Saturday, January 09, 2010

மாமூலனார் - 3

நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி
‘நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?” என
மன்னுயிர் மடிந்த மழைமாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலையுயர் யாஅத்து
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்கு
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண்ணுமிழ் கழுகின் கானம் நீந்தி
‘சென்றார்’ என்பிலர் - தோழி! - வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர்த் தேஎத்த பல்மலை இறந்தே
- அகம் 31
- திணை : பாலை
- துறை: பிரிவிடை ஆற்றாளாயினள் என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தன் தோழிக்குச் சொல்லியது.
- துறைவிளக்கம்: வேந்து வினை காரணமாய்க் காவற் தொழிலுக்கெனத் தலைவன் பிரிந்து சென்றான், அந்தப் பிரிவாற்றாது தலைவி வருந்தினாள்;  “வினை வயின் ஆடவர் பிரிந்தபோது, இப்படி நீ அழலாமோ? - என்று எல்லாப் பெண்டிரும் என்னிடம் கூறுகிறாரே, :அவரும் அக்காட்டின் வழி சென்றார் - என்று கூறுவாரல்லரே?” எனத் தலைவி மேலும் வருந்திக் கூறியது.

தெளிவுரை” (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

நெருப்பாய்ச் சிவந்த வெய்யொளிர்ச் சூரியன்
புலங்கடை கருகி மடங்குமாறு சுடுகிறது;

“நிலம் இதோ, புடைத்துப் பிளக்கிறதா?”
என்று கேட்பதுபோல்,
நிலத்து உயிர்கள் நொய்ந்து மடிய ஏதுவாய்,
மழை பெய்யாக் காலம்;

குறும்ப நாட்டு வயவர்,
காட்டுப்பாதையில் எதிர்ந்தாரை வில்லிட்டு வீழ்த்த,
செவ்வலரி மாலை இட்டது போல்,
புண்ணுமிழ் குருதி பரவி,
தசையொழுங்கற்று, குறைப்பட்டுக்
கிடக்கும் யாக்கைகளின்
கண்களைக் கொத்தும் கழுகுகள், 

இலையருகி, ஓங்கி வளர்ந்த,
யா மரத்தின் உயரக் கிளைகளில்
தஞ்சமடைந்த குஞ்சுகளுக்கு
அவற்றை ஊட்டுகின்றன. 

ஆனாலும், தோழி!
விற்போரில் ஈடுபட்டு,
வலிய ஆடவர்
வென்றியொடு வாழும்,
இக்காட்டின் வழியே
அவரும் "தமிழ்மூவேந்தர் காக்கும்
மொழி பெயர் தேயத்தின்
பன்மலைகள் கடந்து,
சென்றார்” என்று உரைப்பார் அல்லரே, ஏன்?

பொதினியின் பாதையை அகம் - 1 இலும், துளுநாட்டுப் பாதையை அகம் 15- இலும் குறிப்பிட்ட மாமூலனார் இங்கே குறும்ப நாட்டு பாதையை 31 ஆம் பாடலில் விவரிக்கிறார். குறும்பர்நாடென்பது இன்றைய ஆந்திரம், கன்னடம் இவற்றின் இருமருங்கிலும் பரவிய இராயல சீமையாகும். சோழர், பாண்டியர் என்னும் இருநாட்டாரும், கொங்குநாட்டைக் கடந்து வெய்யிலூர் (இன்றைய வேலூர்) வழியே, இராயல சீமைக்குள் புகுந்து வடநாடு ஏகலாம். அன்றேல் தகடூர் (தர்மபுரி) வழியேயும் வடநாடு செல்லலாம்.

இராயல சீமை வழி போவது, இன்றுமட்டுமல்ல, அன்றும், இருப்பதற்குள், கடின வழியாகும். வேனிற் காலத்தில் வெம்மை கூடி பாலை படர்ந்த பெருவெளி/வழி இது. மழை என்பது எப்போதோ ஏற்படும் பைதிரம். குறும்பர் என்போர் ஆறலைக்கள்வராய் (வழிப்பறிக் கள்வராய்) இருந்தவர். குறும்பரை குருப என்று தெலுங்கிலும், கன்னடத்திலும் குறிப்பர். மலையாளத்தில் இவர் குறுமர் என்று அழைக்கப்படுவார். இன்றையக் கேரளத்தின் வயநாட்டிலும், தமிழ்நாட்டில் நீலகிரிப் பக்கமும் பழங்குடியினராய் இன்றும் இருக்கிறார். மலைப் பாதையில் இருந்து கீழிறங்கி இன்றைய இராயல சீமையில் இவரின் பெருஞ்சாரார் கம்பளம் பின்னும் இடையராய் மாறினார்.

இவர் பற்றி மிகுந்த விவரம் எட்கர் தர்சுடனின் (தமிழாக்கம் முனைவர். க. ரத்னம்) ”தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - தொகுதி நான்கு”, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வெளியீட்டில் பார்க்கலாம். குறும்பர் சற்றே குட்டையானவர். குறும்பு என்பது அவ்வளவு வளமில்லாத, முள்ளும் செடியும், புதரும் விரவிய, சிறுகுன்றாகும். ”கல்லுடைக் குறும்பு” எனும் சொற்றொடர்  கவனிக்கலாம். இவருக்குச் சரியான வாழ்வு ஆதாரம் அன்று கிடையாது. பின்னால் ஆடுகளை மந்தையாக்கி, ஆட்டு மயிரில் இருந்து முரட்டுக் கம்பளம் செய்யும் நெசவு நிலைக்கு மாறிக் கொண்டனர். உரோமம் பறிப்பதற்காக வளர்க்கப்பட்ட குறும்பர்களின் ஆடு, குறும்பாடு என்றே அன்று சொல்லப் பட்டது.

வயவரென்போர் வீரர். இற்றை இராயலசீமைக்கு வடக்கே மாராட்டம் போயின்,  அன்றைக்கும் மொழிபெயர் தேயமே. மொழிபெயர் தேயம் எனில் எதோ வேற்று மொழி பேசும் இடம் என்று பொருளல்ல. மொழி பெயரும் தேயம் மொழிபெயர் தேயம். அதாவது அங்கே தமிழ் பெரிதும் பேசப்பட்டு இருக்கும்; ஆனால், கொஞ்சங் கொஞ்சமாய் நகர, நகர, மொழி பெயர்ந்து கொண்டிருக்கும். இங்கே வடக்கிற் பெயருகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகள் முன் அங்கு தமிழ்மொழி பெயர்ந்து மாறிய மொழி பாகதமே. நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்), குறிப்பாக வசிட்டி மகன் என்னும் வசிட்டி புத்ர தம் நாணயத்தின் ஒரு பக்கம் தமிழிலும், இன்னொரு பக்கம் பாகதத்திலும் அச்சு அடித்திருந்ததை அவதானித்தால், மொழிபெயர் தேயத்தில் தமிழும், பாகதமும் அருகருகே வழங்கிய மெய்மை புலப்படும். முடிவில் இக்கலப்பு கூடிப்போய், கன்னடம், தெலுங்கு எனும் இரு தமிழிய மொழிகள் தோன்றின. [பட்டிப்புரோலு எனும் ஆந்திர இடத்தில் பாகதம், தமிழ் என்ற இரண்டுமே புழங்கியது பெருமி / தமிழிக் கல்வெட்டின் வழி தெரிகிறது

புலங்கடை என்பது வீட்டிற்கு வெளியே, புறத்தே இருக்கும் பெருவெளி இன்று புழக்கடை என்று தமிழ்நாட்டின் ஒருசாரார் இதைப் புழங்குகிறார். புலங் கடையும், புழக்கடையும் தொடர்புள்ள ஆனால் வெவ்வேறு சிந்தனையிற் தோன்றிய சொற்கள்.. மண்டிலம் என்ற சொல் இங்கு சூரியனைக் குறிக்கும்.

குறும்பநாட்டு வயவர் ஆறலைக் கள்வராய் ஆன காரணத்தால், பாதையின் ஊடே போகும் சாத்துக்களை (வணிகர் கூட்டம்; traders caravans) மறைந்திருந்து வில்லிட்டுக் கொன்று, சாத்துப் பொருள்களைக் கொண்டு செல்லும் கள்வர் போலவே இருந்திருக்கிறார். எனவே பாதைக்கு அருகில் இறந்தோர் யாக்கைகள் குலைந்து கிடப்பதும், அவற்றின் உறுப்புக்களைக் கொத்தி எடுத்துச் செல்லும் காவுண்ணிப் பறவைகள் (scavenging birds) அங்கு திரிவதும் இயல்பாய் நடப்பதே. கழுகு ஒரு காவுண்ணிப் பறவையாகும். யாக்கைகளில் இருந்து கண்ணைக் கவ்விக் கொண்டு போய் தம் இளம் பார்ப்புகளுக்கு [=குஞ்சுகள்; பொதுவாய் எந்த உயிரினமும் இளமையில் சற்று வெளிறிய நிறத்திலும், அகவை கூடும்போது அடர் நிறத்திலும் அமைவது இயற்கை. வெளிறிப் போனது = பால்போல ஆனது என்ற கருத்திலேயே பார்ப்பென்ற சொல் பறவைக் குஞ்சுகளைக் குறித்தது. ”வெளிறிய இனத்தார்”  பொருளில் தான் பெருமானருக்கு (brahmins) பார்ப்பனர் என்ற சொல்லும் ஏற்பட்டது.]

யாமரம் பற்றி சொல்லாய்வறிஞர் ப.அருளி அவருடைய “யா” என்னும் பொத்தகத்தில் [ப.அருளி, அறிவன் பதிப்பகம், காளிக்கோயில் தெரு, தமிழூர், புதுச்சேரி 605009, 1992] மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார். படிக்கவேண்டிய பொத்தகம் அது. யாமரம் அதிகமிருந்த காரணத்தால் இந்தொனேசியாவின் யாவகத் தீவிற்குப் பெயருண்டாயிற்று. (=ஸ்யாவகம்>சாவகம்>ஜாவகம்). இந்தத் தீவுகளின் பலவற்றிற்கும் தமிழ்த் தொடர்பான பெயர்களே உண்டு.

“தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயத்தே” எனும் சொற்றொடர் நமக்கு ஓர் ஆழ்ந்த வரலாற்றுச் செய்தி உரைக்கிறது. கலிங்க அரசன் காரவேலன் தன் கல்வெட்டில் [இதன் காலம் கி.மு.165 என்றும், கி.மு 117க்கு அருகில் என்றும், இல்லையில்லை கி.மு.30-40க்கு அருகில் என்றும், முவ்வேறு கருத்துக்கள் உண்டு. நான் உறுதியாகக் கி.மு.30-40 என்னும் காலக் கணிப்பை மறுப்பேன். மற்ற 2 காலக் கணிப்புக்களையும் நான் இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே என் முன்னிகையை இப்பொழுது தவிர்க்கிறேன்.] தமிழ் மூவேந்தரின் முன்னணி [த்ராவிட சங்காத்தம்] 1300 ஆண்டுகள் இருந்தது ஆகவும், அதைத்  தான் முதலிற் குலைத்ததாகவும், கொங்குக் கருவூரைக் கைப்பற்றியதையும், கலிங்கத்துக் காரவேலன் கூறுவான்.

இக்கல்வெட்டை முதலிற் படித்த தொல்லாய்வர் ஜெய்ஸ்வாலும், பானர்ஜியும் 1300 எனும் ஆண்டுக்குறிப்பைச் சற்றும் நம்பாததால், 113 என்று மாற்றிப் படித்ததாக அவர் அறிக்கையில் குறிப்பார். அதேபொழுது அடிக்குறிப்பில் ”இது 1300 ஆண்டுகளாய் இருக்க வழியுண்டு” என்றுஞ் சொல்லியுள்ளார். பின் வந்த எல்லோரும் கிளிப் பிள்ளையாய் 113 ஆண்டுகளையே குறிக்கிறார். 1300 ஆண்டுகள் எனும் குறிப்பை வாய்ப்பாக மறந்துவிட்டார். தமிழர் வரலாற்றை மீளாய்வு செய்வோர் காரவேலைன் கல்வெட்டையும் மீளாய்வு செய்ய வேண்டும்.  மொழி பெயர் தேயம் என்பது தமிழும் பாகதமும் உடனுறை பகுதி என முன்னால் சொன்னோம். இதற்கு அருகில் விண்டுமலை (=விந்தியமலை) உள்ளது. அதுவே இங்கு ”மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” எனப்படுகிறது. நூற்றுவர் கன்னரின் அரசு விண்டு மலைத்தொடருக்கு இருபுறமும் இருந்தது. தென்பகுதியில் தமிழும் வடபகுதியில் பாகதமும் நிலவின. 

அப் பகுதியில் நூற்றுவர் கன்னர் தம் அதிகாரம் தூக்கி நிறுத்தும் வரையில் (அதாவது கி.மு.26 - கி.பி..250 வரையில்) சிறு சிறு அரசரே இருந்தனர். இன்றைக்கு உலகத்தின் காவற்காரர் அமெரிக்கா என்று சொல்வது போன்று, அன்றைக்கு ”மெய்யான தமிழகத்திற்கும்” வெளியே, ஆனால் தமிழ் பெரிதும் புழங்கிய நூற்றுவர் கன்னரின் மொழிபெயர் தேயத்தின் காவற்காரர் தமிழ் மூவேந்தரே. இதை மாமூலனார் இங்கு உறுதி செய்கிறார். வெறுமே, சேரன், சோழன், பாண்டியன் என்று அவர் தனித்துச் சொல்லாது, முவேந்தர் கூட்டணி இருந்ததை உறுதிசெய்கிறார் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். எனவே மாமூலனாரின் இப்பாட்டு காரவேலன் கல்வெட்டிற்கும் முந்தையது,

மூவேந்தர் கூட்டணி உடன்படிக்கையை நாம் இங்கு சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

1. தங்களுக்குள் என்ன சண்டை இருந்தாலும், மூவேந்தர் யார் மேலும் வெளியார் படையெடுத்தால், மூவரும் ஒருவருக்கொருவர் உதவியாய், தமிழகத்திற்கு வெளியே செயற்பட வேண்டும்; 
2. மூவருக்கும் இடைப்பட்ட எந்த வேளிரையும், இவர் அடக்கியாளலாம்; அதே பொழுது வெளியார் வேளிர் மேல் படையெடுத்தால், அதை ஒருங்கே எதிர்க்கவேண்டும்.
3. தமிழகத்தில் இருந்து போகும் சாத்துக்களையும், வரும் சாத்துக்களையும் காப்பாற்றும் வகையில், மூவேந்தரின் நிலைப் படைகள் (standing armies) மொழிபெயர் தேயத்தில் நிறுத்தப்பட வேண்டும். இந்தக் காக்கும் தொழிலில் முப்படைகளும் ஒன்றிற்கொன்று உதவ வேண்டும்.

மாமூலனாரின் பாடல்கள் பெரிதும் சேரநாட்டைச் சார்ந்து இருப்பதால், இப்பாட்டின் தலைவனும் ஒருவேளை சேர அரசனின் படைசேர்ந்தவனாய் இருக்கலாம். ”அவன் இப்பகுதிக்குக் காவல் காரணமாய்ச் சென்றானா என்று யாரும் சொல்லாது இருக்கிறாரே?” என்பதே இங்கு தலைவியின் பெருங்கவலையாய் அமைகிறது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, January 07, 2010

மாமூலனார் - 2

எம் வெங் காமம் இயைவது ஆயின்
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மை அம் பசுங்காய்க் குடுமி விளைத்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன
வறுங்கை வம்பலர்த் தங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்தமாக் கட்டு ஆகுகது இல்ல -
தோழிமாரும் யானும் புலம்ப
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல்நகர்ச்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி
வன்கை என்கின் வயநிரை பரக்கும்
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஓராங்கு
குன்றவேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற - ஆறே!
- அகம் 15
- திணை: பாலை
- துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது.

தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

எம்முடைய மிகுந்த விருப்பம் நடக்குமென்றாலும் கூட,
மனம் அமைதி கொள்ளவில்லையே? ஏன்?

முகப்படாம் சூடிய பெரும் யானைகளையும்,
சுடரும் கலன்களையும்,
கொண்ட நன்னனின் பாழியைப் போன்றே,
காவல் உடைய எம் பெருமனையின்
செறிந்த காப்பையும் துறந்து
அவனொடு போனாளே? அது ஏன்?

தோழிமாரையும் என்னையும் புலம்பவைத்து,
மென்தோளுடைய என் அன்னை (பெண்),
தன் இன் துணையோடு
ஒருங்குசெல்லும் கொள்கையில்,
சென்றவழி இதுவோ?

காலுக்கடியில் தரையிற் பூத்துக் கிடக்கும்
இலுப்பைப்பூவை எடுத்துத் துய்த்த வாயோடு,
திரண்ட சினையிற் தொங்கும்
நீண்ட கொன்றைப் பழக் குலையைக் கொழுதி,
நிலப்புழுதி கிளப்பி,
வன்கைக் கரடிக் கூட்டம்
இவர் போகும் வழியில்
பரவிச் செல்லுமே? அது பொறுப்பாளோ?

மெய்யெலாம் பெருங்கலன் பூண்டு சிவந்த கோசர்;
கொழுத்த பசுங்காயின் குடுமி முற்றிப் பழுத்த பாகல்;
அதை ஆர்ந்த மகிழ்ச்சியில்,
தம் வட்டக்கண் பீலியைத் தொகுத்துவிரிக்கும்
மயில்கள் நிறைந்த
சோலைவளத் துளுநாட்டைப் போன்றது
அவள் போகுமிடம் என்றாலும்,
பொருளில்லாரைப் புரக்கும் பண்பால்,
சேரிகள் செறிந்த தலைமூதூரை
நாம் அறிந்தனம் என்றாலும்,

கூட, எம் மனம் அமைதி கொள்ளவில்லையே, ஏன்?

-----------------
இந்தப் பாடல் சேர நாட்டின் வடக்கே துளுநாட்டிற்கு தன் துணையோடு உடன்போக்காய்ச் சென்ற மகளை எண்ணிக் கவல்ந்த தாய், தலைவியின் தோழிக்குச் சொன்னதாகும். சேர நாட்டின் காஞ்சிரங்கோட்டிற்கும் (இன்றையக் கேரளத்தின் காசரக் கோடு - kaasargode. காஞ்சிரம் = Strychnos nux vomica என்னும் நச்சுக் காய். கோடு = குன்று.) வடக்கே உள்ள தென்கன்னட, உடுப்பி மாவட்டங்களைத்தான் அன்றைக்குத் துளு நாடு என்றனர். கடல் மட்டத்தில் இருந்து குன்றுகளாய்த் துளும்பி, மேலெழும்பி வந்த நாடு துளும்ப நாடு>துளுவ நாடு என்றாயிற்று. கால காலத்திற்கும் மூவேந்தருக்கும் கீழ்வராது தனியே நிற்க முயன்ற ஒரு வேளிர் நாடு துளுவ நாடாகும். அதே பொழுது, பலகாலம் சேரர் இந்த நாட்டின் மீது படையெடுத்து, தம் அரசோடு சேர்க்க முயன்றனர். அதனாற் சேரநாட்டிற்குக் கீழேயும் இது வந்திருக்கிறது.

துளுவநாட்டின் எச்சம் வெள்ளைக்காரர் காலம் வரைக்கும் இருந்திருக்கிற்து. அண்மையில் வெளிவந்த ”பழசிராஜா” என்ற மலையாளத் திரைப்படம், கூட ”நன்னர்” வழி வந்த கோலாத்ரி அரச வழியினரின் விடுதலை வேட்கையை நம்முன்னே விவரித்தது. நன்னர் என்னும் பெயரில் நாலைந்து அரசர் இருந்திருப்பதைச் சங்கப் பாடல்கள் வழியே அறிகிறோம். எந்த நன்னன் இந்தப் பாடலிற் குறிப்பிடப்படுகிறான் என்பதைப் பின்னால் விளக்குவேன்.

இங்கே நுணுகி அறியப் படவேண்டிய சில செய்திகளை மட்டும் சொல்லுகிறேன். பாழி என்பது பெரும் நகரத்தைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். மேலை நாடுகளில் “polis" என்று சொல்லுவதற்கு இணையானது. தமிழில் பள்ளி என்றும் இது அமையும் (திருச்சிராப்பள்ளி), கன்னடத்தில் halli என்றும், வலி./வாலி என்று மராட்டியத்திலும், பல்லே என்று தெலுங்கிலும் அமையும். நாலு திராவிட மொழிகளிலும் பாழி/பள்ளியை ஒட்டி ஊர்ப்பெயர்கள் உண்டு. நன்னனின் பாழி என்னும் போது அது தலைநகரைக் குறிப்பிடுகிறது என்று சொன்னாலும், அதன் இயற்பெயர் நாம் அறியக் கூடுவதில்லை.

இந்தப் பாழி ஏழில் மலைகளுக்கு நடுவில் ஒரே ஒரு வாயில் கொண்டதாய் சிறந்த காவல் உடையதாய் இருந்திருக்க வேண்டும். தப்பிக்க முடியாத காவல் கொண்ட ஊரைத் தலைவியின் பெருமனைக்கு உவமையாய்க் கூறுவதால் இந்த உண்மை புலப்படுகிறது. ஏழில் மலை என்பது இன்றையத் திருப்பதி ஏழு மலையைப் போன்று, மேற்கே கடற்கரைக்குச் சற்று தொலைவில் ஏழு மலைகளுக்கு நடுவில் இருந்திருக்கலாம். அதை ஏலி மலை>எலி மலை என்று திரிந்து mushika vamsam என்று பின்னால் வந்த அரசகுடியினர் (கோலாத்ரி அரச வழியினர்) சொல்லப் பட்டிருக்கிறார்கள்.

துளுநாடு பொன்னிற்கும், செல்வத்திற்கும் பெயர் பெற்ற நாடு. நறவு என்பது அதன் பெருந் துறைமுகம். சேர நாட்டிலிருந்து வணிகம் கருதி வடநாடு போகத் துளுநாட்டு வழியும் ஒரு சிறந்த வழியாகும். முந்தைய பாட்டிற் சொன்ன பொதினிவழிப் பாதை போல இந்தக் காட்டுப் பாதை, பாலைக் காட்சிகள் மிகுந்த பாதையல்ல. மனத்தையள்ளும் சோலை வளம் மிகுந்த பாதை. தலைவன் போகும் ஊர் தலைவியின் தாய்க்குத் தெரிந்திருக்கிறது; ஆனால், நமக்குத் தெரிவிக்கப் படவில்லை.

சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் எப்படி இனக்குழு அடையாளங்களின் வழியாக அறியப் பட்டாரோ (சாரல்>சேரல்>சேரர் = தம் உடம்பெங்கும் சந்தனம் பூசியோர், இன்றும் கேரளத்தில் சந்தனம் பூசும் மரபு உண்டு. கொழு>கொழுவியர்>கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியோர், தமிழரில் மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கம் சோழநாட்டில் மிகுதி. பாண்டு>பாண்டில்>பாண்டியர் = சாம்பற் பூசியோர். இன்றைக்குத் திருநீறு என்பது சமயக் குறியீடாகத் தோன்றினாலும், நீறணியாதவன் எதிலும் சேர்த்தியில்லை என்றே தென்பாண்டிநாட்டார் சொல்லுவர்), அதே போலக் கோசர் என்னும் வேளிரும் இனக்குழு அடையாளம் வழியாகவே அறியப் பட்டிருக்க வேண்டும்.

கொழுவியர்>கொழுசியர்>கொழிசர்>கோசர். இவரும் முகத்தில் மஞ்சள் பூசித் தம் இனக்குழு அடையாளத்தைக் காட்டியிருக்கலாம். சோழருக்கும், இவருக்கும் வேறுபாடு காட்ட இன்னுமோர் தனித்த அடையாளம் அணிந்திருக்கலாம். கொழுந்து என்ற சொல் தமிழில் பொன்னிறத் தளிரைக் குறிக்கும். கொழுந்து மணல் என்பதும் ஒளிரும் மணலைக் குறிக்கும். கொழுது (gold) நிறத் தவசம் கொழுதுமை என்றே முதலிற் சொல்லப்பட்டுப் பின் கோதுமை ஆயிற்று. கோதுமை என்ற சொல்லிற்கு வடமொழியிற் சொற்பிறப்பு கிடையாது. மஞ்சள் நிறத்தைச் சிறப்பாய்க் குறிக்கும் இன்றையத் துளுநாட்டுப் பெருந் துறைமுகம் மங்கலூர் அதே போலக் கொல்லூர் (மூகாம்பிகை) என்ற சொல்லும் கோசரின் மஞ்சள் நிறத் தொடர்பை நமக்கு ஆழத் தெரிவிக்கிறது.

அய்யை>அஞ்ஞை>அன்னை என்ற திரிவில் தலைவி இங்கு குறிப்பிடப் படுகிறாள். ய்>ஞ்>ன் என்னுந் திரிவை பேரா. அருளி பெரிதும் சான்று காட்டி நிறுவியிருக்கிறார். மகளை அன்பின் பேரில் ”அம்மா” என்று அழைப்பது இன்றைக்கும் தமிழரிடம் உள்ள பழக்கம்.

இலுப்பைப்பூ சக்கரைச் சுவை கொண்ட ஒரு பொருள். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை” என்பது பழமொழி. இலுப்பைப்பூவைச் சாப்பிட்டுத் தம் வயிற்றினுள்ளே நொதித்து (ferment) எழுந்த வெறியத்தின் (alcohol) விளைவால் உன்மத்தம் பிடித்து மரக்கிளைகளை முறித்துக் கரடிக் கூட்டம் எறியும் என்பது சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. கரடியின் வயிற்றிற்குள் சேரும் இலுப்பைப் பூ, அதன் இரப்பையில் நொதித்து, கரடியைக் கள்ளுண்டது போல் நடந்து கொள்ள வைக்குமாம் இலுப்பை பற்றிய பல செய்திகளை, என்னுடைய ”கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5” என்னும் இடுகையில் (http://valavu.blogspot.com/2009/03/5_29.html) விவரித்துச் சொல்லியுள்ளேன்.

கொன்றைப் பழக் குலையைப் பற்றிய செய்தியும் சங்கநூல்களில் பெரிதும் வருவது. கொன்றையந் தீங்குழல் இந்தக் கொன்றைக்குழலில் தொடங்கியதோர் இசைக்கருவி. குடுமி மஞ்சளாகிப் பழுத்துக் கனிந்த பாகலைத் தின்ற மகிழ்ச்சியில் தோகைவிரித்து ஆடும் மயில் காட்சி எண்ணி உவகை கொள்ளத்தக்க விவரிப்பு. பாட்டில் வரும் தோகைக்கா என்ற ஊர்தான் தோகக்கா> ஜோகக் கா என்றாகி ஜோக் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் என்று ஔவை துரைசாமிப் பிள்ளை சொல்லுவார்.

இன்றைக்கும் துளுநாடு அழகான நாடு. பொதுவாகத் துளுவநாட்டார் சற்றே வெளுத்துச் சிவந்த மேனியர். துளுநாட்டுப் பெண்ணழகு இன்றும் விதந்து சொல்லப் படுவது. செம்மற் கோசர் என்ற சொற்றொடர் இங்கு அதை உணர்த்துகிறது.

நன்னன் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைப் பின்னால் ஒருங்கு சேர்த்துப் பார்ப்போம். இப்போதைக்குப் பாட்டையும், தெளிவுரையையும் மீண்டும் படித்து இன்புறுவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, January 06, 2010

மாமூலனார் - 1

சங்கப் பாடல்களில் மாமூலனார் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. எந்தப் புறப்பாட்டையும் அவர் எழுதியதில்லை. அவர் எழுதியதெல்லாம் அகப்பாட்டே. அகநானூற்றில் 27 பாடலும், குறுந்தொகையில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும் ஆக முப்பது பாடல்கள் அவர் இயற்றியிருக்கிறார். நற்றிணையில் வரும் 75 ஆம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்துமே பாலைத்திணையைச் சேர்ந்தவையாகும் பிரிவின் நிமித்தம் எழுந்த இந்தப் பாடல்களில் போகும் வழிகள், மோதல்கள், சூடு, போராட்டங்கள், காட்டின் வன்மை, செல்வம் ஈட்டுவதில் உள்ள சரவல், இவை யெல்லாமே சொல்லப்படும். பாலைத்திணைப் பாடல்கள் வரலாற்றுக் குறிப்புக்களைக் கொட்டித்தர வாய்ப்புள்ளவை. அத்தகைய வரலாற்றுக் குறிப்புக்களை உள்நுழைத்துப் பாவியற்றுவதில் மாமூலனாருக்கு ஆழ்ந்த புலமை இருந்திருக்க வேண்டும்.

சிலம்பின் காலம் பற்றிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நான் அதன் தொடர்ச்சியாய் மாமூலனார் பாடல்களை இப்பொழுது படித்து வருகிறேன். அதன் விளைவால், அந்தப் பாடல்களுக்குப் பொருளும், ஆங்காங்கே வரலாற்றுக் குறிப்புக்களும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இங்கே அகநானூற்று முதற்பாடலில் இருந்து தொடங்குகிறேன். தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

’வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல்போல் பிரியலம்’ என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ? தோழி! சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழ, சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் - நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்
நிழல்தேய்ந்து உலறிய மரத்த; அறைகாய்பு
அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய
சுரம் புல்லென்று ஆற்ற; அலங்குசினை
நார் இல் முருங்கை நவிரல் வரன் பூச்
சூரல் அம் கடுவளி எடுப்ப, ஆரூற்று
உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல்போல் தோன்றல - காடு இறந்தோரே?

- அகம் 1 . மாமூலனார்
- திணை: பாலை
- துறை: பிரிவிடை ஆற்றாமை, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

நிலத்தைப் பிளப்பதாய்ச் சுட்டெரிக்கும் கதிர்;

பச்சை அழிந்து பரவிக் கிடக்கும் பெருவெளிகள்;

தம் நிழல்கள் தேய, உலர்ந்து போன மரங்கள்;

கற் குழிவுகள் நீரற்றுக்
காய்ந்த சுனையில் திணைநெல் விழுந்து
சட்டெனப் பொரியும் வெம்மை;

கொடையாளர் இன்மையால், செல்வம் கவருவோர்;

தொழில் துறந்து சோம்பியோர்
அண்டிப் பிழைக்கும் பொல்லாச் சுரம்;

உடைந்த நீரலை நுரைப்பின் பிதிர்வைப் போலக்
காற்றிற் குலையும் பூச்சூரலை
வாரித் தெறிக்கும்
நாரில்லா முருங்கைக் கிளைகள்;

கடலின் கரையாய்ப் பொலிவின்றித் தோற்றும்
வெட்டவெளிக் காடு

இத்தகைய வழியில்,

பக்கத்து நாட்டு பொற் செல்வத்தை
என்னிடம் கொணர்ந்து தருவார் போல,

மூங்கில் மருளும் என் பெருந்தோளை நெகிழவிட்டு
இவர் போனாரே,
ஏன் தோழி?

வண்டுகள் மொய்க்கும் கண்ணியையும்,
ஒண்கழலையும்,
அணிந்து வந்த குதிரை மழவரை,

முருகனின் பெயரால் போர்செய்து ஓட்டிய
வேளாவிக் குடியினரின் பொதினியில்,

கொம்பொடிந்த யானைகள் உலவும் இடத்தில்,

சிறு காரோடனின்
அரக்கொடு சேர்த்திய சாணைக்கல் போலப் பிரிய மாட்டேம் ,
என்று சொன்ன சொல்லை அவர் மறந்தாரோ?

மேலே, காரோடன் என்பவன்: வாளுக்குச் சாணை பிடிக்கிறவன். சாணைக்கல்லோடு, அரக்கைத் தேய்த்தால், நிலை மின்சாரம் (static electricity) கூடிப் பொறி தெறிக்கும். அரக்கில் நொகை மின்சாரமும் (negative charges), சாணைக்கல்லில் பொதி மின்சாரமும் (positive charges) கூடும். பின்னால் சாணைக்கல்லில் வாளின் தோலுறையை வைத்துத் தேய்த்து பொதிமின்சாரத்தை இறக்கவில்லையேல் மின்சாரம் கைக்கும் ஏறி பெரும் அதிர்வுத் தொல்லைக்கு ஆளாகலாம். ”நிலை மின்சாரம் விளைவிக்கும் சாணைக்கல்லையும், அரக்கையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அது போலப் பிரிய மாட்டேம் என்று சொன்னாரே, தோழி?” என்று தலைமகள் தோழிக்குச் சொல்கிறாள்.

நிலைமின்சாரத்தை வருவிக்கும் இரு பொருள்களை காதலருக்கு உவமை சொல்லிய அழகு, வேறு எங்கிலும் காணாததாகும். கூர்ந்த அறிவியல் அவதானிப்பு அன்றைக்கு இருந்திருப்பதும், அதை மாமூலனார் பதிவு செய்திருப்பதும், எண்ணி உவகை கொள்ளத் தக்கவை.

வரலாற்றுக் குறிப்பு.

பொதினி என்பது இன்றையப் பழனியைக் குறிப்பது. இங்கே ஆவியர் நாட்டை அது குறிக்கிறது. பொதினியின் அடிவாரத்தில் இருப்பது ஆவினன் குடியாகும். [நாம் எல்லோரும் ஆவிநன் குடியில் இருக்கும் பேருந்து நிலையத்திற்குத் தான் போய்ச்சேருகிறோம்.] வேளாவிக் கோமான் மகள் பதுமன் தேவியை முதல் மனைவியாக வானவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்றான். அவள் வழி சேரலாதனுக்கு இரு மக்கள். முதல்வன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இன்னொருவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். சேரலாதனின் இன்னொரு மனைவி (ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை) வழிப் பிறந்த செங்குட்டுவன் இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட மாற்றாந்தாய்ப் புதல்வன். இளங்கோ என்றவரின் வரலாற்றுக் குறிப்பு எங்குமே கிடைக்கவில்லை. [வரந்தரு காதை பெரும்பாலும் இடைச்செருகலாய் இருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். இதைப் பற்றி விரிவாகச் சிலம்பின் காலம் என்னும் என் கட்டுரையிற் பேசியிருக்கிறேன். இளங்கோ செங்குட்டுவனின் தம்பி என்ற செய்தியை உரையாசிரியர்கள் வழியே மட்டுமே அறிகிறோம்.]

ஆவியர் நாட்டுப் பொதினிக்கு அருகில் இருந்தது கொங்குநாடு. அதே இங்கு சேய்நாடு என்ற சொல்லாற் குறிப்பிடப் படுகிறது. கொங்குக் கரூருக்கு அருகில் உள்ள கொடுமணத்தில் செல்வங் கொள்ளத் தலைவன் போயிருக்கும் கதை இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது போலும். கொங்குநாடு, குறிப்பாகக் கொடுமணத்திற்கு அருகில் செல்வங் கொழித்தது இன்றையத் தொல்லியற் சான்றுகளால் உணரப்படுகிறது. இந்தக் குறிப்பைப் பின்னால் விரித்துச் சொல்லுவேன்.

அன்புடன்,
இராம.கி.

Friday, January 01, 2010

ஆலிச் சறுக்கும் (skiing), ஆலிக் கதழும் (skating)

அண்மையில் நண்பர் ஒருவர் தனிமடலில் skiing, skating பற்றிய சில சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் சொல்லுமாறு கேட்டிருந்தார். அவருக்கு மட்டுமன்றிப் பலருக்கும் பயனுறும் என்றெண்ணி என் வலைப்பதிவில் இடுகிறேன். முதலில் skiing, skating பற்றிய சொற்களுக்குள் சட்டென்று போகாமல், இவ்வாட்டங்கள் பழகும் குளிர்ச்சொற்கள் சிலவற்றை முதலிற் பார்ப்பது நல்லது. http://valavu.blogspot.com/2009/09/blog-post.html என்ற என் முந்தைய இடுகையில் குளிர்ச்சொற்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.

வெறுமே வெப்பஞ்சார்ந்த தமிழக, ஈழச் சூழலாக மட்டும் அமையாது, உலகம் முழுதும் தமிழர் இன்று பரவிய காரணத்தால், உலகமே அவர்புலமாக மாறிய நிலையில், தமிழரின் பழஞ்சொற்களின் ஆழம் பார்த்து உணர்ந்து, வேர்களை அடையாளங் கண்டு, அவற்றின் பொருட்பாடுகளைப் புதுக்கித் துல்லியம் காணவேண்டிய காலம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுப் பழக்கம் வைத்துப் பனி. குளிர், நளி, அளி, தண் என்ற முன்னொட்டுகளைச் சேர்த்து குளிர்நிகழ்வுகளையும், ஆட்டங்களையும், கேளிக்கைகளையும், இன்ன பிறவற்றையும் குறிப்பதில் ஒப்பேற்றிவிடலாம் என்று நம்மிற் பலரும் எண்ணிக் கொள்கிறோம். அது பெருந்தவறு. இப் புதுப்புலனத்திலும் சொல் துல்லியம் காட்ட வேண்டியது முகனத் தேவையாகும். தமிழ்மொழி இதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மையதே.

இவ்வகையில், ice, snow என்ற 2 விதயங்களுக்குமே ’பனியை’ப் பயன்படுத்தி, வேண்டுமெனில் பனியோடு துகள்சேர்த்து snow விற்கு ஈடாகப் பயன்படுத்தும் அண்மைக் கால வழக்கம் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். முந்நாள் தமிழர் ice ஐ உணராதவரில்லை. வானத்திலிருந்து சில பொழுதுகளில் ஆலங்கட்டி மழை பொழிவதை நம் நூல்கள் நுவன்றுள்ளன. ஆலி, ice-யைக் குறிக்கச் சங்கநூலில் பயனுற்ற சொல்தான். {வானத்திலிருந்து பெய்யும் பனிக் கட்டியை ஆலம், ஆலங்கட்டி போன்றவை உணர்த்தின.] இன்றோ dew, ice போன்றவற்றிற்கு வேறுபாடு காட்டத்தெரியாது எல்லாவற்றிற்கும் பனியை வைத்துச் சுற்றிக் கிளித்தட்டு ஆடிக் கொண்டுள்ளோம்.

மார்கழி இரவில் பனி பெய்கிறதெனில் வெளியே dew பெருகிக் கிடக்கிறது என்றே பொருள். snow பெய்கிறதென்று பொருளில்லை. ஆனாலும் ஒரு சிலர் வலிந்து அப்படிப் பொருள் கொள்ள முயலுகிறார். snow, ice, freeze, frost, frigid எனப்பல சொற்களுக்கும் முன் இடுகையில் உரிய இணைச்சொற்களைப் பரிந்துரைத்துள்ளேன்.

snow = சிந்து
ice = ஆலி
freeze = உறைதல்
frost = உறைபனி
frigid = உறைந்த

வேண்டிய உகப்பில் இவற்றைப் பயன்படுத்துவது நல்லது. அதேபொழுது, பனி, குளிர், நளிர், அளி, தண் போன்றவற்றை ஒதுக்க வேண்டியதில்லை. அவற்றைப் பல இடங்களில் துணைச் சொற்களாய்ப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்துவது குளிரின் புரிதலுக்கு வழிவகுக்கும்.

இவ்வடிப்படையில் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட 2  பொதுச்சொற்களை விளங்கிக் கொள்வோம். ஒன்று skiing, மற்றொன்று skating. முதலிலுள்ளது வெவ்வேறு மட்டங்களிலுள்ள நிலங்களில் மேலிருந்து கீழுக்குச் சறுக்குவதாகும். சறுக்குவது என்பது ஒரு பொதுவினை. அது ஆலியிலும் இருக்கலாம்; சிந்திலும் (snow) இருக்கலாம்; வழவழப்பான சாய்பரப்பிலும் ஏற்படலாம். எல்லாச் சறுக்கலிலும் நின்றுகொண்டே செய்கிறோமென்று பொருளில்லை. உடம்பை விதவிதமாய் நிறுத்தி, அன்றி இருத்திச் சறுக்கலாம். சறுக்கலோடு தொடர்புடைய இன்னொரு வினை சரிதல் (slide) ஆகும்.

1885 (there is an isolated instance from 1755), from Norw. ski, related to O.N. skið "snowshoe," lit. "stick of wood," cognate with O.E. scid "stick of wood," obs. Eng. shide; O.H.G. skit, Ger. Scheit "log," from P.Gmc. *skid-"to divide, split," from PIE base *skei- "to cut, split" (see shed (v.)). The verb is 1893, from the noun. ski-jumper is from 1894; ski bum fஅirst attested 1960.

ஆலியிற் சறுக்கல் என்பது இரோப்பாவில் எழுந்த பழக்கம். பின் உலகின் பல்வேறு இடங்களுக்கும் அது பரவியது. ஆண்டாண்டு தோறும் அங்கு சிந்து பெய்வதும், [இந்தியத் துணைக்கண்டத்திலும் சிந்து பெய்து அதன் வழி பெருகிய ஆறு சிந்தாறு (பனியாறு) என்றே நம் வடதமிழ் முன்னவரால் குறிப்பிடப்பட்டது.] பெய்த சிந்து நாட்பட நாட்பட ஆலியாய் மாறுவதும், அதில் விதவிதமாய்ச் சறுக்கிக் கேளித்திருப்பதும் இரோப்பியருக்குப் பழக்கமான காரணத்தால், ஆலிச்சறுக்கு என்ற சொல் அவரிடையே எழுந்தது.,

அதே பொழுது skating என்பது செம்புல நிலத்தில் (i.e. level ground; and not red earth ground. பெயர்பெற்ற குறுந்தொகைப் பாடல் ஒன்றில் செம்புலப் பெயல்நீர் என்பதற்குப் பலரும் சமநிலத்தில் பெய்தநீர் என்று பொருள் கொள்ளாமல், ”சிவப்பு நிலத்தில் பெய்த நீர்” என்று உரைகாரர் காலத்திலிருந்து தவறாகப் பொருள் கொள்வது இவ்விடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. திண்ணை வலையிதழில் இது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.), சிந்து பெய்து அதை மட்டப்படுத்திப் பின் உறைந்து ஆலியாயிறுகிக் கட்டியாயான புலத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க் காற்புதையத்தில் (boots) ஒரு கூர்ந்த கத்தியைப் பொறுத்தி அந்த ஆலித்தளத்தைக் கீறி சர்சர்.... என விரைந்து அங்குமிங்கும் கதிக்கின்ற (கடிகின்ற), கதவுகின்ற (கடவுகின்ற), கதழுகின்ற செயலுக்கு skating என்று பெயர். இங்கு நடப்பது சறுக்கல்ல, கத்தியாற் கீறி விரையும் இயக்கம். இதைச் செய்ய ஒரு தனித்திறமை வேண்டும். விரைவோடு, உடல் கீழே விழுந்து விடாது கட்டுக்குள் நிறுத்தி வைக்கும் இலாவகமும் வேண்டும்.

"ice skate or roller skate," 1662, skeates "ice skates" (the custom was brought to England after the Restoration by exiled followers of Charles II had taken refuge in Holland), from Du. schaats (singular, mistaken in Eng. as plural), from M.Du. schaetse, from O.N.Fr. escache "a stilt, trestle," from O.Fr. eschace "stilt" (Fr. échasse), from Frank. *skakkja "stilt" (cf. Fris. skatja "stilt"), perhaps lit. "thing that shakes or moves fast" and related to root of O.E. sceacan "to vibrate" (see shake). Or perhaps the Du. word is connected to M.L.G. schenke, O.E. scvelocity anca "leg" (see shank). Sense alteration in Du. from "stilt" to "skate" is not clearly traced. The verb is attested from 1696; U.S. slang sense of "to get away with something" is attested from 1945.

”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம், உரியியல், 798ஆம் நூற்பா. கதித்தல் என்பதும் விரைதலே. 1960 களில் ஒரு சில பொறியியற் கல்லூரிகளில், குறிப்பாகக் கோவையிலும், சென்னையிலும் பொறியியற் கல்லூரி ஆண்டு மலர்களில் கதி என்ற சொல் velocity இக்கு இணையாகப் புழங்கத் தொடங்கியது. [வேகம், திசையைக் குறிக்காத அளவை (scalar) speed யைக் குறித்தது.]. கதழ்வு எனும் பெயர்ச் சொல்லும், கதழுதல் எனும் வினைச்சொல்லும் புதுக்கப் படலாம்.

இனி நண்பர் கொடுத்த ஆங்கிலச் சொல்வரிசைக்கு என் பரிந்துரைகள்:

1 Alpine skiing = ஆல்பைன் ஆலிச்சறுக்கு
2 Biathlon (Cross-country skiing & rifle shooting) = இரட்டைப் பந்தயம்
(குறுக்குவெளி ஆலிச்சறுக்கும், துவக்குச் சுடுதலும்)
3 Bobsleigh = குறுஞ்சரினை (பறக்கின்ற ஊர்தியை பறனையென நண்பர் அட்லாண்டா சந்திரசேகரன் ஆக்கியது போல், சரிதலை ஒட்டிச் சரினை
என்ற சொல் பரிந்துரைக்கிறேன்.)
4 Cross-country skiing = குறுக்குவெளி ஆலிச்சறுக்கு
5 Curling = சிந்துச்சுருளல்
6 Figure skating = ஒயிலாட்டக் கதழ்
7 Freestyle skiing = பரிஒயில் ஆலிச்சறுக்கு
8 Luge = தட்டுச் சறுக்கு
9 Nordic combined (ski jumping & cross country skiing) = வடபுலக் கூட்டுப்
பந்தயம் (ஆலிச்சறுக்குத் தாவலும், குறுக்குவெளி ஆலிச்சறுக்கும்)
10 Short track speed skating = குறுந்தட விரை கதழ்.
11 skating = கதழ்வு
12 Skeleton = பற்றுத்தட்டுச்சறுக்கு
13 Ski jumping = ஆலிச்சறுக்குத் தாவல்
14 Skiing = ஆலிச்சறுக்கு
15 Snowboarding = பலகையாற் சிந்துச்சறுக்கு.
16 speed skating = விரை கதழ்

அன்புடன்,
இராம.கி.

Tuesday, December 01, 2009

ஈழத்திற்கான உருப்படியான போராட்டம்

கீழே உள்ள சுட்டியில் குறிப்பிடப்படும் போராட்டத்தைப் பற்றிப் படியுங்கள். இது ஓர் உருப்படியான போராட்டம். சிங்களனின் தலையில் சம்மட்டியாய் இறங்கக் கூடிய போராட்டம்.

http://www.tamilwin.com/view.php?22SWnf200jj0U2eeGG773bb99EM4dd22h3cccppY3d44QQH3b02VLI3e

இதைப் பல்வேறு மடற்குழுக்களிலும், வலைப்பதிவுகளிலும் நம்மைப் போன்ற தமிழர்கள் எடுத்துக் காட்டி, உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளிலும் இதைப் போன்ற போராட்டத்தை நடக்க வைத்து (அதற்கு முன் அங்கு இலங்கைப் பொருள்கள் எப்படி விற்கப் படுகின்றன, எங்கு விற்கப் படுகின்றன, நடைமுறை எது என்று ஆழ ஆய்வு செய்ய வேண்டும்.) இலங்கையின் பொருளியலில் பாதிப்பு ஏற்படுத்தினால் தான் சிங்கள அரசின் போக்கு சற்றாவது மாறும்.

என்னருமைத் தமிழர்களே! இந்தப் பரப்புரையில் எல்லோரும் ஈடுபடுவோம். வெறுமே அழுது புலம்பி நமக்குள்ளே உணர்ச்சி வயப்பட்டுக் கொண்டு இருக்காமல், இந்தப் பரப்புரையைச் செய்வோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, November 27, 2009

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

இந்த நாளில் தமிழர் எல்லோரும் நினைவு கொள்ளுவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, November 11, 2009

தமிங்கிலம் - எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?

நண்பர் சிங்கைப் பழனி தமிழுலகம் மடற்குழுவில் ஒரு மடல் அனுப்பியிருந்தார். அவருக்கான மறுமொழி இது. இங்கும் அதைப் பதிந்து வைக்கிறேன்.

----------------------

அன்பிற்குரிய பழனி,

ஆனந்த விகடனில் அண்மையில் (11/11/09) அன்று வெளியான

"ஹாய் வாசகர்களே! 64-65ம் பக்கங்களில் "ஜோக் ஆர்மி" ஓவியத்தில் எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் AVJ என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்யுங்கள். தொடர்ந்து அந்த ஜோக்கைப் பற்றி ஒரு வரி நச் கமென்ட் சேர்த்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். சரியான விடை ப்ளஸ் பளிச் கமென்டுடன் வந்து விழும் 10 எஸ்எம்எஸ் களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 8.1.109அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்எம்எஸ்கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போ 64-65ம் பக்கங்களில் ஜோக் ஆர்மிக்கு ணிவகுப்போமா? ஜோக்குகளில் எண்ணிக்கை குறித்து ஓவியரின் தீர்ப்பே இறுதியானது! எஸ்எம்எஸ் கட்டணங்களுக்கு உட்பட்டது! கடந்த வார ஜோக் பார்க் போட்டி முடிவுகள் 11ம் பக்கத்தில்! ஆல் நியூ விகடனைப் பற்றிய கருத்துக்களை உங்கள் குரலிலேயே பதிவு செய்ய 044-42890004 எதிர்முனையில் பதில் குரலை எதிர்பாராமல் தாங்கள் கூற விரும்புவதை நீங்களாகவே பதிவு செய்து விடுங்கள்!”

என்று தமிங்கிலம் பழகிய ஓர் உள்ளடக்கம் பற்றித் தட்டச்சி அனுப்பி, “இப்படித் தமிழை கொலை செய்கிறார்களே? செம்மொழி மாநாடெல்லாம் கொண்டாடும் காலத்தில் இப்படியா?” என்று அங்கலாய்த்தோடு இல்லாமல், “ஆட்சியில் இருப்பவர்கள் இதனைப் பற்றிச் சிந்தித்து ஆவன செய்யலாம் அல்லவா?” என்றும் கேட்டிருந்தீர்கள்.

நண்பரே! நோயைக் கண்டுகொள்ளாது, நோய்க் குறிகளையே நொந்து கொண்டிருந்தால் எப்படி? இதன் தொடக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சிமொழி, பயிற்று மொழி, கல்விக் கொள்கை நீர்த்துப் போனதில் இருக்கிறது. கொஞ்சம் அந்தக் காலத்திற்குப் போய்த் தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை வரலாற்றைப் பார்த்தால் தான் விளங்கும்.

1963-64 க்கு முன் நாங்கள் எல்லோரும் தமிழ்நாட்டிற் பள்ளியிற் படிக்கும் போது, 100க்குத் 98/99பேர் தமிழிலேயே படித்தோம். அன்று இருந்த மடிக்குழைப் பள்ளிகளின் (matriculation schools) எண்ணிக்கை 13/14 - க்கும் குறைவே. அதோடு அவை சென்னை நகரில் மட்டுமே இருந்தன. தமிழ்நாடெங்கணும் பரவவில்லை. கூடவே ஓரிரு ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகளும், நாலைந்து நடுவண் வாரியப் (central board) பள்ளிகளும் இருந்தன. மிச்சம் இருந்த பள்ளிகள் எல்லாம் தமிழ்வழியே பாடம் கற்பிக்கும் மாநில வாரியப் (state board) பள்ளிகளாகவே இருந்தன.

அன்றைக்கு இருந்த நிலையில் ”பள்ளிப் படிப்பு தமிழ் வழியா?” என்ற கேள்வியே எழவில்லை; ”கல்லூரிகளில் தமிழ் வழி சொல்லிக் கொடுப்பது எப்படி?” என்றுதான் அரசினரும், ஆர்வலரும், மற்றோரும் முனைந்து கொண்டிருந்தார்கள். கல்லூரிகளுக்கான பாடங்களைத் தமிழ்வழி சொல்லித்தரும் பொத்தகங்களும் விரைவாக எழுதப் பட்டு வந்தன. அன்றையப் பேராயக் கட்சி அரசு இந்தக் கொள்கையில் உறுதியாகப் பாடுபட்டு வந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதை ஏற்றே இருந்தது.

இந்தக் கொள்கைக்கு உலைவந்தது இன்றைக்குப் பெருத்துக் கிடக்கும் திராவிடக் கட்சிகளால் தான். ஒருபக்கம் “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்று வெற்று முழக்கம் செய்துகொண்டே இன்னொரு பக்கம் தமிழுக்கு உலை வைப்பதற்கு இவர்களே காரணமானார்கள். [இதில் பேராயக் கட்சியைக் குறை சொல்லமுடியாது.] வரலாற்றை ஒழுங்காய்ப் பார்ப்போம்.

1965 இல் நடுவண் அரசில் முட்டாள் தனமான போக்கால், இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தை வன்மையாகத் தடுத்து நிறுத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம் அடிதடி, துப்பாக்கிச் சூடு, என்று கையாளப் போக, அதன் விளைவால் பல உயிர்களும் போராட்டத்தாற் குலைந்து தொலைந்து போக, மக்களுக்கு பேராயக் கட்சி மேல் ஒருவித வெறுப்பு வந்துற்றது. [அதைக் காட்டிலும் பெரும் தவற்றை இன்றையப் பேராயக் கட்சி ஈழத்து இனப்படுகொலையில் செய்திருக்கிறது ஆனாலும் தமிழக மக்கள் பேராயக் கட்சி மேல் அவ்வளவு வெறுப்பைக் காட்டக் காணோம் என்றால், நிலை எப்படி மாறியிருக்கிறது, எந்த அளவு கண்கட்டப் பட்டிருக்கிறது என்று பாருங்கள். எப்படியோ அது வேறு கதை.]

அதன் விளைவாக, அடுத்து வந்த 1967 தேர்தலில் பேராயம் முற்றிலும் தோற்றுப் போனது. தி.மு.க. அரசு மேலெழுந்தது. தமிழரில் மிகுதியானவருக்கு அப்போது மிகுந்த மகிழ்ச்சி. ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்களும் குதுகலங்களும் விரவிக் கிடந்த காலம் அது. இந்தத் தேனிலவு 3,4 ஆண்டுகளுக்கு நீடித்தது. கொஞ்சங் கொஞ்சமாக அரசு தரும் ஊழல் வாய்ப்புக்களைப் பார்த்த கழகத்தாரின் கொள்கைகள் நீர்த்துப் போகத் தொடங்கின. ”திராவிடமா? வீசை என்ன விலை? ” என்று கேட்கத் தொடங்கினர். பேராயக் கட்சி அரசில் நூறும், ஆயிரமாக இருந்த ஊழல்கள் கழக அரசில் ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரமாகப் பெருகத் தொடங்கின.

பின்னால் அண்ணா மறைந்தார், கலைஞர் முதல்வரானார், கலைஞருக்கும் ம.கோ.இரா.விற்கும் இடையே இருந்த முரண்பாடு/சண்டை பெரிதாக முற்றியது; அ.தி.மு.க. எழுந்தது. அடுத்த தேர்தலில் தி.மு.க. தோற்றது. அ.தி.மு.க. அரசு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பங்காளிச் சண்டை என்பது எல்லாத் தளங்களிலும் பெரிதும் முற்றியது. தமிழகம் சீரழிந்தது இந்தப் பங்காளிச் சண்டை, போட்டிகளால் தான்.

கொள்கைகள் சரமாரியாகத் தூக்கிவாரி வீசப் பட்டன. எப்படிச் சம்பாரிப்பது, யார் சம்பாரிப்பது என்ற கேள்வியே இவர்களுக்கிடையில் பெரிதாகிப் போனது. அங்கொன்றும் இங்கொன்றுமாய், ஆசிரியர் மாற்றங்களால் கல்வித் துறையில் சம்பாரித்துக் கொண்டிருந்தவர்கள், புதியதொரு ஊழலுக்கு அணியமானார்கள். ஏனெனில் ஒரு பெரிய தேவை ஒன்று அன்று பூதகரமாய்த் தோன்றத் தொடங்கியது.

கண்டமேனிக்கு நடந்த ஆசிரியர் மாற்றங்களால், அரசுப் பள்ளிகளில் ஒழுங்கான ஆசிரியர்கள் எங்கும் நிலைக்கவில்லை. எங்குமே ஒரு நிலையாமை நின்று நிலவியது. கல்வித் தரம் சிறிது சிறிதாய்க் குறையத் தொடங்கியது. ”தம் பிள்ளைகளின் கல்வி கெட்டுப் போகிறதே?” என்று தவித்த பெற்றோர்கள், இந்த நிலையாமைச் சரிசெய்ய வழி தெரியாமல், நகரங்களில் இருந்த குறிப்பிட்ட ஒரு சில கிறித்துவப் பள்ளிகளை நாடி ஓடி, அவற்றில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முயன்றார்கள். (குறிப்பாகச் சேசுசபைப் பள்ளிகள், பேர்பெற்ற மறுப்பாளர் (protestant) நெறியைச் சேர்ந்த தென்னிந்தியத் திருச்சபை பள்ளிகள்.) அன்றைக்கு அந்தப் பள்ளிகளுக்கெல்லாம் நல்ல பெயர் இருந்தது.

விழுந்தடித்துக் கொண்டு பிள்ளைகளைச் சேர்த்த காரணத்தால், அந்தப் பள்ளிகளில் இடம் கிடைப்பது பலருக்கும் குதிரைக் கொம்பாய் இருந்தது. இந்தப் பள்ளிகளும் தாம் எவ்வளவு பிள்ளைகளைச் சேர்க்கமுடியும், சொல்லுங்கள்? அன்றைக்கு இருந்த கிறித்து சபை நிர்வாகங்கள் கல்வியின் மூலம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் அல்லர். தொண்டே பெரிதென்று இருந்த காலம் அது.

இந்தப் பொழுதில் தான் பல்வேறு கிறித்துவப் பள்ளிகளில் இருந்த “தமிழல்லாத பாடங்களுக்கு ஆசிரியராய் இருந்தவர்கள்”, தாங்கள் ஓய்வு பெற்ற போது, ”நாம் ஏன் புதுப் பள்ளிகளைத் தொடங்கக் கூடாது? இந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடாது? ” என்று எண்ணத் தொடங்கினார்கள். வெறுமே வாடகைக்கு ஓர் இடத்தை எடுத்துக் கொண்டு, அரசில் தமக்குத் தெரிந்த கல்வியதிகாரிகள் மூலம் அனுமதி பெற்றுக் கொண்டு, இதே கிறித்துவப் பள்ளிகளில் இருந்த 4,5 ஆசிரியர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுப்பதாய்ச் சொல்லி அவர்களை அங்கிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து, ஒரு தோற்றத்தை உருவாக்கி ”பேர்பெற்ற கிறித்துவப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தது போலும் தாங்களும் சொல்லிக் கொடுப்போம்” என்று முழங்கி அன்றைக்கு இருந்த தேவையைத் (demand) தங்கள் பக்கம் மடை மாற்றினார்கள். கூடவே கட்டணங்களையும் உயர்த்தினார்கள். விரைவில் கல்வி ஒரு பொதினமாகிப் (business) ஆகிப் போனது.

பிள்ளைகளின் எதிர்காலம் என்ற கானல் நீரை நாடி ஓடும் நடுத்தர வருக்கம் அந்தக் கட்டணங்களைக் கட்ட அணியமாகியது. ”வேறெங்கோ தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்வோம். நம் பிள்ளைகள் நல்ல படிப்புப் பெறுவது முகன்மை” என்ற உணர்வு தான் அவர்களை உந்தியது. கல்விக்கு ஆகும் செலவு மளமளவென்று உயரத் தொடங்கியது. அதுவரை மாதம் ரூ 10, 15 என்று பள்ளிக் கட்டணம் கட்டிய பெற்றோர் ரூ 100, 150 க்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. [பிற்காலங்களில் இதே செலவு ஆயிரம், பத்தாயிரம் உருவாக்கள் ஆகின. இப்பொழுதும் வெறும் முணுமுணுப்புத்தான். முதுகெலும்பு ஒடிய வேலை செய்து பள்ளிக்கூடம் நடத்துபவர்களுக்கு இவர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.]

தேவையை மீட்கும் முகமாகத் திடீர் என்று அளிப்புகள் (supply) வெள்ளமாய்ப் பெருகி முற்படும் நிலையில் பள்ளிகள் நடத்த அரசிடம் அனுமதி கேட்டு நிற்கும் வரிசையும் சட்டெனப் பெருத்துப் போனது. ”என்னய்யா இது கல்வித் துறையில் இப்படிக் கூட்டம் பெருகி வரிசை நீண்டு நிற்கிறதே?” என்று அரசியல் வாதிகள் வியப்பாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அதிகாரிகள் அவர்களோடு குசுகுசுத்தார்கள்; எள்ளென்றால் எண்ணெய் ஆவது தான் நம் அரசியல்வாதிகளுக்கு இயல்பாயிற்றே? “ஆகா, பணம் தேற்ற இப்படியொரு வழியா? இது காமதேனு அல்லவா?” என்று கூட்டுக் களவாணித்தனம் போட வாய்ப்புண்டாயிற்று.

13/14 என்ற பள்ளிகளின் எண்ணிக்கை நூறாயிற்று; இருநூறாயிற்று; கூடிக் கொண்டே வந்தது. சென்னையிலிருந்து, பெருநகரங்களுக்கும், அப்புறம் சிறு நகரங்களுக்கும், முடிவில் நாட்டுப் புறத்திற்கும் ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகின. அரசுகள் எப்படி மாறினாலும், கல்வித் துறையில் நடந்த கொள்ளை மட்டும் தொடர்ந்து கொண்டே வந்தது. இரண்டு கழகத்தாரும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் தாங்கள் கேட்கும் ஊழற்பணத்தைக் கூட்டிக் கொண்டே போய், இன்று கோடிகளிற் புரண்டு, 4200 மடிக்குழைப் பள்ளிகள் வரை ஆகியிருக்கிறது. இரு கட்சிகளும், மற்ற துணுக்குக் கட்சிகளும் தங்களுக்குள் என்ன சண்டை போட்டாலும், கல்வித் துறைக் கொள்ளையை மட்டும் கண்டுகொள்ளாமல் சமக்காளத்திற்கு அடியிற் போட்டபடியே நடந்து கொள்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளும் கப்சுப் கறார் தான். இன்று தனியார் பள்ளிகளை, கல்லூரிகளை நடத்துபவரில் பெரும்பாலோர் அரசியல்வாதிகளேயாவர். பொன்முட்டை இடுகின்ற வாத்தின் கழுத்தை இவர்கள் யாராவது நெறிப்பார்களோ?

இன்று மொத்தப் பள்ளிகளில் கிட்டத்த 50% க்கும் மேல் [சரியான விழுக்காடு எனக்குத் தெரியவில்லை. தேடவேண்டும்.] மடிக்குழைப் பள்ளிகள் தாம் இருக்கின்றன. ”எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்” என்பதே தமிழகக் கல்விக் கொள்கையின் தாரக மந்திரமாயிற்று. இதன் விளைவால், தமிழே அறியாத தற்குறிப் பட்டாளமாய் நம் இளையர் கூட்டம் உருவாகியிருக்கிறது. இந்தச் சுழலுக்குள் சிக்காத பெற்றோர் யாருமே இல்லை. இந்த விழுக்காடு இன்னும் 10 ஆண்டுகளில் 80/90% என்று ஆகிவிடும். மொத்தத்தில் தமிழே அறியாத, ஆங்கிலமும் ஒழுங்காய்ப் பேசத் தெரியாத, தமிங்கிலம் மட்டுமே தட்டுத் தடுமாறி அறிந்த, தலைமுறை ஒன்று உருவாகி நிற்கிறது. “தமிழ் சோறு போடுமா?” என்று இன்றைய இளைஞர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள். “சோறுபோடும்” என்று சொல்லுவதற்கு நம்மிடம் வக்கில்லை. எதிர்காலம் குலைந்து போனது.

அந்தக் காலக் கல்விக் கொள்கையைத் தூக்கிக் கடாசி எறிந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதே நிலை இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் இப்பொழுது உருவாகி வருகிறது. [அங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் கையரிக்காதா, என்ன?]

இந்தக் கல்விக் கொள்கையின் சீரழிவால் தமிழர் மறைந்து வருகிறார்; தமிங்கிலர் உருவாகிறார். அப்புறம் அவர்கள் படிக்கும் இதழ்நடை தமிங்கிலமாகத் தானே இருக்கும்? இதிலென்ன வியப்பு? எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நோவதேன்?

அரசியற் போராட்டத்தால் சாதிக்க வேண்டியதை, கெஞ்சி வேண்டுகோள் விடுத்துச் சாதிக்க முடியாது ஐயா! நாம் எல்லோரும் வாய்மூடிக் கிடப்பது இன்னும் எத்தனை நாளைக்கு?

கயவாளிகளை அரசாள வைத்த பின்னால், “செம்மொழி மாநாடு” என்று சொல்லிக் கொண்டு, தமிழுக்குப் பாடை கட்டத்தான் நம்மால் முடியும். தமிழே இல்லாது போன பின்பு, செம்மொழி என்று கூக்குரலிட்டுப் பாடை கட்டவும், சங்கூதவும், எரியூட்டவும் தானே வேலை மீந்து இருக்கிறது?

இந்த மடலை என் வலைப்பதிவிலும், தமிழ்மன்றம் மடற்குழுவிலும் வைக்கிறேன். அங்கும் படிப்பவர்கள் கருத்தால் ஒன்றுபடட்டும்.

வருத்தத்துடன்,
இராம.கி.

Thursday, October 15, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 10

பெருங்கோலை வரையறுப்பது வரை ஒன்றுபடும் தென்புல, வடபுல வாய்ப்பாடுக்கள் 1 கூப்பீட்டிற்குச் சமன்கொள்வதில் (500 கோல்களென, 500 பெருங்கோல்களென)த் தம்முள் மாறுபடுகின்றன. அதே பொழுது, காதம், யோசனை ஆகியவற்றை வரையறுப்பதில் மாறாதிருக்கின்றன. இவை போக, 1 கூப்பீட்டை 500 சிறுகோல்களுக்குச் சமனாக்கும் பட்டுமையை (possibility), குமரி - பஃறுளித் தொலைவை ஆய்ந்த போது, எடுத்துரைத்தேன். ”முதிய வாய்ப்பாடு” என்று சொல்லக் கூடிய இந்தப் பட்டுமையோடு, தென்புல, வடபுல வாய்ப்பாடுகளைச் சேர்த்து ”இந்திய வாய்ப்பாடுகள்” என்று சொல்லலாம். இந்த வாய்ப்பாடுகள் யாரோ ஒரு தேவனால், அன்றிக் கடவுளால், கொடுக்கப் பட்டவையல்ல. மாறாக, நீண்ட நாகரிகத்தில், ”செய்து பார்த்துத் தவறும் (trial and error)” முறையில் உருவாக்கப் பட்டவையாகும். இப்படி மூன்று வாய்ப்பாடுகள் இருந்தது கூட, நம் நாகரிகத்தின் பெரும்நீட்சியை உறுதிப் படுத்தும்.

அதே பொழுது, மேலையர் வாய்ப்பாடும், இந்திய வாய்ப்பாடுகளும், ஓராள் உயரத்தில் வேறுபடுகின்றன. மேலையருக்கு இது 6 அடி; இந்தியருக்கோ 5 1/2 அடி. புகழ்பெற்ற இந்தியக் கணிதர் ஆர்யபட்டா, இந்திய வாய்ப்பாடுகளில் இருந்தும் வேறுபட்டு, ஓராள் உயரத்தை 5 அடியாக்கி, நரன் என்று சொல்லி, [நரலுகிறவன் (= ஓசையிடுகிறவன்) நரன்.] விரற்கிடை, முழம், கோல், யோசனை என்னும் அளவைகளைத் தன் நூலான ஆர்யபட்டியத்தில் குறிப்பார். [சென்ற பகுதியில் தென்புல, வடபுல, மேலையர் வாய்ப்பாடுகளைப் பட்டியலிட்ட போது, நான் ஆர்யபட்டாவின் வாய்ப்பாட்டைக் குறிப்பிடவில்லை. அதைத் தெரிந்து கொள்வதால், இந்தியப் பழங்கணிதம், தொல்வானியல் (archeoastronomy) போன்றவற்றின் சில புதிரிகளைச் (problems) அலசுவது எளிதாகும்.]

ஓராள் உயரத்தில் வேறுபடும் ஆர்யபட்டாவின் வாய்ப்பாடு, வெளிப்பார்வைக்கு வடபுல வாய்ப்பாடு போலவே தோற்றமளிக்கிறது. இந்த வாய்ப்பாட்டாற் பெற்ற யோசனைத் தொலைவைக் கொண்டு ஆர்யபட்டா கணித்த புவியின் சுற்றளவும், இற்றை அறிவியல் கணித்த சுற்றளவும் வெறும் 0.52% வேறுபாட்டில் ஒன்றையொன்று நெருங்கி நிற்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். ஆர்யபட்டியத்தின் காலம் கி.பி.499 என்றே பலரும் சொல்கிறார்கள். இந்தப் பொழுதில் தான் தமிழகம் சேர்த்த இந்தியாவெங்கணும் வடபுல வாய்ப்பாடே பெரிதும் வழக்கில் ஊன்றியது. குறிப்பாகப் பல்லவர் ஆட்சி நம்மூரில் இதை வழக்கிற்குக் கொண்டுவந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் தென்புல வாய்ப்பாடு நம்மூர்ப் புழக்கத்திற் குறைந்து போயிற்று.

ஆர்யபட்டாவின் குறுந்தொலை வாய்ப்பாடு

1 விரற்கிடை = 10/16 அங்குலம்
24 விரற்கிடை = 1 முழம் = 1.1/4 அடி
4 முழம் = 1 கோல் (நரன்) = 5 அடி

ஆர்யபட்டாவின் நெடுந்தொலை வாய்ப்பாடு :

8000 கோல் = 1 யோசனை = 40000 அடி = 7.5757568 மைல் = 12.191665 கி.மீ

ஆர்யபட்டாவின் நூல், கடிகை (Gitika = ghatika = time, 13 நூற்பாக்கள் கொண்டது), கணிதம் (Ganika = Mathematics, 33 நூற்பாக்கள்) காலவினை (Kala-kriya = Movements measured through time, 25 நூற்பாக்கள்), கோளம் (Gola = Sphere, 50 நூற்பாக்கள்) என்னும் 4 பாடங்களைக் கொண்டது. [தமிழ்க் கடிகைக்கும், சங்கதக் கிடிகைக்கும் உள்ள பொருட் தொடர்பை அறிந்து கொள்வது நல்லது. நாளி>நாளிகை>நாழிகை என்பதைப் போலவே கிண்டி என்னுஞ் சொல்லும் தமிழில் துளைப்பொருள் நீட்சியில் கிண்டி> கெண்டி> கண்டி> கண்டிகை> கடிகை என்று அமைந்து, நீர்க்கடிகையையும், நேரத்தையும் உணர்த்தும். சங்கதத்தில் மூக்கொலி தவிர்த்து இது கிடிகை என்றும், கடிகை என்றும், அமையும். கெண்டி என்ற சொல் water containing vessel with a spout என்ற பொருளில் அமைவதை அகரமுதலிகளில் அறியலாம்.]

ஆர்யபட்டா தன்நூலின் முதற்பாடத்தில், ”புவிவிட்டம் 1050 யோசனை” என்று சொல்லி, மூன்றாவதான கணித பாடத்திற் சுற்றளவைக் கண்டுபிடிக்கக் 3.1416 எனும் கெழுவையும் (coefficient) கொடுத்திருப்பார். இந்தக் காலத்தில் இதைப் ”பை” என்று குறியிட்டு, மீதுர எண்ணாய்ச் (transcendental number) சொல்லுவோம். [இயலெண் (natural number), உள்ளக எண் (real number), வகுபடும் எண் (rational number), வகுபடா எண் (irrational number), அமைகண எண் (imaginary number), பலக்கெண் (complex number), போன்று, மீதுர எண்ணும் (transcendental number) ஒரு வகையாகும்.]

[துரந்தல் = கடந்து செல்லுதல்; மீதுரந்தல் = எல்லை கடந்து செல்லுதல். இயற்கணிதத்தில் (algebra) X^4+aX^3+bX^2+cX+d போன்றதொரு பலன வெளிப்பாட்டின் (polynomial expression)மதிப்பைக் கொடுத்து, உள்ளடங்கிய X வேறியின் (variable) விழுமத்தைக் (value) கண்டுபிடிக்கச் சொல்வார்கள். நாமும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை முறைகளோடு, வருக்க மூலத்தையும் (root extraction) பயன்படுத்தி, X - ஐ வெளிப்படுத்துவோம். அப்படியும் வெளிப்படுத்த இயலாதது, ”மீதுர எண்” என்று கணிதத்திற் சொல்லப்பெறும்.

A transcendental number is one that cannot be calculated by addition, subtraction, multiplication, division and square root extraction. It is also a number that cannot be expressed algebraically. transcend: c.1340, from L. transcendere "climb over or beyond, surmount," from trans- "beyond" + scandere "to climb" (see scan (v.)].

கொடுத்திருக்கும் விட்டத்தைக் கொண்டு, 3.1416 என்னும் கெழுவாற் பெருக்கி, 3298.68 யோசனை (= 24989.997 மைல் = 40216.402 கி.மீ) என்னும் புவிச் சுற்றளவைக் காணலாம். [3298.68 யோசனை = 39,968.0582 கி.மீ என்று பலரும் இக்கால ஆவணங்களிற் சொல்லுகிறார்கள். ஆனால் இவ்வொக்குமை எப்படிக் கிடைத்தது என்று எங்கு தேடியும் எனக்குப் புரியவில்லை. ஆர்யபட்டாவின் படி, 1 நரன் = ஓராள் உயரம் = 5 அடி என்று ஒக்குமை கொண்டால், 8000 நரனுக்கு 1 யோசனை என்ற அளவில் புவிச் சுற்றளவு 40216.402 கி.மீ. என்றே ஆகிறது.] இற்றை வானியலார், புவியை முழுக்கோளமாய்க் கொள்ளாது, துருவங்களிற் தட்டையான கோளமாகவே கொள்ளுவார்கள். எனவே, புவியின் நடுவண் சுற்றும் [அல்லது நடுவரைச் சுற்று = equatorial circumference = 24,901.55 miles = 40,075.16 kilometers], துருவச் சுற்றும் [polar circumference= 24,859.82 miles = 40,008 km] ஆர்யபட்டாவின் மதிப்பீட்டோடு வேறுபடும். அதே பொழுது, அந்த வேறுபாடு 0.52% க்கும் பெரிதில்லை என்பது வியப்பான செய்தி தான்.

புவியின் நிலமெலாம் வடக்கிலும், புவியின் கடலெலாம் தெற்கிலும் இருப்பதாய் முற்காலத்தில் ஒரு கருதுகோள் (hypothesis) உண்டு. அதன்படி, நிலத்தின் நடுவாய் வடதுருவமும், கடலின் நடுவாய்த் தென் துருவமும் கொள்ளப்பட்டன. வடதுருவம் ”மேல்>மேலு>மேரு” என்றும் சொல்லப்பட்டது. ஆர்யபட்டியம் - கோள பாடத்தின் 14 ஆம் நூற்பாவில், ”From the center of land and ocean (the poles), at a distance of one-quarter of the Earth’s circumference, lies Lanka; and from Lanka, at a distance one-quarter thereof, exactly Northwards likes Ujjaini” என்ற ஒரு செய்தி கூறப்பட்டிருக்கும். அதாவது துருவங்களில் இருந்து, காற் சுற்றளவில் இலங்கையும், இதன் வடக்கே, காற்சுற்றளவின் கால்மடங்கில், அதாவது புவிச் சுற்றின் 1/16 மடங்குத் தொலைவில், உச்சயினியும் இருக்கிறதாம். [உச்சயினி என்ற சொல்விளக்கத்தைப் பின்னாற் பார்ப்போம்.] உச்சயினி, உஞ்சயினி, உஞ்சேணை, உஞ்சேணை மாகாளம், உஞ்சை, அவந்தி நகர் என்றும் சொல்லப்படும் இந்நகரம் இன்றைக்கு 23.182778 N, 75.777222 E என்ற இலக்கில் இருக்கிறது. அதே பொழுது, இலங்கை ஒரு நாடா? நகரமா? அன்றி வேறு ஏதேனும் ஒன்றா? - என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

ஏனெனில், புவிச்சுற்றளவில் கால்மடங்கெனச் சொல்லும் போது, நாம் துருவங்களில் இருந்து புவியின் நடுவரைக் கோட்டிற்கே வந்து விடுகிறோம். இன்றைய இலங்கை மாத்துறைக்கருகில் (Matara) தேவினுவரை (Dondra or Devinuwara = city of god) 5 பாகை. 50’ அஃகத்திலும், 80 பா. 40 E எனும் நெடுவரையிலும் (longitude) இருக்கிறது. இதற்கும் தெற்கே கடலேயுள்ளது. எனவே ஆர்யபட்டாவின் ”இலங்கை” என்பது ஒரு நகரோவோ, நாடோகவோ இருக்க வழியில்லை. பின் அது என்ன?

இல்ந்தது>ஈல்ந்தது என்னும் வினைச்சொல் ஈலம்>ஈழம் (=பிரிந்த நிலம்) என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். இந்திய முகனை (main) நிலத்தில் இருந்து பிரிந்தது ஈழம் என்னும் தீவாகும். இல்>இலங்கு>இலங்கை என்பதும் பிரிந்த நிலத்தையே குறிக்கும். ஈழமும், இலங்கையும் ஒருபொருட் தமிழ்ச்சொற்களே. எப்படி இல்தல்>ஈல்தல்>ஈர்தல் என்ற வினைச்சொற்களும், இல்>இரு>இரண்டு என்னும் பெயர்ச்சொல்லும் இல்லெனும் வேரில் பிறந்த இருசொற்களோ, அதேபோல ஈழமும், இலங்கையும் இல்தல்>ஈல்தல் என்னும் வினையில் பிறந்த மேலும் இரு சொற்களாகும். மேலை மொழிகளில் isle, ille, island, eil என்றெல்லாம் எழுதப்பட்டு, இல்>ஈல்>ஈலன் என்றே பலுக்கப்பட்டு, தீவு என்னும் பொதுமைப் பொருள் காட்டும் மேலைச் சொற்களும், ஈழம், இலங்கை என்னும் தமிழ்ச்சொற்களும் எதோவொரு காலத்தில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதாவது நம்முடைய விதப்புச் சொல், மேலை மொழிகளில் பொதுமைச் சொல்லாய் இருக்கிறது.

பிரித்தல் பொருளில் எழும் இல்தல்>ஈல்தல்>ஈள்தல்>ஈழ்தல் என்னும் வினைச்சொல்லை, நிலத்தை ஈழ்வதற்குப் பயனாக்குவது போல, இரு துருவங்களை இணைக்கும் நெடுவரைக்கோட்டைப் பிரிப்பதற்கும் பயனாக்க முடியும். அதாவது நெடுவரைக் கோட்டையும் நாம் “ஈழ முடியும்”. இப்படிக் ஈழ்ந்து கிடைத்த ஈழப் புள்ளிகளை ஒன்றுசேர்த்தால் உலகின் நெடுவரைக்கோடுகளை இரண்டாய்ப் பிரிக்கும் ஓர் நடுவரை வட்டம் கிடைக்கும். அதாவது புவிக்கோளம் வடக்கு அரைக்கோளம், தெற்கு அரைக்கோளம் என இரண்டாய்ப் பிரிக்கப்படும். எனவே பிரிக்கும் கோடு என்னும் பொருளில் தான், நடுவரை வட்டமானது, ஈலும் கோடு> ஈலக்கோடு> ஈளக்கோடு> ஈழக்கோடு (= இலங்கைக்கோடு) என்று இயல்பாய் அழைக்கப்பட்டது. இதே பொருளிற்தான் ஆர்யபட்டா ”இலங்கை” என்ற கலைச்சொல்லால் நடுவரை வட்டத்தை அழைக்கிறார்.

[மறந்து விடாதீர்கள். வேர்ச்சொல் விளைப்பில் ஒன்றுபோல் தோற்றினாலும், இலங்கைத் தீவும், ஆர்யபட்டாவின் இலங்கைக் கோடும் பருப்பொருளில் வெவ்வேறானவை. இலங்கைத் தீவு முகனை நிலத்தில் இருந்து முற்றிலும் பிரிந்தது கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் முன்னால் என்னும் போது, ஈழம், இலங்கை என்ற தமிழ்ச்சொற்களின் அகவை குறைந்தது 5000 ஆண்டுகளாவது இருக்கவேண்டும் என்று தெரிகிறது. ஆக, அவர்களின் நாட்டிற்குப் பெயர் கொடுத்ததே தமிழ்ச்சொல்லாற் தான். ஆனாலும் ஈழத்தில், இலங்கையில், தமிழர் முதற்குடிகள் இல்லையாம்? என்னவொரு கொடுமை, வரலாற்றுத் திரிப்பு, பாருங்கள்? கேட்பதற்குத் தான் நம் தமிழினத்தில் ஆளில்லை. இருந்த ஒரே ”தம்பி”யும் கொலைகாரர்கள் சுற்றி வளைத்ததில் கூண்டோடு அழிந்து போனான். நாமோ செய்வதறியாது தவித்து நிற்கிறோம்.]

இந்த அவலச் சிந்தனை ஒருபுறம் இருக்க, "புவியின் விட்டத்தை 1050 யோசனை என்று ஆர்யபட்டா எப்படிக் கண்டுபிடித்தார்?" என்ற கேள்விக்கு வருவோம். இதற்கான விடை, நானறிந்த வரை எந்த இந்திய ஆவணங்களிலும் நேரடியாய்க் கிடையாது. இந்தியக் கணிதர் பெரும்பாலும் தாம் கண்டுபிடித்த முடிபுகளை விவரித்தாரே ஒழிய, எப்படிப் பெற்றார் என்று எழுதியது இல்லை. இந்தியக் கணிதத்தின் குறை என்று கூட இதைச் சொல்ல முடியும். [20ஆம் நூற்றாண்டின் கணித மேதையான சீனிவாச இராமானுசம் கூட அவர் கண்ட வியக்கத்தக்க முடிபுகளை எப்படிப் பெற்றார் என்று எழுதி வைத்ததில்லை. அவருக்குப் பின்னால் இன்றுவரை பல்வேறு கணிதரும் “எப்படி?” என்று துழாவிக் கொண்டே இருக்கிறார்கள்.] ஆனாலும், அந்தக் காலக் கருவி, நுட்பம், கணித அறிவு ஆகியவற்றைக் கொண்டு, ஆர்யபட்டாவின் சிந்தனை ஊற்றுக்காலை நாம் ஓரளவு ஊகிக்க முடியும். இதற்குத் தேவையானவை இரண்டு குச்சிகள், ஒரு முள், சற்று நீண்ட கயிறு, மரங்கள் இல்லா வெட்ட வெளி, வடிவியலறிவு ஆகியவை தான். தமிழர் வானியல் இப்படி எளிய கருவிகளோடும் கூர்ந்த கவனிப்புக்களோடுமே கிளர்ந்தெழுந்திருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 06, 2009

குளிர்ச் சொற்கள்

மாந்த வாழ்வில் பல சூடுகளை (hotnesses) நாம் பட்டறிகிறோம். உறைபனிப் புள்ளிக்கு அருகில் வருவது சிலிர் (chill). [உறைதல் = to freeze. ஒரு பொதி (body) நீர்மமாய் உள்ளவரை ஒரு ஏனத்திலோ, பள்ளத்திலோ, அங்குமிங்கும் அசையமுடியும். ஆனால், குறிப்பிட்ட சூட்டிற்கு இறங்கி வரும்போது அசையாது போவதால் இப்புள்ளி உறைதலாயிற்று. உறு>உறை என்று இச்சொல் வளரும். உறுகுதலும், உறைதலும் ஒரேபொருள் தரும் இருவேறு சொற்கள். frost என்பது ”உறைபனி” என்றும் frigid என்பது ”உறைந்த” என்றும் சொல்லப்பெறும்.]

 அதற்கும் மேலே குளிர் (cold); அதற்கும் மேலே வெதுமை (warm); இன்னும் மேலே இளஞ்சூடு (mild hot); அதற்கும் மேலே கடுஞ்சூடு (very hot); இன்னும் போனால் கொதிசூடு (boiling). இப்படி ஒவ்வொரு சூட்டையும் வெவ்வேறு சொற்களால், தமிழில் உணர்த்த முடிகிறது. 

அதே பொழுது, வெவ்வேறு குளிர்நிலைகளைத் துல்லியமாய் விவரிப்பதில் இற்றைத் தமிழில் தடுமாறுகிறோம். நொகை (negative) 50 பாகை செல்சியசில் இருந்து பொதிவு (positive) 50 பாகை செல்சியசு வரையுள்ள வெதணத்தை (climate) தாமாகவோ, அன்றிக் கருவி சார்ந்தோ, மாந்தர் எதிர்கொள்ளும் இக்காலத்தில், தமிழன் மட்டும் புறனடையா, என்ன? 

உலகின் பல்வேறு வெதணங்களை விவரிக்கு முகமாய், ஊதுமக் கோள வெம்மைக்கும் (atmospheric temperature) கீழுள்ள சூடுகளைக் கீழே பார்ப்போம்.

முதலில் வருவது குளிரெனும் சொல்.

குல் எனும் வேரிலிருந்து குல்>குள்>குள்ளுதல் = குறுகிப் போதல் என்பது விரியும். குறுகியவன் குள்ளன் தானே? எத்தனையோ வினைகளால் நாம் குறுகிப் போகிறோம். அதில் முதன்மையானது நீருக்குள் நின்றவாறே உடல் குறுக்கித் தலையை உள்ளிழுத்துக் கொள்வதாகும். இதையே குள்ளித்தல்> குளித்தல் என்கிறோம். இன்னொரு விதமாய் நீருக்குள் ஆழ்தல் = நீராழல்> நீராடல் என்றும் சொல்லுகிறோம். நெட்டநின்று மேனியில் நீரை ஊற்றிக் கொள்வதும், நீர்த்தாரைக்குக் (water shower) கீழ் மேனிபடிவதும், விசையோடு தூம்பு (tube) நீரை மேனியிற் சிந்திக் கொள்வதும், தொட்டிக்குள் படுத்து நீரில் தோய்வதும், எனக் குளித்தல் பலவிதங்களாய் இன்றாயினும் தமிழரைப் பொறுத்தவரை, அதன் அடிப்படை குள்ளுதலே. நீண்டுகிடக்கும் ஒரு பொருள், முழுக்கவும் குள்ளினால், அது சுருளும் (circles), உருளும், (rolls) கோளமாய்த் (globe) திரளும். குறிப்பிட்ட பருமை (volume) கொண்ட பொதி (body), நுணவப் பரப்போடு (minimum surface) வெளியை நிறைக்க, உருண்டை (round) வடிவமே கொள்ளும் என்பது வடிவியற் (geometry) பாடம். குளிகை, குளியம் (globules) என்ற சொற்கள் உருண்டைகளைக் குறிக்கும். குள்வது குவ்வுதலாகி, அதுவும் நீண்டு குவளுதலாகும். குவள்>குவளம்>கோளம் = உருண்டை.

அடுத்து, சூழமை வெம்மை (environmental temperature) சட்டெனக் குறைந்தாலும், நாம் குள்ளிப்போகிறோம் அல்லவா? நம்மை இப்படிக் குள்ளவைப்பது குள்ளி> குளி>குளிர் என்றாகும். குளிர் கூடக்கூட மெய் ஒடுங்குகிறோம் (குறுமைக் கருத்தைக் கூர்ந்து கவனியுங்கள்); நடுங்குகிறோம். குள்ளுதல் = to become cold O.E. cald (Anglian), ceald (W.Saxon), from P.Gmc. *kaldaz, possibly pp. adj. of *kal-/*kol-, from PIE base *gel-/*gol- "cold." நம் குளிருக்கும் அவரின் cold - ற்கும் உள்ள இணை வியக்கத்தக்கது. குளிருக்கு மாற்றாய்,

நளிர் (நள்>நளி>நளிர்; நள்ளுதல் = நடுங்குதல்),
பனி (பல்>பன்>பன்னி>பனி. இதை விரிவாய்க் கீழே பார்ப்போம்.),
அளி (அள்>அள்ளு>அள்ளி>அளி; அள்ளுதல் = செறிதல், to become compact, சுருங்குதல், சிறுகுதல்),
தண் (துள்>தள்>தண் = நெருக்கப் படுதல், நெருக்கலின் தொடர்ச்சியாய் அமைவது.),
மழை (ஊதுமக்கோளத்தின் மேன்மட்ட மேகங்கள் குளிர்ந்து, ஈரப்பதம் (moisture) செறிந்து (concentrated), கனிந்து (condense), மழை பொழிய, ஊதுமக் கோளத்தின் கீழ்மட்டச் சூடும் குறைவதால், குளிர்ச்சிப் பொருள் இங்கு சொல்லப்பட்டது,)
சாந்தம் (கீழே சிந்து எனும் சொல்லை விளக்கும்போது வருகிறது.)

என்ற சொற்களை அகரமுதலிகள் எடுத்துக் காட்டும். குளிர், நம்மைச் சூழ்ந்த சூட்டிற்கும் கீழுள்ளதைக் குறிக்கும் பொதுமைச் சொல்லாகும்.

அடுத்து, சில் எனும் வேர் குல்லைப் போன்றது. சில்>சில்லி என்பது சிறு துண்டைக் குறிக்கும். சில்லி, சல்லியாய்த் திரிந்து சிறுநாணயத்தைக் குறிக்கும். அக்காலத்தில் 192 சல்லி = 1 உருபாய் ஆகும். ”கண்ணாடிக் குவளையைத் தரையில் போட்டு உடைத்தான்; சுக்கு நூறாய் சில் சில்லாய் ஆகிப்போனது” எனும் வாக்கில், சுக்கு என்பது சுல்>சுல்க்கு>சுக்கு என்றும், சில் என்பது சுல்லின் திரிவாயும் உருவானவை. சுல்>சுரு> சுருங்கு என்ற வளர்ச்சி shrinkage = குறைதல் என்பதை உணர்த்தும். உடல் குறுகுவதை ”உடல் சிறுகும்” என்றும் சொல்லலாம் தானே? குல்>குரு> குறு என்பதைப் போலவே சில்>சிரு>சிறு என்பதும் விரியும். குல்> குன்னி = சிறியது என்பதைப் போலவே சில்>சின்னி என்பதும் பொருள் தரும். சின்>சின்னவன் என்பதும் சிறுமை உணர்த்தும். ஒரு பெருங்கல்லை சில் சில்லாய் உடைத்து உருவம் வடிப்பது சில்லை>சிலை ஆகும்.

குளிரின் விதப்பாய் வருவது சிலிர். இதைச் சில்லீடு என்றுஞ் சொல்லலாம். “அவன் உடம்பு சிலிர்த்திருக்கிறது/ சில்லிட்டிருக்கிறது. சன்னி கண்டதோ? மருத்துவரைக் கூப்பிடுங்கள்” என்கிறோம் இல்லையா? [சில், சன்னியைச்  சிலர் ஜில், ஜன்னி என்றுபலுக்கி அவை சங்கதமோ என்று மயங்குவர்.] சில்லெனும் சொல் குளிரை உணர்த்தியதை அன்றாட வாழ்க்கையிலிருந்தே அறியலாம். வட்டமாய் ஆலித்து, வட்டிலுக்கும் குவளைக்கும் மாற்றி மாற்றி, நீர்ப்பரப்பை அதிகரித்து, வெப்ப வாயிகத்தின் (heat convection) மூலம் சூட்டைக் குறைத்து, தேநீர் அருந்துகிறோமே? ”ஒரு நீர்ப்பொதியை அடுத்தடுத்துத் துளிக்க (making it into droplets) அதன் பரப்பு கூடிப் பொதிச்சூடு குறையும்” எனும் இச் சூழ்க்குமத்தைப் பாமரரும் தம் பட்டறிவாற் புரிந்திருப்பர்.

[துல்>துள்+ந்+து = துண்டு.
துல்>துள்>துளி. துளித்தல் = துண்டித்தல்.
துல்>துள்>துள்வுதல்>துவ்வுதல்>தூவு = dew: O.E. deaw, from P.Gmc. *dawwaz, from PIE base *dheu-.
துல்>துள்>துள்வு>துவ்வு>தூவு>தூவல்,
துல்>துள்>துள்வு>துவ்வு>துவல்>துவலை>திவலை;
துல்>துல்குதல்>துகுதல்>துகள்;
துல்>துரு>துறு>தூறு; மழை தூறுகிறது. தூவு, துளி, தூறு என்ற சொற்கள் அடுத்தடுத்து பெரிய அளவின. மழை தூவித் துளித்துப் பின் தூறும்; அப்புறம் பெய்ந்து, பொழிந்து பின் கொட்டும்.
துல்>துன்>துன்னல்;
துல்>துள்>துளி>தெளி,
துல்>துரு>துறு>தெறு>தெறி. பல்துளி>பஃறுளி என்பது பழந்தமிழகத்தின் தெற்கே இருந்த ஆறு.]

”நீர்ப்பரப்பு கூடக்கூட நீர்ச்சூடு குறையும்” என்பதால் சிறுத்தலை, சூட்டுக் குறைவோடு பொருத்துவார்கள். சில்>சிலிர்>சிலிர்தல். பிறவினையில் இது சிலிர்த்தல் ஆகும். [இப் பிறவினைச் சொல்லால் நடுக்கம், திகைப்பு போன்ற உணர்வுகளைக் குறிப்பர். அவையும் குளிர்ச்சிப் பொருளின் நீட்சி உணர்வுகளே.] சில்-இடுதல் சில்லீடு (chill) எனும் பெயர்ச்சொல் உருவாக்கும். chill: O.E.ciele, cele "cold," from P.Gmc. *kal- "to be cold," from PIE base *gel- "cold."

சில்லிட்ட நீரையே ஆண்டின் பல மாதங்கள் வடபுலத்தார் பயனுறுத்துவதால் சில்>சல்>சலம்>ஜலம் என்று திரிவில் நீர்ப்பொருளைச் சங்கதம் சுட்டும். [சலசல என்ற ஒலிப்பொருளில் ”சலம்” பிறந்ததாய்ச் சொல்வது இன்னொரு விளக்கம்.] ஜலத்திலிருந்து ஜலீலம் என்ற சங்கத நீட்சி ஏற்படும். மேலை நாடுகளில் சிலபோது நீரும் பனிக்கல்லும் சேர்ந்து காற்றோடு பெய்யும் மழை வருவதுண்டு. இதை sleet என்பார். சில்லின் நீட்சியாய் பனிக்கல்லைச் சில்லுக்கல் எனலாம். [sleet ஐ சில்லுக்கல் மழை என்று தமிழில் எளிதாய்ச் சொல்லலாம். கல்லை ஒதுக்கிச் சிலிதை என்றுஞ் சொல்லலாம்.]

சில்லின் நெருங்கியதிரிவில் சல்>சல்நம்>சன்னம் ஆகி thin - சிறுமை காட்டுவது போல, மெய் சில்லிட்ட நிலையை சல்நி>சன்னி எனும் சொல் அடையாளம் காட்டும். சில்>சின்னி என்பதும் அதே நிலை காட்ட முடியும். ஒரு நீர்ப்பொதி சில்லுறும் போது, சிலும்பும் (சில்>சிலு> சிலும்பு), சில்கும், சீகும், சீகுறும். (சீகரம் இப்படி எழும்.) சிதறும் (சில்தல்>சிதல்> சிதர்> சிதரு>சிதறு. சிதர், சிதரம் = மழைத்துளி ). பின் சில்ந்தியும் போகும் (>சிந்தும். சிந்தல்= சொரிதல்). சிந்திய பொருளின் சூடும் குறையும்.

சிந்து என்பது துளி, நீர், ஆறு, கடல் என்பதோடு வெள்ளை நிறத்தையும் குறித்தது இங்கு கவனிக்கத் தக்கதாகும். பனியும் வெள்ளை தானே? சுல் என்னும் வேர் வெள்ளையைக் குறிக்கும். சுல்>சுல்லு>சுள்ளி என்பது வெள்ளியைக் குறிக்கும். சுல்லு>சுல்லம்>சுல்வம் என்பது சங்கதத்தில் வெள்ளியைக் குறிக்கும் (ஆங்கில silver). வெள்ளை நிறத்து ஆண் விந்து சுல்>சுல்க்கு> சுக்கு>சுக்கிலம் எனப்படும். வெள்ளை நிறத்து வெள்ளிக் கோள் சுல்>சுல்க்கு>சுக்கு>சுக்ர என்ற திரிவில் சங்கதப் பெயர் கொள்ளும். சுல்>சுவ்>சுவேது எனும் வடமொழி வளர்ச்சியும் வெள்ளை குறிக்கும். சுவேதாம்பரர், வெள்ளையாடைச் செயினரைக் குறிக்கும் சொல். இன்றைக்கு கேரளத்தின் பெரிய ஆறான பெரியாறு சுள்ளியம் பேராறு என்றே சங்க இலக்கியத்தில் பேசப்படும். நீரக அயனிச் செறிவு (hydrogen ion concentration) கூடிப்போய் களரி அரங்கில் (alkali range) வருமாகில் ஆறு பால் நிறம் காட்டும். பால் நிறம் வெள்ளி நிறம் தானே?

வெள்ளைப் புள்ளிகளையுடைய ஆடு, மாடுகளைச் சிந்துவகை என்று குறித்துள்ளார். வெள்ளை நிற இருவாட்சி (Tuscan jasmine) சிந்து என்று சொல்லப் படும். செல், சி(ந்)தல், சிதலை என்ற சொற்கள் வெண்ணிறக் கறையானைக் (termite) குறிக்கும். சிந்தின் சகரத்தைப் போக்கி இந்தெனும் பழக்கம் நமக்கு  உண்டு. சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்த்ர என்றும் வடவர் சொல்லியிருக்கிறார். இந்த ஒலி வேறுபாடுகளோடு

இந்துகமலம், சந்த்ர காம்பியம், சித அம்புஜம் = வெண்டாமரை,
இந்த்ர புஷ்பம் = வெண்தோன்றி,
இந்த்ரபம் = வெட்பாலை

என்னும் சில சித்த மருத்துவப் பெயர்களைப் பார்த்தால், ”இந்து, சிந்து, சந்து, சந்த்ர” என்ற சொற்களுக்கும் வெண்மைக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

சிந்தாற்றின் உயர்பகுதிகளில் கரைகளை ஒட்டிய பாறைகளில் படிவமாய்க் கிடைக்கும் உப்பு சிந்துப்பு எனப்பெறும். [சகரம் தவிர்த்து இந்துப்பு என்றும் இதைச் சொல்வர்.] வடக்கே இந்தி மொழியில் ”சந்தா நமக், சிந்தா நமக்” என்றும் இதைச் சொல்வார். நம் சித்த மருத்துவ அகராதிகளில் ”சந்திர லவணம், சிந்து, சிந்துசாரம்” என்றும் இது சொல்லப்படுகிறது.

இந்த உப்பின் கதையைச் சற்று விரிவாய்ப் பார்ப்போம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென்னிந்தியா வடகிழக்கே நகர்ந்து ஆசியாவை முட்டியது என்பார். இரண்டிற்கும் இடைப் பட்ட டெதிசுக் கடல் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து ஆவியாகிப் போனதாம். இதனால், பழங்கடலின் உப்பு செறிந்து, படிகமாகிப் பல மாத்திரிகள் (meters) உயரத்திற்குப் பள்ளங்களை நிறைத்து, பாறையானதாம். மேலும் மேலும் ஆசியாவோடு மோதியதால், உப்புப் பாறைகளுக்கும் மேல் வண்டலும் மண்ணும் படிந்து, கூடவே நில மடிப்பு விழுந்து, உயர்ந்து, குன்றுகள், மலைகள் ஏற்பட்டனவாம். இம்மலைகளின் தொடரே இயய மலைத் தொடராகும். காலம் செல்லச்செல்ல, இமயமலை மேல் பனிப் பாறைகள் உருவாகி, வெப்பம் கூடும் காலத்தில், பனியுருகி மேற்கே வழிந்து வளைந்து, சிந்தாறு ஏற்பட்டுத் தென்மேற்கில் ஓடியதாம். அப்பொழுது, அது வண்டல்களை வாரிக் கொள்வதோடு அன்றி, பனிப்பாறைகள் ஆற்றின் இருபுறத்தும் மூடிநிற்க வழி ஏற்படுத்திப் போனது. பனிப்பாறைகளின் கீழே பனியுருகி நிலப்பாறைகளின் புரைகள் (pores) வழி ஊடுறுவிக் கசிந்து, அங்கிருந்த உப்பைக் கரைத்து கீழ்ப்புரைகள் வழியாய் வெளிப்பட்டு, சில இடங்களில் தொடர்துளிகளாய் ஆண்டு முழுக்கச் சொரிந்திருக்கிறது. செறிந்த உப்புக் கரைசலில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் நீர் ஆவியாகும் போது நிலப் பாறையோரங்களில் புரைகளுக்கு அடுத்து சரஞ்சரமாய் உப்பு மீண்டும் படிகமாகித் தொங்கிக் காட்சியளித்தது.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நடந்துவரும் இப் புவிச்செயல்கள் 50000  ஆண்டுக்கணக்கிலும், அதற்குப் பின்னும் படர்ந்த இந்திய முதன்மாந்தருக்கு புரியவா செய்யும்? அவர் பார்த்ததெல்லாம் பனிப் பாறைகளும், அவற்றிற்குச் சற்று கீழே சரமாய்த் தொங்கும் உப்புப் படிவங்களும் தானே? கடற்கரை இலாக் குறிஞ்சிநிலத்தாருக்கு, கடலுப்பின் பகரியாய்ச் சிந்துப்பு பயனுற்றது. அம்மாந்தரின் பார்வையில், சிந்துப்பு என்பது பாறைகளில் பனிபடர்ந்து சொரிவதால் இயல்பாய் விளையும் உப்பு. (Rock salt is formed naturally on mountains and rocks, being solidified from falling dew. It is an impure chloride of sodium.) உலகின் விந்தை விளைவுகளில் சிந்துப்பும் ஒன்று. இற்றைப் பாக்கித்தானில் உப்பு அரங்குப் (salt range) பகுதிகளில், ஆற்றிற்கும் உப்பிற்கும் உள்ள பொதுக் கரணியத்தால் இப்பெயர் ஏற்பட்டது. அப் பொதுக்கரணியம் என்ன?

சிந்து எனும்சொல் துளி, நீர், ஆறு, கடல், வெள்ளை மட்டும் குறிக்காது, மிகுந்து சில்லிட்ட நீர் அல்லது பனித்துகள் என்பதையும் குறித்திருக்கும் என்று கீழ்வரும் பல கரணியங்களால் ஊகிக்கிறோம். அக் கரணியங்களில் முதலானது, ”ந்நு, ந்து” என்ற பலுக்கற் திரிவுகள் இருந்தாலும் தமிழிய மொழிகளில் இணைச்சொற்களாகி ஒரே பொருளைச் சுட்டி அமைவதாகும்.. காட்டு: வந்நு/வந்து, பந்நு/பந்து. (நகர ஈறு னகரம் ஆவதையும் இங்கு சேர்த்து எண்ணலாம்.) சில்>சின்>சின்னு என்ற வளர்ச்சி ஏற்படுமானால் சின்னு/சிந்து என்ற திரிவும் தமிழில் அமையக் கூடாதா, என்ன?

snu என்னும் சங்கத வேர்ச்சொல்லிற்கு dripping, trickling, sprinkling என்ற பொருட் பாடுகளைச் சொல்வார். சில்>சின் எனும் தமிழ்வேரில் கிளைத்த சின்னம், சீந்தல் என்ற தமிழ்ச்சொற்கள் மழைத்தூறலைக் (drizzling) குறித்ததாய் அகராதி நிகண்டு பதிவுசெய்யும். கோவை, நீலமலை மாவட்டங்களைச் சீத நாடென்று சொல்லிக் கொடுந்தமிழ் 12 நாடுகளில் ஒன்றாய்க் காட்டுவார். சீந்து, சீந்தல், சீதம் ஆகிய தமிழ்ச் சொற்களின் முந்திய வடிவாய்ச் சிந்து என்ற சொல்லே அமைய முடியும். அதற்குப் பனிப்பொருள் (cold, chill) இருந்திருக்க பெரிதும் வாய்ப்புண்டு. தூவப்பட்ட (sprinkle) பனித்துகள், உருகி நீரானால், அது சொட்டும் (drips), துளித்து விழும் (trickles) தானே?

snu என்ற சங்கதச் சொல்லை ஒட்டிய மேலைச் சொற்கள் பலவும் உள்ளன. snow: O.E. snaw "snow," from P.Gmc. *snaiwaz (cf. O.S., O.H.G. sneo, O.Fris., M.L.G. sne, M.Du. snee,Du. sneeuw, Ger. Schnee, O.N. snjor, Goth. snaiws "snow"), from PIE *sniegwh -/*snoigwho- (cf. Gk. nipha, L. nix (gen. nivis), O.Ir. snechta, Welsh nyf, Lith. sniegas, O.Prus. snaygis, O.C.S. snegu, Rus. snieg', Slovak sneh "snow") என்று அவை அமைந்திருக்கின்றன. 

ஓர் ஆண்டில் ஆறேழு மாதங்கள் பனிநீரைத் தங்கள் மேனிமேற் சொரிந்து கொண்ட வடபுலத்தார் snu என்ற சொல்லோடு தொடர்புறுத்திக் குளித்தலை ”ஸ்நாயதி” என்று சொல்லி ஈரப்படுதல் என்று பொருள் கொண்டார்கள். வடக்கே குள்ளக் குளிக்க முடியாது; ஓரளவு ஈரப்படுத்திக் கொள்ளவே முடியும். [The cognate in Skt., snihyati, came to mean "he gets wet."] சுடுநீரால் தான் அவர்கள் ஆண்டின் பல மாதங்கள் குளிக்க முடியும்.

சிந்திற்கும் பனிக்கும் தொடர்பில்லையெனில், சிந்தாறு என்று கூட்டுச்சொல் ஏற்பட வாய்ப்பேயில்லை. [சிந்து எனுஞ் சொல்லை ஈச்சமரத்தோடு தொடர்பு காட்டி திரு. நா. கணேசன் பொருள் சொல்வார். அதையேற்க எனக்குப் பெருந் தயக்கம் உண்டு. இன்னும் சிலர் சிந்தின் சங்கத வேராக ஸித் = செல்லைக் காட்டுவர். அந்த வேர் சிந்தின் விதப்பான பொருளாகாது பொதுமையான பொருளாய் உள்ளது. எப்பொழுதும், ஆற்றின் பெயர்கள் பொதுமையில் இல்லாது விதப்பாகவே இருப்பதையே நாம் காண்கிறோம். காட்டு: பொன்னி, கன்ன பெருநை, தாம்ப பெருநை, வெள்கை>வைகை]

சிந்தாற்றின் சிறப்பே, மக்கள் புழங்கும் உயர்பகுதிகளில், வடந்தைப் பருவத்தில் (வாடை, வடந்தல்> vadanther> vidanther> winther> winter) ஆற்றின் கரையோரங்கள் பெரிதும் பனி பொழிந்து பாறைகளாவது தான். பனிப்பாறை படர்ந்து கிடக்கும் சிந்தாற்றின் மேற்பகுதிகளை மிகப் பழங் காலத்தில் மாந்தர்களால் அணுக முடிந்திருக்க வேண்டும். அற்றை நிலையில், மீள மீள வெம்மை கூடும்போது பனிப்பாறை உருகி, நீராய் மாறிப் போவதையும் பின் வெம்மை குறையும்போது, நீர் உறைந்து பனிப்பாறை ஆவதையும் அவர் பட்டறிந்திருக்க வேண்டும். சிந்தியதும், உருகியதும் நீர்த்துகளே என்ற புரிதல் அவர்க்குப் பட்டறிவால் ஏற்பட்டிருக்கும். இச் சிந்தனைகளின் வழி ஓர்ந்துபார்த்தால், சிந்தாற்றின் பொருள் பனியாறு என்பதாய் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். [கூடவே silver river - வெள்ளாறு என்ற புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடியும். தென்னகத்திலும் நாலு வெள்ளாறுகள் வேறு காரணம் பற்றியுள்ளன. சிந்து என்பது வெள்ளைப் பனி. இவை வெறுமே வெள்ளாறுகள்.]

சிந்தாறு = பனியாறு என்ற அதே அணுகலைக் கொள்ள முடியாத அளவிற்கு, காடுகள் மிகுந்து, மலைப்பாதைகள் அமையாது, கங்கை, தொழுனையின் (யமுனை) மேற்பகுதிகள் இருந்திருக்கலாம். வடபுலத்து மாந்தர், தம் நாகரிக வளர்ச்சியில் சிந்தாற்றங்கரையில் இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்த பின் தான், கங்கை, தொழுனைக் கரைக்கு மெதுவாய்ப் பெயர்ந்திருக்கிறார். எனவே பனியைச் சிந்தாற்றோடு மட்டுமே தொடர்புறுத்தியிருக்கலாம். கங்கை, தொழுனையின் நீர் மலையின் கீழ்மட்டங்களில் மட்டுமே அணுகக் கூடியதாய் இருந்ததால், பனியைக் காணாது வெறுமே சில்லிட்ட நீராய் மட்டுமே வடபுல மாந்தர் இவ்வாறுகளை உணர்ந்திருக்கலாம்.

முன்சொன்னது போல், சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்து, சாந்தென்றும் நீளும். சந்தின் நீட்சியாய்ச் சந்தன் என்ற பெயர் குளிரும் இரவிற்குரிய, பால்வண்ணம் காட்டும், நிலவின் பெயராய் வடபுலத்திலமையும். சந்த>சந்த்ர என்று சங்கதத்தில்  இன்னுந் திரியும். சிந்து, சகரம் தவிர்த்து இந்தாகி மீண்டும் நிலவைக் குறிக்கும். நிலவைக் குறித்த சொல் இன்னுந் திரிந்து இந்த>இந்த்ர என்றாகி வெள்ளை நிறத் தேவர் தலைவனைக் குறிக்கும். அத்தலைவன் ஏறும் விலங்கையும் வெள்ளை யானை என்று தொன்மஞ் சொல்வார். அவன் பார்வைக் குளிர்ச்சிப் பார்வை என்றும் அவர் தொன்மங்கள் கூறும்.

இன்னும் அடுத்த சொல்வளர்ச்சி நிலைகள்: 

குளிர்வது, நிலவிற்கு இயல்பானதால், தண்ணவன், நிலவைக் குறிக்கும். [தண் எனும் வேர் பற்றி இக்கட்டுரையில் அலசவில்லை.] இதுபோல ஒரு குறிப்பிட மரக்கட்டைகளை அரைத்துப் பெற்ற கலவை குளிர்ச்சி தருவதால், நிறம் வெள்ளையன்றி வேறாயிருந்தும், சந்து சந்தனம் என்ற சொற்களைப் பெறும். பின் அக்குளிர்ச்சி உடலைச் சார்வதால் சார்ந்து>சாந்து>சாந்தம் என்று பெயரும் வேறுவகையிற் கொள்ளும். சாரம்>ஆரம், சாரல்>ஆரல் நீட்சிகள் இன்ம்.

சிந்து, சந்து, சீதம் போன்ற பல்வேறு சொற்களை விரிவாகப் பார்த்த நாம் இனிப் பனி என்று பலரும் பயன்படுத்தும் சொல்லைப் பார்ப்போம்.

”ஒரு நீர்ப்பொதியை துளிக்கத் துளிக்க அதன் பரப்பு கூடிப் பொதிச்சூடு குறையும்” என்ற வாக்கிலேயே பனி என்ற சொல்லுக்கான உட்பொருளும் அடங்கியுள்ளது. ஒரு நீர்ப் பொதி 100 ml இருக்கிறது என்று வையுங்கள். அதை நூறு 1 ml பொதிகளாய் மாற்றினால், பரப்புக் கூடுமா, இல்லையா? இன்னும் பகுத்து, ஆயிரம் 0.1 ml பொதிகளாய் ஆக்கினால் பரப்பு மேலும் கூடும். மேலும் பகுத்து பத்தாயிரம் 0.01 ml பொதிகளாய் ஆக்கினால், நீர்ப்பொதியின் பரப்பு எக்கச்சக்கமாய் கூடிப்போகும். இப்படிப் பகுப்பதின் விளைவால் பொதியின் சூடு, சுற்றுச்சூழலுக்குப் பரவிக் குளிர்ந்துகொண்டே வரும். பொதிகள் பலவாகப்பலவாக, ஒவ்வொரு பொதியும் தன்னளவில் சிறிதாகிப் போகும். பொதிப் பன்மையோடு, தனிப்பொதியின் சிறுமை அமைவதில் இயங்கியற் (dialectics) தொடர்பு சேர்ந்தே வரும். இதனால், சிறுமைக்குச் சொன்ன குளிர்த் தன்மை, பொதிகளின் பன்மைக்கும் பொருந்தி வரும். இந்த அடிப்படைக் கருத்தோடு பன்மையைச் சற்று ஆழ்ந்து பார்ப்போம்.

கல்>கால், கல்>கள்>காள் என்ற சொற்கள் கருமையைக் குறித்தது போல் பல்>பால், பல்>பள் என்ற சொற்கள் முதலில் வெண்மையையே ல் குறித்தன. வாயிலிருக்கும் பல்லிற்கு வெண்மையே முதற்பொருளாய்ச் சொல்லப்பட்டது. அதே பொழுது, பல் ஒன்றல்ல, ஒன்றிற்கு மேற்பட்டது. அதனால் ”ஒருமைக்கு மீறியது” என்ற வழிநிலைப் பொருள் அடுத்து ஏற்பட்டு இருக்க வேண்டும். பல்குதல் வளர்ச்சியும் பல்லில் தொடங்கியதே. ”பல” போன்ற சொற்கள் பல் எனும் பருப்பொருளில் ஏற்பட்டன என்று புலவர் இளங்குமரன் ”தமிழ் வளம் -சொல்” என்ற தன் பொத்தகத்தில் விளக்குவார். [வெளியீடு. திருவள்ளுவர் தவச்சாலை, திருவளர்குடி (அல்லூர்), திருச்சி மாவட்டம் 620101] பல்லில் பிறந்த பல்வேறு சொற்களை அதில்  விளக்குவார். படிக்கவேண்டிய கட்டுரை. பலாப் பழத்தில் பல சுளைகள் இருப்பதால் தான் பலா என்ற சொல் ஏற்பட்டது. பலாச்சுளைகள் போலப் பருத்திக்காய் வெடிக்கையில் பருத்திச் சுளைகள் பல இருக்கும். பல்>பன்>பன்னு> பன்னல் என்ற பெயர் இப் பன்மைக்காரணம் பற்றியே பருத்திப் பஞ்சிற்கு ஏற்பட்டது. இதேபோல நீர்த்துகள் பலவாறாய்ச் சிதறிக் கிடப்பதால் பல்> பன்>பன்னி>பனி என்ற சொல் ஏற்பட்டது.

பனி என்ற சொல் நீரின் திண்மத் துகளை மட்டுமல்லாது, நீரின் நீர்மத் துகளையும் குறித்தது. இல்லாவிட்டால் மார்கழி மாதம் நம்மூரில் காலை வேளையில் ”பனி பெய்கிறது” என்று எப்படிச் சொல்வோம்? பனி என்பது நீர்மமா, திண்மமா என்பதில் இரண்டுங்கெட்டான் நிலையை இச்சொல் வழி பார்க்கிறோம். நொய், பொடி, புழுதி, நுறுங்கு என்ற சொற்கள் தெளிவாய்த் திண்மத் துகள்களைத் தமிழில் காட்ட, பனியின் வரையறை நம் புழக்கத்தில் துல்லியமாய் இல்லை தான். அதேபொழுது பனித்துகள் என்றால் திண்மம் என்று தெளிவாய்ச் சொல்லிவிட முடியும். பனியின் நீர்ம நீட்சியாய், வடவர் பனி>பானி>பாணி, பனி>பானி>பானீயம் போன்ற சொற்களைப் பயில்வர். [இதேமுறையில் தான் சிந்திற்கு நீர்ப்பொருள் ஏற்பட்டுள்ளது. அப்படியானால், சிந்தின் முதற்பொருள் பனி போல் தான் இருந்திருக்க வேண்டும் என்ற புரிதலையும் பனி>பாணி வளர்ச்சியில் தலைகீழாய்ப் புரிந்து கொள்ளலாம்.] பனியின் இன்னொரு நீர்ம நீட்சியாய் பனித்தல் என்ற வினை தமிழில் விடா மழையைக் குறிக்கும். பனியின் மீகுறை வெம்மையை உணர்த்துமாப் போல பனிப்பு என்ற சொல் தமிழில் நடுக்கத்தை உணர்த்தும்.

வெள்ளை நிறத்தை உணர்த்துமாப் போல பல்>பல>பலதேவன் என்ற பெயர் கண்ணனின் அண்ணனைக் குறிக்கும். பல்>பால்>வால் என்னும் திரிவில் வாலியோன் பெயரும் அவனையே குறிக்கும். வால்>வல்> வெல்>வெள் என்ற திரிவும் வெள்ளையே குறிக்கும். பால் நிறம் கொண்டே, பல்>பால்ப்பு>பார்ப்பு>பார்ப்பனர் என்ற சொல் எழுந்ததாய் இரா. மதிவாணன் உறுதி செய்வார். வெள்ளை நிறத்துக் கலைமகள் வெள்ளை மெய்யாள், வால்>வானி>வாணி என்று பெயர் பெறுவாள்.

பால்>பாள்>பாள்+ந்+து = பாண்டு என்றசொல் வெள் நீற்றைக் குறிக்கும். வெள்நீற்றை இனக்குழு அடையாளமாய்ப் பூசியவர் பாண்டியர் எனப் பட்டனர். பாண்டியர் பற்றிய பல செய்திகளும் வெள்ளையைத் தொடர்பு உறுத்தியே வருகின்றன. [வெள்நீறைப் பூசும் பழக்கம் ஆத்திரேலியப் பழங்குடியினருக்கும் உண்டு. பாண்டியர் பழங்குடியினர் என்ற தமிழர் தொன்மமும் ஆத்திரேலியப் பழங்குடியினர் தமிழகம் வழியாகப் போய் இருக்கலாம் என்ற இற்றை ஈனியற் கண்டுபிடிப்பும் இப்பழங்குடிப் பழக்கங்களை ஆழவும் ஆய்வுசெய்யத் தூண்டுகின்றன.] 

இதே போலச் சாரல் = சந்தனத்தை இனக்குழு அடையாளமாய்ப் பூசியவர் சாரலர்>சேரலர் எனப்பட்டனர். 

மஞ்சள் தூளை [அது காடியரங்கில் (acid range) இருந்தால் மஞ்சளாயும், களரியரங்கில் (alkali range) இருந்தால் குங்கும நிறத்திலும் இருக்கும்] பூசியவர் கொல்> கோழு>கோழியர்>சோழியர் எனப் பட்டனர். பழைய முப்பெரும் தமிழ் இனக்குழுக்களும் 

இன்று தமக்குள் ஒன்றாய்க் கலந்து போய், தமிழர், மலையாளிகள் என இரு பெரும் தேசிய இனங்களாய் மாறிப் போயினர். இரு தேசிய இனங்களிடையே நீறு பூசுதலும், சந்தனம் பூசுதலும், மஞ்சள்/குங்குமம் பூசுதலும் இனக்குழு மிச்சங்களாய்த் தங்கிப் போய், அதே போது சமய வழக்கங்களாய்க் காட்சியளிக்கின்றன. இப் பழக்கங்கள் சிச்சிறிதாய் இந்தியாவின் மற்ற தேசிய இனங்களுக்கும் சமய வழி பரவியது ஒரு பெரும் வியப்புத்தான்.

ஆலி பற்றி ”நாரணன்” என்ற என் முந்தையப் பதிவில் பேசியிருந்தேன். தேவையானவற்றை இங்கு முழுமைகருதி வெட்டியொட்டுகிறேன். [முழு விவரம் வேண்டுவோர் அதைப் படியுங்கள்.] வெப்ப நாடான நம்மூரில் காலங் கெட்டு திடீரென்று, வானத் தலைகீழ் மாற்றத்தால் ஆலங்கட்டி மழை பொழிவதைப் பார்த்திருக்கிறீர்களா? அது என்ன ஆலங்கட்டி? வேறு ஒன்றுமில்லை நீர்க்கட்டி/பனிக்கட்டி இதை hailstone என்று ஆங்கிலத்திற் சொல்வார். [க.து. ஆலிகல், ம. ஆலிப்பழம், குட.ஆலிகய், பட ஆனிகல்லு. க. ஆலி, ஆணி, ஆரி, பட. ஆனிகல்லு; கோத. அரகசு; தெ.குரு.மால், குட ஆலி; து ஆலிகல்லு, குவி,மே ஆஜி, பர் ஏதிர், ஏயிர் - ஆகத் தமிழிய மொழிகளிற் பரவலாய் உள்ல சொல்.] 

சிறு சிறு கற்களைப்போல வானத்தில் இருந்து நீர்க்கட்டி மழை கொட்டுகிறது. விழுந்த வேகத்தில் தரைச்சூட்டில் ஆல் [ஆலம், ஆலங்கட்டி, ஆலி] உருகிக் கரைந்து போகிறது. [ஆலித் தண்மழை - ஐங்குறுநூறு 437; ஆலஞ்சேர் கழனி தேவா.2.81.7 என்ற காட்டுக்களை இங்கு ஓர்ந்து பாருங்கள்.] ஆகப் ice/பனிக் கட்டியைத் தெரியக் குளிர்நாட்டில் வாழத் தேவையில்லை. வெப்ப நாடாயினும் தெரிந்து வைத்து, இலக்கியத்திலும் நாம் பதிந்திருக்கிறோம். ஆல், ஆலம், ஆலி என்ற சொற்கள் குளிர்நீரையும், பனிக்கட்டியையும் குறித்தவை தான்.

ஆலம் என்பதன் திரிவாய் ஆயம்/அயம் என்பதும் தமிழில் நீரைக் குறிக்கும். [அயம் திகழ் சிலம்பு - ஐங்குறுநூறு 264.2] O.E. is "ice," from P.Gmc. *isa- (cf. O.N. iss, O.Fris. is, Du. ijs, Ger. Eis), with no certain cognates beyond Gmc. ஆலி என்பது ice-யைக் குறிக்கச் சங்கநூலில் பயன்பட்ட சொல். இன்றோ எல்லாவற்றிற்கும் பனி என்பதையே வைத்து dew, ice இவற்றிற்கு வேறுபாடு காட்டத் தெரியாமற் சுற்றிவந்து கிளித்தட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். ஆலிக்குழைவு = ice cream. என்று சொல்லக் கூடாதா? பனிக்காற்றும் ஆலிமழையும் வெவ்வேறானவை. ஆலி என்னும் சொல் இந்தக் கால அறிவியற் சிந்தனையைத் தமிழில் துல்லியமாய் விளக்கப் பயன்படும் சொல்.

துல்லியம் கருதி, மேலே விவரித்த பல்வேறு குளிர்ச் சொற்களைக் கொண்டு இற்றைத் தேவைக்குத் தக்கக் கீழ்க்கண்டவாறு நாம் பட்டியலிடலாம்.

winter = வடந்தை, வடந்தல், வாடைக் காலம்
chill = சிலிர்
snow = சிந்து
ice = ஆலி
freeze = உறைதல்
O.E. freosan "turn to ice" (class II strong verb; past tense freas, pp. froren), from P.Gmc. *freusanan (cf. O.N. frjosa, O.H.G. friosan, Ger. frieren "to freeze," Goth. frius "frost"), from P.Gmc. *freus-, equivalent to PIE base *preus- "to freeze," also "to burn" (cf. Skt. prusva, L. pruina "hoarfrost," Welsh rhew "frost," Skt. prustah "burnt," Albanian prus "burning coals," L. pruna "a live coal").
frost = உறைபனி
frigid = உறைந்த
c.1420 (implied in frigidity), from L. frigidus "cold, chill, cool," from stem of frigere "be cold;" related to frigus "cold, coldness, frost." Frigidaire as the proprietary name of a brand of refrigerators dates from 1926.
refrigerators: உறுகி(ப்பெட்டி):
arctic = வட துருவம். வடதுருவத்தில் மேல் நோக்கிப் பார்த்தால் கரடி உடுக்கூட்டம் தெரிந்தது என்று மேலையோர் பெயரிட்டிருக்கிறார்கள். நாம் துருவ விண்மீன் தெரிகிறது என்று பெயரிட்டிருக்கிறோம்.
c.1391, artik, from O.Fr. artique, from M.L. articus, from L. arcticus, from Gk. arktikos "of the north," lit. "of the (constellation) Bear," from arktos "bear," the Bear being a northerly constellation. From the usual I.E. base for "bear" (cf. Avestan aresho, Arm. arj, Alb. ari, L. ursus, Welsh arth); see bear (n.) for why the name changed in Gmc. The -c- was restored 1556.
blizzard = பனிப்புயல்
1859, origin obscure (perhaps somehow connected with blaze (1)), it came into general use in the hard winter 1880-81, though it was used with a sense of "violent blow" in Amer.Eng., 1829; and blizz "violent rainstorm" is attested from 1770.
sleet = சிலிதை
c.1300, slete, either from an unrecorded O.E. word or via M.H.G. sloz, M.L.G. sloten (pl.) "hail," from P.Gmc. *slautjan- (cf. dial. Norw. slutr, Dan. slud, Swed. sloud "sleet"), from root *slaut-. The verb is attested from c.1325.
hail = ஆலங்கட்டி
glacier = ஆலியோடை
1744, from Fr. glacier, from Savoy dialect glaciere "moving mass of ice," from O.Fr. glace "ice," from L. glacies (see glacial).

பனி, குளிர், நளிர், அளி, தண் போன்ற சொற்களை நாம் ஒதுக்க வேண்டியதில்லை. அவற்றைப் பல இடங்களில் நாம் பொதுமைச் சொற்களாய்ப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்துவது குளிரின் புரிதலுக்கு வழிவகுக்கும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, August 28, 2009

நாரணன்

ஒருமுறை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் ”நாரணன்” என்ற சொல்லின் சொற்பிறப்பு பற்றிக் கேட்டிருந்தார். உடனடியாக அவருக்கு மறுமொழிக்க இயலாது போனது. வேறொரு நண்பர் கேட்டுக் கொண்ட வேலையில் சில நாட்கள் ஆழ்ந்து போனதாலும், என் “பழந்தமிழர் நீட்டளவை”த் தொடரை முடிக்கும் முயற்சிகளில் இருந்ததாலும், 108 திருப்பதிகளைக் காணும் விழைவின் பகுதியாய் மலைநாட்டு 13 பதிகளைக் காண ஒருவாரம் சேரலம் சென்றதிலும் காலம் கழிந்து போயிற்று. பின்னால் செய்திகளைச் சேகரித்து வந்தேன்.
---------------------------

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

என்ற நாச்சியார் திருமொழி. 6.1 ஆம் பாடலைக் கண்டு மயங்காதார் மிகக் குறைவு. அதே பொழுது, ”வாரணம்” என்ற சொல்லை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டவரும் மிகக் குறைவு. ”யானை, பன்றி, தடை, மறைப்பு, கவசம், சட்டை, காப்பு, கேடகம், நீங்குகை, உன்மத்தம், கோழி, உறையூர்” போன்று அகராதியிற் சொல்லியிருக்கும் எந்தப் பொருளும் இங்கு சரிவராது. ”வரி வரியாய்க் கிளர்ந்தெழும் வரிச்சங்கை இங்கு முன்னே கொண்டுவந்து பொருள் சொன்னால் தான் சரிவரும். நம் அகரமுதலிகள் ”சங்கத்தையும்” வாரணத்திற்குப் பொருளாய்ச் சொல்லுகின்றன. ஆனாலும் தென்பாண்டித் தமிழ்மரபு, பழக்கவழக்கம் தெரியாதோர், சங்கென்ற பொருளுக்குச் சட்டென வரவும் மாட்டார்.

பாட்டு, மாப்பிள்ளை அழைப்பு பற்றிச் சொல்கிறது. நாரண நம்பி மெதுவாய் அசைந்து மணமண்டபம் நோக்கி நடந்து வருகிறான். தென்பாண்டி நாட்டில், இந்த அழைப்பில் சங்கு முழங்கி ஊரைக் கூட்டி, சுற்றம் சூழ, எல்லோரும் போய், மாப்பிள்ளையை அம்பலத்தில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து வருவார். இன்றுங்கூடச் சங்கொலியில்லாமல் எங்களூர்ப் பக்கம் மாப்பிள்ளை அழைக்கும் மரபில்லை. மாப்பிள்ளை மணமண்டபத்திற்கு வரும்போது, ஆங்காங்கு சங்கொலி கேட்கவேண்டும். அதைக்கேட்டு, அவர் வரும் பாதையின் முக்கு, முனங்குகளில் ஊர்மக்கள், குறிப்பாகப் பெண் மக்கள், திரண்டுவந்து மாப்பிள்ளை பார்க்கக் கூடுவர். அந்த இடங்களில் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். பெண்மக்கள் பூரண கும்ப ”மரியாதை” [கும்பம் + தேங்காய், பனம்பாளை அல்லது தென்னம் பாளை] செய்வதும், ஆலத்தி எடுப்பதும் [குங்கும நிறத்தில் ஆலத்தி கரைத்து வைத்திருப்பதும் ஒரு கலை.] ஆங்காங்கு இருக்கும் முறை. [இன்றைக்குத் தென்பாண்டியில் தேர்தலுக்கு வரும் தலைவருக்கெல்லாம் பூரண கும்பமும், ஆலத்தியும் சங்கொலியோடு சக்கை போடுகிறது.]

”நம்மூர்ப் பெண்ணுக்கு இவன் ஏற்றவனா?” என்று தெரிய வேண்டாமா? பெண்வீட்டுக்காரரும் ஊராரிடம், “பார்த்துக்குங்கப்பா, எங்க வீட்டு மாப்பிள்ளை இவர்தான், எங்கபெண்ணு நல்ல இடத்துலே தான் வாக்கப் படுறா!” என்று சொல்லாமற் சொல்ல வேண்டாமா? அதற்கு ஒரேவழி இந்தச் சங்கொலி தான். நாகசுரம், மேளம் - அது இதெல்லாம் அப்புறம் வந்தது. முதலில் அறதப் பழங்காலத்திற் சங்கே பயன்பட்டது. [இக்காலத்தில் band - உம், வேட்டும் கூடச் சில இடங்களிற் சேர்ந்து கொள்கிறது.] சங்கொலி மங்கலமானது என்ற நம்பிக்கை தென்பாண்டி நாட்டில் மிகுதியாய் உண்டு. சங்கும் முத்தும் குளித்தெடுத்தவர் சங்கொலியைப் பெரிதாய்க் கருதத் தானே செய்வார்? எத்தனை முறை வெண்சங்கம் நாலாயிரப் பனுவலில் பேசப்படுகிறது? இங்கே ஆயிரம் சங்கொலி சூழ, மாப்பிள்ளை எழில்நடை போட்டு நடந்து வருகிறாராம்.(”நம்ம பொண்ணுக்கு இருக்குற ஆசையைப் பார்த்தீங்களா? ஒரு சங்கொலி இவளுக்குப் பத்தாதாம், ஆயிரஞ் சங்கு சுற்றி வந்தாப்புலெ ஒலிக்க, இவ ஆளு ”ராசா” கணக்கா நடந்து வரோணுமாம்.”) அப்படி வருபவரை வீதி நெடுகிலும் தோரணங் கட்டி, பூரணப் பொற்குடம் வைத்து பெண்மக்கள் எதிர்கொள்வதாய்க் கனாக் காண்கிறாளாம். ஆகத் தென்பாண்டிப் பெண் அவளுக்குத் தெரிந்தமாதிரிக் கனவு காண்கிறாள். வட்டாரப் பண்பாடு இப்பாட்டில் தூக்கிநிற்கிறது. இதை உணராமல், வெறும் எந்திரத்தனமாக, பல உரைகளில் ”ஆயிரம் யானைகள் சூழவந்தன” என்று சொன்னதையே கூறிக்கொண்டு இருக்கிறார். ”மாப்பிள்ளை அழைப்பின் போது எந்த ஊரில், யானையைக் கொண்டு வருகிறார்?” என்று நானும் ஓர்ந்து பார்க்கிறேன். கொஞ்சமும் தெரியவில்லை. அப்புறம் என்ன முறையிலாக் கற்பனை? அதே பொழுது, சங்கொலி இல்லாமல் மாப்பிள்ளை அழைப்பு இன்றும் தென்பாண்டிநாட்டில் இல்லை.

”வாரணம்” என்ற ஒரு சொல்லுக்கே இப்படிப் பல உரைகாரர் தடுமாறும் வேளையில், ”நாரண நம்பி” என்ற கூட்டுச்சொல்லுக்கு என்செய்வது? நாரணன் என்றசொல்லை 3 வகையில் அலசலாம். இதில் எது சரியென்று சொல்ல இதுவரை கிடைத்த தரவுகள் குறைவு தான். [நான் ஆன்மீகத் தரவுகளைச் சொல்லவில்லை. ஆன்மீக விளக்கங்கள் கால காலத்திற்கும் வந்து கொண்டே இருக்கும். அவை நம்பிக்கையின் பால் வருபவை.] இற்றை நிலையில் “இதுவே சொற்பிறப்பு வழி” என்று அழுத்தந் திருத்தமாய்ச் சொல்ல முடியவில்லை. ஆய்வுகள் தொடரவேண்டும். மேற்சொன்ன 3 வகைகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. நரனானவன் நாரணன். ஒலியெழுப்பைக் குறிக்கும் நரலெனும் வினை, தமிழ்ச்சொல்லே. நாரயணனெனும் வடசொல் இதில் பிறந்திருக்கலாம். ஆகுதல்/ஆயுதல் வழி ஆயுதல்> ஆயன் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இனி, நார ஆயன் = நாராயன்>நாராயண் என்று ஆகும். வடமொழிக்குப் போன சொற்களை மீண்டும் தமிழ் திருப்பி வாங்கும் போது இன்னொரு விகுதி சேர்ப்பது நடந்துள்ளது. பெருமான்>பெருமன்>ப்ரம்மன்>ப்ராம்மன்> ப்ராம்மண்>ப்ராம்மணன் என்பது போல், நாராயன்> நாராயண்> நாராயணன் ஆகும். இதுபற்றி 9 ஆண்டுகளுக்கு முன் 2000 ஆண்டில் ஆகத்து மாதம் 24 ஆம் தேதி, அகத்தியர் குழுமத்தில் “நாரி” என்ற சொல்லைப் பற்றிக் கீழுள்ளது போல் எழுதினேன்.

----------------------------
From poo@... Thu Aug 24 06:36:13 2000
To: agathiyar@egroups.com
Subject: Re: [agathiyar] Re: was (family portal need your help) Naari

At 04:52 AM 8/24/00 +0000, you wrote:
>வாசன்,
>
>நாரி என்பது இந்திய மொழியைச் சேர்ந்ததுதான் (அது என்ன "இந்திய மொழி" என்று என்னிடம் கேட்காதீர்கள்)

வேர் மட்டும் தமிழ்; விளைவு பாகத மொழிகள் எல்லாவற்றிலுமே இருக்கிறது.

நரலுதல் - ஒலி எழுப்புதல்
நரல்வது - ஒலியெழுப்புவது. (நர நர எனப் பல்லைக் கடித்தான்)
நரலை - ஒலி; ஒலி எழுப்பும் கடல்
நரற்றுதல் - ஒலி எழுப்புதல்
நருமுதல் - பல்லால் கடித்தல்
நாராசம் - கேட்க முடியாத கொடுமையான ஒலி
நரி - ஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு
நரலும் குரங்கு அதாவது 'நரன்' - மனிதன்
நரசிங்கன் - மனிதனும் சிங்கமும் சேர்ந்த தோற்றம் உள்ளவன்
நாரணன் - மனிதனாய் தோற்றரவு (அவதாரம்) எடுத்த திருமால் (நரன் ஆனவன் நாரணன்); இதை வடமொழியில் நீட்டி நாராயணன் என்றும் சொல்லுவதுண்டு.
நாரணி - நாரணனின் தங்கை
நாரி/நாரிகை - மனிதனின் பெண்பால் (சொல் அமைப்பு பாகத மொழிகளின் அமைப்பின் படி இருக்கிறது) இப்படிப் பட்ட சொற்கள் எல்லாம் அடிப்படையில் தமிழாய் இருந்து வடமொழிப் படி வழக்கிற்கு வந்தவை.
நாரதன் - இசை எழுப்புவன் (தொன்மங்களில் வரும் நாரதர் மட்டுமல்ல; சங்க இலக்கியங்களில் இசைக்கருவிகளோடு வரும் பாணர்களுக்கான வடமொழிப் பதமும் கூட)
நரம்பு - வில்லில் கட்டிய, ஓசை எழுப்பும், நாண்
நார் - ஒலி எழுப்பும் நாண்; (இதிலிருந்து எல்லாவித இயற்கை, செயற்கையான கயிற்றிழைகளுக்கு எல்லாம் பயன்படத் தொடங்கியது)
நருமதை - ஓவென்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு வேகமாக ஓடும் ஆறு. இதை மட்டுமே பண்டைக் காலத்தில் ஆண்யாறு என்று சொல்வதுண்டு. இதன் வேகமும், நீரின் அளவும் அவ்வளவு பெரியதாம்.

இப்படி 'நர' என்னும் அடியை ஒட்டிய பல சொற்கள் தமிழில் இருக்கின்றன.
எல்லாவற்றையும் வட மொழிக்கண் கொண்டே பார்த்தால் எப்படி?

அன்புடன்,
இராம.கி.
----------------------

மேலே சொன்னது போல், எல்லா இடத்தும் நாரணனை ”நரன் ஆனவன்” என்று சொல்லமுடியாது. ஏனெனில் ஆண்டாளே தன் நாச்சியார் திருமொழி 2.1 இல், “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே” என்றுசொல்லி நாராயணன், நரன் என்ற பெயர்களை அடுத்தடுத்து இட்டு நாராயணனுக்கு இன்னொரு பொருள் தேடுவதை உணர்த்தியிருப்பாள். ஆனாலும் சிலர் ”நரன் ஆனவன் நாரணன்” என்பதை வலிந்து ஏற்படுத்திக் கொண்டு,

“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும் பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடு உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

என்ற பெரிய திருமொழியில் நாராயண மந்திரத்திற்கு, “நாரங்களுக்கு அயனமாய் இருப்பவன், நாரங்களை தனக்கு இருப்பிடமாய்க் கொண்டவன். நாரம் = ஜீவான்மாவின் கூட்டம்” என்று ஆன்மீக விளக்கஞ் சொல்வார். [நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் விளக்கவுரையும் மூன்றாம் தொகுதி 948 ஆம் பாட்டு, பக் 1304. டாக்டர் இரா.வ. கமலக் கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம். பல்வேறு உரைகாரரும் இதுபோலச் சொல்லி யிருக்கிறார்.] ஜீவான்மா என்ற பொருள்நீட்சி எப்படி ஏற்பட்டது? - என்று நமக்கு விளங்க வில்லை. தமிழ், சங்கதம் இரண்டிலும் நரன் என்பது மாந்தனைக் குறிக்கிறதே அன்றி, உய்வு (=ஜீவ) ஆன்மாவைக் குறிப்பதாய் எந்த அகரமுதலியிலும் கண்டதில்லை. குட்டிக்கரணம் போட்டாலும், பொருளைச் சவ்வாய் இழுத்தாலும், நாரம் என்பது உய்வான்மாவைக் குறிக்குமோ? அறியேன். [நரன் ஆன்மா உய்வான்மாவாய் இருக்கலாம். ஆனால் எல்லா உய்வான்மாவும் நரன் ஆன்மாவோ? அன்றி, நரன் தவிர்த்த பிற பிறப்புக்களுக்கு உய்வான்மாவே கிடையாதா? இது ஏரணப்பிழை அல்லவா? விண்ணவப் புரிதலின்படியும் இது தவறல்லவா? இப்படிச் சில ஆன்மீக விளக்கங்கள் நாம் எண்ணுவதையும் மீறும்போது, கைவிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.]

2. இரண்டாம் முறையில் நாளன்>நாரன்>நாரனன்>நாரணன் என்று கருமையைக் கரணியம் காட்டிப் பொருள் சொல்வர். நண்பர் நாக.கணேசன் பல இடங்களிலும் இதுபோல் சொல்லியுள்ளார். [அவர் பெயரையும் நாள் நாரணன் என்பதையும் சேர்த்துக் கூகுளில் இழுத்துப் பார்த்தால், அவர் கூறியது கிட்டும். நல்>நள்>நாள் = இரவு, கருமை என்ற பொருள்களுண்டு. திருமாலின் பல பெயர்கள் கருமைநிறங் குறித்துவருவதால் இதையும் அப்படியே சொல்வார்.]

3. இந்த விளக்கம் நீரை அடிப்படையாக்கிச் சொல்லுவது. இவ்விளக்கமும் கருமைக் கருத்தில் உருவானதே. நீர் பற்றிய பல தமிழ்ச்சொற்களும் கருமையில் எழுந்தவை. யா எனும் கருமைக் கருத்து வேர்பற்றி சொல்லாய்வு அறிஞர் ப. அருளி ஒரு பொத்தகமே போட்டுள்ளார். [யா - விற்குப் பொருந்தற் கருத்தும், வினவற் கருத்தும் உண்டு. அந்த கருத்தெழுச்சிகளை நாம் இங்கு பார்க்காது, கருமைக் கருத்தை மட்டுமே பார்க்கிறோம்.]

அருளியாரின் ஆய்வு பலரும் படிக்கவேண்டியது. யா>ஞா>நா என்ற திரிவைப் பற்றியும் அதிற் பேசியிருப்பார். ”யா”வை நம்மில் சிலர் மூக்கொலி சேர்த்து ஞாகாரம், நாகாரமாய்ப் பலுக்குவர். [அத்திரிவை மொழியியல் அறிஞரின் கவனத்திற்கு முதலிற் கொண்டு வந்ததும் திரு.ப. அருளி தான்.] ஒரே சொற்பொருளில் யா, ஞா, நா என மூவரிசைச் சொற்களும், சிலவற்றில் இரு வரிசைகளும், சிலவற்றில் ஒருவரிசை மட்டும் பொதுவாய்ப் புழக்கத்தில் உள்ள இற்றைத் தமிழோடும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய தமிழிய மொழிகளையும், தமிழ்வட்டார வழக்குகளையும் பார்ப்பது நுணுகிய சொல்லுறவுகளைக் காட்டும். [காட்டு: நல் எனும் சொல்லடி இன்றும் தெலுங்கில் கருமையை உணர்த்தும். எரியும் விளக்கை ”நல்லா வை” என்று சிவகங்கைப் பக்கம் சொன்னால், ”விளக்கை அணை” என்று மங்கலமாய்ச் சொல்வதாகும். அதாவது “விளக்கைக் கருப்பாக்கு” என்று பொருள்.]

யா (=ஆச்சா மரம்), சாலம் (=யா), யானை, யாடு, யானம்>ஏனம், ஏனல், யாமம், நாள், நாம், யாந்தை>ஆந்தை, நாகம், நாவல், யாம்பு>ஆம்பி, யாம் = நீர், நீர், யாலம்>ஆலம் = நீர், யாம்>ஆம் = நீர், யாறு, நானம், யாமன்.யமன், யாயம்>ஆயம் = முகில், மறைவு, கமுக்கம், யாணம்> சாணம் ..... இப்படிப் பல சொற்களை அருளி அப்பொத்தகத்தில் காட்டுவார். அவர் பொத்தகத்தில் இருந்து இதற்கு முன்னும் பல செய்திகளை நான் என் முந்தையக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.]

ஆழநீர் கருப்பாய்த் தோற்றமளிக்கும். கடலில் 4,5 மீட்டர்கள் கீழே போனால், கதிரவன் ஒளிபுகாது இருள் சூழும். ஆழம்கூடிய பேராறு கருமைப் பொருளால் கங்கை யென்றாகும். [கல்ங்கை>கங்கை. இந்திய ஆற்றுப் பெயர் பலவும் தமிழ் மூலம் காட்டும். இதைச் சொன்னால் “ஓ, தமிழ்வெறியன்” என்று பலர் உரைக்கக் கூடும் :-). காலம் கெட்டுக்கிடக்கிறது. தமிழ் எழுந்துவிடக் கூடாது என்பதில் பலரும் கவனமாய் உள்ளார். தமிழர் தாம் விழிக்காது சோம்பல் உற்று உள்ளார். ] மெதுவாய்ப் போகும் ஆற்றில் பாசி, காளான், புதர் ஆகியவை ஆற்றுப்படுகையில் மண்டுவதால், இந்த ஆறு கருந்தோற்றம் காட்டிப் பெயர் கொள்ளும். கருநபெருநை> கண்ணபெருநை> க்ருஷ்ண பெண்ணை>  க்ருஷ்ணா என்ற பெயர் இப்படி எழுந்ததே. [எல்லா ஆற்றுப் பெயரும் கருமை அடித்தளம் கொண்டவையல்ல. கருமைக்கு மேலாக வேறு நிறங்களில் விளைந்தவை வெள்ளாறு - வெள்குவதி - வேகவதி> வேகை> வைகை, (இன்னும் 2 வெள்ளாறுகளும், காஞ்சிக்கு அருகில் இன்னொரு வெள்கவதி> வேகவதியும் உண்டு.), சுள்ளியம் பேராறு - silver river - பெரியாறு, செம்பாறு - copper river - தாம்ப பெருநை, பொன்னாறு - gold river - பொன்னி ஆகியவை யாகும். பல்வண்ண ஆற்றுப்பெயர்கள் தெற்கே மட்டுமின்றி வடக்கிலும் உண்டு. அவற்றை அலசினால் தமிழின வரலாற்று மூலம் கிட்டும்.]

அதேபொழுது, யா>யார்>யாரு>யாறு>ஆறு எனும் பொதுச்சொல் கருமையில் எழுந்ததே. ஒரே தடத்தில் போவதால் தடம், வழி, நெறி என்ற வழிநிலைப் பொருள்கள் யாறு என்ற சொல்லுக்குப் பின்னால் எழுந்தன. ஆனாலும் முதல்நிலைப் பொருள் கருமையே. பின் எப்படி வெள்ளாறு போன்ற வண்ண ஆற்றுப் பெயர்கள் எழுந்தன என்று கேட்டால், கடலை எண்ணெய் போலத்தான் சொல்ல வேண்டியுள்ளது. எப்படி எள்ளில் இருந்து எள்நெய் தோன்றி அதன் விதப்புப் பொருள் மறைந்து எண்ணெய் எனும் பொதுமை ஏற்பட்டதோ, அதேபோல யாற்றின் விதப்பான கருமை அழிந்து ”நீரோட்டம்” எனும் பொதுமை மிஞ்சியது. பின்னால் வெள்ளை, வெள்ளி, செம்பு, பொன் எனும் நிறங்கள் ஆறுகளுக்குப் பெயரடைகளாய் மாறின. ஆனாலும் யார்>ஆர்>ஆறு என்பது நீர்ப்பொதுமையே குறித்தது. இது யார்>ஆர்>ஆல் என மேலும் திரிந்து நீரைக் குறிக்கும். யா>யால்> யாலம்>ஆலம் என்ற வளர்ச்சியும் பெறும்.

வெப்பநாடான நம்மூரில் காலங்கெட்டு திடீரென்று, வானத்தின் தலைகீழ் மாற்றத்தால் ஆலங்கட்டி மழை பொழிவதைப் பார்த்திருக்கிறீரா? அது என்ன ஆலங்கட்டி? வேறு ஒன்றுமில்லை நீர்க்கட்டி/பனிக்கட்டி இதை hailstone என்று ஆங்கிலத்திற் சொல்வார். [க.து. ஆலிகல், ம. ஆலிப்பழம், குட.ஆலிகய், பட ஆனிகல்லு. க. ஆலி, ஆணி, ஆரி, பட. ஆனிகல்லு; கோத. அரகசு; தெ.குரு. மால், குட ஆலி; து ஆலிகல்லு, குவி, ஆஜி, பர் ஏதிர், ஏயிர் - ஆகத் தமிழிய மொழிகளில் எல்லாம் பரவலாய் உள்ள சொல்.] சிறு சிறு கற்களைப்போல வானத்தில் இருந்து நீர்க்கட்டி மழை கொட்டுகிறது. விழுந்த வேகத்தில் தரைச் சூட்டில் ஆல் [ஆலம், ஆலங்கட்டி, ஆலி] உருகிக் கரைந்து போகிறது. [ஆலித் தண் மழை - ஐங்குறுநூறு 437; ஆலஞ்சேர் கழனி தேவா.2.81.7 என்ற காட்டுக்களை இங்கு ஓர்ந்து பாருங்கள்.] ஆகப் ice/பனிக்கட்டியைத் தெரியக் குளிர்நாட்டில் வாழத் தேவையில்லை. வெப்ப நாடாயினும் தெரிந்து வைத்து, இலக்கியத்தில் நாம் பதிந்திருக்கிறோம். ஆல், ஆலம், ஆலி என்ற சொற்கள் குளிர்நீரையும், பனிக்கட்டியையும் குறித்தவையே. ஆலம் பால் என்ற சொல்லும் ஆலங்கட்டி நீரைக் குறிக்கும். ஆலு என்ற சொல் நீர்க்குடத்தைக் குறிக்கும். ஆலிஞ்சரம் என்பது நீர்ச்சாடியைக் குறிக்கும்.

ஆலம் என்பதன் திரிவாய் ஆயம்/அயம் என்பதும் தமிழில் நீரைக் குறிக்கும். [அயம் திகழ் சிலம்பு - ஐங்குறுநூறு 264.2] O.E. is "ice," from P.Gmc. *isa- (cf. O.N. iss, O.Fris. is, Du. ijs, Ger. Eis), with no certain cognates beyond Gmc. ஆலி என்பது ice-யைக் குறிக்கச் சங்க நூலில் பயன்பட்ட சொல். இன்றோ எல்லாவற்றிற்கும் பனி என்பதையே வைத்து dew, ice இவற்றிற்கு வேறுபாடு காட்டத் தெரியாமற் சுற்றிவந்து இந்த்க் காலம் கிளித்தட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். ஆலிக் குழைவு = ice cream. என்று நாம் சொல்லக் கூடாதா? பனிக் காற்றும் ஆலி மழையும் வெவ்வேறு ஆனவை. ஆலி எனும் சொல் இக்கால அறிவியற் சிந்தனையைத் தமிழில் துல்லியமாய் விளக்கப் பயன்படும் சொல். ஆலி என்ற சொல் மீண்டும் புழக்கத்திற்கு வந்தால் நல்லது. (இது ஏதோ இராம.கி. படைத்ததல்ல. அப்படி எண்ணாதீர்கள்.)

”ஆலம்” என்பதற்கு கடல் பொருளுண்டு. (ம.ஆலம்) மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரை ஆலமென்பார். ஆல் ஆற்றுதல்> ஆலாற்றுதல்> ஆலாத்துதல் = மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரை ஒரு தலைவரின் முன்வைத்து மேலும் கீழுமாய்ச் சுற்றும் தென்பாண்டி வழக்கம் சோழநாட்டிலும் இருந்தது. ஆலிப் பொருள் நீண்டு கள்ளையும் குறிக்கும். ”தேனும் ஆலியும் தீமிசைச் சிந்தியே” என்ற தொடர்- கந்தபு. அசுரயாக. 71 - இல் வரும். புறம் 298 இன் ஆசிரியர் பெயரை ஆவியாரென ஒரு பாடமும், ஆலியாரென இன்னொரு பாடமும் உள்ளதாய் ஔவை சு. துரைசாமியார் சொல்வார்.

எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் எயில் முற்றி
வாய்மடித்து உரறி நீ முந்தென் னானே!

எனும் கரந்தைப்பாட்டு அது. கள்பற்றிப் பேசி அரசனுக்கும் போர்வீரனுக்கும் இடையே இருக்கும் அக்கறையைப் புலவர் இங்கு பேசுவார். ஒருவேளை ஆலியார் என்ற பாடம் கள்ளை வைத்துப் பாடியதால் எழுந்ததோ, என்னவோ?

யாலி>யாளி>ஞாளி>நாளி என்ற வளர்ச்சியிலும் கள் என்ற பொருள் யாழ் அகராதியில் சொல்லப்பெறும். கள் எனும் பொருளில் ”ஞாளி” எனும் சொல்லை பிங்கல நிகண்டு பதிவுசெய்யும். திசைகள் எனும் என் கட்டுரைத் தொடரின் 4 ஆம் பகுதியில் தென்னை பற்றிச் சொல்லியிருப்பேன். பனை நம்மூர் மரம். தென்னை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இறக்குமதியான மரம். பனையில் பனங்கள் போலவே, தென்னையிலும் கள்ளிறக்க முடியும். பனங்கள் சற்று கடுக்கும்; தென்னங்கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெலாம் வெறியக் காடி - acetic acid பண்ணும் வேலை. தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்கு மரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. ”கள்மரம் எனும் குறிப்பே, தென்னை நம்மிடம் இயல்பாய் எழுந்ததல்ல; இறக்குமதியான மரம்” என்று உணர்த்திவிடும். தெல்லிற்கு மாற்றாய் நாளியைப் பயன்படுத்தி நாளிகேரம் என்ற சொல்லை மலையாளத்தில் பயிலும். கள்ளேறும் மரம் நாளிகேறம்>நாளிகேரம். இது நம் தேவாரத்திலும் பயின்றிருக்கிறது. “வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை” தேவா. 106.5. நாளிகேளம், நாரிகேளம் என்றெல்லாம் விதம் விதமாய் இச்சொல் பலுக்கப் படும். ஆலியெனுஞ் சொல் எப்படியெல்லாம் திரிந்திருக்கிறது என்று பாருங்கள்.

நாலாயிரப் பனுவலில் ஆலிலை, ஆல், ஆலி என்பதை ”ஏழுலகமும் தன்னுள் அடக்கி ஆலிலைமேற் படுத்த கதையாய்” உரைகாரர் சொல்வார். [ஆலிலைக் கதைபற்றிய காட்டுக்கள் நாலாயிரப்பனுவலில் பரந்தன. அவை சொல்லி மாளாது.] அப்படிக் கருப்புவெளுப்பாய்ப் பலவிடத்தும் சொல்லலாமெனினும்  எல்லாவிடத்தும் முடியாதென்பது என் துணிபு. அதோடு ஆலிலையே நீர்ப் பரப்பைக் குறிக்கும் உருவகமென்ற ஓர்மையும் உண்டு. ஏனெனில் உலகம் அழிந்த பின் ஆல இலை ஏது? அதோடு, பாற்கடல், பால்வழி மண்டலத்தைக் (milky way) குறிக்கும் குறியீடு எனில், ஆலி அப் பால்வழியைக் குறிக்காதோ? ஆகாச கங்கை கூட பால்வழியையே குறிப்பிடுகிறது என்பார். பாற்கடலை ஆலி என்பதும், பாற்கடலில் இறைவன் பள்ளிகொண்ட இடம் ஆலிநகர் என்பதும் இன்னொரு வகை உருவகமாகும்.

அடுத்து, திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் பழஞ்சோழநாட்டின் சிறுபிரிவான ஆலிநாட்டைச் சேர்ந்தது. அது என்ன ஆலி நாடு? வேறொன்றும் இல்லை தண் நீர் சூழ்ந்த புனல் நாடு. காவிரி கடலைச் சேர்வதற்கு 50, 60 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) முன்னே அதில் கிளையாறுகள் தோன்றிவிடும். ”காவிரிச் சமவெளி” என்கிறாரே, அப்புலம் இக்கிளையாறுகளால் தோன்றியது. கிளை யாறுகளில் இருந்து கால்வாய் வெட்டி வயலுக்கு நீர் கொண்டு போயிருப்பார். சில இடங்களில் குளங்கள், ஏரிகள், புழைகள் இப்படிப் பல நீர்நிலைகள் மாந்த முயற்சியில் கூடிக்கிடக்கும் என்பதால் நீர்நாடாயிற்று. நீர்நாடு = ஆலிநாடு.

ஆலிக்கு கலப்பைப் பொருளுமுண்டு. அதைக் குறிக்கும் பெயர் திருநாங்கூர். (நாங்கின் இன்னொரு திரிவு நாஞ்சு>நாஞ்சில். குமரி மாவட்டத்திலுள்ள பெயர்.) திருமங்கையாரின் சொந்த ஊருக்கருகில் திருநாங்கூர் இருந்ததால், அதைச்சுற்றி அவர் பெரிதும் பாடியுள்ளார். திருவாலி/திருநகரியில் அருள் பாலிப்பவன் திருவாலியம்மான். அங்கவன் கோலம் வீற்றது திருக்கோலம். திருநகரி, திருமங்கையார் பிறந்தவூர். (நாங்கூருக்கருகில் திருவெள்ளக்குளம் திருமங்கையாரின் மனைவி குமுதவல்லி தோன்றிய ஊர்.) திருவாலிநாடர் என்றபெயரும் திருமங்கையார்க்குண்டு. ”அணியாலி, திருவாலி, தென்னாலி, வயலாலி, புனலாலி, எழிலாலி” என்றெலாம் விதம் விதமாய் வண்ணிப்பார். முன்சொன்ன பாற்கடலின் ஆலிநகரும், ஆலிநாட்டு ஆலிநகரும் பிணைந்து கிடக்கும் பாசுரங்கள் பலவுண்டு. காட்டாக ஒன்றைக் கீழே கொடுக்கிறேன்.

நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததது போல்
வேலைத் தலைக்கிடந்தாய் அடியேன் மனத்திருந்தாய்
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து எங்கும்
ஆலைப்புகை கமழும் அணியாலியம்மானே! பெரிய திருமொழி 3.5.2

இங்கே முதலிரண்டு வரிகளில் பாற்கடலும், பின்னிரு வரிகளில் திருவாலியும் பேசப்பெறும். “ஆலின் மேலால் அமர்ந்தான்” என்ற தொடருக்குப் பொருளாய், திவ். திருவாய். 9.10.1 க்கான ஆல் = நீர் என்ற பொருளை ஈடு உரை சொல்லும். இன்னும் 2 பாட்டுக்கள் பெருமாள் திருமொழியில் வரும்.

“ஆலியா அழையா அரங்கா என்று
மாலெழுந்தொழிந்தேன் என்றன் மாலுக்கே - பெருமாள் திருமொழி..3.2

அது என்ன ஆலியா? ஆலியன் = கூத்தாடி என உரைகாரர் சொல்வார். ஆனால் எந்த அகரமுதலியிலும் அப் பொருளை நான் காணவில்லை. ஆனால் ஆலி = கடல் உண்டு. இது பாற்கடலோனைக் குறிக்கலாம். திருவாலியம்மானையும் குறிக்கலாம். இன்னொரு பெருமாள் திருமொழியில் ஆலிலையும் பேசப்பெற்று, ஆலிநகர்க்கு அதிபதியே எனப் பிரித்தும் பேசப் பெறும்.

ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளைய வாணத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ - பெரு.8.7.

மேலே இவ்வளவு ஆழமாய் ஆலி, ஆலத்தைப் பார்த்ததற்குக் கரணியம் உண்டு. ஏனெனில் ரகர/லகரப் போலியில் ஆலம் ஆரத்தையும் குறிக்கும். இனி யாரம்>ஞாரம்>நாரம் எனும் திரிவைப் பார்ப்போம்.

யார்>யாரு>யாறு>ஆறு, யார்>ஆர்>ஆரு>ஆறு என்ற விளக்கத்தில் நீரோட்டம் பற்றி முன்னே பார்த்தோம். யார்>யாரம் என்பது கூட இன்னொரு இயலுமை தான். யாரத்தின் யகரம் நீத்த ஒலிப்பு ஆரம் ஆகும். ஆரம் என்பது கண்ணிலிருந்து வீழும் நீர்த்துளி என்ற பொருள் அகர முதலிகளில் உண்டு. அடுத்து சிப்பிகளின் நீர்த்துளியாய்த் தொடங்கிச் சுண்ணாம்பு சேரச் சேர உருவாகும் முத்து, ஆரம் எனப்பெறும். ஆரம் எனும் முத்திற்கு நீர்த்துளித் தொடர்பு இருப்பதாகவே சொற்பிறப்பு அகரமுதலி சொல்லுகிறது. ஆனால் ஞாரத்தை அகரமுதலிகளில் நான் காணவில்லை. நீர்ப்பொருளில் நாரம் உண்டு. “நார நின்றன போல் தோன்றி” என்ற கம்பரா. நட்பு .31 மேற்கோளும் உண்டு. நாரத்தை உள்ளிருத்திக் கொண்டது மேகம். அது நாரதம் எனும் இருபிறப்பிச் சொல்லால் சுட்டப்படுகிறது. (நாரதன் என்கிற பெயரும் இதன் தொடர்பே.) நாரநிதி என்ற சொல் நீர்மலையாகிய கடல் என்ற பொருளை உணர்த்தும். நாரன் = நீரைச் சேர்ந்தவன். நாரணன் = நீரோடு சேர்ந்தவன். நாராயணன் = நீரை இடமாகக் கொண்ட திருமால்.

அடுத்து ஒரு குழூஉக் குறிச்சொல்லாகத் தண்ணீர் விட்டான் கிழங்கிற்கு நாராயணி என்ற பெயர் உண்டு. இதைச் சதாமூலிக் கிழங்கு என்றும் சொல்வார் [Asparagus racemosus என்பது புதலியற் பெயர்.] இது தாறுமாறாகக் கொடிவிட்டுப் படரும் பூண்டுவகையைச் சேர்ந்தது. பித்தநோயைத் தீர்ப்பதற்குத் தண்ணீர் விட்டான் கிழங்கு கைகண்ட மருந்தாகும். இக்கிழங்கு நீளமாகவும் வெண்ணிறமாகவும், சதைப்பற்று மிக்கதாயும் இருக்கும். அம்மைநோய் அகல, இக்கிழங்கினைத் தண்ணீரில் ஊறவைத்துத் துகள் ஆக்கிப் பாலிற்கலந்து பருகுவர். நீரிழிவு, எலும்புருக்கி, கவட்டைச் சூடு, மிகுசளி முதலான அனைத்து நோய்களையும் போக்கி இக்கிழங்கு ஆண்மை பெருக்கும் என்று சாம்பசிவ மருத்துவ அகரமுதலி கூறும் - செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி நான்காம் மடலம் முதற் பாகம்] நீர்க்கிழங்கு நாராயணியானது ஒரு முகன்மைக்குறிப்புத் தானே?

சிவனும் மாலும் ஒருவருக்கொருவர் எதிர்மறை என்று எண்ணிப் பார்த்தால் ஒருவர் நெருப்பு, இன்னொருவர் நீர் என்பதும், ஒருவர் சிவப்பு, இன்னொருவர் கருப்பு என்பதும், இது போன்ற பல்வேறு உருவகங்களும் நாரம் = நீர் என்ற பொருளை நாம் ஏற்க வைக்கின்றன. இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் பேரில் நாரன்>நாரணன் (= நீரில் உறைபவன்)தமிழ்ச்சொல் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் முற்றிலும் முடிவு செய்யும் சான்றுக்கு (clinching evidence) நான் காத்திருப்பேன்.


அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 26, 2009

தமிழ்மணம் பற்றிக் காசி கேட்டதும் என் மறுமொழியும்

தமிழ்மணம் திரட்டி ஐந்தாண்டு நிறைவு செய்வதையொட்டி, கீழே வரும் கேள்விகளைக் காசி எனக்கு அனுப்பி மறுமொழிக்கச் சொல்ல, அதற்கு மறுமொழிகளை நான் அவருக்கு அனுப்பி ஒரு மாதம் இருக்கும். இப்பொழுது, ”உங்கள் பதிவிலேயே போடுங்களேன்” என்ற அவர் யோசனையை ஏற்று என் வலைப்பதிவில் இடுகிறேன். இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் என்னைப் பங்கு கொள்ளச் செய்த காசிக்கு நன்றி.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

1.1. இணையத் தமிழ் உள்ளடக்கங்கள் வெவ்வேறு குறியேற்றங்களில் (TAB, TAM, TSCII, ISCII, Srilipi, Bamini, unicode,....) .உள்ளன. ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு மாற்றிப் புரிவதற்குள் “தாவு” தீர்ந்து விடுகிறது. “அடச்சே, இந்தத் தொந்தரவு வேண்டுமா?” என்ற அயர்வில், ஆங்கில உள்ளடக்கங்களுக்கே நம்மில் பலரும் ஓடுகிறோம். வலைத்தளங்களுக்கு வருபவர் அங்கிருப்பதை வெட்டி, ஒட்டிக் கவர்வது போலவும், எனவே சொத்தைக் காப்பாற்றுதல் முகன்மை போலவும், வலைத்தளக்காரர் எண்ணிப் ”பொதுக் குறியேற்றத்திற்கு வரமாட்டேம்” என்று அடம் பிடிக்கிறார்கள். இதன் விளைவாய் இணையத்தில் ஒரு தமிழுக்கு மாறாய், ஓராயிரம் தமிழ்கள் இருக்கின்றன. வளர்ச்சிக்கு உகந்ததில்லை என்று எவ்வளவு மன்றாடினாலும், ”ஒற்றுமையா? வீசை என்ன விலை?” என்று கேட்கும் தமிழ்க் குமுகாயம் இதை மாற்றாதிருக்கிறது. [வெட்டி ஒட்டும் வேலையில் சரியும், தவறும் இருக்கின்றன. அதைத் தடுத்து நிறுத்தவும் நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து, தனித்தனிக் குறியேற்றங்களில் வலைத்தளங்கள் செய்வது தமிழரிடையே கருத்துப் பரிமாற்றத்தையே குலைக்கிறது.]

அதிகமாய்த் தமிழில் புழங்கவேண்டுமானால், எல்லோரும் ஒரே குறியேற்றத்திற்கு வரவேண்டும். இன்றைக்குப் பரவலான ஒருங்குறியில் இது அமையுமானால் எனக்கு ஒப்புதலே. (அதே பொழுது, ஒருங்குறியை நான் குறை சொல்வது ஏனென்று வலையில் குறியேற்றம் பற்றி உரையாடுகிறவர்களுக்குத் தெரியும். நான் பெரிதும் விழைகின்ற, தேர்ந்த கணி வல்லுநர்களால் அரசாணைக்குப் பரிந்துரைக்கப் பட்ட, 16 மடை TANE/TACE குறியேற்றம் இற்றைத் தமிழக அரசின் மேலிடத்திற்கு நெருங்கியவர்களிடம் தூங்கிக் கொண்டிருக்கிறது. அன்றாட அரசியலே குறியாகிப் போன நிலையில், ”TANE/TACE புழக்கத்திற்கு வருமா?” என்று நான் அறியேன்.) அதற்கிடையில், குறியேற்றங்கள் மூலம் தமிழில் தனிப்பாத்தி கட்டும் வலை அவலங்களைப் பல்வேறு களங்களில் எடுத்துச் சொல்லி, நாம் ஓர் இயக்கமாய் மாறி, ஒருங்குறி நோக்கி ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

1.2. தமிழில் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், வெட்டியரசியல், மொக்கை எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, [யாரும் சண்டைக்கு வராதீர்கள்; அது நம்மில் கூட இருக்கிறது என்றே சொல்கிறேன்.] மற்ற துறைசார்ந்த உள்ளடக்கங்களைப் பெருக்க வேண்டும். ”கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், வெட்டியரசியல், மொக்கை” க்கு மட்டுமே தமிழ், மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் என்ற நிலை தொடர்ந்தால், தமிழ்ப் பயன்பாடு எதிர்காலத்தில் அருகிப் போகும். தமிழை எல்லாத் துறைகளிலும் கணிவழி பயன்படுத்த என்று நாம் முன்வருவோம்? பாட்டன், முப்பாட்டன்..... இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகள் தமிழைக் காப்பாற்றி நடந்த தொடரோட்டத்தில் நம்மிடம் கொடுத்த பொறுப்புக்களை நாம் ஏன் தட்டிக் கழிக்கிறோம்?

1.3. ஒருபக்கம் தமிழ் உள்ளடக்கங்களைக் கூட்டச் சொல்கிறோம். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில், 4000 சொச்சம் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) ”தமிழைச் சொல்லிக் கொடுக்க மாட்டேம்” என்று வல்வழக்குச் செய்து தமிழ்க்கல்விக்கே கண்ணிவெடி வைக்கின்றன. தமிழக அரசும் இதற்குத் துணைபோகிறது. பெரும் சூழ்ச்சிகளால் இளையரைத் தமிழாளுமையில் இருந்து பிரித்துத் தமிழ்ப் பயன்பாடு குறைக்கப் படுகிறது. இதுபற்றிய புரிந்துணர்வைக் கூட இணையத்தில் எழுதமாட்டேம் என்கிறோம். சூடறியாத் தவளை, வெதுப்பு நீரில் சொகம் காண்பதாய், நாம் இருக்கிறோம். வெறும் அச்சிதழ்கள், தொலைக்காட்சி ஓடைகள் போலவே செயற்பட்டு, பின்னூட்டு மாயையிற் சிக்கி, தமிங்கில நடையே இணையத்திற் பயன்படுத்தினால் அப்புறம் தமிழ் உள்ளடக்கம் இருக்குமா? தமிங்கிலம் தான் இருக்கும். கட்டுப்பாட்டோடு இயக்கமாய்ச் செயற்பட்டு நாம் மாறினால், நம்மைச் சுற்றியுள்ளோரும் மாறுவர். அச்சிதழ்கள், தொலைக்காட்சி ஓடைகளும் மாறும். அரசியல்வாதிகளும் மாறுவர். வலைப்பதிவர் தமிங்கிலத்தைக் குறைத்துக் கொண்டால் என்ன?

1.4. தமிழ் உள்ளடக்கத்திற்கு முன்னோடி தமிழை உள்ளிடச் சொல்லிக் கொடுப்பதே. 8 கோடித் தமிழரில், சிறாரை ஒதுக்கி மற்றோர் குறைந்தது 4 கோடி தேறுவர். இவர்களில் கணி, இணைய வசதியுள்ளவர் 50 இலக்கமாவது இருப்பர். [சொந்தமாய் வசதி வேண்டாம். ஓர் உலாவி நடுவம் (browsing centre) போக வாய்ப்பிருந்தால் போதும்.] ஆனாலும், தமிழ் வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், ஊடாடுவோர், மின்வணிகத்திற்கு முனைவோர், மின் - அரசாளுமை பயன்படுத்துவோர், என்று பார்த்தால் 50000 தேறுவரா என்பது கேள்விக் குறியே!. குறைந்த செலவில் (அன்றி எந்தக் காசும் செலவழிக்காமலே) கணிக்குள் தமிழை உள்ளிடச் சொல்லிக் கொடுக்க இன்று ஆட்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு மண்டபம் அருகே நடத்திய வலைப்பதிவர் பட்டறை இன்னும் நினைவில் நிற்கிறது. கொஞ்சநாள் அங்கும் இங்கும் தொடர் முயற்சிகள் மற்ற ஊர்களில் நடந்தன. பின் முற்றிலும் நின்றுவிட்டது. இப்பொழுது புதுவைத் தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன் மட்டும் சில ஊர்களில், நடத்துகிறார். பாராட்ட வேண்டும்; இதெல்லாம் பற்றுமோ?. மீண்டும் இயக்கமாய் மாறி, “தமிழ் உள்ளிடுவதைச்” சொல்லிக் கொடுக்கும் பட்டறைகள் நடத்த மாட்டோமோ? தமிழ் வலைத்தளங்கள் குறைந்தது ஓரிலக்கம் ஆக வேண்டாமோ? எல்லோரும் அவரவர் வேலைகளுக்குள் ஆட்பட்டுப் போய்விட்டோம். ஆர்வலர் இன்றி தமிழ் உள்ளடக்கங்கள் எழாது. எப்பொழுது நாம் திரளுவோம்?

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்)இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

2.1. உள்ளுரும நுட்பத்தின் (information technology) முழுப் பயனையும் தமிழ்க் குமுகாயம் துய்க்கவில்லை. இன்னும் கணி, இணையங்களின் பயன்பாடு மேற்தட்டு, நடுத்தட்டுக்காரருக்கு மட்டுமே கிடைக்கிறது. மடிக்கணி விலையோ யானை விலையாய் இருக்கிறது. பரிச் சொவ்வறைகள் (free softwares) எளிதாய்க் கிடைக்க வேண்டும். கணியைத் தமிழால் அணுக முடியும் என்பது பலருக்கு விளங்க வேண்டும். இன்னும் “மூட மந்திரமாய்க்” கணி காட்டிப் பணம் பறிக்கும் வேலை தொடர்கிறது. குறைந்த காசில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது இருக்கிறது. மின்னஞ்சல் கூடியிருந்தால், “courier" கொள்ளை கூடுமோ? இந்திய அஞ்சல் துறை படுத்து நெடுநாட்கள் ஆகிவிட்டன.

2.2. இப்பொழுது கைபேசிகள் பெருகியும், ”அவற்றின் வழி தமிழ்க் குறுஞ்செய்திகள் அனுப்ப ஏலாது” என்றே பலரும் அறிவுறுத்தப் படுகிறார்கள். கைபேசிச் சேவைக் குழுமங்களும் (cellphone service companies), இதைச் செயற்படுத்த முட்டாள்தனமாய் மறுக்கிறார்கள். தமிழ்ப் பயன்பாட்டை வலியூட்ட சில செயல்களை அவர்கள் செய்யவேண்டும். காசு செலவழிக்க வேண்டும். இருப்பதை வைத்தே மீன்பிடித்து, கீழ்த்தட்டு மக்களிடையே தேவை ஏற்படுத்தி அரைகுறை ஆங்கிலத்தைக் கற்க வைத்தால் பின்னால் ஆங்கிலவழி அதிகாரம் நீடிக்கும் என்றே நடைமுறைகள் இருக்கின்றன. எல்லாம் மடிக்குழைத் (matriculation) தந்திரம் தான். அகில இந்திய மாறுகடை (all India market) என்ற கானல் நீரைக் காட்டி, மாநில மொழிகளில் நடத்த வேண்டிய சேவைகளை எங்குமே ஒழிக்கிறார்கள். தமிழில் மின்னரட்டை செய்பவர்களும் குறைச்சலே. மின்னஞ்சல் செய்யத் தெரியாதவர்கள் மின்னரட்டை எப்படிச் செய்வார்கள்?

2.3. அனைத்திந்திய மாறுகடையைக் கட்டி, இன்றைய ஆளும் வருக்கத்தின் இரும்புப் பிடியை இறுக்குதற்காய், குமுகாயம் எங்கணும் ஒய்யாரமாய் ஆங்கிலம் பேசுபவர் தொகையைக் கூட்டும் வண்ணமே பல செயல்கள் நடக்கின்றன. நாமோ, பெரும் ஏமாளிகளாய் இருக்கிறோம். ”தமிழினத்தை ஒழிக்கத் தமிழை ஒழிக்க வேண்டும்; தமிழைப் பயனற்றது என்று ஆக்க வேண்டும்” என்ற குறிக்கோளே நம்மைச் சுற்றிலும் இருக்கிறது. எந்த அரசு அலுவம், தனியார் அலுவத்திற்குப் போனாலும், தமிழிற் பேசினால் சீந்துவார் இல்லை, ஆங்கிலத்தில் ஏதேனும் பரட்டினால் “yes sir yes sir three bags full" என்ற குழைவு உடனே கிடைக்கிறது. அப்புறம் தமிழிளையர் எதிர்காலத்தில் தமிழ் உள்ளடக்கங்களுக்கு வருவார்களோ?

2.4. மின்வணிகம்: பக்கத்தில் தெருமூலையில் இருக்கும் அண்ணாச்சி கடையில் இன்று கணியும், அச்சியும் (printer) இருக்கின்றன. ஆனால் ”என்ன வாங்கினோம்?” என்பதற்கான பெறுதிச் சீட்டு (receipt) ஆங்கிலத்திலேயே தருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் கணக்கீட்டுச் சொவ்வறையும் (accounting software) ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. இதன் விளைவாய் ஆங்கிலம் தெரிந்த பெண்/பையன் கல்லாவில் வேலைசெய்கிறாள்/ன். நாலாவது ஐந்தாவது படித்த பெண்/பையன் பண்டங்களை எடுத்து வைக்கிறாள்/ன். மீண்டும் ஒரு சாதிப் பாகுபாடு கணித் துணையோடு வேறு உருவத்தில் அமைகிறது. ஆங்கிலம் படித்தவன் பத்தாயிரக் கணக்கிலும், தமிழ் படித்தவன் ஆயிரக்கணக்கிலும் கூலி பெறுகிறான். ”வாங்கிய பொருளும், பெறுதியில் அச்சடித்திருப்பதும் விலை, எண்ணுதியில் (numerical) ஒன்றுதானா? ஏமாற்று நடந்திருக்கிறதா?” என்று ஆங்கிலம் தெரியாதோர் கவைத்துப் பார்க்க (check - சரிபார்க்க) முடியாது. ஒரு பெரிய ஏப்பம் தான். தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக் கடைகளில் தமிழில் பெறுதி கொடுக்கும் வழக்கம் ஒழிந்தே போனது. நம் கண்ணெதிரே தமிழ் வாணிகம் அழிகிறது. முன்பு மொத்த வாணிகத்தில் (wholesale) தமிழ் இல்லை; இப்போது சில்லறை (retail) வாணிகத்திலும் தமிழ் அழிகிறது. வெறும் வாயளவில் உசாவத் தமிங்கிலம் பயில்கிறார்கள்.

2.5. இது போலவே இருள்வாய் (railway) நிலையங்களில் தரும் பயணச்சீட்டு முற்றிலும் ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் இருக்கிறது. தமிழைக் காணோம். எந்த இணையக் கடை தமிழில் இருக்கிறது (ஒன்றிரண்டு தவிர) சொல்லுங்கள்? இவற்றிலும் உள்ளீட்டுச் சிக்கல் ஈயென்று இளித்து நிற்கிறது.

2.6. கட்டணம் செலுத்தல்: அன்றைக்கு ஒருநாள் சென்னை மாநகரக் குடிநீர் வாரியம் (metrowater), தமிழக மின்சார வாரியம் (TNEB) போன்றவற்றில் நுகர்வுக்குத் தக்கப் பணம் கட்டி வருகிறேன். பெறுதிச் சீட்டுகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. உண்மையில் தமிழ்க் குடிமக்களை சுற்றியிருக்கும் அரசு/ தனியார் நிர்வாகத்தினர் “தமிழைத் தொலை, தமிழைத் தொலை” என்று அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? பெரிய தனியார் நிறுவனமான குத்தகைப் பேருந்து உரிமையாளர் “KPN travels" ஆங்கிலத்தில் தான் பயணச் சீட்டுக் கொடுக்கின்றனர். சில அரசுப் பேருந்துக் குழுமங்களும் அவர்களின் நடத்துநர் கைகளில் உள்ள நகர் அச்சிகளின் (mobile printers) மூலம் ஆங்கிலத்தில் தான் பயணச்சீட்டு அச்சடித்துக் கொடுக்கிறார்கள். இதனால் நம் பேரிளம்பெண்கள் கூட ABCD ....என்று எழுத்துக் கூட்டிப் படிக்கத் தள்ளப்படுகிறார்கள். பின் ஏன் தங்கள் பேரப்பிள்ளைகளை இங்கிலிப்பீசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க கிழவிகள் முயல மாட்டார்கள்? நம்மைச் சுற்றிலும் ”ஆங்கிலம் படி, ஆங்கிலம் படி” என்று சூழல் வலியுறுத்தும் போது, அப்புறம் தமிழாவது ஒன்றாவது? நண்பரே! மனம் சலித்துப் போகிறது. ஒரு பெரும் பேயிடத்தில் தமிழினம் மாட்டிக் கிடக்கிறது. மாட்டியதை உணரக்கூட நமக்கு வக்கு இல்லை.

2.7. அரசாணைகள் தமிழில் வருகின்றன. ஆனால் அவை உப்புக்குச் சப்பாணிகளே. ஆங்கில G.O தான் இடைப்பரட்டில் (interpretation) முன்னுரிமை பெறுகிறது. தமிழக அரசுச் செயலகத்திற்குள் போய்ப் பாருங்கள், உப்புக்குச் சப்பாணி வேலை எவ்வளவு நடக்கிறதென்று தெரியும். [வேதிப் பொறியியல் நிர்வாகம் செய்த காலத்தில் தமிழக அரசுச் செயலகத்துள் 7,8 ஆண்டுகளாவது மேலிருந்து கீழ்வரை புகுந்து வெளியே வந்திருக்கிறேன். ”தமிழ் முதல்” என்று ஆட்சியாளர் சொல்லுவதெல்லாம் படம் காட்டுதலே.] அரசு அங்கங்களிடம் தமிழில் சேவை பெற்றால், நடுவே இருக்கும் இடைத்தரகர்கள் (brokers) எல்லாம் ஒழிந்து போவார்கள். எனவே ஒருநாளும் தமிழ்ச்சேவை தமிழகத்திற் பெருகாது. அரசை ஒட்டி எத்தனை முகவர் (agents), இடைத்தரகர் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்கள்?

(ஞாய விலைக் கடைகளில் பண்டங்கள் வாங்குதற்கான குடும்ப அட்டை பெறுவதில் கூட ஏராளமாய் இடைத்தரகர், முகவர் இருக்கிறார்கள். எல்லாம் ஆங்கிலப் படிவம் தான். அந்த அலுவங்களுக்கு முன்னால் மரத்தடியில், காசைக் கொடுத்து ஆங்கிலப் படிவம் நிரப்பிக் கொள்ளும் மக்கள் எத்தனை பேர்? அரசின் சலுகைகளைப் பெற்றுத் தருவது ஓர் ”ஒருங்கிணைந்த வியாபாரம்”) நண்பரே! இங்கெல்லாம் கணிவழி தமிழ் நுழைந்தால் அப்புறம் அத்தனை பேரும் “காலி”. ”தமிழை உள்ளே விடாதே” என்பது தான் அரசு ஒட்டுண்ணிகளின் தாரக மந்திரம். கட்சி அரசியலும் இடைத்தரகர், ஒட்டுண்ணிகளிடம் தான் உள்ளது. அரசியல் மேடைகளில் ”தமிழ், தமிழ்” என்று நாயாய்க் கத்துவார்கள். அரசின் செயற்பாட்டுக்குள் ”தமிழை ஒதுக்கினால் தான்” இவர் எல்லோரும் பிழைக்க முடியும். இதில் இரண்டு பெருங்கட்சிகளும் ஒன்று போலத் தான். இந்தச் சூழ்க்குமம் அறியாத சாத்தாரக் குடிமகனுக்குப் புகலிடமே கிடையாது. அப்புறம் எங்கே தமிழில் உள்ளுரும நுட்பப் ”புரச்சி”? ஒட்டுண்ணிகள் இருக்கும் வரை தமிழைக் கணி வழி நுழைய விடவே மாட்டார்கள். அப்படி நுழைய அடிமுதல் நுனிவரை மாற்றம் வேண்டும். நம் அரசு நிர்வாகம் பெரிதும் புரையோடிப் போய் இருக்கிறது. எனவே இது நடக்காது.

2.8. இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்) பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். குறியேற்றச் சிக்கல் பெரும்பாலான செய்தி, இலக்கிய இதழ்களுக்கு உண்டு. வலை இதழ்களில் ஒருசிலவே ஒருங்குறியில் இருக்கின்றன. குறும்பதிவு தமிழில் இப்பொழுது செய்யமுடியும். ஆனால் அவ்வளவு பரவலாய்ப் பலருக்கும் தெரியவில்லை. வெப் 2.0 மிடையங்கள் பற்றி எனக்கும் தெரியாது. .

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

3.1. இவ்வளவு தொலைவு கணிமைக்குள் தமிழ் நுழைந்ததே தன்னார்வலர்களால் தான். ஈழத்தில் நடக்கும் இன அழிப்பால், 1983-2009 வரை 26 ஆண்டுகளில் ஈழத் தமிழர் குடும்பங்கள் உலகெங்கும் பிரிந்தன. தமிழ் மின்னஞ்சலும், மடலாடற் குழுமங்களும், வலைத்தளங்களும் இவர்களுக்குத் தேவைப்பட்டன. எனவே வளர்ந்தன. தமிழகத் தமிழர்களும், மற்றையோரும் சேர்ந்து கொண்டார்கள். குறியேற்றம், தரப்பாடு, சொவ்வறைகள் என ஒவ்வொன்றாய்ச் செய்யப்பட்டன. மொத்தத்தில் மாறுகடைகளே புதுக்குகளை உருவாக்குகின்றன. (markets create the products.) உண்மை சிலபொழுது சுடும். மற்ற தமிழர் அளவிற்கு ஆங்கிலம் அன்று அறியாத கரணியத்தால், தமிழே பெரிதும் தெரிந்த அடித்தட்டு ஈழத் தமிழ்க் கூட்டம் உலகிற் சிதறுண்டு போனதால் இந்தத் தேவை ஏற்பட்டது. [அவர்களிலும் ஆங்கிலத்தைக் காட்டி மேற்தட்டார் பம்மாத்து செய்தது முற்காலம்.] அந்தத் தேவைகளை நிறைவு செய்யும் முகமாய் தமிழ்க் கணிமைப் புதுக்குகள் ஏற்பட்டன. தமிழகத் தமிழரை ஆங்கில மாயையில் சிக்க வைப்பது 1970 களிலேயே தொடங்கி விட்டது. [அந்தச் சோகக் கதை நீளமானது.] ஆங்கிலத்தின் மூலம் எல்லாம் கட்டுப்படுத்த விழையும் அதிகார வருக்கம் இதுவரைத் தமிழ்க் கணிமைக்கு தமிழகத்தில் என்ன செய்தது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழ்க் கணிமையில் எங்குமே தமிழக அரசு நிர்வாகம் தலைமை நிலை எடுத்து முன்நடத்திப் போகவில்லை. தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதும், ஓடும் மாட்டைத் தடுத்து நிறுத்துவதும் தான் நடந்திருக்கிறது. “இதில் எனக்கு என்ன வருமானம்?” என்ற பார்க்கத் தொடங்கியபின், அப்புறம் தமிழ்க் கணிமையாவது ஒன்றாவது?

3.2. விக்கிப்பீடியா என்பது நல்ல பங்களிப்பே. ஆனால் அதைத் தற்பொழுது இரண்டு குழுவினர் வேறு விதமாய்ப் பார்க்கிறார்கள். முதற்குழுவினர் காலங் காலமாய் தமிழ்க் குமுகாயத்தில் அதிகாரம் ஓச்சியவர்கள். இப்பொழுது நல்ல தமிழில் அங்கு கட்டுரைகள் சேருவதைப் பார்த்து [”விக்கி நிருவாகத்தினர் தனித்தமிழ்த் தாலிபான்கள்; கிரந்த எழுந்தை அனுமதிக்க மறுக்கிறார்கள், அதைத் திருத்துகிறார்கள், இதைத் திருத்துகிறார்கள்” என்று] இல்லாததும், பொல்லாததுமாய் இவர்கள் புறங்கூறுவது ஒருபக்கம். இன்னொரு குழுவினர் கட்சியரசியல் பார்த்து, ”அவர்கள் அதைச் செய்கிறார்கள், இதைச் செய்கிறார்கள்” என்று கோவங் கொண்டு, ”யாரோடு வழக்குச் செய்கிறோம்” என்று புரிதல் இல்லாமல், வெறுமே உணர்ச்சிவயப் பட்டு விக்கிப் பீடியாவில் இருந்து விலகி நிற்கிறார்கள். ஒற்றுமைப் படாத இரண்டு போக்குமே தவறானவை. விக்கிப்பீடியா நிருவாகமும் சற்று நீக்குப் போக்கோடு,
எல்லோரையும் அணைத்து, முன் நகரவேண்டும். விக்கிப்பீடியாவின் பங்களிப்பைக் கூட்ட வேண்டும். அதற்கு மன மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

3.3. என் பார்வையில் விக்கிப்பீடியாவிற்கு உறுப்பினராய்ச் சேர்பவர் கூடவேண்டும். குறைந்தது ஆற்றுவமாய்ப் பங்களிக்க 500 பேராவது சேரவேண்டும். இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் ஓரிலக்கம் தலைப்புக்களில் கட்டுரைகள் அங்கு எழ வேண்டும். அதே போலத் தமிழ் விக்சனரியிலும் பங்களிப்பு கூட வேண்டும். பல்வேறு தமிழ் அகரமுதலிகளும் எந்தக் கட்டணமும் இல்லாமல் இணையத்தில் உசாத்துணையாய் அமையவேண்டும். இதற்குத் தமிழகப் பல்கலைக் கழகங்களும் உதவ வேண்டும். இணையத்தில் உள்ளோருக்கும், தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கும் நடுவில் ஏகப்பட்ட இடைவெளி இருக்கிறது. அது மறைய வேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்ன வகையிலான தமிழ்ப் பயன்பாட்டு browsing விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

வாயால் கேட்கிறீர்கள்! சொல்லுதற்குக் காசா, பணமா? எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். குப்பைத் தொட்டிக்குத் தான் முடிவிற் போகக் கூடும். இருந்தாலும் சொல்லுகிறேன். :-)

4.1. ”ஏம்ப்பா, அந்த TANE/TACE முன்னீடு எங்கேப்பா? அதை எடுத்தாங்க” என்று கேட்டு வாங்கி, “முதல்வர் ஐயா, இந்த அரசாணையை உடனே போடணும் ஐயா” என்று வலியுறுத்துவேன்.

4.2. சொவ்வறைக் குழுமங்களையும் (Microsoft, Apple, Oracle, Adobe etc....) இணையவெளிக் குழுமங்களையும் (Google, Yahoo, Microsoft....etc.) கூப்பிட்டு, TANE/TACE குறியேற்றத்திற்கு ஆதரவு தரச்சொல்லிக் கேட்டுக் கொள்வேன். அப்படித் தரும் குழுமத்துக்குத் தான் அரசாங்கச் சொவ்வறை ஒழுகுகள் (orders) கிடைக்கும் என்றும் சொல்லுவேன். அதே போல திறவூற்றுச் சொவ்வறை (open source software) எழுதுபவர்களையும் TANE/TACE க்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்.

4.3. தமிழ்நாட்டில் விற்கும் அத்தனை கணிகளும் “Tamil enabled Computer" - என்றால் தான் விற்க முடியும் என்று கட்டளை பிறப்பிக்கச் சொல்லுவேன். இதே போலத் தமிழ்நாட்டில் விற்கும், பயன்பாட்டில் இருக்கும் எந்தச் சொவ்வறையும் ”Tamil enabled" என்றால்தான் விற்க முடியும், செயற்பட முடியும் என்று ஆக்குவேன்.

4.4 தமிழக அரசு அங்கங்களும், தமிழகத்தில் இருக்கும் நடுவண் அரசு அங்கங்களும், குடிமக்களோடு ஊடாடும் செயற்பாடுகளும், படிவங்களும் 90 நாட்களுக்குள் “Tamil enabled" ஆக வேண்டும் என்று கட்டளையிடுவேன். நடுவண் அரசு அங்கங்கள் அதை மறுத்தால் உரிய வழக்குத் தொடருவேன்.

4.5 தமிழகத்தின் எல்லா இணைய உலாவி மையங்களில் உள்ள கணிகள் “Tamil enabled" ஆக வழி செய்ய வேண்டும் இல்லையேல் அவர்களின் உரிமம் பறிக்கப் படும் என்று ஆணையிடுவேன்.

4.6 தமிழகப் பல்கலைக் கழகங்களை தொடர்பு கொள்ளும் மாணவர்களும், ஆசிரியர்களும், கல்லூரிகளும் தமிழில் தொடர்பு கொண்டால் தான் மறுமொழி அளிக்க முடியும் என்று அரசின் மூலம் பரிந்துரைப்பேன். அதே போல பட்ட மேற்படிப்பு ஏடுகளில் (thesis, project works etc.....) என்ன துறையாய் இருந்தாலும் குறைந்தது ஐந்து பக்கத்திற்குத் தமிழ்ச் சுருக்கம் இருந்தால் தான் உயர்பட்டங்கள் கிடைக்கும் என்று ஆணையிடச் சொல்லுவேன். இதே போல, எந்தப் பட்டமேற்படிப்பாளனும் , தான் செய்த புறத்திட்டு (project), அல்லது ஆய்வை (thesis) அரைமணி நேரம் தமிழ்படித்தோர் அவையில் சொல்லத் தெரியவேண்டும் என்று வலியுறுத்துவேன். தமிழில் உள்ளடக்கம் வேண்டுமானால் இவை நடக்க வேண்டும்.

4.7 தமிழ்மொழி படிக்காமல் எந்த உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் முடிக்க முடியாது என்று தமிழக அரசுக் கல்வித்துறை மூலம் சட்டங் கொண்டு வர ஒத்துழைப்பேன்.

4.8 தமிழ்நாட்டில் பள்ளியிறுதித் தேர்வுகளை இணையம் மூலமாய் ஒரே நேரத்தில் நடத்த கல்வித் துறைக்கு வேண்டிய உதவிகள் செய்வேன். எழுதி முடித்த பத்தே நாட்களுக்குள் முடிவுகள் தெரியும் படியும் வகை செய்வேன்.

4.9 தமிழறியாமல் தமிழ்நாட்டில் இயங்கமுடியாது என்ற நிலையைக் கொண்டுவர இணைய வழியும், தமிழ்க்கணிமை வழியும், பாடுபடுவேன்.

இப்பொழுது நனவுலகத்திற்கு வருவோமா? இதில் 10 விழுக்காடு நடந்தாலே மிகவும் பெரிது. ஏனென்றால் இன்றைய அதிகார வர்க்கமும், அரசியலாளர்களும், முன்னாற் சொன்ன ஒட்டுண்ணிகளும், அகில இந்திய மாறுகடையை வேண்டி நிற்கும் பெருமுதலாளிகளும், இதைச் செய்ய விடவே மாட்டார்கள். அவர்களின் இருப்பையே ஆட்டிவிடும் அல்லவா? 800
பவுண்டு கொரில்லாவைத் தங்களுக்குப் பக்கத்தில் யாராவது வைத்துக் கொள்வார்களோ?

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

5.1. புதிதாய் வரும் பலரும் ஆர்வமாய் இருக்கிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் மொக்கைகளுக்குள்ளேயே 100க்கு 90 பேர் போய்ச் சேருகிறார்கள். சிற்பம் செய்யக்கூடிய உளியை வைத்து அம்மியும் ஆட்டுக்கல்லும் பொளிந்தால் எப்படி? ”மகிழுங்கள், கொண்டாடுங்கள், சத்தம் போடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை.”. ஆனால், நீங்கள் எழுதுவது 6 மாதங்கள் கழித்து யார் படித்தாலும் பயனுள்ளதாய் இருக்க வேண்டும் என்று எண்ணி எழுதுங்கள். கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் எழுதக் கூடாது என்று ஒருநாளும் நான் சொல்ல மாட்டேன். மற்றவற்றையும் எழுதுங்கள் என்றே சொல்லுகிறேன். நாளாவட்டத்தில் கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் என்பது மொத்தப் பங்களிப்பில் மூன்றில் ஒருபங்கு இருந்தால் நல்லது. நாம் எதில் குறைந்திருக்கிறோமோ, அதை ஈடு செய்வோமே?

5.2. முகமூடி உரையாடல், தனிமாந்தத் தூற்றல்கள், சிண்டு முடிச்சு வேலைகள் - இவை யாருக்கும் நல்லதில்லை. வலைப்பதிவை அரசியலாக்காதீர்கள். இதைச் சரி செய்யவே நேரமும் பொழுதும் போய்விடும். இதன் விளைவாய் ஒரு புது மிடையம் (medium) பயனில்லாது போய்விடும். பழைய அச்சிதழ், தொலைக்காட்சி ஓடைகளுக்கு உல்லாசமாய்ப் போய்விடும். மீண்டும் செக்குமாடு வேலை தான். இது தேவையா? நமக்குள் ஒரு தற்கட்டுப்பாடு வேண்டும்.

5.3. கொஞ்சம் தமிழ் - தமிழ், தமிழ் - ஆங்கிலம் அகரமுதலிகளை வாங்கி வைத்துக் கொண்டு உங்கள் சொற்குவையைக் கூட்டிக் கொள்ளுங்கள். வெறுமே 3000, 4000 தமிழ்ச்சொற்களை வைத்துக் கொண்டு, ஆங்காங்கு ஆங்கிலம் விரவி வலைப்பதிவில் தமிங்கிலம் பயிலாதீர்கள். உங்கள் சிந்தனை தடைப்பட்டுப் போகும். ஒருமுறை எழுதியதைத் திருப்பிப் படியுங்கள். கூடிய மட்டும் வாக்கியப் பிழைகள், சொற்பிழைகள், எழுத்துப் பிழைகள், ஒற்றுப்பிழைகளைக் குறையுங்கள். அலுவத்தில் ஓர் ஆங்கில மடல் எழுத எவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்ளுகிறீர்கள்? முடிந்தால் Wren and Martin வைத்தோ, இன்னொருவரை வைத்தோ, பிழைதிருத்தி ஒய்யார ஆங்கிலநடை தேடுகிறீர்கள் அல்லவா, அதில் 80 விழுக்காடு தமிழுக்குக் காட்டக் கூடாதா? “எனக்குத் தெரியாத தமிழா?” என்ற பெருமிதத்தில் எத்தனை கணக்கற்ற மொழிப் பிழைகளைச்செய்கிறோம்? இதைத்தானே நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம்? அவர்கள் இன்னும் கூடிய பிழைகளைச் செய்வார்கள். கொஞ்சங் கொஞ்சமாய் மூன்று நான்கு தலைமுறைகளில் தமிழ்நடை முற்றிலும் குலைந்து, எல்லாம் ஆங்கிலத்தில் வந்துசேரும். ஆங்கிலமும் சரியாய்த் தெரியாமல், தமிழையும் தொலைத்துப் தமிழ் இளையர் தடுமாறுவதை கண்முன்னே காண மிக வருத்தமாய் இருக்கிறது.’

5.4. ஏதொன்றையும் ஆவணப் படுத்துங்கள். தமிழ் விக்கிப்பீடியாவிற்குள் நுழையுங்கள். அங்கு உங்கள் பங்களிப்பைக் கூட்டுங்கள். 500, 1000 பேர் சேர்ந்தால் தான் கிடுகு மதுகை (critical mass) வந்து சேரும். அதனால், மடக்க வேகத்தில் (exponential speed) கட்டுரைகள் பெருகும். மின்னுலகில் தமிழ் உள்ளடக்கம் கூடும். இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் இன்றுள்ளதைப் போல் 100 மடங்கு கூடவேண்டும். அது உங்கள் கையில் உள்ளது. ஓரிலக்கம் வலைப்பதிவர்களாவது ஏற்படவேண்டும். அந்தப் பணியும் உங்கள் கையிற் தான் இருக்கிறது.

5.5. பின்னூட்டுக்களில் இடுகைக்குப் பொருந்தியதைக் கேளுங்கள். அரட்டைகளே அதிற் தொடர்ந்தால் அப்புறம் வெறும் வெள்ளோசைகளாய் (white noice) ஆகிப் போகும். எந்த அலைபரப்பிலும் வெள்ளோசை/உள்ளடக்க விகிதம் மிகக் குறைந்து இருக்கவேண்டும் என்பது மின்னணுவியலில் உள்ள அறிவுறுத்தல்.

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

6.1. தமிழ்மணத்தின் திரட்டிச் சேவையில்லையென்றால் இவ்வளவு வலைப்பதிவுகளையும், நண்பர்களையும் நான் அறிந்திருக்க மாட்டேன். இது ஒரு புது மிடையம். இன்னும் உருக்கொள்ள வேண்டும். என்னைப் போன்றோர் இன்னும் எழுத்திலேயே இருக்கிறோம். படங்கள், காணொளி போன்றவற்றை ஊடுறுத்திக் காட்டும் நுட்பம் என்னைப் போன்றோர் கைவரப் பெறவில்லை. புதியவர்கள் இந்த நுட்பத்தைக் கைவரப் பெற்றவர்கள் ஆகுக.

6.2. மற்ற மொழிகள் பற்றிய செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு, தமிழை மட்டுமே ஒருமுகமாய்ப் பார்க்கும் காலம் வந்திருக்கிறது. எதிர்காலத்தில் வலைப்பதிவுகள் 10 மடங்கு, 100 மடங்கு பெருகி 10000 வலைப்பதிவுகள் ஆகும் போது ஆற்றுவங்கள் கூடிப் போகும். அதைக் கையாள வலைத்திரட்டிகளின் கொண்மைத்திறம் (capacity) கூட வேண்டும். கிட்டத்தட்ட google போன்ற ஒரு தேடுபொறி இந்தத் திரட்டிக்குள் இருக்க வேண்டும். திரட்டியின் கட்டுமானம் ஒரு தேடுபொறியாய் மாறவும் செய்யலாம்.

6.3. இராம.கி. என்று கொடுத்தால், வலைப்பதிவுகளில் என்னைப் பற்றி எங்கு பேசியிருந்தாலும் அதைத் தேடியெடுத்துக் கொடுக்கும் நிலைக்கு திரட்டிகள் மாறவேண்டும்.

6.4. இனிமேலும் ஆர்வலர்களை மட்டுமே வைத்து திரட்டி நிர்வாகம் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. எனவே முழு நேர அலுவலாய், ஆட்களை வேலைக்கு வைக்கும் நிலைக்குத் தமிழ்மணம் வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். அப்பொழுது இத்தனை செயற்பாடுகளுக்கும் பண வருமானம் வேண்டும். செலவு நடைகளைப் பார்க்க வேண்டும். அதை நோக்கி நிருவாகத்தார் சிந்திக்க வேண்டும். எப்படிச் செய்வது என்பது பெருங்கேள்வி. google, yahoo போன்றவை எப்படிச் செய்கின்றன என்று ஆய்ந்து சிலவற்றைச் செய்துபார்க்கும் காலம் வந்துவிட்டது என்றே நான் எண்ணுகிறேன்.

6.5. திரட்டிகளும், வலைப்பதிவு மனைவழங்கிகளும் (blog hosters) இணைந்து செயலாற்றும் காலம் வந்திருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் தமிழ்மணத்தின் தனியாளுமையை விட்டுக் கொடுக்காதீர்கள். அப்புறம் எல்லாம் கரைந்து போகும்.

அன்புடன்,
இராம.கி.