Tuesday, April 25, 2023

பத்தினியும் வேசியும்

ஒரு முறை பத்தினி, வேசி என்ற சொற்களின் பிறப்பு பற்றி ஒரு நண்பர் கேட்டிருந்தார். 

படுதல் = தங்குதல்; படு>பட்டு = தங்குமிடம், ஊர் (காட்டு: செங்கழுநீர்ப் பட்டு); படிதல் = தங்குதல்; படி>பட்டி = தங்குமிடம். ஊர் (காட்டு: உசிலம் பட்டி); படி>பட்டி>பட்டினம் = தங்குமிடம், பெரிய ஊர். விதப்பாக கடற்கரையில் இருக்கும் பேரூர். (காட்டு: சென்னைப்பட்டினம்). 

பட்டினத்தில் இருப்பவன் பட்டினவன்>பட்டினன் (விதப்பாக மீனவன்); பட்டினி = பட்டினவன் மனைவி (ஊர்க்காரி என்ற பொருளில் வரும். (இதில் உயர்பொருள் ஏதோவொன்று இருக்கிறது. இது சொத்துள்ளவரை மறைமுகமாய்க் குறிக்கலாம்.) படி> பட்டினி> பத்தினி = ஊர்க்காரி (இல்லறவாழ்க்கை வாழ்பவள்.) 

பட்டினி என்ற சொல்லிற்குப் பல்வேறு பொருள்கள் உண்டு. வேறுபாடு காட்டுவதற்காக மக்கள் வழக்கில் சொற்கள் திரிபுறும். அப்படித்தான் பட்டினி> பத்தினி ஆனது.

அடுத்து வேசி என்பதற்கு வருவோம். 

வேளுதல் என்பது விரும்புதல். வேள்>வேட்கை, வேள்>வேட்சை, வேள்>வேட்டை, வேள்>வேட்பு ஆகியவை விருப்பத்தைக் குறிக்குஞ் சொற்கள். இன்னொரு வகையிற் பார்த்தால் வேள்>வேய்தல் என்பது மூடுதல். வேய்தல் என்பது முகம் மூடிக்கொள்ளுதல். நாடகத்தில் வெவ்வேறு வேயங்களைக்  கட்டிக் கொள்கிறோம். வேயம்>வேசம் ஆகும்  பின் சங்கதத்திற்குள் போய் வேஷமாகும். மீண்டும் அதைக் கடன் வாங்கி நாம் வேடம் என்போம். தமிழ்த் தொடக்கம் புரியாது வேஷம் சங்கதச்சொல் என்போம். 

வலைப்பதிவில் ஒருவர் கட்சி என்ற தமிழ்ச் சொல்லைக் கக்ஷி என்று எழுதுவார். கட்டுவது கட்சி. அது  கள் எனும் வேர் கொண்டது. அவர்கள், நாங்கள் எனும்போது ஒரு கூட்டத்தையே திரட்சிபொருளாற் சொல்கிறோம். 

கட்பலம்= திரண்ட தேக்கு, தான்றி மரம், 

கட்கம் = திரண்டிருக்கும் வாள் 

கள்ளால் ஆன பல்வேறு கூட்டுச் சொற்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம். வேசம் செய்வது என்பது வெறுமே நாடகத்திற்கு மட்டுமல்ல. இயல்பு வாழ்க்கையிலும் உண்டு. வேசங்கட்டினாள் = வஞ்சித்தாள். பரத்தையென்பவள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவள் என்ற பொருளில் வேசை/வேசியானாள். அதாவது உங்கள் மேல் விருப்பங் கொண்டவள் போல் நடிக்கிறாள்.

பத்தினியும் வேசை/வேசியும் தமிழ்ச்சொற்கள் தான். நம்முடைய தமிழ்ச்சொற்களை அடையாளங் காணுவதில் பெரிதும் தடுமாறும் அளவிற்குச் சங்கதத் திரை நம் கண்ணை மறைக்கிறது. என்று மாறுவோம் என்று எனக்குத் தெரியவில்லை. நம்மிடம் அறியாமை இருக்கும் வரை நம் மேல் ஏறி மேய்வது நடந்துகொண்டு தான் இருக்கும்.

அன்புடன்,

இராம.கி.



     . 




 

No comments: