Saturday, May 13, 2006

அம்மணம் - 2

யா என்ற ஓரெழுத்தொரு மொழிக்குத் தமிழில் கருப்பு என்றே பொருளுண்டு. (இந்தப் பகுதியில் வரும் சிந்தனைப் போக்கிற்கு முன்னாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகச் சொல்லறிஞர் ப.அருளிக்கு நான் கடன் பட்டவன்.) யா என்னும் கருமைக் கருத்து வேரில் இருந்து பிறந்த சொற்கள் பலவாகும்; காட்டாக, யாடு, யானை, யாந்தை, யாறு, யாமன் என நிறையச் சொற்களைச் சொல்லலாம்.

யக்கன் என்ற இன்னொரு சொல்லும் அதே பொருளில் யா எனும் வேரில் இருந்து கிளைத்தது. ”யக்கன்” வடமொழியில் ”யக்ஷன்” ஆவான். யக்கர்/யக்ஷர் என்பவர் அந்தக் கால ஈழத்தின் பழங்குடிகள் என்று இந்தியத் தொன்மங்களும், இலங்கையின் மகா வம்சமும் கூறும். அவர்கள் ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலும் கூடப் பழங்குடிகள் தான். சமண சமயத்துப் பெண்பால் துறவியரைக் கூட இயக்கியர் (யக்ஷியர்) என்றே அழைத்தனர். இயக்கி>இசக்கி என்ற பெயரும் கூடத் தமிழரால் கருப்பு என்ற பொருளில் ஆளப்படுகிறது. பதினெட்டாம் படிக் கருப்பரைப் போல, இசக்கியம்மனும் கருப்புத் தான். (இயக்கி/இயக்கர் என்ற சொல்லுக்கு இயக்கக் கூடியவர் என்றெல்லாம் பொருள் சொல்வது கருத்துமுதல் பார்வையாகும். பொதுவாகப் பழைய நாட்டுப்புறத்துப் பெயர்கள் இயற்கைப் பொருள், நிறம், பழக்கவழக்க பற்றியே இடப் படுகின்றன. அந்த வகையில் இயக்கி என்ற பெயரைக் கருப்பி என்ற பொருளில் தான் நாம் கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் கருப்பு என்று சொல்லப் பெரும்பாலான தமிழர் வெட்கப் படவில்லை. பல தமிழர் பெயர்களின் உட்பொருள் கருப்பு என்றே இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் "கருப்பாயி" என்ற பெயரை எத்தனை தமிழ்ப் பெண்கள் வைத்துக் கொள்வார்? தமிழரில், ஆண், பெண் என இரு பாலரில், பலரும் இஷ், புஷ் என்றும், வடமொழிப் பெயரும், வட இந்தியப் பெயரும் அல்லவா தேடிக் கொண்டிருக்கிறார்?)

யக்கன் என்ற சொல் அருளியார் சொல்லிய முறையில், ய>ஞ>ந என்ற திரிவில், நக்கன் என்று ஆகும். நக்கன் என்றால் கருப்பன் என்று தான் பொருள். நக்கர் இருந்த இடம் (கருப்பர் இருக்கும் இடம்) நக்கவரம் இன்றைய நிக்கோபார்). நக்கவரத்தில் குடியிருந்தவரை நக்க சாரணர் என்று மணிமேகலை குறிக்கும். நக்கர் என்று சொல்லுக்கு ஆடையற்றவர் என்ற பொருள், ஒரு வழிப்பொருளே ஆகும். அந்த வழிப்பொருளின் காரணத்தைத் தான் மேலே குறித்திருக்கிறேன்.

யக்கர்களின் தலைவனாய் குள்ளமாய்த் தெரிந்த குபேரனை இந்தியத் தொன்மங்கள் குறிக்கும் [குவை = குகை; பள்ளம்; பள்ளத்தில் குவிந்து கிடக்கும் மணி, செல்வம். குவையின் அரன் குவையரன்>குபேரன். (அரன் = காப்பாற்றுபவன்) இங்கும் தமிழ் மூலம் தான் துணைக்கு வரும். இந்தியத் தொன்மங்கள் பலவிற்கும் தமிழே அடிப்படை.] குவையரனைச் செல்வந்தன் என்று சொன்னது அந்தக் கால ஈழத் தீவில் கிடைத்த மணிகளாலும் மாணிக்கத்தினாலுமே ஆகும் (மணி பல்லவம் என்ற தீவின் பெயர்கூட மாணிக்கம் கிடைக்கும் இடம் என்பதனால் ஏற்பட்டது தான்).

"இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
நயக்க நின்றவன்"

- 5ம் திருமறை சித்தத் தொகை திருக்குறுந்தொகை, 25ம் பாட்டு

நக்கர் என்ற பெயரைக் கொஞ்சம் நீட்டித் தான் நாகர் என்று நம் தமிழர் பிற்காலத்தில் சொன்னார். (நாகரைப் பாம்போடு தொடர்பு படுத்தியது வழிப்பொருளால் என்றே கொள்ளவேண்டும்.) நாகருக்கும், தமிழருக்கும் இடையே நிறைய இன உறவுகள் ஏற்பட்டுள்ளன. (இன்றைய நிலையில் ஈனியலால் - genetics - பெரிதும் கலந்து போன தமிழரையும் நாகரையும் பிரித்து அறிவது சரவலான செயல். ஆனாலும் ஈனியல் முயன்று கொண்டிருக்கிறது. இதைப் பற்றி இங்கு எழுதினால் சொல்ல வந்த செய்தி விலகிப் போகும் என்பதால் தவிர்க்கிறேன்.) 

இந்த நாகரே இந்தியாவின் பழங்குடிகள் என்று இன்று அறியப்படுகிறார். இவர் பேசிய மொழிக் குடும்பம் இன்றைக்கு முண்டா மொழிக் குடும்பம் எனப் படுகிறது. தமிழ் எனும் மொழி முதலில் ஏற்பட்ட நிலையில், முண்டா மொழிக் குடும்பத்திற்கும், தமிழிய மொழிக் குடும்பத்திற்கும் ஏதோ தொடர்பு ஆழமாய் இருந்திருக்க வேண்டும். நாகரில் பலரும், தமிழ் பேசிப் புலமையும் பெற்று, சங்க காலத்தில் சிறப்புற்று இருந்திருக்கிறார். (காட்டாக, முரஞ்சியூர் முடிநாகவரையர் என்பாரை இங்கு சொல்லலாம்.) நாகரின் பெயரால் நாவலந்தீவில் பல ஊர்ப்பெயர்களும், இடப்பெயர்களும் இருக்கின்றன. (காட்டாக, நாகர்கோயில், நாக(ர்)பட்டினம், நாகப்பூர், நாகநாடு போன்றவற்றைச் சொல்லலாம்.)

இதே நக்கர் என்ற பெயர் தான் வியப்பூட்டும் வகையில் பல்வேறு இந்தை யிரோப்பிய மொழிகளில் negro, nigger எனப் பல்வேறு உருவங்களில் தோற்றம் காட்டுகிறது. அதேபோல நக்கரின் தோற்றம் தான் நக்கட் (naked) என்று ஆடையற்ற நக்கு நிலையையும் காட்டுகிறது. இந்தையிரோப்பியக் குடும்பம் என்று சொல்லப் படும் வடமொழியிலும் கூட நக்கனம்>நக்(g)நம் என்று சொல் நமக்கு நக்குத் தன்மையைக் காட்டும். தமிழிலும் நக்கனம், நக்கு என்பவை அம்மணத்தையே குறிக்கும்.

கீழே உள்ள மற்ற சொற் தொகுதிகளையும் நோக்குங்கள்.

நக்கன் = அம்மணன், அருகன், சிவன்; ஆடையற்ற நிலையில், அல்லது வெறும் புலித்தோலை அரையில் கட்டிய சிவன் என்ற பொருளில், திருமந்திரத்தில் இந்தச் சொற்றொடர் ஆளப் படும். "நக்கு அரையனை" என்ற தொடர் 5ம் திருமுறை, 22.திருக்குடமூக்கு, 5 வது பாட்டு. "குரக்குக் கா நக்கனை" என்ற தொடர் 5 ம் திருமுறை, 75, திருக்குரக்குக் கா, 4, 8 வது பாட்டுக்கள்

நக்கினம் = பெண்குறி; நக்கினிகை = அம்மணமாய் உள்ள பெண்; (அம்மன் கோயில் கருவறை வாசலில் இருக்கும் இயக்கினிகள் மேலே சிறு கச்சையோடு தான் உருவம் கொண்டிருப்பார்கள்.)

ஆனாலும், நக்கர் என்ற சொல்லின் தொடக்கம் தெரியவில்லை என்றே மேலைச் சொற்பிறப்பு அகரமுதலிகள் குறிக்கின்றன.

O.E. nacod "nude," also "not fully clothed," from P.Gmc. *nakwathaz (cf. O.Fris. nakad, M.Du. naket, Du. naakt, Ger. nackt, O.N. no..kkvidr, O.Swed. nakuder, Goth. naqads "naked"), from PIE base *neogw- "naked" (cf. Skt. nagna, Hittite nekumant-, L. nudus, Lith. nuogas, O.C.S. nagu-, O.Ir. nocht, Welsh noeth). Applied to qualities, actions, etc., from 16c. (originally in naked truth, 1585). Phrase naked as a jaybird (1943) was earlier naked as a robin (1879, in a Shropshire context); the earliest comparative was naked as a needle (1377).

மேலே கூறிய அத்தனை பொருள்களையும் தமிழ் வேர் வழி பொருத்திப் பார்த்தால் தான் உள்ளே ஓடும் ஒருங்குமை, கருப்பு என்ற பொருளில், நமக்குப் புரியும். உறுதியாக, மாந்தனின் தொடக்க நிலைக்கும், முல்லை நில வாழ்க்கை வரை ஏற்பட்ட வாழ்வு முறைகளுக்கும், தமிழுக்குமாய் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது; ஆனால் அது என்ன என்றுதான் முற்று முழுதாக விளங்கவில்லை.

இனிக் கருப்பு என்பதைக் குறிக்க யா என்னும் வேரில் இருந்து யக்கன் என்ற சொல் பிறந்தது போல, யாவர் என்ற சொல்லும் பிறக்க முடியும். யாவர்/யாவகர் என்பவரும் கருப்பரே. (இந்தொனேசியாவின் ஒரு தீவான யாவகத் தீவும் கருப்பர் தீவு என்ற பொருளிலேயே பெயரிடப் பட்டிருக்கிறது. இந்தொனேசியாவின் மற்ற தீவுகளின் பெயர்களை இன்னொரு இடுகையில் பார்க்கலாம்.)

யாவகர் என்ற சொல்லின் திரிவான யாவகர்>ஸ்யாவகர்>சாவகர்>ஸ்ராவகர் என்பதையே இல்லறம் ஒழுகும் பொதுமக்களைக் குறிக்கச் செயின நெறி பயன்படுத்தும். செயின நெறி பொதுவாக பெண்மக்களை உயர்ந்த துறவி நிலைக்கு ஏற்றவராய்க் கொள்ளாது. அவரைத் துறவி நிலைக்கு அணுக்கத் தொண்டராய்த் தான் கருதும். அதனால் தான் மக்களின் பெயரான இயக்கர் என்பதின் பெண்பாலான இயக்கியர் என்பதே பெண்துறவியருக்குப் பெயராகக் கொள்ளும். யாவக நெறி / சாவக நோன்பு என்பதும் இல்லறம் கடைப்பிடிக்கும் மக்களின் நெறி.

அடுத்து, யா என்னும் வேரில் இருந்து வேறொரு ஈற்றில் அதே பொருளில் யாமன்>யமன் என்ற சொல்லும் பிறக்க முடியும். யாமம் என்ற சொல்லும் கருமை என்ற பொருளையே காட்டுகிறது. சூரியன் மறைந்து பிறகு இருக்கும் நேரம் யாமம் என்றும், குறிப்பாக நள்ளிரவு நேரம் யாமம் என்றும் சொல்லப் படும். (அது வழக்கம் போலத் திரிந்து சாமம்>ஜாமம் என்றும் பின்னால் வடமொழியில் பலுக்கப் படும்.) கருப்பு நிறத்தவனான, இறப்பைக் கொண்டு வருபவனாக கருதப்படும் கூற்றுவன், யமன் என்றே சொல்லப் படுவான். கூற்றுவனைக் குறிக்கும் காலன் என்ற இன்னொரு சொல்லும் கூடக் கருப்பன் என்றே பொருள் கொள்ளும். யமன் ஏறி வருகின்ற விலங்கு கூட கருமை நிறத்து எருமையே ஆகும். யமம் என்ற சொல்லுக்கு காக்கை, காரி (=சனி) என்ற பொருள்களும் கூட உண்டு. இவை எல்லாமே கருப்புத் தான்.

பொதுவாக யாமன்>யம்மன்>யமன் என்பவன் கருப்பானவனே! கருப்பர்கள் வாழ்ந்த திசை யாம திசை; அதனால் தான் தென் திசை யாமதிசை>யம திசையாயிற்று. யமன் என்னும் கூற்றுவன் இருந்த திசை தென் திசையாயிற்று. இறந்தவர் இருள் நிறைந்த உலகத்திற்கு போவதாகக் கொண்ட தொன்மமும், தென்புலத்தார் என்றே சொல்ல வைத்தது.

தென் திசையில் எழுந்த கடற்கோளால் பல இனத்தவர் தெற்கில் அழிந்திருக்கிறார்கள். எனவே முன்னோர்கள் எனப்படுவோர் தமிழர் மரபில் தென்புலத்தார் எனப்பட்டார்கள். (பார்ப்பனர் முறையில் தர்ப்பணம் செய்பவர் தென்புலத்தாருக்குத் தான் எள்ளுப் பிண்டம் வைத்து வழிபாடு செய்கிறார்.)

[பார்ப்பனருள்ளும் பல தமிழ் வழக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதை அவர்களும் அறியாது இருக்கிறார்கள்; மற்றோரும் அறியாது இருக்கிறார்கள். அருத்தம் புரியாத சண்டைகளில் பலவற்றை நாம் எல்லோருமே இழந்து கொண்டிருக்கிறோம். எதை எடுத்தாலும் அதற்கு வடமொழி அடிப்படை காட்டும் வழக்கத்தைத் தமிழரில் பலர் எப்போது விடப் போகிறார்களோ, தெரியாது. பெரும்பாலான செய்திகளின் அடிப்படை நம்மைப் பொருத்த வரை தமிழில் தான் இருக்கிறது. பார்ப்பனரில் பல கோத்திரப் பெயர்கள் கூட முற்றிலும் தமிழே. காட்டப் பெருகச் சனம்>ப்ருகச் சனம் (சிலர் இதை ப்ருகச் சரனம் என்று கூடச் சொல்லுவார்கள்) = பெருகிய கூட்டம், பெரிய கூட்டம் என்று பொருள். கூட்டப் பொருள் கொண்ட கணம் என்ற தமிழ்ப் பெயர்தான் சனம் என்று இந்தக் காலத்தில் பலுக்கப் படுகிறது.]

மறுபடியும் மறுபடியும் ஏற்பட்ட தென்திசை அழிவைக் கண்டு (அது ஆழிப் பேரலைப் போன்றதாய் இருந்திருக்கலாம்; என்னவென்று நமக்குச் சொல்லத் தெரியவில்லை.) அச்சமுற்றே, தமிழர் தம் நடைமுறையில், இறந்தோரை தெற்கே தலையும் வடக்கே காலும் இருக்கும்படியும், இறந்தவரின் முகத்தையும் சற்றே திருப்பி வடக்கு நோக்கி இருக்குமாறும் வைத்துப் புதைப்பார்கள். யாம திசை அந்த அளவிற்குத் தமிழரை அச்சுறுத்தியிருக்கிறது.

மனையடி சாற்றங்களிலும் (சாற்றம்>சாத்தம்>சாத்ரம்) தென்மேற்கு திசையை யம திசை என்றே சொல்லுவார்கள். தென்மேற்குப் பக்கத்தில் ஒரு மனையின் வாயில் இருக்கக் கூடாது என்று மனையடி சாற்றத்தில் சொல்லுவதற்கும் இந்த ஆயிரமாண்டு அழிவுகளைப் பற்றிய பயமே காரணமாகும். பொதுவாக வடக்கு என்பதை மங்கல திசை என்று சொல்லுவார்கள்; துறக்கம் பெறும் திசை வடகிழக்கு நோக்கியே (குயிலை மலை = கயிலை மலை; குயில்ந்து>குவிந்து உயர்ந்து நிற்கும் மலை குயிலை மலை) என்பதால் தமிழர் வடக்கிருக்கும் நோன்பு கொண்டது இந்தத் தொன்மங்களின் தொடர்ச்சியாலே என்றும் புரிந்து கொள்ளலாம்.

உயிரை உடலிலிருந்து பிரிப்பவன் கூற்றுவன்; கூற்றுவன் கரிய நிறத்தை உடையவன் (புற. 4:10-12) என்ற கருத்தை ஓர்ந்து பார்த்தால் சொல்லவரும் செய்தி புரியும்.

முன்னே சொன்னது போல யகரச் சொற்கள் யகரம்>ஞகரம்>நகரம் என்று திரிந்தது முதல்வகை என்று சொன்னால், இன்னும் இரண்டு வகைத் திரிவுகளும் தமிழியற் சொற்களில் ஏற்பட்டிருப்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இரண்டாவது வகையில், யகரம் கெட்டு அகரமாவது (அதாவது ய>அ);

மூன்றாவது வகை யகரத்தின் முன்னால் ஸகர ஒலி சேர்ந்து பின்னால் சகரமாக/ஜகரமாகத் திரித்து ஒலித்தல்; (அதாவது ய>ஸ்ய>ச)

முதல் வகைத் திரிவில், யம்மன்>ஞம்மன்>நம்மன்>நம்மண்>நம்மணம் = அம்மணம் என்ற மாற்றமும், இரண்டாம் வகைத் திரிவில், யம்மன்>அம்மன்>அம்மண்>அம்மணம் (=யாமணம்) என்ற மாற்றமும் ஏற்படும்.

நக்கனம், அம்மணம், ஆகியவை தவிர நிர்வாணம், அற்றம் (இலக்கிய வழக்கு; ஒன்றும் இல்லாமல் அற்றுப் போவது அற்றம்.), முண்டம் (தலையில்லாமல் மழுக்கையாய்ப் போவது என்ற பொருளில் தொடங்கிப் பினால் ஆடையிலாமல் போவதையும் குறித்த சொல்; முண்டிதம் = மொட்டை), மொட்டைக் கட்டை (முண்டம் போன்ற பொருளே இதற்கும் உண்டு.) போன்றவை கூட ஆடையற்ற நிலையைத் தமிழில் குறிக்கும். தவிர, பிறந்த மேனி என்ற வழக்கும் கூடத் தென்பாண்டி நாட்டில் உண்டு; "பொட்டுக்கு ஒரு ஆடை இல்லாமல், பிறந்த மேனிக்குக் கிடக்கிறான், பாருங்கள்" என்று சொல்லுவார்கள்.

மேலே பேரா. தொ.பரமசிவன் கூறியது போல் "சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர், பிறந்தமேனியராய் இருப்பவர்), சுவேதம்பரர் (வெள்ளையாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக் குகைகளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர்கள் திகம்பரத் துறவிகளே. வெள்ளையாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர்." இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், குளிர் கூடிய வடபுலத்திலும், மணல் வாரியடிக்கும் அரச பூதனம் (இராஜஸ்தான்), கூர்ச்சரம் போன்ற இடங்களிலும் சுவேதம்பரரே மிகுதியாய் இருந்தனர்; வெய்யில் மிகுந்து காய்ச்சும் தென்புலத்திலோ திகம்பரரே மிகுதியாய் இருந்தனர். மயிலை. சீனி. வேங்கடசாமியாருடைய "சமணமும் தமிழும்" என்ற பொத்தகத்தில் சொல்லுவது போல, "இப்போதும் தமிழ்நாட்டில் உள்ள சமணர் திகம்பர சமணரே". திகம்பர சமணருள்ளும் குருமார்கள் மட்டுமே ஆடையில்லாமல் இருப்பார்கள் என்பதையும், சாவக நோன்பிகள் (இல்லற நோன்பிகள்) ஆடை அணிந்திருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். "ஏன் திகம்பர சமணம் தெற்கே பெரிதும் பரவியது?" என்பது ஆய்விற்கு உரிய கேள்வி.

இந்த வரிசையில், நிர்வாணம் என்ற சொல்லைப் பார்ப்போம். இந்தச் சொல்லுக்கு, ஆடையற்ற நிலை என்பது மட்டுமே பொருளல்ல; வீடுபேறு என்பதும் கூட அதன் பொருளாகும். ஆனால் அது வட புலத்தில் இருந்து ஏற்பட்ட இரண்டாம் நிலைப் பொருள். [அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்முறை நெறியில், சங்க காலத்தின் இறுதி வரை, நாலாவது பொருள் அழுத்தமாகச் சொல்லப் படவில்லை. இன்னும் கூர்ந்து சொன்னால், அறம், பொருள், இன்பம் என்ற வகையிற் கூட சங்ககால வாழ்க்கைமுறை பார்க்கப் படவில்லை. இந்த முன்று வகைப் பார்வையே, சங்கம் மருவிய காலத்தில் (அதாவது மெய்யியல் பார்வை தமிழ்நாட்டில் பெரிதும் பரவிய காலத்தில்) ஏற்பட்டது தான். சங்க காலத்தில் வாழ்க்கை என்பது அகம், புறம் என இரண்டு வகைகளாகவே பகுக்கப் பட்டது.]

நிர்வாணம் என்ற சொல் பெருத்த வழக்குப் பெற்றது வேத மறுப்பு நெறிகளால் தான். இந்தச் சொல்லின் ஒலிப்பைப் பார்த்தால், ஒரு சில பொதுவான கருத்துக்களைக் கூறமுடியும். மகரவொலிச் சொற்கள் பலவும் வடக்கே போகப் போக வகரவொலி பெறுவது இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பழக்கம். மகரமும் வகரமும் தமிழிலும் கூட ஒன்றிற்கொன்று போலிகள் ஆகும்; அதே காரணத்தால் அவை ஒன்றிற்கொன்று மோனையும் கூட. காட்டாக, விண்ணைக் குறிக்கும் மானம்>வானமாகும்; அந்த வகையில், நிர்வாணம் என்ற சொல்லின் முந்தைய நிலையை நிர்மாணம் என்றே ஊகிக்க முடியும்.

இன்னும் ஆழ்ந்து பார்த்தால், நிர்மாணம்/நிர்வாணம் என்ற வீடுபேற்றுச் சிந்தனை வேத நெறியில் அவ்வளவு பெரிதாகச் சொல்லப் படுவதில்லை. பொதுவாக நிர்மாணம் என்ற கருத்து வேத மறுப்பு நெறிகளிலேயே இருப்பதாகும்.

வேத மறுப்பு நெறிகளின் மொழியான பாகதத்தில் "ர்ம" என்ற எழுத்துக் கூட்டு வருவதில்லை. அதில் "ம்ம" என்றே வரும். ம்ம>ர்ம போன்ற திரிவுகள் பாகதத்திற்கும் சங்கதத்திற்கும் இடையே பரக்கவும் உண்டு. சமணத்தின் மொழியான அறுத்த மாகதியும், புத்தத்தின் மொழியான பாலியும் பாகதத்தின் இருவேறு பேச்சு வழக்குகள். இரண்டிலுமே இந்த "ர்ம" என்ற ஒலிக்கூட்டு கிடையாது. எனவே நிர்மாணத்தின் முந்தைய நிலை வேதமறுப்பு நெறிகளின் தொடக்க காலத்தை வைத்துப் பார்த்தால், நிம்மாணம் என்பதாகவே இருக்க முடியும். நிர்வாணத்தின் சொற்பிறப்பு நம்மனம்> நம்மானம்> நிம்மானம்> நிர்மாணம்> நிர்வாணம் என்ற முறையிலேயே அமைய முடியும்.

அது எப்படி ஆடையற்ற நிலைக்கும் வீடு பேறுக்கும் ஒரே சொல் ஏற்பட்டது என்பது அடுத்த கேள்வி.

அன்புடன்,
இராம.கி.

10 comments:

வசந்தன்(Vasanthan) said...

அன்பின் இராம.கி.
இப்பதிவுக்குச் சம்பந்தமற்றது.

நீங்கள் நிறத்தைக் குறிக்க 'கருப்பு' என்று எழுதுகிறீர்கள்.
ஈழத்தில் இச்சொல் இல்லை. 'கறுப்பு' என்றே பாவிக்கிறோம். எங்களுக்கு இச்சொல் அறிமுகமானது தமிழகப்பக்கமிருந்துதான். Voice on Wings இன் இந்தப் பதிவைப் படிக்கும்வரை ஒரே நிறத்தைக் குறிக்க ஈழத்தில் 'கறுப்பு' என்றும் தமிழகத்தில் 'கருப்பு' என்றும் பாவிப்பதாகவே நினைத்து வைத்திருந்தேன்.
ஆனால் அப்பதிவில் தான் படித்தகாலத்தில் 'கருப்பு' என்ற சொல் இருந்ததில்லையென்றும் தனக்கு இணையத்தில்தான் அப்படியொரு சொல் தெரியவந்ததென்றும், கறுப்புத்தான் சரியென்ற மாதிரியும் சொல்லியுள்ளார்.

அதன்பிறகுதான் நானும் அகராதிகள் பார்த்தேன். எங்குமே 'கருப்பு' என்ற சொல்லுக்கு நிறப் பொருள் தரப்படவில்லை. எல்லாவற்றிலுமே 'கறுப்பு' என்பதைத்தான் நிறத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் வலைப்பதிவில் 90 வீதமான தமிழகத்தார் 'கருப்பு' என்றே எழுதுகின்றனர். நீங்களும் அவ்வாறே எழுதுகிறீர்கள். அச்சு ஊடகங்களிலும் 'கருப்பு' என்பதுதான் பாவிக்கப்படுகிறது. ஆனால் சிலர் மட்டும் 'கறுப்பு' என்று எழுதுகின்றனர். (Voice on Wings , விடாது கறுப்பு)

நீண்டகாலமாகவே 'கருப்பு'தான் பயன்பாட்டிலுள்ளதா? இடையில்தான் வந்ததா? தமிழ் அகராதிகளில் இச்சொல் இல்லாமற் போன காரணமென்ன? (கருப்புக்கு 'பஞ்சம்' மட்டுமே பொருள் கொள்ளப்படுகிறது) இரண்டு வழக்குமே தமிழகத்தில் உள்ளதா? (ஹரி அவர்களின் குறிப்பொன்றில் 'கருப்பு' நிறத்தைக் குறிப்பதாகவும், 'கறுப்பு' குணப்பெயரென்றும் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் ஈழத்தில் கறுப்பு மட்டும்தான்.)


எங்களுக்கு இரு சொற்களுககுமிடையில் உச்சரிப்பில் பெரிய வேறுபாடு உள்ளது

Anonymous said...

நல்ல ஆராய்ச்சி

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

கருப்பு, கறுப்பு பற்றிய குழப்பம் எனக்கும் உண்டு. ஆனால், ரு, று என்பது ஒன்றிற்கொன்று போலி போல் வருவதால் இரண்டுமே சரிதான் என்ற கருத்தையும் பார்த்திருக்கிறேன். நான் பெரும்பாலும் கறுப்பு என்றே பாவிக்கிறேன்.

நாகர் குறித்த விளக்கத்தோடு சம்பந்தப்பட்டதா என்று தெரியவில்லை - நவாப்பழம் என்று வட்டார வழக்கில் வழங்கப் பெறும் நாகப்பழமும் கறுத்தே இருப்பதால் அந்தப் பெயர் பெற்றிருக்குமோ?

மீண்டும், இவை அருமையான ஆய்வுக் கட்டுரைகள். நிறையத் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி ஐயா.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஓர்ந்து பார்க்கையில், "பெரும்பாலும் 'கறுப்பு' என்று பாவிக்கிறேன்" என்பதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. பல இடங்களில் 'கரு' என்று பாவிப்பதற்கும் பல காட்டுக்கள் இருக்கின்றன.

கருவிழி - கறுவிழி அல்ல.
கருகரு கூந்தல் - கறுகறு அல்ல.
கரி, கரிய நிறம் - கறிய நிறம் அல்ல.
கருகமணி...(மாலைக்)கருக்கல்...

இதனால், இடம்பொருத்து 'ரு' 'று' இரண்டுமே சரிதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

வெளியே கருப்பாக இருப்பதால் தான் 'கரும்பு' என்ற பெயரும் வந்திருக்கிறதோ?

இலவசக்கொத்தனார் said...

ஐயா,
நல்லதொரு ஆராய்ச்சி. புதிய கருத்துகள் பலவும் தெரிந்து கொண்டேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய வசந்தன்,மற்றும் செல்வராஜ்

தமிழ் அகரமுதலிகளை மீண்டும் பாருங்கள் கரு- என்று தொடங்கும் கூட்டுச் சொற்கள், வினைச்சொற்கள், கரி - என்று தொடங்கும் கூட்டுச் சொற்கள், வினைச்சொற்கள் இப்படிப் பார்த்துக் கொண்டே வாருங்கள் ஒரு 300லிருந்து 500 ஆவது தேறும்.

கல் என்பது வேர்; அது black என்று தான் நிறப்பொருள் கொள்ளும். கல்>கர்>கரு; கல்>கர்>கரி, கல்>கள்>காள் என இன்னும் விதவிதமாய்த் திரியும். கல் என்னும் பொத்தக வரிசையை பேரா. கு.அரசேந்திரன் வெளியிட்டிருக்கிறாரே அதில் முதல் தொகுதி கருமைப் பொருளைத்தான் குறிக்கும்.

பொதுவாக றகரச் சொற்கள் வரும் போது அது லகரமும் தகரமும் புணரும் போதும் (கல்+து = கற்று>கற்றை>கறை), ரகரச் சொற்கள் திரியும் போதும் ஏற்படும். றகர மெய்யைக் கடைக்கு முதலாய் எழுத்துவரிசையில் வைத்திருப்பதாலேயே சொற்பிறப்பில் அந்தச் சொற்களின் பின்மை புலப்படும்.

தவிர தன்வினைச் சொற்கள் ரகரப் பலுக்கிலும், அதே பொருளில் பிறவினை ஆகும் பொழுது றகரத் திரிவும் பெறுவது இயற்கை.

கருத்தல் = தானாகக் கருமை நிறம் பெறுதல்;
கறுத்தல் = பிறவினையால் கருமை நிறம் பெறுதல்; அதாவது கருக்க வைத்தல்.

வெய்யிலில் தோல் கருத்தது
வெய்யிலால் தோல் கறுத்தது

இருத்தல் = தானாக ஓரிடத்தில் அமர்தல்
இறுத்தல் = பிறவினையால் ஓரிடத்தில் இருக்க வைத்தல்.

நாளாவட்டத்தில், கருத்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லான கருப்பிற்கும், கறுத்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லான கறுப்பிற்கும் பொருள் மயக்கம் ஏற்படலாம்; பலருக்கும் ஏற்படுகிறது. கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் சரி செய்துவிடலாம். அதேபோலத் தான் இருப்பும், இறுப்பும். இன்னும் பல காட்டுக்களைச் சொல்ல முடியும்.

அன்பிற்குரிய அன்பு மற்றும் இலவசக் கொத்தனார்,

உங்கள் வருகைக்கும் கனிவிற்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

பதிலுக்கு நன்றி. கரு, கரிய, கருமை என்பதெல்லாம் பாவனையிலுள்ளன. நான் கேட்டது நிறத்தைக் குறிப்பதற்கு (black) நாங்கள் 'கறுப்பு' மட்டுமே பயன்படுத்துகிறோம். அகராதியிலும் கருப்பு என்ற சொல் நிறத்தைக் குறிக்க நேரடியாக இல்லையென்பதையே.

அரசேந்திரனின் கல் தொகுதி என்னிடமுள்ளது. (கிளிநொச்சியில் அவர் கல் தொகுதி வெளியிடத் தங்கயிருந்த காலத்தில் பழக்கமுமுண்டு)
**********************
மகாவம்சப்படி விசயன் வருகைக்கு முன்பு வழக்கிலிருந்தவர் நாகரென்றும் ஏனைய பகுதியிலிருந்தவர் இயக்கரென்றும் சொல்லப்படுகிறது. விசயன் வருகையின்பின் இயக்கர் வடக்கு நோக்கி விரட்டியடிக்கப்பட்டனரென்றும் சொல்லப்படுவதுண்டு.
ஆனையிறவுக்கு மிக அருகிலிருக்கும் (யாழ்ப்பாணப் பக்கமாக) ஊரின் பெயர் இயக்கச்சி. இயக்கர் குழுவொன்று பெயர்ந்து வந்து தங்கியதால் உண்டான பெயரென்று சொல்வர்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நன்றி ஐயா, தன்வினைக்கு ரகரப் பலுக்கலும், பிறவினைக்கு றகரப் பலுக்கலும் என்பது நான் புதிதாகக் கற்றுக் கொள்கிறேன்.

வசந்தன், அகரமுதலியில் கருப்பு இல்லை என்பது ஆச்சரியம் தான். என்னிடம் உள்ள அகரமுதலியிலும் கருப்பு என்ற சொல்லிற்குக் காண்க:கறுப்பு என்று சுட்டியிருக்கிறார்கள். கறுப்பிற்கு விளக்கமாய் கருமை என்று இருக்கிறது!

அதே சமயம் அதிலே, 'இருத்து' என்று தான் இருக்கிறது. அது 'இறுத்து' என்று இருக்க வேண்டும். கொங்கு வட்டார வழக்கில் என் தாய் "இரசத்தை அடியோட அலசி ஊத்தட்டுமா, மேலால இறுத்து ஊத்தட்டுமா?" என்பார்கள். வெறும் சாறாய் நீர்மையாய் ஊற்றிக் கொள்வதற்கு அந்தச் சொல்லைப் பாவிப்போம். பிறவினை இடத்தில் றகரப் பலுக்கல் புரிகிறது.

கருப்பு said...

நல்ல தமிழ் அலசல் அய்யா. நான் எனது பதிவை விடாது கருப்பு என்று வைத்தல் சரியா? அல்லது விடாது கறுப்பு என்று வைத்தல் சரியா?

முன்னர் விடாது கருப்பு என்றே வைத்திருந்தேன். நண்பர்களின் ஆலோசனைக்குப் பின்னரே கறுப்பு என மாற்றினேன்.

e-Vishali said...

அருமையான கருத்துக்கள். நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி அய்யா....