Tuesday, July 03, 2007

தாலி - 5

தாலி என்ற சொல்லிற்குப் பலரும் "மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்" என்றே விதப்பாகப் புரிந்து கொள்கிறார். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இச்சொல்லிற்கு உண்டு. சரியாகச் சொன்னால், "வளமை (prosperity), பிறக்கம் (fertility)" ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், வெவ்வேறு பேர்கள், வெவ்வேறு ஆட்களுக்கு அணிவிக்கும் ஒரு கலனாகவே தாலி எனும் பொதுச்சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். தாலி எனும் பொதுச்சொல்லோடு வெவ்வேறு சொற்களை முன்சேர்த்து, 'மங்கலத் தாலி, ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' என்றெலாம் பலவிதக் கூட்டுச்சொற்களை பழந்தமிழர் உண்டாக்கி இருக்கிறார்.

[இங்கே பேச்சுவழக்கில் பொதுமை/ விதுமைச் சொற்கள், ஓர் எழுகைச் சுற்றாக (helical) மாறிமாறி, எழும்விதம் பற்றிச் சொல்லவேண்டும். நெய்/எண்ணெய் பற்றிச் சொன்னபோது, முன்னே ஒருமுறை இதை விளக்கியிருக்கிறேன். விலங்குக்கொழுப்பின் வழியாக நெய்ப்பொருளை அறிந்திருந்த பழந்தமிழன், எள்ளைக் கடைந்தபோது வெளிப்பட்ட பிசிபிசுப்பு நீர்மமும், நெய்யைப் போலவே தோற்றமளிக்க, அதை எள்நெய்>எண்ணெய் என்று விதப்பாகச் சொல்ல முற்பட்டான். இவ்வழக்கில் நெய் என்பது முதலில் விதப்பாய் இருந்து, பின்னால் விலங்கு, நிலத்திணை ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் பொருளுக்கு பொதுமைச் சொல்லாய் மாறிநிற்கும். அப்புறம் அந்தப் பொதுமையில் இருந்து, எள்நெய் என்ற சொல்லாட்சியில் இன்னொரு விதப்புச் சொல் உருவாகும்.

அடுத்த சுற்றில், எள்நெய்>எண்ணெய் என்னும் விதப்புச் சொல்லே இன்னொரு பொதுமைச் சொல்லாகி இன்னும் புதிய விதப்புச் சொற்களை உருவாக்கும். அதாவது, எள்ளில் இருந்து மட்டுமல்லாமல், கடலை, தேங்காய் போன்ற பொருட்களிலிருந்தும் எள்நெய்யைப் போன்றதொரு நீர்மத்தைப் பெறமுடியும் என்றவுடன் எண்ணெய் பொதுமையாகி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்ற விதப்புச் சொற்கள் உருவாகி விடுகின்றன. இவ் வளர்ச்சியின் ஊற்றுமூலமான (origin) எள்நெய், நல்ல எண்ணெய் ஆகிவிடுகிறது.

இது போன்று, பேச்சு வழக்கில், ஓர் இயல்மொழியில் ஏற்படும் சொல்லாக்க முறைகளின் அடிப்படையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கருத்தைக் குறிக்கும் ஓரகைச் (unique) சொற்கள் விதப்பாகத் தான் ஓர் இயல்மொழியில் முதலில் எழுகின்றன. பின்னால் இது போன்ற இன்னொரு விதப்பும் அதே கருத்தைச் சுட்டிக்காட்டும் போது, முன்னால் குறித்த விதப்புச் சொல் பேச்சு வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொதுமைச் சொல்லாகி விடுகிறது. அடுத்த சுற்றில், மேலும் ஒரு பெயரடையை அதற்கு முன்னால் கொணர்ந்து நிறுத்தி இன்னும் பல விதப்புச் சொற்கள் புடைத்து எழுகின்றன.

தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்; பின் செல்வம் படைத்தோரால் அம் மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான் தாலியின் அடையாளம் என்நாம் பொருள்கொள்ளக் கூடாது. மஞ்சள்தான் அதன் அடையாளம்.) அடுத்த வளர்ச்சியில் இன்னும் பல விதப்புப் பயன்பாடுகள் பெருகிய பின்னால், 'மணமகளுக்கு திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலனை' விதப்பாகக்' குறித்த 'தாலி' பொதுமைச் சொல்லாகி, நல்லெண்ணெய் போல், மங்கலத்தாலி எனும் விதப்புவழக்கை உருவாக்கியிருக்க வேண்டும்.

மற்ற விதப்புப் பயன்பாடுகளாய், 'ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலை), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி' போன்றவையும் புழக்கத்திற்கு வந்துள்ளன. அவற்றை முடிந்தவரையில் விளக்கமாய் இனிப் பார்ப்போம்.

முதலில் ஐம்படைத் தாலி. இது பெற்றோர் சிறுவருக்கு அணிவிக்கும் ஒருவகைத் தாலியைக் குறிக்கும். இந்தக் குறிப்பை இலக்கியங்கள் மூலமாகவும், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நடைமுறையிலும் கூட நாம் அறியலாம். சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு (=கட்டை>கத்தை>கதை; இதைச் செண்டு என்று கூட இலக்கியங்கள் குறிக்கும். விழாக்களில் பூச்செண்டு கொடுப்பார்களே! அதன் வடிவத்தை ஓர்ந்து பாருங்கள்; கதை போல இருக்கும்), என ஐந்து விதமான படைக் கருவிகளின் சிறு போல்மங்களைச் செய்து அவற்றை ஒரு மஞ்சள் கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவருக்குப் பெற்றோர் அணிவிக்கும் பயன்பாடு புறநானூறு 77ம் பாட்டின் 7 ஆம் வரியிலும், அகநானூறு 54 ஆம் பாட்டின் 18 ஆம் வரியிலும், திணைமாலை நூற்றியைம்பதின் 66 ஆம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138 ஆம் வரியிலும், கலிங்கத்துப் பரணியின் 240 ஆம் பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது.

புறநானூற்றின் 77ம் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் செருவில் தேரூர்ந்து வந்துநின்ற காட்சியையும், பின்னர் பகைவரோடு பொருதி அவரைக் கொன்றவிடத்து அமைந்த தோற்றத்தையும் பற்றி இடைக்குன்றூர் கிழார் பாடுவதாகும். நெடுஞ்செழியனின் தந்தையும் (ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்) தாயும் (பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு), நெடுஞ்செழியனின் இளம் அகவையில் தவறிப் போக, இவன் தன் பகைவரோடு பதின்ம அகவையில் தலையாலங்கானத்தில் போரிட நேருகிறது. பையனாயும் அல்லாது, பெரியவனாயும் அல்லாது, ஒரு கலவையாய்க் காட்சியளிக்கும் இந்த நெடுஞ்செழியனின் தோற்றத்தைப் புலவர் இங்கே எடுத்துரைக்கிறார்.

"கிண்கிணி களைந்து கழலை இப்பொழுது தான் அணிந்திருக்கிறான்; சென்னியில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் இப்பொழுதுதான் குடுமி ஒழித்த முடியில் சூடிக் கொண்டிருக்கிறான்; வளையல் தவிர்த்த கைகளில் வில்லைப் பிடித்திருக்கிறான்; இப்பொழுது தேரின் மேல் நிற்கிறான்." என்று சொல்லிய புலவர் மேலும் சொல்லுகிறார்.

"................................................. தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்"

"மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்." என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இனி, அகநானூற்றில் வினைமுடித்து மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகற்குச் சொல்லுவதாய் வரும் பாட்டைப் பார்ப்போம்,

"முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால்" என
விலங்க அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே

இந்த வரிகள், மகனுக்காகப் பொய்சொல்லி நிலாவை அழைக்கும் தாய் நிலையைத் தேர்ப்பாகனுக்குத் தந்தை உரைப்பதாய்க் காட்சி காட்டும். "முகிழ்த்து ஒளிகாட்டும் மூன்றாம் பிறை நிலவே! பொன்னால் ஆன ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என்மகனோடு விளையாட நீயும் வந்தால் உனக்குப் பால்தருகிறேன் என்று புதல்வனுக்காக பொய்யுரைக்கிறாள் என் காதலி" - என்று சொல்லுகிறது இந்த வரிகள்.

ஆக பதின்மப் பருவத்திலும் இளைஞன் அணிந்து கொள்ளும் ஐம்படைத் தாலி, பால்குடிப் பருவத்திலேயே அவனுக்கு அணிவிக்கப் பட்டுவிடுகிறது. இனி திணைமாலை நூற்றைம்பதைப் பார்ப்போம். (இது சங்கம் மருவிய காலத்தில் கி.பி. 300-400 களில் எழுந்த நூல்)

வல்வருங் காணாய் வயங்கி முருக்கெலாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேற் பொன்தாலி பாஅய்த்
திகழக்கான்று இட்டன தேர்ந்து.

"செல்வச் சிறுவர்கள் அணியும் பொன்தாலியில் பொற்கொல்லர்கள் பவளம் இட்டுப் பொலிவித்தது போல, ஒளிவீசும் முருக்க மரத்தில் மலர்கள் பூத்திருக்கின்றன; பார்த்துக் கொள்ளம்மா! வேனிற் காலம் வந்தாயிற்று; இனிமேலும் நம் தலைவன் வேறிடத்தில் தங்கான்; உன்னைத் தேடி வந்துவிடுவான்" என்று தோழி தலைவிக்குச் சொல்லுகிறாளாம். இந்தப் பாட்டின் மூலம் செல்வச் சிறார்களின் தாலியில் சிவந்த பவளத்தைப் பொதிப்பதையும் நாம் அறிந்து கொள்ளுகிறோம். (மஞ்சளில் குங்குமப் பொட்டிடுவது இயற்கையில் நடக்கக் கூடியது தான். இன்றும் சில பெண்கள் கோயிலில் குங்குமத்தை எடுத்துத் தாலியில் இட்டுக் கொள்ளுகிறார்கள்.)

முடிவில் மணிமேகலையில் மலர்வனம் புக்க காதையில் 137-138 ஆம் வரிகள் முருகன் கோயில் திருவிழாவின் கால்கோள் காணப் புகும் தாய்மார்கள் தங்கள் செல்வச் சிறார்களை யானையின் முதுகில் வைத்துக் கொண்டு வரும் காட்சியைச் சொல்லுகின்றன. பொதுவாய் ஐந்து, ஆறு மாதத்தில் இருந்தே, பிள்ளைகளுக்கு வாய்நீர் கொட்டும். [ஏதொன்றையும் சுவையுணர்வால் அறியும் பருவம் அது.] காட்சியில் சொல்லப் படும் குழந்தைகள் பிறந்து எட்டுமாதம் ஆகியிருக்க வேண்டும். பேசத் தொடங்கும் நிலை. "எட்டு மாதத்தில் குளறிக் குளறி மெய்பெறாத மழலையிலும் வாய்நீர் கொட்டிக் கொள்வதால், அப்படிக் கொட்டும் வாய்நீர், பிள்ளைகள் போட்டிருந்த ஐம்படைத் தாலியை நனைக்கிறதாம்." என்ற பொருளில் இந்த வரிகள் அமைகின்றன.

"செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப"

ஆக, எட்டு மாதக் குழந்தை கூட, மணிமேகலைக் காலத்தில் (கி.பி.200) ஐம்படைத் தாலி போட்டிருக்கிறது. இதே போலப் பெரியாழ்வார் (கி.பி. 690-775), முதல்பத்து, திருத்தாலாட்டு 5 ம் பாட்டில் "எழிலார் திருமார்புக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு" என்று சொல்லித் தாலப் பருவத்திலேயே ஐம்படை அணிவதைச் சொல்லுவார். இன்னும் நிறைந்த முறையில் பெரிய திருமொழி 1:6:10 -இல், மங்கல ஐம்படை என்றே கூடச் சொல்லி மஞ்சள் நிறத்தோடு பெரியாழ்வார் ஐம்படைத் தாலியைத் தொடர்புறுத்திச் சொல்லுவார்.

ஆக, அகநானூற்றின் காலத்தை வைத்துப் பார்த்தால், தாலி என்ற சொல்லின் பொதுமைப் பயன்பாடு, 2400 ஆண்டுகளுக்கும் முந்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கி.மு.400 ல் இருந்து கி.பி.800 வரைக்கும் கிட்டத் தட்ட 1200 ஆண்டுகள் ஐம்படைத் தாலிப் பழக்கம் இருந்திருக்கிறது. அதற்கு அப்புறமும் இலக்கியச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியும். (அப்புறம் எப்படி பத்தாம் நூற்றாண்டில் தான் தாலி எழுந்தது என்று கூற்றுச் சரியாகும்?) இந்தக் ஐம்படைத்தாலிப் பழக்கம் 50 ஆண்டுகளுக்கு முன்வரைக்கும் கூட, சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் குமுகத்தில் ஆண் சிறாருக்கு எனத் தொடர்ந்து வந்திருக்கிறது. (இந்தக் காலத்தில் ஐம்படைத் தாலி என்பது தென்மாவட்டங்களில் வெறும் பொற்சங்கிலியாய் மாறிப் போனதும் உண்டு.)

பொதுவாய்த் தற்காப்புக் கலைகள் பயின்று வெளிவரும் வரை, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறமை ஒரு இளைஞனுக்கு வரும் வரை, இந்த ஐம்படைத் தாலி என்பது அந்தக் காலத்தில் அணிவிக்கப் பெறும். இனிக் கலைகள் பயின்று வெளிவரும் நாள் என்பது எப்போது? அந்த நாளின் எச்சங்களும், சடங்குகளும் இன்று தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மீந்து கிடக்கின்றன.

இதை அறிந்து கொள்ள மீண்டும் சிவகங்கை மாவட்டத்திற்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஒவ்வோர் ஆண்டின் கார்காலத்தில் (புரட்டாசி மாதத்தில்) ஒன்பான் இரவுகளுக்கு (நவராத்திரி) அப்புறம் வரும் பத்தாம் நாள் நிகழ்ச்சியில் ஐம்படைத் தாலி அணிந்த ஒவ்வொரு இளைஞரும் கிலுக்கி எடுத்து வாழையில் குத்தும் சடங்கு சிவகங்கை மாவட்டத்தில் உண்டு. (வடமொழியில் இந்த பத்தாம் நாளை விசயதசமி என்று சொல்லுவார்கள். சிவகங்கைப் பக்கமோ இதை மகார் நோன்பு என்பார்கள். காரைக்குடிக் கவிஞர் முடியரசன் இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காரைக்குடியில் மகார்நோன்புப் பொட்டல் என்று ஊர்நடுவில் ஒரு பொட்டல் கூட இருக்கிறது. மக்கார்>மகார் என்ற சொல்லுக்கு இளையவர் என்ற பொருள் உண்டு. இளையவரில் இளம்பெண்களுக்கான சில சடங்குகள் பற்றி இங்கு நான் சொல்லப் போவதில்லை. கன்னி ஞாயிற்றில் கன்னியர் இறைவியை வழிபடுவது ஒருவகை. இங்கே நான் சொல்லப் புகுவது ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொதுவான இளையர் பற்றியது.)

ஒன்பான் இரவுகள் புரட்டாசி மாதம் அமையுவா (அமாவாசை) யில் தொடங்கி 10 ஆம் நாளில் ஊரில் உள்ள ஊருவலத் திருமேனிகள் (உர்ச்சவ விக்ரகங்கள்) அம்பு போடும் திருவிழா நடைபெறும். ஒன்பான் இரவின் முதல்நாளைக் கிளுக்கியெடுப்பு என்று சொல்லுவார்கள். கிளுக்கி என்பது குஞ்சம் வைத்த ஈட்டி/அம்பு போலத் தோற்றம் காட்டும் ஒரு படையாகும். இது செல்வநிலைக்குத் தக்க மரக்கிளுக்கியாக, பட்டுக் குஞ்சம் கட்டிய மரக்கிளுக்கியாக, இரும்புக் கிளுக்கியாக, வெள்ளிக் கிளுக்கியாக, ஏன் தங்கக் கிளுக்கியாகக் கூடவும் இருக்கலாம். மகார் நோன்பு விழா தொடங்கும் கிளுக்கியெடுப்பு நாளில் குடும்பத்தில் உள்ள இளையோர் (குறிப்பாக ஆண்பிள்ளைகள்) கையில் கிளுக்கியை எடுத்துக் கொண்டு சென்று கோயிலில் வழிபட்டுத் திரும்புவர்.

இந்தக் கிளுக்கி பள்ளிசெல்லும் சிறார்கள் ஒன்பானிரவுக் காலத்தில் ஒலித்துக் காசு திரட்டும் கிலுகிலுப்பையாகவும் பயன்படும். கிலுகிலுப்பை என்பது கிலிகெ (க), கிலுக(தெ); சிலிகெ (பட) என்று பல்வேறு மொழிகளில் கூறப்படும். கிளுக்கியின் அடிப்பொருள் குத்துதலே.

(குல்>குள்>கிள்; கிள்ளுதல் = குத்துதல்;
கிள்>கிள்ளி>கிளி = கூரிய அலகினால் கொத்தும் பறவை வகை; இதை மலையாளத்தில் கிள்ளு என்றும், கன்னடம், தெலுங்கில் கில்லு என்றும், தெலுங்கில் சிலுக்க என்றும் சொல்லுவார்கள்.
கில்<கீல்; கீலுதல்>கீளுதல் = கிழித்தல் (சூடா)
கெல்லுதல் = தோண்டுதல்
குற்றி = தண்டு;
குந்தம் = வேல்.
என்ற சொற்களை அறிந்தால் கிளுக்கியின் சொற்பிறப்பு புலப்படும்.)

கிளுக்கியை வைத்து மகார்நோன்பு - 10 ஆம் நாளில் வாழை மரத்தில் இளையோர் குத்துவார்கள். இங்கே வாழை மரம் என்பது விலங்குகளுக்குப் பகரியாய்ப் பயன்படுகிறது. (ஒரு காலத்தில் வேட்டைக்குப் போய் வெற்றிபெற்று விலங்கைக் கொன்று வந்ததை இங்கே நடாத்திக் காட்டுகிறார்கள். இவர்கள் வழிபடும் திருமேனிகளும் குதிரையில் எழுந்தருளி அம்பு போட்டு வெற்றியை விளம்பிக் காட்டுவதை ஓர்ந்து பார்க்கலாம்.)

காரின் கடைசிப் பாதி புரட்டாசி மாதம். இதில் வரும் ஒன்பது நாட்களைப் போலவே பின்பனியிலும் ஒன்பது நாட்கள் உண்டு. இந்தப் பின்பனிக் கால ஒன்பது நாட்களின் முடிவில் அந்தக் காலத்தில் பூந்தொடை விழா நடைபெறும். படைக்கலம் பயின்ற மழவ வீரர் அரங்கேறும் விழா என்பதே பூந்தொடை விழா எனப்படுகிறது. அகநானூறு 187-ல் படைக்கலப் பயிற்சி விழாவான பூந்தொடை விழா பேசப்படும். தொடை என்பது இங்கே அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர் கருதித் தொடுக்காமல் பயிற்சி கருதித் தொடுப்பதனால் இது பூந்தொடை விழா ஆயிற்று. இளைஞர்களின் திறமை ஊரார் அறியச் பூந்தொடை விழா என்ற ஒன்றில் தான் சோதனை செய்யப்படும். அதைக் கொஞ்சம் விளக்கமாய்ப் பார்ப்போம்.

அந்தக் காலத்தில் ஆசான்கள் வழி நடந்த திண்ணைப் பள்ளிக் கூடங்களில் எண்ணும் எழுத்தோடு, களரிப் பயிற்று, வருமக்கலை, வில், வாள், சிலம்பம் போன்ற படைக்கலப் பயிற்சிகளும், பச்சிலை மருத்துவம் போன்ற இன்ன பிறவும் கூடச் சிறாருக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பயிற்சியைக் தொடங்கும் முகமாய் "கார்த்திகைப் புதுமைச் சடங்கை" நடத்தி, அதை ஊருக்குச் சொல்லி, பயிற்சிக் கூடத்திற்குப் பெற்றோர்கள் சிறாரை அனுப்பி வைப்பார்கள். குறிப்பிட்ட காலம் கலைகளைக் கற்ற இளையோர்கள், சில ஆண்டுகள் கழிந்த பின்னால், பின்பனிக் காலத்தில் வரும் ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த நாளில் நடைபெறும் பூந்தொடை விழாவில், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ தோழி!

"பூந்தொடை விழாவின் முதல்நாளைப் போல புதுமணல் பரப்பிய திருநகர் முற்றம் தனிமையடையுமோ தோழி?"

இங்கே தொடை என்பது அம்பு தொடுத்தலைக் குறிக்கும். போர்கருதித் தொடுக்காமல் பயிற்சிகருதித் தொடுப்பதனால் புதிய தொடுப்பு இங்கே பூந்தொடை என்றாயிற்று. அதாவது "புதிய அம்பு தொடுக்கும் விழா, அம்பெய்கை" என்பது பூந்தொடை விழா ஆகும். பூ என்ற முன்னொட்டின் பொருட்பாட்டை இன்னும் இரு கூட்டுச் சொற்களின் மூலம் அறியலாம். பூங்குட்டி = ஈன்று சிறிது நேரமே (அல்லது நாட்களே) ஆன குட்டி; பூங்குழந்தை = பிறந்து சில நாட்களே ஆன குழந்தை. [தன் பயிற்சி அறிவைக் காட்டுதற்கு மாறாய், இளம் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு தொடங்கும் நாளாகவும் இந்தப் பத்தாம் நாள் அமையலாம்.]

பூந்தொடை விழாவையும் ஐம்படைத் தாலியையும் சேர்த்து எண்ணுமாப் போல, (பதின்ம வயது கூட அடையாத) இளைய வயதுக் கண்ணனை முன்னே காட்டித் தன்னை யசோதையாய் உருவகம் செய்து கொண்டு, பெரியாழ்வார் (கி.பி.690- 775) நாலாயிரப் பனுவலில் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் ஆறாம் திருமொழியில் முதற்பாட்டில் சொல்லுவார்.

கண்ணன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிற பையன்; மற்ற பிள்ளைகள் மாட்டு மந்தைகளை ஓட்டிச் செல்லுகிறார்கள்; தானும் போகவேண்டும் என்று அன்னையிடம் மாட்டுக்கோலைக் கேட்கிறான். "தான் பார்க்க வளர்ந்த பிள்ளை இப்பொழுது வீரக் கலைகளைக் கற்றுக் கொண்டாலும், வீட்டில் மாடுமேய்க்கும் கோல் எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாதிருக்கிறானே?" என்ற நக்கலோடு, குறும்புத் தனத்தோடு, "விளையாட்டு வில்லில் ஏற்றுதற்காய் வேலிக் கோலை ஒடித்து அம்பாக்கி, சின்ன ஐம்படைத் தாலியை (கொழுந்துத் தாலி - குழந்தைத் தாலி - பொன்நிறத் தாலி) பெரிய கழுத்தில் பூண்டு, தன் வாரி முடிந்த சிகையில் பின்பக்கமாய் மயிலிறகைச் செருகி, காலிகளை(கால்களால் இயங்கும் விலங்குகள் காலிகள்) ஓட்டிப் போக விரும்பும் இவனுக்கு, காக்கையே! கோலை எடுத்துக் கொண்டுவா! என் கருப்புப் பையனுக்குக் கோலை எடுத்துக் கொண்டுவா!" என்று கூரையில் கூடியிருக்கும் காக்கையைக் கூப்பிட்டு யசோதை பொய்விளையாட்டு ஆடுகிறாள். பாட்டில் கண்ணனைப் பற்றிய விவரிப்பு நம்மைக் கொள்ளை கொள்ளுகிறது. (வேறொன்றும் இல்லை, யசோதைக்கு தன் பிள்ளையின் பெருமை பிடிபடவில்லை.)

வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்தில் பூண்டு
பூலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப்பின் போவார்க்கோர் கோல்கொண்டு வா
கடல் நிற வண்ணற்கோர் கோல்கொண்டு வா

ஐம்படைத் தாலி பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் தொட்டுப் பல இலக்கியங்களில் இருக்கின்றன. அவற்றை மேலும் எடுத்துச் சொல்லலாம்; கட்டுரை தான் விரியும். எனவே இனி, நாம் அடுத்த தாலி பற்றிப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

8 comments:

முகில் said...

இலங்கையில் ஐம்படைத்தாலி
ஏதோ ஒரு விதத்தில் இன்னும் வழக்கில் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. தமிழரும் சிங்களவரும் பிள்ளைகளுக்கு பஞ்சாயுதம் (சிங்களத்தில் பஞ்சாயுத) எனப்படுகிற
பொன்னாலான ஒரு pendantஇனை (தமிழக வழக்கில் டாலர்) ஒரு கறுப்புக் கயிற்றிலோ அல்லது தங்கச் சங்கிலியிலோ கோர்த்து அணிவிக்கின்றார்கள். இதில் ஐந்து ஆயுதங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். பிள்ளைகளுக்குப் பாதுகாப்பிற்காக அணிவிக்கப்படுகின்றது. இணையத்தில் படம் கிடைப்பின் இணைப்புத் தருகின்றேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய முகில்,

அருமையான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள். நாலாயிரப் பனுவலுக்கு உரை எழுதியவர்கள் "பஞ்சாயுதம்" என்றே ஐம்படைத் தாலியைக் குறிப்பார்கள்.

இன்னும் பல வட்டரங்களின் வழக்கை அறிந்தால் நன்றாக இருக்கும். நாம் சேகரிக்காவிட்டால் வேறு யார் சேகரிப்பார்கள்? இசுலாமியர் ஒரு சிலரிடம் கருகமணித் தாலிப் பழக்கம் உண்டு. அதுவும் ஆவணப் படுத்தப் படவில்லை. பலரும் "இதை எதற்கு வெளியில் சொல்லிக் கொண்டு" என்று தங்கள் பக்கத்து வழக்கங்களைச் சொல்லாமலே இருக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

ஐயா, நானும் உறுதிப்படுத்துகின்றேன். இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் (சிங்களத்தில் பஞ்சாயுத) என்னும் ஐம்படைத்தாலி வழக்கில் உள்ளது. குழந்தை பிறந்தவுடன் அதை பாதுகாக்க இந்த தாலி கட்டப்படுகின்றது. இந்த பழக்கத்தை தமிழரும் சிங்களவரும் ஒருங்கே கொண்டுள்ளனர்.

Anonymous said...

// காலிகள் //

யாருக்கும் சொந்தமில்லாத மாடுகளை கட்டாக்காலிகள் என்று கூறுவார்கள்

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

ஐம்படைத்தாலி பற்றிய செய்தியை நீங்களும் உறுதி செய்தமைக்கு நன்றி.

கட்டாக் காலிகள் என்ற வழக்கு எனக்குப் புதியது. காலிகள் என்ற சொல் மாடுகளுக்கு விதப்பாகப் பயன்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Vijayakumar Subburaj said...

// காலிகள் //

யாருக்கும் சொந்தமில்லாத மாடுகளை கட்டாக்காலிகள் என்று கூறுவார்கள


யாருக்கும் சொந்தமில்லாத மாடுகளை யார் கட்டிவைக்கப் போகிறார்கள்? அதனால்தான் கட்டாக்காலிகளோ? :)

காலி வழக்கிலுள்ள வேறு சொற்கள், ஓடுகாலி, முக்காலி, நாற்காலி

Aggraharam.blogspot.com said...

http://aggraharam.blogspot.in/2013/09/2.html

Aggraharam.blogspot.com said...

சங்க இலக்கியங்களில் தாலி :
http://aggraharam.blogspot.in/2013/09/2.html