Monday, April 03, 2006

திராவிடம்

The Journey of the man என்னும் கட்டுரையை திரு ஸ்பென்சர் வெல்சு என்பவர் எழுதியிருந்தார். அதில் மாந்த நகர்ச்சியில் ஆப்பிரிக்காவில் இருந்து ஆத்திரேலியா நகர்ந்த கிளையில் தமிழர்களை, குறிப்பாகப் பிரான்மலைக் கள்ளர்களை ஒரு முகன்மையான கட்டுக்கூறாகக் காட்டியிருப்பார். அவரின் அக்கூற்று இந்திய வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் முளை கொண்டது. தமிழர் - தமிழியர் - திராவிடர் என்ற வளர்ச்சி வரலாற்றுக்கு முற்பட்டதும் வரலாற்றிலுமாக நாள்பட்டது என்ற நிலைக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

இப்படி ஓர் ஈனியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழியர் - திராவிடர் என்ற கருத்திற்கு அணைசேர்த்தவுடன், பலரும் திகைத்துப் போனார்; ஏனெனில் தமிழிலிருந்து கிளைத்த திராவிடம் என்ற கருத்தை இந்தாலசி என்ற இயல் படிக்கிறவரும், சில தேசிய/இந்துத்துவ சிந்தனைக்காரரும், பல வடநாட்டுக் காரரும் ஏற்றுக்கொள்ள இயலாதவராகவே இதுவரை உள்ளார். (இன்னொரு பக்கம் தமிழ்த்தேசிய வாதிகள், 54 ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கசந்து திராவிடம் என்ற சொல்லையே கசந்துகொள்கிறார்.) இந்திய நாட்டின் வரலாற்றை இந்துத்துவர்  வடக்கில் இருந்தே தொடங்கினார்; நாம் வரலாறு படிக்கும் போதே அப்படித்தான் படிக்கிறோம். அதன் வெளிப்பாடு இக்கால அரசியலிலும் இருக்கிறது. "திராவிட" என்று சொன்னாலே ஏதோ சொல்லக் கூடாது சொல்வது போலவும், இந்தியக் கருத்திற்குத் திராவிடம்  எதிரானது போலவும் ஒருசிலர் எழுதுகிறார். இப்படி எழுதுபவர் ஒருகாலத்தில் தேசிய வாதிகள் என்று சொல்லப் பட்டார்; இப்பொழுதெல்லாம் தேசியம் பேசுவது அவ்வளவு நளினமில்லை என்பதால், தாம் பேசுவதை இந்துத்துவம் என்றே பலரும் சொல்லிக் கொள்கிறார்.

தமிழைப் பற்றி இவர் எழுதுவதெல்லாம் சாய்வில்லாதது என்றும், திராவிடம் பற்றியும் தமிழ்தேசியம் பேசுகிறவர் எழுதுவதெல்லாம் சாய்வுள்ளது என்றும் சொல்ல முற்படுகிறார். திராவிடம் பேசுவோர் யாரும் மொழியியல் ஆய்வு நூல்களையும் பார்க்காதவர் போலவும், ஓரளவு கூட மற்ற மொழிகளைப் படிக்காதவர் போலவும், வறட்டுத்தவளையாகக் கத்தி,  குண்டுசட்டிக்குள் குதிரையோட்டுவது போலவும் முதலாமவர் பேச்சு அமைகிறது. "எதிரி மடையன், நான் மட்டுமே அறிவாளி" என்ற மேம்போக்கு முதலாமவர் நடையில் தொனிக்கிறது. இவரிடம், "தருக்க மரபு என்பது தமிழில் ஒரு கலையாகவே இருந்தது; இருக்கிறது. இதைப் படிக்க புத்தர் காலம் தொட்டு தென்னாட்டிற்கே பலர்வந்ததாகப் பாகத, பாலி, சங்கத நூல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் கற்க வேண்டியது எவ்வளவோ உள்ளது. அதை விடுத்து ஏதோ கொள்கையை நிலைநாட்ட மதவாதிகள் ”நாவலோ, நாவல்” என்பது போல ”திராவிட” என்ற சொல்லை இப்படிப் போட்டடிப்பது, அதை அரசியல்வாதிகளோடு பொருத்திச் சொல்லுவதும், எல்லோரையும் முட்டாள் என்று ஒரே போடாகப் போடுவதாகவே முடியும்" என்று இந்துத்துவரிடம் சொன்னால், எடுபட மாட்டேம் என்கிறது. மொத்தத்தில் இந்துத்துவரின் குறிக்கோள் என்ன?

”திராவிட” என்ற சொல் வந்தாலேயே இந்துத்துவர் ஏன் சட்டென எழுகிறார்? "திராவிடர்" என்ற மாந்தவியல் கருத்தையே மறுத்து, "அவருக்கென சில மரபுகள் பழக்கங்கள் தனித்துண்டு" என்பதையும் முற்றிலும் மறுத்துச் சொன்னதையே திருப்பித் திருப்பி "இது மொழிக்கூட்டம் பற்றிய சொல்; அதை இனத்திற்கு எப்படிச் சொல்வது?" என்ற கருத்தை கீறல் விழுந்தது போல் ஏன் சொல்லி வருகிறார்?

இவரைப் பார்த்து நாம் கேட்க நினைப்பது இது தான்:

”எங்களை என்னபெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும்?” என்கிறீர்கள்? பாரதர் என்றா? தென்னிந்தியர் என்றா? (ASI என்பது political term.) தெற்கு ஆசியர் என்றா? எங்களுக்குத் தமிழர்கள் என்ற இன அடையாளமோ, திராவிடர் என்ற கூட்ட அடையாளமோ இருக்கக் கூடாதா? (தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் இற்றைத் திராவிடக் கட்சியினருக்கும் இருப்பது உடன் பிறந்தார் சண்டை. அதை நான் இங்கு பேசவில்லை. 54 ஆண்டுகால ஆட்சி நம்மைப் பிரித்துவிடக் கூடாது. அப்படிப் பிரியின் அது பெருந்தவறு.) இந்தியச் சோதிக்குள் நாங்கள் நந்தன் போலக் கலந்துவிடவேண்டுமோ? சும்மா, ”பாரத மரபு, பாரத மரபு” என்கிறீர்களே? அது என்ன பாரத மரபு? எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் மரபு தான். எங்கள் வாய்மொழி இலக்கியமும், எழுதப்பட்ட இலக்கியங்களும் "தண்பொழில் மூவர் இருந்த வரைப்பு" என்று தான் சொல்லிவருகின்றன. நாங்களும் எம் முன்னோரும் அறிந்து "தமிழ் நிலம்" என்றே சொல்லி வருகிறோம். "இது எதோ மொழிக்கு மட்டுமே உள்ளது, நாங்கள் இந்நிலத்தோடு சேர்க்கப்படக் கூடாதவர்" எனில் இதுவும் ஒரு அறிவு பூர்வமான தீண்டாமையா? அல்லது திராவிடம் என்பது கெட்ட வார்த்தையா? நான் பலகாலம் ”தமிழியம்” என்று தான் இந்தத் திராவிடத்தின் முன்சொல்லைப் பழகி வந்தேன்.  இப்போதும் பல இடங்களில் சொல்கிறேன். தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம். இச் சொற் பிறப்பை மறுக்க வேண்டுமெனில், ”மீமாம்ச சுலோக வார்த்திகம்” எழுதிய 7 ஆம் நூற்றாண்டுக் குமரில பட்டரை மறுத்துப் (அதில் தான் திராவிடம் என்ற சொல் முதலில் தமிழைக் குறித்துப் பயிலப் பெரூகிறது.) பின் ஆதிசங்கரரை மறுத்து 8/9ம் நூற்றாண்டிற்குப் போகவேண்டும்.

தமிழம், தமிழியம் என்ற சொற்களுக்கு மாறாக இத் திராவிடம் என்ற சொல் தான் நிலைபெறுமானால் அதை நான் வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ளக் கூடியவன் தான்.  (பெரும்பாலான தமிழ்த்தேசியர் போல் சண்டை பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன். ”தமிழியம்” என் உகப்பு. “திராவிடம்” இருந்து விட்டுப்போகட்டும். வ்ரலாற்றை நான் திருத்தி எழுதமுடியாது. பாடம் தான் கற்கமுடியும்.) அதே பொழுதில் இந்தியன் என்ற சொல்லை வெறுப்பவனும் அல்லன். என் முன்னோர் நாவலந்தீவைச் சிறப்பித்தே கூறிவந்ததால் பெருமைப் படுபவன் தான். ஒன்று சிறிய வட்டம். இன்னொன்று பெரிய வட்டம். இவ்வட்டங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. சில இந்துத்துவ வாதிகள் இவை முரணானவை என்று தவறாகப் புரிந்துகொண்டு சூலம் எடுத்துக் கிளம்பியிருக்கிறார். கருத்து மாறுபட்டவனெல்லாம் எதிரி என்று கிளம்பினால் அப்புறம் எதிர்காலம் எதிர்காலமாக இருக்காது. நாடு நாடாக இருக்காது.

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்பது அவ்வையார் வாக்கு. இந்த சூலக்காரர் அதை உணர்ந்தால் சரி.

மொழி என்பது பேசுபவரை மீறித் தனித்து நிற்பதல்ல என்றே மாந்தவியலார் சொல்கிறார். செருமனியிலிருந்து பிரிந்துபோய் பிரித்தானியத் தீவுகளுக்குக் குடியேறினவர் தம் முந்து இடத்தால் ஏங்கல்சு, சாக்சனியன் என்றே  அழைக்கப் பட்டார். அவர்மொழி ஆங்கிலோ சாக்சன், இங்கிலீசு என்று ஆயிற்று. இதே போல் ஃபிரீசுலாந்தில் இருந்தவர் பேசும்மொழி ஃபிரீசியன் ஆயிற்று. இவரெலாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரிடம் போனார். போன இடத்தில் முந்திய இடத்தை வைத்து மக்கள் பெயரிடப் பட்டார்; பின் மொழியும் பெயரிடப் பட்டது. யாரும் தம் மொழிக்கு தாமே பேர் இடுவது இல்லை. தான் பேசும் மொழியிலாத இன்னொரு கூட்டத்தை அணுகும் போதே மொழிக்குப் பேர் கொடுக்க வேண்டிய தேவை எழுகிறது. இதைப் பற்றி ஏற்கனவே ஒரு முறை முன் எழுதிய உரையாடலில் தமிழ் உலகம் மடற்குழுவில் சொன்னேன். அம்மடலில் இருந்து சிலபகுதிகளை இங்கே வெட்டி ஒட்டுகிறேன். ஊடே சில புதிய செய்திகளையும் உள்ளே நுழைத்திருக்கிறேன்.

தொடக்கத்தில் வடக்கே தமிழிருந்தது; ஆனால் அங்கே உள்ள வகையில் அது பிறழ்ந்திருந்தது. அதைக் கொடுந்தமிழ் என்று நம் முன்னோர் அழைத்தனர். கொடுந்தமிழ் நிலங்கள் பற்றித் தொல்காப்பியத்தால் அறிகிறோம். (இங்கே ஒருசிலர் தொல்காப்பியருக்கே குழி பறிப்பார். நான் புரிந்து கொண்டவரை தொல்காப்பியத்தின் காலம் கி,மு..700. அதை எழுதியது ஒருவரா, பலரா என்பது வேண்டாத வேலை. அது கிடைத்திருக்கும் - நான் அழுத்திச் சொல்ல வேண்டும், கிடைத்திருக்கும் - தமிழ் நூல்களில் முந்தி எழுந்தது என்றுதான் பல தமிழறிஞரும், தமிழ் வரலாற்று அறிஞரும் ஒப்புகிறார்.) வட்டார மொழியான தெலுங்கே முதலில் (கி.மு. 600 அளவில்) வடுகு/வடகு என்று அழைக்கப் பட்டது. வடகரில் ஒரு பிரிவினர் படகர் என்று அழைக்கப் பட்டு இன்றும் நீலமலையில் வாழ்கிறார். வடகு என்பது ஆந்திரத்தில் வதித்த சாதவா கன்னருக்கு உரியதானது. (கி.மு.250-கி.பி.250) சங்க காலத்தில் வடவர் என்றது இன்றைய வட இந்தியரை மட்டும் அல்ல. தமிழ் நாட்டிற்கு வடக்கில் இருந்த அனைவரையுமே குறித்தது. வட மொழி என்பது பாகதத்தையும் (prakrit) குறித்தது; பின் சங்கதத்தையும் (sanskrit) குறித்தது. கொஞ்சம் கொஞ்சமாக வடகு என்பதன் பொருள் விரிந்தது. மாலவன் குன்றத்திற்கு வடக்கே இருந்ததெல்லாம் வடகு தான்.

இந்த வட தமிழ் சிறிது சிறிதாக 2600 ஆண்டுகளுக்கு முன்னேயே உருமாறத் தொடங்கியது. வேடிக்கை என்னவெனில் இப்படித் திரிந்த மொழிகள் எல்லாம் பொதுமைப்  பெயரே கொண்டிருந்தன. இந் நாவலந்தீவில் இருந்த சிறப்பாகக் கருதப்பட்ட பழைய மொழிகள் ஒன்றிற்குக் கூட விதுமைப் பெயர் (specific name) கிடையாது. அதாவது ஆங்கிலம், செருமானியம், ஃபிரெஞ்சு என்பது போன்று கூட்டத்தின் பெயரால் இங்கு மொழிப்பெயர் ஏற்பட்டதே கிடையாது. இதுவும் இந்திய வரலாற்றில் கொஞ்சம் வியக்க வைக்கக் கூடியது. மற்ற இந்தோ இரொப்பியருக்கு இல்லாத ஒரு மரபு. இதையும் என்னைப் போன்றவர் திராவிட மரபு என்கிறோம். இந்தோ -இரோப்பியருக்கு இல்லாத வகையில் இந்தியாவில் எழுந்த மரபுகள் எங்கிருந்து கிளைத்தன? முந்து இந்தோ இரோப்பியத்தில் இருந்தா? அல்லது தமிழிய மரபுகளில் இருந்தா? இதைக் கொஞ்சம் ஓர்ந்து பார்க்க வேண்டாமா?

சரி, செய்திக்கு வரலாம்.

புத்தப் பள்ளிகளில் பிக்குகள் வாயிற் பலுத்தது பாலி/பாளியாயிற்று
பொதுமக்கள் வாயிற் பேசியது பாஷையாயிற்று (speech) (பாஷா என்பதுதான் இந்திரப் பிரத்தத்திற்குப் பக்கத்தில் பாஞ்சாலம் வரை வழங்கிய மொழியின் பெயர்)
வாயால் சொல்ந்தது>சொந்நது>சொன்னது சொல்ந்தம்> சந்தம் ஆயிற்று (இன்றைய லாகூர், பாஞ்சாலத்திற்கும் வடமேற்கே இருந்த மொழியின் பெயர். இதுவே செய்யுள் மொழியும் ஆயிற்று. சந்தத்தால் பாடப்பெற்றது இருக்கு வேதம்.)
பொது மக்கள், குறிப்பாய்த் தென்னக மக்கள் வாயால் மொழிந்தது மொழியாயிற்று. (தம்மொழி> தமிழி>தமிழ் ஆயிற்று)
கல்லுதல்>கற்றுதல்>கத்துதல் = ஒலித்தல், வடநாட்டில் கதம் என வளர்ந்தது; மொழி எனப் பொருள் கொண்டது (ஈழத்தார் கதைப்பது என்ற சொல்லைப் பேசுவது என்ற பொருளில் ஆளுவதைப் பாருங்கள்.)
வாயால் கதித்தது, வாகதம்>பாகதம் ஆயிற்று. (வகரம், பகரமாக மாறுவது கீழை இந்திய வழக்கம்; விகார் பிகார் ஆனதையும் வங்காளம் பங்காளம் ஆனதையும் நோக்குங்கள்.)

தமிழில் ஒரு பொருள் பலசொற்கள் என்ற வகையில் இவையெல்லாம் பல சொற்கள். மொத்தத்தில் எல்லாமே முதல் மொழி ஒன்றிலிருந்து பலவாயின. (இம்முதல் மொழி என்ன என்பதில் வேறுபாடுகள் உண்டுதான். ஆனால் அது உறுதியாகச் சங்கதம் இல்லை. அது பாலியா, பாஷையா, சந்தமா, தமிழா, பாகதமா என்று வேண்டுமானால் நெடு நேரம் பேசலாம்.) உடனே இந்த நாவலந்தீவிற்கு வெளியிலிருந்து மொழிகள் உள்ளே புகவில்லையா எனில் புகுந்தன, ஆனால் அவையெலாம் இத்தீவில் கலந்து கரைந்தன. இந்நாவலந் தீவு ஓர் உருக வைக்கும் பாண்டம் (melting pot) இங்கே உள்ளே வந்து தன் உருவைக் காப்பாற்றிக் கொண்டவை (அரசுகள், இனங்கள், மொழிகள் என எவையாக இருந்தாலும் ) பெரும்பாலும் கிடையாது. வட்டாரப் பேச்சுக்கள் ஒரு பக்கம் கிளர்ந்தன; இன்னொரு பக்கம் பொது மொழிகள் உருவாகும் கட்டாயம் பேரரசுகளால் ஏற்பட்டது. பல வட்டாரப் பேச்சுக்களை வைத்து ஒரு பேரரசை உருவாக்க முடியாதல்லவா?

இந் நாவலந்தீவில் முதற்பேரரசு மகதம். அதன் தலைநகரான பாடலிப் பட்டணத்தில் (Patna) மக்கள் பேசிய மொழி மாகதி (மகதம்> மாகதி; விதுமைப் பெயர். மகதத்தில் இருந்து மாகதி வந்ததா, அல்லது மாகதியில் இருந்து மகதம் வந்ததா, ஆய வேண்டிய ஒன்று. தமிழில் இருந்து தமிழரா, தமிழரில் இருந்து தமிழா என்ற கேள்வியைப் போல. மாகதம் = பெரிய கதம்; அதாவது பரந்த மொழி.).

பாலியில் இருந்து வளர்ந்த மற்றொரு மொழி அறுத்த மாகதி (ஆமாங்க பாதி மாகதி = அறுத்த மாகதி>அர்த்த மாகதி; இந்தக் காலத்தில் பாதி இந்துத்தானி என்று சொல்வதில்லையா அது போல.) புத்தர் மாகதியில் பேசினார்; ஆனாலும் பின்ன்னால் புத்தப் பள்ளிகளில் பேசப்பட்ட, வழக்கில் இருந்த பாலி/பாளி புத்தமதத்தின் அடிப்படை மொழியாயிற்று. மகாவீர வர்த்தமானர் அறுத்த மாகதியில் பேசினார். அது செயினரின் மொழி யாயிற்று. ஆனாலும் புத்தரும் மகாவீரரும் தமிழ் கற்றதாக அவர்களின் வரலாறுகள் சொல்கின்றன. ஏனெனில் மகதத்தில் வணிக மொழியாகத் தமிழ் இருந்தது.

மகதப் பேரரசு, பாஞ்சாலத்தைத் தொட்ட பிறகே அங்கு பேசப்படும் "பாஷை"யை பொது மொழி உள்ளடக்கத் தொடங்கியது. பாணினி தன் செய்யுள் நடையைச் "சந்தம்" என்றும் வட்டாரப் பேச்சைப் பாஷை என்றும் சொல்கிறான். அந்தச் ”சந்தம்/பாஷை” வட்டார மொழிக்கு இலக்கணம் வகுத்தது தான் பாணினீயம். பாணினி காலத்தில் சங்கதம் என்ற சொல்லே கிடையாது. (அவன் நூலில் அச்சொல் இல்லவேயில்லை. சந்தம் வேறு; சங்கதம் வேறு என்று ஆழப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தமிழ் எனும் பெயரைத் தொல்காப்பியன் சொல்கிறான். தமிழுக்கு இன்னொரு பெயரை எவனும் கொடுத்தது இல்லை.)

மகதத்திற்குப் பிறகு ஆட்சியின் மையம் உச்சயினி போய், குத்தரால் (குப்தர்) உயர்ந்து, பின் வட ஆந்திரத்திற்கு வந்து விட்டது. இந்தப் பொழுதில் தான் வட்டாரக் கலவை மேலும் கூடிப் பாகதம் பிறந்தது. பாகதம் பிறக்கும் போது இருந்த அரசர் தான் நூற்றுவர் கன்னர் என்று சிலம்பில் அழைக்கப் பட்ட சத கர்ணிகள். பாகதத்தைப் போற்றியவர் சத கர்ணிகள். வசிட்டி என்ற அரசன் தன் நாணயத்தின் ஒரு பக்கம் பெருமி (brahmi) எழுத்தில் பாகத மொழியிலும், மற்றொருபக்கம் தமிழியில் (Tamizi) தமிழ் மொழியிலும் பொறித்துள்ளான் என்றால் பார்த்துக் கொள்க. ஃகாலா என்ற அரசன் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபட்டு நம் அகநானூறு போல, ஆனால் 700 அகப் பாட்டுக்களைக் கொண்ட நூலைப் பாகதப் புலவர் கொண்டு பாகதத்தில் தொகுத்துள்ளான். (இந்நூலுக்கும் தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்குமிடையே உள்ள ஒற்றுமை பற்றி இரா. மதிவாணன் விளக்குவார். www. intamm.com வலைத்தளத்திற்குப் போய்ப் பாருங்கள்.) இச் சாதவா கன்ன குலத்திலோ அன்றி மகத அரச குலத்திலோ பிறந்த பெருக தத்தனுக்குத் தான் கபிலர் குறிஞ்சிப் பாட்டு சொன்னார். இச் சாதவா கன்னர் காலம் சங்க காலத்தை ஒட்டியது. அதனால் தான் தெலுங்கிற்கும் பாகதத்திற்கும் அவ்வளவு நெருக்கம். பாகதத்திற்கும் தமிழுக்கும் இடையே இருந்த பாலம் தான் தெலுங்கு. வேடிக்கை பாருங்கள் பாகதத்திற்கு அது தெனுகு (தெற்கில் உள்ளது); நமக்கு அது வடுகு (வடக்கில் உள்ளது)

இப்பாகதத்தை செந்தரப்படுத்தி உருவாக்கப் பட்டதே செங்கதம் (செம்+கதம்; செம்+தமிழ் போல). பல வட்டார வழக்கைக் கலந்து எழுந்ததால் சம்+கதம் = சங்கதம் என்றும் அழைக்கப் பட்டது. (சமைத்தல் = ஒன்று சேர்த்தல் என்ற வழக்கையும் கவனியுங்கள்.) ஞானசம்பந்தர் தன் தேவாரங்களில் சங்கதம் என்றே பயிலுவார். (சங்கதம் விடுத்து முட்டாள் தனமாய் சம்ஸ்க்ருதம் என்று அவன் வழி பலுக்க முற்படுகிறோம்.) இச்சங்கதம், நாவலந்தீவில் படித்தவர் நடுவில் பெரிதும் பரவியது; அவரின் மொழியாகவே ஆகியது. எப்படி 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலோ சாக்சன் மக்களில் படித்த மேல்தட்டு வருக்கத்தின் இடையே இலத்தீன் பரவியதோ, அதைப் போல செங்கதம், படித்தவர் மொழி யானது; செந்தமிழும் அதைப் போலப் படித்தவரிடையே தான் இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழுக்கு முந்தியது செந்தமிழ் என்று சொன்னால் அது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு பாகதத்துக்கு முந்தியது சங்கதம் என்பது. வரலாற்றுக் காரணங்களால் செயினமும், புத்தமும் இந்தியாவில் குறைந்து போயின; வடக்கே வேதியமும், தெற்கே சிவநெறியும் விண்ணெறியும் மேல் ஓங்கியதால் சங்கதம் உயர்ந்தது. வென்றவர் வரலாற்றைத் தம் போக்குக்கு ஏற்ப எழுதுவது உலக வழக்கமே. அதற்காக "நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!" என்று சொல்லாது இருக்க முடியுமா?

கி.மு. 100-ல் இருந்து கி.பி.100 -க்குள் சங்கதம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்ந்தது. கி.பி. 100 க்கு முன்னர் சங்கதக் கல்வெட்டுக்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எங்குமே கிடையாது. அதற்குமுன் சங்கதம் வெறும் வாய்ப்பேச்சுத் தான். மனப்பாடம் தான். கி.பி. 100-க்கு முன் வடநாட்டில் இருந்தவை பாலி, அறுத்த மாகதி, பாகதக் கல்வெட்டுக்கள் தான். மொத்தத்தில் வடக்கே கிடைத்த கல்வெட்டுக்கள் மிகக்குறைவு. இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுக்களில் 90% கல்வெட்டுக்கள் தக்கணம், குறிப்பாக தமிழ்நாடு, கன்னட மாநிலங்களில் தான் (3 இலக்கம் மொத்தக் கல்வெட்டுக்கள் இந்தியாவில் கிடைத்திருப்பதாக ஒரு கணக்கு உண்டு) உள்ளன. இத்தனைக்கும் பிறகு, பெருமி எழுத்து தான் முந்தியது; சங்கதம் தான் எல்லாவற்றிற்கும் முன்னது என்று சொல்பவர் இருக்கிறார். இப்படித் தமிழ், பாலி, பாகதம், அறுத்த மாகதி போன்ற பழைய மக்கள் மொழிகளை ஒதுக்கி சங்கதத்தைத் தூக்கிப் பிடிக்கும் கருத்துமுதல் முனைப்பாளர்களை என்ன செய்வது? மாற்றவா முடியும்?

இக்காலத்திற்குப் பின், வட்டார இலக்கியங்கள் சங்கதத்தில் விரைந்து மொழிபெயர்க்கப் பட்டன. சங்கத வல்லுநர் நாடெங்கிலும் பரவத் தொடங்கினார். தொன்மங்கள், புராணங்கள், காப்பியங்கள் உருவாக்கப் பட்டன. (இவையெல்லாமே புத்தருக்கும் மாவீரருக்கும் பின்னர் எழுதப் பட்டவை. இவற்றின் காலங்களை மறைத்து ”இவை முன்னரே எழுதப் பட்டவை, இவற்றில் உள்ள தொன்மங்களை புத்தமதமும் செயின மதமும் படியெடுத்துக் கொண்டன” என்பது முழுப் பூசணியைச் சோற்றில் மறைப்பது.) புத்தர்களையும், சமணர்களையும் அடித்து விலக்குவதில் வேத நெறியினர் ஆழ்ந்து ஈடுபட்டனர். அதற்கு சங்கதம் பயன்பட்டது. சங்கதம் அரசவைகளிலும், குறிப்பாக பேரரசர்களின் அவைகளில் (குத்தர், பல்லவர்) பரவியது. வட்டார மொழிகள் வேறு வழியின்றி சிற்றரசர், பெருங்கிழாருக்கு இடையே புரக்கப் பட்டன. சங்கதம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கிய நிலையை அடைந்தது. குத்த அரசு தான் சங்கதத்தின் உச்சகட்டத்திற்கான களனை அமைத்துக் கொடுத்தது.

சங்கதம் சரியாகத் தெரியாத ஒரு சதகர்ணி அரசன் தற்குறியாய் தன் அரசியின் முன்னே அவலப்பட்டுப் போகப் பின் அரசவைப் புலவர் மூலம் தெளிவுற்ற கதையை மருத்துவர் செயபாரதி அகத்தியர் மடற்குழுவில் ஒருமுறை அருமையாகத் தெரிவித்து இருந்தார். அச் சதகர்ணியின் அவைக்களத்தில் இருந்த ஒரு புலவர் தான் முதலில் சங்கதத்திற்கு இலக்கணம் எழுதியவர். (அவர் பெயர் காத்தியாயனர் என்று நினைக்கிறேன் சரியாக இங்கு நினைவுக்கு வரவில்லை). பாணினி இலக்கணம் எழுதியது சந்த மொழிக்கு; சங்கதத்திற்கு அல்ல. (நன்னூலார் எழதிய இலக்கணத்தை வைத்துக் கொண்டு சங்க நூலைப் படித்தால் பல இடங்களில் முரண் படும்.) அப்பொழுது சந்த மொழியும் சங்கதமும் ஒன்றா என்றால் ஆம் என்றும் சொல்ல வேண்டும் இல்லை என்றும் சொல்லவேண்டும். சிவகங்கைத் தமிழும் சென்னைத் தமிழும் ஒன்றா என்றால் என்ன சொல்வீர்கள்? அது போலத்தான். அக்காலச் சந்தமொழியைக் குறிப்பதற்கு பாணினி சொல்லாத சங்கதம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்பது எவ்விதத்தில் சரி? சங்கதக் கட்டுமானமே எழாத முற்பட்ட நிலைக்கு சங்கதம் என்றுகூறி ஏகப்பட்ட அறிஞர் எழுதுகிறாரே அது எப்படிச் சரி?

அது சரியானால், தமிழ்க் குடும்ப மொழிகளைப் பேசியவர்களை கி.மு. 3000 அளவிலும் திராவிட என்று இன்று அறிவியல் காரணமாய் மாந்தவியலில் அழைப்பது தவறே இல்லை. பாணினியிடம் நீ சங்கதத்திற்கு இலக்கணம் எழுதினாய் என்றால் அவன் திகைப்பான். அதுபோல பாண்டியன் முந்நீர் விழவின் நெடியோனிடம் போய் நீ ஒரு திராவிடன் என்றால் முழிப்பான் தான். இருந்தாலும் அறிவியலில் வகைப்படுத்தம் (classification) என்பது வேண்டும் இல்லையா? அதற்காகச் செய்கிறோம். பேரரசன் அசோகனிடம் நீ ஒரு இந்தியன் என்றும் பாரத தேசத்தான் என்றும் சொல்ல முடியுமோ? இந்தியா, பாரதம், இந்துத் தானம் என்பவை கட்டுமானங்கள். அவற்றை வலிந்து பிடித்துக் கொண்டு அக்கட்டுமானங்கள் எழாத முந்தைக் காலத்திற்கு எப்படிச் சொல்லப் போச்சு என்றால் நான் திருப்பிக் கேட்பது, "சீனரைச் சீனர் என்று எப்படி சொல்லப் போச்சு?" என்ற மறு கேள்வி தான். ஃகான் அரச குலத்திற்குப் பிறகு தான் சின் அரசகுலம் சீனத்தில் வந்தது. ஆனாலும் பின் வந்த பேரை வைத்து முன்னுள்ள அரசைக் கூறுவதில்லையா? (அவர் தமக்குள் நடுவண் அரசத்தார் (middle kingdom) என்றே இன்றும் அழைத்துக் கொள்கிறார்.) நாம் சீனர்கள் என்று சொல்வதும் ஒருவகைப் பழக்கம் தான். அது வரலாறு தெரிந்தவனுக்குப் புரியும். அமெரிக்கத் தொல்குடிகளை அவருக்குத் தொடர்பே இல்லாத முறையில் செவ்விந்தியன் என்கிறோமே? இது சரியா?

திராவிட என்ற ஒரு சொல்லுக்கே இப்படிக் கூக்குரல் எழுப்புவது வியப்பாக இருக்கிறது. அதை வைத்து ஓரு ஈனியல் முடிவையே பேத்தல் என்பது இன்னும் வியப்பாக இருக்கிறது. ஒரு சொல் முதலில் ஒரு பொருளைக் குறித்துப் பின் புதிய ஆட்சிகளால் புதிய பொருள் பெறுவது ஒன்றும் எந்த மொழிக்கும் புதியது அல்லவே? திராவிடர் என்ற பெயர் இன்றையத் திராவிட மொழிகளைப் பேசுபவருக்கும் அவரின் முன்னோருக்கும் உரிய பெயராக விரிவு பெறுகிறது. நான் அறிந்த வரை, திராவிடருக்கென உள்ள சில மரபுகள்:

1. தாய்த்தெய்வ வழிபாடு
2. உறவுக்குள் திருமண முறை
3. கொளுவுநிலைச் சிந்தனை முறை (agglutinative thinking)
4. அணிகலன்களின் மேல் ஈடுபாடு
5. உரக்கப் பேசும் பழக்கம்
6. இறந்தோரைப் புதைக்கும் வழக்கம்
7. உணர்வு பூர்வமாகச் சிந்திக்கும் பழக்கம்
8. எட்டுத் தலைமுறை உறவை மிகத் தெளிவாக முறை வைத்துக் கூப்பிடும் பழக்கம்
9. அளவுக்கு அதிகமாகவே பழமொழிகள், மரபுத் தொடர்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவது

இதில் ஒவ்வொன்றுக்கும் மாறிய எடுத்துக்காட்டுக்களைக் கூறி விதண்டா வாதம் செய்யவும் முடியும். ஆனாலும் இவற்றில் பலவும் சேர்ந்த ஒரு கூட்டுக் கலவை தான் தமிழியன் என்ற திராவிடன்.

சென்னைக்கு அருகில் பூண்டியில் கண்டுபிடிக்கப் பட்ட கற்கால மனிதர்கள் 200000 -300000 ஆண்டுகளுக்கு முன்னுள்ளவர் என்ற மாந்தவியல் கூற்றைச் சிலர் அறிந்ததில்லை போலும். தக்காண ஆய்வியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர் காலஞ்சென்ற சங்காலியாவின் ஆய்வுகளைப் படியுங்கள். பழைய கற்கால மனிதர்களின் இருப்பிடங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, மாராட்டம் என்ற மூன்று மாநிலங்களிலேயே கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இக்கால ஈனியல் அறிஞரின் ஆய்வுகளும் அக்கால மாந்தவியல் கூற்றுகளோடு ஒத்துப்போகின்றன. இக்கால ஈனியல் அறிஞர் 65000 ஆண்டுகளுக்கு முன் நெய்தல் மாந்தன் இந்தியாவில் நுழைந்தான் என்பார். நெல்லைமாவட்ட ஆதிச்ச நல்லூரிலும், கரூருக்கு அருகில் கொடுமணலிலும், இன்னும் பல இடங்களில் தமிழ்நாட்டில் மாந்தவியற் தடையங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இத்தகைய பழைய மாந்தர் எல்லாம் வேறெதோ மொழிபேசி பின் சட்டெனத் தமிழுக்குத் தாவினார் என்பது ஒரு வகையான நிறுவ முடியாத (unprovable) ஊகம். தமிழ் என்பது எங்கிருந்தோ குதித்து வந்த மொழியல்ல. அது இயற்கையாக இங்கெழுந்த மொழி. சொல்லி வைத்தாற் போல் கி.மு.600 -ல் ”சூ... மந்திரக்காளி” என்று அது தோன்றிவிடவில்லை. இதற்குத் தான் தொல்காப்பியத்தைத் துணைக்கு அழைக்கிறோம். அவர் "என்மனார்" என்று அடிக்கு ஒருதரம் சொல்லி, "அய்யா, இது முன்னாடி இருந்துதுன்னு எல்லாரும் சொல்றாங்க" என்று சொல்வார். வடமொழி ஆதரவாளர் என்னடாவெனில், "தொல்காப்பியர் தானே, உமக்கு ஆதாரம், அப்பத் தொல்காப்பியரையே "doubt"ன்னு போடு, இத் தமிழர்கள் அம்பேல்" என்று பாய்கிறார். தொல்காப்பியம் போன்ற இலக்கணம் எழ வேண்டும் எனில் தமிழ் எனும் மொழி பல்லாண்டு காலம் பேச்சு மொழியாக இங்கு இருந்திருக்க வேண்டும்.

ஒரு முறை தமிழ் இணையத்தில் 1997-99 இல் இணைந்த பொழுதில் தலைகீழ்க் கணக்குப் போட்டு கிறித்து பிறக்கும் போது கிட்டத்தட்ட 5 இலக்கம் பேராவது பழந்தமிழக எல்லைக்குள் இருந்திருக்க வேண்டுமென முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒருவர் வெளியிட்ட கணக்கை விவரித்திருந்தேன். கி.மு. 500 ல் 3 அல்லது 4 இலக்கம் பேராவது இருந்திருக்க மாட்டாரா?. அவர் எல்லாம் திடீரென்று தமிழ் பேசத் தொடங்கினாரா? அவர் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியாத வகையில் தனித்தனி மொழிகள் பேசியிருப்பார் எனில், இம்மக்கள் தொகை அதோடு ஒத்துப் போகாது. மாறாக அவரின் இத்தொகை கிட்டத்தட்டச் சரியெனில்,  அவருள் ஒரு பொது மொழி ஏற்பட்டிருந்திருக்க வேண்டும். இக்கணக்கை இன்னும் பின்கொண்டு போனால் கி.மு.1000 வரைக்கும் கூட ஒரு இலக்கத்திற்கும் மேல் ஆட்கள் இங்கு இருந்திருக்கிறார் என்பது புலப்படும். மொத்தத்தில் தமிழனின் கொடிவழி நீண்டது என்றே புலப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.

17 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

ஈனியல் என்பதன் பொருள் என்ன ஐயா?

இராம.கி said...

ஈனுதல் = தாய் பிள்ளையைப் பெற்றுத் தருதல்;
ஈனித்தல் = ஜனித்தல்
ஈனுறுத்தல், ஈனாக்கம் = to generate (நாளாவட்டில் ஈன் என்ற முன்னொட்டை இந்த வினைச்சொல்லைக் கையாளும் போது தவிர்த்து, வெறுமே ஆக்கல் என்ற சொல்லையே generate என்பதற்கு இணையாய்ப் புழங்கலாம். மின்னாக்கி = electric generator)
ஈனியல் = genetics
ஈன் = gene;மரபணு என்று சொல்லுவது நீளமாக இருக்கிறது; தவிர இதை அணு என்று சொல்லுவதும் சரியாகத் தெரியவில்லை. மரபு என்பதும் பொருள் சரியாக வரவில்லை. ஒரு உயிரினம் பழகிப் பழகி வருவதும் கூட மரபு தான். பொதுவாக மருவிக் கொண்டு நிற்பது மரபு. மருவுதல் = தழுவுதல்.

என்னைக் கேட்டால் gene என்பதற்கு இணையாய் ஓரசையில் சொல் இருப்பது பின்னால் பல கூட்டுச் சொற்களை எழுதும் போது வாய்ப்பாக இருக்கும்.

ஈனியல் என்ற இந்தச் சொல்லை முன்னே என் வலைப்பதிவில் பயன்படுத்தியிருக்கிறேன். அதனால் பிறைக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லைக் கொடுக்காமல் இருந்தேன்.

அன்புடன்,
இராம.கி.

சிவக்குமார் (Sivakumar) said...

நல்ல பயன்பாடு. விளக்கத்திற்கு நன்றி ஐயா.

Muthu said...

அன்பின் இராம.கி

அருமையான அறிவியல்பூர்வமான பதிவு.நன்றிகள் பல.திராவிட ராஸ்கல்களின் பூர்விகத்தை எடுத்துக்காட்டியதற்கு நன்றி.

SnackDragon said...

// இந்தியம் என்ற கருத்திற்குத் திராவிடம் என்பது எதிரானது போலவும் ஒரு சிலர் எழுதுகிறார்கள். இப்படி எழுதுபவர்கள் ஒருகாலத்தில் தேசிய வாதிகள் என்று சொல்லப் பட்டார்கள்; இப்பொழுதெல்லாம் தேசியம் பேசுவது அவ்வளவு நளினமானது இல்லை என்பதால், தாங்கள் பேசுவதை இந்துத்துவம் என்றே பலரும் சொல்லிக் கொள்கிறார்கள்.//
அன்பின் அய்யா,
மிகவும் சரியான அவதானமாகப் படுகிறது. தேசிய அளவிலான ஒருங்கமைந்த கருத்துக்குடைக்குள் வருவதன் மூலம் பலம்பெறுவதற்கான முயற்சியாகத்தான் பார்க்கிறேன்.

மதுரையின், ஜீன் ஆராய்ச்சி பற்றி பிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒரு படம் ஒன்றை வெளியிட்டனர். இணைப்பு கிடைத்தால் இணைத்துவைக்கிறேன் இங்கு.

SnackDragon said...

இந்தாலசியைத் தவறவிட்டீர்களா? தென்னாசியவியல்? இந்தியவியல்? :-)

இராம.கி said...

அன்பிற்குரிய முத்து (தமிழினி)

வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

அன்பிற்குரிய கார்த்திக்,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. மதுரைப் பல்கலையின் வழி ஏற்பட்ட இந்த ஈனியல் ஆய்வு தமிழ் வலைப்பதிவுகளில் இன்னும் விவரமாகப் பேசப் படாமல் இருக்கிறது. இதைக் கொஞ்சம் வெளியே தெரியும் படி விவரம் அறிந்தவர்கள் செய்யவேண்டும்.

இந்தாலசியை இந்தியவியல் என்று எழுதிவிடலாம். பிறகு இந்தாலஜி என்ற தனிப்பெயரை அறியாமல் போய்விடுவார்களோ என்ற ஓர்தலில், வெறும் எழுத்துப் பெயர்ப்பு செய்தேன்; அவ்வளவுதான்.

மொழிபெயர்ப்பு எங்கு வேண்டும், எழுத்துப் பெயர்ப்பு எங்கு வேண்டும் என்பதில் ஓர் ஒருமித்த கருத்து இன்னும் தமிழ்கூறும் நல்லுலகில் ஏற்படவில்லை அல்லவா?

அன்புடன்,
இராம.கி.

சம்மட்டி said...

தினமலரின் (பரிகார) செய்தி:

அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு சமஸ்கிருதத்தில் இல்லை!

கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்ப் பீடம் பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஹார்ட்: வேறு எந்த மொழியோ,சூழலோ தொட முடியாத கூட் டுக்குள் இருப்பது சமஸ்கிருதம்; எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்று நம்பும் சமஸ்கிருதப் பண்டிதர்களையும் மேலைநாட்டு அறிஞர்களையும் மாற்ற முடியாது. ஆனால், இங்கால்ஸ் போன்ற பல அறிஞர்கள் இதற்கு விதிவிலக்கு. இந்தியாவில் தோன்றும் பல கருத்து களின் கருவூலமாக சமஸ்கிருதம் திகழ்ந்து வந்திருக் கிறது என்று அவர்கள் அறிந்திருந்தனர். இந்தியா வில் எது ஊற்றெடுத்தாலும், ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் யாராவது ஒருவர் அதைப்பற்றி சமஸ்கிருதத்தில் எழுதி வைப்பார்.

சமஸ்கிருதத்தின் மீதும் பல்வேறு தாக்கங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், இதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சமஸ்கிருத அறிஞர்களும், பண்டிதர்களும், தமிழைப் பொருட்படுத்துவதில்லை. மிகப் பழங்காலத்திலிருந்த சமஸ்கிருத வடிவங்களைத் தவிர, பின்னால் வந்த சமஸ்கிருதம் ஒரு செயற்கை மொழி தான். சமஸ்கிருதம் என்ற சொல்லே செயற்கை வடிவமைத்த என்ற பொருளைத் தருகிறது. அது தொடர்பு மொழி, அறிஞர் மொழி யாக விளங்கியிருக்கிறது. ஆனால், தமிழில் இருப்பது போன்ற அன்றாட வாழ்க்கையோடான நெருங் கிய தொடர்பு சமஸ்கிருதத் தில் இல்லை. நானும் இன்னும் சில மாணவர்களும், தமிழ் தலித் இலக்கியங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். அவற்றில் காணப்படும் மொழி பேச்சுத் தமிழாக இருந்தாலும், அந்த வாழும் மொழியின் கருத்து வளம் வியக்கத் தக்கது. செயற்கை மொழியான சமஸ்கிருதத்தில் அதைப் பார்க்க முடியாது. சமஸ்கிருதம் உயர்ந்த கலாசாரம், சிந்தனை எல்லாவற்றையும் வெளிப்படுத்தலாம். ஆனால், அதிலும் சில ஓட்டைகள் இருக்கத் தான் செய்கின்றன.

மேலை நாட்டு சமஸ்கிருத ஆராய்ச்சியாளர்களின் படைப் புகளை அடிப்படையாக வைத்து தான், முஸ்லிம் களுக்கு ஷரியா சட்டம் என்பது போல், இந்துக் களுக்கான சட்டம் மனுநீதி என்று பிரிட்டிஷ் பேரரசு முடிவு செய்தது. இந்திய மரபு பற்றி உண்மையிலே அறிந்த எவராலும் இந்தப் புரட்டை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. மனுநீதி சில சிறுபான்மைக் குடிகளை மட்டும் ஏற்றி வைக்குமே ஒழிய, அது இந்துக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கவில்லை.

இராம.கி said...

அன்பிற்குரிய சம்மட்டி,

பேராசிரியர் ஆர்ட்டின் கருத்துக்களை அறிவேன்.

ஆனாலும், பலரின் சிக்கலுக்கே அவர்களின் தொன்மை நம்பிக்கைகள் தான் காரணம். அவர்கள் மதிக்கிறவர்கள் (பெற்றோர், சுற்றத்தார், ஆசிரியர்கள்) சங்கதம் பற்றிப் பெரிதாக இவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். (அதில் பலவும் உண்மையானவை தான்.)ஆனால் எல்லாவற்றையும் சமன்செய்து சீர்தூக்க முடியாமல், ஊற்றுக்கண் எதுவென்று அறிய முடியாமல், அவர்களின் தொன்மம் தடுக்கிறது. இந்தத் தவறான புரிதலில் இருந்து தருக்கத்தின் வழி சரியான புரிதலுக்கு வருவது அவர்களுக்கு மிகக் கடினம்.

நாம் மீண்டும் மீண்டும் முயல வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

நல்ல கட்டுரை ஐயா.

குழலி / Kuzhali said...

நிறைய பயனுள்ள தகவல்கள் கட்டுரைக்கு நன்றி அய்யா

Machi said...

தற்போது தான் தங்கள் வலைப்பூவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய புது செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது, பயனுள்ள பதிவு.
//"தருக்க மரபு என்பது தமிழில் ஒரு கலையாகவே இருந்தது; இருக்கிறது. இதைப் படிக்க புத்தர் காலம் தொட்டு தென்னாட்டிற்கே வந்ததாக பாகத, பாலி, சங்கத நூல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. // முக்கியமா தருக்கம் பண்ணுவதற்கு இப்பதிவு எனக்கு உதவும். :-) நன்றி.

Anonymous said...

நல்ல பதிவு ஐயா. சிங்களமும் ஒரு திராவிட மொழி எனப்படுவதில் தங்களுடைய கருத்தினை அறிந்துகொள்ள ஆவல்.

Alag said...

ஐயா திராவிடம் என்பதன் வேர்ச்சொல் தமிழம் என்றால் தமிழம் என்றே அழைக்கலாமே. திராவிடம் என்று அழைப்பதால் தானே சிலர் தமிழை விட தெலுங்கு மூத்த மொழி என்று பிதற்றுகின்றனர். தமிழம் என்று வழங்க ஆரம்பித்தால் தமிழ்தான் மூத்த மொழி என்று சொல்லாமலே புரியும் அல்லவா

இராம.கி said...

உறுதியாக, அழைக்கலாம். அதே பொழுது, திராவிடக் கட்சியினருடன் தொடர்ந்து சண்டை அடித்துக்கொண்டே இருக்கவேண்டாம். உருப்படியான மற்ற வேலைகளைப் பார்க்கலாம். திராவிடம் என்பது தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் எனப் பலரையும் குறிக்கும் சொல் என்று ஏற்று நகரலாம்.

Karthi said...

கொளுவுநிலைச் சிந்தனை முறை (agglutinative thinking) - இது பற்றி மேலும் கூறுங்கள். நன்றி.

கார்த்தி said...

கொளுவுநிலைச் சிந்தனை முறை (agglutinative thinking) - என்றால் என்ன? கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள் அய்யா. நன்றி..