Wednesday, February 21, 2007

தனித் தமிழ் - 4

அடுத்து "பண்டைத் தமிழக நகரங்கள் பலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சீர்காழி நகரின் பெயர்கள் சம்பந்தர் தேவாரத்திலும், மதுரை நகரின் பெயர்கள் திருவிளையாடற்புராணத்திலும் வருகின்றன. இவற்றில் பல பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள். திருநெல்வேலிக்கு வேணுவனம், சாலிவாடீ என்றெல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்கள் கல்வெட்டுகளிலேயே உள்ளன. வேண்டுமென்றே செய்திருந்தால் இந்த நகரப் பெயர்கள் ஏன் சம்ஸ்கிருதமாக்கப் படவில்லை? யோசித்துப் பாருங்கள் மக்களே. உண்மை என்னவென்றால் அதிகமாக மக்களால் புழங்கப் பட்ட பெயர் பிற்காலத்தில் நிலைபெற்றது, அவ்வளவு தான்.
இதில் சதி, சூழ்ச்சி, அயோக்கியத் தனத்தை எல்லாம் தேடுவது துவேஷ மனப்பான்மையும், தமிழ்ப் பண்பாடு பற்றிய குறைபட்ட புரிதலுமே ஆகும்" என்று ஓட்டைத் தருக்கம் பேசுகிறார் திரு.ஜடாயு.

அதிகமாக மக்களால் புழங்கப்பட்ட பெயர்தான் நகரங்களுக்கு நிலை பெற்றதாம். இதைக் கல்வெட்டு வழி அறிந்தாராம். இந்த வடமொழிப் பெயர்களில் சதி, சூழ்ச்சி, அயோக்கியத் தனத்தை எல்லாம் தேடுவது துவேஷ மனப்பான்மையும், தமிழ்ப் பண்பாடு பற்றிய குறைபட்ட புரிதலுமே ஆகுமாம். ஆகா, எப்பேற்பட்ட கண்டுபிடிப்பு? இப்பேற்பட்ட வரலாற்றுத் திரிப்பு வாதிகள் இருந்தால் நாவலந்தீவின் வரலாறு உருப்பட்டு விடும்.

தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களை திரு.ஜடாயு நேரே படித்திருக்கிறாரா, அப்புறம் ஆய்வு செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை. [அடியேன் பொதுவாக தமிழக வரலாற்றுக் கல்வெட்டுக்களில் கனக்க நேரம் செலவழித்தவன். அதற்காகவே கிரந்த எழுத்துக்களையும், ஓரளவு வடசொற் களஞ்சியங்களையும், பல தொன்மங்களையும் தேடித் தேடிப் படித்தவன்.] கோயில் கல்வெட்டுக்களில் "கீழ்வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்வேதி மங்கலம்" என்று தான் திருநெல்வேலி குறிக்கப் படுகிறது. [ஒரு பானைச் சோற்றிற்கு ஒரு பருக்கை பதம் என்பதால், மற்ற ஊர்களைப் பற்றி நான் இங்கு சொல்லவில்லை.] வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரமவிருந்த புரம், தாருகாவனம் போன்ற பெயர்கள் எல்லாம் வெவ்வேறு நிலையில் இலக்கியம், தொன்மங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. பெரும்பாலும் மூங்கில் பற்றிய இயற்கைப் பெயர்கள் தான் இவற்றில் இருக்கின்றன. அவற்றில் கருத்தியற் காரணங்களைத் தேடிக் கொண்டு இருப்பது வரலாற்றிற்கு வழி வகுக்காது.

தமிழில் கோயிற் கல்வெட்டு என்பது அரசர், செல்வர் அல்லது ஆள்வோரால் அவர்களின் அதிகாரத்தையும், கட்டளைகளையும், கோயிலுக்குச் செய்த பணிகளைப் பற்றியும் பதிவு செய்கின்ற ஓர் ஆவணம்; அதில் மக்களாட்சிக் கூறுகளை ஆழத் தேடினால் அருகியே கிடைக்கும். திருநெல்வேலி எனும் ஊர் யாரோ ஒரு பாண்டியன் பெருமானருக்குக் கொடுத்த சதுர்வேதி மங்கலம். வியப்பாக இருக்கிறதோ? தாம்பரபெருநையின் கரைநெடுக, அதன்தோற்றம் வரை, சதுர்வேதி மங்கலங்கள் நிறைந்தே கிடக்கின்றன. இற்றைப் பெருமானரின் பழைய ஆற்றங்கரை ஊர்களை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டால் வியப்பு வராது. [கீழ்வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்வேதி மங்கலத்திற்கு அருகிலேயே பெருமானர் அல்லாதவர்க்குக் கொடுத்த ஊரும் (நெல்லூர்) இருக்கிறது. மங்கலங்கள் பெருமானருக்கும், நெல்லூர்கள் பெருமானர் அல்லாதவருக்கும் முற்றூட்டாகக் கொடுப்பது அற்றை அரசரின் பழக்கம். இது போல குடிகள், பாக்கங்கள், இன்ன பிறப் பெயர்களைப் பற்றியெல்லாம் ஆய்வுகளுண்டு. தமிழர் வரலாற்றில் நம்மவர் விளக்காதது நிறையவேயுண்டு.] நிலவுடைமைக் குமுகாயத்தின் அவலம் பற்றிய பழசையெல்லாம் கிளற வேண்டாமென்று பார்த்தேன். தமிழ்நாட்டில் காவிரிக் கரையிலும், வைகை, பொருநைக் கரைகளிலும் மூவேந்தர் கொடுத்த சதுர்வேதி மங்கலங்களும், கூடவே நெல்லூர்களும், நிலவுடைமைக் குமுகாயம் அன்றைய மக்களை முற்றிலும் பிணைத்து அழுத்தியதற்கு அடையாளங்கள் அல்லவா? அடிமைமுறை இந்நாட்டில் வெகுகாலத்திற்கு (100 ஆண்டுகளுக்கு முன்பு வரை) இருந்தது என்ற கொடிய அவலமெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டுமோ? (ஆமாம், கருப்பரை வெள்ளையர் அடிமை செய்ததுபோல் நம்மவரை நம்மவரே அடிமைசெய்த கொடுமைகள் இந்நாட்டில் நெடுகவே நடந்துள்ளன. நாம் நடந்துவந்த பாதை நீண்டது.)

பெருமானர், பெருமானர் அல்லாத உயர்குடிகள் என 2 ஆயத்தாரும் தம் சொத்துரிமையை நிலைநாட்டிக் கொண்டதும், உழைத்தவரின் விளைவுகளைத் தட்டிப் பறித்துக்கொண்டதும், மனுநீதி காப்பாற்ற நிகழ்த்திய தண்டனைகளைப் பதிவுசெய்ததும் கல்வெட்டின் மூலம் தான். [அக் கேடுகெட்ட மனுஸ்ம்ருதி இந்நாட்டை மிகவும் சீரழித்திருக்கிறது.] அதில் சதியும், சூழ்ச்சியும், அயோக்கியத்தனமும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதியமும் முற்றிலும் நிறைந்துதான் கிடக்கும். இத்தனை கிடக்கும்போது கூடவே அதை மறைக்குமாப் போல் வடமொழி விளங்காதா, என்ன? (முதல் பன்றி என்று எந்தத் தமிழனாவது பெயர்வைத்துக் கொள்வானா? ஆனால் ஆதிவராகன் எனப் பளிச்சிட்டுக்கூறி, விண்ணவன் பெயரை உயிர்த் தரித்தால், தண்டனிட்டு வைத்துக்கொள்வான் அல்லவா? சங்கதம் இப்படி இடக்கர் அடக்கலாயும் மூடிமறைத்துப் பெயர் சொல்லிக் கல்வெட்டுக்களில் வேலை செய்தது.) நூற்றுக்கணக்கில் கோயிற் கல்வெட்டுப் படித்தோர்க்கு அவற்றில்வரும் சொல்லாட்சிகளும், குறிப்புக்களும், வல்லாண்மைகளும் நன்றாகவே புரியும்.

ஒரு சப்பானிய அறிஞர் கராசிமா போதாதா, தமிழ் நிலவுடைமைக் குமுகாயத்தை அக்குவேறு ஆணிவேறாக கல்வெட்டுக்களின் மூலம் பிட்டு வைக்க? அதுபோன்ற ஆய்வுகள் அவரைப் பின்பற்றி வெள்ளமாய் இப்போது நடக்கின்றன. ஒரு சிலர் பார்த்தார், கல்வெட்டுக்களையே சீரழிக்கத் தொடங்கிவிட்டார். அதன்மேல் வண்ணம் பூசுவதும், எண்ணெய் அடிப்பது sand blasting செய்வதும் என இப்போது நடப்பவை கட்வெட்டுச் சீரழிப்பு அன்றி வேறென்ன?

மொத்தத்தில் நம் பழமை பல நேரங்களில் நாம் வெட்கப்பட வேண்டியதாய் இருந்தது என்பதே உண்மை. அதெபொழுது, நமக்கு வருத்தமாய் இருந்தாலும் அவற்றை இன்னும் ஆய்வு வேண்டும், அழிக்கக் கூடாது என்றுதான் நான் சொல்வேன். உண்மையைப் பின்னால் எப்படி அறிவது? தமிழ்ப்பண்பாடு பற்றிய திரு. ஜடாயுவின் விந்தையான நளினப்பார்வை ஒரு குறைப்பட்ட புரிதல் என்று மட்டுமே சொல்ல முடியும்.

இந்துத்துவர்கள் பழைய வரலாற்றுத் தவறுகளை அழித்துப் பூசிமெழுகி  புதுக் கற்பனை படைக்கவிழைகிறார். எப்படித் தொல்லியல் ஆதாரங்களை அழிக்க விழைகிறாரோ, அதுபோல் கல்வெட்டுகளையும் அழிக்க விழைகிறார். They are trying to re-write history.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

bala said...

//மொத்தத்தில் நம்முடைய பழமை பல நேரங்களில் வெட்கப்பட வேண்டியதாய் இருந்திருக்கிறது என்பதே உண்மை. //

இராம்.சாவி அய்யா,
பழமை மட்டுமா?புதுமை என்ன வாழ்ந்தது?திராவிட கும்பல் செய்யும் அயோக்யத்தனம்,தமிழுக்கும்,தமிழனுக்கும் பெருமையையா தேடித் தருகிறது?

பாலா

Machi said...

//மொத்தத்தில் நம்முடைய பழமை பல நேரங்களில் வெட்கப்பட வேண்டியதாய் இருந்திருக்கிறது என்பதே உண்மை. வருத்தமாய் இருந்தாலும் அவற்றை இன்னும் ஆய்வு வேண்டும் என்றுதான் நான் சொல்லுவேன்//

ஐயா சரியாக சொன்னிர்கள். அத்தவறுகளை தெரிந்து கொண்டால் தான் மீண்டும் அத்தவறுகள் நடக்காமல் தவிர்க்க முடியும்.