Monday, July 31, 2006

தில்லை - 1

பிச்சாவரம் போயிருக்கிறீர்களோ? குறைந்தது அரை நாளாவது பார்க்க வேண்டிய இடம்; குறிப்பாக அங்கே உள்ள கழிக்கானல் (`=mangrove). அது அசையாத நீர்ச் சேர்க்கையால் ஆன வெறும் உப்பங்கழி அல்ல. அதற்கும் மேலானது. ஓயாத அசைவு இருக்கும் "ஓதக் கழி" (tidal backwaters) என்றுதான் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஓதம் என்ற சொல்லைக் கண்டு மருள வேண்டாம். உயர்ந்து வருவது ஓதம். உயர் ஓதம் (high tide) இருக்கும் போது, கழியில் (backwaters) நீர் பெருகும். தாழ் ஓதத்தில் (low tide) நீர் வடிந்து போகும். இந்தக் காலத்தில், கழிக் கானலை, அலையாத்திக் காடுகள் என்று சொல்லுகிறார்கள். (கேட்பதற்குக் கொஞ்சம் செயற்கையாய், அருவியை நீர்வீழ்ச்சி என்று சொல்லிப் பழகுவதைப் போல, எனக்குத் தோன்றுகிறது. பழைய பெயரை மீட்டுக் கொண்டுவரலாம். தலையாலங் கானம் (கானம் = காடு), ஆலங் கானம், கானப்பேர் போல இதைக் கழிக் கானம் என்றும் சொல்லலாம். மாமல்லைக்கும் தெற்கே மரக்காணம் என்று சொல்லப்பட்டு வரும் மரக் கானமும் ஒருகாலத்தில் கழியாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்னென்ன மரங்கள் அங்கிருந்தன என்று தான் சொல்லத் தெரியவில்லை; ஆய்ந்து பார்க்க வேண்டும். சங்க காலத்து எயிற் பட்டினம் தான் (சிறுபாணாற்றுப் படை) மரக் கானம் ஆயிற்று என்று சொல்லுவார்கள். பார்த்தீங்களா, வரலாற்றைச் சொல்லத் தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மீண்டும் சொல்லப் புகுந்த மையக் கருத்திற்கு வருவோம்.)

பொதுவாகக் கானலில் நிறைந்து கிடக்கும் புன்னை மரம் பற்றிப் பலருக்கும் தெரியும்; [ஓடங்கள், நாவாய்கள், கப்பல்கள் எனப் பலவும் நாவலந்தீவிலும், சுமேரிய நாகரிகத்திலும் தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்த இந்தப் புன்னை ஒரு முகன்மையான மரம் தான். ஆனால் அதை இன்னொரு முறை பார்க்கலாம்.] இப்பொழுது, தில்லை பற்றி முதலிற் பார்க்கலாம் :-) அப்படியே தில்லை நடராசனைப் பற்றியும் பார்க்கலாம்.

யாரோ அங்கே புன்சிரிக்கிறிங்க! என்னடா இது, திரும்பவும் சிக்கலுக்குள்ளே வர்றானேனு பார்க்கிறீங்களோ? சித்தம் சிவனுக்குள்ளே! புரிதல் கோளாறை அப்படியே விட்டுட்டுப் போறதை, நெஞ்சு ஒத்துக்கிடலை.

தில்லை ஆடலரசனின் முன்பு தமிழ் படிப்பதில், ஒரு சில கருத்துக்கள் அண்மையில் எழுந்தன; வலைப்பதிவு உலகம் கொஞ்சம் சூடாகிப் பின் ஆறி அடங்கிய நேரத்தில், மீண்டும் தில்லை பற்றியும், அதன் தொடர்பான மற்ற செய்திகள் பற்றியும், இங்கு பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் திணைகள் சார்ந்த புவியியல், மரங்கள், மரபுகள், வரலாறு, தொன்மம் இப்படிப் பலவற்றையும் தெரிந்து கொள்ளாமலே நம்மில் மிகப் பலரும் காலத்தைக் கழிக்கிறோம். அப்படிக் கழிப்பதோடு மட்டுமல்லாமல், வெறுமே கருத்துமுதல் வாதமாய் ஒருசிலர் எடுத்துரைக்கவும் செய்கிறார்கள்; மாற்றாருக்கு கோவம் எதனால் எழுகிறது என்று புரிந்து கொள்ளவும் முற்படாமல், வெறும் அறிவுய்தித் (intelligentia)தனத்தோடு நிகழ்வுகளை நோக்கி, நேர்த்தியான வழக்குரைஞர்கள் போல, அதே பொழுது அரைகுறை உண்மைகளை அப்படியே திரித்து, மிகப் பலருக்கும் சொக்குப்பொடியும் போடவைத்து ...... , பலரும் வல்வழக்குகள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வல்வழக்கு அறிஞர்களின் அடிப்பொடிகளோ, தமிழ் என்று சொன்னாலே ஏதோ வெறியன் என்று பட்டம் கட்டத் துடித்து எழுகிறார்கள்! சரி, கொஞ்சம் அமைதியாய் இருப்போம் என்று காத்திருந்தேன். முடிந்த முடிவுக்காரர்கள், கருத்துமுதல் வாதிகளோடு எத்தனை முறை வாதாடினாலும் ஒன்றும் மாறப் போவது இல்லை; ஆனால் நொதுமலாக (neutral) இருக்கும் நிறையப் பேர்களுக்காகவாவது, உண்மைகளையும், ஒழுங்கான புரிதல்களையும், பொதுவாகத் தெரிந்ததையும் சொல்லிப் பரிமாறிக் கொள்ளுவோமே என்ற எண்ணம் தான் இந்தப் பதிவு.

தில்லை மரத்திற்கு Excoecaria agallocha L. என்று புதலியலில் ஒரு பெயர் உண்டு. "அகிலைத் தில்லை" என்று அந்த மரத்திற்கு தமிழ்ப் புதலியற் பெயர் கொடுத்திருக்கிறார்கள். (அகில் மரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், அந்த அகில் என்ற சொல்லும் உள்ளே வருகிறது. அகில்கட்டை நமக்கு பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து காலங் காலமாய் வந்து கொண்டிருந்தது.) கடற்கரையோரப் பகுதிகளில், சதுப்பு நிலப்பகுதிகளின் ஓரத்தில் தில்லை மரம் வளர்கிறது. நெய்தலும் மருதமும் கலந்த பகுதிகளில்தான் இது காணப்படும். [ஒரு காலத்தில் இங்கே சென்னைக்கு அருகில் உள்ள அடையாற்றுக் கானலிலும், இன்னும் மற்ற ஆற்றுக் கழிமுகங்களிலும் இது போன்ற நெய்தல் திணையும், அதில் தில்லை மரங்களும் இருந்திருக்க வேண்டும். காலம் பெரும்பாலானவற்றை அழித்துவிட்டிருக்கிறது.] இந்தக் கழிமுகங்களில் தான் பொதுவாகப் பட்டினங்கள் எழுந்தன. பட்டினங்களில் தான் வணிகமும் எழுந்தது; உல்கும் (excise duty), சுங்கமும் (customs duty), வரியும் (tax) திளைத்தன. அரசு இயந்திரம் பட்டினம் எங்கும் ஆல் போலப் பரவிக் கிடந்தது.

பணம் என்று போகத் தொடங்கிவிட்டால், அப்புறம் வேள்வி, ஓமம், யாகம் போன்றவற்றை நம்பித் தேடிப் போகும் கூட்டம் தவிர்க்க இயலாத வகையில் அந்தக் காலத்தில் ஏற்பட்டு விடும். [இந்தக் காலத்திலும் யாரோ ஒரு சாமியார் சொன்னார் என்று ஒப்பி, தனக்குப் பிடித்த கோயிலில் ஏதேனும் ஒரு திருப்பணி செய்தால், தான் செய்பவற்றிற்கு ஒரு மாற்று ஏற்பட்டு விடும் என்று நம்பிச் செல்வம் படைத்தவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.] அதன் விளைவாக, இயல்பாகவே, வேத நெறி பயிலும் கூட்டத்தினர் (வேதநெறியாளரை வைதீகர் என்று சொல்லுவார்கள்.) பட்டினம் இருக்கும் இடங்களை நோக்கி வடபுலத்தில் இருந்து விரும்பி வந்தார்கள். வேதநெறி சிறந்தது, மகதத்தின் அருகில் இன்றையக் காசியை இருப்பிடமாகக் கொண்ட கோசலத்திலும், அதையொட்டிய பகுதிகளிலும் தான். நான் சொல்லும் காலம் கி.மு. 600க்கு அண்மையில். வேதநெறியாளர் வடபுலத்தில் இருந்து தெற்கே குறைந்தது மூன்று அலைகளில் வந்தார்கள்; ஆர்வம் உள்ளவர்கள் கோயில்களில் கொட்டிக் கிடக்கும் கல்வெட்டுக்களைப் படிக்கலாம். இல்லாவிட்டால், பேராசிரியர் ந. சுப்பிரமணியனின் அருமையான பொத்தகத்தைப் படிக்கலாம். வரலாறு என்பது நாம் நினைத்தபடி இடைப்பரட்டுவது(interpret) அல்ல. செய்திகளை நம் விழைவு போல அங்கே திரிக்க முடியாது. வடபுலத்தில் இருந்து தக்கணம் புகுந்த நகர்ச்சிகள் (movements) தெளிவாக ஆவணம் செய்யப் பட்டிருக்கின்றன.

கொஞ்சம் அவக்கரப் படாமல், தில்லை மரத்தை மற்றும் காடுகளைப் பார்ப்போம்.

தில்லை மரம் கொஞ்சம் அலாதியானது. ஒருபக்கம் அது அச்சம் தரும் மரம்; இன்னொரு பக்கம் நம்மைப் பெரிதும் ஈர்க்கும் தன்மையது. இந்தச் சிறு மரத்தின் எந்தப் பகுதியை ஒடித்தாலும் அலரி (= அரளி) மாதிரிப் பால் தெறிக்கும். அந்தப் பால் நம் உடம்பில் பட்டால் அரிக்கும்; எரியும்; சிவந்து போகும்; கண்ணில் பட்டாலோ, கண்ணெரிச்சலோடு, கொஞ்சம் கொஞ்சமாய் தற்காலமாகவோ, சிலபொழுது முற்றிலுமோ, கண்பார்வை போகவும் செய்யலாம். இதனாலேயே இந்த மரத்தை blinding tree என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். (மேலையருக்கு இந்த அச்சமே முகன்மையாய்ப் பட்டது. அப்படியே இந்தப் பெயர் இடப்பட்டது. நமக்கோ வேறொரு ஈர்க்கும் தன்மை முகன்மையாய்த் தெரிந்தது. அதுவே அந்த மரத்தின் பேருக்குக் காரணம் ஆனது.) இந்தச் சிறு மரம் 6 மாத்திரி (மீட்டர்) உயரம் வளரக்கூடியது நல்ல சூழ்நிலை (அதாவது நீர் ஒழுங்காக ஏறி, வடியும் சூழல்) இருந்தால் 10 மாத்திரி கூட வளருமாம். பொதுவாகத் தில்லை மரம், பசுமை குன்றாத மரம். மரத்தை வெட்டிப் போட்டால், துண்டுகள் நீரில் மிதக்கும். ஒரு கொம்பில் ஏற்படும் இலைகளின் வளர்ச்சி பார்ப்பதற்கு ஒரே ஒழுங்கில் காட்சியளிக்காது மாற்றொழுங்கில் (alternative ஒன்று மாற்றி ஒன்றாய்) காட்சியளிக்கும். இலைகள் நீண்ட கோழிமுட்டை வடிவில் முனையுடன் இருக்கும். இளம் இலைகள் பூஞ்சை (pink) நிறத்திலும், முற்றிய இலைகள் ஆழ்சிவப்பு (deep red) நிறத்திலும் இருக்கும். தில்லம் என்ற சொல் தில்லை மரத்தின் விதையைக் குறிக்கும். இறைவன் தொண்டைக்குள் நஞ்சு என்ற கருத்தீடு பிறந்தது தில்லை மரத்தின் தூண்டுதலால் இருந்திருக்கலாம் என்றே ஓர்மை ஏற்படுகிறது..

இன்றைக்குப் பிச்சாவரத்திற்கு அருகில் கடல் இருந்தாலும், ஒரு காலத்தில் கடலும், கழியும், இன்றைக்குச் சற்று தள்ளி இருக்கும் பெரும்பற்றப் புலியூர் (=சிதம்பரம்) வரை நெருங்கித் தான் இருந்தது என்று புவியியலார் சொல்லுகிறார்கள். [சிதம்பரத்தில் வெள்ளம் வந்தால் ஊரெல்லாம் தத்தளிப்பதும் அதன் தாழ்புவி (low level of ground) நிலையை நமக்கு உணர்த்தும்.] அந்த ஊர் முழுதும் ஒரு காலத்தில் தில்லை வனமாகத் தான் இருந்தது. சோழ நாட்டில் நாலு புலியூர்கள் இருந்தன என்பார்கள். அதில் இது ஒன்று (காவிரிக்கும் வடபால் உள்ளது). இன்னொன்று பெரும்புலியூர் (இன்றைக்குப் பெரம்பலூர் என்றால் தான் பலருக்கும் விளங்கும்.) மீதம் இரண்டும் சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். பெரும்பற்றம் என்ற முன்னொட்டை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். பெரிய பாதம் தான் பெரும் பற்றம் என்று குறிக்கப் பட்டது. பற்றம்>பத்தம்>பாதம் என்று விரியும் சொல்லைப் பார்த்தால், பற்றிக் கொள்ளுவதும் பதிவதும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை என்று புரியும்.

பெரிய பாதம் கொண்டவரை வ்யாக்ர பாதர் என்று இருபிறப்பிச் சொல்லால் வடமொழியாளர் மொழி பெயர்ப்பார்கள். (வியல்ந்து கிடப்பது என்பது அகண்டு கிடப்பது. வியல்ந்த கோள் வியாழன். வியல் என்ற முன்னொட்டு "பெரும்" என்ற பொருளையும் குறிக்கும். வியக்கிறான் என்றால் வாயை அகலத் திறந்து பெரிதாக விரிக்கிறான் என்று தான் தமிழில் பொருள். வியத்தல்/வியக்குதல் என்பது பொதுவாக வாய்அகலும் செயலைக் குறிக்கும். வழக்கம் போல வடமொழிப் பலுக்கில் ரகரம் நுழைந்து, வியக்கம் வியக்ரம் ஆகும். வியக்க பாதர், வியக்ர பாதர் ஆன கதை அது தான். யாரோ ஒரு முனிவர் சற்றே பெரிய பாதம் கொண்டவர். அந்த முனிவர் தில்லை வனத்தில் இருந்திருக்கிறார். அவருக்கும் ஆடலரசனுக்கும் இடையே ஒரு தொன்மம் இருந்திருக்கிறது. அவர் பெயரால் இது பெரும்பற்றப் புலியூர் அழைக்கப் படுகிறது. இன்னொரு முனிவரையும் இந்த ஊரோடு தொடர்புறுத்துவார்கள். அவர் பெயர் பதஞ்சலி. அவரை நாட்டியத்தோடு தொடர்பு படுத்தும் தொன்மமும் உண்டு. இங்குமே பாதம்>பதம் என்ற சொல் உள்ளே இருப்பதைப் பார்க்கலாம். நம்மூர் ஆட்களை, ஊர்களை, செயல்களைப் புரிந்து கொள்ளத் தமிழ் தான் பயன்படுமே ஒழிய வடமொழி அல்ல. இருந்தாலும் ஒருசிலர் இந்தப் பழக்கத்தை விடாமலே, வடமொழியின் உள்ளே தேடு தேடென்று விதம் விதமாய்த் தேடிக் கோண்டிருப்பார்கள். :-)

பெரும்பற்றப் புலியூர் இன்றைக்குச் சிதம்பரம் என்று அழைக்கப் படுகிறது. அது உண்மையில் சிற்றம்பலம். அந்தப் பெயரைக் கூப்பிடக் கூப்பிட ஒரு சிலரின் பலுக்கத் திரிவால், அது சித்தம்பரம் ஆயிற்று. பின்னால் சிதம்பரம் என்று திரிந்தது. இதை அறிந்து கொள்ளாமல், சித்தம் + பரம் = சிதம்பரம் என்றெல்லாம் சொல்லப் புகுவதைப் பார்க்கும் போது, பொருந்தக் கூறுவது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும். (அந்த அம்பலம் சின்ன அம்பலம்; ஆனால் குறிப்பிடத் தக்க அம்பலம்; அதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.) சிலருக்குச் சித்தம்பரம் என்று கூறுவது மனத்திற்கு நிறைவாய், உகப்பாய் இருக்கலாம். ஆனால், வரலாறு அப்படி இல்லை என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். பொதுவாகத் தமிழ் ஊர்களில் பெரும்பாலானவை அப்படிக் கருத்து முதல்வாதத்தில் பெயரிடப் படுவன அல்ல. இயற்கை, குமுகம், மாந்தர் பெயர் என இப்படித்தான் ஊர்ப்பெயர்கள் 100க்கு தொன்னூற்று தொன்பது விழுக்காடு எழுகின்றன.

அன்புடன்,
இராம.கி.

20 comments:

தயா said...

புன்னை மரம் தான் "தில்லை" மரங்களா?

சித்தம்பரம் சிதம்பரம் ஆனது புரிகிறது. ஆனால் சிற்றம்பலம் எப்படி "சித்தம்பரம்" ஆனது?

நீங்கள் தமிழ் வகுப்பு எடுக்கவில்லையெனினும் இந்த திரித்தலுக்கு மற்றுமொரு உதாரணம் கொடுத்தால் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

குழலி / Kuzhali said...

பதிவுக்கு நன்றி அய்யா,

//மீதம் இரண்டும் சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை.
//
திருப்பாதிரிபுலியூர், கடலூரின் ஒரு பகுதி, இங்கு பாடலீசுவரர் கோவில் உள்ளது, இங்கு தலவிருட்சம் பாதிரி மரம்... அதனாலேயே இந்த பெயர் வந்தது என்பர், ஒரு வேளை நீங்கள் இதை குறிப்பிடுகின்றீர்களா?

நன்றி

இராம.கி said...

அன்பிற்குரிய தயா,

இரண்டாவது பத்தியில் சொல்லியிருக்கிறேனே? "புன்னை ஒரு முகன்மையான மரம். இப்பொழுது தில்லை பற்றிப் பார்ப்போம்" என்று இருப்பதைத் திரும்பவும் படியுங்கள். புன்னையும், தில்லையும் வேறு வேறான மரங்கள். ஆனால் இரண்டுமே கழிக்கானலில் வளருபவை. இப்பொழுது பிச்சாவரத்தில் பெரிதும் புன்னையே இருக்கிறது. தில்லை மரங்கள் குறைந்துவிட்டன.

றகரம் தகரமாவது பெரிதும் உள்ளதே! பேச்சுவழக்கில் "ஆற்றுக்குப் போனேன்" என்பதை "ஆத்துக்குப் போனேன்" என்று சொல்லுகிறோம் அல்லவா? இறைவனின் மேல் பற்றுக் கொண்டு உள்ள நிலைக்குப் "பற்றி" என்று பெயர். அதை பத்தி என்று பலுக்கிப் பின் வடமொழி வழக்கில் பக்தி என்று ஆகும்; நாம் நம் தமிழ்ச்சொல்லை இழந்து விட்டு பக்தியையை வடபுலத்தான் சொல்லிக் கொடுத்தான் என்று தவறாகப் புரிந்து கொள்ளுகிறோம். பற்றியியக்கம் தோன்றியது தென்னகமே!

நீங்களே ஓர்ந்து பார்த்த்தால் இன்னும் பத்துப் பதினெட்டு றகர - தகர மாற்றம் கண்டு பிடிக்க முடியும்.

பழைய தமிழி எழுத்தில் முதலில் றகரம் என்ற வடிவம் கிடையாது; பின்னர் டகரத்தையும் அதன் கீழ் தகரத்தையும் ஒன்றின் கீழ் ஒன்றாய் எழுதி றகர எழுத்து உருவாக்கப் பட்டது. றகரத் தோற்றம் பற்றியே பெரிய கட்டுரை எழுதலாம்.

அன்பிற்குரிய குழலி,

சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் எழுதியதற்குப் பின் "திருப்பாதிரிப் புலியூர்" நினைவுக்கு வந்துவிட்டது. இதைப் போய் மறந்தேனே என்று வெட்கமும் கொள்ளுகிறேன்.

கடலூருக்கும் (திருப்பாதிரிப் புலியுருக்கும்) பீகார் மாநிலத் தலை நகரத்திற்கும் பெயர்க்காரணம் ஒன்றுதான் என்று தெரியுமா? இரண்டுக்குமே பாதிரி மரம் தான் காரணம். பாதிரி என்ற சொல் பாகதம், பாலி, சங்கதம் ஆகிய மொழிகளில் பாடலி என்று திரியும், பாடலிப் பட்டணமும் பாதிரிப் புலியூரும் ஒரே காரணத்தில் எழுந்த பெயர்கள்.

வடபுலத்து ஊர்களில் பலவும் தமிழ்ப் பின்புலம் கொண்டவை. சொன்னால், ஆய்ந்து பார்க்க மறுக்கிறவர்கள் தான் மிகுதி. அந்த அளவிற்குச் சார்புநிலைக் கோடல் என்பது கூடிக் கிடக்கிறது.

இன்னொரு புலியூரையும் தேடிச் சொல்லுங்கள்; காத்திருப்பேன்.

அன்புடன்,
இராம.கி.

வரலாறு.காம் said...

அன்பின் இராம.கி ஐயா,

தங்கள் பதிவுகளில் இதுவரை கேள்விப்படாத தமிழ் வார்த்தைகள் வருகின்றன. உதாரணமாக, நொதுமல் (Neutral), மாத்திரி (Meter) ஆகியன. இவை தமிழ்ச்சொற்கள்தானா? வியப்பாக இருக்கிறது.

இன்னொரு புலியூர் சென்னையில் கோடம்பாக்கம் அருகில் இருப்பதாகலாம். ஏனெனில், சென்னை நகரிலும் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் உள்ள சோழர் கல்வெட்டுகளில் 'புலியூர்க் கோட்டத்து' என்ற சொல் இடம்பெறுகிறது.


நன்றி
கமல்
www.varalaaru.com

murali said...

நன்றி ஐயா நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Anonymous said...

மிக நல்ல ஆய்வுக்கட்டுரை!
உங்களைப் போன்றோர் தான்; இதை ஆய்ந்து தெரிந்து எங்களுக்குத் தருவதற்கு நன்றி! இம்மரங்களின் படங்கள் போடமுடியுமா?பெயர்கள் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் மரங்களைக் காணக்கிடைக்கவில்லை. நமது நாடுகளில் கரையோரங்களில் அலையாத்திகளை பாராமரிக்காமல் அழித்தது கூட கடலரிப்புக்குக் காரணம்.தென்னமெரிக்க;ஆபிரிக்க;மற்றும் சில ஆசிய நாடுகள்; அலையாத்தியின் பயனை அறிந்து;வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றன.
பல ஊர்பெயர்கள் காலஓட்டத்தில் மருவுகின்றன. பின் மருவலே! நிரந்தரமாவது சகசமாக நடக்கின்றன.
எங்கள் ஈழத்தில் பல ஊர் பெயர்கள் மருவிவிட்டன. திருநெல்வேலி-தின்னவேலி;மீனாச்சி ஓடை-மீனாச்சோடை; ஊர்காவற்றுறை-ஊறாத்துறை; சாவகச்சேரி- சாவச்சேரி.
இவற்றை நிறுத்துவது எப்படி???
யோகன் பாரிஸ்

murali said...

ஐயா,
நெய்வேலிக்கும் பண்ருட்டிக்கும் இடையில் காடாம் புலியூர் என்ற ஒரு ஊர் இருக்கிறது. நான்காவது புலியூர் அதாக இருக்குமோ?.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

இராம.கி said...

அன்பிற்குரிய கமல்,

நொதுமல் என்ற சொல் பழைய இலக்கியங்களின் படி "எந்தப் பக்கமும் சாராமல் நடுவில் இருப்போரைக்" குறிக்கும் சொல். நுள்>நள் என்பதே அதன் வேர். நள்>நட்டு>நடு என்பது போல நுள்>நொள்>நொது என்பதும் நடுநிலையைக் குறிக்கும். அது பயன்படும் வரிகளைப் பிடிக்க வேண்டுமானால் கொஞ்சம் மதுரைத்திட்டத்துள் போய்வரவேண்டும்.

மாத்தல் என்பது அளத்தல். மாத்தரி என்பது வட ஆர்க்காட்டு வழக்கத்தை ஒட்டி எழுந்த சொல். (வட ஆர்க்காட்டு வழக்குத்தான் சென்னை வழக்கு. சென்னையைக் கேலி பேசி அதன் விதப்பான வழக்குகளை நம்மில் பலரும் ஒதுக்குகிறோம். அது தவறு. அவர்களும் ஒருவகையில் சில சிறப்பான வழக்குகளைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.) "அவன் எனக்குமுன் எத்தனை மாத்த(ர)ம்?" என்றால் அவன் எனக்கு எப்படி அளவில் ஒப்பாவான் என்று பொருள். இந்த வழக்கைப் பாவாணரைப் படித்தபின் தான் நான் அறிந்தேன். to meter என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல்லை வட ஆர்க்காடு வழக்கைக் கொண்டுதான் மீட்டுக் கொண்டு வரமுடியும்.

புலியூர்க் கோட்டம் என்ற வழக்கம் கல்வெட்டுக்களில் சென்னையைச் சுற்றி உள்ளது தான். காட்டாக எழுமூர், தாம்பரம், திருவலிதாயம் (பாடி), பூந்தண்மலி போன்ற இடங்களை புலியூர்க் கோட்டத்தில் உள்ளதாகத்தான் சொல்லுகிறார்கள்; ஆனால் அந்தப் புலியூர் என்ற ஊர் இந்தக் கோட்டத்தில் எங்கு உள்ளது, அதன் இக்காலப் பெரென்ன என்று தெரியவில்லையே?

அன்பிற்குரிய முரளி,

வரவிற்கும் கனிவிற்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

மணியன் said...

அழகான தமிழ்சொற்களைப் பயன்படுத்தி நல்லக் கருத்துக்களைப் பதிகிறீர்கள்.
புலியூர் சரோஜா என்ற நடன ஆசிரியர் எந்தப் புலியூரைச் சேர்ந்தவரோ ?

வரலாறு.காம் said...

விளக்கத்துக்கு நன்றி ஐயா.

//புலியூர் சரோஜா என்ற நடன ஆசிரியர் எந்தப் புலியூரைச் சேர்ந்தவரோ ?//

கோடம்பாக்கத்துக்கும் வடபழனிக்கும் இடையில் இருக்கும் இந்தப் புலியூர்தான் நான் சொல்ல வந்தது. ஆனால், சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவ வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஊரின் பெயர் புலியூராக இருப்பதாலும், அருகிலுள்ள ஊர்களிலுள்ள கல்வெட்டுகளில் புலியூர் குறிப்பிடப்படுவதாலும் இவ்வாறு ஊகிக்கலாம்.

நன்றி
கமல்

Anonymous said...

'ற'கரம் 'த'கரமாக வருவதற்கு ஏராளம் காட்டுக்களுண்டல்லவா?
குற்றம் -> குத்தம்
முற்றம் -> முத்தம்
குற்றி -> குத்தி
நெற்றி -> நெத்தி
பற்றை -> பத்தை
(நீர்)வற்றி -> வத்தி
(தீ) பற்றி -> பத்தி
ஏற்றி -> ஏத்தி
____________________
றகரம் பின்னாளில் வந்த காரணத்தாற்றான் அது நெடுங்கணக்கு வரிசையில் இறுதியில் பதினேழாவது மெய்யாக இருக்கிறது என்று சின்ன வகுப்பில் யாரோ சொல்லித்தந்த ஞாபகம்.

Unknown said...

அன்பின் ஐயா,

கோடம்பாக்கத்தை தான் புலியூர் என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு சாதி சான்றிதழில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவருக்கு புலியூர் கிராமம் என்று இட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.

╬அதி. அழகு╬ said...

பதிவில் சுட்டப் பட்டிருக்கும் மரம் அலையாத்தி என்று வழங்கப் படுவதும் மிகப் பொருத்தமன்றோ?

ஆழிப் பேரலை (சுனாமி) உண்டாக்கும் அழிவுகளைக் கட்டுப் படுத்துவதற்கு, பேரலைகளுக்கு அதிக வாய்ப்பிருக்கும் கடலோரங்களில் அலையாத்திக் காடுகளை வளர்க்க வேண்டும் என்ற சொல்லாடல் அண்மையில் புழங்கியது. யோகனும் பின்னூட்டமிட்டிருக்கிறார்.

அலை+ஆற்றி= அலையாற்றி
றகரம் தகரமாய் மருவியதால் அலையாத்தி!

Anonymous said...

கேரளத்தில் இரண்டாவது சுற்றை சுற்றம்பலம் (சுற்று + அம்பலம்)
என்று கூறுகிறார்கள். இது தமிழில் சிற்றம்பலம் ஆகி
இருக்கலாமோ? அல்லது சிற்றம்பலம் மலையாளத்தில் சுற்றம்பலம்
ஆகி இருக்கலாம்.

சிதம்+பரம் - தவறு என்றே நானும் நினைக்கிறேன்..

murali said...

sir,
Just now i remembered anothere
puliyur. Omampuliyur is in the banks of kollidam, near kaattumannargudi.There is a beautiful temple built by cholos.
With Love and Regards,
B. Murali Daran.

வெற்றி said...

மதிப்பிற்குரிய இராம.கி அய்யா,
நல்ல பதிவு. இதுவரை அறிந்திராத அரிய பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. அத்துடன் தங்களின் பதிவின் மூலம் அறிந்திராத பல தமிழ்ச்சொற்களும் தெரிந்து கொண்டேன். இதுவரை தமிழகத்திற்கு பயணிக்கவில்லை. எதிர்காலத்தில் தமிழகம் செல்லும் போது இவ்விடங்களைப் பார்க்க வேண்டும் போல உள்ளது.

//தமிழ் என்று சொன்னாலே ஏதோ வெறியன் என்று பட்டம் கட்டத் துடித்து எழுகிறார்கள் //

அய்யா, தன்மானமற்ற கூட்டங்கள் சொல்வதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாது நீங்கள் சொல்ல வரும் சங்கதிகளைத் துணிவாகச் சொல்லுங்கள். தன்மானமற்ற கூட்டத்திற்கு மொழியேது? இனமேது?

குழலி / Kuzhali said...

//இரண்டுக்குமே பாதிரி மரம் தான் காரணம். பாதிரி என்ற சொல் பாகதம், பாலி, சங்கதம் ஆகிய மொழிகளில் பாடலி என்று திரியும், பாடலிப் பட்டணமும் பாதிரிப் புலியூரும் ஒரே காரணத்தில் எழுந்த பெயர்கள்.
//
ஓ... அதனால் தான் கோவிலிலும் மற்றும் பல இடங்களிலும் பாடலீசுவரர் என்று எழுதியிருந்தாலும் சில இடங்களில் இறைவனை பாதிரீசுவரர் என்று எழுதியிருக்கின்றனர்.... பாதிரி மரம் பாதிரீசுவரர் புரிந்தது, ஆனால் இது நாள் வரை ஏன் பாடலீசுவரர் என்று அழைத்தார்கள் என எனக்குள் கேள்வி எழுந்தது கூட இல்லை... :-(

நன்றி

இராஜராஜேஸ்வரி said...

புலியின் கால்களை த்வமிருந்து சிவனிடம் வேண்டிப்பெற்றுக் கொண்டவர் வியாக்ரபாதர் முனிவர் என்று படித்திருக்கிறோம் .. கோவில் சிற்பங்க்ளிலும் காணலாம் ..

வண்டு வ்ந்து தேனெடுக்க பூக்களை எச்சில்படுத்தும் முன் மலர்களைப் பறிக்க விஷேஷமான கண்களையும் , வியாக்ரம் என்னும் புலிக்கால்களையும் வரமாகப் பெற்றவர் ..!

அவர் அகன்ற பாதங்களை உடையவர் என்பது அறியத்தந்தீர்கள்..

சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

RajalakshmiParamasivam said...

அருமையான பதிவு. பேராசிரியர். சுப்பிரமணியன் அவர்கள் நூலின் பெயரும் பதிப்பகம் பெயரும் தெரிவிக்க வேண்டுகிறேன். புன்னை மரங்கள் சதுப்பு நிலங்களில் வரும் என படித்துள்ளேன்.

ஶ்ரீராமன் said...

அங்கு கோவில் கொண்டிருக்கும் ஈஸ்வரன் வேங்கீஸ்வரர் என்பது ஒரு ஆதாரம் தானே?