Friday, March 30, 2007

சுடர்வழியே செய்தி

ஆர்வமுடன் எழுதும் பலரிடம் சுற்றிக் கொண்டிருந்த இந்தச் சுடர் என்னிடம் வந்து சேரும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை.

விடுதலை வீரன் வீரபாண்டியக் கட்டமொம்மனுக்கு ஒரு வழக்கம் உண்டாம். செந்தூரில் முருகனுக்குப் பூசை நடந்த பின் தான், பாளையக்காரர் காலையில் உண்பாராம். அதற்குத் தோதாக, திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங் குறிச்சி வரை அடுத்தடுத்து, குறைந்த தொலைவில் மேடைகள் கட்டி, முரசு வைத்திருப்பார்களாம். வரிசையாக முரசு அடித்துப் பூசை முடிந்த செய்தியை, ஒரு சில நுணுத்தங்களிலேயே (minutes), பாஞ்சாலங் குறிச்சிக்குத் தெரியப்படுத்துவார்களாம். ஒலி வழி செய்தி அறிவித்தலைப் போல இங்கு ஒருவர் மாற்றி ஒருவர் சுடரேற்றி மற்றவருக்குத் தெரியப் படுத்துகிறார்கள். யாருக்குச் செய்தி போகிறது? தமிழர் என்னும் கூட்டத்திற்குத் தானே? எனவே, அந்தப் பணியில் எல்லோரும் தாராளமாய்க் கலந்து கொள்ளலாம்.

நண்பர் சாகரனுக்கு என் நினைவு அஞ்சலிகள். (அவரின் மறைவுக்கு முன்னால் ஒரு தடவை, அவர் சென்னையில் இருந்து தொலைபேசியில் பேசியது இன்னும் நினைவில் நிற்கிறது. அடுத்தமுறை உறுதியாய்ச் சந்திப்போம் என்று அவர் சொன்னதும் நினைவிற்கு வருகிறது. துடிப்பான இளைஞர்; எவ்வளவோ சாதித்தவர்; தமிழுக்கு இன்னும் பணி செய்திருப்பார்; பெரிய இழப்பு.)

இனி அருள்செல்வன் கொடுத்த கேள்விகளுக்கு என் மறுமொழிகள்:

1. நீங்கள் சென்ற கோவில்களிலேயே தமிழரின் வரலாற்றில் ஒரு பெரும் தாக்கத்தத்தை ஏற்படுத்தியது என நீங்கள் கருதுவது எது? ஏன்?

கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன். (எங்கள் பக்கத்துக் கோயில் என்பதற்காக அப்படிச் சொல்லவில்லை.)

காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)

சோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்க வேண்டும்.

கானப்பேரை ஆண்டுவந்த கோதைமார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்?) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.

கானப்பேரெயிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும். (அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. "இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழியே நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்" என்று ஆய்வாளர் ஊகிக்கிறார்கள். இலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார்கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை. வடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர்கள் என்பதே வரலாற்று உண்மை.]

காளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார்கள். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு. கோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும், இருக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியிருக்கிறது. சம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்கிறார்கள். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இந்தக் கோயில் பெருமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். [அண்மையில் வலைப்பதிவில் திரு. இராமநாதன் இந்தக் கோயில் பார்த்ததை ஒளிப்படங்களோடு பதிவு செய்திருந்தார்.] வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியிருக்கிறான்.

பாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார்கள். கிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒருபங்கு பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது. சேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை - கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா?

சசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர்கள் மருதிருவர். [இவர்கள் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம். இவர்களின் தாயாரின் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்து வடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார்கள். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார்கள். முடிவில், தாயாதிச் சண்டையில் இருந்து மீள்வதற்கு இடையில், வேலுநாச்சியார் பெரிய மருது சேர்வையையே மணஞ் செய்தார். அதற்குப் பின் நடந்த எல்லாப் புரிசையிலும் (practice) பெரிய மருது மன்னராகவே கருதப் பட்டார்.

மேலும் இங்கு நுணுகி விவரிக்காமல், மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.

காளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர்கள் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி - telescope - கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர்கள் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார்கள். நாட்டுப் பாடல் ஒன்று,

கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கோவில் உண்டுபண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி

என்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு "சிவகங்கைச் சீமை" திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிலும் நல்ல வரலாற்றுப் படம்.)

கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை - மானாமதுரை - முடிக்கரை - காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை. இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் - தியாகம் - செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்; இன்னொரு முறை பார்க்கலாம்.) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது. கோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.

மருதிருவருக்கு கிட்டத் தட்ட இரண்டாம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவர்களின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில் அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார். அத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.

பின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அந்தக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழி (strategy)க்காரர். படையுத்திகளில் வல்லவர். அவர் தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கினார். அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது. இவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார்கள். சின்னப் பாண்டியரின் "ஜம்புத்வீபப் பிரகடனம்" - படிக்க வேண்டிய ஒன்று - 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளி மதிலில் முதன்முதலாய் ஒட்டப் பெற்றது. (வேடிக்கையைப் பார்த்தீர்களா? இந்திய விடுதலையின் முதல் எழுச்சிவெளியீடு சீரங்கம் அரங்கன் கோயில் சுவரில் ஒட்டப் பட்டிருக்கிறது.) பின்னால், திருச்சிக் கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப்பட்டது.

இந்தச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேயரின் ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.) 6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார்கள். கிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).

"காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்" என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.

அதற்கு இடையில் ஒற்றர் மூலம் "கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க" அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: "சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?" ஒரு சிலர் கோவப் படாதீர்கள்!! இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))

கில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின்னால் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். இன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது? 1783 - ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர். [இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.

அத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை. முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]

ஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்பாற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இல்லாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது. இத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார்கள் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறு என்ன செய்வார்? "இப்படி நடந்திருக்குமானால் - what if" என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது தான். ஆனாலும், சின்ன மருதுவின் "ஜம்புத்வீபப் பிரகடனம்" படித்தவருக்கும், அந்தக் காலப் போர்க் கூட்டணியைப் புரிந்து கொண்டவருக்கும், கிழக்கிந்தியக் கும்பனியின் அந்தப் பெரிய போர் முயற்சியை ஆழ்ந்து ஆய்ந்தவருக்கும் நான் சொல்லுவது புரியும். It is perplexing that we lost an opportunity of throwing out the English rule just for the sake of a Temple Tower.

இன்றையத் தமிழ் இளையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்னது கதையல்ல, உண்மை. காளையார் கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.

காளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே0 நாட்களில், அக்டோபர் 11 அன்று, அந்தக் காட்டையே கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடன் இருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர். (இரண்டு பாண்டியரும், நாட்டின் மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணிசேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை. மக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர்கள் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-ல் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரச குலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.

மருதிருவர், சிவகங்கை பற்றிய நிறையச் செய்திகளை, வரலாற்றின் இந்தப் பகுதியை அறிய விரும்புவோர், பெரியவர் செயபாரதியின் அகத்தியர் மடலாடற் குழுவிற்குப் போனால், ஏராளமாய்ப் படிக்க முடியும். கூடவே மீ.மனோகரனின் "மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801" என்ற பொத்தகத்தையும் (அன்னம் வெளியீடு, 2, சிவன்கோயில் தெற்குத் தெரும் சிவகங்கை 623 560) படிப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்.

2. திராவிட இயக்கத்தின் தமிழ்ப் பங்களிப்பை வரலாற்று நோக்கில் எப்படி கணிப்பீர்கள். ஒரு தமிழறிஞரின் பார்வையில் கேட்கிறேன். சிறுபத்திரிக்கை இயக்கத்தினரின் 'இலக்கிய' மதிப்பீடுகளைப் பற்றி இதில் கணக்கில் கொள்ளாமல் கணிக்கவும்.
(அல்லது)
தமிழருக்குத் தம் மொழியின் மீது ஏன் இத்தனை வெறுப்பு? விளையாட்டாகக் கேட்கவில்லை. காண்பதைத் தான் கேட்கிறேன்.


நீங்கள் கேட்டிருக்கும் அடுத்த கேள்வியும் இந்தக் கேள்வியும் தொடர்பு கொண்டவை. முற்றிலும் வெறுப்பு, பகைமை என்று பொதுப்படச் சொல்வதைக் காட்டிலும் அலட்சியம், வேண்டாவெறுப்பு, ஒருவித கீழ்நோக்குப் பார்வை, என்றே நான் சொல்லுவேன்.

கருப்பாய் இருக்கும் பெரும்பாலான தமிழ் ஆண்கள், கொஞ்சம் வெளிறிய நிறம் கொண்ட சிவப்புப் பெண்களையே மணம் செய்யத் தேடிக் கொண்டிருப்பதைப் போல் இதை உணரவேண்டும். பெருமிதம் குறைந்து போய், அடிமைத்தனம் ஊறிக் கிடக்கிற காரணத்தால், "ஆங்கிலம் உசத்தி. தமிழ் தாழ்த்தி" என்ற முட்டாள்ப் புரிதலால் இது அமைகிறது. இங்கு நான் சொல்லும் எடுத்துக் காட்டிற்கு மன்னியுங்கள். "எப்படி அமெரிக்க வெள்ளைக்காரர்களின் மேலாட்சியால், அமெரிக்கக் கருப்பர்கள் தங்களின் பெருமிதத்தை 400 ஆண்டுகளில் தொலைத்தார்களோ அதுபோல, நாமும் பெருமிதம் தொலைத்தோம்." (எவ்வளவு வறுமையிலும், ஒரு கிழக்கு ஆப்பிரிக்கன் பெருமிதம் குலையாது இருப்பான். கூர்ந்து கவனியுங்கள்.) இப்படி ஓர் அடிமைத்தனத்தை எளிதில் ஏற்படுத்த முடியும் என்று ஓர்ந்து தான், 1835ல் மக்காலே ஆங்கில வழி படிப்பை இந்தியாவில் கொண்டு வந்தான். இதில் என்ன வியப்பென்றால், 1971 வரையிலும் மனத்தால் அடிமையாகும் புத்தி, அவ்வளவு காட்டுத்தீயாய், நம்மிடை பரவவில்லை. அதற்குப் பின்னால், தமிழ், தமிழ் என்று வாய் ஓயாமல் பேசிய நம் அரசுத் தலைவர்களே, நமக்குக் கொள்ளி வைத்தார்கள். அதைப் பேசு முன், மக்காலேயின் பேச்சை அறிந்து கொள்ளுவோம்.

Lord McCauley - A British writer, historian and Parliamentarian, responsible for making the choice of Modern English Education for Indians stated in his speech of Feb 2, 1835 at British Parliament.

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation".

மக்காலேயின் சீடரான கழக ஆட்சியினரே, தமிழைப் பாடமொழியாகக் கொள்ளும் போக்கை வெகு எளிதில் கொன்றார்கள். அதைப் பேராயம் (congress) செய்யவில்லை. கழக ஆட்சியினர் மேல் என் கோவம் இதில் தான் தொடங்குகிறது.

20ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் என்பது மணிப்பவளமாய் விரைந்து கரைவதை நிறுத்த மறைமலை அடிகள் தலைமையில் ஓர் இயக்கமே தேவைப் பட்டது. தமிழ்நடையும், தமிழுணர்வும், பண்பாட்டுப் பெருமிதங்களும் ஒருவழியாய் மீண்டு வந்தன. அந்த உணர்வுகளின் கனிகளைத் திராவிட இயக்கங்கள் நன்றாகவே கைக்கொண்டு சுவைத்தன. இவர்கள் 1967ல் இந்த இயக்கத்தின் குறிக்கோள்களை அரசதிகாரம் கொண்டு ஓரளவாவது நிறைவேற்றுவார்கள் என்று எண்ணியது, 2,3 ஆண்டுகளில் நீர்த்துப் போனது, காய்ந்த மாடு கழனியில் பாய்ந்த கதையாய், பணம், பதவி, சொத்து, சுற்றம் என்று இவர்கள் சோரமாகிப் போனார்கள்; ஊழலும், கையூட்டுமாய், பணம், பணம் என்று இவர்கள் அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு பலர் மனம் பெரிதும் வாடுகிறது. இவர்களில் இருந்து 72-75 களில் பிரிந்து போன தாயாதிக் காரர்களும் இவர்களுக்குச் சளைத்தவர்களாய் இல்லை. அண்ணன், தம்பி என இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இதில் ஐயாவென்ன, அம்மாவென்ன? எல்லோரும் ஒன்று தான்.

திராவிடத்தின் மூலம் தமிழியம் என்றாலும், தமிழியத்திற்கு எதிராகவே, இவர்களின் செயல்கள் ஆகிப் போயின. "படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற சொலவடை இவர்களைப் பொறுத்தவரை, முழு உண்மையானது; பகுத்தறிவு என்றார்கள், மூடநம்பிக்கையை வளர்த்தார்கள்; தமிழென்றார்கள், தமிங்கிலம் வளர இவர்களே துணை நின்றார்கள்; குமுகாயத்தின் அடிநிலை மக்கள் வளருவார்கள் என்றார்கள், ஒருசிலர் மட்டுமே உயருவதற்கு வழிவகுத்தார்கள். தெற்கு தேயாது என்றார்கள், அது தேய்ந்து தான் போனது. முடிவில் 35 ஆண்டுகளில் "மாநிலமாவது, ஒன்றாவது" என்று ஆக்கி வைத்தார்கள். இப்பொழுது வெறுமே வாய் இதழ்கள் மட்டுமே இவர்களிடம் அசைந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் பங்காளிச் சண்டையில் மாநிலம் சீரழிந்தது தான் மிச்சம். திராவிடம் என்ற கருத்தீட்டை உள்ளார்ந்து இவர்கள் மறந்து, அநேக நாட்களாயிற்று. இப்பொழுது, அனைத்திந்திய சோதியில் இரண்டறக் கலந்து, ஒன்றிக் கொண்டு, மெய்ம்மறந்து இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிப் பேசினாலே நம் மனம் கசப்பது தான் மிச்சம். 1965 - 67 களில் இவர்களுக்காக வேலை செய்த என்னைப் போன்ற அகவையினர் பலரும் மனம் சலித்துப் போய் விட்டார்கள். "இவர்களைக் கொண்டு வரவா இவ்வளவு பாடுபட்டோம்?" என்று எண்ணத் தோன்றுகிறது.)

எங்கு பார்த்தாலும் இன்று ஆங்கிலமே கோலோச்சுகிறது. மக்காலே பெரிதும் மகிழ்ச்சிப் பட்டுப் போயிருப்பான். அவன் செய்யாததை, இவர்கள் செய்து விட்டார்கள் அல்லவா? "தமிழ் சோறு போடுமா?" என்ற கேள்வியைப் பலரும் இன்று கேட்கிறார்கள், "சோறு போடாத மொழி எனக்கு எதற்கு?" என்ற எண்ணமும் மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாய் ஊடுறுவுகிறது. ("தமிழெனும் கேள்வி" என்ற என் பழைய கட்டுரையைத் திரும்பப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.) தமிழ் இல்லாத தமிழனுக்கு, முகவரி உண்டோ? அவன் இந்திக் கூடத்தில், ஆங்கிலத்தில், கரைந்தல்லவா விடுவான்? அதுதானே கயானாவில் நடந்தது? பிஜியில் நடந்தது? மொரிசியசில் நடந்தது? முடிவில் சோகத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது, இந்தியாவிலும் அது நடக்கலாம். தமிழராகிய நாம் விழித்துக் கொண்டால் ஒழிய இது மாறாது. இல்லையெனில் எல்லாம் போயே போயிந்தி.

"தமிழ் என்பது வெறும் பழமை பேசும் மொழியல்ல, வீட்டில் வேலைக்காரரோடும், வெளியே விளிம்பு நிலை மாந்தரோடும் வேண்டாவெறுப்பாய், அலட்சியத்தோடு, கீழ்நிலை நோக்காய்ப் பார்த்துப் பேசும் மொழியல்ல" என்று நடுத்தர வருக்கத் தமிழர்கள் என்று உணருவார்களோ? இந்த மனப்பான்மை மாறினால் தான் மேலே கூறிய அலட்சியம், வேண்டாவெறுப்பு, கீழ்த்தரப் பார்வை போன்றவை போகும். "காதலிக்க நேரமில்லை" படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் செல்லப்பாவின் (நாகேசு) உடன்பிறந்தார்கள் சொல்லுவார்கள்: "We don't see Tamil Pictures; we only see English Pictures" அது போல "We don't speak Tamil here; We speal only English" என்பது தான் நகரங்களில் இன்றையப் பரவலான நிலை. சென்னையின் பல அலுவங்களில் (offices), அது அரசோ, தனியார் அலுவமோ என ஏதாய் இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசினால் தான் இன்று உங்களுக்கு மரியாதை; தமிழில் பேசினால் "தள்ளி நில்லு, அப்புறம் வருகிறேன்" என்றுதான் சொல்லுகிறார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் Gymkhana Club -ல் Indians and dogs are not allowed என்று எழுதிப் போட்டிருக்குமாம். இன்றைக்கு சென்னையில் St.Michaels பள்ளியிலும், மதுரையில் ஏதோ ஒரு பள்ளியிலும், தமிழில் பேசினால் வெளியே நில் தான். தமிழ் நாட்டில், தருமமிகு சென்னையில், தமிழ் பேசப் பலரும் வெட்கப்படுகிறார்கள்.

ஓரொ பொழுது, நான் எண்ணுவது உண்டு. "தமிங்கிலர் என்று புதிய இனத்தார் (இதற்கு முந்திப் பிரிந்தவர் மலையாளத்தார்) தமிழரில் இருந்து பிரிந்து விட்டாரோ? அவர்கள் வேறு, தமிழர் வேறு என்று ஆகி விட்டதோ?" என்று எண்ணுவேன். ஆனாலும், முயன்று பாடுபட்டால், தமிங்கிலத்தை ஒழிக்கலாம் என்ற எண்ணமும் உள்மனத்துள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

பாருங்களேன், அண்மையில் ஒருவர் எழுதப் போக, தமிழ் மணத் திரட்டியெங்கும் weird என்ற ஆங்கிலச்சொல் தான் ஓடிக் கொண்டே இருக்கிறது. விந்தை என்ற சொல் இவர்களைப் பொறுத்து அழிந்தே போய்விட்டது இல்லையா? இப்படித்தான் ஒவ்வொரு சொல்லாய் தமிழர் மறந்து தொலைப்பார்கள். (விந்தையின் விளக்கம், அது weird-ஓடு பொருந்துவது பற்றியெல்லாம் இங்கு எழுதுவது வீண் என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழின் மேல் இவர்களுக்கு ஆர்வமே இல்லையென்றால், அப்புறம் என்ன விளக்கம் சொல்லுவது, போங்கள்.) பயன்படுத்தாத ஏதொன்றும் மறந்து தான் போகும் அல்லவா?

அதே பொழுது, நெற்றியில் இப்படி அடித்துக் கொள்வதோடு நிற்காமல், இது மாற ஒரு வழி செய்ய வேண்டும் என்றும் நான் உணர்கிறேன். நான் அறிந்தவரை, மடிக்குழைப்பள்ளிகளின் (matriculation schools) அதிகாரத்தைக் குறைப்பதில் தான் தமிழின் எதிர்காலமே இருக்கிறது. இதற்குத் தோதாய் தமிழக அரசின் கல்வித்துறையில் ஒரு புரட்சியே நடைபெற வேண்டும். அதற்கு வலுவான அரசியல் தலைமை வேண்டும்.

3. அறிவியல் தமிழ் என்று நிறையப் பேசுகிறோம். அரசு ஏன் எதுவுமே இப்போதெல்லாம் இதற்காக செய்வதில்லை. ஒரு கலைகளஞ்சியத்தை இற்றைப்படுத்த முயற்சியாவது இருக்கிறதா? இணையம் இதில் பங்களிப்பது என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியம்?

அறிவியல் தமிழ் என்பது இன்றைக்கு வெறுமே ஏட்டளவில் தான் இருக்கிறது. இப்பொழுது, நாம் சறுக்கிய நிலையில் உள்ளோம். முன்னே சொன்னது போல் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) பெருகிக் போய், பள்ளியில் தமிழில் படிப்பதே அருகிய நிலையில், தமிழில் அறிவியல் பெருகும் என்றா நினைக்கிறீர்கள்? நம்மூரில் ஆங்கிலத்தில் பேச்சுத் திறமை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கிலத்தின் மூலமாய் எல்லாவற்றையும் பள்ளியில் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூடப் பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்; சண்டித் தனம் செய்கிறார்கள். நாங்கள் (1964க்கு முன்னால்) பள்ளியில் படிக்கும் போது, மாநிலம் எங்கும், ஒரு பத்துப் பள்ளிகள் மடிக்குழைப் பள்ளிகளாய் இருந்தாலே வியப்பு. இன்றைக்கோ, இரண்டாயிரத்து ஐந்நூற்றிற்கும் மேல் இருக்கின்றன. மாநிலத்தில் தமிழில் படிப்பவன் இன்று முட்டாளாய்த் தெரிகிறான். அவனுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. "Tamil medium, get out; no job." முதலில் நம் பள்ளிகளில் தமிழ் நிலைத்தால் ஒழிய, அறிவியல் தமிழ் என்பது வளரவே வளராது. முதலில் பள்ளிகளில் நிலைத்து, பின் கல்லூரிக்குப் பரவிப் முடிவில் ஆய்வுக்குப் பழக வேண்டும். இதுவெல்லாம் நடக்கும் என்று 1971 வரை நாங்கள் நினைத்த முயற்சி, கழகத்தாரின் திருகுவேலையால் பின்னடைந்து, உருப்படாது போயிற்று. இப்பொழுது ஆங்கிலவழிப் படிப்பையே இரு கட்சியினரும் போட்டி போட்டு வளர்க்கிறார்கள். தமிழுக்கு அதிகாரம் கொண்டுதர, இன்னொரு இயக்கம் தான் இனிமேல் வரவேண்டும்.

கலைக் களஞ்சியங்களைப் புதுப்பிக்கும் வேலை அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடைபெறுகிறது. அகரமுதலிகளிலும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பெருஞ் சொல்லகராதி (4 தொகுதிகளோடு நின்று போயிற்று, மேற்கொண்டு காணோம்.), ப,அருளியின் முயற்சியால் வெளிவந்த அருங்கலைச்சொல் அகரமுதலி போன்றவை நல்ல முயற்சிகள். மணவை முஸ்தாபா தனித்து அறிவியல் அகரமுதலிகள் வெளியிட்டு வருகிறார். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி இன்னும் திருத்தி வெளியிடப் படாமல் இருக்கிறது. தமிழ்வளர்ச்சித் துறை வெளியிடும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலில் நான்காம் மடலம் - மூன்றாம் பாகத்துடன் (தௌ வரை) 2004- ஆம் ஆண்டோடு நின்று போனது. அதற்கு அப்புறம் ஒன்றும் காணோம். அந்த அகரமுதலியின் விரிவும் ஆழமும் கூடச் சிறுகச் சிறுகக் குறைந்துவருகிறது. பாவாணருக்குப் பின் கொஞ்சகாலம் இரா.மதிவாணன் பார்த்தார்; இப்பொழுது இருப்பவர்களால், கவனிப்பு குறைந்து போனது என்றே எனக்குத் தோற்றுகிறது.

இணையத்தால் முடியுமா, என்று கேட்டால் முடியும்; ஆனால் நாட்களாகும். இணையத்தில் செய்வதற்குக் கூட, அரசின் உதவியில்லாமல், பெருத்த முதலீடு இல்லாமல், ஒரு நிறுவன முயற்சியில்லாமல், வழியில்லை. என்னைக் கேட்டால், இதைச் செய்வதற்குச் சரியான மானகை நெறியாளர் (managing director) வேண்டும். வல்லுநர்கள் பலரும் நம் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் நெறியாள்கை தான் சரியில்லை. நம்மூர்த் திட்டங்களின் பெருங்குறையே மானகைக் குறை தான்.

4. உங்களுக்குப் பிடித்த எம்ஜீஆர் படம் எது, ஏன்? . உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் படம் எது, ஏன்?

ம.கோ.இரா. படங்கள் பலவும் பார்த்திருக்கிறேன். அது என்னமோ தெரியவில்லை, சிவாசியின் படங்களைக் காட்டிலும், இவர் படங்களை இன்றும் கூட அலுக்காமல் பார்க்கலாம். ஏனென்றால், கதைப் போக்கில் பலக்கிய தன்மை (complexity) இராமல், நீரோட்டமாக, பழைய கால சங்கரதாசு சுவாமிகள் நாடகப் போக்கோடு, இருக்கும். கிட்டத் தட்ட கூத்துப் பார்க்கும் உணர்வு தான். இன்றைக்கும் கோவலன் - கண்ணகி, கீசக வதம், பவளக்கொடி, ஆகியவற்றை நாட்டுப் புறத்தில் பார்க்கிறார்களே, அது போலத் தான் இவர் படமும். ம.கோ.இரா. படத்திற்குள், மாறுவேடம் போட்டுச் சிறு சிறு காட்சிகள் வரும் பாருங்கள் அதில் ஒரு நளினமும், குறும்புத் தனமும் நிறைந்து இருக்கும். ம.கோ. இரா, மிளிர்வது அது போன்ற காட்சிகளில் தான். (காட்டு படகோட்டி படத்தில் வளையல்காரராய்ச் சிறிது நேரம் வருவார், நினைவிருக்கிறதா?) அவர் படங்கள் பார்த்ததில் பெரிதும் பிடித்தது, குலேபகாவலி, நாடோடி மன்னன், தாய் சொல்லைத் தட்டாதே, அரசிளங்குமரி, எங்க வீட்டுப் பிள்ளை, படகோட்டி, அன்பே வா - இன்னும் நிறையச் சொல்லலாம்.

ஹாலிவுட் படங்கள், அண்மையில் சில ஆண்டுகளாய்ப் பார்ப்பது பெரிதும் குறைந்துவிட்டது. ஒருகாலத்தில் பைத்தியமாய்க் கிடந்து, கிட்டத்தட்ட எல்லாவகைப் படங்களும் பார்த்தேன். (Alien போன்ற அருவருப்பு எழுப்பும் ஒரு சில படங்களைத் தவிர்த்திருக்கிறேன்.) பல தடவை பார்த்த படம் Sound of Music. ஏன் என்றால் அதில் வரும் பாட்டுக்கள்; படம் எடுத்த விதம், பேச்சு நடை இன்னும் பல. Star trek series தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலுமாய் விடாது பார்த்துக் கொண்டிருந்தேன். (star wars -ஐக் காட்டிலும் star trek - ஏ எனக்குப் பிடித்தது.) என் star trek பைத்தியத்தைப் பார்த்து என் மனையாள் சொல்ல முடியாமல் தவிப்பாள். அதுவும் Spock - யைக் கண்டால் அவளுக்கு ஆகவே ஆகாது. "என்ன இருக்கிறது என்று இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்பாள். Steven Spielberg படங்களையும் பெரும்பாலும் பார்த்துவிடுவேன். Eddy Murphy, Robin Williams படங்களும் பார்க்க விழைவேன் தான். Come September, Guess who is coming to the dinner?, My fair lady, Towering Inferno, Mrs.Doubtfire, Brave Heart, Titanic என்று வெவ்வேறு காலப் படங்கள் இப்போது சட்டென்று நினைவுக்கு வருகின்றன. Shogun TV series என்னைக் கவர்ந்த ஒரு தொகுதி. அண்மையில் பெரும்பாலும் தொலைக்காட்சியிலேயே ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

5. உங்கள் சிறுவயது, நடுவயது, தற்போதைய பொழுதுபோக்குகளைப் பற்றிக் கொஞ்சம் கூறவும்.

சிறுவயதுப் பொழுதுபோக்கு: பல்வேறு வினைப் பொருட்களைச் செய்வது, கரிக்குச்சி (pencil) வரைபடங்கள், அஞ்சல் தலை சேகரிப்பு.

நடுவயதுப் பொழுதுபோக்கு: வரைகலை, ஓவியம் (பெருஞ்சுவர்களில் வரைவது), கவிதை, நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பு, பேச்சு, நாடகம் (கதை, உரையாடல், நெறியாக்கம்), மலையேறல், வளைதடியாட்டம் (hockey), தமிழிசை (கூடவே தமிழில் வரும் கருநாடக இசைப் பாடல்கள்), ஊர்சுற்றல்,

தற்போதையப் பொழுதுபோக்கு: இணையத் துழாவல், பொத்தகப் படிப்பு (தமிழ், ஆங்கிலம், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது வேற்றுமொழி அகரமுதலிகளை அருகில் வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டே இருப்பது), எழுதுகை (கவிதை, கட்டுரை மட்டுமே. கதை எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன்.), ஊர்சுற்றல் (108 பெருமாள் கோயில்களை நேரம் கிடைக்கும் போது பார்த்துவிட வேண்டும் என்று முயன்று, கிட்டத் தட்ட 70க்கு அருகில் வந்துவிட்டேன்.), காலை நடை

அடுத்து சுடரை ஏற்றி வைக்க நான் அழைப்பது நாக. இளங்கோவன்.

ஐந்து கேள்விகள்:

1. நண்பர் சாகரனை அருகில் இருந்து பார்த்தவர்களில் நீங்கள் ஒருவர். அவருடன் நடந்த சுவையான நிகழ்வை நினைவு கூருங்களேன்.
2. திராவிட அரசியல் நீர்த்துப் போய்விட்டது என்று நான் சொல்லுவதை முற்றிலும் மறுக்காமல், அதே பொழுது ஏற்றுக் கொள்ளாமலும் நீங்கள் இருப்பீர்கள். இனிமேலும், திராவிடக் கட்சிகளின் அரசியல் நம்மூரில் எடுபடும் என்று எண்ணுகிறீர்களா?
3. இயற்கை பற்றிய பாக்கள் உங்களிடம் இருந்து சிறப்பாக வந்திருக்கின்றன. மரபில் ஒன்றும், புதுசில் ஒன்றுமாய் காட்சி வரையுங்களேன்.
4. "உள்ளுரும நுட்பியற் குமிழி (information technology bubble) வெடிக்கப் போகிறது, மிகுந்த நாட்கள் இந்தியா இதில் தாக்குப் பிடிக்க முடியாது" என்று பலரும் சொல்லுகிறார்கள். இந்தத் துறையில் மிகுந்த பட்டறிவு கொண்ட உங்களின் கணிப்பு என்ன?
5. சிலம்பு மடல் எழுதிய போது, கண்ணகி கோயிலைத் தேடி ஒரு தடவை போனீர்கள். அது போல, வேறு ஒரு வரலாற்றுத் தேடலை, தமிழ்த் தேடலை, எங்களுக்குச் சொல்லுங்களேன்.

அன்புடன்,
இராம.கி.

26 comments:

G.Ragavan said...

நடுவில் சுடர் அணைந்து விட்டதோ என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மீண்டும் சுடரெழுந்திருக்கிறது.

மருதுபாண்டியரின் காளையர் கோயில் விவரங்கள் படிக்கச் சுவையாகவும் நினைக்க வருத்தமாகவும் இருக்கின்றன.

sound of music, come september, போன்ற படங்கள் எனக்கும் பிடிக்கும். குறிப்பாக come september படத்தில் நடித்த லோலோபிரிகிட்டாவின் நடிப்பும் நடனமும்...ஆகா! ஆகா! ஆகாகா!

Anonymous said...

அய்யா ஏற்றிய சுடர் அருமை...கேட்டிருக்கும் கேள்விகள் அபாரம்...பதில்களை எதிர்பார்க்கிறேன்...

murali said...

ஐயா,
அற்புதமான பதிவு என்று வியத்தல் தவிர வேறேதும் அறியேன்.
தொடர்ந்து எங்களுக்கு தமிழின் சுவையையும், பெருமையையும்,
புதிய சொல்லாடல்களையும் எடுத்துச்சொல்லி வருவதற்கு மிக நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மருது குறித்த தகவலுக்கு நன்றி. சிவகங்கைச் சீமைக் காரன் என்ற விதத்தில் பெருமை தான்.

புதுத் தமிழ் இயக்கம் எங்கு யாரால் எப்படி முன்னெடுக்கப்படும், முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இணையப் பரப்பில் தமிழுக்கு உரம் பாய்ச்ச முடியும் என்றே நம்புகிறேன். அதற்கு அரசு உதவி கொஞ்சம் தேவைப்படலாம். ஆனால், அதுவே முழு முதற் தேவை இல்லை. இணையத்தின் சுதந்திரமும் சாத்தியமும் பல கட்டுக்களை ஏற்கனவே தகர்த்து எறிந்து இருக்கிறது.

உங்களைப் போல், இன்னும் தமிழ் வலைப்பதிவுகளில் தமிழில் எழுதும் பலரும் சமூகத்தின் உயர் மட்ட படிப்பாளிகள் தானே? எனவே, இதைப் பார்த்தாவது கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்குத் தமிழ் மேல் உள்ள தாழ்வு மனப்பான்மை குறையும்.

ஓகை said...

ஐயா, மிக அருமையான பதிவு.
சிவகங்கைச் சீமை படம் தமிழர் அனைவரும் ஒரு பாடப் புத்தகம் போன்று பார்க்க வேண்டிய படம்.
//சோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; //
கோடிக்கரைக்கு இப்படி ஒரு பெயர் உள்ளதா? என் அருமை பூங்குழலியின் நிலத்தைப் பற்றி இன்னும் மேல் விவரம் தாருங்களேன்.

nayanan said...

அன்பின் ஐயா,

சுடர் என் வழி வரும் என்றும், அதுவும்
தங்களின் வழியே வரும் என்றும் துளி கூட
எண்ணவில்லை. சுவையான பதிவும், வினாக்களும் என்னை மகிழ்ச்சி ஆக்கின.
அதே சமையம் வினாக்கள் (சாகரன் நட்பு தவிர்த்த) மிகவும் கடினமானவை. என்னால் முடிந்தவரை அவசியம் எழுதுவேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Vassan said...

வணக்கம்.

சுடர் என்றால் என்ன என்பதை சற்று சுற்றி பார்த்து புரிந்து கொண்டேன்.நெகிழ்ந்து போனேன்.

நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதறிந்து வியப்படைந்தேன்.

நண்பர் நாக இளங்கோவனை நீங்கள் அழைத்திருப்பது நல்லதொரு செயல்.

இளங்கோவன் போன்றோரை முதிர்ச்சியுடைய வலைப்பூ இளைஞர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

நண்பரும் விரிவாக எழுத வேண்டும்.

நன்றி.

Vassan said...

வணக்கம்.

சுடர் என்றால் என்ன என்பதை சற்று சுற்றி பார்த்து புரிந்து கொண்டேன்.நெகிழ்ந்து போனேன்.

நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதறிந்து வியப்படைந்தேன்.

நண்பர் நாக இளங்கோவனை நீங்கள் அழைத்திருப்பது நல்லதொரு செயல்.

இளங்கோவன் போன்றோரை முதிர்ச்சியுடைய வலைப்பூ இளைஞர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.


இளங்கோவன் விரிவாக எழுத வேண்டும்.

இது ஒரு அவா.

நன்றி.

Anonymous said...

வணக்கம்.

சுடர் என்றால் என்ன என்பதை சற்று சுற்றி பார்த்து புரிந்து கொண்டேன்.நெகிழ்ந்து போனேன்.

நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதறிந்து வியப்படைந்தேன்.

நண்பர் நாக இளங்கோவனை நீங்கள் அழைத்திருப்பது நல்லதொரு செயல்.

இளங்கோவன் போன்றோரை முதிர்ச்சியுடைய வலைப்பூ இளைஞர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

இளங்கோவன் விரிவாக எழுதவேண்டும். இது ஒரு வேண்டுகோள்.


நன்றி.

நிர்மல் said...

நல்ல பதிவு.

நன்றி ஐயா.

Thangamani said...

இப்போதுதான் படிக்க முடிந்தது.

மருதுபாண்டியர் பற்றிய விவரங்களை விரிவாகச் சொன்னமைக்கு நன்றி. நான் படிக்க எண்ணியிருந்த பலவற்றில் அதுவும் ஒன்று. நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தையும் படிக்கவேண்டும்.

தமிழ் பற்றிய உங்கள் பதிலும், அருமை. திராவிட இயக்கங்களின் இந்த வீழ்ச்சியில் கிட்டத்தட்ட இப்படியான கருத்தே நானும் கொண்டிருக்கிறேன் என்றாலும், இதற்கு புறம்பான காரணங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

நல்ல கேள்விகளை நாக.இளங்கோவனிடம் கேட்டிருக்கிறீர்கள்.

பதிவுக்கும், பதில்களுக்கும் நன்றி!

இராம.கி said...

அன்பிற்குரிய இராகவன், செந்தழல் ரவி, முரளி,

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

நான் பதிவில் குறிப்பிட்டிருந்த பொத்தகத்தைப் படியுங்கள், மருது பாண்டியரின் கதை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

அன்பிற்குரிய ரவிசங்கர்,

வருகைக்கு நன்றி.

புதுத் தமிழ் இயக்கம் இன்றைய இளைஞரால் தான் முன்னெடுக்கப் படும். அதற்குத் தேவையானது, உங்களைப் போன்ற சில முன்முனைப்பாளர்கள். முடிந்த மட்டும் தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுவதையும், தமிங்கிலம் தவிர்க்க வேண்டியதின் கட்டாயத்தையும் உங்கள் நண்பர்களிடம் பரப்புங்கள். இந்தப் பரப்புதலுக்கு இணையம் துணையாய் நிற்கும். அதன் விளைவாகவே, அச்சிதழ்களிலும், நூல்களிலும், பேச்சுவழக்கிலும் பரவும். ஒரு சிறிய முயற்சியான மக்கள் தொலைக்காட்சியே மக்களைக் கொஞ்சம் குறுகுறுக்க வைத்திருக்கிறது.

நான் ஒன்றும் தனித்தமிழுக்குச் சார்பாக, இங்கே வழக்குரைக்க வரவில்லை. நல்ல தமிழை நோக்கி முடிந்த மட்டும் நகருங்கள் என்று மட்டுமே சொல்லுகிறேன். அந்த நகர்ச்சியில் நம் பிறங்கடைகளின் எதிர்காலம் நிலைக்கும்.

என்னுடைய முயற்சிகள் எல்லாம், "தமிழால் முடியும்" என்ற இயலுமையைக் காட்டும் படியாகவே அமைகின்றன.

அதே பொழுது, இணையப் பரப்பினால் செய்யக் கூடியது ஓரளவுதான் என்பதும் என் ஓர்மை. இணையத்தின் போக்கு பற்றியும், அதன் தன்னாளுமை பற்றியும், எனக்குச் சில அடிப்படைக் கிடுக்கங்கள் உண்டு. (criticisms; இந்தத் திறனாய்வு என்ற சொல்லை நான் பயன்படுத்துவது வெகுவாய்க் குறைந்துவிட்டது. என் திறனை ஆய்வது criticism அல்ல. என்னைக் கிடுக்கி ஒரு கருத்தில் பிடிப்பது criticism. கிடுக்கியது விடுவிக்கப் படவேண்டும்) .

கல்வித்துறையில், குறிப்பாகப் பள்ளிப்படிப்பில் இதை அழுத்தி உரைக்கவில்லை என்றால், நாம் நினைப்பது நடவாது. அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவும், ஓரியக்கமும் வேண்டும். எப்படி அமையும் என்று என்னால் வரையறுக்க முடியவில்லை. ஆனால், நடக்கும் என்று நம்புகிறேன்.

என்னை நான் ஒன்றும் உயர்த்திப் பார்த்துக் கொள்வதில்லை. எனக்குத் தெரியாதது எவ்வளவோ இருக்கிறது. ஆனால் ஒரு கிடுக்க அளவில் (critical size), ஆட்கள் நல்ல தமிழில் தொடர்ச்சியாய் எழுத, உரையாட, முன்வந்தால் தான், இந்தத் தாழ்வு மனப்பான்மை குறையும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடைபெறும் முயற்சிகள் ஒன்றுபடவேண்டும்.

நடக்கும் என்று நம்புவோம்.

அன்பிற்குரிய ஓகை,

பதிவு பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி.

கோடியக் கரைக்கு ஆதி சேது என்ற பெயர் உண்டு. அகநானூற்றின் 70- ஆம் பாடலின் படி, இலங்கைக்குப் பாலம் அமைக்க, இராமன் முதலில் இங்குதான் வந்தான் என்ற கருத்தில் ஒரு தொன்மம் வரும். இது மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலாகும். நண்பர் அட்லாண்டா சந்திர சேகரன் எடுத்துக் காட்டியிருக்காவிட்டால், இதை நான் உணர்ந்திருக்க மாட்டேன்.

அதில் தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:
------------------
ஓ...
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை....
...
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரேஔ. (அகநானூறு:70:5-17)
----------------------

மேலே தொல்முது கோடி என்பது ஆதிசேதுவாகிய கோடிக்கரை என்று ஒருசிலரும், தனுசுக்கோடி என்று மற்றோரும் உரைப்பார்கள்.

சந்திரசேகரன் தனுசுக்கோடி என்றே உரைப்பார். என் உகப்பு கோடிக்கரை. முழுப்பாடலில் கூறப்படும் இயற்கை வள விவரிப்பைப் பார்த்தால் தனுசுக் கோடியாய் அது இருக்க வழியில்லை; நெய்தற்கானல் என்பது இன்றும் கோடிக்கரையில் இருக்கிறது. ஆனாலும் உறுதியாய்ச் சொல்ல இன்னும் ஆய்வு வேண்டும்.

பூங்குழலியின் சித்தரிப்பில் மயங்கியவர்களில் நீங்களும் ஒருவரா? வரவேற்கிறேன்.

அன்பிற்குரிய இளங்கோ,

என் வேண்டுதலை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. கடினம் என்று பார்க்காதீர்கள். முடிந்த அளவு எழுதுங்கள். ஓரிரு நாட்கள் சுணங்கினாலும் தாழ்வில்லை.

அன்பிற்குரிய வாசன்,

உங்கள் வருகைக்கும், கனிவிற்கும் நன்றி.

என் கடவுள் நம்பிக்கை பற்றிய உங்கள் வியப்பைப் படித்து வாயாரச் சிரித்தேன். எங்கெங்கோ சுற்றி இங்கு முடிவில் வந்திருக்கிறேன். போய்வந்த மெய்யியற் பயணத்தை முழுக்கத் தெரிவித்தால், என்னைப் பித்துப் பிடித்தவன் என்று சொல்லிவிடுவீர்கள்.

இளங்கோவனின் எழுத்தைப் படிக்க நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்பிற்குரிய நிர்மல்,

வருகைக்கும், கனிவிற்கும் நன்றி.

அன்பிற்குரிய தங்கமணி,

அந்தப் பொத்தகத்தைத் தவறாது படியுங்கள்.

தமிழ் பற்றிய என் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர் மிகுதி.

திராவிட இயக்கங்கள் பற்றியும், ஓர் இயல்பான கிடுக்கத்தைக் கொள்ளுபவர் அருகியே இருக்கிறார்கள். ஒன்று ஒரேயடியாக எதிர்ப்பு, இல்லையென்றால் ஒரேயடியாக ஆதரவு. அண்ணன், தம்பி ஆகிய இருவருக்கும் நாற்பது ஆண்டுகள் அரசதிகாரம் என்பது ஒரு நீண்ட காலம். அவர்களின் தொடக்க காலத் தாக்கம் தமிழரிடம் சரியாகத்தான் இருந்திருக்கிறது. அது பொதிவானது தான் (positive) ஆனால், இன்றோ, கொஞ்சம் நொகுத்துப் (negative) போனது போல் தோற்றம் அளிக்கிறது. அவர்களைப் பற்றி தீவிர அலசல் தமிழரிடம் தேவை. அதே போல மாற்று இயக்கம் வருமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Vassan said...

// போய்வந்த மெய்யியற் பயணத்தை முழுக்கத் தெரிவித்தால், என்னைப் பித்துப் பிடித்தவன் என்று சொல்லிவிடுவீர்கள். //

மிகுதி ஓய்வு நேரம் கிடைத்தால்,மெய்யியல் பற்றி தயவு செய்து எழுதுங்கள். எனக்கு உதவலாம் !

இன்றுவரை கடவுள் என்பதை கற்பிதமாகத்தான் உணர முடிகிறது. ஆயினும் தமிழில் பாசுரங்களையோ, மடற்குழுக்களில்
நா.கண்ணன் எழுதிய ஆழ்வார் பாசுரங்களை படித்த போது கூட மெய் சிலிர்த்து போவதை தவிர்க்க முடிந்ததில்லை.


பொடியனாய் இருந்த காலத்தில், கட்டாயமாக சட்டநாதர் கோவிலுக்கு போக நேர்ந்த போது, அங்கிருந்த ஓதுவார் திரு.சுவாமிநாத
தேசிகர் மெய்யுருக பாடிய தேவாரம் கேட்டு, ஒன்றி போனதும் பிறகு குழப்பத்தையே தந்தது. இப்படியே ஏசு குறித்த சில
பாடல்களும்.

( கட்டாயப்படுத்தி கோவிலுக்கு இழுத்துச் சென்ற தந்தை, நான் படிப்பதற்காக வீட்டில் உண்மை நாளிதழை வாங்கிக்
கொண்டிருந்தார் - இது வேறு விடயம் !)

மிக்க நன்றி.

ஓகை said...

ஐயா, தங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி. குறித்திருக்கும் அகப்பாடலின் உரையாக சந்திரசேகரன் இவ்வாறு கூறுகிறார். அனைவரும் அறிய அதை இங்கே இடுகிறேன்.

"அ·தாவது, “உன்னைத் திருமணம் செய்துகொள்ளும்முன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு];
வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான தனு*ச்கோடியில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!” என்றாள்.

இதில் வரும் கவுரியர் எனும் சொல் பாண்டியரைக் குறிப்பதானால் முதுகோடி தனுக்கோடியாக இருக்கலாம். இல்லையென்றால் நீங்கள் சொல்வதுபோலவே வைத்துக் கொள்ளலாம்.

சுந்தரவடிவேல் said...

தனுக்கோடி என்று ஒருவரின் பெயர் எங்களூரிலே உண்டு. அவரைத் தனிக்கொடி என்று அழைப்பது தனி விதயம்.
தனுசைக் கொண்டிருந்தவன் (இராமன்) அங்கு சென்றதன் பின்னாலேயேதான் அவ்வூருக்கு அப்பெயர் வந்திருக்கக் கூடுமா?

குலவுசனப்பிரியன் said...

//I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. //

ஐயா,

இதைப் படித்தவுடன் உணர்ச்சி மேலிட மூலப் படியைக் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.
மெக்காலே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் (http://www.geocities.com/bororissa/mac.html),
இந்த பத்தியில் கண்டுள்ளவாறு எதுவும் கூறப்படவில்லை. இது அவருடைய உரையைக் கொஞ்சம்
மிகைப்படுத்தி மற்றவர்கள் சொன்னது போல (http://answers.google.com/answers/threadview?id=296771)

இது வெறும் தகவலுக்கு மட்டுமே. மற்றபடி எப்போதும் போல் உங்கள் பதிவு ஒரு தகவல் கருவூலம்.

செல்வநாயகி said...

எப்போதும் போல் உங்கள் பதிவு ஒரு தகவல் கருவூலம். நன்றி.

nayanan said...

அன்பின் ஐயா, மற்றும் நண்பர்களே,
சுடரை இரண்டு தினங்களுக்குள் எழுதி
விடவேண்டும் என்று கட்டுகள் இருந்தும்,
என்னால் இன்றுதான் அமர முடிந்தது.
நாளை (புதன்) மாலைக்குள் எழுதிவிடுவேன்.
காலத்தாழ்வினைப் பொறுத்துக் கொள்ளக்
கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

நான் அறிந்தவரை, மடிக்குழைப்பள்ளிகளின் (matriculation schools) அதிகாரத்தைக் குறைப்பதில் தான் தமிழின் எதிர்காலமே இருக்கிறது.

முதற்கட்டமாக அறிவியல் தவிர்த்த சமூகவியல் பாடங்களை தமிழில் கற்பிக்க கட்டாயமாக்கலாம்

வரலாறு , புவியியல் எல்லாம் ஆங்கிலத்தில்தான் கற்கவேண்டுமா?

இரண்டு மொழிகளிலும் கற்பிக்க படுவதால் பெற்றோர்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராது என்று நம்பலாம்.

வேந்தன் அரசு

இராம.கி said...

அன்பிற்குரிய வாசன்,

நான் அறிந்தவரை மெய்யியல் பற்றி எழுதினால், வலைப் பதிவில் படிப்பதற்கு மிகக் குறைந்தவரே வருவர். இருந்தாலும் நீங்கள் கேட்கிறீர்கள்; எனவே முயலுவேன். (ஆசீவகம் பற்றி எழுதச் சொல்லி முன்பு தங்கமணி கேட்டதும் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.)

நா. கண்ணனின் பாசுர மடல்கள் இன்றும் மறக்க முடியாதவை.

இசையறிவு மிகுந்த ஓதுவார் தேவாரம் பாடினால், கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஓர் ஆண்டிற்கு முன்னால், இங்கே மயிலைக் கோயிலில் இருக்கும் தேவார ஓதுவாரின் (மிகவும் இளையவர்) பாட்டுத் திறன் பற்றிக் கேள்விப் பட்டு, என் அண்ணனின் மணிவிழாவில் வேண்டி வரவழைத்து, முதல்நாள் மாலையில் பாடவைத்தோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம். வந்திருந்த அத்தனை பேரும் அப்படியே தேவாரத்தில் சொக்கிப் போனார்கள். அவ்வளவு இனிய குரல், பாட்டுவளம். இதற்காகவே தேவாரம் படிக்கவேண்டும் என்று நம்மைத் தூண்டுமாப் போல ஓர் ஈர்ப்பு.

இவர் போன்ற ஓதுவார்கள் அரிதாகவே இருக்கிறார்கள்.

அன்பிற்குரிய ஓகை,

சந்திரசேகரனின் கூற்றை இங்கே இட்டதற்கு நன்றி. நல்ல தமிழறிஞர் அவர். இணையத்தில் அவருடைய பங்கு இப்பொழுது குறைந்து இருப்பது நம்மைப் போன்றோருக்கு இழப்பே.

என்னுடைய புரிதலில் குறிப்பிட்ட அகநானூற்றுப் பாடலில் சுட்டுவது கோடியக் கரையே.

அன்பிற்குரிய சுந்தர்,

தனுசைக் கொண்டவன் அங்கு சென்றதால் அந்தப் பெயர் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பெரும்பாலான தமிழ் ஊர்களின் பெயர்கள் இயற்கைத் தோற்றம் கருதியே தொடக்க காலத்தில் பெயரிடப்பட்டன. இணையம் எங்கும் உலவிக் கொண்டிருக்கும் நாசாவின் "இராமர் பாலம்" படத்தைப் பார்த்தால், அங்கே தனுக்கோடியில் இருந்து தலைமன்னார் வரை இருக்கும் தீவுக் கூட்டமும், நிலத்தடி வளைவும், ஒரு வில் போலவே தோற்றம் அளிக்கும். அந்த வில்லின் கோடி இந்த ஊர்.

நம்மூரின் தொன்மத்திற்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் நூலிழை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அப்புறம் எல்லாமே புரிதல் பிழை தான். அதிட்டக் குறைவான முறையில், பெரும்பாலான இந்தியர்கள் தொன்மங்களை வரலாறு என்றே புரிந்து கொண்டு தடுமாறுகிறார்கள்.
அன்பிற்குரிய குலவுசனப் பிரியன்,

நான் மேலே அளித்திருந்த மெக்காலே பற்ரிய பத்தியைப் பல்வேறு இணையதளங்களில் (அது வலதுசாரி, இடது சாரி, நடுநிலை என்னும் பல தளங்களில்) இருக்கக் கண்டு, அது உண்மையோ என்று மயங்கி அப்படியே இங்கு தந்துவிட்டேன். உங்கள் முன்னிகையைப் பார்த்த பின்னால், அதன்பின் துழாவ முற்பட்ட பின்னால் தான், உண்மைநிலை புரிந்து கொண்டேன்.
அதன் வழி, மக்காலேயின் முழு அறிக்கையையும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவருடைய கருத்து மேலே சொன்ன பத்தியின் கருத்தில் ஓரளவு விலகியிருந்தாலும், ஆங்கிலத்தில் கல்வி என்ற வகையில் பெரிதும் விலகவில்லை.

உங்கள் பின்னூட்டின் மூலம், "இணையம் என்பது கொஞ்சம் வழுக்கல் ஆனது; எனவே கவனத்துடன் கையாள வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள். நன்றி.

அன்பிற்குரிய செல்வநாயகி,
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

அன்பிற்குரிய இளங்கோ,

உங்கள் இடுகையைப் படித்தேன். மற்ற இரு கேள்விகளின் மறுமொழிக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறேன். அதையும் படித்தபின்னால் என் கருத்தைச் சொல்லுகிறேன்.

அன்பிற்குரிய வேந்தன் அரசு,

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி. எப்படிச் செயற்படுத்துவது என்பதில் பல்வேறு விதமாய் ஓர்ந்து பார்க்கலாம். நீங்கள் சொல்லுவது ஒரு வழிமுறை.

அன்புடன்,
இராம.கி.

ப்ரசன்னா said...

ஐயா,

அருமையான பதிவு.

மருது சகோதரர் பற்றி, பலர் அறியாத தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். நானும் சிவகங்கைச் சீமையைச் சார்ந்தவன் என்ற வகையில் பெருமையாக இருக்கிறது.

//இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை. //

மிகச் சரி.

Machi said...

மருது சகோதரர் பற்றி அறிந்து கொண்டேன்
வருத்தமாக இருந்தது. துரோகிகளை தமிழ் மன்னர்கள் அடையாளம் காணதவறிவிட்டனர், என்ன திறமை இருந்து என்ன பயன்?
மெய்காப்பாளன், சமையல்காரன், நண்பன், ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ENNAR said...

நான் தமிழ் மணம் பக்கம் வராமல் இருந்து விட்டேன் இன்று அகத்தியர் மூலம் தெரிந்து கொண்டேன் தங்கள் சுடரை. நல்ல விளக்கம் அருமையான வரலாற்று கட்டுரை இது போல தொடருங்கள்

Anonymous said...

சிவகங்கைச்சீமை வரலாறு, சேது நாட்டு வரலாறு, நிலப்பாலம், மருதக்கோபுரம் தெரியக்கட்டின மருது, மருதுவும் திருக்குன்றக்குடியும், மருதுவின் எழுச்சி, வளரி, சித்தர் முத்துவடுகநாதர், சிவகங்கைச்சீமை அம்மானை, மருதுவின் கடைசி நாட்கள், கட்டபொம்முவின் கடைசி நாட்கள், கட்டபொம்முவின் ஆரம்ப எழுச்சி, மருதுவின் மைந்தன், பானர்மேனின் அடுத்த கட்டம், காளையார் கோயில் வரலாறு, சங்ககால பறம்புநாடு, கான நாடு, கோனாடு என்று நூற்றுக்கும் மேலான கட்டுரைகளும் மடல்களும் சிவகங்கை, etc., பற்றி எழுதியிருக்கிறேன். சில பேராய்வு அரங்குகளில் பேப்பர் சமர்ப்பித்திருக்கிறேன்.
சிவகங்கச்சிமை பற்றி என்னுடை பேராய்வைப் பற்றிச் சுருக்கமாக கீழ்க்கண்ட வலைத்தளத்தில் காணலாம்:

http://www.visvacomplex.com/My_Research_About_Marudhu_Servai_Brothers_And_Sivagangai_Country.html

அகத்தியர் ஆவணமாகிய

http://www.treasurehouseofagathiyar.net/

SurveySan said...

அம்மாடி. இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா 1800களில்.

அருமை.

ஓகை said...

ஐயா, உங்கள் பார்வைக்கு: சுட்டி

( எழுத்துரு திஸ்கியில் இருக்கிறது)