Friday, June 15, 2007

தாலி - 2

இனி மகாவின் முதற் கூற்றுக்கு வருவோம்.

1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.

வேர்ச்சொல்லை இனங்காண்பது ஒருவேளை பேரா.தொ.பரமசிவனுக்கு வாய்க்காது போயிருக்கலாம். ஆனால் ஆய்வு அவரோடு நின்றுவிடுவது இல்லை. அவருக்கு அப்புறமும் நடக்கும். தாலிப்பழக்கம் தமிழரிடம் ஆழ்ந்து காணப்படுகையில், அதன்வேர் தமிழரிடமின்றி, வேற்று மொழியினரிடம் இருக்குமோ? கொஞ்சம் ஆழப்போனால், தாலியின் வேரை தமிழிலேயே அடையாளம் காணமுடியும். அதற்குத் தேவையானது, நம் மரபுகளைப் புரிந்து கொள்ளுவதே!

தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவதும் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத்தான் விரலிமஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள், விரலிமஞ்சள் ஆகும். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்.) தாலியின் சூழ்க்குமம் "மஞ்சள், கயிறு, கட்டுதல்" ஆகியவற்றில் அடங்கியுள்ளதே ஒழிய, பொன், பணம், சங்கிலியில் அல்ல.

அப்படி என்ன, திருமணத்தில் மஞ்சளுக்கு முகன்மை வந்தது, என்பது புரிய வேண்டும்? அவ்வளவுதான்.

மஞ்சளுக்கும் திருமணத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு தமிழர் மரபில் என்றென்றும் உண்டு. மல் என்னும் வேரில் கிளைத்த மல்குதல் என்ற சொல்லிற்கு பொலிதல் (to become fertile), அதிகப் படுதல் (to grow, to increase) என்ற பொருளுண்டு. மல்>மலர்>மலர்தல் என்ற வளர்ச்சியில் பொலிவு, பூ விரிதல் என்ற பொருட்பாடுகள் வந்துசேரும். அதுமட்டுமல்ல. "பொன், உலோகத்தைக் குறிக்கும் மாழை, மாடை" என்ற சொற்களும் கூடப் பொலிவுப் பொருளில் கிளைத்தவை தான். கத்தூரி மஞ்சளைக் குறிக்கும் சொல்லான மாளம் கூட இந்த வழி வந்தது தான்.

மல்>மால்>மாழை = பொன், உலோகம்
மல்>மள்>மளி>மளிகாரம் = வெண்காரம்
மள்>மண் = புழுதி, சுண்ணச் சாந்து, தரை
மள்>மாள்>மாளம் = கத்தூரி மஞ்சள்
மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்
மாடு>மாடை = பொன், அரை வராகன், உலோகம்

மல்கின் விரிவாய் எழுந்த மலிகுதல் என்ற சொல்லும் பெருகுதற் (to grow) பொருளைக் குறிக்கும். மல்கு>மலுகு>மலிகு= பெருகுதல்

அடுத்து மங்கல் என்ற சொல் எழுந்ததும் இதே வழியில் தான். இருள் மிகுந்த பின்புலத்தில் ஒளிபாய்ந்து பெருகும்போது அது மங்கலாய்க் காட்சியளிக்கும்.

மலிகு>மலிங்கு>மயிங்கு>மய்ங்கு>மங்கு>மங்கல் என்ற சொல் மங்கல் ஒளியைக் குறிக்கும்.

மங்கலின் திரிவே தமிழர்மரபில் மஞ்சள் நிறமாகும். மங்கல்>மங்கள்>மஞ்சள் = நிறம், மஞ்சள்பொருள். ஙகர, ஞகரப் போலி என்பவை தமிழில் மிகுதியானவை. மங்கலின் இன்னொரு வளர்ச்சி அம் என்னும் பெருமை விகுதியைப் பெற்று மங்கலம் என்றாகும். மங்கல்>மங்கலம் = சிறப்பான நிகழ்வு, பொலிவு. மங்கலமான மணப்பருவம் எய்திய பெண்ணைக் குறிக்கும் சொல்லான மங்கையும் கூட மங்கு என்ற சொல்லிலிருந்து தோன்றியது தான். மங்கு>மங்கை = மங்கல(மாகிய மண)ப்பருவம் அடைந்த பெண்.

நாம் செவ்வாய் என்பது, வடவர்கணிப்பில் மஞ்சள் தோற்றமே காட்டும். (மஞ்சட்பொருள் காடித்தன்மையில் (acidic nature) மஞ்சள்நிறம் காட்டுவதும், களரித் தன்மையில் (alkaline nature) சிவப்புநிறம் காட்டுவது இயற்கையறிவு. காடி சேர்த்த மஞ்சள் பொற்சுண்ணம் என்று சொல்லப் படும்; பெருமாள் கோயில்களில் தாயார் முன்னிலையில் பொற்சுண்ணம் கொடுப்பார்; களரி சேர்த்த மஞ்சள் குங்குமம் எனப்படும். அதை ஆண்டாள் முன்னிலையில் கொடுப்பார்.) மங்கலம்> மங்கல வாரம் = வட மொழியில் செவ்வாய்க் கோள் (மங்கல் என்பது இங்கே சிவப்பு என்ற பொருளில் வந்திருக்கிறது.)

மங்கலத்தின் இன்னொரு நீட்சி மங்கலம்> மங்கல்யம்> மங்கலியம் = பொன்; மங்கலியம்> மாங்கலியம் = பொன்னாலான தாலி, மஞ்சள் நிறைந்த தாலி

மஞ்சள் எனும் சொல் கீழ்க்கண்டவாறு இன்னும் திரியும்.

மஞ்சள்>மஞ்சுளம் = அழகு
மஞ்சு>மஞ்சுதல் = மஞ்சள் நீரால் முழுக்காட்டுதல்
மஞ்சுதல்>மஞ்சனம் = நீராட்டு. (பெருமாள்கோயிலில் திருமஞ்சனம் என்றே சொல்வார்; சிவன்கோயிலில் இது அப்பு இழிகம்> அப்பிஷேகம் > அபிஷேகம் என்று வடமொழிப்படுத்தி ஆளப்படும். தமிழர் வழக்கில், அகவைக்கு வந்த பெண்ணுக்குச் செய்யும் நீராட்டும் மஞ்சள் நீராட்டு என்றே சொல்லப்படும். தென்பாண்டி நாட்டில் இச்சடங்கு இன்றும் பெரிதாய்க் கொண்டாடப்படுவதே.)
மஞ்சுதல்> மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீராட்டுதல், அலங்கரித்தல்
மண்ணுநீர் = மஞ்சன நீர்
மண்> மணிகம் = நீர்க்குடம்
மணம் = கல்யாணம்

என்ற சொற்கள் எல்லாமே மஞ்சளை உணர்த்தும். இக்காலத்தில் மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலிகட்டுவதுதான் கல்யாணம் என்று நாம் நினைத்துக் கொண்டு உள்ளோம். ஆனால், சங்க காலத்தில், அப்படியல்ல;  தாலியைப் பற்றிய பேச்சு அங்கில்லை. (பேச்சில்லை என்றவுடன், பழக்கமே இல்லையென்று கூற முடியாது. நம்மால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை என்றுமட்டுமே சொல்லலாம். ஆனால் சங்கம் மருவிய காலத்தில் சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் இருந்திருக்கிறது. அதைப்பற்றிக் கீழே காண்போம். இப்பொழுது சங்க கால விவரிப்பை அகநானூற்றின் வழியாய்ப் பார்ப்போம்.)

அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை

இதன் விளக்கம் என்ன?

"தலை உச்சியில் குடத்தை வைத்துக் கொண்டுள்ள பெண்கள்,
புது மண்பாண்டம் (உருண்டையான பாண்டம்; அதற்கு மண்டை என்று பெயர்.) வைத்திருக்கும் பெண்கள்,
ஆரவாரமாய்ச் சடங்குசெய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள்,
என இவரெல்லாம் ஒவ்வொரு பொருளையும் எடுத்துத்தர,
பிள்ளை பெற்றெடுத்த 4 வாழ்வரசிகள் (பசலை போட்டிருக்கும் அவர் நகைகள் அணிந்திருக்கிறார்)

"அம்மாடி, பெண்ணே, சொல் திறம்பாமல் (சொன்ன சொல் மாறிவிடாதே), எல்லார்க்கும் உதவி செய்து, கொண்டவன் விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்பவளாய் இரு"

என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்; அதோடு கல்யாணம் முடிகிறது. அவ்வளவு தான்!

மொத்தத்தில் மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் எனப்படும் மணமாகிறது. பொதுவாக பூ, நெல் சொரிவதோடு, முளைப்பாலிகை என்ற இன்னொன்றையும் கலந்து கொள்வார். [திருமணத்திற்கு முதல்நாள், நெல்லோடு பல கூலங்களையும், சில பயறுகளையும் கலந்து ஈரத்தோடு முளைக்க விட்டு, அதைப் பாலோடு கலந்து வைப்பதற்கு முளைப் பாலிகை என்பார்.] இம் முளைப்பாலிகையையும், பாலில் பூவிதழ்களைப் பிய்த்துப்போட்டு வைப்பதையும் தான் மணமக்கள் மேலே சொரிவதற்குப் பயன்படுத்துவார்.

முல்>முல்ங்குதல்>முங்குதல் = இறங்குதல்; நீருள் முங்கி எழுதல்
முல்ங்குதல்>முல்ஞ்சுதல்>மல்ஞ்சுதல்>மஞ்சுதல்>மஞ்ஞுதல்>மண்ணுதல் = நீர் இறங்குதல்
மஞ்சனம்>மஞ்ஞனம்>மண்ணனம் = நீர் இறைக்கும் செயல்
முல்>முழு>முழுகுதல்>முழுக்குதல் = நீருக்குள் இறக்குதல்
மண்ணுதல்>மண்ணம்>மணம் = நீருள் இறங்கும் செயல்.

அக்காலத் தமிழர்மணம் என்பது கூடியிருப்போர் வாழ்த்துக் கூற நடக்கும் மங்கல நீராட்டே ஒழிய வேறெதுவும் அல்ல. அகநானூற்றில் சொல்வது போல திருமணத்தில் மஞ்சள்நீர் ஆடும் சடங்கு இன்றைக்கும் நாட்டுப் புறங்களில் பல இடத்தும் (குறிப்பாக சிவகங்கைப் பக்கம்) முகன்மையாகத் தான் உள்ளது. முன்சொன்னது போல், மணமென்ற சொல்லுக்கே மஞ்சள்நீர் ஆடுதல் என்று தான் பொருள்வரும். அதேபோல 60-ஆம் ஆண்டு மணி விழாக்களிலும் மஞ்சள் நீராடுவதே (கும்பஞ் சொரிவதே) பெருஞ்சடங்காகத் தமிழ்நாடு எங்கணும் கொள்ளப் படுகிறது. (வடக்கிலிருந்து தெற்கேவந்து தமிழரோடு கலந்துபோன பார்ப்பனர் கூட மஞ்சள் நீராட்டுச் சடங்கைத் தங்கள் திருமணங்கள், மணிவிழா போன்றவற்றில் சேர்த்துக் கொள்வார்.) ஆக அகநானூற்றுப் பழக்கம் குறைந்தது 2300 ஆண்டுகள் இக்குமுகாயத்தில் தொடர்ந்து வருகிறது. இதே பழக்கம் கோபுரக் கலசங்களை நீராட்டுவதிலும் தொடர்கிறது.

இது போன்ற மஞ்சள் நீராட்டு வழக்கை தொல்காப்பியம் புறத்திணையியலில் உழிஞைத்துறை பற்றிப் பேசுமிடத்தில் இயல்பு, இலக்கணம், துறைகள் ஆகியவைபற்றிப் பேசியபின்பு, நொச்சி பற்றிப் பேசுமிடத்தில் தொல் 1014: 10 வது வரி பேசும். மாற்றுநாட்டுக் கோட்டையைப் பிடித்தபின் அக்கோட்டைக் கோபுரத்தின் கும்ப உச்சியில் குடமுழுக்கு செய்வதைக் குறிக்கும் முகமாக "குடுமி கொண்ட மண்ணுமங்கலம்" என்ற சொல்லாட்சி வரும். ஆக, மஞ்சள் நீராட்டு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 2700 ஆண்டுகளாய் இப்பழக்கம் இருந்துள்ளது.

"திருக்குட நீராட்டு என்பது சமயப் பழக்கமல்ல; அது இனக்குழுப் பழக்கமே" என்பதற்குத் தொல்காப்பியமே முற்று முழுதான சான்று. இதேபோன்ற திருக்குட நீராட்டு கோபுரத்திற்கு நிகழுமானால், பின் ஆண்பெண் இருவருக்கும் அவருடைய வாழ்க்கையின் குடும்பத் தொடக்கத்திலும், பெண்ணானால் அவள் அகவைக்கு வந்த பின்னும், பின்னால் ஆணுக்கு 60 அகவை முடிந்த போதும், குடநீராட்டு நடப்பது நெடுநாள் மரபாய் இருந்திருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். வெற்றி ஏற்பட்டால், நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால், ஏதொன்றையும் கொண்டாட வேண்டும் என்றால், தமிழருக்கு மஞ்சளும், மஞ்சள் நீரும் வாழ்வில் ஊடுவந்து விடுகின்றன என்றே சொல்லலாம்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

பிரசாத் said...

//வேர்ச்சொல்லை இனங் காண்பது ஒருவேளை பேரா.தொ.பரமசிவனுக்கு வாய்க்காது போயிருக்கலாம். ஆனால் ஆய்வு என்பது அவரோடு நின்றுவிடுவது இல்லை. அவருக்கு அப்புறமும் நடக்கும். தாலி என்ற பழக்கம் தமிழரிடம் ஆழ்ந்து காணப்படுகையில், அதன் வேர் தமிழரிடம் இல்லாது, வேற்று மொழியினரிடம் இருக்குமோ? கொஞ்சம் ஆழப் போனால், தாலியின் வேரை தமிழிலேயே அடையாளம் காண முடியும். அதற்குத் தேவையானது, நம் மரபுகளைப் புரிந்து கொள்ளுவதே!//

தாலி தமிழர்களின் அடையாள சின்னங்களுள் ஒன்றாக விளங்கியது என்பதற்கு நீங்கள் வைக்கும் வாதங்களை நான் ஒப்புக்கொள்கிறேன். உங்கள் வாதங்கள் தொடரட்டும்.

//இப்பொழுது எஞ்சியுள்ள செய்திகள் நம்முடைய பண்பாட்டு மிச்சங்களிலும், மொழியிலும் தான் புதைந்து கிடக்கின்றன. இவற்றையும் அழித்து விட்டால், நாம் பண்ட்டு (bantu) மக்களைப் போல ஆகிவிடுவோம். தாலி பற்றிய மகாவின் கூற்று அந்த நிலைக்கே நம்மை இட்டுச் செல்லும். அப்படிச் செல்லும் போது, இவர் போன்ற "முற்போக்குச்" சிந்தனையாளர்கள் மிகவும் மகிழ்ந்து போகக் கூடும்!//

முற்போக்கு சிந்தனை என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்? தாலி தமிழர்களின் வழக்கத்தில் இல்லை என்ற வாதத்தையா அல்லது தாலி இந்த காலகட்டத்தில் தேவையற்றது என்ற பின்னூட்ட வாதங்களையா? முதலாவது காரணமாக இருந்தால் அதற்கு பதில் சொல்ல நான் சரியான ஆள் இல்லை. இரண்டாவதுதான் காரணம் என்றால் இன்றைய கால கட்டத்திலும் தாலி கட்டி கொள்வதே தமிழர்க்கு பெருமை என்கிறீர்களா? சற்று விளக்கினால் மகிழ்வேன்.

//தாலி தமிழர்களின் அடையாளமாக
தாலி கட்டுவது அடிமைத் தனம் என்று சொல்லுகின்ற இவர்களுக்கு, அதே பொழுது, வெள்ளைக்கார முறையில் மோதிரம் மாற்றுவது மட்டும் முற்போக்காய்த் தெரிவது தான் வேடிக்கை;//

மகாவின் பதிவில் நான் கண்டது கீழ்கானும் பின்னூட்டங்களைதான்

// தாலி என்பது கூடவே கூடாதுதான். மோதிரம் மாற்றலோடு நிறுத்திக் கொள்வதே சிறந்தது என நினைக்கிறேன் - மாசிலா //
// அதென்னங்க மாசிலா, மோதிரத்துக்கு மட்டும் விதிவிலக்கு? அடையாளம்னு வந்துட்டால் அது கையில் போடறதா இருந்தாலென்ன, கழுத்துல மாட்டிக்கறதாயிருந்தால் என்ன? ஒரு வேளை பெண் மட்டும் சுமப்பதாயில்லாமல் இருவரும் பரிமாறிக்கொள்வதால் சொல்கிறீர்களோ? எப்படியிருப்பினும் எந்த வகையான அடையாளச்சின்னமுமே தேவையில்லை என்பதுதான் என் கருத்து. - லக்ஷ்மி //
// இதே கருத்துதான் என்னுடையதும். - மகா//
// திருமணம் ஆனதைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அதற்குக் கூடுதல் தகுதியானவர்கள் ஆண்களே. - சுல்தான்//
// வாயை அடைப்பதற்கு நீங்கள் சொல்வதாக புரிந்து கொள்கிறேன். அடையாளம் யாருக்குமே தேவையில்லை என்பதுதான் சரி. - மகா//



பதிவர் ஒருவர் மோதிர முறையை முன்வைத்தார். அது அவருடைய கருத்து. ஆனால் அங்கு பின்னூட்டம் செய்த மற்ற அனைவரும் (மகா உட்பட) அதை ஒப்புக்கொள்ளவில்லை. திருமண அடையாளம் யாருக்குமே தேவையில்லை என்ற கருத்திலேதான் அந்த பின்னூட்ட விவாதங்கள் நடைபெற்றன.

உங்களுக்கு இன்னொரு வேண்டுகோள்! மற்றவர்களின் பதிவை விமர்சனம் செய்யும்போது அந்த பதிவின் பின்னூட்டத்தில் இந்த விமர்சனத்தை பற்றி தெரிவித்தால் அந்தப் பதிவின் சொந்தக்காரருக்கும் பின்னூட்டமிடுபவர்களுக்கும் உதவியாக இருக்கும். அல்லது உங்களது பதிவிலிருந்து அந்த original பதிவிற்கு ஒரு link கொடுத்தால் படிப்பவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்

இராம.கி said...

அன்பிற்குரிய பிரசாத்,

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

முற்போக்குச் சிந்தனை என்பதை வழக்கில் எல்லோரும் புரிந்து கொள்ளும் முறையில் தான் நான் குறிக்கிறேன். புதிய வரையறை ஒன்றும் கூறவில்லை.

நான் கட்டுரையில் சொல்ல வருவது "தாலி என்பது தமிழர்கள் வழக்கில் அண்மையில் தான் வந்தது" என்ற கருத்தைப் பற்றியே. நான் புரிந்த வரை அது பிழையானது. தாலி இந்தக் காலத்திற்குத் தேவையா, தேவையில்லையா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை. தாலி கட்டிக் கொள்ளுவதும், கட்டாமல் போவதும் அவரவர் விருப்பம். அதில் சற்று மாறி வழக்கம் கொள்வது கூட அவரவர் விருப்பம் தான்.

தாலி வழக்கத்தை "ஏதோ ஒரு பிற்போக்குத் தனம்" என்று சாடுவதில் இருக்கும் முரண்பாடுகளைச் சொல்லுவதும், "அது ஒரு இனக்குழு (tribe) சார்ந்த வழக்கம்" என்று நிறுவுவதுமே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்.

மகாவின் பதிவில் உள்ள பின்னூட்டங்களை நீங்கள் எடுத்துக் கூறியிருந்தீர்கள். என் கிடுக்கத்தை (criticism) மகாவின் பேரில் நான் வைக்கும் கருத்தாகச் சொல்லாமல், பொதுவில் வைக்கும் கருத்தாகக் கொள்ளுங்கள். என் வாக்கியங்கள் இன்னும் கூடத் தெளிவாக வந்திருக்கலாம்.

மகா என்ற தனிப்பதிவரின் மேல் உள்ள கிடுக்கமாய் (criticism) இதை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் முடிவில் சொன்ன ஓர்மை(யோசனை)க்கு நன்றி. இனிமேல் அப்படிச் செய்ய முயலுகிறேன். இன்னும் link கொடுப்பது பற்றிச் சரியாக அறிந்தேனில்லை.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//இன்னும் link கொடுப்பது பற்றிச் சரியாக அறிந்தேனில்லை.//


>>>>Post a Comment

Links to this post
Create a Link <<<<<<

தொடுப்புக் கொடுக்க உங்கள் இடுகையின் முன்னிகைப் பக்கத்தின் கீழ் உள்ள "தொடுப்பை உருவாக்கு" என்பதில் உங்கள் மூசியால் அழுத்தி புளொக்கர் பயனர் பெயரில் உள்நுழைந்து, தெர்டுப்பை ஏற்படுத்தி சேமித்துவிட்டால் அது பின்னர் முன்னினைகப் பக்கத்தின் அடிப்பக்கத்தில் காணப்பெறும்.

அதைவிட உங்கள் இடுகையில் இடையில் அதை சேர்க்கலாம்.

நன்றி நண்பரே

Anonymous said...

".... புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி பெரூஉம் ......" என தொல் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றின் இடையே காணப்படுகிறதே!
வரலாற்றில்: தன்னைக் காதலித்து அழைத்துச்சென்று கலக்கப்படுத்திக் கருவுறச்செய்து ஏமாற்றியவன் மீண்டும் அச்சிறுமியைக் கண்டு தேற்றமுயலும் காட்சியாக அப்பாடலின் அடிகள் காணப்படுகிறதே!
"வில்லோன் காலன கழலே தொடியோள் மெள்ளடி மேவின சிலம்பே.... என்ற மற்றொருபாடலில் இடம்பெற்ற இருவருமே இப்பாடல்களில் காணப்படுகிறார்கள் என்பதே எனது கருத்தாக உள்ளது.
பிற அன்பர்களின் கருத்து என்ன என்பதை வெளிப்படுத்துங்கள்.

இராம.கி said...

பெயரில்லாதவருக்கு,

புலிப்பல் தாலி திருமணத் தாலி அல்ல. அது ஐம்படைத் தாலியோடு சேர்ந்தது.