Tuesday, January 22, 2013

ஒருங்குறியும் தேவையான வினையூக்கமும்

அண்மையில் (சனவரி 10 இல்) திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி வரலாற்றுத் துறையினர், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தோடு சேர்ந்து “Contributions of Sangam and Post-Sangam Classics to Ancient Indian History" என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்து, அதற்குப் பலரையும் உரையாற்ற அழைத்திருந்தனர். ”சிலம்பின் காலம்” பற்றி உரையாற்ற என்னையும் அழைத்திருந்தார்கள். நான் (1964-65 இல் புகுமுக வகுப்பு) படித்த பழைய கல்லூரி என்பதாலும், என்னாய்வோடு தொடர்புற்ற உரை என்பதாலும் ஒப்புதல் அளித்திருந்தேன். கருத்தரங்க ஏற்பாடு 2 மாதங்களுக்கு மேல் நடந்துவந்தது. கருத்தரங்கின் இரண்டாம் நாள் மாலையில் என் உரையை ஒழுங்கு செய்திருந்தனர். ஒருங்குறியிற் கட்டுரை வரைவையும், என்னைப் பற்றிய தன்விவரக் குறிப்பையும் கருத்தரங்கிற்கு 15 நாட்கள் முன்பே அனுப்பியிருந்தேன்.

தன்விவரக் குறிப்பைக் கேட்டுப் பெறுவதில் வரலாற்றுத் துறை இளமுனைவர் ஒருவர் என்னோடு தொடர்பிலிருந்தார். சனவரி 10 ஆம் நாள் காலை போய்ச் சேர்ந்த போது, குறிப்பிட்ட இளமுனைவர் என்னைச் சந்தித்து, “தன்விவரக் குறிப்பைத் தரமுடியுமா?” என்று மீண்டுங் கேட்டபோது, “மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேனே? திறந்து பார்க்கவில்லையா?” என்று வியந்து மறுமொழித்தேன். சற்று வெட்கத்தோடு, “இல்லை ஐயா. அது திறக்காக் குறியேற்றத்தில் இருந்தது” என்று சொன்னார். ”எல்லோரும் படிக்கக்கூடிய ஒருங்குறியிற்றானே அனுப்பினேன். எங்கு தவறு நடந்தது? உங்கள் கணியின் இயங்கு கட்டகம் எது? Windows XP யா, Windows 7 ஆ, Windows 8 ஆ?” என்று கேட்டேன். ”Windows XP” என்றார். ”அதில் language enabled - தமிழ் என்று தேர்ந்தெடுத்தீர்களா?” என்று கேட்டேன். அவர் ”தேர்ந்தெடுக்கவில்லை” என்றார். அப்படியோர் ஏந்து இயங்கு கட்டகத்துள் இருப்பது அவருக்குத் தெரியாது போலும்.

”ஐயா, எங்கள் வரலாற்றுத் துறைக் கணிகளிற் பாமினிக் குறியேற்றமே புழங்குகிறோம். அதில் அனுப்பியிருந்தால் எனக்குத் திறக்க எளிதாய் இருந்திருக்கும்” என்றார். ”பாமினி போன்ற தனியார் 8 மடைக் குறியேற்றங்களில் இருந்து பலரும் நகர்ந்து 16 மடைக்கு வந்து சில ஆண்டுகள் ஆயினவே? இப்பொழுது பலரும் ஒருங்குறியிற்றானே பரிமாறிக் கொள்கிறார்கள்? ஒருங்குறி என்பது உலகெங்கும் புழக்கத்திலுள்ள நடைமுறை. மைக்ரொசாவ்ட்டு இயங்கு கட்டகத்தில் எல்லாக் கணிகளும் அவ்வல்லமை பெற்றுள்ளன. தமிழாவணம் உருவாக்க எந்தக் குறியேற்றத்தையும் புதிதாய் நிறுவ வேண்டியதில்லையே? தமிழ்க் கணி, இணையப் பயன்பாட்டிற்கு ஒருங்குறியையும், அது இணங்கா இடங்களில் தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் (TACE) பயன்படுத்தப் பரிந்துரைத்து, தமிழக அரசாணை பிறப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே? தெரியாதா? ” என்றுஞ் சொன்னேன். அவருக்கு நான் சொன்னதெல்லாம் புதியதாய் இருந்தது.

ஒருவேளை இணையத்திற்குள் தொடர்ச்சியாக அவர் போனதில்லையோ, என்னவோ? இணையத்திற்குள் தொடர்ந்து போனவர்கள் கணித்தமிழுக்குள் நடந்த வெவ்வேறு மாற்றங்கள் பற்றியும், 8 மடைக் குறியேற்றங்கள் போய் 16 மடைக்கு நகர்ந்தது பற்றியும், ஒருங்குறியேற்றம் பற்றியும் எப்படியாவது தெரிந்து வைத்திருப்பார்கள். மடற்குழுக்கள் / வலைப்பதிவுகள் / வலைத்தளங்கள் / வலைத்திரட்டிகள் பற்றியும் ஓரளவு தெரிந்திருப்பார்கள். பாமினியிலேயே தொடர்ந்து தேங்கிப்போகும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. பொதுவாக எந்தக் கல்லூரியிலும் இதுபோன்ற வளர்ச்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்குச் சட்டென்று ஏற்படுமென்றே நான் கேள்விப் பட்டுள்ளேன். அதையும் மீறி ஒருவர் அறியாதிருந்தால் எழுத்தர் / தட்டச்சர் / கணிகளைப் பேணும் பொறியாளர் / DTP இயக்கர் ஆகியோரின் தாக்கம் அவரைச் சுற்றிலும் பெரிதும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

அன்று கருத்தரங்கில் புனித வளனார் கல்லூரி அதிபரும் (College Rector) தன்னுடைய பரத்தீட்டில் பாமினியைப் பயன்படுத்தியிருந்தார். அந்த அதிபர் இணையத்தை நேரே பயன்படுத்திக் கணிபற்றிய நுட்பச் செய்திகளை அறிந்திருந்தாரா, அன்றி கல்லூரி நிர்வாகப் பொறுப்பில் இருப்பதால், தன் ஆக்கத்தைக் கையெழுத்திற் செய்து இன்னொரு எழுத்தர்/ தட்டச்சர்/ DTP இயக்கர் மூலம் கணியில் தன் பரத்தீட்டை உருவாக்கினாரா என்று எனக்குத் தெரியாது. அன்று கருத்தரங்கக் கணியில் பாமினி எழுத்துருவை இயங்க வைக்க முடியாதுபோனதால் அவர் பரத்தீட்டில் இருந்த தமிழ் எழுத்துரு திரையிற் தெரியாமற் போகும் நிலை ஏற்பட்டது.

தமிழ்நாட்டிற் கணியைப் புழங்கும் பலரின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. தனியார் குறியேற்றங்களைக் கொண்டு இந்த நுட்ப வேலைகளை விதப்பாக்கி வைப்பதால், தடுமாறிப் போகிறார்கள். கணியில் ஆங்கிலம் மட்டுமே புழங்கி, தமிழைப் புழங்குவது அறியாதிருப்பதால் மழலைப் பாடம் எடுக்கவேண்டியதாகிறது.

இத்தனைக்கும் இன்று கணியிற் தமிழைப் புழங்க எல்லா ஏந்துகளும் நீக்கமற நிறைந்துள்ளன. தமிழாவணங்களுக்குத் தேவையான பொதுக் குறியேற்றம் இருக்கிறது. உள்ளிடுவதற்கு உதவியாய் இ-கலப்பை, NHM Writer போன்ற இலவயச் சொவ்வறைகள் இருக்கின்றன. எல்லா மைகொரொசாவ்ட்டுச் சொவ்வறைகளிலும் எந்த விதப்பான முயற்சியும் இல்லாது தமிழை எளிதாகப் புழங்கமுடியும். இருந்தாலும் என்னவோ தெரியவில்லை, (Shreelipi, Softview, TAB, TAM, TSCII, Vanavil போன்ற) 8 மடைக் குறியேற்றங்களிலேயே தேங்கி, அதைவிட்டு நகராது பலரும் இருக்கின்றனர். இவர்கள் இணையத்திற்குள் நேரடியாக வருவதும் அரிதாக இருக்கிறது.

{நம் பேரா.மு.இளங்கோவன் போன்றோர் கல்லூரி, கல்லூரியாய்ப் படையெடுத்துப் வெவ்வேறு பட்டறைகள் எடுத்து அருமையாகச் சேவை செய்கிறார்கள். இன்னும் பலர் அந்தப் பொறுப்பில் பங்கேற்கவேண்டும். ஆனாலும் தமிழைப் புழங்க வேண்டிய தேவையிருப்போரிடம் செய்தி இன்னும் பரவவில்லை போலும்.}

யாரோவொரு எழுத்தர் / தட்டச்சர் சொல்லித் தந்ததையும், கணிகளைப் பேணும் பொறிஞர் சொல்லிக் கொடுத்ததையும், தங்களுடைய புறத்திட்டு அறிக்கை (project report), ஆய்வு நூல் (thesis) ஆகியவற்றிற்காகத் தொடர்பு கொண்ட DTP இயக்கர் சொல்லித் தந்ததையும் வைத்துத் தமிழை உள்ளிட்டு, அவ்வாவணங்களை ஒரு கணியிலிருந்து இன்னொரு கணிக்கு இணையம் மூலம் சிதறாது பகிர்ந்து கொள்வதறியாது, தங்களுடைய வட்டத்திற்குள் மட்டும் தூவல் துரவியால் (pen drive) அறிக்கைகள், பரத்தீடுகள், கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு பலரும் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள்.

தமிழைப் புழங்கும் பலரும் தமிழ்நாட்டில் இப்படித்தான் சிதறிக் கிடக்கிறார்கள். எழுத்தர் / தட்டச்சர் / கணிகளைப் பேணும் பொறியாளர் / DTP இயக்கர் ஆகியோரின் தாக்கம் பெரிதும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. நான் பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லமுடியும்.

அண்மையில் ஒரு மடற்குழுவில் நண்பர் ஒருவர் தான் கையெழுத்தில் உருவாக்கிய மொழிபெயர்ப்பு ஆவணத்தை ஒரு தட்டச்சு செய்பவரிடம் கொடுத்திருக்கிறார். தட்டச்சருக்கோ, பாமினி தான் தெரிந்திருக்கிறது. ஒருங்குறியின் வாய்ப்பு பற்றித் தெரியவில்லை. அதன் விளைவாக, அவர் பாமினியில் அடித்துக் கொடுத்த ஆவணத்தை ஒருங்குறியில் மாற்றுவதற்குக் ஒரு குறியேற்ற மாற்றியை (encoding converter) நம் நண்பர் தேடிக் கொண்டிருந்தார். NHM Converter பற்றிச் சிலரும் (நானும்) சொன்னோம். பின் மாற்றிக் கொண்டார். முதலிலேயே ஒருங்குறியில் உள்ளிட்டிருக்கலாமே? - என்பது தான் இங்கு கேள்வி.

இன்னொரு எடுத்துக் காட்டும் சொல்ல வேண்டும். ஒரு பேர்பெற்ற தமிழக அரசு நிறுவனத்தார் 2013 பிப்ரவரி மாதம் ஓர் இலக்கியக் கருத்தரங்கம் நடத்துவதற்குக் கட்டுரைகள் கேட்டிருந்தார்கள். எல்லாக் கட்டுரைகளும் TAM குறியேற்றத்தில் இருக்கவேண்டுமாம். 3 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது என்னவாயிற்று? - என்று புரிபடவில்லை.

தமிழக அரசு அலுவங்களுக்குள் சென்றால் இன்னொரு வியப்பான காட்சியைக் காணமுடியும். நாம் பார்க்கப் போகும் அலுவர் மிகப் பெரிய அதிகாரியிருப்பார். இந்திய ஆட்சிப் பணியாளராய்க் கூட இருப்பார். அவர் மேசைக்கருகில் இன்னொரு தனிமேசையிருக்கும். அதில் ஒரு மடிக்கணியும் காட்சிப்பொருளாய் இருக்கும். ஆனால் அதைப் பயன்படுத்துவது அவருடைய தனிச் செயலராய், எழுத்தராய், தட்டச்சராய், DTP இயக்கராய் இருப்பார். இவர்கள் யாருக்கும் இணையத்துள் போவதற்கான தனி அனுமதி பெரும்பாலும் இருக்காது. அலுவலர் கொடுக்கும் அனுமதி வைத்தே எதுவும் முடியும். இந்த எழுத்தர்/ தட்டச்சர்/ தனிச்செயலருக்குப் பட்டறிவும் பற்றாது. ஆகக் குறைந்த நுட்பியல் அறிவோடு ஆவணம் உருவாக்குவது பற்றியே அந்த தனிச்செயலர் / எழுத்தர் / தட்டச்சர் தெரிந்திருப்பார்.

பொது நுணவ அடிவகுப்பில் (common miminum denomination) .அந்தத் துறையின் நுட்பியல் இயங்கிக் கொண்டிருக்கும். பின் எப்படி நாம் அனுப்பும் ஒருங்குறி மின்னஞ்சல் அந்தத் துறைக்குள் செல்லுபடியாகும்? அங்கிருந்து நமக்கு ஒருங்குறியில் ஒரு மின்னஞ்சல் வந்து சேரும்? ஏன் மின்னஞ்சல் என்னும் நுட்பியல் அரசிற்குள் வேலை செய்வதில்லை என்று இப்பொழுது விளங்குகிறதா? என்றைக்காவது தமிழக அரசின் அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மின்னஞ்சல் பரிமாற்றஞ் செய்து பார்த்திருக்கிறீர்களா? ஒரு மின்னஞ்சல் பார்ப்பதே அலுவலர்/அதிகாரி இல்லையென்றானபிறகு நுட்பியற் பயன்பாடு எப்படி முன்னேறும்? அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிகள் எல்லாம் உப்புக்குச் சப்பாணி என்று புரிகிறதா?

அரசின் It policy எப்படி முன்னகரும்? இங்கு ஒரு எழுத்தர்/ தட்டச்சர் / தனிச்செயலர் அல்லவா அதை நிருவகிக்கிறார்? இப்படி நான் அப்பட்டமாய்ச் சொல்வதற்கு என்னை நீங்கள் மன்னியுங்கள். எந்த அதிகாரியும் நேரடியாக மின்னஞ்சல் போன்ற ஏந்துகளை அரசிற் பயன்படுத்துவதேயில்லை. யாரோவொரு எழுத்தர் /தட்டச்சர் / தனிச்செயலர் தான் பயன்படுத்துகிறார்.] கணி, இணையம் பற்றிய நுட்பியல் மாற்றங்களின் சரவலும் தேவையும் அரசு அதிகாரிகளுக்குத் தெரியவே தெரியாது. அவர்கள் தனிச்செயலுருக்கோ, எழுத்தருக்கோ, தட்டச்சருக்கோ dictation கொடுக்கின்றனர். யாரோவொருவர் அதைத் தன் கணியில் அச்சடித்துக் கொண்டுவருகிறார். அலுவலர் முடிவிற் கையெழுத்துப் போடுகிறார். ஒரு ஆவணம் எப்படி உருவாகிறது, அதிலுள்ள சிக்கல்கள் என்ன என்று கடுகளவும் அதிகாரிக்குத் தெரியாது. இதைப் புரிந்து கொள்ளாது எப்படி அரசு நடவடிக்கைகள் கணிமயமாகும்?

[இத்தனைக்கும் கணித்தமிழ் பற்றி நாமறிந்த வரை தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும் தங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்களை ஒரு நாளும் வெளிப்படுத்தியதில்லை. இரண்டு கட்சியரசுகளுமே கணித்தமிழுக்கு என்றுமே உறுதுணையாக இருப்பதாய்த்தான் சொல்லிவந்துள்ளன. ஆனாலும் ஏதோவொரு தடை செயல்முறையில் தொடர்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அது இந்த எழுத்தர் / தட்டச்சர் / தனிச்செயலர்களின் புரிதற் சிக்கல் தான். நுட்பியல் என்பது இப்படி அந்தத் தரத்திலேயே இயங்குகிறது/ பின் எப்படி கணிச்சிக்கல்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்?

”அரசு நடவடிக்கைகளைக் கணிமயமாக்கப் போகிறோம்” என்று இடைவிடாது மேடைகளெங்கும் அரசியல்வாதிகள் முழங்குகிறார்கள். இதுவெறும் முழக்கம் தான் போலிருக்கிறது. செயற்பாடு வேறொன்று போலும். இன்றுங் கூட தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ஒருங்குறியோ, தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றமோ கொஞ்சமும் செயற்படவில்லை. அங்கு வானவில்லே செயற்பட்டுச் செங்கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஆக அரசின் அரசாணை அரசிற்குள்ளேயே செயற்படக் காணோம். யாரோவொரு தனியார் குறியேற்றம் தான் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. கணித்தமிழ் நடைமுறையிற் புழங்க ஒரு IT policy வேண்டாமா? தமிழக அரசு அதைப்பற்றி எண்ணிச் செயற்படவில்லையே? “எண்ணித் துணிக கருமம்” - என்னவாயிற்று?]

[கணித்தமிழுக்கான சிக்கல்கள் அரசில் மட்டுமல்ல குமுகாயத்திலும் ஏராளம். தமிழ்நாட்டில் ஒவ்வோர் நாளிதழும் தாளிகையும் தனித்தனிக் குறியேற்றத்தைக் கொண்டுள்ளன. தினமலர், தினமணி, தினகரன்........ஆனந்த விகடன், குமுதம், கல்கி......கொண்டிருக்கின்றன. அவர்களில் பலருக்கும் Shreelipi தான் தெரியும்.

5 அகவைக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கான மழலைப் பாட்டுக் குறுந்தகடுகள் கூட இப்படித் தனியார் குறியேற்றங்களிற்றான் உலவுகின்றன. வெவ்வேறு இணைய நூலகங்களில் சேகரிக்கப்படும் ஆவணங்களும், சுவடிகளும் ஒருங்குறியில் இருப்பது பெரிதும் குறைவே. தனியார் குறியேற்றத்திலேயே அவை கிடைக்கின்றன.

இவை போன்றவை ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தமிழின் பயன்பாட்டையே நம் பொதுவாழ்விற் குறைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழே தெரியாது ஒரு மாணவன் தமிழ்நாட்டிற் கல்வி பெற்றுவிடமுடியும். [சீனம் தெரியாது, சப்பானியம் தெரியாது, டாயிட்சு தெரியாது, பிரெஞ்சு தெரியாது, அரபி தெரியாது, துருக்கி தெரியாது, ஈப்ரு தெரியாது அந்தந்த நாடுகளில் கல்வி பெற்றுவிட இயலுமா?] தமிங்கிலம் எங்கு பார்த்தாலும் தகத்தகாய ஒளிவீசிச் சிறந்து கொண்டிருக்கிறது. மிடையத்துறை முழுதும் - தொலைக்காட்சி, தாளிகை, பண்பலை, வானொலி, திரைப்படம் - என்று பலவிடங்களில் 10 சொற்களுக்கு 6/7 சொற்கள் ஆங்கிலம் பேசித் திளைக்கிறோம். ஆங்கில வினைச்சொற்களைப் பண்ணி ஆங்கிலப் பெயர்ச்சொற்களை முன்னால் வைத்து தமிழ்ச் சொற்கள் வெறுமே ஒட்டு இடைச் சொற்களாகிவிட்டன. தமிழே வேண்டாம் என்று வேப்பங்காயாகக் கசந்து கொண்டிருக்கும் போது எந்தச் சொவ்வறையாளன் தமிழிற் சொவ்வறை உருவாக்க முன்வருவான்? இங்கு தான் தமிழ்க் கணிமைக்குச் சந்தையேயில்லையே? உப்புக்குச் சப்பாணி வேலைகள் எத்தனை நாளைக்கு நிலைக்கும்?

ஒரு அண்ணாச்சி கடையில் பெறுதிச் சீட்டு தமிழிற் தரப்படுவதேயில்லை. தமிழ்நாட்டில் விற்கப்படும் மின்னியியற் சரக்குகள் தமிழிற் கையேடு இல்லாது விற்கப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் கணிகள், கைபேசிகள் தமிழ் இடைமுகம் கொள்ளாது இருக்கின்றன. “தமிழ் என்றைக்கு ஒழியும்?” என்று வழிமேல் விழிவைத்துப் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாமோ கோடியிற் புரளும் யாரோவொரு திரைப்படக் கலைஞனின் வெட்டுப் பதாகைக்கு பாலும், சந்தனமும் தெளித்து முழுக்குச் செய்யக் காத்து நிற்கிறோம். நம் சிறார் நம்முடைய விழாக்களில் “Record Dance" ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் கூட இருந்து அவர்களைக் கைதட்டி ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழாவது ஒன்றாவது? ஏதோ சில பைத்தியங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.]

[தமிழருக்குள் சிதறு மனப்பான்மை என்பது ஊறித் திளைப்பது போலும். ஒன்றுபட்டு ஒரு குறியேற்றத்திற்குள் வாரார் போலும். வெறுமே மேடைகளிற் “தமிழ் வாழ்க” என்று கூக்குரலிடுவதற்கும். தப்புந் தவறுமாக “ஆங்கிலத்திற்கு அப்புறம் இணையத்தில் உயர்ந்திருக்கும் மொழி தமிழ்” என்று பொய்யாகப் பெருமை பேசுவதற்கும் தான் கணித்தமிழ் பயன்படுகிறது போலும்.]

இப்படி ஒரு தமிழ்க் குறியேற்றம் செயற்படாது பற்பல குறியேற்றம் செயற்பட்டால், என்ன நன்மை நமக்கு விளையும்?

தமிழில் ஒரு சொலவடையுண்டு. கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம். பேச்சாவணத்தில் இருந்து எழுத்தாவணம் (speech to text), எழுத்தாவணத்திலிருந்து பேச்சாவணம் (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), ஒளிவழி எழுத்துணரி (optical charactert recognition) என்று ஏதேதோ உயர் நுட்பவியல் பற்றிப் பேசவிழைகிறோம். இந்த நுட்பியல் எல்லாம் நமக்கு நடக்கவேண்டும் தான். ஆனால் அடிப்படையில் ஒரு குறியேற்றத்திற்கே இவ்வளவு தடுமாறிக் கொண்டிருந்தால், நம்முடைய கனவுகள் என்று நனவாவது?

பாழாய்ப்போன இந்த மாற்றத்திற்கு ஒரு 6 மாதம் போதாதா? அதற்குள் மற்ற குறியேற்றங்களை மூட்டை கட்டி, எல்லோரும் ஒரு குறியேற்றத்திற்கு வந்து சேரக் கூடாதா? - என்ற ஏக்கம் நம்மை வாட்டுகிறது. “மறுமடியும், மறுபடியும் தாயம் போடு” என்று தடுமாறி ”பரமபத சோபனம்” ஆடிக்கொண்டிருந்தால் எப்படி?

இதற்கு வினையூக்கமாய் நாம் என்ன செய்யப்போகிறோம்?

புலம்பலுடன்,
இராம.கி.

Sunday, January 13, 2013

2013 சென்னைப் பொத்தகக் கண்காட்சியும் பொத்தகப் பரிந்துரையும்

2013 சென்னைப் பொத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களின் பட்டியல், வாங்கிய கடைகளின் பெயர்களும் (20), அவற்றின் கீழ் பொத்தகங்கள் (39) பற்றிய குறிப்புமாய்க் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெவ்வேறு ஆட்கள் வாங்கும் பொத்தகங்கள் அவரவர் விழைவிற்குத் தகுந்து மாறுபடும். ஒரே ஆளின் விழைவுகளுங் கூட பல்வேறு காரணங்களால் பல்வேறு பொழுதுகளில் மாறுபடும். ஒரு பொழுது வாங்கியது இன்னொரு பொழுது வாங்கப் படாமலே போகலாம். நண்பர்களின் கவனத்திற்கும், பரிந்துரைக்குமாய் இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

கண்காட்சியில் எந்த ஆண்டைக் காட்டிலுங் கூடுதலாய்க் கடைகள் இருக்கின்றன. மக்கள் நெரிசலும் கூடவே இருக்கிறது. பொத்தகங்களின் விலைவாசியும் கூடியிருக்கிறது. எல்லாக் கடைகளும் ஏறியிறங்க வேண்டுமானால் குறைந்தது 4,5 மணி நேரங்கள் ஆகும். (இத்தனைக்கும் முழுதும் ஆங்கிலப் பொத்தகங்கள் மட்டுமே விற்கும் எல்லாக் கடைகளுக்குள்ளும் நான் போகவில்லை. ஓரளவு நான் எதிர்பார்த்த கடைகளுக்குள் மட்டுமே போய்வந்தேன்.)

சென்ற ஆண்டு நடந்த (புனித சியார்ச்சு பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிர்ப்புறம்) இடத்தைக் காட்டிலும் இவ்விடம் (உடற்பயிற்சிக் கல்லூரி, நந்தனம்) அவ்வளவு ஏந்துகளுடன் இல்லை. நிறைய நடக்க வேண்டியிருக்கிறது. (கழிப்பிடங்களும் பற்றாது.) சிற்றுண்டி சாப்பிடுவதும் இன்னும் நன்றாக அமைந்திருக்கலாம். வருங்காலங்களில் கண்காட்சி அமைப்பாளர்கள் வேறு ஏதேனும் ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்தால் நல்லது. (பேசாமல் நந்தம்பாக்கம் பொருட்காட்சி இடத்திற்கு இவர்கள் நகரலாம். ஏன் அங்கு போக இன்னுந் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.. அது எல்லாவிதத்திலும் ஏந்துகளும் வாய்ப்புகளும் கூடியது. நகரின் மையத்திலிருந்து கொஞ்சம் தொலைவு கூடியது என்பதைத் தவிர வேறு குறைகள் இருப்பதாய்த் தோன்றவில்லை.)

அன்புடன்,
இராம.கி.

பொத்தகப் பட்டியல்:

1 கீழைக்காற்று
a தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - காலச்சுவடு பதிப்பகம்
b தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு - எஸ்.அருணாச்சலம் - தமிழாக்கம் சா.ஜெயராஜ் - பாவை பப்ளிகேஷன்ஸ்.

2 விடியல்
a இந்திய வரலாறு - ஓர் அறிமுகம் - டி.டி.கோசாம்பி
b பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி - புத்தா வெளியீட்டகம்
c கதைக் கருவூலம் - சமணக் கதைகள் ஸி.எச்.தானி - தமிழில் ராஜ்கௌதமன்

3 குமரன் புத்தக இல்லம்
a Early Historic Tamil Nadu c 300 BCE - 300 CE - edited by K.Indrapala

4 விழிகள் பதிப்பகம்
a அகநானூறும் காதா சப்தசதியும் - ஓர் ஒப்பாய்வு - வே.ச. திருமாவளவன், நோக்கு பதிப்பகம்

5 உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
a தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி - ஞானப்பிரகாச சுவாமிகள்

6 சென்னைப் பல்கலைக் கழகம்
a Facets of Jainism - series 1 - ed.by N.Vasupal
b பத்துப்பாட்டு ஆராய்ச்சி - டாக்டர் மா.இராசமாணிக்கனார்

7 காவ்யா
a திராவிடத் தெய்வம் கண்ணகி - பேரா.காவ்யா சண்முகசுந்தரம்

8 சாகித்ய அகடமி
a கயிறு - 3 தொகுதிகள் - தகழி சிவசங்கர பிள்ளை - தமிழில் சி,ஏ.பாலன்

9 கிழக்குப் பதிப்பகம்
a உடையும் இந்தியா - ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் - ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்

10 விசா
a ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா
b ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் - சுஜாதா

11 தமிழினி
a நட்ட கல்லைத் தெய்வமென்று - கரு.ஆறுமுகத்தமிழன்
b காலம் தோறும் தொன்மங்கள் - அ.கா.பெருமாள்
c ஒரு குடும்பத்தின் கதை - அ.கா.பெருமாள்
d வஜ்ஜாலக்கம் - சுவேதாம்பர சமணமுனி ஜயவல்லபன் இயற்றியது - தமிழில் மு.கு.ஜகந்நாதராஜா
e மொழிக்கொள்கை - இராசேந்திர சோழன்

12 இந்திய அரசு வெளியீட்டுத்துறை
a இந்திய இசை - ஓர் அறிமுகம் - பி.சைதன்ய தேவா

13 காந்தளகம்
a சக்கரவாளக் கோட்டம் - குணா
b தமிழர் வரலாறு - கிழாரியம் முதல் முதலாளியம் வரை - குணா
c முன்தோன்றி மூத்தகுடி - குணா

14 காலச்சுவடு
a பண்பாட்டு அசைவுகள் - தோ.பரமசிவன்

15 தேசியப் புத்தக அறக்கட்டளை
a தென்னிந்தியக் கோயில்கள் - கே.ஆர்.சீனிவாசன்.
b Garden Flowers - Vishnu Swarup

16 தஞ்சைப் பல்கலைக் கழகம்
a Foreign notices of Tamil Classics - An appraisal - S.N.Kandasamy

17 நியூ செஞ்சுரி
a A History of Ancient Tamil Civilization - A.Ramasamy
b இந்தியாவில் மெய்யியல் - மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா - மொழிபெயர்ப்பு சா.ஜெயராஜ்
c பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள், நிலையங்கள், சில தோற்றங்கள் - ஆர்.எஸ்.சர்மா
d வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - சுவீரா ஜெயஸ்வால் - தமிழாக்கம் கி.அனுமந்தன், ஆர்.பார்த்தசாரதி

18 மோதிலால் பனார்சிதாசு
a History of Ancient India - Ramashankar Tripathi
b Jainism - History, Scociety, Philosophy and Practice - Agustin Paniker

19 தமிழ்த்தேசம்
a தமிழின் வேர்ச்சொற்கள் - முதல் தொகுதி - அ.சவரிமுத்து
b தமிழின் வேர்ச்சொற்கள் - இரண்டாம் தொகுதி - அ.சவரிமுத்து
c தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும் - க.நெடுஞ்செழியன்
d சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும் - க.நெடுஞ்செழியன்

20 சேகர் பதிப்பகம்
a சிலம்பின் காலம - மீண்டும் ஒரு விளக்கம் - டாக்டர் செல்லன் கோவிந்தன்

Wednesday, December 19, 2012

கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் உரை

அண்மையில் கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் மின்னணுக் கருவிகளிற் தமிழ்ப்பயன்பாடு என்ற இரண்டாம் அமர்விற்கு என்னைத் தலைமை தாங்கி நடத்தப் பணித்தார்கள். அதில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. இந்த உரையைப் பேச்சு வடிவில் மாற்றி நான் அங்கு உரைத்திருந்தேன். இப்பொழுதெல்லாம் மேடைத்தமிழ் என்பதை எழுத்து வடிவிற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். பேசும் பொழுது, பேச்சுத்தமிழ் நடையையே பயன்படுத்துகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

--------------------------------------
மொழி என்பது அடிப்படையிற் பேச்சையே குறிக்கும். எல்லா மாந்த மொழிகளும் பேசும் வலுவை (speaking ability) இயல்பாகப் பெற்றுள்ளன. அவ்வலு இல்லாதுபோயின், வெறும் ஓசைக்கூட்டங்களாய், பிதற்றல்களாய், விலங்கொலிப் பரட்டல்களாய் மொழிகள் நின்று போயிருக்கும்.

மொல்லுதல் வினைச்சொல்லின் வழிப்பிறந்தது மொழியாகும். மொல்> (மொள்)> மொழி. மொல்மொல் எனல் பேசற் குறிப்பு; மொலு மொலுத்தல் = விடாது பேசல், இரைதல், முணு முணுத்தல். மொல்லுதல் = தாடையசைத்தல்; ஒலி எழுப்பல். சாப்பிடுகையில் ஓசையெழுவதையும் நாம் மொல்லுதலென்றே சொல்கிறோம். ”அவன் என்ன வாய்க்குள் மொல்லுகிறான்? வாயைத் திறந்து சொல்லவேண்டியதுதானே? இந்த மொல்லல் தானே வேண்டாங்கிறது?.”

மொல்லலின் இன்னொரு வளர்ச்சி முணுங்கல். [மொல்லல்> (மொள்ளல்)> மொணுங்கல்> முணுங்கல்].. வேறொரு புடை வளர்ச்சியாய், மொணுமொணுத்தல்> மொனுமொனுத்தல்> மோனம்> மௌனம் என்றாகும். சொற்பிறப்பிற்குள் மேலும் ஆழப் போகாது, கருத்து வளர்ச்சிக்கு வருவோம்.

பேசும் வலுப்பெற்ற மொழிகளிற் சில, ஒரு காலகட்டத்தில் எழுத்து வலுப் (writing enabled) பெற்றன. இன்னும் நாட்செல, அவற்றிற் சில, அச்சு வலு (printing enabled) உற்றன. அவற்றிலுஞ் சில, வளர்ந்த மொழிகளாகி, மின்னி வலுப் (electronically enabled) பெற்றன / பெறுகின்றன.

மின்னி என்பது electron-யைக் குறிக்கும்; [இது 1960 களில் எழுந்த சொல்.] மின்னணு என்று நீட்டி முழக்கவேண்டாம். மின்னியெனச் சுருக்கிச் சொல்லலாம். மின்னி என்பது கணிக் (=computer) கருத்தீட்டிற்கும் மேலானது; அகண்டது. கணிகளுக்கும் (computers) மீறி பல மின்னிப் பொறிகளில் (electronic equipments) இன்று மொழிப் பயன்பாடு இருக்கிறது. காட்டு: நகரும் போதே, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளப் பயன்படும் நகர்பேசி அல்லது செல்பேசி (= cell phone) இன்னும் தொலைக்காட்சி (television), இசையியக்கி (music player). உறையூட்டி (refrigerator), கட்டிட ஒளிமையைக் கட்டுறுத்தும் (control) கருவிகள் எனக் கணக்கற்ற கருவிகளுக்குள் மொழிப் பயன்பாடு வந்துவிட்டது. பேச்சாலும், எழுத்தாலும் எதையும் இயக்குவிக்க முடியும் போலும்.

கணி வலுவைக் காட்டிலும், மின்னி வலு விரிந்தது. அதே பொழுது, கணி வலுவிற்கான செயற்பாடுகள் மின்னி வலுவிற்கும் உதவுகின்றன. இற்றை நுட்பியல் வளர்ச்சியில் மின்னிக் கருவிகளிற் பயன்படும் வகையில் இயல்மொழிகளை ஏற்றதாக்கும் கட்டாயமிருக்கிறது.

எழுத்து வலு, அச்சு வலு, மின்னி வலு என ஒவ்வொன்றும் மொழிவளர்ச்சியில் ஒரு நுட்பியல் எழுச்சியாகும். இவ்வெழுச்சிகளைத் தாண்டி வளர்ந்த மொழிகளே முகல்ந்து (modernized) முன்னெடுத்து வருகின்றன; நிலைத்து நிற்கின்றன. உலகத்திற் பல மொழிகள் (காட்டாக ஆங்கிலம், சீனம், இசுப்பானியம், பிரஞ்சு, செருமானியம், உருசியம், சப்பானியம், அரபி, துருக்கி போன்று பல்வேறு மொழிகள்) இத்தகுதியைப் பெற்றிருக்கின்றன.

அதே பொழுது, உலகத்தில் ஏறத்தாழ 10 கோடிப்பேர் பேசும் தமிழ்மொழி (தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7.5 கோடிப்பேர் தமிழ் பேசுவதாகவும், மற்ற மாநிலங்களையும் சேர்த்தால் 8.75 கோடிப்பேர் இருப்பதாகவுஞ் சொல்கிறார்கள்.) இவ்வலுக்களிற் தமிழ் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது - என்பது கேள்விக்குறியே ஆகும்.

எழுத்து வலுவைத் தமிழ் மொழி, 2500 ஆண்டுகளுக்கு முன் பெற்றதாக ஆய்வாளர் கூறுகின்றனர். குடியேற்ற (colonialism) ஆதிக்கத்தால், கிறித்துவ விடையூழியர் மூலம் தூண்டப்பெற்று அச்சு வலுவை இம்மொழி 400, 450 ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே அச்சுக்குள் முதலில் நுழைந்த மொழி தமிழ் தான்.

இன்று குடியேற்றத் தாக்கம் போய், இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. “நாமே இந்நாட்டு மன்னராகிவிட்டோம்” ஆனால் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கு அப்புறம், ”இன்று தமிழ்மொழி மின்னி வலுவைப் பெற்றதா?” எனில் இல்லெனச் சொல்லவேண்டும். தமிழினும் இளமையான இந்தி மொழி, நடுவணரசின் பெரும் முயற்சிகளால், தகுதியான மின்னி வலுவை நம் கண்ணெதிரே பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே பொழுது, தமிழையும் சேர்த்த மாநில மொழிகளோ ஆட்சி வலுப் பெறாது, மின்னி வலுவுறாது, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. (தமிழர் பெரும்பாலும் பழம்பெருமை பேசுவதிலேயே ஓய்ந்து விடுகிறோம். இன்றைய நிலையைக் கொஞ்சங்கூட எண்ணிப் பார்ப்பதேயில்லை.)

கூடவே, நம் விளங்காமையால்,, தமிழ்ப் பேச்சுவலு, எழுத்துவலு, அச்சுவலு என எல்லாவற்றையுங் குறைத்துக் கொண்டிருக்கிறோம். ”தமிழாற் தனித்தேதுஞ் செய்ய முடியாதோ?” எனும் நிலைக்கு வந்து, தமிங்கிலக் கலப்பு அவ்விடத்திற் புற்றீசலாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. பத்து வார்த்தை பேசினால் அஞ்சு வார்த்தை அதில் ஆங்கிலமாக வந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பெரிதாக நினைத்து நம் சிறார்களை “இங்கிலிபீசு” பேசவைப்பதில் முனைப்பாக ஈடுபடுகிறோம். இனிமேலும் கட்டுமுகமாய் ஏதுஞ் செய்யாதிருந்தால், நம்மூரிலேயே தமிழைச் சில பதின்மங்களிற் தேட வேண்டியிருக்கும். நான் சொல்லுவது வெறும் எச்சரிக்கையல்ல. உள்ளமை நிலையாகும்.

உலகம் கணிமயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய குமுக, அரசு நடவடிக்கைகளும், அரசு-பொதுமக்களிடையுள்ள இடையாட்டங்களும் (interactions) இனிமேலும் வெறுமே எழுத்துமயம், அச்சு மயம் என்று மட்டுமே ஆகிக் கொண்டிருப்பதிற் பொருளில்லை. பல்வேறு தரவுத் தளங்கள் வெறுமே எழுத்துக் கோப்புகளில், அச்சுக் கோப்புக்களில் சேகரித்து வைக்கப்படவில்லை. அவை மின்னி மயமாக்கிக் காப்பாற்றப்படுகின்றன.

உலகெங்கும் எல்லா இடையாட்டங்களும் நேரே ஓர் அரசு அலுவகத்திலோ, தனியார் அலுவகத்திலோ, அலுவர் முகம் பார்த்து விண்ணப்பிக்கப் படுவதில்லை.

பிறப்புச் சான்றிதழ் பெறுவது,
திருமணத்தைப் பதிவது,
மனை விற்பனையைப் பதிவது,
சுற்றுச் சூழல் வெம்மைகள் (temperatures தெரிந்து கொள்வது,
மழைப் பொழிவு அறிவிப்புக்கள் (rainfall announcements) செய்வது
வெதணங்கள் (climates) பற்றி அறிவிப்பது,
வேளாண்மை அறிவுரைகள்,
அரசிற்குப் பொதுமக்கள் விடுக்கும் வெவ்வேறு வேண்டுகோள்கள்,
பொதுமக்களுக்கான அரசுச் சேவைகள்,
வணிகங்களுக்கு இடையே, பொதினங்களுக்கு (businesses) இடையே நடைபெறும் பரிமாற்றங்கள்,
பொதினங்கள்-அரசுகள் இடையே பரிமாற்றங்கள்,
பொதினங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே பரிமாற்றங்கள்

என எல்லாமே உலகெங்கும் அந்தந்தவூர் மொழிகளில் மின்னிக் கருவிகள் வழியே, நடைபெறுகின்றன. தமிழில் மட்டும் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிதாய் நடக்கிறது. கணிமயப்படுத்தல் என்பது வளர்ந்த நாடுகளில் 99% நடக்கிறதென்றால், இந்தியில் 10% நடக்கிறதென்றால் தமிழில் 1% கூட நடைபெறுவதில்லை. நாம் வெற்றுப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இது போன்ற பரிமாற்றங்களையும், கணுக்கங்களையும் (connections) மின்னி மயமாக்கும் போது நமக்கு ஆழ்ந்த கவனம் தேவை. தமிழில் ”செருப்பிற்கேற்ற காலா? காலிற்கேற்ற செருப்பா?” என்ற சொலவடையுண்டு. மின்னிமயப் படுத்தலுக்கு ஏற்ற மொழியா, மொழிக்கேற்ற மின்னிமயப் படுத்தலா? இந்தக் காலத்திற் செருப்பிற்கேற்ற காலாக நாம் மொழியை வெட்டிக் கொண்டிருப்பது போற் தெரிகிறது. தமிழ்மொழிக்குப் பயன்படும்படி கணிமயப் படுத்தாமல், கணிமயப் படுத்தலுக்குத் தக்க நம் மொழியையே மாற்றிக் கொண்டிருக்கிறோம். இது தவறான அணுகுமுறையாகும். தமிழைச் சவலைப் பிள்ளையாக வைத்து, கணிமயப் படுத்தலைச் செயற்படுத்தும் தேவையில் ஆங்கிலக் குண்டுப் பிள்ளையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நடுவண் அரசோ, தன்வேலையிற் கவனமாய், ஆள், பேர், அம்பு வைத்து அந்தந்த இடங்களில் இந்தி மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு விழித்துக் கொள்ளவேண்டும். தமிழின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

”புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினிலில்லை
சொல்லவுங் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்று ஒரு பேதை சொன்னது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. நாம் விழித்துக் கொள்ளாதிருப்பின், இதைத் தவிர்க்க முடியாது. விழித்துக் கொள்ளவேண்டியதின் பொருள், தமிழுக்கு மின்னி வலு கொடுப்பது தான்.

மின்னி வலுவென்பதற்கு முதலடிப்படை ”கணிக்குள் எப்படிக் குறியேற்றம் பெறுவது?” என்ற கேள்விக்கான விடையாகும். இதற்கான முயற்சிகள் வெவ்வேறு மொழிகளுக்கு நடந்தாலும், இந்திய மொழிகளுக்கான முயற்சிகள் 1970, 80 களிற் தொடங்கின. இவையெல்லாம் தனியார், தனி நிறுவனங்கள், தனியரசுகளின் முயற்சிகளாகும். [சிங்கப்பூர், மலேசிய அரசுகளை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தமிழக அரசு ஒரு உள்ளுறுத்த நுட்பியற் கோட்பாடு (information technology policy) இல்லாது இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது.] இவற்றை வரலாறு பூருவமாக நான் இங்கு விவரிக்க முற்படவில்லை. இவற்றின் முடிவில் 1990 களில் உலகின் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் ஏற்கும் வகையில் ஒருங்குறிக் குறியேற்றம் ஏற்பட்டது.

அந்த ஒருங்குறிக் குறியேற்றத்தில் உலகின் பல மொழிகளுக்கு இடங் கொடுத்தார்கள். தமிழுக்கும் கொடுத்தார்கள். உரிய நேரத்தில் தமிழ்பேசுவோரின் தன்னார்வக் குழுக்களோ, நிறுவனங்களோ, அரசுகளோ தமிழுக்கு வேண்டிய இடங்களைக் கேட்டிருந்தால், தமிழின் உயிர், மெய், உயிர்மெய் என அனைத்து எழுத்துக்களுக்கும் இடம் கிடைத்திருக்கும். அந்த நேரத்தில் நாம் சரியாகச் செயற்படாது, உள்ளூர் அரசியலாற் தூங்கிப் போன காரணத்தால், நடுவண் அரசுப் பரிந்துரையில் உயிர், அகர உயிர்மெய், சில உயிர்மெய் ஒட்டுக்குறிகள் என மொத்தம் 128 இடங்களே கிடைத்தன. இவற்றை வைத்துக்கொண்டு, ஒரு சில கணிநுட்பங்களின் மூலம் சில சித்து வேலைகள் செய்து உயிர்மெய் எழுத்துக்களைக் கணித்திரையிற் கொண்டு வருகிறோம். இதுதான் இன்றைய நிலை.

இந்தச் சித்துவேலைகள் தமிழை இணையத்திற் பயன்படுத்துவதற்கும் கணிக்கோப்புக்களைச் சேமித்து வைப்பதற்கும், ஒரு கணியில் இருந்து இன்னொரு கணிக்கு பரிமாறுவதற்கும் பெரிதும் பயன்பட்டன. சொற்செயலிகளிலும், பல்வேறு அச்சிகளிலும் (printers) இது ஒழுங்காகவே செயற்பட்டது. ஆனால் பெரும் பொத்தகங்கள், ஆவணங்கள் போன்றவற்றை PDF கோப்புகளில் கொண்டுவந்து அச்சு நுட்பத்திற்கு மாற்றுவதில் ஒரு சில உயிர்மெய்கள், ஒகர, ஓகாரம் போன்றவை, முரண்டு பிடித்தன. எளிதில் ஒன்றிற்கொன்று என்ற வகையில் எழுத்துக்களுக்கும் குறிகளுக்குமிடயே கணுக்கம் (connection) ஏற்படுத்தி உயிர்மெய்களைப் பெறாததால், கணியில் இருந்து அச்சு நுட்பத்திற்கு மாறும் பொழுது ஒருசில குறைகள் ஏற்பட்டன. கணிநுட்பியல் அறிஞர்களின் உள்ளூர்ச் சண்டையால் இந்த இழப்பு ஏற்பட்டது. உயிர், மெய் ஆகியவற்றோடு உய்ர்மெய்களுக்கும் சேர்த்து இடம் வாங்கியிருந்தால் நாம் எங்கோ போயிருக்க முடியும்.

இதன் விளைவாக ஆறுதற் பரிசாகத் தமிழ் நுட்பியலாளர்கள் அனைத்தெழுத்துக் குறியேற்றம் (all character encoding) என்ற ஒன்றைப் பரிந்துரைத்தனர். இதை ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் (unicode consortium) தமிழக அரசு வழித் தெரிவித்தோம். இதுகாறும் ஒருங்குறிச் சேர்த்தியம் தன் ஒப்புதலை இதற்கு வழங்கவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு தமிழில் உள்ள இணையப் பரிமாற்றங்களுக்கும் ஏதுவாக ஒருங்குறியையும். அச்சு நுட்பத்திற்குத் தேவையான வகையில் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் ஏற்று 2009 இல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணைக்கு அப்புறம், மின்னிவலுப் பெறுவதற்கான எந்த முயற்சியும் சொல்லத்தகும் வகையில் நடைபெறவில்லை.

மின்னிவலுப் பெற சொவ்வறையாளர் (software specialists) பலரும் ஒருங்கிணைந்து வேலை செய்யவேண்டும். எப்பொழுது அவர்கள் இதை இயல்பாக செய்வார்கள்? அவர்கள் உருவாக்கும் சொவ்வறை நிரலிகளுக்குச் சந்தை ஏற்பட்டாற் தானே? இப்பொழுது தான் சந்தையே, இல்லையே? நாம் தான் குண்டுசட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கிறோமே? அப்புறம் ”தமிழ் எங்கும், எதிலும் இல்லையே?” என்று குறைப்பட்டுக் கொள்வதிற் பொருளென்ன? இந்தக் குறையைச் சரிசெய்ய என்ன செய்திருக்கிறோம்? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்ப் பயன்பாட்டிற்குச் சந்தை உருவாக்காது இருக்கிறோமே? “அவர்கள் சதி செய்கிறார்கள், இவர்கள் குலைக்கிறார்கள்” என்று எங்கோ எதிரியைத் தேடுவதற்கு மாறாய், நம்முடைய குறையென்ன? நாம் எதைச் சரிசெய்யது இருக்கிறோம் என்று கவனிக்க வேண்டாமா? இதுவரை கணித்தமிழ் முயற்சிகளில் நடந்தவையெல்லாம் பொருளியலில் அளிப்பு பக்கத்தையே (supply side economics) பார்த்துக் கொண்டிருந்தன. காட்டாக,

1. தமிழிற் குறியேற்றச் சிக்கல் (8 மடை, 16 மடைக் குறியேற்றங்கள், ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றம்) உள்ளீட்டுச் சிக்கல் (இப்பொழுது இ-கலப்பை, NHM writer, Microsoft இன் PME எழுதி எனப் பல உள்ளீட்டுச் செயலிகள் – inputting softwares - இலவசமாக வந்துவிட்டன. ஆனாலும் இன்னும் தனியார் குறியேற்ற எழுத்துரு/வார்ப்புக்களை (fonts) அரசும் தனியாரும் அளவற்ற காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதும், அதைச் சில தனியார் நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பதும் வடித்தெடுத்த ஏமாற்றுச் செயல் தான். ஒருங்குறிக்கும் அனைத்தெழுத்துக் குறியேற்றத்திற்கும் அரசும் பொதுமக்களும் உடனடியாக மாறவேண்டும். இனியும் ஏமாந்து கொண்டிருக்கக் கூடாது.),

2. சொல்லாளர்ச் சொவ்வறைகள் (எழுத்துப் பிழைகள், சொற்றொடர்ப் பிழைகள், வாக்கியப் பிழைகள், நடைப் பிழைகள் எனப் பல்வேறு பிழைகள் மலிந்து தமிழிற் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மடல்கள், பட்டியல்கள், பரத்தீடுகள் (presentations), எனப் பல்வேறு ஆக்கங்கள் வருவதை இப்பொழுதெல்லாம் யாருமே கண்டு கொள்வதில்லை. முன்பு பிழை திருத்திக் கொண்டிருந்த தமிழாசிரியர்கள் எத்தனை நாள் ஏமாந்து கொண்டிருப்பார்கள்? எனவே பட்டிமன்றம், பாட்டரங்கம் பேச்சரங்கம் என்று போய் விட்டார்கள். இப்பொழுது வருத்தத்திற்குரியதாய், நம்மிற்பலரும் தமிழையாவை மதிக்கமாட்டேம் என்கிறோம். திரைப்படங்களிற் கூட அவரைக் கேலிப்பொருளாக்கி விட்டார்கள். யாராவது எதிர்ப்புச் செய்கிறோமா? ஆங்கிலத்தில் யாராவது பிழைமலிந்த நடையைப் பயன்படுத்துகிறார்களோ? இந்து நாளிதழில் தப்பும் தவறுமாய் ஓர் ஆசிரியருக்கு மடல்கள் வருமா? தமிழில் மட்டும் ஏன் இப்படியொரு மெத்தனம்? அண்மையில் ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாளர்ச் செயலியை பேரா. தெய்வசுந்தரம் மென்தமிழ் என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறார். அது சொற்திருத்தியாகவும், இலக்கணத் திருத்தியாகவும் வேலை செய்கிறது.)

3. Excel, Powerpoint Presentation போன்ற சொவ்வறைகளைத் தமிழில் உருவாக்குவதிலும் புதுப் புது முயற்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. சில இயங்கு கட்டகச் சொவ்வறை (operating system softwares) முயற்சிகளும் நடக்கின்றன.

4. இன்னொரு பக்கம் கணித்தமிழுக்கும், அறிவியற்றமிழுக்கும் தேவையான கலைச்சொற்கள் தொடர்ந்து படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. (யாரும் இவற்றை ஒழுங்குறப் பயன்படுத்துவது தான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆழ்ந்து ஓர்ந்தால், நம் குறை சொற்களில் அல்ல. சொற்களைப் பயன்படுத்துவதிலே தான் இருக்கிறது. சட்டென்று ஆங்கிலம் பயன்படுத்தத் தாவிவிடுகிறோம். எப்பொழுது அன்றாட வாழ்க்கையில் வெட்கவுணர்ச்சி தவிர்த்துத் தமிழ்ப் பயன்பாட்டைக் கூட்டுகிறோமோ, எப்பொழுது தமிங்கிலம் பயன்படுத்துவதைக் குறைக்கிறோமோ, அப்பொழுது தான் கலைச்சொற்களுக்கு விடிவுகாலமுண்டு.)

மொத்தத்திற் கணித்தமிழ் வளர்ச்சியில் அளிப்புப் பக்கச் சிக்கல்களையே இதுகாறும் செய்துவந்து கொண்டிருந்தோம். இவையெல்லாம் கிடைத்தால் தமிழர்கள் தானாகத் தமிழுக்கு மாறிவிடுவார்கள் என்பது கானல்நீர் போன்ற எதிர்பார்ப்பாகும். நானும் 15/20 ஆண்டுகளாய்ப் பார்த்துவருகிறேன். அப்படியொன்றும் நடக்கவில்லை. பிறகு இந்த முயற்சிகளில் ஏமாற்றம் அடைந்தே சிந்திக்கத் தொடங்கினேன். நம்முடைய சிக்கல் அளிப்புப் பக்கமில்லை. அது பொருளியலின் தேவைப் பக்கம் (demand side economics) இருக்கிறது – என்று புரிந்தது.

நம் மக்கள், தமிழின் தேவையை உணராது இருக்கிறார்கள். ஆர்வலர்கள் அதை வலியுறுத்த மாட்டேம் என்கிறோம். 7.5 கோடி மக்கள் இருக்கிறோம் என்ற பெயர்தான். 7 கோடிப் படிப்பறிவில்லா மக்களை ஒதுக்கி, அரைக்கோடிப் படித்தவர்கள் ஆங்கிலத்திலேயே எல்லா வேலைகளையும் செய்து கொண்டு, மற்ற 7 கோடிப் பேரையும், ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆங்கிலம் என்பது அரைக்கோடிப் பேரின் ஆயுதமாக இருக்கிறது. 7 கோடிப்பேரை அறிவியல், நுட்பியல், முன்னேற்றம் பற்றிய அறியாமையில் ஆழ்த்தி நம் வல்லாண்மையை உறுதிசெய்ய வழி வகை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை மாற்றாது தமிழர் முன்னேற்றம் அடையமுடியாது. நாம் செய்ய வேண்டியவை என்ன? என் அறிவிற்குப் பட்ட வரை, அவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டுத் தீர்மானங்களாய், எதிர்வரும் உத்தமம் மாநாட்டுத் தீர்மானங்களாய் அவை மாறுமானால் எனக்கு மகிழ்ச்சியே.

1. தமிழக அரசு தானே 2009 இல் அறிவித்த அரசாணையை நடைமுறையில் முழுதும் செயற்படுத்தாது இருக்கிறது. இந்த அரசாணை வரும் பொழுது, தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், கணியரும், தமிழறிஞரும், ஆர்வலரும் வரவேற்றனர். அதுநாள் வரை அரசுக்குள்ளும், அரசு-பொதுமக்களிடையேயும் இருந்த பரிமாற்றங்கள் தனியார் குறியேற்றத்திலேயே நடந்து வந்தன, இவ்வாணை மூலம் ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றங்களுக்கு அரசுப்பணிகளும் குமுகச் சேவைகளும் மாறவேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக நெறிப் படுத்தியது. ஆனால் மூன்றாண்டாக இவ்வாணை செயற்படாதிருக்கிறது. அரசுப் பணிகள் தமிழின் மூலம் கணி மயமாக வேண்டுமென்றால், மின்னி மயமாக வேண்டுமென்றால், இவ்வரசாணை உடனடியாகச் செயற்படுத்தப் படவேண்டும். இன்றும் கூடத் தமிழக அரசுச் செயலகத்துட் செயற்பட்டுக்கொண்டிருக்கும் வெவ்வேறு தனியார் கணிக் குறியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். (ஒருங்குறியிற் தமிழை உள்ளிட இலவயமாகவே இணையத்தில் இ-கலப்பை, NHM writer போன்ற மென்பொருள்கள் கிடைக்கின்றன. தமிழக அரசு தமிழ் உள்ளீட்டுக்காக எந்தக் காசும் செலவழிக்க வேண்டியதில்லை.)

2. தமிழக அரசு பல்வேறு இணையத்தளங்களை தன் சேவையையொட்டி ஏற்படுத்தியிருக்கிறது. (இவையெல்லாம் இற்றைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. உடனடியாக இவற்றை இற்றைப்படுத்த வேண்டும்.) தமிழக அரசின் பல துறைகளும் பல்வேறு விண்ணப்பங்களை/படிவங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. (தமிழக அரசிற்கென இருக்கும் படிவங்கள் வெவ்வேறு துறைகளின் கீழ் இருப்பவற்றைக் கூட்டினால் ஒரு 500, 1000 தேருமா? அவையெல்லாம் தமிழில் இணையத்தில் அமைந்தாலென்ன?) அவையெல்லாம் ஒருங்குறிவடிவில் இணையத்தில் பொதுமக்கள் அணுகும் வகையில் அமையவேண்டும். தமிழில் எல்லத் துறைகளிலும் மின்னாளுமை என்பது இன்னும் 6 மாதங்களிற் கட்டாயமாகச் செயற்படவேண்டும்.

3. நேரடியாக அரசு அலுவலகத்திற்கு வந்து அலுவலரைத் தொடர்புகொள்ளும் தேவை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். வெறுமே கணிமயப்படுத்தலில் மட்டுங் கவனஞ் செலுத்தாது, எல்லாவற்றையும் ஆங்கிலத்திற் செயற்படுத்திக் கொண்டிராது, தமிழ்வழி கணிமயப்படுத்தவேண்டும்.

4. தமிழக அரசிற்கென உள்ளுறுத்த நுட்பியற் கோட்பாடு (IT policy) அறிவிக்கப்படவேண்டும். அடுத்த 10, 20 ஆண்டுகளில் தமிழை ஆட்சிமொழியாக்குவதிலும், தமிழ்வழிக் கணிமயப்படுத்துவதிலும் அரசு என்ன செய்யப்போகிறது, மின்னாளுமை என்பதை எப்படிச் செயற்படுத்தப் போகிறது என்று ஒரு கோட்பாட்டின் வழி அரசு சொல்லவேண்டாமா?

5. தமிழக வருவாய்த்துறையின் அடியில் வரும் பத்திரப் பதிவுத் துறை கணிமயமாக்கப் பட்டுவருகிறது. அதில் எல்லாப் படிவங்களும் தமிழில் ஏற்படுத்தப்பட்டு, பெறுதிச் சீட்டுக்கள் தமிழிலேயே கொடுக்கப்படவேண்டும்.

6. தமிழக அரசு நடத்தும் பல்வேறு கல்வி வாரியங்கள், பல்கலைக்கழகங்களின் அலுவல்கள் தமிழிலேயே நடந்து தமிழ்வழி மின்கல்வி பெருகவேண்டும்.

7. முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இளமுனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களுக்காவது தமிழ்ச்சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழே தெரியாது தமிழ்நாட்டிற் பட்டம் பெறுவது சரியல்ல.

8. இப்பொழுது தமிழ்நாட்டில் வணிகப் பெயர்ப் பலகைகள் தமிழ்ப் படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு தொடக்கப்பணியே. தமிழ்நாட்டு வணிகம் தமிழிலேயே நடைபெறவேண்டும். எந்தக் கடையில், நிறுவனத்தில் பெறுதிச் சீட்டு வாங்கினாலும் அது ஆங்கிலத்திலேயே இருக்கிறது. தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு கூட ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் மட்டும் தெரிந்த 95% மக்கள், வெறுமே அதிகாரிகள் முகம் பார்த்து, “என்ன சொல்வாரோ?” என்று ஏமாந்து நிற்பதாய் நிலைமையிருக்கிறது அவரவர் சிக்கலில் அவர்களே முறையிடும் வகையில் குமுக நடைமுறைகள் இருக்கவேண்டும். தமிழில் பெறுதிச் சீட்டு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு விற்பனைவரியில் மாற்றமிருக்க வேண்டும். ஒரு நுகர்வோர் தமிழில் விற்பனைப் பெறுதிச் சீட்டு கேட்டால், குறிப்பிட்ட விழுக்காடும், ஆங்கிலத்திற் கேட்டால் அதற்கு மேல் 1% அதிக விற்பனை வரியும் அரசு விதிக்கவேண்டும். இதன் மூலம் எல்லா வணிக நிறுவனங்களிலும் தமிழ் மெய்யாகப் புழங்கும் மொழியாக மாறும். தமிழ்ச் சொவ்வறைகளுக்கு ஒரு தேவையெழும். இப்பொழுது தமிழ்ச் சொவ்வறைகளுக்குச் சந்தையேயில்லை. சொவ்வறைகளுக்குச் சந்தையில்லாது தமிழ் கணி மயமாகாது. Office softwares தமிழில் வரவேண்டுமானால் இந்தத் தூண்டுதல் மிகவும் தேவையான ஒன்றாகும்.

9. தமிழகத்தில் விற்கும் எந்த மின்னிக் கருவிகள், மற்ற இயந்திரங்கள் என எல்லாவற்றிற்கும் உடன் அளிக்கப்படும் கையேடுகள் தமிழிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 1% விற்பனைவரிச் சலுகை தரப்படும் என்று அறிவிக்கவேண்டும். தமிழில் இல்லாது ஆங்கிலம் போன்று வேறுமொழிகளில் மட்டுமேயிருந்தால் சலுகை கிடைக்காது என்று ஆகவேண்டும்.

10. தமிழை ஆட்சிமொழியாக்கி, தமிங்கிலப் பயன்பாட்டைக் குறைக்கும் நாளிதழ்கள், தாளிகைகள், ஊடகங்களுக்கே தமிழக அரசு தன் அரசு விளம்பரங்களைக் கொடுக்கவேண்டும்.

11. தமிழகத்தில் இருக்கும் நடுவண் அரசுத் துறைகள், நிறுவனங்களில் நடக்கும் பரிமாற்றங்கள் தமிழிலேயே நடைபெற ஊக்குவிக்க வேண்டும் அரசு வங்கிகளிலும் இது நடைபெறவேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கு மதிப்பில்லை என்றால் அது வெட்கப்படவேண்டியதில்லையா?

12. இன்னும் ஓராண்டில் பேச்சிலிருந்து எழுத்து (speech to text), எழுத்திலிருந்து பேச்சு (text to speech), இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation), தமிழ் அறிதியியல் (tamil informatics) போன்ற துறைகளிற் தமிழ்ச் சொவ்வறைகள் வரும் படி திட்ட ஒதுக்கீடு செய்யவேண்டும். அந்த முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

13. நாடாளுமன்றத்திற் கொண்டுவரும் சட்டத் திருத்தின் மூலம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் ஆட்சிமொழி அதிகாரத்தைப் பெறவேண்டும்.

14. தமிழ் வழக்குமன்ற மொழியாக மாறவேண்டும்.

இந்தக் கருத்துக்களை என் பார்வையிற் சொன்னேன். இவ்வமர்வில் இன்னும் பலர் தங்கள் கருத்தை வழங்க இருக்கிறார்கள். அவற்றையும் செவிமடுப்போம். நன்றி.

Thursday, November 01, 2012

சொவ்வறை - 2

வறை பற்றி ஓரளவு அறிந்த நாம், இனி soft-ற்கு இணையான, (ஒலிக்குறிப்பில் எழுந்த) சொவ்வறையின் முதலசை பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்னால், நெடுங்காலமாய் நான் சொல்லிவரும் அடிப்படைப் புரிதலை இங்கு நினைவு கொள்வோம்.
------------------------------------------

"சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு " என்ற நூலில் திரு T.பக்கிரிசாமி (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) ஓர் ஆழ்கருத்தைச் சொல்லியிருந்தார்.
"ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவாலுணரும் சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள் ஆதியிலில்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) இல்லை." என்பார். இத்தகைய இயல்பான பருப்பொருள், இடப்பொருட் சொற்களை அவர் ஐம்புலன் சொற்கள் என்பார். அதாவது நல்லது, உயர்ந்தது, ஞானம் போன்ற கருத்துமுதற் சொற்களை மனிதன் ஆதிகாலத்தில் உருவாக்கி இருக்க முடியாது, பின்னால் தான் அவை உருவாகின என்பார். இன்றைக்கு வழங்கும் கருத்தியற் சொற்களின் (idealogical words) மூலம் ஐம்புலன் சொற்களாகவே இருந்திருக்க வேண்டுமென்பார்.

இதற்கு அவர் தரும் எடுத்துக்காட்டு: 'மதம்' என்ற சொல்லாகும். இச்சொல்லுக்கு religion என்றே இப்போது பொருள் கொள்கிறோம். ஆதியில் 'மதி -சந்திரன்' எனும் பருப்பொருளிலிருந்து இச்சொல் வந்திருக்க வேண்டும் என்ற சொல்வரலாறு காட்டிப் புலப்படுத்துவார். இதே போல், பருப்பொருளறிவுக் கருத்திலிருந்து மெய்ப்பொருளறிவு சுட்டும் ஞானம் என்ற சொல்லெழுந்தது. அவர் ஆய்வுமுறை சொற்பிறப்பியலிற் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. இது பாவாணர் சொல்லாத, அதேபொழுத் பாவாணரிடம் இருந்து வேறுபடும் முறை. 

(நல்லென்ற கருத்துமுதற் சொல்லும் நெல்லெனும் பருப்பொருளிற் தோன்றியதே. தமிழகத்திற் பல்லவர் (பின்னாற் பேரரசுச் சோழ,பாண்டியர்) பார்ப்பனர்க்குக் கொடுத்த ஊர்கள் சதுர்வேத மங்கலங்களென்றும், பார்ப்பனர் அல்லாதார்க்குக் கொடுத்தவை நெல்லூர்>நல்லூர் என்றும் ஆயின. சென்னையை அடுத்த சோழங்க நெல்லூர் இப்படித் தான் சோழிங்க நல்லூர் என்றாயிற்று.)

ஐம்புலன் சொற்களிலிருந்து கருத்துமுதற் சொற்கள் எழுந்த வளர்ச்சியோடு, இன்னொரு கருத்தையும் இங்கே சொல்லவேண்டும். எந்த மொழியிலும் கருத்து வளர்ச்சி என்பது, பொதுமை (generic)-யிற் தொடங்கி விதுமைக்கு (specific) வராது. விதுமையிலிருந்தே பொதுமைக்கு வரும். ஓர் இயல்மொழியில் அப்படித் தான் சொற்சிந்தனை வளரும். மார்க்சிய முரணியக்கச் சிந்தனையும் (Marxian Dialectical thinking) இதையே சொல்கிறது. இதுபற்றி முன்னரே என்னுடைய பல கட்டுரைகளிற் சொல்லி வந்திருக்கிறேன்.

எ.கா: தமிழர் நாகரிகத்தில் நெய்ப் பொருளை முதற் கண்டது பால், கொழுப்பு ஆகியவற்றில் இருந்தே. பின் அறிவு கூடி, நுட்பம் துலங்கி, எள்வித்தில் நெய் எடுத்தவன், எள்நெய் (=எண்ணெய்) என்றே அதையும் சொன்னான். பின் நாளில் கடலை, தேங்காய், ஏன் மண்ணிலிருந்தும் கிட்டியவைகளையும் எண்ணெய்ப் பொதுமை கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் எனும் விதுமைச் சொற்களால் அழைக்கத் தொடங்கினான்.

ஒரு மொழியிற் கருத்து/சொல் வளர்ச்சி, இப்படி நீள்சுருளாய் (helical spring), மறுகி மறுகித் தோன்றி, விதுமையும் பொதுமையுமாய் எவ்வளித்துப் பல சொற்களை உருவாக்கும். (எழுவுதல் எவ்வுதலாய்த் தொகுந்தது. இதுவே எகிறுதல் என்றும் பொருள் கொள்ளும், evolve = எவ்வி அளிப்பது. எல்லாவற்றையும் பொதுப் படையாய் ’வளர்ச்சியாக்கி’ எவ்வுதலை மறக்கவேண்டாம்.) 'நெய்'யெனுஞ் சொல் ஆவின் நெய்யாய் விதுமையிற் தோன்றியிருக்க வேண்டும். (’நெய்’ வரலாற்றை நான் இன்னும் அறிந்தேனில்லை.) பின் 'நெய்', பொதுமைக் குறியீடாகி, 'எள்நெய்' எனும் விதுமைக் குறியீடாகி, முடிவில் 'எண்ணெய்' எனும் பொதுமைக் குறியீடாக மீண்டும் வளர்ந்திருக்கிறது.
------------------------------------------

மேலே கொடுத்த புரிதலோடு சொவ்வறையின் முதலசைக்கு வருவோம். ”ஐயையோ, இராம.கி சொல்லி விட்டான்” என்று கைகொட்டிச் சிரித்துச் சொவ்வெனும் ஒலிக்குறிப்பைக் கேலி செய்வது எளிது. அதன் அடிப்படை புரிந்து கொள்வது கடினம். 

இது சுவையோடு ஒட்டியது. இப்பொதுமைக் கருத்துமுதலுக்கு அடிப்படை, முன்சொன்னது போல் ஐம்புலன் சொல்லே. இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு விதப்புக்களை நாவால் உணர்வதாலேயே ”சுவை” எனும் சொல் எழுந்திருக்கும். வாசம், மணம் என்பது முகரும் வழி. (மெய்ப்பாட்டுச் சுவைகளான நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற கருத்துமுதற் சொற்கள் நாகரிகம் வளர்ந்த நிலையில் ஏற்பட்டிருக்கலாம்.)

சுவையின் மாற்று வடிவமாய்ச் ”சுவடு” என்ற சொல் தமிழிலுண்டு. [“அடிமையிற் சுவடறிந்த” (ஈடு.2.6:5). சுவடன் (=சுவைஞன்) என்ற வளர்ச்சியும் அதே ஈட்டில் காட்டப் பெறும். (”சுவடர் பூச்சூடும் போது புழுகிலே தோய்த்துச் சூடுமாப் போலே” (திவ்.திருப்ப. 9 வியா.) ”சுவண்டை” இன்சுவையைக் குறிக்கும். 

இத்தனை சொற்களுக்கும், சுவைத்தலுக்கும் முதலாய் வேறு வினைச்சொல் அகரமுதலியிற் காட்டப்படவில்லை. இவை அப்பூதியாகவே (abstract) காட்சி அளிக்கின்றன. இவை கடன் சொற்களா எனில் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது. சுவைத்தல் என்பது தமிழில் மட்டுமல்ல. மற்ற தமிழிய மொழிகளிலும் புழங்குகிறது சவை> சுவை>சுவைத்தல்; [த. சுவைத்தல், ம. சுவய்க்குக, க. சவி, தெ: சவிகொனு, து.சம்பி, சவி, கோத.சய்வ், நா.சவத், கொலா.சவ்வி (இனிப்பு). 

ஐகாரமும், டு - வும் சொல்லாக்க ஈறுகள். ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால், "சொவச்சொவ / சவச்சவ" என்ற ஒலிக்குறிப்பே இவற்றிற்கு வேராய்த் தோன்றுகிறது.

taste-ற்கு வேர்தெரியாதென்று பல ஆங்கில அகராதிகள் பதிந்தாலும், நாக்கால் தடவல், மெல்லல், உணரல் போன்றவற்றையே முன்வினை என்பார். to become soft என்பதை ஆழ்ந்து ஓர்ந்தால், அது ஒரு தனிவினையல்ல, கூட்டுவினை என்பது புரியும். சில பொருட்கள் soft ஆனவை. சில hard ஆனவை. hard-ற்கு இணையாய் கடினம் என்கிறோம். (கடித்தல் வினையை எண்ணுங்கள்.) ஆனால் soft-ற்கு மெல் என்ற சொல் பகரியாகவே இருக்கிறது. அது ஒரு near description; not the real thing. அதனால் தான் விதப்பான வேறு சொல் இருந்திருக்க வேண்டும் என்கிறோம்.

கடிபட்டு மெல்லாகிச் சில்லாகி, அழுத்தம் நிலவும் வரை கூனிக் குறுகி, மெலிந்து, வளைந்து, நெளிந்து, குழைந்து நொய்யாகிப் போனதை, பரப்பு வழவழ என்று ஆனதை, இத்தனையும் சேர்ந்தாற்போற் அடிப்படையிற் புதிய பண்பைக் குறிக்கும் வகையில் சவ்வுதல் > சவைத்தல் > சுவைத்தல் என்ற வினைச்சொல்லும் சுவை என்ற பெயர்ச்சொல்லும் கிளைத்தன போலும். வாயில் மெல்லும் போது (சவைக்கும் போது) நாவின் வினையால் ஏற்படும் ஒலிக் குறிப்பே இவ்வினைச்சொல்லை உருவாக்குகிறது.

soft என்பது வாயிற் போட்டு மெல்லும் போது கடினத் திண்மம் (solid) சவைத்துப் போவதைக் குறிக்கும். ”என்ன இது சவச்சவ என்றுள்ளது?” என்று சொல்கிறோம் அல்லவா? சிலர் வழக்கில் இது சுவையிலா நிலையைக் குறிக்கும். (மொள்ளல் வினையின் வழி மொழியும் எழுந்து, ஒலியிலா மோனமும் எழுந்தது போல இதைக் கொள்ளுங்கள். மோனம், முனங்குதல் என்ற இன்னொரு வினைச்சொல்லையும் இது எழுப்பும்.) 

மெல்லுதல் வினையாற் சவைத்த நிலை (softy state) ஏற்படுகிறது. மெல்லுதல் என்பது சிறிய grinding - process - செயல்முறை; சவை என்பது தட நிலை - state. I prefer to use a state than a process here. மெல் என்பது சில இடங்களிற் சவைக்குப் பகரியாய் நிற்கலாமே ஒழிய முற்றிலும் அல்ல. (my question is simple. What is the etymology of suvai?) சொவ்விய / சவ்விய நிலை என்பது இயற்கையிலோ, மாந்தர் செய்கையாலோ ஏற்படலாம். மெல்லுதல், மாந்தர் செய்கை மட்டுமே. இந்த நுணுக்கத்தைச் சொல்ல ஒலிக்குறிப்பைத் துணைக்கொண்டால் குடிமுழுகியா போகும்? :-)

சவ்விய நிலையின் தொழிற்பெயராய், மெல் பொருளில், மெல்லிய மூடு தோலைக் குறிக்கும் வகையில் சவ்வு (membrane) எழும். sago வின் சோற்றை, நொய்யான மாவுப் பொருளை, காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் சவ்வரிசி எனப்படும். சவ்வாயிருப்பது பிசின் (to be viscid) போலாவதைக் குறிக்கும். சவுக்குச் சவுக்கெனல் எனும் அடுக்குத் தொடர் வளைந்து கொடுக்கும் குறிப்பைக் காட்டும். சவ்வை ஒட்டிய இத்தனை சொற்களும் கடன் சொற்களா? வியப்பாக இல்லையா? இவற்றின் வேர்கள் தாம் என்ன?

சவத்தலுக்குத் தொடர்பான சப்புதலும் சப் எனும் ஒலிக்குறிப்பில் எழுந்தது தான். இதுவும் தமிழிய மொழிகளில் பல்வேறு விதமாய்ப் புழங்குகிறது (ம.சப்புக; க.சப்பரிக, சப்படிக, சப்பளிக, தப்படிக; தெ.சப்பரிஞ்சு, சப்பு; து. சப்பரிபுனி; கோத.சப்; துட.செப்; குட.சப்பெ, சபெ; நா.சவ்ல்; பர்.சவ்ல்,சல்; மா.சொப்பு; பட.சப்பு; சப்புதல் = அதுங்குதல் to be bent, pressed in, to become flat. சுவையில்லாது உள்ளதையும் சப்பெனக் குறிப்பதுண்டு.

இன்னொரு வளர்ச்சியாய், ”வாயிற் போட்டு மெல்லுதல்” வழி சவள்தல், சவட்டுதல் என்று சொற்கள் ஏற்பட்டு மெல்லுதல், மிதித்தல் போன்றவற்றைக் குறிக்கும். மிதிவண்டியைத் தென்பாண்டியிற் சவட்டு வண்டி எனச் சொல்லி வந்தார். உறுதியில்லாது வளைந்து கொடுப்பானைச் சவடன் என்பார். (”அஞ்சுபூத மடைசிய சவடனை” என்பது திருப்புகழ் 5.57) வீண்பகட்டுக் காட்டுவதைச் சவடால் என்பார்கள். (சவடால் வேற்றுமொழிச் சொல் என்பாரும் உண்டு.) நீரைச் சவட்டும் படகுத் துடுப்பு சவள் எனப்படும். சவளுதல் என்பது வளைதல் என்றும் பொருள் கொள்ளும். சவள் தடி = துவளும் தடி, குந்தம்; இது சவளமென்றுஞ் சொல்லப் பெறும். சவளக்காரர் ஈட்டிபிடிக்கும் போர்வீரர். ஆங்கிலச் சொல்லான javelin என்பதை அடுத்தெழுதி விட்டால் சட்டாம் பிள்ளைகள் ”ஆங்கில ஒலிப்புக் காட்டுகிறான்” என்று சாடிவிடுவர். வங்காள விரிகுடாவில் இவற்றைக் கொட்டுவதுதான் சரியான முடிவு போலும்.

வளைந்து நெளியும் புளியம்பழம் ”சவளம்” எனப்பெறும். வளைந்த காலுள்ளவன் ”சவளன்” எனப் படுவான். வளைந்து நெளியும் துணிச்சரக்கு ”சவளி” எனப்படும். ஊரெல்லாம் சவளிக்கடைகள் இழைகின்றனவே? சவண்டிய காரணத்தால் அது சவளி. 

சில தமிழர் வடமொழிப் பலுக்கைக் கொணர்ந்து ஜவளி என்றாக்கி உள்ளதையும் தொலைப்பார். வடமொழியில் இச்சொல் இல்லை. ”சவளைக்காரர்” என்பது நெல்லை மாவட்டத்தில் நெசவுத்தொழிலரைக் குறிக்கும். மெலிதற் பொருளில் சவு-த்தல் என்ற சொல் யாழ்ப்பாணம் அகராதியிற் குறிக்கப் பெற்றுள்ளது. சவட்டி (அடிக்கப்) பயன்படும் வளைகருவி சவுக்காகும்.

நெளிவுற்ற இலை சவண்டிலை எனப்படும். சவள்> சவண்> சவணம் என்பது மாழைக் கம்பி இழுக்கும் கம்மியக்கருவியைக் குறிக்கும். ஆண்டு வளர்ச்சி பெற்றும் உடலுறுதி பெறாது, துவளும் பிள்ளையைச் சவலைப் பிள்ளை என்பர். 

சவலைக்குள் soft என்ற பொருள் இருப்பதை இப்போது எளிதாய் உணரலாம். சவலை என்ற சொல் திருவாசகத்திலும் பயில்கிறது. tender என்ற பொருளும் அதற்குண்டு. தவசமணி இல்லாக் கதிர், உள்ளீடில்லாக் கதிர் சவலைக்கதிர் எனப்பெறும். தனிச்சொல்லின்றி இரு குறள்வெண்பாக்களை இணைத்துச் சொல்வது சவலை வெண்பா எனப்படும். தனிச்சொல் தான் நேரிசை வெண்பாவிற்கு உறுதி தந்து கட்டுகிறது. இல்லையெனில் அது சவலை தான்.

soft-இன் வரையறை புரியத் திண்ம மாகனவியலுக்குப் (solid mechanics) போக வேண்டும். பொதிகளைத் திண்மம், நீர்மம், வளிமம் என 3 வாகைகளாய்ப் (phases) பிரிப்பர். திண்மத்திற்கு வடிவுண்டு. நீர்மம், வளிமங்களுக்கு வடிவு இல்லை; அவை கொள்கல வடிவையே கொள்ளும். ஒரு கொள்கலத்தில் நீர்மம் பகுதியாய் நிறைந்தால், வெளிப்பரப்பு (external surface) காட்டும். வளிமமோ கொள்கலம் முழுதும் நிறைக்கும். நீர்ம, வளிமங்களைச் சேர்ந்தாற்போல் தொகுத்துப் பூதியலில் (physics) விளவம் (fluid) என்பார் (1960களிற் பாய்மம் என்று குறித்தோம். இப்போது சிக்கல் காணுவதால் விளவம் என்கிறோம். வேறொரு கட்டுரையில் இதை விளக்குவேன்.)

பொதுவாகப் பொதிகளின் (bodies) நகர்ச்சியும் (motion), வளைப்புகளும் (deflections), மொத்தை விசைகளாலும் (bulk forces - காட்டு: புவியீர்ப்பு விசை, அழுத்தம்), பரப்பு விசைகளாலும் (surface forces - காட்டு: கத்திரி விசை - shear force) ஏற்படுகின்றன. விளவங்கள் தொடர் விளவுகளையும் (continous flows), திண்மங்கள் வளைப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக விசைகளையோ (forces), அவற்றால் ஏற்படும் துறுத்தங்களையோ (stresses), நிறுத்தினால் தொடர் விளவுகள் நின்றுபோகும். மாறாய்த் திண்மங்களை விசைகளுக்கு உட்படுத்தினால் தெறித்து உடையும் வரை வெறும் வளைப்புகளே ஏற்படுகின்றன; விசைகள் நின்றவுடன் வளைப்புகளும் கலைகின்றன.

அழுத்துதல் என்பது to press என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. அதைப் பொதுமைப்படுத்தி, 'துகள்களை நெருங்கவைத்தல்' என்னும் ஆழ் பொருளிற் துறுத்தலெனும் வினை பொறியியலில் ஆளப்படும். இது ஆங்கிலத்தில் to stress என்ற வினைக்கு ஈடானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தல் என்றும் சிலர் ஆளுவர். [தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலச் சொல் அகரமுதலியிலும் 'தகைத்தல்' இருக்கிறது. இருந்தாலும், to tighten என்பதற்கே தகைத்தல் சரியாகும் என்பதாலும், ஐகாரம் பயிலும் தகைப்பைக் காட்டிலும், உகரம் பயிலும் துறுத்து என்ற சொல் பலுக்க எளிது என்பதாலும் நான் துறுத்தலைப் பரிந்துரைக்கிறேன். துறுத்திற்கு மாறாய் தகைப்பு என்பது நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]

ஒவ்வொருவகை விசை/துறுத்திற்கும் ஒவ்வொரு வகை வளைப்பு ஏற்படும். அவற்றைத் துறுங்குகள் (strains) என்பார்கள். அழுத்தப்பட்ட பொதி அழுங்குவதைப் போலத் துறுத்தப்பட்டது துறுங்கும் (to get strained). 3 விதத் துறுத்தங்களை, மாகனவியல்-mechanics குறிக்கும். அவை திணிசுத் துறுத்தம் - tensile stress, அமுக்கத் துறுத்தம் - compressive stress, கத்திரித் துறுத்தம் = shear stress என்றாகும். அதே போல, நீளவாட்டுத் துறுங்கு (longitudinal strain), குறுக்குச் செகுத்தத் துறுங்கு (cross sectional strain), பருமத் துறுங்கு (bulk strain), கத்திரித் துறுங்கு (shear strain) என்று வெவ்வேறு துறுங்குகளுண்டு.

to stretch என்பதைக் குறிக்கத் துயர்தல்/துயக்குதல் என்ற சொல் பயின்று, நீளுதல்/நீட்டுதல் பொருளைக் கொடுக்கும். (ஏதோவொன்று stretch ஆகி நீண்டு போவதைத் ”துயர்ந்து கொண்டே வருகிறது” என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார்கள். தொடர்ந்து வரும் துன்பம் துயரம் என்றே சொல்லப் பெறும்.) ஒரு நீளத்தின் துயக்கத் திரிவை (change in the stetch) பொதியின் நீளத்தால் வகுத்துக் கிடைக்கும் எண், நீளவாட்டுத் துறுங்கு எனப் படும். இது போல் பருமத் துறுங்கு = பருமத் திரிவு / பொதியின் பருமன் என்றாகும். கத்தரித் துறுங்கு = குறுக்குச் செகுத்தத் திரிவு (change in cross section) / பொதியின் குறுக்குச் செகுத்தம் என்று வரையறை கொள்ளும்.

ஒரு திண்மத்தின் பருமத் துறுங்கு, பொதுவாக அழுத்த வேறுபாட்டால் எழுவது. காட்டாக, ஓர் இலவம்பஞ்சுத் தலையணையின் தடிமன் (thickness) 5 அணுங்குழை (inches) என்று வையுங்கள். மேற்பரப்பு 10X10 சதுர அணுங்குழை என்றும் கொள்ளுங்கள். தலையணைப் பருமன் 500 கன அணுங்குழையாகும். அதன்மேல் இன்னொரு பொதியை எடையாக வைக்கிறோம். எடைக்குத் தகுந்தாற் போல் இலவம்பஞ்சின் தடிமன் குறுங்கி, தலையணையின் பருமன் குறைகிறது. [எடைக்குப் பகரியாய் நேரடியழுத்தம் கொடுத்தாலும் பருமக்குறைவை ஏற்படுத்தலாம்.]

பொதுவாக, எந்தத் திண்மப் பொதியும் அழுத்தமிருக்கும் வரை பருமன் குறையும்; அழுத்தம் நிறுத்திவிட்டாற் பழைய பருமனுக்கு வந்துவிடும். [காட்டாக, A பொதி B - யை அழுத்துகிறது; இதை B-யின் நோக்கில், தன்வினையாய், எப்படிச் சொல்லலாம்? A - ஆல் B அழுங்குகிறது. அழுங்குதல் தன் வினை; அழுத்துதல் பிறவினை. ஒரு பொதி அழுங்க, அதன்மேல் அழுத்தம் கூடிக் கொண்டேயிருக்கிறது. அழுங்குவதால் அது அழுக்கு; அழுத்துவதால் அழுத்து. (மாசைக் குறிக்கும் அழுக்குச் சொல் வேறுவகையிற் பிறந்தது.) அழுக்கின் நீட்சியாய் அழுக்கு ஆறுதல் என்ற சொல் to get strained என்ற பொருளிற் பிறக்கும்.. அழுக்காறு என்று திருக்குறளில் வருகிறதே, நினைவிற்கு வருகிறதா? அது strained state - யைத்தான் குறிக்கிறது. தொடர்ச்சியாய் அழுங்கிக் கிடக்கும் நிலை. அழுங்குதல் வினை தற்பொழுது அரிதாகவே பயன்படுகிறது. அதற்குப் பகரியாய் அமுங்குதல் என்று பயன்படுத்துகிறோம். மாசு என்ற பொருட்குழப்பமும் இல்லாது போகிறது.]

”அழுத்தத்திற்குத் தக்க, ஒரு திண்மம் எவ்வளவு அமுங்கும்/அழுங்கும்?” என்ற வினவிற்கு விடையாய் soft எனும் குறிப்பிருக்கிறது. காட்டாக, 500 கன அணுங்குழைப் பருமன் கொண்ட இருவேறு திண்மங்களில், முதற்பொதி 200 கன அணுங்குழையும், இரண்டாம் பொதி 400 கன அணுங்குழையும் குறைவதாய்க் கொள்ளுங்கள். மாகனவியற் புரிதலின்படி, முதற் பொதி இரண்டாம் பொதியைக் காட்டிலும் soft ஆனது என்பார்கள். (இலவம் பஞ்சுத் தலையணை, யூரிதேன் நுரைத் - urethane foam - தலையணையைக் காட்டிலும் soft ஆனது. இரும்பைக் காட்டிலும் ஈயம் soft ஆனது. வயிரத்தைக் காட்டிலும் இரும்பு soft ஆனது. பொத்திகை - plastic - யைக் காட்டிலும், நெகிழி - elastic, soft ஆனது.) softness என்ற சொல் திண்மங்களுக்கே பொருந்தும். யாரும் soft gas, soft liquid என்று சொல்வதில்லை. soft solid என்றால் பொருளுண்டு. [soft water, hard water என்பவை நீரிற் கரைந்திருக்கும் உப்புக்களைப் பொறுத்துச் சொல்லப் படுகின்றன. அவை விதப்பான பயன்பாடுகளாகும்].

மாகனவியலின் படி, soft என்பது பருமன் குறுங்கலைக் குறிக்கிறது என்று பார்த்தோம். குறுங்கல்/குறைதற் பொருளில் அவ்வுதல்> அவ்வியம் என்ற சொல்லைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், 'திருக்குறள் மெய்ப்பொருளுரையிற்' சொல்லுவார். சங்க இலக்கியத்தில் ஆவணப் படாத 'அவ்வியம்' என்ற சொல் திருக்குறள் 167, 169 பாக்களில் தான் முதலில் ஆவணப்பட்டுள்ளது. பின்னால் "ஔவியம் பேசேல்" என்ற திரிவில் ஆத்திச் சூடியிலும், "ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு" என்ற திரிவில் கொன்றை வேந்தனிலும் சொல்லப் பட்டுள்ளது.

அவ்வியம் என்பதற்குப் பொறாமை (= பொறுக்காத தன்மை) என்றே பலரும் பொருட்பாடு காட்டுவர். (unbearable; காட்டாகப் பரிமேலழகர், பாவாணர்). ஆனால் அழுக்காறு, அழுக்காறாமை, அவ்வியம் என மூன்றிற்கும் ஒரே பொருள் சொல்லுவது சரியல்லவே? மற்ற உரைகாரருக்கு மாறாய்ப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே பொருள் சொல்லுவார். இந்தப் புரிதலோடு, 167 ஆம் குறளைப் பார்த்தால்,

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்

என்பதன் பொருள் புரியும். "மனம் குறுகி அழுக்காறு உள்ளவனை, தன் மூத்தாளுக்குக் காட்டிவிட்டு திருமகள் விலகி விடுவாள்" என்ற பொருள் வரும். திருமகள் / மூத்தாள் என்ற தொன்மத்தை வள்ளுவர் ஏன் சொன்னார் என்ற கருத்தை நான் விளக்குவதைக் காட்டிலும் பெருஞ்சித்திரனார் விளக்குவதே சரியாய் அமையும். எனவே அதைத் தவிர்க்கிறேன். அவர் நூலில் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து 169 ஆம் குறளில் அவ்விய என்ற சொல்லாட்சி வரும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

இதற்கும் பெருஞ்சித்திரனார் “குறுகிய நெஞ்சத்தவனின் ஆக்கமும் செவ்வையானின் கேடும் பலராலும் நினைக்கப் படும்” என்றே பொருள் சொல்லுவார். அவ்வுதலின் ஆதிப் பொருளும் அவ் எனும் ஒலிக் குறிப்புத் தான். 'வடையை அவ்வெனக் கடித்தான்'. அவ்வெனப் பல்லாற் கடிக்கும் குறிப்பு, மீதி வடை குறைந்திருப்பதையும் உணர்த்துமல்லவா? நாளாவட்டத்தில் இந்த ஒலிக் குறிப்பின் பொருட்பாடுகள் பலவாகின. அவற்றுள் முகன்மையானது குறுகுதல், குறுங்குதல், குறைதல், சுருங்குதல், தட்டையாதல், கெடுதல், பள்ளமாதல் போன்றவையாகும்.

அவ்வுதலின் இன்னொரு வெளிப்பாடு அம்முதலாகும். இது அம்மியெனும் அடுப்படிக் கருவியை நமக்குச் சுட்டிக் காட்டும். அம்முதலின் நீட்சி அமுக்குதல் = to press என்றாகும். இதே லத் தொம்முதல்> தும்முதல்> துமுக்குதல்> துவுக்குதல்> துவைத்தல் என்பதும் அடித்து அமுக்குதலைக் குறிக்கும். தேங்காய்த் துவையல் (=துகையல்) என்கிறோமே, அதுவும் ஒரு அவையல் தான். அவல் என்பதும் அவையலில் உருவான பண்டம் தான். அவற் பொரி நினைவிற்கு வருகிறதா? முதலிற் பருமனாய் இருந்தது இப்பொழுது தட்டையாய், சின்னதாய் அவலாய் ஆயிற்று. அவல் பள்ளத்தையும் குறிக்கும். அவ்வையாரின் 187 ஆம் புறநானூற்றுப் பாட்டு “நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ, மிசையா கொன்றோ?.....” நினைவிற்கு வருகிறதா? அவம் என்ற சொல்லும் பள்ளத்தையே குறிக்கும். பல்வேறு அவச் சொற்களை தப்பான புரிதலில், தமிழ் அகரமுதலிகள் வடசொல் என்றே காட்டுகின்றன. ”வடசொல், வடசொல்” என நாம் தொலைத்தவை மிகப்பல.

அவ்வை என்ற சொல்லுக்கு தாய்ப் பொருளையே பலருஞ் சொல்லுவர். மாறாக அவ்வுதலை ஒட்டி உயரம் குறைந்தவள் என்றும் பொருள் சொல்ல முடியும். அவ்வன் = குள்ளன். அவ்வை = குள்ளச்சி. பொதுவாக நாட்டுப் புறங்களில் பெயர் தெரியாதவரை, அவர் உயரம், நிறம், தோற்றம், அல்லது தொழிலை வைத்தே அடையாளம் சொல்வர். நெட்டையன், குள்ளச்சி/கூளைச்சி, கருப்பன், வெள்ளையன், முறுக்கன், மீசைக்காரன் இப்படித்தான் ஒருவருக்கொருவர் முன்றாமவரைச் சொல்வர். சங்க காலப் புலவர் அவ்வை ஒரு வேளை குள்ளமாய் இருந்திருக்கலாம்.

அவ்வுதலுக்கும் சவ்வுதலுக்கும் ஒரு சகரவொலியே வேறுபாடு. எத்தனையோ சொற்கள் சகரம் தவிர்த்தும் அதே பொருளைக் காட்டுகின்றன. காட்டு: சமணர்/அமணர், சந்தி/அந்தி, சாரம்/ஆரம். சாலுதல்/ஆலுதல், சள்ளல்/அள்ளல், சடைதல்/அடைதல், சப்பளம்/அப்பளம், சவை/அவை, சமைதல்/அமைதல், சமயம்/அமயம், சமர்/அமர், இச்சொற்கள் மிகப்பல தேறும். நான் விரிவஞ்சித் தொகுக்கவில்லை.

சவ்வுதலுக்கும், சவச்சவ என்பதற்கும், சுவைக்கும், சுவட்டிற்கும், சப்பு, சவள், சவட்டு போன்ற இன்னும் பல சொற்களுக்கும் பொதுவாய்ச் சொற்பிறப்பு ஏற்பட்டிருக்குமானால் உகரத்திற்கும், அகரத்திற்கும் ஏற்றாற்போல் பொதுவானதாய் அது சொவச்சொவ என்ற ஒகர வேரிற்றான் உருவாக வாய்ப்புண்டு. பொத்தகம் புத்தகமாயிருக்கிறது. கொடுத்தது கல்வெட்டுக்களில் குடுத்தது என்று பயில்கிறது. பேச்சுவழக்கிற் ஒகரம் ஒலிக்குறிப்பாய் எழுவது இயல்பானவொன்று.

எனக்குச் ”சொவ்> சவ்” என்பது சொல்ல எளிதான ஒலிக்குறிப்பு. சுவை, சுவடு, சவச்சவ, சப்பு, சவள், சவட்டு, அவல், அவம், அவை, அவ்வியம் என்ற பல்வேறு சொற்களை இயல்பாய் அது பிறப்பிக்க முடியும். ஒரு முழுமையான தொடர்ச்சியை அதில் காணமுடியும். அப்படித்தான் software க்கு இணையாய் நான் சொவ்வறை பரிந்துரைத்தேன். 

சொவ்வைத் தவிர்த்து மென்னையே புழங்க விரும்புகிறவர் புழங்கிப் போகலாம். எனக்கு அவமொன்றுமில்லை. மென்வறை என்றுஞ் சொல்லலாம். என்ன? தமிழில் soft - ற்குச் சொல்லில்லாது தொடர்ந்து சுற்றி வளைத்துப் பகரியையே நாம் புழங்கிக் கொண்டிருப்போம். தமிழ் தொடர்ந்து குறைப்பட்டிருக்கும். என் தமிழ் நிறைக்க வேண்டுமென நான் விழைகிறேன்.

அன்புடன்,
இராம.கி.





சொவ்வறை -1

சொவ்வறை என்ற சொல் இன்று, நேற்றுப் பிறந்ததில்லை. 10/12 ஆண்டுகளுக்கு முன், ”மென்பொருள், மென்கலன்” போன்ற சொற்களை ஏற்கத் தயங்கி, நீண்ட விளக்கத்தின் பின்னால், அடியேனாற் பரிந்துரைக்கப்பட்டது. ”மென்மம், கணியம்” போன்றவை அப்போது எழுந்திருக்கவில்லை. ”யம்மும், மம்மும் ஒட்டினால் தமிழில் எதுவும் பண்டம்/ ஆக்கம்/ விளை/ பொருள்/ சரக்காகி விடும்” என்ற சூழ்க்குமம் தெரியாத காலமது:-). சொவ்வறையின் பரிந்துரை கேட்டுச் சில சட்டாம்பிள்ளைகள் வீறு கொண்டு, கடைந்த சொற்களால் ’உள்ளுக்குள் துரோகம் செய்யும் இராம.கி” என அருச்சிக்க முற்படுவதும் தெரியாது. ”இப்படிச் சொற்களை அமைக்கும் நெறி, மொழியை புற்றுநோய் போல் மறைந்திருந்து அடியோடு அழுகடிக்கும்” என்று செய்யப்படும்  பேரழிவுக் கணிப்பும் அப்போது தெரியாது :-))))).

அண்மையில் நண்பரொருவர் கூறியதினும் இழிந்து வல்லடியாகக் குடத்தை வரிசையில் இருத்திக் குழாய்ச்சண்டை போட எனக்கும் நேரம் பிடிக்காது. ஒரு வேளை இளந்திமிரில் 40/45 ஆண்டுகளுக்கு முன் செய்திருப்பேனோ, என்னவோ?. இப்பொழுது மூத்த அகவையில், சற்று நாகரிகம் கற்றதாற் புன்சிரித்து நகர்கிறேன். 1000-ங்களுக்கும் மேற்பட்டுப் புதுச்சொற்கள் பரிந்துரைத்த நான், அவை நிலைக்க என்றுமே முயன்றதில்லை. ஆணவம் தொனிக்க அரசியலும் பண்ணியதில்லை. ”பயனர்க்கு எது உகப்போ, அது நிலைக்கும்” என்றே அமைந்துள்ளேன். நிலைத்தவை பல. அழிந்தவை ஒரு சில.

சொவ்வறை என்ற சொல் எழுந்தது தமிழிணையம் மடற்குழுவிலா (ஆம், எல்லோரும் எளிதாய் மறந்துவிட்ட பாலாப் பிள்ளையின் tamil.net), அன்றித் தமிழுலகம் யாகூ மடற்குழுவிலா என்று இப்போது நினைவில்லை, ஏதோ ஒன்றில் எழுதினேன். 2 குழுக்களும் அன்று தகுதரத்தில் (TSCII இல்) இயங்கியன. தமிழுக்கு வந்த போகூழ், அவ்விரு குழுக்களுமே இன்று இல்லாது போயின. (’தமிழுலகம்’ ஒருங்குறி ஆக்கத்தில் இப்போது கூகுளில் இயங்குகிறது.) இக்குழுக்களில் எழுதி இணையத்தில் அழிந்துபோன கட்டுரைகள் ஏராளம். அவை என் கணி நினையங்களிலும் (memory devices) கூட அழிந்துவிட்டன. அங்குமிங்குமாய்த் தேடி எம் நண்பர்கள் பழையதை அனுப்ப, இப்போது ஒன்றொன்றாய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த ஊற்றுக் கட்டுரை மூலமும், குமுகக் கணுக்கத்தின் மூலமும் [ஒரு முரண்நகை தெரியுமோ? கணுக்கம் - connection - என்ற சொல்லைப் படைத்து விளக்கமெலாஞ் சொன்னவர், தான் படைத்த முறையை வசதியாய் மறந்து, இப்போது அடம்பிடிக்கிறார்], என் வலைப்பதிவின் மூலமும், தமிழ்-விக்சனரியிற் பேசப்பட்டதன் மூலமும், சொவ்வறை என்ற சொல் தயக்கத்தோடு சிச்சிறிதாய்ப் பலருக்குந் தெரிய வந்தது.

”இராம.கி. பரிந்துரைத்த சொற்களெலாம் ஆங்கில ஒலிப்புக் கொண்டவை.” என்ற அவதூறை இணைய அரசியல்வாதி ஒருவர் ஓதி, இன்னுஞ் சிலரைத் துணுக்குற வைத்ததால், நான் என்றும் கவன்றதில்லை. ஆங்கிலமும், சங்கதமும் உடன்பிறப்புக்கள் என (மாக்சு முல்லரோ, ஜோன்சோ) யாரோ ஒரு மேனாட்டார் சொன்னாராம். நம்மவரும் இக்கருதுகோளை ஏற்று அதை உண்மையாக்கித் தமிழை நம் ஆய்விலிருந்து விரட்டி அகற்றுவதிற் துணை நிற்கின்றனர். இக் கருதுகோளின்படித் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், ”மிளகுத் தண்ணீர், கட்டை மரம்” போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய இணைகளைத் தவிர்த்து வேறு ஒட்டுதல் கிடையாதாம். இப்படிச் சில படித்தவர் செய்தது, மாற்றாருக்கு வசதியாயிற்று. நூற்றுக்கணக்கில் தமிழ்ச்சொற்களை தன்மய ஒப்பீட்டிற் பார்த்து, அவற்றின் முன்னுரிமையைச் சங்கதத்திற்கே கொடுத்து, 50%-க்கும் மேற்பட்ட தமிழ், சொற்கள் கடனுற்றதாய்க் காட்டி, நம் பெருமிதத்தைக் குலைத்தார். ”செம்மொழி” என்பதெலாம் முடிவில் ஒரு பாவனை தான் போலும்.

"எந்த முன்முடிவும் இன்றி தமிழ்வேர்களின் வழி பாருங்கள், தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பியத்திற்கும் இடை ஏதோ உறவு தென்படுகிறது" என்று கரட்டிக் கத்தியும் பலனில்லை; மேலையர் கருதுகோளைச் சிக்கெனப் பிடித்து “எங்கெழுந்து அருளுவது இனியே!” என அமைகிறார். அறிவோட்டம் குறைந்து தொண்டூழியங் கூடி, மூதிகம் மூடி, தமிழரும் உணராதிருக்கிறார். 

”வறை”க்கும் ”ware”-க்கும் உள்ள உறவு புரியாது (புரிவது மட்டுமின்றி, மேலும் அது பற்றி வியக்காது) குளிப்பாட்டிய குழந்தையை குழிதாடியோடு தூக்கியெறிவும் செய்கிறார். மொத்தத்திற் தமிழ்மூலம் காட்டுபவரைப் பித்தர், வெறியரெனக் காட்சிப் பொருளாக்கி, மேனாட்டுக் கருதுகோளைப் பிடித்து ஆடுவாரை ”வல்லார்” என வியக்கும் பம்மாத்து குமுகாயத்தில் தொடர்கிறது. கேட்கத் தான் ஆளில்லை. கடக்க வேண்டிய தொலைவும் அதிகமாகிறது. எவனொருவன் தன் வாழ்விற் பெருமிதம் தொலைத்தானோ, அவன் சொந்தச் சிந்தனை வற்றி அந்தி நாள் அளவும் அடிமையாயிருக்கக் கடவன் ஆகுக.

வறை என்பது சரக்கு. உலர்ந்த பண்டம். (பல தமிழிய மொழிகளுக்குள் இந்தச் சொல் இருக்கிறது. த.சரக்கு, ம.சரக்கு, க.சரகு,சர்கு, தெ.து. சரக்கு) வேடுவச் சேகர (hunter - gatherer) வாழ்க்கையில், தொல்பழங்காலத்தில் இயற்கையில் உலர வைத்துக் கிட்டிய பொருட்களையே (பின்ன்னால் கிட்டாத நாட்களின் பயன்பாட்டிற்காக) பண்டம் மாற்றி விற்றனர். கருவாடு, உப்புக் கண்டம், உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வற்றியவை இவற்றில் ஒரு சில. இவற்றையே பின்னால் நாகரிகம் வளர்ந்த நிலையிற் காசுக்கு விற்றார். இப்படி உலர்பொருட்களில் தான் மாந்தரின் முதல் வாணிகம் தொடங்கியது. மாந்தரின் செயற்கை ஆக்கம் பின்னாற் சேர்ந்துகொண்டது.

உணங்குகள் (உலர்ந்த பொருட்கள்)
கருவாடுகள் (கருத்து, உலர்ந்த, ஊன் தசைப் பிண்டங்கள்)
கண்டங்கள் (புலவின் உப்புக் கண்டங்கள்; கண்டுதல் என்பதும் வற்றுவதே; கண்டுமுதல் - களத்தில் காய்வதற்கு முன்னிருக்கும் ஈரமில்லாக் கூலத்தை வேளாண்மையிற் குறிக்கிறது.)
சருகுகள் (உலர் இலைகள், பூக்கள்; சருகிக் கிடந்தது சரக்கு),
சுக்குகள் (காய்ந்த இஞ்சி)
சுண்டுகள் (நீர்வற்றிச் சுண்டியது. சுண்டின் திரிவு சண்டு. ”சண்டும் சருகும்” என்பது தென்றமிழ் நாட்டுச் சொல்லிணை)
சுவறல்கள் (வற்றிக் கிடைத்த பொருள்)
துவட்டல்கள் (நீர் வற்றிய பொருட்கள்)
பண்டங்கள் (பண்டிக் கிடந்த பொருள் பண்டம்; பண்டு = உலர்ந்த பழம்),
பொருக்குகள் (காய்ந்த சோற்றுப் பருக்கைகள்)
வற்றல்கள் (வெய்யிலில் உலர்த்தி வற்றிய காய்கள்.)

எனப் பல்வேறு சொற்கள் தமிழில் உலர்பொருளைச் சுட்டும். இயலிரை கிடைக்காத காலத்தில் இவற்றில் பலவும் மாந்தருக்கு உணவும் ஆயின. நடையும் பயணமும் பண்டமாற்று வழியாகி, பாலை தாண்டும் பழக்கம் பண்டைத் தமிழர்க்கு ஏற்பட்டது. பாலையாகிய மொழிபெயர்த் தேயம் பெரும்பாலும் இற்றை இராயல சீமை தான். (சங்க இலக்கியத்தில் உலவும் இராயல சீமையின் தாக்கத்தை இன்னும் நாம் உணர்ந்தோமில்லை.) 50%க்கும் மேற்பட்ட சங்கப் பாக்கள் பாலைத்திணையையே பேசுகின்றன. பாலைத் திணையில் வணிகம் பிணைந்தது நம்மேல் பூகோளம் விதித்த கட்டுப்பாடு.

இடைக்காலத்திற் சரக்காறு என்று ஆறுவகைச் சரக்குகளைக் குறிப்பார். ஒவ்வொரு பகுதிக்கும், வெவ்வேறு வகைகள் முதன்மையாகின. சில பகுதிகளின் ஆறு சரக்குகளைச் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி குறித்துள்ளது.

அ. வங்காள நாட்டின் அறுவகைச் சரக்குகள்:

1. இலிங்கம்: cinnabar
2. பச்சைக் கற்பூரம்: crude camphor
3. குங்குமப்பூ: European saffron
4. படிகாரம்: alum
5. சாரம்: sal ammoniac
6. சுக்கு: dried ginger

ஆ. மலையாள நாட்டின் அறுவகைச் சரக்குகள்

1. கொச்சிவீரம்: Cochin corrosive sublimate
2. மிளகு: black pepper
3. திப்பிலி: long pepper
4. ஏலம்: cardamon
5. கிராம்பு: clove
6. சிற்றரத்தை: lesser galangal

இ. கிழக்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்

1. கல்லுப்பு: inslouble sea salt
2. இந்துப்பு: sindh slat
3. பொட்டிலுப்பு: nitre
4. அப்பளாகாரம்: sub-carbonate of soda
5. பலகறை: cowry
6. கடல்நுரை: sea froth

ஈ. வடமேற்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்

1. கோதளங்காய்: fruit of common Indian rak
2. கடுக்காய்: gall nut
3. சீயக்காய்: soap pad
4. பொன்னங்காய்: soap-nut
5. தேற்றான்கொட்டை: water clearing nut
6. வலம்புரிக்காய்: Indian sarew tree (right)

உ. உள்ளூரின் (நமது நாட்டின்) அறுவகைச் சரக்குகள்

1. சவுரிப் பழம்: shavari fruit
2. தூதளம் பழம்: fruit of prickly shoonday
3. பிரண்டைப் பழம்: cissus fruit
4. கண்டங்கத்திரிப் பழம்: fruit of prickly birinjal
5. கோவைப் பழம்: red bitter-melon fruit
6. இந்திரகோபப் பூச்சி: leady's fly

மேலேயுள்ளவை நீரின்றியோ, நீர்வற்றியோ, கிடைத்த இயற்பொருட்கள். வறட்டி என்பது வைக்கோலும் உலர்சாணமுங் சேர்ந்த கலவை. வறுவல்- வினையையும் பெயரையும் அது குறிக்கும். வறல், வறழ், வறள், வறை என்பன எல்லாம் வறுத்தலில் பிறந்த சொற்கள். ஈர மண்ணிற் செய்து உலரக் காய வைத்துச் சுட்ட கலமே வறையாகும். அது வெறுங்கலமல்ல. சுட்ட கலம். 

சுடாக் கலம் விலைக்கு வாராது; பயனுக்குமாகாது. ஆங்கிலத்திற் கூட ware என்பது சுட்ட கலத்தையே பெரிதுங் குறித்தது. அதனால் தான் மென்கலன் என்பதைத் தவிர்த்து, ஆழ்ந்த சிந்தனையில் வறையில் முடியும் சொல்லான சொவ்வறையைப் பரிந்துரைத்தேன்.

[கலன், பொருள் என்பவை இங்கு சரி வராது. குறிப்பாகக் கலன், ”இன்னொரு பொருளைக் கொள்ளும்”வினையையே அது குறிக்கும். something to contain about. உண்கலன் = உணவிருக்கும் கலன், உண்ணப் பயன்படும் கலன். மின்கலன் = மின்வேதி இருக்கும் கலன், மின்னாக்கும் கலன். மட்கலன் = மண்ணால் ஆன கலன். செப்புக் கலன் = செம்பால் ஆன கலன். (பல்வேறு மாழைக் கலன்கள் உண்டு.) 

எனவே கலன் என்பது கொள்வினையைக் குறிக்கிறது. ware அப்படியிருக்கத் தேவையில்லை. இன்னொரு சொல்லான மென்பொருளில் வரும் ”பொருள்” good ஆ, material ஆ, substance ஆ? உங்களுக்குத் தெரியுமோ? எனக்குத் தெரியாது. தவிர, 2500 ஆண்டுகளாய் meaning எனும் பொருட்பாட்டையும் “பொருள்” சுமந்து வருகிறது. I don't know why do we have information overload on the word "பொருள்"?]

என்னுடைய ஒரு பதிவின் பின்னூட்டில், திரு. ஆறுமுகத் தமிழன், “வறை என்பது சுட்ட கலம் என்று நீங்கள் சொன்னதைக் கண்ட பிறகு தான்

’ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
         உதிரப்புனலில் உண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
         வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே’

என்ற பாட்டில் வருகிற ”வறையோடு” என்ற பதத்தின் பொருள் அடியோடு புரிந்தது” என்று கூறினார்.

வறை என்பது சித்தர் பாடலில் மட்டுமல்ல. ”நெய் கனிந்து வறையார்ப்ப” என்பதால், மதுரைக்காஞ்சி 756 -இல், ”நெய் போட்டு வறுக்கும் செயல்” உணர்த்தப் படுகிறது. வறை முறுகல் = அளவிற்கு மீறிக் கருகியது (”அது வறைமுறுகல் ஆகையிலே பின்பு தவிர்த்தது” ஈடு 6.5.12) வறையல் என்ற சொல் திருவிளையாடற் புராணத்தில் வறையைக் குறித்திருக்கிறது. வறையோடு - பொரிக்கும் சட்டி/கலத்தைக் குறித்தது. தென்பாண்டியிற் சருகச் சட்டி > சருவச் செட்டி என்பது (சருகுதலை நினையுங்கள்) frying pan ஐயே குறிக்கும்.

இங்கெல்லாம் வறையும் ware-உம் வேறுபடுகிறதா? இல்லையே? சரியாய்ப் பொருந்தாத ”கலத்தை” நாம் ஏற்போம், ஆனால் முற்றும் பொருந்தும் வறையை நாம் ஏற்க மாட்டோமா? சரக்கு, கண்டம், சுண்டல், பண்டம், போன்ற சொற்களுக்கு எத்துணை ஏற்புண்டோ, அத்துணை ஏற்பு வறைக்கும் உண்டே? ”மற்றதெலாம் கொண்டு, வறையை மட்டும் கொள்ளோமா?” அதுவென்ன பித்துக்குளித் தனம்? ஒருகண்ணில் வெண்ணெய், இன்னொன்றில் சுண்ணமா? ”ஓகோ.,.பாழாய்ப் போன ஆங்கிலவொலி உள்ளேவந்து தொனிக்கிறதோ?” 

அந்த நாளில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரி விடுதியில், புதிதாய்ச் சேர்ந்த நாட்டுப்புற இளைஞன் ஒருவன் வேளாண்மை மரபு பொருந்திய தன் தகப்பனை தன்னோடு படிக்கும் நண்பருக்கு அறிமுகஞ் செய்ய வெட்கி, ஒதுக்கி வைத்த மடமை எனக்குச் சட்டென நினைவிற்கு வருகிறது.

ஒலியொப்பீட்டை மட்டுமே நான் பார்ப்பதாய்ப் பெரிய பரப்புரை செய்யும் மெத்தப் படித்த மேதாவிகளே! தொனியைப் பார்க்காது, ஆழமாகப் போய் உள்ளே இருக்கும் வேர்ப்பொருளைக் காணுங்கள். ”எந்த ஆங்கிலச்சொல் ஊடே தொனிக்கிறது? அதைத் தவிர்க்க வேண்டுமே?” என்று குத்திக் கிளறுவது என் வேலையில்லை. அப்படித் தொனித்தால் தான் என்ன குறை வந்துவிடும்? தமிழன்னை தவித்துப்போவாளா? தடுக்கி விழுவாளா? தமிழ்ப்பொருள் உள்ளிருந்தால் எனக்குப் போதும்.

present- ற்கு இணையாய்ப் ”பரத்துதல்” என்பது தோன்றினால் அது தீண்டத் தகாததோ? "இராம.கி சொன்னானா? போட்டுச் சாத்து” என்ற முனைப்புடன் ”பரத்தீடு” கேட்டுக் கிடுகிப் பரந்த நண்பர், ஒரு பரிமானப் பார்வையில் அதைச் சாடாது, பல்வேறு நாட்டுப்புறங்களையும் சற்று நுணுகி அறியலாமே? 

பரத்தி இடுதல் ஒப்பொலியா? தமிழன் பரத்தி இட்டதே இல்லையா? பரத்தும் வினை நெல்வயல், உப்புவயல்களில் உண்டு. நெற்களத்திற் பரம்புக் கட்டை என்றும், உப்பளத்திற் பரத்துக் கட்டை என்றுஞ் சொல்வார். அதற்குப் பரவுக் கட்டை > பலுவுக் கட்டை > பலுகுக் கட்டை என்ற பெயரும் உண்டு. 

பலுகுக் கட்டையை ஓரோவழி மொழுக்கு மரம் என்பர். [இச்சொற்களை உப்பளத்திலும், களத்து மேட்டிலும் நானே கேட்டிருக்கிறேன். எங்கள் உரச்சாலை யூரியாப் பரற் கோபுரத்தின் - Urea prill tower - அடியில் விளவப் படுகையில் (fluid bed) கட்டிகளை வெளிக்கிட்டிக் குருணைகளைப் (granular particles) பரப்பப் பரத்துக் கட்டையைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்.]

முகன்மை வாசகங்களை, படங்களை, கருத்துக்களை, விழியங்களை(videos)ப் பரத்திக் காட்டி விளக்குவதைப் பரத்தீடு என்று சொல்லக் கூடாதா? இங்கு தமிழ் முகன்மையா? இல்லை, மாக்சுமுல்லர், ஜோன்சின் தேற்றம்/கருதுகோள் முகன்மையா? 19 ஆம் நூற்றாண்டுத் தேற்றத்தைத் தலைமேற் சுமந்து பணிவோடு காப்பாற்ற, எம் நாட்டு நடைமுறையைத் தவிர்க்க வேண்டுமா? நேரே தொடவேண்டிய மூக்கைச் சுற்றிவளைத்துத் தொடவேண்டுமா? நாம் எங்கே போகிறோம்? எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.

ஈடு என்ற சொல் இடுதல் வினையடிப் பெயராய் எழும். [விதப்பாக, விண்ணவர் (வைணவர்) வழக்கில், ஈட்டிற்குப் பல்வேறு விளக்கமுண்டு. ஈடு = கவசம் என்பது ஒரு பொருள், இடுதல் = எழுதுதல் என்ற அளவில், நம்பிள்ளை பேசியதை வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிவைத்ததால், ஈடு என்று மணிப்பவள ‘வியாக்கியானத்தை’ச் சொல்லுவர்; ஈடு = ஒப்பு என்ற பொருளும் அதற்குண்டு; இறைவனோடு ஈடுபடச் செய்வதால் ஈடு என இன்னொரு வகைப் பொருளுமுண்டு.] பரத்தி இடப்பட்டதால் பரத்து ஈடு (=பரத்தீடு) ஆயிற்று.

வறு, வறல், வறள், வறழ் என்ற தொடர்ச்சியில் நூற்றுக் கணக்கான கூட்டுச்சொற்கள் உள்ளன. எல்லாவற்றையும் சேர்த்து ஆங்கில ஒப்பொலி தருவதாய்க் கருதி, வங்காள விரிகுடாவில் நாம் கொட்டி விடலாமா? இப்படித் தான், ஒரு காலத்தில் சங்கத ஒப்பீடு பார்த்து ”இது தமிழில்லை, அது தமிழில்லை” என ஒதுக்கிய மூடத்தனம் எழுந்தது. இக் காலத்தில் ஆங்கில ஒப்பீடு பார்த்து இன்னும் பல தமிழ்ச்சொற்களைத் தவிர்த்து விட்டால், முடிவில் எங்குபோய் நிற்போம்? ”உள்ளதும் போச்சுடா, தொள்ளைக்காதா.”

 ஜியார்ச்சு ஆர்வெலின் ”1984” என்ற புதினத்தில் வரும் good, plus good, double plus good, double plus ungood என்பது போல் வெறும் 2000, 3000 சொற்களை மட்டும் வைத்து முன்னும், பின்னும் ஒட்டுக்களைப் பிதுக்கியொட்டிச் சரஞ்சரமாய் sausage மொழியாக்கி எதிர்காலத் தமிழ்ச் சொற்களை உருவாக்கலாமா? அப்படித் தானே படித்த மக்கள், வழக்குத் தமிழைப் புத்தாக்கஞ் செய்கிறோம்? பின்னொட்டு மரபு சுத்தரவாய் மாறி, சிறிது சிறிதாய்த் தமிழை முன்னொட்டு மொழியாய் ஆக்குகிறோமே? [post-modernism பின்நவீனத்துவமாம்:-)))] கூடிய மட்டும் பெயர்ச்சொற் சரங்களைத் தவிர்த்தால், அல்லது பெரிதுங் குறைத்தால், தமிழ், செருமன் மொழி மாதிரித் தோற்றம் காட்டாது.

தமிழ்நடையின் சிக்கலே படித்தோரின் நினைவிற்கு வரும் சாத்தார (இது தான் சாதாரணம் என்ற சொல்லின் தமிழ் மூலம்.) வழக்குச் சொற்களை மட்டுமே வைத்துப் பூசிமெழுகி, இட்டளி கிண்டிய உப்புமாவைப் போலப் புரட்டி எடுத்து, புது/பழஞ் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ளாது, துல்லியம் பாராது, விதப்பு நோக்காது, பொதுச்சொற்களோடு முன்னும், பின்னும் ஒட்டுப்பெய்து, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது தான். மேலைநாட்டுப் புலவுக்கடைகளில் மாலை மாலையாய் ஊன்சரம் தொங்குவது போலத் தமிழ்க் கலைச்சொற்கள் தமிழ்க் கடைகளிற் இப்பொழுது தொங்கிக் கொண்டிருக்கின்றன:-)))). இவற்றை வாங்கிப் புழங்கத் தான் ஆட்களில்லை.

show, exhibit, display, demonstrate, present என எல்லாவற்றையும் ”காட்டலாக்கி”, “ஷொட்டு”க் கொடுத்து ஒட்டுக்கள் பிசைந்து மழுங்க வேண்டியதன் தேவை என்ன? [example என்பதைக் கூடக் காட்டு என்று இக்காலத்திற் சொல்கிறோம். அப்புறம் எங்கே காட்டலின் பொருளை அகலப்படுத்துவது?] 

இவையிடையே பொருட்பாட்டில் வேறுபாடே கிடையாதா? எல்லாம் ஒரே களிமண்ணா? இடம், பொருள், ஏவல் பாராமோ? இவற்றை வேறுபடுத்த வெவ்வேறு சொற்கள் வேண்டாமா? ஆங்கிலம் அறிவுலகில் வெற்றி பெறுவது நுண்ணிய வேறுபாடு காட்டுவதில் தானே? தமிழ்நடை அதற்கு ஈடு கொடுக்காது எனில், துல்லிய விதப்புக் காட்டாது எனில், அப்புறம் ஏணி வைத்தாலும் குறிக்கோளை எட்டுவோமோ? அடுத்த பகுதியில் தொடர்வோம்.

அதற்குமுன் சொவ்வறையை ஒட்டிய மற்ற வறைச் சொற்களை இங்கு மாதிரிக்குப் பட்டியல் இடுகிறேன். இவற்றையெல்லாம் ஒருங்குபடச் சொல்ல நான் அறிந்த வரையில் மென்பொருள், மென்கலன் போன்ற சொற்கள் வாய்ப்புத் தரா. (ஒரு பக்கம் அறைகலன் - furniture - என்று புதிய, ஆனாற் தவறான, முறையிற் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் மென்கலன் என்றால் பொருந்துமா?) கலைச் சொற்கள் என்பவை துறை சார்ந்து தமிழ்நெறியின் படிச் செய்யவேண்டியவை. இதை மறக்கக் கூடாது. பட்டியலுக்கு வருகிறேன்.

 software = சொவ்வறை, [softness என்பது மென்மையா? கலன்/பொருளோடு சேரும் போது, என்ன பொருளில் மெல்லெனும் பெயரடை (adjective) அமைகிறது? மெல்லுதல் என்பது வினையா? மெலிவு என்பது என்ன? 

thin, nice, smooth, tender, supple, fleecy, spongy, flexible, pliable, malleable, ductile, tractile, extendable, plastic, mellow - இவற்றிடையே அமைந்துள்ள நுணுகிய, அறிவியல் தழுவிய, பொருள் வேறுபாட்டைத் தமிழிற் காட்டவேண்டாமா? தமிழ்ச் சொற்களின் துல்லியம், கூர்மை என்பன எங்கே? soft - இன் அடிப்படை வறையறையை எங்கேனும் பார்த்தோமா? இராம.கி.யின் முதுகை மத்தளம் ஆக்கிச் சாடுமுன், தமிழில் அடிப்படைச் சொற்களை வற்று ஆழப் பார்க்கலாமே? Have we got precision in our choice of words?

இன்னும் mass-க்கும் weight-க்கும் கூட வேறுபாடின்றி, நிறை, எடையைக் குழப்பிக் கொள்கிறோமே? volume பற்றிச் சொல்வதிற் கனத்தின் குழப்பம் - எண்ணிப் பார்த்தோமா? இயற்பு என்ற சொல் தமிழிலுண்டா? கேள்விப் பட்டுள்ளீரா? (இயல்பு உண்டு) physics ற்கு இணையாய் ”இயற்பியல்” புழங்குகிறோமே? Is it not meaningless? ”இயல்பியலை” முதலிற் பரிந்துரைத்த நானே இற்றை ”இயற்பியலைக்” கண்டு வியக்கிறேன். வழக்குத் திரிவு என்பது எண்ணிப் பார்க்க முடியாத நேர்ச்சி போலும். முதற் கோணல் முற்றுங் கோணல். இன்னும் பல சொற்களின் பொருந்தாமையை எடுத்துரைப்பின். விரியும் என்றெண்ணி விடுக்கிறேன். soft-ஐ மட்டும் அடுத்த பகுதியில் நீளச் சொல்கிறேன்.]

hardware = கடுவறை (இது கணி சார்ந்தது மட்டுமல்ல, இரும்புக்கடைச் “சாமான்”களையும் குறிக்கிறது. சாமான் என்ற கடன் சொல்லே எப்படிப் புழக்கத்திற்கு வந்தது? உரிய தமிழ்ச்சொல்லை நாம் பயிலாததால் தானே?) shareware = பகிர்வறை,
firmware = நிறுவறை (கணியாக்கர் நிறுவிய சொவ்வறைகள்)
freeware = பரிவறை, (பரிக்கு விளக்கம் வேண்டில் என் வலைப்பதிவிற்குப் போங்கள்.)
free software = பரிச் சொவ்வறை,
licensed software = உரி(ம)ச் சொவ்வறை
office software = அலுவச் சொவ்வறை
spyware = உளவறை (உளத்தல் = தோண்டியெடுத்தல். உளத்தலின் திரிவு உழத்தல். உழவும் போது நிலத்தில் தோண்டிக் கீறுகிறோம். இங்கே செய்தி, புலனங்களை, நம்மிடமிருந்து உளந்தெடுக்கிறார்.)
anti-spyware = உளவு ஒழிவறை (எதிர் என்ற முன்னொட்டுப் போடாது, ஒழி வினையாய்க் காட்டுவது தமிழ்நடைக்கு உகந்தது.)
open source software = திறவூற்றுச் சொவ்வறை
pirated software = பறியாண்ட சொவ்வறை.
warehouse = வறைக்கூடம்.  (இது சொவ்வறையைப் பற்றி மட்டுமல்ல. எல்லாத் தொழிலங்கள், சேகரங்கள் போன்றவற்றிலிருக்கும்  ஆன சொல் “வறைகள் சேர்ந்து கிடக்கும் கூடம்”. மின்சாரத்திற் சாரம் போனது மாதிரி, தொழில் நுட்பத்தில் தொழிலைப் போக்கி நுட்பியல் ஆக்கியது மாதிரி, அலுவலகம், தொழிலகம் போன்ற சொற்களில் ”க” என்பது மறையவேண்டும்.)
data warehousing software = .தரவு வறைக்கூடச் சொவ்வறை

வறையை வைத்து இப்படிப் பல்வேறு படியாக்கங்களை (applications) எளிதில் ஆளமுடியும். கலனையோ, பொருளையோ வைத்துச் செய்ய முடியாது.

அன்புடன்,
இராம.கி.

Sunday, March 04, 2012

அடுதற் சொற்கள்

அண்மையில் சிங்கை இளங்குமரன் கதிராற்றலால் நடக்கும் சூடுகள் பற்றிச் சில ஆங்கிலச் சொற்களைக் கொடுத்து அவற்றிற்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைத் தரும்படிக் கேட்டிருந்தார். நண்பர் நாக.இளங்கோவன் அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அடுப்புகள் பற்றிய சொற்களையும் வரிசைப் படுத்தியிருந்தார்.

நான் இரண்டுநாட்கள் ஊரில் இல்லை. செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் நிதி நல்கையோடு கோவை அரசு கலைக்கலூரியின் தமிழ்த்துறை நடத்திய “இரட்டைக் காப்பியங்களிற் தமிழ்ச்சமுதாயம்” என்ற பயிலரங்கில் ”சிலப்பதிகாரம். காலவியல் நோக்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பாடம் நடத்துவதற்காகச் சென்றிருந்தேன். அந்தப் பணியை இனிதே முடித்துத் திரும்பி இன்று காலை தான் சென்னைக்கு வந்தேன்.

இங்கு வந்து பார்த்தால் இந்த வேண்டுகோள். நண்பர்கள் வேண்டிக் கேட்கும் போது மறுக்க முடிவதில்லை.

Solar Energy என்பது கதிர் ஆற்றல்; சத்தி என்பது தமிழ்வழிச் சொல் தான். (சத்தோடு தொடர்புடையது.) சக்தி என்பது சத்தியின் வழி வந்த இருபிறப்பிச் சொல். இப்பொழுதெல்லாம் பொதுவழக்கில் ஆற்றலையே பெரும்பாலும் பலர் பயன்படுத்துகிறார்கள். energy, power என்பவை வேறுபடுத்தப் படவேண்டிய சொற்கள். power என்பதற்குப் புயவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். புயம் என்ற சொல் இதோடு தொடர்புடையது. இதன் சொற்பிறப்பை இன்னொரு நாள் விளக்குகிறேன்.

Solar Lights கதிர் விளக்குகள்

Water heater = வெந்நீர் வேம்பா. வெம்புதல் என்ற வினை சூடாதலைக் குறிக்கும். வெம்புதலிற் பிறந்த பெயர்ச்சொல் வெப்பம் ஆகும். வேம்பா என்ற சொல் தென்பாண்டி நாட்டில் பல நூற்றாண்டுகளாய் வெம்பும்/வெப்பும் தொழிலைக் குறிக்கும் கருவிச் சொல். வெந்நீர் வேம்பா என்பது எங்கள் சிவகங்கைப் பக்கம் அகவை முதிர்ந்தவரிடையே புழங்கும் சொல். அந்தக் காலத்து தேநீர்க் கடைகளில் செம்பால் ஆன வேம்பா இருக்கும் அதிலிருந்து வெந்நீர் பிடித்துத் தேநீர் செய்வார்கள். ஞாவகம் வருகிறதா?

CCTV camera = மூ.சு.தொ.காட்சிப். படக்கருவி (மூடிய சுற்றுத் தொலைக்காட்சிப் படக்கருவி) இப்படிச் சுருக்கெழுத்து ஆங்கிலச் சொற்களைத் தமிழிற் சொல்லுவதற்கு இன்னும் ஒரு செந்தர வழிமுறை தமிழில் உருவாகவில்லை. இப்பொழுதெல்லாம் இந்தச் சுருக்கெழுத்துக் கூட்டில் முதலில் வரும் சொற்களில் முதலெழுத்தை எடுத்துக் கொண்டு, அதன் கடைசியில் வரும் தமிழ்ச்சொல்லை அப்படியே சொல்லுவது சரியாக இருக்குமோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. தமிழ்மொழி ஆங்கிலம் போல் முற்றிலும் முன்னொட்டு பழகும் மொழியல்ல. அதில் முன்னொட்டும் பின்னொட்டும் சேர்ந்தே இடத்திற்குத் தகுந்தாற்போற் புழங்கும். இந்நிலையில் CCTV என்பதை மூடிய சுற்றுத் தொலைக் காட்சி என்று நீளமாய்ச் சொல்லாது மு.சு.தொ.காட்சி என்றால் மொழிமரபும் காக்கப் படுகிறது; புதிய பயனாக்கமும் ஏற்படுகிறது. எனவே இப்படி எழுதுகிறேன்.

Building Security Systems = கட்டடப் பாதுகாப்புக் கட்டகங்கள்; safety, security என்பவை வேறுபடுத்தப் படவேண்டிய சொற்கள். safety என்பதற்கு ஏமம், சேமம் என்றும், security என்பதற்குப் பாதுகாப்பு என்றும் நான் சில காலமாய்ப் பயன்படுத்துகிறேன். systems என்பதற்குப் பல்வேறு சொற்களை முயன்று பார்த்து (அவற்றில் நாக.இளங்கோ பயன்படுத்திய ”சட்டகங்கள்” என்பதும் ஒன்று தான்) இப்பொழுது ”கட்டகங்கள்” என்ற சொல்லே சட்டென்று பொருள் புரிவது போல் இருப்பதால் அதையே இப்பொழுதெல்லாம் இடைவிடாது பயன்படுத்துகிறேன்.

இனி இளங்கோவன் கேட்டிருந்த சொற்கள்:

Heater = சூடூட்டி, சூடாக்கி (மேலே சொன்ன வேம்பா என்ற சொல் விதப்பாகப் பல வட்டாரங்களிற் பழகிப் போனதால் வெந்நீர் வேம்பா என்பதை மேலே ஏற்றுக் கொண்டேன். சூடூட்டி, சூடாக்கி என்பவை பொதுமைச் சொற்கள் அருளியும் பயன்படுத்துகிறார்.
Warmer = கணப்பி; ”கண, கண என்று இருந்தது” என்ற சொல்லாட்சியை இங்கு நினைவு கொள்ளுங்கள்
Boiler = கொதிகலன், கொதிப்பி; கலன் என்று முடிவதா, அன்றிக் கருவியை இகரத்தில் முடிப்பதா என்று உங்கள் உகப்பிற்கே விட்டுவிடுகிறேன்.
Stove = அடுப்பு
Oven = தணலி, = அடுப்புக்கும் மேற்பட்டுத் தணலை (சூட்டின் அளவைக் கூட்டி வைப்பது) வைத்திருப்பதால் இது தணலி.
Broiler/gril =வெதுப்பி. வெதுப்புதல் என்பது baking ற்கு ஈடாகத் தமிழீழத்திலும், இப்பொழுது தமிழ்நாட்டிலும் பரவிவிட்டது. என்னால் என்ன செய்யமுடியும் என்று தோன்றவில்லை. சொல்லாய்வர் அருளி வெதுப்புதலுக்கு மாறாக அடுதல் என்பதையே புழங்குகிறார்.

O.E. bacan "to bake," from P.Gmc. *bakanan (cf. O.N. baka, M.Du. backen, O.H.G. bahhan, Ger. backen), from P.Gmc. *bakan "to bake," from PIE *bheg- "to warm, roast, bake" (cf. Gk. phogein "to roast"), from root *bhe- "to warm" (see bath). Related: Baked (M.E. had baken); baking. The noun meaning "social gathering at which baked food is served" is attested by 1846, Amer.Eng. Baked beans attested by 1803.

roast யைச் சுடுதல் என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்லுகிறோம். தோசை சுடுதல். ரொட்டி சுடுதல், சப்பாத்தி சுடுதல் என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே bakery என்பதற்கு அடுமனை சரியென்று தான் தோன்றுகிறது.

Hearth = அனலி இது நெருப்பு தகதக என்று எரிய அனலாய்ச் சுடுவது.
Furnace = உலை

அன்புடன்,
இராம.கி.

Sunday, January 01, 2012

பொத்தக வெளியீடு


என் பொத்தக வெளியீட்டு அழைப்பிதழை உடன் இணைத்துள்ளேன். நண்பர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, December 21, 2011

சிலம்பின் காலம் - பொத்தக வெளியீட்டு அழைப்பு

அன்புடையீர்,

ஏற்கனவே மடற்குழுக்களிலும், என் வலைப்பதிவிலும் வெளிவந்த ”சிலம்பின் காலம்” என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதியை ஒரு பொத்தகமாக ஆக்கி, வரும் சனவரி 5 ஆம் தேதி தொடங்கும் பொத்தகக் கண்காட்சியையொட்டித் தமிழினி பதிப்பகத்தார் வெளிக்கொணருகிறார்கள். பொத்தக வெளியீட்டு விழா வரும் சனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அது பொழுது மற்ற சில எழுத்தாளர்களின் பொத்தகங்களும் தமிழினிப் பதிப்பகத்தால் வெளியிடப் படும் என்று அறிகிறேன்.

என் நூலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் முன்னாள் தலைவர் பேரா. க.நெடுஞ்செழியன் வெளியிட, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் (SRM university) துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ முதற்படியைப் பெற்றுக் கொள்ள இசைந்துள்ளார்கள்.

பதிப்பகத்தார் அனுப்பி வைக்கும் அழைப்பிதழை கூடிய விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். இப்பொழுது நான் தரும் இச்செய்தியை என் முன்னழைப்பாக ஏற்று, வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 21, 2011

மாணிக்க வாசகர் காலம் - 7

குதிரை நரியான திருவிளையாடல்:

பெருந்துறையிலிருந்து நேர்த்தியுடன் வந்த குதிரைகள் அரசனின் பந்தியிற் (லாயம் என்ற உருதுச்சொல்லை இன்று புழங்கி நம் தமிழ்ச்சொல்லை இழந்தோம்) கட்டப்பட்ட இரவிலும் அடுத்த நாளிலும் நடந்தவை குறிக்கும்  இத் திருவிளையாடல் தன்னுடைய விவரிப்பளவில் மிகவும் சிறியதாகும். மதுரை அடைந்த மாயப்புரவிகள் ஒன்றிற்கொன்று தமக்குள் முகம்பார்த்து கீழே வருவதுபோற் சொல்லிக் கொண்டனவாம்:

“நேற்றுநாம் வந்தவழியெலாம் நம்மை ஓட்டியவருக்குக் கோவம் வந்து, வரும் பாதையில் பெரிதும் அடிபட்டோம்; முடிவில் நம் கால்களைக் கயிறுகளாற் கட்டிப் பந்தியில் நிறுத்திவிட்டார். இப்படியே நின்று கொண்டிருந்தால் குருதி வெளிப்பட்டுப் புண்பட்டுப் போவோம். நமக்கு வேண்டிய நிணமும் இங்கு இல்லை. கொள்ளும் புல்லுமே இவர் நமக்குத் தருவார். போனாற் போனதென விட்டால், இவர் நம்மேல் ஏறி விரட்டவும் பார்ப்பார்; நம் உண்மையுருவை இவரிடங் காட்ட வேண்டியது தான்” என்று சொல்லிக் கொண்டனவாம்.

அதே இரவில் தம்மைக் கட்டிய கடிவாளக் கயிறுகளை பல்லால் மென்று கடித்து அறுத்து, மீண்டும் நரிகளாகி, கடைத்தெருக்கள், வாயில்கள், மடங்கள், மன்றுகள், கடிமனைகள், அங்கணங்கள் (= சாக்கடைச் சந்துகள் என்பதற்கான பழஞ் சொல். இன்றைக்கு drainages என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தக் கூடிய சொல்.) எனப் பலவிடங்களிலும் நுழைந்து ஒன்றுக்கு ஒன்று உறுமி, தமக்குள் சள்ளிட்ட பசியால் இகலித்து, ஊரிலுள்ள பழம் புரவிகள், துள்ளும் மறிக்கூட்டம், யானைக் கன்றுகள், ஆடுகள், கோழிகள், பன்றிகள் ஆகியன கடித்துக்குதறி, யாரேனும் நகரிலெழுந்தால் அவரைச் சுழற்றியடித்து விரட்டி, எங்கும் போகாமல் ஆக்கி, ஊளையிடத் தொடங்கின.

இதையெலாம் பார்த்துத் தவித்த குதிரைப் பந்தியாட்கள், என்ன செய்வது என்றறியாது கலங்கி, பொழுது புலருமுன்னர் அரசனிடம் வந்து,  இரவில் கொள்ளுப்பை நிறையப் புல்லும், கொள்ளும், பயறும், கடலையும், துவரையும் இட்டும், அவற்றை உண்ணாப் புதுக்குதிரைகள் என்ன மாயமோ நரிகளாய் உருமாறி கையில் அகப்படாது ஓடிப்போய் ஊளையிட்டதையும், ஊர் விலங்குகளைக் கடித்துக் குதறியதையும் கூறுகிறார்.

அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”இந்நிலை எப்படி வந்தது? யாருக்கு என்ன தீங்கு நாம் செய்தோம்?” என்று தடுமாறுகிறான். அமைச்சரைக் கூட்டி உசாவுகிறான். தன் அன்றாடச் சடங்குகளை முடித்து வந்த வாதவூரரும் உசாவலிற் கலந்து கொள்கிறார். வாதவூரரைப் பார்த்த அரசன் அவர் மேல் பழி சுமத்துகிறான். வாதவூரர் “நேற்று நீங்கள் கைக்கொள்கையில் எல்லாம் சரியாய் இருந்ததே? என மறுமொழிக்கிறார்.

“நரிகளைக் குதிரைகளாக மாற்றி மீண்டும் அவற்றை நரிகளாகச் செய்து எம்மை ஏமாற்றியது நீயே. இப்படி இந்திர ஞாலம் செய்யும் நீயோ சாதி அந்தணனாகவும் ஆகிப்போனாய். உன்னை என்ன செய்வதென்று தெரியாது நிற்கிறேன்; என் பொன்னை அழித்தார் யார்? நற்குடும்பத்தார்க்கு அஞ்சாது, கொடுமை செய்த குதிரைத் தலைவன் யார்? அவனோடு கூடவந்த சாத்துவர் (=வணிகர்) எங்கே? உன் மேனி முற்றும் வாடும்படி உன்னைத் தண்டிக்க வேண்டும் போலும்” என விதப்பாய் அலறுகிறான். ”நீர் வேதம் ஓதியது இக் காரியம் செய்யவோ? உம்மைச் சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழி யில்லை” என்று புலம்பிச் சிறையில் அடைக்கிறான்.

அத்தோடு இச்சிறு திருவிளையாடல் முடிகிறது. அடுத்து மண்சுமந்த திருவிளையாடல் தொடங்குகிறது. அதற்குள் போகு முன் ஒரு கேள்வியை நாம் அலச வேண்டும். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலும், நரி குதிரையான திருவிளையாடலும், குதிரை நரியான திருவிளையாடலும் ஏன் நடந்தன? மணிவாசகரைப் பெருமைப் படுத்தவா? அதனூடே நரி-குதிரை மாற்றங்கள் ஏன் நடைபெற வேண்டும்? 4 ஆந் தொடரும் மண்சுமந்த திருவிளையாடலில் அரசனையும் சேர்த்து ஊரிலுள்ளோர் எல்லோர்க்கும் அடி விழுகிறது. அது நம்மை யோசிக்க வைக்கிறது. இப்படியோர் நடப்பின் மூலம் நமக்கென்ன உணர்த்தப்படுகிறது? இத் திருவிளையாடல்களுள் ஒரு பொருள் இருக்க வேண்டுமே?

இந் 4 திருவிளையாடல்களோடு தொடர்புள்ள வரகுணனுக்குச் சிவலோகம் காட்டின திருவிளையாடல், விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல், உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல், மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் ஆகியவற்றையும் சேர்த்து ஓர்ந்துபார்த்தால், பாண்டி நாட்டின் பொருள்வள நிலைமை மிகவும் மோசமாய் இருந்திருக்ககுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை அது பஞ்ச காலமோ? தவறான அழுத்தங்கள் கொடுக்கப் பட்டு, மக்கள் மேல் நடக்கும் பெருங்கேடுகளைப் போக்கி, சரவல்களைக் குறைத்து, நன்மை விளைவிக்காத அரசன், பஞ்சத்தைக் கவனிக்காத அரசன், இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து அதைப் பற்றிக் கொள்வதில் கவனஞ் செலுத்தி, தன் குதிரைப் படையைக் கட்டுவதிலே பெருங்கவனமாய் இருந்துள்ளான். இப்படிப் பஞ்ச காலத்தில் படையெடுப்பை ஒதுக்கி, நாட்டுமக்கள் பசியொழிய அரசன் வழிபார்த்திருக்க வேண்டாமோ?

”நாட்டின் அவலநிலையை அரசனுக்கு உணர்த்தி தவறான போக்கிலிருந்து அவனைத் திருப்ப ஏந்தாக இத்திருவிளையாடல்கள் பயன்பட்டிருக்குமோ?” என்ற ஓர்மை நமக்கு எழுகிறது. ”இதில் மணிவாசகர் ஒரு முகனக்கருவியாய் அமைந்தாரோ?” என்றுஞ் சொல்லத் தோன்றுகிறது. இல்லாவிடில் இத் திருவிளையாடல்களுக்கு பொருளில்லாது போகிறது.

என்றைக்கு இறைவனே சுந்தர பாண்டியராய் வந்து பாண்டிய இளவரசியான அங்கயற்கண் அம்மையை மணந்து, பாண்டி நாட்டுக் கொடி வழி தொடங்கி வைத்தாரோ, அன்றிலிருந்து அரசிற்கு ஏதேனும் நடந்தால்  அவ்வப்போது அவர் இடையூறுவதாகவே திருவிளையாடற் புராணம் சொல்கிறது.

மாணிக்க வாசகரின் காலம் பாண்டிய அரசிற்கு மிகுந்த சோதனை எழுந்த காலம் போலும். அது பெரும்பாலும் பஞ்சகாலமாய் இருந்திருக்க வேண்டும். அடுத்து மண்சுமந்த திருவிளையாடலுக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 14, 2011

மாணிக்க வாசகர் காலம் - 6

நரி குதிரையான திருவிளையாடல்:

”குதிரைகள் வரப்போகின்றன. பாண்டியநாட்டிற்குப் பெருங் குதிரைப்படை உருவாகி, நாடு வலிவுறப்போகிறது” என்றெண்ணித் தானைவேல் வாகை மாறன் ஊரை அலங்கரித்ததற்கு அடுத்த நாள். “ஒரு மத்தன் (=மயக்கம் உள்ளவன்) பேச்சைக் கேட்டு, ஊரை அலங்கரித்த பித்தன் நீயொருவனே இருக்க முடியும்” என்று பேரமைச்சர் ஒருவர் மன்னனிடம் பழி பேசுகின்றார். “பெருந்துறையிலேயே எல்லாச் செல்வத்தையும் அவன் போக்கிவிட்டான், குதிரையாவது வருவதாவதாவது? அவனுக்கு இனியும் இரங்காதே! அவனை வளைத்துப் பிடித்துப் பணத்தைத் திருப்பி வாங்கு! பொன்னை இழக்காதே” என்று தூவம் போடுகிறார். பிரம்படிக்காரர் மூலம் மாணிக்க வாசகரை மன்னன் தண்டிக்கத் தொடங்குகிறான். திருவாதவூரிலேயே அவரைச் சிறையிற் தள்ளுகிறான். வாசகர் மீள அரற்றுகிறார். பெருந்துறையானை எண்ணி எண்ணிக் குழைகிறார். 14 ஆம் பத்தாய்க் குழைத்த பத்தும், பதினைந்தாம் பத்தாய் அருட்பத்தும் எழுகின்றன. இவையிரண்டுமே பெருந்துறையானை முன்னிலைப் படுத்தி வாதவூரில் எழுந்தவை.

இப் பத்துகளைக் கேட்ட பெருந்துறையான் வாளாயிருக்கவில்லை. சிவ கணங்கள் மிழலை நாட்டு நரிகளைக் குதிரையாக்கி அவற்றில் ஏறிக் கொள்கின்றன. இவற்றின் முன்னால் இறைவனும் வெள்ளைப் புரவியில் சேர்ந்து கொள்கிறான். நரிகள் ஒன்றுகூடிய இடமே நரிக்குடியென திருவால வாயுடையார் புராணம் சொல்லுகிறது. (இன்றும் தொண்டிக்கு அருகில் ஒரு நரிக்குடி இருக்கிறது. மணிவாசகரை ”வடுகப் பிள்ளை”யாக்கி கோகழியைக் கர்நாடகத்தில் தேடுவோர் இந் நரிக்குடியைக் கண்டுகொள்ளார் போலும்.) .

இறைவனோடு, சிவகணங்களும் மதுரை நோக்கிப் புறப்படுகின்றன. திருவாத வூரில் சிறைப்பட்ட வாதவூரருக்கு மதுரை நோக்கிக் குதிரைகள் வருவதை மணிச்சிலம்பு ஓசையிட்டு இறைவன் உணர்த்துகிறான். ”வாதவூரினில் வந்து இனிதருளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்” என்ற திருவாசகம் கீர்த்தி அகவல் 52-53 ஆம் அடிகள் இதை உறுதி செய்கின்றன. குதிரைகள் வரும் நேரத்தை வாதவூரர் எதிர்பார்த்து நிற்கிறார். பின்னாற் குதிரைக் குளம்படி கேட்ட தூதர் வாதவூரரிடம் சொல்லி மன்னரிடம் அனுப்புகிறார். அரசனுக்கும் செய்தி போகிறது. ஆவல் மிகுதியால் அத்தாணி மண்டபத்திற்கு அரசன் வந்து சேருகிறான். அங்கு நிலவும் தந்தத் திகை (tensile stress) கூடிப் போகிறது.

இவ் எதிர்பார்ப்பிற்கு மாறாய் ஓர் உச்சச்சரிவு போற் குதிரைகள் வருவதிற் காலத் தாழ்வு ஏற்படுகிறது. பின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது. பிரம்படிக் காரர் கையில் வாதவூரர் ஒப்படைக்கப் படுகிறார். அவர்கள் அடிக்க ஓங்க, மீண்டும் திருவாசகங்கள் பிறக்கின்றன. 16 ஆம் பத்தாய் அடைக்கலப் பத்து பிறக்கிறது. குயிற் பத்து அடுத்து எழுந்ததாய் நம்பியார் திருவிளையாடல் சொல்கிறது. நாம் ஏற்பதற்கில்லை. ஏனெனில் பரிமீது வரும் சிவன் மதுரை சேராதிருக்கையில் அது பற்றிப் பேசும் பாட்டுக்கொண்ட குயிற்பத்து எப்படி யெழும்? ஆக நிகழ்ச்சிகள் நடந்த காலத்திற்கும், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எழுந்த காலத்திற்கும் இடையிற் பெருத்த இடைவெளி இருந்திருக்க வேண்டும்.

அடைக்கலப் பத்தும் வேறு ஏதோவொரு பத்தும் அங்கெழுந்தன என்று நாம் கொள்ளலாம். அந்நேரத்தில் பகல் மாறி இரவானதோ என்னுமளவிற்குத் குதிரைகளின் கதிப்பில் தூசு கிளம்புகிறது. மண்டபப் போக்கு மாறுகிறது. ஓர் எதிர்பார்ப்பு எல்லோர் மனத்தும் குடிகொள்கிறது. விதவிதமான குதிரைகளைச் செலுத்தி வரும் வீரரைப் பார்க்கிறார். வியக்கிறார். குதிரைகளை, அவற்றின் கதிகளை, நடைகளை, நம்பியார் திருவிளையாடல் வியத்தாரமாய் விவரிக்கிறது.  விரிவு கண்டு நாமும் வியந்து போகிறோம். [குதிரைகள் பற்றி அறிந்தோர் விளங்கிக் கொள்ளலாம். என்னால் முடியவில்லை. எனவே தவிர்க்கிறேன்.]

அடுத்த விவரிப்பு, குதிரையோட்டி வந்த இறைவனைப் பற்றியாகும். இவ் விவரிப்பு காலக்கணிப்பு அலசலுக்கு முகனமானது. ஏனெனில், ”இறைவன் அரபு இசுலாத்துத் தோற்றம் காட்டினார், எனவே மாணிக்க வாசகர் தேவார மூவருக்குப் பிற்பட்டவர்” என்று சிலர் கதை கட்டுவர். திருவாலவாயுடையார் புராணம் நரி குதிரையான திருவிளையாடல் 34 ஆம் பாட்டைக் கூர்ந்து படித்தால் அப்படி நமக்குத் தோன்றவில்லை.

”மன்னியநித் திலமாலை நில வெறிப்ப
மாணிக்கக் குண்டலங்கள் வெயில் விரிப்பத்
துன்னுலகுக்கு ஒருகுதிரை யாளாம் சோதி
சோதிவிடு குப்பாயம் மெய்ப்பால் மின்ன,
முன்னைமறைப் பரியைநெறி ஐந்தும் ஓங்க
முடுகிவலம் இடம்பரிவத் தனம்செய் வித்து
மின்னுண்மணிப் பொலன்கலினக் குசை வலித்து
விளங்குகர வாளம் கை துளங்க வந்தான்”

பாடலைப் புரிய ஏதுவாய், இதன் பொழிப்புரையை இங்கு கொடுக்கிறேன்.

”கழுத்திற் தொங்கும் முத்துமாலை நிலத்தைக் கூசவைக்க,
மாணிக்கக் குண்டலங்கள் வெயிலில் விரிந்திருக்க,
சோதிவிடும் குப்பாயம் அவனுடலில் மின்ன,
பக்கமறைப்போடு பரியின் இரு கண்கள் இருக்க,
ஐந்து வகையான கதிகள் ஓங்கும் வண்ணம்
குதிரையை முடுக்கி வலமிடமாய்ச் சுற்றிவந்து
மின்னும் மணிகள் பொருந்திய பொற்கடிவாளத்தை வலித்து,
விளங்கும் கைக்கத்தி துளங்கிச் சொலிக்கும் வகையில்
துன்னுலகுக்கு இவனொருவனே குதிரையாள் போல வந்தான்.”

மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். வந்த குதிரையாள் அரபுத் தோற்றங் கொண்டதாய்த் தெரிகிறானா? இசுலாத்துத் தோற்றம் இங்கு உங்களுக்குத் தெரிகிறதா?. ”இசுலாம் எழுந்ததன் பின் மாணிக்கவாசகர் கதை எழுந்தது” என்று எப்படியெல்லாம் கதை விடுகிறார்? அவரை நோக்கி இம்”மூலத்தைப் படியுங்கள்” என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. வெள்ளைக் கலிங்கத் (வெள்ளை மேலாடைத்) தோற்றம் காட்டிய 18 ஆம் நூற்றாண்டுப் பரஞ்சோதி முனிவரைப் பிடித்துக் கொண்டு, வலிந்து அதை அரபுத் தோற்றமாக்கினால் எப்படி? இதே வெள்ளைக் கலிங்கத் தோற்றைத் தான் அன்னைப் பத்தில் மணிவாசகரே சொல்கிறாரே? அப்புறம் என்ன?

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

- அன்னைப் பத்து 7

இங்கே பள்ளிக் குப்பாயம் என்ற சொல்லை வைத்து ”பள்ளி என்பது சமணம், புத்தம் போன்றமைந்த இசுலாம் பள்ளி வாசலைக் குறிக்கும்” என்று விளக்கி, “இது மாற்று மத ஆட்கள் போடும் குப்பாயம்” என்று மொத்தப் பொருள் சொல்லிக் குழப்பச் சிலர் முயல்கிறார். பள்ளிக் குப்பாயம் என்பது வடக்கே இருந்தவர் போடும் நீண்ட அங்கிச் சட்டை. அது யவனர் காலத்திற்கும் முன் வடமேற்கு இந்தியாவில் (இற்றை ஈரான், ஆப்கனித்தான், பாக்கித்தான் போன்ற நாட்டு நிலப்பகுதிகளிலும் ) இருந்தது. எப்போது அங்கு தோன்றியது என்று தெரியவில்லை. தமிழருக்கு அது வடக்கிருந்து அறிமுகமானது என்று மட்டுமே நாம் சொல்ல முடியும்.

மேற்காட்டிய 12 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற் பாட்டும் ”மின்னுகின்ற குப்பாயம். முத்துமாலை, மாணிக்கக் குண்டலங்கள் அணிந்திருந்தார், குதிரையின் கண்கள் பக்கவாட்டில் மறைக்கப் பட்டிருந்தன. மணிகள் பொருந்திய பொற்கடிவாளம், கையில் கத்தி” என்று மட்டுமே சொல்கிறது. ”இது நடுக்கடல் நாடுகளின் குதிரைக்காரர் தோற்றமா?” என்றால் ”ஒரு வேளை இருக்கலாம், இல்லாதும் போகலாம்” என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. எப்படியெலாம் மூலநூலைப் படிக்காது ஆய்வர் சிலர் அவக்கரப்படுகிறார்? படைச் சேவகர், குதிரையாட்கள் குப்பாயம் போடுவது சிலம்பிலேயே சொல்லப் பட்டுள்ளதே? சிலம்புக் குப்பாயம் பள்ளிக் குப்பாயமா? - தெரியாது.

குதிரைத் தொகுதியின் நடுவில் வரும் நாயகனைக் கண்டு ”அவன் சொக்கன் தானோ?” என்று வியக்கிறார். குதிரைகளின் நேர்த்தி கண்டு வியந்து, அரசன் ”குதிரைத் தலைவன் யார்?” என வாதவூரரிடம் கேட்கிறான். “சற்று நேரத்திற் குதிரையில் வருவார்” என்று அவர் சொல்கிறார். அடுத்து இறைவன் குதிரைத் தலைவனாய் வரும் தோற்றம் விவரிக்கப் படுகிறது. குதிரைத் தலைவனைப் பார்த்துத் தன் கரங் கூப்பப் பாண்டியன் முற்படுகிறான். பின் ”குதிரைத் தலைவனை அரசன் வணங்குவதா?” என்ற தயக்கத்தில் தன்னைத் தானே அடக்கிக் கொள்கிறான்.

”மிக்க மந்திரிகாள்! இந்த வெம்பரிச் செட்டி நந்தம்
சொக்கனே போல் எனக்குத் தோன்றிடா நின்றான்; வந்த
கொக்கினைப் பாரீர்! காலம் தாழ்த்ததாயினும் கொணர்ந்த
மிக்க மந்திரியைப் பாரீர்!!” என்று பன்முறை வியந்தான்.

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 61

இப்படியாகக் குதிரைச்செட்டியையும், மணிவாசகரையும் பற்றி மன்னன் வியக்கிறான். குதிரைத் தலைவன் தான்கொண்டுவந்த குதிரைகள் பற்றி விவரிக்கிறான். என்னென்ன குதிரைகள் நல்லன என்றும் விவரிக்கப் படுகின்றன. முடிவில் குதிரை எண்ணிக்கைகளும் விலைகளும் சொல்லப் படுகின்றன.

இப்பரிமா ஓர் இலக்கம் அவற்றினுள் இக்குழு ஓரொரு மா
முப்பஃதாயிரம் ஓர் பழுதின்றி முதற்றரம் இத்தரமும்
வைப்பதின் நூறு குறைந்தன பின்னிவை ஆயிரம் மற்றிவையும்
அப்படி பெற்ற விலைப்பொன் இலக்கம் அனைத்தும் உணர்ந்து கொளே

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 74

”இலக்கம் குதிரைகளா?” என்று நாம் வியந்து நிற்கிறோம். அவற்றுள் 30000 முதற்றரக் குதிரைகள். அடுத்ததரக் குதிரைகள் 30000 இல் நூறு குறைந்ததாம். மூன்றாம் தரத்தில் 1000 குறைந்ததாம். நாலாம் தரத்தில் 11100 என நாம் கணக்கிட்டுக் கொள்கிறோம். இக்குதிரைகளுக்குப் பெற்ற விலைப்பொன் இலக்கம். பொன் என்பது என்ன அலகெனத் திருவாலவாயுடையார் புராணம் சொல்ல வில்லை. எனவே குதிரைத் தரங்களின் விலையை நம்மாற் கணக்கிட முடியவில்லை. அடுத்துக் குதிரையின் பெருமைகள் சொல்லப் பெறுகின்றன.

விற்பனையின் கடைநிலைக்கு வருகிறார். அதன்பெயர் கயிறு மாற்றிக் கொள்ளுதல். விற்பவன் வாங்குவோனிடம் “இந்தாப்பா, கயிற்றைப் பிடித்துக் கொள், குதிரையை உன்னிடம் கொடுத்தேன். இனி நன்மை தீமை எல்லாம் உனக்கே. எனக்கு இனிப் பொறுப்பில்லை” என்று கைமாற்றிக் கொள்கிறார்.

”ஆதலால் அறிஞர் முன்னா அறவுறப் பேசிக் கொண்டு
நீதியிற் கைக்கொள் இன்று நின்னது புரவியாக
வீதியிற் கயிறு மாறி விட்டபின் நன்மை தின்மை
ஓதுவ நமது பாரம் அல்ல மேல் உன்ன” என்றான்.

அத்திறம் சொல்ல, ”நல்ல அறிவன் நீ அறைந்தது ஒக்கும்
உத்தம நன்மை தின்மை உன் கை விட்டு என் கை புக்கால்
எத்தையும் அறிதல் வேண்டா; என்னவே முற்றும்” என்னச்
சித்திர மாக்கள் தம்மைத் தென்னவன் கைக்கொடுத்தான்

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 80-81

”இப்பேறு பட்ட குதிரைகளுக்கு நாம் கொடுத்த விலை போதா. நமக்குக் குதிரைகள் வாய்த்தன” என்றெண்ணி மன்னன் மகிழ்ந்துபோகிறான்.

அய்யமில் லாமல் முன்னின்று ஆவணி மூல நன்னாள்
துய்ய பேருலகுக் கெல்லாம் துளங்கி ராவுத்த ராயன்
மெய்யை மெய்யுடைய மெய்யன் மெய்யடியானை வேண்டிப்
பொய்யிலா மன்னன் காணப் பொய்ப் பரிமாற்றம் செய்தான்

- திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 83

இங்கே மெய்யடியான் என்பது மணிவாசகர். ”மெய்யை மெய்யுடைய மெய்யன்” என்பது இறைவனைக் குறிக்கும். ஆக ராவுத்த ராயனாய் வந்த இறைவனாகிய மெய்யன் மன்னனிடம் பொய்ப் பரிமாற்றம் செய்தான்.

அடுத்த பாடல் நாம் குறித்து வைக்க வேண்டிய பாட்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பியார், திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவாரூரைப் பற்றி வரும் பதிகத்தில் இருந்து சில வரிகளை எடுத்து அப்படியே தன் பாடலில் ஆள்கிறார்.

மின்னிய உலகுதன்னில் வித்தின்றி நாறு செய்வோன்
நன்னெறி யில்லாப் பொல்லா நரகரைத் தேவு செய்வோன்
மன்னிய நரிகள்தம்மை மறுகெலாம் வாவி யேறித்
தென்னன்முன் குதிரையாகச் செய்பு தோன்றாமல் விட்டான்

- திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 84

இதில் வரும் வரிகள்

“நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங்கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்”

என்ற திருநாவுக்கரசர் தேவார திருவாரூர் பதிகத்தை அப்படியே தன்பாட்டில் நாலில் 3 அருளிச்செயலைக் குறிப்பனவாய் ஒத்துள்ளன. திருநாவுக்கரசர் சொல்லும் ”நரியைக் குதிரை செய்தது” என்பது திருநாவுக்கரசருக்கு முந்திய அருளிச் செயல். இந்த அருளிச் செயல் மாணிக்க வாசகருக்காக நடந்தது என்பது நம்பியார் கூற்று. அப்படியானால், ஏரணத்தின் படி, நம்பியார் காலப் புரிதல் ”மாணிக்கவாசகர் திருநாவுக்கரசருக்கு முன்பு இருந்தார்” என்பது எளிதில் பெறும் அல்லவா? நண்பரே நினைவுகொள்ளுங்கள். ஏரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். [C claims that foxes are turned into horses due to A. Further C quotes B to be saying the same thing (that foxes are turned into horses). The corroboration is not just for one miracle but three. B lived in 7th century. So A who is referred to here must have lived prior to B] இதைச் சொல்வது 12 ஆம் நூற்றாண்டு நம்பியார். அதாவது, 12 ஆம் நூற்றாண்டில் ஏழாம் நூற்றாண்டிற்கு முந்திய திருநாவுக்கரசருக்கு முன்பே மாணிக்க வாசகர் இருந்ததாக ஒரு புரிதல் உள்ளது.

What a beautiful evidence? I am pleasantly surprised.

இனி இத்திருவிளையாடலின் இறுதிக்கு வருவோம். பந்தியிற் குதிரைகளைக் கட்டுமாறு மன்னன் பணிக்கிறான். குதிரை கொண்டுவந்த தலைவனுக்கு ஒரு பட்டுத் துணி கொடுக்கிறான். தன்னடியாருக்காக, அதைச் செண்டிற் தொங்கும் படி இலாவகமாக வாங்கி, இறைவன் தன்முடியில் புனைந்து கொள்கிறான். அப்படிச் செண்டில் வாங்கியது தன்னை அவமதித்ததாய் அரசன் உணர்ந்து சீற, வாதவூரர் “ அது அவர் தேச வழமை” என்று சொல்லி அமைதிப் படுத்துகிறார்.

பிடித்த பத்து இப்பொழுது எழுந்ததாய் திருவாலவாயுடையார் புராணம் சொல்கிறது. அது ஏற்புடையதில்லை. பல்வேறு பொற்பட்டு வரிசைகளை வாதவூரர்க்குச் செய்து அரசன் அரண்மனை ஏகுகிறான்.நரி குதிரையான திருவிளையாடல் முடிந்தது. அடுத்த திருவிளையாடலுக்குள் போவோம்.

இனித் திருவாசகத்தில் இருந்து நரி குதிரையான திருவிளையாடல் பற்றிய அகச்சான்றுகள் வருமாறு:

குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்து அருளியும்

- கீர்த்தித் திருவகவல் 27-28

மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 33-34

அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 35-36

ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 37-41

மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும்

- கீர்த்தித் திருவகவல் 44-45

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோள்கொண்ட நீற்றனாய்
சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்
பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 3

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணம்கொண்டு கோதாட்டி
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றியிப் பாசத்தைப் பற்றநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 20

மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலம் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவற் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ

- திருப்பூவல்லி 20

கோல வரைக்குடுமி வந்து குவலயத்து
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலம் திகழும் திருவுத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்பாடி
பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ

- திருப்பொன்னூசல் 8

வெள்ளைக் கலிங்கத்தர் வெந்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

- அன்னைப் பத்து 7

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்ததன் மேனிப் புகழிற் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்க கன்வரக் கூவாய்

- குயிற் பத்து 7

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து

- திருத்தசாங்கம் 6

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற் போதிரைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவரி யாதென்தன் உள்ளமதே

- திருப்பாண்டிப் பதிகம் 1

சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்து
குதிரை யின்மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரை யர்மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே

- திருப்பாண்டிப் பதிகம் 2

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துள் பெய்கழ லேசென்று பேணுமினே

- திருப்பாண்டிப் பதிகம் 3

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே

- திருப்பாண்டிப் பதிகம் 4

ஈண்டிய மாயா இருகெட எப்பொரு ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னும்சொல்ல வல்லனல்லன்
வேண்டிய போதே விலக்கில் ஐவாய்தல் விரும்புமின்தான்
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே

- திருப்பாண்டிப் பதிகம் 6

மாயவ னப்பரி மேற்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளேயருளும்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே

- திருப்பாண்டிப் பதிகம் 7

விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர்கடக்க
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார்
மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறி யார்மறந்தே

- திருப்பாண்டிப் பதிகம் - 9

இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி,
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெலாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேயுன் பேரருளே

- திருவேசறவு 1

வேடுரு வாகி மாகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட விருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல மர்ந்த பரிமாவேறி ஐயன் பெருந்துறை ஆதியந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறிவார் எம்பிரா னாவாரே

- திருவார்த்தை 4

உள்ள மலமொன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளம் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு

- பண்டாய நான்மறை 2

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டின் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளும் கெடநெஞ்சே வாழ்த்து

- பண்டாய நான்மறை 3

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே

- ஆனந்த மாலை 7

அன்புடன்,
இராம.கி.