Friday, December 31, 2021

சூரியன்

பரிதிமாற் கலைஞர் காலத்தில் சூரியன் வடசொல் என்று அவர் கருதினார், ளகரம் டகரமாகிப் பின் ரகரமாகலாம் என்ற விதியை அப்போது ஆய்வின் மூலம் பலரும் அறியாதிருந்தார். (நான் இப்போது அறிந்துள்ளேன். அது சொற்பிறப்பிற்கு நான் செய்யும் பங்களிப்பு.) எனவே பரிதி என்று வேறுபெயரை் அவர் கொண்டார். பாவாணர் ஆய்வுகளின் முலமாய்த் தான் இவ்விதியைக் கொஞ்சங் கொஞ்சமாய் உணர்ந்தோம். பாவாணர் தயங்கியவற்றை, ஆய்வு அகலப்பட்டு, ஆழப் பட்டவுடன் அருளியார் இன்னும் சில சொற்கள் தமிழ் என்று கண்டுபிடித்தார், காட்டாக, ஆதி என்பது தமிழ் என நிறுவியவர் அருளியார் தான். அகராதி தமிழில்லை என்று பாவாணர் சொன்னார். எனவே பாவாணர் அகர முதலி என்ற புதுச்சொல்லைப் படைத்தார். அருளியார் அகர முதலியோடு, தாம் நிறுவிய அகராதியையும் சேர்த்துக் கொண்டார். 

ய்>ஞ்>ந் விதியின் முழுவீச்சைக் கண்டறிந்து நமக்குச் சொன்னவர் அருளியார் தான். இந்த அளவிற்கு அதன் விரிவைப் பாவாணர் கண்டதில்லை. முன்னோர் இட்ட பாதையில் தான் அடுத்து வருவோர் நடக்கிறோம். முன்னோர் சொன்னதை மீறவே கூடாது என்று அதற்குப் பொருள் இல்லை. நியூட்டன் பாதைக்கு மேலும் ஐன்சுடைன் கடந்ததால், நியூட்டனை ஐன்சுடைன் மறுத்ததாய்ப் பொருளில்லை நானும் பாவாணரை, ஏன் அருளியைக் கூட, சில போது மீறியுள்ளேன். சுள்>சுளு>சுடு>சூடு>சூரு என்பது அது போன்ற நீட்சி. சூரியன் என்பது சூர்ய என்று வடமொழியில் பயன்பட்டதாலேயே அது சங்கதமாகி விடாது. அதன் மற்ற சொல் தொகுதி, பயன்பாடு, அதன் அடித்தளம் ஆகியவற்றைப் பார்த்தே அது தமிழா, சங்கதமா, தமிழ் வடிவம் எது என்று ஆய்ந்து முடிவு செய்கிறோம். 

”குதிரைக்குக் குர்ரம்” என்பதால், ”யானைக்கு அர்ரம்” என்று எந்திரத் தனமாய் நான் முடிவு செய்வதில்லை. என் புரிதலில் சூரியன் தமிழே, உங்களுக்கு அது உகந்ததில்லை என்றால் நான் சொல்ல ஏதுமில்லை. உங்கள் உகப்பின் படி, நீங்கள் நகருங்கள். நான் செய்வதெல்லாம் சரியென்று நானென்றும் சொன்னதில்லை. என்னையும் கேள்வி கேட்க யாரோவொரு இளைஞன் எழுந்துவருவான் என்று எனக்குத் தெரியும் தான். என்னை என் எதிர்காலம் 50 ஆண்டுகள் கழித்து முடிவு செய்யட்டும். அதுவரை என் கடன் பணி செய்துகிடப்பதே.


No comments: