Tuesday, August 27, 2019

சிலம்பு ஐயங்கள் - 5

இனிக்

”கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்” ....
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=557.

என்ற காடுகாண்காதை (196) வரிகளுக்கு வருகிறேன். மதுரைக்காண்டத்தின் முதலில் வரும் காடுகாண் காதையின் களத்தையும், வேதமறுப்பாளரின் சில பொதுமைகளையும், பார்ப்பனரின் விதப்புக்களையும்  ஓரளவு அறிந்து கொள்வது நம் புரிதலைக் கூட்டும். இம்மடலில் அதைத்தான் செய்யப் போகிறேன்.  கதைநடந்த காலத்தில் உறையூரை விட்டு வெளிவந்தவுடன் காவிரித் தென்கரைக்கு வெகு அருகில் பாண்டியநாட்டெல்லை தொடங்கி விடுகிறது. (அதனாற்றான் இக்காதை மதுரைக்காண்டத்துள் வருகிறது.) “காதம் எவ்வளவு தூரம்?” என்ற உரையாடலில் இக்காலத்திய பாண்டிய, சோழப் பகுதிகளின் அளவைப் பற்றி ”பழந்தமிழர் நீட்டவைகள்” என்ற கட்டுரைத் தொடர் மூலம் கணக்குப் போட்டுச் சொல்லியிருந்தேன். அந்தக் கணக்கு எனக்குப் பெரும் வியப்பைக் கொடுத்தது. சிலம்பைப் புரிந்து கொள்ளவும் வழிவகுத்தது.

அக்காலத்தில் சேரநாடே பென்னம் பெரியது. [அதனாற்றான் சேரன் செங்குட்டுவன் அவ்வளவு துள்ளியிருக்கிறான். தமிழகத்திற்கே தன்னை ஆழிவேந்தன்(சக்ரவர்த்தி) போல் எண்ணி, வடக்கே படையெடுத்துள்ளான்.] பாண்டியநாடு அதற்கடுத்த அளவானது. அளவில் மிகச்சிறியதான அற்றைச் சோழநாட்டில் நாகநாடும் (நாகநாட்டுள் வட இலங்கையையும் சேர்ந்தது. மணிபல்லவம், நாகனார் தீவுதானே?) வளநாடும் முறையே புகாரையும் உறையூரையும் தலைநகராய்க் கொண்ட பகுதிகள். இவற்றிலும் நாகநாட்டை விடச் சிறிய வளநாட்டின் இருப்பை உறுதிசெய்தவன்  செங்குட்டுவனே. தன் மாமன் மகனை (அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனாகலாம் என்ற ஊகத்தை என்நூலிற் சொல்லியிருப்பேன்.) இருத்துவதற்காக 9 மன்னர்/வேந்தருடன் போரில் வென்றது சிலம்பிலே சொல்லப்படுகிறது. சிலம்பின் காலத்தை கி.மு.75 என்றே நான்சொல்வேன். கி.பி.144 இல் சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாமென்பதை நான் முழுக்க மறுப்பேன். வரலாறு மிகுந்து புனைவு குறைந்த சிலம்போடு புனைவுமிகுந்த மணிமேகலையை இரட்டைக் காப்பியமாய் ஆக்கிச் சிலம்பின் காலத்தைக் கீழிழுப்பதை நான் மறுப்பேன். பெரும்பாலும் மணிமேகலையின் காலம் கி.பி.285-385 க்குள் ஆகலாம்.

காவிரிக்குத் தெற்கே அழனி(>அக்னி)யாறு தொடங்கி, பாமணியாறு, அம்புலி யாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, பாம்பாறு வரையுள்ள வளை பகுதியைக் (முழுப் புதுக்கோட்டை, கொஞ்சம் போல் சிவகங்கை மாவட்டம்) காலகாலத்திற்கும் சோழரும், பாண்டியரும் பந்தாடினர். அது சோழத் தோற்றமுங் காட்டும்; பாண்டிய மரபுங் காட்டும். மாற்றான் ஏமாந்தால் தினவெடுத்த சோழனும் பாண்டியனும் உடனே பிடுங்கிக் கொள்ளும் இப்பகுதியை முத்தூர்க்கூற்றமென்பார் (முத்தூற்றுக்கூற்றம் என்றுஞ் சொல்வர் முத்தூர்ப் பேட்டை (>முத்துப் பேட்டை), முத்தூரார் வயல் (>மித்திரா வயல்), முத்துக் குடா போன்ற முத்தெச்சங்கள் அங்கு நிறைய உண்டு. தவிரக் கிழக்குத்தொடர்ச்சிக் குன்றுகளிற் தொடங்கிய மேற்கூறிய ஆறுகளின் போக்கில் ஏராளம் கண்மாய்கள் / குளங்கள் ஏற்பட்டன. (கூகுள் படம் பாருங்கள், நான் சொல்வது புரியும்) உறுதியாக வெள்ளாறும் பாம்பாறும் பலகாலம் தடம்புரண்டு கொண்டே இருக்காவிடில் இத்தனை கண்மாய்கள் அங்கு எழ வாய்ப்பேயில்லை. பம்பியது (= அகலத்திற் பரவியது) பாம்பாறு (பாம்பிற்கும் அதற்கும் தொடர்பில்லை). அதேபோல வெள்கிய ஆறு வெள்ளாறு. இற்றை ஆற்றுப்போக்குகளால்  அற்றைக் கதைகளை உணர முடியாது.

இக்கதை நடந்த காலத்தில் முத்தூர்க் கூற்றம் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் வசமேயிருந்தது. அதனாற்றான் உறையூரை விட்டு வெளி வந்தவுடன் கொடும்பாளூர் போகும் வழியிலுள்ள அடர் விராலிமலைக் காடுகளில் (அக்காடே காடுகாண் காதையின் களம்) குடமலை சேர்ந்த மாங்காட்டுப் பார்ப்பான் தென்னவன் புகழ் பாடுகிறான். [பொதுவாக, இதுபோன்ற படித்தவர் என்பவர், ஒன்று தன்னாட்டு வேந்தனின் புகழைப் பாடுவர். அல்லது தான் பயணஞ் செய்யும் நாட்டு மன்னன் புகழைப் பாடுவர். இங்கே உறையூர்ச்சோழனின் புகழ் பாடப் படவில்லை. வியப்பாக இல்லையா? எனவே காதை நடந்தது பெரும்பாலும் பாண்டிய நாடாகவே இருக்க வேண்டும்.  இங்கே முகுந்தன் கேட்ட கேள்விக்கு உடனே வராது காதையைச் சற்று விவரிக்க விரும்புகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.

“திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தி லரங்கத் தகன்மொழி லகவயிற்”

என்ற காடுகாண் காதையின் முதல் 6 வரிகள் ஆதிநாதரை (முதல் தீர்த்தங்கரர்) வணங்குவதையும் நிக்கந்தர் பள்ளிப் பெரியோரையுங் குறிப்பிடுகின்றன. (கடவுள் என்ற சொல் இச்சமயங்களில் பெரியவர், தலைவர் என்றே பொருள்படும். எல்லாம் வல்ல இறைவனை அது குறிக்க வில்லை. சமயங்களுக்குள் இருக்குஞ் சிக்கலே வரையறைகளில் தான். அவை புரியாமற்றான் வீண் வாதங்களில் நாம் ஈடுபடுகிறோம்.) ஆதிநாதரை அற்றுவிகர், செயினர், புத்தர் எனும் மூவருமே ஏற்றுக்கொள்வர். நிக்கந்தர் என்ற சொல் ”பிறவிக்கட்டை நிறுத்துவோர்” என்றே பொருள்படும். கந்து என்றால் தமிழிற் கட்டென்றே பொருள். பார்சுவரை ஏற்ற எல்லாச் சமணருக்கும் நிக்கந்தரென்ற பெயருண்டு. பார்சுவருக்கு அப்புறந்தான் 3 பெரிய பிரிவுகள் ஏற்பட்டன (உண்மையில் ஏராளப் பிரிவுகள் அவருள் ஏற்பட்டன. அவையெல்லாம் ஒன்றுளொன்றாய்க் கரைந்து முடிவில் மூன்றாகின.) எப்படி நிறுவனமாகிய கிறித்துவமதம், ”கத்தோலிக்கம், இரோப்பிய எதிர்ப்பாளர், ஆங்கில எதிர்ப்பாளர், செரிலிக் எதிர்ப்பாளர்” என்று பலவகையாய்ப் பிரிந்ததோ அதுபோல பார்சுவருக்கு 250 ஆண்டுகள் கழித்து நிக்கந்தர் பள்ளியும் உடையத் தொடங்கியது.

இதில் செயினரே பிற்காலக் கத்தோலிக்கர்போல் அக்காலத்தின் நாட் பட்ட நிறுவனத்தைத் தூக்கிப் பிடித்தார். அற்றுவிகமும், புத்தமும் செயினத்திற்கு எதிர்ப்புச் சமயங்களாயின. பார்சுவரை ஏற்ற, மக்கலி கோசலரும், கௌதம புத்தரும் வர்த்தமான மகாவீரரை ஏற்கவில்லை. ”தாமே 24 ஆம் தீர்த்தங்கரர்” என்று  உரிமை கொள்ளத் தொடங்கினர். தமக்கே யுரிய நிறுவனங்களை ஏற்படுத்தினர். இவர் முரண்பட்டு நிக்கந்த நிறுவனத்தை விட்டு விலகியதால், நிக்கந்தப் பெயர் கி.மு.500களுக்கு அப்புறம் செயினரை மட்டுமே குறித்தது. ஆயினும் முப்பிரிவினரும் நிக்கந்தர் பள்ளிகளுக்குள் வந்து சென்று கொண்டிருந்தார். அவரிடையே இருந்த முரண் கி.மு.550 - 500 அளவில் கூராக வில்லை. பகைவர் எனும் அளவிற்கும் அது வளரவில்லை.

3 சமயங்களுமே பகைமுரணை ஏற்பவையல்ல. குறிப்பாக ”ஒரு நிகழ்வைப் பார்ப்பதில் பல்வேறு பார்வைகளுண்டு” எனும் ”அநேகந்த வாதத்தைப்” பின்பற்றிய செயினம் மற்ற இரண்டையும் பகைமுரணாய்க் கருதவில்லை. (ஆனால் மற்ற இரண்டையும் தம்மில் முரணிய மதங்களென்றே செயினம் சொல்லும்.) எனவே அற்றுவிகரும், புத்தரும் நிக்கந்தர் பள்ளிகளுக்கு வந்து போவதும், தங்குவதும், உரையாடுவதும், தானம் (>தியானம்) செய்வதும் நெடுங்காலம் ஏற்றுக்கொள்ளப் பட்டன. எனவே கி.மு.80-75 இல் இது நடை பெற்றது வியப்பில்லை. அதைத்தான் இந்தக் காதை சொல்கிறது. தவிர இப்பள்ளியில் சாவக நோன்பிகளும் தங்கிக் கொள்ளலாம்.  இரவில் சமணர் யாருமே நகரக் கூடாது. எனவே வைகறை யாமத்தில் (2-6 A.M) கோழி கூவிய பின் கதிரவன் கிழக்கே தோன்றிய பின், வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத்து இருக்கை புக்குழி (பண்ணை = நிறுவனப் படுத்தப் பட்ட வயல்; வாவி = குளம். இளமரக்கானம் = பெரிய மரங்கள் இல்லாத காடு. அப்படியே விராலிமலைப் பக்கத்தை உரித்துச் சொல்லும் விவரிப்பு) மாங்காட்டுப் பார்ப்பான் வருகிறான்.

இவ்விடத்தில் ஓர் இடைவிலகல். பார்ப்பனரைப் பற்றியது. முதலில் மாங்காட்டுப் பார்ப்பான், பின் புகார்க் கோசிகன், பின் தலைச்செங்காட்டு மாடலன், அப்புறம் கட்டுரைக் காதையின் வார்த்திகன் எனப் பல்வேறு பார்ப்பனர் செய்திகள் காப்பியத்தில் தொடர்ந்து வரும். இவரெலாம் வரலாற்று மாந்தரா எனில் வார்த்திகன் தவிர மற்றோரை அப்படி எண்ண முடிய வில்லை. கதையை முன்னகர்த்த சிலம்பின் ஆசிரியர் படைத்துக் கொண்ட கற்பனைப் பங்காளர் இவரென்றே சொல்லவேண்டும். தமிழ் நாட்டிற்கு வந்த பார்ப்பனர் பெரும்பாலும் கங்கைக்கரையில் இருந்து வந்ததாய் வரலாற்றாசிரியர் ந..சுப்பிரமணியன் சொல்வார். (1989 இல் வெளியான The Brahmin in the Tamil Country என்ற அவர் பொத்தகம் படிக்க வேண்டியவொன்று. இப்பொத்தகத்தை யாரேனும் இற்றைப்படுத்தி, கோத்திர வரலாற்று விவரங்களையுங் கூடச்சேர்த்து ஏரணக் கண்ணோட்டத்தோடு புதுநூல் கொணர்ந்தால் நன்றாக இருக்கும்.)

3 அலைகளில் கங்கைப்பகுதியிலிருந்து  பார்ப்பனர் தெற்கே வந்திருக்கலாம் என்று பேரா. ந.சுப்பிரமணியம் சொல்வார். முதலலை கி.மு. 1000-800 (மிகச் சிலர்) என்றும், இரண்டாமலை கி.மு.500-200 என்றும், மூன்றாம் அலை கி.பி. 300-500 என்றும் அவர் சொல்வார். 2 ஆம் அலை மகதநாட்டில் வேதநெறிக்கும் வேதமறுப்பு நெறிகளுக்கும் இடைநடந்த போட்டியில் அடுத்தடுத்த மன்னர் வேதமறுப்பை நோக்கிச் சாய்ந்ததால், வேறு புகலிடம் நாடித் தெற்கே வந்ததாய்ச் சொல்வார். சங்க இலக்கியத்தில் வேதநெறிக் கருத்துக்களும் உள்ளன. வேதமறுப்புக் கருத்துக்களும் உள்ளன. (சங்க இலக்கியச் செய்திகள் பார்த்தால் பெரும்பாலும் 2 ஆம் அலையினர்  முன்குடுமியராய் இருக்கவே வாய்ப்புண்டு. சோழநாட்டில் இவரே மிகுதி. இவரைச் சோழியரென்பார். நம்பூதிகளும் முன்குடுமி வைத்திருப்பர். மாங்காட்டுப்பார்ப்பான் ஒரு நம்பூதியாகலாம் கோசிகனும், மாடலனும் சோழியராகலாம். வார்த்திகன் பற்றிய விவரம் தெரியாது.

தமிழ்ப் பார்ப்பனர் ஆதி சங்கரருக்கு அப்புறம் பெருங்கணம் (பெருகச் சரணம்; இவரே பார்ப்பனர் எண்ணிக்கையில் மிகுதியானவர். அதனாலேயே இப்பெயர் பெற்றார்), எண்ணாயிரவர் (அஷ்ட ஸஹஷ்ரர்; எண்ணிக்கையால் ஏற்பட்டபெயர்) வார்த்திகர் (வாத்திமார்; வேதஞ் சொல்லிக் கொடுப்பவர் போலும்), வடமர் (இவரில் பெரும்பாலோர் மூன்றாம் அலையில் வந்தவர்; பல்லவ, பேரரசுச் சோழ அரசியலில் ஈடுபட்டவர்) என்று 4 வகைகளில் ஒருங்கு இணைந்தவர் ஆனார் ஸ்மார்த்தரென்றே இந்நால்வரும் இன்று அறியப் படுவார். (ஸ்ம்ருதியைச் சார்ந்தவர் ஸ்மார்த்தர்.) நாத முனிகளுக்கு அப்புறம், குறிப்பாக இராமானுசருக்கு அப்புறம், பல ஸ்மார்த்தர்கள் திருவிண்ணவர் (ஸ்ரீவைஷ்ணவா) என ஆகிவிட்டனர். இவருள்ளும் ”தென்கலை, வடகலை” என்று 2 பிரிவுகள் பின் ஏற்பட்டன.

இப்பின்புலத்தோடு, இக்காதையில் மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வதற்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.   :

No comments: