Wednesday, February 21, 2007

தனித் தமிழ் - 2

அடுத்து, திரு. தமிழன் தன் பின்னூட்டில்,
// சமசுகிருதம்தான் உலகமொழிக்கெல்லாம் தாய்பாசை என்று சொல்ல சமசுகிருதம் நன்கறிந்த அவர் அப்படியென்றால் தமிழ்தான் தந்தை மொழி என்று மறுமொழி அளித்ததும் திராவிட இயக்கங்களின் விசத்தினாலா?//
என்று வள்ளலார் பற்றி உரைத்ததற்கு எகத்தாள மறுமொழியாய்,

"இது இன்னொரு காமெடி. முதலில் இந்த இரு பெரியவர்களும் சமகாலத்தவர்களே அல்ல. பின்னர் எப்படி அவர்கள் பேசியிருக்க முடியும்? மேலும், வடலூர் வள்ளப் பெருமான் சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை வாய்ந்தவர், அந்த மொழிப் பிரயோகங்களைத் தன் பாடல்களில்ல் பெருதும் விரும்பியே பயன்படுத்தியுள்ளார். அவரது "திருவடிப் புகழ்ச்சி" என்ற நூலைப் படித்துப் பாரும். முதல் 10-15 பாடல்கள் *முழு* சம்ஸ்கிருதத்தில் உள்ளன. செந்தமிழ் போல செஞ்சம்ஸ்கிருதம்! "

என்று தருக்கம் காட்டுகிறார் திரு.ஜடாயு. எங்கே போய் முட்டிக் கொள்வது?

மறைந்த பெரியவர் எட்டாம் சந்திர சேகரேந்திர சரசுவதி மட்டுமே காஞ்சி சங்கராச்சாரியார் அல்ல. "அவர் காஞ்சி மடத்தின் 68 ஆவது சங்கராச்சாரியார்" என்று அந்த மடத்தின் வரலாறே சொல்லிக் கொள்கிறது. (காஞ்சி சங்கர மடத்தின் சங்கராச்சாரியார் எண்ணிக்கையைச் சிருங்கேரி மடம் ஒப்புக் கொள்ளாது; என்றாலும் அந்தச் சிக்கலுக்குள் போக வேண்டாம்.) அவருக்கு முன்னால் 7 சந்திர சேகரேந்திர சரசுவதிகள் இருந்திருக்கிறார்கள். வள்ளலார் காலத்தில் (மறைவு சனவரி 30, 1874; 51 அகவை வாழ்ந்திருக்கிறார்.) இருந்த சங்கராச்சாரியார்கள் இருவர்; ஒருவர் 65ஆம் சங்கராச்சாரியாரான ஆறாம் சந்திர சேகரேந்திர சரசுவதி. [இவர் காலம் வரை, சங்கர மடம் கும்பகோணத்தில் தான் இருந்தது; காஞ்சியில் இல்லை; அது 68வது சங்கராச்சாரியார் காலத்தில் தான் காஞ்சிக்கு வந்தது.] ஆறாம் சந்திர சேகரேந்திர சரசுவதி 1851 ல் மறைந்தார். அடுத்தவர் 66ஆம் சங்கராச்சாரியாரான சுதர்சன மகாதேவேந்திர சரசுவதி; இவர் 1891ல் இளையாற்றங்குடியில் மறைந்தவர்.

பெரும்பாலும் வள்ளலாருக்கும், சங்காராச்சாரியருக்கும் நடந்ததாகக் கூறப்படும் செய்தி ஆறாம் சந்திரசேகரருக்கும் வள்ளலாருக்கும் நடந்திருக்கவே வாய்ப்புண்டு. (பல மேற்கோள்களில் இந்தச் செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியையே மறுக்கவும், மறைக்கவும், திரு.ஜடாயு முற்படும் நிலையில், அவருக்குப் புரியச் சொல்ல வேண்டுமானால், வள்ளலாரின் வாழ்வு நிகழ்வுகளை நன்கு தெரிந்த ஒருவரே ஆய்வு செய்து விளக்க முடியும். அதற்குச் சரியானவன் நான் இல்லை. திரு. ஜடாயு போன்றவர்களுக்கு போகிற போக்கில் ஆதாரம் இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றைச் சொல்லுவதும் அதற்கு மாங்கு மாங்கென்று மற்றவர்கள் தேடி எதிர்க்கருத்துச் சொல்லுவதும் வாடிக்கையாகிப் போய்விட்டது. எப்பொழுதும் எளிதாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இவர்கள் இருப்பார்கள்; மற்றவர்கள் விடை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தத் திருகு தாளத்திற்கு முடிவில்லை.)

அடுத்துக் கலந்து செய்து கதைக்கப்பட்ட மொழியான சங்கதம் என்பது செம்மை செய்து கதைக்கப்பட்ட மொழியான செங்கதமாகவும் கொள்ளப்படும் என்பது இந்த உரையாட்டில் ஈடுபடும் எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் அதைச் செஞ்சங்கதம் என்ற பொருளில் செஞ்சமஸ்கிருதம் என்று திரு.ஜடாயு சொல்ல வருவது சிறுபிள்ளைத்தனம்; அல்லது மற்றவனை மாங்காய் மடையன் என்று கருதும் போக்கு. இது போன்ற நக்கல்களை மற்றவரும் செய்ய முடியும்.

செந்தமிழை யாரும் பரவலாய்ப் பேசுவதாய் எங்கணுமே சொல்லுவதில்லை. செந்தமிழ் என்பது தரப்படுத்தப் பட்ட தமிழ், அவ்வளவுதான். அவரவர் அவர்களின் வட்டாரப் பேச்சில் பேசுவதும், பொதுத் தொடர்பிற்கும், பெரும்பாலும் எழுத்திற்கும் செந்தமிழை ஓரளவு கடைப்பிடிப்பதும் தான் உலகியல் வழக்கம். அதே நிலையில் தான் செங்கதத்தை பாகத்தின் தரப்படுத்தப்பட்ட மொழிவகையாக எல்லோரும் புரிந்து கொள்ளுகிறார்கள். காளிதாசனும் அப்படித்தான் சங்கதத்தைப் படித்தோரின் மொழியாகத் தன் நாடகங்களில் பயன்படுத்துகிறான்.

"முதலில் ஒரு விஷயத்தை ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேச வந்தால் நல்லது. ஆமாம் அது என்ன "சமசுகிருதம்"? "ஸ்" பேரில் உமக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? படிப்பதற்கே நாராசமாக இருக்கிறது. இந்த ரேஞ்சில் போனால், அறிவியல், வர்த்தகம் உட்பட பல துறைகளிலும் புழங்கும் வார்த்தைகளைக் கண்றாவியாக எழுத வேண்யிருக்கும் (சூன், சூலை, ஆகசுடு). இந்தப் போலித் தமிழ் கோஷத்திலிருந்து முதலில் வெளியே வாரும். உம் போன்ற ஆட்கள் தான் தமிழுக்கு உண்மையான எதிரிகள்."

என்று மேலும் சொல்லுகிறார் திரு.ஜடாயு. இவர் "ஒரு விஷயத்தை ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேச வந்தாரோ?"

மொழிக்கும், எழுத்திற்கும் உள்ள வேறுபாட்டை திரு.ஜடாயு முதலில் விளங்கிக் கொள்ளட்டும். வடமொழி என்ற சொல் பாகதம், சங்கதம் என்ற இரண்டு வகைகளையும் குறிக்கும் சொல்லாகத் தான் சங்க இலக்கியங்களில் பயில்கிறது. அதே போல, இன்றையக் கல்வெட்டியல் முடிவுகளின் படி, தமிழகம், ஈழம், சிங்களம் ஆகிய பகுதிகளிலே தான் தமிழி/பெருமி (tamizi / brahmi) என்ற எழுத்து முதலில் புழங்கியது (கிட்டத் தட்ட கி.மு.600). [இந்த எழுத்துக்களின் தொடக்கமே இந்தப் பகுதிகளில் தானோ என்று இந்தக் காலத் தொல்லியலார்கள் பலரும் அய்யுறுகிறார்கள்.] பெருமி எழுத்து மோரியர் காலத்தில் வடபால் பரவியது. அசோகன் கல்வெட்டு தரப்படுத்திய செங்கத மொழியைப் பயன்படுத்தவே இல்லை. அது பாகத மொழியையே (குறிப்பாகப் பாலியும், அருத்த மாகதியும்) பயன்படுத்தியது. ஏனென்றால் தரப்படுத்தமே (பாணினியின் அஷ்டாத்யாயி) கி.மு. 400ல் அசோகருக்குச் சற்று முன்னால் தான் நடந்தது. (திரு.ஜடாயு போன்றவர்கள் வேத மொழியையும் சங்கதத்தையும் குழப்பிச் சில்லடிக்கும் வேலையை இனியும் நடத்திக் கொண்டிருக்க வேண்டாம். எங்களுக்கெல்லாம் காதுகுத்தி நெடுநாட்கள் ஆகிவிட்டன.)

இந்தப் பெருமி எழுத்து நாளடைவில் திரியத் தொடங்கி குத்தர்கள் காலத்தில் நகரி எழுத்தாக மாறியது. அதே பொழுது, தென்னகத் தமிழி எழுத்து இரண்டாய்த் திரிந்து ஒன்று வட்டெழுத்தாயும், இன்னொன்று பல்லவர் எழுத்தாயும் மாறியது. பல்லவர் எழுத்தைச் சோழர் ஆதரித்தனர். பாண்டியர் எழுத்தான வட்டெழுத்து சேரலத்திற்கும் போனது. சேரலத்திலும், காஞ்சியிலுமாய் பண்டிதரால் தமிழெழுத்தின் நீட்சியாய் உருவாக்கப் பட்ட எழுத்து கிரந்த எழுத்து. தமிழை எழுதுவதற்கு அல்லாமல், சங்கதம் என்ற மொழியை எழுதுவதற்காவே, கிரந்தம் என்னும் தமிழெழுத்து நீட்சி உருவாக்கப் பட்டது; பெருமை கொள்ளத் தக்க கிரந்த எழுத்து நம் தமிழனின் படைப்பே. வடமொழியில் பல முதல் நூல்களும், உரை நூல்களும் கிரந்த எழுத்திலேயே முதலில் எழுதப் பட்டன. "வடமொழி ஆக்கங்களில் பலவும் நம்மூரில் எழுதப் பட்டவையே". நம்மூரின் சிறப்புப் புரியாமல் பல பெருமானர்கள் இன்று நகரியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள். குறைந்தது கிரந்தத்தைப் பிடித்துத் தொங்கியிருந்தாலாவது, நல்லது முன்னால் நடந்திருக்கும்; நம் உரிமை நிலைத்திருக்கும். நாம் தான் தும்பை விட்டு வாலைப் பிடிப்பவர்கள் ஆயிற்றே? சண்டையெல்லாம் பக்கத்தில் இருக்கும் தமிழனிடம் போடுவதும், அடுத்துள்ள தமிழரல்லாதவரிடம் பாரதம், பாரதம் என்று குழைந்து மண்டியிட்டு பணி செய்வதும் தான் வழக்கமாயிற்றே? [இம்மென்றால் நாட்டுப்பற்று இல்லாதவன், துரோகி என்று சொல்லிவிடுவார்கள்.]

இந்திய நாடு விடுதலை ஆவதற்கு முன்னால், வடமொழிக்கெனப் புழங்கிய எழுத்துக்களில் (நகரி, சாரதா, கிரந்தம் என இன்னும் பல) கிரந்த எழுத்திலே தான் அதிக நூல்கள் இருந்தன. வேறு எங்கும் கிடைக்காத வேத நூல்களின் பல சுவடிகள், தெற்கே கிரந்த எழுத்தில் தான் கிடைத்தன; அதர்வண வேதமே சேரலத்தில் தான் கிடைத்தது. அப்படிப் பலவற்றையும் காப்பாற்றியது நம்மூரே. இத்தனையும் செய்ததற்கு, திரு.ஜடாயு போன்றவர்கள் திருப்பிக் கொடுக்கும் பரிசு என்ன? தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழி வடமொழி என்று சொல்லுவாராம்; ஆனாலும் இவர் தமிழை மதிக்கிறாராம். "போலித் தமிழ் கோஷத்திலிருந்து முதலில் வெளியே வாரும். உம் போன்ற ஆட்கள் தான் தமிழுக்கு உண்மையான எதிரிகள்" என்று அவர் வாக்கை அவருக்கே திருப்பித் தான் சொல்ல வேண்டும்.

வடமொழிக்கென உருவாக்கிய கிரந்த எழுத்துக்களை நுழைத்து தமிழ்மொழியை எழுதும் போக்கு, முட்டாள் தனமாக 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தான் எழுந்தது. கல்வியிற் சிறந்த கம்பன் கூட வடவெழுத்து ஒரீஇ தான் எழுதினான். "கிரந்த எழுத்தைக் கலந்து தமிழை எழுத வேண்டும்" என்று சொல்லுவது எப்படி என்றால் "உரோமன் எழுத்தில் இருந்து தோன்றிய கோத்திக் எழுத்துக்களையும், சிரில்லிக் எழுத்துக்களையும் உள்நுழைத்து ஆங்கிலம், பிரஞ்சு போன்றவற்றை எழுத வேண்டும்" என்று சொல்லுவது போல் இருக்கிறது. கேட்டால், ஆங்கிலக்காரனும், பிரஞ்சுக்காரனும் நம்மை அடிக்க வருவார்கள். இந்த ஏமாளித் தமிழன் மட்டும் அடிபணிந்து தேவரீர் சொல்லுவதைக் கேட்க வேண்டும்.

ஓரெழுத்து முறையில் இல்லாத வேற்று மொழி ஒலிப்புக்களைக் கொண்டு வர பொதுவாக இடைக்குறியீடுகளைத் (diacritical marks) தான் எழுத்துப் பெயர்ப்பில் போடுவார்கள். மாறாக, வேறு எழுத்தையே யாரும் கடன் வாங்க மாட்டார்கள்; இது உலகெங்கணும் இருக்கும் நடைமுறை. காட்டாக சங்கத ஒலிகளை எழுத உரோமன் எழுத்தில் புதிய வடிவங்களையா கொண்டு வருகிறார்கள்? இருப்பதை வைத்துப் இடைக்குறியீடு போட்டு புது ஒலிகளைக் காட்டுகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன கிரந்த லொள்ளு தமிழுக்கு வேண்டியிருக்கிறது? இது போன்ற முட்டாள் தனங்களை எழுத்துப் பெயர்ப்பில் தவிர்க்க வேண்டியே, கனடாவைச் சேர்ந்த திரு.C.R.செல்வக்குமார் பிற மொழி ஒலிகளைத் தமிழெழுத்தையே வைத்து எழுதுவதற்கான இடைக்குறியீடுகளை ஒருசில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்திருந்தார்.

கொஞ்சமாவது தருக்க நெறி, அறிவியல் ஆர்வம், மொழியியல் வழக்கம் அறிந்திருந்தால் இப்படி மொண்ணையாகப் பேசுவதை திரு.ஜடாயு தவிர்த்திருக்கலாம். சம்ஸ்கிருத்தை சமசுக்கிருதம் என்று எழுதக் கூடாதாம்; மண்ணாங்கட்டி. தமிழைத் tamil என்று ஆங்கிலக்காரனும், தொல்காப்பியனை தோல்காப்பியன் என்று இந்திக்காரனும், கிரைஸ்ட் என்பது கிரிசேது என்று சப்பான்காரனும், கிலிசேது என்று சீனக்காரனும் எழுதுவதற்கு வெட்கப்படவில்லை. "சடாயு" என்று இராமகாதையில் எழுதக் கம்பன் வெட்கப்படவில்லை. சமசுக்கிருதம் என்று எழுதினால், படிப்பதற்கு இவருக்கு நாராசமாய் இருக்கிறதாம். எவ்வளவு வெறுப்பு இருந்தால் நாராசம் என்று சொல் வரும்? இந்த நாராசம் கம்பனைப் படிப்பதில் வரவில்லையோ? தமிங்கிலம் எங்கணும் ஊடுருவி ஓங்கிய நிலையில், "இந்தப் போக்கில்" என்று கூடச் சொல்ல முடியாமல் "இந்த ரேஞ்சில்" என்று இவர் எழுதுவாராம்; ஆனால், நாராசம் என்று மட்டும் கிண்டல் அடிப்பாராம். எவ்வளவு நெஞ்சழுத்தம்?

அன்புடன்,
இராம.கி.

19 comments:

அருண்மொழி said...

நன்றி அய்யா.

Gurusamy Thangavel said...

ஐயா,

நானும் கூட பெயர்ச்சொல்லை மாற்றக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன்தான். ஆனால் உங்கள் பதிவைப் படித்தபோது இது தவறானதோ என்ற ஐயம் எனக்குள் எழுந்துள்ளது. நன்றி ஐயா.

Anonymous said...

இராம.கி ஐயா

நல்ல கட்டுரை. வலுவான கட்டுரை

தமிழ் என்பதே நாராசம் என்று சொல்லாதவரைக்கும் மகிழ்ச்சி அடையுங்கள். அபப்டிச் சொல்லும்கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது :-(

அன்புட்ன
ஆசிப் மீரான்

Anonymous said...

நல்ல பணி. நன்றி அய்யா.

Thangamani said...

தனித்தமிழ் பற்றிய உங்கள் தொடர் கட்டுரைகளுக்கு நன்றி.

Anonymous said...

நண்பரே

நீங்கள் நகரி என்று குறிப்பிடுவது தேவநாகரி எழுத்தினையா? அவ்வாறெனின் அது தமிழர்களால் உருவாக்கப்பெற்றதே. நகாதீபம் என யாழ்ப்பாணத்தை அன்று அழைத்தனர். நகார்கள் என்போர் ஈழத்தில் பரவலாக வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடமே நகரமாக மாறினது என்பர்.

நாகர் இடம் நகரம்

தேவ நாகரி என்பது அந்த நாகர்களால் ஆக்கப்பட்ட எழுத்து வடிவம். அதுவும் தமிழே. அதைத் தீவு நாகரி என அழைத்தனர்

"நாகதீவின் இறுதிச் சொல் மருவி நாக + (தீவு + அம்) , (தீவம்) என மாறியது. அதன்பின்னர், தீவநாகரி என்பது, தேவநாகரி என்று மருவியது. (தேவ) + நாகரி. நாகர்களில் பலர் சேர நாட்டில் குடியேறினார்கள். அவர்களின் நாகர் எனும் அடையாளம் உருமாறி, நாய்ர் என்றானது. அவ்வாறே, நாயகர் என்ற அழைக்கப்பெற்ற சில நாகரும் பிறரும், நாயகர் என்பதும் நாய்ர் என்று உருமாற, பெருங் குழப்பத்துக்கு ஆளானர்கள். " - AP Masilamani.

http://www.unarvukal.com/forum/index.php?showtopic=1652


மேலும் உந்த அதர்மம் சாமம் அது இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. தமிழர்களின் ஐந்திரம் என்ற நூலிலிருந்து பிழைபிழையாகப் பிரித்தவைதான் உந்த இருக்கு, யசு போன்ற வேதங்கள். அவற்றில் பல வெறும் சடங்குகளுக்குக் கூறப்படும் தோத்திரங்களே!

Anonymous said...

நானும் கூட பெயர்ச்சொல்லை மாற்றக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன்தான். உங்கள் பதிவைப் படித்தபோது அவ்வெண்ணம் மேலும் வலுப்பெற்றது.

அய்யா, நன்றி அய்யா.

குமரன் (Kumaran) said...

ஐயா,

ஏற்கனவே பல பதிவுகளில் நீங்கள் எழுத்துகளைப் பற்றி சொன்னதை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். இதுவும் நல்லதற்கே. இசுடாலின், சமசுகிருதம் என்று எழுதுவதற்கும் வீடணன், கன்னன், கருணன், கிருட்டினன் என்று இலக்கியங்களில் வருவதற்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. விபிஷணனை வீடணன் என்று எழுதுவதால் யாருக்கும் கண் கூசுவதில்லை; சொல்லுவதால் யாருக்கும் வாய் குழறுவதும் இல்லை. ஆனால் சமசுகிருதம், சரசுவதி என்று எழுதினால் மட்டும் ஏன் கூசுகிறது? குழறுகிறது? வீடணன், கன்னன், கருணன் என்பவை எல்லாம் இலக்கிய மரபுகள்; அவை தனித்தமிழ் இயக்கத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லை. அதனைப் போலவே சமசுகிருதம் என்பதை எடுத்துக் கொள்ளலாகாதா?

Anonymous said...

// தேவ நாகரி என்பது அந்த நாகர்களால் ஆக்கப்பட்ட எழுத்து வடிவம். அதுவும் தமிழே. அதைத் தீவு நாகரி என அழைத்தனர் //

எல்லாம் தமிழில் இருந்து வந்தது தானே? பின்ன ஏன்யா சமஸ்கிருத மொழியை இந்த அளவுக்கு வெறுக்கறீங்க?

ஜடாயு said...

அன்பின் இராம. கி,

நான் தனித்தமிழ் என்பது போலியான, செயற்கையான நடை என்று ஒரு கருத்துக் கூறப் புக, நீங்கள் அதே நடையில் இப்படி ஒரு தொடரையே எழுதத் தொடங்கி விட்டீர்கள்!

முன்பே சொன்னபடி, உங்கள் கலைச்சொல் ஆக்க முயற்சிகளை மனமுவந்து வாழ்த்துகிறேன்.

அதே சமயம், தனித்தமிழ் நடை என்பது போலியானது மட்டுமல்ல, தமிழ் இலக்கண, இலக்கிய மரபுக்கே எதிரானது என்ற கருத்தையும் வலியுறுத்துகிறேன்.

இது பற்றி இணையத்தில் நன்கு அறியப் பட்ட எழுத்தாளர் பி.கே.சிவகுமார் 'மரத்தடி'யில் முன்பு எழுதிய தனித்தமிழ் என்னும் போலி என்ற அருமையான கட்டுரையின் முதல் பாகம் இதோ -

தனித்தமிழ் என்னும் போலி - (1) - பி.கே.சிவகுமார்

[மிஸ்.தமிழ்த்தாய்க்கு நமஸ்காரம் (நன்றி: சுஜாதா) சொல்லி அவளருள் வேண்டி இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.]

முன்னுரை:

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்- கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றவர் நம் மஹாகவி. அந்த மஹாகவியின் பார்வையில் பார்க்கும்போது, தமிழுக்கு கலைச்சொல்லாக்கம் (அறிவியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சொற்களைத் தமிழ்ப்படுத்துவது) அவசியமான ஒன்று என்பதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "நான் கெட்-அப் பண்ணி பிரஷ் பண்ணி பிரேக்ஃபாஸ்ட் பண்ணி அப்புறம் ஆபிஸுக்குக் கம் பண்ணேன்" என்பது போன்ற தொலைகாட்சிப் பதுமைகள் பேசுகிற தமிங்கலம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "இயன்ற வரை தமிழிலே பேச வேண்டும்" என்றும் மஹாகவி நமக்கு வழி காட்டியிருக்கிறார். எனவே, நல்ல தமிழில் பேசவோ பேச முயலவோ வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நல்ல தமிழ் என்பது தனித்தமிழ் இல்லை. தனித்தமிழ் நம் மரபும் இல்லை என்று எழுதினால், நம்மில் சிலர் அதை கலைச்சொல்லாக்கத்துக்கு எதிர்ப்பு என்றும், தமிங்கலத்திற்கு ஆதரவு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். எனவே முதலில் தனித்தமிழ் என்றால் என்னவென்று பார்ப்போம்.

தனித்தமிழின் தோற்றமும் வரையறையும்:

சூரிய நாராயண சாஸ்திரி என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட பரிதிமாற்கலைஞரும், சுவாமி வேதாசலம் என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகள் எனலாம். தன் பெயரைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணி சூரிய நாராயண சாஸ்திரியார் சூரிய= பரிதி, நாராயண= மால் என்று வேறு சமஸ்கிருதச் சொற்களில் அமைத்துக் கொண்டது ரஸமான விஷயம்தான் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வதை இங்கு நினைவில் கொள்ளலாம். இவர்கள் இருவரும்தான் வடசொற்களே கலக்காமல் முதலில் தனித்தமிழில் எழுதத் தலைப்பட்டவர்கள். பரிதிமாற் கலைஞர் மறைந்த பிறகு- 1916 முதல் மறைமலையடிகள் தனித்தமிழில் பேசுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றார். வடமொழிச் சொற்களைத் தவிர்க்கிற தனித்தமிழ் இயக்கத்தினர்- கிரந்த எழுத்துகளையும் (ஜ, ஷ, ஸ, முதலியன) வடமொழி எழுத்துகள் என்று சொல்லித் தவிர்க்க ஆரம்பித்தனர். இதிலே பெருஞ்சித்திரனார் போன்றவர்கள், பெயர்களைக் கூடத் தனித்தமிழ்ப்படுத்தத் தலைப்பட்டனர். எனவே, இதிலிருந்து தனித்தமிழ் என்பது- 'வடமொழிச் சொற்கள் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் நம்புவதையும், கிரந்த எழுத்துகளையும் நீக்கி எழுதுவது' என்று புரிந்து கொள்ளலாம். இந்தத் தனித்தமிழ் குறித்து நம் இலக்கண நூல்கள் என்ன சொல்கின்றன, தனித்தமிழ் ஆதிகாலம் தொட்டே நமது மரபா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பது இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.

தொல்காப்பியம்:

தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிற மிகத் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்படுகிறார். (நூலின் பெயரால் அல்லது பாட்டின் பெயராலேயே ஆசிரியரை அழைக்கிற மரபு தமிழில் இருந்திருக்கிறது என்பதைத் தொல்காப்பியர் என்கிற பெயரின் மூலமும், "செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" பாடல் புகழ் செம்புலப் பெயனீரார் மூலமும் அறிகிறோம். அவர்களின் இயற்பெயர் மறைந்துபோய் அவர்களின் இறவாத படைப்புகளின் பெயர்களால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று சொல்வோரும் உண்டு.) தமிழில் தொல்காப்பியத்திற்கு முன்னும் இலக்கண நூல்கள் இருந்ததை நாம் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். ஆனால், அந்த இலக்கண நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. தமிழின் முதல் நூல் அகத்தியம் என்றும் அதன் வழி வந்த வழிநூல் தொல்காப்பியம் என்றும் கூறுவர். தொல்காப்பியத்தின் காலத்தை நிச்சயமாக அறுதியிட்டுக் கூற இயலாது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தொல்காப்பியத்தின் காலம் "கிறிஸ்து சகாப்தத்தின்" (Christian Era) ஆரம்பத்தை ஒட்டி இருக்கலாம் (early centuries of the christian era) என்று சொல்வது பெருந்தவறான கணிப்பாக இருக்க முடியாது என்கிற கூற்றைச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி முன்வைக்கிறது. டாக்டர் மு.வ. போன்றவர்களோ தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று நிச்சயமாகக் கூறுகிறார்கள். இந்த விவரங்களிலிருந்து, இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டியது பின்வரும் விஷயங்கள் தான்: 1.நம் கையில் கிடைத்திருக்கிற தமிழின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். 2.அது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. 3.அந்தத் தொல்காப்பியத்திலும் அதன்பின்னர் வந்த இலக்கண நூல்களிலும் தனித்தமிழ் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிவது தனித்தமிழ் நல்லதா, நம் மரபா என்று புரிந்துகொள்ள உதவும்.

திசைச்சொல்லும் வடசொல்லும் வளர்த்த தமிழ்:

வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் எழுத வேண்டும் என்று சொல்கிறார்களே (கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கிற விஷயத்திற்குப் பின்னர் வருவோம்.), அதுதான் நல்ல தமிழ் என்று சொல்கிறார்களே- நமது மரபு அதுதானா, தொல்காப்பியக் காலத்தில் அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் ஆர்வத்துடன் பார்க்கப் போனால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தொல்காப்பியர் சொற்களை வகைப்படுத்தும்போது அவற்றை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காகப் பிரிக்கிறார். இயற்சொல்லும் திரிசொல்லும் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை. எனவே, அவற்றைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். பல திசைகளிலிருந்து (பல மொழிகளிலிருந்து) தமிழில் வந்து கலந்த சொற்களைத் திசைச்சொற்கள் எனலாம். தமிழ்நாட்டின் தெற்கிலிருக்கும் இந்துமா கடல் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்று நம்பப்படுகிறது. அங்கிருந்த பல நாடுகள் கொடுந்தமிழ் நாடுகள் என்று அழைக்கப்பட்டன. எனவே, திசைச்சொல் என்பது கொடுந்தமிழ் நாடுகளிலிருந்தும் பண்டைத்தமிழ் நாடு தொடர்பு கொண்டிருந்த பிற நாடுகளிலிருந்தும் தமிழுக்கு வந்து சேர்ந்த சொற்கள் எனலாம்.

உதாரணமாக, பின்வரும் பழம்பாடல் பண்டைத் தமிழ்நாடு தொடர்பு கொண்டிருந்த பதினேழு பிற நாடுகளைப் பற்றிச் சொல்கிறது:

சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடும்குசலம்
தங்கும் புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.

(1. சிங்கள நாடு, 2. சோனக நாடு, 3. சாவக நாடு, 4. சீன நாடு, 5. துளுவ நாடு, 6. குடகு நாடு, 7. கொங்கண நாடு, 8. கன்னட நாடு, 9. கொல்ல நாடு, 10. தெலுங்கு நாடு, 11. கலிங்க நாடு, 12. வங்க நாடு, 13. கங்க நாடு, 14. மகத நாடு, 15. கடார நாடு, 16. கவுட நாடு, 17. கோசல நாடு)

பிற்காலத்தில் இஸ்லாமியர், ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், டச்சு நாட்டவர், ஃபிரெஞ்சு நாட்டவர், யூதர்கள் என்று மேலும் பல நாட்டவர்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்புகளாலும், பிறத் தொடர்புகளாலும் இன்னும் பல திசைச்சொற்கள் தமிழில் சேர்ந்தன. தமிழ் அவற்றை வரவேற்று அனுமதித்து தன் மொழியின் ஒரு பகுதியாக உவகையுடன் ஏற்றுக் கொண்டது. திசைச்சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்றும் அறிய வருகிறோம். உதாரணமாக, 'அந்தோ' என்ற வார்த்தை சிங்களத்தில் இருந்து வந்தது என்றும், சிக்கு ("சிக்கெனப் பிடித்தேன்" என்கிறது நம் பக்தி இலக்கியம்) என்பது கன்னடத்திலிருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

எனவே, பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்று சொல்கிற வாதம் திசைச்சொற்களைத் தூக்கிப் போட வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பானது. பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாகி நாள்தோறும் புழக்கத்தில் இருந்து வருவன இத்தகைய திசைச்சொற்கள். சினிமா, கவர்னர், பார்லிமெண்ட் ஆகியன ஆங்கிலத்திலிருந்து வந்த திசைச்சொற்களுக்கு சில உதாரணங்களாகும். அறிவியல், தொழில்நுட்ப, வணிக வார்த்தைகளுக்குக் கலைச்சொல்லாக்கம் செய்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் இலக்கண மரபின்படி நம்மிடையே ஊறிப்போன திசைச்சொற்களை தமிழின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வதுமாகும். அப்படிச் செய்யாமல் திசைச்சொற்களையும் தமிழ்ப்படுத்தி நாம் உருவாக்குகிற தனித்தமிழ், பொதுமக்களிடமிருந்தும் அன்றாட வாழ்விலிருந்தும் அன்னியப்பட்டதாகும். கலைச்சொல்லாக்கம் என்று வரும்போதுகூட பெரிதும் பழக்கப்பட்டுப் போன திசைச்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சரியான மரபாகவும், மொழியை வாழவும் வளரவும் வைக்கிற அணுகுமுறையாகவும் இருக்கும். எனவே, பல ஆண்டுகளாகத் தமிழில் ஏற்கனவே புழங்கி பொதுமக்களிடையே பிரபலமான திசைச்சொற்களை தமிழ் என்கிற பெயரில் மாற்ற முயல்வது, தமிழின் இலக்கணமும் மரபும் அறியாதோர் செய்கிற அறிவுபூர்வமற்ற செயல் ஆகும்.

இலங்கைத் தமிழில் பன் என்பது (Bun) பான் என்றும், காப்பி என்பது கோப்பி என்றும், கோர்ட் என்பது கோட் என்றும், ஷர்ட் என்பது சேட் என்றும், டார்ச் என்பது ரோச் என்றும், டவல் என்பது துவாய் என்றும் திரித்து எழுதப்படுகிறது. இவையெல்லாம் திசைச்சொற்களின் திரிபுகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழ் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இனி, வடசொல்லுக்கு வருவோம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் வடசொற்கள் (சமஸ்கிருதம் வடமொழி என்றும், சமஸ்கிருதச் சொற்கள் வடசொற்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.) கலந்து புழங்கி வருகின்றன. தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களை இருவகையாகப் பிரிக்கின்றனர். அவை, தற்சமம் மற்றும் தற்பவம் ஆகும்.

தற்சமம் என்பது இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துகளால் ஆன சொற்களைத் தமிழில் வரும்போது அப்படியே ஏற்றுக் கொள்வது. உதாரணமாக, அமலம், கமலம், காரணம், காரியம் என்று சில வார்த்தைகளைத் தமிழாசிரியர் சொல்வர் பாருங்கள், இவையெல்லாம் வடமொழி வார்த்தைகள் என்றே நம்மில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. இவற்றின் மூலம் சமஸ்கிருதமாக இருக்கலாம்; தமிழாகவும் இருக்கலாம். அதாவது, இத்தகைய வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். அல்லது, தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்குப் போய் இருக்கலாம். ஒரு சொல்லின் ஆரம்பத்தை (origin) ஆராய்கிற முறைக்கு "வேர்ச்சொல் ஆராய்ச்சி" (Etymology) என்று பெயர். தொல்காப்பியர் கூட சொற்களின் மூலத்தைத் தெளிவாகக் கண்டுபிடித்துவிட முடியாதென்று சொல்கிறார் என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்கிறது. டாக்டர் கால்டுவெல் போன்ற ஒரு சிலரின் முயற்சிகளைத் தவிர, தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியானது அனுமானத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமானவை என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுருங்கச் சொன்னால் இத்தகைய ஆராய்ச்சிகளால் பெரிதும் பயனொன்றும் இல்லை. பிற மொழிகள் மீது வெறுப்பையும், தன் மொழியின் மீது அறிவுபூர்வமற்ற உணர்வுபூர்வமான பற்றையும் (இது பலநேரங்களில் மொழி வெறியாக மாறக்கூடிய ஆபத்துடையது) வளர்க்கவே இவை உதவும்.

"ஹேஷ்யம்" என்கிற வார்த்தைக்குப் பொருள் கேட்ட நண்பர் ஒருவர், hypothesis என்பதை அச்சொல் குறிக்கிறதா என்று கேட்டிருந்தார். அச்சொல் hypothesis-ஐக் குறிக்குமானால், அதற்கு முன்னூகம் என்னும் அழகானச் சொல் இருப்பதாகவும் எழுதியிருந்தார். ஹேஷ்யம் என்கிற சொல்லுக்கு, ஊகம் என்றும் மேலோட்டமான கணிப்பு என்றும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் சொல்கிறது. ஆனால், பாருங்கள் முன்னூகம் என்ற சொல் பாதித் தமிழ் மட்டுமே என்றும் வாதிட முடியும். ஊஹனா (Uhana) என்கிற சொல் சமஸ்கிருதத்திலும் இதே பொருளில் வழங்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி கூட "ஊகனம் (Ukanam) என்பதையே ஊகம்" என்று சொல்லி அதன் மூலம் (origin) தமிழ் இல்லை என்கிறது. எனவே, தனித்தமிழ் இலக்கணப்படிப் பார்க்கப் போனால், முன்னூகம் என்ற சொல் முழுத்தமிழ்ச்சொல் இல்லையென்று ஆகிவிடும். ஆனால், தமிழ் என்று பார்க்கப்போவோமேயானால், ஹேஷ்யம், முன்னூகம் என்ற இரண்டுச் சொற்களையுமே தமிழ் என்று எடுத்துக் கொள்ள முடியும். மேலும் ஊகம், ஹேஷ்யம் என்ற சொற்கள் முன்னூகம் என்ற சொல்லைவிட வெகுஜனப் புழக்கத்தில் அதிகம் இருந்திருப்பதால் எளியோரும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் அவற்றை முன்னூகத்திற்குப் பதில் பயன்படுத்துவது உபயோகமாக இருக்கலாம். இப்படித்தான், நாம் தனித்தமிழ் என்கிற பெயரில் எழுதுகிற பல சொற்களின் மூலம் தமிழாக இல்லாமலிருப்பதை நாம் பார்க்க முடியும். தனித்தமிழ் என்று போர்டு போட்டுக் கொண்டு, பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க இயலாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட, தமிழில் கலந்துவிட்ட திசைச்சொற்களையும் வடசொற்களையும் தமிழாக ஏற்றுக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துகிற நல்ல தமிழில் எழுதுவது உத்தமம் என்று நான் நம்புகிறேன்.

G.Ragavan said...

மிகவும் நல்ல பதிவு. இப்படி எடுத்துச் சொன்னால்தானே தெரிகிறது. தொடரட்டுமிந்தப் பணி

Anonymous said...

ஜடாயு தமிழ்வலைப்பதிவுலகுக்குப் புதிதானவரோ அல்லது புதிதானவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புகின்றவரோ அறியோம்.
ஆனால், இராம. கியின் கருத்தினை முரண் கொள்ள அவர் கொணர்ந்திருக்கும் கட்டுரையின் அடியொலியான அரசியல் தமிழ்வலைப்பதிவுலகு அறிந்ததே.
மொழி என்பது அடுத்தாருக்குப் புரிதல், புரியவைத்தல் என்பவற்றிலே நமக்கும் மாற்றுக்கருத்தில்லை. எல்லாமொழிகளுக்கும் வேர் தமிழிலேயே என்ற கருத்தும் எமக்கு உவப்பானதல்ல. ஆயினும், ஜடாயு தூக்கிப்போட்டிருக்கும் கட்டுரையின் அடிக்கருத்து என்பது சொந்த மொழியிலேயுள்ள பொருத்தமான சொற்களை மீட்டெடுத்துப் பயன்படுத்துதல் என்பது மொழிவெறி என்றும் பிறமொழிகளை வெறுத்தல் என்பதுமாகப் பொருள்படுதலையே முதன்மைப்படுத்துகின்றது. இது போன்ற கட்டுரைகள் மொழி சார்ந்த ஆய்வென்பதிலும்விட, அரசியல் சார்ந்தவை என்பது வெள்ளிடைமலை. தன்மொழியிலிருக்கும் சொற்களை அடையாளம் கண்டு பயன்படுத்துதலென்பதை நாட்டுப்பற்று அற்ற நிலை என்பதாகக்கூட ஒருவர் முன்வைக்கலாம். ஜெயகாந்தன், வையாபுரி ஆகியோரின் அரசியலை அறிந்தவர்களுக்கு அவர்களின் வடமொழியின்றித் தமிழ் தரிக்காது என்ற கருத்து வியப்பளிக்காது. மேலே ஜடாயு அல்லது சடாயு தந்திருக்கும் கட்டுரையும் இவர்களின் அடியொற்றியெழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. அதனால், இப்படியான கட்டுரைகளிலேயுள்ள மொழிசாராய்வையும் அரசியல்சாராய்வையும் யாம் மிகவும் தெளிவாக வகை பிரித்துக்காணவேண்டும்.

hypothesis என்பதற்கு எடுகோள், கருதுகோள் என்பன தமிழ்ச்சொற்களாகப் பயன்படும். முன்னூகம் என்பதை ஈடான தமிழ்ப்பதமாகப் பயன்படுத்தலாமெனக் கூறிய நண்பரின் ஆர்வத்தினைப் பாராட்டும்போது, அவரின் மொழிப்போதாமையினையும் யாம் சுட்டிக்காட்டி மறுதலிக்கவேண்டிய நிலையிலேயிருக்கின்றோம். இதனைக் கண்டுகொள்ளமுடியாத கட்டுரையாளரின் மொழிப்போதாமையும் இக்கட்டுரையூடே வெளியாகின்றது. சடாயு இதனைப் புரிந்துகொள்வாரா?

இராம.கி said...

அன்பிற்குரிய தங்கவேல்,

வேற்றுமொழிப் பெயர்ச்சொல்லை நம்மொழிக்கு ஏற்ப மாற்றி எழுதலாம் என்ற கொள்கைவழிக் கருத்தே எனக்குப் பலகாலம் இருந்தது. அதே பொழுது சிலரின் வேண்டுகோளுக்காக நெளிந்து கொடுத்து, கிரந்த எழுத்தைப் போட்டும் சிலபோது எழுதியிருக்கிறேன். இதில் போய் ஆழ்ந்து சொல்லவந்த கருத்தைச் சொல்லுவதில் விட்டுவிட வேண்டாம் என்று நீக்குப் போக்காய் இருக்கிறேன்.

அன்பிற்குரிய ஆசீப்,

வருகைக்கும், கருத்திர்கும் நன்றி. நாராசம் என்று சொல்லும் கூட்டம் அதிகரிக்கவில்லை; ஆனால் அதிகரிப்பது போல் ஆரவாரம் காட்டுகிறது. ஏனென்றால் பெரும்பான்மைத் தமிழர் எல்லாவற்றிலும் மோனமாய் இருக்கப் பழகிவிட்டார்கள்.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

வாழ்த்திற்கு நன்றி

அன்பிற்குரிய தங்கமணி,

வருகைக்கு நன்றி.

அன்பிற்குரிய மிதுளன்,

நாவலந்தீவைப் பொறுத்தவரையில் இதுவரை கிடைத்த தொல்லியற் சான்றுகளைப் பார்த்தால், சிந்துவெளி எழுத்துக்கள் அல்லாது, இன்றைய இந்திய எழுத்துக்களின் தோற்றம் தெற்கே தான் எழுந்தது என்று ஆதாரத்தோடு கூறமுடியும்.

நகரி என்று நான் குறித்தது தேவநாகரி எழுத்தைத் தான். (இன்னும் விளக்க்ம் தருமாப்போல் பதிவிலேயே எழுதியிருக்கலாம்.) நாகர் என்பது கருப்பர் என்ற பொருள் கொண்ட சொல். தனித்த நகரி என்ற அடிப்படைச் சொல் கருப்பரின் ஓரெழுத்து முறையைச் சொல்லலாம். தேவ நகரி என்பது தேங்காய் எண்ணெய் ன்பதைப் போன்றது. எள்ளில் இருந்து எடுத்த நெய் எள்நெய் = எண்ணெய். இது முதலில் விதுமைச்சொல்லாய் இருந்தது. பின்னால் எண்ணெய் என்பதே பொதுமைச் சொல்லாகிப் போய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் என்பது போல் தேவநகரி என்று ஆகியிருக்கிறது. தேவரின் (பால் வண்ண நிறத்தவரின்) மொழியை எழுதத் திருத்திய நகரி தேவ நகரி.

மற்றபடி உங்கள் கருத்திற்கு நன்றி.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

பெயர்ச்சொல் பற்றிய என் தேற்றையும் (theory) புரிசையையும் (practice) மேலே குறித்திருக்கிறேன்.

அன்பிற்குரிய குமரன்,

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி. சமசுக்கிருதம் என்று எழுதுவது ஏற்றுக் கொள்ளப்படும் என்றே நான் எண்ணுகிறேன். அந்த சு-விற்குள் இருக்கும் குற்றியலுகரத்தை எப்படிப் பலுக்க வேண்டும் என்று கூட அறியாதவர்களாய் வல்வழக்குப் போடுபவர்களுக்கு, எவ்வளவு விளக்கம் சொன்னாலும் அமையாது.

கூரையேறத் தெரியாதவன் வைகுன்றம் போனானாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. தங்கள் மொழியைச் சரியாய்ப் புரிந்து கொள்ளாதவர்கள், இந்த விதயத்தில் ஊருக்கு உரைகொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அன்பிற்குரிய பாமரன்,

தமிழில் தானே எழுதியிருக்கிறேன். அப்புறமும் சமசுக்கிருதத்தை வெறுக்கிறோம் என்று சொன்னால் எப்படி? தமிழ் புரியவில்லையோ? எல்லாமே தமிழில் இருந்து வந்தது என்று எங்கும் சொல்லவில்லை. உள்ளே உறைந்திருக்கும் தமிழ்க்கூறுகளை அடையாளம் காட்டி, வரலாற்றைச் சரி செய்கிறோம். அவ்வளவு தான். இனிமேலும் சங்கதம் படிப்போம். ஆனால் எம் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

இராமகி ஐயா,

உங்களின் பதிவுகளிலிருந்து தமிழின் வளத்தையும், செழுமையையும் அறிகிறேன். தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி.

தமிழ் இணையங்களிலும், வலைப்பதிவுகளிலும் என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்ததெல்லாம் என்னவென்றால் எல்லாப் பிராமணர்களும் தமிழை வெறுப்பவர்களுமல்ல, எல்லா பிராமணரல்லாதவர்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தமிழ்க்காதலர்களுமல்ல.

சிதம்பரத்தில் தேவாரம் பாட மறுக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் அங்கு உண்மையில் என்ன தான் நடக்கிறது என்பதைப் பார்க்கச் சிதம்பரத்துக்கு நானே நேரில் சென்றிருந்தேன், அங்கு என்னுடைய அனுபவம் நான் எதிர்பார்த்ததை விட முற்றிலும் வேறுபட்டதாகவிருந்தது.

அன்புடன்
ஆரூரன்

Thamizhan said...

பேச்சால் எழுத்தால் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதும்,உள்ளத்தால் பார்ப்பனராய்,பார்ப்பன அடிமைகளாய் இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்பவர்கட்கும் தமிழை வடமொழிக்கு அடிமைப்படுத்திடவேண்டும் என்ற பேராசை.இவர்கள் தமிழுக்கு ஆதரவாளர்கள் போல் நடிப்பதைக் கண்டு ஏமாந்த காலம் மலையேறிவிட்டது.
பார்ப்பனர்கள் அவர்களது சமசுகிருதம் என்று நம்புவதையாவது புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் தமிழைத் தாய்மொழி என்று கூறிக்கொள்ளும் தறுதலைகள் மந்திரத்தினால் மயங்கி தமிழ் துரோகிகளாய் சமசுகிருத அடிமைகளாய் நடப்பதுதான் புரிந்து கொள்ள முடியவில்லை.குறைந்த அளவில் அவர்களுக்கு ஒரு நூல் கூடக்கிடைக்காது என்பதுதான் பரிதாபம்.
புரட்சிக் கவிஞரின் வந்தவர் மொழியா?செந்தமிழ்ச் செல்வமா? முதல் பாவாணரின் விளக்கம் நிறைந்த
எழுத்துக்கள் எல்லாம் தமிழ் வேர்ச்சொற்களை இலக்கண்த்துடன் வெளிப்படுத்தியுள்ளன.இதையெல்லாம்
முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல்,இந்தியாவிலே முசுலிம்களும் கிருத்தவர்களுந்தவிர அனைவரும் இந்துக்கள் என்பது போல,எல்லாமே ச்மசுகிருதம் என்று ஏமாற்று வேலை செய்கிறார்கள்.இனியும் ஏமாற்ற முயலாதீர்கள்.

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

திரு...... said...

பரிதியும், மாலும் சமக்கிருதம் என்ற புரட்டை செயகாந்தன் எனும் மாபெரும் மொழியியல் !!!அறிஞர்!!! சொன்னதாக மேற்கோள் காட்டி இருப்பது நகைப்புக்குரியது... சமஸ்கிருதத்திலோ அம்மொழிக் குடும்பத்தை சார்ந்த மற்ற மொழிகளிலோ அவற்றுக்கான எந்த வேரும் இல்லா நிலையில் இப்படி அறிவிலிகளை மேற்கோள் காட்டி அறிவுத்திறனுடன் எழுதுவதாக காட்டிக் கொள்வதே தங்கள் நோக்கின் திசையையும் உளப்பாங்கின் இரிவையும் காட்டுகிறது.

இராம.கி said...

நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் விள்க்கி எழுதமுடியுமா?

இராம.கி said...

இந்தக் கட்டுரையில் எழுதியத்ற்கும், நீங்க்ள் எழுதியதற்குமான தொடர்பு புரியவில்லை.