Friday, April 26, 2019

காப்பியம் தமிழே - 3

கல்லுதல்= ஓசையிடல். ஒருகாலத்தில் திண்ணைப்பள்ளியில் கல்லிக் கல்லியே (=ஓசையெழுப்பியே) சிறார் படித்ததால் கல்தல் கற்றலாயிற்று. கல்வியும் ஆயிற்று. (நானும் சிற்றகவையிற் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தான் படித்தேன். 3 ஆம் வகுப்பில் அரசினர் கல்விமுறையில் வரும் தனியார் பள்ளிக்கு மாறினேன்.) திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரும், ஓரிரு சட்டாம்பிள்ளைகளும் இருப்பர். எழுத்து, செய்யுள், கணக்கு எல்லாவற்றையும் ஆசிரியரோ, சட்டாம்பிள்ளையோ சத்தமிட்டே சொல்லித் தருவர். மாணவர் திருப்பிச் சொல்வர். ”அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம் ... ஓரோண் ஒண்ணு, ஈரோண் ரெண்டு...” என்றே பயின்றோம். பள்ளிமுழுதும் கல்லெனும் ஒசை கேட்கும். (இன்றும் என் வீட்டிற்கருகில் CBSE பள்ளியில் கல்விச்சத்தம் ஓரோ பொழுதில் வானம் பிளக்கும். முகனக் (modern) கல்வி, ஓசையின் பங்கைப் பெரிதுங் குறைத்தாலும் முற்றிலும் விலக்கவில்லை.)

கற்றலைக் கத்தலென்றும் பேச்சுவழக்கில் சொல்வார். கத்தல்= உரத்தபேச்சு, அலறல். ”கத்து கடல் சூழ்நாகை காத்தான் தன் சத்திரத்தில்..” எனும் தனிப் பாடல் கேட்டிருக்கிறீர்களா? கல் ஒலிக்குறிப்பு கொல்லெனவுந் திரியும். (கல் வேர் பற்றி கு. அரசேந்திரன் 4 அரிய நூல்கள் எழுதினார். படிக்காதவர் படியுங்கள். சொற்பிறப்பியல் புரியும்.) கத்தல்= ஓதல். படிப்புக்குக் கல்விப் பெயர் சத்தங் கருதி ஏற்பட்டது. கல்லோடு உகரவீறு சேர்ந்து கல்வாகிப் பின் கல்வியானது. கல்>கல்வு>கல்வி. (ஒப்பு நோக்குக: செல்>செல்வு (அழகு) >செல்வி.) ஏறத்தாழ எல்லாத் திராவிட மொழிகளிலும் கல்வியோடு தொடர்புடைய சொல்லுண்டு. கல்வியில் விளைந்த கூட்டுச்சொற்களும் பல. அவற்றை இங்கு நான் விவரிக்கவில்லை. கற்பு= படிப்பு. இதுவே அதன் முதற்பொருள். மாறாக பெண்ணின் மணவொழுக்கம் தொடர்பாய்ப் பிற்காலம் பேசியது பொருள்மாறிவந்தது. உடல்வரிதியாய்ச் சொல்வது முறையற்றது. பெண்ணுக்கோர் ஒழுக்கமெனில் ஆணுக்கும் அதுவுண்டு பெரியோரும், பெற்றோரும், கணவனும் கற்றுத் தந்ததற்கு மாறாது வாழ்தலே சங்க காலத்தில் கற்போடு வாழ்தலாகும். கற்பு= கற்றது. இதற்குச் சொல் திறம்பாமை என்றும் பெயருமுண்டு.             

கல்= பேரோசைக் குறிப்பு; கல்லாம்>கல்லம்= ஒலி கேளாதவன். கல்லல்= ஒரேநேரத்தில் பலர்பேச எழுமொலி. அதனாலெழும் குழப்பம், கல்லவடம்= கல்லும்வட்டம், பறைவகைகளில் ஒன்று; கல்லவல்= கற்கவல்ல பா. கல்லார்= படிக்காதவர். கல்லி= படித்தவன். குழந்தை ”கல்லியாய்ப் பேசுது.” கல்லி> கெல்லி>கேலி= நகையாட்டு. கல்லோலம்= ஒசும் அலை. கலகல= ஒலிக் குறிப்பு. கலகம்= சத்தமிட்டுச் சண்டையிடல். கலித்தல்= ஒலித்தல்; கலியோசை= துள்ளலோசை. ”முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணியெழுந்தது” என்பது சிலம்பின் மங்கலவாழ்த்து. கலிப்பு= ஒலிக்கை. கலியோடு எதுகைசேரக் கலிபிலி= ஆரவாரம். கலி+யாணம்= கலியாணம். தலைவன் தலைவி கால்கட்டிற்கு (யாணம்= கட்டு) உறவினர், நண்பர், ஊரார் சேரின், கலியெழும். கலின்கலின்/கலீர்கலீர்= ஓசைக்குறிப்பு. கல்>கலுழ்= அழல். கழறல்= சத்தமாய்ச் சொல்லல் க(ல்)ம்பல்= பேரொலி எழுப்பல். மராத்தியில் கம்பல்= ஊதுசங்கு; கம்பலை= அழுகொலி. குக்குக், கக்கக், கெக்கெக், கொக்கொக் எனவும் ஒலிக்குறிப்பெழும். குக்குக்கென்பதால் தான் கோழி குக்குடமானது. கக்கல்= தெற்றிப் பேசுவோர் இடையிலெழுப்பும் ஒலிக்குறிப்பு. 

கல், கர்ரென்றுந் திரியும். கரகர= ஒலிக்குறிப்பு. முடிவில் கரைதல்= சத்தமிடல், அழுதலென்றும் பொருள்கொள்ளும். விதவிதமாய்க் ககரத்தில் ஒலித்தலைக் குறிப்போம். குதிரை கனைக்கும். கோழி கொக்கரிக்கும். குயில் கூவும். நாய் குரைக்கும், கழுதை கத்தும். கழல்>கழற்று>கழத்து>கத்து. கத்துவது சிலபோது கதலும். கதல்>கதறு= உரக்க அழுதல், கதலுதல்= நடுங்கல், அசைதல்; கதித்தல் = ஒலித்தல்; கதிதம்= உரைக்கப்பட்டது; கதை= உரையாடல் ஈழத்தில் கதைத்தல் என்பது இதுவே. story சொல்வதல்ல. கல்தல் கத்தலாகிப் பின் கதமெனும் சொல்லாகும். பாகதம்= பரந்த பேச்சு, நாவலந் தீவின் வடபுலத்திற் பெரிதும் பரவிய பேச்சு, சம்கதம்>சங்கதம்= கலப்புப்பேச்சு. நாவலந்தீவின் பலமொழிகளிலிருந்து சொற்கள், இலக்கணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கலந்து புனைந்த பேச்சு, பின் இது செம்கதம்>செங்கதம்= செம்பேச்சு என்றாகும். standardized speech, (செந்தமிழ் போல. மொள்>மொழு>மொழி. மொழு>மிழு> மிழற்று= பேசு. தம்மொழி தமிழி>தமிழாயிற்று. their language.)

தமிழிசையின் எழுசுரங்களின் சொற்பிறப்பு தெரியுமோ? குரல் என்பது அடிப்படை ஒலி (குர்ரெனும் ஒலிக்குறிப்பில் பிறந்தது) குரத்தம் (= ஆரவாரம்), குரம் (= ஒலி), குரவை>குலவை (= மகிழ்வொலி), (தென்பாண்டிப் பெண்களின் குலவை தெரியுமோ?) குருமித்தல் (= பேரொலிசெய்தல்), குரைத்தல்> குலைத்தல் (= ஆரவாரித்தல்), குலிலி (= வீராவேச ஒலி), குழறல்/குளறல் (= பேச்சுத் தடுமாறல்), குளிறல் (= ஒலித்தல்), குறட்டை (= உறக்கத்தூடே மூசும் ஒலி) எனும் சொற்களை எண்ணின், குர் ஒலிக்குறிப்பு புரியும்.) துத்தம், குரலுக்கு உயர்ந்த ஒலி. குரலொடு காய்ந்தது காய்க்கிளை. அதாவது குரலுக்குப் பகையொலி. குரலுக்குப் பக்கம் உழை.= குரலுக்கு நள்ளிய ஒலி (நள்ளல்= நெருங்கல்) குரலுக்கிணங்கிய ஒலி இளி. தாரத்திலும் வெளிரிய ஒலி விளரி. குரலிலும் (மிகமிக) நீண்ட ஒலி தாரம்

கல்தல் போல் சல்தல்வினை எழுந்து சத்தமெனும் பெயரை உருவாக்கும். (அதைச் சப்தமாக்கிச் சங்கதம் பயன்கொள்ளும்.) சரகமும் சத்தமும் ஒரே பொருள் குறிக்கும் ஒலிச்சொற்கள். சகரம் தவிர்த்த அத்தமும் சுருதி குறிக்கும். (சென்னைப் பல்கலையின் முன்னாள் பூதியற் (physics) பேராசிரியர் வீர பாண்டியன். http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R.) தமிழிசைக் கருத்தே இன்னொரு விதமாய் மணிப்பவள நடையில், சங்கதத்துள் நுழையும். குரல்= சத்தம்>சக்தம்>சக்சம்>சக்ஷம்>சட்சம். துத்தம்= உயரொலி= பேரொலி= விடையொலி, விடைமம்>விடமம்>வ்ரிஷமம்>ரிஷபம். கய்க்கிளை> காய்க்கிளை= பகையொலி =காய்ந்தஆரம் =காய்ந்தாரம்>காந்தாரம்; உழை= உள்ளொலி =நட்டுமம்>மத்திமம், இளி= இணங்கொலி= பொஞ்சொலி= பொஞ்சுமம்> பஞ்சுமம். விளரி= விளரொலி= தய்வத ஒலி= தய்வதம்; தாரம்= உச்சவொலி= நிவந்தஒலி= நிவதம்>நியதம்>நியாதம்>நிஷாதம். ஏழுசுரங்கள் பற்றிய என் முழுத்தொடரையும் படியுங்கள். நான்சொல்வது புரியும்.

http://valavu.blogspot.com/2008/03/1.html
http://valavu.blogspot.com/2008/03/2.html
http://valavu.blogspot.com/2008/03/3.html
http://valavu.blogspot.com/2008/03/4.html

க என வாய்திறந்து (அங்காத்து) தொடர்ந்து ஒலிக்கவேண்டுமெனில் நெடில், அளபெடை என நீண்டுகொண்டே போகும். (அளபெடை= அளவு மிக்கெடுத்தல் உலகியல் அளபெடையைப் பலவிடங்களில் பார்த்துள்ளோம். வீதியில் தயிர் விற்கிறவள், “தயிரோஒஒஒ தயிரு” என்கிறாளே? கோயிலில் தேவாரம் பாடுவார், ”பொன்னாஅர் மேனியனேஎஎ!....” என்கிறாரே? தொலைவில் போகின்ற பெரியவரை, “அண்ணோஒஒ....ய்” என விளிக்கிறோமே? அழுகையிற் கூட அளபெடை பயில்கிறோம். இது பறவைகளைப் பார்த்து வந்தது. கொக்கரக்கோஒஒ என்கிறது கோழி. காகா என்கிறது காக்கை. காள்காள் என்கிறது கழுதை. இதனாலேயே கழுத்தைக்குக் காளவாய் என்றும் பெயருண்டு. காளவாயன் = கூச்சலிட்டுக் கத்துபவன்;

]ககரம் தவிர்த்த இன்னொரு வினையுமுண்டு. ஆ-தல், ஆகாரமிடுதல் என்போம். அதைச் சற்றுதிரித்து ஆதல்>அகவுதல் என்றுஞ் சொல்வோம். (தமிழில் இது பலசொற்களுக்கு ஆகியுள்ளது. ஏறத்தாழ ஒரு மொழியியல் விதியெனலாம். பகல்>பால், அகல்>ஆல், மகன்>மான். நான் 100 சொற்களுக்கும் மேல் பட்டியலிடமுடியும். இது இரு திசைகலிலும் நடக்கும். அகவுதல் ஆ-தல் ஆயிற்றெனலாம். ஆ-தல் அகவுதல் ஆயிற்றெனலாம். இரண்டும் ஒன்றே.  மயில் அகவுதல் என்கிறோமே? அதன்பொருள் அழைத்தல் நாலைந்து ஆண்டுகளுக்குமுன் call centre என்பது பெருவலமாயிருந்தது. அது அகவு மையம்/நடுவம், அகவல்= மயிற்குரல், அழைக்கை, எடுத்தலோசை ”அகவல் என்பது ஆசிரியம்மே”- தொல் பொருள் செய்யுளியல் ,80 ஆம் நூற்பா. அகவற்பாட்டு= ஆசிரியப்பாட்டு. படிப்புச் சொல்லிக்கொடுக்கும் குரல் இழையும். அகவலன்= பாணன்; அகவர்= பாடித் துயிலெழுப்பும் பாணர்; “அகவன் மகளே, அகவன் மகளே!” என்பது ஔவையார்பாடிய குறுந்தொகை 23 ஆம் பாட்டு.]

அளபெடுத்துக் கூப்பிடல் போலவே பொருள்கொண்டது கல்தல்>கா(ல்)-தல். கா(ல்)ச்சுமூச்சு= ஒலிக்குறிப்பு.”காச்சுமூச்சுனு கத்தாதே, பையப்பேசு”- எங்களூர் உரையாடல். கூப்பீட்டுத் தொலைவை தமிழர் நீட்டளவை உணர்த்தியது. தென்புல நெடுந்தொலை வாய்ப்பாட்டில் 500 பெருங்கோல் (தண்டம்)= 62 1/2 கயிறு= 1 கூப்பீடு= 5500 அடி= 1.04167 மைல்= 1.6763595 கி.மீ வடபுல வாய்ப்பாட்டில், 500 கோல்= 31 1/4 கயிறு= 1 கூப்பீடு= 2750 அடி= 0.520835 மைல்= 0.8381798 கி.மீ ஆகும். இதற்கடுத்த அளவையாய்க் கா(ல்)தல் காதம் எனும் பெருந்தொலைவைக் காட்டும்;. காவதமென்றும் திரியும். காவுதலும் கூப்பிடலே. தென்புல வாய்ப்பாட்டில், 4 கூப்பீடு= 1 காதம்= 22000 அடி= 4.166667 மைல்= 6.7050438 கி.மீ. வடபுல வாய்ப்பாட்டில், 4 கூப்பீடு= 1 காதம்= 11000 அடி= 2.088888 மைல்= 3.3525219 கி.மீ ஆகும். காதம்/காவதம் எனும் கலைச்சொல் வடக்கில் குரோசம் என்று பரவியுள்ளது. குரோசம் நம் குரைதல்/கரைதல் (காகம் காகாவெனக் கரைகிறது- to cry) வினையோடு தொடர்பு உற்றது. குரையம்>குரயம்>குரசம்>குரோசம். காதம்/காவதம்/குரோசம் ஆகியவற்றின் வேர்கள் தமிழில்தான் உள்ளன. தேடியறியத்தான் ஆட்களைக் காணோம். சங்கதத்திற்கு தண்டனிடத் துடிக்கிறோம்.

முன்னே சொன்னதுபோல் ஒருவன் இன்னொருவனுக்கு ஒரு நிகழ்வைச் சொல்லுவது கதைத்தல். சொல்லப்படுவது கதை. அதேகதையைப் பலரறியச் சத்தமாய்ச் சொல்வது காதை. காப்பியங்களின் உட் பகுதியாய்க் ”காதை” வரும். காப்பியங்கள் தனித்துப்படிப்பது ஒருபக்கமெனில் எல்லோருமறியக் கூட்டாய்ப் படிப்பதும் கேட்பதும் கூத்தாக்குவதும் இன்றுமுண்டு. கால் வினையின் அடுத்த வளர்ச்சி காள். கால்>காள்>காளம்= ஊதுகொம்பு. காளகம், காகாளம்>காகளம், எக்காளம் என்றுமாகும். ஆங்கிலத்தில் horn. இதிலும் Nostratic தொடர்பிருக்கலாம். பித்தளையில் நீண்ட குழலிசைக் கருவி காளம். கோயில் மேளங்களிலும், நாட்டுப்புற இசையிலும் இக்கருவி பெருவலமாய்ப் பயிலும். புள்ளோசை கூடக் காளமெனப்படும். காகளி = இன்னிசை.

முன்னே சொன்னேன். கற்பு= சத்தமாய்ப் படிப்பது. (கற்புண்டேல் கல்வுமுண்டு. புகரவீற்றுச் சொற்கள் வுகரஈறும் காட்டுவது பன்னூற்றுச் சொற்களிலுண்டு. புகரவீறு மட்டுமே தமிழென்பது ஒருதலைப் பேச்சு.) ’கல்லி’ போல் கல்வி ஒருகாலத்தில் படிப்பையும், படித்தவனையுங் குறித்திருக்கலாம். இக்காலம் படிப்பைமட்டுமே குறிக்கும். பேச்சுவழக்கில் கல்வி>கவ்வி>கவி ஆகிப் படித்தவனைக் குறிக்கும்.. வெட்கத்தை வெக்கம் என்கிறோமே, அதுபோல் இதைக்கொள்ளலாம். ’மெய்யொலி மயங்கல்’ தொல்காப்பியத்தில் வரும். பாகதத்திலும் இப்பழக்கமுண்டு. இலக்கியம், இலக்கணம், யாப்பு, இசை பலவும் படித்தவன் கவி. மோனியர் வில்லியம்சில் gifted with insight, intelligent, knowing, enlightened, wise, sensible, prudent, skillful, cunning, thinker, man of undestanding, leader sage, seer, prophet என்றெலாம் சொல்லி, a singer, bard, poet என்ற பொருள்கள் வேதத்திலில்லை என்றுஞ் சொல்லும். இதுவொரு முகன்மைக் கூற்று. கவியின் முதன்மைப் பொருள் சங்கதத்தின் படியும் படித்தவனே.

கவியின் ஆக்கம் சங்கதத்தில் கவித/கவிதா. தமிழில் தற்பவமாய்க் கவிதை யாகும். கவிதைக்கும் பாட்டுக்கும் வேறுபாடுண்டு. நம்மூர் புதுக்கவிஞர் இவ்வேறுபாட்டை அறிந்தோரோ, என்னவோ தமிழிற் பாட்டு/ பா என்பது எப்போதும், பாடத்தெரிந்தவர் கூற்று. இவர் படித்தவராகத் தேவையில்லை. நம்மூர்க் கல்லாப் பாட்டி பாடுவது கூட பாட்டுத்தான்; பண்தான். பாடத் தெரிந்தவர் பாணர்/பாடினி. இவர் பாடுவது கவிதையில்லை. ஓசையின்றிப் பாட்டில்லை. கவியின் பெருவாக்கத்தைச் சங்கதத்திற் காவ்ய என்பர். காவ்ய - படிப்பது. பாடுவதில்லை. (இராமவதாரம் படிக்கவேண்டியது. பாடவேண்டியது இல்லை. பாடவேண்டுமெனில் கோபால கிருட்டிண பாரதியின் “எப்படிப் பாடினரோ? - வுக்குப் போகவேண்டும்,

காவ்ய என்பதற்கும் அங்கு வரையறையுண்டு. ஆனால் அது செய்யுளாகத் தேவையில்லை. தமிழிற் காப்பியம் என்பது இதுநாள்வரை செய்யுள் தான். முதல்மாற்றம் சிலம்பில் வந்தது உரையிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள். இதை நான் மாற்றலாம் என்கிறேன். கற்பு கப்பாகிப் பின் காப்பாகும். கற்று வந்தது காப்பு. காப்பு+ இயம்= காப்பியம். இதைக் காவ்யத்தின் தற்பவமாய்ச் சொல்வது பிழை. இரண்டும் வெவ்வேறுமுறையில் கல்வு, கற்பு எனும் தமிழ்ச்சொற்களிலிருந்து கிளர்ந்தவை. காப்பியம் இன்றும் தமிழில் உள்ளது காவ்யம் சங்கதத்திலுள்ளது. இதை ஏற்கனவே என் வலைப்பக்கத்தில் கவி என்ற இடுகையில் [http://valavu.blogspot.com/2018/09/blog-post_22.html] சொன்னேன்.

காப்பியத்தின் தமிழ் வரையறையாய் “அறம், பொருள், இன்பம் எனும் நிலைப் பொருளை (பின்னால் வீடும் இதோடு சேர்க்கப்பட்டது) தொடர்நிலைச் செய்யுள் வழி சொல்வது” என்பார். இந்த வரையறை சங்கதத்தில் இல்லை. சங்கத வரையறை ஆளை வைத்து வரும். kAvyA. (H1) kAvy/a [p= 280,1] [L=49757] mfn. (fr. kav/i) , endowed with the qualities of a sage or poet , descended or coming from a sage , prophetic , inspired , poetical RV. i , 117 , 12 ; viii , 8 , 11 VS. AV. [L=49758] [id. RV. v , 39 , 5 ; x , 144 , 2 ; VS. ] [L=49759] mf(A)n. coming from or uttered by the sage uzanas Para1s3. MBh. ii , 2097 (H1B) kAvy/a [L=49760] m. (gaNa kurv-Adi) a patr. of uzanas RV. TS. &c (H1B) kAvy/a [L=49761] mf(A)n. of the planet zukra VarBr2S. Sarvad. (H1B) kAvy/a [L=49762] m. pl. poems MBh. ii , 453 (H1B) kAvy/a [L=49763] m. a class of Manes S3a1n3khS3r. La1t2y. Mn. iii , 199

(H1B) kAvy/a [L=49764] m. the descendants of kavi VP.(H1B) kAvyA [L=49765] f. intelligence L. (H1B) kAvy/a [L=49766] m. N. of a female fiend (= pUtanA) L. (H1B) k/Avya [L=49767] n. wisdom , intelligence , prophetic inspiration , high power and art (often in pl.) RV. AV. S3Br. xi (H1B) kAvy/a [L=49768] m. a poem , poetical composition with a coherent plot by a single author (opposed to an itihAsa) R. Sa1h. &c (H1B) kAvy/a [L=49769] m. term for the first tetrastich in the metre SaT-pada (H1B) kAvy/a [L=49770] m. a kind of drama of one act Sa1h. 546 (H1B) kAvy/a [L=49771] m. a kind of poem (composed in Sanskrit interspersed with Prakrit) Sa1h. 563 (H1B) kAvy/a [L=49772] m. happiness , welfare L.
.
இந்த வரையறையில், இளங்கோ, சாத்தனார், திருத்தக்க தேவர், வளையாபதி ஆசிரியன், குண்டலகேசி ஆசிரியன், சிறுகாப்பியங்களின் ஆசிரியர், கம்பர், சேக்கிழார், வில்லிபுத்தூரார், கல்கி என எவரும் வரமாட்டார். நம்மூர்க் காப்பியங்களை இந்த வரையறை ஏற்கவே ஏற்காது. என்னுடைய இறுதி முடிவு காப்பியம் என்பது தமிழ்ச்சொல் தான். காவியம் என்ற அதன் திரிவு வடக்கே புழங்கியுள்ளது. இரண்டிற்கும் உறவுண்டு. ஆனால் இத்தனை கலிச்சொற்கள் இருக்கும்போது மாற்றாய்க் கருத்துச் சொல்வது முறையில்லை.

அடுத்த இடுகையில் அடுத்த சொல்லான உலகத்தைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.