Wednesday, June 30, 2021

முதல்வராய் நானிருந்தால் - 2

இய்யதாகு முதலமைச்சன்


அரசொன்றில் முதலமைச்சாய் ஆவதெனில் எளிதாமோ?

அரசியலில் மற்றவரை அழிக்காமல் ஆளாமோ?

ஆளுவதும் பொருதுவதும் அடுத்தடுத்த நடைமுறைகள்;

நீளனைத்தும் செய்தபின்தான் நெடுங்கட்சித் தலையானேன்;

பார்ப்பதற்கோ நான்எளிமை; பலக்குறுத்தல்(1) அடிப்புறத்தில்;

வேர்த்துவிட மற்றவரை விரட்டுவதில் மேலாளன்;

தடந்தகை(2)யும், வழிதகை(3)யும், தரவுகளின் செயல்தகை(4)யும்

உடன்தெரிந்து உழுவதிலோ உள்ளார்ந்த கோடலன்(5)நான்;

எனைமிகுத்து எவனுமிங்கே அதிகாரி, அமைச்சனிலை;

எனைத்தவிர்த்து எவனுமிங்கே எழுந்திருக்க முடியாது;

எனைவிடுத்து ஒருபயலும் இடைநுழைந்து செயலாற்றான்;

எனைவிடுத்த எல்லோரும் தொண்டரெனப் படுவார்கள்;

இந்தநிலை கொண்டபின்தான் இந்நிலத்தில் முதலமைச்சாய்

எந்தவொரு தலைவனுமே இருந்திடுவான் இயல்பாக!

நானென்ன விதிவிலக்கா? நான்சிங்கச் சொப்பனம்தான்;

நான்விழிக்க மறந்தாலோ, நட்டாற்றில் கவிழுதற்கு,

இரண்டே நுணுத்தம்(6)தான்; இப்புலத்தில் இதுநியதி;

அரண்டுவதும் அரட்டுவதும் அன்றாடம் செய்பணிகள்;

அரசியலில் இதுவெல்லாம் அமைவதுதான் விளையாட்டு;

அரசியலில் அதனால்தான் அத்தனைபேர் நுழைகின்றார்;

முதலமைச்சாய் ஆனமுதல், மும்முனைப்பாய் வரும்தேர்தல்

விதப்புகளில் வென்றிடவே வினைகின்ற பரபரப்பை,

நானுலகில் இருக்குமட்டும் நாளும்தான் மறப்பேனோ?

நானிலத்தில் நல்லரசை நாடுவதும் அப்புறம்தான்;

இத்தனையும் சொன்னதனால் இவன்”தன்னைப் பேணி”யென

வித்தகமாய் நினைப்பீர்கள்; இருந்தாலும் வெள்ளந்தி

நிலையாளன் நானல்லன்; நீளுலகில் தற்பேணல்

குலையாது கொள்ளுவதும் குமுகத்தில் தவறாமோ?

சொந்தநலம் பார்ப்பவனும், சூழ்தேர்வில் வெல்லுதற்காய்,

அந்தந்தப் போதுகளில் அளவாகச் செய்வதுதான்;

குமுகத்தில் ”அதுநலமா? கொள்கேடா?” எனக்கேட்டால்,

"அமைவதெலாம் ஊழ்வினையால் ஆழ்த்துவந்து உருட்டாதோ?"

"அரசியலில் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகாதோ?"

அரசியலின் அடிப்படையே இதுவறிந்த பின்னேதான்

"கல்லென்ற நெஞ்சமிது கனியாது" எனநீவீர்

சொல்லிடவே எழுந்தாலும் சொல்லுவது என்கடமை;

நான்கடுசு; இருந்தாலும் நான்மனிதன்; எனக்குள்ளும்

தேன்சுரக்கும்; சிலபோது திருவினைகள் செய்வேன்தான்;

நீர்வளமா? வேளாண்மை? மரம்வளர்ப்பா? கட்டுமானச்

சீரமைப்பா? செழுங்கல்வி? மருத்துவமா? சிறுசிறிதாய்

அரசினுடை நிர்வாக அமைப்புச்சீர் நடவடிக்கை?

உரசிவிட என்தடங்கள் ஊன்றிடுவேன்; வியந்தீரோ?

இப்படியாய் இருகலவை இயன்றவன்தான் முதலமைச்சன்;

தப்படியைப் போடாமல், தடுமாற்றம் அடையாமல்

செப்புவது ஐந்தாண்டில் செய்யநினைக் கும்செயல்கள்;

இப்புலத்தில் இவைசெய்தால் எம்பருவம் பத்தாண்டு.


அன்புடன்,

இராம.கி.


1. பலக்குறுத்தல் = complication

2. தடந்தகை = strategy

3. வழிதகை = tactics

4. செயல்தகை = operationality

5. கோடலன்>கௌடில்யன் = சாணக்கியன்

6. நுணுத்தம் = minute


முதல்வராய் நானிருந்தால் - 1

சந்தவசந்தத்தின் 14 ஆவது கவியரங்கில் செபுதம்பர் 2004 இல் இக்கவிதையை அரங்கேற்றினேன். ”முதல்வராய் நானிருந்தால்” என்ற தலைப்பில், “இய்யதாகு முதலமைச்சன்” என்பதாய் என் கவிதையைப் படித்தேன். இணையத்தை இன்று துழாவிய போது மறந்துபோன கவிதை எனக்குக் கிடைத்தது. என் வலைத்தளத்தில் சேமிப்பதற்காக இங்கு பதிகிறேன். 

---------------------------    

அன்பிற்குரிய சந்தவசந்தத்தாருக்கும், தலைவருக்கும், என் வணக்கம். வழக்கமான முறையில் நான் இங்கு வரவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.

............................................................................................

"ஆயா, வீதியெல்லாம் ஒரே கூட்டமாப் போகுது; கையிலே கொஞ்சப்பேரு வேறே தலகாணி, பாயெல்லாம் சுருட்டி வச்சுக்கிட்டுப் போறாக! எங்கே போறாக, ஆயா?"

"அட மக்குப்பயலே, இது தெரியலியா உனக்கு? மகார்நோன்புப் பொட்டல்லே கண்ணகி - கோவலன் கூத்து இன்னைக்கித் தொடங்கப் போகுதுடோய்" நீட்டி முழக்கிப் பழக்கப் பட்டவள் என் ஆத்தாளுக்கு ஆத்தாள்.

"சோழராசாவோட பெரிய ஊரு காவிரிப் பூம்பட்டினம். அங்கே நாடுவிட்டு நாடுபோய் கொண்டுவிக்கிறவகள்லே. சாத்தப்பன்கிறவர் ரொம்பப் பெரிய ஆளு. அவரோட பையன் கோவாலனுக்கு, இதே மாதிரிப் பெரிய வளவு மாணிக்கம் பொண்ணு கண்ணாத்தாவைக் கல்யாணம் பண்ணி வச்சாக! வாக்கப் பட்ட பொம்பிளையை மாமனாரும், மாமியாரும் வேறெ வச்சாக; அதென்னவோ கொஞ்ச நாளைக்கப்புறம் கண்ணாத்தா சொகமே காணலை! அவளுக்கு வாய்ச்ச ஆம்படையான் கல்யாணம் பண்ண கொஞ்ச நாள்லெ கூத்தியாள் வீடே கதின்னு கிடந்தான்; மாணிக்கம் பொண்ணுக்கு ஒரு பொட்டு, புழுப் புறக்கலே; சீரு செனத்தி போட்டுக்கலே; நாளெல்லாம் புருசங்காரன் திரும்பி வந்துருவான்னு காத்துக் கிடந்தது தான் மிச்சம்; மாமனார், மாமியாருக்கும் என்ன சொல்றதுன்னே தெரியலை; சொத்து, பத்தெல்லாம் தாசிமடிலே கொட்டிக் கரைஞ்சு சீரழிஞ்சுது குடும்பம். பின்னாடி புத்தி வந்து புருசங்காரன் கண்ணாத்தா வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

இனிப் பட்டினத்துலே இருக்கவேணாம், பங்காளிகளும், தாயபுள்ளைகளும், பக்கத்து வீட்டுக்காரவுகளும் பலவிதமாப் பேசுவாக, அதனாலே மருதைக்குப் போயிருவோம், பொண்டாட்டி கொலுசை வித்துப் பொழச்சிக்கலாம்னு இளசுகள் ரெண்டும் புறப்பட்டாக; ஆனா, மருதையிலே விதி விளையாடிருச்சு; அங்கே தங்க ஆசாரி பண்ணின சூழ்ச்சிலே கோவலனைச் சிக்க வச்சி அவன் உசிரைக் காலன் கொண்டுக்கிணு போனான்.

கட்டளை போட்ட பாண்டியராசா தப்புச் செய்ஞ்சாருன்னு சொல்லி, அவருக்கு முன்னாடிக் கொலுசை உடைச்சா கண்ணாத்தா; எல்லாரும் உக்கார்ந்து இருக்கிற சவையிலே முத்துத் தெறிக்கிறதுக்கு மாறா மாணிக்கப் பரல் தெறிச்சுது; தப்பைப் புரிஞ்சுக்கின இராசாவும் இராணியும் அங்கேயே உசுரை விட்டாக! அதுக்கப்புறமும் கண்ணாத்தாவுக்கு கோவம் அடங்கலே! ஆம்படையானைப் பறிகொடுத்ததாலே மருதை ஊரையே எரிச்சு மானத்துக்குப் போய்ச் சேர்ந்தா! அவளுக்கு வந்த ரோதனை யாருக்குமே வரப்படாதப்பா!

அப்பறம் இதைக் கேட்ட சேர மகாராசா திகைச்சுப் போனாரு! பத்தினிக்கிக் கோவம் வந்தா, பாராளும் அரசு கூடப் பத்தி எரிஞ்சிரும்னு அவருக்கு புரிஞ்சுது. எப்பேர்க்கொத்த பத்தினிப் பொண்ணு எங்க நாட்டுலே வந்து சேர்ந்தான்னு சொல்லி அவளுக்குப் பொங்கலிட்டுப் படையல் வச்சு, வடக்கே இமயமலைலேர்ந்து கல்லெடுத்துக் கொண்ணாந்து, மஞ்சணமிட்டு, முழுக்காட்டிக் கோயில் கட்டிக் கொண்டாடினாரு.

நாட்டரசங்கோட்டை கண்ணாத்தா கோயில் கூட அந்த நினைப்புலே தாண்டா கட்டிருக்கு. இந்தக் கதை தான் பத்துநாளைக்கி இராத்திரி முழுக்க விடிய விடியக் கூத்தா நடக்கும். பார்க்கணும்னா சினேகிதக் காரங்களோட நீயும் போய்ப் பாரேன்." என்றாள் என் ஆயாள். முதன்முதல் சிறிய அகவையில் இதைக் கேட்ட எனக்கு, எங்கள் ஆயாளின் மூக்கோசைப் பேச்சில், கதை சற்றும் விளங்கவில்லை தான். இருந்தாலும் நண்பர்களோடு போனேன். அரசியற் கூத்தின் ஆரம்பக் காட்சி, திமிகிட.....திமிகிட என்ற சத்தத்தோடு, இறைப்பாட்டு முழங்க, சந்திர சூரியர்களையும், மழையையும் வணங்கித் தொடங்கியது.

புகார்நகர வீதியில் இந்திர விழாவுக்கு முன்னால், மன்னன் கிள்ளிவளவன் இரவு நேரத்தில் நகரச் சோதனை செய்கிறான். கூடவே அவனுடைய அமைச்சன் அருகில் போகிறான். 

"மந்திரி! நாடெல்லாம் எப்படி இருக்கு? மாதம் மும்மாரி மழை பொழியுதா?"

"சோழ மகராசா ஆட்சியிலே மழைக்கு என்ன குறை ராசா, மழை நல்லாவே பொழியுது?"

"காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம், தென்பெண்ணை, பாலாறு, கால்வாய்கள் எல்லாத்திலும் தண்ணீர் ஓடுதா?"

"மகாராசா, உங்க ஆட்சிலே கட்டிவச்ச குளம், ஏரி, கால்வாய், இதுக்கெல்லாம் குறையேது, மகராசா? தண்ணி நல்லாவே ஓடுது இன்னம் பத்து வருசத்துக்கு பஞ்சம்கிறதே  நம்ம நாட்டுலே இருக்காது"

"சாலைகள்லே வழிப்போக்கர்கள் பயமில்லாமப் போக முடியுதா?"

"ராசா, உங்கள் படைதான் ஊரெங்கும் காவல் காக்குதே, பின்னெ மக்கள் பயப்படத் தேவையில்லீங்களே? சாவடிகள் எல்லாத்துலேயும் அன்னதானம் ஒழுங்கா நடக்குது. வணிகச் சாத்துகள் ஒழுங்காப் போய் வந்துக்கிட்டு இருக்கு."

"ஊரில் பிள்ளைகுட்டிகள் படிக்கிறதுக்கு கல்விச்சாலைகள், மருத்துவத்துக்கு ஆதூல சாலைகள் எல்லாம் ஒழுங்கா நடக்குதா, இல்லை பணமில்லாமல் சிரமப் படுதா?"

"இல்லை, மகராசா, ஒரு குறையும் இல்லை, நல்ல காரியம் செய்யுறதுக்கு எவ்வளவோ செல்வந்தர்கள் முன்வர்றாங்க. உங்களோட ஒரு ஆணை போதுமே, இதெல்லாம் செய்யுறதுக்கு."

"அப்ப, இந்திர விழா எப்போ ஆரம்பிக்குது?"

நாடகத் தனமான இந்தத் தொடக்கக் காட்சிக்கு அப்புறம் கூத்துப் போய்க்கொண்டே இருந்தது. இந்தக் காட்சி எந்தக் கூத்தானாலும் முதலில் இருந்திருக்கும் தான்; என்ன, அரசனின் பேர் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கும். 

(இதுவரை நான் பார்த்திருக்கும் நாலைந்து கூத்துக்களில் கோவலன் - கண்ணகி கூத்தை முதலில் பார்த்ததால், எனக்கு இப்படி ஓர் நினைவு ஆழப் பதிந்திருக்கிறது. அவ்வளவுதான்.) 

அரசு - நாடு - ஆட்சி என்று எண்ணும் போது, கூத்தில் வந்த அந்த முதல்காட்சி இன்றைக்கும் முகமையாக எனக்குத் தோற்றம் அளிக்கிறது. நாட்டை ஆளுதல் என்பதை இப்படித்தான் எளிய முறையில் அன்றும் பார்த்தார்கள்; இன்றும் பார்க்கிறோம். ஆனால் என்ன, உள்ளே இருக்கும் சூக்குமம் புரியாமல் பார்க்கிறோம் 

.........

அன்றைய அரசனுக்கு மாறாய் இன்றைய முதலைமைச்சு என்று எண்ணிக் கொண்டு இனிப் படியுங்கள். இங்கே கண்ணகி கூத்தைப் பேசவில்லை. இது அது ஆகுற்ற கனவு இங்கே வெண்கலிப்பாவில் விரிந்து வருகிறது. (இய்> இய்து> இது) (இய்யதாகுற்ற >இய்யதாகுத்த>யதார்த்த; இய்யதாகல் = இயல்வாகல் = யதார்த்தமாதல்)

..................................................................................................

அன்புடன்,

இராம.கி.


Monday, June 28, 2021

secret

நம்முடைய செயற்பாடுகளில் ஒரு சிலவற்றை எல்லாரோடும் பொதுவாய்க் கலந்து செய்கிறோம்; அதே பொழுது, சிலவற்றைப் பிரித்துத் தனியே வைத்து, எல்லோரும் அறியாத வகையால், மறைவாகச் செயலாற்றிக் கொள்கிறோம். பொதுக் கருமங்கள் பொதுவை (common) ஆகவும், தனியே வைப்பதைச் செகுத்து வைத்தல் என்ற பொருளில் செகுதை எனவும் சொல்லலாம். இதைத் தான் ஆங்கிலத்தில் secret என்கிறார். 

secret: செகுதை, செகுத்து வைத்தல்

1378 (n.), 1399 (adj.), from L. secretus "set apart, withdrawn, hidden," originally pp. of secernere "to set apart," from se- "without, apart," prop. ஓon one's ownஔ (from PIE *sed-, from base *s(w)e-; see idiom) + cernere "separate" (see crisis). The verb meaning "to keep secret" (described in OED as "obsolete") is attested from 1595. Secretive is attested from 1853. Secret agent first recorded 1715; secret service is from 1737; secret weapon is from 1936. 

secret என்பதைச் சொல்லத் தமிழில் இன்னும் மூன்று சொற்கள் இருக்கின்றன. ஒன்று கமுக்கம், மற்றொன்று கரவம், மூன்றாவது மந்தணம். 

சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தில் மனோரமா "கம்முன்னு கிட" என்று சொல்லுவார் பாருங்கள், அந்தக் கம்மென்று இருத்தல் என்பது பலர் அறியப் பேசாதிருத்தல். கமுக்கம் என்ற சொல் கம்முதலில் பிறந்த பெயர்ச்சொல்.

அடுத்த சொல்லான கரவம் என்பது மறைத்தல் பொருளில் வரும் கரத்தல் வினையில் இருந்து கிளைத்த பெயர்ச்சொல். கரவம்> கரகம்> கரஹ்யம்> ஹரஹ்யம்> ரஹ்யம் என்று வடமொழி நோக்கித் திரியும். தமிழகத்தில் இருந்து வடக்கே போகப்போக ககரம் என்பது ஹகரமாகிப் பின் அதுவும் மறைவது பல சொற்களில் நடந்திருக்கிறது. முடிவில் ரஹ்யம் என்பது ரஹஸ்யம் ஆனது பலுக்க எளிமை கருதியே ஆகும்.

மூன்றாவது சொல்லான மந்தணம் என்பதும் மறைவுப் பொருள் கருதியே. 

செகுதையில் இருந்து இன்னொரு சொல்லும் விரியும். நம்முடைய செயற்பாடுகளில் செகுதையானவற்றை நம்பிக்கையானவருக்கு மட்டும் சொல்லி வினையாற்றுவது உலகில் பலருக்குமுள்ள பழக்கம். இப்படிச் செகுதைகளைக் கையாள்பவர் செகுதையர். ஆங்கிலத்தில் secretary என்று சொல்வார். Secretary is one who keeps secrets. செகுதையைக் காப்பாற்ற வேண்டியவர் அதைப் பொதுவையாக்கி விட்டால், அப்புறம் நம் கதி அதோ கதி தான்.

ஒரு ஊரின் நிலங்களைச் செகுத்து "இன்னார் இந்தப் பக்கம் வசிக்கலாம், இது போன்ற செயல்களைச் செய்யலாம்" என அமைத்துவருவது sector எனும் செகுத்தியாகும். (பகுத்துவந்த பாத்தியைப் போலச் செகுத்துவந்தது செகுத்தி.) 

"இது இதோடு கலக்கக் கூடாது" என்று தனித்துவைக்கும் செயலை segregate: செகுத்தாக்கல் என்பார்.

1542, from L. segregatus, pp. of segregare "separate from the flock, isolate, divide," from *se gregare, from se "apart from" (see secret) + grege, ablative of grex "herd, flock." Originally often with ref. to the religious notion of separating the flock of the godly from sinners. Segregation (1555) is from L.L. segregatio, from L. segregatus; in the specific U.S. racial sense it is attested from 1903; segregationist is from the 1920s. 

அப்படிச் செகுத்து வைக்கப்பட்ட பகுதி segment = செகுமம் என்றாகும். 

முடிந்தால் http://valavu.blogspot.in/2007/04/2.html என்ற வலைப்பதிவையும் படித்துப் பாருங்கள்.

அன்புடன்,

இராம.கி.

Tuesday, June 22, 2021

கருமி - கஞ்சன்- கம்மி

கருமி - கஞ்சன்- கம்மி என்பது பற்றி  27 சனவரி 2018 இல் எழுதியிருக்கிறேன். ஆனால் என் வலைப்பதிவில் அதைப் பதியாது விட்டிருக்கிறேன். இப்பொழுது அதே கேள்வி இன்னொரு வடிவில் தமிழ்ச்சொல்லாய்வு முகநூல் குழுவில் கேட்கப் படுகிறது. எனவே மீண்டும் பதிகிறேன். 

-----------------------------------

சிலநாட்கள் ஊரிலில்லாததால், உடன் பங்குபெறவியலாது, நாட்கழித்து மறுமொழிக்கிறேன். பொறுத்துக்கொள்க. ”கம்மி தமிழ்ச் சொல்லா?” என்றிங்கு கேட்கப்பட்டது. தமிழ்ச் சொற்களுக்கெனத் தனி வரலாறுகளுண்டு. பொதுவாக ஒற்றைச்சொல்லையும், சொல்லின் எழுத்துத் திரிவுகளையும் உறவுமொழிகளில் மேலோடப்பார்த்து யாரும் முடிவிற்கு வருவதில்லை. பொருள்வளர்ச்சி, புதுப்பயன்பாடுகள், சிறு மாற்றங்கள், குடும்பமொழிகள், வேற்றுமொழிகளெனப் பலவற்றையும் நூணிக் கவனித்து, ”உன்னிக்கும் சொற்பிறப்பிற்கு இயலுமையுண்டா?” என்று பண்டுவனின் கூர்ப்போடு அலசிப் பார்த்தே ஒரு முடிவிற்கு வருகிறோம். மாற்றுப்பார்வைகளை எடுத்து வைக்கையில் திறந்த மனத்துடன், பரிந்துரைத்த சொற்பிறப்பு வரிசையை மீளாய்வு செய்கிறோம். “தாட்பூட் தஞ்சாவூரெ”ன்னுங் கண்கட்டு மாகைப் போக்கும் (magic trend) ”புராணிகப் பாங்கும்” தமிழ்ச்சொற்பிறப்பியலிற் கிடையாது. ஒருசொல்லுக்கு முடிவுசொல்ல ஏராளஞ் சொற்களைச் சலிப்பது இயல்பே.  

ஓர் உயிர்/பொருள்/நிகழ்வு தோன்றுகையில் ”கருவுற்ற”தென்கிறாரே? அதன் பொருள் என்ன? குருத்தல் வினை குல்லெனும் வேர்ச்சொல்லிற் தோன்றற் பொருளில் கிளைத்தது. பனை, தென்னை. வாழை, தாழைக் குருத்துகளைக் கொழுந்தென்பார். குருத்தெலும்பு= இளவெலும்பு. குருத்தோலை= இளவோலை; குரும்பை= பனை தெங்கு, ஈச்சு போன்றவற்றின் பிஞ்சு. குருமன்/மான்= ஒரு சார் விலங்கு, பறவைகளின் இளமைப்பெயர். குருகு= விலங்கின் குட்டி. [குழந்தை/ குழவி என்றவை கருவின் வெளிப்பாடு. ரகரமும், ல/ழ/ள க்களும் தொடர்புடையவை.] ”குருவி”க்குச்  சிறு பறவை என்றே பொருள். கைபேசிக் கோபுரங்களில் உலவும் நூகையலைகளால் (microwaves) இக்காலத்திற் குருவியினம் குழம்பி அவற்றின் எண்ணிக்கை குறைவதாய்ச் சொல்வர். இது உண்மையா? தெரியாது. ஆனாற் சென்னைப் பெருநகரில் குருவி குறைந்து போய் விட்டது. குருவிக்கண்= சிறுகண்/துளை; குருவித்தலை= சிறுதலை; குரீஇ= குருவியின் அளபெடை. குரீஇப்பூளை= சிறுபூளை. (குருவி மட்டுமின்றி சிறுமையுங் குரீஇ.) 

குருளை= இளமை, நரி, நாய், பன்றி, மான், புலி, முசு, முயல், யா:ளி ஆகியவற்றின் குட்டி. குருவின் இடையுகரம் போய் அகரஞ் சேர்ந்தாலும் குள்ளச் சொற்களுண்டு. குரங்கல்= குறைதல்; குரம்பை= சிறுகுடில். தோன்றல், இளமை, சிறுமை, குறுமை என்று படிப்படியாகப் பொருள் திரியும். குரு>குறு வளர்ச்சியில் குறில், குறுக்கம், குறுக்கு, குறுகு போன்றவை குள்ளப் பொருள் காட்டும். குறு>குறை>குறைவு என்றும் திரியும். குறு>குன்று>குன்றல் என்றுமாம். குன்று/குன்றம்= சிறுமலை. குருவிற்கு ஒருபக்கம் பெருமைப் பொருளெனில் இன்னொருபக்கம் குறுமைப்பொருள் இருந்தேவந்தது.

குருவின் முதலுகரந் திரிந்து கரு ஆகினும் குள்ளப்பொருள் தொடரும். முட்டை/பிள்ளைக் கரு சிறியதே. கருவாலி = ஒருவகைக் குருவி; கருவல்= குட்டையாள். கருவன்= செறுக்கன் (மலையாளத்தில் சிறு என்பதச் செறுவென்று பலுக்குவர்.). கரைசலைக் காய்ச்சும்போது நீர் ஆவியாகி, கரைசல் செறியும் (concentrate), வெள்ளம் (volume) குறையும். காய்ச்சலைக் கருக்கல் (=குறைத்தல்) என்றுஞ் சொல்வர். உடம்பை 4 பாகம் ஆக்கையில் கருந்தலை என்பது கால் பாகங் குறிக்கும். கருநெல்லி = சிறுநெல்லிக்கு இன்னொரு பெயர். அரிநெல்லி/அருநெல்லி என்றுஞ் சொல்வர். சிறுசெங்குரலி எனும் மலைக்கொடி கருந்தாமக் கொடி எனப்படும். கருவின் இன்னொரு திரிவாய் கர என்றாகும். கரப்புக்குடிசை = சிறுகுடிசை.

பருக்குநிலை பருமு நிலை ஆவது போல், கருக்குநிலை கருமு நிலையாகும். கருமன்/கருமி = குறைத்து ஈகிறவன். கருமி தமிழில்லையென்பார் கஞ்சனைத் தமிழென்பார். நானறிந்த வரை இரண்டும் ஒரே பொருள் கொண்ட தமிழ்ச் சொற்களே. மு.சண்முகம் பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலி “செயல்களைச் செய்பவன், தீவினையான்/பாவி, ஈயான்” என 3 பொருள் சொல்லும். முதற்பொருள் கரமெனும் கைச்சொல்லிற் பொருந்தும். 2 ஆவது கரிமத் திரிவு. 3 ஆம் பொருளில், கருமி= மெலிவு, குறைவு, இழிவு, கொஞ்சம். எத்தனை விழுக்காடாயினும் குறைவு குறைவு தான். ஈயாதான் என்பது முற்றிலும் கொடை மறுத்தது. பேச்சுத் தமிழில் இன்னொரு பழக்கமுமுண்டு. இரண்டாமெழுத்தாய் இடையின ரு,லு,ழு,ளு பயில்கையில் அதற்குமாறாய் இனமெய்யிட்டு மூன்றாமெழுத்தை அழுத்துவார். தமிழ் போல் பாகதத்திலும் மெய் மயக்கமுண்டு. (பாவாணர் பாகதத்தை வடதமிழென்றே சொல்வார். அக்கூற்றில் உண்மையுள்ளது. விரிக்கின் பெருகும். வில்லியம் ஜோன்ஸ், மாக்சுமுல்லர், எல்லிசு, கால்டுவெல் ஆகியோரை விலகேம் என்று முன்முடிவு கொண்டோருக்கு இப்புதையல் கிடைக்காது.) மெய்ம்மயக்கம் கொண்ட சொற்கள் சிலவற்றைக் காண்போம்.

 கருமி>கம்மி=குறைவு; கம்முதல்=குறைதல்; கம்மை=சிறுகீரை; குழுமி>கும்மி=கைகொட்டிப் பாடியாடும் கூத்து; கும்முதல்=கூடுதல். ஆட்களுங் கூடுவர், கைகளுங் கூடும்; கொம்மியென்றுஞ் சொல்லப்படும். சருமம்>செருமம்>செருமன்>செம்மான்= சக்கிலியன், சருமம்=தோல், வெய்யிலில் நின்றாற் சுருங்குகிற, உலர்கிற, உடலை மூடும் போர்வை. சருமகன்/சருமகாரன்= சக்கிலியன்; செம்மாத்தி= சக்கிலியப் பெண்; செம்மாளி= செம்படவர் தரிக்கும் செருப்புவகை. செருப்பு= மிதியடி, செருத்தல்= மாட்டுமடி; [சருமம் தமிழே. பலருஞ் சங்கதமெனத் தவறாய் எண்ணுவர். செருப்பு தமிழெனில் சருமம் வடமொழி ஆகுமா? 1000 முறை மாட்டைத் தெய்வமென இந்துத்துவர் சொன்னாலும். மாட்டுக்கறியும், தோலும் மாந்தர் வாழ்வில் ஆழ்ந்த பங்கை வகிக்கத் தான் செய்தன மாட்டுத்தோலின்றி மிதியடிகள் இல்லை. மதங்கம்>ம்ருதங்கமும் இல்லை.]

 அடுத்தது செம்மறி. இன்று சிலர்க்குச் சிரைத்தல் வினை இழிவாய்த் தோன்றலாம். ஆனால் மாந்தர்க்கு அதுவொரு இயல்தொழில். சிரையைக் (shear) ”கத்திரித்துக் கொள்”எனச் சுற்றி வளைத்துச் சொல்வது அறியாமை. குறிப்பிட்ட ஆடுகளின் மேனி மயிரைச் சிரைத்து நூலாக்கி கம்பலி/கம்பளி ஆடைசெய்வார். சிரைக்கும் மயிர்கொண்ட மறி சிரைமறி. பேச்சு வழக்கில் சிருமறியாகி, சிம்மறி*>செம்மறி ஆகும். செம்மறி என்பது சிவப்பு மறியல்ல.  செருமாப்பு> செம்மாப்பு = இறுமாப்பு; (செரு/செருக்கு = அகந்தை, ஆணவம், பெருமிதம்). 

இன்னும் சொற்களுண்டு. செருகுதல்>செருமுதல்>செம்முதல் = மூடல்/அடைத்தல். செரிமித்தல்>செருமித்தல்>செம்மித்தல்/செமித்தல். (செரினத்தை சீரனம்>ஜீரணம் என்று வடவொலிப்பில் ஆக்கி சிலர் அதைத் தமிழில்லை என்பார்.) செருமல்>செம்மல்= தலைவன் (செரு= சிறுபோர். படைத்தலைவனே செம்மலாகும் தகுதியுற்றவன்.) செம்மொழி என்ற சொல்லும் கூட மெய்ம் மயக்கில் எழுந்ததே. எல்லா வளமும் பெற்ற செழுமையான மொழியை classical language என்று சொன்னார். செழும் மொழி>செம்மொழியானது. செழுமை யென்று தேடினால் சான்றுகள் கிடைக்கும். செம்மொழியென்று தேடினால் சங்க இலக்கியத்தில் சான்றுகள் கிடைக்காது. அதே போல் தெம்மாங்கும் மெய்ம்மயக்கச் சொல்லே. தெழித்தல் = முழக்குதல், ஆரவாரித்தல், ஒலித்தல். தெள்ளேனம் கொட்டோமோ? - என்ற மாணிவாசகர் கூற்றை எண்ணுங்கள். தெழிமாங்கு>தெழுமாங்கு>தெம்மாங்கு.  ஒலித்தல், ஆரவாரித்தல், முழங்குதல். அடுத்தது தும்மல் பற்றியது. தும்மும்போது, காற்றுஞ் சளியும் சேர்ந்து மூக்குள் மேலெழும். துளுமல் என்பதும் அதே பொருள் காட்டும். துளுமல்> தும்மல் = மேலெழுந்துவரல்

இனி அறங்குறிக்கும் தருமம்>தம்மம் (தள்>தரு>தா என்பது முற்றிலும் தமிழே. தருமத்தைச் சங்கதமென்றும், தம்மத்தைப் பாகதமென்றும் சொல்வது வீண் முயற்சி. இந்தையிரோப்பிய மொழிகளில் இது போன்ற சொல்லேயில்லை.) பருமை>பம்மை= பதுமை, பெருத்த நிலை. சிவனைக் குறிக்கும் பெருமான், மெய்ம்மயக்கத்தில் பெம்மானாகும். பொருமலி>பொம்மலி= பருத்தவன், தடித்தவன்; (பொம்மல் = பொலிதல்). பொருமல்>மொம்மல் = பொலிவு, பூரிப்பு, மிகுதி, பருமன் சற்று வேறுபட்டதை இனிப் பார்க்கப்போகிறோம். தேங்காய், பருப்பு, மிளகாய், மிளகு போன்ற கறிப் பொருள்களை அழுத்தும்போது அவை அரைபடும். அழுபடுவதை அழுமுதலென்றுஞ் சொல்வர். அழுமுதல்>அம்முதல் = அரைபடல்; அழுமி>அம்மி = அரைகல். அம்முதல் என்பது இன்னும் வளர்ந்து அமுங்குதலென்ற சொல்லை உருவாக்கும். அழுக்கமும், அமுக்கமும் உறவு கொண்டவை. இதுபோல் இழிந்தது கீழ்மைப்பொருள் உணர்த்தும். கீழ்வாய் இலக்கப் பின்னமான இழிமி>இம்மி = சிறு எண், சிறு நிறை என்று பொருள் கொள்ளும். அடுத்தசொல் பெருத்த இலக்கிய ஆட்சி கொண்டது. வாருங்கள் எனப் பொருள்படும் “வருமின்’ மெய்ம்மயக்கத்தில் வம்மின் ஆகும். வருமை = மணமகட்கு பெற்றோர் வழி வரும் சீர். இது திரிந்து வம்மையாகும். நெஞ்சு விரிந்து மூச்சிழுத்து அழுவது, விரிமல் என்றும் விம்மலென்றுஞ் சொல்லப் படும்.

அடுத்தது சற்று சிக்கலானது. அதற்கு முன் மலம் (=மதம்) என்ற சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். மதத்திற்கு நெறியென இன்று பொருள் சொல்வார். அதன் முதற்பொருள் மயக்கமே. மதி/நிலவை ஒட்டியே மயக்கப்பொருள் வந்தது. மதியென்பது மனக்கவலையை விதப்பாய்க் குறிக்கும். நில்மதி>நிம்மதி ஆகி மனக்கவலையின்மை குறிக்கும். சங்கதம்/பாகதத்தில் நில்>நிர் ஆகும். பலரும் நில்லை மறந்து, நிர்ரைப் பிடித்துத் தொங்கி, நிர்ரெனத் தொடங்கின் சங்கதச் சொல்லென்பார். நாமும் மயங்கி நிற்போம். நில், நிற்பு, நிப்பாட்டு ஆகிய சொற்களுக்கு stop பொருள் உண்டு தானே? நின்று போனது இன்மையைச் சுட்டுமே? நிர்மலம் = மனக்கவலையின்மை; இவ்வளவு சொற்களை ஏன் இங்கு சொன்னேனெனில், மெய்ம்மயக்கம் என்பது தமிழில் பரந்ததென்று காட்டுவதற்குத்தான்., 

முடிவாகக் கம்ம என்ற சொல் சங்க இலக்கியத்தில் மிக மிக நாட்பட்ட (குறைந்தது 2300 ஆண்டுகள் முற்பட்ட) நற்றிணையிலும், குறுந்தொகையிலும் வரும். இதன்பொருள் மெலிந்த, குறைந்த என்பதே. ஐதே கம்ம யானே ”விரைவாய் நான் மெலிவேனாக!” - நற்.143-1; ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே ” இவ்வுலகு படைத்தவனே! விரைவாய் நான் மெலியட்டும்” - நற்.240-1; ஐதே கம்ம யானே, கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே - குறுந் 217 6-7 ”மிகப் பெரியவரும், சிறியவரும் பழிப்பாரோ என்றபடி நான் விரைந்து மெலியட்டும்” - குறுந் 217.6-7. ஐதே கம்ம, மெய்தோய் நட்பே “மெய்தோய் நட்பு விரைந்து மெலியட்டும்” - குறுந்.401,6   

இதற்கப்புறமும் கம்மி தமிழில்லை என்று சொல்லுவோமா?

அன்புடன்,

இராம.கி.


Sunday, June 13, 2021

குறியாப்பு

 ”குறியாப்பு - சரியான சொல்லா ? இதன் பொருத்தமான பொருள் யாது? “ என்று தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்கப்பட்டது. இந்தக் ”குறியாப்பு” என்பது, 2000 ஆண்டுகளுக்கு முன் ”குறியெதிர்ப்பு” என்றே சொல்லப்பட்டது.  (எதிர்த்த என்பது, எயிர்த்த> எயித்த என்று பேச்சுவழக்கில் மாறும். எதிர்ப்பு> எயிர்ப்பு> எயிப்பு> யாப்பு என்பதும் பேச்சு வழக்கில் ஆவது தான்.) இத் திரிவுகள் ஏற்படும் முன் எதிர்ப்பு என்றே பழம் இலக்கியங்களில் இச்சொல் பதியப் பட்டது. காட்டாக, நற்றிணை 93/12 இல் ”உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே” என்றும், புறம் 163/4 இல் ”நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்” என்றும் குறள் 221/2 இல் ”குறியெதிர்ப்பை நீரது உடைத்து” என்றும் வரும்.  அதற்கு அப்புறம் கைமாறு என்றே புழங்கியுள்ளார். சரி குறியெதிர்ப்பு என்றால் என்ன பொருள்? 

நம் வீட்டில் சருக்கரை தீர்ந்து போயிற்று என்று வையுங்கள்/. பங்கீட்டுக் கடையில் (Ration shop) இனி அடுத்த மாதம் தான் போடுவார். இன்னும் 10, 15 நாட்கள் கூட ஆகலாம். அந்த இடைப்பட்ட நாட்களுக்குச் சருக்கரை நமக்கு வேண்டும். எனவே பக்கத்து வீட்டில் கால் கிலோ கைமாற்றாய்ச் சருக்கரை வாங்குகிறோம். நமக்குச் சருக்கரைப் பங்கீடு வந்தவுடன் அடுத்தவீட்டாருக்கு இக் கால் கிலோ சருக்கரையைத் திருப்பிக் கொடுத்து விடுவதாய் இரு வீட்டாருக்கும் ஒரு புரிதல். கைமாற்று என்பது பணத்திலும் ஏற்படலாம், சடங்குகளிலும் நடை பெறலாம்.  பங்காளி வீட்டு விருந்தோம்பலில் நாம் மொய் எழுதுவதும் அதே அளவு மொய்யைப் பங்காளி நம் வீட்டு விதப்பில் எழுதுவதும் கூட குறியெதிர்ப்புத்தான். திருமணம் என்றால் மொய்ப் பொத்தகம் என்பது இந்த நடைமுறையைத் திருத்தமாய்க் காட்டும்.   

குறியெதிர்ப்பின் பேச்சு வழக்குத் திரிவான ”குறியாப்பு” என்பது கொங்கு பகுதியில் மிகவுண்டு. ஒரு பொருளை வாங்கிச் சென்றால் அதே பொருளை பின்னொரு கால் திரும்பக் கொடுக்க வேண்டும். எ.கா: பால் ஒரு படி கடனாக வாங்கினால் திரும்பப் பால் ஒரு படி கொடுக்கவேண்டும். நம் கழனி உழவில்  தமது எருதுகள், பாரவண்டிகள் மற்றும் மாடுகளோடு வந்து ஏர் ஓட்டவும், குப்பைகளை வயல்களிலிருந்து எடுத்துச் செல்லவும் நமது சுற்றத்தார்/ உறவினர் துணை புரிந்தால், அவர் எத்தனை நாட்கள் நமது வயலில் எத்தனை சோடிகளுடன் வேலை செய்தாரோ அதே அளவு நாட்கள் அத்தனை சோடிகளுடன் நாமும் வேலை செய்து உதவுவதும் குறியெதிர்ப்பைச் சேர்ந்தது தான். 

‘குறியெதிர்ப்பு’ என்பது ‘to give something back in the same quantity it was borrowed’ என்று பொருள்படும். நாம் வாங்கிக்கொண்ட உதவியை ஏதோவொரு இடத்தில் குறித்து வைப்போம். அது சுவரில் தீட்டும். கோட்டு அடையாளம் ஆகலாம். நம் சிந்தனையில் குறித்துக் கொண்டதாகலாம். நம் வீட்டுக் கணக்கில் குறித்ததாகலாம். ஏன், நாட்காட்டியில், நாட்குறிப்பில் குறித்ததாகலாம். இதை அவருக்குத் தேவைப்படும் போது எதிர்ப்பணி (expectation), தொண்டு, வேலை செய்து கொடுப்பது எதிர்ப்பு என்று அழைக்கப்பட்டது. இதில் நேர்மை, பரிவு ஞாயம் போன்றவை பெரிதாய்க் கருதப்படும்.


Tuesday, June 01, 2021

medium

பலரும் இதை ஊடகம் என்றே மொழிபெயர்க்கிறார். சிலகாலம் முன்புவரை நானும் அப்படிப் புழங்கி இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அதை மாற்ற வேண்டுமென்றே நினைக்கிறேன்.

பெரும்பாலான இடங்களில் மிடையம் என்ற சொல்லையே நான் இப்பொழுது புழங்குகிறேன். ஏனென்றால் ஊடுதல் (to go in between or to osmose) என்ற வினை, ஒன்றின் ஊடே செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இது வேதிப் பொறியியல் (chemical engineering), மற்றும் பூதி வேதியலில் (physical chemistry) osmosis என்ற செலுத்தத்திற்குச் (process) சரியாகப் பொருந்தி வரும். நுணுகிய துளைகள் இருக்கும் ஒரு படலத்தின் (film) வழியே சில மூலக்கூறுகள் (molecules) ஊடுவது உண்டு. அந்தச் செயல் ஊடுகை (osmosis) என்று இந்த இயல்களில் சொல்லப் படும். அந்த ஊடுகைக்குத் துணை போவது ஊடகம் (osmotic membrane) என்னும் மெம்புனை(membrane)யாகும். அந்த ஊடுகைக்கு எதிராக, அதாவது கரைபொருளுக்கு (solute) மாறாகக் கரைமத்தையே (solvent) ஊட வைக்கும் செலுத்தத்தை எதிர் ஊடுகை (reverse osmosis) என்று சொல்வார்.

medium என்பதற்கு ஈடாக, மிடையம் என்று நான் சொல்லுவதற்குக் காரணம் மிடைத்தல் என்பது மேற்பட்டுத் தெரிதல் என்று பொருள்படுவதால் தான். மிடையும் மேடும் ஒருபொருட்சொற்கள். மேட்டில் இருந்து எழுந்தது மேடை எனும் சொல். ஒரு குமுகாயத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளை மேற்படுத்திக் காட்டுவது, மிடைத்துக் காட்டுவது மிடையம். இங்கே இவர்கள் வெறுமே விளக்குப் போட்டு நமக்குக் காட்டுகிறார்கள். "பொதுவாக மிடையக்காரர்கள் நிகழ்வுகளின் ஊடே சென்று செலுத்தம் செய்வது உகந்தது அல்ல" என்றே பலரும் சொல்லுகிறார்கள்.

தவிர அகநானூற்றின் ஒரு பகுதிக்குப் பெயரான மணிமிடைப் பவளம் என்ற சொல்லையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். மணிகளுக்கு இடையே கிடக்கும் பவளம் என்று அதற்குப் பொருள். மிடையம் என்பது குமுகாயத்தின் இடையே கிடக்கும் ஒரு நிறுவனம் தான்.

இப்படி இதைப் பற்றி நான் எழுதிக் கொண்டே போகலாம். எனக்கென்னவோ மிடையம் என்ற சொல் media-விற்குச் சரியான பொருள் தருவதாகவே படுகிறது. ஆனால், எந்தச் சொல் நிலைக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல நான் யார்? என்னால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, May 30, 2021

ஔவையர்

இது 2010 மே-யில் எழுதியது. எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து மீண்டும் வெளியிட்டபோது இற்றை நாள் கொண்டு வெளிவருகிறது.
   
”ஏரம்பம்” என்ற இதன் முந்தையக் கட்டுரைக்குத் தமிழ்மன்ற மடற்குழுவிற் பின்னூட்டு அளித்த பேரா. (இ)ழான் லூய்க் அடுத்து ஆத்திசூடியின் காலம் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு எழுதிய மடல் இது: 

 அன்பிற்குரிய (இ)ழான் லூய்க், 

 ’எண் எழுத்து இகழேல்’ என்ற ஆத்திசூடி வாசகத்தைக் கொடுத்து என் மலரும் நினைவுகளை, சிந்தனையைக் கிளறிவிட்டீர்கள். அதே கருத்து ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்று கொன்றைவேந்தனிலும் வரும். இரண்டும் நூல்தலைப்பே தெரியாத நூல்கள்; புழக்கத்தில் அவற்றின் கடவுள் வாழ்த்தில் வரும் முதற் சொற்றொடர்களே அவற்றிற்குப் பெயராகி விட்டன. இப் பழக்கம் நாலாயிரப் பனுவலிலும் உண்டு. முதற் பாடலின் முதலில் வரும் சிறு சொற்றொடரே பதிகத்திற்கும் தலைப்பாய் வரும். இதுபோன்ற பழக்கம் பதிற்றுப் பத்திலும் உண்டு. [தேவாரத்தில் ஊரை வைத்துப் பதிகப்பெயர் வரும். பொதுப்பதிகங்கள் மட்டும் மாறுபட்டிருக்கும்.] 

என் இளமைப் பருவத்தில் நான் மெக்காலேக் கட்டகத்தில் (Maculay system of school education instituted by the former English rule continues still today] வழி செய்யப்பட்ட பள்ளியிற் படித்தவன் அல்லன். அந்தக் காலத்தில் (1950 தொடக்கத்தில்) பலரும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் (மரபு சார்ந்த பள்ளிக் கூடத்தில் - traditional schools; this tradition is completely lost today) தான் படித்தார். மூன்றாவது வகுப்பு வரை அந்த மரபுப் பள்ளியிற் படித்து, அகவை (age) குறைந்திருந்த காரணமாய் மீண்டும் 3 வது வகுப்புப் படிப்பை மெக்காலே வழித் தொடக்கப் பள்ளியிற் [Elementary school] தொடங்கி 11 ஆவது வரை தமிழ்வழியே (Tamil medium) படித்து முடித்தேன். ”அரி ஓம் நமோத்து சிந்தம்” என்று தொடங்கி ஓலைச்சுவடியில் [book made of palm leaves] பாடத்தை எழுதி வைத்தும், விரிந்த மணல் மேடையில் கைகடுக்க எழுதியுமே [we all wrote in sand with our index finger] எழுத்தும் (alphabets and all reading material), எண்ணும் (mathematics) படித்தேன். நூற்றாண்டுப் பழமைகள் மாறாத காலம் அது. தாள் (paper) புழங்கத் தொடங்கியிருந்தாலும், எங்களுக்கான படிப்பு அன்று ஓலையிற் (palm leaf) தான் இருந்தது. பள்ளிக்குக் கொண்டு போகும் பொத்தகப் பைக்கே ”ஏட்டுப்பை” (Bag with palm stacks) என்று பெயர் சொல்வர். பை நிறைய கனத்த ஓலைச்சுவடிக் கட்டுகள். குறைந்தது நாலைந்தாவது செருகியிருக்கும். (கூடவே இடைவேளையிற் சாப்பிடுவதற்குத் தோதாக வீட்டிலிருந்து கொண்டு சென்ற முறுக்கு, தேன்குழல், அதிரசம் போன்ற தின்பண்டங்கள் இருக்கும்.) [ஒரு காலத்தில் ஓலைச்சுவடி பழகியவன், தாளுக்குப் போய், இன்று கணிக்குள் வந்துவிட்டேன். நாளும் பொழுதும் வெகுவாக ஓடுகின்றன. சவுதியில் சொல்வார்: ஒட்டகம் மேய்த்தவர் திடீரென்று மெர்சிடசிற்கும் BMW-விற்கும் வந்து சேர்ந்திருக்கிறார் என்று பொருளியல் வளர்ச்சியைச் சொல்வார்.] ”நமசிவாய” வைச் சொல்லத் தெரிந்த பின்னால், வீட்டிலும் பள்ளியிலும் முதலிற் சொல்லித் தந்த பாடலே ஔவையாரின் பாடல்கள் தான். 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்குச் 
சங்கத் தமிழ் மூன்றும் தா 

 என்ற “நல்வழி”யில் வரும் கடவுள் வாழ்த்தும், 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் 
 தப்பாமல் சார்வார் தமக்கு. 

 என்ற “மூதுரை”க் கடவுள் வாழ்த்தும் தான். எங்களூர்ப் பக்கம் இவற்றைச் சொல்லாத பள்ளிப்பிள்ளைகள் மிகமிகக் குறைவு. ஆத்தி சூடியும், கொன்றை வேந்தனும் 5 அகவைக்குள் பலருக்கும் கரதலைப் பாடமாயிற்று (lesson known inside out). மூதுரையிலும், நல்வழியிலும் ஐயைந்து (5, 5) பாட்டுக்களாவது மாணாக்கர் தெரிந்திருப்போம். இளம் அகவையில் அந்த ஔவையார் எங்களுக்கு மிக இணக்கமானவள். அதனாலேயே விரும்பத் தகுந்த “பாட்டி”யும் ஆனாள். அந்த ஔவையாரின் காலத்தையும், ஆத்தி சூடியின் காலத்தையும் கேட்டிருக்கிறீர்கள். ஔவையார் என்பார் ஒருவரல்லர். குறைந்தது மூவராவது இருப்பர். ஐவர், எழுவர் என்று சொல்வாரும் உண்டு. பாவாணர் ஔவை எழுவர் என்று சொல்வார். நான் ஐவர் என எண்ணுவேன். ஔவை (அவ்வை) என்ற சொல்லிற்கு அம்மா என்றே பொருளுண்டு. தெலுங்கில் அந்தச் சொல் இன்னும் புழக்கத்தில் உள்ளது என்று கேட்டிருக்கிறேன். 

முதல் ஔவையார் சங்க காலத்து ஔவையார். அதிகமானின் தோழி; பல்வேறு மன்னர் அவைகளில் வீறு கொண்டு வீற்றிருந்தவள். எந்தவூர்ப் பெண் என்பது தெரியவில்லை. அவள் பாடல்களைப் படித்தால் அவளை மூதாட்டி என்று சொல்ல முடியாது. [ஆனாலும் நெல்லிக் கனி சாப்பிட்ட காரணத்தால் அவளைப் பாட்டி என்று சொல்வது ஒரு மரபாகிப் போயிற்று. அதனாலேயே அவளைப் பின்வந்த ஔவைகளோடு போட்டுக் குழப்பி நெடுங்காலம் வாழ்ந்தாள் என்ற தொன்மத்தை மூதிகக் கதையாய் ஆக்கிவிட்டார்.] சங்க கால ஔவை மிகுந்த அழகான பெண்ணாக, அதே நேரத்தில் ஆணாதிக்கம் மிகுந்த அவைகளில் உட்புகுந்து வெளிவரும் துணிச்சல் மிகுந்தவளாய், எல்லா விதமான கறிகளையும் உண்ணக் கூடியவளாய், கள், மது போன்றவற்றை மாந்தியவளாயும் தென்படுகிறாள். தன்னைப் புரந்தவனையே ஒரு கணத்தில் தூக்கியெறியத் தயங்காதவளாயும் இருந்திருக்கிறாள். [இத்தனைக்கும் தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியைத் தான் உண்டு நெடிது வாழ நினையாது இவளுக்குத் தந்து இவளை நெடிது வாழப் பண்ணிய நெடுந்தகை நெடுமான் அஞ்சி.] அவனுக்கு எதிராக “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” [புறம்.206] என்ற வாசகத்தை இவள் சொல்ல வேண்டுமானால், இவளுக்கு இருந்த புலமைத் திமிரைப் பலரும் எண்ணியெண்ணி வியக்கக் கூடியது. என் ஆய்வில் அதிகமானின் காலம் கி.மு, 120க்கும் முந்தையது [துல்லியமான காலத்திற்குச் சற்று பொறுத்திருங்கள். சிலம்பின் காலம் எனும் என் கட்டுரை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்து சங்க காலச் சேர அரசரின் காலத்தை துல்லியமாய்க் கணித்த பின் தான் அதியமான் நெடுமானஞ்சிக்கு வரவேண்டும். ] எனவே முதல் ஔவையின் காலம் கி.மு.120க்கு முன்னால் என்று தற்காலிகமாய்ச் சொல்லலாம். 

அடுத்துவரும் ஔவை சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தியார் காலம். [கி.பி. 8 ஆம் நூற்றாண்டு.] இவளைப்பற்றி அவ்வளவு விவரம் தெரியவில்லை. ஓரிரு தனிப்பாடல்களும், தொன்மங்களுமே இருக்கின்றன. இவள் கற்பனையானவளாய்க் கூட இருக்கலாம். அதே பொழுது முற்றிலும் ஒதுக்க முடியவில்லை. 

மூன்றாவதாய் வருபவள் கம்பர் காலத்து ஔவை. (கம்பர் காலம் 9 ஆம் நூற்றாண்டு என்று ஒரு சிலரும், 12 ஆம் நூற்றாண்டு என்று இன்னொரு சிலரும் சொல்வார். இரு பக்கமும் சான்றுகள் உண்டு.  இதைப் பற்றி இங்கு எழுத முடியாது. தனித்து எழுத வேண்டும். ஒரு நாள் எழுத முயலுவேன். கம்பனை ஏதோ தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறேன். இப்பொழுது என் ஆய்வுச் சிந்தனை சங்க காலத்திலேயே சுற்றி வருகிறது. இதைவிட்டு வெளியே வரும் போது தான் மற்றதை ஆய முடியும்.) இவளும் ஒரு துணிச்சல் காரி. சோழ நாட்டைச் சேர்ந்தவள். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள உறையூர் என்றொரு தொன்மம் உண்டு. பல்வேறு வெண்பாக்கள், நாலைந்து அகவல்கள், சில விருத்தங்கள். உண்டு. ஒரு சில பாக்கள் மீண்டும் மீண்டும் படிக்கவைப்பவை. 

தண்ணீரும் காவிரியே, தார்வேந்தன் சோழனே, 
மண்ணாவ தும்சோழ மண்டலமே - பெண்ணாவாள் 
அம்பர்ச் சிலம்பி; அரவிந்தத் தாள் அணியும் 
செம்பொற் சிலம்பே சிலம்பு 

எட்டேகால் லட்சணமே, எ(ம்)மனே றும்பரியே 
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல் 
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே, 
யாரையடா சொன்னாய் அது? 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்! 
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது; 
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு 
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது; 
பேடு நீங்கிப் பிறந்த காலையும் 
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் 
தானமும் தவமும் தான்செயல் அரிது 
தானமும் தவமும் தான்செய்வ ராயின் 
வானவர் நாடு வழிதிறந் திடுமே. 

வேழமுடைத்து மலைநாட்டில் மேதக்க 
சோழ வளநாடு சோறுடைத்து; - பூழியர்கோன் 
தென்னாடு முத்துடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை 
நன்னாடு சான்றோர் உடைத்து 

இது போன்ற பாடல்கள் எல்லாம் தனிப்பாடல் திரட்டுக்களிலேயே (Compendium of isolated poems) உள்ளன. அவற்றுள்ளும் கலப்பு (mix of poems by different Auvaiyars) இருக்கலாம். இன்ன பாடலை இந்த ஔவையார் தான் எழுதினார் என்று உறுதி படச் சொல்ல முடியாது இருக்கிறது. [இந்த ஔவையார் இருவராயாய்க் கூட இருக்கலாம். ஒருவர் 9 ஆம் நூற்றாண்டும், இன்னொருவர் 12 ஆம் நூற்றாண்டும் இருக்கலாம். நான் இருவர் என்றே எடுத்துக் கொள்கிறேன். 

அறிவைக்குறள் பாடிய ஔவையார் யாரென்று சொல்ல முடியவில்லை. இவள் 14 ஆம் நூற்றாண்டு என்று பாவாணர் கணிப்பார்.] ஐந்தாவது ஔவையார் தான் ஆத்தி சூடி அவ்வையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நாலும் ஒரு தொகுதி போலவே அமைந்துள்ளன. அவற்றுள் ஒரு ஒத்திசைவு (consistency) இருக்கிறது. அவை நாலையும் ஒரே ஆசிரியர் எழுதியிருக்கப் பெருத்த வாய்ப்புண்டு. அவருடைய நல்வழி 40 ஆம் பாட்டு:

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 
 மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
 திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
 ஒருவா சகமென் றுணர். 

தெளிவாக திருக்குறளை வேதத்திற்கு மாற்றாகவும், மூன்று சிவசமயக் குரவரின் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்) தேவாரத்தை சங்கதத்தில் இருக்கும் உபநிடதம் (upanishad) போன்ற முனி மொழிகளுக்கு எதிராகவும், திருக்கோவையார்/திருவாசகத்தை வேத நெறி கலந்த சிவநெறியை வலியுறுத்தும் திருமந்திரத்திற்கு எதிராகவும் வலியுறுத்தி அவை ஒரே கருத்தைப் புகலும் வாசகங்களே என்று இந்தப்பாடல் உரைக்கும்.

மறைமலையடிகள் திருவாசகத்தின் காலத்தை 3 ஆம் நூற்றாண்டென்றும், மற்றையோர் 9 ஆம் நூற்றாண்டென்றும் சொல்வர் (நான் மூன்றாம் நூற்றாண்டு என்று சொல்பவன். அதன் விளக்கத்தை முன்னால் ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தேன். இன்னும் ஓர் விளக்கம் தங்கி நிற்கிறது.), மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டு என்று கொண்டால், இந்த ஆத்திசூடி ஔவை 9 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவள். இனி அவருடைய மூதுரை 14 ஆம் பாட்டைப் பார்த்து அருட்திரு. கால்டுவெல் அவர்கள், : 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி 
 தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன் 
 பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே 
 கல்லாதான் கற்ற கவி. 

 என்ற படி வான்கோழி பேசப்படுவதால், இந்த ஔவை 16 ஆம் நூற்றாண்டிற்கு மேல் தான் இருக்க முடியும் என்று காலம் கணிப்பார். ஏனென்றால் வான் கோழி துருக்கி நாட்டில் இருந்து 16 ஆம் நூற்றாண்டிற் தான் இந்தியத் துணைக் கண்டத்துள் இறக்குமதி செய்யப்பட்டது. வான்கோழியைப் பாடியவர் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாற் தான் இருந்திருக்க முடியும். இந்த ஏரணம் மறுப்புச் சொல்ல முடியாத ஒன்று. அதனால் ஆத்தி சூடி ஔவை 16 ஆம் நூற்றாண்டினள் என்றே நாம் கொள்ளுகிறோம். 

எண்ணும் எழுத்தும் பற்றிச் சொல்லும் கருத்து அப்படியே குறளில் இருந்து சொல்லப்படும் ஈயடிச்சான் படி. (copy made like beating a fly "chchap,,,,,") ஒரு வேற்றுமையும் இல்லை. புதிய கருத்தும் இல்லை. இங்கு இன்னும் குறுகத் தரித்து நாலு சீரிலும் இரு சீரிலுமாகச் சொல்லியிருக்கிறாள். இப்போதைக்கு என்னுடைய பிரிப்பு இதுதான். 

அன்புடன், 
இராம.கி.

Saturday, May 22, 2021

உப்புத் தாலாட்டு

1995 இல் இந்தத் தாலாட்டை எழுதினேன். பின்னால் திண்ணை வலையிதழில் November 02, 2002 இல் வெளியிட்டேன். எழுத்தாளர் செயமோகன் ஒரு காலம் வலையிதழ் நடத்தி வந்தார். அதில் இந்தப் பாட்டை மீள வெளியிட்டார். இப்போது இணையத்தில் இருக்குமா என்று தெரியவில்லை.  இப்போது இங்கு சேமிப்பிற்காகப் பதிகிறேன்.

அன்புடன்,

இராம.கி.

 ---------------------------------------------- 

வேலிக் கருவைநிழல் வெக்கை மணற்காற்று
வேலை உழந்திருக்கும் உன்னய்யன் கேட்பாரோ ?
ஆலும் மடிதவழ்ந்து அம்மாவின் தாள்மீது
காலிக் குரல்சேர்க்கும் கண்ணமுதே! கண்ணுறங்கு!

அன்னை அயர்ச்சிபெற, ஆச்சி அலக்கொடுக்க,
சின்னவர்கள் மாமன்மார் சேர்ந்துன்னை எதிர்பார்க்க,
உன்பிறப்பை உப்பளத்து நீர்க்கடவில் வார்த்தெடுக்க
என்னைக் குழைவித்த என்னழகே! கண்ணுறங்கு!

உப்பே கதியென்பார், உன்னய்யன் நாள்முழுதும்!
உப்பே இனிவாழ்வு! உண்டபினர் என்னசொல ?
உப்பே உன் தாலாட்டு! உப்பாய் வருநாளில்!
உப்பின் கதையறிவாய்! உந்தன் விதியிதுவோ ?

வெட்டவெளி பார்த்து, வியல்நிலத்தைக் கூன்பார்த்து,
கட்டிக் களிமண்ணைக் கூழாக்கி, நிரவியிட்டு,
சிட்டாள் குலவையிட, செந்தூரான் பேருசொல்லி,
எட்டாளு சேர்ந்து, இணையிணையாத் தாள்மிதிச்சு,

பாத்தி வயலாக்கி, பாய்ச்சுதற்கு நீரிறைவை
போர்த்திப் புகலாக்கி, பொந்தாக மின்னிணைச்சு,
வாய்த்த புரைநீரின் வாகாய் அளச்செறிவை
ஆய்த்துக் கணிச்சு, அறுவடைக்கு நாள்குறிச்சு,

முந்நீர் ஒதுக்கி, முதநிலத்து நீர்பாய்ச்சி,
அந்நீரைத் தேக்கி, அணையணையா வரப்புகட்டி,
தந்நேரில் கதிரும் தகதன்னு காய்ச்சியதால்,
வெந்நீராய் மாற, வெதுவெதுப்புக் கூடிவர,

நீர்த்து நிறைகூட, நெடுக நுரையொழுக,
சேர்த்துச் செறிகூட, சீராய் விதையெழும்ப,
பார்த்துப் படிவமெனப் பலனாய் அளம்வாரப்
பாத்திதனில் நீர்வடிச்சு, பல்வாயிற் கட்டமைச்சு,

செங்கச் செறிவரவே சேராய் அளம் விளைஞ்சு,
வெங்கதிரில் உப்புகையில், வெள்ளென்று மாலவச்சு,
கண்கூசி, இமையிடுங்க, கட்புலனைத் தொலையவச்சு,
தங்கூடை கொள்ளத் தலைநிறைய உப்பேற்றி,

அம்பாரம் சேர்த்து, அதற்குவொரு கூரைகட்டி,
தம்பாரம் கீழிறக்கி தன்னை உருக்கியதால்
சம்பாவும் காசும் தான்பெற்றார் உன்னய்யன்
செம்பாதிச் சூரியனே! செந்தூரா! கண்ணுறங்கு!

நாளும் அளம்பார்த்து நாவும் கரிப்பேற,
கூழும் குறுமீனும் கொண்டவளும் கூடவர
போழும் மணற்காற்றில் போழ்ந்துவிடா உப்பளத்தான்
வாழும் குலவிளக்கே! வடிவழகே! கண்ணுறங்கு!
—————————————————————————————————

மேலே உள்ள பாட்டு தூத்துக்குடிப் பக்கம் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும்
கூலிப் பெண்ணொருத்தியின் உப்புத் தாலாட்டு

உழத்தல் = to labour
ஆலுதல் = அசைதல்
காலுதல் = கத்துதல்
ஆச்சி = பாட்டி
அலக்கொடுத்தல் = துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்
நீர்க்கடவு = pump room with well.
முந்நீர் = கடல் நீர்
முதநிலத்து நீர் = தூத்துக்குடியில் நிலத்தடி நீரையே உப்பு விளைக்கப் பயன்படுத்துவார்கள். அதில் உப்புச் செறிவு (salt concentration) கடல் நீரில் உள்ள செறிவைக் காட்டிலும் கூட. இதைப் பயனாக்குவதால் தான் அங்கு உப்பு விளைப்பு ஓரளவாவது ஊதியம் உள்ளதாக இருக்கிறது.
புரைநீர் = borewell water
அளம் = உப்பு
செங்கச் செறி = right concentration
மாலுதல் = மயங்குதல்; உப்பளத்தில் கண்கூசி கண்பார்வை குறையப் பெற்றவர்கள் உண்டு.


Thursday, April 29, 2021

Oxygen

இதை அப்படியே ஆங்கிலம் தவிர்த்த இரோப்பிய மொழிகளில் யாரும் எழுதுவதில்லை. அந்தந்த மொழிகளின் சொற்களே (காட்டாக செருமானிய மொழியில் Sauerstoff என்றே அழைப்பர். ) இன்றும் கூட பல மொழிகளில் தனித்தனியாய் வெவ்வேறு சொற்களாய் ஆளப் படுகின்றன. அவற்றின் குறியீடு மட்டும் தான் உலகெங்கும் பொதுமையாய் O என்று புழங்கப்படும். தெரியாமல் தான் கேட்கிறேன். நாம் மட்டும் ஏன் oxygen என்ற ஆங்கிலச் சொல்லைக் கடன் வாங்கவேண்டும்? இப்படி எல்லாவற்றையும் அறிவியற் சொல்லென்று கடன் வாங்கிக் கொண்டிருந்தால் அறிவியற்றமிழ் என்பது நம்மூரில் கிட்டத் தட்ட மணிப்பவளத் தமிழ் என்பதாய் ஆகிவிடுமே?. முடிவில் சுற்றிச் சுற்றி நாம் தமிங்கிலத்திற்கே வந்து சேர்வோம். மணிப்பவளம் வேண்டாம் என்றுதானே 100 ஆண்டு காலம் நம் முந்தைத் தமிழறிஞர் போராடியுள்ளார்? நம் போன்ற நுட்பியலாளரும், அறிவியலாளரும் அதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
தமிழில் 1930 களுக்கு முன் பிராணவாயு என்ற புழக்கம் இருந்து, பின் 1940 களில் உயிரகமென, உயிர்வளியென மாறியது. கூட்டுச்சொற்கள் உருவாக்குவதில் ”உயிரகம்” என்ற ஆளுகையால் சிக்கல் ஏற்பட்டதால், தீயகம் என்று 1960/70களில் சிலபேர் (குறிப்பாகக் கோவை நுட்பியல் கல்லூரி - Coimbatore Institute of Technology) மாற்றினோம். அதிலும் சில சிக்கல்கள் வருவதைப் பின்னால் உணர்ந்து அஃககம் என்றே இப்பொழுதெலாம் பயன் படுத்துகிறேன்.
oxygen (n.) gaseous chemical element, 1790, from French oxygène, coined in 1777 by French chemist Antoine-Laurent Lavoisier (1743-1794), from Greek oxys "sharp, acid" (from PIE root *ak- "be sharp, rise (out) to a point, pierce") + French -gène "something that produces" (from Greek -genes "formation, creation;" see -gen).
oxys "sharp, acid" (from PIE root *ak- "be sharp, rise (out) to a point, pierce") என்பதைத் தமிழில் அஃகு என்று சொல்வோம், (நம் அகரமுதலிகளில் தேடிப் பாருங்கள். கிடைக்கும். இது இராம.கி.யின் புனைவு அல்ல.) அகம் என்பது ”குறிப்பிட்ட பண்பு (குணம்) கொண்டிருக்கும் மாழையல்லாத எளிமத்திற்குப் (non-metallic element) பொதுவாய் இடும் பெயரீறு. மாழை எளிமங்களின் பெயரீறு இயம் எனப்படும்.
இந்த வகையில் Oxide = அஃகுதை. Oxygen = அஃககம். இது போன்ற புதுச் சொற்களின் பொருத்தத்தைப் புதிய பயன்பாட்டிற் பார்த்து சிக்கல்களைக் கண்டுணர்ந்தே சரிசெய்ய முடியும். சொல்லாக்கம் என்பது ஏதோ யுரேகா போல் சட்டென மூளையில் உதித்துக் கொட்டி விடுவதில்லை. அது மாகையும் (magic) அல்ல. அதற்கும் ”செய்து பார்த்துச் சரி செய்யும் காலம் (trial and error period)” தேவை. அதுவும் ஒரு செலுத்தம் (process) தான்.
தனிமங்கள் எல்லாவற்றிற்கும் 1969 இல் ஒரு பட்டியலைப் பரிந்துரைத்தேன். கோவை நுட்பியல் கள்லூரியின் முத்தமிழ் மன்றம் ஆண்டு தோறும் வெளியிட்ட ”தொழில்நுட்பம்” மலரில் 1969 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையாய் அது வெளிவந்தது. அதன் மூலம் அலங்கா வேதியலில் (inorganic chemistry) பெரும்பாலானவற்றை நல்ல தமிழில் பொருள்படச் சொல்லமுடியும். இறையருள் இருந்தால், அதை மீளவும் ஆய்ந்து மறுபதிப்புச் செய்ய எண்ணியுள்ளேன்.
அன்புடன்,
இராம.கி.
Like
Comment
Share

Sunday, February 21, 2021

பாதுகாப்பு

"பாதுகாப்பு' என்ற சொல்லிலுள்ள 'பாது' எதைக் குறிக்கிறது?” என்றும், 'பாது' என்பது 'பாதித்தல்' என்பதோடு தொடர்புடையதா?” என்றும் 2 கேள்விகளை நண்பர் ஒருவர் கேட்டார்.  அதற்கான மறுமொழி இது.  பகுத்தல்> பாத்தல் = பாத்துதல் = பாதிடுதல் = பங்கிடுதல்; பாத்தி = பகுதி; பாத்தியம் = உரிமை; பகுதி> பாதி; பாதீடு = பங்கிடுகை, பாதுகாக்கை; பாது = பங்கு.; பாதித்தல் = இரு சம பங்குகளாய்ப் பிரித்தல்; ஒரு நாடகத்தில் பாத்திரம் என்கிறோமே? நினைவுக்கு வருகிறதா? அக்காலத்தில் ஒப்பனை செய்து, முகமூடியிட்டு (ஏறத்தாழ கதகளி ஒப்பனை போல்)  அடையாளம் தெரியாதபடி உருமாறி அப்பாத்திரமாய் ஆகிவிடுவர். பாத்திரம் என்பது ஓர் இருபிறப்பிச் சொல். பகுத்தம்> பாத்தம்> பாத்ரம்  என அச்சொல் வளரும்.  மீள ஆண், பெண் ஈறுகள் சேர்த்துப் பகுத்தன், பகுத்தி என்போம். பங்கு என்ற பொருளில் இதே பகுத்தம்> பாத்தம்> பாத்யம் என்பது சங்கத வடிவில் ஆளப்படும். ”உனக்கு இச்சொத்தில் பாத்தியம் உண்டா? இல்லையா?” என்று ஊர்ப்பக்கம் கேட்பார்.  

பாதும் பாதித்தலும் தொடர்புடையன. 

defence, safety, security, police என்பவற்றிற்குச் "சர்வ நிவாரணியாகப்" பாதுகாப்பு என்ற சொல்லையே பலரும் பயன்படுத்துகிறோம். இது நம்மைப் பெருந்தொலைவு கொண்டு செல்லாது. மாறாக, வலுவெதிர்ப்பு (defence), சேமம்/ஏமம்(safety), பாதுகாப்பு (security), காவல்(police) என்று தனித்தனிச் சொற்களைப்பயின்றால் தெளிவு கிடைக்கும் Building Security Systems = கட்டடப் பாதுகாப்புக் கட்டகங்கள்; Risk = இக்கு; Threat = மிரட்டு; Attack = தாக்கு; Asset = சொத்து; Flaw = வழு; Fault = பழுதை; Failure = பழுது; Error = தவறு

security என்பதற்கு சேமுறுதி என்ற சொல்லையும் முன்னால் பரிந்துரைத்தேன். secure = சேமுறுதி;  ஒரு பொருள் கெடாமல், கேடு தராமல், உள்ளது உள்ளபடி யிருந்தால் சேமமாய் இருக்கிறதென்று சொல்வோம். பொருள் சேர்ப்பதையும் சேமித்தல் என்கிறோம்; ஏனெனில் கேடு வராமல் அது காக்கிறது. அந்த நல்ல நிலையை உறுதி செய்வது to secure எனப்படும். i.e to make it safe சேமத்தை உறுதி செய்தல் - சேமுறுத்தல். இதன் பெயர்ச்சொல் சேமுறுதி. சேமுறுத்தர் = security personnel. சேமுறுதியார் = Security ஆட்கள். Watch என்பதைக் கண்ணுறல் என்று சொல்லலாம். Watchman = கண்ணுறுவார்; Bodyguard =  மெய்க்காவலர். IT Security - உ, நு. சேமுறுதி; Information System Security - உள்ளுருமக் கட்டகச் சேமுறுதி 

பாதைக்  காப்பது பாதுகாப்பு. இதற்கு இன்னொரு சொல் சேமுறுதி. 

Friday, February 19, 2021

உபரி, உபகாரம், உதாரணம்

 ஒரு தனிமடலில் நண்பர் ஒருவர், ”மேலுள்ள மூன்றும் தமிழ்ச்சொற்களா?- என்று கேட்டிருந்தார். அவருக்கு அளித்த விடை எல்லோருக்கும் பயன்படும் என்பதால், இங்கு பதிகிறேன். சங்கதத் தாக்கத்திலிருந்து இற்றைத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய் வெளிவரட்டும் என்று எல்லோரும் வேண்டிக்கொள்வோம். 

 முதற்சொல்லாய் வருவது உபரி. இயற்கையாலோ, மாந்த முயற்சியாலோ, ஒருபொருள் விளைந்து, மேல்வருவது உவ்வு-தலாகும். உப்பு-தலுக்கும் அதே பொருள். அளங்களில் உப்பு நீரைத் தேக்கி, சூரிய வெப்பபத்தால், நீரை ஆவியாக்கும் போது, விளைந்து  மேல்வரும் பொருளை உப்பு என்கிறோமே? இதை உவரி (salt) என்றும் சொல்லலாம். (தூத்துக்குடி மாவட்டத்தில் உவரி என்று ஓர் ஊருக்குப் பெயருண்டு.) வேளாண்மையில் விளைந்துவரும் பயிரால் கிடைக்கும் வருமானம், பயிர்விளைப்புச் செலவுக்கும்  மேலிருந்தால், அதையும் கூட உவரி (surplus)என்பர். வேளாண்மையில் பழகும் இச்சொல் சங்கதத்துள் போகையில் ubari என்று பலுக்கப்படும். வகரம் baகரம் ஆவது அங்கு பெரிதும் நடக்கும் இயல்முறை தான். ”உபரி” என்பது சங்கதச் சொல்,  ”உவரி” என்பது தமிழ்ச்சொல்.. 

இரண்டாம் சொல் உபகாரம். உடன் எழுந்துவருவதால், உவ எனுஞ் சொல் துணை என்றும் பொருள்கொள்ளும். உவ்வுதல், உப்புதல் போன்ற சொற்களோடு, உவமம் என்ற சொல்லும் ”எழுந்து பொருந்துவதைக் குறிக்கும்.) உவ>உப என்பதும் உவந்துவரும் (=எழுந்து என்று பொருள் கொள்ளுங்கள். விருப்புப் பொருள் கொள்ளாதீர்கள். )  நிலை. இதைத் துணையென்றும் புழங்கலாம். காரம் = வேலை, பணி, தொழில். இதைக் கருமம்  என்றும் சொல்வோம். கரத்தால் செய்வது காரம். காரன் என்று பல இடங்களில் சொல்கிறோமே? அவற்றைச் சற்று எண்ணிப் பாருங்கள். காரத்தைச் செய்பவன் காரன்,  உவகாரம்= துணைக்கருமம். உதவி என்பது உவகாரத்தின் இன்னொரு தமிழ் வடிவம். இங்கும் வடமொழித் தாக்கால் உவகாரத்தை உbaகாரம் என்று பலுக்குவார். தமிழில் சொல்ல, உவகாரம்ம் உதவி, துணைக்கருமம் போன்றவை போதும்.  

மூன்றாவதாய், உதாரணம். உத்தாஹரண>உதாஹரண எனும்  சங்கதக் கூட்டுச்சொல் மருவியே உதாரணம் என்கிறார். நம் வேர்ச்சொல்லில் தொடங்கி அங்கு போய்த் திரிந்து, மீண்டும் நாம் கடன்வாங்கிப் பழகும் சொல் இதுவாகும்.  கொஞ்சம் ஆய்ந்தால் இதன் தமிழ்முலத்தைக் கண்டுவிடலாம். உத்து>ஒத்து என்பது ஒப்புமைப் (comparison) பொருளில் பயிலும் தமிழுருபு. தொல்காப்பியம் உவமவியலில் இது பேசப்படும். அடுத்து, ஆகு-தல் எனும் தமிழ் வினைச்சொல்லோடு, அணம் எனும் ஈறு சேர்த்து ”ஆகணம்” என்ற சொல்லை உருவாக்கலாம்.”ஆகி வந்தது” என்று அதற்குப் பொருள். ”ஆகணத்தில்” ர்-ஐ நுழைத்து, ஆகணம்> ஆகர்ணம்> ஆகரணம்> ஆஹரணம் என்றாவது சங்கத வழக்கம். உத்து + ஆஹரணம்  என்னும் சொற்கூட்டு  உத்தாஹரணம்>உதாஹரணம் ஆகும். நாம் மீளக் கடன்வாங்கி உதாரணம் என்கிறோம். சங்கதக் கடனைத் தவிர்த்து, உத்தாகணம் என்றோ, எடுத்துகாட்டு என்றோ சொல்லிப் போகலாம்.  

உதாரணம் போன்றே சாதாரணம் என்ற சொல்லும் நம்மூரில் தவறாய் உணரப்படுகிறது. 1930-50 களில் ”குப்பன், சுப்பன்” பெயர்கள் நம்மிடம் அதிகமானது போல், 1000 ஆண்டுகளுக்கு முன் “சாத்தன்” அதிகமாய் இருந்தது. சங்க காலத்தில் கண்ணன், சாத்தன், ஆதன், அத்தன், ஆந்தை, சேந்தன், நாகன், தேவன், பூதன் போன்ற பெயர்களே மிக்கிருந்தன. அக்காலங்களில் சாத்தார மாந்தன் என்பது  எல்லோரும் அறிந்த பொதுவடையாளமாகும். இதன் மிச்ச சொச்சங்களாய், இன்றுங்கூட, திருச்சிக்குத் தெற்கில் தென்பாண்டியில் சாத்தையா, சாத்தப்பன் எனப் பெயரிடுவர். [அதேபொழுது ஒரு முரண்தொடையாய் தமிழரில் பலரும் (நகரத்தில் மட்டுமின்றி, நாட்டுப்புறங்களிலும் சேர்த்து) இஷ்/புஷ் என்று பொருள்புரியாது வடமொழிப்பெயர் இடுகிறார். பெருஞ் சோகமாகுமும்.அவலமுங் கூட ] 

சாத்தாரம்>சாத்தாரணம்>சாதாரணம் என்பது ordinary பொருளைக் குறித்தது. அதேபோல் சமணன் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற 3 நெறிகள் மக்களால் பின்பற்றப் பட்டதால்) என்ற பெயர் சமணன்>சாமணன்> சாமனம்> சாமான்யன் என்றும் பரவியிருந்தது. நீலகேசியில் இரண்டு இடங்களில் சாத்தன் = ordinary person என்பதை உணரலாம். முதல் இடம்,  நீலகேசி 683 - ஆம் பாடலில் (ஆசீவக வாதச் சருக்கம்) , வெளிவரும்.

ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லல னாய்விடின் இச்

சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய

நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலும் நினக்குரைத்தும்

ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ?

Any Tom, Dick and Harry என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் ”சாத்தன் (here denotes common man)” என்ற பெயர் தமிழகத்திற் பொதுப் பெயராக பழகியிருந்தது. பெருமானரே கூடத் தம் ஆசானை உவ ஆத்தன்> உப ஆத்யன்> உபாத்யன்> வாத்யான் என்றழைப்பர். நாளாவட்டத்தில் ஆத்தனுக்கு மாறாய், எதிர்ப்பதமாய், ”சாமான்யம் ஆனவன்” என்ற பொருளும் சாத்தனுக்கு ஏற்பட்டது. காட்டாக , இன்னொரு பாட்டு நீலகேசி மொக்கல வாதம் 413 இல் அமையும், 

ஆத்தன் உரைத்த பொருள் தன்னை அவ்வாகமத்தால்

சாத்தன் பயின்றால் அறியாவிடுந் தன்மை உண்டோ?

வீரத்து இங்குரைத்த பல தம்முள் ஒன்று இன்னதென்ன

ஓத்தின் வகையால் பெயரொடு உணர்வின்மைக்கு என்றாள்.

அன்புடன்,

இராம.கி,


Monday, February 15, 2021

cannon பாகங்கள்

அண்மையில் நண்பர் நன்னிச் சோழன் தமிழ்ச்சொல்லாய்வில் ஒரு cannon படத்தைக் கொடுத்து பாகங்களுக்குத் தமிழ்ப்பெயர் கொடுத்தார். நான் அதே சொற்களுக்கு கீழே என் பரிந்துரையைத் தருகிறேன். முதலில் cannon என்பதற்கு ஆன ஆங்கில விளக்கம் பார்க்கலாம்.c. 1400, "artillery piece, mounted gun for throwing projectiles by force of gunpowder," from Anglo-French canon (mid-14c.), Old French canon (14c.), from Italian cannone "large tube, barrel," augmentative of Latin canna "reed, tube" (see cane (n.)). The double -n- spelling to differentiate it from canon is from c. 1800. இச்சொல் துளைப்பொருளில் எழுந்தது. தமிழில் கன்னம் = துளை. கன்னகம் - துளையுள்ள வெடிமருந்துக் கருவியைக் கன்னகம் என்றே அழைக்கலாம்.



cannon உக்குப் பீரங்கி என்றும் தமிழில் சொல்லுண்டு. குண்டு பீரிட்டு வருவதால் எழுந்தபெயர் பீரங்கியாகும். ஒருசிலர் பீரங்கி  தமிழில்லை, போர்த்துகீசில் இருந்து தமிழ் கடன்வாங்கியது என்பார். இதற்கணைவாய்த் தமிழ் விக்சனரியைக் காட்டுவார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. தமிழ் விக்சனரியில் கிட்டுவதெலாம் வேதவாக்கா, என்ன? பீரங்கி போர்த்துக்கீசியச் சொல்லென அங்கு சொல்லப்பட்டதால், அது சரியாகிவிடாது. யாராவது போர்த்துகீசியரிடம் வினவினாரா? - என்று தெரியவில்லை, 

https://www.google.com/search?q=cannon+in+portuguese&rlz=1C1CHBF_enUS852US852&oq=cannon+in+portu&aqs=chrome.1.69i57j0l6.12589j1j7&sourceid=chrome&ie=UTF-8 என்ற கேள்வியைக் கூகுளில் இட்டால் பல்வேறு மொழிகளில் இருந்து போர்த்துக்கீசிற்கு மாற்றித்தரும். அதில் cannon என்று ஆங்கிலத்தில் இட்டால் canhão என்று போர்த்துகீசில் கிடைக்கிறது. tank gun என்று ஆங்கிலத்தில் இட்டால் arma tanque என்று போர்த்துகீசில் கிடைக்கிறது. பீரங்கி என்று தமிழில் இட்டால், Pīraṅki என்று ஆங்கில எழுத்துப் பெயர்ப்பிலும், artilharia என்று போர்த்துக்கீசிலும் கிடைக்கிறது.  இப்போது சொல்லுங்கள். பீரங்கி போர்த்துக்கீசியச் சொல்லா? என்னைக் கேட்டால் “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”. அருள்கூர்ந்து மேலும் தேடுங்கள். நானும் தேடுகிறேன். இப்போதைக்கு என் முடிவு: பீரங்கி தமிழே. இனி கன்னகப் பாகங்களுக்கு வருவோம். தேவைப்பட்ட இடங்களில் கீழே விளக்கம் தருகிறேன். 

Lip = இதழ். இதை உதடு என்றுஞ் சொல்லலாம்.

Fillet = இழைப்பு இழைத்துச் செய்யப்பட்டது இழைப்பு.

Muzzle = மூஞ்சில். ;முகவாய் என்பது முகத்தின் கீழ்த்தாடையைக் குறிக்கும். அது மேல்தாடையோடு கணுக்கப் பட்டதால்(connected) கணவாய் ஆனது. இது muzzle க்கு ஆன சொல் அல்ல. மூஞ்சி  என்பது முன்வரும் முக்கையும் வாயையும் சேர்த்த பகுதியைக் குறிக்கும், இதுவே muzzle எனப்படும். மூக்குத் துளை வழியே காற்று உள்ளேபோய் வெளிவருகிறது  வாய்த் துளை வழியே உணவு போகிறது. வாய் வழியே துப்பவும் செய்கிறோம்..கன்னகத்தில் பொருத்தும் மருந்தானது வெடித்துப் பின் எரிந்து குண்டைத் துளை வழியே துப்பும் ஒப்புமையால் மூஞ்சில் என்ற சரியாய்ப் பொருந்தும்

Muzzle mouldings = மூஞ்சில் மூழ்த்துகள்   [ஓர் அச்சுக்குள் உருகிய மாழையை அல்லது பொத்திகையை (plastic) மூழ்த்தியோ, அல்லது உருகிய மாழை, பொத்திகைக்குள் அச்சை மூழ்த்தியோ, மூழ்த்துகள் (moldings) செய்யப் படுகின்றன. பல்வேறு வகை முழ்த்துச் செலுத்தங்கள் இற்றை நடைமுறையில் உண்டு. அவற்றை  இங்கு விவரிப்பின் பெருகும். எனவே தவிர்க்கிறேன்.]

 Swell of muzzle = மூஞ்சில் வீக்கம்

muzzle astragal & fillets மூஞ்சில் கவோதமும், இழைப்புகளும். கவ்விய ஓதம் கவ்வோதம்>கவோதம். கோயில் கட்டுமானத்தில் இச்சொல் வரும் இச்சொல் சங்கதத்தில் நுழையும் போது cabotham என்றாகும். நாம் கவோதம் என்றே சொல்லிக்கொள்ளலாம்.  Chase girdle குழிதைப் பட்டை; குழிந்திருப்பது குழிதை. இதைக் குழிதாடி என்று சிவகங்கை மாவட்டத்தில் சொல்வர். குழிதாடியில் நெல்லை இட்டு உலக்கையால் குத்தி அரிசியையும் உமியையும் பிரிப்பர்.  குழிதாடியைக் குழிதை என இங்கே நான் சுருக்கியுள்ளேன்.  Chase astragal & fillets குழிதைக் கவோதமும், இழைப்புகளும் 

trunnions& rimbase தண்டங்களும் விளிம்படியும் செடி, மரங்களின் அடிக்கட்டை, trunk எனப்படும். தண்டு, தண்டம் என்று நாம் சொல்வோம். trunnion உம் trunk உம் ஆங்கிலச் சொல்லின் பிறப்பில் தொடர்புள்ளவை. விளிம்பு அடி விளிம்படி = rimbase ஆகும்.   

First Reinforce முதல் தாங்கி. 60 ஆண்டுகளுக்கு மேலாய் reinforced concrete என்பதை ”உறுதிபெறு கற்காரை” என்று பொறியியல் கல்லூரிகளில் வெளிவந்த அறிவியல், நுட்பியல் இதழ்களில் சொல்லி வந்தோம். உறுதிபெறுதல் என்பது civil engineering இல் பயன்பட்டது. ஒரு கருவிச்சட்டத்தைத் (equipment frame) தாங்கும் உறுப்பைத் தாங்கி (bearing) என்று சொல்வோம். இங்கே   Reinforce என்பது தாங்கி எனும் பொருளில் தான் பயன்படுகிறது. Second Reinforce இரண்டாம் தாங்கி. First reinforce astragal & fillets = முதல் தாங்கிக் கவோதமும், இழைப்புக்ளும் 

bottom of the bore = புரையடி; வீடுகளில் இருக்கும் bore well ஐப் புரைக்கிணறு என்று பலகாலம் சொல்லிவருகிறோம்.  

ball = குண்டு 

wadding = வட்டாடை. வெடிமருத்துக்கும் குண்டுக்கும் இடையில் ஓர் அடைப்பு இருக்கும். இதையே இச்சொல் குறிக்கிறது, மருந்தைச் செருமிக் கெட்டிக்க இந்த வட்டாடை. பயனாகிறது  கோயில்களில் இஐத்திருமேனிகளைச் சுற்றிக் கட்டும் ஆடைக்கும் வட்டாடை என்றே பெயர். இங்கே மருந்து வட்டாடையால் கட்டப்படுகிறது.   

Windage = விண்டேகை. காற்றைக் குறிக்கும் விண்டு என்ற சொல் பத்தாம் நூற்றாண்டு பிங்கலத்திலேயே உள்ளது. அது தமிழ்தான். வாயிலிருந்து வெளிவரும் காற்றால் சீழ்க்கை அடிக்கிறோமே, அந்த whistle வீளை என்ப்படும். வீளையும் விண்டு தொடர்புள்ளவை..   

vent field = விண்டுவெளிப் புலம் vent உம் wind உம் தொடர்புள்ளவை. 

vent = விண்டு வெளி

Base ring = அடி வலயம்

knob = குமிழ்

Breech = பீடம்

Base of the breech பீடப் படுகை

Chamber = குவ்வறை

cascable = கவ்வு மூடி

அன்புடன்,

இராம.கி.

Thursday, February 04, 2021

scooter உம், பிற வண்டிகளும்

"இன்று ஒரு தமிழ்ச்சொல் பரிந்துரை" என்ற வரிசையில் நண்பர் Harinarayanan Janakiraman நம்மில் பலர் அன்றாடம் பயன்படுத்தும் Scooterக்கு இணையாகத் துள்ளுந்து என்று சொல்லியிருந்தார். இது சில காலமாகவே பலராலும் பரிந்து உரைக்கப்பட்டது தான். ஆனால் ”பொருத்தமில்லாதது” என்பது என்புரிதல்.

 1967 இல் கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சரான பின்னால், ஆர்வ மிகுதியில், அன்றிருந்த புரிதலில் பலரும் பரிந்துரைத்து ஏற்கப்பட்ட சொற்களில் இதுவுமொன்று. சொற்களின் பொருத்தங்களை யாரும் அப்போது கேள்வி கேட்கவில்லை. ஆர்வக் கோளாறுகள் பலவும் அப்போது ஏற்பட்டன. தொடக்க காலத்தில் கேள்வி கேட்பதும் ஒருவகையில் தவறு தான். தமிழார்வத்திற்கே தடை போட்டிருக்கும். பின்னாலாவது, அதை தி.மு. க. வே மீளாய்வு செய்திருக்கலாம். செய்யாது போனார். இரு கழகத்தாரும் நாளடவில் தம் தமிழார்வத்தை நீர்த்துப் போக வைத்தார். பணம் அள்ளுவதில் இருவரும் குறியானபின், கொண்ட கொள்கைகள் அவரிடமிருந்து பறந்தோடின. முற்போக்காய் இருந்த திராவிடம் கொஞ்சங் கொஞ்சமாய்ய் பிற்போக்காகித் தேங்கிப் போனது..   

அன்று கலைஞர் பரிந்துரைத்த சொற்களில் இயக்குநர் (director; operator க்கும் director க்கும் வேறுபாடு வேண்டாமா? - என்று கேட்பேன்.. என் பரிந்துரை director=நெறியாளர்; operator = இயக்குநர்), மகிழுந்து (pleasure car; இப்போது pleasure ஐச் சேர்த்து யாரும் சொல்வதில்லை. வெறும்  car உக்கே மகிழுந்து என்கிறார்; சகடு என நான் சொல்வேன்), நீதியரசர் (justice; குடியாட்சிக் காலத்தில் அரசரைப் பிடித்து ஏன் தொங்கவேண்டும்? தெரியவில்லை. ”நயவோர்/நயத்தார்” போதும்) போன்றவை  ஒருசில, 

துள்ளுந்தும் அப்படித்தான். உந்தை (momentum)வைத்து, முன்னால் சில ஒட்டுக்களைச் சேர்த்தால் தமிழில் இது போன்ற கருத்துகள் வளர்ந்துவிடும் என்ற போதை பலருக்கும் இருந்தது. துள்ளிப் போகும் உந்தில் சிலரைத் தவிர்த்து எல்லோராலும் உட்கார்ந்து போகமுடியாது. தூக்கிவாரிப் போடும். அப்படியே scooter துள்ளுமென்றாலும் கூட, motor துள்ளாதா,  bike துள்ளாதா? - என்ற கேள்விகள் இயல்பாய் எழும். தவிர, துள் எனும் விதப்பு scooter க்கு மட்டும் ஏன்? அறிவியலில் எனக்கு விடை தெரியாது.

திராவிடச் சிந்தனையாளர் பலரும் அறிவியல் தமிழ் என்பதைப் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை. “பாமரருக்கும் புரிய வேண்டும்” என்று விளங்காத வேதம் படிக்கும் இவர் அறிவியலைத் தமிழில் சொல்லிக் கொடுப்பதைக் கண்டு கொள்ளவே இல்லை. கடந்த 250 ஆண்டுகளில் நம்மிடம் அறிவியல் வளர்ச்சி என்பது குறைவு. வரலாற்றுக் குளறுபடிகளால் ஒரு பேரிடை வெளி இக்காலத்தில் நம் மொழியில் எற்பட்டு விட்டது. அந்த இடைவெளியைச் சரி செய்யாது குறைச்சொற்களை நிரப்பாது நாம் அறிவியலில் வளரவே முடியாது. இதைச் செய்ய முயல்வதே எனக்குப் பொல்லாப்பு ஆகிறது. 

”பாமரச் சொற்களை விடுத்து இராம.கி. ஏதோ இலக்கியம் படைக்க முற்படுகிறார். கவிதை படைக்க முயல்கிறார். அகர முதலி வைத்துக் கொண்டா தமிழில் அறிவியல் படிக்க முடியும்?” என்றெல்லாம் சாடல்கள் எழும்.  என் கேள்வி எளிமையானது.  அகரமுதலி வைத்துக் கொள்ளாமலா, ஆங்கிலத்தில் அறிவியல் படிக்கிறோம்? எண்ணிப் பாருங்கள்

எனவே நம் மரபு எவ்வளவு தொலைவு வந்தது? எங்கு இடைவெளி ஏற்பட்டது? - என்பதில் நமக்கு ஆழ்ந்த தெளிவு வேண்டும். நமக்கு இன்று தெரிந்த 3000 சொற்களை வைத்து, முன்னொட்டு, பின்னொட்டு, ஈறுகள் சேர்த்தால் 250 ஆண்டு கால இடைவெளியைச் சரிசெய்து விடலாம் என்பது வெறும் கற்பனை. ஒருவகையான களிமண் குதிரையில் பயணம் செய்யும் போக்கு. ஒரு மழையில், காற்றில் அது கரைந்துவிடும். கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுன்றம் போக ஆசைப்பட்டானாம். 

அண்மைக் கால அறிவியல் வளர்ச்சி  மேலும் மேலும் விதப்பித்தல் (speciation), வகைப் படுத்தல் (classification) என்பதில் தான் வளர்ந்தது. நாமும் விதப்பித்தல், வகைப்படுத்தல் மூலம் நம் சொல் தொகுதியைக் கூட்டினால் தான் மேலே வளர முடியும். இதைச் செய்ய  ”பொது பொதுமக்கள், பொதுமைய” என்ற பாதை சரிவராது.

ஆங்கில எழுத்தாளர் சியார்ச்சு ஆர்வெல் தனது ”1984” புதினத்தில் இது போன்றதொரு மொழியை விவரிப்பார். good, supergood, plusgood, doubleplusgood என்று  முன்னொட்டுகளால் சொற்களைப் படைக்கும் தந்திரத்தை அங்கு  சொல்லியிருப்பார். அது ஓர் இயந்திர மொழியையே உருவாக்கும். தீநுண்மி, முள் தொற்றி போன்றவை  supergood, plusgood, doubleplusgood என்ற வகைச் சொற்களைச் சார்ந்தவை. அப்படிச் சொற்களைத் தமிழில் உருவாக்கினால் ஒருநாளும் தமிழில் அறிவியல் பரவாது. நாம் காலத்திற்கும் மேலையருக்கு அடிமையாய் இருப்போம். அப்படி ஒருவகையில் தமிழ் வளர்ந்தால் அது சவலைப் பிள்ளையாகவே இருக்கும்.

அந்தத் தடந்தகை  (strategy) நம்மைக் கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம், கேளிக்கை தவிர வேறு எதற்கும் வல்லமையுள்ளதாய் ஆக்காது. நான் சொல்வது சிலருக்கு வலிக்கலாம். ஆனால் என் கருத்தை என் பக்கத்தில் சொல்ல எனக்கு உரிமையுண்டு. பழம் இலக்கியங்களைப் படிக்காமல், வட்டார வழக்குகளை அறியாமல், மற்ற தமிழிய மொழிகளைச் சேர்த்துக் கொள்ளாமல், இந்தையிரோப்பிய மொழிச் சொற்களுக்கும், நம் சொற்களுக்கும் உள்ள உறவுகளை ஆயாமல், மொழித்திரிவு விதிகளை அறிந்து கொள்ளாமல், புதுச்சொல்லாக்கம் செய்வது குதிரைக் கொம்பே என்பதில் நான் தெளிவாய் இருக்கிறேன்.  என் சொல்லாக்க முறையின் அடி நாதம் அது தான்.

இனி scooter க்கு வருவோம். skeud- என்னும் Proto-Indo-European root meaning "to shoot, chase, throw." It forms all or part of: scot-free; shoot; shot; shout; skeet; skittish; wainscot. It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit skundate "hastens, makes haste;" Old Church Slavonic iskydati "to throw out;" Lithuanian skudrus "quick, nimble;" Old English sceotan "to hurl missiles," Old Norse skjota "to shoot with (a weapon)." என்பதில் தான் அவ்ர் தொடங்குவார், எங்கே சுற்றினும் முடிவில் மேலையர் சங்கதத்திலே தான் வந்து நிற்பார். அதற்குச் சற்று தள்ளித் தமிழுக்கு வரவே மாட்டார். ஆய்ந்து பார்த்தால், பல தமிழ்ச் சொற்கள் உருமாறிச் சங்கதத்தில் அடையாளம் காட்டும், இத்தனை சொற்களுக்கான உறவு எப்படி ஏற்பட்டது? நாம் வியக்கிறோம். என் ஆய்வு முடியவில்லை.

தமிழில் கடு-த்தல் என்பதற்கான எத்தனையோ பொருள்களில் விரைவும் ஒன்று. “ காலெனக் கடுக்கும் கவின்பெறு தேரும்” என்பது மதுரைக் காஞ்சி 388.  கடிது வா = வேகமாய் வா. குடுகுடு என்று ஓடினான் என்றால் வேகமாக ஓடினான் என்று பொருள். குடுகுடுக்கிறவ்ன் = அவக்கரப் படுகிறவன். கடுநடை = வேகநடை.. குடு>கடு என்று திரியும்.  ”வெந்திறல் கடுவெளி பொங்கர்ப் போந்தென” குறுந். 39. “கருமக் கடுக்கம் ஒருமையின் ஆடி” (பெருங்கதை, இலாவன. 17:9) “மாரி கடிகொளக் காவலர் கடுக” (ஐங்குறு 29.1) ”கால்விசை கடுகக் கடல் கலக்கு உறுதலின்” (மணிமே. 14:80) “கடுநடை யானை கன்றொடு வருந்த” (நற் 105.4).  கடு என்பது இந்தையிரோப்பியனுக்கு வெகு தொலைவில் இல்லை. முன்னால் s- சேர்த்தால், அதன் உறவு புரிந்துவிடும்.       .

அந்த வகையில் scooter (n.)யைக் ”கடுதி” எனலாம் 1825, "one who goes quickly," agent noun from scoot (v.). Also in 19c. a type of plow and a syringe. As a child's toy, from 1919 (but the reference indicates earlier use), as short for motor scooter from 1917. துள்ளுந்தை ஏற்கும் நாம் கடுதியைச் சேர்க்கத் தயங்குவோம். ”நாம் எசமானர் மொழிக்கு நெருக்கமாய் இச்சொல் வருகிறதே? இதை எப்படி நம்மை அவருக்குச் சமானம் ஆக்கலாம்?” என்று சிலர் கேட்பார். ”என்ன இருந்தாலும் சாமி, சாமி தான். நாம அடிமை தான்” என்பார் போலும்.

கடுதியை ஏற்றால், scut (n.1) "short, erect tail" (of a rabbit, hare, deer, etc.), 1520s; earlier "a hare" (mid-15c.), perhaps from Old Norse skjota "to shoot (with a weapon), launch, push, shove quickly" (compare Norwegian skudda "to shove, push"), from PIE root *skeud- "to shoot, chase, throw." என்பதை கடுவன் (பூனை) என்பது போல் கடுவை எனலாம்.

shoot (v.) Old English sceotan "to hurl missiles, cast; strike, hit, push; run, rush; send forth swiftly; wound with missiles" (class II strong verb; past tense sceat, past participle scoten), from Proto-Germanic *skeutanan (source also of Old Saxon skiotan, Old Norse skjota "to shoot with (a weapon); shoot, launch, push, shove quickly," Old Frisian skiata, Middle Dutch skieten, Dutch schieten, Old High German skiozan, German schießen), from PIE root *skeud- "to shoot, chase, throw." கடு-த்தல் என்பது, சூடு-தலுக்கு இன்னொரு பெயர், (சுடுதல் என்பது வெடிமருந்து பயன்பட்டால் மட்டுமே பயன்படும். விடு-த்தல்; எய்-தல் போல், கடு-த்தலும் இன்னொரு  வினைச்சொல்.

shot = கடுவு.

skeet (n.) form of trapshooting, 1926, a name chosen as "a very old form of our present word 'shoot.' " Perhaps Old Norse skotja "to shoot" (see shoot (v.)) was intended. கடுவம்

skittish (adj.) early 15c., "very lively, frivolous," perhaps from Scandinavian base *skyt- (stem of Old Norse skjota "to shoot, launch, move quickly"), from PIE root *skeud- "to shoot, chase, throw." Sense of "shy, nervous, apt to run" first recorded c. 1500, of horses. கடுவான

wainscot (n.) mid-14c., "imported oak of superior quality" (well-grained and without knots), probably from Middle Dutch or Middle Flemish waghenscote "superior quality oak wood, board used for paneling" (though neither of these is attested as early as the English word), related to Middle Low German wagenschot (late 14c.), from waghen (see wagon) + scote "partition, crossbar" (from PIE root *skeud- "to shoot, chase, throw") கடு வையம் வையம் = wagon என்று இன்னொரு கட்டுரையில் சொன்னேன். 

இந்த இடுகையை முடிப்பதற்கு முன்னால் motor (n.) நகர்த்தி பற்றிச் சொல்லி விட வேண்டும். "one who or that which imparts motion," mid-15c., "controller, prime mover (in reference to God);" from Late Latin motor, literally "mover," agent noun from past-participle stem of Latin movere "to move" (from PIE root *meue- "to push away"). Sense of "agent or force that produces mechanical motion" is first recorded 1660s; that of "machine that supplies motive power" is from 1856. Motor-home is by 1966. Motor-scooter is from 1919. First record of slang motor-mouth "fast-talking person" is from 1970.

கையில் வெண்ணெயை  வைத்துக்கொண்டு இது காலம் ”இயக்கம், அது இது” என்று நெய்க்கு அலைந்திருகிறோம். move = நகர்-தல். இதை நக(ர்)வு-தல் என்றும் சொல்லலாம். motion = நகர்த்தம். car = சகடு; motor-car = நகர்ச்சகடு; bike = இருதி. motor-bike = நகர் - இருதி

முடிவில் மனம் இருந்தால் மார்க்கமுண்டு

scooter = கடுதி

move = நகர்-தல், நக(ர்)வு-தல். 

motion = நகர்த்தம். 

motor = நகர்த்தி

car = சகடு; 

motor-car = நகர்ச்சகடு; 

bike = இருதி. 

motor-bike = நகர் - இருதி

அன்புடன்,

இராம.கி.


Wednesday, February 03, 2021

அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 5

இனிக் கடைசிப் பகுதிக்கு வருவோம். அரோகரா என்ற முழக்கத்தோடு, அஞ்செழுத்து, எட்டெழுத்து மந்திரங்களையும்  பற்றியும் அறிந்துகொள்வது நல்லது. முடிந்தால்  இம் மந்திரங்கள். பற்றிய இடுகையையும் படியுங்கள். ( https://valavu.blogspot.com/2020/02/blog-post.html) இப்போதெல்லாம் ஏதோ தமிழில் மந்திரங்களே இல்லையென்று சிலர் சொல்ல முற்படுகிறார். எல்லா மந்திரங்களையும் நான் பேச முற்படலாம். அது வழவழ என்று போகும். முகன்மையான அஞ்செழுத்து, எட்டெழுத்து மந்திரங்களைப் பற்றி மட்டும் இனிப் பேசுவோம். நண்பர் ஒருவர் ஒருமுறை தொலைபேசியில் ஓம் என்பதன் தமிழ்மை பற்றி விவரங் கேட்டார். அப்பொழுது தான் சிலம்பின் ஐயங்கள் என்ற தொடரில் 13, 14 ஆம் பகுதிகள் நினைவிற்கு வந்தன. அதில் இருந்து தேவையானவற்றை இங்கே வெட்டியொட்டுகிறேன்.

எல்லா மந்திரங்களும் “ஓம், ஹாம், ஹூம், ஹ்ரீம், சூ, மந்திரக்காளி...” என்று அமைவதாகவே சிறு அகவையில் நாம் பார்த்த கதைப் படங்களாலும் (cartoons), பாட்டி கதைகளாலும், அம்புலி மாமா இதழ்களாலும், பின்னால் திரைப்படம், தொலைக்காட்சிகளாலும் எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் அப்படிக் கிடையாது. பெரும்பாலான மந்திரங்கள், ”என்னைக் காப்பாற்று” என்பதை அடிப்படையாய்க் கொண்டனவே. தமிழில் ஓம்புதல் என்பது காப்பாற்றலைக் குறிக்கும். விருந்தோம்பல் எனில் விருந்தினருக்கு உணவிட்டுக் காப்பாற்றல் ஆகும். ”தொடர்ந்து துன்பத்திற் சிக்கி நான் வீழ்ந்துவருகிறேன். இதைத் தடுத்து என்னைக் காப்பாற்று”, என்றே மக்களிடம், பெரியவரிடம், தலைவனிடம், எல்லாம் வல்ல இறைவனிடங் கூட, வேண்டுகிறோம். தடுத்தாட் கொள்ளுதலைச் சிவ, விண்ணெறிகளிற் சூழ்க்குமமாய்ச் சொல்வர். உல்> ஒல்>ஒ>ஓ>ஓம் என்பது ”தடுத்தலை” உள்ளடக்கிக் காப்பாற்றும் பொருளைக் காட்டும். ”ஓம்” என்பது முழுக்க முழுக்க நல்ல தமிழ்ச்சொல். அதைச் சங்கதம் என நினைப்பது தவறு. பொதுவாய் 100க்கு 99 மந்திரங்களில் இந்த ”ஓம்” இருந்தே தீரும்.

["எனைக் காப்பாற்று” எனும் மந்திரங்கள் குறைந்தது 5000 ஆண்டுகளாய் நாவலந் தீவில் உள்ளன. சிந்துவெளியில் 2 ”ஒ” எழுத்துக்களில் ஒன்று இன்னொன்றைக் குறுக்கே வெட்டுவது ஆக்கி, ம் எனும் ஒலியை + வடிவாய் நடுவில் வைத்து, மூன்றையும் பிணைத்துச் சுழற் (சுவத்திக) குறி அமைத்தார் என திரு. இரா.மதிவாணன் சொல்வார். அவரை நம்பாதோர் இன்னும் தடுமாறுவார். மதிவாணனோ சிந்துவெளி எழுத்தைப் படித்துவிட்டதாய்ச் சொல்கிறார். இப்புலத்தினுள் நான் இப்போது போக விழையவில்லை. ஓம் என்ற சொல் இங்கு எழுந்ததால் இதைச் சொன்னேன்.] சிலம்பில் கோவலன் சொல்லும் மந்திரத்திற்கு முன்னர் காடுகாண்காதையின் 128-132

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்

ஒருமுறை யாக உளங்கொண்டு ஓதி

வேண்டிய தொன்றின் விரும்பினிர் ஆயின்

காண்டகு மரபின அல்ல மற்றவை

என்ற 128-132 ஆம் வரிகளில் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் பற்றி மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வான். ஐந்தெழுத்து சிவநெறிக்கும், எட்டெழுத்து விண்ணவத்திற்கும் ஆனதென்றே இற்றைக் காலத்திற் பலருங் கொள்கிறார். ஆனால் மாங்காட்டுப் பார்ப்பானோ (வேதங் கலந்த) விண்ணவ நெறியாளன். அவன் சொல்லும் ஐந்தெழுத்து விண்ணவ மந்திரம்  ஆகலாம். வடக்கிருந்து வந்த பார்ப்பனர் சிவ, விண்ணவ நெறிகளோடு வேதநெறி கலந்து தமிழரிடையே புதுநெறிகளை உருவாக்கினாலும், இவற்றின் அடிப்படைகளும் பழம் நடைமுறைகளும், இன்னும் தமிழ்வழியே தான் உள்ளன. ஆழ்ந்து பார்த்தால், சிவ, விண்ணவ மந்திரங்கள் சற்றே ஓசை மாறிய தமிழ் மந்திரங்களே. வடக்கு வேத மந்திரங்கள் இவற்றிலிருந்து  வேறுற்றவை. பொதுவாய்ச் சிவனையும் விண்ணவனையும் அவை கூப்பிட்டழைக்கா. (அரிதாய் உருத்திரனையும், விண்ணுவையும் அழைப்பதாய்ச் சில மந்திரங்கள் சொல்வர்.)

முதலில் ஐந்தெழுத்து மந்திரம் பார்ப்போம். எல்லாச் சிவன்கோயில் சுவர்களிலும் ”சிவசிவ” என இன்றும் பெரிதாய் எழுதுவர். இதோடு ஓம் சேர்த்தால் நாம் தேடும் ஐந்தெழுத்துக் கிடைத்துவிடும். ”ஓம் சிவசிவ” என்பதே சிவநெறியில் முதலிலெழுந்த ஐந்தெழுத்து மந்திரம். (கட்டளைப் பாக்களில் எழுத்தெண்ணும் போது மெய்யெழுத்தை எண்ணமாட்டார். கவனங் கொள்ளுங்கள் இங்கே ஓம் என்பது ஓரெழுத்து;) ”சிவனே காப்பாற்று” என்பது தான் இம் மந்திரப் பொருள். அதேபோல் ”ஓம் நாராயணா” எனும் ஐந்தெழுத்து மந்திரம் பெருமாள் கோயில்களிலுண்டு. (நாராயணன் நீரில் உள்ளவன் ஆவான் .”நாரணன்” என்ற என் கட்டுரையைப் பாருங்கள். http://valavu.blogspot.in/2009/08/blog-post_28.html

இனிக் குழைதலுக்கும் வணங்குதலுக்குமான சொற்களைப்பார்ப்போம். நுள்>நுள்வு>*நுவ்வு>*நும்மு>நுமு>நமு என்ற சொல் தளர்ந்து, குழைவதைக் குறிக்கும். பொதுவாகக் குழைந்த பொருள் மென்மையாகிப் பின் வளையும், வணங்கும். குழைதற் பொருளில் திருவாய் மொழியின் ஒன்பதாம் பத்தில் ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாம் பாட்டில் (திவ். திருவாய் மொழி 9:9:3)

இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்

  இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க

துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து

  துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்

தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்

  தாமரைக் கண்ணும்செவ் வாயும், நீலப்

பனியிருங் குழல்களும் நான்கு தோளூம்

  பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ!

 என நம்மாழ்வார் நாயகி பாவத்தில் ”நமுதற்” சொல்லின் மூலம் ”என் இணை முலைகள் குழைந்து போயின” என்பார். நமுத்துப்போவதை நமத்துப் போவதாயும் சொல்கிறோமே? ”அப்பளத்தை வெளியே வைத்ததால் நமத்துப் போனது” நமத்துப் போதல்>நமர்த்துப்போதல் என்றும் பேச்சு வழக்கிற் சொல்லப் படும். ரகரமும் லகரமும் பலவிடங்களிற் போலிகள். நமர்த்துப் போதல் நமல்த்துப் போதலும் ஆகும். தான் கொண்ட பற்றியாற் குழைந்து போனவன் இறைவனை வணங்கவே செய்வான். நமுதல் நீண்டு நமல்தல்/நமலுதலாகி வணங்கற் பொருளைக் குறிப்பது முற்றிலும் இயற்கையே.  சங்க கால முடிவிலெழுந்த நமல்தல்/நமலுதல் என்ற வினைச்சொல்லிற்கு வணங்குதலென்று பொருள். இதன் காட்டைத் திருவாய் மொழியின் மூன்றாம் பத்தில் மூன்றாம் பதிகத்தில் ஏழாம்பாட்டில் (திவ். திருவாய் மொழி 3:3:7)

”சுமந்து மாமலர் நீர்சுடர் தீபங்கொண்டு

அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்

நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு

சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே”

என்று நம்மாழ்வார் சொல்வார். நமன்றெழும் என்பது ”வணங்கியெழும்” என்று பொருள் கொள்ளும். நமனுதலுக்கும் வணங்கற் பொருளுண்டு. நமனிகை என்பது அடியார் வணங்கும் உட்கருவறை (inner sanctuary). தென்னகக் கோயில் நிருவாகத்தார் யாரும் தேர்ந்தெடுத்த சிலரைத் தவிர மற்றெவரையும் உட்கருவறைக்குள் புகவிடார். தீட்டுப் பட்டுவிடுமென்பார். ஆனால் காசி விசுவநாதர் கோயிலில் (செல்வவளம், பண்டாரிக்கு நெருக்கம், அதிகாரிகளுக்கு நெருக்கம் என உலகவழக்கம் பொறுத்து) நமனிகைக்குள் யாரும் போய் விசுவநாதனைத் தொடலாம். (நான் தொட்டுள்ளேன்.) பாலால் முழுக்காட்டலாம். வில்வமுமிடலாம். அது பொதுவான வடபுலப் பழக்கம்.  தென்புலப் பழக்கமோ கட்டுப் பெட்டியானது. எல்லோரையும் விடாது.

நுள்ளிலிருந்து உருவான நுமுதல் ஒரு தனிப்பட்ட வளர்ச்சியன்று. அதுபோலப் பல சொற்கள் உள்ளன. நுள்>நுளு>நுழு>நுகு என்ற வளர்ச்சியில் நுகும்பு, நுகை, நுணங்கு, நுடங்கு, நெகு, நெக்கு, நெகிழ், நெளு, நெளி, நொளு, நொய், நொய்வு, நொம்பு, நொம்பலம் என்று பல்வேறு தனிச்சொற்களாலும், கூட்டுச் சொற்களாலும் தளர்ச்சி, குழைவு, இளகு, உருகு, வளைவுப் பொருட்களை உணர்த்தும். 200 சொற்களாவது இப்படிப் பார்த்தால் தேரும். நமல் நெமலாகி நேமியும் ஆகலாம். அது வளைந்து கிடக்கும் வட்டம், சக்கரத்தைக் குறிக்கும். சமணத்தின் 22 ஆம் தீர்ந்தங்கரர் நேமிநாதர் சக்கரப் பொருளாற் பெயர் கொண்டவர். மதுரைக்கு அருகிலுள்ள ஆனைமலைக் கல்வெட்டில் ”அரிட்ட நேமி” என்ற துறவி பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. 

”நமல்க” என்ற சொல்லை (நம்மாழ்வாரின் திருவாய்மொழியிற் காணாவிடில் எனக்குக் கொஞ்சமும் இதன்பொருள் விளங்கியிருக்காது. நெடுங்காலம் ”நமக”வைச் சங்கதம் எனவே நான் எண்ணியிருந்தேன்.) ஐந்தெழுத்து மந்திரத்தோடு ”நமல்க” சேர்ந்தால் எட்டெழுத்து மந்திரங் கிடைத்துவிடும். (கட்டளைப் பாவை மறந்துவிடாதீர். ஒற்றிற்கு மதிப்பு இல்லை என்பதால் மல்  என்பது ஓரெழுத்து.)

”ஓம் சிவசிவ நமல்க - சிவனே! (எம்மைக்) காப்பாற்று. (எல்லோரும்) வணங்குக”,

“ஓம் நாராயண நமல்க - நாராயணா (எம்மைக்) காப்பாற்று (எல்லோரும்) வணங்குக”

நாளாவட்டத்தில் நமல்க என்பது பேச்சுவழக்கில் நமக என்றாகிப் பின் சங்கதத் தாக்கில் நம: என்றாகும். அப்படியாகையில் ஓரெழுத்துக் குறையும்.  (ம: என்பது மஃ என்று ஒலிக்கும். அதை வைத்து நம் ஆய்தமும் வடவரின் விசர்க்கமும் ஒன்றென்று சிலர் சொல்வார். முற்றிலுங் கிடையாது. ஆனாற் சில ஒப்புமைகள் உண்டு.) தவிர ஆய என்ற தமிழ்ச்சொல்லையுஞ் சங்கத முறையிற் கொண்டு வந்து சேர்ப்பர். [ஆகுதல்>ஆய்தல் என்பது ஆகுஞ் செயலைக் குறிக்கும். ஆயனென்ற பெயர்ச்சொல் ஆய என்றாகும்.)

இந்தப் பிணைப்பால் ”நாராயண” என்பது ”நாராயணாய” என்றாகும் ”சிவ” என்பது ”சிவாய” என்றாகும். முடிவில் விண்ணவ எட்டெழுத்து மந்திரம் ”ஓம் நாராயணாய நம:” என்றாகும். இதைச் சற்று மாற்றி ”ஓம் நம: நாராயணாய / ஓம் நமோ நாராயணாய” என்றுஞ் சொல்லுவர். சிவ ஐந்தெழுத்து மந்திரம் ”ஓம் சிவசிவ” என்பதற்கு மாறாய் ஓமை விட்டுவிட்டு ”சிவாயநம:” என்று மாறிப் போகும். இதை ”நம:சிவாய/நமச்சிவாய” என்றும் பலுக்குவர். முடிவில் ”சிவனை வணங்குக” என்று மட்டுமே இம்மந்திரம் பொருள் தரும். சிவ எட்டெழுத்து மந்திரத்திற்கு ”ஒம் சிவசிவாய நம”: என்றமையும். மொத்தத்தில் பலரும் இன்ற சொல்லும் சிவ, விண்ணவ மந்திரங்கள் தமிழுஞ் சங்கதமுங் கலந்த மந்திரங்களே. தமிழ் மந்திரம் வேண்டுமெனில் மேற்கூறியவற்றைப் பலுக்கவேண்டும்.

இதேபோல் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் அற்றுவிகத்திலும், செயினத்திலும், புத்தத்திலும் இருந்திருக்கலாம். மணிமேகலையில்  ஓம் மணிபத்மேய நம: என்பது புத்த நெறியின் எட்டெழுத்து மந்திரமும், ஓம் மணிபத்மேய என்ற ஆறெழுத்து மந்திரமும் பற்றிச் சொல்வர்.. மணிபதும/மணிபத்ம என்பது ”மணிபோன்ற பாதத்தாமரைகளைக்” குறிக்கும். பல ஆங்கில உரையாசிரியர் இது புரியாது juwel lotus என்றெழுதி ஆன்மீகப் பொருள்கொடுத்துக் குழப்பிக் கொண்டிருப்பர். (இணையத்தில் எங்கு தேடினும் இக்குழப்பம் நிகழ்வது புரியும்.) அடிப்படையில் பொருள் மிக எளிது. மகாயானம் தோன்றும் வரை புத்தனைப் பீடிகையாலே மக்கள் தொழுதார். புத்தனின் செங்காலடிகளுக்கு மணியும், பதுமமும் உவமங்கள். மணிப் பதுமம் என்பது இரட்டை உவமம் அவ்வளவு தான்.

இதேபோல் மந்திரங்கள் செயினத்திலும், அற்றுவிகத்திலும் கூட இருக்கலாம். தேடிப்பார்க்க வேண்டும். தீர்த்தங்கரரை அழைத்தும், இயக்கிகளை அழைத்தும் மந்திரங்கள் இருக்கலாம் (அவையெலாம் இப்போது எனக்குத் தெரியாது.) தெரிந்தவர் சொன்னால் கேட்டுக்கொள்வேன்.

முடிவிற்கு வருவோம். அரோகராவும், ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்களும் தமிழ் தான்.

அன்புடன்,

இராம.கி.