Sunday, April 09, 2023

முதலமைச்சாய் நானிருந்தால் - 3


வேளாண்மை / மர வளர்ப்பு:


மாநிலத்தின் நிலப்பரப்பில் மூன்றிலொன்று காடானால்,

நானிலத்தில் நமைவெல்ல யாருமிங்கே வரமாட்டார்;

மேற்குமலைச் சரிவுகளில் மிகுமரங்கள் நட்டிடுவேன்;

தாக்குமந்தக் கருவைமரத்(15) தடவேரைக் கில்லிடுவேன்;

பார்க்கின்ற இடமெல்லாம் பரம்பரையாய் வருமரங்கள்

வேர்கொள்ள விளைத்திடுவேன்; வியன்காடு பெருகட்டும்.

தாளடியில் நெல்லின்றி தரம்குறையாக் கோதுமையை(16)

நீள்பயிராய் ஆக்கிடுவேன்; நீர்த்தேவை குறையாதோ?

எங்கெல்லாம் புழுதி எடுத்தெறிந்து பறக்கிறதோ(17),

அங்கெல்லாம் அதைத்தடுத்து அடக்கின்ற வகையினிலே

மண்வளங்கள் பெருக்கிடுவேன்; மரம்புதர்கள், செடிகொடிகள்

நண்ணுதற்கு வழிசெய்வேன். நானிலம் பின் செழிக்காதோ?


அடிக் கட்டுமானம்(18):


அடிக்கட்டு மானத்தில் அதிசிறந்த மாநிலமாய்

கொடிகட்டிப் பறப்பதற்கு கூட்டாகச் செயல்முடிப்பேன்.

நகர்ச்சாலை, நெடுஞ்சாலை, நாலிரண்டில் ஒழுங்கை(19)யென

அகலிட்டுச் செய்தால்தான் அடர்துரக்கு(20) இருக்காது;

மூன்றுமணி நேரத்தில் சென்னைமுதல் திருச்சிவரை;

தாண்டிஒரு மணிநேரம் தடம்பெயர்ந்தால் மதுரைநகர்;

ஏழுமணி நேரத்தில் எங்குமரி முனைசெல்ல,

ஆலநெடுஞ் சாலைகளை அமைத்திடவே வழிவகுப்பேன்;

குமுகத்தில் எங்கிருந்தும் கூடுதொலைத் தொடர்புகொள

குமுனேற்ற ஏந்துகளை(21) கொண்டுவந்து குவித்திடுவேன்


கல்வி:


வதிகின்ற தமிழ்நாட்டில் வாழுகின்ற இளஞ்சிறுவர்

பதினாறு அகவுவரை இனிப்படிப்பர் தமிழில்தான்;

ஆனாலும் தெளிவாக ஆங்கிலத்தில் ஆளுதற்கு

வேணுகின்ற வழிமுறைகள் விரிவாகச் செய்திடுவேன்;

மாநிலத்துப் பள்ளியெலாம், மடிக்குழையோ(22), மற்றதுவோ,

மாநிலத்தில் ஒருபாடத் திட்டத்தில் மாற்றிடுவேன்

எந்தவொரு பிள்ளையுமே ஈரயிர மாத்திரி(23)க்குள்

அண்டிப் படிப்பதற்கு ஆவனதாய்ச் செய்திடுவேன்;

மாநிலத்தின் வரும்படியில் ஆறே விழுக்காடு

தானாக்கி கல்விக்கே தரமுயர வழிசெய்வேன்.

கல்லூரிப் படிச்செலவு கடுசாகிப் போனாலும்

பள்ளிப் படிச்செலவு பாடாக விடமாட்டேன்.

பொதுவிடத்தில் தமிழ்புழங்க புதுஆணை பிறப்பிப்பேன்;

எதுவேனும் கட்டுறுத்தல்(24) தேவையெனில் இயற்றிடுவேன்;


மருத்துவம்:


அடிப்படையாய் மருத்துவங்கள் அய்ந்தயிர மாத்திரி(25)யில்

தொடுப்பதற்கு வழிசெய்வேன்; தொண்டார்வப் படைபோல

அடுக்கடுக்காய் மருத்துவர்கள் அமைவதற்கும் வழிசெய்வேன்;

இடுக்கண்கள் எழுகாமல் இதன்செலவை ஏற்றிடுவேன்.


அரசு நிர்வாகம்:


அன்றாட வாழ்க்கையிலே அரசின் குறுக்கீடு

குன்றுதற்கு வழிசெய்வேன்; கூடிவரும் துறைகளெலாம்

குழுமாக்கிப்(26) பணியாற்ற கூடவொரு முயற்சிசெய்வேன்

பழுவான பணியாளர் பத்திலொரு பங்காக்கி

அரசின் பணச்சுமையை அதிரடியாய்க் குறைத்திடுவேன்;

அரசுத் துறைகளெலாம் ஆங்காங்கே நகர்மாற்றி

சென்னைச் சுமைகுறைப்பேன்(27); சீரமைப்பை ஒழுங்குசெய்வேன்;

சென்னையொரு அரசாளும் நகரென்று அமையாது;

சட்டத்தின் பேரவையும் ஆளுநரின் இருக்கைமட்டும்

இட்டதுபோல் சென்னையிலே இருந்திட்டால் தாழ்வில்லை;

சென்னையெனும் நகரினிமேல் வணிகத்தால் பெயர்பெறட்டும்;

சென்னைக்கு வளர்ச்சியினி அரசியலால் வாராது;


அரசுச் சீரமைப்பு:


அறுபத்தைந் தகவையின்பின் யாருமினித் தேர்தலிலே

உறுவதற்கு முடியாமல் ஓய்வுபெற வழிசெய்வேன்;

இனித்தேர்தல் நிற்பவர்கள் ஈரைந்து ஆண்டின்மேல்(28)

முனைந்துவர முடியாமல் போவதற்கும் சட்டம்வரும்.

..........................


திடீரென்று நான் விழித்தேன் ......


என் புயவுக்(29) கனவு வியந்தோடியது.

இதுவரைக்கும் வந்திருந்த கனவெங்கே நீண்டிருக்கும்?

இதன்நிகழ்ப்பு யாரறிவார்? என்றாலும் எண்ணுதற்கு

வாய்ப்பளித்த கவியரங்கத் தலைவருக்கு என்வணக்கம்;

நோய்ப்பட்ட(30) எனைத்தூண்டி துவளாமல் சிலசொல்லிப்

பங்கெடுக்க வைத்த அவர் பண்பிற்கு என்நன்றி!

இங்குற்ற பாவலர்கள் எத்தனையோ கனவுகளை

சொல்லி நெகிழவைத்த சுற்றிடையே என்றனையும்

புல்லி யணைத்ததற்குப் புலனறிந்து வணங்குகிறேன்;

கொள்ளுவதோ, கூறிட்டுத் தள்ளுவதோ, மாறாக

விள்ளுவதோ உங்களுடை வேட்பு.

அன்புடன்,

இராம.கி.


15. கருவை மரம்; இங்கு வேலிக்கருவை = Julia Flora; மேற்கு ஆத்திரேலியாவில் இருந்து கொண்டுவந்த இந்தமரம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மரபு சார்ந்த மரங்களை வளரவிடாமல் தான்வளர்ந்து சீரழிக்கிறது. இதை ஒழித்தால் தான் மரவளம் திரும்பக் கிடைக்கும்.

16. தாளடிக்குக் கோதுமைப் பயிரீடு என்பது தஞ்சைத் தரணியில் இப்பொழுது சொல்லப்பட்டுவரும் பரிந்துரை. தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் காரணத்தால் இது நல்லது என்று வேளாணியலார் சொல்லுகிறார்கள்.

17. நீர்வளம் குறைந்த காரணத்தால் புழுதி பறக்கிறது. தமிழ்நாடு சிறக்க இது மாறவேண்டும். செடி,கொடி,புதர்கள் மண்டினால், மண்வளம் கூடி இந்தநிலை மாறும்.

18. அடிக்கட்டுமானம் = infrastructure

19. நாலிரண்டு ஒழுங்கை = எட்டு ஒழுங்கை = eight lane

20. அடர் துரக்கு = heavy traffic

21. குமுனேற்ற ஏந்துகள் = communication facilities.

22. மடிக்குழை = matriculation

23. ஈர் அயிர மாத்திரி = 2 kilo meter

24. கட்டுறுத்தல் = control

25. அய்ந்து அயிர மாத்திரி = 5 kilo meter

26. குழுமாக்கல் = corporatization; this does not mean privatization

27. அரசுத் துறைகள் மாநிலத்தின் மற்றநகர்களுக்கு இடம் மாற்றப் பட்டு, சென்னை நகர் அரசாங்க நகர் என்ற பெயர் மாறவேண்டும். நெதர்லாந்தில் இப்படித்தான் நடக்கிறது. ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு நகரில் இருக்கும். நுட்பியல் பெருகிப் போன இந்தக் காலத்தில் இது எந்த வாய்ப்புக் குறைச்சலையும் ஏற்படுத்தாது. ஆனால் அதிகாரம் என்பது அகலப் படுத்தப்படும். சென்னைநகர் அளவிற்கு மீறி வளராது.

28. பத்தாண்டிற்கு மேல் யாரும் அரசில் பங்கு பெறமுடியாது.

29. புயவு = power

30. சிலநாட்களாய் கணியின்முன் அமர்ந்து தட்டச்சுவது சரவலாய் இருக்கிறது. 

தலைச்சுற்று, கிறுகிறுப்பு போன்றவை கூடுதலாய் இருக்கின்றன. சிந்தனை நகர  மறுக்கிறது. இருந்தாலும் முனைவர் சுவாமிநாதனின் தூண்டுதல் இந்தப் பாவரங்கில் பங்குகொள்ள வைத்தது.      


No comments: