Wednesday, August 21, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 4

4 பகுதிகளில் இத்தொடர் முடியுமென நினைத்தேன். ஆனால் 8 ஆம் சொல்லான சித்திரம் அதிகம் இழுக்கிறது. இதன்விளக்கம் சற்று நீளம். ஏற்கனவே இதற்கு விளக்கங்கூறிய பலரும்  திசைமாறிப் போனார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியும்,  அதன் ஆதாரப் பாவாணர் விளக்கமும் ( வடமொழி வரலாறு பகுதி 1, பக் 148-149) ஆழ ஓர்ந்தால்,  பொருந்தவில்லை என்பதே இப்போதைய என் முடிபு. பாவாணரை நான் மறுப்பது கண்டு சினங்கொள்ளாதீர். சிலபோது ஆசானை மீறுவதில் தவறில்லை. அதேபொழுது நான் சொல்வதே சரியென வாதாடவும் இல்லை. இது ஒருவித  முயற்சி. அவ்வளவு தான். இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு. சிலப்பதிகாரம் கானல்வரித் தொடக்கத்தில் வரும் கட்டுரையின் முதல் நாலு வரிகள்,

”சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து,
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப்
பத்தருங் கோடும் ஆணியும் நரம்புமென்று
இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி”

என்று தொடங்கும். யாழைத் தொழுதுவாங்கி இசைக்கத்தொடங்கும் மாதவியை இவ்வரிகள் விவரிக்கின்றன.  செழுங்கோட்டின் மலர் என்பது கோட்டுப்பூ.  மைத்தடங்கண் மணமகளிர் என்பது கண்ணில் மைதீற்றிக் கொண்ட மகளிர். ”அது என்ன சித்திரப்படம்?”- என்பது நம்முன் எழுங் கேள்வி. ”சித்திரப்படம் ஓர் இரட்டைக்கிளவி” என்றே நம்மில்பலர் எண்ணிக் கொள்கிறோம். என்னைக் கேட்டால், சித்திரத்தின் அடிப்பொருள் ஓவியம்/படமாய் இருக்கத் தேவையில்லை . இங்கே அதுவொரு பெயரடை (adjective). சில போதுகளில் அதன் பொருள் படமாகலாம்.  சித்திரப் படத்தைப் புரிந்து கொள்ள நான் பலகாலம் சொல்லிவந்த  ”ஜல சமுத்ரம், நீர்க்கடல்” போன்ற கூட்டுச்சொற்களை ஓர்ந்து பாருங்கள். ஜலமும் சமுத்ரமும் ஒன்றா? நீரும், கடலும் ஒன்றா?

நீர் நிறைந்தது ஜல சமுத்ரம். கடலுக்கு என்ன பொருளென எண்ணுகிறீர்கள்? அகரமுதலி தேடுங்கள். கடல்= பரந்தது, அகன்றது, நிறைந்தது. அதுவொரு பண்புப் பெயர். பயன்பாட்டின் வழி தான் அதனுள் நீரைப் புரிந்து கொள்கிறோம். சமுத்ரத்திலும் ஜலமில்லை. நான் சொல்வது புரிகிறதா? கடல், ஓர் ஆகுபெயராய்  காலகாலமான மரபில், உலகில் பரந்துகிடக்கும் நீரைக் குறிக்கிறது. எல்லா மொழியிலும் இதுபோற் சொற்பயன்பாடுகள் ஓராயிரத்திற்கும் மேலுண்டு. Context determines the meaning here, while the basic meaning may be different. "நல்ல பையன்" என்று சொல்லிவிட்டு ஒரு கதையில் பையனைத் தவிர்த்து நல்லவன் என்று ஆசிரியர் எழுதிப் போவதில்லையா?  இன்னொரு கூட்டுச்சொல் பார்ப்போம்.

சித்திரச்சோறு (பெருமானர் சித்ரான்னம் என்பார் variety rice) என்று பல வீடுகளில் செய்வார். புளிச்சோறு, சருக்கரைச்சோறு,  எலுமிச்சைச் சோறு, எள்சோறு  என விதவிதமாய்ப் பல்வேறு சுவைகளில், பல்வேறு நிறங்களில்  சோறுபடைப்பது சிந்திரச் சோறு. இங்கே ”விதவிதமாய், வெவ்வேறாய்” என்ற பொருள் தான் முகன்மை. இன்னொரு காட்டைப் பார்ப்போம். ”செந்நூல் நிணந்த சித்திரக் கம்மத்து வெண்கால் அமளி விருப்பின் ஏற்றி” என்று பெருங்கதை உஞ்சைக்காண்டம், நருமதை சம்பந்தம் என்ற 35 ஆம் பகுதியில் :98-99 ஆம் அடிகளில்  வரும்.  அமளி =கட்டில். கம்மம்= வேலைப்பாடு. கம்மியர்= தச்சர், துன்னகாரர் (தையல்காரார்), கொல்லர், வினைஞர்= நுட்பியல்/கலை தெரிந்தோர்.

”செந்நூலால் முடைந்த, பின்னப்பட்ட, நெய்யப்பட்ட (=நிணந்த) சித்திரக் கம்மம்” என்பது  விதவிதமான, வெவ்வேறான, அடவுகளில் (design) செய்யப் பட்ட பொட்டு வேலையைக்  குறிக்கும். துணியில், புடவையில் அமையும் இப்பொட்டுகளை இக்கால மங்கையர் ”புட்டா” என்றழைப்பார். சவளிக் கடைகளில் விசாரித்துப் பாருங்கள். புடவையில் வரம்புகளில் அல்லாது உடற்பகுதியில் வரும். வட்டாரத்திற்குத் தக்க பல்வேறு பொட்டு அடவுகள் உண்டு. காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளில் மாங்காய், மயிலென விதப்புக் காட்டுவர் இராசபுதனப் புடவைகளில் ஒட்டகம், மயிலெனத் திகழும். ஊருக்கு ஊர் இதுமாறும். தமிழ் எழுத்துக்களைப் பொட்டாகப் போட்ட பட்டவங்களும் (pattern) உண்டு. ஒரு காலத்தில் மிகவும் விற்றது. சேரனின் ஒரு திரைப் படத்தில் விளம்பரப் படுத்தினார். பொதுவாய்ப் பொட்டில் காணும் நுணுக்கம், சிறுமை, detail என்பவையே முகன்மை. இப் ”புட்டாத்” தோற்றத்தையே சித்திரம் என்று இரு காட்டுகளிலும் அழைத்திருக்கிறார். இப்பொருட்பாட்டை வேறொரு காட்டின் மூலமும் தெளிவு பெறலாம். சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் ,

”...............ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொரு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலோடு புகுந்த கோமகன் கூடலை

என்று வரும் 104-109 ஆம் வரிகளுக்கு விளக்கமாய் அடியார்க்கு நல்லார் ”கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர் கோபம், சித்திரக் கம்மி, குருதி, சுரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி” என்று 35 வகைத் துகில்களை எடுத்து உரைப்பார். இத்துகில்கள் சிலம்புக் காலத்தில் இருந்தனவா? அடியார்க்கு நல்லார் காலத்தவையா? - என்பது  நமக்குத் தெரியாது. ஆனாலும் இப் பெயர்கள் முழு ஆராய்ச்சிக்கு உரியவை. நம்மூர்த் தமிழ்த் துறைகள் இவற்றைச் செய்யவேண்டிக் கேட்டுக் கொள்வோம்.  நாம் புரிந்து கொண்ட அளவில்  சித்திரக் கம்மியும், சித்திரக் கம்மமும் ஒன்றே. துணிகளில் பின்னப்படும் பொட்டுக்களையே அவை குறிக்கும் என்று எண்ணுகிறேன். 

சாப்பாடுத் தட்டில் பொட்டுப்பொட்டாய் விதப்புச்சோறு (variety rice) இட்டுச் சித்திரச் சோறு என்கிறாரே, அங்கும் இதேதான். சித்திரக் கருங்கல்= அங்கங்கே பொட்டுப்பொட்டாய்க் கண்ணைக் கவரும் வண்ணம் இயல்பாய் அமையும் அடவுகளை அடையாளங் காட்டும் கருங்கல்.  இதுபோல், ஒரு குறிப்பிட்ட கோலத்தில் அல்லது கோட்டுப்படத்தில் எழுத்துக்களைப் பொட்டென வைத்து கவி செய்வது சித்திரப்பா. எல்லாக் கவிஞராலும் இது முடியாது. பொட்டுப் பொட்டாய்ப் புள்ளிகள் கொண்ட ஒரு சேரநாட்டு மீனைச் சித்திரக்காரை என்பார். சித்திரக்குள்ளன்/ சித்திரக் குத்தன் என்பவன். கூற்றுவனிடம் உயிர்களின்  நல்வினை./தீவினைக் கணக்கெழுதிப் படிப்பவனாகக் கருதப்படும் வேடிக்கைக் குள்ளன். சித்திர என்று தொடங்கும் கூட்டுச்சொற்கள் மிகுதி.

சித்திர அம்பலம் கேள்விப்பட்டிருக்கிறீரா? தில்லைப் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், நெல்லைத் தாம்பர அம்பலம், ஆலங்காடு அரத்தின அம்பலம் போல், குற்றாலாத்தில் சித்திர அம்பலம் என்றொன்று உண்டு. நெடுநாள் அதன்பொருள் தெரியாதிருந்தேன். எல்லோரையும் போல் அது ஓவிய அம்பலம் என்றே எண்ணினேன். கம்போடியாவின் சியாம்ரீப் (Siem riep) போனபோது தான் புரிந்தது. சியாம்ரீப்பில் அங்கோர்வாட்டும், அங்கோர் தாமும் தான் சுற்றுலாப் பயணியருக்குப் பெரிதாய்த் தெரியும்.  அவை தவிர  7 ஆம் சூரியவர்மன் காலத்தில் 12 ஆம் நூறாண்டில் கட்டப்பட்ட Bayon. Ta Prohm, Preah Khan போன்ற ஆலயங்களும் அங்கு முகன்மையானவயே. இவற்றில் Preah Khan என்பது சற்று வியப்பானது. இன்னும் மீள்கட்டமைக்கப் படாத இக் கோயிற் பலக்கை (temple complex)யில் புத்தர் திருநிலைகளும் (சந்நிதிகளும்) சிவன் திருநிலைகளும், விண்ணவன் திருநிலைகளும் உண்டு. நான் இங்கே ஒரு சிவன் திருநிலையை விவரிக்கிறேன்.

8அடிக்கு 8 அடி கருவறை; கூம்புவடிவ விதானம்; நடுவே இலிங்கம்; சுற்றிலும் தரையிலும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைப்பதுபோல் செம்பாறாங்கல் (செம்புரான் கல்)  அதை மூடிப் போர்த்தியது போல் மாவுக்கல்லால் (sandstone) ஆன பட்டைச்சுவர். [நம்மூர்ச் சிற்பி/கற்றச்சர் அங்கு எளிதில் பொருந்திக் கொள்வார். இரு நாட்டவர் கலையும் நுட்பமும் ஒன்றுபோல் இருக்கும்.]. செம்புரான் கல்லைப் போர்த்திக் கிடக்கும் மாவுக்கல்லில் பொட்டுப் பொட்டாய்ச் சின்னஞ்சிறு ஒட்டைகளும் பொந்துகளும் இருந்தன.  கூடவந்த வழிகாட்டியிடம் ”இந்த ஓட்டைகள் ஏன்?” என்று கேட்டேன்.

”(1/2 அங்குலத்திலிருந்து 1 1/2 அங்குலம் வரை இருக்கும்) ஒவ்வொரு பொட்டிலும் ஏதோவொரு மணிக்கல் (ஆம், nine types of gems. ஒன்பான் மணிக் கல் - நவரத்னம்) அல்லது முத்து, பவளம் என்று ஏதோ) பதித்திருந்தது. 100, 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை கம்போடியருக்கும்  வியத்நாமியருக்கும் நடந்த சண்டையில் வியத்நாமியர் இவற்றைப் பறித்துப்போனார்" என்று வரலாற்றுச் சோகக் கதை படித்தார்,  கம்போடியருக்கும்  தாய்லந்து/சியாமியருக்கு இடையிலும் கூட இதுபோல் சதாப் போர்கள் நடந்துள்ளன. ஒருவருக்கொருவர் இப்படிக் கொள்ளையடித்தது அதிலும் அதிகம்தான். [நம் தமிழரசர் மட்டும் “யோக்கியரா” என்ன? மூவேந்தரும் ஒருவருக்கு ஒருவருடனும், குறுநில மன்னருடனும் சண்டையிட்டுச் செல்வம் கொள்ளை யடித்தது இதைவிட ஏராளம். வல்லான் வகுத்ததே அக்கால வாழ்க்கை.]  ஆக Preah Khan இல் நான் பார்த்தது சித்திரக் கருவறை. இப்போது குற்றாலம் சித்திர அம்பலத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பொட்டுப்பொட்டாய் சுவர் முழுவதும் மணிக் கற்கள், முத்து, பவளம் பதித்திருந்தால். பகைவர் விட்டு வைப்பாரா? முடிவில் சித்திரம் என்னும் பொருளை மாற்றி  ஓவியம் தான் வரையவேண்டும். 

இன்னொரு காட்சி காண்போமா? கேரளத் திருச் சிவபேரூர் (அதாங்க, திருச்சூர்) ஆடிப்பூரத்தில் நிற்கும் பற்பல யானைகளுக்கு பொட்டுக்கள அமைந்த முகபடாம் அணிவிக்கிறாரே அதைச் சித்திரப் படாம் என்றுஞ் சொல்வர்.  சித்திரத் தாளம் என்பது ஒன்பது வகைத் தாளம் சித்திரத் தையல் என்பது பல்வேறு பூவேலைப்பாடுகள் செய்த ஆடை.  சித்திரப்பாவாடை= பூவேலை செய்த பாவாடை. இன்னும் சித்திரத்தில் தொடங்கும் பல்வேறு கூட்டுச் சொற்களை நான் பட்டியலிடமுடியும். இங்கு எல்லாவற்றிலும் சித்திரம் என்பது ஒரு பெயரடை. அதன் பொருள் ”விதவிதம், வெவ்வேறு, பொட்டு, அழகு, நுணுக்கம், detail, something pleasant, intriguing, kaleidoscopic” - இப்படி விரியும்.  அதெப்படிச் சித்திரம் என்ற சொல் பிறந்தது? 

அடுத்த பதிவில் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

கண்ணாடிக்கலைஞர் இராமலிங்கன் said...

வணக்கமையா. இந்நான்கிடுகைகளையும் யான் தனியாகச்சேமித்துக்காத்துவருகின்றேன். இஃதொத்த பல்வேறிடுகைகளை நீங்களிடுவற்காக இறைவன் உங்களுக்கு நீண்ட வாழ்க்கையை
நிறைநலத்துடன் அருள இறைஞ்சுகின்றேன்.

கண்ணாடிக்கலைஞர் இராமலிங்கன் said...

வணக்கமையா. இஃதொத்த நான்கிடுகைகளையும் சேமித்துக்காத்துள்ளேன். மிகுநன்றியையா.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஐயா, இந்தப் பதிவை நீங்கள் வெளியிட்ட உடனேயே நான் விரிவான கருத்துரை ஒன்றை இட்டிருந்தேனே! வந்து சேரவில்லையா!

சித்திரம் எனும் ஒற்றைச் சொல் குறித்து இவ்வளவு விரிவாகத் தாங்கள் செய்துள்ள இந்த ஆய்வு விழி விரியச் செய்கிறது. இலக்கிய ஆராய்ச்சியில் தொடங்கி இலக்கண ஆராய்ச்சியில் தொடர்ந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சிற்பக்கலை வரை ஓர் அலசு அலசி விட்டீர்கள்! இவற்றுள் சித்திரச் சோறு பற்றி மட்டும் சிறியேன் ஒருமுறை சிந்தித்துள்ளேன். ஆனாலும் அதன் முழுமையான பொருளை உணரும் அளவு எனக்குத் தமிழறிவு போதாது.

ஆக, பொட்டுதான் சித்திரம் என்பதா? தங்கள் ஆய்வு முடிவு அறிய இதோ அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.