Sunday, April 23, 2006

பாரதி தாசனும் தியாகராசர் கீர்த்தனைகளும்

"தமிழிசை இயக்கம்" என்ற பொத்தகத்தில் இரா. இளங்குமரன் கொடுத்துள்ள செய்தி. (பக். 62, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 600001, முதற்பதிப்பு:2, திசம்பர், 1993)

பாரதி கவிதா மண்டல அலுவலகத்தில் பாவேந்தர் பாரதிதாசனார் இருந்தார். அப்போது பஞ்சாபகேசய்யர் என்பார் "தெலுங்கு சமஸ்கிருதம் போன்று தமிழில் கீர்த்தனங்கள் பாட முடியாது; அவ்வாறு பாடினாலும் அவை தாளத்திற்கும் சங்கதி போட்டுப் பாடுவதற்கும் ஒத்து வராது" என்றார். அப்பொழுது பாவேந்தர் உடனிருந்த எஸ்.ஆர்.சுப்பிரமணியத்தைப் பார்த்து, "சுப்ரமண்யா, அவன் என்ன சொன்னான், தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் பாட முடியாது! அது என்ன தியாகராசர் கீர்த்தனை? இங்கு ஏதாவது இருக்கிறதா?" என்றார். "இருக்கிறது" என்று சுதேசமித்திரன் வாரப் பத்திரிக்கையில் உள்ள [இங்கே உள்ள என்பது, பின்னால் பாரதி தாசனால் மொழிபெயர்க்கப் பட்டவற்றைக் குறிக்கிறது - இராம.கி.] மொழிபெயர்ப்பும் இசையமைப்பும் என்ற பத்துக் கீர்த்தனைகளைக் கொடுத்தார் சுப்ரமணியம், மேல் நிகழ்ந்ததைச் சுப்பிரமணியமே கூறுகிÈ¡ர்.

சாப்பிட்டு வந்தவுடன் கவிஞர் எழுதினார். "நிஜமர்ம முலனு" என்னும் கீர்த்தனையைத் தியாகராசர் முத்திரையுடன் எழுதினார். "உடையாரே பாடு" என்றார். அவருடன் சேர்ந்தும் பாடினார். "அவன் என்னமோ சொன்னானே, சங்கதி; அதெல்லாம் போட்டுப் பாடு" என்றார். அவரும் பாடிவிட்டு "இந்தப் பாட்டு அற்புதம்! அற்புதம்!" என்றார். "பத்துக் கீர்த்தனைகளை மொழிபெயர்த்தார் கவிதா மண்டலத்தில் வெளியிட்டோம்" என்று எஸ். ஆர். சுப்பிரமணியம் பாவேந்தரின் மொழிபெயர்ப்புக் கீர்த்தனைகள் பிறந்த சூழலைக் குறித்துள்ளார்.

(ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் 1:3:35, ஆண்டு 1935.)
--------------------
இன்றைக்குப் பெரிதும் பலரால் பாடப்படும் மருகேலரா என்ற தியாகராசர் கீர்த்தனைக்குப் பாரதி தாசனின் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது. (1935 களில் பாரதி தாசன் பாடல்களில் வடமொழிச் சொற்கள் ஊடு வருவது உண்டு; அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தனித் தமிழுக்கு வந்து சேர்ந்தார்.) இந்தக் கீர்த்தனை "பாவேந்தர் பாரதி தாசனின் பழம் புதுப்பாடல்கள், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பல்கலைப் பேரூர், திருச்சிராப்பள்ளி 620 024" என்ற பொத்தகத்தில் இருந்து தட்டச்சு செய்தது. பக்கம் 475 - இராம.கி.

மறைவென்ன காண்
(மருகேலரா என்ற கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பு)

பல்லவி

மறைவென்ன காண் ஓ ராகவா?

அனுபல்லவி

மறைவேன் அனைத்தின் உருவான மேலோய்
மதியோடு சூர்யன் விழியாய்க் கொண்டோ ய் (மறை)

சரணம்

யாவும் நீயே என்றென் அந்த ரங்க மதில்
தேவிரத்தில் தேடித் தெரிந்துகொண்டே னையா
தேவரிரை யன்றிச் சிந்தனையொன் றில்லேன்
காக்கவேண்டும் என்னைத் த்யாகராஜன் அன்பே! (மறை)

இராகம்: ஷயத்தஸ்ரீ தாளம்: ஆதி

அன்புடன்,
இராம.கி.

2 comments:

nayanan said...

அய்யா, மிக நல்ல மற்றும் தேவையான பதிவு.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

http://www.musicindiaonline.com/p/x/qUK2bcxHoS.As1NMvHdW/