Wednesday, February 28, 2007

ஓதி - 3

hotr என்ற வேதச் சொல்லிற்கு இணையாக zaotr என்ற சொல் இரானிய நடைமுறையில் அவஸ்தாவில் சொல்லப்படும். சாரத்துஸ்ரா கூட ஒரு zaotr தான் என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். வட இந்திய ஒலிப்பிற்கும், இரானிய ஒலிப்பிற்கும் இடையே இந்த za என்னும் பலுக்க வேறுபாடு நெடுகவும் உண்டு. இங்கே சப்த சிந்து என்பது அங்கே ஹப்த ஹிந்து என்று ஆகும். சோமா என்பது ஹோமா என்று அங்கு ஆகும். சரஸ்வதி என்பது ஹரஹ்வதி என்று ஆகும். அதே பொழுது இந்த za மாற்றம் ஒருவழிப் பாதையல்ல. வேதத்தில் hotr என்பது அங்கே zaotr என்று ஆகிறது. இங்கே ஹ்ரண்ய என்பது அங்கே ஸ்ரண்ய என்று ஆகும். ஈரானில் இருந்த zaotr, அவஸ்தாவின் gatha மொழிகளை யாகத்தின் போது ஓதுவார். நாவலந்தீவில் இருந்த hotr, இருக்கு வேதத்தின் மொழிகளை ஓதுவார். இரண்டு வகை ஓதுதல்களும் தேவதையை அழைத்து, "அதைக் கொடு, இதைக் கொடு" என்று கேட்பவை தான். ஓதன் / ஓச்சன் என்பவன் தமிழ் மரபிலும் இருக்கிறான். காளிகோயில் பூசாரியைத் தமிழில் ஓச்சன்/உவச்சன் என்பதும், ஆசார்யன், priest, தெய்வத்தை ஏத்துபவன் என்பனை ஓசன் என்று று அகரமுதலிகளில் குறிப்பதையும், ஆச்சார்யனின் மனைவியை ஓசி என்று குறிப்பதையும் இங்கே நினைவு கொள்ளலாம்.

வேள்வி, பூசை என்ற இரண்டு வகையான ஓதுகளிலும் வெறும் அழைப்பு மட்டுமல்ல; கேட்பும் உண்டு. அழைப்பும், கேட்பும் சேர்ந்தது தான் வேத வழியும், ஆகம வழியும். மூட நம்பிக்கையை மறுத்துப் பார்த்தால், அவை ஏதோ வானத்தில் இருந்து இறங்கியவையல்ல. அதே பொழுது, இந்த அழைப்பும் கேட்பும் எல்லாப் பூசைகளுக்கும் பொதுவானது என்று ஓர்ந்து அறிய வேண்டும். கிறித்துவ, இசுலாம் என எல்லா சமய நெறிகளிலும் கூட அழைப்பும் கேட்பும் இருக்கின்றன.

யாகம் என்பது ஒருவழி; வேத நெறிக்கும் ஸோராஸ்த்திரத்திற்கும் அது பொதுவான வழி. நம்மூர் பூசை முறைகள் வேறு வழி. நெருப்பை வைக்காமல் நீரையும், பூவையும் வைத்துச் செய்யும் நம்மூர் வழிபாட்டிலும் பூசை செய்யும் குருக்கள் மந்திரங்களை ஓதுகிறார்; தேவாரம் போன்றவை ஓதுவாரால் ஓதப் படுகின்றன (recited). இறைவனை அழைத்து, "அதைக் கொடு, இதைக் கொடு" என்று நாம் கேட்கிறோம். ஓதுதல் பற்றிய திராவிட வேர்ச்சொல் பர்ரோ-எமெனோவில் 1052ம் சொல்லாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

1052 Ta. ōtu (ōti-) to read, recite, utter mantras, repeat prayers, speak, declare; ōtuvi (-pp-, -tt-) to teach the Vedas, instruct; ōtal reciting (as the Veda); ōti learning, learned person; ōttu reciting, uttering (as a mantra), the Veda. Ma. ōtuka to recite, read, say; ōtikka to teach; ōttu reading (chiefly of scriptures), using formulas. Ko. o·d- (o·dy-) to read, pronounce (charms), learn; o·t a charm. To. wi_.Q- (wi_.Qy-) to read; w&idieresisside;t incantation. Ka. ōdu to utter, read, recite, study, say; n. reading, etc.; ōdisu to cause to read, instruct in the śāstras; ōdike, ōduvike reading; ōtu, ōta reading, that has been read or studied, the Veda. Koḍ. o·d (o·di-) to read. Tu. ōduni to read; ōdāvuni to cause to read, teach how to read; ōdige, ōdu reading. DED 886.

மீண்டும் சொல்லுகிறேன்; எல்லாவித ஓதுதல்களும் முதலில் அழைப்பதும், பின்னால் வேண்டுதலும் தான். அந்தக் கருத்தில், அழைப்பைக் குறிக்கும் தமிழ் வேர்ச்சொற்களையும், சங்கத வேர்ச்சொற்களையும் பார்போம். ஆ, ஈ, ஏ, ஓ, கூ, கோ என்ற தமிழ் வேர்களைப் போலவே தாது பாடம் காட்டும் kal, kall, kas', kai, ku, ku_, kur, kuj, kun., khu, gr, gaj, gard, guj, ghu, ghu, ghur, ghus., ha_d, has, hikk என்ற சங்கத வேர்களும் அழைப்பை உணர்த்தும். இந்தக் காலச் சொற்பிறப்பியல், பகுப்பின் வழி பெற்ற இவ்வளவு வடிவுகளைச் சுட்டிக் காட்டாது. இவற்றில் மிகக் குறைந்த ஒரு சிலவற்றை மட்டுமே அடிவேராகக் காட்டி மற்றவற்றை அவற்றின் வழிவேராகக் காட்டும். [நான் ஒவ்வொரு வேர்வடிவிற்கும் இணையான தமிழ்ச்சொல்லைக் கூடிய வகையில் இனங் காட்ட முடியும். இதே போல சங்கதச் சொற்களையும் எடுத்துக் காட்ட முடியும்] இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த அடிவேர் ku என்பதாகவே வந்து சேரும்.

மேலே உள்ள பட்டியற் சொற்கள் எல்லாமே ஒலிப்பொருளைக் காட்டுவன. கல், கர்/குர் என்னும் பக்க வேர்களும் கூட அதே ஒலிப்பொருளை தரும். ஆங்கிலத்தில் வரும் ekhe, hoot [ME. houten, huten], hail, hem, hiccup, hip, howl, honk, horn என்ற ஓசைச் சொற்களையும், heulen, hupen என்ற செருமானிய ஓசைச் சொற்களையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். halloa>hello என்ற தொலைபேசி அழைப்புக் கூட இங்கே எண்ணிப் பார்க்க வேண்டியது தான். ஓகை (= ஆரவாரம்), ஓதம், ஓதை, ஓசை, ஓலம், ஒலி என்ற சொற்கள், ஓங்காரம் என்ற நெட்டோ சை, ஓ என்னும் குழந்தையின் அழுகை எல்லாமே ஒலிக்குறிப்புக்கள் தான். நான்கு கூப்பிட்டுத் தொலைவைக் காவதம் என்றும் ஓசனை என்றும் தமிழில் சொல்லுவதையும் எண்ணிப் பாருங்கள். ஓலிடுதல் என்பதும் கூட ஓசை செய்வது தான்.

இன்னும் சில விதப்பான ஓலச் சொற்களையும் இங்கு சுட்டிக் காட்ட முடியும். நாதசுரம் ஓலகம் என்றும், நாசுசுரம் இசைப்பவர் ஓலகத்தார் என்றும், ஆரவாரமிகுந்த அரச மண்டபம் ஓலக்க மண்டபம் என்றும், ஓலக்க மண்டபத்தில் சொல்வது ஓலக்க மொழி என்றும் சொல்லப்படும் பழைய பயன்பாடுகளை எண்ணிப் பார்த்தல் ஓல்தல் என்ற வினையின் ஆழம் புரியும். இன்னும் போய், தாலாட்டிப் பாடுவதைக் கூட ஓலாட்டுதல் என்ற யாழ்ப்பாண வழக்கும், லாலி என்னும் வடபுல வழக்கும், lullaby என்னும் மேலைநாட்டு வழக்கும் நம்மை மொழிகடந்த நிலையை உறுதியாக இணர்த்துகின்றன. ஓலத்தின் இன்னொரு பரிமானமாய் ஊளை (howl) என்ற சொல்லும் எழும். ஓசை செய்யும் பனை இலை பனை ஓலையானது.

ஓகாரம் என்பது மொழி கடந்தது என்று புரிந்தால் தான் நான் சொல்ல வருவது புரியும். இல்லையென்றால் hve_க்கு மேலே நகர முடியாது. ஓது என்பதன் நீட்சியாய் மறைமொழிகளை, உயர்ந்த நூற்பகுதிகளை, ஓத்து என்றே தமிழில் சொல்லுகிறோம். மலையாளத்திலும் இதே சொல் தான் உண்டு. நாள் தோறும் ஓதத் தக்கது ஓத்து ஆகும். அது மந்திரம், அறநூல், இலக்கண, இலக்கியம் என எதுவாகவும் இருக்கலாம். வேதமாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை. "அஞ்செழுத்தும் ஓத்து ஒழிந்து" என்று தேவாரம் 586, 4 பேசும். "ஒத்துடை அந்தணர்க்கு" என்று மணிமேகலை 13.25 பேசும். section or chapter பொருளில் "ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்து என மொழிப" என்று தொல்.பொருள்.செய்யுளியல் 480 பேசும். நெறி,கொள்கை என்ற பொருளில் குறள் 134 பேசும்.

முன்னால் சொன்ன வேளகாரரை ஓதுதலின் அடிப்படையில் ஓதாளர் என்றும் பேச்சுவழக்கில் சொல்லுவார்கள். இந்த ஓதாளர்கள் ஆசான்களாவும் இருக்கிறார்கள். "உலகம் பாதி, ஓதாளர் பாதி" என்பது கொங்கு வழக்கு. (அதாவது படிப்பவர்கள் பாதி, படிப்புச் சொல்லிக் கொடுப்பவர் மீதி என்பது அதன் பொருள்.) ஓத்தின் சாலை என்பது நூல் கற்பிக்கும் இடத்தைக் குறிக்கும். "ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று" என்று சிலம்பு 22.28 பேசும். ஓத்துரைப்போர் என்பவர் நூல் ஓதுவோர் ஆவர்; அதாவது one who recites scripture; ஓத்துரைப்போன் என்பவன் ஆசான் என்று பிங்கலம் உரைக்கும்; ஓத்திரி என்பவனும் ஓதுவிப்பவன் என்றே அகரமுதலிகள் கூறும்.

ஓத்திர நெல் என்பது ஓதுவிக்கும் அல்லது ஓதும் தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத் தரப்படும் நெல். ["ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து" - பதிற்றுப் 7 ம் பத்தின் பதிகம்] ஐங்குறு நூற்றின் பாலைப்பகுதி ஆசிரியர் ஓதல் ஆந்தையார் ஆவார்; ஒதற் தொழில் செய்யும் ஆந்தையார்; இங்கே ஆந்தை என்பது ஒரு தமிழ்க் குடிப்பெயர். தலைவன் கல்வி கற்றற்குத் தலைவியைப் பிரியும் பிரிவு ஓதற்பிரிவு என்றே தமிழ் அகப்பொருள் இலக்கியத்தில் சொல்லப்படும்.

ஓதுதல், ஓதி என்ற சொற்கள் பார்ப்பார்க்கு மட்டுமே உரியவை அல்ல. ஓதல் என்பதற்கு உரத்துப் படித்தல், கல்வி பயிலுதல் என்றே தொல்.பொருள்.25 வழி பெறப்படும். ஓசையூட்டிப் பலமுறை சொல்லுதலையே (reciting) ஓதுதல் என்று பொருள் சொல்லுகிறார்கள். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் - குறள் 834

ஓதுவித்த தக்கணையா - திவ்ய. பெரியாழ் 4.8.1. ஓதி என்பதற்கும் அறிவு, கல்வி, one who recites the veda and sastras என்றும் பொருள்கள் உண்டு. மலையாளத்தில் ஓதல் என்றும், கன்னடத்தில் ஓது என்றும் குடகில் ஓத் என்றும், கோத. ஓத் என்றும், துடவத்தில் வீத் என்றும், துளுவில் ஓதுனி (படி) என்றும், தெலுங்கில் சதுவு என்றும், இது திரிவுறும். இருக்கு சொல்லிக் கொடுப்பவன் ஓதி என்றே மலையாளத்தில் சொல்லப் படுவான். ஊது என்ற அடிச் சொல்தான் ஓது என்ற சொல்லிற்கு முந்து எழுந்திருக்க முடியும் என்று பாவாணர் தன் வேர்ச்சொற்கட்டுரைகளில் சொல்லுவார். ஊதல் = ஆரவாரம்

இன்னொரு விதமாயும் இந்த ஓதித்தலைப் புரிந்து கொள்ளலாம். தமிழில் பள்ளி என்பது கன்னடத்தில் ஹள்ளியாகும்; பால் என்பது ஹாலு ஆகும். இது போல பகரம் கெட்டு ஹகரம் சேர்வதும், சிலபோது ஹகரமும் போய் உயிரொலி மட்டுமே தங்குவதும் பல்வேறு சொற்களில் உண்டு. போதித்தல் என்பது ஓதித்தலுக்கு இணையான தமிழ்ச்சொல். போதி என்ற சொல் ஹோதி>ஓதி என்று கன்னடத்தில் ஏற்பட முற்றிலும் வாய்ப்பு உண்டு. பள்ளிக்கூடமே கூட ஓதும் பள்ளி என்று சொல்லப்படுவதும் உண்டு. மந்திர நீர் தெளித்தலை ஓதியிறைத்தல் என்றும், மந்திரித்துத் தேங்காய் உடைத்தலை ஓதியுடைத்தல் என்றும் சொல்லுவார்கள்.

உங்களுடைய பின்னூட்டில் ஆவாகனம் என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது நெருப்பில் மட்டுமல்ல, நீரிலும் தெய்வம் வந்து வந்து இறக்கும் முறைதான். எனவே வேள்வியில் அழைப்பதை மட்டும் வைத்து சொற்பிறப்பு சொல்ல முடியாது. நாம் நினைக்கும் தெய்வத்தை (அதை ஆவி வடிவில் உருக்கொண்டு) ஒரு பொருளில் அல்லது படிமத்தில் எழுந்தருளும் படி மந்திரம் ஓதித் தெய்வத்தை அழைத்தலுக்கு ஆவி ஆகித்தல்> ஆவு ஆகித்தல் = ஆவாகித்தல் என்றே நான் பொருள் கொள்ளுகிறேன். அந்தப் படிமம், அல்லது பொருள் அதற்குப் பின்னால் தெய்வம் எனவே புரிந்து கொள்ளப்படுகிறது. நீங்கள் ஒப்புக் கொள்ளாது போகலாம். அது அது அவர்களுக்கு என்று நான் விடுக்கிறேன்.

அவி என்ற சொல்லையும் நான் தமிழ் வழியே தான் புரிந்து கொள்ளுகிறேன். அவிதல் என்பற்கு வெந்து போதல், எரிதல் என்ற பொருள் தமிழிலும் உண்டு. அள்>அழு>அகு என்ற வளர்ச்சி எரிதல் பற்றிய சொல்லிற்கு ஏற்படும். அழல்>அழனம், அழனி என்ற சொல்லை எண்ணிப் பார்த்தால் விளங்கும். ஹவனம் என்ற சொல்லிற்கு வேள்வி என்ற பொருளை நீங்கள் குறித்திருந்தீர்கள். அதையும் மேலே சொன்ன அழல் வழியாக, அழனம்>அகனம்>அவனம் என்ற முறையில் தான் நான் புரிந்து கொள்ளுவேன். அழனம் என்பது நெருப்பு, வெம்மை என்ற சொற்களைக் குறிக்கும். அவிப்பு என்பது எரிப்பு என்று பொருள் கொள்ளும். ஹகரம் வடக்கில் சேருவது இயற்கையே. அவனம் வேள்வியைக் குறித்ததில் வியப்பில்லை.

இதை நிறுவுதற்கும் பல்வேறு தொடர்புடைய சொற்களை நான் கூறலாம். அகுதல் என்பது மேலே சொன்னது போல் நெருப்பு இன்னொரு பொருளை அழிப்பதைக் குறிப்பது. அகி>அவி என்று இகரம் சேரும் வினைச்சொல், இன்னொரு பொருள் நெருப்பால் மாறுவதைக் குறிப்பது. இந்த வினைச்சொல் மாற்ற ஒழுங்கு அப்படியே தமிழ் மரபு மாறாமல் இருக்கிறது. (கற்றல், கற்பித்தல் என்ற வினைச்சொல் தொகுதியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.) அவிதல் என்பது நெய்க்கு மட்டுமல்லாமல், உணவிற்கும் அமைவதைத் தமிழில் பார்க்கலாம். அதாவது அவி என்ற பயன்பாடு தமிழில் பரந்த பொருளைக் கொடுக்கிறது. அவியல், அவிசல், அவிகாயம், அவம் போன்ற சொற்கள் எல்லாம் பரந்த பொருள் கொடுக்கின்றன. வேள்வியில் அவிந்து போகும் பொருளுக்கும் அவி என்று ஆளப்பட்டது வியப்பில்லை என்றே நினைக்கிறென். "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்" என்ற கூற்றும் இதை அரண் செய்கிறது. நீங்கள் சுட்டிய "ஹவ்யவாஹன் - அவியை சுமப்பவன், அக்னி" என்பது இருபிறப்பியாய் இருக்கிறது.

இனி வேது பிடித்தல் என்று ஆவி, புகை பிடித்தலை சுட்டினீணர்கள். வெய்தல்>வேதல், எரிதல் என்பது நல்ல தமிழே. "ஹுதம் - வேள்வியில் எரிந்து பொசுங்கியது, ஹுதசேஷம் - வேள்வியில் எரிந்ததன் மிச்சம், ஹுதாசனன் - எரித்துப் பொசுக்கியதை உண்பவன், அக்னி" என்ற மூன்று சொல்லாட்சிகளுக்குமே ஹுது என்பதே அடிப்படை அதன் பொருள் எரிதல் என்பதாய் இருக்க முடியுமே ஒழிய அழைத்தல் (hve_) என்பது இருக்க முடியாது. பொகைந்தது (=புகைந்தது), பொசுங்கியது, பொதுங்கியது என்ற வினைச்சொற்கள் எரிதலைத் தொடர்ந்து எழும் வினையைக் குறிக்கும் சொற்கள். பு(=பொ)>ஹு>உ என்ற பலுக்கத் திரிவை உன்னிப் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும். ஊது என்பதும் புகையைக் குறிக்கும் சொல் தான்.

அடுத்து ஹவ என்ற வினைச்சொல்லிற்கு வேட்டல் என்ற பொருளைச் சுட்டி இருந்தீர்கள். தமிழிலும் அவ்வுதலுக்கு வேட்டல் என்ற பொருள் உண்டு. வவ்வுதல் என்பது வாயால் பற்றுதலையும் (இன்றைக்கு மாறிக் கையால் என்ற பொருள் கொள்ளப்படுகிறது), கவ்வுதல் என்பது கையாற் பற்றுதலையும் (இன்றைக்கு மாறி வாயால் என்ற பொருள் கொள்ளப்படுகிறது) அவ்வுதல் என்பது மனத்தால் பற்றுதலையும் குறிக்கும் தமிழ் வினைச் சொற்கள். மனத்தால் பற்றுதல் என்பது வேட்டல், விரும்புதல் தான். அவ்வுதல் என்ற வினைச்சொல் இன்று பேச்சு வழக்கில் பயிலவில்லை என்றாலும், அவா என்ற பெயர்ச்சொல்லும், அந்தப் பெயரில் இருந்து இன்னொரு வினையாய் கிளைத்த அவாவுதல் என்ற வினையும் இன்று பயில்கின்றன. உங்கள் ஹவாமஹேக்கான இணை புரிகிறதா?

முடிவில் "ஹும் என்கிற துர்கா தேவியின் ஹுங்கார பீஜாட்சரமும் இதோடு தொடர்புடையது." என்று சொல்லியிருந்தீர்கள். ஓங்காரத்திற்கு முந்தையதாய் ஊங்காரம் தமிழில் சொல்லப்படுவதுதான். ஊங்காரம் என்பது கோவத்தின் அறிகுறி, ஓங்காரம் என்பது உயர்ச்சி, மற்றும் காப்பாற்ற வேண்டுதலின் அறிகுறி.

நீங்கள் காட்டிய எல்லாச் சொற்களையும் அழைத்தல் வினை வேரில் இருந்தே இனம் காட்டியிருந்தீர்கள். நான் அப்படி எண்ணுவதில்லை. இவை வெவ்வேறு வேர்களில், அதே பொழுது யாகம் செய்யும் போது ஏற்படும் வினைகளில் இருந்து, எழுந்தவை என்று எண்ணுகிறேன். அவற்றை நான் புரிந்தவாறு மேலே இனம் காட்டியிருக்கிறேன்.

நான் கூறியவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு. மீறி இதையும் ஒரு "crackpot theory" என்று நீங்கள் சொல்லலாம். எனக்குக் கவலையில்லை. சொற்பிறப்பியலில் இதுதான் சரி என்று முடிந்த முடிவாக யாரும் சொல்லுவதில்லை. சொற்பிறப்புக் காணுவதை ஒரு தொடர்ச்சியாகவே பலரும் பார்க்கிறார்கள். இன்றைக்குச் சரியென்று தோன்றுபவை நாளைக்குப் புதுத் தரவும், ஏரணச் சிக்கலின் மறுபார்வையும், புதிய நடைமுறைகளைக் கொண்டு தரும். நான் மோனியர் வில்லியம்சு தருவதை இறுதியானது என்று கொள்ளுவதில்லை; அதே போலத் தமிழில் பாவாணர் சொல்லுவதையே கூட முடிவானது என்று சொல்லுவதில்லை. நான் சொல்லுவதையும் மறுத்து இன்னொருவர் இனிச் சொல்லக் கூடும். அது சரியாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுவேன்.

எந்த மொழியும் வழிபாட்டுக்குரியது என்று என்னால் ஏற்க முடியாது. சங்கதமும் அதற்கு விலக்கல்ல. என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருக்கும். உங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு இராமகி,

//ஓசை செய்யும் பனை இலை பனை ஓலையானது. //

பன்னாட்களாக மனதில் இருந்த வினாவுக்கு இன்று கிட்டியது விடை.
நன்றி.

Balaji Chitra Ganesan said...

'proto indo european' மற்றும் 'proto indo iranian' மொழிகளைப் பற்றி விக்கிபீடியா போன்றவற்றில் படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் 'proto indo european - dravidian' 'மொழியை' பற்றி எளிதாகப் படிக்கக் கிடைப்பதில்லை. அதைப் பற்றி ஆராயந்தவர்களும் ஊடகங்களில் எழுதுவதிலலை என்ற குறை தங்களால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மிக்க நன்றி! மேலும் எழுதுங்கள்!

சோராஸ்திரர் பற்றி குறிப்பிட்டு பார்ப்பனரை 'வந்தேறிகள்' என்று பழிப்போருக்கு நல்ல சாக்கு கிடைக்கச்செய்தீர்கள்! போனால் போகிறது மத்திய ஆசியா, பாக்டிரியா, பாரசீகம் போன்ற இடங்களும் 'அகண்ட' பாரதத்தின் பகுதிகள்தான் என்று சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!

தங்களுக்கு தெரிந்துதான் இருக்குமென்றாலும் இன்னும் சில சுவாரஸ்சிய சொற்களை இங்கே குறிப்பிடுகின்றேன்.

Brahma - Abraham
Saraswathi - Sarah (Abraham's wife)
Manuh (or Nuh) - Noah (of the floods)

-பாலாஜி.