Saturday, May 13, 2006

அம்மணம் - 2

யா என்ற ஓரெழுத்தொரு மொழிக்குத் தமிழில் கருப்பு என்றே பொருளுண்டு. (இப்பகுதியில் வரும் சிந்தனைப் போக்கிற்கு முன்னாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகச் சொல்லறிஞர் ப.அருளிக்கு நான் கடன்பட்டவன்.) யா எனும் கருமைக் கருத்து வேரிலிருந்து பிறந்த சொற்கள் பலவாகும்; காட்டாக, யாடு, யானை, யாந்தை, யாறு, யாமன் என நிறையச் சொற்களைச் சொல்லலாம்.

யக்கன் என்ற இன்னொரு சொல்லும் அதே பொருளில் யா எனும் வேரில் கிளைத்தது. ”யக்கன்” வடமொழியில் ”யக்ஷன்” ஆவான். யக்கர்/யக்ஷர் என்பவர் அக்கால ஈழத்தின் பழங்குடிகள் என்று இந்தியத் தொன்மங்களும், இலங்கையின் மகா வம்சமும் கூறும். அவர்கள் ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலும் கூடப் பழங்குடிகள் தான். சமண சமயத்துப் பெண்பால் துறவியரைக் கூட இயக்கியர் (யக்ஷியர்) என்றே அழைத்தனர். இயக்கி>இசக்கி என்ற பெயருங்கூடத் தமிழரால் கரும்பொருளில் ஆளப்படும். பதினெட்டாம் படிக் கருப்பரைப் போல, இசக்கியம்மனும் கருப்புத் தான். 

(இயக்கி/இயக்கர் என்ற சொல்லுக்கு இயக்கக் கூடியவர் என்றெலாம் பொருள் சொல்வது கருத்துமுதல் பார்வையாகும். பொதுவாகப் பழைய நாட்டுப்புறப் பெயர்கள் இயற்கைப் பொருள், நிறம், பழக்கவழக்கம் பற்றியே இடப் படும். அவ்வகையில் இயக்கிப் பெயரைக் கருப்புப் பொருளிலேயே கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் கருப்பு என்று சொல்லப் பெரும்பாலான தமிழர் வெட்கப்பட வில்லை. பல தமிழர் பெயர்களின் உட்பொருள் கருப்பு என்றேயிருந்தது. ஆனால், இக்காலத்தில் "கருப்பாயி" என்றபெயரை எத்தனை தமிழ்ப் பெண்கள் வைத்துக் கொள்வார்? தமிழரில், ஆண், பெண் என 2 பாலரில் பலரும் இஷ், புஷ் என்றும், வடமொழிப் பெயரும், வட இந்தியப் பெயரும் அல்லவா தேடுகிறார்?) 

யக்கன் என்ற சொல் அருளியார் முறையில், ய>ஞ>ந என்ற திரிவில், நக்கன் என்று ஆகும். நக்கன் எனில் கருப்பனென்று பொருள் கொள்ளும். நக்கர் இருந்த இடம் (கருப்பர் இடம்; நக்கவரம்; இற்றை நிக்கோபார்). நக்கவரத்தில் குடி இருந்தவரை நக்க சாரணர் என்று மணிமேகலை குறிக்கும். நக்கர் என்று சொல்லுக்கு ஆடையற்றவர் என்ற பொருள், ஒரு வழிப்பொருளே ஆகும். அந்த வழிப் பொருளின் காரணத்தையே மேலே குறித்துள்ளேன்.

யக்கரின் தலைவனாய் குள்ளக் குபேரனை இந்தியத் தொன்மங்கள் குறிக்கும் [குவை = குகை; பள்ளம்; பள்ளத்தில் குவிந்து கிடக்கும் மணி, செல்வம். குவையின் அரன் குவையரன்> குபேரன். (அரன் = காப்பாற்றுபவன்) இங்கும் தமிழ் மூலம் தான் துணைக்கு வரும். இந்தியத் தொன்மங்கள் பலவிற்கும் தமிழே அடிப்படை.] குவையரனைச் செல்வந்தன் என்றது அக்கால ஈழத் தீவில் கிடைத்த மணிகளாலும் மாணிக்கத்தாலுமே ஆகும் (மணிபல்லவம் என்ற தீவின் பெயர் கூட மாணிக்கம் கிடைக்குமிடம் என்பதனால் ஏற்பட்டது தான்).

"இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் நயக்க நின்றவன்" - 5ம் திருமறை சித்தத் தொகை திருக்குறுந்தொகை, 25ம் பாட்டு

நக்கரென்ற பெயரைக் கொஞ்சம் நீட்டித்தான் நம் தமிழர் பிற்காலத்தில்  சொன்னார்.  (நாகரைப் பாம்போடு தொடர்புறுத்தியது வழிப்பொருளால் எனலாம்.) நாகருக்கும், தமிழருக்கும் இடையே நிறைய இன உறவுகள் ஏற்பட்டுள்ளன. (இற்றை நிலையில் ஈனியலால் - genetics - பெரிதும் கலந்து போன தமிழரையும் நாகரையும் பிரித்தறிவது சரவலான செயல். ஆனாலும் ஈனியல் முயன்று கொண்டிருக்கிறது. இதைப் பற்றி இங்கெழுதினால் சொல்ல வந்த செய்தி விலகிப் போகும் என்பதால் தவிர்க்கிறேன்.) 

இந்நாகரே இந்தியாவின் பழங்குடிகள் என இன்று அறியப்படுகிறார். இவர் பேசிய மொழிக்குடும்பம் இன்றைக்கு முண்டாமொழிக் குடும்பம் எனப் படுகிறது. தமிழ் மொழி முதலில் ஏற்பட்ட நிலையில், முண்டா மொழிக் குடும்பத்திற்கும், தமிழிய மொழிக் குடும்பத்திற்கும் ஏதோ தொடர்பு ஆழமாய் இருந்திருக்க வேண்டும். நாகரில் பலரும், தமிழ் பேசிப் புலமையும் பெற்று, சங்க காலத்தில் சிறப்புற்று இருந்துள்ளார். (காட்டாக, முரஞ்சியூர் முடிநாக அரையர் என்பாரை இங்கு சொல்லலாம்.) நாகரின் பெயரால் நாவலந்தீவில் பல ஊர்ப்பெயர்களும், இடப்பெயர்களும் உள்ளன. (காட்டாக, நாகர் கோயில், நாக(ர்) பட்டினம், நாகப்பூர், நாகநாடு போன்றவற்றைச் சொல்லலாம்.)

இதே நக்கர் பெயர்தான் வியப்பூட்டும் வகையில் பல்வேறு இந்தையிரோப்பிய மொழிகளில் negro, nigger எனத் தோற்றம் காட்டுகிறது. அதேபோல நக்கரின் தோற்றமே நக்கெட் (naked) என்று ஆடையற்ற நக்கு நிலையையும் காட்டுகிறது. இந்தையிரோப்பியக் குடும்பம் எனப்படும் வடமொழியிலும்  நக்கனம்> நக்(g)நம் என்றுசொல் நக்குத் தன்மையைக் காட்டும். தமிழிலும் நக்கனம், நக்கு என்பவை அம்மணத்தையே குறிக்கும்.

கீழேயுள்ள மற்ற சொல்தொகுதிகளையும் நோக்குங்கள்.

நக்கன் = அம்மணன், அருகன், சிவன்; ஆடையற்ற நிலையில், அல்லது வெறும் புலித்தோலை அரையில் கட்டிய சிவன் என்ற பொருளில், திருமந்திரத்தில் இச் சொற்றொடர் ஆளப்படும். "நக்கு அரையனை" என்ற தொடர் 5ம் திருமுறை, 22.திருக்குடமூக்கு, 5 வது பாட்டு. "குரக்குக் கா நக்கனை" என்ற தொடர் 5 ம் திருமுறை, 75, திருக்குரக்குக் கா, 4, 8 வது பாட்டுக்கள்

நக்கினம் = பெண்குறி; நக்கினிகை = அம்மணமாய் உள்ள பெண்; (அம்மன் கோயில் கருவறை வாசலில் இருக்கும் இயக்கினிகள் மேலே சிறு கச்சையோடு தான் உருவம் கொண்டிருப்பார்.)

ஆனாலும், நக்கர் என்றசொல்லின் தொடக்கம் தெரியவில்லை என்றே மேலைச் சொற்பிறப்பு அகரமுதலிகள் குறிக்கும்.

O.E. nacod "nude," also "not fully clothed," from P.Gmc. *nakwathaz (cf. O.Fris. nakad, M.Du. naket, Du. naakt, Ger. nackt, O.N. no..kkvidr, O.Swed. nakuder, Goth. naqads "naked"), from PIE base *neogw- "naked" (cf. Skt. nagna, Hittite nekumant-, L. nudus, Lith. nuogas, O.C.S. nagu-, O.Ir. nocht, Welsh noeth). Applied to qualities, actions, etc., from 16c. (originally in naked truth, 1585). Phrase naked as a jaybird (1943) was earlier naked as a robin (1879, in a Shropshire context); the earliest comparative was naked as a needle (1377).

மேற்கூறிய அத்தனை பொருள்களையும் தமிழ்வேர் வழி பொருத்திப் பார்த்தால் தான் உள்ளே ஓடும் ஒருங்குமை, கருப்பு என்ற பொருளில், நமக்குப் புரியும். உறுதியாக, மாந்தனின் தொடக்க நிலைக்கும், முல்லை நில வாழ்க்கைவரை ஏற்பட்ட வாழ்வு முறைகளுக்கும், தமிழுக்குமாய் ஏதோ ஒரு தொடர்புள்ளது; ஆனால் அது என்ன என்று முற்றுமுழுதாக விளங்கவில்லை.

இனிக் கருப்பைக் குறிக்க யா எனும் வேரில் யக்கன் என்ற சொல் பிறந்தது போல, யாவர் என்பதும் பிறக்க முடியும். யாவர்/யாவகர் என்பவரும் கருப்பரே. (இந்தொனேசியாவின் ஒரு தீவான யாவகத் தீவும் கருப்பர் தீவு என்ற பொருளிலே பெயரிடப் பட்டுள்ளது. இந்தொனேசியாவின் மற்ற தீவுகளின் பெயர்களை இன்னொரு இடுகையில் பார்க்கலாம்.)

யாவகர் என்பதன் திரிவான யாவகர்> ஸ்யாவகர்> சாவகர்> ஸ்ராவகர் என்பதையே இல்லறம் ஒழுகும் பொதுமக்களைக் குறிக்கச் செயின நெறி பயன்படுத்தும். செயின நெறி பொதுவாக பெண்மக்களை உயர்ந்த துறவி நிலைக்கு ஏற்றவராய்க் கொள்ளாது. அவரைத் துறவி நிலைக்கு அணுக்கத் தொண்டராய்த்தான் கருதும். அதனால் தான் மக்களின் பெயரான இயக்கரின் பெண்பாலான இயக்கியர் என்பதே பெண்துறவியருக்குப் பெயராய்க் கொள்ளும். யாவக நெறி / சாவக நோன்பு என்பதும் இல்லறம் கடைப்பிடிக்கும் மக்களின் நெறி என்ற பொருள் கொள்ளும்.

அடுத்து, யா எனும் வேரிலிருந்து வேறொரு ஈற்றில் அதே பொருளில் யாமன்> யமன் என்ற சொல் பிறக்க முடியும். யாமம் என்பதும் கருமைப் பொருளையே காட்டுகிறது. சூரியன் மறைந்து பிறகுள்ள நேரம் யாமம் என்றும், குறிப்பாக நள்ளிரவு நேரம் யாமம் என்றும் சொல்லப்படும். (அது வழக்கம் போல் திரிந்து சாமம்> ஜாமம் என்றும் பின்னால் வடமொழியில் பலுக்கப்படும்.) கருப்பு நிறத்தவனான, இறப்பைக் கொண்டு வருபவனாக கருதப்டும் கூற்றுவன், யமன் எனப்படுவான். கூற்றுவனைக் குறிக்கும் காலன் என்ற சொல்லும் கூடக் கருப்பன் என்றே பொருள் கொள்ளும். யமன் ஏறி வரும் விலங்கு கூட கருமை நிறத்து எருமையாகும். யமம் என்ற சொல்லுக்கும் காக்கை, காரி (=சனி) என்ற பொருள்களும் உண்டு. இவை எல்லாமே கருப்புத் தான்.

பொதுவாக யாமன்> யம்மன்> யமன் என்பவன் கருப்பானவனே! கருப்பர் வாழ்ந்ததிசை யாமத்திசை; அதனால்தான் தென் திசை யாம திசை> யமதிசை ஆயிற்று. யமன் எனும் கூற்றுவன் திசை தென் திசையாயிற்று. இறந்தவர் இருள் நிறைந்த உலகத்திற்கு போவதாகக் கொண்ட தொன்மமும், தென்புலத்தார் என்றே சொல்ல வைத்தது.

தென் திசையில் எழுந்த கடற்கோளால் பல இனத்தவர் தெற்கில் அழிந்திருக்கிறார். எனவே முன்னோர் எனப்படுவோர் தமிழர் மரபில் தென்புலத்தார் ஆனார். (பார்ப்பனர் முறையில் தர்ப்பணம் செய்பவர் தென்புலத்தாருக்குத் தான் எள்ளுப்பிண்டம் வைத்து வழிபாடு செய்கிறார்.)

[பார்ப்பனருள்ளும் பல தமிழ் வழக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதை அவரும் அறியாதுள்ளார்; மற்றோரும் அறியாதுள்ளா. அருத்தம் புரியாச் சண்டைகளில் பலவற்றை எல்லோருமே இழந்து கொண்டிருக்கிறோம். எதை எடுத்தாலும் அதற்கு வடமொழி அடிப்படை காட்டும் வழக்கத்தைத் தமிழரில் பலரும் எப்போது விடப்போகிறாரோ, தெரியாது. பெரும்பாலான செய்திகளின் அடிப்படை நம்மைப் பொருத்தவரை தமிழில் தான் உண்டு. பார்ப்பனரில் பல கோத்திரப் பெயர்கள் கூட முற்றிலும் தமிழே. காட்டகப் பெருகச் சனம்>ப்ருகச் சனம் (சிலர் இதை ப்ருகச் சரனம் என்றுகூடச் சொல்வார்) = பெருகிய கூட்டம், பெரிய கூட்டம் என்று பொருள். கூட்டப் பொருள் கொண்ட கணம் என்ற தமிழ்ப் பெயர் தான் சனம் என்று இக்காலத்தில் பலுக்கப் படுகிறது.]

மறுபடியும் மறுபடியும் ஏற்பட்ட தென்திசை அழிவைக் கண்டு (அது ஆழிப் பேரலைப் போன்றதாகலாம்; என்னவென்று சொல்லத் தெரியவில்லை.) அச்சம் உற்றே, தமிழர் தம் நடைமுறையில், இடுகாட்டில் தெற்கே தலையும் வடக்கே காலும் இருக்கும் படி, இறந்தர் முகத்தையும் சற்றே திருப்பி வடக்கு நோக்கி இருக்குமாறும் வைத்துப் புதைப்பார். யாமத்திசை அந்த அளவிற்குத் தமிழரை அச்சுறுத்தியுள்ளது.

மனையடி சாற்றங்களிலும் (சாற்றம்>சாத்தம்>சாத்ரம்) தென்மேற்கு திசையை யம திசை என்றே சொல்வார். தென்மேற்குப் பக்கத்தில் மனைவாயில் கூடாதென மனையடி சாற்றத்தில் சொல்வதற்கும் இந்த ஆயிரமாண்டு அழிவுகளைப் பற்றிய பயமே காரணமாகும். பொதுவாக வடக்கை மங்கல திசை என்பார்; துறக்கம் பெறும் திசை வடகிழக்கு நோக்கியே (குயிலை மலை = கயிலை மலை; குயில்ந்து>குவிந்து உயர்ந்து நிற்கும் மலை குயிலை மலை) என்பதால் தமிழர் வடக்கிருக்கும் நோன்பு கொண்டது இத் தொன்மங்களின் தொடர்ச்சியால் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உயிரை உடலிலிருந்து பிரிப்பவன் கூற்றுவன்; இவன் கரிய நிறம் உடையவன் (புற. 4:10-12) என்ற கருத்தை ஓர்ந்து பார்த்தால் சொல்லவரும் செய்தி புரியும்.

முன்சொன்னது போல யகரச் சொற்கள் யகரம்> ஞகரம்> நகரம் என்று திரிந்தது முதல்வகை என்றால், இன்னும் இருவகைத் திரிவுகளும் தமிழியற் சொற்களில் ஏற்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இரண்டாம் வகையில், யகரம் கெட்டு அகரமாகும் (அதாவது ய>அ);

மூன்றாம் வகையில் யகரத்தின் முன் ஸகரம் சேர்ந்து பின்னால் சகரமாக/ஜகரமாகத் திரித்தொலிக்கும்; (அதாவது ய>ஸ்ய>ச)

முதல் வகைத் திரிவில், யம்மன்>ஞம்மன்>நம்மன்>நம்மண்>நம்மணம் = அம்மணம் என்ற மாற்றமும், இரண்டாம் வகைத் திரிவில், யம்மன்> அம்மன்> அம்மண்> அம்மணம் (=யாமணம்) என்ற மாற்றமும் ஏற்படும்.

நக்கனம், அம்மணம், ஆகியவை தவிர நிர்வாணம், அற்றம் (இலக்கிய வழக்கு; ஒன்றும் இல்லாமல் அற்றுப் போவது அற்றம்.), முண்டம் (தலையிலாது மழுக்கையாவது என்ற பொருளில் தொடங்கிப் பின்னால் ஆடையிலாது போவதையும் குறித்த சொல்; முண்டிதம் = மொட்டை), மொட்டைக் கட்டை (முண்டம் போன்ற பொருளே இதற்குமுண்டு.) போன்றவை கூட ஆடையற்ற நிலையைத் தமிழில் குறிக்கும். தவிர, பிறந்த மேனி என்ற வழக்கும்  தென்பாண்டியில் உண்டு; "பொட்டுக்கு ஓர்ஆடையில்லாமல், பிறந்த மேனிக்குக் கிடக்கிறான், பாருங்கள்" என்பார்.

மேலே பேரா. தொ.பரமசிவன் கூறியது போல் "சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர், பிறந்தமேனியராய் இருப்பவர்), சுவேதம்பரர் (வெள்ளையாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக் குகைகளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர்கள் திகம்பரத் துறவிகளே. வெள்ளாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர்." இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில், குளிர் கூடிய வடபுலத்திலும், மணல் வாரியடிக்கும் அரச பூதனம் (இராஜஸ்தான்), கூர்ச்சரம் போன்ற இடங்களிலும் சுவேதம்பரரே மிகுதியாய் இருந்தார்; வெய்யில் மிகுந்து காய்ச்சும் தென்புலத்திலோ திகம்பரரே மிகுதியானார். மயிலை. சீனி. வேங்கடசாமியாருடைய "சமணமும் தமிழும்" பொத்தகத்தில் சொல்வது போல, "இப்போதும் தமிழ்நாட்டுச் சமணர் திகம்பர சமணரே". திகம்பர சமணருள்ளும் குருமார் மட்டுமே ஆடையிலாது இருப்பார் என்பதையும், சாவக நோன்பிகள் (இல்லற நோன்பிகள்) ஆடை அணிந்திருப்பார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். "ஏன் திகம்பர சமணம் தெற்கே பெரிதும் பரவியது?" என்பது ஆய்விற்கு உரிய கேள்வி.

இவ்வரிசையில், நிர்வாணம் என்பதைப் பார்ப்போம். இச் சொல்லுக்கு, ஆடையற்ற நிலை என்பது மட்டுமே பொருளல்ல; வீடுபேறு என்பதும் கூட அதன் பொருளாகும். ஆனால் அது வட புலத்தில் ஏற்பட்ட இரண்டாம் நிலைப் பொருள். [அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்முறை நெறியில், சங்க காலத்தின் இறுதி வரை, நாலாவது பொருள் அழுத்தமாகச் சொல்லப் பட வில்லை. இன்னும் கூர்ந்து சொன்னால், அறம், பொருள், இன்பம் என்ற வகையிற் கூட சங்ககால வாழ்க்கை முறை பார்க்கப் படவில்லை. இம் முன்று வகைப் பார்வையே, சங்கம் மருவிய காலத்தில் (அதாவது மெய்யியல் பார்வை தமிழ்நாட்டில் பெரிதும் பரவிய காலத்தில்) ஏற்பட்டது தான். சங்க காலத்தில் வாழ்க்கை என்பது அகம், புறம் என 2 வகைகளாகவே பகுக்கப் பட்டது.]

நிர்வாணம் என்ற சொல் பெருத்த வழக்குப் பெற்றது வேத மறுப்பு நெறிகளால் தான். இச் சொல்லின் ஒலிப்பைப் பார்த்தால், ஒரு சில பொதுக் கருத்துகளைக் கூறலாம். மகரவொலிச் சொற்கள் பலவும் வடக்கே போகப் போக வகரவொலி பெறுவது இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பழக்கம். மகரமும் வகரமும் தமிழிலும் கூட ஒன்றிற்கொன்று போலிகளே. அதே காரணத்தால் அவை ஒன்றிற்கொன்று மோனையாயும் அமையும். காட்டாக, விண்ணைக் குறிக்கும் மானம்> வானமாகும்; அவ்வகையில், நிர்வாணம் என்ற சொல்லின் முந்தைய நிலை நிர்மாணம் என்றூகிக்க முடியும்.

இன்னும் ஆழ்ந்துபார்த்தால், நிர்மாணம்/ நிர்வாணம் என்ற வீடுபேற்றுச் சிந்தனை வேத நெறியில் அவ்வளவு பெரிதாகச் சொல்லப் படுவதில்லை. நிர்மாணம் என்ற கருத்து வேதமறுப்பு நெறிகளில் இருப்பதாகும்.

வேதமறுப்பு நெறிகளின் மொழியான பாகதத்தில் "ர்ம" என்ற எழுத்துக் கூட்டு வருவதில்லை. அதில் "ம்ம" என்றே வரும். ம்ம>ர்ம போன்ற திரிவுகள் பாகதத்திற்கும் சங்கதத்திற்கும் இடையே பரக்கவும் உண்டு. சமணத்தின் மொழியான அறுத்த மாகதியும், புத்தத்தின் மொழியான பாலியும் பாகதத்தின் இரு வேறு பேச்சு வழக்குகள். இரண்டிலுமே  "ர்ம" என்ற ஒலிக்கூட்டு கிடையாது. எனவே நிர்மாணத்தின் முந்தைய நிலை வேதமறுப்பு நெறிகளின் தொடக்க காலத்தை வைத்துப் பார்த்தால், நிம்மாணம் என்பதாகவே இருக்க முடியும். நிர்வாணத்தின் சொற்பிறப்பு நம்மனம்> நம்மானம்> நிம்மானம்> நிர்மாணம்> நிர்வாணம் என்ற முறையிலேயே அமைய முடியும்.

அது எப்படி ஆடையற்ற நிலைக்கும் வீடு பேறுக்கும் ஒரே சொல் ஏற்பட்டது என்பது அடுத்த கேள்வி.

அன்புடன்,
இராம.கி.

Friday, May 12, 2006

அம்மணம் - 1

ஒருமுறை சமயம் எனும் என் தொடர் இடுகையில், பேரா. தொ.பரமசிவன் கூறுவதாக ஒரு மேற்கோளைக் காட்டி, அது பற்றிய என் முன்னிகையைத் தரச் சொல்லி, திரு. ஆறுமுகத் தமிழன் தன் பின்னூட்டில் கேட்டிருந்தார். அப்படிக் கேட்டதற்கான மறுமொழியை ஒரு தனிப் பதிவாக இடுகிறேன்.

முதலில் திரு. ஆறுமுகத்தமிழன் எடுத்துக் காட்டிய பேரா. தொ.பரமசிவனின் கூற்று:
---------------------------------------------------
நிர்வாணம் என்பது வடசொல்லாகும். அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக அம்மணம் என்பது வழங்கப் படுகின்றது. அம்மணம் என்ற சொல் அந்தப் பொருளில் தமிழிலக்கியத்தில் எங்கும் காணப்படவில்லை. 'அம்மணம் பட்டிலா வையெயிற்று ஐயையைக் கண்டாயோ தோழி' எனும் சிலப்பதிகாரம் (வரந்தருகாதை) இந்தச் சொல்லை எடுத்தாளக் காண்கிறோம். இச் சொல் 'குறைவு' என்ற பொருளில் மட்டுமே அக்காலத்தில் வழங்கியுள்ளது. 'ஆடை இன்றி' என்ற பொருளில் மக்கள் வழக்கில் மட்டும்தான் காணப் படுகிறது, இலக்கியங்களில் காணப்படவில்லை.

குறைந்தது கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமண மதம் நுழைந்து செல்வாக்குப் பெற்றுவிட்டதென்று சங்க இலக்கியம் காட்டுகின்றது. ஆனாலும் தமிழிலக்கியப் பரப்பில் சைவ, வைணவ இலக்கியங்களிலேயே செயினரைக் குறிக்கச் சமணர், அமணர் ஆகிய சொற்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. சமண மதம் துறவினைப் பெருமைப் படுத்திய மதமாகும். சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர், பிறந்த மேனியராய் இருப்பவர்), சுவேதம்பரர் (வெள்ளாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக் குகைகளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர் திகம்பரத் துறவிகளே. வெள்ளையாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர். அம்மணம் என வழங்கும் சொல் ஆடையிலா அமணர்களைக் குறிக்கப் புதிதாகத் தோன்றுகிறது.

நிர்வாணம் என்ற செயலையும் கோட்பாட்டையும் தமிழ்ச் சமூகம் தனது வரலாற்றில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்திருக்கிறது...'' (தொ. பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு வெளியீடு, பக். 93-94).
------------------------------------------------
இனி இராம.கி.யின் மறுமொழி.

" 'ஆடையின்றி' என்ற பொருள் மக்கள் வழக்கில் மட்டும் தான் காணப் படுகிறது, இலக்கியங்களில் இல்லை" என்று பேராசிரியர் சொல்வது சரியில்லை. தேவாரத்திலும் நாலாயிரப் பனுவலிலும் பயிலும் அம்மணம் என்ற சொல்லில்  ”ஆடையின்றி” என்ற பொருளும் உள்ளே தொக்கி நிற்கிறது. காட்டாக, தேவாரம் 6 ஆம் திருமுறையில், திருஅதிகை வீரட்டாணம் 7வது பாட்டில் (6.3.7), "குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி உண்டி உகந்து அமணே நின்றார்" என்றோர் அடி வரும். இங்கே, "நாணமின்றி" என்று சொல்லிப் பின் "அமணே நின்றார்" என்பதால், ஆடையிலா நிலையையே அப்பர் குறிக்கிறார் என்பது புலப்படும். அதேபோல, "நீ உடனே இருக்கவே, நான் இவ்வமணக் கூத்தெலாம் அடித்தேன்" என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாட்டுக்கு எழுந்த உரையிலும் (தொண்டரடி. திருமாலை 34 வியாக்.ப. 384) ஆடையிலாக் கருத்து சொல்லப் படும். 5ம் திருமுறை, திருப்பூவனூர், 9ம் பாட்டிலும் "ஏவம் ஏது இலா அமண் ஏதலர்" என்ற அடியில் ஆடையிலா நிலை ”அமணி”ற்கு இணையாகத் தான் கூறப்படுகிறது. தேவாரம் எங்கணும், குறிப்பாகச் சம்பந்தர் , திருநாவுக்கரசர் திருமுறைகளில் இப் பொருள் பரக்கவும் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அக்காலச் செயினத் துறவியர் அம்மணராகவே இருந்திருக்க வேண்டும். [தமிழ்நாட்டில் திகம்பர செயினமே ஓங்கி இருந்தது. வெள்ளாடை(சுவேதாம்பர)ச் செயினமோ, உருவிலாத் தொழுகை பழகும் செயினமோ அவ்வளவு பரவவில்லை.] அதனால், ”ஆடை யற்ற” என்ற பொருள், அமணர் என்ற சொல்லின் உள்ளூற இருந்தே வந்தது புலனாகும். இது போக சீவக சிந்தாமணி பற்றி எழுந்த ஓர் அம்மானை நூலில் (ப.80) இருந்தும் "அரையில் கலையுடுக்காள் அம்மணமுமாய் இருப்பாள்" என்ற மேற்கோளை பாவாணர் தம் நூலில் எடுத்துக் காட்டுவார்.

அம்மணம் என்பதற்கு "ஆடையின்றி" என்ற பொருள் ஆகிவரக் கூடுவதை 3 வழியில் நாம் காட்ட முடியும். இவற்றில் எது முதலில் தொடங்கியிருக்கும் என்பதை ஓரளவு சொல்ல முடியுமெனினும், முடிந்த முடிபாக ஒன்றைக் கூற முடியாதுள்ளது. ஒவ்வொரு வழியையும் அடுத்தடுத்துக் கீழே பார்ப்போம். கூடவே கி.பி.650க்கு முன்னால், அதாவது பத்தி (இறைவன் அடிகளைப் பற்றுவது பற்றி> பத்தி> பக்தி; தமிழ்த் தோற்றம் தெரியாமலே கிடக்கும் இன்னொரு சொல்.) இலக்கியங்களுக்கும் முன்னே, ஆடையற்ற நிலை பற்றிச் சொல்லுதற்குப் பழகி வந்த சொல்லான நக்கர்/ நக்கம், நிர்வாணம் என்ற சொற்களையும், இங்கே அலசிப் பார்ப்போம்.

நாகரிகம் அறியாத விலங்காண்டி காலத்தில், ஆடையற்ற நிலைக்கு, ஒரு தனிப்பெயரை மாந்தன் வைத்திருப்பானா என ஓர்ந்து பார்த்தால், அது அரிது என்றே புலப்படும். ஆடை கொண்டவர் நடுவில் தான், ஆடையிலா நிலை வெட்கப்படத் தக்கதாயும், அதைச் சொல்ல ஒரு பெயர் வேண்டியதாகவும் அமையும். ("அம்மணாண்டிகள் மத்தியில் கோவணாண்டி பைத்தியக்காரன்" என்ற சொலவடையைத் தலைகீழாகப் பொருத்திப் பாருங்கள்; உண்மை புலரும்.)

ஆடை என்பதே, மாந்தனின் சூழமை(environment)வில் ஏற்படும் மாறுதலில், குறிப்பாகப் பெருங்குளிர்க் காலத்தில், உடம்பின் சூட்டைத் தக்க வைத்துக் கொள்ளுதற்காய், விலங்குகளின் தோல், மரத்தழை, உரிகள், இப்படி ஏதோ ஒன்றை, உடம்பில் போட்டுக் கொண்டு, மூடிக் கிடப்பதாய் இருந்திருக்க வேண்டும். (பெருங்குளிர்ச் சூழமைவில் வாழ்ந்தவர் பஞ்சாடைத் துணி போட்டதாக வரலாறில்லை.)

ஏதோ ஒரு காலத்தில் சூழமைவு கருதியும், விலங்குகளிடம் இருந்து தம்மைப் பாதுகாக்கவும் கருதியே, ஆடைத்தேவை மாந்தருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக, குளிர் நாடுகளிலும், மணற்காற்று பெருவாரியாய் அடிக்கும் பாலை நாடுகளிலும், மாந்தர்களின் உடம்பெல்லாம் மூடி இருத்தலையும், மணலை வாரி அடிக்காத வெப்ப நாடுகளில் ஆடை குறைந்து, உடம்பின் மேற்பகுதியில் எதையுமே போர்த்தாது இருப்பதையும் காணலாம்.  ஆடை என்பது குளிர் நாடுகளிலும், மணல்வாரி நாடுகளிலுமே முகன்மை பெற்றது. 

பொதுவாக, குளிர் நாடுகளிலும், மணல்வாரி நாடுகளிலும் காற்றில் ஈரப்பதம் (humidity) குறைந்தேயுள்ளது; உடல்முழுக்கத் துணியைச் சுற்றியிருந்தாலும் அந்நாடுகளில் மாந்த உடம்பில் வேர்வை பெருக்கெடுக்காது. மாறாக, ஈரப் பதம் கூடிய நாடுகளில், அளவுக்கு மீறித் துணியை உடலிற் சுற்றிக் கொண்டால், வேர்த்து விறு விறுத்துப் போகும். ஈரப்பதம் கூடிய நாடுகளில், ஆண்டின் மிகுதியான காலங்களில் (9,10 மாதங்களுக்கு), மீக்குறைந்த ஆடைகளையே, அதுவும் இடைக்குக் கீழ் மட்டுமே, மக்கள் அணிகிறார்.

13ம் நூற்றாண்டில் கொற்கை, காயல் ஆகிய துறைகளின் பக்கம் வந்து, தென்பாண்டி நாட்டு முத்துக் குளிப்பைப் பார்த்த மார்க்கோ போலோ சொல்கிறான்: 

இடுப்புக்குக் கீழே ஒரு குறுக்குத் தார்ப்பாய்ச்சாய் வேட்டி மட்டுமே கட்டிக் கொண்டு, இடுப்பிற்கு மேல் நகைகளைத் தவிர ஒரு பொட்டுத் துணியும்அணியாது,  அரசன் சுந்தர பாண்டியன் காட்சியளித்தானாம்; பெண்களும் கூட அக்காலத்தில் தம் மார்பைச் சிறிதளவே சிறு கச்சை கொண்டு மூடியவராய் இருந்தாராம் (ஒரு நூற்றாண்டுக்கு முன் வரை, சான்றார் குலப் பெண்மக்களை மேற்சட்டை போடவிடாது, சாதிக் குமுகாயம் தென்கேரளத்தில் கொடுமைப் படுத்தியுள்ளது. பெண்களின் மேற்சட்டையைக் குறிக்கக் கூடச் சரியான சொல் நம்மிடம் பல காலம் இல்லாதிருந்தது.); எல்லாம் சூழமைவு படுத்திய பாடு தான். (கூடவே வெள்ளையன் உணராத, ஆனால் நம்மூரில் இருந்த, சாதிக் கொடுமை.)

இது போன்ற நிலையில், சூழமைவு கருதி குறைந்த ஆடை அணிந்தவராய், இருந்திருக்கக் கூடியவராய் பழைய ஆப்பிரிக்க மாந்தரும் இருந்திருப்பர். இப்படி மேனி திறந்து கிடந்த பலரும், குறிப்பாக ஆப்பிரிக்கரும், பழந்தமிழரும், கருப்பாகவே இருந்தனர். (இற்றைத் தமிழரிலும் மிகப் பெரும்பாலோர் கருப்பரே என்று நம்மில் ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கிடப்பவர் பலர்.) 

மேனி திறந்து கிடந்தவர் கருப்பானதற்கு ஒரு வேதியியல் காரணமுண்டு. வெய்யில் கூடக்கூட, தோலின் மேற்கிடக்கும் மெலனின் என்ற வேதிப் பொருள் தோலின் நீர்மப் பொருளில் கரைந்து போகாது, படிகத் துகள்களாய் திரைந்து போகிறது (திரைப்படுதல்>திரப்படுதல் = precipitation; திரப்பாடு = precipitate(n)). மெலனின் எனும் வேதிப்பொருள் திரையத் திரைய தோல் கருக்கும்; அது நீர்மத்தில் கரையக் கரையத் தோல் வெளுக்கும். ஆக நிறம் என்பது வெறுமே மெலனினுக்கு, தோலிலுள்ள கரைமையைப் (கரைமை = solubility; கரைவி = solute; கரைமம் = solvent) பொறுத்தது. இவ்வேதி வினையை ஊக்கப்படுத்தும் வினையூக்கி (catalyst) ஈரப்பதமும், சூரிய கதிரியக்கமும் (solar radiation) ஆகும். இவ் வேதிவினையால், உடலைச்சுற்றித் துணி போர்த்தியவரின் கொடிவழி பெரிதாகப் பெரிதாக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில், அவர் இருந்த சூழமைவு காரணமாய், வடக்கே போகப் போக மாந்தரில் ஒரு சில இனத்தார் வெளுப்பாக மாறினர்; மொத்தத்தில், வெளுப்பும் ஆடையும் ஒன்றிற்கொன்று தொடர்பு ஆனவை (ஒரு நாணயத்தின் இருபக்கம் போன்றவை).

நாளாவட்டத்தில், சூழமைவுகள் மாறிவர, மாந்தர் குறிஞ்சி வாழ்க்கையில் இருந்து கீழிறங்கிவந்து முல்லை வாழ்க்கையில் நகரத் தொடங்க, வெம்மை நிலக் கருப்பரும், குளிர் நில வெள்ளையரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. உடம்பைப் போர்த்திய வெள்ளையர், உடம்பைப் போர்த்தாத கருப்பரைப் பார்த்து ஏளனம் செய்வதும், அதன் விளைவால் போர்த்தாதவர் வெட்கப்படுவதும் பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும். வெட்க உணர்வு, மாந்தக் குழுக்களின் உறுப்பினர் தொகை பெருகிய பின், வெவ்வேறு நிறங்கொண்ட குழுக்கள் சந்திக்கத் தொடங்கிய போது (ஓரளவு மொழி ஏற்பட்டிருந்த நிலையில்) தான் ஏற்பட முடியும்.

இச் சந்திப்பில், மாந்தரின் பேச்சு வழக்கில், ஆடை தோன்றிய காலத்தில், ஆடையுள்ள நிலைக்கு ஒரு சிந்தனையும் சொல்லும் ஏற்பட்டிருக்குமானால், ஆடையற்ற நிலைக்கும் ஒரு சொல்லும் ஏற்பட்டிருக்க வேண்டுமே என்ற கேள்வி நம்முள் எழும். அப்படி ஒரு சொல் ஏற்பட்டுத்தான் உள்ளது; ஆனால் அது நிறத்தை ஒட்டி ஏற்பட்டிருக்கிறது. 2  வெவ்வேறு குழுக்களும் ஒருவரை ஒருவர் இடையாடும் நிலை ஏற்பட்டுவிட்ட காரணத்தால், அப் பழைய நெடிய காலத்தில், உடம்பைப் போர்த்திய வெளுத்தவர், உடம்பைப் போர்த்தாத நிலையைக் "கருப்பர் நிலை" என்றே சொல்லத் தொடங்கினார். இது எப்படி என்றறிய சில இந்தையிரோப்பியச் சொற்களையும், தமிழியச் சொற்களையும் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, May 03, 2006

தேர்தல் - 2006 : திருப்பு முனையாய் அமையுமா?

இன்னும் ஓர் ஐந்து நாட்கள் தான். ஊரெங்கும் கட்சிகளின் பரத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. (பரல்தல்>பரலுதல் = பேசுதல்; பர>பரையுதல் என்ற திரிவில் இன்னும் மலையாள மற்றும் ஈழ வழக்கில் இருக்கிறது. பரலுதல் என்பது பொதுவாகப் பலரும் அறியப் பரத்திச் சொல்லுவது. ஒருவருக்கு ஒருவர் சொல்லுவது அல்ல. பரல்த்தம்>பரல்த்தாரம்>பரத்தாரம்>பரச்சாரம் ஆகி அது வடமொழிப் பலுக்கில் ப்ரச்சாரம்>பிரச்சாரம் ஆகியிருக்கிறது) வாய்கிழியச் சத்தமாகப் பேசுவதும், அந்தச் சத்தத்தை இயல்பாகக் கொள்வதும், கேட்பதும் தமிழனுக்கே உரிய வழக்கம் தான். ஏதொன்றையும் மெதுவாகச் சொன்னால், தமிழர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; "தம் குரலுக்குத் தாமே மயங்குபவர் தமிழர்" என்று கூட ஒரு சிலர் வேடிக்கையாகச் சொல்லுவது உண்டு.

இதற்கு இடையில், இரண்டு பக்கத்திலும் ஆட்கள் இடம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகள், முன்னணிகள், ஊர்வலங்கள், பேரணிகள், ஒலிபெருக்கிகள், பாட்டுக்கள், வசவுகள், வாக்குறுதிகள், தடந்தகைகள் (strategies), தந்திரங்கள் (tactics), சூழ்ச்சிகள், ஏமாற்றுக்கள், நடிப்புக்கள் என எல்லாமே மக்கள் முன்னால் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மக்களாட்சி என்பது ஒருவகையில் கூத்துப் போலத் தான் இருக்கிறது. ஆனாலும் அது ஒரு சுகமான கூத்தோ, என்னவோ? யார் யாரோடு கூட்டுச் சேர்ந்திருக்கலாம், யார் தேருவார், யார் தேரமாட்டார், யார் தெரிவித்த தேர்தலறிக்கை நம்மைக் கவருகிறது, யாரார் எத்தனை கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்கள், இலவயங்களை வீசியெறிவது எந்தப் பக்கம் கூடுதலாய் நடக்கிறது (நாளைக்கு எப்படி இந்த இலவயங்களைச் சரிக்கட்டுவார்கள் என்பது இன்னொரு கதை) என்ற அலசல்களும், உரையாடல்களும் நடக்கின்றன. இங்கு வலைப்பதிவுத் தளத்திலும் இவை எதிரொலிக்கின்றன.

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணித்துச் சொல்லுவதைக் காட்டிலும், நாடு விடுதலை பெற்ற பின், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நடந்திருக்கும் சில முகன்மையான (முகன்மை = main) நடப்புக்களை, திருப்பு முனைகளை, நினைவுக்குக் கொண்டு வந்து, இன்றையத் தேர்தல் என்ன வகையில் இன்னொரு திருப்புமுனையாய் ஆகமுடியும் என்ற எண்ணத்திலே இந்தப் பதிவை இடுகிறேன்.

1. 1930 களில் சென்னை மாகாணத்தில் இருந்த நயன்மைக் கட்சியோடு (நயம்>நயன்மை; நியாயம் என்ற வடசொல் பிறந்த வகை: நயம்>நாயம்>ந்யாயம்>நியாயம் = justice; நீதி என்னும் வடசொல் பிறந்ததும் அதே தமிழ் அடிச்சொல்லில் தான்; நயம்>நயதி>ந்யதி>நியதி>நீதி = justice; நீதிக் கட்சி - Justice party) மல்லாடிக் கொண்டிருந்த பேராயக் கட்சி (Congress party) 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அப்புறம் அரசியல் அரங்கில் தலைமை நிலை எய்தி, நயன்மைக் கட்சியை ஒரேயடியாகச் சாய்த்து, அன்றைய மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. அதற்கு அப்புறம் விடுதலை வரும் வரை, ஏன் 1957 வரையில் கூட, பேராயக் கட்சிக்கு ஏறுமுகம் தான். பேராயக் கட்சியின் தலைமையில் விடுதலை பெற்றது இங்கு முதல் திருப்பு முனை.

2. அதன் விளைவால், கொஞ்சம் கொஞ்சமாக நயன்மைக் கட்சி அரசியல் களத்தில் இருந்து பின்வாங்கி, குமுகப் போராட்டங்களில் மட்டுமே கருத்துக் கொண்டு, தன்னைத் திராவிடக் கழகம் எனப் பெயர் மாற்றிக் கொண்டு, செயலாற்றத் தொடங்கியது. இதுவும் நம் மாநில வரலாற்றில் ஒரு திருப்பு முனை தான். [இன்றைய இளைஞர்கள் பலருக்கும் திராவிடக் கழகம் (என்ற நயன்மைக் கட்சி) ஒரு காலத்தில் மாகாணத்தை ஆளும் அரசியல் கட்சியாகச் செயல்பட்டது என்பது தெரியாமல் இருக்கலாம். உண்மையில் பேராயக் கட்சி அளவிற்குக் கொடிவழி கொண்டவை திராவிட இயக்கங்கள். அவை நேற்று முளைத்த காளான்கள் அல்ல.]

3. நயன்மைக் கட்சி திராவிடக் கழகமாக மாறிய நேரத்தில், சென்னை மாகாணச் சட்டப் பேரவையில், பொதுவுடைமைக் கட்சியே முகன்மை எதிர்க்கட்சியாய் இருந்தது. ஒரு காலத்தில் பேராயத்திற்குள்ளேயே உட்கட்சியாக இருந்த பேராயச் சமவுடைமைக் கட்சியில் (Congress Socialistic Party), ஒரு சிலர் விடுதலைக்குச் சற்று முன்னால் தனியே பிரிந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை (Indian Communistic Party) உருவாக்கினார்கள்; மற்ற சமவுடைமையாளர்கள்,(Socialists) லோகியா போன்றோரின் முயற்சியில், சமவுடைமைக் கட்சியை (Socialistic Party) உருவாக்கினார்கள். இவர்கள் தான் பின்னாளில் உடைந்து இரண்டாகிப் பின் பலவாகி, மீண்டும் சேர்ந்து, முடிவில், சனதாக் கட்சியாய் மறுவுருவம் பெற்றார்கள். (இந்தியாவின் இன்றையப் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் பேராயக் கட்சியில் இருந்தும், நயன்மைக் கட்சியில் இருந்தும் தான் பிறந்தன). பேராயத்தில் இருந்து பொதுவுடைமைக் கட்சியும், சமவுடைமைக் கட்சிகளும் தனித்துப் போனது இன்னொரு திருப்பு முனை. (இன்றைய பாரதிய சனதாக் காட்சியின் முன்னாள் நிலையும், பேராயக் கட்சியின் வலது சாரி முனையில் இருந்து கிளைத்தது தான்.)

4. தேர்தல் அரசியலில் ஈடுபட்டு, முதலாளிய மக்களாட்சியில் ஈடுபடுவதாக முழங்கிய பொதுவுடைமையர், அவர்களின் செயலாளர் பி.டி.ரணதிவே யின் நிலைப்பாட்டிற்கு மாறி, 1949 தெலிங்கானாப் புரட்சியில் இறங்கினார்கள். இதன் விளைவாய், பொதுவுடைமைத் தலைவர் பலரும் நிலத்தடி (underground) வாழ்க்கைக்குப் போகத் தொடங்கினார்கள். இந்த நிலையில் சட்ட பூருவமான அரசியல் அரங்கில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இது அடுத்த திருப்பு முனை; தமிழ்நாட்டையும், தென்னிந்தியாவையும் பொறுத்த அளவில் இது கொஞ்சம் ஆழமான திருப்பு முனை.

5. பேராயத்திற்கு எதிரான அரசியலில், நாடு விடுதலை பெற்றிருந்த தொடக்க காலங்களில், பொதுவுடைமைத் தலைவர்கள் பெரிதும் மக்களை, குறிப்பாகத் தென்னிந்திய மக்களை, ஈர்த்து இருந்தார்கள். ஒரு காலத்தில் தமிழ் பேசும் பகுதிகளும் மற்ற மொழி பேசும் பகுதிகளைப் போலவே, சென்னை மாகாணத்தில், இடது சாரிச் சிந்தனையில் பெரிதும் ஈடுபட்டு இருந்தார்கள். திடீரென்று பொதுவுடமைத் தலைவர்கள் நிலத்தடிக்குப் போனபின், நிலத்திற்கு மேலிருந்த அவர்களின் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு ஆட்கள் இல்லாமற் போனார்கள். இந்த இல்லாமையைத் தங்களுக்கு வாய்ப்பாய்த் திராவிட இயக்கங்கள் ஆக்கிக் கொண்டன.

6. விடுதலை பெற்று ஒன்றிரண்டு ஆண்டுகளில், திராவிடர் கழகம் அந்தக் கட்சிக்குள் இருந்த உள்முரண் காரணமாய் 1949ல் இரண்டாக உடைந்தது. ஒரு பக்கம் பேராயத்திற்கு எதிராக அதுகாலம் வரை இருந்த திராவிடர் கழகம், இன்னொரு பக்கம் திராவிடக் கழகத்தில் இருந்து எழுந்த கிளை இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் என இருவேறு நிலைப்பாட்டில் கட்சி உடைந்தது. ஆனாலும் ஒரு கிடுக்க அளவைப் (critical size) பெறமுடியாமலே தி.மு.க. நெடுநாள் இருந்தது. நாளடைவில் தி.க. தன்னுடைய பார்ப்பனிய எதிர்ப்பின் காரணமாய், ஆச்சாரியாருக்கு மாறானவரான பெருந்தலைவர் காமராசரைத் தன் முன்னணியாக எண்ணி, பேராயத்தை ஆதரிக்கத் தொடங்கிற்று. தி.மு.க. பேராய எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது. (பின்னாளில் ஆச்சாரியாரின் ஆதரவையும் பெற்றது.)

7. நாடு தன்னாளுமை பெற்ற பிறகு, எங்கணும் பெரும்பான்மை பெற்று ஆண்டு வந்த பேராயக் கட்சி, முற்று முழுதாக நயன்மைக் கட்சியை ஒழித்துவிட்டோம் என்று செம்மாந்திருந்த பொழுதில், நயன்மைக் கட்சி திராவிடக் கழகமாக மாறிப்போன நிலையில், அது சூல் கொண்டு நயன்மைக் கட்சிக்கு ஒரு புதிய மகவு பிறக்கும், அது மீண்டும் ஒருமுறை தங்களைச் சாடும், என்று பேராயக் கட்சியினர் எதிர்பார்த்திருக்கவில்லை. 1949ல் பிறந்த தி,மு.க. கிளைத்துப் பின் 1952ல் சற்றே மலர்ந்து 1957ல் குறிப்பிடத் தக்க வகையில் சட்டப் பேரவையில் உறுப்புமை பெற்றார்கள்.

8. இடையில் பொதுவுடைமைத் தோழர்கள் நிலத்தடி வாழ்க்கைக்குப் போனநிலையில் ஏற்பட்ட வெற்றிடத்தை, தி.மு.க. பற்றிக் கொண்டது. வாய் நிறையப் பொதுவுடைமைக் கொள்கைகளை எடுத்தோதி, தோழர்களுக்கு முகவர்கள் போலவே தி.மு.க. தலைவர்கள் பங்காற்றினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய், பொதுவுடைமையர் மேலிருந்த ஈர்ப்பு இடம் மாறித் தி.மு.க. மேல் மக்களுக்கு ஏற்பட்டது. பின்னால் ரணதிவே பாதையை மறுதலித்து பொதுவுடைமையர் தேர்தல் அரசியலுக்கு வந்த போது தான், "எப்பேர்ப்பட்ட தவற்றைச் செய்தோம், எப்படி ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி, அதில் ஒரு குட்டி முதலாளியக் கட்சியை ஊன்றி வைத்தோம்" என்று உணர்ந்தார்கள் ["காத்திருந்தவன் பெண்டை நேற்று வந்தவன் கொண்டு போனான்" என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு.] ஆனால் பொதுவுடைமையர் அதை உணரும்போது பாலத்தின் அடியில் வெள்ளம் பெருகி ஓடிவிட்டது. அன்று இழந்ததை இன்றுவரை பொதுவுடைமையரால் தமிழகத்தில் கைப்பற்ற முடியவில்லை. (பொதுவுடைமையர் அன்று இழந்ததை திராவிட இயக்கங்கள் எடுத்துக் கொண்டது போல், இன்று திராவிட இயக்கங்கள் இழந்து கொண்டிருப்பதில் கொஞ்சமேனும் தான் எடுத்துக் கொள்ள தே.மு.தி.க. முயலுகிறது.)

9. அன்றைக்கு எழுந்த தாக்கம் 1957ல் நல்ல விளைச்சல் கண்டு, அதன்பின் பத்தே ஆண்டுகளில், குறிப்பாக 1965 க்குப் பின் இரண்டே ஆண்டுகளில் வியக்கத் தக்க வளர்ச்சி பெற்று பேராயக் கட்சியைத் தலையெடுக்க விடாமல் திராவிட முன்னேற்றக் கழகம் 1967ல் சாய்த்தது. 1967ல் நடந்த ஒரு தேர்தல் மாநிலத்தின் தலை விதியையே தலைகுப்புற மாற்றியது. அதன் தாக்கம் இன்றுவரை பெரிது. பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார், பின்னால் அறிஞர் அண்ணாவைப் பற்றி இரங்கற்பா பாடியபோது சொல்லுவார்:

இவன்யார் என்குவீர் ஆயின் இவனே
பேராயம் என்னும் பெரும்பெயர் களிற்றை
ஆரமர்க் களத்தே அலறக் கிடத்தி
ஊராயத் திருத்தி உருக்குலைத் திட்டுத்
தமிழக வரசைத் தலைமுதல் நிறுத்திய
அமிழா நெடும்புகழ் அண்ணாத் துரையே!

உண்மை. பேராயக் கட்சி உருக்குலைந்தது. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அது மீண்டு எழ முடியாமல் இருக்கிறது. அதனால் தான் 1967 தேர்தல் ஒரு முகன்மையான திருப்பு முனை என்று சொல்லுகிறோம்.

10. அறிஞர் அண்ணா கிட்டத் தட்ட 1 1/2 ஆண்டுகளே அரசு கட்டிலில் இருந்தார். அவர் என்ன செய்திருப்பார், எப்படி இந்த மாநிலம் மாறியிருந்திருக்கும், என்றெல்லாம் இன்று சொல்ல முற்படுவது ஒருவகையில் பார்த்தால் கற்பனை வாதமே; ஆனாலும் திடீர் என அவர் உயிர்பிரிந்த போது, மக்கள் அவர்மேல் இன்னதென்று சொல்ல முடியாத ஆழ்ந்த ஈர்ப்பைக் காட்டியது உண்மை. அப்படி ஓர் ஈர்ப்பை அவருக்கும், அவருக்குப் பின்னால் மா.கோ.இரா.விற்கு மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் காட்டினார்கள்.

11. அண்ணாவிற்குப் பிறகு அவர் கட்சியின் மேம்போக்கான, ஆழமற்ற, அரிதாரப் பூச்சுத் தனமும், ஒருவித மரபுசாரா கொத்துப் பாட்டாளி மனப் போக்கும் (non-traditional lumpen proletariat mentality) எப்பேர்ப்பட்ட விளைவுகளுக்குக் கொண்டு சேர்க்கும் என்று யாரும் உணரவில்லை. கட்சியில் இரண்டு அணிகள் எழுந்தன. ஒரு அணி பேராயக் கட்சியோடு சமதானப் போக்கு கொள்ளத் துடித்தது. முடிவில் அந்த அணி வலுவிழந்து அழிந்து போய், பேராயக் கட்சியில் போய்ச் சேர்ந்து கொண்டது. இன்னொரு அணி, கலைஞர் கருணாநிதியால் ஆளுமை செய்யப் பட்டு முன்நிலைக்கு வந்தது. இந்த அணி கொஞ்சம் கொஞ்சமாய் தன் கொள்கைகளை நீர்த்துக் கொண்டே வந்தது; வெறும் ஆரவாரங்களுக்கே தம்மை ஆட்படுத்திக் கொண்டு, தன் இருத்தலைக் காப்பாற்றுவது (self-preservation) மட்டுமே அரசியல் என்ற முறையில் திராவிட இயக்கங்கள் பின்னாளில் மாறிப் போயின. அவற்றிற்குக் கொள்கைகள் என்பவை ஒரு வாய்ப்பாக, ஏந்தாக இருந்தனவே தவிர, மயக்கத்திற்கு ஆட்படாத அடிப்படைகள் என்று கொள்ளப் படவில்லை.

12. கலைஞரின் அணுகுமுறை தொடக்க காலத்தில் சரியாகத் தான் இருந்தது; ஆனால் நாளாவட்டத்தில் அரசின் நடைமுறைகள், பணிகள், அதிகாரிகளின் தூண்டுதல்கள், அரசின் வளர்ச்சிப் பணிகளில் ஊடுவரும் ஒப்பந்தக் காரர்களின் தாக்கம் ஆகியவை கட்சிக்குள்ளும், குறிப்பாக மேலிடத்திலும், பெரிதும் இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் நீர்த்தலும், தன்முனைப்புச் செயல்களும், பணம் ஒன்றே எல்லாவற்றையும் சாதிக்கும் என்ற எண்ணமும் மேலோங்கின. இந்த எண்ணங்கள் மேலோங்கினாலே, அப்புறம் யாருக்கு எது, எவ்வளவு பங்கு, என்ற பிரிவுகள் ஏற்படத்தானே செய்யும்? ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளிலேயே கட்சி மீண்டும் உடைந்தது. மா.கோ.இரா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். இந்த முறை ஏற்பட்ட உடைப்பு சம்பத் காலத்தைக் காட்டிலும் ஆழமாய் தி.மு.க.வைத் தாக்கியது. இன்றுவரை அதன் தாக்கம் நீடிக்கிறது.

13. பொதுவாக, கட்சி கட்டி ஏற்பட்ட இந்தப் பிரிவைப் பலரும் தென்மாவட்டங்களில் இருக்கும் ஒரு குமுகத்தில் அண்ணன்/தம்பிகளுக்கு இடையே ஏற்படும் சண்டைக்கு ஒப்பாகச் சொல்லிப் பேசுவார்கள். காரணம் இல்லாமல் "தேவர்மகன்" படம் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது ஒரு குமுக அரசியல் திரைப்படம். அதில் பெரிய தேவருக்கும், சிறிய தேவருக்கும் ஏற்படும் முரண்பாடுகளும், ஒருவருக்கொருவர் (இதில் பெரியவர் ஒழுங்கு, சிறியவர் மட்டுமே பிறழ்ச்சி கொண்டவர் என்பது ஒருபக்கச் சாய்வானது. இருவருமே ஒருவரின் நிலைப்பு, இன்னொருவருக்கு ஆகாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான்.) ஊறுகள் செய்து கொண்டு, அதன் மூலம் ஊருக்கே கேடு விளைவித்துக் கொண்டிருப்பார்கள்; இந்தப் பங்காளிச் சண்டை, அண்ணன் - தம்பிச் சண்டை அப்படியே தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் நடைப்பெற்றது. கழகங்களுக்கு இடையே 1971-72 தொடங்கிய இந்தச் சண்டை, முன்னரே சொன்னது போல் இன்னொரு திருப்புமுனை

14. இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே, இந்தச் சண்டையின் வீச்சை மா.கோ.இரா. புரிந்து கொண்டார். இதைக் கட்டுக்குள் கொண்டுவர, ஓர் எழுதப் படாத சமதான உடன்படிக்கையை அவர் மேற்கொண்டார். சண்டையின் வெளிப்பாடு வரம்பு மீறி, வஞ்சம் தீர்க்கும் வகையில் போகாதவாறு, பார்த்துக் கொண்டார். எப்பொழுதெல்லாம் அது எல்லை மீறுவதாகத் தெரியுமோ, அப்பொழுது அமைதி நடவடிக்கை எடுத்துச் சண்டையை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொண்டார். இந்த ஏற்பாட்டில் 12,13 ஆண்டுகள் ஓடிப் போனது. எதிர்ப்பது போல் நடந்து கொள்வதும், அது ஓரளவிற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளுவதும் நடைமுறையாயிற்று. அவர் இருக்கும் வரை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை.

15. இந்தக் கட்டுப்பாடான நடைமுறையைப் பின்னால் நெடுநாளைக்குத் தொடர முடியவில்லை. மா.கோ.இரா. விற்கு அப்புறம் ஏற்பட்ட அவர் கட்சிக் குழப்பத்தில் இரண்டு அணிகள் பிரிந்து, ஓரணி அழிந்து, முடிவில் செல்வி செயலலிதாவின் அணி முன்னிலைக்கு வந்தபோது, ஏற்கனவே செய்திருந்த சமதான நடவடிக்கை மறக்கப் பட்டு இரு கழகங்களின் போக்குகளும், வரம்பு மீறின; வஞ்சம் கொள்ளும் நிலைக்கு அவை போய்ச் சேர்ந்தன. ஆங்கிலத்தில் சொல்லுவது போல் "no holds barred" என்ற நிலைக்கு இருவருமே வந்து சேர்ந்தார்கள். புறநானூற்றில் நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் இடையே நடந்த சண்டையில் கோவூர் கிழார் கூறிய வரிகள் இப்பொழுது நினைவிற்கு வருகின்றன.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே

16. இதற்கு இடையில் தி.மு.க.வின் தனி வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு தேர்தலிலும் குறையத் தொடங்கியது. இதே போல பேராயக் கட்சியின் வாக்கு வங்கியும் அதன் உட்குழப்பங்களாலும், திராவிடக் கட்சிக்களின் மேல் பச்சைக் குதிரை ஆடியே பழகியதாலும், குறையத் தொடங்கியது. இந்த நிலையில் எழுந்த ம.தி.மு.க, பா.ம.க., இன்னும் விடுதலைச் சிறுத்தைகள், ஓரளவு புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தங்கள் வாக்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டிக் கொள்ள முயன்றார்கள்.

17. இன்றைக்கு இரண்டு கழகங்கள் தான் பெரிய கட்சிகளாய் இருக்கின்றன. அவர்களின் தலைமையில் தான் அணிகள் உருவாகின்றன. ஆனாலும் இவர்களுடைய பங்காளிச் சண்டையால் 1972- இருந்து 2006 வரை மாநிலம் இழந்தவை மிகப் பல.

18. இவர்களின் சண்டையைத் தங்களுக்கு வாய்ப்பாய்ப் பயன்படுத்திக் கொண்டு அண்டை மாநிலங்களும், நடுவண் அரசும் தமிழ் மாநிலத்தை ஏமாற்றியே வந்திருக்கின்றன. காவிரி நீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு, தெலுங்கு கங்கை, 1972-ல் இருந்து இன்றுவரை நடுவண் அரசின் பெருநிறுவனங்கள் ஒன்றைக் கூட தமிழ்நாட்டில் மானுருவாக்கம் (manufacture) செய்யும் வகையில் கொண்டு வராதது எனப் பல செயற்பாடுகளைச் சொல்ல முடியும். மிக அண்மைக் கால எடுத்துக் காட்டு: இரண்டு நாட்களுக்கு முன் நடுவண் அரசு பாறைவேதியல் ஆர மையங்களை (petrochemical radial hubs) அறிவித்திருக்கிறது. அதில் குசராத்-மகாராட்டிரத்திற்குத் தோதாய் தாகேஜ், கர்நாடகத்தில் மங்களூர், கேரளத்தில் கொச்சி, ஆந்திரத்தில் விசாகப் பட்டினம், ஒரிசாவில் பாரதீப், வங்காளத்தில் ஆல்தியா, பாஞ்சாலத்தில் பானிபட் என ஏழு இடங்களை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து, ஒரு எண்ணுரோ, சென்னையோ, கடலூரோ, தூத்துக்குடியோ ஒன்றுகூட இடம்பெறக் காணோம். இது எப்படி நடந்திருக்கக் கூடும் என்று எண்ணுகிறீர்கள்? "இந்தத் தமிழர்கள் அடித்துக் கொண்டு சாவார்கள், இவர்களில் ஒருவரை ஏவிவிட்டு இன்னொருவரைச் சாய்க்கலாம்" என்ற மிதப்புத் தான் காரணம். பொதுவாக மாநிலத்திற்குள் எத்தனை சண்டை போட்டாலும், மாநிலத்திற்கு வெளியில் ஒரே விதக் கருத்தைத் தான் அண்டை மாநிலத்து அரசியல்வாதிகளோ, இன்னும் மற்றவரோ சொல்லுவார்கள். நம்மவர்கள் சண்டையோ என்றும் மாறாத பங்காளிச் சண்டையாய் இருக்கிறது. விளைவு, எனக்கு ஒரு கண் போனால் மற்றவனுக்கு இரண்டு கண் போக வேண்டும் என்ற வெஞ்சினம் எங்கும் விரவிக் கிடக்கிறது.

19. இரண்டு கழகத்தாரும் தங்களுடைய கல்விக் கொள்கையில் பெரிதும் சரிந்து கல்வி வணிகர்களைப் பெருக்கி மடிக்குழைப் (matriculation) பள்ளிகளை இந்த 20, 25 ஆண்டுகளில் புற்றீசல் போல வர விட்டு தமிழை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள். இவர்களுக்கு பேராயக் கட்சி ஒழுங்கு போலிருக்கிறது. அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஐந்தாவது வரை தமிழைப் பாடமொழியாய் மாநிலம் எங்கும் ஆக்குவோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். தமிழ், தமிழென்று பேசியே தமிழைத் தொலைத்தவர்கள் இந்த இரு கழகங்களே.

20. மாநிலத்தின் நீர்வளம் வெகுவாகக் குறைந்து வருகின்ற காலத்தில் அதை மேம்படுத்தும் வகையில் தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள், காடுவளர்ப்பு போன்றவற்றை மேம்படுத்தாமல், ஒரே பயிராக இல்லாமல் பல்வேறு பயிர்களை மாநிலத்தில் பரப்பி, குறிப்பாகக் காய்கறிப் பயிர்களை பெரிதும் விளைவாக்கம் செய்து அவற்றைக் காப்பாற்றி, அவற்றின் நுகர்பருவத்தைக் (consumption period) கூட்டுமாப் போல குளிர்பதன அறைகளை (cold conditioning rooms) ஒவ்வொரு சிறுநகரத்திலும் ஏற்படுத்தாமல் - மொத்தத்தில் வேளாண் இயலில் எந்த நீண்ட கால முயற்சியும் எடுக்காமல், மக்களை இலவயங்களுக்கு ஏங்க வைத்தது மிகக் கொடுமை.

21. மாநிலத்தின் தொழில்துறையை வளர்க்காமல், இங்கேயே பலவற்றை மானுருவாக்காமல் (தான்நகர்ச்சி - automibiles - வண்டிகள் துறையும், இன்னும் ஒரு சிலவும் வளர்ந்தது ஒரு புறனடை) வெறுமே உள்ளுரும நுட்பியலையும் (information technology) , பொதினச் செலுத்த வெளியூறலை (Business process outsourcing) மட்டுமே நம்பிக் கொண்டிருப்பது ஒரு வீக்கமே ஒழிய வளர்ச்சியல்ல. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தியத் தொழிற்துறைக்கு எந்தச் சேவையும் செய்யவில்லை; இவர்கள் எங்கோ இருக்கும் மேல்நாட்டுத் தொழிற்துறைக்கு சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு மணிக்கு 8 வெள்ளி என்று கூலி பேசும் இவர்கள், நாளைக்கு யாரோ ஒரு நாடு மணிக்கு 7 வெள்ளி என்ற கூலிக்கு ஒப்புக் கொண்டால் எல்லாவற்றையும் இழுத்து மூட வேண்டியிருக்குமே? பழைய மாமல்லபுரம் சாலை அப்புறம் என்ன ஆவது? நம்மூரில் தொழில் வளர்ச்சி ஏற்படாமல், வெறுமே உள்ளுரும நுட்பியல், வெளியூறலில் வளர்ந்து கொண்டிருந்தால் என்ன பலன்? இது பற்றி இரு கழகங்களுக்குமே கருத்து இருப்பதாய்த் தெரியவில்லை.

22. இந்த மாநிலத்தின் நெசவுத் தொழில் மிக முகன்மையானது. இந்தியாவில் விசைத்தறி அளவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஆனால் வெறுமே பருத்தித் துணி நெசவிலேயே தமிழ்நாட்டு விசைத்தறியாளர் இருந்து, பாலியெஸ்டர் நெசவிற்குள் ஆழமாகச் செல்லாமல், இந்த மாநிலத்தின் நெசவுத் தொழிலைச் சரி செய்யமுடியாது. பொதுவாக, இரண்டு கழகங்களுக்குமே நெசவுத் தொழில் பற்றிய நீண்ட கால நோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இதிலும் இலவயங்கள், வரி மாற்றம் என்று செக்கில் சிக்கிய மாட்டைப் போலச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

23. அடிப்படை வேலைகளில் மிகவும் தேவையானது போக்குவரத்து பற்றியது. இதிலும் ஒரு நீண்ட கால நோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக இரண்டு வகை பற்றிச் சொல்ல வேண்டும். ஒன்று நாட்டுப்புறங்களில் பயன்படும் சிறு பேருந்துகளின் சேவை பற்றியது; இன்னொன்று பெருநகரங்களில் இருக்கும் நகரப் பேருந்து சேவை பற்றியது; "கோரப் பசிக்குச் சோளப்பொரி" என்பது போல் தான் இந்த இரு சேவைகளும் இருக்கின்றன.

24. இப்படி ஒவ்வொரு தேவையையும் பற்றிச் சொல்லிக் கொண்டே போவது, இந்தப் பதிவின் நோக்கம் இல்லை. இந்த மாநிலம் முன்னேற வேண்டுமானால், முதலில் இங்கே நிலவும் பங்காளிச் சண்டை நிறுத்தப் படவேண்டும். அதற்கு ஒரே வழி இந்த இரு கழகங்களின் வல்லாண்மை குறைக்கப் படவேண்டும். அதாவது தனித்து இருந்து ஆட்சி அமைக்கக் கூடிய வல்லமை குறைக்கப் படவேண்டும்.

25. எனவே என்னுடைய பரிந்துரை: இன்றைய நிலையில் இரண்டு பெரிய கழகங்களைத் தவிர்த்து மற்ற கட்சிகளை, அதாவது பேராயக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சீயர்), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இன்னும் சிறிய கட்சியினர் வெல்லுவது நல்லது என்றே நான் நினைக்கிறேன். இப்படி நடந்தால், தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆகிய எந்தக் கட்சி முன்னிலைக்கு வந்தாலும் அது தனிப் பெரும்பான்மை பெறமுடியாமல் போகும். அதன் விளைவால் அவர்கள் கூட்டணி அரசிற்கு ஒத்துப் போகும் மனப்பான்மை வந்து சேரும். தமிழர் குமுகாயம் அழிவுப் பாதையில் இருந்து மீண்டு வர ஒரு வாய்ப்புக் கிடைக்கும். பங்காளிச் சண்டை குறையும். அப்படி நடந்தால், இன்றையத் தேர்தல் இன்னும் ஒரு திருப்புமுனை ஆகமுடியும். நடக்குமோ?

அன்புடன்,
இராம.கி.

Sunday, April 23, 2006

பாரதி தாசனும் தியாகராசர் கீர்த்தனைகளும்

"தமிழிசை இயக்கம்" என்ற பொத்தகத்தில் இரா. இளங்குமரன் கொடுத்துள்ள செய்தி. (பக். 62, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 600001, முதற்பதிப்பு:2, திசம்பர், 1993)

பாரதி கவிதா மண்டல அலுவலகத்தில் பாவேந்தர் பாரதிதாசனார் இருந்தார். அப்போது பஞ்சாபகேசய்யர் என்பார் "தெலுங்கு சமஸ்கிருதம் போன்று தமிழில் கீர்த்தனங்கள் பாட முடியாது; அவ்வாறு பாடினாலும் அவை தாளத்திற்கும் சங்கதி போட்டுப் பாடுவதற்கும் ஒத்து வராது" என்றார். அப்பொழுது பாவேந்தர் உடனிருந்த எஸ்.ஆர்.சுப்பிரமணியத்தைப் பார்த்து, "சுப்ரமண்யா, அவன் என்ன சொன்னான், தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் பாட முடியாது! அது என்ன தியாகராசர் கீர்த்தனை? இங்கு ஏதாவது இருக்கிறதா?" என்றார். "இருக்கிறது" என்று சுதேசமித்திரன் வாரப் பத்திரிக்கையில் உள்ள [இங்கே உள்ள என்பது, பின்னால் பாரதி தாசனால் மொழிபெயர்க்கப் பட்டவற்றைக் குறிக்கிறது - இராம.கி.] மொழிபெயர்ப்பும் இசையமைப்பும் என்ற பத்துக் கீர்த்தனைகளைக் கொடுத்தார் சுப்ரமணியம், மேல் நிகழ்ந்ததைச் சுப்பிரமணியமே கூறுகிÈ¡ர்.

சாப்பிட்டு வந்தவுடன் கவிஞர் எழுதினார். "நிஜமர்ம முலனு" என்னும் கீர்த்தனையைத் தியாகராசர் முத்திரையுடன் எழுதினார். "உடையாரே பாடு" என்றார். அவருடன் சேர்ந்தும் பாடினார். "அவன் என்னமோ சொன்னானே, சங்கதி; அதெல்லாம் போட்டுப் பாடு" என்றார். அவரும் பாடிவிட்டு "இந்தப் பாட்டு அற்புதம்! அற்புதம்!" என்றார். "பத்துக் கீர்த்தனைகளை மொழிபெயர்த்தார் கவிதா மண்டலத்தில் வெளியிட்டோம்" என்று எஸ். ஆர். சுப்பிரமணியம் பாவேந்தரின் மொழிபெயர்ப்புக் கீர்த்தனைகள் பிறந்த சூழலைக் குறித்துள்ளார்.

(ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் 1:3:35, ஆண்டு 1935.)
--------------------
இன்றைக்குப் பெரிதும் பலரால் பாடப்படும் மருகேலரா என்ற தியாகராசர் கீர்த்தனைக்குப் பாரதி தாசனின் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது. (1935 களில் பாரதி தாசன் பாடல்களில் வடமொழிச் சொற்கள் ஊடு வருவது உண்டு; அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தனித் தமிழுக்கு வந்து சேர்ந்தார்.) இந்தக் கீர்த்தனை "பாவேந்தர் பாரதி தாசனின் பழம் புதுப்பாடல்கள், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பல்கலைப் பேரூர், திருச்சிராப்பள்ளி 620 024" என்ற பொத்தகத்தில் இருந்து தட்டச்சு செய்தது. பக்கம் 475 - இராம.கி.

மறைவென்ன காண்
(மருகேலரா என்ற கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பு)

பல்லவி

மறைவென்ன காண் ஓ ராகவா?

அனுபல்லவி

மறைவேன் அனைத்தின் உருவான மேலோய்
மதியோடு சூர்யன் விழியாய்க் கொண்டோ ய் (மறை)

சரணம்

யாவும் நீயே என்றென் அந்த ரங்க மதில்
தேவிரத்தில் தேடித் தெரிந்துகொண்டே னையா
தேவரிரை யன்றிச் சிந்தனையொன் றில்லேன்
காக்கவேண்டும் என்னைத் த்யாகராஜன் அன்பே! (மறை)

இராகம்: ஷயத்தஸ்ரீ தாளம்: ஆதி

அன்புடன்,
இராம.கி.

Friday, April 21, 2006

தீச்சுடர் எழுத்து

(பாவேந்தர் பாரதிதாசனின் நினைவை ஒட்டி பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பாடியது. அவர் நாளை நினைவு கூர்ந்து இங்கே இந்தப் பாவைப் பதிகிறேன்.)

அன்புடன்,
இராம.கி.

எவர்கொல் துணையே! கவர்பு உற்றனையே!
குவடு பட நடந்த சுவடும் மாறாது;
வான் பட்டு அதிரும் குரலும் தேயாது;
வல்லுயிர் செகுக்க மாற்றலர் வெரூஉம்
கொல் அயில் விழியின் இமையும் குவியாது;
முன்னைப் பெருமையின் முங்கு பேர் உணர்வால்
அன்னைத் தமிழ்க்கே அலங்கல் சார்த்தித்
தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்தி,
ஓச்சிய தடங்கை வீச்சும் ஓயாது;
உயிர் உணர்வு ஊரப் பொழிந்து உயர் வாழ்க்கைப்
பயிர் செழிப்பு ஊரப் பாடினை கொல்லோ!

இனியே

துவர் இதழ்த் தாமரை கவர்துளி மாந்தி
உவப்புற முரலும் கரு வண்டு ஒப்ப
இயற்கை தூங்கும் புலவரும் இல்லர்!
மயற்கை அகற்றும் புலவரும் இல்லர்!
மருட்சி அகற்றிடு புரட்சியும் இல்லை!
இருள் துயில் கொண்ட தமிழகம் எழவே
அருள்மொழி நெஞ்சத்து அறமும் மடிந்தது!
தயிர்கடை மத்தம் ஆகித் தமிழர்
உயிர்கடைந்து எடுக்கும் நின் பெரும் பிரிவால்
உள்ளமும் அறிவும் ஓய்ந்த
கள்ளமில் உணர்வின் கனியுநர் தமக்கே!

பொழிப்பு:

குன்றம் பொடிந்து படும்படி பெருமிதத்தோடு நீ நடந்து சென்ற காலடிகளும் இன்னும் மறையவில்லை; வானில் தெறித்து அதிரும்படி முழங்கிய நின் குரலொலியும் இன்னும் தேய்ந்து போகவில்லை; வலிந்த உயிர் அழிந்து போகும்படி பகைவர் அஞ்சுகின்றதும் உடலைக் கொல்லுகின்றதும் வெல் போல் கூரியதும் ஆன நின் விழியின் இமைகள் இன்னும் குவிந்து போகவில்லை; முன் நாளைய பெருமையுள் முழுகி எழுந்த பேருணர்வினால் தமிழன்னைக்குப் புகழ் அலை சுட்டியும், தீயின் ஒளிநாக்குகள் போலும் எழுத்துக்களினால் பாட்டில் சுடர் கொளுத்தியும், அரசோச்சி நின்ற நின் பெரிய கைகளின் வீச்சும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உயிர்களின் உணர்வு மிகும்படிப் பாடல்களை மழையெனப் பொழிந்து உயரிய வாழ்க்கை எனும் பயிர் செழித்துப் புடை நிரம்பும்படி நீ பாடியிருந்தனையே!

இனியே, சிவந்த இதழ்கள் நிறைந்த தாமரையின் தேன் துளிகளைக் கவர்ந்து அருந்திய உவப்பின் மேலீட்டால் முரலுதல் செய்யும் கரிய வண்டைப் போல், இயற்கையோடு ஒன்றிப் படியும் புலவர் எனப்படுவோரும், இனி இலராக; மக்களின் அறிவு மயக்கம் அகற்றுகின்ற மறவர் எனப்படுவோரும் இனி இலராக; இருள் மண்டி உறக்கம் கண்டிருந்த தமிழ் நிலம் விழித்து எழும்படி, அருள் மழை பொழியும் அறம் பூண்ட நெஞ்சம் மடிந்துற்றதாக. தயிரை அலப்பிக் கடைகின்ற மத்துப் போலும், தமிழரின் உயிரைக் கடைந்தெடுக்கின்ற நின்னுடைய பிரிவினால் உள்ளமும் அறிவும் ஓய்தல் நின்ற கள்ளமற்ற உணர்வினாற் கனிந்து நிற்போர் தமக்கு, எவர் இனித் துணையாவரோ? இறப்பெனும் கள்வனால் கவர்ந்து கொள்ளப் பெற்றனையே!

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும். பாவேந்தர் பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினம் மறைந்த ஞான்றை உள்ளக் கவற்சி மீதூரப் பாடிய கையறு நிலைப் பாடல் இது.

பாவேந்தரின் பெருமிதமான போக்கும், தமிழுக்கென ஓங்கி நின்ற குரலும், தமிழ்ப் பகைவர் அஞ்சிப் புறம் நடுங்கும் நோக்கும், பேரரசன் எனப் பெருமிதங் கொண்டு ஒச்சிய கைவீச்சும், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பெரும்பயனும் இன்னும் தமிழர்களின் நெஞ்சங்களில் காட்சியாகி நிற்கும் நிலையினைக் காட்டி, அவர் பெரும் பிரிவால் தமிழர் இழந்த இழப்பையும், அவலத்தையும் தொகுத்துக் கூறியதாகும் இப்பாடல்.

Thursday, April 13, 2006

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

மேலே உள்ள சொலவடையை எழுத்தாளர் நா.பா தன் புதினம் ஒன்றில் (அது குறிஞ்சி மலரோ, பொன் விலங்கோ, எனக்கு இப்பொழுது நினைவுக்கு வரவில்லை) எழுதுவார். இந்தப் புதிதாய்ப் பிறக்கும் உணர்வு, பழையதை எல்லாம் அழித்துக் கழித்தபின் ஆர்வத்தோடு புதியதை எதிர்கொள்ளும் பாங்கு, நமக்கெல்லாம் மிகவும் தேவையான ஒரு பழக்கம். இந்த வாழ்வின் ஓட்டத்தில் விழுந்து எழுந்து, முக்கி முனகி, போராடித் தள்ளாடி, முன்வந்து நிற்கும் வேளையில், சோர்வு என்பது நம்மை அடைந்தாலும், மறுநாளைச் சந்திக்க வேண்டுமே என்னும் பொழுது, இந்தப் புத்துணர்வு நமக்கு மிகத் தேவையாக இருக்கிறது.

சில குறிப்பிட்ட நாட்கள் - பொழுதுகள்- காலங்களில் இந்தப் புத்துணர்வைத் தூண்டுகிற நிகழ்வுகள் ஏற்படுவது உண்டு. அப்படி ஒரு நிகழ்வே ஆண்டுப் பிறப்பு. ஒரு பாவலன் சொன்னது போல், "ஆண்டொன்று போனால் அகவை ஒன்றல்லவா போகிறது?" வாழ்வில் எவ்வளவு கனவுகளைத் தேக்கி நாம் நனவாக்கத் துடிக்கிறோம்? இனி வரும் ஆண்டில் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று உறுதி கொள்ளுகிறோம் அல்லவா? அந்த உறுதி இல்லையெனில் வாழ்வு ஏது?

உலகின் வெவ்வேறு பகுதிகளில், ஆண்டுப் பிறப்பு என்பது ஒரே காலத்தில் வருவது அல்ல. இது இடத்திற்கு இடம் மாறலாம்; ஏன் ஒரே நாட்டின் வரலாற்றில், காலத்துக்குக் காலம் கூட மாறலாம். ஆனாலும் ஆண்டுப் பிறப்பு என்பது அனைவரும் எதிர் நோக்குகின்ற ஒரு நிகழ்வு. இந்தக் காலப் பண்பாட்டுக் குழப்பத்தால், தமிழர்கள் ஆங்கில ஆண்டுப் பிறப்பை மட்டுமே கொண்டாடுவது அதிகரித்தாலும், தமிழாண்டுப் பிறப்பை விழிவைத்து எதிர்கொள்ளுவோர் இன்னும் இருக்கிறார்கள்.

என்ன, திருப்பதியிலும், பழனியிலும், இன்னும் ஓராயிரம் கோயில்களிலும், இது போலக் கிறித்துவ தேவாலயங்களிலும், சனவரி முதல் நாளுக்குக் கூடும் கூட்டம், சித்திரை முதல் நாளுக்குக் கூடுமா என்பது அய்யம் தான். எந்தச் சமய நெறியாக இருந்தால் என்ன, தமிழனுக்கு உரிய சித்திரை நாளைக் கொண்டாட நம்மில் பலர், குறிப்பாக தமிங்கிலர் ஆகிப் போனவர்கள், ஏன் தயங்குகிறார்கள், வெட்கப் படுகிறார்கள்? இவர்கள் தனிப்பட்டுப் போனதாக உணர்கிறார்களோ? "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதன் பொருளே அவரவர் தங்கள் தனித்தன்மையை இழப்பதுதானோ?" என்று ஒரோர் சமயம் உள்ளத்தை உறுத்துகிறது.

இருந்தாலும், விட்ட குறை தொட்ட குறை மறக்காத சில தமிழர்கள் சித்திரைத் திங்கள் பிறக்கும் நாளை ஆண்டுப் பிறப்பு என்று இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். அன்றைக்குக் கோயிலுக்கும், தேவாலயத்திற்கும், இன்னும் பள்ளிவாசலுக்கும் போய், "இறைவா, இந்த ஆண்டில் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்ய உறுதி கொடும், அய்யா" என்று வேண்டிக் கொள்ளுகிறோம். அன்று உறவினர்களையும், நண்பர்களையும் கூப்பிட்டு முகமன் கூறுகிறோம். வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். மாந்தோரணம் கட்டுகிறோம். அந்த ஆண்டின் பெயரைக் கோலத்திற்கு அருகில் எழுதி வரவேற்கிறோம். வீட்டை முடிந்த வரையில் அழகு படுத்துகிறோம். (இந்த நாளில் தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து யாரோ ஒரு திரைப் படக் கலைஞனின் விடலைத் தனத்தை விழிநீர் தேங்க, வாய்நீர் வடியப் பார்த்து நேரத்தைக் கழிப்பது விழாவைச் சேர்ந்தது அல்ல; அது இன்னொரு வகை)

பனைவெல்லம் சேர்த்து, வேப்பம்பூப் பச்சடி வைக்கிறோம். ஒரு இனிப்பாவது அன்றையச் சமையலில் சேர்ந்து கொள்ளுகிறோம். மறவாமல் அன்று பாயசம் வைக்கிறோம். முடிந்தால் ஒரு உளுந்து வடை. இன்னும் சிலர், குறிப்பாகத் தமிழகத் தென் மாவட்டத்தினர் காலையில் எழுந்தவுடன் பூசை அறைக்குப் போய் கண்ணாடி பார்க்கிறோம். ஒரு சிலர் பூசை வேளையில் புத்தாண்டிற்கான அஞ்சாங்கம் படிக்கிறோம். அந்த ஆண்டுப் பலன் என்று சொல்லப் பட்டதை அறிந்து கொள்ள முற்படுகிறோம். புத்தாடை, பூ, பழம் எனப் புதுக்கிட்டுப் பெரியவர்களிடம் வாழ்த்துப் பெறுகிறோம். ஊரெல்லாம் வலம் வந்து யாரைக் கண்டாலும் வழுத்திக் கொள்ளுகிறோம். இப்படி எல்லாம் செய்து "செல்வம் நம் வாழ்வில் பொங்கி வழியட்டும்" என்று இறைவனை வேண்டிக் கொள்ளுகிறோம்..

மேலே சொன்னதை ஒரு சில மாற்றங்களோடு இசுலாமியர், கிறித்தவர், சிவநெறியாளர், விண்ணெறியாளர், சமணர், புத்தர் என எல்லாச் சமயத்தினரும் செய்ய முடியும். ஏனென்றால், ஆண்டுப் பிறப்பு என்பது குமுகாயப் பழக்கம், பண்பாட்டுப் பழக்கம் அல்லவா? அதைச் சமயம் தடுக்க இயலாது. ஓணம் என்று வந்தால் சேரலர் அனைவரும் அதைக் கொண்டாடவில்லையா? இதில் சமயம் குறுக்கே வருகிறதோ? இல்லையே! இந்த விவரம் கெட்ட ஆங்கில அடிமைத்தனம் ஊடே வந்து தடுக்கிறதோ? இல்லையே!

அதே முனைப்பில், தமிழர் எல்லோருக்கும் உரியது தமிழ் ஆண்டுப் பிறப்பு அல்லவா?

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 12, 2006

அளவைகள்

"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"

இதற்கு உரை சொல்லுகின்ற உரையாசிரியர் இளம்பூரணர்

நிறுத்தளத்தல்,
பெய்தளத்தல்,
நீட்டியளத்தல்
தெறித்தளத்தல்,
தேங்க முகந்தளத்தல்,
சார்த்தியளத்தல்
எண்ணியளத்தல்

என ஏழு முறைகளைக் கூறி, அதற்கும் மேலாக, மாத்திரை அளந்தது சார்த்தியளத்தல் முறை என்பார். (இதேவரிசையைச் சற்றுமாற்றி, நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகத்தளத்தல், எண்ணியளத்தல் என்று மற்றொரு உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவார்.)

இந்த அளவைகள் எல்லாம் எதைக் குறிப்பிடுகின்றன என்று பார்த்தால், சில அளவைகள் உடனே புரிகின்றன; சில சட்டென்று புரிவதில்லை.

1. நிறுத்தல் என்பது எடையை அளப்பதைக் குறிப்பிடுகிறது.

2. பெய்தளத்தல் என்பது நீர்மத்தின் வெள்ள அளவைக் குறிப்பிடுகிறது. [வெள்ளத்தை (volume) இந்தக் காலத்தில் இருபதாம் நூற்றாண்டுச் சொல்லான "கன அளவு" என்பதைக்கொண்டு தவறான முறையில் நாம் குறித்துவருகிறோம். கனமென்பதும் ஒருவகையில் எடையைக் குறிப்பதுதான். நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எந்தெந்த அளவு விரிந்துபெருகி வெளியை (space) அடைத்துள்ளனவோ, அப்பெருக்கைத் துல்லியங்கருதி, வெள்ளமென்றே குறிப்பிடலாம். ஏன், இப்படிப் பழஞ்சொல்லைத்  தவிர்க்கிறோம் என்று புரியவில்லை. வெள்ளமென்ற சொல் பெருக்கைத்தானே குறிக்கிறது? சட்டென்று அது நம் மனத்தில் வெளியையும் குறிக்குமே?] இக்காலத்தில் பெய்தளத்தலுக்கு மாறாக, முகந்தளத்தல் என்றே சொல்கிறோம். குறிப்பாக, நீர்மம் (liquid), திண்மப் பொடிகளை (solid powders) அளக்க இந்த  அளவைகளைப் பயன்படுத்துகிறோம். அப்படியெனில், பெய்தலளவை என்று ஏன் சொன்னார்? ஒருவேளை முகத்தளவை என்ற முறை, நீர்மத்திற்கு மட்டுமே இருந்ததா?

3. நீட்டியளத்தல் என்பது நீளத்தை அளப்பது. இதில் குழப்பமில்லை. ஆனால் இந்தப்புலம் அடிப்படையானது. மற்ற அளவைகளுக்கு வழிசெய்வது.

4. தெறித்தளப்பதென்பது சற்று விளங்காதுநிற்கிறது. தெறித்தலென்பதற்கு சிதறல், குலைதல், துள்ளி விழுதல், முரிதல், பிளத்தல், உடைத்தல், அறுதல், வேறுபடுதல், நீங்குதல், தவறுதல், செருக்காயிருத்தல்,  பிதுங்குதல், குறும்புபண்ணுதல், நரம்புதுடித்து நோவுண்டாதல், விரலாற்சுண்டுதல், விரலாலுந்துதல், முற்றுதல், தாக்கப்பட்டுவெளிப்படல் என்ற பொருட்பாடுகளை அகரமுதலிகள் காட்டும்.  இன்னொருபக்கம் இதே அகரமுதலிகள் தெறித்தளத்தல் என்பதற்கு இசைக்கருவியின் நரம்பைத் தெறித்து (=சுண்டி) செவியின் அருகே வைத்து அளப்பதென்று சொல்லும். இம்முறையில், செவியினருகே அதிர்வை ஏற்படுத்தி அதிர்வெண்ணை அளக்கிறாரா? அன்றி அதிர்வின் நேர அளவைக் கண்டுபிடிக்கிறாரா? என்ன செய்கிறார்? தமிழறிஞர் சா.கணேசன் தெறித்தளத்தல் என்பது கால அளவைக் குறிப்பிடுவதாகவே சொல்வார். தெறிப்பென்பதைத் துடிப்பிற்கு இணையாகச் சொன்னால் கண்ணிமைத்தல், நொடித்தல் போன்றவை கூடத் தெறிப்பைக் குறிப்பதாய்க் கொள்ளலாமே?

5. இன்னுமொரு கேள்வி. அதுவென்ன தேங்கமுகந்தளத்தல்? தேங்கவெனும் முன்னொட்டு எதைக் குறிக்கிறது? தேங்கி இயல்பாகக்கிடந்ததையா? தேங்குதலென்பது நிறைதலையும், அடைதலையும், இறுக்கத்தையும் (compaction) குறிக்கலாமே? அறிவியலின் படி, திண்மப்பொடிகளின் வெள்ளம், அவற்றின் புரைமைக்குத் (porosity) தக்க மாறுபடும். அவற்றைத் தட்டித் தட்டி, அமுக்கியமுக்கி, வெள்ளத்தை நெருக்க/நெறிக்க முடியும்; ஓரளவு குறைக்க முடியும். அப்படி நெறித்தளந்தது தான் அடுத்துவரும் தேங்கமுகத்தளவோ? வெறுமனே திண்மப்பொடியை தேக்கிமுகந்து அளக்காதிருந்தால், அதன் இயல்பான புரைமையோடு (natural porosity) கூடிய வெள்ளத்தையே அளக்கமுடியும். இற்றை அறிவியலில் மெய்த் திணிவு (true density), மொத்தைத் திணிவு (bulk density), பெய்திணிவு (pour density), இறுக்கத்திணிவு (compact density)என்று வெவ்வேறு திணிவுகளை, திண்மப்பொடிகளை ஒட்டிப் பேசுவர்.

6. சார்த்தியளத்தல் என்பது ஒன்றை இன்னொன்றோடு சார்த்தி ஒப்பிட்டு அளப்பது. கண்ணிமைக்கின்ற நேரம், விரல் நொடிக்கின்ற நேரம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவையெல்லாம் ஓர் ஒப்பீட்டு அளவுகள் தான். நேரம், காலம் என்பவை ஒருவகையில் relative units தான். மேற்கூறிய கண்ணிமைக் காலங்கூட ஒருவகைச் சார்த்தியளத்தல் தான். அதைத்தான் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் கூறுகிறார். கண்ணிமைக்கும் அளவிற்கான நேரம். வேறொரு எடுத்துக்காட்டையும் இங்குதரமுடியும். இக்காலத்தில் வெம்மையை (temperature) அளவிட, இதள்த் தெறுவமானியை (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்)ப் பயன்படுத்தும்போது, வெம்மை கூடக் கூட, இதள்த் தண்டின் நீட்டங்கூடி வருகிறதல்லவா? இங்கே இதளின் நீட்டத்தை வெம்மையில் சார்த்தி, அளவெடுக்கிறோம். இற்றை அறிவியலில் மின்சார, காந்தப் புலங்களில்  அளக்கப்படும் அலகுகளும் சார்த்தியளத்தல் முறையில் தான் அளக்கப்படுகின்றன. ஒருவகையில் பார்த்தால் சார்த்தியளத்தல் முறையில்லாவிடில், அறிவியல், நுட்பியல் போன்றவை வளர்ந்தேயிருக்காது என்றுஞ் சொல்லலாம்.

7. எண்ணியளத்தல் என்பதும் நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துவது போலத்தான். எண்ணியலில் பயன்படுத்தும் முழுஎண்களும் (whole numbers), இயலெண்களும் (natural numbers), அரிதையெண்களும் (rational numbers), பின்னங்களும் (fractions), உள்ளமையெண்களும் (real numbers), பலக்கெண்களும்  (complex numbers) என இந்த வளர்ச்சி விரிந்துகொண்டேபோகும். முடிவில் முடிவிலி, வரம்பிலி, கந்தழி என்றாகும்.  

8. சரி, பரப்பை அளப்பதென்பது என்னவாயிற்று? அது ஏன் மேலுள்ள வரிசையிலில்லை? நீளம், மற்றும் வெள்ளம் வரும்பொழுது பரப்பென்பது ஏன் இவ்வரிசையில் சொல்லப்படவில்லை? பொதுவாக, அகலமாக அகண்டுகிடப்பது அகரம் (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் acre, area). பரந்து கிடப்பது பரப்பு, பரட்டு, பரத்து போன்றவை (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் broad, breadth). இல்லை, எதையாவது நாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டுவிட்டோ மா? தெரியவில்லை

மேலே எனக்குவிளங்காத கேள்விகளை அப்படியே கொடுத்திருக்கிறேன். விடை தெரிந்தவர்கள் எழுதினால் எல்லோருக்கும் பயன்படும். என்னவொரு நிலை பாருங்கள்? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவாக" இன்னும் எத்தனை கிடக்கும் இந்தத் தமிழில்?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, April 11, 2006

கெழிறு

முன்னொரு முறை ஆப்பிரிக்க கவிஞர் ஒருவரின் கவிதையை இணையத்தில் படிக்க நேர்ந்தது. ஆசிரியர் பெயர், அடையாளம் எனக்கு இன்றுவரை தெரியாது. நண்பர் இரமணிதரன் கந்தையா அதைத் தமிழ்ப் படுத்த மாட்டாரா என்று ஒரு காலத்தில் தமிழ் இணையத்தில் கேட்டிருந்தேன். (இரமணியின் கவிதைகளில் கொஞ்சம் கிறங்கிப் போனவன் நான். இரமணி ஒரு அருவி, காட்டாறு போல; திடீரென்று பெருக்கெடுப்பார்; கொட்டுவார்; பிறகு நெடு நாள் பெருக்கு இல்லாது போகும்.) அருவி இப்போதைக்கு கொட்டாது என்று எண்ணிக் கீழே உள்ள கவிதையைக் கிடப்பில் போட்டு விட்டேன். பின்னால், என் பழைய குப்பைகளைக் கிளறியதில் மறுபடியும் வெளிப்பட்டது. நானே உரைவீச்சாய் தமிழில் மாற்றியதைக் கீழே தந்திருக்கிறேன்.

_____________
When I'm born.. I'm black.
When I grow up.. I'm even more black.
When I am in the sun.. I'm still black.
And When I'm cold. guess what.. I'm black.
And when i die, I'm @*!&^% black too.
But you...
When you're born.. you're pink.
When you grow up..you're white.
When you're sick..man.. look at yourself.. your're green.
When you go in the sun.. you turned red.
When you're cold..you turned blue.
And when you die..you look purple.
And YOU got the nerve to call ME.. Coloured..?!
________________________________
Lyrics & Vocals: LaMont Humphrey

என்னருமை வெள்ளைக்காரா,
சேதி கொஞ்சம் தெரிஞ்சுக்கோணும்!

நான்
பிறந்த போது, கருப்பு
வளர்ந்த போது, கருப்பு;
காய்ஞ்ச போது, கருப்பு;
குளிர்ந்த போது, கருப்பு;
பயந்த போது, கருப்பு;
நொய்ஞ்ச போது, கருப்பு;
இறக்கும் போது கூடக் கருப்புத்தான்

ஆனால் நீயோ,
பிறந்த போது, பூஞ்சை
வளர்ந்த போது, வெள்ளை,
காய்ஞ்ச போது, சிவப்பு,
குளிர்ந்த போது, நீலம்
பயந்த போது, மஞ்சள்
நொய்ஞ்ச போது, பசலை
இறக்கும் போது, வெளிறு

இருந்தாலும், என்னைக்
கெழிறுன்னு கூப்பிட
உனக்குத் திமிரு இருக்குல்லெ?

அன்புடன்,
இராம.கி.

பி.கு. கெழு = நிறம், வண்ணம். (கெழுமிய = நிறைந்த)
கெழு>கெழிறு>colour

Sunday, April 09, 2006

நினைவகம்

உதயச் செல்வி என்பவர் தோழியர் வலைப்பதிவில் முன்னால் ஒரு சமயம் கீழே வரும் புதுக்கவிதையை எழுதியிருந்தார். அதற்கு நான் இட்ட மறுமொழியைத் தனிப் பதிவாக இங்கு சேமிக்க வேண்டி இடுகிறேன்.

Antispyware-ஆல்
தேடி ஒழித்து
Virus Check-கை முழுதாய்
ஓடவிட்டு அழித்து
பொறுமையாய் அனைத்தையும்
Defragment செய்து
நெறிப்படுத்தி அடுக்கி
கொஞ்சம் புதுப்பித்தே ஆகவேண்டும்
அவசரமாய்
ஒருமுறையேனும்
என் மூளையையும்
அதன் நினைவகத்தையும்!

இந்தக் கவிதையை நல்ல தமிழில் சொல்ல முடியும்; என்ன, கொஞ்சம் மெனக்கிட வேண்டும்; அவ்வளவுதான். உதயச் செல்வியின் கருத்துக் குலையாமல் மரபுப் பாவில் கீழே சொல்ல முற்பட்டிருக்கிறேன். தவறிருந்தால் மன்னியுங்கள். ஓசை கூடக் கூட கவிதை சொல்லுதற்கு ஆர்வம் மிகும். புதுக் கவிதைகளில் ஓசை வரக்கூடாது என்ற விதியில்லை.

உளவறை*1 தேடி,
ஒட்டவே ஒழித்து,
வெருவி*2யைத் துழவி,
வெட்டென விரட்டி,
பொறுமையாய் அனைத்திலும்
சிதறல்*3 எடுத்து,
நெறிப்பட அடுக்கி,
புதுக்கவே*4 வேண்டும்,
அவக்கர*5 மாக,
ஒருமுறை யேனும்
என்னுடை மூளையை,
அதன்நினை வகத்தை!

1. உளத்தல் என்பது தோண்டியெடுத்தல். உளத்தலின் திரிவே உழத்தல் என்பது. உழவு செய்யும் போதும் நிலத்தில் தோண்டத்தான் செய்கிறோம். இங்கே நம்முடைய செய்திகளை, புலனங்களை இன்னொருவர் நம்மிடம் இருந்து உளந்து எடுக்கிறார். வறை என்ற சொல் ware என்பதற்கு இணையான சொல். ஆதி காலத்தில் உலர்ந்த பொருட்களே விற்பனைக்கு வந்தன. கருவாடு, உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வேக வைத்துப் பின் கிடைக்காத நாட்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கிய பொருட்களை ஒருவருக்கொருவர் பண்டமாற்றிக் கொண்டார்கள். பின்னால் அவற்றையே காசுக்கு விற்றார்கள். இந்த உலர்ந்த பொருட்களில் தான் வாணிகம் என்பது தொடங்கியது. சரக்கு என்ற சொல்லும் உலர்ந்து போன சருகில் இருந்தே வந்தது. எந்தச் சரக்கும் உலர்ந்தது தான். வறள்தல் என்ற வினைச் சொல்லும் உலர்தலையே குறிக்கும். வறுத்தல் என்ற சமையல் வினையும், வறுக்கப் படும் பொருளின் நீர்த் தன்மையை வாட்டிக் குறைப்பது தான். வறு என்னும் வினையடியில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் வறை.

சொவ்வறை = software,
கடுவறை = hardware;
பகிர்வறை = shareware;
பரிவறை = freeware;
உளவறை = spyware;
வறைக்கூடம் = warehouse.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். Anti spyware என்பதை அப்படியே சொல்லாமல் இங்கே ஒழிப்பதை வினையாகக் காட்டுவது தமிழ்நடைக்கு நன்றாக இருக்கிறது. கூடிய மட்டும் பெயர்ச்சொற்களைச் சரமாகப் போடுவதைத் தவிர்த்தால் தமிழ், செருமன் மொழி மாதிரித் தோற்றம் காட்டாது. வேறுவழி இல்லை என்றால் மட்டுமே பெயர்ச்சொற் சரங்களைப் பயில வேண்டும்.

2. தமிழில் கிருமி என்ற வடசொல் நெடுநாளாகப் பயிலும் சொல் என்றாலும் அது bacteria - வைக் குறித்தது. நல்ல தமிழில் bacteria -வைப் பட்டுயிரி என்று சொல்லுவோம். பட்டையாய் இருக்கும் உயிரி பட்டுயிரி. படுவது பட்டை. இப்படித்தான் மேலைநாடுகளில் bacteria-விற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். தமிழிலும் அதே போல கருத்தை எளிதில் கொண்டுவர முடியும்.

virus என்ற சொல்லைக் கிருமி என்றோ, பட்டுயிரி என்றோ குறித்தால் அதன் விதப்பான பொருள் வராது. virus என்பது நஞ்சு என்ற பொருள் உள்ளது. அது ஓர் ஒட்டுண்ணி. அது தனித்து இருக்கும் போது உயிர் இல்லாதது, வெறும் புரதமாய் இருப்பது. ஆனால் ஓர் உயிர் உள்ள கட்டகத்துள் (system) வந்தவுடன், அது ஒன்று இரண்டாகி, இரண்டு நாலாகி இப்படி மடங்கிப் (exponential) பெருகி ஓர் உயிர்ப்பைக் காட்டும். virus என்பது நம்மைத் திகைக்க வைத்து உலை வைப்பதால் அதை வெருவி என்று சொல்லலாம். வெருவு என்பதற்கு நஞ்சு என்றும் பொருள் வரும்.

துழ(஡)வுதல் என்பது checking தான். எனவே வெருவி துழவல் = virus check

3. சிதறல் = to fragment (v); சிதறு = fragment (n); சிதறு எடுத்தல் / சிதறல் எடுத்தல் = defragment; பெரும்பாலும் de என்ற முன்னொட்டு வரும் இடங்களில் எடுத்தல் என்ற வினையை பின்னால் வைத்துச் சொன்னால் சரியாக வரும்.

4. புதுக்குதல் = to make new; புதுக்குதல் என்பது தன்வினை; புதுப்பித்தல் = பிறவினை; தமிழில் பெரும்பாலும் தன்வினையை ஆளுவது மொழி நடையைக் கூட்டும். பிறவினை சேர்க்கச் சேர்க்க தமிழ் மொழி கொஞ்சம் விலகி நின்றாற் போல தெரியும்; நமக்கு நெருக்கமாய்த் தெரியாது.

5. அவக்கு, அவக்கு என்று ஓடினான் என்று சொல்லும் போது அவக்கு என்பது ஓசைக் குறிப்பு. வெறும் ஓசைக்குறிப்பால் தமிழில் ஏற்பட்டுள்ள சொற்கள் பல. அவக்கு நிலை அவக்கரம் எனப்படும். அதை வடமொழிப் பலுக்கில் அவ சரம் என்று சொல்லிவிட்டார்கள். அதன் அடிப்படை அவக்கரம் தான்.

அன்புடன்,
இராம.கி.

உய்யப் பணம்

நண்பர் சடையன் சாபு ஜீவனாம்சம் - alimony என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லை இனங் காட்டுமாறு தமிழுலகம் மடற்குழுவில் கேட்டிருந்தார். (அவ்வப் பொழுது இப்படிச் சொற்களைப் பற்றிக் கேட்பது அவருக்கு வழக்கம்.) அவருக்கு அளித்த மறுமொழி இது.

தமிழில் உய்தல் என்ற வினைக்கு to live, to exist என்றே பொருளுண்டு; உய்வது உயிர்; உயிர் என்னும் சொல் உசிர் என்றும் தமிழர் நாவில் திரியும். உய்தலின் வேர், நாம் மூச்சிழுக்கும் ஊய், ஊய் என்னும் ஒலி தான். அது ஒரு மொழியறியா ஒலி. அதை ஊஸ்/ஊசு என்றும் சொல்லுகிறோம். "உஸ், உஸ் என்று இழுக்கிறான் பார்" என்று சில போதுகளில் சொல்லுகிறோம் அல்லவா? உஸ் என்பது மாற்றுத்திட்டையில் (metathesis) ஸு, ஸூ என்றும் திரியும்.

உஸ், உஸ் என்று உய்த்துக் கொட்டுதல் வினைச்சொல் தமிழில் உச்சுக் கொட்டுதல் என்று சொல்லப் படும். உய்தலும் உய்யித்தலும் என்ற வினைச்சொற்களில் யகரத்தை முதலிற் சேர்ந்து பலுக்கப் படுவதும் உண்டு. (பலுக்குவதில் கவனம் தேவை; தவறு வராமல் இருக்க வேண்டும். நாம் உய்யலாம், உய்யிக்கலாம்; அது தன் வினை; ஆனால், இறைவன் மட்டுமே உய்விக்க முடியும். அது பிறவினை. தன் வினை, பிறவினைச் சொற்களில் தமிழர்கள் சிலர் தடுமாறி விடுகின்றனர்.)

ஸு, ஸூ என்ற மொழியறியா ஒலி, வட மொழியில் அழுத்தம் பெற்று ஜூவுதல் என்று ஆகிப் பின் ஜீவிதல் ஆவது இந்தத் திரிவுகளின் தொடர்ச்சியே ஆகும். இந்தையிரோப்பியனில் யகரம் என்னும் ஒலி பல பொழுதுகளில் ஜகரமாய் ஒலிக்கும், யப்பான் என்ற சொல் இந்தையிரோப்பியனில் ஜப்பான் என்று ஆவது போல. (சப்பானியர்களோ நம் தமிழரைப் போல ய>ஞ>ந என்ற வழியில் யப்பானை நிப்பான் என்று அழைப்பார்கள்.) அந்த ஸூ விற்கும் நம்முடைய உய்க்கும் உள்ள இணையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஜீவன் என்பதின் சரியான தமிழ் இணை உய்யன் என்பதே. அதே சொல் இன்னொரு ஈற்றில் உயிர் என்று ஆகும். இற்றை வழக்கில் உயிர் என்பதை மட்டுமே புழங்குகிறோம். உய்யன் என்பது நம் வழக்கில் இல்லை; ஆனால் நம் மொழியின் பாடமையில்(possibility) அமையக் கூடியது தான்.

அம்சம் என்பது பங்கைக் குறிப்பது. (அதன் அடிப்படை வினைச்சொல் அய்தல் = வெட்டுதல், பகுத்தல், பிரித்தல்; கீரை ஆய்தல் என்று நாட்டுப்புறத்தார் சொல்லுவது கீரை இலைகளைத் தண்டில் இருந்து பிரித்து எடுத்தலே. இனி அய்ந்தம்>அய்ஞ்சம்>அஞ்சம்>அம்சம் என்ற வகையில் இந்தத் திரிவு நிலை கொள்ளும்;

அம்சம் என்று சொல்லுவதற்கு மாறாகப் பணம் என்றே நாம் இந்தக் காலத்தில் சொல்லலாம். மண விலக்கின் பின், ஒரு பங்காளர் உயிர்வாழ இன்னொருவர் கொடுக்கும் பணம் உய்(ய)ப் பணம். [பலுக்க எளிமை கருதி யகரத்தைச் சேர்த்துச் சொல்லலாம்.]

உய்யப் பணம் = ஜீவனாம்சம் = alimony

ஆங்கிலச் சொல் வேறு பொருளில் 1655ல் எழுந்திருக்கிறது.

from L. alimonia "food, support, nourishment, sustenance," from alere "to nourish" (see old) + -monia suffix signifying action, state, condition. Derived form palimony coined 1979.

ஒரு சொல்லை மீட்டுக் கொடுக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு சாபுவுக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 05, 2006

அப்பும் இழிதலும்

விண்ணவன் கோயிலில் இறைவன் மூலத் திருமேனி அல்லது உலாத் திருமேனியை நீராட்டுவதை திருமஞ்சனம் என்பார். அதே நீராட்டைச் சிவன் கோயிலில் செய்யும் போது பொதுவாகத் தமிழ்ப் பெயரில் அழைக்காமல் அபிஷேகம் என வடமொழிப் பெயரிட்டு அழைப்பார். (இன்றைக்கும் விண்ணெறிச் சொற்களை விட சிவநெறிச் சொற்களில் வடமொழிக் கலப்பு சற்று கூடவே உண்டு. இத்தனைக்கும் ”தென்னாடுடைய சிவன் எனப் பெருமையாகவும், ”எந்நாட்டவருக்கும் இறைவன்” எனப் பொதுமைப் படுத்தியும், நாம் போற்றி அழைக்கிறோம். ஆயினும் சிவன் கோயில் குருக்கள் வாயில் தமிழ் ஏதோ குறைவாகத் தான் பயில்கிறது. பெருமாள் கோயில் பட்டர் வாயிலோ, தமிழ் சற்று தாராளமாகவே விளையாடுகிறது. இதற்காக விண்ணவர் வடமொழியைப் புழங்கவே இல்லை என்ற பொருளில்லை; தம் வழிபாட்டின் ஊடுடே தமிழைப் பயன்படுத்த அவர் தயங்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.)

இந்த ”அபிஷேகம்” என்ற சொல்லின் மூலம் என்னவென இங்கு பார்ப்போம்.

தமிழில் ஆழ்தல், கீழ் வருதல், இறங்குதல் என்ற பொருட்பாட்டுச் சொற்கள் பலவும் உண்டு. பொதுவாக, நீரோடு பொருத்திய கூட்டுச் சொற்கள் தமிழில் மிகப் பல. 

நீருக்குள் நாம் இறங்கலாம். அது தன்வினை. இன்னொருவர் நம்மை நீருக்குள் இறக்கலாம். அது பிறவினை. தவிர, இன்னொரு வகையான பிறவினையும் உண்டு. அதில் நாம் அப்படியே குந்தி இருக்க, நம் மேல் இன்னொருவர் நீரை இறைக்கிறார். அப்படிச் செய்யும்போது கூட, நம்மை நீருக்குள் இறக்குவதாய், ஒரு பொருள் வரத்தான் செய்கிறது. ஏனெனில், அவர் நீரை இறைக்கும் போது, நம்மை நீருக்குள் இறக்குகிறார்; நாமும் இறங்குகிறோம். இப்படி ஒரு தொடர்ச்சியான பொருள்வரத் தேவையானது நீருக்கும் நமக்கும் இடையே ஓர் உறழும் இயக்கம் அல்லது உறழிய இயக்கம் தான் (relative motion) (உறழ்தல் = to relate; உறழ்> உறழ்வு> உறவு = relative). இப்பொழுது இன்னும் சில சொற்களைப் பார்ப்போம்.

ஆழ்தல்> ஆடல் = இறங்குதல் (ழ்+த = ட); நீர் ஆடல் = நீருள் இறங்குதல்; நீராட்டு = நீரை இறக்கும் செயல்; ஆழ்> ஆழம்

இல்> இர்> இரங்கு = கீழ்வருதல்; இரங்குதல்> இறங்குதல் = கீழ் வருதல்;            இர்> இரிதல் = இறங்குதல், வடிதல்
இல்> இலி> இலிதல் = இறங்குதல்; 
இல்தல்> இழ்தல்> இழிதல் = இறங்குதல்; 
இலி> இழி> இழிகுதல் = இறக்குதல்;
இழிகு> இழிகம் = இறக்கும் செயல்.

இழிகுவது என்றவுடன் சட்டென்று யாரும் இழிவுப் பொருளை எண்ண வேண்டாம். இழிகுவதைத் தான் liquid = one which goes down flowing என மேலையர் சொல்கிறார். [நான் பலமுறை சொல்லி வந்துள்ளேனே? தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு எங்கோ உள்ளது. அதன் ஊற்றுக்கண் தான் நமக்குப் புரிபடவில்லை.]

இனி, அம் எனும் சொல் நீரைக் குறிக்கும்; அதேசொல் அம்பு என நீண்டும், நீரைக் குறிக்கும்; அம்+ இழ்தல் = அமிழ்தல்; அம்மிற்குள் இறங்குதல்; அமிழ்தலின் பிறவினை, அமிழ்த்தல் = நீருள் இறக்குதல்.

அம்பு +ஆடல் = அம்பாடல்; அம்பு> அம்பா; அம்பா + ஆடல் = அம்பாவாடல்; எம்பாவைப் பாடல்கள் ஒருவகையில் பார்த்தால், பாவை நோன்பு; இன்னொரு வகையில் பார்த்தால் அது அம்பாவாடல் எனும் நீராட்டு. எது முதன்மைப் பொருளென இன்னமும் எனக்கு விளங்கவில்லை. 

பாவை நோன்பை ஏன் நீராடும் குளத்தருகே செய்யவேண்டும் என்பதும் கூட எனக்குப் புரிபடவில்லை. தைநீராடல் என்று பரிபாடலும், மார்கழி நீராடல் என்று பாவைப் பாட்டுக்களும் நீராட்டையே பேசும் போது, வேறு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முல்>  முல்ங்குதல்> முங்குதல் = இறங்குதல்; நீருக்குள் முங்கி எழுதல்
முல்ங்குதல்> முல்ஞ்சுதல்> மல்ஞ்சுதல்> மஞ்சுதல்> மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீர் இறங்குதல்.
முல்> முழு> முழுகுதல்> முழுக்குதல் = நீருக்குள் இறக்குதல்

மண்ணுதல்> மண்ணம்> மணம் = நீருள் இறங்கும் செயல்; அகநானூற்றின் படி, அக்கால தமிழர் மணம் என்பது கூடியிருப்போர் வாழ்த்துக் கூற நடக்கும் மங்கல நீராட்டே ஒழிய வேறு எதுவும் அல்ல. இக்காலத்தில் நாம் காணும் தாலி கட்டுப் பழக்கம் தமிழருக்குள் எப்போது ஏற்பட்டதென்று தெரியவில்லை. இன்றைக்கும் எங்கள் பக்கம், திருமணத்தில் மாலை நேரத்தில் மஞ்சள் நீராடும் சடங்கு மணமக்களுக்கு உரிய சடங்கே. அதேபோல மணி விழாக்களிலும் மஞ்சள் நீராடுவதே, கும்பஞ் சொரிவதே, பெருஞ்சடங்காகத் தமிழ்நாடு எங்கணும் கொள்ளப்படுகிறது. மஞ்சனம்> மஞ்ஞனம்> மண்ணனம் = நீர் இறக்கும் செயல்

இதுவரை ஏற்பட்ட இப் புரிதலோடு, அபிஷேகம் என்ற வடசொல்லைப் பார்த்தால் அதன் தமிழ்மூலம் நமக்கு எளிதில் கிடைத்து விடும்.

அம்>அம்பு>அப்பு = நீர்

அம், அம்பு, அப்பு என்ற சொற்களை நீர் என்ற பொருளுக்குத் தொடர்பாய் ஆவணப் படுத்தித் தமிழில் பல சான்றுகள் இருக்கின்றன. ப.அருளியாரின் யா என்ற பொத்தகத்தைப் பார்த்தால் இது புலப்படும். (இப் பொத்தகம் பற்றி முன்னே சொல்லியுள்ளேன்.) இச்சொற்களெலாம் தமிழ்ச் சொற்களே.

அப்பு + இழிக்குதல் = அப்பிழிக்குதல் = நீராட்டுதல்
அப்பு + இழிகம் = அப்பிழிகம் = நீராட்டு

அப்பிழிகம் என்பது வடமொழிப் பலுக்கில் ழகரம் ஷகரமாகி, அப்பிஷிகம்> அப்பிஷேகம்> அபிஷேகம் = நீரை இறக்கும் செயல் என்று ஆகும். (பெருமானர் வழக்கில் இழைந்து கொள்வதை ஈஷிக் கொள்வதாகச் சொல்வார்; ழகரம் பெரும்பாலும் ஷகரமாகவே ஒரு சிலரால் மாறிப் பலுக்கப் பட்டுள்ளது.) 

தமிழ் முறைப்படி சொற்புணர்ச்சியைப் பிரிக்காமல், மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலி, அபி+ஷிக் என்று பிரித்து, அபி என்பதை to, towards, into, over, upon என்ற வேற்றுமை உருபுகளாய்ப் பொருள் கொண்டும், ஷிக் என்பதற்கு இழிகுதல் என்றே பொருள் சொல்லியும் ஆவணப் படுத்தும். 

மேலே உள்ள சொல் தொகுதிகளை மனதிற் கொண்டு பார்த்தால், அபி+ஷிக் என்று பிரிப்பது சரியான மூலம் காணாமல், பொருந்தாததைப் பொருத்திச் சொல்லும் உத்தி என்பது புலப்படும். 

வடமொழிப் பலுக்கில் இழிகு என்பது, இஷிகு என்றாகி முன்னாலுள்ள இகரமும், பின்னாலுள்ள குற்றியலுகரமும் கெட்டு ஷிக் என்று தானே வந்து சேரும்?

எந்த இயல் மொழியிலும் பொதுமைப் பொருளிலிருந்து விதப்புப் பொருளுக்குக் கருத்து வருவது, (மாந்தப் பட்டறிவிற்கு எதிர்மறையாய் இருப்பதால்,) மிக மிக அரிது. பெரும்பாலும் விதப்புச் சொற்களில் இருந்தே பொதுமைச் சொற்கள் இயல் மொழிகளில் ஏற்படுகின்றன. 

அப்பு இழிதல் என்பது விதப்பிக் காட்டும் செயல். அப்பு என்பதை கருத்தில் கொள்ளாமல், வெறுமே அபி +இழி எனப் பிரித்து, அபி யை ஒரு வேற்றுமை உருபாக்கி, இழிக்கும் நீருக்குள் இறக்குவது என்று பொருள் கொள்வது வலிந்து காட்டும் முயற்சி. காட்டாக, வாயால் இழித்துக் காட்டினான் எனும்போது வாயிதழ் இறக்கிக்காட்டப் படுகிறதே ஒழிய, அங்கே நீருக்கு வேலை இல்லை. இழித்தலுக்கு நீரோடு சேர்ந்த விதப்புப் பொருள் கிடையாது.

சிவநெறி, விண்ணெறிச் சொற்களில் இது போன்ற பலவற்றையும் ஓர்ந்து பார்த்தால், உள்ளே ஆழ்ந்த தமிழ்மூலம் ஒன்றைக் காட்டுவது வியப்பில்லை. ஏனெனில், இந்நெறிகள் தெற்கே தமிழகத்தில் எழுந்தவை. வேத நெறியைச் சிவ, விண்ணெறிகளோடு பிணைத்து ஒரு வகைக் கலவை நெறியை உருவாக்கியது நெடுங்காலம் கழித்தே நடந்திருக்க வேண்டும். இதை உணர்வதில், அப்பிழிகம் என்பது இன்னுமோர் எடுத்துக் காட்டு.

அப்பிழிகத்தின் தொடர்ச்சியாய், திரு நாவல்கா = திருவானைக்கா பற்றியும் சொல்ல வேண்டும். நாவல் மரம் நிறைந்த கா நாவல் கா. திருவரங்கத் தீவின் ஒரு புறத்தில் நாவல் மரம் நிறைந்த பகுதியில் இருந்த ஈசருக்கு நாவல்கா ஈசர் என்ற பெயர்; இன்று அவர் ஜம்புகேசுவரர் என்று சொல்லப்பட்டு, மூலம் அறியவொண்ணா வகையில் இருக்கிறார். (திருவானைக்காவில், தல மரம் நாவல் மரம் தான்.)

நாவல் எனும் சொல் யா எனும் வேரில் பிறந்தது. யா எனும் வேருக்குக் கருமைப் பொருள் அடிப்படையானது. யா எனும் வேரில் பிறந்த சொற்கள் மிகப் பல.

யாவ மரம்> நாவ மரம்> நாவல் மரம் என்று அது உருவாகும். அதே போல யாவ மரம் என்பது இன்னொரு வகையில் யாம மரம்> யாம்ப மரம் ஆகிப் பின் வடமொழிப் பலுக்கில், ஸகரம் சேர்த்து ஸ்யாம்ப மரம்> ஜ்யாம்ப மரம்> ஜம்பு மரம் என்றாகும். நாவலந்தீவு என்ற சொல்லே "ஜம்புத் தீவே பரத கண்டே" என்று வடமொழி மந்திரத்தில் மொழி பெயர்க்கப் படும். 

"நாவலம் தண்பொழில்" என்பது இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 2300 ஆண்டுகள், தமிழன் பயன்படுத்திய சொல். ஜம்புத் தீவு நம்மால் எழுந்த பழக்கம்; பரத கண்டம் வடவரால் எழுந்த பழக்கம். வடமொழி மந்திரங்களையும், சொலவடைகளையும் கூர்ந்து படித்தால் நிறையச் செய்திகள் புரியும். அவற்றைச் சரியானபடி விளங்கிக் கொள்ளத் தான் ஆட்கள் அருகி இருக்கிறார்.

திரு நாவல்காவும், திருவரங்கமும் சேர்ந்திருக்கும் இடம் காவிரியில் ஒரு தீவு.

[முன்பே ஒருமுறை ஈல்தல் வினையை ஓட்டி எழுந்த பெயரை இங்கு நினைவு கொண்டால், ”அரங்கு” எப்படி எழுந்ததென்று புரியும்.  

ஈல்தல் = பிரிதல். இதே சொல்லை ஈல்ங்குதல் என்றும் சொல்லலாம். (நில் என்று தமிழில் சொல்வதை நில்க்கு என்று மலையாளத்தில் சொல்வதில்லையா? அது போல ஈல், ஈல்ங்கு என்பன வெவ்வேறு வட்டாரப் புழக்கம் கொள்ளும், அவ்வளவு தான்.) இவ் வினையடிகளின் வழி, பெருநிலத்தில் இருந்து ஆறோ, கடல்நீரோட்டமோ, தனித்துப் பிரித்த சிறு நிலம், ஈழம் (= ஈல்ந்த இடம்) என்றும், இலங்கை (=ஈல்ங்கிய இடம்) என்றும் பெயர் கொள்ளும். ஈழம், இலங்கை என்ற சொற்களுக்கு island என்ற பொதுமைப் பொருளையே கொள்ளலாம். 

மாவிலங்கை என்ற இன்னொரு தீவு தென் பெண்ணையாற்றின் நடுவில் உண்டு. இதே போல ஈல்தலுக்கு இணையாக அருதல்>அரிதல் என்ற சொல்லும் உண்டு. அரு>அறு என்பதும் அதே பொருளில் எழுந்ததே. ஆற்றால் அறுத்து எழுந்த இடம் அரங்கு>அரங்கம். அதன் பொருள் தீவு மற்றும் மேடு என்பதே. அதனால் தான் நாட்டியமாடும் மேடைக்கும்  அரங்கு என்கிறோம். திருவரங்கம் ஒரு தீவு.]

காவிரியில் வெள்ளம் நிறைந்துள்ள நாட்களில், நாவல்கா சிவன் கோயிலின் கருவரைத்தரையில் இருந்து நீர் ஊறிச் சுரந்து கொண்டே இருக்கும். அக் கருவறையின் நடுவில் நீர் வெளி வருவது ஓர் இலிங்கம் நீர்வடிவில் இருப்பது போலவே காட்சியளிக்கும். இந்நிகழ்வால், அங்கு இறைவனை நீர் எனும் பூதமாகவே உருவகித்ததில் வியப்பொன்றும் இல்லை. இறைவனின் வெளிப்பாட்டை எத்தனையோ வகையில் உணருகிறோம் அல்லவா? அவன் அப்பு வடிவில் அங்கு எழுகிறான்.

அந்த அப்பு/அம்புவையும், நாவல் என்னும் அம்பு/ஜம்புவையும் கலந்து புரிந்து கொண்டு, பின் நாவல்கா> நாவக்கா என்பதை வாநக்கா என்பதாய் metathesis -ல் மாறி ஒலித்து திருவாநக்கா> திருவானைக்கா> திரு + ஆனைக்கா என்றாகி தொன்மங்கள் பெருகிவிட்டன. 

"ஆனை ஒன்று வந்ததாம், இறைவனுக்கு நீர் கொண்டு வந்து பூத் தூவி வழிபட்டதாம்; இலிங்கத்தை வெளிக் கொணர்ந்ததாம், சோழன் பார்த்தானாம், கோயில் எழுப்பினானாம் ...... இப்படிப் போகின்றது ஒரு தொன்மக் கதை. நான் தொன்மக் கதைகளை ஒதுக்குகிறவன் இல்லை; ஏனென்றால் அவை நம்பிக்கையின் பால் எழுகின்றன. அதேபொழுது தொன்மக் கதைகளுக்கும் உள்ளே என்ன உட்கருத்து இருக்கிறது என்று பார்க்க விழைபவன். 

இங்கே நான் புரிந்து கொண்டது:
--------------------------
ஆற்றின் நடுவே ஓர் அரங்கம்; அரங்க ஓரத்தில் நாவல்மரம் நிறைந்த ஒரு கா. காவின் நடுவில் நீர் சுரந்து கொண்டேயுள்ளது. அதன் விளைவாய் அது ”சுயம்பு” இலிங்கமாய்க் காட்சியளித்திருக்கிறது. நீர் சுரப்பது, அப்பு இழிவது போலவே தோற்றியிருக்கிறது. முடிவில் யாரோ ஒரு சோழ அரசன் ஒரு கோயிலை இங்கு எழுப்பியுள்ளான். நாவ(ல்)கா ஈசர்> ஜம்புக ஈசர் என்று ஆகிப் பின் ஜம்புகேசுவர் என வடமொழிப் புணர்ச்சியில் சொல்லப் படுகிறார்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, April 04, 2006

புகை

அந்தப் பழக்கம் நுட்பியல் (technology) படிப்பின் முதலாண்டில் எற்பட்டது. எப்படி வந்தது என்று இப்பொழுது நினைவில்லை.

நண்பர்கள் அளித்த ஊக்கமா, அல்லது வெறும் வறட்டு படியமா (fashion), இல்லை ஒருவித உணர்வின் ஏங்கலா என்று இப்பொழுது சொல்ல முடியாது இருக்கிறேன். ஆனாலும் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியாக அப் பழக்கம் எனக்குள் வளர்ந்தது. முதலில் சார்மினார் தொடங்கி, அடுத்து மார்க்கோ போலோ, பின் வில்சு, கடைசியில் கத்திரி (சிசர்சு) எனப் பொரிந்தை மாறியதே மிச்சம்; (பெயரை நெருப்பால் பொரித்து எழுதுவதைத் தான் brand என்று ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது தானே பொரிந்தது கண்ணிற்குச் சட்டெனப் புலப்படும்?) கையில் பிடித்தது, முதலில் ஒன்று இரண்டானது; இரண்டு நாலானது; அப்புறம் பத்தானது; இப்படி ஒரு பெட்டி, 2 பெட்டி எனப் போய், ஒரு நாளைக்கு 3 பெட்டி வரைக்கும் அப்பழக்கம் நீண்டது.

இப்பழக்கம் எப்படியெல்லாம் ஒருவனை நிறைக்கும் என்பதை நுகர்ந்தே அறிந்தவன் நான். (நுகருதல் = முகருதல் = to smell; முகல் என்பது அடிச்சொல். smell எனும் ஆங்கிலச் சொல்லுக்கு அப்படியே இணையானது. நாம் மணம், நாற்றம் என்ற சொற்களை இன்று பயனாக்குகிறோம். முகலும் அதற்கு இணையானதே. முகல்ப்பது மோப்பதாகும். முகல்க்குதல் = மோந்துபார்த்தல். smoke உம் முகல்(ர்)க்கல் வினையில் எழுந்தகருத்தே. ஒரேபொருளை 2 விதம் பார்ப்பதில்லையா? இந்தையிரோப்பியக் கருத்து ஒருவிதம்; நம்முடையது இன்னொன்று. இப்பழக்கம் வெளியே இருந்து தம்மிடம் வந்துசேர்ந்த போது, முகர்க்கும் கருத்தில் பார்த்தது இந்தோயிரோப்பியக் கிளை; உயரும் கருத்தில் பார்த்தது தமிழியக் கிளை. புகுதல் = உயருதல் பொருள் கொள்ளூம்; புகு+ஐ = புகை; அதாவது உயர்ந்து போகும் ஆவி.)

கல்லூரிக் காலத்தில் இப்படி ஒரு புகைப் பழக்கம் என்னுள் தொற்றியதை என் குடும்பத்தினர் யாரும் அறியார். வேறென்ன? கண்டிப்பு மிகுந்த தந்தையிடம் இதைக் கூவியழைத்தா சொல்லமுடியும்? கூட இருந்த நெருங்கிய நண்பர் மட்டுமே, இப்பழக்கத்தின் முழுவீச்சை என்னில் கண்டார். விட முடியாது இருந்தேன் என்பதைக் காட்டிலும் விட வேண்டும் என்று தோன்றாது இருந்தேன் என்பதே சரி.

ஐந்தாண்டுப் படிப்பில், தமிழ் ஆய்வு, நூற்றுக் கணக்கான நண்பர், செம்மீன் (இறால் மீன்) மேல் ஈர்ப்பு, பல்நூறு திரைப் படங்கள், கணக்கற்ற கால் நடைகள் (ஆடுமாடு இல்லைங்க, காலாலே நடக்குறது), ஓரளவு குமுகப் பணி, தலைநிறைய இடதுசாரி மெய்யியல், இன்னும் பலப்பல கற்று, கூடவே கொஞ்சூண்டு வேதிநுட்பியலும் கற்று வெளிவந்த போதும், இப்பழக்கம் ஓயவில்லை; என்னைத் தொடர்ந்து வந்தது.

மறுபடியும் 2 ஆண்டு முதுநிலை வேதிநுட்பியல்; இம்முறை சென்னையில் ஒரு காட்டினுள் இருக்கும் இந்திய நுட்பியற் கழகம். முதலில் இடது சாரிப் போக்கின் வேகத்தில் வலுக்கட்டாயமாகத் தமிழை இறுத்தினேன் (இற்றுதல்> இறுத்தல் = to end). 6 மாதத்திற்கு, மேலோட்டமாய் அன்றிப் படிப்பின் பக்கமே தலைகாட்ட வில்லை. புகை மற்றும் புரட்சிப் போதையில் ஊரெங்கும் சுற்றினேன். யாராரோ பெருந்தலைகளைச் சந்தித்தேன். "இதுவே என் எதிர்காலம்" என்று செம்மாந்திருந்தேன். அச் செம்மாப்பு சரிய, நெடுங் காலம் ஆகவில்லை. பலரின் உண்மைமுகம் வெளிப்பட்டது. ஏமாற்றம் கூடக் கூடத் தலையில் குவிந்துகிடந்த இடதுசாரித் தலைக்கனம் குறைந்தது. "உருப் படியான வேலை பார்ப்போம்" என்று 2 ஆம் துவ்வத்தில் (semester)  நுட்பியலில் ஆழத் தொடங்கினேன். கூடவே இப்பழக்கம் குறைந்தது. ஆனாலும் விட்டுத் தொலைக்கவில்லை.

வேலைகிடைத்துத் தூத்துக்குடி வந்து திருமணம் ஆனபின்னும் பழக்கம் தொடர்ந்தது. மனையாள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை; ”இவன் ஒரு திருத்த முடியாத ’வாலி’ " என்று தண்ணீர் தெளித்ததாலோ என்னவோ,  பொறுத்துக் கொண்டாள். வீட்டில் அவளுக்கு முன் புகைபிடிக்க வெட்கப் பட்டு, வெளியே மட்டுமே இப்பழக்கத்தை வைத்துக் கொண்டேன். ஒரு நாளைக்கு 5, 10 என்ற நிலையில் அப்போது இருந்தேன். மகன் பிறந்தான். பொறுப்புக் கூடியது மாதிரித் தோற்றம் ஏற்பட்டது.

கும்பணியின் குடியிருப்பில் ஒரு அடுக்கு மாடியில் முதல் அடுக்கில் என் வீடு இருந்தது. வீட்டின் எதிரே அதுவரை மணம் செய்துகொள்ளா நண்பர் இருவர் இருந்தார். அவரைப் பார்க்க மற்ற நண்பரும் வருவதுண்டு. 2 வீட்டிற்கும் முன்னுள்ள முகப்பில் குட்டைச் சுவரின் விளிம்பில் உட்கார்ந்து, இப்புகையை முகர்ந்து, உரையாடியிருப்பது நண்பரின் பழக்கம். நான்மட்டும் வீட்டு முகப்பில் புகைப்பது கிடையாது. வெட்கம் பற்றி முன்சொன்னேன் அல்லவா?

திணைக்களக் கட்டுமானம் (construction of the plant) முடிந்து முந்துறுக்கும் பருவம் (commissioning phase) முடிந்து, ஒருவழியாக மாறுகைக்கென விளைக்கும் பருவம் (commercial production phase) வந்து விட்ட காலம். இருந்தாலும் பொறிஞர் பலரும் நேரம்காலம் தெரியாமல், பட்டறையின் (factory) உள்ளே கண்ட நேரம் போய், கண்ட நேரம் வெளியே வந்து, ஈடுபட்டுக் கொண்டிருந்தார்; குவித வேலை (shift work) (வேலைகளை இனம்பிரித்துக் குவித்துக் கொண்ட வேலை குவித வேலை; ஆங்கிலப் பொருளும் இது தான்.) என்பதெலாம் பெயருக்குத் தான்; வேலைப்போதை, புகைப்பதைப் போல் விடமுடியாப் பழக்கம்; சொல்லித் தெரிவதில்லை பொறிஞரின் கலை.

இக்கால கட்டத்தில் தான், சரியான வேளை வந்தது.

திணைக்களத்திற்கு, முதல்நாள் இரவு சென்ற நான், 18 மணி நேரம் கழித்து, அடுத்தநாள் மாலை 4.00 மணிக்குத் திரும்பி வந்தேன். வரும்வழியில், குடியிருப்பில் உள்ள வணிக வளாகத்தின் பெட்டிக் கடையில், "கத்திரி" வாங்கி இழுத்து விட்டே வந்தேன்.

மறுபடியும் நடை. மெதுவாக வீட்டிற்குவந்து பார்த்தால், வீட்டின் முகப்பில் கிடக்கிற தீய்ந்துபோன வெண்சுருட்டு (cigerette) அடிக்கட்டையை எடுத்து என் இரண்டரை அகவை மகன் வாய்க்குள்வைத்து இழுத்திழுத்துப் பார்த்தான்; புகை வரவில்லை.

எனக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் வலி. அருகில் வதியும் என் நண்பரை இவன் பார்த்திருக்க வேண்டும். எப் பழக்கத்தையும் அப்படியே திருப்பிச்செய்து தெரிந்துகொள்ளத் துடிக்கும் அகவை அல்லவா? குழந்தை அப்படியே செய்தது. இதை அதட்டிச் சரி செய்யலாம் தான். ஆனால் எந்த முகத்தோடு?

அடுத்த நாள் நிறுத்திவிட்டேன்.

ஆயிற்று 28 ஆண்டுகள். எல்லாவற்றிற்கும் வேளை உண்டல்லவா?

அன்புடன்,
இராம.கி.

பி.கு. பின்னால் ஒருமுறை எனக்கும் என் மக்களுக்கும் நடந்த உரையாடல்:

"தம்பிகளா, ஏதேனும் இப்படிப் பழக்கம் இருக்கா?" - இது நான்.
"என்னப்பா நீங்க, உங்களை மாதிரி நினைச்சுக்கிட்டீங்களா? அப்படி எல்லாம் கிடையாது" - இது என் மக்கள். இக்காலப் பிள்ளைகளுக்கு மப்பு கொஞ்சம் கூடத் தாங்க! :-)

Monday, April 03, 2006

திராவிடம்

The Journey of the man எனும் கட்டுரையை திரு ஸ்பென்சர் வெல்சு என்பார் எழுதி யிருந்தார். மாந்த நகர்ச்சியில் ஆப்பிரிக்காவில் இருந்து ஆத்திரேலியா நகர்ந்த கிளையில் தமிழர்களை, குறிப்பாகப் பிரான்மலைக் கள்ளர்களை ஒரு முகன்மையான கட்டுக்கூறாய் அவர் காட்டியிருப்பார். அவரின் அக்கூற்று இந்திய வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் முளை கொண்டது. தமிழர் - தமிழியர் - திராவிடர் என்ற வளர்ச்சி வரலாற்றுக்கு முற்பட்டதும் வரலாற்றிலுமாக நாள்பட்டது என்ற நிலைக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

இப்படி ஓர் ஈனியல் ஆய்வாளர் ஒருவர் தமிழியர் - திராவிடர் என்ற கருத்திற்கு அணை சேர்த்தவுடன், பலரும் திகைத்துப் போனார்; ஏனெனில் தமிழிலிருந்து கிளைத்த திராவிடம் என்ற கருத்தை இந்தாலசி இயல் படிக்கிறவரும், சில தேசிய/இந்துத்துவ சிந்தனைக்காரரும், பல வடநாட்டுக் காரரும் ஏற்றுக் கொள்ள இயலாதவராகவே இதுவரை உள்ளார். (இன்னொரு பக்கம் தமிழ்த் தேசிய வாதிகள், 54 ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கசந்து திராவிடம் என்ற சொல்லையே கசந்து கொள்கிறார்.) 

இந்திய நாட்டின் வரலாற்றை இந்துத்துவர்  வடக்கில் இருந்தே தொடங்கினார்; நாம் வரலாறு படிக்கையில் அப்படித் தான் படிக்கிறோம். அதன் வெளிப்பாடு இக்கால அரசியலிலும் உள்ளது. "திராவிட" என்று சொன்னாலே ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்வது போலவும், இந்தியக் கருத்திற்குத் திராவிடம்  எதிரானது போலவும் ஒருசிலர் எழுதுகிறார். இப்படி எழுதுபவர் ஒரு காலத்தில் தேசிய வாதிகள் எனப் பட்டார்; இப்பொழுதெல்லாம் தேசியம் பேசுவது அவ்வளவு நளினமில்லை என்பதால், தாம் பேசுவதை இந்துத்துவம் என்றே பலரும் சொல்லிக் கொள்கிறார்.

தமிழைப் பற்றி இந்துத்துவ எழுதுவதெல்லாம் சாய்விலாதது என்றும், திராவிடம் பற்றியும் தமிழ்தேசியம் பற்றியும் பேசுகிறவர் எழுதுவதெல்லாம் சாய்வுள்ளது என்றும் சொல்ல முற்படுகிறார். திராவிடம் பேசுவோர் யாரும் மொழியியல் ஆய்வு நூல்களையும் பார்க்காதவர் போலவும், ஓரளவு கூட மற்ற மொழிகளைப் படிக்காதவர் போலவும், வறட்டுத் தவளையாகக் கத்தி,  குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவது போலவும் முதலாமவர் பேச்சு அமைகிறது. "எதிரி மடையன், நான் மட்டுமே அறிவாளி" என்ற மேம்போக்கு முதலாமவர் நடையில் தொனிக்கிறது. 

இவரிடம், "தருக்க மரபு என்பது தமிழில் ஒரு கலையாகவே இருந்தது; இருக்கிறது. இதைப் படிக்க புத்தர் காலம் தொட்டு தென்னாட்டிற்கே பலர் வந்ததாகப் பாகத, பாலி, சங்கத நூல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் கற்க வேண்டியது எவ்வளவோ உள்ளது. அதை விடுத்து ஏதோவொரு கொள்கையை நிலை நாட்ட மதவாதிகள் ”நாவலோ, நாவல்” என்பது போல ”திராவிட” என்ற சொல்லை இப்படிப் போட்டடிப்பது, அதை அரசியல்வாதிகளோடு பொருத்திச் சொல்வதும், எல்லோரையும் முட்டாள் என ஒரே போடாகப் போடுவதாகவே முடியும்" என்று இந்துத்துவரிடம் சொன்னால், எடுபட மாட்டேம் என்கிறது. மொத்தத்தில் இந்துத்துவரின் குறிக்கோள் என்ன?

”திராவிட” என்ற சொல் வந்தாலேயே இந்துத்துவர் ஏன் சட்டென எழுகிறார்? "திராவிடர்" என்ற மாந்தவியல் கருத்தையே மறுத்து, "அவருக்கென சில மரபுகள் பழக்கங்கள் தனித்துண்டு" என்பதையும் முற்றிலும் மறுத்துச் சொன்னதையே திருப்பித் திருப்பி "இது மொழிக் கூட்டம் பற்றிய சொல்; அதை இனத்திற்கு எப்படிச் சொல்வது?" என்ற கருத்தை கீறல் விழுந்தது போல் ஏன் சொல்லி வருகிறார்?

இவரைப் பார்த்து நாம் கேட்க நினைப்பது இது தான்:

”எங்களை என்னபெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும்?” என்கிறீர்கள்? பாரதர் என்றா? தென்னிந்தியர் என்றா? (ASI என்பது political term.) தெற்கு ஆசியர் என்றா? எங்களுக்குத் தமிழர்கள் என்ற இன அடையாளமோ, திராவிடர் என்ற கூட்ட அடையாளமோ இருக்கக் கூடாதா? (தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் இற்றைத் திராவிடக் கட்சியினருக்கும் இருப்பது உடன் பிறந்தார் சண்டை. அதை நான் இங்கு பேசவில்லை. 54 ஆண்டு கால ஆட்சி நம்மைப் பிரித்துவிடக் கூடாது. அப்படிப் பிரியின் அது பெருந்தவறு.) 

இந்தியச் சோதிக்குள் நாங்கள் நந்தன் போலக் கலந்துவிடவேண்டுமோ? சும்மா, ”பாரத மரபு, பாரத மரபு” என்கிறீர்களே? அது என்ன பாரத மரபு? எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ்மரபு தான். எங்கள் வாய்மொழி இலக்கியமும், எழுதப்பட்ட இலக்கியங்களும் "தண்பொழில் மூவர் இருந்த வரைப்பு" என்று தான் சொல்லி வருகின்றன. நாங்களும் எம் முன்னோரும் அறிந்து "தமிழ் நிலம்" என்றே சொல்லி வருகிறோம். "இது எதோ மொழிக்கு மட்டுமே உள்ளது, நாங்கள் இந்நிலத்தோடு சேர்க்கப்படக் கூடாதவர்" எனில் இது ஒரு அறிவு பூர்வமான தீண்டாமையா? அல்லது திராவிடம் என்பது கெட்ட வார்த்தையா? 

நான் பலகாலம் ”தமிழியம்” என்று தான் இந்தத் திராவிடத்தின் முன்சொல்லைப் பழகி வந்தேன்.  இப்போதும் பல இடங்களில் சொல்கிறேன். தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம். இச் சொற்பிறப்பை மறுக்க வேண்டுமெனில், ”மீமாம்ச சுலோக வார்த்திகம்” எழுதிய 7 ஆம் நூற்றாண்டுக் குமரில பட்டரை மறுத்துப் (அதில் தான் திராவிடம் என்ற சொல் முதலில் தமிழைக் குறித்துப் பயிலப் பெறுகிறது.) பின் ஆதிசங்கரரை மறுத்து 8/9ம் நூற்றாண்டிற்குப் போகவேண்டும்.

தமிழம், தமிழியம் என்ற சொற்களுக்கு மாறாக இத் திராவிடம் என்ற சொல் தான் நிலைபெறுமானால் அதை நான் வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ளக் கூடியவன் தான்.  (பெரும்பாலான தமிழ்த்தேசியர் போல் நான் சண்டை பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன். ”தமிழியம்” என் உகப்பு. “திராவிடம்” இருந்து விட்டுப்போகட்டும். வரலாற்றை நான் திருத்தி எழுதமுடியாது. பாடம் தான் கற்கமுடியும்.) அதே பொழுது இந்தியன் என்ற சொல்லை வெறுப்பவனும் அல்லன். என் முன்னோர் நாவலந்தீவைச் சிறப்பித்தே கூறி வந்ததால் பெருமைப் படுபவன் தான். ஒன்று சிறிய வட்டம். இன்னொன்று பெரிய வட்டம். இவ்வட்டங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. சில இந்துத்துவ வாதிகள் இவை முரணானவை என்று தவறாகப் புரிந்துகொண்டு சூலம் எடுத்துக் கிளம்பியுள்ளார். கருத்து மாறுபட்டவனெல்லாம் எதிரி என்று கிளம்பினால் அப்புறம் எதிர்காலம் எதிர்காலமாகாது. நாடு நாடாக இருக்காது.

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்பது அவ்வையார் வாக்கு. இந்தச் சூலக்காரர் அதை உணர்ந்தால் சரி.

மொழி என்பது பேசுபவரை மீறித் தனித்து நிற்பதல்ல என்றே மாந்தவியலார் சொல்கிறார். செருமனியிலிருந்து பிரிந்துபோய் பிரித்தானியத் தீவுகளுக்குக் குடியேறினவர் தம் முந்தை இடத்தால் ஏங்கல்சு, சாக்சனியன் என்றே  அழைக்கப் பட்டார். அவர் மொழி ஆங்கிலோ சாக்சன், இங்கிலீசு என்று ஆயிற்று. இதே போல் ஃபிரீசுலாந்தில் இருந்தவர் பேசும்மொழி ஃபிரீசியன் ஆயிற்று. இவரெலாம் ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் போனார். போன இடத்தில் முந்திய இடத்தை வைத்து மக்கள் பெயரிடப் பட்டார்; பின் மொழியும் பெயரிடப் பட்டது. யாரும் தம் மொழிக்கு தாமே பேர் இடுவது இல்லை. தான் பேசும் மொழியிலாத இன்னொரு கூட்டத்தை அணுகும் போதே மொழிக்குப் பேர் கொடுக்க வேண்டிய தேவை எழுகிறது. இதைப் பற்றி ஏற்கனவே ஒரு முறை முன் எழுதிய உரையாடலில் தமிழ் உலகம் மடற்குழுவில் சொன்னேன். அம்மடலில் இருந்து சில பகுதிகளை இங்கே வெட்டி ஒட்டுகிறேன். ஊடே சில புதிய செய்திகளையும் நுழைத்திருக்கிறேன்.

தொடக்கத்தில் வடக்கே தமிழிருந்தது; ஆனால் அங்கே உள்ள வகையில் அது பிறழ்ந்திருந்தது. அதைக் கொடுந்தமிழ் என்று நம் முன்னோர் அழைத்தனர். கொடுந்தமிழ் நிலங்கள் பற்றித் தொல்காப்பியத்தால் அறிகிறோம். (இங்கே ஒரு சிலர் தொல்காப்பியருக்கே குழிபறிப்பார். நான் புரிந்து கொண்டவரை தொல்காப்பியத்தின் காலம் கி,மு..700. அதை எழுதியது ஒருவரா, பலரா என்பது வேண்டாத வேலை. அது கிடைத்திருக்கும் - நான் அழுத்திச் சொல்ல வேண்டும், கிடைத்திருக்கும் - தமிழ் நூல்களில் முந்தி எழுந்தது தொல்காப்பியம் என்றே பல தமிழறிஞரும், தமிழ் வரலாற்று அறிஞரும் ஒப்புகிறார்.) வட்டார மொழியான தெலுங்கே முதலில் பிரிந்து (கி.மு. 600 அளவில்) வடுகு/வடகு என அழைக்கப் பட்டது. வடகரில் ஒரு பிரிவினர் படகர் என்று அழைக்கப் பட்டு இன்றும் நீலமலையில் வாழ்கிறார். வடகு என்பது ஆந்திரத்தில் வதித்த சாதவா கன்னருக்கு உரியதானது. (கி.மு.250-கி.பி.250) சங்க காலத்தில் வடவர் என்றது இன்றைய வட இந்தியரை மட்டுமல்ல. தமிழ் நாட்டிற்கு வடக்கில் இருந்த அனைவரையுமே குறித்தது. வட மொழி என்பது பாகதத்தையும் (prakrit) குறித்தது; பின் சங்கதத்தையும் (sanskrit) குறித்தது. கொஞ்சம் கொஞ்சமாக வடகின் பொருள் விரிந்தது. மாலவன் குன்றத்திற்கு வடக்கே இருந்ததெல்லாம் கூட வடகு தான்.

இந்த வட தமிழ் சிறிது சிறிதாக 2600 ஆண்டுகளுக்கு முன்னேயே உருமாறத் தொடங்கியது. வேடிக்கை என்னவெனில் இப்படித் திரிந்த மொழிகள் எல்லாம் பொதுமைப்  பெயரே கொண்டிருந்தன. இந் நாவலந்தீவில் இருந்த சிறப்பாகக் கருதப்பட்ட பழைய மொழிகள் ஒன்றிற்குக் கூட விதுமைப் பெயர் (specific name) கிடையாது. அதாவது ஆங்கிலம், செருமானியம், ஃபிரெஞ்சு என்பது போன்று கூட்டத்தின் பெயரால் இங்கு மொழிப்பெயர் ஏற்பட்டதே கிடையாது. இதுவும் இந்திய வரலாற்றில் கொஞ்சம் வியக்க வைக்கக் கூடியது. மற்ற இந்தோ இரொப்பியருக்கு இல்லாத ஒரு மரபு. இதையும் என்னைப் போன்றவர் திராவிட மரபு என்கிறோம். இந்தோ -இரோப்பியருக்கு இல்லாத வகையில் இந்தியாவில் எழுந்த மரபுகள் எங்கிருந்து கிளைத்தன? முந்து இந்தோ இரோப்பியத்தில் இருந்தா? அல்லது தமிழிய மரபுகளில் இருந்தா? இதைக் கொஞ்சம் ஓர்ந்து பார்க்க வேண்டாமா?

சரி, செய்திக்கு வரலாம்.

புத்தப் பள்ளிகளில் பிக்குகள் வாயிற் பலுத்தது பாலி/பாளியாயிற்று
பொதுமக்கள் வாயிற் பேசியது பாஷையாயிற்று (speech) (பாஷா என்பது தான் இந்திரப் பிரத்தத்திற்குப் பக்கத்தில் பாஞ்சாலம் வரை வழங்கிய மொழியின் பெயர்). வாயால் சொல்ந்தது>சொந்நது>சொன்னது சொல்ந்தம்> சந்தம் ஆயிற்று (இற்றை லாகூர், பாஞ்சாலத்திற்கும் வடமேற்கே இருந்த மொழியின் பெயர். இதுவே செய்யுள் மொழியும் ஆயிற்று. சந்தத்தால் பாடப் பெற்றது இருக்கு வேதம்.)

பொது மக்கள், குறிப்பாய்த் தென்னக மக்கள் வாயால் மொழிந்தது மொழி யாயிற்று. (தம்மொழி> தமிழி>தமிழ் ஆயிற்று).  கல்லுதல்> கற்றுதல்> கத்துதல் = ஒலித்தல், வடநாட்டில் கதம் என வளர்ந்தது; மொழி எனப் பொருள் கொண்டது (ஈழத்தார் கதைப்பது என்ற சொல்லைப் பேசுவது என்ற பொருளில் ஆள்வதைப் பாருங்கள்.) பரவலாய்க் கதித்தது, வாகதம்> பாகதம் ஆயிற்று. (வகரம், பகரமாக மாறுவது கீழை இந்திய வழக்கம்; விகார் பிகார் ஆனதையும் வங்காளம் பங்காளம் ஆனதையும் நோக்குங்கள்.)

தமிழில் ஒரு பொருள் பல சொற்கள் என்ற வகையில் இவையெல்லாம் பல சொற்கள். மொத்தத்தில் எல்லாமே முதல் மொழி ஒன்றிலிருந்து பலவாயின. (இம் முதல் மொழி என்ன என்பதில் வேறுபாடுகள் உண்டு தான். ஆனால் அது உறுதியாகச் சங்கதம் இல்லை. அது பாலியா, பாஷையா, சந்தமா, தமிழா, பாகதமா என்று வேண்டுமானால் நெடுநேரம் பேசலாம்.) உடனே இந் நாவலந் தீவிற்கு வெளியிலிருந்து மொழிகள் உள்ளே புகவில்லையா எனில் புகுந்தன, ஆனால் அவையெலாம் இத்தீவில் கலந்து கரைந்தன. 

இந்நாவலந் தீவு ஓர் உருக வைக்கும் பாண்டம் (melting pot) இங்கே உள்ளே வந்து தம் உருவைக் காப்பாற்றிக் கொண்டவை (அரசுகள், இனங்கள், மொழிகள் என எவையாக இருந்தாலும் ) பெரும்பாலும் கிடையாது. வட்டாரப் பேச்சுக்கள் ஒரு பக்கம் கிளர்ந்தன; இன்னொரு பக்கம் பொது மொழிகள் உருவாகும் கட்டாயம் பேரரசுகளால் ஏற்பட்டது. பல வட்டாரப் பேச்சுக்களை வைத்து ஒரு பேரரசை உருவாக்க முடியாதல்லவா?

இந் நாவலந் தீவில் முதற் பேரரசு மகதம். அதன் தலைநகரான பாடலிப் பட்டணத்தில் (Patna) மக்கள் பேசிய மொழி மாகதி (மகதம்> மாகதி; விதுமைப் பெயர். மகதத்தில் இருந்து மாகதி வந்ததா, அல்லது மாகதியில் இருந்து மகதம் வந்ததா, ஆய வேண்டிய ஒன்று. தமிழில் இருந்து தமிழரா, தமிழரில் இருந்து தமிழா என்ற கேள்வியைப் போல. மாகதம் = பெரிய கதம்; அதாவது பரந்த மொழி.).

பாலியில் இருந்து வளர்ந்த மற்றொரு மொழி அறுத்த மாகதி (ஆமாங்க பாதி மாகதி = அறுத்த மாகதி>அர்த்த மாகதி; இந்தக் காலத்தில் பாதி இந்துத்தானி என்று சொல்வதில்லையா அதுபோல.) புத்தர் மாகதியில் பேசினார்; ஆனாலும் பின்னால் புத்தப் பள்ளிகளில் பேசப்பட்ட, வழக்கில் இருந்த பாலி/பாளி புத்தமதத்தின் அடிப்படை மொழியாயிற்று. மகாவீர வர்த்தமானர் அறுத்த மாகதியில் பேசினார். அது செயினரின் மொழியாயிற்று. ஆனாலும் புத்தரும் மகாவீரரும் தமிழ் கற்றதாக அவரின் வரலாறுகள் சொல்கின்றன. ஏனெனில் மகதத்தில் வணிக மொழியாகத் தமிழ் இருந்தது.

மகதப் பேரரசு, பாஞ்சாலத்தைத் தொட்ட பிறகே அங்கு பேசப்பட்ட "பாஷை"யை பொது மொழி உள்ளடக்கத் தொடங்கியது. பாணினி தன் செய்யுள் நடையைச் "சந்தம்" என்றும் வட்டாரப் பேச்சைப் பாஷை என்றும் சொல்கிறான். அந்தச் ”சந்தம்/பாஷை” வட்டார மொழிக்கு இலக்கணம் வகுத்தது தான் பாணினீயம். பாணினி காலத்தில் சங்கதம் என்ற சொல்லே கிடையாது. (அவன் நூலில் அச்சொல் இல்லவேயில்லை. சந்தம் வேறு; சங்கதம் வேறு என்று ஆழப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தமிழ் எனும் பெயரைத் தொல்காப்பியன் சொல்கிறான். தமிழுக்கு இன்னொரு பெயரை எவனும் கொடுத்தது இல்லை.)

மகதத்திற்குப் பிறகு ஆட்சியின் மையம் உச்சயினி போய், குத்தரால் (குப்தர்) உயர்ந்து, பின் வட ஆந்திரத்திற்கு வந்து விட்டது. இப்பொழுதில் தான் வட்டாரக் கலவை மேலும் கூடிப் பாகதம் பிறந்தது. பாகதம் பிறக்கும் போது இருந்த அரசர் தான் நூற்றுவர் கன்னர் என்று சிலம்பில் அழைக்கப்பட்ட சத கர்ணிகள். பாகதத்தைப் போற்றியவர் சத கர்ணிகள். வசிட்டி என்ற அரசன் தன் நாணயத்தின் ஒரு பக்கம் பெருமி (brahmi) எழுத்தில் பாகத மொழியிலும், மற்றொரு பக்கம் தமிழியில் (Tamizi) தமிழ் மொழியிலும் பொறித்துள்ளான் என்றால் பார்த்துக் கொள்க. 

ஃகாலா என்ற அரசன் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபட்டு நம் அகநானூறு போல, ஆனால் 700 அகப் பாக்களைக் கொண்ட நூலைப் பாகதப் புலவர் கொண்டு பாகதத்தில் தொகுத்துள்ளான். (இந்நூலுக்கும் தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்குமிடையே உள்ள ஒற்றுமை பற்றி இரா. மதிவாணன் விளக்குவார். www. intamm.com வலைத்தளத்திற்குப் போய்ப் பாருங்கள்.) இச் சாதவா கன்ன குலத்திலோ அன்றி மகத அரச குலத்திலோ பிறந்த பெருக தத்தனுக்குத் தான் கபிலர் குறிஞ்சிப் பாட்டு சொன்னார். 

இச் சாதவா கன்னர் காலம் சங்க காலத்தை ஒட்டியது. அதனால் தான் தெலுங்கிற்கும் பாகதத்திற்கும் அவ்வளவு நெருக்கம். பாகதத்திற்கும் தமிழுக்கும் இடையே இருந்த பாலம் தான் தெலுங்கு. வேடிக்கை பாருங்கள் பாகதத்திற்கு அது தெனுகு (தெற்கில் உள்ளது); நமக்கு அது வடுகு (வடக்கில் உள்ளது)

இப்பாகதத்தை செந்தரப்படுத்தி உருவாக்கப் பட்டதே செங்கதம் (செம்+கதம்; செம்+தமிழ் போல). பல வட்டார வழக்கைக் கலந்து எழுந்ததால் சம்+கதம் = சங்கதம் என்றும் அழைக்கப் பட்டது. (சமைத்தல் = ஒன்று சேர்த்தல் என்ற வழக்கையும் கவனியுங்கள்.) ஞானசம்பந்தர் தன் தேவாரங்களில் சங்கதம் என்றே பயிலுவார். (சங்கதம் விடுத்து முட்டாள் தனமாய் சம்ஸ்க்ருதம் என்று அவன் வழி பலுக்க முற்படுகிறோம்.) 

இச்சங்கதம், நாவலந்தீவில் படித்தவர் நடுவில் பெரிதும் பரவியது; அவரின் மொழியாகவே ஆகியது. எப்படி 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலோ சாக்சன் மக்களில் படித்த மேல்தட்டு வருக்கத்தின் இடையே இலத்தீன் பரவியதோ, அதைப் போல செங்கதம், படித்தவர் மொழி யானது; செந்தமிழும் அதைப் போலப் படித்தவரிடையே தான் இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழுக்கு முந்தியது செந்தமிழ் என்று யாராவது சொன்னால் அது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு பாகதத்துக்கு முந்தியது சங்கதம் என்பதும். 

வரலாற்றுக் காரணங்களால் செயினமும், புத்தமும் இந்தியாவில் குறைந்து போயின; வடக்கே வேதியமும், தெற்கே சிவநெறியும் விண்ணெறியும் மேல் ஓங்கியதால் சங்கதம் உயர்ந்தது. வென்றவர் வரலாற்றைத் தம் போக்குக்கு ஏற்ப எழுதுவது உலக வழக்கமே. அதற்காக "நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!" என்று சொல்லாது இருக்க முடியுமா?

கி.மு. 100-ல் இருந்து கி.பி.100 -க்குள் சங்கதம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்ந்தது. கி.மு. 150 -க்கு முன்னர் சங்கதக் கல்வெட்டுக்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எங்குமே கிடையாது. அதற்கு முன் சங்கதம் வெறும் வாய்ப்பேச்சுத் தான். மனப்பாடம் தான். கி.பி. 100-க்கு முன் வடநாட்டில் இருந்தவை பாலி, அறுத்த மாகதி, பாகதக் கல்வெட்டுக்கள் தான். மொத்தத்தில் வடக்கே கிடைத்த கல்வெட்டுக்கள் மிகக்குறைவு. இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுக்களில் 90% கல்வெட்டுக்கள் தக்கணம், குறிப்பாக தமிழ்நாடு, கன்னட மாநிலங்களில் தான் (3 இலக்கம் மொத்தக் கல்வெட்டுக்கள் இந்தியாவில் கிடைத்திருப்பதாக ஒரு கணக்கு உண்டு) உள்ளன. இத்தனைக்கும் பிறகு, பெருமி எழுத்து தான் முந்தியது; சங்கதம் தான் எல்லாவற்றிற்கும் முன்னது என்று சொல்பவர் இருக்கிறார். இப்படித் தமிழ், பாலி, பாகதம், அறுத்த மாகதி போன்ற பழைய மக்கள் மொழிகளை ஒதுக்கி விட்டுச் சங்கதத்தைத் தூக்கிப் பிடிக்கும் கருத்துமுதல் முனைப்பாளரை என்ன செய்வது? மாற்றவா முடியும்?

இக்காலத்திற்குப் பின், வட்டார இலக்கியங்கள் சங்கதத்தில் விரைந்து மொழி பெயர்க்கப் பட்டன. சங்கத வல்லுநர் நாடெங்கிலும் பரவத் தொடங்கினார். தொன்மங்கள், புராணங்கள், காப்பியங்கள் உருவாக்கப் பட்டன. (இவை எல்லாமே புத்தருக்கும் மாவீரருக்கும் பின்னர் எழுதப் பட்டவை. இவற்றின் காலங்களை மறைத்து ”இவை முன்னரே எழுதப் பட்டவை, இவற்றில் உள்ள தொன்மங்களை புத்தமதமும் செயின மதமும் படியெடுத்துக் கொண்டன” என்பது முழுப் பூசணியைச் சோற்றில் மறைப்பது.) 

புத்தர்களையும், செயினரையும், அற்றுவிகரையும் அடித்து விலக்குவதில் வேத நெறியினர் ஆழ்ந்து ஈடுபட்டனர். அதற்கு சங்கதம் பயன்பட்டது. சங்கதம் அரசவைகளிலும், குறிப்பாக பேரரசர்களின் அவைகளில் (குத்தர், பல்லவர்) பரவியது. வட்டார மொழிகள் வேறு வழியின்றி சிற்றரசர், பெருங்கிழாருக்கு இடையே புரக்கப் பட்டன. சங்கதம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கிய நிலையை அடைந்தது. குத்த அரசு தான் சங்கதத்தின் உச்சகட்டத்திற்கான களனை அமைத்துக் கொடுத்தது.

சங்கதம் சரியாகத் தெரியாத ஒரு சதகர்ணி அரசன் தற்குறியாய் தன் அரசியின் முன்னே அவலப்பட்டுப் போகப் பின் அரசவைப் புலவர் மூலம் தெளிவுற்ற கதையை மருத்துவர் செயபாரதி ஒருமுறை அகத்தியர் மடற் குழுவில் அருமையாகத் தெரிவித்து இருந்தார். அச் சதகர்ணியின் அவைக் களத்தில் இருந்த ஒரு புலவர் தான் முதலில் சங்கதத்திற்கு இலக்கணம் எழுதியவர். (அவர் பெயர் காத்தியாயனர் என்று நினைக்கிறேன் சரியாக நினைவுக்கு வரவில்லை). 

பாணினி இலக்கணம் எழுதியது சந்த மொழிக்கு; சங்கதத்திற்கு அல்ல. (நன்னூலார் எழதிய இலக்கணத்தை வைத்துக் கொண்டு சங்க நூலைப் படித்தால் பல இடங்களில் முரண்படும்.) அப்பொழுது சந்த மொழியும் சங்கதமும் ஒன்றா என்றால் ஆம் என்றும் சொல்ல வேண்டும் இல்லை என்றும் சொல்ல வேண்டும். சிவகங்கைத் தமிழும் சென்னைத் தமிழும் ஒன்றா என்றால் என்ன சொல்வீர்கள்? அது போலத்தான். அக்காலச் சந்த மொழியைக் குறிப்பதற்கு பாணினி சொல்லாத சங்கதம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்பது எவ்விதத்தில் சரி? சங்கதக் கட்டுமானமே எழாத முற்பட்ட நிலைக்கு சங்கதம் என்று கூறி ஏகப்பட்ட அறிஞர் எழுதுகிறாரே அது எப்படிச் சரி?

அது சரியானால், தமிழ்க் குடும்ப மொழிகளைப் பேசியவர்களை கி.மு. 3000 அளவிலும் தமிழிய/திராவிட என்று அறிவியல் காரணமாய் மாந்தவியலில் அழைப்பது தவறே இல்லை. பாணினியிடம் நீ சங்கதத்திற்கு இலக்கணம் எழுதினாய் என்றால் அவன் திகைப்பான். அது போல பாண்டியன் முந்நீர் விழவின் நெடியோனிடம் போய் நீ ஒரு திராவிடன் என்றால் முழிப்பான் தான். இருந்தாலும் அறிவியலில் வகைப்படுத்தம் (classification) என்பது வேண்டும் இல்லையா? அதற்காகச் செய்கிறோம். பேரரசன் அசோகனிடம் நீ ஒரு இந்தியன் என்றும் பாரத தேசத்தான் என்றும் சொல்ல முடியுமோ? இந்தியா, பாரதம், இந்துத் தானம் என்பவை கட்டுமானங்கள். 

அவற்றை வலிந்து பிடித்துக் கொண்டு அக்கட்டுமானங்கள் எழாத முந்தைக் காலத்திற்கு எப்படிச் சொல்லப் போச்சு என்றால் நான் திருப்பிக் கேட்பது, "சீனரைச் சீனர் என்று எப்படி சொல்லப் போச்சு?" என்ற மறு கேள்வி தான். ஃகான் அரச குலத்திற்குப் பிறகு தான் சின் அரசகுலம் சீனத்தில் வந்தது. ஆனாலும் பின் வந்த பேரை வைத்து முன்னுள்ள அரசைக் கூறுவதில்லையா? (அவர் தமக்குள் நடுவண் அரசத்தார் (middle kingdom) என்றே இன்றும் அழைத்துக் கொள்கிறார்.) நாம் சீனர்கள் என்று சொல்வதும் ஒருவகைப் பழக்கம் தான். அது வரலாறு தெரிந்தவனுக்குப் புரியும். அமெரிக்கத் தொல்குடிகளை அவருக்குத் தொடர்பே இல்லாத முறையில் செவ்விந்தியன் என்கிறோமே? அது சரியா?

திராவிட என்ற ஒரு சொல்லுக்கே இப்படிக் கூக்குரல் எழுப்புவது வியப்பாக இருக்கிறது. அதை வைத்து ஓரு ஈனியல் முடிவையே பேத்தல் என்பது இன்னும் வியப்பாக இருக்கிறது. ஒரு சொல் முதலில் ஒரு பொருளைக் குறித்துப் பின் புதிய ஆட்சிகளால் புதிய பொருள் பெறுவது ஒன்றும் எந்த மொழிக்கும் புதியது அல்லவே? திராவிடர் என்ற பெயர் இன்றையத் திராவிட மொழிகளைப் பேசுபவருக்கும் அவரின் முன்னோருக்கும் உரிய பெயராக விரிவு பெறுகிறது. நான் அறிந்த வரை, திராவிடருக்கென உள்ள சில மரபுகள்:

1. தாய்த்தெய்வ வழிபாடு
2. உறவுக்குள் திருமண முறை
3. கொளுவுநிலைச் சிந்தனை முறை (agglutinative thinking)
4. அணிகலன்களின் மேல் ஈடுபாடு
5. உரக்கப் பேசும் பழக்கம்
6. இறந்தோரைப் புதைக்கும் வழக்கம்
7. உணர்வு பூர்வமாகச் சிந்திக்கும் பழக்கம்
8. எட்டுத் தலைமுறை உறவை மிகத் தெளிவாக முறை வைத்துக் கூப்பிடும் பழக்கம்
9. அளவுக்கு அதிகமாகவே பழமொழிகள், மரபுத் தொடர்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவது

இதில் ஒவ்வொன்றுக்கும் மாறிய எடுத்துக்காட்டுக்களைக் கூறி நீங்கள் விதண்டா வாதம் செய்யவும் முடியும். ஆனாலும் இவற்றில் பலவும் சேர்ந்த ஒரு கூட்டுக் கலவை தான் தமிழியன் என்ற திராவிடன்.

சென்னைக்கு அருகில் பூண்டியில் கண்டுபிடிக்கப் பட்ட கற்கால மனிதர்கள் 200000 -300000 ஆண்டுகளுக்கு முன்னுள்ளவர் என்ற மாந்தவியல் கூற்றைச் சிலர் அறிந்ததில்லை போலும். தக்காண ஆய்வியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர் காலஞ்சென்ற சங்காலியாவின் ஆய்வுகளைப் படியுங்கள். பழைய கற்கால மனிதர்களின் இருப்பிடங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, மாராட்டம் என்ற மூன்று மாநிலங்களிலேயே கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 

இக்கால ஈனியல் அறிஞரின் ஆய்வுகளும் அக்கால மாந்தவியல் கூற்றுகளோடு ஒத்துப் போகின்றன. இக்கால ஈனியல் அறிஞர் 65000 ஆண்டுகளுக்கு முன் நெய்தல் மாந்தன் இந்தியாவில் நுழைந்தான் என்பார். நெல்லை மாவட்ட ஆதிச்ச நல்லூரிலும், கரூருக்கு அருகில் கொடுமணலிலும், இன்னும் பல இடங்களில் தமிழ்நாட்டில் மாந்தவியற் தடையங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இத்தகைய பழைய மாந்தர் எல்லாம் வேறெதோ மொழி பேசி பின் சட்டெனத் தமிழுக்குத் தாவினார் என்பது ஒரு வகையான நிறுவ முடியாத (unprovable) ஊகம். 

தமிழ் என்பது எங்கிருந்தோ குதித்து வந்த மொழியல்ல. அது இயற்கையாக இங்கெழுந்த மொழி. சொல்லி வைத்தாற் போல் கி.மு.600 -ல் ”சூ... மந்திரக் காளி” என்று அது தோன்றிவிடவில்லை. இதற்குத் தான் தொல்காப்பியத்தைத் துணைக்கு அழைக்கிறோம். அவர் "என்மனார்" என்று அடிக்கு ஒருதரம் சொல்லி, "அய்யா, இது முன்னாடி இருந்துதுன்னு எல்லாரும் சொல்றாங்க" என்பார். வடமொழி ஆதரவாளர் என்னடாவெனில், "தொல்காப்பியர் தானே, உமக்கு ஆதாரம், அப்பத் தொல்காப்பியரையே "doubt"ன்னு போடு, இந்தத் தமிழர்கள் அம்பேல்" என்று பாய்கிறார். தொல்காப்பியம் போன்ற இலக்கணம் எழ வேண்டுமெனில் தமிழெனும் மொழி பல்லாண்டு காலம் பேச்சு மொழியாக இங்கு இருந்திருக்க வேண்டும்.

ஒரு முறை தமிழ் இணையத்தில் 1997-99 இல் இணைந்த பொழுதில் தலைகீழ்க் கணக்குப் போட்டு கிறித்து பிறக்கும் போது கிட்டத்தட்ட 5 இலக்கம் பேராவது பழந்தமிழக எல்லைக்குள் இருந்திருக்க வேண்டுமென முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒருவர் வெளியிட்ட கணக்கை விவரித்திருந்தேன். கி.மு. 500 ல் 3 அல்லது 4 இலக்கம் பேராவது இருந்திருக்க மாட்டாரா?. அவர் எல்லாம் திடீரென்று தமிழ் பேசத் தொடங்கினாரா? அவர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியா வகையில் தனித்தனி மொழிகள் பேசியிருப்பார் எனில், இம்மக்கள் தொகை அதோடு ஒத்துப்போகாது. மாறாக அவரின் இத்தொகை ஏறத்தாழச் சரியெனில்,  அவருள் ஒரு பொது மொழி ஏற்பட்டிருந்திருக்க வேண்டும். இக்கணக்கை இன்னும் பின்கொண்டு போனால் கி.மு.1000 வரைக்கும் கூட ஒரு இலக்கத்திற்கும் மேல் ஆட்கள் இங்கு இருந்திரார் என்பது புலப்படும். மொத்தத்தில் தமிழனின் கொடிவழி நீண்டது என்றே சொல்ல வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.