Tuesday, November 18, 2008

ஒட்டியாணம் - 1

அண்மையில் மின்தமிழ் மடற்குழுமத்தில் ”ஒட்டியாணம் தமிழ்ச்சொல்லா?” என்று திரு. கல்யாணக் குருக்கள் கேட்க, அதற்கு “ஓட்யாணம் வடமொழிச் சொல். ’ஓட்யாண பீடநிலயா’ –ன்பது லலிதா ஸஹஸ்ர நாமம். சாக்த நெறி தேர்ந்தவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். ஸ்ரீ பாஸ்கர ராயரின் விரிவுரையிலும் விளக்கம் தேடலாம். தமிழில் ஒட்டியாணம்” என்று திரு. தேவ் மறுமொழிக்க, பின் வின்சுலோ அகரமுதலியில் இருந்து ”மேகலை என்பது ஒட்டியாணத்தைதான் குறிக்கும். ஆனால் இது வடமொழி மூலத்திலிருந்து வந்த சொல் என்றுதான் வின்ஸ்லோ அகராதி சொல்கிறது:

*s.* A woman's girdle, or zone, மாதர்இடைக்கட்டு. 2. The swelling sides of a mountain, மலைப்புடைப்பு. W. p. 672. ME KHALA. 3. A woman's jewelled girdle, இடையணியுள் ஒன்று. 4. A garment worn by women, ஆடை. 5. A row or ridge of peaks on Mount Meru, மேருகிரிச்சிகரம்.

என்று நண்பர் ஹரிகி ஒரு குறிப்பை எடுத்துத் தந்து ”ஒட்டியாணம் வடசொல் தான்” என்று உறுதி செய்ய, நான் கொஞ்சம் சலித்துப் போனேன்.

அளவிற்கு மீறிய வடமொழிப் பயனாக்கத்தின் வழிப்பட்டு, நம்மில் பலரும் பெரிதும் மயங்கி விடுகிறோம். ஏதொரு சொல்லையும் ”அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா?” என்று பார்ப்பதற்கு, ”வெறுமே அதில் போட்டிருக்கிறது, இதில் போட்டிருக்கிறது” என்று சொல்லி அமைந்துவிட முடியாது. குறிப்பிட்ட சொல்லோடு தொடர்புடைய மற்ற பல சொற்களையும் (சில சமயம் 2, 4, 10, 100, 1000 சொற்களையும் கூடப்) பார்க்க வேண்டும். ”அந்தக் கருத்து எப்படி எழுந்தது, எப்படிப் பிறக்கலாம், இணைக்கருத்துக்கள் உண்டா, இந்தச் சொல்லைக் கடன் வாங்கியது என்றால்,மற்ற இணைச் சொற்கள் எல்லாம் எப்படிப் பிறந்தன?” என்றெல்லாம் கூட அலச வேண்டும். அப்புறம் மெதுவாக ஒரு முடிவிற்கு வர வேண்டும். அதுவும் கூடப் புதிய தரவுகளினாலே மாறலாம்.

விடாது நான் சொல்லும் கருத்தை மீண்டும் எல்லோருக்கும் சொல்லுகிறேன். சங்க இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை என்பதாலேயே ஒருசொல்/கருத்து தமிழ்ச்சொல்/தமிழ்க் கருத்து இல்லை என்று சொல்லுவது புரியாமல் சொல்வதாகும். தமிழ் என்பது ஒரு “மூதிக” மொழியல்ல, அது இயல்பாய் வளரும் மொழி. புதுச் சொற்கள்/புதுக் கருத்துக்கள் தமிழில் பல்வேறு காலங்களில் எழுந்திருக்கின்றன. சங்க காலத்திற்கு அப்புறமும் சொற்கள்/கருத்துக்கள் கடன் வாங்காமல் உள்ளிருந்தே கிளைத்திருக்கின்றன. (ஒருசில கடன் வாங்கியும் அமைந்திருக்கின்றன.) அதேபொழுது குதிரைக்குக் குர்ரம் என்றால், யானைக்கு அர்ரமெனச் சொல்லமுடியுமோ? ”கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”.

ஒட்டி யாணம் (ஒட்டி+யாணம் என்ற கூட்டுச் சொல் அது), கலி யாணம் (கலி+யாணம்) ஆகிய எல்லாம் நல்ல தமிழ்ச் சொற்கள் தான். அவற்றை வடமொழியில் ஒலிபெயர்த்து ஒட் யாணம், கல் யாணம் என்று போட்டு விட்டதாலேயே, அப்படி ஒலிபெயர்த்த சொற்களை லலிதா சஹஸ்ரநாமத்தில் போட்டு விட்டதாலேயே, அவை வடமொழியாகி விடாது. ”சங்கதமே மேடு, தமிழ் பள்ளம் - மேட்டிலிருந்து தான் பள்ளத்திற்கு நீரோட வேண்டும்?” என்ற சிந்தனை கொண்டிருந்தால், நாம் நெடுந்தொலைவு செல்லமுடியாது.

ஒட்டி, யாணம் என்ற இரண்டு தமிழ்ச் சொற்களையும் தனித் தனியாகப் பார்ப்போம். இதுவும் ஒரு கட்டுரைத் தொடர் தான்.

ஒட்டியின் வேர் அறிய உல்லில் இருந்து தொடங்க வேண்டும். உல் என்னும் வேர் தமிழில் ஆயிரக் கணக்கான சொற்களைத் தந்திருக்கிறது. உல் என்னும் வேரில் இருந்து ஒடுங்கற் பொருளிற் பிறந்த சில சொற்களை மட்டும் இங்கே நாம் பார்ப்போம். [வழக்கம் போல, பாவாணர், அவர் வழி வந்தோருக்கு, குறிப்பாக சொல்லாய்வு அறிஞர் அருளிக்கு, நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்களின் கருத்தை பலவிடங்களில், சிலபோது வரிக்குவரி எடுத்தெழுதி என் உரையை ஊடாகவும் கலந்து தருகிறேன். என் இடைப்பரட்டும் உண்டு.]

கீழே வருவது பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகள் - 1, தமிழ்மண் பதிப்பகம் பக்கம் 71-77 ல் இருந்து எடுத்தது.

உல்>உல்குதல் = உள்வளைதல், ஒடுங்குதல், சிறுத்தல்.
உல்>உல்லி>ஒல்லி = உள்ளொடுங்கிய ஆள், மெலிந்த ஆள். (உடற் சுற்றளவு சிறுத்தவன் ஒல்லியானவன்.)
உல்லாடி>ஒல்லாடி = மெல்லிய ஆள்.
உல்குதல்>உள்குதல் = உள்ளொடுங்குதல்.
உல்>உள்; that which is inside.
உள்>உள்ளம்
உள்>உளுக்கு>உளுக்கார்தல் = ஒடுங்கியிருத்தல், கீழிருத்தல்
உளுக்கார்தல்>உட்கார்தல் = கீழ் அல்லது இருக்கையில் இருத்தல் (எங்ஙனம் அமர்ந்திருப்பினும் நிற்கும் நிலையினும் உட்கார்ந்திருக்கும் இருப்பு உருவ அளவில் ஒடுங்கியிருத்தல் காண்க.]

உள்குதல்>உட்குதல் = அஞ்சுதல் “நண்ணாரும் உட்கும் என் பீடு” குறள் 1088
உட்குதல்>உக்குதல் = மெலிதல் (=துயரத்தால் மெலிதலை உக்கிப் போதல் என்பர். உக்கின மரம் என்பது உலக வழக்கு.), உளுக்குதல் (= உரங்கெடுதல்). உள்குதல் என்பதன் பிறவினைச்சொல் உளுக்குதல்

உக்கு>உக்கம் = ஒடுங்கிய இடை (மலையாளம்: உக்கம்). “உக்கம் சேர்த்தியது ஒருகை” - திருமுருகாற்றுப் படை. 108.
உக்கு>உக்கல்>ஒக்கல் = இடுப்பு
உக்கல்>உக்கலை>ஒக்கலை = இடுப்பு.
உக்கி = இரு காதையும் இரு கையால் மாறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தெழும் தண்டனை வகை.
உளுக்கு>உடுக்கு = இடையொடுங்கும் பறை
உடுக்கு>உடுக்கை = இடையொடுங்கும் பறை. “நிலையாய் உடுக்கை வாசிப்பான்” (S.I.I.Vol.II,254.)
உடுக்கை> Skt. Hudukka

அடுத்து இரண்டாம் பகுதிக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Anonymous said...

மீண்டும் தங்களைப் பார்ப்பது உவகையளிக்கிறது.

-பிரதாப்

naanjil said...

ஒட்டியாணம்:
ஆவலுடன் இரண்டாவது பகுதியை
எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

உங்கள் தமிழ்ச்சேவைக்கு உளங்கனிந்த நன்றி உரித்தாகுக.

நாஞ்சில் ஏ. பீற்றர்
வாசிங்டன் வட்டாரத் தமிழ் ஆய்வு கூட்டம், மெரிலாண்ட், யு. எஸ். எ