Wednesday, March 08, 2006

மணத்திற்கு முன் புணர்ச்சி

பாலுறவு பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை நாடு தழுவ நடத்தி, அதனோடு ஒரு சில குமுகாய ஒளிவட்டங்களிடம் முன்னிகையை (comment) "இந்தியா டுடே" தாளிகை கேட்டது; அப்பொழுது, பேர்பெற்ற ஒரு தமிழ் நடிகை "பால்வினை நோய்கள் தாக்காமலும், தேவையில்லாக் கருப்பம் உண்டாகாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டால், திருமணத்திற்கு முன் ஒரு பெண் பாலுறவு வைத்துக் கொள்ளலாம்; இந்தக் காலத்தில் படித்த ஆண்மகன் ஒருவரும் தன் எதிர்காலத் துணைவி கன்னியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்" என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அப்படிக் கருத்துத் தெரிவித்ததோடு அவர் அமைந்திருந்தால் அந்த இட்டி (issue) பெரிதாகவே ஆகியிருக்காது. அப்படிச் சொன்னது, 'கற்பு, திருமணத்திற்கு முன் உடலுறவு' என்ற வகையில், குமுகத்தில் ஒரு சாரார் கருத்து என்றும், "அந்த கருத்துக் கணிப்பு ஏற்கக் கூடியதா?" என்ற கேள்வியோடு அடங்கிப் போயிருக்கும்.

ஆனால், கருத்துக் கணிப்பிற்கு அப்புறம், ஒரு நாளிதழ் செய்தியாளர் போட்ட தூண்டிலில், அதே நடிகை "திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா? (DINAMANI 27/09/2005)" என்று வாய்தவறிச் சொல்லப் போக, அந்தக் கேள்வியின் பரிமானங்களில் ஒரு சிலர் கோவம் கொண்டு கொதித்துக் கேள்வி கேட்டதாய் ஆனது. விளைவாக, "உணர்ச்சி பொங்கும் நேரத்தில் அமைதி காப்பது நல்லது" என்று ஒரு சிலருக்குப் புரியாத நிலையில், ஒரே கூச்சலும் குழப்பமுமாய் மாநிலம் முழுதும் எழுந்துவிட்டது. இந்த விளைவுகளைக் கண்டு பதறிப் போன அந்த நடிகை, "அய்யய்யோ, நான் ஒன்றும் தவறான பொருளில் தமிழ்ப்பெண்களைப் பற்றிச் சொல்லவில்லை" என்று மன்னிப்புக் கேட்க, ஒருவாறு சமதானம் (எதிர் எதிரான இருவர் சமமான தானம் - same stand - எடுப்பது சமதானம்; அதைச் சமாதானம் என்று வடமொழிப் பலுக்கில் சொல்ல வேண்டாம்.) ஏற்பட்டது. அதை அப்படியே விட்டுப் போகாமல், ஒரிரு மாதங்கள் கழித்து, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய், முதல் நடிகைக்கு ஆதரவாய், இன்னொரு நடிகை, "தமிழர் என்றால் கொம்பு முளைத்திருக்கிறதோ?" என்று எடுத்தெறிந்து பேசியவுடன், மீண்டும் பெரிய விவாதமே தோன்றி விட்டது. வலைப்பதிவு உலகத்திலும் இந்த விவாதத்தின் எதிரொலி இருந்தது.

சொன்னவர்கள் இருவரும் தமிழரா, தமிழரில்லையா, அவர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவரா, மாராட்டியமா என்ற பேச்செல்லாம் நம்மைப் போன்றவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனால் அந்த நடிகைகள் இருவரும், முறையே நாளிதழ் செய்தியாளரிடமும், திரைப்படம் சார்ந்த ஒரு கூட்டத்திலும், "தமிழர்கள் பற்றித்தான் பேசினார்கள்" என்பது உண்மை. அப்படிப் பேசிய பின்னால், தமிழர்கள் என்போர் மறுவினையாய் எழுந்தது இயற்கையே. [முதல் நடிகை பொதுவாகச் சொன்னது இந்தியா டுடேயில் உள்ள முன்னிகையில் மட்டும் தான். நாளிதழ்ச் செய்தியாளரிடம் அளித்த முன்னிகை, தமிழரைப் பற்றிய விதப்பான முன்னிகை தான்.]

இந்த விதப்பான முன்னிகைக்குப் பின் "அதெப்படி செருப்பு, விளக்குமாறு, அழுகியமுட்டை, தக்காளி ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டு நடிகைக்கு எதிராக வரலாம்?" என்ற ஒருசிலரின் கேள்வி சற்று விந்தையானது. கையில் கொடிக்கம்பு, பதாகைகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு போராட்டத்திற்குப் போவதும், கத்தியும், சூலமும், கம்பு எடுத்துக் கொண்டு அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு பேரணிக்குப் போவதும், உருவப் பொம்மைகளுக்குச் செருப்பு மாலை அணிவிப்பதும், ஊரில் உள்ள கெட்டவார்த்தைகளை எல்லாம் எடுத்து வந்து ஊர்வலங்களில், மாநாடுகளில் அருச்சிப்பதும், மாநாட்டில் அரிவாள், கத்தி, கவாடங்களை எடுத்துச் சுழற்றிக் காண்பிப்பதும், கண்டனத்திற்கு உரியவர் உயிரோடு இருக்கும் போதே கொடும்பாவி எரிக்கும் கூட்டங்களுமாய் இருக்கும் இந்தத் துணைக் கண்டத்தில், நடிகைக்கு முன்னால் காட்டிய எதிர்ப்பு இன்னொரு வகை; அவ்வளவு தான். இது வன்முறையா, வன்முறையில்லையா என்பதும் கூட அவரவர் அளவுகோலைப் பொறுத்தது. இதையும் "தன்னைச் சார்ந்தோர் பயன்படுத்தினால் அது வன்முறை இல்லை, மறுசாரார் பயன்படுத்தினால் அது வன்முறை" என்று சொல்லுவது தேர்ந்தெடுத்த மறு அருத்தம் (selective re-interpretation) கொடுக்கக் கூடிய செயல்கள். வன்முறைக்கும், வன்முறையற்றதற்கும் இடையே உள்ள கோடு மிக மிக மெல்லியது. அதைப் பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாய் நெகிழ்த்தி, நெகிழ்த்தி, நகர்த்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் மென்முறையாய்த் தெரிந்தது இன்றைக்கு வன்முறையாகவும், வன்முறை மென்முறையாகவும் உருமாறிக் காட்சியளிப்பது மாந்த வரலாற்றில் பலமுறை நடந்திருக்கிறது. "வல், வன்மை, வன்முறை" என்ற சொற்களை இந்தக் கால நடைமுறையில் எல்லாவற்றிற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதனுடைய வரையறை என்ன என்பதில் பலரும் வேறுபடுகிறோம். "எது மென்முறை? எது வன்முறை?" என்பதே வேறொரு விதயம். வன்முறையின் வரையறை பற்றியதல்ல இந்தப் பதிவு.

பொதுவாக நம்முடைய தமிழ்ப் பேச்சுக்களில் தொனி என்பது முகமையானது. பேசப்படும் தொனியைப் பொறுத்து, எதிராளிகளின் மறுவினைகள் அமையும். அந்த நடிகைகள் எந்தத் தொனியில் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள் என்பது நமக்குத் தெரியாது. நாளிதழ், தாளிகை போன்றவற்றில் இந்தத் தொனியைச் சரியானபடி விவரிப்பது செய்தியாளர் தன் கட்டுரையில் பயன்படுத்தும் சொற்களைப் பொறுத்தே அமையும். இதில் செய்தியாளர் கொஞ்சம் விலகினாலும், விரும்பாத பலன் ஏற்பட்டுவிடும். கரணம் தப்பினால் மரணம். ஒரு துளி விலகினாலும் குமுகத்தில் கலகம் தான் மிஞ்சும். இங்கே தவறு செய்தியாளர் பயனாக்கிய சொற்களினாலா, அல்லது அந்த நடிகைகளின் உள்ளார்ந்த கருத்தாலா, என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் ஊரெல்லாம் ஒரே கூச்சலும். விவாதமும் எழுகத் தான் செய்தன.

இந்த விவாதத்தில், தமிழ் உணர்வுகளை நிகராளும் ஒருசாரார் தாளிகையில் வந்த கருத்துச் செய்தியையும், நாளிதழ் செய்தியாளரிடம் சொன்ன நேர்காணற் பேச்சையும் ஒன்றாகப் பொருத்தி அந்த நடிகை தமிழரை மையப்படுத்திப் பேசியதாகவே எண்ணிக் கொண்டு "அது எப்படிச் சொல்லப் போயிற்று? தமிழருக்குச் சொல்லும் தவறான அறிவுரை அல்லவா இது?" என்று கேட்டும், எழுதியும் வந்தார்கள். (தாளிகையில் நடிகை கொடுத்த பொதுவான முன்னிகையை பெரும்பாலானவர்கள் சரியான படி பொறுப்போடு விளங்கிக் கொண்டார்கள் என்று தான் எண்ணுகிறேன். பெரும்பாலானவர்களுக்கு அவர் நாளிதழ்காரருக்குக் கொடுத்த நேர்காணல் வாசகத்தில் தான் கொஞ்சம் இடறல்.)

'தாங்கள் முற்போக்காளர்கள், இற்றைச் சிந்தனை கொண்டவர்கள், அறிவுய்திகள் (புத்திஜீவிகள்- intelligentia)' என்று சொல்லிப் பெருமை கொள்ளும் இன்னொரு சாரார் "இந்தப் பெண்கள் சொன்னது கருத்துச் சுதந்திரத்தின் பாற்பட்டதே; பெண்ணியம் தன் குரலை இப்படி எழுப்புகிறது; இந்தக் குரல்களை ஒடுக்கும் பண்பாட்டு வல்லாண்மை என்பது தமிழருக்குள் எழக் கூடாது" என்று நடிகைகளுக்கு ஆதரவாக பேசியும், எழுதியும் வந்தார்கள். கூடவே இதுநாள் வரை இல்லாத வழக்கமாய், மற்ற எல்லாவற்றிற்கும் பெரியாரைத் திட்டும் முதற் சாரார், இந்த இட்டியில் மட்டும் பெரியாரைத் தங்கள் அணிக்கு ஆதரவாய் இழுத்து வந்தார்கள். [இந்தச் சாரார் நாளிதழ் செய்தியாளரிடம் அந்த நடிகை கூறியதைச் "சொல்லவே இல்லை"யென்று மறுத்து, வெறுமே இந்தியா டுடேயில் பேசியதை மட்டுமே, வைத்துக் கொண்டு மிகவும் சதுரப்பாட்டோ டு வாதம் செய்தார்கள். இப்படி ஒன்றை வைத்துக் கொண்டு இன்னொன்றைத் தவிர்த்துப் பேசுவது தேர்ந்தெடுத்துத் தூரத் தள்ளும் நினைமறதி நோயாக (selective amnesia) த்தான் நமக்குத் தோற்றுகிறது.]

இந்த இருசாராரும் வழக்காடுவது இன்று நேற்று என்றில்லை; பல காலம் பல்வேறு புலனங்களில் எப்பொழுதுமே முரண்பட்டுத் தான் நிற்கிறார்கள். இது இன்னொரு களம், அவ்வளவுதான். இரண்டு பக்கமும் பங்கு பெறும் ஆட்கள் கிட்டத் தட்டக் கால காலமாய், தங்கள் கொள்கைகளில் உறுதியாய் இருக்கும் அதே ஆட்கள் தான். அதே பொழுது, அங்கும் இங்கும் கொஞ்சம் பேர் சற்று அணி மாறி, அந்தந்த இட்டிக்கு (issue) ஏற்ப மாறுவதும் உண்டு. ஆனால் அடியில் இருக்கும் நிகழ்ப்புகள் (agenda) எப்பொழுதுமே ஒன்று தான். இவர் அவரை எதிர்ப்பார்; அவர் இவரை எதிர்ப்பார்.

"எங்கெல்லாம் தமிழ் என்ற உணர்வு எழும்புகிறதோ அதை அடி, விடாதே, கொச்சைப் படுத்து" என்று ஒரு கூட்டம்; அதை எதிர்த்து இன்னொரு கூட்டம்; முதற்கூட்டம் இரண்டாமவரை பொதுக்கையர் (facists) என்று எளிதாகச் சொல்லும்; இரண்டாம் வகைக் கூட்டம் முதற்கூட்டத்தை "வாயளவில் எழுவரல் (liberal) பேசும் போலி முற்போக்காளர்கள் (pseudo-progressives)" என்று சொல்லும். இந்த இரண்டிலும் கலக்காது, மூன்றாவதாய் இடைநின்று, ஒர் இடது சாரிக் கூட்டம் குட்டி முதலாளியத் தன்மையொடு அவ்வப்பொழுது கருத்துச் சொல்வதும் உண்டு. அப்படிச் சொல்லும் போது, இடதுசாரிகள் குமுகாயப் புரட்சி, வர்க்கம், முரண்பாடு என்ற பல்வேறு தேற்றுக்களை(theory)யும், கொள்கைகளையும் பற்றி உரக்க விதந்து பேசுவார்கள்; ஆனால் நடைமுறை என்று வரும் போது "தமிழகக் குமுகாயத்தின் வெளிப்பாடுகளை, தமிழக வரலாற்றை, இவர்கள் என்றாவது ஆழ்ந்து புரிந்து கொண்டார்களா?" என்ற அய்யம் எழும்; இந்த அய்யம் தெலிங்கானாப் புரட்சிக்குப் பின் இடதுசாரிகள் நடந்து கொண்ட முறையில் இருந்தே தமிழ்நாட்டில் பலருக்கும் உண்டு. இடது சாரிகளின் நிலைப்பாடு பல நேரம் நீரின் மேல் கிடக்கும் எண்ணெய் போல தமிழ்க் குமுகாயத்தை ஓட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது.

குழூஉக் குறி வாசகங்கள், கண்மூடி முழக்கங்கள் (jargons) என்பவை தமிழ்நாட்டு அரசியலில் எப்பொழுதுமே மிகுதி. முதற் கூட்டம் (ஆங்கிலம், ஓரளவு தமிழ் என்று விரியும்) மிடையத் (media) துறையில் பெரும் வல்லாண்மை பெற்று இருப்பதால், (எப்படி தமிழீழ விடுதலைப் புலிகளைப் 'போல்போடிஸ்ட்' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லுகிறார்களோ அது போல) "பொதுக்கையர்" என்ற பட்டத்தை வெகு எளிதில் இரண்டாமவருக்குக் கொடுத்து விடுவார்கள். இரண்டாமவரும் தங்களுடைய குழூஉக் குறிகளை முன்வைத்து "ஊரெங்கும் கேடு கெட்ட, போலி முற்போக்குத்தனம் பேசி எங்கள் குமுகாயத்தைச் சீரழிக்காதீர்கள்" என்று முதலாமவர்களைப் பற்றிச் சொல்லுவார்கள்; உடனே முதலாமவர் "இரண்டாமவர் பேசுவது பெண்ணியத்திற்கே எதிரானது; தமிழ்நாடு தான் இந்தியாவில் முனைக்குறை நோயில் (Acquired Immuno Deficiency Syndrome - AIDS; immune = எதிர்கொள்ளுதல்; முனைகொள்ளுதல் = முன்னிருந்து எதிர் கொள்ளுதல்; immuno deficiency = முனைகொள்ளும் திறன் குறைவாக இருத்தல்) முதலிடத்தில் இருக்கிறது; இது பற்றிய குமுகாயப் புரிதல் நமக்கு வேண்டாமா? இன்னும் கற்பு, அது, இது என்று பிற்போக்குத்தனம் பேசிக் கொண்டு முட்டாள் தனத்தில் இருக்கலாமா" என்று திருப்பி விட்டு, முதலாமவர்கள் மட்டும் தான் ஏதோ பெண்ணியத்தைக் காப்பாற்றுவது போலவும், "ஆணுறை, பால்வினைநோய் பரவுதல்" போன்ற புலனங்களில் அவர்கள் தான் குமுகாய நலத்தில் அக்கறை கொண்டவர்கள் போலவும், மற்றவர்கள் எல்லாம் கால காலத்திற்கும் பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பது போலவும், இரண்டாமவர் தமிழகத்தைக் கற்காலத்திற்கே இட்டுச் செல்கிறவர்கள் என்பது போலவும் சொல்லுவார்கள்.

பொதுவாக இரண்டாம் வகைக் குழுவினரைப் பற்றி "அறிவற்ற மண்ணாங்கட்டிகள், ஆட்டு மந்தைக் கூட்டம், கோமாளிகள்" என்ற பம்மாத்தை உருவாக்கி, நக்கல், ஏளனம் மூலம் ஓர் உள்ளார்ந்த அரசியலை முதலாமவர்கள் காட்டுவார்கள். வெளியில் இந்திய அளவிலும், உலக அளவிலும் இந்தப் பம்மாத்து நன்றாகவே செயற்படும்; செயற்படுகிறது. இந்தப் பம்மாத்து எந்த அளவிற்கு விரவியிருக்கிறது என்றால், "தமிழ், திராவிடம் என்று சொல்லும் எந்தக் கட்டுரையையும் ஒதுக்கு; வடமொழி, ஆரியம் என்றால் கூர்ந்து படி" என்று சொல்லும் அளவிற்கு மேலை பல்கலைக்கழகங்களில் இருக்கும் இந்தியவியல் (Indology) அறிஞர்களில் பெரும்பான்மையோர் தவறான வழியில் திருப்பப் பட்டுக் கிடக்கிறார்கள். "தமிழ் என்ற அடையாளம் தள்ளத் தக்கது" என்ற கருத்து நிலையை ஆணித்தரமாகச் சொல்லி, இரண்டாமவரைப் பண்பாட்டுத் தீவிரவாதிகளாகக் காட்டுவது முதலாமவர்களுக்கு என்றுமே உகப்பானது. "இந்தியா என்பது ஒரு தேசம்; அது பல்தேச நாடு அல்ல; தமிழ்தேசம் என்ற ஒன்று கிடையவே கிடையாது" என்ற நிலைபாடு முதலாமவர்களுக்கே உரியது. இதைச் சாதிப்பதற்காக, எதை வேண்டுமானாலும் வளைப்பது அவர்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.

மற்றவனை முட்டாள் என்பதும், அதனால் "ஒரு சாராரே ஆளப் பிறந்தவர்கள்" என்பதும் இன்று நேற்றா நடக்கிறது? கால காலத்திற்கும் களப்பாளர் காலந்தொட்டு தமிழ்கூறும் நல்லுகத்தில் நடந்து தான் வருகிறது. இந்தத் தொடர் மேலாண்மை தான், தமிழகமெங்கும் கோயில் கோயிலாகக் கல்வெட்டைப் படித்தால் தெரிகிறதே? இந்த அரசியல் நிரம்ப நாளாக நடந்திருக்கிறது என்பது வரலாற்றை ஒழுங்காகப் படித்தவருக்குப் புரியும். "யாருக்கு மங்கலம் மங்கலமாய் ஊர்கள் கிடைத்தன? யார் நிலக்கிழார்களாக, அரையர்களாக மாறினார்கள்? யார் தேவரடியார்களைப் பேணினார்கள்? யார் பெரும்பாலான கல்வெட்டு வாசகங்களின் முடிவில் இழிவு செய்யப் பட்டார்கள்?" என்பதெல்லாம் கல்லின் மேல் எழுத்தாய்ப் புரிந்துகொள்ளலாம். வரலாறு படிக்க முற்படாதவர்களுக்கு வேண்டுமானால், இது விளங்காமல் இருக்கலாம்.

நான் ஒன்றும் நொதுமலாளன் (neutral person) அல்லன். என் சார்பு ஒருவகையில் இரண்டாமவர் பக்கம் தான்; அதே பொழுது கண்ணை மூடிக் கொண்டு வறட்டுத் தமிழ்ப்பெருமையையும் நான் பேசவில்லை. தமிழரின் ஒருசில குறைகள் என மற்றவர்கள் சொல்லுவது எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. நான் அந்தக் குறைகளுக்குச் சப்பைக் கட்டு சொல்ல வரவில்லை. இந்தப் பதிவு 'கற்பு, திருமணத்திற்கு முன் உடலுறவு' என்ற புலனம் பற்றியது. நான் இந்தப் புலனத்திற்குள் வந்து எழுத வேண்டும் என்று முதலில் எண்ணவில்லை. ஏனென்றால், இந்த வாதங்கள் எழுந்த சில நாட்களுக்குள், ஊரெங்கும் வெள்ளம்; பரிதவிப்பு; உயிர்ச்சேதம்; பயிர்நாசம்; அக்டோ பரில் இருந்து திசம்பர் வரை, ஆறேழு முறை அடை மழை வந்து மாநிலத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது. அப்பொழுது பெய்த மழை, மாநிலத்துள் கரந்து கிடந்த உள்கட்டுமானச் சிக்கல்களை எல்லாம் பூதகரமாக (பூதாகரம் அல்ல; தமிழ்ப்பலுக்கின் படி இது பூதகரமே.) வெளிக் காட்டியது. இவை யெல்லாம் சரிசெய்யப் பட வேண்டும். நாட்டில் கிடக்கும் பணிகள் ஏராளமானவை. இந்த மழை அடங்கும் வரையில், கூடவே பொங்கியெழும் உணர்வுகள் கொஞ்சம் அடங்கும் வரை, "கற்பு, திருமணத்திற்கு முன் உடலுறவு" என்ற விதயத்திற்குள் போகக் கூடாது என்று பொறுத்திருந்தேன்.

ஆனாலும் "தமிழர்கள் வல்லாண்மை உணர்வுக்காரர்கள், கருத்துச் சுதந்திரம் பாராதவர்கள், நன்னெறிக் காவல் (moral police) வேலையைப் பார்க்கிறார்கள்" என்றெல்லாம் ஒரு சிலர் பொரிம்பு வேலை (branding) பார்க்கத் தொடங்கியதையும், நக்கல், வெடிச் சிரிப்பு, பட்டங்கள் கொடுப்பது, மாற்றானை முட்டாளாக்கும் சதுரப்பாடு (சாமர்த்தியம்) என ஒரு சாரார் தோற்றம் காட்டத் தொடங்கியதையும் பார்த்த பின்னால், இந்தப் பதிவை இனியும் தாழ்த்த வேண்டாம் என்ற எண்ணம் கொண்டேன். "கற்பு, பழந்தமிழர் வாழ்வு, அந்த நடிகைகள் கூறியவற்றில் எது தமிழுணர்வாளர்களுக்குக் கோவத்தை எழுப்பியது?" என்ற புலனங்களில் இருக்கும் ஒருசில தவறான புரிதல்களை மட்டுமே இந்த இடுகையில் எடுத்துக் கூற முற்படுகிறேன்.

தமிழிலக்கியத்தின் (குறிப்பாகச் சங்க இலக்கியத்தின்) புரிதலின் படி, கற்பு என்பது பெண்ணின் இரு தொடைகளுக்கு இடையில் இருப்பதாக எங்குமே சொல்லப் படவில்லை. "தமிழர் பெண்தொடைகளுக்கு நடுவே கற்பைக் காண்பதாக," திரும்பத் திரும்ப இல்லாததை இருப்பதாக, முதலாமவர்கள் ஏன் சொல்லுகிறார்கள் என்று நமக்குப் புரிவதில்லை. (பெண் தொடைகளுக்கு இடையில் கற்பைத் தேடும் புரிதல் மனு சாத்திரத்தில் எண்வகை மணத்தில் "கன்னிகா தான" முறையை ஒட்டி எழுந்த பிழைபட்ட புரிதல். பெண்தொடைக்கு நடுவில் கற்பைத் தேடுவது மனு சாத்திரத்தின் வழிவந்த புரிதலே ஒழிய, அது தமிழரின் புரிதல் அல்ல. இன்னும் சொல்லப் போனால், அது இருக்கு வேதத்தின் வழிவந்த புரிதல் கூட அல்ல. தமிழர் மணம் என்பது வேறு வகை. அது பாணர் என்னும் காந்தருவர் வழிப்பட்டது என்றுதான் வடமொழிச் சாத்திரங்களும் பழந்தமிழ் இலக்கியங்களும் குறிக்கும்.)

கற்பு என்பது பழைய தமிழ் இலக்கியங்களில் 'சொல்லித் தருவது, கற்பிப்பது' என்ற பொருளிலேயே ஆளப் படுகிறது. கரணத்திற்கு (திருமணத்திற்கு) அப்புறம், "இரு முது குரவோரும் (இரண்டு வீட்டுப் பெரியவர்களும் - அதாவது பெற்றோர்களும்), கணவனும் சொல்லித் தந்த ஒழுக்கத்தின் படி வாழ்க" என்ற வகையில் கற்பிக்கப் படுவது கற்பு. (இதற்கு உரிய தொல்காப்பிய நூற்பாக்களையும், உரையாசிரியர்களின் விளக்கங்களையும் எடுத்து இங்கே விரிவாக ஓதலாம்; ஆனால் கருத்து இதுதான்.)

இந்தக் கற்பித்தலில் "முது குரவோர் என்பது சரி; கணவன் எங்கே வந்தான்?" என்று கேட்டால், பொதுவாக கணவன் என்பவன் மனைவியை விட அகவையில் மூத்தவனாகவே அந்தக் கால குமுகாய வழக்கத்தில் இருந்ததால் வந்தான். சிலம்பில் தலைவன் அவன் மணத்தின் போது ஈரெட்டு ஆண்டு அகவையானாகவும், சிலம்பின் தலைவி அவள் மணத்தின் போது ஈராறு ஆண்டு அகவையானவளாகவும் இருந்ததை இங்கே ஓர்ந்து பார்க்கவும். (சிலம்பின் தலைவன் அந்தக் கதையில் சீரழிந்தது வேறு புலனம்.) ஓரிரு விழுக்காடு புறனடையாய் இருந்தாலும் வழமையில் கணவன் என்பவன் தமிழர் வழக்கில் மனைவியைக் காட்டிலும் மூத்தவனே.

களப்பாளர் காலத்திற்கு முன் "கன்னிகா தானம்" என்ற கருத்து, குறிப்பாக இள அகவையில் திருமணம் என்பது தமிழ் இலக்கியத்தில் எங்குமே சுட்டப் படவில்லை. அகவைக்கு வந்த, பூப்படைந்த பெண்ணிற்குத் தான் தமிழர் திருமணம் செய்து வந்தனர். பூப்பு விழா என்பது தமிழர் குமுகாயத்தில் இன்றுவரை விதப்பாகச் சொல்லப்படும் விழா; தாய் வழிக் குமுகாயமாய்த் தமிழர் நெடுநாள் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவின் வெவ்வேறு சான்றுகளில் இந்த விழாவும் ஒன்று. (எப்படி வரலாற்று மொழியியல் வளருதற்கு சங்கத மொழியாய்வு தூண்டுகோலாய் இருந்ததோ, அதே போல தமிழரின் சில பண்பாட்டுக் கூறுகள் மாந்தவியல் வளருதற்கு தூண்டுகோலாய் இருந்தன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பூப்பு விழா அந்தப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று.)

ஒழுங்காகப் புரிந்து கொண்டால் "தமிழ் வழக்கப் படி", சொல்லித் தந்த கற்பு என்பது இரு பாலருக்கும் பொது தான். பெண்ணுக்கு கணவனையும் சேர்த்து மூவர் சொல்லித் தந்தார்கள்; ஆணுக்கு இருவர் சொல்லித் தந்தார்கள். ஏனென்றால், சங்க காலக் குமுகாயம் என்பது ஓரளவு ஆணாதிக்கக் குமுகாயமே. (இந்த ஆணாதிக்கம் பற்றிப் பேசுவது தனிப் பதிவாகத்தான் இருக்க முடியும்.) அதற்காகப் "பெண்கள் எல்லாம் அடிமைகளாக இருந்தார்கள், அவர்களுடைய கருத்துக்கள் சங்க காலத்தில் ஏற்கப் படவே இல்லை" என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது.

அடுத்தது மணத்திற்கு முன் புணர்ச்சி என்பது தமிழர் வாழ்வில் ஏற்கப் பட்டிருந்ததா என்றால் "ஓரிரு கட்டியங்களில் (conditions) ஏற்கப் பட்டிருந்தது" என்றே சொல்ல வேண்டும். களவியற் புணர்ச்சி என்பது பெரிதும் நம் இலக்கியங்களில் சொல்லப் பட்டதுதான். களவு என்பது தலைவனும் தலைவியும் வெளியோர் அறியா வகையில் பழகுவது என்றே அறியப் பட்டது. அந்தப் பழக்கத்தில் புணர்ச்சி நடந்திருக்கலாம்; நடக்காமலும் இருந்திருக்கலாம். அந்தக் களவு வெளிப்பட்ட நிலையில் (அப்படி வெளிப்படுவதை அலர், அம்பல் என்றெல்லாம் அந்த இலக்கியத்தில் சொல்லுவார்கள்), அவர்களுடைய ஈடுபாட்டைப் பெற்றோர் ஒப்புக் கொள்ள மறுக்கும் நிலையில், தலைவனும் தலைவியும் உடன்போக்காக வேறு இடம் சென்று தாங்களாகவே அங்கு மணம் செய்து கொள்ளுவது உண்டு. பின்னால் அதைப் பெற்றோர் ஏற்றுக் கொள்ளுவதும், ஏற்றுக் கொள்ளாததும் உண்டு.

அதே பொழுது களவியற் பழக்கம் என்பது வெறும் பதின்ம அகவை ஈர்ப்பாக இருந்து விடாது ஒரு பொறுப்பும் சேர்ந்ததாகக் கருதப்பட்டது. வெறுமே புணர்ச்சிக்கு ஆளாகி பின் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகியதாக சங்க இலக்கியத்தில் ஒரு பாட்டுக் கூடக் கிடையாது. புணரத் துணிந்தால் பின் அதன் விளைவைச் சந்திக்கும் உறுதி தலைவன் - தலைவி ஆகிய இருவருக்கும் இருக்க வேண்டும் என்றே அந்தக் குமுகம் எதிர்பார்த்தது. சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் கூட வரைமுறை இல்லாத புணர்ச்சி (promiscous intercourse) தலைவனுக்கும் தலைவிக்குமாய் சொல்லப் பட்டதே கிடையாது. (நடிகை குறிப்பால் உணர்த்தியது வரைமுறை இல்லாத புணர்ச்சி மற்றும் அதன் விளைவைத் தடுக்குமாப் போல ஆணுறை போட்டுக் கொள்ளச் சொல்லும் புணர்ச்சி. இரண்டாமவர் சினந்து எழுந்தது, இந்தப் புரிதலை ஒரு பொறுப்புள்ளவர் சொல்லுகிறாரே என்பதால் தான்.)

அந்தக் காலக் குமுகாயத்தில் வரைவில் மகளிர் (வரைவு இல்லாத மகளிர் - திருமணம் என ஒன்று இல்லாத மகளிர்) இருந்தார்கள்; அந்த வரைவில் மகளிருள், விலை மகளிர் என்பாரும் இருந்தார்கள், இன்னொரு வகையாய் இற்பரத்தைகளும் இருந்தார்கள். பரத்தை என்ற சொல் இந்தக் காலத்தில் தவறாகப் பலரால் புரிந்து கொள்ளப் படுகிறது. "பரந்து பட்டுப் பலரையும் சாருகின்ற பெண் பரத்தை" என்ற விளக்கம் விலை மகளிருக்கு மட்டுமே சரியாக இருக்கும். வரைவிற்கு வெளியே (பரந்து = வெளியே), திருமணத்திற்கு வெளியே, ஆனால் ஒருவனின் இல்லைச் (family) சார்ந்து இருக்கும் பெண் இற்பரத்தை எனப்படுவாள். (இற்பரத்தை என்பவள் திருமணத்திற்கு வெளியே இருப்பவள்; ஆங்கிலத்தில் இவளைக் concubine என்றும், வழக்குத் தமிழில் வைப்பாட்டி என்றும் சொல்லுவார்கள்; இல்லத்தியைப் போல இவளும் ஒரு இல்லை சார்ந்தவள் தான். பெரிய வீடு, சின்ன வீடு என்று கேலி பேசுகிறார்களே அது இது தான்.) மாதவி என்பவள் இற்பரத்தை; விலைமகள் (prostitute) அல்லள். அந்த இற்பரத்தைக்கும் ஒரு சில ஒழுக்கங்கள் உண்டு. சங்க இலக்கியப் பாடல்களில் பரத்தை பற்றிப் பேசும் இடங்களில் மிகப் பலவும் இற்பரத்தை பற்றிப் பேசுகின்றனவே ஒழிய, விலைமகளைப் பற்றி அல்ல. அதே பொழுது போகின்ற போக்கில் விலைமகளிர் அந்தக் குமுகாயத்தில் இருந்தார்கள் என்பதையும் அந்த இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. விலைமகளிர் பொதுவாகச் சங்க இலக்கியங்களில் விதந்தோதப் படவில்லை. சங்க காலக் குமுகாயம் என்பது தன்னுடைய உரியல் நிலை (reality) உணர்ந்ததாய்த் தான் இருந்திருக்கிறது.

அந்தக் குமுகத்தில் மக்கள் பலதிறப் பட்டவராய் இருந்திருக்கிறார்கள். நல்லதும் நடந்திருக்கிறது; கெட்டதும் நடந்திருக்கிறது. ஆனால், "ஒழுக்கம் என்பது குமுகாயம் கட்டுவதற்கு அடிப்படை" என்றே அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் விளைவாய், "விலைமகளிர் ஒழுக்கமும் அதற்கு அடிப்படையான ஒரு சில ஆண்களின் தீயொழுக்கமும்" அடக்கியே வாசிக்கப் பட்டிருக்கிறது. ஒழுக்கம் என்பதின் வரையறையில் நாம் வேறுபடலாம்; ஆனால் ஒழுக்கம் தவறிய நடைமுறையை நம் இளையருக்குக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்றே அவர்கள் நினைத்திருக்கிறார்கள். வரைமுறை இல்லாத புணர்ச்சி என்பது ஒழுக்கம் தவறிய நடைமுறை என்பதே பழம் இலக்கியங்களில் பெறப்படும் தெளிவு.

வரைமுறை இல்லாப் புணர்ச்சி என்பது தமிழ்க் குமுகாயம் சீரழிவதற்குச் சொல்லப் படும் யோசனை. அப்படிச் சொல்லுபவர்களின் குறிக்கோள் பெண்ணியத் தன்னாளுமை அல்ல; வரைமுறை அற்ற முறையில் கலவியைப் பெருக வைத்து தமிழர் என்ற இனத்தை நோயுள்ள இனமாக மாற்றுதற்கு ஆன கருத்து அடித்தளம் போட்டுக் கொடுப்பதே. "பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டு" என்ற சொலவடை போல, ஒருபக்கம் வரைமுறை இல்லாப் புணர்ச்சியைச் சரி என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் ஆணுறை அணிந்து கொள்ளுங்கள் என்பது சரியான அறிவுரையாகத் தெரியவில்லை. தேர்ந்தெடுத்த பித்தலாட்டமாகத் தெரிகிறது. நம் வீட்டுப் பையன் நிக்கோட்டின் நிறைந்த சுருட்டைப் பிடித்துக் கொண்டு நெஞ்செல்லாம் நீர்க் கோர்த்து இருமிக் கொண்டு இருக்கிறான்; அவனிடம் "தம்பி, சுருட்டுப் பிடிப்பதை நிறுத்து என்போமா? நிக்கோட்டின் இல்லாத சுருட்டைப் பிடி என்போமா? ஆணுறை அணிந்து திருமணத்திற்கு முன் கலவியில் ஈடுபடுங்கள்" என்று சொல்லுவது கிட்டத்தட்ட இது போலத்தான். என்னைக் கேட்டால், அது தவறான நெறிமுறை. அதைச் சொல்லுபவர்கள் குமுகாயத்தைச் சீரழிக்கிறார்கள்.

கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிற இவர்கள், "திருமணத்திற்கு முன் உடலுறவு: தமிழர் மரபுக்கு எதிரானதா? சங்க இலக்கியங்களில் பேசாத களவியல் காதலா? பெரியார் சொல்லாத கருத்தா?" என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெட்டி ஒட்டும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் மாலன், கனிமொழி என்று ஒருசிலர் சங்க காலக் குமுகாயத்தையும் கூடத் தவறாக எடுத்துக் காட்ட முனைகிறார்கள். சங்க காலத் தமிழர் குமுகாயம் என்பது "யாரும் யாரையும் கூடும் ஒரு கட்டற்ற ஆதிகாலப் பொதுவுடைமைக் குமுகாயமாக (primitive communistic society) இருக்கவில்லை. அது இனக்குழுக்கள் நிறைந்த அய்ந்திணை வாழ்க்கையாகவே இருந்தது." அதில் வாழ்வோருக்குக் ஒரு சில கட்டுகள் உறுதியாக இருந்தன.

பண்பாடு என்பது கூட்டத்திற்குக் கூட்டம் வேறுபட்டது. இதில் முற்போக்கு, பிற்போக்கு என்பதும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. நம்மூரில் அத்தை மகள், மாமன் மகளை மணப்பது என்பது அண்மைக் காலம் வரை விலக்கப் படாதது. அதே பொழுது சித்தப்பா மகளை, சித்தி மகளை மணப்பது என்பது மிக மிகக் குறைந்தவரைத் தவிர்த்து மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப் படாதது. இன்னொரு குமுகத்தில் இது மாறி இருக்கலாம். அதற்காக இது சரி, அது சரியல்ல என்பது பொருளில்லை. இது நம்மூரில் ஏற்கப் படும், அது ஏற்கப் படாது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஓரளவு பழகிய நிலையில் ஓர் ஆணும், ஒரு பெண்ணும், ஏன் ஒரு பெண்ணும், இன்னொரு பெண்ணும், அல்லது ஓர் ஆணும் இன்னோர் ஆணும் கன்னத்தோடு கன்னம் தொட்டு போய் வருவதாகச் சொல்லிக் கொள்ளுவது, மேலைநாட்டில் உள்ள பழக்கம்; வெறுமே கைக்கூப்பி, ("போறேங்க" என்று கூடச் சொல்லாமல்) "அப்ப, போயிட்டு வாரேங்க" என்று சொல்லுவது நம்மூர் வழக்கம்.

நம்மில் ஒருசிலர் நெருங்கிய பெண்ணுறவை (அவர் அம்மா, அக்கா, தங்கை என எவராகவும் இருக்கலாம்.) உரிமையோடு "அடி" என்று அழைப்பார்கள். நம்மில் இன்னும் சிலர் அதே நெருங்கிய பெண்ணுறவை "அம்மணி, அம்மா" என்று கொஞ்சம் விலகினாற் போல் அழைப்பார்கள். இதில் இது சரி, அது சரியில்லை என்று சொல்ல முடியுமோ? ஆனால் "அம்மணி" என்று அழைக்கக் கூடிய வீட்டில் "அடி" என்று சொன்னால் அது சரியில்லை என்று தானே சொல்லுவோம்? எந்தப் பழக்கம் எங்கு ஏற்கப் படும் என்று அறியாமல் அறிவுரை சொன்னால் எப்படி?

ஒரு சில வீடுகளில் அகவைக்கு வந்த பெண்ணை அவர் தங்கை, அக்கா என்றாலும் கூடத் தொட்டுப் பேசுவது தவறென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இன்னொரு வீட்டில் இந்தக் கட்டுப்பாடு எல்லாம் இருக்காது. தொட்டுப் பேசும் வீட்டினர் முற்போக்கு என்றும், கட்டுப்பாடு இருக்கும் வீட்டினர் பிற்போக்கு என்றும் கூறமுடியுமா?

இத்தனையும் ஏன் சொல்லுகிறேன் என்றால், குமுகப் பழக்கம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடும்; அது காலத்திற்குக் காலம் கூட மாறுபடும். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் எந்த அரங்கில் உட்கார்ந்தாலும் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் உட்காருவார்கள். இந்தக் காலத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டு வருகிறது. இருபாலரும் பொது அரங்குகளில் பெரும்பாலும் கலந்தே உட்காருகிறார்கள். இப்படிப் பழக்கங்கள் மாறுவதும் உண்டு. ஆனால் இது போன்ற பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் மாறுகின்றன. இங்குமே இது சரி, அது சரி என்ற பொருளில்லை. இது பழக்கம்; அது பழக்கமில்லை; அவ்வளவு தான். அதற்கு மேல் அங்கே ஆழமாய் அருத்தப் படுத்திக் கொண்டு இருக்க முடியாது.

"சொத்துரிமை என்பது வாரிசு உரிமையாக ஆனபோது திருமணம் என்பது வற்புறுத்தப் பட்டிருக்க வேண்டும்; (பெண்ணின் இருதொடைகளுக்கு நடுவே) கற்பைத் தேடுவது அப்பொழுதுதான் ஏற்பட்டிருக்க வேண்டும்" என்ற பொருள்பட திரு. மாலன் தன் வலைப்பதிவில் சொல்லுகிறார். (பிறைக்கோட்டிற்குள் கொடுத்தது என் விதப்பு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.) இடதுசாரிப் புரிதலில் இந்தக் கருத்து பொதுவாகச் சொல்லப்படும். நானும் இதை ஒப்புக் கொள்பவன் தான். ஆனால் ஒவ்வொரு கட்டுப்பாட்டையும், "வச்சாக் குடுமி, சிரைச்சா மொட்டை" என்றபடி இரண்டு எகிறிய நிலையிலே (extreme position) பார்க்க வேண்டுமா, என்ன? ஒரு பக்கம் கற்பு என்பது பெண்ணின் இரு தொடைகளுக்கு நடுவில் இருக்கிறது என்ற புரிதல்; இன்னொரு பக்கம் அதற்கு முற்றிலும் மாறாக, வரைமுறை அற்ற புணர்ச்சி. இடைப்பட்ட நிலையில், ஓரளவு கட்டுப்பாட்டோ டு, தமிழ்க் குமுகாயத்தை உருவாக்க வேண்டுமானால், இளையருக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும் என்று பார்க்க வேண்டாமா? இத்தனைக்கும் நெறிமுறை தவறிச் செல்வதற்குப் பல வாய்ப்புக்கள் கூடி இருக்கும் இந்தக் காலத்தில் ஒரு பெற்றோர், பொதுவாழ்வில் இருப்பவர், என்ன அறிவுரை சொல்லவேண்டும்? "தம்பி, தங்கைகளா, வரையற்ற புணர்ச்சிக்கு ஆளாகாதீர்கள்; அப்படி புணர்ச்சி ஆகிவிட்டாலும், ஒருவரை ஒருவர் ஆதரவு கொடுங்கள்; இல்லாவிட்டால் அதில் ஏற்படும் விளைவுகளை எதிர் கொள்ளுங்கள்; விலகி ஓட நினைக்காதீர்கள்; பொறுப்பு உள்ளவர்களாக இருங்கள்" என்று சொல்ல வேண்டாமா?

திரு. மாலன் தன்னுடைய வலைப்பதிவில் கூறும் ஒருசில கருத்துக்களை என்னால் ஏற்க முடியாது. அவற்றிற்கான என் முன்னிகைகளை மட்டும் இங்கு குறிப்பிட விழைகிறேன்.

1. களவு வழிக்கு எதிராக "கற்பு" வழி வலியுறுத்தப் பட்டது சமணமதத்தால் என்பது கோடுகளுக்கு நடுவில் வாசிக்கும் நிலையைப் போன்றது. சமணம் என்ற நெறி தன் போதனைகளில் இதைச் சொன்னதாக எங்கும் இல்லை.
2. மணிமேகலையில் (அது புத்த காப்பியம், சமண காப்பியம் அல்ல) வரும் உட்கதையை, இது போல மதம் சொன்னதாக மாற்றிப் புரிந்து கொள்ளுவது கற்பனையே ஒழிய, உண்மை அல்ல. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் எங்கும் தொலைந்து போகவில்லை. இன்றும் இருக்கிறது. அதில் வரும் ஒருசில நூற்பாக்கள் இடைச்செருகலாய் இருக்கலாம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள்.
3. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் காணாமற் போனதால், இறையனார் அகப்பொருளுரை, வைதீக சமயம் எழுந்த போது உருவானது என்பது ஒரு கருதுகோளே. சான்றுகள் எதுவும் கிடையாது. இறையனார் அகப்பொருள் எழுந்தது பற்றிய தொன்மத்தை வைத்துக் கொண்டு ஒரு வரலாற்றை உருவாக்கக் கூடாது.
4. "திருமணத்திற்கு முன் புணர்ச்சி என்பது சங்க காலத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதே" என்று சொல்லுவது ஒருவகையான அரைப் புரிதல். அப்படிப் புணர்ச்சி கொண்டவர்களின் ஒழுகலாறும் சங்க இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. அந்த ஒழுகலாற்றில் வரைமுறை அற்ற புணர்ச்சியில் ஈடுபடச் சொல்லி எங்கும் உரைக்கவில்லை.

குமுகாயத்தில் பொறுப்புள்ளவர்கள் திருமணத்திற்கு முன் புணர்ச்சி என்பதில் தான்தோன்றித் தனமாக ஏதேனும் சொல்லி இளையரைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லக் கூடாது.

இது ஒரு தமிழ்ப் பொதுக்கையனின் கூற்றென்று பலரும் சொல்லுவார்கள் என்று அறிந்தே இந்தப் பதிவை இங்கு இடுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

22 comments:

Jayaprakash Sampath said...

நீங்க இதையெல்லாம் கூட கவனிக்கிறீங்களா? :-)

1. இந்த விவாதத்துக்குள் ரொம்ப உள்ளே நுழையாமல், நான் சொல்ல விரும்பும் கருத்து ஒன்று உண்டு. வரைமுறையற்ற புணர்ச்சிக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், செயல் படுபவர்களிடம் காட்ட வேண்டிய ( நியாயமான) கோபத்தை, தமிழ் கலாசாரம், சங்ககாலம் தொட்டு நிலவிவரும் தமிழர்களின் பழக்கம் ஆகியவற்றை அறியாமல், தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலையின் அடிப்படையை இங்கே பொருத்தி, முன்னிகை அளித்த அந்த நடிகை மீது காட்டுவது முறையல்ல என்று நினைக்கிறேன்.

அப்துல் கலாமின் ஆராய்ச்சி தொடங்கி, ஆவக்காய் ஊறுகாய் போடுவது எப்படி என்பது வரை வெள்ளித் திரை தாரகைகளிடம் அபிப்ராயம் கேட்டு, அதை நாலுவண்ண படத்துடன் கொட்டை எழுத்துருவில் செய்தி போடுவது தமிழ் மிடையங்களின் மரபு. இது குறித்து யாருக்கும் எந்தக் கேள்வியும் இல்லை என்கிற போது, அவருடைய 'மணத்துக்கு முன் புணர்ச்சி' குறித்த அபிப்ராயம் மட்டும் பலரும் பெரிய விஷயமாகக் கருதவேண்டும் என்று புரியவில்லை.

தமிழர்களின் களவொழுக்கம், கற்பொழுக்கம் குறித்த விவாதங்கள் முக்கியமானவை. ஆனால், அவை ஒரு நடிகை உதிர்த்த ஒற்றைப்படைத் தன்மை கொண்ட கருத்துக்களை முன்னொட்டித்தான் அமைய வேண்டுமா?

2. நான் இணையத்துக்குள் வருமுன்பு வரை, இந்த சங்ககால இலக்கியம் குறித்து அதிகமாக அறிந்ததில்லை. ( இப்போதும் அதே நிலைமைதான் என்றாலும், அவ்வப்போது சில கருத்துக்கள், விஷயங்கள் கிடைக்கின்றன.). இந்தப் பதிவிலே, அக்கால மகளிரின் களவொழுக்கம், பெற்றோர் எதிர்ப்பு, உடன்போக்கு என்பதை எல்லாம் படிக்கும் போது, சமீபகாலம் வரை பார்த்த திரைப்படங்களும், படித்த புதினங்களும் நினைவுக்கு வருகிறதே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, தமிழர்கள் இதே போலத்தான் இருந்து வருகிறார்களா? நான் படித்து, கேள்விப்பட்டு அறிந்த வரையிலேயே, கடந்த நூறு வருடங்க பால்ய விவாகம், ஏற்பாடு செய்து வைத்த திருமணம், காதல் திருமணம், திருமண ரத்து, மறுவிவாகம், உடன் வாழ்தல் ( living together), ஓர்பால் உறவு முறைகள், ஓர்பால் திருமணங்கள் என்று, ஆண் பெண் உறவுகள் பல அவதாரங்கள் எடுத்திருக்கின்றன. ஒரு வேளை, சமகாலத்தை அடிப்படையாக வைத்துத்தான் சங்க காலத்தை நாமே சமைத்திருக்கிறோமா?

3. சதுரப்பாடு : மிக அருமையான வார்த்தை.

P.V.Sri Rangan said...

ஐயா இராம.கி அவர்களே,நீங்கள் தமிழ்ப் பொதுக்கையானாக இருந்தால் அதையொட்டித் தமிழ்மக்கள் பெருமையே அடைவார்கள்.உயிர் கொல்வதாலும்,சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் தனதாக்கி வைத்திருக்கும் ஒரு தலைவர்,கட்டுப்பாடற்ற முறைமைகளில் மக்களை அடிமைப்படுத்தும்போது, பாசிஸ்ட் என்று சுட்டப்படுகிறார்.

இவ்வார்த்தை தமிழுக்குப் புதிதுதான்!


இந்நோக்கில் நீங்கள் தமிழர்களின் வாழ்வை,வளத்தை,அவர்தம் மொழியைச் செப்பனிட முயலும்போது,அதைக்(வரலாற்றை) கையெலெடுத்துத் தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்வதைத் "தமிழ்ப் பொதுக்கையன்" என்றெவர் கூறினாலும், அதை உளமொப்பி ஏற்கலாம்.எமக்கு உங்களைப்போன்ற நெறியாண்மைமிக்க, நேரிய அறிஞர்கள் தேவை!எமது சமுதாயத்தில் வீரியமான சிந்தனையாளர்கள் வழிகாட்டும் காலமொன்று உருவாகவேண்டும்.வெறும் கட்சி அரசியல்வாதியின் போலிப் பேச்சுக்களை நம்பி ஏமாந்த காலம் போதும்.


உங்களைப்போன்ற பெரியார்கள் எமது இனத்தின் அரசியல்,சமூக வாழ்வைத் தீர்மானிக்கக்கூடிய வகையில் சமுதாயத்தில் பலம்பெற வேண்டும்.கல்விப் பெருந்தகைகள் கட்சி அரசியலின் போலித் தனங்களைச் சாடி ஓரளவாவது நேர்மையான அரசியலை இந்த இனம் முன்னெடுக்க வழிகாட்டியாகவேண்டும்.மேற்குலகங்களில் கல்வியாளர்களே தமது நாட்டின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் முன்னிலையில் நிற்கும்போது,நமது சமுதாயத்தில் சராசரி அரசியல்வாதியே அனைத்தையும் முன்னெடுப்பவனாகத் திரிகிறான்.கல்வியாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்,அதை இனிமேலும் பார்த்திருக்காது காரியத்தில் இறங்கியுள்ள உங்களைப் பாராட்டுவது என் ஜீவாதாரவுரிமை! மிக நீண்ட கட்டுரையென்றாலும்,மிக நேர்த்தியான பார்வையைக் கொண்டிருக்கிறது.இதைவிட, எமது பழந்தமிழ் வாழ்விலிருந்து சான்று பகர்ந்தெழுதும் உங்கள்"தெரிவு"மிக முக்கியமானது.எல்லோருமே படிக்கவேண்டிய கட்டுரை இது.

அன்புடன்

பரமுவேலன் கருணாநந்தன்

P.V.Sri Rangan said...

ஐயா இராம.கி அவர்களே,நீங்கள் தமிழ்ப் பொதுக்கையானாக இருந்தால் அதையொட்டித் தமிழ்மக்கள் பெருமையே அடைவார்கள்.உயிர் கொல்வதாலும்,சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் தனதாக்கி வைத்திருக்கும் ஒரு தலைவர்,கட்டுப்பாடற்ற முறைமைகளில் மக்களை அடிமைப்படுத்தும்போது, பாசிஸ்ட் என்று சுட்டப்படுகிறார்.

இவ்வார்த்தை தமிழுக்குப் புதிதுதான்!


இந்நோக்கில் நீங்கள் தமிழர்களின் வாழ்வை,வளத்தை,அவர்தம் மொழியைச் செப்பனிட முயலும்போது,அதைக்(வரலாற்றை) கையெலெடுத்துத் தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்வதைத் "தமிழ்ப் பொதுக்கையன்" என்றெவர் கூறினாலும், அதை உளமொப்பி ஏற்கலாம்.எமக்கு உங்களைப்போன்ற நெறியாண்மைமிக்க, நேரிய அறிஞர்கள் தேவை!எமது சமுதாயத்தில் வீரியமான சிந்தனையாளர்கள் வழிகாட்டும் காலமொன்று உருவாகவேண்டும்.வெறும் கட்சி அரசியல்வாதியின் போலிப் பேச்சுக்களை நம்பி ஏமாந்த காலம் போதும்.


உங்களைப்போன்ற பெரியார்கள் எமது இனத்தின் அரசியல்,சமூக வாழ்வைத் தீர்மானிக்கக்கூடிய வகையில் சமுதாயத்தில் பலம்பெற வேண்டும்.கல்விப் பெருந்தகைகள் கட்சி அரசியலின் போலித் தனங்களைச் சாடி ஓரளவாவது நேர்மையான அரசியலை இந்த இனம் முன்னெடுக்க வழிகாட்டியாகவேண்டும்.மேற்குலகங்களில் கல்வியாளர்களே தமது நாட்டின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் முன்னிலையில் நிற்கும்போது,நமது சமுதாயத்தில் சராசரி அரசியல்வாதியே அனைத்தையும் முன்னெடுப்பவனாகத் திரிகிறான்.கல்வியாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்,அதை இனிமேலும் பார்த்திருக்காது காரியத்தில் இறங்கியுள்ள உங்களைப் பாராட்டுவது என் ஜீவாதாரவுரிமை! மிக நீண்ட கட்டுரையென்றாலும்,மிக நேர்த்தியான பார்வையைக் கொண்டிருக்கிறது.இதைவிட, எமது பழந்தமிழ் வாழ்விலிருந்து சான்று பகர்ந்தெழுதும் உங்கள்"தெரிவு"மிக முக்கியமானது.எல்லோருமே படிக்கவேண்டிய கட்டுரை இது.

அன்புடன்

பரமுவேலன் கருணாநந்தன்

Anonymous said...

ஐயா தவறான இடத்திகேட்பதுக்கு மன்னிக்கவும், சமஸ்டிக்கு தமிழ் சொல் என்ன?? தயவுகூர்ந்து கூறவும்.

சாணக்கியன் said...

எது எப்படியோ.. திருமணத்திற்கு முன் உறவு என்பதும் திருமணத்திற்கு பிறகு மாற்றாருடன் உறவு என்பதும் இந்தியாவில் பரவி வருகிறது. இதில் தமிழ்நாடு விதிவிலக்கல்ல. அப்படி செய்து தொலைப்பவர்கள் பாதுகாப்பாகவாவது செய்து தொலைத்தால் அப்பாவிகள் காக்கப்படுவார்கள்.

கொசுறு: "என் மனைவி எப்படிப்பட்டவளாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு ஒழுங்காக இருந்தால்போதும். வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது" என் என் நண்பர்கள்(தமிழர்கள் தான்) சொல்லக்கேட்டு அதிர்ந்திருக்கிறேன். அவர்களாலும் அவ்வாறான ஒழுக்கத்தை மட்டுமே உறுதியளிக்க முடியும் என்பதால் அப்படி சொல்ல முடிகிறது என புரிந்து கொண்டேன்.

ROSAVASANTH said...

//இந்த இரண்டிலும் கலக்காது, மூன்றாவதாய் இடைநின்று, ஒர் இடது சாரிக் கூட்டம் குட்டி முதலாளியத் தன்மையொடு அவ்வப்பொழுது கருத்துச் சொல்வதும் உண்டு. அப்படிச் சொல்லும் போது, இடதுசாரிகள் குமுகாயப் புரட்சி, வர்க்கம், முரண்பாடு என்ற பல்வேறு தேற்றுக்களை(theory)யும், கொள்கைகளையும் பற்றி உரக்க விதந்து பேசுவார்கள்; ஆனால் நடைமுறை என்று வரும் போது "தமிழகக் குமுகாயத்தின் வெளிப்பாடுகளை, தமிழக வரலாற்றை, இவர்கள் என்றாவது ஆழ்ந்து புரிந்து கொண்டார்களா?" என்ற அய்யம் எழும்; இந்த அய்யம் தெலிங்கானாப் புரட்சிக்குப் பின் இடதுசாரிகள் நடந்து கொண்ட முறையில் இருந்தே தமிழ்நாட்டில் பலருக்கும் உண்டு. இடது சாரிகளின் நிலைப்பாடு பல நேரம் நீரின் மேல் கிடக்கும் எண்ணெய் போல தமிழ்க் குமுகாயத்தை ஓட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது. //

மதிப்பிற்குரிய இராம்.கி. ஐயா இங்கே 'குட்டி முதலாளி' என்று யாரை சொல்கிறார் என்பது தெளிவாக இல்லை என்றாலும், இதற்கு முன்னர் குழலி பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் என்னைத்தான் குறிப்பிடுகிறார் என்பதில் ஐயமில்லை. இப்போது சொன்னாலும், சொல்லாவிட்டாலும், என்னை குறிக்கும் நோக்கம் என் கருத்துக்களை எதிர்கொள்ளும் நோக்கம் அவருக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், எனக்கு இது பொருந்தி வரும் (அதாவது பொருந்தி வருவது போல பலருக்கு தோன்றக்கூடும்) என்பதால் இந்த விளக்கம். இதற்கு முன் குழலி பதிவில் இராம.கி எழுதியதும் அதற்கான என் பதிலும்.

இராம.கி எழுதியது: //படித்து முடித்தபின் பெருமூச்சு வருகிறது. நாட்டுப்புறங்களில் அங்கங்கே தென்படும் முரண்பாடுகளை, குமுகாயத்தின் சீரழிவுகளை, ஒரு பதம் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இதைப் புரிந்து கொள்ளுவதில் நகரத்தாருக்கும் நாட்டுப்புறத்தாருக்கும் இடையே ஓர் இடைவெளி இருக்கத்தான் செய்யும். நம்முடைய நோயையே இன்னும் விளங்கிக் கொள்ளாதவர்களாய்ப் பலர் இருக்கிறார்கள்.

இதில் முற்போக்கு (progressive), எழுவரல் (liberal), புரட்சியாளர் (revolutionist) என்ற அடையாளங்களின் ஒளிவட்டத்தோடு பலரும் வலம் வருகிறார்கள்.

நம் மாநிலத்தில் இருக்கும் கிழாரியக் குமுகாயத்தின் (feudal society) முரண்பாடுகளைத் தீர்க்க எத்தனிக்காமல், முதலாளியக் குமுகாயத்தின் (capaitalist society) முரண்பாடுகளைக் களைவதையும், ஆண் ஆதிக்க முரண்பாடுகளைக் களைவதையும் முன்பின்னாகப் பேசிக் குழப்பி, பட்டிமன்ற வாதங்களில் வென்றி கொள்ள முயன்று கொண்டிருக்கும் குட்டிமுதலாளியரை (petty bourgeoisie), உங்களுடைய இந்தப் பதிவு சற்றே மெய்நிலைக்குக் கொண்டுவரட்டும்.

நாம் போக வேண்டிய தொலைவு அதிகம் தான்.

மேலே சொன்ன எல்லா முரண்பாடுகளும் தீர்க்கப் படத்தான் வேண்டும் என்பதில் பெரும்பாலோருக்கு வேறுபாடு இல்லை; ஆனால் "எது தடவழி (strategy)? எது அடைவழி (tactics)?" என்பதில் தெளிவு வேண்டும். அது இல்லை என்றால் அப்புறம் வெறும் தேற்று(theoty)களைப் பேசிக்கொண்டு, விவாத மன்றங்களில் பொழுதைக் கழிக்கலாம். குட்டிமுதலாளியர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்புடன்,

இராம.கி.
ஒரு தமிழ்ப் பொதுக்கையன் (Tamil facist) :-)//

நான் அளித்த பதில்://மதிப்பிற்குரிய இராம.கி ஐயா அவர்களுக்கு,

நீங்கள் மறைமுகமாக என்னை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. என் கருத்தை நேரடியாக எதிர்கொண்டு எழுதப்படும் தர்க்கத்தையோ, விமர்சனத்தையோதான் என்னால் எதிர்கொள்ள முடியும். உங்களின் இந்த பின்னூட்டம் அந்த வரிசையில் சேராதது மட்டுமில்லாது, நான் உங்களிடம் இருபதாக நினைத்துகொண்டிருந்த சில வெளிப்படையான குணங்களுக்கு நேர்மாறாகவும் இருப்பது வருத்தமளிக்கிறது.

ஆனால் நான் ஒரு போதும் உங்களை தமிழ் பாசிஸ்ட் என்று கருதியதில்லை. இப்போதும் கருதவில்லை. 'தமிழ் எனது மூச்சு, ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்' என்ற வரிகளுக்கு உண்மையான உதாராணமாக உங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்கள் இந்த அளவு இறங்கியதில் ஏற்பட்ட வருத்தத்தில் இதை எழுதுகிறேனே ஒழிய, பதில் சொல்லும் அளவிற்கு இதில் எந்த பொருட்படுத்தும்படியான கருத்தும் இல்லை என்பது என் எண்ணம். நன்றி!//

மீண்டும் சொல்வதானால், நான் மிகவும் மாறுபடும், எதிர்க்கும், நேர்மையாய் (நடுநிலமை அல்ல) எழுதப்படவில்லை என்று நினைக்கும் இந்த பதிவை படித்த பின்பும் கூட இராம.கியை 'ஃபாசிஸ்ட்' என்று நினைக்கவில்லை. இன்னமும் 'தமிழ் எனது மூச்சு, ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்' என்ற வரிகளுக்கு பொருத்தமான உதாரணமாகவே அவரை நினைக்கிறேன். ஒரு பெண்ணை,அவர் தெரிவித்த கருத்திற்காக'ஓடிப்போகும் படி' நெருக்கடி அளித்த கூட்டத்தை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டேன். மற்றபடி இராம.கியின் இந்த பதிவில், ஏற்கனவே அறிவுமதி, தொடங்கி பலர் சொல்லிவிட்டதை தாண்டி, புதிதாய் எதுவுமில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது குறித்து நான் பேசக்கூடும். என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் பதில்.


இராம.கி ஐயாவிற்கு இத்தனை நகைச்சுவை உணர்வு உண்டு என்பது குழலி பதிவில் என்னை பற்றி(பெயர் குறிப்பிடாமல்) எழுதிய போதுதான் எனக்கு தெரிந்தது. தமிழ் குமுகாய மரபின் அடிப்படையில் 'குட்டி முதலாளி' என்பதற்கு அவர் எதாவது 'தமிழ் விளக்கம்' வைத்திருந்தால் நான் சொல்ல எதுவும் இருக்காது. அது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் ஒருவேளை பேராசான் காரல் மார்க்ஸின் கருத்தாக்கத்தை பாவித்திருக்க கூடுமெனில், என்னைவிட மிக தெளிவான குட்டி பூர்ஷ்வா குழலிதான். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சிங்கை நகரில் ப்ரோக்ராமர் வேலை பார்பது, மிக நேரடியான பொருளில், அண்ணல் மார்க்சின் வரையரைப்படி குட்டி பூர்ஷ்வா. ஆனால் நாம் சற்று மாற்றி, நேரடியான பொருளில் இல்லாமல் ஒரு விரிந்த தளத்தில் பொருள்கொண்டால் ஒழிய, அண்ணலின் (குட்டி பூர்ஷ்வா பற்றிய) விளக்கம் எனக்கு பொருந்தாது.

இராமகி, குழலியைவிட இயற்கையாகவே நேர்மையை அதிகமாய் கொண்டிருக்கும் நான், என்னை குட்டி முதலாளி என்று நானே அழைத்து என் வலைப்பதிவின் பெயரில் சேர்திருக்கிறேன். (மீண்டும் சொல்கிறேன், மார்க்சின் வரையரைப்படி என் வேலை குட்டி முதலாளி வேலை அல்லவென்று சொல்ல வாதங்களை அடுக்க இயலும்.) ஆனால் நேரடியான குட்டிமுதலாளியான குழலி இவர் பார்வையில் கிராமத்தான் ஆகிறார். நானே சொல்லிகொள்ளும் ஒன்றை வைத்து என்னை குட்டி முதலாளி என்று தாக்குகிறார். பெரியாரே நேர்மையாய் தன்னை பற்றி எழுதிவைத்தவற்றை எடுத்துக்காட்டி இன்று அவரை காலிபண்ணும் செயல்பாட்டை ஒத்ததுதானே இது. (சரியாய் வாசிக்கவும், நான் என்னை பெரியாருடன் ஒப்பிடவில்லை. பெரியாரை தாக்க சிலர் பயன்ப்டுத்தும் உத்தியுடன், என்னை தாக்கும் உத்தியை ஒப்பிடுகிறேன்.)


குழலியை விட்டுதள்ளுவோம். அடுத்தவரை சொல்லும் முன் இராமகி ஐயா தன்னை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை. தொழில் வகையில் நான் குட்டி முதலாளி என்றால் இராம.கி ஐயாவும் அப்படியே அச்சாக ஒரு குட்டி முதாலாளிதான். திருநெல்வேலியை தாண்டி 20 வயது கடந்த பிறகே சென்றிருக்கிறேன். இராமகி பார்க்கும் அதே (போன்ற) வேலையைத்தான் நானும் செய்கிறேன். அவரை போலவே ஆராய்சிக்காக வெளிநாடு சென்றேன். தாய் தமிழகத்திற்கு திரும்பி வந்து நிலைகொண்டேன். எனக்கு எதுவெல்லாம் பொருந்துமோ அத்தனையும் ஐயாவிற்கும் அப்படியே அச்சாக பொருந்தும். எனது நல்லூழ், குஷ்பு பிரச்சனையில் கருத்து சொல்லி, திருமா பாமக கூட்டத்தை (அதுவரை தீவிரமாய் ஆதரித்துவிட்டு) எதிர்க்கும் வரை, நான் குட்டி முதலாளிதான் என்ற விஷயம் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.

கடைசியாக நான் இடது சாரி என்று எந்த இடத்திலும் சொன்னது கிடையாது. பெரியாரிஸ்ட் என்ற தெரியும் வகையிலேயே (மற்றவர்களால்) அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறேன். இராமகியை விட மிக தீவிரமாய் இடதுசாரிப் போலித்தனத்தை எதிர்ப்பவன். அவர் எழுதியதைவிட இது குறித்து பலமுறை எழுதியுள்ளவன். 'இந்துத்வாவைவிட இந்திய இடது சாரித்தனம் ஆபத்தானது' என்று ஒரு கருத்து வைத்திருந்ததை (பின்பு அதை மாற்றிக்கொண்டதை) அனாதையின் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இது தவிர பல தேர்ந்தெடுத்தல்கள், திரித்தல்கள் இந்த பதிவில் உள்ளன. நிச்சயமாய் எடுத்துகாட்டி என்னால் விளக்க முடியும். இராம.கி பதில் தந்தால் பிறகு பார்போம்.

P.V.Sri Rangan said...

//நம் மாநிலத்தில் இருக்கும் கிழாரியக் குமுகாயத்தின் (feudal society) முரண்பாடுகளைத் தீர்க்க எத்தனிக்காமல், முதலாளியக் குமுகாயத்தின் (capaitalist society) முரண்பாடுகளைக் களைவதையும், ஆண் ஆதிக்க முரண்பாடுகளைக் களைவதையும் முன்பின்னாகப் பேசிக் குழப்பி, பட்டிமன்ற வாதங்களில் வென்றி கொள்ள முயன்று கொண்டிருக்கும் குட்டிமுதலாளியரை (petty bourgeoisie), உங்களுடைய இந்தப் பதிவு சற்றே மெய்நிலைக்குக் கொண்டுவரட்டும்.//


தம்பி ரோசா வசந்,மேலே குறிப்பிட்ட கருத்தை மீளவும் ஒரு முறைபடியுங்கள்!கிழாரியச் சமுதாயத்தின் முரண்பாடுகளை யார் தீர்ப்பது?இக்கருத்தில் எவருடன்படுகிறாரோ அவருக்கு"முரண்பாடுகள்"குறித்த புரிதல் தெளிவில்லை என்பதுதான் உண்மை!இந்தியச் சமுதாய வளர்ச்சியானது ஒழுங்கமைந்த முதலாளிய வளர்ச்சியோடு உருப்பெறவில்லை.காலனித்துவ ஆட்சியாளகளினாலேயேதான் எமது முதலாளியம் தோற்றுவிக்கப்பட்டது.இதுதான் இன்றைய பிரச்சனை.இந்திய சமுதாயத்தின் உள் முரண்பாடுகளால் தோற்றுவிக்கப்பட்ட சமூக வளர்ச்சியேதான் கிழாரியத்தின் முரண்பாடுகளைக் கடாசி அதனிடத்தில் முதலாளிய முற்போக்கான கூறுகளை(கிழாரியத்துக்கு,முதலாளியம் முற்போக்கானது)தோற்றுவித்திருக்கும்.இங்கே சுயமுரண்பாடுகளால் தோன்றாதவொரு பொருளாதார அமைப்பு அந்தச் சமுதாயத்தின் பழைமையான முரண்பாடுகளால் மீளவும் சிதலமடைகிறது.இந்த முரண்பாடுகளைக் குறைந்த பட்சமாவது தேசிய முதலாளியத்தின் ஊக்குவிப்பில்-அதன் படிமுறை வளர்சியில்தான் களைய முடியுமேயொழிய வெறும் கருத்துக்களாலோ ,தனிநபர்,குழுவினாலோ அல்லது சட்டங்களாலோ அல்ல.


சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்திய மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்"அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய ரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.இன்றை ஏகாதிபத்திய மூலதனமானது இன்னும் ஒருபடி மேலே போய் இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.


அடுத்து குட்டிப் ப+ர்ச்சுவா,குட்டி முதலாளி என்பதெல்லாம் வெறும் பொருளாதார உறுவுகளால் தீர்மானிக்கப் படுவதில்லை.அவற்றை நீங்கள் குழலிக்குப் பொருத்துவதும் பின்பு உங்களுக்குப் பொருத்துவதும் எந்த அர்த்தத்திலென்பதை சற்றுத் தெளிவு படுத்தித் தீர்த்துக் கொள்ளுங்கள்.உற்பத்திச் சக்திகளோடு இணைந்துள்ள உற்பத்தியுறவுகள்(உடல்,மூளையுழைப்பாளர்கள்)எவ்வளவுதான் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் அவர்கள் ப+ர்ச்சுவாக்களோ அல்லது குட்டி முதலாளியளோ கிடையாது.நாமெல்லோருமே முதலாளியக் கருத்துடையோராய் இருக்கலாம்,அதற்காக நாம் ப+ர்ச்சுவா வர்க்கமாக முடியாது.

இராம.கி said...

அன்பிற்குரிய பிரகாஷ்,

கவனிக்கத் தான் செய்கிறேன்.

1. முன்னிகை அளித்த நடிகை மீது கோவம் காட்டியது ஒருவகை வடிகால் என்று கொள்ளுங்களேன். நாளிதழ்ப் படியாளருக்கு அந்த நடிகை சொன்ன கூற்றை மற்றவர்கள் தங்களுக்குச் சார்பாக அரசியல் நடத்தப் பயன்படுத்தியதை நான் ஒன்றும் சரி என்று சொல்ல வரவில்லை. ஆனால் அந்த நடிகை அந்த வாசகத்தைச் சொல்லியிருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.

சற்றும் தொடர்பு இல்லாத பெருந்தலைவர் காமராசரின் வாசகம் எனக்கு நினைவுக்கு வருகிறது. 1971 தேர்தல்; 67ல் பேராயக் கட்சி பெருந்தோல்வி பெற்று அதற்குப் பின் நடந்த தேர்தல். (இன்றுவரை அந்தக் கட்சி எழுந்திருக்க வில்லையே?) சைதாப் பேட்டையில் ஒரு பொதுக்கூட்டம்; நானும் போயிருந்தேன். அவர் மனம் நிறைய ஏமாற்றமும், வேதனையும் கொண்டிருந்த நேரம். அவருடைய பேச்சில் ஒரு கசப்பு, வெறுமை; எதிர்காலம் சரிந்து போன தாக்கம்; உண்மையிலேயே அவர் வருந்தினார். "கூத்தாடிப் பயல்களுக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு சொன்னேன்; போட்டிங்கள்லெ, அனுபவிங்க" என்ற பொருளில் கிட்டத்தட்ட மக்களைத் திட்டுவது போலேயே அந்தக் கூட்டத்தில் சொன்னார். (அவர் சொன்ன வாசகம் அப்படியே எனக்கு நினைவுக்கு வரவில்லை; ஆனால் சொன்ன கருத்து இதுதான்.) நான் அதிர்ந்து விக்கித்துப் போனேன். என்ன இது? எவ்வளவு பெரிய தலைவர்? இப்படி சாவம் கொடுப்பதுபோல மக்களைப் பார்த்துப் பேசினால், இவர் என்ன மக்களுக்கு மீறியவரா? நாட்டாமையா? - என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. "அய்யா, போனதடவை ஏதோ அவுங்களுக்குப் போட்டிங்க, ரொம்பக் கஷ்டம் வந்து போச்சு; இன்னின்ன காரணத்தால் எங்களுக்கு இந்த முறை போடுங்க" என்று ஒரு இயல்நிலைப் போக்கு இல்லாமல், மல்லுக் கட்டிக்கொண்டு நிற்கிறாரே என்று நினைத்தேன். அந்தத் தேர்தலுக்கு அப்புறம், இன்னும் ஓய்ந்து போனார்.

இப்படித்தான், இன்னதென்று புரியாமல் சிலபோது சொற்களைக் கொட்டி விடுகிறோம். அப்போது அவற்றின் பரிமானம் புரிவதில்லை. தம்பிக்காரன் "உங்களுக்கு மட்டுமா அம்மாவாக இருந்தார்கள், ஊருக்கே அம்மாவாக இருந்தார்கள்" என்று சொன்னதைப் பார்த்து, இன்னொரு இழவு வீட்டில் அண்ணங்காரன் "உங்களுக்கு மட்டுமா மனைவியாக இருந்தார்கள்......" என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்ட நாட்டுப் புறக் கதை உங்களுக்குத் தெரியும் தானே?

இந்த நிகழ்வில், குறிப்பிட்ட நடிகை என்ன சொல்லியிருக்க வேண்டும்? "திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?" என்று கேட்பதற்கு மாறாய், "திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளுகிறவர்கள் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் கூடி வருகிறார்கள். இந்தப் பழக்கத்தால் பின்விளைவுகள் சமுகத்தில் கூடக் கூடாது இல்லையா?" என்று சொல்லியிருந்தால், எந்தக் கூப்பாடும் எழுந்திருக்காது; (எல்லாம் பொதுமை -generality, விதப்புச் - specificity சிக்கல் தான்.) அந்த நடிகையின் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டியிருப்பார்கள். எப்பொழுதுமே, நம் முன்னால் இருக்கும் மக்கள் முட்டாள்கள், நாம் அறிவாளி என்ற தொனியில் எழும் பேச்சு சட்டென்று எதிர்வினையையே ஏற்படுத்தும். எல்லாம் தொனிதான் காரணம். "தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று பெரியார் சொன்னபோதும் சும்மா இருக்க முடிந்தது என்றால், அதற்கு அவர் பேச்சினுள் இருந்த தொனி தான் காரணம். ஒருசிலர் சொல்லும் போது துடித்துப் போகிற நாம், அதே வாசகத்தை இன்னொரு தொனியில் நம்மேல் உள்ள அக்கறையில் இன்னொருவர் சொல்லும் போது கேட்டுக் கொள்ளுகிறோம் இல்லையா?

2. சம காலத்தை அடிப்படையாக வைத்து சங்க காலத்தைச் சமைத்திருக்கிறோமா என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். ஒரு சில நிகழ்வுகள் ஒன்று போலத் தோன்றினாலும், பெருத்த வேறுபாடு இருக்கிறது என்றே எண்ணுகிறேன். சிறுஅகவைத் திருமணம் என்பது சங்க காலத்தில் இருந்ததாக எந்தச் சான்றையும் நான் படிக்கவில்லை. ஏற்பாடு செய்து வைத்த திருமணம், காதல் திருமணம் என இரண்டுமே இருந்திருக்கின்ரன. மண விலக்கு, மறுமணம் என்பவை பதிவு செய்யப் படவில்லையானாலும், பழங்தமிழர் குடிகளிடம் (இன்று அவர்களில் பலர் சாதி என்ற அமைப்பிற்குள் மாறி விட்டார்கள்; குடிவழிக் குமுகங்கள் நெடுநாட்கள் முன்னேயே சாதிவழிக் குமுகங்களாய் மாறிவிட்டன.) அறுத்துக் கட்டும் வழக்கம் இன்றும் இருப்பதால், விலக்கு என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டு இருக்க வேண்டும் என்றே எண்ண முடிகிறது. உடன் வாழ்தல் (living together) என்பது நடந்திருக்கலாம்; ஏனென்றால் பெற்றோர் இல்லாமல் கோயிலில் தாலிகட்டிக் கொள்ளுதல் இன்றுவரை பழக்கம் தான். உடன்போக்கு என்பது உடன்வாழ்தலாய் நீளலாம் தானே? ஓர்பால் உறவு முறைகள், ஓர்பால் திருமணங்கள் போன்றவை பற்றியும் அரசல் புரசலாகத்தான் ஊகிக்க முடிகிறது. நேரடியான பதிவுகள் எங்கும் கிடையாது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கருணாநந்தன்,

உங்கள் முதல் முன்னிகைக்கு நன்றி. உங்களின் இரண்டாம் முன்னிகை நண்பர் ரோசாவசந்தின் முன்னிகையோடு தொடர்பு கொண்டது. அவருக்கு மறுமொழி சொல்லும் போது உங்களுக்கும் சேர்த்துச் சொல்லுவேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவரே!

சமஸ்டி என்ற வட சொல்லிற்கு இணையாய்க் கூட்டமைப்பு என்ற தமிழ்ச் சொல்லைக் கையாளுகிறார்கள். இது பற்றிய என் புரிதலைப் பிறிதொரு முறை சொல்லுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சாணக்கியனுக்கு,

திருமணத்திற்கு முன் பாலுறவு, திருமணத்தை மீறிய பாலுறவு போன்றவை இந்தக் காலத்தில் எந்தக் குமுகாயத்திலும் இருக்கும் சிக்கல்கள் தான். நாம் மட்டும் விலக்கு என்று கிடையாது. மேலும் அவற்றை எப்படி எதிர்கொள்ளுவது என்பதில் சட்டாம்பிள்ளைத் தனமாகவும் நநம் இருக்க முடியாது; பற்றற்ற நிலையிலும் நாம் இருக்க முடியாது. இளையருக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதில் தான் இங்கு மாறுபாடே.

பொறுப்புள்ள முறையில் அந்த நடிகை சொல்லியிருப்பது இந்தியா டுடே தாளிகையில். கோவம் ஏற்பட்டது அதற்கல்ல. நாளிதழில் அவர் கொடுத்த நேர்காணலே, அதில் இழையும் ஏளனம் என்பதுமே, மக்களை மிகவும் அதிரவைத்தது என்று நான் புரிந்து கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

சாணக்கியன் said...

ஐயா தங்கள் கட்டுரையில் எனக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நான் இட்டது தொடர்புடைய ஒரு செய்தியைத்தான்.
தெரியாதவர்கள் தெரிந்துகொள்வதற்காக....

பதிலளித்தமைக்கு நன்றி

ROSAVASANTH said...

தம்பியாக என்னை கேட்காமலேயே தத்து எடுத்துகொண்ட அண்ணன் கருணா,

நான் கிழாரிய சமுதாயத்தின் முரண்பாடுகளை தீர்ப்பதை பற்றியோ,அதன் அவசியம் பற்றியோ அல்லது அது குறித்த இராமகியின் கருத்தை பற்றியோ எதுவுமே சொல்லவில்லை. மிகவும் அற்பமான பிரச்சனையை பற்றிதான் எழுதியுள்ளேன். தனக்கு உவப்பில்லாத காரணத்தால் திடீரென ஒருவர் குட்டி முதலாளி ஆவதும், உண்மையான குட்டி முதலாளி கிராமத்தான் ஆவதும் பற்றிதான்.

என்ன பொருளில் 'குட்டி முதலாளி' என்ற பதத்தை பயன்படுத்தினார் என்பதை இராமகிதான் விளக்கவேண்டும். நான் என்னை எந்த பொருளில் குட்டி பூர்ஷ்வா என்று சொல்லிகொள்கிறேன் என்பது என் பதிவில் விளக்கப்பட்டுள்ளது. பொதுவுடமை அறிஞரான நீர் 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை'யை படித்திருப்பீர்தானே? "உற்பத்திச் சக்திகளோடு இணைந்துள்ள உற்பத்தியுறவுகள்(உடல்,மூளையுழைப்பாளர்கள்)எவ்வளவுதான் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் அவர்கள் ப+ர்ச்சுவாக்களோ அல்லது குட்டி முதலாளியளோ கிடையாது" என்று சொல்வதை பார்தால் படித்ததாக தோன்றவில்லை. குட்டி பூர்ஷ்வா ஒருபோதும் மூலத்தனத்திற்கு சொந்தமானவரோ, லாபத்தில் பங்கு பெறுபவரோ அல்ல. பாட்டாளிகள், கலக பாட்டாளிகள் என்பவற்றிலிருந்து வேறுபட்டு, ஆனால் அவர்கள் தளத்திலிருந்துகொண்டே, கூலியுழைப்பை வாங்ககூடியவரும், அதனால் பயன்பெறக்கூடியவரும்தான். குட்டி முதலாளி என்பதை வரையருத்து மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதியதன் பொருளில்தான் குழலியை குட்டி பூர்ஷ்வா என்கிறேன்.

ஆனால் இங்கே பிரச்சனை அதுவல்ல. ஒரே ஒரு பதிவில், ஒரு நிகழ்வை மற்றவர்களூக்கு (விமர்சனமற்ற) நெகிழ்வை ஏற்படுத்திய காரணத்தால் ஒருவர் கிரமத்தான் ஆவதும், அதுவரை தீவிரமாய் ஆதரித்த திருமா ராமதாசை விமர்சித்ததால் இன்னொருவர் நகர்புரத்து குட்டி பூர்ஷ்வா ஆவதன் பிண்ணணி polemics மட்டுமே. தொடர்பில்லாத வேறு விஷயங்கள் பற்றி எழுதுவது உங்கள் விருப்பம்.

இராம.கி said...

அன்பிற்குரிய ரோசாவசந்த்,

இந்தப் பதிவை இடும் போதே, உங்களிடம் இருந்து எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி வரும் என்று தோன்றவில்லை.
என்னுடைய "குட்டிமுதலாளி" என்ற ஒரு பதத்தை, (கட்டுக் கூற்றை - category-யை) தன்மயமாக ஏன் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று விளங்கவில்லை. குழலியின் பதிவில் நான் இட்ட முன்னிகையையும் அப்படித்தான் புரிந்துகொண்டீர்கள்.

நண்பரே! அது தவறான புரிதல்.

ஓரளவு மார்க்சையும் மற்றோரையும் ஒரு காலத்தில் பரந்து, ஆழப் படித்தவன் என்ற முறையில், குட்டி முதலாளி என்ற பெயரின் வரையறை புரிந்திருக்கிறேன் என்று தான் எண்ணுகிறேன். அதை petit-bourgeoise என்று தான் மார்க்சு எழுதுவார்; petty bourgeoise என்ற புழக்கம் பின்னால் மற்றவரால் திரிந்து வந்தது. அந்தச் சொல் பாரிசு குமுனம் (Paris Commune) எழுந்த போது பரவலாகிப் போன சொல். உங்களின் முதற்பேர் கொண்ட திருவாட்டி ரோசா லக்சம்பர்க்கும் கூட பாரிசுக் குமுனம் பற்றி எழுதுவார். (இன்றைக்கு அந்தப் பொத்தகங்கள் எல்லாம் சரியாக நினைவில் இல்லை; ஒவ்வொன்றையும் தேடித் தேடிப் படித்த காலம் ஒன்றுண்டு.) திரு. கருணாநந்தன் கூறியது போல குட்டிமுதலாளிகள் என்ற பதத்தை புதுக்க ஏதுக்களின் (means of production) வழியே தான் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் மார்க்சு காலத்து முதலாளியக் குமுகாயம் இன்றைக்கு இல்லை; அதன் கட்டுக்கூறுகள் பெரிதும் மாறிவிட்டன. தளையற்ற முதலாளியம் (laissez faire capitalism) என்பது இன்று எங்குமே கிடையாது. பெரும்பாலும் அதிகார முதலாளியம் (bureaucratic capitalism) தான் கோலோச்சுகிறது. இன்றைக்கு குட்டி முதலாளி என்பவர் தனித்து அடையாளம் காணுமாப்போல இருப்பதில்லை. நான் மார்க்சு காலத்து வரையறையைச் சொல்லுகிறேன்.

"எவனொருவன் புதுக்க ஏதுக்களை தானே கொண்டிருந்து, உழைப்பாளிகளை வேலை வாங்கி, பெருகு மதிப்பை (surplus value) தன் நுகர்வுக்கு எடுத்துக் கொள்ளுகிறானோ அவன் முதலாளி.
எவனொருவன் புதுக்க ஏதுக்களை தானே கொண்டிராமல், தன் உழைப்பை ஈந்து, வேலை செய்து, கூலி பெற்று, பெருகு மதிப்பை (surplus value) மற்றவர் நுகர்வுக்கு விட்டுக் கொடுக்கிறானோ, அவன் தொழிலாளி.
புதுக்க ஏதுக்களைச் சொந்தமாகக் கொண்டிருந்து, அதே நேரத்தில் தானும் வேலை பார்த்து, புதுக்க உறவுகளில் (relations of production) ஈடு பட்டு, தன் உய்வை நடத்திக் கொள்ளுகிறானோ அவன் குட்டிமுதலாளி.

குட்டி முதலாளி என்பவர் அந்தக் காலத்துக் கம்மாளர் (artisans) போல உள்ளவர். þó¾ì ¸¡Äò¾¢ø ®§Ã¡ðÊø ÒÂ×ò ¾È¢î (power looms) ¦º¡ó¾ì¸¡Ã÷¸Ç¢¼õ þó¾ ¦¿È¢Ó¨È இன்னும் கூட þÕ츢ÈÐ. பெரியது, சின்னது என எல்லாத் தறிக்காரர்களும் தறிச் சொந்தக்காரர்களாய்ச் சங்கத்தில் உறுப்பினராய் இருப்பார்கள். இருந்தாலும் பத்துத் தறி வைத்திருப்பவர், தறிப் பெரியவரிடம் (master weaver) ஒப்பந்தக் காரராய், அதே போது ஒரு ஒப்பந்தத் தொழிலாளர் போன்றே, புதுக்க உறவுகள் கொண்டிருப்பார்; 20000 அடி துணி நெய்யவேண்டும் என்ற புதுக்க ஏவலைத் (production order) தறிப் பெரியவர் பெற்றிருப்பார். அவர் அதைச் சிறிது சிறிதாகப் (2000, 3000 அடியாகப்) பிரித்து இந்த சின்னத் தறிக் காரர்களுக்குக் கொடுப்பார். (சின்னத் தறிக்காரர்களின் பேட்டை தான் சின்னதறிப் பேட்டை என்னும் சென்னைச் சிந்தாதிரிப் பேட்டை) சின்னதறிக் காரர்கள் நெசவாளிகளையும், ஒருசில எடுபிடிகளையும், வைத்துக் கொண்டு தங்களுக்கு உரிய 2000 அடி, 3000 அடித் துணிகளை நெய்து கொடுப்பார்கள். இந்தச் சின்னதறிக் காரர்கள் தான் குட்டி முதலாளி என்பவர்கள். இது போல குட்டி முதலாளிகளை விதவிதமாக நம் குமுகாயத்தில் பார்க்கலாம். பல தானிகளை வைத்திருப்பவரிடம், நாள் வாடகைக்குத் தானி (auto) எடுத்து ஓட்டும் ஆள், இருவளைப் (two wheelers) பழுது பார்க்கத் தனியிடம் எடுத்து அங்கு நாலைந்து சின்னப் பையன்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் ஆள், பலசரக்குக் கடைக்காரர், சின்ன அச்சகம் நடத்துபவர், இப்படி இது போல எத்தனையோ பேரை அடையாளமாகக் காட்டலாம்.

ஆனால் ஓரளவுக்கு மேல், முதலாளிக்கும் குட்டிமுதலாளிக்கும் வேறுபாடு என்பது மங்கலாய்த் தான் தெரியும். இன்னொரு பக்கம் குட்டிமுதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் உள்ள கோடும் வெளிறிப் போவது இந்தக் காலத்தில் நடக்கிறது. 8மணி நேரம் ஒரு தொழிற்சாலையில் உழைக்கிறவர், இன்னொரு நேரத்தில் தனக்கென சிறுதொழில் செய்பவராக, நாலு உதிரி ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்பவராய் இருக்கலாம். ஏன், பங்குச் சந்தையில் பெரும் பணங்களை பரிமாற்றம் செய்பவராயும் இருக்கலாம். அப்படிப் பட்டவர் தொழிலாளியா, முதலாளியா, குட்டிமுதலாளியா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது இருக்கிறது.

சரி, பெரும் நிறுவனங்களில், அதிகாரம் வகிக்கும் அறிவுய்திகளை (intelligentia) எப்படிச் சொல்வது என்று கேட்டால் அறிவால் உய்யும் அறிவுய்திகள் என்றுதான் சொல்ல முடியும்; இல்லையென்றால் அதிகாரத்தைக் காட்டிப் பிழைக்கும் அதிகாரி என்று சொல்ல முடியும். என்னைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நான் புரிந்தவரை, இன்றைய நிலையில் என்னைக் குட்டி முதலாளி என்று சொல்ல முடியாது (செம்மீன் படம் ஞாபகம் வருகிறது பபருங்கள்; அந்தப் பரீக்குட்டி சரியான குட்டி முதலாளி :-)) நான் ஓர் அறிவுய்தி; ஓர் அதிகாரி, ஒரு பெரிய நிறுவனத்தின் நிருவாகி; என் உழைப்பு எனக்குச் சோறு போடுகிறது; என் துய்ப்பு, நுகர்வுகளுக்குப் பணம் கொடுக்கிறது; அவ்வளவு தான். என் வீட்டில் வேலை பார்ப்பவரை வைத்து நான் பொதினம் (business) ஏதும் நடத்தவில்லை.

உங்களைப் பற்றியோ, குழலி பற்றியோ சொல்ல, எனக்குப் பட்டறிவு போறாது.

குட்டிமுதலாளி என்று நான் சொன்னது பொதுமையான கூற்று:

[மூன்றாவதாய் இடைநின்று, ஒர் இடது சாரிக் கூட்டம் குட்டி முதலாளியத் தன்மையொடு அவ்வப்பொழுது கருத்துச் சொல்வதும் உண்டு. அப்படிச் சொல்லும் போது, இடதுசாரிகள் குமுகாயப் புரட்சி, வர்க்கம், முரண்பாடு என்ற பல்வேறு தேற்றுக்களை(theory)யும், கொள்கைகளையும் பற்றி உரக்க விதந்து பேசுவார்கள்; ஆனால் நடைமுறை என்று வரும் போது "தமிழகக் குமுகாயத்தின் வெளிப்பாடுகளை, தமிழக வரலாற்றை, இவர்கள் என்றாவது ஆழ்ந்து புரிந்து கொண்டார்களா?" என்ற அய்யம் எழும்; இந்த அய்யம் தெலிங்கானாப் புரட்சிக்குப் பின் இடதுசாரிகள் நடந்து கொண்ட முறையில் இருந்தே தமிழ்நாட்டில் பலருக்கும் உண்டு. இடது சாரிகளின் நிலைப்பாடு பல நேரம் நீரின் மேல் கிடக்கும் எண்ணெய் போல தமிழ்க் குமுகாயத்தை ஓட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது.]

உங்களுக்கு 50, 60, 70 களில் இருந்த இடது சாரி நிலைமை தெரியுமா, தெரியாதா என்று எனக்குத் தெரியாது. "பாரிசுக் குமுனப் புரட்சி என்பது குட்டிமுதலாளியரால் நடத்தப் பட்டதுதான், அது அழித்தொழிக்கப் பட்டபோது எதிர்த்து நிற்க முடியாமல் போனதற்குக் காரணம்" என்று மார்க்சு சொல்லுவார். "குமுகாயப் புரட்சி, வர்க்கம், முரண்பாடு" என்ற தேற்றுக்களையும், கொள்கைகளையும் உரக்க விதந்து பேசிப் போக்கிய நாட்களுக்கள் நான் இனிப் போக விரும்பவில்லை. ஆனாலும் நான் ஒரு இடது சாரிக் காரன் என்று சொல்லிக் கொள்வதில் என்றும் வெட்கப் படுபவனும் இல்லை.
60, 70 களில் இளமைப் பருவம் கொண்டிருந்த மிகப் பலரும் இந்த இடதுசாரித் தாக்கத்து ஆட்படாமல் இந்திய நாட்டில், ஏன் பல நாடுகளில், இருந்தது இல்லை என்றுதான் புள்ளிவிவரம் கூறுகிறது.

எழுதிக் கொண்டே இருக்கும் போது, சலிப்பு எனக்கு வருகிறது. நிறுத்திக் கொள்ளுகிறேன்.

தன்மயமாக ஒன்றை எண்ணிப் பார்த்து, எங்கோ எவரோ சொல்லுவது தன்னைத்தான் சொல்லுவதாகப் பொருத்திக் கொள்ளும் பழக்கம் நல்லதல்ல, நண்பரே! அது சிறுகுழு மனப்பான்மை. நீங்கள் ஈடுபட்டு எழுதவேண்டிய புலனங்கள் பல. அதைச் செய்யுங்கள். என் கருத்தை நீங்கள் ஒப்ப வேண்டியதும் இல்லை; அதற்காக பட்டிமன்றம் ஏற வேண்டியதும் இல்லை. நாபா.வின் மணிபல்லவம் என்ற புதினத்தைப் படித்திருக்கிறீர்களோ? அதன் நாயகன் (இளங்குமரன் என்று நினைக்கிறேன். நாயகியின் பெயர் சுரமஞ்சரி என்ற அழகிய பெயர்.) நாவலோ நாவல் என்று கொடிநட்டு, மாற்று நெறியினரோடு வாதம் செய்ய முற்படுவதைச் சொல்லித் தொடங்கியிருப்பார். நாவலோ நாவல், பட்டி மன்றம், ஏது சாற்றம் (= தருக்கம் = ஏரணம் = அளவையாடல்) எல்லாம் இந்தத் தென்னாட்டில் இருந்து கிளம்பியவை தான். ஆனால் எல்லாமே அளவிற்கு மீறினால்..... திகட்டிப் போகும் நண்பரே!

தெரியாததைத் தெரிந்து கொள்ள வேண்டு; அறியாததை அறிந்து கொள்ளவேண்டும்; அதே பொழுது, நெஞ்சங்கள் அறிவால் வெல்லப் படுவதில்லை.
எனக்கு நெஞ்சங்கள் நிறைய வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. மணத்திற்கு முன் புணர்ச்சி என்ற பதிவில், நீங்கள் ஏற்க இயலாத கருத்து இருந்தாலும், நான் சொன்ன பட்டகைகளில் (facts), அல்லது சொன்ன முறையில் தருக்கம் குறைவாக இருந்தால் அதைச் சொல்லுங்கள். இந்த வாதம் இருவருக்கும் பயனாய் இருக்க வேண்டும். வாதம் என்பது ஒருவர் கருத்தை இன்னொருவர் மாற்றுவதல்ல. ஒருவர் கருத்தை இன்னொருவர் கூர்ப்படுத்துவதே, நிறைப்பதே!

இராம.கி said...

நடுவில் ஓரிடத்தில் நநன் எழுதியது தகுதரத்தில் வந்துவிட்டது. அதை மாற்றி ஒருங்குறியில் கொடுக்கிறேன்.
--------------------------------
குட்டி முதலாளி என்பவர் அந்தக் காலத்துக் கம்மாளர் (artisans) போல உள்ளவர். இந்தக் காலத்தில் ஈரோட்டில் புயவுத் தறிச் (power looms) சொந்தக்காரர்களிடம் இந்த நெறிமுறை இன்னும் கூட இருக்கிறது. பெரியது, சின்னது என எல்லாத் தறிக்காரர்களும் தறிச் சொந்தக்காரர்களாய்ச் சங்கத்தில் உறுப்பினராய் இருப்பார்கள்.
-------------------------------
அன்புடன்,
இராம.கி.

ROSAVASANTH said...

குழலியின் பதிவில் 'குட்டி முதலாளி' என்று என்னை குறிப்பிடவில்லை என்பது என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துகிறது. அந்த நேரத்தில் 'தமிழ் ஃபாசிஸ்ட்' என்ற பதத்தை அதிகம் பயன்படுத்தி பதிவு இட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் "தமிழ் பொதுக்கையன்' என்ற ஸ்மைலி போட்டி கையொப்பமிட்டதும் என் பதிவை முன்வைத்துதான் என்று புரிந்துகொண்டேன். ஆனால் அதை நீங்கள் இப்போது மறுக்கும் போது, என் வாசிப்பை வலியுறுத்த எந்த தேவையும் இல்லை. அதே நேரம் பலர் என்னை பொறுத்தி வாசிக்க இயலும் என்பதால் என் எதிர்வினை குறித்தும் வருத்தம் இல்லை. உங்கள் மறுப்பின் அடிப்படையில் அதில் உள்ளதை மட்டும் திரும்ப பெற்றுக்கொள்ள மட்டும் செய்கிறேன்.

மற்றபடி 'குட்டி முதலாளி' என்பதற்கு நீண்ட விளக்கம் தந்திருக்கிறீர்கள். அதே விளக்கத்தின் அடிப்படையிலேயே நானும் நீங்களும் குட்டி முதலாளி (மார்க்சிற்கு பின்னான மாறிவிட்ட முதாளித்துவ குமுகத்தில்) என்பது என் கருத்து. சாஃப்ட்வேர் காரர்கள் அதை விட மிக தெளிவாக குட்டி பூர்ஷ்வாகள் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. இங்கே பிரச்சனை அது குறித்து விவாதிப்பது அல்ல என்பதால் தொடரவில்லை. இந்த பதிவின் கருத்துக்கள் பற்றி (அறிவுமதி, பாமரன், சாருநிவேதிதா) பற்றி பேச நினைக்கும் சந்தர்ப்பத்தில் எழுதுவேன். நன்றி.

P.V.Sri Rangan said...

ரோசா வசந்,எடுத்தவுடன் அதீத தனிநபர்வாதத்துடன் எழுதுகிறீர்கள்."தம்பி" என்பதை உங்கிளிடம் கேட்டுக்கொண்டு உங்கள் மூத்தவர் அழைப்பதில்லை.தமிழ் வாழ்வில் இளையோரை தம்பி என்று விளிப்பது மரபு.அது தங்களுக்க உவப்பற்றுப் போனால் அதை விட்டுவிடுவோம்.


அடுத்து பொதுத் தளத்தில் கருத்திடுவது ஒருவரொரின் "அறிவை"க் காட்டுவதற்கில்லை!


19ஆம் நூற்றாண்டில் கம்யுனீச அறிக்கை வெளியிடப்பட்டு,அதை நான் படித்திருக்கவில்லையென்பதல்ல இங்கே பிரச்சனை.



அவர் கூறினார்,இவர் கூறினார் என்பதல்ல எனது வாதம்.


நான் சொல்வது இன்றை முதலாளித்துவத்தின் மூன்றாங்கட்ட இருப்பில்(ஏகாபோகம்) குட்டி முதலாளியம் என்பது சிறுவுற்பத்திச் சக்திகளுடைய வர்க்கமாகும்,குட்டிப்ப+ர்ச்சுவா என்பது 19 ஆம் நூற்றாண்டின் பண்பிலருக்கும் சமூகப் பொருளாதாரக் கட்டத்துக்குப் பொருந்தும்.இந்த மூன்றாங்கட்ட ஏகபோக முதலாளியத்தில் அவையெல்லாம் மீளப் பார்க்கப்பட முடியாதவை.


நீங்கள் எவ்வளவுதான் வாதித்தாலும் அறிவுடைய அலுவலர்கள் ஒரு வர்க்கம் கிடையாது!


அவர்கள் தங்களுடைய உழைப்புக்கு ஊதியம் பெறுகின்ற அனைத்து ஊழியர்களையும்கொண்ட சம்பிரதாயமான,சட்டரீதியானவொரு குழுவாகும்.அவர்களைத் தொழில் ரீதியாகப் பிரிக்கலாம்:பொறியாளர்கள்,ஆய்வாளர்கள்,திறனாளர்கள்,நிர்வாக அலுவலர்கள் நுட்பநிபுணர்கள்,இதரர்களென!


அலுவலாகள் சட்டரீதியான குழுவென்போம்.அறிவுப்பகுயினரை இன்றைய காலக்கட்டத்தில் பிரத்தியேகமான உழைப்பு நடவடிக்கைகளைக்கொண்ட மெய்யான சமூகக் குழுவென்போம்.இது குட்டிப் ப+ர்ச்சுவாவோ அல்லது குட்டி முதலாளிகளோ அல்ல.


இன்றைய சமூகத்தில் அறிவுப் பகுதியெண்ணிக்கை மிகமிக வேகமாக வளர்கிறது.


இந்த மாற்றத்தை எடைபோடுவதும் அவசியமானது.சமூகத்தின் பெருந்திரளான பகுதியாகவுள்ள உழைப்பாளர்களுக்குள் இது சகல வடிவத்துள்ளும் மிகுதியாக உருவாகுதல் தவிர்க்கமுடியாத பல வர்க்கப் படிமுறைகளை ஏற்படுத்துகிறது.இதன்பாத்திரம் அதிகரித்துக் கொண்டிருக்கும்! தற்கால ஏகபோக மூலதன விருத்தியிலும் முதலாளியத்தின் மூன்றாங்கட்ட நிலையிலும் "அறிவுப் பகுதி"பாட்டாளி வர்க்கமாகும் நிகழ்வுப்போக்குக்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது.


இத்தகைய புரிதலுக்கு மார்க்சிடம்,ஏங்கலுசிடம் போனால் அவர்களது சமகாலப் புரிதலையும்,இன்றைய பொருளாதாரப் படிமுறை வளர்ச்சியையும் உணர்வுப+ர்வமாக உள்வாங்கவில்லையென்பதே யதார்த்தம்.


மார்க்சியம்,கம்யுனிச அறிக்கைகள் யாவும் இன்றைய கணினியல்ல.அவை சமூகத்தின் அனைத்துப் படிமுறை வளர்ச்சிகளுக்கும் மாறாத தீர்வைச் சொல்ல.மார்க்சியத்தின் ஒளியில் சமூகத்தின் இன்றைய பல இருட்டுப் பகுதிகளைத் தேடித் தீர்வுக்காணச் சுய சிந்தனைகளை உருவாக்கவேண்டுமேயொழிய கடந்தகாலக் கதைகளை ஒப்புவித்தல் பலனுடையதல்ல.

இதுதான் எனது விளக்கம்.இது உங்களுக்கானதல்ல.பரந்துபட்ட வாசகர்களுக்கானது.உங்கள் பதிலையோ அல்லது விளக்கத்தையோ நான் எதிர்பார்க்கவில்லை.அத்துடன் உங்கள் அறிவு விளக்கத்தில் தெளிவுபெறும் நிலையில் நானில்லை.

P.V.Sri Rangan said...

ரோசா வசந்,எடுத்தவுடன் அதீத தனிநபர்வாதத்துடன் எழுதுகிறீர்கள்."தம்பி" என்பதை உங்கிளிடம் கேட்டுக்கொண்டு உங்கள் மூத்தவர் அழைப்பதில்லை.தமிழ் வாழ்வில் இளையோரை தம்பி என்று விளிப்பது மரபு.அது தங்களுக்க உவப்பற்றுப் போனால் அதை விட்டுவிடுவோம்.


அடுத்து பொதுத் தளத்தில் கருத்திடுவது ஒருவரொரின் "அறிவை"க் காட்டுவதற்கில்லை!


19ஆம் நூற்றாண்டில் கம்யுனீச அறிக்கை வெளியிடப்பட்டு,அதை நான் படித்திருக்கவில்லையென்பதல்ல இங்கே பிரச்சனை.



அவர் கூறினார்,இவர் கூறினார் என்பதல்ல எனது வாதம்.


நான் சொல்வது இன்றை முதலாளித்துவத்தின் மூன்றாங்கட்ட இருப்பில்(ஏகாபோகம்) குட்டி முதலாளியம் என்பது சிறுவுற்பத்திச் சக்திகளுடைய வர்க்கமாகும்,குட்டிப்ப+ர்ச்சுவா என்பது 19 ஆம் நூற்றாண்டின் பண்பிலருக்கும் சமூகப் பொருளாதாரக் கட்டத்துக்குப் பொருந்தும்.இந்த மூன்றாங்கட்ட ஏகபோக முதலாளியத்தில் அவையெல்லாம் மீளப் பார்க்கப்பட முடியாதவை.


நீங்கள் எவ்வளவுதான் வாதித்தாலும் அறிவுடைய அலுவலர்கள் ஒரு வர்க்கம் கிடையாது!


அவர்கள் தங்களுடைய உழைப்புக்கு ஊதியம் பெறுகின்ற அனைத்து ஊழியர்களையும்கொண்ட சம்பிரதாயமான,சட்டரீதியானவொரு குழுவாகும்.அவர்களைத் தொழில் ரீதியாகப் பிரிக்கலாம்:பொறியாளர்கள்,ஆய்வாளர்கள்,திறனாளர்கள்,நிர்வாக அலுவலர்கள் நுட்பநிபுணர்கள்,இதரர்களென!


அலுவலாகள் சட்டரீதியான குழுவென்போம்.அறிவுப்பகுயினரை இன்றைய காலக்கட்டத்தில் பிரத்தியேகமான உழைப்பு நடவடிக்கைகளைக்கொண்ட மெய்யான சமூகக் குழுவென்போம்.இது குட்டிப் ப+ர்ச்சுவாவோ அல்லது குட்டி முதலாளிகளோ அல்ல.


இன்றைய சமூகத்தில் அறிவுப் பகுதியெண்ணிக்கை மிகமிக வேகமாக வளர்கிறது.


இந்த மாற்றத்தை எடைபோடுவதும் அவசியமானது.சமூகத்தின் பெருந்திரளான பகுதியாகவுள்ள உழைப்பாளர்களுக்குள் இது சகல வடிவத்துள்ளும் மிகுதியாக உருவாகுதல் தவிர்க்கமுடியாத பல வர்க்கப் படிமுறைகளை ஏற்படுத்துகிறது.இதன்பாத்திரம் அதிகரித்துக் கொண்டிருக்கும்! தற்கால ஏகபோக மூலதன விருத்தியிலும் முதலாளியத்தின் மூன்றாங்கட்ட நிலையிலும் "அறிவுப் பகுதி"பாட்டாளி வர்க்கமாகும் நிகழ்வுப்போக்குக்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது.


இத்தகைய புரிதலுக்கு மார்க்சிடம்,ஏங்கலுசிடம் போனால் அவர்களது சமகாலப் புரிதலையும்,இன்றைய பொருளாதாரப் படிமுறை வளர்ச்சியையும் உணர்வுப+ர்வமாக உள்வாங்கவில்லையென்பதே யதார்த்தம்.


மார்க்சியம்,கம்யுனிச அறிக்கைகள் யாவும் இன்றைய கணினியல்ல.அவை சமூகத்தின் அனைத்துப் படிமுறை வளர்ச்சிகளுக்கும் மாறாத தீர்வைச் சொல்ல.மார்க்சியத்தின் ஒளியில் சமூகத்தின் இன்றைய பல இருட்டுப் பகுதிகளைத் தேடித் தீர்வுக்காணச் சுய சிந்தனைகளை உருவாக்கவேண்டுமேயொழிய கடந்தகாலக் கதைகளை ஒப்புவித்தல் பலனுடையதல்ல.

இதுதான் எனது விளக்கம்.இது உங்களுக்கானதல்ல.பரந்துபட்ட வாசகர்களுக்கானது.உங்கள் பதிலையோ அல்லது விளக்கத்தையோ நான் எதிர்பார்க்கவில்லை.அத்துடன் உங்கள் அறிவு விளக்கத்தில் தெளிவுபெறும் நிலையில் நானில்லை.

ROSAVASANTH said...

கருணா, உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் எழுதிய அனைத்திற்குமே 'நான் அப்படி நினைக்கவில்லை' என்பதை தவிர வேறு எதையும் இப்போதைக்கு சொல்ல சமயமில்லை. முதாளித்துவத்தை முன்வைத்து என் அறிவுக்கு எட்டிய சில விஷயங்களை பேசும் நேரத்தில் என் கருத்துக்களை எழுதுவேன். நன்றி.

Pasug said...

அக நானூற்றில் தலைவனும் தலைவியும் பெற்றோரிடம் சொல்லாமல் ஊருக்கு வெளியே இரவில் சந்திப்பதும் காமம் ருசிப்பதும் வருகிறதா? இல்லையா?. அது தமிழ் கலாசாரமா? இல்லையா?. அப்பாடலில் வரும் தலைவிக்கு வயது பதினேழு கூட இராது. இப்போது அதைச் செய்தால் போலிஸ் பிடிக்கும். மேலும் இந்திய அரசு பெண், ஆண் திருமண வயதை குறைத்து வருகிறது.. ஒருவரது சொந்த கருத்துக்களை அவமதிப்பது, செருப்பு வீசுவது தவறு. தமிழனின் - இந்தியனின் கெட்ட குணங்களில் ஒன்று: எல்லா அநியாயமும் பண்ணி விட்டு பாவ்லா காட்டுவது. மேலும் படிக்க...http://pasug.blogspot.com/2005/11/kushboo-kalavaram-in-tamilnadu-or.html

இராம.கி. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லாமல், சொதப்புகிறார் என்று தோன்றுகிறது.

இராம.கி said...

கீழே இருப்பது திரு.திருப்பாச்சி அவர்கள் கொடுத்த முன்னிகை. அதில் சில வரிகள் நீக்கப் பட்டு, வெளியிடப் படுகிறது.
--------------------------
திருமணத்துக்கு முந்தைய பாலுறவை தமிழ்நாட்டின் அனைத்து ஜாதிகளுமே கடுமையாக எதிர்க்கின்றன. அண்ணன் திருமாவளவனும் அண்ணன் இராமதாசு அவர்களும் ஒருபடி மேலே சென்று போராட்ட்ம் எல்லாம் நடத்தினார்கள். ஆனால் பார்ப்பன இனத்தினர் மட்டுமே குஸ்புவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதனோடு சேர்ந்து அதிமுகவும் குரல்கொடுத்தது. அதிமுக பற்றியும் அதன் தலைவி பற்றியும் சொல்லத் தேவை இல்லை. ஆனால் பார்ப்பன சமூகம் குரல் கொடுத்ததில் இருந்து ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
------------------------
அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

அண்ணன் இராமகி,

முதலில் ஒன்று.

கொஞ்சம் ஓவராக இருந்தாலும் உங்களின் இந்த பதிவை பாடநூலில் சேர்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கடைசியாக திருப்பாச்சி என்பவர் இட்ட பின்னூட்டம் பொதுதன்மையாக பட்டாலும் விஷயம் உள்ளது என்பது என் கருத்து. ஒரு குறிப்பிட்ட வகை கருத்துக்களை எடுத்த வைப்பதே ஆபாசம் என்று கட்டமைத்து அதை ஓரளவு வெற்றிகரமாகவும் நடத்தி காட்டிவிட்டனர் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்.(போலி டோண்டு போன்றவர்கள் அதற்கு பலிகடா.தெரிந்தோ தெரியாமலோ இந்த ஆளால் எல்லாம் பாழாக போய்விட்டது)

அத்தனை தளத்திலும் சென்று தங்கள் இனத்தின் மேன்மைதன்மையை(?) இவர்கள் எடுத்தாள்வார்கள்.குஷ்பு கருத்தில் பார்ப்பனர்கள் எங்கோ வந்தார்கள் என்று கேட்பதே மடமையான கேள்விதான்.

தமிழ் தமிழர் என்று சன்டிவி, திருமாவளவன், ராமதாஸ்(இவர்கள் உள்நோக்கத்துடன் பேசியிருக்கலாம்) பேசியதும் தான் இதுவரை தாங்கள் வைத்திருந்த ஒழுக்க விதிகளை தலைகீழாக மாற்றிக்கொண்டு பெரியாரை தூக்கி சுமந்துகொண்டு இந்த ஆட்கள் ஓடிவந்தனர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

குஷ்பு கருத்துக்கள் புரட்சிகரமாக இருந்திருக்கலாம்.ஆனால் யார் இங்கே கல்யாத்திற்கு முன்பு உறவு வைத்திருக்கவில்லை என்று அவர் தன்னைப்போல் எல்லாரையும் நினைத்து கேட்டதை சிந்திக்க தெரிந்த மூளை இருக்கும் மனிதர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது.

பல்வேறு காரணங்களால் உறவு வைக்கவேண்டிய சூழ்நிலை, ஏமாற்றப்பட்ட சூழ்நிலைகளில் பெண்கள் இதனால் விரக்தி அடைய தேவையில்லை என்பது போல் கூறியிருந்தால் அது நல்ல கருத்து.ஆனால் வயது வந்த பெண்கள் எல்லோரும் உறவு வைத்தே ஆகவேண்டும் என்பது போல் அல்லவா இவர் கருத்து தெறிக்கிறது.