Thursday, August 09, 2018

சங்கம் - 6

70000 ஆண்டுப் பழங்குடிகளின் மிச்சசொச்சமாய்த் தமிழர் இருந்திருக்கலாம் என எண்ணுதற்கு இன்றுமுள்ள சங்குப்பயன்பாடும் விளக்கங்களும் காரணமாகும். கூட்டம் பெரிதானபின், சங்கின் பயன்பாடு ஓசையெழுப்பப் பயன்பட்டிருக்கலாம். ஒருவேளை கூட்டக்கருத்தேகூட இதன்வழி எழுந்ததோ, என்னவோ?. விரைந்த நகரவாழ்வில் இன்றிது அரிதாகினும், தென்பாண்டி நாட்டுப்புறவீடுகளில் பொங்கல் நாளில் தங்கள்வீட்டிற் “பால் பொங்குவதைச்” ஊரார்க்குத் தெரிவிக்கச் சங்குமுழங்குவது நம்மைச் சிந்திக்கவைக்கும். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் குறுஞ்செய்தி தெரிவிக்கச் சங்கூதுவதும் முரசு அறைவதும் மேலையர் காலம் வரையிலும் இங்கிருந்த பழக்கம். கட்டபொம்மன் காலையுணவு அருந்துமுன் திருச்செந்தூரில் முருகனுக்கு பூசையாயிற்றா என நாளுமறிய விழைவானாம். ஒரு கல்லிற்கு ஒருக்காய் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு முரசறைவித்துச் சங்கும் ஊதுவராம். இதுபோற் செயற்பாடுகள் தமிழகத்தில் ஏராளம். ”குழந்தை பிறந்தபோது ஊதப்படும் முதற்சங்கம், திருமணத்தின் போது ஊதப்படும் இரண்டாஞ்சங்கம், வாழ்நாள் முடிகையில் ஊதப்படும் மூன்றாஞ்சங்கம்” பற்றிப் பட்டினத்தார் பாடுவார்.

முதற்சங் கமுதூட்டும்; மொய்குழலார் தம்மை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம்
ஆம்போ ததுவூதும்; அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த தலம்.

இதுபோன்ற செயல்கள் வழக்கிலிருந்தவை தாம். பிறந்த பிள்ளைக்கு சங்கின்வழி மருந்தூட்டுவதுகூட அண்மைக்காலம்வரை நாட்டுப்புறங்களில் இருந்த பழக்கமே. நெய்தலிலிருந்து மற்றதிணைகளுக்கு இது போன்ற சங்குப்பயன்பாடுகள் விரிந்தனபோலும். ஆனால் சங்கின் கூட்டப்பொருள் இதே சொற்பிறப்பின்வழி ஏற்பட்டதாவென்பது வேறுகேள்வி. அடிப்படையில் இருவேறு சொற்பிறப்பில் உருவாகி ஒரேமாதிரி ஒலிக்குஞ் இருபொருட் சொற்களாகவே இவை தோன்றுகின்றன. விரிவாய்ப் பார்ப்போம்.

உம்முதலெனில் பொருந்தல், கூடுதலென்று பொருள்கொள்ளும். ”அவனும் நானும், இனியனுமாய் பள்ளிசென்றோம்.” இங்கே உம் உருபு கூட்டப்பொருள் குறிக்கிறது. உம்>அம் ஆகி, அம்முதலுங் கூடத் தமிழில் பொருந்தலைக் குறிக்கும். அம்>அமை; அமைதல்= பொருந்தல். தெலுங்கில் அம்முதல்= "ஒருபொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்". அம்முதலில் வந்ததே அங்காடி. தெலுங்குச்சொல் தெரியாதிருந்தால், ’அங்காடி’ எப்படி வந்ததெனத் தெரியாமலே போயிருக்கும். உம்முதலின் முன் சகரஞ் சேர்த்தும் அமையலாம். சும்>சும்மை என்பது மிகுதி குறிக்கும். சும்மைக்கு முந்திய ’சும்முதல்’ வினைச்சொல் (கும்முதலைப் போல்) மிகுத்தலைக் குறித்திருக்க வேண்டும். [மிகுத்தலிலிருந்து கூட்டப் பொருளும் பருத்தற் பொருளும் இயல்பாக வரும்.] சும்முதல் தொடர்பான பெயர்ச் சொற்களைப் பதிந்த அகரமுதலிகள் வினைச்சொல்லைப் பதிவாக்கவில்லை. வியப்புறுகிறோம்.] சும்மையொட்டி, சுமை, சுமடு, சும்மாடு, சுமத்தலென்ற சொற்களும் அகரமுதலிகளிற் பதிவாகியுள்ளன.

சம் என்ற சொல்லிலிருந்து சமமென்ற சொல்லுமெழும். சமம் போன்ற அடிப்படைச் சொல்லைத் தமிழ் கடன்வாங்கியிருக்க வழியில்லை. சம்முதல், சமத்தல், சமலுதல்= ஒன்றைப்போல் இன்னொன்றாய் ஒருங்கிருத்தல் என்பதற்கான வினைச்சொல் இந்தையிரோப்பியனிலும் நேரடியாயில்லை. same என்ற பெயர்ச்சொல் மட்டுமே சுற்றிவளைத்துக் கூடுதல், உடனிருத்தல் பொருளில் எழுந்துள்ளது. உடன் இருப்பன ஒன்றுபோல் இருக்கவேண்டுமே என்று நாம் புரிந்துகொள்கிறோம்.
.
perhaps abstracted from O.E. swa same "the same as," but more likely from O.N. same, samr "same," both from P.Gmc. *samon (cf. O.S., O.H.G., Goth. sama; O.H.G. samant, Ger. samt "together, with," Goth. samana "together," Du. zamelen "to collect," Ger. zusammen "together"), from PIE *samos "same," from base *sem- "one, together" (cf. Skt. samah "even, level, similar, identical;" Avestan hama "similar, the same;" Gk. hama "together with, at the same time," homos "one and the same," homios "like, resembling," homalos "even;" L. similis "like;" O.Ir. samail "likeness;" O.C.S. samu "himself"). O.E. had lost the pure form of the word; the modern word replaced synonymous ilk (q.v.).

இதே கருத்தைச் சமமென்ற சொல்லை மட்டுமின்றி, இன்னும் பல சொற்களைச் சேர்த்து ஒட்டு மொத்தமாக ’சமயம்’ என்ற தலைப்பில் நண்பர் ஆசீப்பின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களின் கானல் சிறப்பிதழில் எழுதினேன். பின் அதை என் வலைப்பதிவிலும் பதிந்தேன். கீழே சுட்டிகள் கொடுத்திருக்கிறேன்.
 
http://valavu.blogspot.com/2006/03/1.html
http://valavu.blogspot.com/2006/03/2.html
http://valavu.blogspot.com/2006/03/3.html
http://valavu.blogspot.com/2006/03/4.html
http://valavu.blogspot.com/2006/03/5.html
http://valavu.blogspot.com/2006/03/6.html

இக்கட்டுரைத் தொடரிற்சொல்லியதை மீண்டுஞ்சொல்வதிற் பொருளில்லை. எனவேதான் சுட்டிகள் கொடுக்கிறேன். 'சம'த்திற்கு இணையாகத் திராவிட மொழிகள் பலவற்றிலும் [சமம்- மலையாளம், சம- கன்னடம், படகர், சமமு-தெலுங்கு] சொற்களுள்ளன. சமத்தை ஒட்டிய பலசொற்களும் மற்ற திராவிட மொழிகளிலுண்டு. அவற்றில் சிலவற்றை பர்ரோ-எமெனோ பதிவுசெய்வார். வெறும் ஒற்றைச்சொல் மட்டும்பார்க்கும் பழக்கத்தை அருள்கூர்ந்துநிறுத்தித் தொடர்புடைய சொற்களைத் திராவிடமொழிகளிற் பார்க்கப்பழகுங்கள். இத்தனைமொழிகளில் கருத்தும், வளர்ச்சியுமிருந்தால்  முந்து திராவிடத்திலும் அது இருந்திருக்குமென அறிவூகம் (intuition) சொல்லும். [முந்துதமிழென நான்சொன்னால் பலருமேற்கார்.. பொதுவாகப் புகர்நிறத்தார், கருப்பர் சொல்லை மற்ற தமிழர்/இந்தியர் கேட்பதில்லை:வெள்ளை நிறம் எனில் அதிலேதோ இருப்பதாய் நம்புவது நம்மவர் வழக்கம்.-))] அப்படியான முந்துதிராவிடக் காலத்தில் வேதமொழி இந்தியாவினுள் நுழையவில்லை என்றே வரலாற்று மொழியியல் சொல்கிறது.

அப்படியும் மீறி முந்துதிராவிடத்திலும், இந்தையிரோப்பியத்திலும் ஒரே பொருளில் ஒருசொல் அமையுமானால் அது பழஞ்சொற்களின் மிச்சசொச்சம் என்பதே அறிவிற்குகந்தது. திராவிட மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இடையே ஏதோ உறவு முந்துபழங்காலத்தில் நாகரிகந் தோன்றிய காலத்தில் இருந்திருக்குமென்று கருதுகோள்கொண்டால் இதுபோல் ஒப்புமைகளை ஆயலாம். [நான் அப்படியொரு கருத்துக் கொண்டவன்.] மாறாக ஒப்புமைப்பொருள் சொல்லத் தமிழருக்குச் சொல் கிடையாதென்று அச்சடித்தாற்போல் வேதமோதி, ”வடமொழி மேடு, தமிழ் பள்ளம், மேட்டிலிருந்து நீர் பள்ளத்திற் பாய்ந்தது” என்று கிளிப்பிள்ளைபோல் கூச்சலிட்டு முட்டுச்சந்திற்குள் முன்னும் பின்னும் போய்வந்து கொண்டிருக்கலாம். I take சமம் as common stock of Dravidian and Indo-European. Period. Such common stock is to be ascertained over a long period of research. முடிவாக same = சம என்றே நான் கொள்ளுகிறேன்.

சமம், சமன், சமல் என்பவை பல்வேறு ஈறுகளில் முடியும் ஒருபொருட் சொற்களில், சமம் என்பதையே பெருவாரியாகப் பயன்படுத்தி மற்ற இரண்டையும் இற்றைத்தமிழில் நாம் துறந்து கொண்டுள்ளோம். கும்முதல்= கூடுதல் போலவே சம்முதல்= கூடுதல் என்பதும் பிறந்தது. கூடும்பொருட்கள் ஏதோவகையில் ஒரேமாதிரி இருக்கும் காரணத்தால், ”ஒன்றுபோலிருந்தல்” என்ற வழிப்பொருள் பிறந்தது. முதற் பொருள் இங்கு கூடுதலே. இரண்டாம் பொருளே ’ஒன்றுபோலிருத்தல்’. சம்மோடு தொடர்புடைய செம்முதலையும், அதையொட்டி செ, செம், செவ், செய் போன்ற முன்னொட்டுக்களையும், அவை உருவாக்கிய சொற்களையும் இங்கே எண்ணிப்பார்க்கலாம். அம்முதல்= பொருந்துதல்; அம்>அங்கு>அங்கம்= பொருந்திய உறுப்பு; கும்முதல்= குற்றுதல்; கும்>குங்கு= குன்றியது; கும்முதல்>கொம்முதல் = குவிதல்; குங்கு> கொங்கு= குவிந்த மேடான பகுதி; மலைகளையும், குன்றுகளையும் ஓதுக்கி நிரவலாய்ப்பார்த்தால் தமிழகத்தில் கொங்குப்பகுதியே மேட்டுநிலம். சும்முதல்= தொகுத்தல்; சும்>சுங்கு= ஆடையின் கொய்சகம். சுருங்குதல்> சுங்குதல்; சுங்குடிப்புடவை= சுங்கிய இடங்களில் சாயந்தோய்த்துப் புதுத் தோற்றங்கொண்ட புடவை. இப்படிப் பல்வேறு இணைகளைப்போல், சம்முதல்=  கூடுதல்; சேர்தல்; சம்>சங்கு>சங்கம்= கூட்டம் என்றசொல் எழுந்தது புரியும்.

கூட்டப்பொருள் என்பது ஈறாறு கூடுமிடம், ஆறு கடலோடு கூடுமிடம் ("சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று எங்களூர்ப் பக்கம் ஒரு தாலாட்டு வரி போகும். சங்கு முகத்தைத் தொகுத்துச் சங்கமமாக்கிச் சங்கதம் எடுத்துக்கொள்ளும். அதை மீண்டுங் கடன்வாங்கிச் சங்கமித்தலென்று சிலதமிழர் உருவாக்குவார்), சேர்க்கை, அவை, புலவர் கூட்டம், முச்சங்கங்கள், செயின புத்த சங்கங்கள், அன்பு, புணர்ச்சி முதலிய பொருட்பாடுகளைக் குறிக்கும். சங்கமென்றசொல் தமிழிலக்கியத்தில் கூட்டப்பொருளில் முதன்முதல் ஆளப்பட்டது. மணிமேகலையின் (7.113-114) ”வலம்புரிச்சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” என்ற வரிகளாகும். புலம்புரிச்சங்கம் என்பது கூட்டபொருளில் அமைந்ததே. இதைக்காட்டிக் மணிமேகலை காலத்திற்றான் ’சங்கம்’ கூட்டப்பொருளில் எழுந்ததென்பது பெருந்தவறு. முன்சொன்ன காரணங்களால் சங்கத்திற்குக் கூட்டப்பொருள் முன்பே ஏற்பட்டிருக்கலாம்.   

[(இடைவிலகலாயினும்) மணிமேகலை காலம்பற்றி இங்கு சொல்ல வேண்டும். சிலம்பும், மணிமேகலையும் ஒரேகாலத்தில் அடுத்தெழுந்த நூல்களென்றே பலருங்கொள்வார். அப்படிக்கொள்வதால் தமிழர் வரலாறும், தமிழிலக்கிய வரலாறும் தடுமாறிப் புரிந்துகொள்ளப்படும். பெரும் ஆய்வாளாரே இதில் தடுமாறியுள்ளார். ஆழவாய்ந்தால் கதைநடந்த காலத்திற்கருகில் 2,3 ஆண்டுகளுக்குள் சிலம்புநூல் எழுந்திருக்கவே வாய்ப்புண்டு. அதில் வரலாறு மிகுந்தும், புனைவு குறைந்தும் உள்ளதை உணரலாம். என் ஆய்வின் படி சிலம்பின் காலம் பொ.உ.மு.75 ஆகும். ”அரைசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்ற உண்மைகளோடு, சோழ, பாண்டிய, சேர இனக்குழுக்களை விதப்பாய்ப் பாராது மொத்தத்தமிழரின் சிறப்பையும் தேசியநோக்கிற் பேசவந்த நூல் சிலம்பாகும். தவிர, எல்லாச் சமயங்களையும் குறையின்றி விரித்துப் பேசிய அந்நூலை வெறுமே செயினச் சமயநூலென்று குறுக்குவதும் சரியல்ல.

மணிமேகலையோ, ஒருசில சிலம்புக் கதைமாந்தரை தன் கதைமாந்தராய் எடுத்து, அளவிற்கதிகம் புனைவுசேர்த்து பல்வேறு காலநிகழ்வுகளைக் கலந்து, கதையாக்கிச் சிலம்பிற்கப்புறம் 500 ஆண்டுகள் கழித்து (பெரும்பாலும் பொ.உ.425 இல்) தமிழகத்தில் புத்தமுயர்ந்த களப்பிரர்காலத்து நூலாகும். (இதற்கீடாக செயினப்பெருமை பேசும் நீலகேசியைச் சொல்லலாம்.) எப்படி விக்கிரமனின் ’நந்திபுரத்து நாயகியும்’, கல்கியின் ’பொன்னியன் செல்வனும்’ ஒன்றுமற்றதின் தொடராய் அதேபொழுது தத்தங்காலங்களில் வேறாய் எழுந்தவையோ, அதுபோற் சிலம்பையும், மணிமேகலையும் கொள்ள வேண்டும். இதைச்செய்யாது ஆய்வுக்குழப்பத்தால் சிலம்பை வலிந்து கீழிழுத்துப் புதினமென்பது முற்றிலும் தவறான போக்கு. இதுபோல் தவறு ஏறத்தாழ 100 ஆண்டுகளாய் நடந்துவருகிறது.]

அன்புடன்,
இராம.கி.

No comments: