Wednesday, March 19, 2008

ஏழு சுரங்கள் - 2

சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களுக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயர்களுக்கும் உள்ள உறவைச் சட்டென்று ஆய்வின்றிச் சொல்ல முடியாது இருக்கிறது. சட்ஜம் என்பது குரல் என்றும் (இப்படிச் சொல்வது மேவுதிப் போக்கு - majority trend), இல்லையில்லை சட்ஜம் என்பது இளியே என்றும் (இப்படிச் சொல்வது நுணதிப் போக்கு - minority trend), இரு வேறு கருத்துக்கள் தமிழிசையாளரிடம் உண்டு. நான் இக்கேள்வியை ஆய்வு செய்தவனில்லை. மேவுதியாரோடு இணங்கி, பெயர்க் காரணங்களை மட்டும் இங்கு நான் சொல்ல முற்படுகிறேன்.

இசையறிஞர் முனைவர் வீ.பா.க. சுந்தரம் தன் ஆய்வில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற பெயர்கள் எப்படி எழுந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். [தமிழிசையில் ஆர்வம் கொண்டு, ஆய்வுக்கண் கொண்டு பல்வேறு செய்திகளை அணுக விழைவோர், கீழ் வரும் அவருடைய நான்கு நூல்களையும் உசாத் துணையாய்க் கொள்வது நல்லது. தவிர, இசைத்தமிழ் பற்றி அறிவது, இயற்கையைச் சுவைக்கவும், கலை நுகர்வைப் பெருக்கவும், உதவி செய்யும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 79, பிரகாசம் சாலை (பிராடுவே) சென்னை 108, வெளியீட்டு ஆண்டு 1986

தமிழிசை வளம், பதிப்புத் துறை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை 625 021, வெளியீட்டு ஆண்டு 1985

தமிழிசையியல், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 005, வெளியீட்டு ஆண்டு 1994

தமிழிசைக் கலைக் களஞ்சியம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி 620 024 - 4 மடலங்கள், வெளியீட்டு ஆண்டுகள் 1992, 1994, 1997, 2000]

அதேபொழுது சங்கதப் பெயர்களுக்கு காலங் காலமாய்ச் சொல்லிவந்த விளக்கத்தையே அவரும் எடுத்துரைக்கிறார். இந்த 2 வரிசைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்ற சிந்தனையில், இங்கே என் முன்னீடுகளை எடுத்து வைக்கிறேன்.

முதலில் தமிழ்ச் சுரப் பெயர்களைப் பார்ப்போம். இங்கே வீ.பா.க.சு. வின் ஆய்வைப் பெரிதும் சார்ந்து, இரண்டே சுரங்களில் மட்டும் அவரோடு  வேறுபட்டு, நான் சொல்ல முற்படுகிறேன்.

குரல் என்பதை 'ஒன்றோடு ஒன்றின் சேர்க்கை அதாவது பற்றுதல்' எனும் பொருளில் எழுந்த சொல்லாகவே அவர் உரைப்பார். (அவர் கூறிய விளக்கத்தில், குரவை என்பது கைப்பற்றி ஆடும் ஆட்டம்; குரால் என்பது தாய்ப்பற்றுடைய குட்டி; குரவர் என்பவர் பற்றுடைய குரு, பெற்றோர்.) 

நானோ, குரலைக் குர் எனும் ஒலிக்குறிப்பில் எழுந்த சொல்லாய்க் காண்பேன். ஒலி எனும் பொருளில் எழும் அடியோசைக்குக் (voice) குரலென்றே பெயர். குரத்தம் (= ஆரவாரம்), குரம் (= ஒலி), குரவை> குலவை (= மகிழ்ச்சியொலி), குருமித்தல் (= பேரொலி செய்தல்), குரைத்தல்> குலைத்தல் (= ஆரவாரித்தல்), குலிலி (= வீராவேச ஒலி), குழறுதல்/குளறுதல் (= பேச்சுத் தடுமாறல்), குளிறுதல் (= ஒலித்தல்), குறட்டை (= உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி) என வரும் சொற்களைக் குரலோடு எண்ணிப் பார்த்தால், குர் எனும் ஒலிக்குறிப்பே குரலுக்கு அடிப்படை என்பதை உறுதிசெய்யும். 

தவிர, சிவநெறியாளரின் பதினோராம் திருமுறையில், தேவார மூவர்க்கும் மூத்தவரான காரைக்கால் அம்மையாரின்,

துத்தம் கைக்கிளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடி
.....................
அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
அப்பன் இடம் திரு ஆலங்காடே

எனும் பாடலில் ஓசை என்ற சொல்லே குரல் எனும் சுரத்தைக் குறிக்கும். பொதுவாக மற்ற சுரங்கள் குரலிலிருந்து கிளைத்தவையாகவே இசையியலார் சொல்வார். சங்க இலக்கியமான மலைபடுகடாத்தில், “குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பு” என்று வரும் 23 ஆம் அடியும் இதை உறுதி செய்யும்.

அடுத்து, துத்தமென்ற சொல்லுக்கு உயர்ந்ததென்ற பொருளையே வீ.பா.க.சு காட்டுவார் (துத்துதல் = உயர்த்துதல்; துத்தியது துத்தம். துத்தின் விரிவான துருத்தும் உயர்ந்ததை, வெளிவந்ததைக் குறிப்பதே. துத்து, துருத்து என்பதில் இருந்து பல்வேறு சொற்கள் கிளைக்கும்.) துத்திய குரல் = உயர்ந்த குரல் என்பதில் குரலை உள்ளார்ந்து வைத்து வெறுமே துத்தம் என்பது  ஏற்புடைத்தே. உயர்ந்தது என்பதோடு 'முன்தள்ளிப் பெருத்தது' என்றும் துத்தத்திற்குப் பொருளுண்டு. மொத்தத்தில், அவர் விளக்கத்தை அப்படியே மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்கிறேன்.

மூன்றாவதாக, கைக்கிளைக்குக் கிளை = உறவு என்ற பொருளில் 'சிறுமை ஒலி உறவு' என்று அவர் அமைதி காணுவார். செவ்வியல் இசையில் இயல்புத் தொனிப்பில் (just intonation) ஒவ்வொரு சுரமும் படிப்படியாக அதற்கு அடுத்ததோடு ஒத்திசைப் புறக்கூட்டில் (harmonic progression) இருந்தாலும், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவும்போது, சில பொருத்துகள் ஒத்திசைந்தும், சில ஒத்திசையாமலும் அமைவது, எந்த இனிமையைத் தேடிக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்தது. பொதுவாய் முதற்சுரமும், நாலாஞ்சுரமும், அதேபோல முதற்சுரமும், ஐந்தாஞ்சுரமும் கேட்பதற்கு இனிமையாய் மிகுந்த ஒத்திசை கொண்டன என்பார். இதற்கு மாறாய், முதற்சுரமும், மூன்றாஞ்சுரமும், முதலும் ஆறாஞ்சுரமும், அவ்வளவு ஒத்திசையாமல், குறைந்து இருப்பதாகவே இசையிலாளர் கொள்வர்.

முனைவர் வீ.பா.க.சு.விலிருந்து சிறிதே மாறுபட்டு, கைக்கிளை என்ற சொல்லைச் சிறுமைக் கிளை என்று கொள்ளாது (கை எனும் முன்னொட்டு சிறு என்னும் பொருளைத் தமிழில் உணர்த்தும். கைக்குட்டை என்னும் சொல்லை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்), அதைக் காய்க்கிளையின் மரூஉ என்றே புரிந்து கொள்கிறேன். [இப்படிச் சொல்வதற்கு மணிப்பவளச் சொல்லான காந்தாரம் கூட ஒரு காரணம். அதைக் கீழே விளக்குவேன்.] சிறுவர் ஒருவரோடு ஒருவர் நட்பாய் இருப்பதை பழம் என்றும், எதிராய் இருப்பதைக் காய் என்றும் சொல்லும் பரந்த வழக்கை ஓர்ந்து பார்த்தால், காய்க்கிளை என்று சொல்லுவதில் உள்ள சீர்மை புலப்படும். கிளை என்பதற்கு ஒலி என்றே பொருள் கொள்ளலாம்.

கிளவுதல் என்ற பழையவினை தமிழில் ஒலித்தலென்றே பொருள் கொள்ளும். (இரட்டைக் கிளவி என்று சொல்லுகிறார் அல்லவா?) இன்னும், கிளவி என்ற சொல்லைக் clause என்பதற்கு இணையாய்ப் பொருள் கொள்வதையும், பேசிக்கொண்டே ஆடும் ஆட்டத்தைக் கிள்ளாக்கு என்பதையும், கிளி, கிள்ளை (= பேசும் கிளி) போன்ற பெயர்ச் சொற்களையும் கூர்ந்து பார்த்தால் கிளத்தல்>கிளை என்பதில், ஒலித்தல்>ஒலி என்ற பொருள் இருந்திருக்க வேண்டுமென உணரலாம். அவ்வகையில் காய்க்கிளை என்பது காய்ந்த ஒலி என்றும், பொருந்தா ஒலி என்றும், பகையொலி என்றும், பொருள் கொள்ளும்.

அடுத்துள்ள நாலாம் நரம்பு உழையாகும். உள்>உளை>உழை என்று இச் சொல் ஒலிப்பொருளில் விரியும். உளைதலின் திரிபான ஊளை என்பதும் பேரொலிப் பொருளைக் கொடுக்கும். howl என்ற மேலையர் சொல்லையும்  எண்ணிப் பார்க்கலாம். தவிர உழைக்கு உள்ளாதல், பக்கம் என்ற பொருளும் உண்டு. இந்நரம்பை, குரலோடு சேர்ந்த உள்ளிருக்கும் நட்பு நரம்பு என்றே இசையியலார் சொல்வார். குரலுக்குப் பக்கத்தில் நெருங்கி, நள்ளி இருக்கக் கூடிய உள்நரம்பு உழை நரம்பு ஆகும். (நள்ளுவது நட்பு. உள்ளிருத்தல் நடுவில் இருத்தல்.) இதில் முனைவர். வீ.பா.க.சு.வுடன் முழுதும் உடன்படுகிறேன்.

ஐந்தாவது இளி எனும் நரம்பு. ஒன்று இன்னொன்றோடு இணங்குதலை, அதாவது ஒன்றுதலை, தமிழில் இளிதல் வினையால் சொல்லலாம். இளி நரம்பை, கிளை நரம்பு என்றுகூடத் தமிழிசையிற் சொல்வதுண்டு. (தென் மாவட்டங்களில் ”இவனுக்கிவன் கிளைகாரன்” என்று சொல்லி சுற்றத்தையும், நண்பரையும் ஒருங்கிணைத்தாற் போற் குறிக்கும் ஒரு சொல்லாட்சி உண்டு.) இதிலும் என் கருத்து வீ.பா.க.சு. கருத்தே.

ஆறாம் நரம்பிற்குப் போகுமுன் ஏழாம் நரம்பின் பெயரைப் புரிந்து கொள்வது நல்லது. ஏழாம் நரம்பு, தாரம் எனப்படும். ஒரு சுரவரிசையில் இருக்கும் ஏழு நரம்புகளிலேயே, மிக உயர்ந்த, நீண்ட, உச்ச நரம்பு இதுவாகும். 'உச்சம் தாரம் ஓங்கும் வல்லிசை' என்று திவாகர நிகண்டின் நூற்பாவை வீ.பா.க.சு. குறிப்பார். தார் என்பதற்கு மேலோங்கியது, நீண்டது என்ற பொருளுண்டு. (தாராளம் என்ற சொல்லை இங்கு நினைவு கூருங்கள்.)

ஆறாம் நரம்பான விளரி என்பது, தாரத்தோடு ஒப்பிடத் தன் அதிர்விற் சற்று குறைந்தது. பேச்சு வழக்கில் கொஞ்சம் குறைந்த கருப்பை வெளிர்கருப்பு என்கிறோம் அல்லவா? வெளிர்தலும் விளர்தலும் ஒரே பொருட் சொற்கள் தாம். எனவே தாரத்தில் விளர்த்தது விளர்தாரம். இங்கு தாரம் என்ற ஈற்றுச் சொல்லை உள்ளார்ந்து வைத்து, விளரி என்றே சுருங்கச் சொல்லப்படுகிறது. (ஏற்கனவே மூன்றாஞ்சுரத்தை குரலுக்குக் காய்க்கிளை என்று சொல்லிய காரணத்தால், இன்னொரு காய்ந்த சுரமான ஆறாஞ் சுரத்தையும் குரலோடு பொருத்தாது, வேறு வகையில் தாரத்தோடு பொருத்திச் சொன்னார்.)

ஆகச் சுருங்கச் சொன்னால், தமிழ்ப் பெயர்களின் பெயர்க் காரணம் கீழ் வருமாறு அமையும்.

குரல் என்பது அடிப்படை ஒலி
குரலுக்குத் துத்தம் என்பது ”குரலுக்கு உயர்ந்த ஒலி”
குரலுக்குக் காய்க்கிளை என்பது ”குரலொடு காய்ந்த கிளை”, அதாவது குரலுக்குப் பகையொலி
குரலுக்கு உழை என்பது குரலுக்குப் பக்கமான ஒலி = குரலுக்கு நள்ளிய ஒலி (நள்ளுதல் = நெருங்குதல்)
குரலுக்கு இளி என்பது குரலுக்கு இணங்கிய ஒலி
தாரத்தின் விளரி என்பது தாரத்திலும் வெளிரிய ஒலி
தாரம் என்பது குரலைப் பார்க்க மிக மிக நீண்ட ஒலி

ஒரு சுர வரிசையை வட்டம், மண்டிலம், தானம், தாயி என்ற சொற்களால் தமிழிசையில் குறிப்பார். இவை அத்தனையும் தமிழ்ச் சொற்களே. ஒரு மண்டிலம் முடிய, அடுத்த மண்டிலம் வந்து விடும். மண்டிலம் என்ற சொல்லை சிலம்பில் ஆய்ச்சியர் குரவை 13 ஆம் அடிக்கு ஆன அடியார்க்கு நல்லார் உரை கீழ்க்கண்டவாறு உரைக்கும்.

வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓரேழ் தொடுத்த மண்டிலம் ஆகும்

வட்டி வருவது வட்டம் (வட்டுதல் = வளைதல்); மண்டித்து வருவது மண்டிலம் (மண்டலம் = region என்ற சொல்லும் நிலம் குறித்த வட்டம் தான். சிவகங்கைப் பக்கம் வட்டகை என்ற சொல் மண்டலத்தைக் குறிக்கும். மண்டிலம் என்ற கருத்தீட்டு வட்டத்திற்கும். மண்டலம் என்னும் பருப்பொருள் வட்டகைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை உணர்ந்து கொள்வது தமிழ்நடை சிறக்க வழி வகுக்கும். 

(இசையில் வரும் மண்டிலம் போல யாப்பில் ஒருவகைப் பாவினத்திற்கும் மண்டிலம் என்ற பெயருண்டு. காட்டாக, காய் - காய் - மா - தேமா எனும் ஒழுங்கு வாய்பாட்டில், 4 சீர்களையும் 8 அரையடிகளையும், அதோடு எதுகை மோனை அழகுகளையும் சேர்த்து, மீள மீள மடித்து வரும் பாவினம், எண்சீர் ஆசிரிய மண்டிலம் எனப் படும். 

பின்னால் மண்டிலம் என்ற சொல்லைப் புழங்காது வட்டம்> வ்ருத்தம்> விருத்தம் என்ற இரு பிறப்பிச் சொல்லையே நம்மவர் புழங்கியிருக்கிறார். இன்றைக்கு விருத்தம் என்றால் புரிந்து, அதே பொழுது மண்டிலம் என்றால் புரியாமல் தடுமாறும் மரபுக் கவிஞர் உண்டு. அந்த அளவிற்கு வடமொழி/மணிப்பவளச் சொற்கள் நம்மிடையே ஊடுருவியுள்ளன. ஆங்கிலத்தில் verse என்பது  விருத்தத்தோடு தொடர்புடையதே.)

தமிழிசையில் ஒவ்வொரு பண்ணிற்கும் மண்டிலம் சொல்லும் போது ஆரோசை (=ஆரோகணம், ஏறிவரும் ஓசை), அவரோசையில் ( = அவரோகணம், அவல்ந்து வரும் ஓசை; அவல் = கீழ்) சுரங்களைச் சொல்வார். மண்டிலத்தின் இன்னொரு சொல்லான தானம் என்பது, தண்டு கொண்டு நிலைத்து நிற்பது என்று பொருள் கொள்ளும். (சங்கத மயக்கத்தில் உள்ளவர் தானத்தையும் தமிழில்லை என்பார்.) வட்டம், மண்டிலம், தானம் என்பன போகத் தாயி என்ற சொல்லும் இதே கருத்தைக் குறிக்கத் தமிழிலுண்டு. தாயக்கட்ட ஆட்டத்தில் தாயமென்ற சொல்லை உன்னிப் பார்த்தால் தங்கும் இடம் என்ற பொருள் புரிபடும். தாயித்தல் = தங்குதல். (தாயி என்பதோடு முன்னால் ”ஸ்” என்பதைச் சேர்த்து ஸ்தாயி ஆக்கி வடமொழி பயின்று கொள்ளும். தானம் என்பது வேறு வகையில் ஸ்தானம் ஆகி நிலத்தைக் குறிப்பது போல இதைப் புரிந்து கொள்ளலாம். இந்துஸ்தானம் <  இந்துத்தானம் <  சிந்துத்தானம் =  சிந்து ஆறு பாயும் நிலம்)

ஓர் இசை மண்டிலத்தை மொத்தம் 22 சுருதிகளாய்ப் (அலகுகளாய்ப்) பிரிப்பது தமிழர் மரபாகும். அதோடு எழு சுரங்களுக்கும் 4,4,3,2,4,3,2 என்று அலகுகளைப் பிரிப்பர். இந்த ஏழு சுரங்களும் ஒன்றின் பின் ஒன்றாய்க் கிளைத்தது இயல்பான வளர்ச்சியே. எப்படி நீரின் உறைநிலை (freezing point), கொதிநிலை (boiling point) ஆகியவற்றைக் கொண்டு செல்சியசு, வாரன்ஃகீட் போன்ற வெம்மை அளவுகோல்கள் எழுந்தனவோ, அதுபோல் குரல் தாரம் என்று இரு ஈறுகளை வைத்துக் கொண்டு மற்ற சுரங்களை அடையாளங் காட்டும் நடைமுறை இது. இசை வளர்ச்சியில், ஏழு சுரங்களைப் பன்னிரண்டு அரைச் சுரங்களாய் நீட்டி அவற்றில் சிலவற்றை வெவ்வேறு வகையில் உகந்தெடுத்து, பெருமடக்கு (permutation), பிணைப்பு (combination) முறைகளில், ஆரோசை, அவரோசை வரிசைகளை அமைப்பதைப் பண்ணுவது என்பார். பண்ணிய இசை பண்ணாயிற்று.

பன்னிரண்டு அரைச்சுரங்களுக்கான தமிழ்ப்பெயர்களையும், இணை கொண்ட வடசொற்களையும், மேலைக் குறியீடுகளையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

குரல் - சட்ஜம் - C
மென் துத்தம் - சுத்த ரிஷபம் - D flat
வன் துத்தம் - சதுஸ்ருதி ரிஷபம் - D
மென் கைக்கிளை - சாதாரண காந்தாரம் - E flat
வன் கைக்கிளை - அந்தர காந்தாரம் - E
மெல்லுழை - சுத்த மத்யமம் - F
வல்லுழை - ப்ரதி மத்யமம் - F sharp
இளி - பஞ்சமம் - G
மென் விளரி - சுத்த தைவதம் - A flat
வன் விளரி - சதுஸ்ருதி தைவதம் - A
மென் தாரம் - கைசகி நிஷாதம் - B flat
வன் தாரம் - காகலி நிஷாதம் - B

காட்டாக, முல்லையாழ் என்றும், செம்பாலைப் பண் என்றும் பழங்காலத்தில் சொல்லப்பட்ட பண்ணை அரிகாம்போதி அராகமாக இன்று சொல்வார்.

அதன் ஆரோசை ச ரி2 க2 ம ப த2 நி ச்
அதன் அவரோசை ச நி த2 ப ம க2 ரி2 ச்

இப்படிப் பல்வேறு பண்கள் வெவ்வேறு சுரங்களைக் கொண்டு அமையும்.

ஒவ்வொரு சுரத்தையும் அதன் அதிர்ச்சிப் பருவெண்ணால் (vibrational frequency) ஒலித்துக் காட்டலாம். 12 அரைச்சுரங்களின் ழுழு அரங்கும் (full range) ஒரு மண்டிலமாகும். இசையியலில் மெலிவு மண்டிலம் (மந்த்ர ஸ்தாயி), சமன் மண்டிலம் (மத்திய ஸ்தாயி), வலிவு மண்டிலம் (தார ஸ்தாயி) என மூன்று மண்டிலங்களைச் சொல்வார். காண்க, - சிலம்பு அரங்கேற்று காதை 93-94 ஆம் அடிகள்.

வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமையோனுடன்

ஒவ்வொரு மண்டிலத்திலும் ஒரு குரற் சுரம், ஒரு துத்தச் சுரம் ....... முடிவில் ஒரு தாரச் சுரம் என அமையும். அதேபொழுது, சமன் மண்டிலத்தில் வரும் குரற் சுரத்தின் பருவெண் மெலிவு மண்டிலத்தில் வரும் குரலின் பருவெண்ணைக் காட்டிலும் 2 மடங்கு இருக்கும். இதே போல வலிவுக் குரல், சமன் குரலைப் போல் இரு மடங்குப் பருவெண் கொண்டது. சிலம்பின் வழி இசையாய்வு செய்த சென்னைப் பல்களைக்கழக முன்னாள் பூதியற் பேராசிரியர் திரு. வீர பாண்டியன், ஒரே மண்டிலத்துள் இருக்கும் 7 சுரங்களுக்கு, கீழ்க் கண்ட பருவெண் மடங்குகளை இருவேறு முறைகளில் குறிப்பார்.

http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R

இயல்புத் தொனிப்பு முறை (Just intonation)

ச  ரி2  க2  ம1  ப  த2  நி2  ச்
1    9/8  5/4  4/3  3/2  5/3 15/8 2

சிலம்பில் வரும் ஆராய்தல் தொனிப்பு முறை

ச  ரி2   க2      ம1  ப    த2      நி2      ச்
1   9/8  (9/8)^2  4/3  3/2  27/16  (4/3)^2  2

ஆகத் தமிழில் வரும் சுரப் பெயர்கள் எல்லாம் தானாய் எழுந்ததாய்த் தெரியவில்லை; இசையியலை நன்கு புரிந்து இசையடவு (musical design) செய்த ஒருவர் வேண்டுமென்றே ஆராய்ச்சிப் பொருளோடு இட்டிருக்கும் காரணப் பெயர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. அதோடு, சங்கதப் பெயர்களுக்குக் கொடுத்த விளக்கங்கள் போலத் தான்தோன்றித் தனமாய் அன்றி, உள்ளார்ந்த ஏரணத்தோடு இவை இருப்பதையும் உணர்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 18, 2008

ஏழு சுரங்கள் - 1

தொய்வில்லா நாரை ஒரு கவட்டையிற் கட்டி, வலிந்து இழுத்தால் சுர்ர்ர்.... என்று அதிருமே, கவனித்திருக்கிறீர்களா? அந்த அதிர்ச்சியை ஒரு மொழிசாரா ஒலிக்குறிப்பு என்பார்; (நார் என்ற சொல் கூட நுர்>நர்.... எனும் ஒலிக்குறிப்பில் கிளைத்தது தான்.) இது போன்று வெவ்வேறு நிகழ்வுகளில் ஏற்படும் ஒலிக் குறிப்புகளைக் கொண்டு இயல் மொழிகள், தம் இயல்புக்கு ஏற்ப, ஒலிப் பொருளை உணர்த்தி, விதப்பான சொற்களை அமைத்துள்ளன.

ஒரு நாரை வலித்து இழுப்பதைத் தெறித்தல் என்றும் சுண்டுதல் என்றும் சொல்கிறோம். தொல்காப்பியத்திற்கான இளம்பூரணரின் உரையும், தெறித்து அளத்தல் என்ற முறையைக் கூறும். ஒவ்வொரு சுண்டும் (அல்லது தெறிப்பும்) தெறிப்பு விசை (deflective force), நாரின் நீளம்,  நாரின் தந்தத் திகை (tensile stress of the wire) ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு விதப்பான ஒலியை உண்டாக்குகிறது.

[தந்தத் திகை என்ற சொற்கூட்டு நாம் பார்ப்பதற்குப் புதுத்தோற்றம் காட்டினும், உள்ளிருக்கும் செய்தி என்னவோ பழையது தான். 'திகையாக இருக்கு, இந்த நடைக்கே இப்படித் திகைஞ்சு போனா, எப்படி?' என்று தென் மாவட்டங்களில் stress-க்கு இணையாகத் திகையுறுதலைப் பயில்வார். (திகைக்கு இருக்கும் மற்ற பயன்பாடுகளை நானிங்கு குறிக்கவில்லை.) 

தந்து என்பது நூலையும், மெல்லிய கயிற்றையும் குறிக்கும். தந்தின் நீட்சியான தந்தி என்பது ஒரு மாழைக் கம்பியைக் (metal wire) குறிக்கும். கம்பு>கம்பி என்பது போல் தந்து> தந்தி என்பதைப் புரிந்து கொள்ளலாம். தந்தித்தல் என்பது நூற்றல் என்றாகும். நூற்பது என்பது நாம் கொடுக்கும் இழுவிசையால் - drawing force - ஏற்படுவது. 

இழுவிசை என்ற சொல் பொதுமையாக நாம் கொடுக்கும் விசையையும், தந்த விசை என்பது தந்தின் உள்ளே துலங்கும் விதப்பான tensile force ஐயும் குறிக்கும். சுருக்கமாய் tension என்பதைத் தந்தம் என்றே நாம் சொல்லலாம். தந்த விசைக்கு எதிரான compressive force ஐ நாம் அமுக்குவிசை என்கிறோம். ஒரு சிலர் பயன்படுத்துவது போல, tensile force என்பதை இழுவிசை என்பது ஒரு சரியான மொழியாக்கமாய் இருக்கமுடியாது. பொதுமைச் சொற்களை விதப்பு நிகழ்வுகளுக்குப் புழங்குவது தமிழை அறிவியல் மொழியாய் வளப்படுத்தாது; அது தமிழை மொண்ணையாகவே வைத்திருக்கும்.]

சுர் எனும் ஒலிக்குறிப்பு வேறு வகையிலும் ஏற்படும்; காய்ந்த இரும்பில் நீரைச் சுண்டும் போது எழும் ஒலிக்குறிப்பும் சுரீர் என்றே சொல்லப்படும். சொர் என்று தாரை/தாரையாக பெய்யும் மழையைச் 'சொரிகிறது' என்கிறோம். சுர்> சர் என்ற திரிவில் சரசர, சரேர், சரக் என்றும், ரகர/லகரத் திரிவில் சலசல, சலேல் என்றும், இன்னும் கலவையாய் சரேல் என்றும் கூட ஒலிக்குறிப்புச் சொற்கள் தமிழிலுண்டு. சர என்பதில் கிளைத்த சரகம் என்ற சொல் தேனீயையும், வண்டையும், அவை எழுப்பும் சர்ர்ர்.... எனும் ரீங்காரத்தையும் கூடக் குறிக்கும்.

சுர் எனும் குறிப்பில் கிளைத்த சுரல் வினை, சுரம் என்ற பெயர்ச் சொல்லை உருவாக்கும். (இதேபோலக் குரல் என்பதும், நரல் என்பதும் குர், நுர் எனும் ஒலிக்குறிப்புக்களில் உருவானவையே. 'கொர கொரப் பேச்சு, நரநரவென்று பல்லைக் கடித்தான்' என்கிறோமே?) 

இன்னொரு வகையில் சுரல், சுருதலாகி, சுருதி என்ற சொல்லை உருவாக்கும். மொழிப் பயன்பாட்டில், சுரம் பெரியது; சுருதி சிறியது. (இற்றை இசையியலில் சுருதி என்ற சொல் pitch இற்கு இணையாகவும் பயன்படுகிறது.) சுருதியைத் தொகுத்து வரும் ”சுதி”,  இன்னொரு வகையில் நீண்டு, வண்டைக் குறிக்கும் சூதவம் என்ற சொல்லை உருவாக்கும். இதே போல அரசன் புகழை இசையாற் பாடும் பாணர் சூதர் எனப்படுவார். சுருதலின் இன்னொரு நீட்சியாய்ச் சுரும்புதல், சுரும்பித்தல் என்ற வினைகளும் எழும். முடிவில் சுரும்பு என்ற பெயரும் கூட வண்டைக் குறிக்க எழும்.

கல்தல் வினை, கத்தலாகிக் கத்தம்>கதம் என்ற சொல்லை உருவாக்குவது போல (பா கதம் = பரந்த பேச்சு, நாவலந்தீவின் வடபுலத்திற் பெரிதும் பரவி யிருந்த பேச்சு, சம் கதம்>சங்கதம் = கலப்புப் பேச்சு = நாவலந்தீவின் பல மொழிகளில் இருந்தும் சொற்களையும் இலக்கணங்களையும் எடுத்துக் கலந்து புனைந்த பேச்சு, செங்கதம்>செம்மையான பேச்சு, standardized speech, 

செந்தமிழ் போல), சர்> சல் என்னும் திரிவில் சல்தல் வினை எழுந்து சத்தம் எனும் பெயரை உருவாக்கும். கல்தல்> கத்தல் தமிழென்றால், சல்தல்> சத்தல்> சத்தமும் தமிழ் தான். சரகமும் சத்தமும் ஒரே பொருள குறிக்கும் ஒலிச் சொற்கள். அதே போல சத்தத்தில் சகரம் தவிர்த்த அத்தம் என்ற சொல்லும் சுருதியைக் குறிக்கும் சொல் என்று சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் பூதியற் (physics) பேராசிரியர் வீரபாண்டியன் நிறுவுவார்.

http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R

 மேலுமுள்ள தமிழ்த் திரிவில், சுர் என்பது சுல்>சில் என்றாகிச் சிலம்பல், சிலைத்தல் என்ற வினைச்சொற்களையும், அவையொட்டிய பெயர்ச் சொற்களையும் உருவாக்கும். சிள்வண்டைக் குறிக்கும் சில்லி (இது வடமொழியில் ஜில்லி ஆகும்), சில்லிடுதல், சில்லெனல், சில்லி, சில்லிகை (= சிள்வண்டு, வட மொழியில் ஜில்லிகா), சில்லூறு (= வண்டு) போன்ற சொற்களையும் கூட இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

இன்னும் வேறு வகையில், சுல்>சொல் எனும் திரிவையும் கூர்ந்து காணலாம். மொல்லும் ஓசை எப்படி மொழிதற் சொல்லை உருவாக்கியதோ, அது போல் சொல்லுதல் என்பதும் இங்கே உருவாகிறது. இன்னொரு வளர்ச்சியில் சொல்ந்தது சொன் என்றும் திரியும். 

இதே ஒலிப்பில் வரும் anglo norman சொல்லான soun, Latin சொல்லான sonus, சங்கதச் சொல்லான svan ஆகியவற்றையும் ஒப்பு நோக்கலாம். (இது போன்ற இந்தையிரோப்பியச் சொல்லிணைகளை நான் எடுத்துக் காட்டினால், அவற்றை ஏற்பதற்குப் பலரும் தயக்கம் காட்டுகிறார்; உயர்குடும்பச் சொற்களோடு, ”தாழ்ந்த” தமிழியச் சொற்களை ஒப்பிடலாமோ? என்ன ஓர் அவச்சாரம்? :-) என்று அந்த அளவிற்கு ஒரு மாயத்திரையால் நம் கண்ணைக் கட்டி வைத்திருக்கிறது இந்தச் சிந்தனை.)

சுல்>சல் எனும் திரிவில் திமிலைப் பறையைக் குறிக்கும் சல்லரியும், தாள ஒலியைக் குறிக்கும் சல்லகத்தையும் (வடமொழியில் ஜல்லகம்), சல்லரை என்னும் இசைக்கருவியையும் (சல்லரை, வடமொழிப் பலுக்கில் ஜால்ரா ஆகும்.) இனங்காட்ட முடியும்.

தவசங்களைக் குந்தாணியில் போட்டு உலக்கையால் குற்றும் பொழுது எழும் ஓசைக்குறிப்பு சலுக்கு மொலுக்கு என்று தமிழில் சொல்லப்படும். தவிர, சள்ளட்டி, சளப்பு (ஜ்ல்ப் என்று வடமொழியாகும்.), சளபுள, சளக்குப் புளக்கு (நீர் அசையும் போது ஏற்படும் ஒலி), சளசள (அருவி நீர் கீழே விழும்போது ஏற்படும் ஓசை) போன்ற ஒலிக்குறிப்புகளும் உண்டு. இந்த ஒலிக்குறிப்புகளின் வழியாகச் சரகம் (=தேனி, வண்டு), சலம் (=ஓசையிடும் நீர்; சலம் தமிழே, அதை ஜலம் என்று ஒருசிலர் தவறாகப் பலுக்குவதால், வடமொழியோ என்று பலரும் எண்ணிக் கொள்கிறார்கள்), சலங்கை (ஓசையிடும் காலணி), சலித்தல் (=ஒலித்தல்), சள்ளுவாயன் (=ஓயாது பேசுபவன்) என்ற சொற்களும் உருவாகும். அடுத்து லகரம் தகரமாகும் போலியில், சலங்கை சதங்கையாகவும் ஆகும். கிண்ணங்களில் நீரை நிரப்பி, அவற்றைக் கோல் கொண்டு தட்டி ஓசை எழுப்பும் சல தரங்கம் என்ற கருவியையும் (அதுவும் தமிழ் தான்) இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்,

சுர் எனும் ஒலிக்குறிப்பு இத்தோடு இருப்பதில்லை. இன்னும் நீட்சி பெற்று, சகரம் தவிர்த்த வினைச்சொல்லாய் உர்தல், உருமுதல், உரைத்தல் என்ற விதப்பான வினைச்சொற்களை எழுப்பும்.

இவ்வளவு சொற்களை நீட்டிச் சொன்னதற்குக் காரணம், 'சுரம், சுருதி என்பவை முற்றிலும் தமிழே' என்று நிறுவத் தான். ஒரு சிலர் ஸ்வரம், ஸ்ருதி என்று வடமொழிப் பலுக்கில் சொல்வதாலேயே அவை வடசொற்கள் ஆகிவிடா. [பல தமிழ்ச் சொற்களில் இப்படி வகரத்தையும் ரகரத்தையும் நடுவில் நுழைத்து, வேறு தோற்றம் காட்டி, நம்மை மழுங்கடித்து, வேண்டுமெனில் எழுதாக் கிளவியையும் கொண்டுவந்து மருட்டி, தமிழை இல்லை என்றாக்குவது நடந்து கொண்டே தான் உள்ளது. அதே பொழுது, பாகதத்தில் வகர, ரகர உள்நுழைவு பெரும்பாலும் ஏற்படாது. பாகதம் சங்கதத்திற்கு முந்தியது என்ற அடிப்படையையும் மூடி மறைத்து, 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற கொள்கையில் சங்கதத்தைத் தூக்கிவைப்பவர் எங்கிருந்தாலும் தம் வேலையைச் செய்து கொண்டிருப்பர். :-)]

சுரம் எனும் ஒலி முன்சொன்னது போல், தெறிப்பு விசை, நாரின் நீளம், நாரின் தந்தத் திகை ஆகியவற்றைப் பொறுத்து, ஒவ்வொரு தெறிப்பிற்கும், தன் அளவில் மாறு கொள்ளும். இருந்தாலும் அவற்றை 12 சுரங்களாயும், 7 சுரங்களாயும் பட்டறிவில் உணர்ந்து அடையாளம் காட்டுவது தமிழிசையின் மரபு. 

செவ்வியல் இசையில் சுருதி என்பதைச் சுரங்களைக் காட்டிலும் நுண்ணிய அளவீடாகக் குறிப்பார். சுருதி கூடுதலா, குறைச்சலா எனும் போது அதிர்ச்சியின் பருவெண் (frequency) கூடுதலா, குறைச்சலா என்றே பார்க்கிறோம். (பருவெண்ணைச் சிலர் அதிர்வெண் என்பார்; அது சரியல்ல. அதிர்ச்சி குறிக்காத பருவெண்களும் பல்லாயிரக் கணக்கில் அறிவியலில் உண்டு.)

இந்தியச் செவ்வியல் இசையில் எழு சுரங்கள் என்றவுடன் பலருக்கும் ச,ரி,க,ம,ப,த,நி என்ற குறியீடுகளே நினைவுக்கு வரும். (இதற்கு இணையான குறியீடுகளை ஆங்கிலத்தில் C,D,E,F,G,A,B என்றும், மேலைச் செவ்வியல் இசையில் Do, Re, Me, Fa, So, La, Ti என்றும் சொல்வார்.) 

இன்னும் ஆழமாய்க் கேட்டால், அக் குறியீடுகளுக்கு ஆன சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களை எடுத்துச் சொல்வார் (இப் பெயர்களை ஆழப் பார்த்தால் அவை முழுதும் சங்கதம் அல்ல. சில தமிழாயும், சில இருபிறப்பியாயும் தோற்றமளிக்கின்றன. இருந்தாலும் பழக்கங் கருதி அவற்றைச் சங்கதப் பெயர்கள் என்றே சொல்கிறேன். இச்சுரங்களின் பெயர்களுக்கு இணையாய் மேலையிசையில் Tonic, Supertonic, Mediant. Subdominant, Dominant, Submediant, Leading notes என்றும் சொல்வார். அவை தமிழ்ப் பெயர்களோடு பெரிதும் பொருந்தியுள்ளன.) 

அதோடு, 

சட்ஜம் என்பதற்கு 'மேலும் 6 சுரம் பிறக்க ஏதுவானது' என்ற பொருளையும்,
ரிஷபம் என்பதற்கு காளைமாட்டின் ஒலி என்றும்,
காந்தரம் என்பதற்கு இன்பசுகம் தரும் காந்தர்வ ஒலி என்றும்,
மத்திமம் என்பதற்கு நடுவில் உள்ளது என்றும்,
பஞ்சமம் என்பதற்கு ஐந்தாவது என்றும்,
தைவதம் என்பதற்கு தெய்வத் தொடர்புடையது என்றும்,
நிஷாதம் என்பதற்கு '6 சுரங்கள் படிப்படி உயர்ந்து தன்னிற் சேரப்பெற்றன' என்றும்,

விளக்கம் சொல்லிப் பொருந்தப் புகல்வார். மோனியர் வில்லிம்சு அகர முதலியோ, இன்னும் மேலே போய், சட்ஜத்தை ஷட்ஜம் என்றே குறிக்கும். எந்தவொரு செவ்வியல் இசைக்காரரும் ஷ என்று சுரம்பாடி நான் கேட்டது இல்லை. ஆனாலும் அப்படித்தான் மோனியர் வில்லியம்சு குறிக்கிறது. தவிர ஷட்ஜம் என்பது 'நாக்கு, பல், அண்ணம், மூக்கு, தொண்டை, நெஞ்சு என்ற ஆறு உறுப்புக்கள் சேர்ந்தொலிக்கும் ஓசை' என்றும் அது குறிக்கிறது. "இப்படி ஆறு உறுப்புக்கள் சேராமலா மற்ற சுரங்களை ஒலிக்கிறோம்?" என்ற கேள்வியும் அதைப் படிக்கும் நமக்குச் சட்டென எழுகிறது.

ஷட்ஜத்தின் ஒலி மயில் அகவலையும், ரிஷப ஒலி காளைக் கத்தலையும், காந்தார ஒலி ஆட்டுக் கனைப்பையும், மத்யம ஒலி பெருங் கோட்டான், கொக்கு, நாரை போன்றவற்றின் ஒலிகளையும், பஞ்சம ஒலி குயிற் கூவுலையும், தைவத ஒலி குதிரைக் கனைப்பையும், நிஷாத ஒலி யானைப் பிளிறலையும் உணர்த்துவதாக மோனியர் வில்லிம்சு சொல்லும். 

வெவ்வேறு ஆசிரியர் இதுபோல் வெவ்வேறு உயிரின ஒலிகளை இச் சுரவொலிகளுக்கு ஈடாகச் சொல்வதுண்டு. அவற்றையெலாம் படிக்கும்போது தெளிவு கிடைப்பதற்கு மாறாய்க் குழப்பமே மிஞ்சும். மோனியர் வில்லியம்சு சொல்வது போலச் சுரக்குறியீடுகள் தம் முதலெழுத்தைக் குறிப்பதாயானால், ஷ, ரி, ga, ம, ப, தை, நி என்றல்லவோ இருந்திருக்க வேண்டும்? மாறாக, ச, ரி, க, ம, ப, த, நி என்றல்லோ நடைமுறையில் சொல்லப்படுகின்றன? (தைவதத்தை தய்வதம் என்றெழுதித் தகரக் குறியீடு எழுந்ததாகச் சொல்வதுமுண்டு. அதைக் கீழே பார்ப்போம்.) சுரங்களின் நடைமுறைக்கும் மோனியர் வில்லிம்சு விளக்கத்திற்கும் இடையே நெருடலும், தான்தோன்றித்தனமும் புலப்படும்.

இனி '6 சுரங்கள் பிறக்க ஏதுவானது சட்ஜம்' எனும் விளக்கத்தையும் அலசிப் பார்ப்போம். இராமகாதை நாயகனுக்கு, தசரதன் மகன் என்ற கருத்தில், தாசரதி என்றொரு பெயருண்டு. இதே போல் மா பாரதத்தில் பீஷ்மருக்கு கங்கை மகன் என்ற பொருளில் காங்கேயன் என்பார். இப்படிப் பெற்றோர், தாத்தன்/பாட்டி வழியிற் பிள்ளைகளுக்குப் பெயரிடுவது உலக வழக்கம் தான். 

இவ்வழக்கத்திற்கு மாறாய் 'நாலு மக்களைப் பெற ஏதுவானவன்' என்று தசரதனுக்குச்’ சதுரதி” என்று பெயரிடுவாரோ? அதே போல, பீஷ்மனைப் பெற்றவள் என்ற பொருளில் பீஷ்மை என்று கங்கைக்கு பெயரிடுவாரோ? அப்புறம் எப்படி '6 சுரங்கள் பிறக்க ஏதுவானது சட்ஜம்' என்கிறார்? மொத்தத்தில் சரியான பெயர்க் காரணம் அறியாது, தான்தோன்றி விளக்கமாய் இது இருக்கிறதே?

வேடிக்கை என்னவென்றால், இதுபோன்ற தான்தோன்றி விளக்கங்கள், காலங் காலமாய்ச் சொல்லப்பட்டு, அவையே நிலைத்து, மற்ற உருப்படியான விளக்கங்கள் மறைந்து போவதும் உலகிலுண்டு. காட்டாக, மரைக்காடு என்று ஊரின் பெயரை, சோழர் கழிக்கானப் (backwaters) பகுதியில் (அலையாத்திக் காடுகள் இருக்கும் பகுதி) யாரோ ஒருவர் தவறான எழுத்துக் கோவையில் மறைக்காடு என்று எழுதப்போக, அதை அப்படியே வேதாரண்யம் என மொழி பெயர்த்து, அப்பெயரும் நிலைபேறு கொண்டு, சமயக் குரவர் பாட்டுகளிலும் கூட ஆவணமாகி இருக்கிறது. "வேதங்கள் வந்து பூசித்த காரணத்தால் வேதாரண்யேஸ்வரர்" என்றெலாம் கதை கட்டுவதும் நாம் அறியாததல்ல. (இல்லை, மறைக்காடு என்பது வேறு பொருளில் எழுந்தது என்பாரும் உண்டு, நானே இந்த வேறு பொருள் காரன் தான்.)

மேற்கூறிய சுரங்களின் சங்கதப் பெயர்கள், நமக்கு இதுவரை கிடைத்த சான்றுகளின் படி, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திர பல்லவனின் குடுமியான்மலைக் கல்வெட்டில் தான் முதன்முதலில் ஆவணப் பட்டன. கல்வெட்டுத் தவிர்த்து இதே கருத்தை, நமக்குக் கிடைத்த நூல்களில், 7- ஆம் நூற்றாண்டு நிகண்டான சேந்தன் திவாகரம் (இதை 8 ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவாரும் உண்டு),

சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை
ஏழும் அவற்றின் எழுத்தே யாகும்

எனப் பதிவுசெய்யும். வடமொழி நூலான 'நாரத பரிவ்ராஜக உபநிடதம்' என்ற நூலில் (இது எந்த நூற்றாண்டுப் பொத்தகமென எனக்குத் தெரியவில்லை) முதன் முதலாக ச,ரி, க, ம, ப, த, நி என்ற சுரக்குறியீடுகள் குறிக்கப் பட்டதாக, 'சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள்' என்ற பொத்தகத்தில் சொல்லப் பட்டுள்ளது. (டாக்டர் சேலம் எஸ் செயலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 2000 பக்கம் 288).

மேலும், 11 ஆம் நூற்றாண்டில் சிலம்பிற்கு எழுந்த அடியார்க்கு நல்லார் உரையில்,

சரிகம பதநிஎன்(று) ஏழெழுத்தால் தானம்
வரிபார்த்த கண்ணினாய் வைத்து - தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை

என்ற வெண்பா (இது பஞ்ச மரபின் வங்கிய மரபு, குழலியல் வந்த முதல் வெண்பா) எடுத்துக்காட்டப் பட்டிருக்கும். இச்சொல்லாட்சியைக் குடுமியான் மலைக் கல்வெட்டோடு பொருத்திப்பார்த்தால், பஞ்சமரபு என்ற நூல் பெரும்பாலும் பல்லவர் காலத்திலிருந்த ஒரு பாண்டிய மன்னனை முன்னிறுத்தி எழுந்திருக்க வாய்ப்புண்டு என அறிகிறோம். (இக்காலக் குறிப்பிலும் சில இசையறிஞர் மாறுபடுவார்.)

இதற்கு மாறாய், சிலம்பின் மதுரைக் காண்டம் ஆய்ச்சியர் குரவையில் சங்கதப் பெயர்களை முன்னிறுத்தாது செந்தமிழ்ப் பெயர்களே இருக்கும். காட்டாக, ஆய்ச்சியர் குரவையில் ஏழு கன்னியரைக் குரவையில் நிறுத்தி அவருக்கு ஏழிசைப் பெயர்கள் இட்டுச் சொல்லும் இடத்தில், எடுத்துக் காட்டு என்னும் தலைப்பின் கீழ்,

குடமுதல் இடமுறையாக் குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே

என்ற வரிகளில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஏழு சுரங்களின் தமிழ்ப்பெயர் தரப்படும். இதே பெயரைப் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டும் (இதை 9 ஆம் நூற்றாண்டு என்பாரும் உண்டு),

குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை
ஏழும் யாழின் இசைகெழு நரம்பே

என்று வரிசைப் படுத்தும். இதே சுரங்களுக்கு சரிகமபதநி என்று சொல்லாமல்,

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ வெனும்
இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய

என்று திவாகர நூற்பா பழைய குறியீடுகளைச் சுட்டிக்காட்டும். ஆகச் சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் பெயர்களும், அவற்றிற்கான குறியீடுகளும் பல்லவர் காலத்தில் முற்றிலும் மாறிப் போய்விட்டன என்றே கொள்ள வேண்டியுள்ளது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, March 06, 2008

சுழற்சி மீப்பேறு

அண்மையில் cyclical repair என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தமிழுலகம் மடற்குழுவில் திரு. Jai Simman R. Rangasamy என்பவர் கேட்டிருந்தார். அதற்கு அளித்த மறுமொழி:

பொதுவாக repair என்பதைத் தமிழில் நேரடியாகச் சொல்லாமல், சுற்றிவளைத்துப் பழுது பார்த்தல் என்றே சொல்லுகிறார்கள். பழுது பார்த்தல் என்பது to rectify faults என்பதற்கே சரியாக வரும். பெரும்பாலான இடங்களில், repair என்பது to rectify faults என்ற பொருள் தான் கொள்ளும் என்றாலும், நாம் சுற்றி வளைத்துச் சொல்லுவதை உணர முடியும். இன்னொரு வகையில், to maintain என்பதைப் பேணுதல் என்றே சொல்லுகிறோம். (பராமரிப்பு என்ற இருபிறப்பிச் சொல்லையும் maintenance க்கு இணையாகச் சிலர் சொல்லுவார்கள். அதுபற்றிக் கீழே பார்ப்போம்.) ஏனென்றால், பழுது வராமலேயே, ஒரு கருவி அல்லது பொருளைப் பேணமுடியும். அப்படிச் செய்வதுதான், நுட்பியல் வரிதியில், நல்ல பேணுகை (maintenance) என்று சொல்லுவார்கள்.

அப்படியானால், repair என்பதற்கு ஈடாகத் தமிழில் நேரடியாக எப்படிச் சொல்லுவது? அதற்கு முன் repair உடன் தொடர்புடைய pare, parent, prepare போன்ற சொற்களின் பிறப்பையும் பார்த்துக் கொள்ளுவோம்.

முதலில் வருவது:

pare:
"to trim by cutting close," c.1320, from O.Fr. parer "arrange, prepare, trim," from L. parare "make ready," related to parere "produce, bring forth, give birth to," from PIE base *per- "to bring forward, bring forth" (cf. Lith. pariu "to brood," Gk. poris "calf, bull," O.H.G. farro, Ger. Farre "bullock," O.E. fearr "bull," Skt. prthukah "child, calf, young of an animal," Czech spratek "brat, urchin, premature calf"). Generalized meaning "to reduce something little by little" is from 1530.

மேலே குறிப்பிட்டிருப்பதில் PIE base *per- "to bring forward, bring forth" என்பதுதான் முகன்மையானது. தமிழில் பெறுதல்/பெறல் என்பது தன் வினையில் to obtain என்ற பொருள் கொள்ளும். அதே சொல் பிற வினையில் பெற்றுதல்/பெற்றல் என உருவங் கொண்டு to cause to obtain = to bring forward, bring forth என்ற பொருளை உணர்த்திக் காட்டும். பெற்றலின் பெயர்ச்சொல்லாய் எழும் பெற்றோன்/பெற்றோர் என்ற சொற்களை நாம் அனைவரும் அறிவோம். மேலைமொழிகளிலும் *per என்னும் PIE வேரே பெற்றோருக்கு இணையான சொல்லை ஏற்படுத்தும்.

parent:
1185, from O.Fr. parent (11c.), from L. parentem (nom. parens) "father or mother, ancestor," noun use of prp. of parere "bring forth, give birth to, produce," from PIE base *per- "to bring forth" (see pare). Began to replace native elder after c.1500. The verb is attested from 1663. The verbal noun parenting is first recorded 1959 (earlier term had been parentcraft, 1930).

தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் எப்பொழுதோ ஒரு காலத்தில் உறவு இருந்திருக்க வேண்டும் என்று நான் சொல்லுவதைப் பலரும் அவ நம்பிக்கையோடே பார்க்கின்றனர். ஆனாலும் என்கடன் பணி செய்து கிடப்பதே. ஆயிரத்திற்கும் மேல் பல இணைச் சொற்களைக் காட்டி வருகிறேன்; இன்னும் காட்டுவேன். (மேலே காட்டிய fault = பழுது என்பது கூட இன்னொரு இணை தான். இது போல வேரில் பழுத்துத் தொங்கும் பலாச்சுளைகள் பல; பலாவைப் பறிக்கத்தான் ஆளில்லை. அந்த அளவிற்கு வடமொழித் தாக்கம் காட்டும் மாக்சு முல்லரின் கருதுகோள் பலரையும் அலைக்கழிக்கிறது. வடமொழியா, இந்தையிரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது; தமிழிய மொழிகளா? ஊகூம்...... எவன் சொன்னான்?) நான் அறிந்தவரை, உறுதியாக *per>pare>parent என்பதற்கு இணையாகப் பெறு>பெற்று>பெற்றோர் என்ற தமிழ்ச் சொற்பிறப்பைச் சொல்ல முடியும்.

இந்த வரிசையில் அடுத்த சொல் prepare/preparation என்பதாகும்.

1390, "act of preparing," from L. praeparationem (nom. praeparatio) "a making ready," from praeparatus, pp. of praeparare "prepare," from prae- "before" + parare "make ready" (see pare). Meaning "a substance especially prepared" is from 1646. Verb prepare is attested from 1466, from M.Fr. preparer, from L. praeparare; slang shortening prep is from 1927. Preparatory is first recorded 1413, from L.L. praeparatorius, from L. praeparatus. Applied from 1822 to junior schools in which pupils are "prepared" for a higher school.

prae என்ற முன்னொட்டுக்கு இணை, அப்படியே புற என்ற தமிழ் முன்னொட்டோ டு பொருந்திவரும். நமக்கு முன்னால் இருப்பது புறத்தில் இருப்பதே. வீட்டிற்குப் புறத்தில் இருக்கும் பொருளைப் பேசும் நானூறு புற நானூறு. வீட்டிற்கு அகத்தில் (=உள்ளே) இருக்கும் பொருளைப் பேசும் நானூறு அக நானூறு.

இந்த நிலையில், புறப்பெற்றம் = preparation என்று சொல்லுதற்கு ஏதோ நாணிக் கொண்டு, "என்ன இது இராம.கி வெறுமே ட்ரான்ஸ்லிட்டெரேட் பண்ணி சொல்லைப் பரிந்துரைக்கிறார்?" என்று கேலியும் பேசிக் கொண்டு, தய்யார் செய்தல் என்று உருதுச் சொல்லைப் புழங்க முன்வருவோம். இந்த தேவையற்ற நாணத்தை மட்டும் தூக்கி எறிந்தால், தமிழின் அடிப்படை புலப்படும். (வடமொழி என்ற திரையும் நம்மிடமிருந்து விலகும்.) தமிழில் புழங்க ஒரு நல்ல சொல்லும் கிட்டும். (அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை.)

இனி அடுத்தது repair. இங்கே எழுத்துக் கூட்டு மாறினாலும், உள்ளே re-pare என்பது இனங் காட்டி நிற்கிறது.

"to mend, to put back in order," 1387, from O.Fr. reparer, from L. reparare "restore, put back in order," from re- "again" + parare "make ready, prepare" (see pare). The noun is attested from 1595.

மீள் பெற்றல் என்பது வினைச்சொல்லாகவும், மீள் பேறு>மீட்பேறு>மீப்பேறு என்பது பெயர்ச்சொல்லாகவும் அமையும்.

என் பரிந்துரையை முடிக்குமுன், பெற்றலின் தொடர்புடைய இன்னொரு வினையையும் கூறுகிறேன்.

பாரித்தல் = ஆயுத்தப் படுத்தல், to prepare "பாயியவெழுந்த வேங்கை பாரிக்கும் அளவில்" (சூளாமணி. துற.19)
பாரித்தல் = வளர்த்தல்; to foster. "பண்பின்மை பாரிக்கும் நோய்" (குறள்851)
பாரித்தல் = அமைத்துக் கொடுத்தல், to cause to be obtained, "பரமபதம் பாகவதர் அனைவருக்கும் பாரித்தானால்" (அரிசமய. பத்திசா.98)
பாரித்தல் = உண்டாக்குதல் to make, form, construct, create (வின்சுலோ அகராதி)

பராவரித்தல்>பராமரித்தல்>பராமரிப்பு என்ற இருபிறப்பிச் சொல் இந்தப் பாரித்தலின் வழியாகப் பிறந்தது தான். பராமரிப்பு என்பதன் இருபிறப்பியைத் தவிர்த்து, பாரிப்பு என்றே நல்ல தமிழில் சொல்லலாம். இந்தச் சொற்களின் அடிப்படையில் "மீண்டும் ஆயுத்தப் படுத்தலை, மீண்டும் அமைத்துக் கொடுத்தலை, மீண்டும் உண்டாக்குதலை, மீண்டும் வளர்த்தலை", மீள் பாரித்தல் என்று சொன்னாலும் தவறே இல்லை.

எனவே cyclical repair என்பதற்குச் சுழற்சி மீப்பேறு அல்லது சுழற்சி மீள்பாரிப்பு என்று எதை வேண்டுமானாலும் பயனாக்கலாம். தமிங்கிலமே கதியென்று இருப்பதால் சொல்லத் தயங்குபவர்கள், சுழற்சி ரிப்பேர் என்று பேஷிக் கொள்ளலாம். (:-))

அன்புடன்,
இராம.கி.

Sunday, February 24, 2008

தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்

தமிழில் மூன்று விதமான பெயர்களைச் சொல்லுவார்கள். "நான், நீ, அவன், இவள், உது, இவர், அவை" போன்றவை சுட்டுப் பெயர்கள். (அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளில் அமையும்.) "காலம், பந்து, மலர்" போன்றவை, பொருளைக் குறிப்பதால் பொருட் பெயர்கள். இவை தவிர, உடன் உய்யும் மாந்தர்களைக் குறிக்கும் படி, இராமன், இலக்குவன், இனியன், முகிலன் என்றும் பெயரிடுகிறோம்;

மூன்றாவதாய் உள்ளதை, இயற்பெயர் என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். பேச்சு வழக்கில் இந்த இயற்பெயரும் இட்ட பெயர், கூப்பீட்டுப் பெயர் என்று இரண்டாக விரியும். "தமிழ்ச்செல்வன்" என்று பெயரிட்டு, வேறொரு பெயரால் கூப்பிடுவதும் நாட்டில் நடக்கிறது. தவிர ஒரு இயற்பெயரைச் சுருக்கியும் சிலர் அழைப்பதுண்டு, நாராயணன் என்பது நாணா என்று அழைக்கப் படுவதைப் போல. பொதுவாய், தமிழ் மரபில், தன் தந்தையின் பெயரை தன் மகனுக்கும், தாயின் பெயரைத் தன் மகளுக்கும் இடுவதே பழக்கம். இப்படிப் பெயரிடுவதால் தான் "பெயரன்/பெயர்த்தி" என்ற வழக்குகள் நம்மிடையே எழுந்தன. (தாய்வழிப் பாட்டன்/பாட்டியின் பெயர்களை இடுவதும் வழக்கம் தான்.)

பெயர்ச் சொல்லில் உள்ளுறையும் திணை மற்றும் பால் பார்த்தே தமிழ் வாக்கியங்களை முடிப்பதும் அமைகிறது. ஒரு வாக்கியத்தில் பல்வேறு வகைப் பட்ட பெயர்கள் ஒரு கொத்தாய்க் கலந்து வந்தால் அவற்றை விரவி வந்தவை என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். விரவுதல் = to get mixed up. விரவுப் பெயர்கள் = வகை கலந்து கிடக்கும் பெயர்கள். "வடுகர், அருவாளர், கருநாடர், சுடுகாடு, பேய், எருமை ஆகிய இவை ஆறும்" என்று சொல்லும் போது திணை விரவிக் கிடக்கும் பெயர்ச்சொற்களைச் சொல்லுகிறோம். அது போல பால் விரவிய பெயர்ச்சொற்களும் ஒரு கொத்தில் அமையலாம். இனி, இன்னொரு விதமான விரவலைப் பார்ப்போமா?

நொபுரு கராசிமா, சூ லிங், விலி பிராண்ட், ழான் கார்ட்டிய, வான் மேர், ங்குரூமா, ஓ சீ மின்

இந்த இயற்பெயர்களை [அவர்களில் ஒரு சிலர் நன்கு பெருவலமானவர்கள் (ப்ரபலமானவர்கள்) என்பதை மறந்துவிட்டுப்] பார்த்தால், முதலில் வருபவர் ஒரு சப்பான்காரர், அடுத்தவர் சீனர், அடுத்தவர் செருமானியர், அதற்கும் அடுத்தவர் பிரஞ்சுக்காரர், அப்புறம் டச்சுக்காரர், அப்புறம் ஆப்பிரிக்கர், முடிவில் வியட்நாமியர் என்று ஓரளவாவது தடுமாறி அடையாளம் காணுவோம், இல்லையா? இனி இன்னொரு வரிசையைப் பார்போம்.

ஸ்ருதி, ஸ்வேதா, ஆதித்யா, ஆதர்ஷ்

இந்த வரிசைப் பெயர்களைப் படித்தால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இவர்கள் இந்தியர்களாய் இருக்கலாம் என்று தோன்றும். ஆனால் அதற்கு மேல் இந்தத் துணைக் கண்டத்தில் எந்தப் பகுதி என்று சொல்லுவது கடினம். ஒருவேளை, "இந்த வரிசையில் கொடுத்திருப்பவை முதற்பெயர்கள்; மாறாக, குடும்பப் பெயர் வரிசையைக் கூறினால், இந்தியாவின் எந்த மாநிலம்?" என்று ஓரளவு சொல்லக் கூடலாம். (இங்கே சாதிப் பெயர்களை நான் சொல்லவில்லை.) காட்டாக,

அகர்கர், தேசாய், பியாந்த் சிங், பிஸ்வால்

என்ற வரிசையில் மாராட்டியர், குசராத்தி, பஞ்சாபியர், வங்காளி அல்லது ஒரியா என்று ஓரளவாவது சொல்ல முடியும் தான். அதே பொழுது, குடும்பப் பெயர் என்பது இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் அவ்வளவாய் வழக்கம் இல்லை. காட்டாகத் தமிழ்நாடு. இங்கு குடும்பப்பெயர் என்பது ஒரு சில பண்ணைக்காரர்களுக்கு இருந்திருக்கிறதே ஒழிய (காட்டு: மழவராயர், வாண்டையார், வில்லவராயர், மூப்பனார்; இந்தப் பெயர்களெல்லாம் விசயாலனுக்கு அப்புறம் வந்த சோழப்பேரரசு காலத்தில் அரச முறைப் பழக்கத்தில் ஏற்பட்ட பெயர்கள்), 99.9 விழுக்காடு மக்களுக்கு இருந்தது கிடையாது. பெரும்பாலான ஊர்களில், ஒரு பெருங்கூட்டத்தில் தங்களை அடையாளம் சொல்ல ஊர்ப்பெயர், தன்பெயர், தந்தைப்பெயர், தேவைப்பட்டால் தாத்தன் பெயர் சேர்த்துச் சொல்லுவார்கள். இப்படிச் சொல்லுவதற்கு விலாசம் என்று பெயர். "குடும்பப் பெயர் என்றால் வீசை என்ன விலை?" என்று கேட்பதே நம்முடைய வழக்காறு. (வெளிநாட்டில் இருக்கும் தமிழர் அங்கு உள்ள ஆவணங்களில், தங்களுக்குக் குடும்பப்பெயரைச் சுட்ட முடியாமற் சரவற் படுவது வேறொரு பெருங்கதை.)

இந்த இடத்தில், கொஞ்சம் இடைவிலகலாக, இரோப்பாவில் குடும்பப்பெயர் கட்டாயமாக்கப் பட்ட கதையைச் சொல்ல வேண்டும். இரோப்பாவில் பல நாடுகளைப் பிடித்து நெப்போலியன் பிரஞ்சுப் பேரசை உருவாக்குவதற்கு முன்னால், குடிமைச் சட்டம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்றவை ஏற்பட்டதே இல்லை. அதுவரை, நம் சோழப் பேரரசு காலம் போலவே, அரசனின் ஆட்சிக்குத் துணையாய் இருந்த பெரும்பண்ணையார்களுக்கு மட்டுமே குடும்பப் பெயர்கள் இருந்தன. நெப்போலியனின் கணக்கெடுப்பு நடந்த போது, செருமனி, பெல்சியம், நெதர்லந்து, டென்மார்க் போன்ற மேற்கு இரோப்பிய நாடுகளின் குடிமக்கள் குடும்பப்பெயர் சூட்டிக் கொள்ளக் கட்டாயப் படுத்தப் பட்டார்கள். புதுவிதமான குடும்பப்பெயர்களும் இந்தக் கணக்கெடுப்பில் அவர்கள் மேல் திணிக்கப் பட்டன. காட்டாக, எனக்குத் தெரிந்த நெதர்லந்துப் பழக்கத்தை உரையாடலாய்ச் சொல்லுகிறேன்.

கணக்கெடுப்பு அதிகாரி: இந்தாப்பா, இங்கே வா, உன் பெயரென்ன?

பீட்டுங்க

எங்கேர்ந்து வர்றே?

மலைப்பக்கமுங்க

இன்னையிலேர்ந்து உன்பேரு. மலையில் வந்த பீட்; உம் பொஞ்சாதி, புள்ளைகள் எல்லாருக்கும் "மலையில் வந்த"ங்குற பின்னொட்டைச் சேர்த்துச் சேர்த்து எழுதோணும், சரியா?

சரிங்க, எசமான்

van den Berg என்ற குடும்பப்பெயர் அப்படித்தான் வந்தது. இதுபோல நகரத்தில் இருந்து வந்தவர் van den Burg என்று ஆனார். ஏரிக்கு அருகில் இருந்து வந்தவர் van Meer ஆனார், ஆற்றின் தடுப்பணைக்கு அருகில் இருந்து வந்தவர் van Dam என்று ஆனார். இப்படி இட வழியாக மட்டுமல்லாமல், தொழில் வழியாகவும் குடும்பப்பெயர்களை கணக்கெடுப்பாளர்கள் இட்டார்கள்; ஒரு துன்னகாரர் - தையற்காரர்- Schneider என்று ஆனார்; நான் சொல்லிக் கொண்டே போகலாம். இரோப்பில் நெப்போலியனின் தாக்கம் மிகப் பெரிது. இந்தக் கணக்கெடுப்பால், நம்மூர் குப்பன்/சுப்பனைப் போன்று பீட், மிகேல் என்று முதற்பெயர் மட்டுமே கொண்ட சாத்தர் (=commoner) கூட்டத்திற்கு வலிந்து குடும்பப் பெயர்கள் திணிக்கப் பட்டன. ஒரு பெயர்ப் புரட்சியே அங்கு நடந்தது.

[சாத்தர் என்ற சொல்லையும், சாதாரணன் என்ற சொல்லின் தமிழ்வேரையும் இங்கு அறிந்து கொள்ளுவது நல்லது. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் ஆசீவக வாதச் சருக்கம் 683வது பாடலில், நீலகேசி ஓர் ஆசீவகத் துறவியிடம்

"ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லலன் ஆய்விடின் இச்
சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய
நாத்தனை ஆட்டியோர்; நன்மை கண்டாலும் நினக்குரைத்தும்,
ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதும் இலம் பிறவோ?"

என்று சொல்லுவாள்: "தானறிந்ததைப் பிறருக்குச் சொல்லாமல் உன் ஆத்தன்(=தலைவன்) மோனம் கொள்வான் எனில், இதோ இங்கிருக்கும் சாத்தனும் (=சாதாரணனும்) யானும் மிகுந்த புகழுடையவர்கள்; ஏனென்றால், உயிரினங்களுக்கு நன்மை தருபவற்றைக் கூறியும், எம்மால் இயன்ற அளவு உணவு முதலியவற்றை ஈந்தும், இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கம் தருமாறு ஆற்றுகின்றோம் அல்லவா?"

இந்தப் பாடல் மட்டும் கிடைத்திருக்கா விட்டால் சாத்தன் = commoner என்று அறுதியாகச் சொல்ல முடியாது. சார்ந்தது சாத்து (=கூட்டம்); கூட்டத்தைச் சார்ந்தவன் சாத்தன் (நேற்று ஒரு சந்திப்பில், பேரா. இல. மறைமலையும் நான் கொண்ட இந்தப் பொருளைச் சரியென்றே உறுதியளித்தார்.) பண்டன் என்பது பண்டாரன் ஆவது போலச் சாத்தன் என்பது சாத்தாரன் ஆவது தமிழில் உள்ள பழக்கம் தான். பின் சாத்தாரன் வெளிமொழியார் வழக்கில், இன்னும் நீண்டு சாத்தாரனன்>சாதாரணன் ஆகும். எப்படி அய்யன் (=பெரியவன்) பொருள் கொண்ட அந்தன் எனும் சொல் அந்தனன் என்று நீண்டு பின் அந்தணன் என்று திரிந்ததோ, அது போல, இரண்டாவது அன் சேருவது இயல்மொழி அல்லாதவரின் கொச்சைப் பேச்சு ஆகும். இதே வகையில் சாத்தாரன்>சாத்தாரனன்>சாதாரனன்>சாதாரணன் என்று ஆவது தமிழ்-வடமொழி ஊடாட்டில் நடக்கக் கூடியதே. (முடிவில் சாதாரணனின் தமிழ்வேரை மறந்து போய் அதை வடமொழியென்று வழக்கம் போல் சாதிப்போர் மிகப் பலர்.)]

இயற்பெயர் பற்றியல்லவா பேசிக் கொண்டிருந்தோம்?

இரோப்பியர் என்பவர் இன்றைக்கு ஒரே விதமான நாணயம் வைத்திருக்கிறார்கள், மேற்கு இரோப்பாவில் வசிக்கும் எல்லோரும் எங்கும் நுழைமதி (visa) தேவைப்படாமல் மேற்கு இரோப்பா முழுதும் போக முடிகிறது. மேற்கு இரோப்பாவில் நுழையும் நம்மைப் போன்றோர் "செங்கன்" என்ற ஒரே நுழைமதி எடுத்தால் மேற்கு இரோப்பா முழுக்கப் போக முடிகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் சுங்கமும் (customs duty)உல்கும் (excise duty) கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கின்றன. இந்த நாட்டுப் பொருளாதாரங்கள் தங்களுக்குள் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுப் பாராளுமன்றமும் இரோப்பியப் பாராளுமன்றத்தைப் பொருட்படுத்தாமல், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. இன்னும் மேற்கொண்டு உறவுகள் அவர்களிடையே இறுகிக் கொண்டு வருகின்றன. "இரோப்பிய ஒன்றிய நாடுகள் (United States of Europe)" என்ற மீநிலை ஒன்றியம் (supra union) அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதே பொழுது, இந்த நாடுகளுக்கான தனிநிலைகளும் அழிந்து விடவில்லை. இன்னமும் செருமன்காரர், பிரெஞ்சுக்கார, டச்சுக் காரர்களின் பெயர்கள் ஏற்கனவே இருந்த படி, அவரவர் மரபில் தான் இருக்கின்றன. இரோப் என்று பொது அடையாளம் பெறுவதற்காகத் அவர்கள் தங்களின் தனி அடையாளத்தைத் துறக்கவில்லை.

இப்பொழுது இந்தியாவுக்கு வாருங்கள். விடுதலை பெற்ற போது இந்த நாடு இந்திய ஒன்றியம் என்ற பெயரைத்தான் எடுத்துக் கொண்டது. பின்னால் இந்திரா காந்தி காலத்தில் தான் இந்தியக் குடியரசு என்ற ஒற்றைமுகப் பெயரில் தன்னை வலிந்து மாற்றிக் கொண்டது. இருந்தாலும், ஒரு இயல்பான போக்கில், இந்த நாடு ஒரு பல்தேசியக் குடியரசாகத் தான் இன்றைக்கும் இருக்கிறது. ஒரு பெருங்கூட்டம் பல்தேசியப் பாங்கை முற்றிலும் ஒழித்து ஒற்றைப் பரிமானத்தைத் தந்து, இந்து-இந்தி-இந்துத்துவா என்று கொண்டுவர முயன்றாலும், இந்தியச் சாத்தர்கள் தங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து பொதுச் சோதியில் கரைந்து கொள்ள இன்னும் அணியமாகவில்லை. அப்படி இருக்கும் போது, தமிழரின் முகவரியான தமிழ் அடையாளத்தை ஏன் நாம் துறக்க முற்படுகிறோம்?

ஸ்ருதி, ஸ்வேதா, ஆதித்யா, ஆதர்ஷ்

என்ற பெயர்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு ஏன் சூட்டப்படுகின்றன என்பது சற்றும் விளங்கவில்லை. நல்ல தமிழ்ப் பெயர்களை தம் பிள்ளைகளுக்கு இடாமல், யாரோ ஒரு சோதியன் சொல்லும் தூண்டலுக்கு ஆட்பட்டு, "இந்த எழுத்தில் தொடங்கும் பெயர், இந்த முடிப்பில் இருக்கும் பெயர்" என்று ஈர்ப்பில், தமிழர்கள் வட இந்திய, வடமொழிப் பெயர்களையே பெரிதும் சூட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்களே, அது ஏன்? இது நம் அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் போக்கு அல்லவா? இதற்கு நாம் இணங்கலாமோ? எங்கோ ஒரு கடலில் கரையும் பெருங்காயம் போல் நாம் ஆவதற்கே இது வழிவகுக்கும் அல்லவா? நாலு இந்தியர் கூடும் இடத்தில் தமிழன் என்னும் அடையாளம் தென்பட வேண்டாம் என்னுமாப் போல, வடபுலப் பெயர்களைச் சூட்டுவது ஒரு பெருமிதமான பழக்கம் ஆகுமோ?தமிழர் என்று நம்மைச் சொல்லிக் கொள்ளுவதில் நாம் ஏன் வெட்கம் அடைய வேண்டும்?

இந்தத் தமிழ்ப்பெயர் சூட்டலில், சிலர் சமய நெறிகளால் தயங்கலாம். என்னைக் கேட்டால், இங்கே சமயநெறி குறுக்கிடத் தேவையில்லை. சமயமும், தமிழ்மையும் ஒன்றிற்கொன்று எதிரானவை அல்ல. சிவ, விண்ணவ நெறிகளில் இருப்பவருக்கு எண்ணற்ற தமிழ்ப்பெயர்கள் அவர் தொழும் தெய்வத்தைக் குறிப்பதாகவும், அன்றி பொதுத் தமிழ்ப்பெயர்களுமாய் இருக்கின்றன. கிறித்துவ, இசுலாமிய மற்றும் பிற சமய நெறியாளர்கள் ஒரு சமயப் பெயரையும், ஒரு தமிழ்ப் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாமே? தவறென்ன? காட்டாக, Joseph Raj என்பவர், வளன் அரசு என்று வைத்துக் கொள்ளாவிட்டாலும், குறைந்தது, ஜோசப் அரசு என்றாவது பெயரிட்டுக் கொள்ளலாமே? இதே போல இசுலாம் மற்றும் பிற சமய நெறியாளரும் விதப்பான பெயர்களை வைத்துக் கொள்ளலாமே? இதை அவர்கள் சமய நெறி தடுக்குமா, என்ன?

என் வேண்டுகோள்:

தமிழரே!, உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Friday, February 22, 2008

சிலம்பில் வரலாறு - 2

2. சிலம்பின் பதிகம்

பதிகம் என்ற சொல்லிற்குத் தமிழிற் பல பொருண்மைகள் உண்டு என்றாலும், பலரும் இரு பொருண்மைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

ஒன்று: தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்றவற்றில் பத்துப் பத்துப் பாடற்தொகுப்புகளாய் அமையும் தொகுதியைக் குறிப்பது. (பல்து>பத்து>பத்திகம்>பதிகம் என்று இங்கு புரிந்து கொள்ள வேண்டும். சிலபோது பத்திற்கும் மேலே போய், இந்தப் பதிகங்களில் இன்னார் பாடினார் என்று சொல்லுமாப் போல ஒன்றிரண்டு பாடல்கள் நீட்சி காட்டுவதுண்டு.)

இன்னொன்று: சில பழந்தமிழ் இலக்கியங்களில், முன்னுரை போல் வந்து, நூலிற் சொல்லாத சில செய்திகளைச் சொல்லுவதாகும். (பற்றுதல்>பற்றிகம்>பத்திகம்>பதிகம் என்று இந்தச் சொல்வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.)

இரண்டாம் வகைப் பதிகமானது, எல்லா இலக்கியங்களுக்கும் அமையாமல், சிலப்பதிகாரத்தைப் போல் ஒரு சிலவற்றிற்கு மட்டுமே அமைந்துள்ளது. இத்தகைய பதிகங்கள் பொதுவாக நூற் படைப்பாளராமல் எழுதப் படாமல், இன்னொருவரால் படைப்புக் காலத்திலேயோ, அல்லது அதற்குப் பின் வேறொரு எடுவிப்பிலேயோ (edition), எழுதப்பட்டுச் சேர்க்கப் பட்டிருக்கலாம். சிலம்பின் பதிகமும் "இது போலத் தானோ?" என்று தோற்றுகிறது; ஆழ்ந்த வாசிப்பில் பார்த்தால், சிலம்புப் பதிகம் இளங்கோவடிகளாலோ, அன்றி அவருடன் இருந்த சாத்தனாராலோ, எழுதப்பட்டதாகக் கொள்ள முடியவில்லை. இத்தகைய முடிவிற்கு நாம் வருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. இளங்கோவடிகள், சாத்தனார் ஆகிய இருவருமே தன்மை நிலையில் அல்லாது, படர்க்கையிலேயே பதிகத்தினுள் குறிக்கப் படுகின்றனர். தவிர, பதிகத்தின் தொடக்க வாசகம் நம்மைப் பெரிதும் வியக்க வைக்கிறது. உலக வாழ்வைத் தவிர்த்துத் துறவியான ஒருவர், "குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்" என்று அரசப் பீடும், பெருமையும், பெயரும் சேர்த்து தன்னைத் தானே அழைத்துக் கொள்வாரா என்ற அய்யமும் எழுகிறது.

2. பதிகத்தில், "கண்ணகி கட்புலம் காண விட்புலம் போன" செய்தி, இளங்கோவடிகளிடத்து குன்றக் குரவர் நேரடியாய்ச் சொல்வதாகவும், "இறும்பூது போலும் அஃது அறிந்து அருள் நீ" எனக் குன்றக் குரவர் இளங்கோவடிகளிடம் வேண்டுவதாகவும் சொல்லப் படுகிறது. இதற்கு மாறாய், வஞ்சிக் காண்டத்திலோ,

"கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தபித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்"

என்ற செய்தி சேர மன்னனிடம் தெரிவிக்கப் படுகிறது. (அந்த இடத்தில் இளங்கோவும் இருந்தார் என்பதும் உண்மைதான்.) ஒரே செய்தி நூலின் இரண்டு இடங்களில், இரண்டு விதங்களில் வெளிப்படுவது நமக்கு வியப்பளிக்கிறது. அதைச் சற்று ஓர்ந்து பார்ப்போம்.

ஓர் அரசனின் திருவோலக்கத்தில் (தர்பாரில்) அரசனைத் தவிர வேறொருவரை முன்னிலைப் படுத்திப் பேசுவது பழங்கால நிலவுடைமைக் குமுகாயத்தில் வழக்கமில்லை. அரசனிடம் குன்றக் குரவர் செய்தி தெரிவித்த போது, அடிகள் அருகிருந்து கேட்டிருக்கலாம்; ஆனால் வஞ்சிக் காண்டத்திற்கு மாறாய், "அடிகளிடம் குன்றக் குரவர் சொன்னார்கள்" என்று அடிகளை முன்னிலைப் படுத்திப் பதிகம் சொல்லுவது முரணாய்க் காட்சியளிக்கிறது.

அதே போல, வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் அரசனின் முன்னிலையில் சாத்தனார் உரைக்கும் நிகழ்வுக்கு மாறாய், "யானறிகுவன் அது பட்டது" என்று இளங்கோவடிகளை நோக்கிச் சாத்தனார் உரைப்பதாகப் பதிகம் சொல்லுகிறது.

பதிகம் சொல்லும் செய்தி விவரிப்பில், அரசனும் இல்லை, அவன் பரிவாரங்களுமில்லை. ஏதோ அடிகளை மட்டுமே குன்றக் குரவர் கண்டு அவருக்கு மட்டுமே கண்ணகி வானம் புகுந்த செய்தியைக் கூறுவதாய் அமைகிறது.

குறிப்பிட்ட கட்டத்தில் அரசனில்லாமல் வஞ்சிக் காண்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா? இளங்கோ என்ற துறவியா, வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை நடத்துபவர்? இது ஒரு முரண் அல்லவா? இப்படியான நிகழ்வு முரண்களை, முற்றிலும் விவரம் அறிந்த இளங்கோ அடிகள் தம் பதிகத்தில் எழுதியிருக்க இயலுமோ? (இவை போன்ற சிந்தனைகளால் தான், சிலம்பின் பதிகம் பெரும்பாலும் வேறு யாராலோ எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.)

3. அடுத்து, கண்ணகி மதுரையை எரித்த கதையைச் சொல்லி அதை "வினை விளை காலம்" என்று சாத்தனார் குறிப்புக் காட்ட, "யாது அவர் வினை விளை?" என்று அடிகள் கேட்டதாகவும், அதற்கு மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு முற்பிறப்புச் செய்திகளைச் சொன்னபோது வெள்ளியம்பலத்து நள்ளிருளில் சாத்தனார் தாம் கிடந்த போது கேட்டதாகவும் பதிகத்தின் வழி சொல்லப் படுகிறது. (வினை விளை என்பது ஒரு மெய்யியற் குறிப்பு. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற கருத்து ஒரு சில நெறியினருக்கு ஒத்துவரும்; மற்றவர்க்கு ஒத்து வராது.)

அதே பொழுது, வெள்ளியம்பலத்து நள்ளிருளில் கேட்டதாய்ச் சொல்லும் இந்த விவரிப்பு கட்டுரைக் காதையில் இது போன்று அமையாது, கதை மாந்தர் வழியாகவே நேராக நீட்டி விவரித்துச் சொல்லப் படுகிறது; சாத்தனாரின் விவரிப்பு கட்டுரைக் காதையில் இல்லை.

4. தவிர, கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றிய நேரத்திலும் கட்டுரை சொல்லிய நேரத்திலும் கூடப் பதிகமும், நூலின் உள்ளே வரும் காதைகளும், வேறுபடுகின்றன. (மதுராபதித் தெய்வத்தின் விவரிப்பு இற்றைக்கால அங்கயற் கண்ணியம்மையின் விவரிப்புப் போலவே ஒரு பார்வையில் தோற்றுகிறது. அது நமக்கு வியப்பாகவும் இருக்கிறது. மதுரைக்கும் கயற்கண்ணிக்கும் உள்ள தொடர்பு மிகுந்த நாட்பட்டது போலும்.)

நூலின் உள்ளே, அழற்படு காதையின் முடிவில் தெளிவாகச் சொல்லப் படுவது போல், மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் வந்து தோன்றிக் கட்டுரை உரைக்கும் நேரம், அந்தி விழவு தொடங்கும் நேரம் ("மாலை அயர மனைவிளக்கு உறுத்தும் நேரம்") ஆகும். [கோயில்களில் இன்றைக்கும் அந்திக் கால பூசை தொடங்கும் நேரம் - அதாவது மாலை தொடங்கும் நேரம் 1800 மணியளவு ஆகும்.] கோவலன் இறப்பும், அதைத்தொடர்ந்து பாண்டியன், அவன் பெண்டு ஆகியோர் இறப்பும் முடிந்து, ஊரும், மக்களும் கொந்தளித்து அல்லோகலப்படும் அந்தி நேரத்தில் மதுராபதியின் கட்டுரை கண்ணகிக்குச் சொல்லப் படுகிறது. தவிர அழல் தொடங்கியது மாலை நேரம் தான்; யாமம் அல்ல.

பதிகத்திலோ, மதுராபதித் தெய்வத்தின் கட்டுரை இரவின் நடு யாமத்தில், நள்ளிருளில், சொல்லப்படுகிறது. ஆக, அழற்படு காதைக்கும், பதிகத்திற்கும் இடையே மதுராபதி தோன்றிய காலத்தைக் குறிப்பதில் ஒரு 15 நாழிகை (= 6 மணி நேர) முரண் ஏற்படுகிறது. இப்படி ஒரு காலமுரணை ஒரே ஆசிரியர் செய்வாரா? இருவேறு ஆசிரியராய் இருந்தால் தான், புரிதற் பிழையால் இப்படி ஒரு கால முரண் ஏற்படலாம்.

5. கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்புக் கதையை மதுராபுரித் தெய்வம் விவரித்ததாய்ச் சாத்தனார் சொல்ல, அதைக் கேட்ட அளவிலேயே,

"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"

என்று காப்பியத்தின் குறிக்கோளை சட்டென்று அறிவுத் தெளிவோடு இளங்கோவடிகள் சொல்லி, "நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பதிகம் சொல்லுவது நமக்கு ஓர் நாடகத் தனமான கூற்றாகவே தோற்றுகிறது. "அப்படி ஓர் சிந்தனைத் தெளிவு, கதையை முதன் முதலாய்க் கேட்ட அளவிலேயே ஒரு படைப்பாளனுக்குச் சட்டென்று ஏற்பட்டுவிடுமா? கொஞ்சம் அலசி "அந்தக் கதை என்ன குறிக்கோளைக் குறிக்கிறது, எதை எடுத்துச் சொல்லுகிறது, ஊராருக்கு என்ன உணர்த்த வேண்டும் என்றெல்லாம் ஒருவர் நாட்பட ஓர்ந்து பார்க்க மாட்டாரா?" என்ற கேள்விகளும் நமக்குள் எழுகின்றன.

இத்தனைக்கும், குன்றக் குரவோர் வந்து கண்ணகி வானேறிய செய்தியைச் சொல்லும் போது, "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல்" என்ற குறிக்கோளைப் பின்னால் நிலைநிறுத்தும் கல்கோள் (கால்கோள் என்ற வாசிப்பு சரியில்லை என்றே புறப்பொருள் வெண்பாமாலை வழியாக உணருகிறோம். அது கால் கோளல்ல; கல் கோள்; கல்லைக் கொள்ளும் செயல்; இந்த வாசிப்புக் கோளாறை இன்னொரு முறை பார்க்கலாம்.), நீர்ப்படை, நடுகல், வாழ்த்து ஆகிய நிகழ்வுகளே கதையில் நடந்திருக்கவில்லை. தவிர, பதிகத்தின் படிதான், சேரன் செங்குட்டுவனும் மற்றோரும் அந்தக் காட்சியிலேயே இல்லையே? "உரைசால் பத்தினியை அரசனும் உயர்ந்தோரும் எப்படி ஏத்தப் போகிறார்கள்?" என்று தெரியாத நிலையில், வஞ்சிக் காண்டக் காதைகளின் தலைப்புகள் இங்கே பதிகத்தில் எப்படி விவரிக்கப் படுகின்றன? படிக்கும் நமக்கு வியப்பாக இருக்கிறது.

6. "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக" என்றாற்கு அவர்
........................
.......................
.......................

உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள"

என்ற வரிகளில் "உரைசால் அடிகள் அருள" என்று வந்த பின், "அவர்" என்னும் சொல் யாரைக் குறிக்கிறது? புரியவில்லை. தவிர, அரசன் இருக்கும் அவையில், இது போன்று சொல்ல வேறு யாரால் முடியும்? "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது" என்று அரசன் கூறினால் அதில் ஓர் அமைதி இருக்கிறது; மற்றவர் அதைக் கூற முடியுமோ? இங்கு யார் அதிகாரத்தில் முன்னிலைப் படுத்தப் படுகிறார்கள்? அரசன் தான் இந்தக் கதையை எழுதச் சொன்னதாய் பதிகத்தின் வழி புரிந்து கொண்டால், அப்படி ஒரு கூற்று, வஞ்சிக் காண்டத்துள் எங்கும் வரவில்லையே?

7. .......................................... மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது,
பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்

என்ற பதிகத்தின் முடிப்பு வரிகள் "பதிகத்தை வேறு யாரோ எழுதியிருக்க வேண்டும்" என்று தெளிவாக உணர்த்துகின்றன. இளங்கோ எழுதியிருந்தால், "அடிகள் அருள, சாத்தன் கேட்டனன்" என்று எழுத மாட்டார். "யான் சொல்ல, சாத்தன் கேட்டனன்" என்பதோடு அமைந்திருப்பார். சாத்தன் எழுதியிருந்தால், "அடிகள் சொல்ல, யான் கேட்டேன்" என்று எழுதியிருப்பார். எனவே, உறுதியாகப் பதிகம் என்பது, இளங்கோவாலும், சாத்தனாராலும் எழுதப் படவில்லை. இது யாரோ ஒரு மூன்றாம் மாந்தர் எழுதியது. அதோடு இல்லாமல், வஞ்சிக் காண்டம் வரை கதையை முற்றிலும் படித்த ஒருவர், அதன் விவரங்களைச் சுருக்கி, காதைத் தலைப்புகளையும் தந்து, "கதைக்களன் எப்படித் தோன்றியது?" என்று விளக்க முற்பட்டு, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை முன்பின்னாக எடுத்துக் காட்டி, அவற்றில் தன் சொந்தக் கருத்தையும் பொருத்தி (காட்டாக வினை விளை பற்றிய மெய்யியல்), முரண்பட்டு நிற்பதும் வெள்ளிடைமலையாய்த் தெரிகிறது.

இந்தச் சிலம்புப் பதிகம் என்பது நூல் எழுதப் பட்டு மிகுந்த நாட்கள் கழித்தே எழுந்திருக்க முடியும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதே பொழுது அரும்பத உரைக்கும் முன்னால் எழுந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

சிலம்பில் வரலாறு - 1

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் ஆகும். "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர்கள் வையாபுரியாரில் இருந்து, இந்தக் கால இடது சாரிகள் வரை உண்டு. மதிப்பிற்குரிய பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் சிலம்பின் காலத்தைப் பெரிதும் பின் தள்ளுகிறார்கள். இதற்கு மாறாக, இலங்கைக் கயவாகுவுக்குச் சமகாலம் என்ற கருதுகோளில் கி.பி. 150 க்கு அருகில் செங்குட்டுவனின் காலத்தை வைக்கும் வழக்காறும் நம்மிடையே உண்டு.)

செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள்? அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் என்பவர் யார்? நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?" - இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயல்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.)

நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது. [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]

[இந்தத் தொடர் கொஞ்சம் விட்டு விட்டு வரக் கூடும். தொடர்ச்சியாய் வராமைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆய்வு பற்றிய ஒரு சுருக்கத்தை, 3 மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்குச் சென்றிருந்த போது, தெற்குக் கரோலினா மாநிலத்தின் தலைநகரான சார்லசுடனில் ஒரு நாள் மாலையில் நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்படுகிறேன்.]

1. வடபுலத்து வரலாற்றுக் களன்.

கேள்விகளை அலசுவதற்கு முன்னால், பழங்காலத்து, கிட்டத்தட்ட கி.மு. 200/100 அளவில் வடபுலத்து வரலாற்றுக் களனைப் புரிந்து கொள்ளுவது நல்லது.

சங்க காலம் தொடங்கியது, மோரியருக்கு முன்னால் மகதத்தில் ஆட்சி செய்த நந்தரின் சம காலமாகும். (இனிமேலும் கி.மு.300 ல் இருந்து கி.பி.300 என்று சங்க காலத்தைச் சுருக்க முடியாது. அதை கி.மு. 600/500 க்காவது நீள வைக்கும் சான்றுகள் இப்பொழுது கிடைத்துள்ளன.) சங்கப் பாடல்கள் ஒருசிலவற்றால் (மாமூலனார் பாடல் அகம் 251: 5, மாமூலனார் பாடல் அகம் 265: 4-6), தமிழ் மன்னரோடு நந்தர்கள் நல்ல உறவு கொண்டிருந்தார்கள் என்று அறிகிறோம்.

இந்த உறவு நந்தர்களுக்குப் பிறகு வந்த வம்ப மோரியரோடு தொடராமல், பகை ஏற்பட்டது. அசோகனின் தந்தையாகிய பிந்து சார மோரியன் தமிழர் எல்லை வரைக்கும் படையெடுத்து வந்திருப்பதும், நேரடி இல்லாத முறையில், சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது (மாமூலனர் - அகம் 251: 12, அகம் 281:8; கள்ளில் ஆத்திரையனார் புறம் 175: 6-7, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் அகம் 69:10). அந்தப் படையெடுப்பு எல்லையிலேயே தடுக்கப் பட்டதால், அந்தத் தடுப்பு வலுவாக இருந்ததால், பின்னால் அசோகன், தெற்கே, அதற்கு மேல் வராமல் இருந்திருக்கிறான். இதன் விளைவால், தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் அதிகரின் நாடுகளை எல்லையில் இருந்ததாய் அசோகன் குறித்திருக்கிறான். [மகதப் பேரரசு வென்றெடுத்த முந்நாளைய மக்களாட்சி (=சனபதம்), முடியாட்சி நாடுகள் பற்றியும் ஒருசில நுணவக் (minor) குறிப்புகளும் தமிழிலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.]

மோரியரை வம்பர் என்று குறிப்பிட்டிருப்பதை இங்கு நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். வம்பர் என்பவர் வம்புடையவர் அல்ல; பழைய பொருளின் படி, அவர் புதியவர்; வம்பர் என்று சொன்னதாலேயே, சங்க காலம் என்பது மோரியருக்கு அருகில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும். "இப்பத் தான் புதுசா வந்தவங்க" என்று நாம் எப்போது சொல்லுவோம்? நாம் முன்னவராய் இருந்து, மற்றவர் புதிதாய் வந்தவராய் இருந்தால் தானே? அதோடு, நாமும் புதியவரும் குறிப்பிட்ட சம காலத்தில் இருந்தோம் என்பதால் தானே?

இந்த மோரியர் காலத்துச் சான்றுகளை மறுதலித்து, தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளியவர்களே, ரொமிலா தாப்பர் முதற்கொண்டு, இந்திய, மேலை ஆய்வாளர்களில் மிகுதி. நாவலந் தீவின் தெற்குக் கோடியில் இருக்கும் தமிழர்கள் மோரியருக்கும் முந்து பட்டவர்கள் என்பதை ஏற்பதிலும், சொல்லுவதிலும், ஏனோ பல வரலாற்றாளருக்கும் தொண்டைக்குள் அடைத்துக் கொண்டுவிடுகிறது. [இல்லாவிட்டால் குறைந்தது கி.மு.500 அளவில் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று அண்மையிற் கிடைத்த பின்னும், "அசோகன் பிரம்மி, அதிலிருந்து வந்த தமிழ் பிரம்மி" என்று சல்லியடித்துக் கொண்டிருப்பார்களா, என்ன?]

இது தவிர, ஆசீவகம் பற்றிய தொடர்பும் சங்க காலத் தொடக்கத்தை நந்தருக்கு அருகில் கொண்டு போகும். புத்த நெறி, செயின நெறிக்குச் சம காலத்தில் தோன்றி, பின் அந்த இரு நெறிகளிலும், (ஏன், நம்மூர் சிவ, விண்ணவ நெறிகளிலும் கூடச்) செரித்துக் கொள்ளப் பட்ட ஆசீவக நெறியின் தோற்றம் கி.மு 600க்கும் பிறகு என்றே இந்திய வரலாற்றில் புலப்படுகிறது. கிட்டத் தட்ட மற்ற நெறிகளுக்குள் ஆசீவகம் செரித்துக் கொள்ளப்பட்ட காலம். கி.பி. 400 ஆகும். ஆசீவக நெறி பற்றிய பரபற்றி(பரபக்தி)யாய் இல்லாமல், நேரடிப் பங்களிப்பான பாடல்கள் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே, அதுவும் சங்க இலக்கியத்தில், புறநானூற்றில் மட்டுமே, கிடைக்கின்றன. (பெரிதும் பேர்பெற்ற யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடலும் ஓர் ஆசீவகப் பாடலே. சங்க இலக்கியத்தில் கிடக்கும் ஆசீவகப் பாடல்களைத் தொகுத்து விளக்கத்துடன் ஒரு கட்டுரை வரைய வேண்டும்.) ஆசீவக நெறி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கப் பெருத்த வாய்ப்பு உண்டு என்றே ஆசீவகம் - தமிழர் தொடர்பு பற்றி மிக ஆழமாகப் பேசிய பேரா. க.நெடுஞ்செழியனும், வெங்காலூர் குணாவும் தங்கள் நூல்களில் சொல்லுகிறார்கள்.

அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டால், சங்க இலக்கியம் என்பது ஆசீவக நெறியின் உச்ச காலத்திற்கு (நந்தர்-மோரியர் காலம்) சம காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (இன்றைக்கோ ஆசீவக நெறி என்று ஒன்று தமிழ்கத்தில் இருந்தது என்றே அறியாமல், அதைச் செயின நெறிக்குள்ளேயே பொருத்திச் சொல்லுவதும், அதன் கருத்துக்களைச் செரித்துக் கொண்ட சிவ, விண்ணவ நெறிகளுக்குள் தேடுவதுமாய், மாறிப் போனது. மெய்யியல் உலகில் நம்முடைய பெருமை நமக்கே தெரியவில்லை. :-) ஊழ் பற்றி இன்றும் நிலவும் இந்திய அடிப்படைக் கருத்து ஆசீவக நெறிக்குச் சொந்தமானதே!)

மூன்றாவதான செய்தி, கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேந்த கலிங்க அரசன் காரவேலன் என்பவன் தன்னுடைய அத்திகும்பாக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பதாகும். பதினேழு வரிகளைக் கொண்ட காரவேலன் கல்வெட்டில், 11-13 வது வரிகள் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் தமிழ் மூவேந்தர்கள் யாராலும் உடைக்க முடியாத ஒரு கூட்டு முன்னணி வைத்திருந்ததையும், அந்தக் கூட்டணியை அந்துவன் என்ற அரசன் முறியடித்துக் கொண்டு கொங்கு நாட்டைக் கைப்பற்றி, கழுதை கொண்டு மாற்றார் நிலத்தை உழுது அவமதித்ததையும், பின்னால் அந்த நாட்டை ஆவிக் குடியினரிடம் திருப்பிக் கொடுக்காமல், தானே வைத்துக் கொண்டு அங்கு வணிக நகரமாக pithumda (egg city; கருவூர்) என்பதை ஏற்படுத்தியதையும், பேசுகின்றன. அந்த நாட்டைப் பின்னால் காரவேலனும் பிடித்துச் சிறிது காலம் ஆட்சிசெய்ததையும் அந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மாற்றார் யாரும் 1300 ஆண்டுகள் நுழையமுடியாத தமிழர் எல்லைக்குள் தான் நுழைய முடிந்ததை ஒரு பெரிய சாதனையாகக் கலிங்க அரசன் கருதியதாலேயே, அதைப் பதிவு செய்திருக்கிறான். [இந்த அந்துவன் என்பவன் இரும்பொறை என்னும் சேரக் கிளையின் முதல் அரசனான அந்துவன் சேரல் இரும்பொறையாக இருக்க முடியும். இரும்பொறை மரபினர் இன்று ஆன்பொருநை - அமராவதி - ஆற்றங்கரையில் இருக்கும் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டவர்கள்.]

கலிங்க அரசன் குறித்திருந்த 1300 என்ற சொற்தொகுதியைப் பார்த்து "அப்படி ஒரு நீண்ட காலத்திற்கு ஒரு கூட்டணி இருந்திருக்க முடியாது" என்ற தற்சார்பு அவநம்பிக்கையில் அதை 113 என்று திருத்திப் படித்ததாக, காரவேலனின் கல்வெட்டைப் படியெடுத்துப் பின் படித்து விவரித்த காசி இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வடபுலத்து ஆய்வாளர்கள் ஆன கே.பி. ஜெய்ஸ்வாலும், பேரா. ஆர்.டி. பானர்ஜியும் கூறியிருக்கிறார்கள். இவர்களின் திருத்திய தற்சார்பு வாசிப்பிற்குப் பின்னால், 1300 ஆண்டுகள் என்ற கல்வெட்டில் இருந்த முதற் கூற்றை வரலாற்று ஆய்வாளர் மிகப் பலரும் மறந்து போனார்கள்; ஜெய்ஸ்வாலையும் பானர்ஜியையும் அப்படியே கிடுக்கின்றிப் (without criticism) பின்பற்றி கிளிப்பிள்ளை போல 113 ஆண்டுகள் என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். உண்மையில் ஓர்ந்து பார்த்தால், காரவேலனுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மூவேந்தரின் ஆட்சி இருந்திருக்கப் பெருத்த வாய்ப்புண்டு.

இனி மோரியருக்குப் பின் உள்ள நிலையை அவதானிப்போம். அசோகரின் பேரனுக்குப் பின்னால், மகதப்பேரரசு சுருங்கி, சுங்கர்களின் ஆட்சிக்கு வந்து, வேத நெறி மீண்டும் தழைத்து, பிறகு அவர்களின் ஆட்சியும் கவிழ்ந்து, கன்வர்களின் ஆட்சி ஏற்பட்டது. கன்வர் ஆட்சியில் மகதம் என்பது அளவில் மிகச் சுருங்கி பாடலிக்கு அருகில் குறுகிய விரிவு கொண்டதாய் ஆகிப் போனது. இருந்தாலும் அவர்கள் அரசு, இமைய எல்லைக்கு அடியில் இருந்து, இமயத்தைக் காத்துக் கொண்டு தான் இருந்தது. அதே பொழுது, மகத அரசின் மாதண்ட நாயகர்கள் பலர் நடுவண் அரசின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து, தனித் தனியே தம் அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

அப்படி ஒரு மாதண்ட நாயகர் தான் இன்றைய மாராட்டியத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் இருக்கும் paithan (தமிழில் படித்தானம்) என்ற ஊரைத் தலைநகராய்க் கொண்ட சாதவா கன்னர் ஆவர். [சாதவா கன்னர், எல்லோரும் நினைப்பது போல ஆந்திரத்தில் தோன்றியவர் இல்லை. அந்தக் காலத்தில் ஆந்திர நாடு என்பது கிடையாது. அவர் மாராட்டியத்தில் தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாய் தம் அரசை விரித்து இன்றைக்கு 1800/2000 ஆண்டுகள் அளவில் தான் ஆந்திரத்திற்குள் ஊடுருவினர்.] கன்வரின் ஆட்சியைக் கவிழ்த்து மகத அரசையே தங்கள் கைக்குள் சாதவா கன்னர் கொண்டு வந்த நிலை கி.பி. 100 அளவிலேயே ஏற்பட்டது.

அதே காலத்தில், கலிங்கம் என்ற நாடு பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. கலிங்க நாடு கடற்கரையை ஒட்டியது. அதன் மேற்கு எல்லைகள் காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) முல்லையும் பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது. கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கி, கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதும் ஆட்கொள்ளவில்லை. இந்த இடங்கள் எல்லாம் பெருங்காடுகளாய் இருந்தன. காடுகள் குறைந்திருந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகத்தான் வடக்கு/தெற்கு வணிகம் நடந்தது.

இந்தப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமல்லாது, அரணம் (army) நகர்வதற்கும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்வதற்கும் முகன்மையானவை. இந்தப் பாதைகளைக் கைக்குள் வைத்துக் கொள்ளாத எந்த்தப் பேரரசும் மிக எளிதில் குலைந்து போகும். அதே போல எந்த எதிரியும், இந்தப் பாதைகளைத்தான் முதலில் கைக்கொள்ளத் துடிப்பான். மாதண்ட நாயகர்கள் இந்தப் பாதைகளின் விளிம்புகளில் தான் பேரரசால் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று வரலாற்றில் சொல்லப்படும். அப்படி அமைந்த பாதைகளில், உத்தர, தக்கணப் பாதைகள் பெரிதும் முகன்மையானவை.

வடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, நான்கு ஆறுகளைக் கடந்து (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ்) கங்கைக் கரை கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலி வழியாக அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேருவதை உத்தர பாதை என்று சொல்லுவார்கள்.

இதே போல, கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானம் (prathisthana>paithan; இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் உள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி என்ற சாகேதம் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேருவது தக்கணப் பாதையாகும். (சாவத்தி கோசலத்தின் தலைநகர் கிட்டத்தட்ட நேபாள எல்லை. கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)

உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே மேற்கே சென்றால் பாடலியில் இருந்து வாரணசி வழி, கோசாம்பியை அடையும் பெருவழியும் அந்தக் காலத்தில் முகன்மையான ஒன்றாகும்.

எந்த வடநாட்டுப் படையெடுப்பும் இந்த மூன்று பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க முடியாது.

சாதவா கன்னரைத் தான் சிலம்பு ஆசிரியர் நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடுகிறார். சிலம்பில் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தி கொஞ்சம் விதப்பானது. சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசரும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்ட முன்வந்து நிற்பது சாதவா கன்னர் என்னும் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தியே.

வடமொழியில் சாதவாகன என்று எழுதும் போது நம்மை அறியாமல் சாத வாகன என்று பிரித்தே படிக்கிறோம். ஆனால், தமிழ் வழியே பார்த்தால், சாதவா கன்ன என்று படிப்பதே சரியாக இருக்கும். சதம் என்பது நூறு என்ற எண்ணைக் குறிக்கும் வடமொழிச் சொல் (அதே பொழுது, அந்தச் சொல்லின் வேரைத் தமிழிலேயே இனம் காணமுடியும். சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடு கொண்ட சொற்கள். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா? அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற சொல்லும் பொடி என்ற பொருளில் எழுந்தது தான். அதை வேறு ஒரு இடத்தில் பார்க்கலாம்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக உட்கருத்து தமிழே. சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர்.

கன்னர் என்பது கர்ணி என்று திரிகிறது. இங்கே காது, கன்னக்குழி போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்ன அரசன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் என விதப்பாகச் சொல்லப்படுகிறான். பாகத மொழியில் கிருஷ்ண என்பது கன்ன என்றே வரும். கன்னன் என்பது சோழன், பாண்டியன், சேரன் என்பது போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும்.

சந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல் குலம்>சாரலன்>சேரலன் என்று ஆனது போல, சாம்பல் = பாண்டில் பூசிய இனக்குழு பாண்டிய குலம்>பாண்டியன் என்று ஆனது போல, கோழி நிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச்செறிவைப் பொருத்து மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் வேதிப்பொருளின் நிறம்) பூசிய இனக்குழு கோழி>சோழிய குலம்>சோழியன் என்று ஆனது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநன்>கன்னன் என்று ஆகியிருக்க வாய்ப்பு உண்டு.

[சேர, சோழ, பாண்டியர்களின் வெவ்வேறு குலப்பெயர்கள் எப்படி இனக்குழுப் பண்பை உணர்த்துகின்றன என்ற என் கட்டுரை இன்னும் முடியாது இருக்கிறது. பிறிதொரு நாள் பார்க்க வேண்டும். இன்றைக்கும் சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் தாக்கம் தமிழர்/மலையாளிகளிடையே இருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கே இருந்து பிறந்தது என்று உணர முடியும். உறுதியாக சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் என்ற கருத்து சமய நெறி சார்ந்த கருத்து அல்ல. அது இனக்குழு (tribal) சார்ந்த வழக்கம். இன்றைக்கும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பல்வேறு வண்னம் பூசித் தங்களை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்து பார்க்கலாம். ஆத்திரேலியப் பழங்குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவு கொண்டவர் என்ற ஆய்வு முடிபை இங்கு ஒருசேரப் பார்க்கலாம்.]

நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகர் இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் உள்ள படித்தானம்(>பயித்தானம்>பைத்தான்) என்று பார்த்தோம். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா? படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான். படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.)

கார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்). சோபாரா துறைமுகம் (சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சா(இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach)வும் துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.

சேரன் படையெடுப்பை விவரிக்கத் தேவையான களனை விவரித்த கையோடு, (நேரம் கிடைக்கும் போது உத்தர, தக்கணப்பாதைகளை வரைபடம் கொண்டு காட்ட முயல்வேன். இப்பொழுது படிப்போர் பொறுத்துக் கொள்ளுங்கள்.) சிலம்பிற்குள் செல்லுவோம். அதில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட செய்திகளை மட்டும் பார்ப்போம்.

பொதுவாய் சிலம்பில் இன்று நாம் காணும் எல்லாமே இளங்கோ எழுதியதல்ல. சிலம்பில் முன்பின்னாக ஓரிமை இல்லாமல் இருக்கும் பகுதிகளைக் கவனித்துப் பார்த்தால் ஒழிய நமக்கு எது இளங்கோ எழுதியது, எது அவர் எழுதாது என்று புரிபடாது போகலாம்.

முதலில் பதிகத்துக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, February 20, 2008

நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்

இந்த வாரம் (21/2/2008) வெளிவந்த குங்குமம் தாளிகையில் "ஆதலினால்..." என்ற தொடரில் "முகத் திருத்தம்" பற்றிப் பேசவந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தியைச் சொல்லுகிறார். அதை இங்கு கீழே கொடுத்திருக்கிறேன்.
-------------------------
வயதானவர், தயக்கத்துடன் "தம்பி சொன்னது புரியலை" என்றார். "இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று அவன் கோபம் அதிகமானது. வயதானவர், தான் நாற்பது வருஷத்துக்கும் மேலாக இதே தொழிலை மானாமதுரையில் செய்து வந்ததாகச் சொன்னார். அவரது குரலை யாரும் மதிக்கவேயில்லை. மாறாக "ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏன் இந்த வேலைக்கு வருகிறார்கள்?" என்ற கேலியே எழுந்தது.

தனக்குத் தெரிந்த தொழிலை நாற்பது வருடங்களுக்குச் செய்து வந்த ஒரு மனிதன், பிழைக்க வழியின்றி பெருநகரத்துக்கு வந்து, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவமானப்படுத்தப்படும் கொடுமை வேறு எங்காவது நடக்குமா என்று தெரியவில்லை. சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது.

மேலாளர் வயதை மறந்து அவரைத் திட்டிக் கொண்டிருந்தான். தலைகவிழ்ந்து நின்ற அவரது தோற்றம் அத்தனை கண்ணாடிகளிலும் பிரதிபலித்தது. ஆள் உயரக் கண்ணாடிகள் இருந்த போதும் எதையும் அந்த மனிதர் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

அவர் தனது வலியை மறைக்கத் தெரியாமல். "இந்த தலைமசிரை நேத்துவரைக்கும் சீவிச் சிங்காரிச்சிட்டு, வெட்டிப்போட்ட மறுநிமிஷம் குப்பைனு தூக்கி எறியுற மாதிரி நம்ம பொழப்பும் ஆகிப்போச்சுல்ல" என்றார். அலங்கார நிலையத்தின் மேலாளர், "இனிமே குப்பை அள்ளுற வேலை தான் உனக்கு, புரியுதா? போயி அந்த வேலையை ஒழுங்காப் பாரு" என்றான். வயதானவர் கோபத்துடன் விடுவிடுவென அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போனார்.

அந்த மனிதன் அவமதிக்கப்பட்ட வலி ஆறாமலே இருக்கிறது. இவரைப் போல மாநகரில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சொல்லும் ஆட்டோ ஓட்டுநர், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் அவமானப் படுத்தப் படுகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பின் துணி தேய்க்கிறவன், ஆங்கிலம் பேசத் தெரியாத காரணத்தால் முட்டாளாக்கப் படுகிறான். லண்டனில் கூட இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் தமிழில் உரையாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நேர் எதிரான சூழலே உள்ளது.
------------------------------------

இனி நாம் சற்று அவதானிக்கலாம் வாருங்கள்.

மேலே கூறும் "அவமதிக்கப் பட்ட வலிகள்" இன்று நேற்றா ஏற்பட்டன? ஒரு 25, 30 ஆண்டுகளாய் நடந்து கொண்டு தானே இருக்கின்றன? (நாடு விடுதலை பெற்றவுடனேயே கூட இந்த அவமதிப்புத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.)

"இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று கோபப் பட்ட இளைஞரைப் போன்றோர் இன்று இலக்கக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைத் தான் தமிங்கிலர் என்று சொல்லுகிறோம். அவர்கள் தான் இன்று பல இடங்களிலும் முகன்மையான ஆட்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பொள்ளிகைகளைத் (policies) தலைமேல் எடுத்துக் கொண்டு நடத்தும் அடியாட்களாக, இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். கூர்ந்து நோக்கினால், தமிங்கிலர் தமிழரை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

தமிங்கிலர் உருவான கதை ஒரு தனிக்கதை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது, எழுபதுகளில் பல நாளிதழ்களில், தாளிகைகளில், கதைகளில், தமிழ்த் திரைப்படங்களில், ஒரு ஏக்கம் தொடர்ச்சியாய் வெளிப்பட்டு வந்தது. காட்டாக, தமிழ்த் திரைப்படங்களில், கதைநாயகி என்பவள் ஆங்கிலப் பள்ளி (convent)யிலிருந்து படித்தவளாயும், கதைநாயகன் ஆங்கிலம் தெரியாத, வெகுளியானதொரு பட்டிக்காட்டானாகவும் உருவகிக்கப் பட்டு, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவனைக் கேலி செய்கிற காட்சியையும் காட்டி, அதற்குப் பின்னால், எப்படியோ ஆங்கிலத்தில் தேறி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து, விளையனிடம் (villain) இருந்து கதைநாயகியைக் காப்பாற்றி, அவளையே அடைவதாகக் கதை நகரும். பார்க்கும் பலருக்கும் வாழ்விற் செய்யவேண்டியது என்று சில அடிப்படைக் கருத்துக்கள் ஊசியேற்றுவது போல் உறுத்தப்படும். அதில் ஒன்று "ஆங்கிலம் தெரிந்தால் தான் வாழ்க்கையிற் கடைத்தேறலாம்" என்ற ஏக்கமும் ஆகும். இந்த ஏக்கத்தை இன்று நேற்றல்ல; ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளாகவே தமிழ்மக்களிடையே உருவேற்றியிருக்கிறார்கள். இந்த ஏக்கத்தின் விளைவு தமிழரில் மேல்வருக்கத்தார் தமிங்கிலராய் மாறிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த ஏக்கத்தின் வடிகாலாய், சென்னை போன்ற பெருநகரங்களில், ஒன்றிரண்டு ஆங்கிலோ இந்தியர் பள்ளிகளும், மிகமிகக் குறைந்த வகையில் தென்னிந்தியக் கிறித்தவ சபையினர் (Church of South India) பள்ளிகளும், மற்றும் ஏசு குமுகத்தினரின் (Society of Jesus) கத்தோலிக்கப் பள்ளிகளுமாய் ஆங்கிலப் பள்ளிகள் அமைந்திருந்தன. வணிக நோக்கில் நடத்தப்பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் அப்போது கிடையா. பொதுவாய் பழைய, புதிய பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மடலாயப் பள்ளிப் (convent school) படிப்புக்கு அனுப்பி வைத்து அந்தக் காலத்தில் ஊருக்குள் பெருமை கொண்டார்கள்.

பின்னால், மேட்டுக்குடியைப் பின்பற்றி அப்படியே ஈயடிச்சான் படி(copy)யெடுக்கும் உயர் நடுத்தர வருக்கமும், அதையடுத்து நடுத்தர வருக்கமும், இன்னும் கீழே உள்ளவரும் எனக் கொஞ்சம் கொஞ்சமாய் கூம்பின் உச்சியிலிருந்து ஆர்வம் கீழாய்ப் பெருகி, பொல்லாத ஏக்கம் கொண்டு, ஆங்கிலப் பள்ளிப் படிப்பிற்கு மாற முற்பட்டனர். கூடிப் போன இந்த ஏக்கத்தை நிறைவு செய்யுமாப் போல மடிக்குழைப் பள்ளிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒருசிலர் வளர்த்தனர். ஒரு கட்டத்தில், இந்தக் கூடுதற் தேவையை ஈடு செய்ய மடலாயப் பள்ளிகளால் முடியவில்லை.

இந்தப் பள்ளிகளில் இருந்து வெளிவந்த ஒரு சிலர், தனியார் பள்ளிகளாய், "மடலாயப் பள்ளிகள் போலவே தாங்களும் நடத்த முடியும்" என்ற முன்மொழிவில், மடிக்குழைப் பள்ளிகளைத் தொடங்கினர். அந்த நிலையில் தான், பள்ளி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் போது இடையாளராய் இருந்து ஏகப்பட்ட பணம் பண்ண முடியும் என்று யாரோ சில சூழ்க்குமதாரிகள் சொல்லிக் கொடுக்க, அதைத் தாரக மந்திரமாய் எடுத்துக் கொண்டு, இரண்டு கழகத்தாரும் ஒன்றிற்கு ஒன்று போட்டியாய், அடுத்தடுத்து தங்கள் ஆட்சியில் காசுக்கு அனுமதி வழங்கினார்கள். இதன் விளைவாய், "சடசட"வென, "படபட"வெனப் புற்றீசலாய், மடக்கை (exponential) வேகத்தில், பணம் ஒன்றே குறியாய், தேவையை நிறைவு செய்யும் அளிப்பாக மடிக்குழைப் பள்ளிகள் பெருகின. மாநிலத்தின் கல்வித்துறை, கையூட்டு மல்கிய துறையாக, மாற்றம் பெற்றது. தலையில் இருந்து கால்வரை பணம் ஏராளமாய்ப் புரண்டது. மேடையில் முழங்குவது மட்டும் தமிழாகவும், அன்றாட நடைமுறையில் புரந்தருவது ஆங்கிலமாகவும் கல்வி வணிகர்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரிகள் ஆகியோரின் கூட்டுறவில் ஆகிப் போனது. தமிழக அவலத்தின் ஊற்றுக்கண் மடிக்குழைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் தான் இருந்தது.

இந்த வேகம் ஓர் அசுர வேகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அரசு வாரியம் வழிநடத்திய தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 99 விழுக்காடு தமிழகத்தில் இருந்தன. தவிர, அப்போது ஆட்சியில் இருந்த பேராயக் கட்சியும் பெரிதும் விடுதலை உணர்வால் உந்தப்பட்டுத் தமிழை முன்னெடுத்துச் செல்லுவதாய்த் தான் செயற்பட்டு வந்தது. அதனால் 67 தொடங்கும் வரை, இன்னுஞ் சொன்னால், எழுபதுகளின் முடிவு வரை கூட நிலை ஒன்றும் பெரிதாய் மாறவில்லை; மாநிலமெங்கும் 80 மடிக்குழைப் பள்ளிகளே இருந்தன. இன்றோ, மாநிலமெங்கும் 2500 மடிக்குழைப் பள்ளிகளுக்கும் மேல் இருக்கின்றன. தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 50 மேனி இருக்குமா என்பது கேள்விக் குறியே! (அதோடு, இன்றைக்கு மடிக்குழைப் பள்ளி நடத்துவோரின் கூட்டமைப்பு பணமும் வலியும் கொண்ட அமைப்பாக, வழக்குமன்றம், சட்டப் பேரவை போன்றவற்றை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களைச் சாய்க்காமல், ஒரு மண்ணும் தமிழகத்தில் செய்யமுடியாது; தமிங்கிலர்களைத் தொடர்ந்து உருவாக்குவதே இவர்களின் பணி.)

தமிழ் மாநிலத்தில் தமிழில் படிப்பது தொலைந்தது மட்டுமல்லாமல், தமிழே படிக்காமல் (அதாவது மொழியாய்க் கூடப் படிக்காமல்) பிரஞ்சு, சங்கதம் என்று வெறும் மதிப்பெண்ணிற்காகப் மட்டுமே படிக்கும் தற்குறிகளாய் மாறிப் போன தமிழ் இளைஞர் 20, 30 இலக்கத்தை நெருங்குவர். தம் வீட்டு வேலைக்காரர், தம் அடுக்குவீட்டுக்கு அருகில் உள்ள துணிதேய்ப்பவர், தம்மைப் பள்ளிக்கு இட்டுச்செல்லும் தானி ஓட்டுநர், எனத் தாழ்நிலை வேலையாளருடன் பேசுவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இவர்கள் தமிங்கிலராய் ஆகாமல் வேறு எப்படி ஆவர்? மேலே முடிதிருத்தகத்தில் கோவப் பட்ட இளைஞரும் இந்தத் தமிங்கிலரில் ஓர் உறுப்பினர் தான்.

பணம் சம்பாரிப்பதற்காக தமிழ்நாட்டுக் கல்விப் பொள்ளிகையைக் காற்றில் பறக்கவிட்ட கழக அரசுகளே தமிங்கிலரை உருவாக்கியதில் பெருங்காரணம் என்பதை வேதனையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. (67- ல் கழக அரசு ஏற்படவேண்டும் என்று பெரிதும் பாடுபட்ட என்னைப் போன்றவர்கள் மனம் வெதும்பி இப்பொழுது நிற்க வேண்டியிருக்கிறது. உண்மையான திராவிடக் கொள்கையில் ஒரு பிடிப்பு இருந்திருக்குமானால், இப்படி இவர்கள் சோரம் போவார்களா?)

இன்னொரு சிந்தனையும் எழுகிறது. அந்த முடிதிருத்தகத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் தமிழ்நாடெங்கணும் நடக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை நிறுத்த முயற்சிகள் செய்திருக்கிறோம்? கூடிவரும் ஆங்கிலத் தாக்கத்தை அப்படியே அடிமையாய் ஏற்றுக் கொள்ளுவதைத் தவிர, அதனால் விளையும் தமிங்கில நோய் எங்கணும் பரவ நாம் தரும் பங்களிப்பையும் தவிர, நம்மைப் போன்றோர் என்ன செய்திருக்கிறோம்?

வெள்ளைக்காரன் ஆண்டிருந்த காலத்தில் மகிழ் குழும்புகளின் (ஜிம்கானா, காசுமாபாலிடன் போன்றவை) நுழைவாயிலில் "Indians and dogs are not allowed" என்று எழுதிப் போட்டிருந்ததாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த நிலை மீண்டும் இப்பொழுது வருகிறது அல்லவா? "Tamils and dogs are not allowed" என்று அந்த முடிதிருத்துக் கடையில் நேரடியாய் எழுதிப்போடவில்லை தான்; ஆனாலும் நடைமுறையில் அதுதானே இருக்கிறது?

இன்றையத் தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாகச் சென்னை போன்ற பெருநகரங்களில், எந்தவொரு அலுவத்திலும் (அது தனியாராய் இருந்தாலும் சரி, அரசினராய் இருந்தாலும் சரி) தமிழில் கேள்வி கேட்டால், நம்மைத் தள்ளித்தான் வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டால் ஏதோ ஒரு மறுமொழி, இணங்கியோ, இணங்காமலோ கிடைக்கிறது. இதே போல சென்னை அடையாற்றில் உள்ள ஒரு மடிக்குழைப் பள்ளியில் ஒருமுறையும், மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்திலும் தமிழில் தங்களுக்குள் உரையாடிக் கொண்ட சிறுவர் தண்டனை பெறத்தான் செய்தனர். அங்கும் "Tamils and dogs are not allowed" என்பது தானே நடைமுறைப் பொள்ளிகையாய் (policy) இருந்திருக்கிறது? அப்புறம் என்ன, வேண்டிப் பெற்ற விடுதலை? "சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்?"என்ற மன்றாட்டு?

நன்றாக நினைவுக்கு வருகிறது நான் பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் (1965 - 70) விடுதிகளுக்கு வரும் நாட்டுப்புற மாணவர்களில் பலர், தமிழ் மட்டுமே தெரிந்த தங்கள் பெற்றோரை மற்றோரிடம் அறிமுகம் செய்ய வெட்கப்பட்டு ஒதுக்கித் தள்ளிய பழக்கம் இன்றளவும் மாறவில்லையே?

ஒரு காலத்தில் அய்யா என்று மரியாதையுடன் அழைக்கப் பட்ட தமிழாசிரியர் இன்றைக்கு தாளிகை, திரைப்படம், தொலைக் காட்சி எல்லாவற்றிலும் கேலிக்கு ஆளாகும் மாந்தராகத்தானே காட்டப் படுகிறார்? தமிழாசிரியர் கேலிக்குரிய மாந்தனானால், அப்புறம் தமிழும் கேலிப்பொருளாய் மாணவரிடையே ஆகிவிடாதோ?

விடுதலைக்கு முன்னால் வெள்ளைக்காரத் துரைக்கு எழுத்தராய் (clerk) தமிழர் வேலை செய்தது போல, தேயிலையைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் விளைவிக்காமல், வாழ்க்கைத் தேவையான பலவற்றையும் இறக்குமதி செய்துகொண்டு, அதற்கு ஏந்தாக ஏராளமான எழுத்தர்கள், அரசதிகாரிகள், இலடண்டனுக்கான முகவர்கள் எனப் பழகிய குடியேற்ற காலத்து இலங்கைத் தீவுப் பொருளாதாரம் போல, எங்கோ இருக்கிற புத்தாக்கத்திற்கு, இங்கிருந்து சேவை செய்யும் பொதினச் செலுத்த வெளியூற்று (business process outsourcing) புற்றீசல் போலத் தமிழகத்தில் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் "எந்தத் தொழில் துறை அறிவும் தேவையில்லை, வெறுமே ஆங்கில பேசத் தெரிந்தால் போதும், நீங்கள் கூலி எழுத்தராய் ஆகிச் சம்பாரிக்கலாம்" என்று ஆசைகாட்டி, நுனிநாக்கு ஆங்கிலம் பேச வைக்கும் அளவுக்கு உள்ளூர் மனவியலை மாற்றியதை என்ன சொல்லுவது?

ஆங்கிலத் தாக்கத்துக்குக் கொடிபிடிக்கும் தமிங்கிலகம் என்ற நாட்டிற்குக் கீழ் தமிழகம் என்ற நிலம் குடியேற்ற நாடாகத் தானே இருக்கிறது? வெள்ளைக்காரன் காலத்தில் நாடு அடிமைப் பட்டிருந்ததற்கு என்னென்ன அடையாளங்கள் இருந்தனவோ, அவை அத்தனையும் மீண்டும் வந்தாயிற்று அல்லவா? என்ன, இந்த முறை தமிழரை ஆள்பவர், தமிழரே போலும் இருக்கிறார். அதன் காரணமாகவே, அவர் ஆட்சி இன்னும் முற்றாளுமையோடு இருக்கிறது. "மக்களே போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர். தமிங்கிலருக்கும் தமிழருக்கும் வேறுபாடு தெரியாத வகையில் பல இடத்தும் நாம் தடுமாறுகிறோம்.

"தமிழில் தலைப்பு வையுங்கள்; கேளிக்கை வரி விலக்குத் தருகிறோம்" என்ற அளவுக்கு ஓர் அரசு போகுமானால், இங்கே ஆங்கில, தமிங்கிலத் தாக்கங்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?

"தமிழில் பேசு; தங்கக் காசு தருகிறோம்" என்று ஒரு தொலைக்காட்சியினர் சொல்லும் அளவுக்குத் தமிங்கிலம் இங்கு இயல்பாகிப் போனதே? அந்தத் தொலைக்காட்சி தவிர மற்றெல்லாத் தொலைக்காட்சி, பருவெண் மட்டுழைத்த (frequency modulated) வானொலி நிலையங்கள் என எல்லாவற்றிலும் தமிங்கிலம் தடையின்றிப் புழங்குகிறதே?

இதற்கிடையில் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கும் வகையில் 12/06/2006ல் கொண்டுவரப்பட்ட தமிழகச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட (petition) ஆகஸ்டு 23ம் தேதி உயர்நய மன்றம் கூறிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நயமன்றம் தள்ளிவைத்தது.

முதல்வர் பெருமைப் பட்டுக் கொள்ளுகிறார். முன்னே 20 ஆண்டுகள் இரு கழக ஆட்சியில் கல்வியில் நடந்த அவலங்களை அவர் எண்ணிப் பார்ப்பாரோ?

தமிங்கிலம் என்று சொன்னவுடன், தேனிசைச் செல்லப்பா பாடிய இன்னொரு பாடலின் தொடுப்பு நினைவிற்கு வருகிறது.

வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ? - நல்
இணக்கம் தரு தமிழில் இருகை கூப்பிநின்று (வணக்கம்)

- தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வரிகள்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 19, 2008

அளவுச் சொற்கள் - 4

ஏற்கனவே மூன்று பகுதிகளோடு இந்தத் தொடர் அப்படியே நின்று போயிற்று. அவை வருமாறு:

அளவுச் சொற்கள் - 1
அளவுச் சொற்கள் - 2
அளவுச் சொற்கள் - 3

இனித் தொடர்ச்சி. இந்தப் பகுதியில் முதலில் ஒருசேர நான்கு சொற்களைப் பார்க்கப் போகிறோம். அவை minimum, minor, minority, minute ஆகியவை ஆகும். இந்தச் சொற்களில் வரும் min என்ற பகுதியும் நுண் என்பதோடு தொடர்பு கொண்டது. நுண் என்பதும் முன்னால் சொன்னது போல் நுல் என்னும் வேரில் இருந்து கிளைத்த அடிச்சொல்லாகும்.

முதலில் முப்பத்தி ஆறாவது அளவுச் சொல்லான minute என்பதைப் பார்ப்போம். தமிழில் நுணுக்கு என்பது ஒரு பெரிய பகுதியின், ஆகக் குறுகிய பகுதியைக் குறிக்கும் சொல். மிகச் சிறியது என்று அதற்குப் பொருள். நுணுக்கின் போலியான முணுக்கு என்ற சொல்லை நாம் இன்றும் கூடப் பயன்படுத்துகிறோம். (அவன் முணுக்கென்று போனான்.) நுணுக்கு என்பது நுணுத்து என்றும் வேறு ஒரு ஈற்றிலும் முடியலாம். நுணுத்தல் என்பது குறுகுதல் என்ற பொருள் கொள்ளும். ஆங்கிலத்திலும் minute என்ற சொல் குறுகிய பகுதியையே குறிக்கும். அது காலத்தின் பகுதியை மட்டுமல்லாது பொருள், இடம் என எல்லாவற்றின் சிறுமையையும் குறிக்கும். நாம் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கும் மணித்துளி போன்றவை கால அளவை மட்டுமே குறிக்கும் சொற்கள். தவிர, மணித்துளி என்ற சொல் நீர்வீழ்ச்சி போல ஒரு செயற்கையான அலங்காரச் சொல். அதைக்காட்டிலும் நுணுத்து அல்லது நுணுத்தம் என்ற சொல் சிறப்பாக இருக்கும். வடமொழி வழியே பெறப்பட்ட நிமிடத்திலும் கூடத் தமிழ்வேர் உள்நின்று அடையாளம் காட்டும். தமிழில் ஏற்படும் முகர/னகர/ணகரப் போலியையும், தமிழில் வரும் டகர/தகர ஈற்றுக்கள் வடமொழியில் ஷகர ஒலியாய் மாறுவதையும் ஓர்ந்து பார்த்தால் நுணுத்தத்தில் இருந்து நுணுஷம்>முநுஷம்>நுமுஷம்>நிமுஷம்>நிமிஷம் என்ற திரிவு புலப்படும். (இதே போன்ற திரிவுக்கு இன்னொரு காட்டு: வருடு>வருடை = ஆடு; வருடு+அம் = வருடம்>வருஷம் = மேய இராசியில் தொடங்கும் ஆண்டு; ஆடு>ஆட்டை, ஆடு>ஆண்டு என்ற சொற்கள் அமைந்த முறையையும் இங்கு கவனிக்கலாம்.) நுணுத்தம் என்ற சொல்லைப் புழங்கினால், உள்ளே ஆழத்தில் இருக்கும் நுணுத்தல் என்னும் வினைச்சொல்லும் நமக்கு விளங்கும். பொதுவாய் வினைச்சொல் தெரிபடத் துலங்கும் பெயர்ச்சொற்கள் சிந்தனையைத் தூண்டுபவை. [நுணுத்தத்தின் சிறு பகுதியான second என்பதை செகுத்தம் என்று சொல்லலாம். கூடவே அதன் இன்னொரு பெயரான நொடியையும் புழங்கலாம். செகுத்தம் பற்றி முன்னால் செகை (sex) என்ற கட்டுரையில் விவரித்துள்ளேன்.]

இனி முப்பத்தி ஏழாவது சொல் minimum. நுணுகிக் குறுகிப் போன நிலையைக் குறிக்கும் சொல். நுணுகுதல் என்ற வினையை நுணுதல் என்றும் சொல்லலாம். இதே கருத்தில், நுணுகிய தன்மையை minimum = நுணுமம் என்று சொல்லுவதின் மூலம் கொண்டு வரலாம். அதன் மூலம் மிகக் குறைந்ததென்ற பொருளையும் கொண்டு வரலாம். maximum = மீகுமம் என்பதற்கு எதிர்ச்சொல்லாயும் நுணுமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளப் பொருத்தமாய் இருக்கும்.

இதற்கும் அடுத்தது முப்பத்தெட்டாவது சொல் minor என்னும் சொல்லாகும். அகவையில் குறைந்தவர்; பங்களிப்பில் குரைந்தவர் என்ற பொருளில் minor = நுணுவர் என்றே சொல்லலாம். சிறுவர் என்பது போல நுணுவர் என்பது பொருளாழம் காட்டும். major = மேவு, மேவிய, மேவர் என்பதற்கு இணையாக minor = நுணுவிய, நுணுவர் என்ற சொற்கள் அமையும். மேவிய பங்கு, நுணுவிய பங்கு என்ற சொற்கள் major share, minor share என்பதைத் தெளிவாகக் குறிக்கும். பங்கிற்கு இணையாகக் கூறு என்பதையும் ஆளமுடியும்.

முப்பத்தொன்பதாவது சொல் minority. நுணுதல் என்னும் வினையில் இருந்து நுணதி என்ற சொல்லை உருவாக்க முடியும். majority = மேவுதி என்பதற்கு எதிராக நுணதி என்ற சொல் அமையமுடியும். "எங்குமே மேவுதியார் பேச்சு நுணதியார் பேச்சைக் காட்டிலும் எடுபடும்", "அவர் நுணதியாகித் தோற்றுப் போனார்" என்று வாக்கியங்களை எண்ணிப் பார்க்கலாம்.

மேலே சொன்ன நான்கு சொற்களுக்கு அப்பால் நாம் பார்க்கும் நாற்பதாவது அளவுச் சொல் mode. எந்த ஓர் உயர்ச்சிக்கு முன்னாலும் பின்னாலும் ஒரு தாழ்ச்சி உண்டு. அது மலையானாலும், அலையானாலும் அமைவது தான். மலை, அலை போன்றவற்றின் உச்சி mode என்று சொல்லப்படும். தமிழில் அதை முகடு என்று குறிக்கிறோம். முக>மோ என்ற பலுக்கத் திரிவை ஓர்ந்து பார்த்தால், முகடு = mode என்பதன் சொல்லிணை சட்டென்று விளங்கும். வீட்டு கூரையில் மேலே இருக்கும் உச்சியை, மோட்டு வளை என்றே நாட்டுப் புறத்தில் கூறகிறார்கள்.அந்த மோடும் இந்த முகட்டின் திரிவுதான். (இது போன்ற ஒப்புமைகளைப் பார்க்கும் போது, தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளும் ஏதோ ஒரு தொடர்பு அறதப் பழங்காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்றே நான் கருதுகிறேன். இது வரை செய்த சொல்லாய்வுகள் அதை நாளும் உறுதி செய்து வருகின்றன.)

இனி அடுத்து more, most, much என்னும் மூன்று சொற் தொகுதியைப் பார்ப்போம்.

நாற்பத்தொன்றாவது அளவுச் சொல் more. மேலும் மேலும் ஓர் எண்ணுதி (quantity) சேருகின்ற கருத்தை "மேல்" என்றே சொல்லலாம். அது அப்படியே more என்பதற்குப் பொருந்தும். மேலும் மேலும் = more and more.

நாற்பத்திரண்டாவது சொல் most. more என்பதன் உயருறவு நிலை (superlative). மேலும் மேலும் ஏறும் இந்த நிலையை மேலேற்று என்றே சொல்லலாம்.

நாற்பத்தி மூன்றாவது சொல் much. நீரை ஒரு கலத்தில் ஊற்றிக் கொண்டே வரும் பொழுது அது விளிம்பில் இருந்து கொட்டுகிறது பாருங்கள் அதை மகுதல்>மகுருதல் என்று எங்கள் பக்கத்தில் சொல்லுவார்கள். இந்த மகுவும் மிகுவும் தொடர்புள்ள சொற்கள் தான். இருந்தாலும் மிகுதல் = to exceed என்ற பொருளைச் சட்டென்று குறிப்பதால், மகுதல் என்றும் அதன் முன் திரிபான மொகுதலையும் உரிய வினையாகக் கையாளலாம். multiply என்பதைக் குறிக்கும் மல்குதல் என்ற சொல்லும் மகுதல் என்று பேச்சுவழக்கில் ஆவதால், மொகு என்பதே much ற்கான என் பரிந்துரை. much என்பதற்கும் more என்பதற்கும் நுணுகிய வேறுபாட்டை ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Much water has flown through the river = மொகுந்த நீர் ஆற்றின் வழியே பெருகியிருக்கிறது / விளவியிருக்கிறது.

இதற்கு அடுத்து மல் என்னும் வேரில் கிளைக்கும் மூன்று சொல் தொகுதியைப் பார்க்கலாம்.

நாற்பத்தி நான்காவது சொல் multi இதை மிகச் சுருக்கமாய் மல், மல்கு>மகு என்றே சொல்லலாம். மல்கிப் பெருகுதல் என்ற வழக்குத் தமிழில் கால காலமாய் உண்டு.

நாற்பத்தி ஐந்தாவது சொல் multiply. இந்தக் காலப் பேச்சுவழக்கில் பெருக்குதல் என்றே சொல்லிவருகிறோம். இருந்தாலும் இலக்கிய வழக்கில் மல்குதல் என்ற வினை இருந்திருக்கிறது. மல்குதல் என்று சொல்வதைத் திரித்துப் பேச்சுவழக்கில் மலிதல் என்று சொன்னாலும் பெருகுதல் என்ற பொருளைத் தரும். மல்குதல்/மலிதல் என்பவை தன்வினையில் வரும் சொற்கள். அதே சொல்லை மலித்தல் என்று சொன்னால் அது பிறவினையாகிவிடும். Please multiply two by five = இரண்டை ஐந்தால் பெருக்குக/மலிக்குக. பெருக்குதல் என்பது "கணக்கதிகாரம்" போன்ற தமிழ் நூலில் பேச்சு வழக்குச் சொல்லாகத் திரிந்த முறையில் பருக்குதல்>பழுக்குதல் என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது. இது போக மல்தல் என்னும் வினை, மால்தல் என்று நீண்டு, பின் புணர்ச்சியில் மாறல் என்று ஆகி, பெருக்கல் வினையைக் குறிக்கிறது. மாறல் என்ற இந்தச் சொல்லும் "கணக்கதிகாரம், கணித நூல்" போன்றவற்றில் multiplication என்பதற்கு இணையாகப் பெரிதும் ஆளப் பட்டிருக்கிறது. இந்த நூல்களில், ஓர் இழுனை அளவைக் (linear measure) கொடுத்து, அவற்றால் ஏற்படும் சதுரங்களின் பரப்பு அளவை (area measure) கண்டு பிடிக்கும் வேலைக்கு "பெருங்குழி மாற்று, சிறுகுழி மாற்று" என்ற சொற்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்றைக்கு மாற்றுதல்/மாறல் என்ற சொற்கள் வேறு பொருள் கொள்ளப் படும் என்பதால், முந்தைய வடிவமான மலித்தல் என்பதையே நான் பெருக்குதலோடு சேர்ந்து இங்கு பரிந்துரைக்கிறேன். பெருக்குதல், மலித்தல் என்பவை போக இன்னொரு சொல்லும் அகரமுதலிகளில் இருக்கிறது. அது குணித்தல்/குணத்தல் என்று சொல்லப்படும். பெருக்கல் என்பது ஒரு விரிந்த கூட்டல் (extended addition) என்ற முறையில் குணித்தல் என்பது கணித்தல் என்பதோடு தொடர்புள்ளது; கணித்தல் கூட்டலோடு முதலிலும், நாளடைவில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்னும் நான்கு செயற்பாடுகளையும் குறிக்கத் தொடங்கியது. இன்றைக்கு கணித்தல் என்ற சொல்லின் பொருட்பாடு இன்னும் விரிந்திருக்கிறது. ஆகப் பெருக்கல், மலித்தல், குணித்தல் என மூன்று சொற்கள் தமிழில் பெருக்கற் கருத்தைச் சொல்ல வாகாக உள்ளன. அந்த வகையில் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும் குறிக்கப்படும் குணகாரம், குணனம் = பெருக்கல், குணித்தல் = பெருக்குதல், குணகம் = பெருக்கும் எண், குண்ணியம், குணனீயம் = பெருக்கப்படும் எண், குணிதம் = பெருக்கிவந்த தொகை என்ற சொற்களையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நாற்பத்தி ஆறாவது சொல் multitude; இது மல்குதல்/மலிதல் என்ற வினையில் இருந்து உருவானதொரு பெயர்ச்சொல். மல்கிக் கிடப்பதால் இதை மல்கணம் என்றே அழைக்கலாம்.

நாற்பத்தி ஏழாவது சொல் number = எண்; இப்பொழுது விளக்கத் தேவையில்லை. பின்னொரு நாள் இதன் சொற்பிறப்பை விளக்க முயலுவேன். (அது ஒரு நீண்ட ஆய்வு. எல்லோரும் எள்ளோடு தொடர்புடையது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; அப்படிச் சட்டென்று சொல்லிவிடமுடியாது. எண்ணின் சொற்பிறப்பு நம்மைத் தமிழ்க் கணிதவியலின் ஆழத்திற்குக் கொண்டு போகும். கணிதவியலிலும் நமக்கு ஒரு கொடிவழி இருக்கிறது. அதை விரிவாய் ஆய்வதற்குத் தான் ஆட்களைக் காணோம்.)

நாற்பத்தி எட்டாவது சொல் nano = நூணு. அண்மையில் டாடா நிறுவனத்தினர் மிகக் குறைந்த விலையில் ஒரு சீருந்தை வடிவமைத்து அதற்கு nano என்று பெயரிட்டு அழைத்தார்கள். தவிர 10^-9 என்ற எண்ணை nano என்று கணிதத்தில் அழைப்பார்கள். நுண் என்னும் அடிச்சொல்லின் நீட்சியாய் நூணு என்றே நாம் அழைக்கலாம்.

நாற்பத்தி ஒன்பதாவது சொல் narrow. இதையும் நுல் என்னும் வேரில் இருந்து நுறு என்று சொல்லின் வழியாக நுறுவு என்ற சொல்லால் குறிக்க முடியும். narrow path = நுறுவிய பாதை; அதாவது ஆகக் குறுகிய பாதை.

இனி, ஐம்பதாவது அளவுச் சொல்லான nice என்பதைப் பார்ப்போம். "போட்டு நொய்ச்சு எடுத்துட்டாண்டா" என்றும், "அரிசியை நொய்யாகத் திரித்துக் கொள்" என்ற பேச்சிலும் வரும் நொய் என்பது nice மற்றும் powdery என்பதையே குறிக்கும். ஒரு குறுணை (grainy) இல்லாமல் வழவழப்பாக இருப்பது நொய். நொய்யும் வினை நொய்தல். யகர/சகரப் போலியில் நொய்வு என்பது நொசிவு என்றும் பேச்சுவழக்கில் வரும். கரடு முரடாக இல்லாமல் இருக்கும் பொருளையும், மாந்தரையும் nice என்ற கருத்தால் குறிக்கிறோம். தமிழில் அதற்கு இணையான சொல் நொசிவு என்பதே.

அடுத்துவரும் ஐம்பத்து ஒன்றாவது சொல்லான plenty = பலவாறு, ஐம்பத்து இரண்டாவது சொல்லான short = குறு, ஐம்பத்து மூன்றாவது சொல்லான size = அளவு, ஐம்பத்து நான்காவது சொல்லான small = சிறு, ஐம்பத்து ஐந்தாவது சொல்லான spread = பரத்திய, ஐம்பத்து ஆறாவது சொல்லான thin = சன்ன ஆகியவற்றிற்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை

ஐம்பத்து ஏழாவது சொல்லான volume என்பதைக் கன அளவு என்றே சொல்லிவந்திருக்கிறோம். உண்மையில் கன என்பது எடை தொடர்பான சொல்; கனமாக இருக்கிறது என்பது எடையாய் இருக்கிறது என்றே பொருள்படும். முப்பரிமான அகற்சிச் சொல்லான volume என்பதைக் குறிக்க வெளியை நிரப்பும் வினைச்சொல்லை நாட வேண்டும். வெள்ளுதல் என்பது வள்ளுதலில் இருந்து பிறந்த சொல். வள்ளுதலும் பெருத்தலே. வள்ளுதலில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் வளம் (=பெருமை, செழுமை, மிகுதி, prosperity) எப்படிப் பலம் பெலம் என்று பேச்சுவழக்கில் சொல்லப் படுகிறதோ அது போல, கட்டினான் என்பது கெட்டினான் என்று ஆவது போல, அகரவொலி எகரவொலியாகப் பலுக்கப் படுவது தமிழில் பல இடத்தும் நடக்கிறது. பெருத்தல் என்னும் பொருள் கொண்ட வள்ளுதல் வெள்ளுதல் என்றாவது இயற்கையே. ஆனால் வியப்பு என்னவென்றால், பெயர்ச்சொல் மட்டுமே இன்றையத் தமிழில் இருக்கிறது. வினைச்சொல்லைக் காணோம். பொதுவாய் பெருக்கு என்பது flow வைக் குறிப்பதால், ஒரு வேற்றுமை கட்டுவதற்காக, அளவில் பெருகுவதை வெள்ளம் என்று சொல்லலாம். அதே பொழுது வெள்ளம் என்ற சொல் flow என்னும் கருத்தீட்டை ஒரு சில போதுகளில் குறிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது. அறிவியற் சிந்தனை பெருக வேண்டுமானால், volume என்பதற்கும் flow என்பதற்கும் தமிழில் சரியான சொல்வேறுபாடு காட்டத்தான் வேண்டும். அதே பொழுது அதை எடையோடு தொடர்புறுத்தக் கூடாது.

என் பரிந்துரை `volume = வெள்ளம்; flow = பெருக்கு என்பதே.

ஐம்பத்து எட்டாவது சொல்லான weighty என்பதை எடையான, நிறையான என்ற சொற்களால் சொல்லலாம்.

இந்தப் பகுதியில் உரைத்த அளவுச் சொற்களும், மற்ற சொற்களும் வருமாறு:

minute = நுணுத்து, நுணுத்தம்
minimum = நுணுமம்
minor = நுணுவிய, நுணுவர்
minority = நுணதி
mode = முகடு, மோடு
more = மேல்
most = மேலேற்று
much = மொகு
multi = மல்
multiply = மல்குதல், மலித்தல், பெருக்குதல், குணித்தல்/குணத்தல்
multiplication = மலிக்கல், பெருக்கல், குணகாரம், குணனம்
multiplying number = குணகம்
multiplicant = குண்ணியம், குணனியம்
product after multiplication = குணிதம்
multitude = மல்கணம்
number = எண்
nano = நூணு
narrow = நுறுவு
nice = நொசிவு
plenty = பலவாறு
short = குறு
share = கூறு, பங்கு
size = அளவை
small = சிறு
superlative = உயருறவு
spread = பரத்திய
thin = சன்ன
volume = வெள்ளம்
weighty = எடையான
density = திணிவு, அடர்த்தி
second = செகுத்தம், நொடி

இனி அடுத்த வரிசைகளுக்குப் போவோமா?

அன்புடன்,
இராம.கி.

Monday, February 18, 2008

மீட்டும் ஒரு நாள்காட்டு

இரண்டே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு கிழமை (= வாரம்) முழுதும் நாள்காட்டச் சொல்லி தமிழ்மணத்தில் கேட்டுக் கொண்டார்கள். (அப்படி நாள்காட்டியது 11/4/2005 பங்குனித் திங்கள் பரணி நாள் திங்கட்கிழமை.) இப்பொழுது, மீண்டும் நாள் காட்டுவது 18/2/2008 மாசித் திங்கள் 6 ஆம் திகதி கும்ப ஞாயிறு புனர்பூச நாள் திங்கட்கிழமை. இன்னும் மூன்று நாட்களில் மாசி மகம். தமிழ்நாடெங்கணும் சிவம், விண்ணவம் ஆகிய சமய நெறிகளோடு சேர்ந்து அந்த நாளில் ஒரே நீராடல் தான். (ஆனாலும் இந்த நீராடல்களுக்குக் காரணம் சமய நெறிகள் தானா என்ற கேள்வி எனக்குள் நெடுநாளாய் எழுந்தது உண்டு. இன்னும் விடை கண்டேன் இல்லை.)

இப்பொழுது நாள்காட்டிற்கு வருவோம். காலங்கள் என்னும் தொடரில் திங்கள் என்னும் சொல், நிலவை ஒட்டிவந்த மாதப் பெயர் என்று சொல்லியிருந்தேன். ஓர் அமையுவாவில் இருந்து (அமாவாசையில் இருந்து) இன்னோர் அமையுவா வரைக்குமான காலத் தொடர்ச்சியைத் திங்கள் என்று தமிழர் வானியலில் சொல்லுவார்கள். (தமிழர் வானியலை ஏதோ வடமொழியில் இருந்து கடன் வாங்கியதாகவே இந்தியரில் பலரும் மேலையரில் ஒரு சிலரும் பார்க்கிறார்கள். அது முற்றிலும் தவறான பார்வை. நாவலந்தீவினுள் அறிவு உறவாடல் என்பது வடக்கிலும் தெற்கிலுமாய்ச் சேர்ந்துதான் இருந்தது. தமிழர் பங்களிப்பைக் குறைப்பதில் ஒருசிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களோ?) வெறுமே நிலவு புவியைச் சுற்றி வரும் காலத் தொடர்ச்சியைப் பார்த்தால், 27.3216615 நாட்கள் எடுக்கும். இந்தத் தொடர்ச்சியை ஒரு சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (அதாவது, சந்திரன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை மட்டும் அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி இந்தத் திங்கள் ஆகும்.)

அதற்கு மாறாக, ஒவ்வோர் அமையுவாவிலும் (அல்லது பூரணையுவாவிலும்) சூரியன், புவி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்குமாப் போலப் பார்த்தால், 29.5305888 நாட்கள் பிடிக்கும். இப்படிச் சூரியன், புவி, நிலா மூன்றும் ஒன்றுபோல் சேர்ந்திருக்கும் காலத் தொடர்ச்சியைச் சூரியச் சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (சூரியன், சந்திரன், புவி என் மூன்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி.) இப்படி அமையும் 12 சூரியச் சந்திரமானத் திங்கள்கள் சேர்ந்தால் 29.5305888*12 = 354.367056 நாட்கள் கொண்ட ஓர் ஆண்டு கிடைக்கும். ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தச் சூரிய சந்தமான ஆண்டே புழக்கத்தில் இருக்கிறது. இசுலாமிய ஆண்டும் ஒரு சூரியச் சந்திரமான ஆண்டே! அதே பொழுது, இசுலாமிய ஆண்டுபோல இல்லாமல், ஆந்திர மாநிலத்தில் சூரிய ஆண்டிற்கு இணங்கச் சில மாற்றங்களைச் செய்து கொண்டு சூரியச் சந்திரமான ஆண்டுத் தொடக்கத்தை (அதாவது உகாதியை) பெரிதும் நகரவிடாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். இசுலாமிய ஆண்டின் தொடக்கமோ ஒவ்வோர் ஆண்டும் 11 நாள் முன் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்; ஏனென்றால் அவர்கள் நிலவின் இயக்கத்திற்கு அவ்வளவு முகன்மை கொடுப்பவர்கள்.

சந்திர மாதங்களையும், சூரியச் சந்திரமான மாதங்களையும் தான், சித்திரை, வைகாசி, ......... மாசி, பங்குனி என்று நாம் அழைக்கிறோம். இந்தப் பெயர்கள் எல்லாம் 27 நாள்காட்டுக்களில் 12 நாள்காட்டுக்களை மட்டுமே குறிப்பவை. பொதுவாய், பூரணையன்று எந்த நாள்காட்டு நிலவோடு பொருந்தி வருகிறதோ அதே பெயரையே அந்தத் திங்களுக்கும் முன்னோர் பொருத்திச் சொன்னார்கள். காட்டாகச் சித்திரை நாள்காட்டு, பூரணை நிலவோடு சேர்ந்து வரும் மாதம் சித்திரை மாதம். அதே வகையில், மக நாள்காட்டு பூரணையோடு பொருந்திவரும் மாதம் மாசியாகும். சித்திரை, வைகாசி என்ற பெயர்களில் ஒரு சில திங்கட் பெயர்கள் திரிவு கொண்டு சங்கதத் தோற்றங்களை வெளியே காட்டினாலும், அவை ஒவ்வொன்றின் உள்ளேயும் தமிழ்க் கூறுகள் அடங்கியிருக்கின்றன; அவை முற்றிலும் சங்கதப் பெயர்கள் அல்ல.

மாசி என்ற ஒலிப்பும், மகம் என்ற ஒலிப்பும் என்ன பொருள் கட்டுகின்றன, எப்படி அவை இணை கொண்டன, தமிழ் வேர் எங்குள்ளது என்பதை உன்னித்து பார்த்தால், அறியலாம். மக நாள்காட்டு என்பது ஒரு தனி நாள்காட்டு அல்ல. அதுவும் ஒரு நாள்காட்டுக் கூட்டம் தான்; ஐந்த நாள்காட்டு அடங்கிய கூட்டம். அந்தக் கூட்டம் இரவில் பார்க்கும் போது ஒரு கலப்பையின் வளைந்த நுகத்தடி போன்று காட்சியளிக்கும். காளையின் கழுத்தில் கட்டப்படும் மரமும் கூட நுகத்தடி என்றே தமிழில் அழைக்கப் படும். [தற்பொழுது மரு. செயபாரதி அகத்தியர் மடற்குழுவில் மகவோட்டம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். அதை விளக்கும் முகமாக மடங்கல் இராசியைப் (சிம்ம இராசியைப்) படம் போட்டுக் காண்பித்திருக்கிறார். அதற்கான சுட்டி கீழே.

http://www.geocities.com/jaybee4127/magam_simmaraasi.html

இந்த இராசிக்குள் ஐந்து நாள்காட்டுக்கள் கொண்ட மக நாள்காட்டுக் கூட்டமும் காணப் படும். அந்தக் கூட்டத்தை மட்டும் பார்த்தால், அது ஒரு வளைந்த நுகத்தடி போல் இருப்பது புலப்படும்; அதே பொழுது. முழு இராசியையும் பார்த்தால் சிகைமா - சிங்கம் - என்ற உருவம் புலப்படும். சிகைமா - சிங்கம் என்ற சொற்பிறப்பை காலங்கள் என்ற என் தொடரில் கூறியிருக்கிறேன்.] வளைந்த நுகம் என்பதால் கொடுநுகம் என்று இந்தக் கூட்டம் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. நகரமும் மகரமும் தமிழில் போலியானவை. நுடம் முடம் ஆகும்; முப்பது நுப்பது ஆகும். அந்த வகையில் நுகம் முகம் என்று ஆகும். அடுத்து உகரத்தை அகரமாயும், அகரத்தை உகரமாயும்/ஒகரமாயும் சிலபோது பேச்சில் பலுக்குவது தமிழில் பலரும் செய்வது தான் (மகளே என்பதை முகளே>மோளே என்று மலையாளத்தில் பலுக்குவதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புலப்படும்.) நுகம்>முகம்>மகம் என்ற திரிவில் நாள்காட்டின் பெயர் அமைந்தாலும் உருவம் நுகத்தடி என்பதை மறந்து விடாது பார்த்தால் பெயரின் உள்ளே இருக்கும் தமிழ்மூலம் புலப்படும்.

இனி மக நாள்காட்டுப் பொருந்திய மாதம் மகயி. எப்படித் துகள் பொருந்திய கூட்டம் துகயி>துகசி>தூசி என்று ஆகிறதோ, அதே போல மகம் நிறைந்தது மகயி>மகசி>மாசி என்று ஆகும். யகரம் சகரமாவதும் தமிழ்த் திரிவு தான். உயிர்>உசிர் என்று திரிவை எண்ணிப் பாருங்கள். இனி, மக என்னும் ஒலி மா என்று நீண்டொலிப்பதற்கும் காட்டுக் கூறமுடியும். மகன்>மான் (அதியமான்), மகள்>மாள் (வேள் மகள்>வேண்மாள்) என்று ஆவதைப் போல, மகசி மாசியாகும்.

சூரியச் சந்திரமான மாதத்திற்கு மாறாக, மூன்றாவது முறையில் நிலாவை முற்றிலும் ஒதுக்கிட்டு, புவி சூரியனைச் சுற்றி வரும் ஓராண்டுக் காலத்துக்குள் எத்தனை முறை தன்னுருட்டு (self rotation) செய்கிறது என்று பார்த்தால், 365.256364 தன்னுருட்டுக்கள் (அதாவது 365.256364 நாட்கள்) என்று புலப்படும். இந்தக் கணக்கைச் சூரிய மானம் என்று சொல்லுவார்கள். (சூரியன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத்தொடர்ச்சி ஒரு சூரிய ஆண்டு.) இதில் ஒவ்வோர் ஆண்டையும் அறவட்டாக (arbitrary) 12 மாதங்கள் என்று பிரித்தால், ஒரு சூரிய மாதம் அல்லது ஞாயிறு என்பது 365.256364 / 12 = 30.43803 நாட்கள் கொண்ட காலத் தொடர்ச்சியாகும். (மாதம் என்ற சொல் முதலில் மதியை ஒட்டி எழுந்திருந்தாலும் இன்று பொதுமைப் பொருளையையே குறிக்கும் சொல்லாக இதைப் பழகியிருக்கிறோம். அதே பொழுது திங்கள், ஞாயிறு என்ற சொற்கள் விதப்பான பொருளையே காட்டுகின்றன.)

சூரியச் சந்திர மானக் கணக்கில் மாதம் என்னும் காலத் தொடச்சி பெருமிதி (primitive)யானது; ஆண்டு என்பது அடுத்து வருவது; மாதத்தில் இருந்து பெறப்படுவது. அதே பொழுது, சூரிய மானக் கணக்கில் புவி சூரியனைச் சுற்றிவரும் சூரிய ஆண்டு என்பதே பெருமிதியானது; மாதம் என்பது பின்வருவது; ஆண்டில் இருந்து பெறப்படுவது. இந்த அடிப்படையைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

ஞாயிற்று மாதங்கள் மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துளை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று சொல்லப் படும். இவை அத்தனையும் நல்ல தமிழ்ப்பெயர்கள். [ஒருசிலர் புரியாமல் கும்பம், மீனம் போன்றவை வடமொழி என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் சிலர் வடமொழித் திரிவையும், மொழிபெயர்ப்பகளையும் பெருமிதியாக எண்ணிக் கொண்டு தமிழ்ச்சொற்களை வழிப்பட்டதாகச் சொல்லுவது உண்டு. வடசொற் தோற்றமுள்ள சொற்களின் பிறப்பை ஆய்ந்துபார்க்கும் போதுதான், தமிழ் வேர் சரியாகப் புலப்படுகிறது.] தற்போது காலங்கள் என்ற என் தொடரில் இந்தப் பெயர்கள், மற்றும் நாள்காட்டுகளின் சொற்பிறப்புகளை என்னால் முயன்றவரை தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறேன். முதல் ஆறு மாதங்களின் பெயர்களை இதுவரை விளக்கியிருக்கிறேன். மீதம் ஆறுமாதங்களின் பெயரை இனி வரும் பகுதிகளில் விளக்க வேண்டும். (மேலே, மேழத்தில் இருந்து மாத வரிசையை எழுதியதால், மேழத்தில் தான் தமிழ் ஆண்டு தொடங்க வேண்டுமா, அன்றிச் சுறவத்தில் இருந்து தொடங்கலாமா என்ற கேள்விக்குள் இப்பொழுது நான் போகவில்லை; அதற்கான மறுமொழியைக் காலங்கள் தொடரில் உறுதியாகச் சொல்லுவேன். கூடவே, இந்த மறுமொழி, தினமணி நாளிதழில் தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு. எஸ். ராமச்சந்திரன் அண்மையில் வெளியிட்டிருந்த "சித்திரையில் தான் புத்தாண்டு" என்ற நீண்ட கட்டுரைக்கும் முன்னிகையாக இருக்கும்.)

தமிழ்நாடு, மலையாளம் போன்றவற்றில் சூரியமானக் கணக்கே பின்பற்றப் படுகிறது. ஒரு காலத்தில் திங்கள் மாதமும், ஞாயிற்று மாதமும் அருகருகே சேர்த்துத் தான் சொல்லப் படும். பல சோழர் காலக் கல்வெட்டுக்களில் அப்படி சேர்த்துச் சொல்வது பதிவு செய்யப் பட்டிருக்கிறது. பின்னால், இந்தப் பழக்கம் பழைய சேரலத்தில் (இன்றையக் கேரளத்தில்) மட்டுமே இன்று நிலைத்து, இன்றையத் தமிழகத்தில் மறைந்து போனது; (அது என்னவோ தெரியவில்லை, பழைய தமிழ் வழக்கங்கள் பலவும் இன்று கேரளத்தில் மட்டுமே மீந்துள்ளன. தமிழகத்தில் அவை மாறிப் போய்க் கிடக்கின்றன. காட்டாக தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படி, ஆவணியில் ஆண்டைத் தொடங்கும் வழக்கம் தென்கேரளத்தில் இன்றும் உள்ளது.) கூடவே சூரிய மாதங்களைத் திங்கள் பெயரை வைத்தே போலியாய் அழைக்கும் குழப்பமும் இன்றையத் தமிழகத்தில் ஏற்பட்டது. அதன்படி மேழ ஞாயிற்றைச் சித்திரை என்றும், விடை - வைகாசி, ஆடவை - ஆனி, கடகம் - ஆடி, மடங்கல் - ஆவணி, கன்னி - புரட்டாசி, துலை - ஐப்பசி, நளி - கார்த்திகை, சிலை - மார்கழி, சுறவம் - தை, கும்பம் - மாசி, மீனம் - பங்குனி என்றும் போலியாய் அழைக்கப் பட்டன.

ஒரு வேடிக்கையைப் பாருங்கள். முதலில் வெறும் சந்திர மான மாதத்திற்கு அழைத்த பெயர்கள், கொஞ்சம் நீண்டு சூரியச் சந்திர மான மாதங்களைக் குறித்து பிறகு இன்னும் நீண்டு முற்றிலும் சூரிய மான மாதங்களைக் கூடக் குறிக்கத் தொடங்கின. குழப்பம் வராதா? இல்லையா? வானியலில் துல்லியமாய்க் குறிக்க வேண்டுமானால் (நாள்காட்டி என்பதில் துல்லியம் காட்டாமல் எப்படி?) சூரிய மானப் பெயர்களை போலிப்பெயர் சொல்லாது மேழம் ...... மீனம் என்றே குறிப்பதே நல்லது. இன்னமும் சேரலத்தார் அப்படித்தான் குறிக்கிறார்கள். (தனித்தமிழ் இயக்கத்தார் மட்டும் பாவாணர், பெருஞ்சித்திரனாரின் முயற்சியால் சூரிய மானப் பெயர்களையே இப்பொழுது பயிலுகிறார்கள்.)

மக நாள்காட்டை வைத்துப் பல பழமொழிகளை நாட்டுப்புறத்தில் சொல்லுவார்கள். அரசியலில் கழக அம்மாவுக்கும் கூட ஒரு மக நாள்காட்டுப் பழமொழி சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் இங்கு விவரிக்கப் புகவில்லை.

மக நாள் இந்த ஆண்டு பெப்ருவரி 21, மாசி 9- ல் நடைபெறும். மாசி மகம் என்னும் இந்தப் பண்டிகை சிவ, விண்ணவ நெறிகளில் தீர்த்தவாரியோடு - அதாவது கடலாடல், ஆறு, குளம் போன்றவற்றில் நீராடல் - சேர்த்துச் சொல்லப்படும். தீத்தம்/தீர்த்தம் என்ற வடமொழிச் சொல் துளித்தம் என்னும் தென்சொல்லோடு தொடர்பு கொண்டது. (எப்படிச் சிந்து என்ற சொல் சிந்துகின்ற நீரைக் குறிக்கிறதோ, அது போலத் துளிக்கின்ற நீர் துளித்தம்.) சமய நெறிகளில் மாசி மகத்திற்கு இருக்கும் தொடர்பையும் நான் இங்கு எடுத்துரைக்க முற்படவில்லை. [மார்கழி நீராடல், தைந் நீராடல், தீர்த்த வாரி என குளிர்காலத்தில் அடுத்தடுத்த மாதங்களில் அதிகாலை நீராடலை அழுந்திச் சொல்லும் சூழ்க்குமம் தான் என்ன? இது சமய நெறிகளின் வழிகாட்டலா? அல்லது பண்பாட்டு வழக்கின் தாக்கமா? ஓர் ஆய்வுக் கேள்வி நம்மை அழைக்கிறது.]

அடுத்து, வேறொரு புலனத்துக்கு நகரலாங்களா?

அன்புடன்,
இராம.கி.