Sunday, May 26, 2019

நாத்தி -1

பர்மாவில் ஒரு தமிழர் குமுகத் திருமணத்தில் நடந்த ”நாத்திவிளக்கு” சடங்கு பற்றி நண்பர் நா.ரா.கி.காளைராசன் மின்தமிழ் மடற்குழுவிலும் தன் முகநூல் பக்கத்திலும் தெரிவித்தார். சில குமுகங்களின் திருமணத்தில் தாலிகட்டும் நிகழ்வில் மணமக்கள் மணமேடையைச் சுற்றுகையில் மணமகனின் தங்கை/தமக்கை முன்சென்ற வண்ணம் ஒரு தாம்பலத்தில் வைத்துக் கொண்டு செல்லும் கைவிளக்கை நாத்தி விளக்கென்பார். நாத்திவிளக்கு ஏற்றுவதற்குத் தரும்பணம் நாத்திப்பணம். 

இச்சடங்கு தமிழகத்திலும், மலேசியாவிலுங்கூட உண்டென்று பின்னூட்டு எழுந்தது. இவ்வுரையாடல் ஊடே, நாத்தி, நாத்தூண் நங்கை (சிலம்பில் 16 ஆம் காதை, 18-21 அடிகள்), நாத்தனார் போன்றவற்றின் சொற்பிறப்பியல் பற்றியும் கேள்வியெழுந்தது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில், இதற்கென 3 விளக்கங்கள் வரும்.

”ஒரு குடியிற் பிறந்த பெண், பூப்பெய்தித் தக்க பருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொது மரபாகும். இஃதே போன்று, ஒரு குடியில் நாற்றாயிருந்து. மறு குடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை உடையாளாதலின், ’நாற்று அன்னார்’ எனும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க” என்பது முதல் விளக்கம்.

“ஒருகால் நாத்துணையார்→ நாத்தனார் என்றுஞ் சொல்லி நா+ துணையார்= பிறந்தகத்திலிருந்து, புகுந்தகத்திற்கு வந்த பெண்ணுடன் உறைந்து, ஆறுதலும் தேறுதலும் தரும், கணவனின் தமக்கை அல்லது தங்கை” என்பது 2 ஆம் விளக்கம். 

”சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள், நாத்தூண் நங்கை என்று குறிப்பதால், புகுந்த வீட்டார், பிறந்த வீட்டைத் தாழ்த்திப் பேசினால், புதுப்பெண் தன் வீட்டுப் பெருமையைத் தூணாக நின்று காப்பவளென்று, பொருள்படுதல் காண்க” என்பது 3 ஆம் விளக்கம்..

இவை போக 4 ஆம் விளக்கமாய், (தமிழ் உறவுப் பெயர்களைச் சங்கத வழி பெற்றதாய்ச் சொல்வதில் ஆர்வங் கொள்ளும்) ஒரு சிலர் நநந்த்ரி/நநாந்த்ரி எனும் சொல்லின் தற்பவமே நாத்தியென்பார். இதை ஏற்போர் நாத்தூண் நங்கை என்பது ஒரு பொருட்  பன்மொழி (pleonastic Using an excessive number of words; especially using different words having the same meaning) என்பார். ‘நடுச்செண்டர், ட்ரங்குப்பெட்டி’ போல் இங்கே சங்கதப் பெயரும், தமிழ்ப் பெயரும் ஒருங்கு சேர்ந்ததென்பர். 

தவிர, கொங்கு வட்டாரத்தில் நங்கை என்பது கணவனின் சோதரியைக் குறிக்குமென்பர். இவர் விளக்கத்தின் படி நாத்தூண் என்பது தனியே ஒரு பெயர்ச்சொல்லாம். 

இந் 4 விளக்கங்களிலுமிருந்து வேறுபட்டு, இச்சொற்களின் சொற்பிறப்பியலை மூவேறு விதமாய் இங்கு விளக்க எண்ணுகிறேன்.

இராம.கி. யின் முதல் விளக்கம்:

முதலில் முயங்கலெனும் வினைச்சொல்லைப் பார்ப்போம். இதன் பெயர்ச் சொல் முயக்கம். முயங்கலுக்குப் 

பொருந்தல் (முலையும் மார்பும் முயங்கணி மயங்க-பரிபா. 6:20), 

தழுவல் (முயங்கிய கைகலை யூக்க- குறள் 1238), 

புணர்தல் (வழியிடை போழப்படாஅ முயக்கு- குறள் 1108- பிரிக்க முடியாத் 
தழுவல்/புணர்ச்சி" என்பார் வள்ளுவர். முயக்கம் பெற்றவழி- ஐங்குறு. 93 உரை), 

செய்தல் (மணவினை முயங்கல் இல்லென்று- சூளா. தூது 100) 

என 4 பொருள்கள் சொல்லப்படும். முயங்கிக் கொள்ளல் என்பது கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்தலாகும். முள்>முய்>முய>முயங்கு> முயங்கல் என்று இச்சொல் எழுந்ததாய் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி சொல்லும். தமிழில் ”ங்கு” பயிலும் வினைச்சொற்களை ஒரு வகையில் பார்த்தால், “lingering verbs" எனலாம். ஆங்கில present continous என்பது போல் இவை தோற்றினாலும் முற்றிலும் அப்படியில்லை. சிலவற்றை ஆழ்ந்து காண்போம்.

"அசங்கல், அடங்கல், அணங்கல், அரங்கல், அலங்கல், இசங்கல், இடங்கல், இணங்கல், இயங்கல், இரங்கல், இலங்கல், இளங்கல், இறங்கல், உடங்கல், உணங்கல், உயங்கல், உலங்கல், உழங்கல், உறங்கல், கசங்கல், கரங்கல், கலங்கல்"- இவற்றில் அங்குச் சாரியை உள்நிற்கும். 

”அணுங்கல், அதுங்கல், அமுங்கல், அலுங்கல், அழு/ளுங்கல், அறுங்கல், இடுங்கல், இணுங்கல், இறுங்கல், உருங்கல், உழுங்கல், உளுங்கல், உறுங்கல், ஒடுங்கல், ஒதுங்கல், ஒருங்கல், ஒழுங்கல், கருங்கல்” போன்றவற்றில் உங்குச் சாரியை நிற்கும். 

இவையிரண்டே தமிழில் பெரிதுண்டு. ஆனால் “இழிங்கல், கலிங்கல்” என இங்குச் சாரியையும் ஓரோவழி குறைந்து நிற்கும். அது போது இங்குச் சாரியை இல்லாமலும் இல்லை. பலவிடங்களில் உங்குச்சாரியைச் சொற்களோடு இவை போலி காட்டும்.

இதே வினைச்சொற்களைச் சாரியைகளின்றியும் நம் பேச்சில் பயில்கிறோம். அங்குச் சாரியை இன்றி, ஆனால் ஐகாரஞ் சேர்த்தால், “அசைதல், அடைதல், அணைதல், அரைதல், அலைதல், இசைதல், இடைதல், இணைதல், இயைதல், இரைதல், ..........., இளைதல், இறைதல், உடைதல், உணைதல், ......., உலைதல், உழைதல், உறைதல், கசைதல், கரைதல், கலைதல்” என்பவை கிடைக்கும். [நடுவே 2 இடங்களில் சொல் தெரியாது அல்லது இற்றைப் புழக்கின்றி இடைவெளி காட்டுகிறேன்.) 

அதேபோல் உங்குச் சாரியை விடுத்தால், உகரத்தோடு “அண்ணுதல், அத்துதல், அம்முதல், அல்லுதல், அழுதல், அறுதல், இட்டுதல், இண்ணுதல், இறுதல், ......., உழுதல், உள்ளுதல், உறுதல், ஒடுதல், ஒதுதல், ஒருதல், ஒழுகுதல், கருதுதல்” என்பவை கிடைக்கும், (இங்கும் இடைவெளி விட்டுள்ளேன்.) 

அதேபோல இங்குச்சாரியை விடுத்தால் இகரஞ் சேர்த்து “இழிதல், கலிதல்” போன்றவை கிடைக்கும்.

முயங்கலில் அங்குச் சாரியை விட்டால், முயத்தலெனுஞ் சொல் கிட்டும். உகர, அகரப் பலுக்கல் திரிவில் இது மயத்தலாகும். (இதன் முன்சொல் மயங்கல்.) 

மயல்= ஆசை, காமவிழைவு, 
மையல்= காம மயக்கம். மனங்கலக்கும் காதல், 
மையல்தரும் மூலி= காமவுணர்வு தூண்டும் மூலிகை. 
மையாத்தல்= மயங்கல் (மலர் காணின் மையாத்தி, நெஞ்சே- குறள் 1112). 

மயத்தலில் விளைந்த பெயர்ச்சொல் மைத்தான்>மைச்சான்>மச்சான். இது வடசொல்லின் கொச்சைவழக்கெனப் பல தமிழாசிரியரே அறியாது சொல்வர். தமிழ் அகரமுதலிகளும் அவற்றை ஒதுக்கும். ஆழ்ந்து பார்த்தால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. சிப்பி என்றெண்ணி முத்தைத் தூக்கி எறிவதாகவே எனக்குத் தோன்றுகிறது), 

அடுத்து, மைத்துனன் என்பது மைத்தன் போன்றவனைக் குறிக்கும். அடிப்படையில் இவன் மனைவி அல்லது கணவனுடன் பிறந்தவன். மாமன் அல்லது அத்தை மகன், உடன்பிறந்தாள் கணவன் இப்படிப் பல உறவுகளைக் குறிக்கும்.

"மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து" என்று, ஆண்டாள் தான் கனாக் கண்டதைப் பாடுகிறாளே? நினைவுண்டா? மற்ற திராவிட மொழிகளிலும் இச் சொல் உண்டு. 

ம. மச்சனன், மச்சினன்; க மய்துன, மய்த, மய்தன; தெ.மேன; கோத. மசிண்; துட.மசிண்ப்; குட. மச்சினே; து. மைதினெ, மைதுனெ; கொலா. மச்; நா, மாச்; குரு. மேத ((ஆண்); பட. மைத. 

இதுபோக, மைத்துனனின் பெண்பாற்சொல்லாய் மைத்துனியின் இணைகளும் மற்ற திராவிட மொழிகளில் உண்டு. 

இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாது, மைத்துனன்/ மைத்துனி என்பவற்றை வடமொழி என்பது ஆய்விலாதோர் கூற்று. 

இன்னொன்றுஞ் சொல்லலாம். முயத்துனம்>மைத்துனம்> மைதுனம். இது புணர்ச்சிக்கான சொல். தற்புணர்ச்சி என்றெழுத வெட்கப்பட்டு, மைதுனத்தின் நீட்சியாய், சுய மைதுனம் (masterbation) என்று சில எழுத்தாளர் (வடமொழியென எண்ணி) எழுதுவார். அதுவும் திரிந்து கிடக்கும் தமிழே. (சுய என்ற முன்னொட்டைப் பற்றி வேறொரு இடத்தில் பார்க்கலாம்.)

முள் எனும் வேரில் இன்னுஞ் சில சொற்களுண்டு. 
முழவுதல்= நெருங்கிப் பழகல், 
முளவு>விளவு>விளாவுதல்= கலத்தல்; 
முள்>விள்> விள்ளல்= கலத்தல், விரும்புதல், 
விள்>விளரி= வேட்கை  
விள்>விளை> விழை= விருப்பம், 
விளையாடுதல்= விரும்பியாடுதல். 

இதுபோக வீழ்தல், விரும்பல், விடாய், வெய்யல், வெம்மல் ஆகியவையும் விரும்பலைக் குறிக்கும். (வெம்மல் வேண்டல் என்பது தொல்கா. உரி. 36) 

வேட்டல், வெஃகுதல், வெண்டுதல், வேண்டுதல், வேணுதல், வேட்டம், போன்றவையும் இதே பொருள் கொண்டவை. 

முள்>முழு>முழுவல் என்பது விடாது தொடரும் அன்பு. 
முழுவுதல், முள்குதல், மருவுதல் போன்றவை தழுவலைக் குறிக்கும். 

முல்>(மள்*)>மரு>மருவு என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சொல். மருமகன், மருமகளென்ற சொற்கள் இதன் வழிப் பிறந்தவை. மருவுகை என்பது இந்தையிரோப்பியன் marriage ஓடு இணை காட்டும். முள்> மள்>மண்ணு> மணம் என்பது கூட marriage இற்கு  இணை காட்டும்.

இனி முகரச் சொற்களின் போலியாய் எழக்கூடிய நுகர, நகரச் சொற்களுக்கு வருவோம். 

முப்பது>நுப்பது, 
முந்து>நுந்து, 
முதல்>நுதல், 
முனி> நுனி, 
முகர்>நுகர் 

போல் பலசொற்கள் முகர/நுகரப் போலி காட்டும். உகர> அகரப் போலியும் மிக எளிதில் பேச்சுவழக்கில் ஏற்படும். நயத்தல்= விரும்பல், ”பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று”- குறள் 150. 

இதை நள்>நய்>நய- என்றும் விளக்குவர். 
நைப்பு= நயப்பு= விருப்பம் ”நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்”- குறள் 580. நயத்தல்= தலைவனைக்கண்ட தலைவி தன் ஆசை கூறும் புறத்துறை (பு.வெ.11, பெண்பாற். 2). 
நயந்துசொல்லல்= விரும்பிச் சொல்லல், பாராட்டல்; 
நயந்தோர்= நண்பர், கணவர். 
நயப்பித்தல்= விரும்பும் படி செய்தல்; 
நயப்பு= அன்பு, பற்றாசை, நேசம். 
நயவர்= முறையுடையோர், காதலர் (பிங்), நண்பர்; 
நயவருதல்= விரும்பல்; 
நயவான்= விரும்பத் தக்கவன்; 
நயன்= உறவு, 
நயிச்சியம்= தன்வயப்படுத்தல்.

நயன்/நயவனின் நீட்சிகளே எல்லோர்க்கும் தெரிந்த நாயகன், நாயகத்தி, நாயகி போன்றவையாகும். கதைநாயகன் என்பான் விரும்பப் படுபவன். நயத்தலில் விளையும் ஒரு பெயர்ச்சொல் நயை>நசை. நயத்தல்>நச்சுதல்= விரும்பல்; (”ஒருவரால் நச்சப் படாதவன்”- குறள் 1004 நச்சினார்க்கினியர் புகழ்பெற்ற உரைகாரர். குறளுக்கு உரைசெய்தவர் இன்னொரு நச்சர். 

மேலே சொன்னது மட்டுமில்லை. நுள்> நெள்*> நெய்> நேய்> நேயம் = நெய் போல் ஒட்டுங் குணமாகிய அன்பு. 
நேயம்> நேசம்= அன்பு, இணக்கம், விருப்பம். 
நேசன்= நண்பன்; 
நேசி= காதலி 
நள்>நள்ம்பு>நம்பு>நம்பி= விரும்பப்படுபவன்; 
நம்பு= விருப்பம் (”நின்னிசை நம்பி” - புறம் 136. ”நம்பு மேவு நசையாகும்மே” தொல்.சொல்.329.) 
நள்+த்+அல்= நட்டல், 
நள்>நண்>நண்பு, 
நட்பு= காதல்.

அடுத்து, நட்டு>நத்து>நத்தல்= விரும்பல் (”நாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை”- தமிழ்நா.74. தெலுங்கு, .மலையாள மொழிகளில் நத்த, நத்து என்ற சொற்களுண்டு.) 
நத்து= விருப்பம் (நன் நத்தாக - திருப்புகழ் 84). 
நத்தன்= விரும்பப்படுபவன். 
நத்தனின் நீட்சியே நாதன் எனுஞ் சொல். (= விரும்பப் படுபவன். கமத்தலின் நீட்சி காமம், கதுவலின் நீட்சி காதல் என்பது போல் ஒரு வினையின் வழி பெயர்ச்சொல்லாகையில் தொடக்க அகரம் நீள்வது தமிழின் பழக்கம் தான்.) 

நம்மில் பலரும் நாதனை வடமொழிச் சொல்லென எண்ணிக் கொள்கிறோம். ஏராளமான இறைவன் பெயர்கள் நாதன் தான். என்னைக் கேட்டால் கட்டாயம் தமிழின் உட்கிடை நாதனிலுள்ளது என்பேன். அது வடசொல்லெனில், மேற் சொன்ன சொற்களுக்கும் என்ன சொல்வது? அவை தமிழா? வட மொழியா? தமிழ்ச்சொற்களை வடமொழிக்குத் தானமிடும் போக்கு நம்மில் அதிகமாகவே உள்ளது. 

நாதனுக்கு வடமொழியில் வேரில்லை. நத்தன்> நாத்தன்>நாதனின் தங்கை, நாத்தன்+ஆள்= நாத்தனாள் எனப்படுவாள். நாத்தனாள் பெரியவளாகவோ, அன்றி மரியாதை கொடுக்க வேண்டியவர் ஆகவோ இருந்தால், நாத்தனார் எனப்படுவார்.
,
இனி நங்கை என்ற சொல்லிற்கு வருவோம். பெண்ணின் பருவங்களாய் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று 7 பருவஞ் சொல்வர். மகர/நகரப் போலியில் மங்கை, நங்கையாகலாம். நல்ங்கை நங்கையானால் அது பெண்ணிற் சிறந்தாளைக் குறிக்கும். மகனின் மனைவி, அண்ணன் மனைவியுங்கூட நங்கையென்றே குறிக்கபட்டுவாள். 

விரும்பத் தகுந்தவள் என்ற பொருளில் நள்+ந்+கை= நண்கை>நங்கை என்றும் ஆகலாம். நங்கை என்பது கணவனின் தங்கையை, தமக்கையை மட்டும் குறிக்கும் விதப்புச்சொல் ஆகாது. நாத்தூண் நங்கை என்பதைப் பிரிக்கும் போது நாத்தூண் நங்கை என்று பிரிப்பது புணர்ச்சித் தவறு. நாத்தூண் என ஒரு பெயர்ச் சொல்லும் த்மிழில்  கிடையாது. நாத்து+ஊழ்+நங்கை என்று பிரிப்பதே புணர்ச்சி பேணும் சரியாகும். ஊழ்தலுக்கு முதிர்தல் என்று பொருள்.

ஒரு வீட்டிற்குப் புதிதாய் வரும் மருமகளை விட, கணவனின் தங்கையோ, அல்லது தமக்கையோ, நெடுநாள் புக்ககத்தில்/விருப்பகத்தில் இருந்தவள். எனவே அவள் தன் இருப்பால் முதிர்ந்தவள். நாட்பட இருந்த நங்கை என்ற பொருளில் நாத்து ஊழ்நங்கை> நாத்தூணங்கை எனபது முற்றிலுஞ் சரி. . 

இது வரை நாத்தி/நாத்தனார்/நாத்தூண்நங்கை என்ற சொற்களை ஏற்கனவே சொன்ன 4 விதங்களிலிருந்து வேறுபட்டு முற்றிலும் புதியதொரு பார்வையில் பார்த்தோம். இனி இரண்டாம், மூன்றாம் விதப் பார்வைகளைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: