கூடாதென்பது ஞாயமான பேச்சு. உலகிற்கே பொதுவுடைமைக் கொள்கையை விரித்துரைத்த காரல்மார்க்சு கூட வட்டியையும், வங்கிகளையுந் தவறென்று சொல்லவில்லை. அவனுடைய ”மூலதனம்” நூலை முழுதும் படித்தபின் தான் இப்படிச் சொல்கிறேன். தவிரப் பல்லவர் காலத்திலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை கிடைத்த பல்லாயிரங் கல்வெட்டுக்கள் ”கோயிற் பணத்திற்குக் கூட பொலிசை கட்டுவதைக்” குறிப்பிட்டுத் தான் உள்ளன. கிட்டத்தட்ட 60000/100000 தமிழ்க் கல்வெட்டுக்கள் இருப்பதாய் ஒரு கணக்குண்டு. அதிற் குறைந்தது 50000 கல்வெட்டுக்களாவது நிலம், பணம், பொலிசை, அடைமானம் பற்றிப் பேசும்..இப்பேரரசுகள் இருந்த போது தமிழர் வங்கி வைத்திருந்ததுண்டு. இல்லாவிடில் பேரரசுப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இல்லையென்றுசொல்லும் நீங்கள் ஆதாரங்களைக் காட்டுங்களேன்?

வைப்பகத்தில் யாரும் உழைப்பைச் சேமித்து வைக்கவில்லை ஐயா! பணத்தைச் சிலர் சேமித்து வைக்கிறார்; வட்டி பெறுகிறார். இன்னுஞ் சிலர் கடன் வாங்குகிறார்; வட்டி கொடுக்கிறார். நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. வைப்பகமென்ற சொல் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கிறது. அது முழுமை அல்ல. அப்புறம் உங்கள் உகப்பு. முதலாளியப் பொருளியலையும், சமவுடமைப் பொருளியலையும் ஆழ்ந்து படித்ததனாலேயே இப்படிச் சொல்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.   .

No comments: