Sunday, July 19, 2020

குமரி முனை

”கன்யா குமரியில் கன்னி, குமரியென ஏனிரண்டு பெண்பாற் பெயர்கள்?” என்று தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் கேட்டார். என் மறுமொழி இது

குல், கும் ஆகிய வேர்கள் திரட்சி, சேருதல், கூடுதல் ஆகிய பொருள்களைத் தர வல்லன. கும்முதல் என்ற வினை திரளும் வினையைக் குறிக்கிறது, கும்>கொம்>கொம்மை என்பது திரட்சியைக் குறிக்கும். கும்>குமர்>குமரி என்பது உடலால் சிறுத்த சிறுமி, பருவம் வரும் போது, உடலால் திரட்சி அடைவதைக் குறிக்கிறது. கும்மித் திரண்டு எழுந்த பெண் என்ற பொருளிலேயே குமரி என்று அழைக்கப் படுகிறாள். குமர்ப் பருவம் என்பது பெரிய பெண் பருவம். அதே போல, ஒரு கண்டத்தின் முனையாய் குறுகிக் கூர்ந்து போகாமல், அகண்டு திரண்டு இருந்ததோடு, முனையாயும் ஆகிப் போனதால், தமிழகத்தின் தென்முனை குமரி முனை என்று அழைக்கப் படுகிறது.. அதற்கு மதப்பொருள் கொடுக்கவேண்டாம்.

இங்கே இன்னொரு சொல்லும் விளையாரும். முனையைக் குறுகியது எனும் சிறுமைப் பொருளில் குல்>குன்>குன்னி என்பது தமிழ்மரபு. குன்னி என்பது கன்னியாகவும் திரியும். சிறியவளாய் இருந்தவள் சட்டெனப் பெரியவளாகிவிட்டாள் என்று பூப்பு நீராட்டுவோம். எனவே கன்னிக்கு ஒருபால் சிறுமைப் பொருளும் உண்டு. அளவிற்கு மீறிய  கூர்மை இல்லாது அதேபொழுது திரண்ட முனை இருப்பதால், குமரியை  முனை என்று சொல்லியே கன்னியென்று அழைத்தார்.

குமரிக்கன்னியைச் (குமரி முனையை) சங்கத மொழி  கன்யா குமரி என்றது. கன்னா>கன்யா  என்று திரிப்பது சங்கதப் பழக்கம். இலத்தீன், பிரஞ்சு, இசுப்பானியம், இத்தாலியம் போன்ற செண்டம் இந்தையிரோப்பிய மொழிகளில் ”நல்ல பையன்” என மாட்டார். ”பையன் நல்ல” என்பார். இந்த வழக்கம் பொதுவாக செருமானிய மொழிகளில் அமையாது, அவர், ”நல்ல பையன்” என்றே சொல்வர். சங்கதத்தில் இருவேறு வழக்கமும் உண்டு.  இங்கே ”கன்யா குமரி” என்பது, “முனை குமரி” என்பது போன்றது. தமிழர் “கன்யா குமரி” என்னும் போது தம்மை அறியாது சங்கத வழக்கத்தைப் பின்பற்றுகிறார். (நாம் மூளைச் சலவை செய்யப்பட்டு வெகுநாட்கள் ஆயின.) தமிழ் மரபைக் காப்பாற்றவேண்டுமெனில் ”கன்யா குமரி:” என்னாது, ”குமரிமுனை” என்று சொல்லவேண்டும்.

குமரிமுனையைக் காப்பாற்றும் குமரியம்மன் அருள் பாலிக்கட்டும்.        

No comments: