Sunday, March 15, 2009

திசைகள் - 5

அடுத்து, மேற்குத் திசையைப் பார்ப்போம். .

மேக்கு, பச்சிமம், குடக்கு, இவை மேற்கே
வாருணம், பிரத்தியக்கும், அதுவே.

என்று பிங்கலம் கூறும் சொற்களை அகரவரிசைப் படுத்தினால் ”குடக்கு, பச்சிமம், பிரத்தியக்கு, மேற்கு (மேக்கு இதன் பேச்சுவழக்குச் சொல்லே), வாருணம்” என்றமையும். இவற்றில் 2 சொற்கள் நல்ல தமிழ் (குடக்கு, மேற்கு), 2 சொற்கள் தமிழ்த் திரிவு (பச்சிமம், வாருணம்), ஒன்று முற்றிலும் வடமொழித் தோற்றம் காட்டும் இருபிறப்பிச் சொல் (ப்ரத்யக்கு).

முன்சொன்னது போல், "குடக்கும், குணக்கும்" என்ற வழக்கு சங்க இலக்கியங்களில் பெரிதும் இருந்திருக்கிறது. காட்டாக,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

என்ற காரிகிழார் பாட்டு வரிகளில் (புறம்.6) நான்கு திசைகளும் வருகின்றன. [குணக்கோடு வரும் ”தொடுகடல்” என்னும் சொல்லாட்சி கிழக்கே கரையைப் பொருதி கடல் ஏறிவந்து நிலம் கொண்ட குறிப்பை உணர்த்துகிறது. இதே போல, குடக்கின் நிலத்தில் ஏறிவராத, நாட்பட்டு நிலைத்த, முதிர்ந்த கடலைத் “தொன்றுமுதிர் பௌவம்” குறிக்கிறது.]

குடக்கைப் போலவே, குடக் காற்று (= மேற்குக் காற்று, பெரும்பாண் 240), குடக் கோ (= மேற்கு அரசன், சிலம்பு 24:61, புறம் 62, 63, 210, 211, 368, பதிற். 60-ன் பதிகம். மணிமே. 28:103), குடக்கோச் சேரல் (=மேற்குச் சேர அரசன், சிலம்பு பதிகம் 2), குடகக் கொங்கர் (=மேற்கில் இருக்கும் கொங்கர், சிலம்பு 30:159), குட கடல் (=மேற்குக் கடல், அகம் 378:15, புறம் 2:10, 17:2), குடகர் (=மேற்கில் உள்ளவர், சிலம்பு 26:121), குட நாடு (= மேற்கு நாடு, அகம் 115:5, அகம் 91:17, பதிற்.6, பதிகம் 5, புறம் 177:12), குட புலம் (= மேற்கு நிலம், அகம் 340:17, புறம் 373:26, சிறுபாண். 47), குட புலவியனார் (மேற்கு நிலத்தார், ஒரு புலவரின் பெயர், புறம் 18, 19), குட மலை (கார் நாற்பது 33:2, நற்.105:8, 239:1, பட்டினப். 188, சிலம்பு 10:106, சிலம்பு 11:53, S.I.I.II 68), குட மலையாட்டி (= மேற்கு மலையின் தெய்வம், இங்கு கண்ணகி, சிலம்பு 12:47), குடமுனி (= மேற்கின் முனிவர், அகத்தியர்), குடவர் (=மேற்கு மக்கள், பதிற்.55:9, பட்டினப். 276, புறம் 17:40, சிலம்பு 24:134), குடவர் கோ (=மேற்கு மக்களின் அரசன், சிலம்பு 24:134, புறம் 17:40, சிலம்பு 27:64), குடவர் கோமான் (= மேற்கு மக்களின் தலைவன், சிலம்பு 27:227), குடகம் (= மேற்கு, கம்பரா. ஒற்றுக்.20) போன்ற சொற்களும் குட எனும் சொல்லடியிற் பிறந்தவையாகும்.

மேற்சொன்ன குடக்காற்று, மேற்கிருந்து அடிப்பது. இதுவே வேனிற்காலத்திற் கோடைக் காற்றாகும். ”குட”த்தில் இருந்து ”கோடை”ச் சொல்லாட்சி பிறக்கும். இதேபோல, குணக்கில் பிறக்கும் காற்றைக் கொண்டல் (= ஈரமான கீழைக் காற்று) என்று குறிப்பர். வடக்கிருந்து வரும் குளிர்காற்று வாடை; தெற்கிருந்து வரும் வேகமிலா ஈரக் காற்று தென்றல் ஆகும்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வடக்குச் சுற்றுச்சுவரின் வெளிப் புறத்தில், ”திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்” என்று தொடங்கும் இராசராசன் மெய்கீர்த்தியில் (South Indian Inscriptions Vol II (Parts III) No.63) ”குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும்” என்ற வரியில் வரும் ”குடமலை நாடு” இற்றைக் கூர்க்கைக் குறிக்கிறது. [குடமலை நாட்டைச் சோழரும், பாண்டியரும் பலமுறை பிடித்தார். யாரோ ஒரு சோழன் (அவன் கரிகாலன் என்பாரும் உண்டு.) குடமலை நாட்டைப் பிடித்து, புகைகின்ற கல்லை (>ஹுகையின கல்>ஹோகனே கல்; தமிழ்ப்பெயரை கன்னடர் ஒலிக்கும் போது பகரம் ஹகரமாகும்.) உடைத்துச் செதுக்கிக் காவிரிக்கு வழி விட்டு, சோழ நாட்டை வளப்படுத்தினானாம். புகையின கல் நீர்வீழ்ச்சி செயற்கை போலவே தோற்றும் காட்சியைக் கூர்ந்து கவனித்தால், இத்தொன்மம் உண்மையாக வாய்ப்புண்டு. யாரோ ஒரு சோழன் காவிரியைத் திருப்பி, நீர்வரத்தைக் கூட்டி நாட்டை வளப்படுத்தியுள்ளான். இன்றோ காவிரியைத் தொலைத்துத் தடுமாறுகிறோம். காலத்தின் கோலம்?.....]

குடக்கு>குடகு என்ற சொல் அப்படியே மலையாளத்திலும், கன்னடம், துளுவில் கொடகு என்றும், தெலுங்கில் கொடுகு என்றும், குடகு மொழியில் கொடவி என்றும் சொல்லப் பெறும்.

குடக்கு, “கும்” எனும் வேரில் பிறந்தது. [குணக்கு எனும் கிழக்குச் சொல்லோ, குழிவைக் குறிக்கும் குல்/ குள் எனும் வேரிற் பிறந்தது.] கும்முதல் வினை திரட்சியைக் குறிப்பது. ’குமரி’ கூடத் திரள், பருவத்திற்கு வந்த, பெண்ணைக் குறிக்கும். இந்தியத் துணைக்கண்டத் தெற்கில் ஓரியாக (narrow) இல்லாமல், திரண்டு பருத்த முனை என்பதாலேயே குமரிமுனை என்றசொல் ஏற்பட்டது. இனி, ம்>வ் போலியில் கும்முதல் குவ்வுதலாகும். குவ்வியது குவியல் ஆகும். கும்மல், குவியல் எல்லாமே திரண்டு, கூம்பை உணர்த்தும். கும்மலிலிருந்து கூம்புதல் உருவாவதையும் எண்ணிப்பார்க்கலாம். மலைகள் எல்லாம் கூம்பித் தானே கிடக்கின்றன?

கும் எனும் வேரைப் போலவே குல் எனும் வேரும் குன்று, குறிஞ்சி கூர், கூர்மை போன்றவற்றை உருவாக்கும். இனிக் குவ்வுவது குவளவும் செய்யும். அப்புறம் குவள்தல் குவடலாகும், முடிவில் குவடென்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். குவடு = மலையுச்சி. குவட்டின் நீட்சியாகி, கோடு மலையுச்சியைக் குறிக்கும். (கோடு என்பதைப் ”பெரும் மலையுச்சி” என எண்ணுவது சரியல்ல. அது பெரியதா சிறியதா என்பது, நம் உகப்பைப் பொருத்தது. "குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற சிலம்பு வரியைப் (சிலம்பு. 11:20) படித்துப் பலரும் உயர்வு நவிற்சியில் புரிந்து கொள்கிறார். திருவதங்கோடு (=திரு விதங்கோடு), விளவங்கோடு என்பவை சிறிய மேட்டின் உச்சியையே குறிக்கின்றன. குமரிக் கோடும் சிறியதாய் அதே பொழுது, பழந்தமிழகத்தின் முகன்மையாய் இருக்கலாம். கோட்டின் குறிலாய் அமையும் ”கொடு”வில் இருந்தும் மலைச்சொற்கள் பிறக்கும். காட்டாகக் கொடுமுடி என்பது உயர்ந்த மலைக் குவடு. ”கொடுமணம்” என்பது கரூருக்கு அருகில் இருந்த மேடான இடம். [அண்மையில் கொடுமணத்தில் நடந்த அகழாய்வுகளின் மூலம் சங்க காலம் பற்றிய தெளிவு கிடைத்தது. சங்ககாலத்தின் தொடக்கம் கி.மு. 5ஆம் நூற்றாண்டாகக் கூட இருந்திருக்கலாம் என்கிறார். கொடுமணம் அகழாய்வின் பரிமானத்தைச் சரியாக, விரிவாகப் புரிந்து கொள்ளும் தமிழறிஞர் இன்று குறைவாகவே உள்ளார். எல்லோரும் ”பட்டிமன்றம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பேச்சரங்கம்” என்று ஓடினால்  எப்படி? இவற்றைக் கொஞ்சகாலம் நிறுத்தி தமிழாய்வுகளை மேற்கொண்டால்  என்ன?] கோடு/கொடு வளர்ச்சியின் இயல்பாகவே குடவு/குடகு. என்ற சொற்களும் பிறந்திருக்கின்றன. கூம்பல் பொருளில் குடகு எழுந்ததற்குச் சான்றாக, பட்டினப்பாலையின் 276 ஆம் அடியில்,

”வடவர் வாடக் குடவர் கூம்ப”

என்ற வாசகம் வரும். கூம்பிக் கிடப்பவை மலை, குன்று, மேடு தானே?

குடக்கு என்ற சொல்விளக்கத்தை முடிக்குமுன், திசைச்சொல்லை விளக்கும் விதமாய் (13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) நன்னூல் 273 ஆம் நூற்பாவிற்கு எழுந்த காண்டிகையுரையில் (14 ம் நூற்றாண்டு), செந்தமிழ் சேர்ந்த கொடுந்தமிழ் நாடாய்,

தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய
சீத மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட்டு எண்"

என்று ஒரு வெண்பா சொல்லும் பகுதிகளைப் பார்ப்போம். [இக்காலத்தில் சோழ அரசு முற்றிலும் குலைந்து, பாண்டிய அரசே நிலைத்தது.] எனவே, வெண்பாவின் படி,

தென்பாண்டி = குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள். [புதுக்கோட்டை சிலபோது இதில் சேரும்; சிலபோது சேராமல். புனல் நாட்டில் சேர்ந்து கொள்ளும்.]
குட்டம் = குட்ட நாடு (இன்றையக் கேரளத்துள் உள்ளது. 14 ஆம் நூற்றாண்டிலும், இது செந்தமிழ் சேர் ஏதமில் நாடு என்றே கொள்ளப் பட்டது கவனிக்கத் தக்கது.)
குடம் = குட நாடு (இன்றையக் கேரளத்துள் உள்ளது. இதைப் பற்றித்தான் மேலே பேசினோம்.)
கற்கா = குன்றும், சோலைகளும் நிறைந்த நாடு, கோவை மாவட்டத்தின் ஒரு பகுதி, மேட்டுப் பாளையத்திற்குப் பக்கம், அப்படியே பொள்ளாச்சி வரை இதன் விரிவைச் சொல்ல முடியும். கரூர், நாமக்கல், கிருட்டின கிரி, தருமபுரி மாவட்டங்களும் இதைச் சேர்ந்தவை தாம்.

வேள் நாடு = வேணாடு (இன்றையக் கேரளத்துள் இருக்கிறது; இரண்டு வேணாடுகள் கேரளத்தில் உண்டு; ஒன்று ஆலப்புழையில் இருந்து திருவனந்தபுரம் போகும் பாதையை ஒட்டியது. இன்னொன்று நீலகிரியை ஒட்டிய கேரள வனப்பகுதி வயநாடு என்று இப்பொழுது சொல்லப்படும்.)
பூழி நாடு = பூழி <பூழை = மலைக் கணவாய்) நாடு. பாலைக்காட்டுக் கணவாய்க்கு (பாலைக்காடு, பூழைக் காடாய் இருந்திருக்கலாம்.) வடமேற்கே அமைந்த நாடு. மலபார் என்று 1950களுக்கு முன் அழைக்கப் பட்ட வட கேரளம். மங்களுருக்குச் சற்று தெற்கே இந்த நாடு முடியும். [பூழியர் என்று பாண்டியரை அழைத்தது சாம்பற் பொருளில், இனக்குழுவைக் - tribe - குறிக்கும் பெயராகும். அதை இந்தச் சேர நாட்டுப் பகுதியோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. சேர, சோழ, பாண்டியரின் இனக்குழுப் பெயர்க் காரணங்கள், அவர்கள் அடையாளங்கள் பற்றி வேறு ஒரு முறை எழுதுவேன்.]
பன்றி நாடு = கோடைக்கானலில் இருந்து பழனி வரும் வழியில் இருக்கும் பகுதி. பழனிக்கும் பின்னே உள்ள மலைப் பகுதி முழுதும் இதைச் சாரும்.
அருவா நாடு = இன்றைய வட, தென் ஆற்காடு மாவட்டங்கள் (அருவா நாடு என்பதே ஆற்காடு ஆயிற்று.)

அருவா வடதலை நாடு = இன்றைய ஆந்திரத்தில் உள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்கள், திருப்பதியையும் இதோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். (அருவம் ஆடு என்ற சொல்லே அரவமாடு என்று தெலுங்கில் தமிழரைக் குறித்தது. எல்லை மக்களை வைத்து முழு நாட்டினரையும் குறிப்பது மாந்தருக்கு உள்ள இயல்பு. பொதுவாகக் கேரளத்தார் தமிழரைப் பாண்டி என்று அழைப்பது போல ஆந்திரர் தமிழரை அரவமாடு என்று அழைப்பார்.)
சீத நாடு = இன்றைய நீலகிரி, முதுமலை, பந்திப்பூர், மைசூர் வரை. [தென்கன்னடத்தின் பல பகுதிகள் இந்த வெண்பா எழுந்த காலத்தில் தமிழ் பேசும் இடங்களாய்த்தான் இருந்தன.]
மலையமான் நாடு = திருக்கோவலூரை நடுவாந்திரமாகக் கொண்ட இன்றைய திருவண்ணாமலையும், அதை ஒட்டிய வேலூர் மாவட்டமும். இன்றையக் கர்நாடகக் கோலார் மாவட்டமும் மலையமான் நாட்டையே சார்ந்திருந்தது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களையும் இதனோடு சேர்க்கலாம்.
புனல் நாடு = இன்றைய திருவாரூர், நாகை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள்.

மேலே குட்டநாடு, குடநாடு, வேள் நாடு, பூழி நாடு ஆகியவற்றை ”செந்தமிழ்சேர் ஏதமில் நாடுகளில்” இருப்பதாகவே 14 ஆம் நூற்றாண்டுக் காண்டிகையுரை குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால், மலையாளம் என்ற மொழி 14 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறமே உருவாகியிருக்க வாய்ப்புண்டு.

இனி மேற்கு எனும் சொல்லைப் பார்ப்போம். இக்காலத்தில் "குணக்கு, குடக்கு" என்ற சொற்கள் பயனிலாது போக, கிழக்கு, மேற்கு என்ற சொற்களையே நாம் பெரிதும் பயிலுகிறோம். இற்றைத் தமிழ்நாட்டுப் பார்வையில், மேற்கே தொடர்ச்சி மலைகள் மேடாகவும், கிழக்கே நிலம் சரிந்து ஏற்படும் சமவெளி பள்ளமாகவும் தோற்றுவதால், மேல் / கீழ் என்னும் புவிக்கிறுவம் (geography) நமக்குச் சரியாகத் தோன்றுகிறது. (ஆனால் மலையாளத்தாருக்கு அப்படித் தோன்றுமோ? ......)

”மேற்கு” என்ற சொல்லின் ஆட்சியைச் சரியாகப் புரிந்து கொள்ள, பழம் மாந்தரின் பரவல் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. பழம் மாந்தன் ஆப்பிரிக்காக் கண்டத்தில் இருந்தே 70000 ஆண்டுகளுக்கு முன் நகர்ந்து, சோமாலியக் கடற்கரையில் வழியே சவுதி அரேபியத் தீவக்குறைக்குள் நுழைந்து (70000 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கடல் இல்லாததால், சவுதி அரேபியத் தீவக்குறையும் சோமாலியக் கடற்கரையும் நிலத்தால் இணைந்திருந்தன), அங்கிருந்தும் நகர்ந்து, துபாய்க்கு மேல் நீண்டுகிடக்கும் முனையில் இருந்து ஈரானின் பந்தர் அப்பாசு (Bandar Abbas) வரை வரிசையாய் அமையும் தீவுகளின் வழியாக ஏற்பட்ட நிலத்தொடர்பால் ஈரானுக்குள் நுழைந்து (70000 ஆண்டுகளுக்கு முன்னால், அரேபியக் குடாக் கடலும் இருந்ததில்லை), பின் அங்கிருந்து கடற்கரையை ஒட்டியே இந்தியத் துணைக் கண்டத்துள் நுழைந்து, பின் மேற்குக் கடற்கரை வழியாக தெற்கே குமரி நில நீட்சிக்கு வந்து, அங்கிருந்து கிழக்குக் கடற்கரையில் படர்ந்து முடிவில் தென்கிழக்கு ஆசியா, சுண்டா நிலம் (இது பற்றிக் கீழே பார்ப்போம்) வழியாக ஆசுத்திரேலியா வரை பழங்குடி மக்கள் போனதாக அண்மை அறிவியல் ஆய்வுகள் உறுதிப் படுத்தியிருக்கின்றன. ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழருக்கும் இடையே ஈனியல் (genetics) தொடர்பு இருந்ததையும் அண்மை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. [இவை போக, பல்வேறு ஆசுத்திரேலியப் பழங்குடிச் சொற்களும் தமிழ்ச் சொற்களோடு இணை காட்டுகின்றன.]

இச்செய்தியோடு, சென்னை பூண்டிக்கு அருகே அத்திரப்பாக்கத்தில் கிடைத்த இந்தியாவின் ஆகப் பழங்கற்காலச் (oldest paleolithic) சின்னங்களைப் பொருத்திப் பார்த்தால், பழம்மாந்தன் தமிழகக் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் நெடுங்காலம் வாழ்ந்திருக்க வாய்ப்புக்கள் மிகவுண்டு என்று புரிந்து கொள்கிறோம். [இக்கருதுகோள், தமிழ்நாட்டுப் புவிக்கிறுவத்தை (geography) அடையாளம் காட்டும் மேற்கு/கிழக்கு என்ற சொற்களின் மூலம் வலுப் பெறுகிறது.] அதே போல, அண்மையில் 2003-2005 இல் ஆதிச்ச நல்லூர் தாழிக்காட்டில் நடந்த ஆய்வுகளின் வழியாக இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து தொடர்ச்சியாய் 1200 ஆண்டுகள் ஆதிச்சநல்லூருக்கு அருகில் பெருங்கற்கால (megalithic) மாந்தர்கள் வாழ்ந்திருப்பதும் தெரிய வருகிறது. (இங்கு மூன்றடுக்கு அளவில் தாழிகள் புதைந்து கிடக்கின்றன. மேலிருந்து கீழாக மூன்றாவது அடுக்கில் உள்ள தாழிகளில் கிடைக்கும் பொருள்களின் அகவையை மதிப்பீடு செய்தால் இவை கி.மு.4000 அளவிற்குப் பழமை வாய்ந்தவை என்று தெரிகிறது.) அப்படிப் பார்த்தால், ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தோர் சிந்துவெளி மக்களின் சமகாலத்தவராகவோ, அல்லது அதற்கும் முற்பட்டவராகவோ கூடத் தோன்றுகிறார். பெருங்கற்காலம் என்ற சொல்லப்படும் இந்நாகரிகத்தின் கடைக்காலத்தில் இரும்புப் பயனும் தென்படுவதால், ”இரும்பு மாழை கி.மு. 1800 அளவிலேயே கூட இங்கு புழங்கியிருக்கலாம், இந்தியத் துணைக் கண்டத்தில் இரும்பின் பயன்பாடு முதன்முதலில் ஆதிச்சநல்லூரிலேயே எழுந்திருக்கலாம்” என்று இப்பொழுது தொல்லியலார் ஊகிக்கிறார். இதனால்,பழந்தமிழ் நாகரிகம் கிழக்குக் கடற்கரையில் தோன்றிப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் மேற்குக் கடற்கரைக்கும், தக்கணத்திற்கும் பரவியிருக்க வேண்டும் என்பதும், தமிழ் மொழி தென்கிழக்கே தோன்றிப் பின் துணைக்கண்டம் எங்கணும் பரவியிருக்கலாம் என்பதையும் இந்த ஆய்வுகளால் ஊகிக்கலாம். [சிந்துவெளி பற்றியே பேசிக்கொண்டிருக்கும் இந்திய வரலாற்றாளர் நடுவிலும், அறிவுய்திகள் (intelligentia) நடுவிலும், இன்னும்விரிவாக ஆதிச்சநல்லூர் செய்திகள் போய்ச் சேரவில்லை. அண்மையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், பெரியார் ஈ.வெ.இராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையும் சேர்ந்து 2009 மார்ச்சு.4-6 தேதிகளில் நடத்திய “தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்: ஆதிச்சநல்லூர்ச் சிறப்பும், எதிர்காலத் திட்டங்களும்” என்ற தலைப்பில் நடந்திய தேசியக் கருத்தரங்கம் இக்குறையை ஓரளவு சரிசெய்தது.]

----------------------------------
இனி மேற்கு என்ற சொல், மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் தாண்டி, மேற்குக் கடற்கரைக்குத் தமிழன் போனபிறகும் எப்படிப் புழங்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் அலசிப் பார்க்கலாம். இந்த அலசலுக்கு உதவியாகத் தச்சுப் பாளங்களைப் (tectonic plates) பற்றியும், பழம் பனிக்காலம், பெருங்கடல்களின் எழுச்சி, தமிழகத்திற் கிழக்குக் கடற்சீற்றம், கொஞ்சங் கொஞ்சமாய் இராமநாதபுரத்திற்கு வடக்கே மசூலிப்பட்டினம் வரை கிழக்குக்கரை நகரங்கள் பல்லாண்டுகளில் கடலுள் அழிந்தது (புகார், நீர்ப்பெயற்று, கடல்மல்லை), இராமநாதபுரத்திற்குத் தெற்கிலும், குமரியைச் சுற்றிவந்து கேரளக் கடற்கரையிலும், கடல் பின்வாங்கி மண்மேடிட்டு, பழையவை மறைய, புதிய துறைமுகங்கள் ஏற்பட்டது, (காட்டாக, கொற்கை -> காயல் -> தூத்துக்குடி, அதே போல முசிறி -> வெவ்வேறு இடங்கள் -> கொச்சி) ஆகிய புவியியல் நடப்புகளை இன்றைய அறிவியற் பார்வையிற் புரிந்து கொள்ள வேண்டும். மேலோட்டமாய்ப் பார்த்து, ”இந்த இடைவிலகல் தேவையா?” என்று சிலர் எண்ணக் கூடும். ஆனால் ”மேற்கைப்” புரிந்து கொள்ள இது தேவை என்றே நான் எண்ணுகிறேன்.

நாம் இருக்கும் புவிக்கோளம் ஒரு செவ்வைக் கோளம் (perfect sphere) அல்ல. அது ஒரு தட்டைக் கோளம். புவிக்கோள உருட்டச்சின் (axis of rotation) மேல் முனையிலும், கீழ்முனையிலும் சற்றே தட்டி அவைத்தது (flattened) போற் காட்சியளிக்கிறது. வேறு போன்மையிற் சொன்னால், புவிக்கோளம் கிச்சிலிப் பழம் (orange) போலக் காட்சியளிக்கிறது. இன்னொரு விதமாயும்  உருவகஞ் செய்யலாம். ஒரு நீள்வட்டத்தை (ellipse) எடுத்து, அதன் நுணவ அச்சிலேயே (minor axis) சுழல வைத்தால் கிடைக்கக் கூடிய கோளம் போல் நம் புவி தோற்றுகிறது. [இச்சுழற்சியை வலைத்தல் (revolving) என்று வடிவியல் (geometry) சொல்லும்.] அப்படி ஒரு வலைத்தலில் கிடைக்கும் திண்மம் (solid of revolution) போலத் தோற்றுகிறது நம் புவிக்கோளம். [இதன் அச்சு விட்டம் (polar diameter), நடுவ விட்டத்தைக் (equatorial diameter) காட்டிலும் குறைவாய் இருக்கும்.]

மேலே உள்ள வரிகளில் ”திண்மம்” என்று சொல்வதை “உரைகுறிகளுக்கு (quotation marks)” இடைப்பட்டதாய்ப் புரிந்து கொள்ளுவது நல்லது. ஏனென்றால், புவிக்கோளம் முற்று முழுதாய்த் திண்ணிக் கிடக்கும் திண்மமாய் இல்லை. ஊழியூழிக் காலங்களுக்கு முன், புவிக்கான மொதுகை (mass) சூரியனிலிருந்து பிரிந்துவந்த போது, பெருத்த பிசுக்குக் (highly viscous) குழம்பாகவே இருந்தது. பின், கொஞ்சங் கொஞ்சமாய் குழம்பு குளிர, தன்னை உருட்டிக்கொண்டு (self-rotation), சூரியனையும் வலைத்து வந்ததால் (to revolve around) கோளமாயிற்று, கூடவே, இரும்பால் ஆன திண்மக் கரு (solid core), கோளத்தின் கூர்ந்தம் (centre) சுற்றிச் செறிந்துகொள்ள, அதன்மேல் பல்வேறு மாழை அஃகுதைகளால் (metal oxides) ஆன விதப்பான, அதி வெம்மைக் குழம்பு சுழன்று நிற்க, அதற்கும் மேல் உறைந்து போன ஓடாய், புவியின் வெளிப் பாளமும் (outer sheath) ஏற்பட்டது. புவியின் பல்வேறு கோள் நடத்தைகளுக்கு “இரும்புத் திண்மக் கரு, அதைச் சுற்றி வெம்மும் அஃகுதைக் குழம்பு, அதற்கும் மேல் ஏற்பட்டுள்ள வெளிப்பாள ஓடு” என மூன்றுமே காரணம் ஆகின்றன.

குழம்பை மூடியிருக்கும் பாளமும் ஒரே ஓடாக அமையாமல், உடைந்த பாளங்கள் ஒன்றையொன்று ஒட்டிப் பொருந்தி, கூரை தைத்தது போல் அமைந்திருக்கிறது. (இப்படிப் பொருந்துவதையே தைத்தல்/ கட்டுதல் என்று புவியியலார் சொல்கிறார். மரங்களைத் தைக்கிறவர் தச்சர் என்கிறோம் அல்லவா?) காய்ந்த சருகுகள் ஒன்றோடு ஒன்று பொருந்தி மண்தரையை மூடுவது போலவும், தாமரை இலைகள் நெருங்கிப் பொருந்திக் குளநீரை மூடி மறைப்பது போலவும் இதை உருவகப் படுத்தலாம். அதனால் தான் தச்சுப் பாளங்கள் என அறிவியலார் சொல்கிறார். இத் தச்சுப் பாளங்களை இன்னோர் உருவகத்தின் வழியேயும் உணரலாம். ஒரு முட்டையின் ஓட்டை உடைத்தால் ஏற்படும் ஒட்டுச் சில்லுகள், எப்படி வெள்ளைக்கருவின் மேல் நகர்ந்து ஒரு சில்லு இன்னொன்றின் அடியில் போகுமோ, அதுபோல, இந்தப் புவிப்பாள விளிம்புகள் ஒன்றின்மேல் ஒன்று ஏறியும், ஒன்று மற்றொன்றின் அடியிற் சிக்கியும், அப்படி மேலிழைத்த (overlap) இடங்களில் அழுந்திப் போன பாளம் மீண்டும் சூடேறிக் குழம்போடு குழம்பாகிப் போவதுமாய் ஒரு புவிச் சமையல் நம் கோளத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது, [தச்சுப் பாளங்கள் (tectonic plates) என்ற கருத்து இப்பொழுது புரிகிறதா?]

புவிக் குழம்பின் மேலே திரைந்து கிடக்கும் பாளங்கள் நம் புவி ஏற்பட்டதில் இருந்து இடைவிடாது நகர்ந்து கொண்டேயுள்ளன. இன்றிருக்கும் பாளங்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்து குழம்பின்மேல் அதே இடத்தில் மிதந்திருக்கும் என்று சொல்ல முடியாது; மேலும் அவற்றின் வடிவமும், அமைப்பும் என்றுமே ஒன்று போல இருப்பதாகவும் சொல்ல முடியாது. முற்றிலும் குழம்பாய் இருந்த புவி, குளிர்ந்தபோது ஏற்பட்ட பாளத் துண்டுகளின் திட்கமும் (thickness) கூட ஒரே அளவாய் இருப்பதில்லை. அஃகுதைக் குழம்பின் மேல்மட்டத்தில் இருந்து கணக்குப் போட்டால், திட்கம் கூடிய இடங்கள் மலைகளாகவும், திட்கம் குறைந்த இடங்கள் பெரும் கடற்பள்ளங்களாயும் இருக்கின்றன.

சூரியனில் இருந்து பிரிந்த புவி குளிர்ந்த போது, இரும்புக் கரு, அஃகுதைக் குழம்பு, பாள மூடி ஆகியவை மட்டும் ஏற்படவில்லை. புவி சுற்றி நீராவியும், பல்வேறு வளிகளும் (gases) சுழன்றுவந்தன. கொஞ்சம் கொஞ்சமாய், அடாத காற்று, பெரும் மழை, இடி, மின்னல் எனப் புவியின் சூழமைவு (environment) தொடர்ந்து மாறிய நிலையில், குளிர்ச்சி கூடி, புவியைச் சுற்றிய நீராவி, வாகை மாற்றத்தால் (phase change) நீராகிப் பெரும் பாளப்பள்ளங்களை நிறைத்தது. அப்படிநிறைத்த நீர்த்தொகுதியை நாம் கடல்கள் என்கிறோம்.

மொத்தத்தில் புவிப்பாளங்களின் மேல் கடலும், நிலமும், மலைகளும், மரஞ், செடிகொடிகளும், விலங்குகளும், நாமுமென வாழ்கிறோம். இவ்வாழ்வும், பாளமும் வெம்மையான அஃகுதைக் குழம்பில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இனி, மேற்குத் திசையைப் புரிந்துகொள்ளத் தோதாய், மேற்குறிப்பிட்ட பாளத் துண்டுகளில் 3 ஐ மட்டும் பார்ப்போம். முதலில் பார்க்கப் போவது இந்தியப் பாளம் (Indian plate). இந்தியத் துணைக்கண்டம் எனப்படும் நிலம் வடகிழக்கில் இமைய மலைத்தொடருக்கும், வடமேற்கில் இந்துகுசு மலைத்தொடருக்கும் கீழாய் அமைந்துள்ளது. இந்தியத் துணைக்கண்டமும், இந்து மாக்கடலும் (வங்காள விரிகுடாவையும் சேர்த்தது; ஆசுத்திரேலியாக் கண்டத்தின் மேற்குக் கரை வரை உள்ள கடற் பகுதியும் இதன் பகுதிதான்.) உள்ள பாளம் இந்தியப் பாளம் எனப்படுகிறது.

அடுத்தது சுண்டாப் பாளம் எனப்படும் துண்டாகும். இன்றைக்குக் காணப் படும் இந்தொனேசியத் தீவுகள், மலேயாத் தீவக்குறை, சிங்கப்பூர்த் தீவு, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன் தீவுகள், கிழக்குத் திமோர், பாப்புவா நியூகினியா தீவு போன்றவற்றைச் சுற்றி அருகிருக்கும் கடல் ஒரு 40000 / 50000 ஆண்டுகளுக்கு முன்னால், நீர் வற்றிப் போய் ஒன்றோடு ஒன்று நிலத் தொடர்பு கொண்டு ஒரு பெருங்கண்டமாய் இருந்தது. அதைச் சுண்டா நிலம் என்று புவியியலார் சொல்வார். பனியூழி மாறிக் கொஞ்சம் கொஞ்சமாய் வெப்பம் கூடி வந்தபோது புவித் துருவங்களில் இருந்த பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் கிட்டத்தட்ட 100, 120 மீட்டர்கள் உயர்ந்த போது, இந்த சுண்டாக் கண்டத்தில் சிறிது சிறிதாய் நீர்மட்டம் உயர்ந்து, இன்றையத் தென் கிழக்கு ஆசியத் தீவுகளும், தீவக் குறைகளும் ஏற்பட்டன. இப்படிக் கடல்மட்டம் உயர்ந்துபோய் கடைசியாய் இற்றை நிலைக்கு வந்து நிற்கிறது. கிட்டத்தட்ட 8000 ஆண்டுகளுக்கு முன்வரை இந்த கடலுயர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்றே அறிவியலார் சொல்கிறார். [மாந்தரின் பழம் வரலாற்றில் இக் கடல் மட்ட உயர்வும், கடலுக்குள் சில நிலங்கள் மறைந்து போனதும் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.]

[இதே கடல்மட்ட உயர்வு தான் நம் பழந் தமிழரையும் பாதித்தது. நம் தமிழ் நிலத்தின் தெற்கேயும், தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையே (குறிப்பாக இப்பக்கம் கோடிக்கரை, அப்பக்கம் யாழ்ப்பாணத்தை ஒட்டிய தீவுகள் ஆகிய இரண்டையும் கணுக்கும் - to connect - ஆதிசேதுவுக்குத் தென்மேற்கிலும், அதேபோல இப்பக்கம் இராமேசுரம், அப்பக்கம் தலைமன்னார் ஆகிய இரண்டையும் கணுக்கும் சேதுவுக்கு வடகிழக்கிலுமாய் இருந்த நிலம் இக் கடல் மட்ட உயர்வில் அழிந்து போனது. [இந்நிலம் அழிந்து போனதால் தான் பாண்டியன் சோழனிடமிருந்து முத்தூர்க் கூற்றம் என்ற இடத்தைப் (இது கிட்டத்தட்ட இக்காலப் புதுக்கோட்டை மாவட்டத்தைக் குறிக்கும்) பறித்துக் கொண்டான்.] இப்பெருநிலம் போக, ஆதிசேதுவுக்கு வடக்கே இந்தியக் கிழக்குக் கடற்கரையை ஒட்டி மசூலிப்பட்டினம் வரை இருந்த கிழக்குக் கரையை ஒட்டிய கடல் நிலமும், சேதுவுக்குத் தெற்கே தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் கடற்கரையை ஒட்டியும், சுற்றி வளைத்துக்கொண்டு கேரளக் கடற்கரை கொல்லம் வரை இருந்த கடல் நிலமும் இக் கடல்மட்ட உயர்வில் அழிந்து போயின. (அழிந்த பகுதிகளுக்குப் பகரியாகக் குமரியின் மேற்கில் சேரனிடம் குண்டூர்க் கூற்றத்தைப் பாண்டியன் கைப்பற்றினான்.) இப்படி அழிந்து போன இடங்களில் குமரி முனைக்குத் தெற்காய் ஒரு பெருந் தீவு கூட இருந்துள்ளது. இப்படி அழிந்த நிலங்களைத் தான் பழம் பாண்டியப் பகுதிகள் என்கிறோம்.]

[அழிந்து போன சுண்டாக் கண்டத்தின் அகற்சியைப் பார்க்கும் போது இங்கே அழிந்து போன தமிழ்நிலத்தைக் கண்டம் என்பது இயலாது. இருந்தாலும் தனித்தமிழ் அன்பர் பலரும் உணர்ச்சிவயப் பட்டவராய்க் ”குமரிக்கண்டம்” என்றே சொல்லி வருகிறார். இன்றைய அறிவியற் புரிதலில் நம் கடலை ஒட்டி ”நிலம் அழிந்தது உண்மை; ஆனால் அது கண்டம் இல்லை; அது குமரி நில நீட்சி” என்றே அறுதியாய்ச் சொல்லமுடியும். அன்பர் அருள் கூர்ந்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். நம் சிலம்பும், கலித்தொகையும் கூட நிலம் அழிந்ததைத்தான் சொல்லுகின்றன. கண்டம் என்று அவை சொல்லவேயில்லை. கண்டம் என்ற புரிதல் பிற்காலத்தில் 19-20ஆம் நூற்றாண்டுகளில் கடலாய்வுகள் செய்யப்படாத நிலையில் ஏற்பட்ட கருத்துப் பிழையாகும். இன்றைக்குப் புவியியல், கடலியல் ஆகிய அறிவியல்களை ஆழப்படித்த யாரும் குமரிக்கண்டம் என்று சொல்ல மாட்டார். குமரிநில நீட்சியின் அழிவு பற்றி பின்னொருநாள் விவரமாய் எழுதுவேன். இப்பொழுது கட்டுரையின் உட்பொருளுக்கு மீண்டு வருவோம்.]

இந்தியப் பாளம், சுண்டாப் பாளம் போக, பர்மா நாடு இருக்கும் மூன்றாவது பாளத்தை பர்மாத் துணைப் பாளம் என்று புவியியலார் சொல்வார். இந்தியப் பாளம், சுண்டாப் பாளம், பர்மாத் துணைப்பாளம் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்தியப் பாளமும், சுண்டாப் பாளமும் முட்டுவது சமுத்திரத் தீவின் (இதைத்தான் சுமத்ராத் தீவு என்று இக் காலத்தில் சொல்கிறோம்.) மேற்குக் கடற்கரையிலும், இந்தியப் பாளமும் பர்மாத் துணைப்பாளமும் மோதுவது அந்தமான் நக்கவரத் தீவுகளிலும் நடக்கின்றன. இம் 3 பாளங்களும் முட்டும் முச்சந்தியாய் சமுத்திரத்தீவின் வடமுனையில் அஃகய முனை (அட்சய முனை) உள்ளது. இது தவிர, இந்தியப் பாள விளிம்பு கொஞ்சம் கொஞ்சமாய் பர்மாத் துணைப்பாளம், சுண்டாப் பாளம் ஆகியவற்றின் விளிம்புகளுக்கு அடியில் போய்க் கொண்டுள்ளது. இதன் விளைவாய் ஏற்படும் பாளச் சாய்வால், (இது ஒரு துலை சாய்வதை - tilting of a balance - ஒக்கும். துலைச் சாய்வை வாரடை என்ற சொல்லால் நம் அகரமுதலிகள் பதிவுசெய்யும். இங்கே ஏற்பட்டிருப்பது ஒரு பாள வாரடை.) இராமநாதபுரத்திற்கு மேலுள்ள தமிழகக் கிழக்குக் கடற்கரைத் துறை முகங்கள் கடலுக்குள் மூழ்கி மறைவதும், அதே பொழுது கொற்கை, காயல், முசிறி போன்ற துறைமுகங்கள் மேடிட்டு மறைவதும் நடந்துள்ளன. ”பரசு ராமன் கடலை நோக்கி அம்பு போட்டு, சேரல நிலத்தைக் கடலிலிருந்து வெளிக் கொணர்ந்தார்” என்ற நம்பூதிகள் தொன்மமும், இப்புவியியல் உண்மையை ஒட்டியதாகவே தென்படுகிறது. கிட்டத்தட்ட இராமநாதபுரம் அழகன் குளத்தில் இருந்து கன்னடத்து மங்களூர் வரை ஒரு நேர்கோடு போட்டு அக்கோட்டிற்கு வடகிழக்கில் உள்ள நிலப்பகுதி கீழ்நோக்கிச் சாயவும், அக்கோட்டிற்குத் தென்மேற்கில் உள்ள நிலம் கடலிலிருந்து வெளிவருவதாகவும் இவ் வாரடை நடந்துள்ளது. மறுவழக்கிற் சொன்னால், அக்கோட்டிற்கு இடதுபக்கம் உள்ள துறைமுகங்கள் மண்மேடிட்டும். கோட்டிற்கு வலதுபக்கம் உள்ள கிழக்குத் துறைமுகங்கள் கொஞ்சங் கொஞ்சமாய்க் கடலுள் மூழ்கியும் போயிருக்கின்றன.

மொத்தத்தில், பழந்தமிழர் குமுகாயத்தைப் புரிந்து கொள்ள, நாம் இரண்டு புவியியற் செய்திகளை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒன்று 8000 ஆண்டுகளுக்கும் முன் ஏற்பட்ட கடல் உயர்வு அல்லது கடல்கோள். [கடல் கோள் உண்மைதான். அதைச் சிலர் மறுத்துக்கொண்டு இருப்பது அறியாமை என்பதாய் விட்டுவிடுவோம்.] இரண்டாவது, இந்தியப்பாளம் இன்றுங் கூடக் கிழக்குக் கடற்கரையில் மூழ்குவதும், மேற்குக் கடற்கரையில் நிலம் மேடிட்டு வெளிப்படுவதும் ஆகும்.

மூன்றாவது புவியியல் நிகழ்வு பற்றியும் இங்கு சொல்லவேண்டும். ஏற்கனவே சொன்னது போல் பாள விளிம்புகள் ஒன்றின்கீழ் ஒன்று போகும் போது, மீள அஃகுதைக் குழம்பில் சிக்கி உருகுவதைச் சொல்லியிருந்தேன் அல்லவா? இவ்வுருகல் நடக்கும்போது, புவியதிர்ச்சிகளும், பெருவெடிப்புகளும் அவ்வப்போது ஏற்படுவது இயற்கை. இவ்வெடிப்புக்கள், வரலாற்றுக் காலத்திலும், வரலாற்றிற்கு முந்திய காலத்திலும், பலமுறை அந்தமான் நக்கவரத்திலும், இந்தொனேசியா சமுத்திரத் தீவின் மேற்குக் கரையிலும், நடந்துள்ளன. [தமிழரின் மனையடி சாற்றத்தில் தென்கிழக்கு மூலை அழனி (=அக்னி) மூலை என்று சொல்வது கூட இந்தியத் துணைக்கண்டத்திற்குத் தென்கிழக்கில் பெருவெடிப்புகள் ஏற்படும் சமுத்திரத்தீவின் இருப்பையே குறிக்கிறது.] அந்த வெடிப்புகளின் போது, நெருப்புக் குழம்பும், புகையும், நச்சுவளியும், கணக்கற்ற திண்மத் துகள்களும் (solid particles) புவியின் அடியில் இருந்து குறுகிய நேரத்தில், காற்று மண்டலத்திற்குப் பீச்சப் பட்டு அகண்ட நிலப்பரப்பின் மேல் சூழமைவு மாசு (environmental pollution) ஏற்படுகிறது. பெருவெடிப்பின் செறிவைப் (strength, concentration) பொறுத்து இம் மாசுச் சூழல் பல நாட்கள், பல மாதங்கள், ஏன் ஓராண்டுக்கும் மேலாகக் கூட இருந்துள்ளது. இதன்பலனாய் பெரும் நிலப்பரப்பு எங்கும் துகள் மயமாய் சூரிய ஒளியையே காற்றுமண்டலத்தின் உள்ளே வரவிடாது தடுத்து, வானம் கருத்து, புவியின் வெம்மையே ஓரிரு பாகைகள் குறைந்த நிகழ்வுகளும் முன்பு நடந்துள்ளன; இனிமேலும் எதிர்காலத்தில் நடக்கலாம். இதையெலாம் இன்றையச் சூழல் அறிவியலார் (environmental scientists) கண்டுபிடித்து வருகிறார். மொத்தத்தில் இச் சூழமைவு மாசு, புவியின் வெதணத்தையே (climate) அடியோடு மாற்றிய நிகழ்வுகளும் உண்டு. அதனால் ஏற்பட்ட தமிழக வரலாற்று மாற்றங்களை நாம் இன்னும் ஆய்ந்து அறிந்தோமில்லை.

அடுத்து இந்தப் பெருவெடிப்புக்கள் கடலுக்கு அடியில் நடந்தால், ஆழிப் பேரலைகள் (tsunami) ஏற்பட்டு நிலத்தை அழிப்பதும் கூட நடந்திருக்கிறது. நாம் எல்லோரும் 2004 திசம்பரில் நடந்த ஆழிப்பேரலையை அறிவோம் அல்லவா? அதற்கு முன்னால் 1833 ஆகசுட்டிலும் இது போன்ற ஆழிப்பேரலை நம் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது என்று வரலாற்றில் பதிந்திருக்கிறார். 2004 ஆழிப்பேரலையில், கடல், மணலை வாரிக் கொண்ட போது வெளிப்பட்ட தடயங்களைத் தோண்டிப்பார்த்த இந்தியத் தொல்லியலார், மாமல்லபுரம் புலிக்குகைக்கு அருகில் சங்ககால முருகன் கோயிலையும், அதன் மேலிருந்த பல்லவர் காலக் கோயிலையும் கண்டுபிடித்திருக்கிறார். அவ் இடிபாடுகளும் ஆழிப்பேரலைகளால் அழிந்து போயிருக்கலாம் என்றே இப்பொழுது தொல்லியலார் சொல்கிறார். இதுபோன்ற ஆழிப்பேரலைகள் பலமுறை தமிழநாட்டைத் தாக்கியிருக்கலாம் போலும். [நம் பார்வைகள் மாற வேண்டும். ஆய்வுகள் கூட வேண்டும். அவற்றைச் செய்வதற்கு அரசும் முன்வரவேண்டும்.] இதுதவிர, 1964ல் நடந்த பெரும்புயலால், கடலெழுச்சி ஏற்பட்டு தனுட்கோடி அழிந்ததும், பழங்காலக் கடல் எழுச்சி இயலுமைகளை உணர்த்துகின்றது. [1964 தனுட்கோடி அழிவைத் தமிழ்நாட்டிற் பலரும் மறந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.] இப்பொழுது கூடக் குமரியில் கடல் அடிக்கடி பின்வாங்குவதும், மீண்டு வருவதுமாய் நடக்கிறது.

எனவே மேற்கே நிலம் உயர்வதும், கிழக்கே நிலம் கடலுள் போவதும் தமிழ் நிலத்தில் தொடர்ச்சியாய் நடக்கும் புவியியற் போக்குகளே! அதோடு, மேலும், கீழும் என்ற சொற்கள் மேற்கையும் கிழக்கையும் குறித்தது பட்டறிவால் அறிந்த நுண்ணறிவுத் தொகுப்பு என்று புரிகிறதா?

-------------------------------------

ஆனால் இன்றைய மலையாளத்தில், மேற்கை மேற்கென்று பயிலாமல், சூரியன் மறையும் திசை என்ற பொருளில் “படிஞாயிறு” என்றே பெரிதும் பயில்கிறார்களே, அது எப்படி? இதன் புரிதலும் புவிக்கிறுவத்தில் (geography) தான் இருக்கிறது. கேரளப் பார்வையில் தொடர்ச்சி மலைகள் மாநிலத்தின் கிழக்கெல்லையில் அல்லவா இருக்கின்றன? விளக்கமாகச் சொன்னால், மேல்/கீழ் என்னும் இணையை மேற்கு/கிழக்கிற்கு இணையாகக் கொள்வது இன்றையத் தமிழர் பார்வையில் சரியாக இருந்தாலும், சேரலத்தார் பார்வையில் அது சரியில்லை. அதே பொழுது, சேரலரும் பழந்தமிழரில் ஒரு பகுதியினர் என்றால், மேற்கு எனும் சொல்லை அறிவியல் வரிதியாய் எப்படிப் புரிந்து கொள்ளுவது?

[”படிஞாயிறு” என்ற திசைப்பெயரின் மரபைப் “பச்சிமம்” என்னும் அடுத்த சொல்லின் விளக்கத்தில் பார்ப்போம்.]

குடநாடு என்பது இன்றைக்கும் கேரள மாநிலத்தின் ஒருபகுதியாய், மேற்குப் பகுதியைக் குறிக்கிறது. [குடநாடு என்ற சொல்லாட்சி அதன் முதற்பொருளை இன்றையக் கேரளத்தில் உணர்த்தவில்லை தான். இன்றையக் குடநாடு மேட்டில் இல்லாமல் பள்ளத்தில் அல்லவா இருக்கிறது?] அதே போல, குடக்கோ என்ற சொல்லும் சங்க இலக்கியத்தில் மேற்கே இருந்த சேர அரசனைக் குறிக்கிறது. [பாண்டியரைப் போலவே, சேர அரசினரின் பல்வேறு கிளைகள் (குறைந்தது இரண்டு கிளைகளாவது) சமகாலங்களில் வெவ்வேறு இடங்களில் ஆட்சி செய்துள்ளார். காட்டாக உதியன்வழி மரபினரும், இரும் பொறைவழி மரபினரும் சமகாலத்துப் பங்காளியரே. இருவரின் தலை நகர்களும் வஞ்சி எனப் பட்டுள்ளன. அதிகமான் கொடி வழியாரும் கூடச் சேரர் மரபைச் சேர்ந்தவரே. இது போக மாந்தரம் என்ற ஊரில் இருந்தும் இரும்பொறையினர் ஆண்டிருக்கிறார். நம்முடைய போகூழ் (misfortune), சேரர் வரலாற்றை விரிவாக ஆய்ந்தவர் இன்றுங் கூடக் கிடையாது.]

இரண்டு வஞ்சிகளில் ஒன்று காவிரியின் துணையாறான ஆன்பொருநை ஆற்றின் (ஆன்பொருநை >ஆம்ப்ருநை>ஆம்ப்ருதை>ஆம்ப்ராவதி> அமராவதி ஆற்றின்) கரையிலுள்ள இன்றையத் தமிழகக் கரூர். மற்றொன்று கடலுக்கு அருகில் கேரளப் பெரியாற்றுக் கரையிலிருந்த ஊர். பெரியாற்றுக் கரையூர், மற்றும் அதற்கு வெகு அருகில் அமைந்த துறைமுக நகரான முசிறி ஆகியவற்றின் சரியான அடையாளம் இன்னும் காணப்படாது இருக்கிறது. காவிரி புகும் பட்டினத்தில் (=காவிரிப் பூம் பட்டினம்; அது ஏதோ பூக்கள் நிறைந்த பட்டினம் என்று புரிந்து கொள்ளக் கூடாது. பூக்கள், தோட்டம் இருந்திருக்கும். ஆனால் அது முகன்மையில்லை. காவிரி கடலிற் புகும் பட்டினம்; இது முகன்மை.) இருந்த துறைமுகம் கடல்முகத்தில் அல்லாமல் (கடல்முகத்தைச் சங்குமுகம் என்று சொல்வார். செட்டிநாட்டுத் தாலாட்டில் காவிரிப் பூம்பட்டினச் சங்குமுகம் பற்றிய குறிப்பு வரும்.) ஆற்றுமுகத்திலே இருந்தது போலவே, மேற்கு வஞ்சிக்குச் சற்று அருகிலே ஆற்றுமுகத்தில் தான் முசிறித் துறைமுகம் இருந்ததாக யவனக் குறிப்புகள் சொல்கின்றன.

அதாவது கடலிலிருந்து ஆற்றுள்நுழைந்தால் முதலில்வருவது சற்று தொலைவிலுள்ள முசிறி; அதிலிருந்து இன்னும் கிழக்கே ஆற்றுவழி வந்தால், அதிகத் தொலைவில் உள்ள ஊர் வஞ்சியாகும். சேரர் வஞ்சியை இக்காலக் கொடுங்கோளூர் (திருச்சூருக்கு 35 கி.மீ. தெற்கே வந்தால் இருக்கும் ஊர். இதைக் கிராங்கனூர் என்று வெள்ளைக்காரர் சொன்னார்.) என்றும் மகோதயபுரம் (எனும் திருவஞ்சைக் குளம்) என்றும் சொல்லுவாருண்டு. ஆனால் உறுதி பட யாராலும் சொல்லமுடியவில்லை. உண்மையிலேயே பழைய மேற்கு வஞ்சியின் சரியான இருப்பிடம் ஏதென்று யாருக்கும் தெரியாமல் உள்ளது. கேரளத்தில் நடந்திருக்கும் தொல்லாய்வுகள் மிகவும் குறைவு. [அடியில் நீர் எப்பொழுதும் ஊறிக்கொண்டிருக்கும் பெரியாற்றுக் கரையில் ஆய்வு நடத்துவது பெருஞ் சரவல் தான்.]

[இந்த அடையாளம் காணுவதற்கு ஏந்தாக, ஓர் உரோமானியக் குறிப்பு "சேர நாட்டின் இன்னொரு துறைமுகமான தொண்டியில் (Tyndis; பாண்டிய நாட்டிலும் ஒரு தொண்டி உண்டு.) இருந்து 480 ஸ்டேடியா கடற்கரையை ஒட்டி வந்தபின், ஆற்றில் 20 ஸ்டேடியா பயணம் செய்து முசிறியை அடைய வேண்டும்" என்றும் சொல்லும். ஒரு கிரேக்க ஸ்டேடியா என்பது 607.5 அடி, அதாவது 0.1851572 கி.மீ, ஆகும். எனவே கடல் புகும் இடத்தில் இருந்து பெரியாற்றுக்குள் 3.703 கி.மீ பயணம் செய்தால், முசிறியை அடையலாமாம். வஞ்சி இதற்கும் கிழக்கில் ஆற்றின் கரையில் இருந்திருக்க வேண்டும். இந்தத் தொலைவுகளை அப்படியே நாம் இந்தக் காலத்திற் கணக்கிட்டுப் பின்பற்ற முடியாது; ஏனென்றால் முன்னே சொன்னது போல், மேற்குக் கடற்கரையில் கடல் பின் நகர்ந்து பழைய துறைமுகங்கள் மண் மேடிட்டிருக்கின்றன. தவிரப் பெரியாற்றின் போக்கும் வரலாற்றிற் பலமுறை மாறியிருக்கிறது.(மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொச்சியிலிருந்து கிழக்கு வந்தால் 40 கி.மீ. தொலைவில் பெரியாற்றின்மேல் இன்றிருக்கும் திருக்கருவூர் (=திருக்கரியூர்) என்ற ஊரே பழைய வஞ்சி என்பாரும் உண்டு. இது கொடுங்களூருக்கு மாறான முன்னீடு (proposal)என்று கொள்ள வேண்டும்.)]

பெரியாற்றின் பழைய பெயராக "சுள்ளியம் பேர்யாறு" எனும் பெயர் அகம் 149ல் எருக்காட்டூர் தாயங் கண்ணனாரால் பதிவு செய்யப் பட்டிருக்கும். அந்த ஆற்றிற்கு இன்னொரு பெயராக கேரளத்தில் ஆல்வாய்க்கு (அகல்வாய்> ஆல்வாய்; பெரியாறு அகண்டு கிடக்கும் இடத்தில் உள்ள வாய் அகல்வாய். கேரளத்திலும் பல ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பைப் பழந்தமிழ் விளக்கத்தால் தான் காண முடிகிறது. அதே போல இன்றைய மலையாள அறிவும், ஓரளவு கன்னட அறிவும் தமிழாய்விற்கு மிகவும் முகன்மையானது.) அருகில் இந்த ஆறு “சூர்ணி ஆறு” என்றும் சொல்லப் படுவதுண்டு. சூர்ணி என்னும் பெயர் குடிலரின் அர்த்த சாஸ்திரத்தில்,

தாம்ரபர்ணிகம், பாண்ட்ய கவாடம், பாஷிக்யம்
காலேயம், சௌர்ணேயம், ப்ராஹேந்த்ரம், கார்தமிகம்
ஸ்ரோதஸீயம், ஹரதீயம், ஹைமவதம் ச மௌத்திகம்

- அர்த்த சாஸ்திரம், 2-11.1

என்று முத்துக்களைக் குறிப்பிடும் வரிகளில் உறுதிப்படும். முத்துக்களில் ஒருவகை சௌர்ணேயம் என்பதாகும். இது, சூர்ணி ஆறு கடல் சேரும் இடத்தில் பிறந்த முத்தைக் குறிக்கிறது. சூர்ணியும் சுள்ளியம் பேராறும் சொற்பிறப்பியலின் படி ஒன்றையே குறிக்கின்றன. சுண்ணாம்புத் தன்மையும் களரிச் செறிவும் (alkaline concentration) கொண்ட ஆற்றின் கழி முகத்தில் (backwaters) முத்துப் பிறப்பது வியப்பொன்றும் இல்லை. சுள்ளியம் பேராறு என்பது சுண்ணாம்புத் தன்மை கொண்ட ஓர் ஆற்றைக் குறிக்கிறது. கிட்டத்தட்ட 225 கி.மீ. ஓடிவரும் பெரியாறு அக்காலத்தில் தன் கழிமுகத்திற் களர் செறிவை அடைந்திருந்தது போலும். [களர்மை (alkalinity) பெற்ற ஆறு இயல்பாக, வெள் நுரை பொங்கி ஓடிவந்திருக்க வேண்டும். எனவே சுள்ளியம் பேரியாறு என்ற பெயர் அதற்கு ஏற்பட்டதில் வியப்பில்லை.} சுள்+நம் = சுண்ணம்>சூர்ணம்>சூர்ணி என்று தமிழ்,வட மொழித் திரிவில் ஆனது வியப்பில்லை. ஆகத் தமிழனின் வரலாறு, அர்த்த சாத்திரத்தில் உறுதி செய்யப் படுகிறது. [அர்த்த சாத்திரச் செய்திகளைச் சங்க இலக்கியச் செய்திகளோடு பொருத்தி யாரேனும் ஆய்வு செய்யக் கூடாதோ?]

அண்மையில் தான், கே.பி.ஷாஜன், வி.செல்வக்குமார் ஆகிய தொல்லியலார்களால், முசிறிப்பட்டணம் என்ற கடல் நகரம் கொடுங்கோளூர் அல்ல என்றும், கடலில் இருந்து சற்று உள்தள்ளி இருக்கும் "பட்டணம்" என்ற நகரமே அது என்றும் அடையாளம் காணப் பட்டிருக்கிறது. இன்னும் மற்ற அரசுத் தொல்லியலார் அதை உறுதி செய்யவில்லை.

முடிவாகக் குடக்கு, மேற்கு என்ற சொற்களைக் கேரளத்தார் தம்முடைய தமிழ்ப்பழமையின் எச்சமாகவே பயன்படுத்துகிறார்கள் என்றே கொள்ள வேண்டும். அவை, இன்றையக் கேரளப் புவிக்கிறுவத்திற்கு ஒத்து வராது என்பதை உணர வேண்டும்.

குடக்கு, மேற்கு என்ற தமிழ்ச் சொற்களைப் பார்த்த நாம் பச்சிமம் என்ற தமிழ்த்திரிவைப் பார்ப்போம். முன்சொன்னது போல், பெரும்பாலும் சேரல நாட்டார் கிழக்கில் இருந்து கணவாய்கள் வழியாகவும், (பாலைக்காட்டுக் காணவாய், செங்கோட்டைக்கு அருகில் உள்ள கணவாய்) தெற்கில் இருந்து குமரிமாவட்டத்தின் தொடர்ச்சியாகவுமே சேரல நிலத்தை நிறைத்திருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டியரில், தென்னவரையே பழமையானவர் என்று சொல்லும் தமிழ் மரபும் இதை உறுதி செய்கிறது. சேர இனக்குழு பாண்டிய இனக்குழுவில் இருந்து கிளைத்திருக்கலாம். அப்படிச் சேரல நிலத்துள் போனவருக்கு மேற்கு என்ற சொல்லின் முரண்பாடு உறுத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும். இம்முரணைச் சரிசெய்யும் விதமாய் “படிஞாயிறு” என்றசொல் எழுந்திருக்கலாம். படுதல் = விழுதல்; இது செயப் பாட்டு வினையில் பட்டுதலாகும். எத்தனை வினைச்சொற்களைப் ”பட்டுதல்” துணைவினையால் செயப்பாட்டு வினைகளாய் ஆக்கிக் கொள்கிறோம்?

மேற்கில் சூரியன் படுகிறது / விழுகிறது. ஞாயிறு படிகின்ற திசை படிஞாயிறு. இதேபோலச் சூரியன் பட்டித்த திசை பட்டிமம் என்றாயிற்று. பட்டிமம்>பத்திமம்>பச்சிமம் என்றாவது மிக எளிதான பேச்சுத் தமிழ்த் திரிவு. டகரம் தகரமாவதும், தகரம் சகரமாவதும் பேச்சுத் தமிழில் பல இடங்களில் நடந்துள்ளன.

அடுத்தது வாருணம். ஆழம் பாராதிருந்தால், இது தடுமாற வைக்கும். இதை வரணத் திசை என்றே முந்திய நிகண்டான திவாகரம் குறிப்பிடுகிறது. தென்பாண்டி நாட்டுப்புறத்தில் வரணமேபெருவழக்காகும். வாருணம் அல்ல. [கடலைக் குறிக்கும் வாரணம் வேறு வகைப்பட்டது. அதைக் கொண்டுவந்து குழப்பக்கூடாது.] ரகரத்தை ருகரமாக மாற்றி ஒருசிலர் வாருணம் என்று பலுக்குவது வடமொழிப் பாதிப்பு ஆகும். சூரியன் மேற்கில் மறையும் போது ஏற்படும் ஒளி முறிவில் (refraction) வெள்ளொளி சிதறி, மஞ்சள், பொன், செந்நிறம் எனப் பல்வேறு நிறப் பூச்சுக்களை வானிற் தெறித்துக் கோலங் காட்டுவதால் மேற்குத் திசை வரணத் திசை ஆனது. வரணம், வள் எனும் வேரடியில் பிறந்த சொல். [வள்>வர்>வரி]; வரித்தல் = கோலம் போடுவது, வரைவது என்ற பொருள்கொள்ளும்.  வண்ணமும் வரணமும் ஒருபொருட் சொற்கள்; ஆயின் பிறப்பில் வெவ்வேறாகப் பிறந்தவை. அணம் என்னும் ஈற்றைத் துணையாகக் கொண்டு வர்+அணம் = வரணம் பிறந்ததாகவே பாவாணர் கூறுவார். அதே பொழுது வருணம் / வரணம் / வர்ணக் குழப்பம் நெடுநாள் தமிழிலக்கியத்தில் உண்டு.

முடிவில் ப்ரத்யுக்கை. இதுவும் சூரியன் மேற்கில் படுக்கும் செயலை உணர்த்திப் பின் வடமொழி உருவம் பெற்று நம்மை மருட்டுகிறது. படுக்கை> படுத்கை>பதுத்கை>ப்ரத்யுக்கை (ரகரமும், யகரமும் வடமொழிப் பலுக்கில் நுழைவது பற்றி முன்னமே சொல்லியிருக்கிறேன்.)

அடுத்த பகுதியில் வடக்குத் திசை குறிக்கும் சொற்களைக் காணலாம்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

குமரன் (Kumaran) said...

குட முனி = மேற்கின் முனிவர்; அவர் குடத்தில் பிறந்தவர் என்று பிற்காலத்தில் ஆனார் போலும். :-)

கோடை, கொண்டல், வாடை, தென்றல் - சொற்பிறப்புகள் புரிந்தன. கொண்டல் பின் மேகத்திற்கும் பெயராகி, தெலுங்கில் மலைக்கும் ஆனதே. அது எப்படி?

இராம.கி said...

வாங்க குமரன்,

தமிழில் பல பொருள் - ஒரு சொல் என்ற நிலையும் ஒரு சொல் - பல பொருள் என்ற நிலையும் மிகுந்து கிடக்கிறது. இது எல்லைப்புற மக்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது மிகுதி. இப்படி ஒலியைக் கேட்டுத் தனக்குத் தோன்றிய வகையில் எழுத்தைப் போட்டுப் பின் மொழி பெயர்த்தால் இன்னுங் குழப்பம். மரைக்காட்டை மறைக்காடு என்று புரிந்து கொண்டு வேதாரண்யம் என்று சிலர் மொழிபெயர்க்கவில்லையா? அதனால் மரை-மான்கள் இருந்த காடு வேதக் காடாக ஆன கதை சோகக் கதையில்லையா? அது போல, மேற்கின் முனிவர் குடத்தில் பிறந்தவர் ஆயிருக்கிறார். அகத்தியர் பற்றிய தொன்மங்களைத் தொகுத்து, அதில் அறிவுக்குப் பொருந்தியதைப் பட்டியலிட்டு யாராவது எழுதினால் நன்றாக இருக்கும்.

கொண்டல் = கிழக்கிலிருந்து வரும் ஈரக் காற்று என்பதும் கொண்டல் = மேகம் என்பதும் வெவ்வேறானவை.

தெலுங்கில் கொண்ட = மலை அது கொண்டல் அல்ல) என்பது நம்முடைய குன்றை ஒட்டியது தான். [’ஏடு கொண்டல வாடா’ என்பது ஏழு குன்றுகளின் ஆளைச் சுட்டுகிறது. அந்த லகரம் தமிழில் பன்மைக்கு வரும் கள் விகுதியைக் குறிக்கிறது.]

மலையாளத்தில் ’குன்னு’ என்றும் கன்னடம், தெலுங்கு, குறவம் ஆகிய மொழிகளில் ’கொண்ட’ என்றும், குடகு மொழியில் ’குந்தி’ என்றும், பர்சி மொழியில் ’கொந்தி’ என்றும், கோண்டியில் ’குறு’ என்றும் சொல்லப்படும்.

செந்தமிழில் ஒன்று என்பது தமிழகப் பேச்சுவழக்கில் ஒண்ணு என்றும், மலையாளத்தில் ஒன்னு என்றும், கன்னடத்தில் ஒந்து என்றும் ஈழத்துப் பேச்சுவழக்கில் ஒண்டு என்றும் சொல்லப் படுகிறதல்லவா? [ஒன்னா, ஒண்ணா பற்றி முன் ஒரு இடுகை இட்டிருந்தேன். நினைவிருக்கிறதா?]

ந்நு, ந்து, ன்னு, ன்று, ண்ணு, ண்டு ஆகியவை தமிழிய மொழிகளில் ஒன்றிற்கொன்று மாற்றாகப் புழங்கும் மெய்ம் மயக்கங்கள். இந்த மெய்ம்மயக்கங்கள் வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபடும்.

குற்றியலுகரம் (’று’வில் வரும் உகரம்) தமிழ், மலையாளங்களில் உண்டு. கன்னடம், தெலுங்கில் சற்று குறைவு. கொண்டு என்பது கொண்ட என்று ஆனது குற்றியலுகரம் பலுக்கப் படாததால் ஏற்பட்ட மாற்றம்.

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி ஐயா.

சுமதுரா என்பது தான் சுமத்ரா என்றழைக்கப்படுகிறது என்று வேறொரு இடத்தில் படித்தேன். நீங்கள் சமுத்திரத் தீவு தான் சுமத்ராத் தீவு என்று சொல்லுகிறீர்கள். இரண்டுமே பொருந்துவது போல் தான் இருக்கின்றது.

மேரு மலை என்று இலக்கியங்கள் குறிப்பிடும் மலை எங்கே இருக்கின்றது? சுமேரு என்றொரு மலை ஜாவாவில் இருப்பதாக அறிகிறேன். அது தான் இலக்கியங்கள் குறிக்கும் மேரு மலையா? ஆனால் இலக்கியங்கள் மேரு மலை வடபகுதியில் இருப்பதாகச் சொல்கின்றனவே; அது குழப்பமாக இருக்கிறது.

Vijayakumar Subburaj said...

> குணக்கோடு வரும் ”தொடுகடல்”
> என்னும் சொல்லாட்சி கிழக்கே
> கரையைப் பொருதி கடல்
> ஏறிவந்து நிலம் கொண்ட
> குறிப்பை உணர்த்துகிறது.

அப்படியெனில், கடல்கொண்ட பகுதிகள் கிழக்கேதான் உள்ளனவா..?

வேந்தன் அரசு said...

இராமகி ஐயா

>>. கொண்டு என்பது கொண்ட என்று ஆனது குற்றியலுகரம் பலுக்கப் படாததால் ஏற்பட்ட மாற்றம்.

இது குன்று எனும் சொல்லின் திரிபு. தமிழ் றகரம் தெலுகில் டகரம் ஆகும். குன்று குன்ட என ஆகி டகரத்தின் முன் ணகரமே வருமென்பது இயல்பானதால் குண்ட ஆகி கொண்ட ஆகி இருக்கும் குடை கொடை ஆனது போல்.

ஒன்று ஒண்டு ஆவது உண்டன்றோ.