Wednesday, February 15, 2006

Tamil Script - A Living Legacy

தமிழில் ஒருங்குறி பற்றி தமிழ் உலகம் மடற்குழுவிலும், என்னுடைய "வளவு" வலைப்பதிவிலும், அண்மையில் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். இரண்டு இடங்களிலும் எழுந்த சில பின்னூட்டுக்களுக்கு மறுமொழிப்பதில் சற்று சுணக்கம் கொண்டுவிட்டேன். கொஞ்சம் பொறுமையோடு இருங்கள்; எப்படியும் மறுமொழி கொடுப்பேன்.

அதற்கிடையில், "இந்திய மொழிகளில் ஒருங்குறி வழியே கணிமை" என ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கும் மைக்ரொசாவ்ட்டின் சேவைத்தளமான bashaindia.com - இல், தமிழ் எழுத்து பற்றி வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரையை, தமிழுலகம் மடற்குழுவில், திரு. அன்பரசனின் மின்னஞ்சல் வழியறிந்து, பின் அந்த வலைத்தளம் போய்ப் படித்தேன். பொதுவாக, இந்தக் கட்டுரையில், முன்னுக்குப் பின் முரணாய், கால நிலைகள் பல இடத்தும் சொல்லப் படுகின்றன. இந்தக் கட்டுரையில் மலிந்து கிடக்கும் பிழைகளைப் பார்த்த பின்னால் தான், ஒருங்குறிக்காரர்களின் தவறான மொழிப் புரிதல் எங்கிருந்து தொடங்குகிறதென்று புரிந்தது. Tamil Script - A Living Legacy என்ற அந்தக் கட்டுரையை அப்படியே வெட்டி, இங்கே ஒட்டி, அதன் ஊடே என் முன்னிகைகளையும் (comments) சேர்த்துக் கீழே பதிகிறேன். இந்த மடலை அங்கு கொடுக்கப் பட்ட மின் முகவரிக்கும் புறவரிப்பு(forward)ச் செய்கிறேன். தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

http://www.bhashaindia.com/Patrons/LanguageTech/TamilScript.aspx

Tamil Script - A Living Legacy

Tamil is a very intriguing language. The intricacies of this language, as well as its script, are often a topic of debate among language experts. The following article is a beginner's guide to the complex Tamil Script.

Introduction

Tamil is one of the most widely spoken languages of India. The language, though having its roots firmly implanted in southern India, has spread tendrils to other countries like Singapore and Sri Lanka. Tamil is one of the few languages, which has managed to create a very distinct identity of its own. In a country like India, where the number of languages and their dialects is comparable to number of provinces in the country, Tamil is among the few note-worthy languages.

History

Tamil is a very prominent member of the Dravidian family of languages. It is an offshoot of the Grantha script, which is grouped under the Southern Indian group of scripts.
------------------------
கிரந்த எழுத்து என்பது வடமொழியை எழுதுவதற்காகத் தமிழ்பேசும் இடத்தில் இருந்து உருவான, தமிழ் எழுத்தின் நீட்சியே ஒழிய, கிரந்த எழுத்தின் குறுக்கம் தமிழ் எழுத்து அல்ல. இந்தத் தவறான புரிதல் தான், நகரி எழுத்து அடைப்பலகை(template)க்குள் தமிழ் எழுத்தைப் பொருத்திப் பார்க்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது. மகனைத் தகப்பனின் தகப்பனாகத் தாத்தனாகக் காட்டும் வரலாற்றுப் பிறழ்ச்சி இந்த வாசகத்தில் நடக்கிறது.
------------------------
This group is part of a larger body of scripts, called the Brahmee script. Initially, during the early 1st Century CE a southern variant of the Brahmee script was employed to write the Tamil literature.
------------------------
மேலே தமிழ் எழுத்திற்கெனச் சொல்லப்படும் கால நிலை தவறு. Bhasha India வலைத் தளத்தில் தமிழ் பற்றிச் சொல்லும் இன்னொரு கட்டுரையிலேயே கூட, தமிழ் எழுத்தின் பெருவுதி (priority) அண்மையில் கிடைத்த செய்திகளின் வழியே (ஆதிச்ச நல்லூர் தாழிகள் பற்றியது) 1000 B.C. வரை கூடச் செல்லும் என்று தொட்டுக் காட்டப் பட்டிருக்கிறது. மேலும் முற்காலத் தமிழ் எழுத்துக்களின் கல்வெட்டுக்களை மீண்டும் மீண்டும் பெருமி(brhami)யின் வழியது என்று சொல்லித் தமிழ்ப் பெருமி (தமிழ் பிராமி) என்ற பெயரால் அழைத்துக் கொண்டிருப்பது தவறு என்று கண்டித்துப் பல கல்வெட்டு அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் வறட்டுத் தனமாக இந்தப் போக்கைச் சிலர் விடுவதாக இல்லை போலிருக்கிறது.

தமிழி என்ற எழுத்தின் நீட்சி தான், பெருமியில் முடிந்தது என்பதே ஏரணத்தின் (logic) படி பார்த்தால் தெரிகிறது; அதுவே இன்றைக்குத் தமிழ்க் கல்வெட்டியல் ஆய்வாளர் பெரும்பாலோரின் கருத்து. [தமிழி எழுத்து மூலம் என்பதால் தான் தமிழில் வருக்க எழுத்து இல்லை. சொல்லின் இடையில் ஒரே எழுத்திற்கு அதன் சூழல் பார்த்து ஒலி அமைகிறது. பெருமி தமிழுக்குப் பின்னால் எழுந்ததால் தான், வருக்க எழுத்து அமைந்தது. தமிழிக்கும் பெருமிக்கும் உள்ள உறவு நிலைகள், கால முன்னுமை போன்றவற்றைப் பேச வேண்டுமானால் அதற்கே தனிக் கட்டுரை எழுத வேண்டும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.] இந்தக் கட்டுரையாளர் "தமிழியின் நீட்சி தான் பெருமி" என்ற கருதுகோளை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் கூட, தான் கூறுவதையே முடிந்த முடிவாகச் சொல்லுவது வியப்பாக இருக்கிறது.

மேலே உள்ள பத்தியில் 1st Century CE என்று எழுதி விட்டுப் பின், கீழே வரும் பத்தியில் தொல்காப்பியம் 200 B.C. என்று கட்டுரையாளர் சொல்லுகிறார். தொல்காப்பியம் (காலம்>400 BC) என்ற இலக்கணம் தமிழ் எழுத்துக்களை, அவற்றின் ஒரு சில வரைகளைப் பற்றி எழுத்தியலில் தெளிவாகப் பேசுகிறது என்று கட்டுரையாளருக்குத் தெரியுமோ? 400 B.C என்று தொல்காப்பியர் காலத்தை எடுத்துக் கொள்ளாமல், ஆசிரியர் சொன்னபடி 200 B.C என்று பார்த்தாலும் கூட, தமிழ் எழுத்துக்களின் தோற்றம் 1 Century CE என்று முதற்பத்தியிற் சொல்லுவது எப்படிச் சரியாகும்? தவிர, இதுவரை படித்தறிந்த கல்வெட்டுக்களின் தொடக்க காலம் 3 Century B.C என்று கட்டுரையாளர் அறிவாரோ? பார்க்க:

http://www.keetru.com/literature/essays/mahadevan.html
----------------------------
A little after this period, until the 8th century CE, Grantha script was used for writing the Tamil language. It was around the 8th Century that an exclusive script was developed for the Tamil language, which is being used even in the present day, only with slight variations.
----------------------------
இதுவும் தவறு. தமிழுக்கென்ற இருந்த எழுத்து, தமிழி என்று அறியப்படுவது, மேலே கூறியவாறு, இன்றையக் கல்வெட்டு அறிஞர்களின் முடிவின் படி, கி.மு.300க்கு முன்னரே வந்து விட்டது.
---------------------------
The Grantha script is itself a modified version of the Brahmee script of the Ashokan era.
---------------------------
இந்தப் பிழை பற்றியும் மேலே பேசியாயிற்று. கிரந்தத்தில் உள்ள வருக்க எழுத்துக்கள் பெருமி(brahmi)யில் உள்ள வருக்க எழுத்துக்களின் திரிவாகத் தெரியவில்லை. அவை தமிழி எழுத்துக்களின் திரிவாகவே தெரிகின்றன; கிரந்தம் என்ற எழுத்து நகரிக்கு முந்திய எழுத்து என்று கூட ஒரு சில ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். வடமொழி ஆவணங்களில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டது, நகரி எழுத்தில் எழுதப்பட்ட ஆவணங்களுக்கும் காலத்தால் முந்தியதாக அறியப்படுகிறது.

கிரந்தம் என்பது தமிழ் வட்டெழுத்தின் வளர்ச்சி என்பதே பலரின் கருத்து. தமிழி>வட்டெழுத்து>கிரந்தம் என்ற சரமும், தமிழி>பெருமி>நகரி என்ற சரமும் இந்தியப் பெருநாட்டில் இணையாக வளர்ந்த, எழுத்துத் திரிவுச் சரங்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. முன்னது தென்புலத்தில், தமிழ்நாட்டில், எழுந்தது; பின்னது வடபுலத்தில், உஞ்சை (Ujjain) நகருக்குப் பக்கத்தில், எழுந்தது. கட்டுரை ஆசிரியர் தெரியாது எழுதுகிறாரா அல்லது குழப்பத்தில் உரைக்கிறாரா என்று தெரியவில்லை.
---------------------------------
A script called 'vettezhuthu' was developed somewhere between the 6th and 10th century to make the carvings of literary works on stones easier. Vettezhuthu is a term, which means 'letters which are cut'. The script is also referred to as 'Vattezhuthu', which translates to mean 'curved letters'. This name might have come into existence owing to the fact that a large part of the early Tamil literature was practiced on Palm leaves. The script took on a curved style, to facilitate the use of sharp instruments to inscribe on the leaves. The Palm leaves had a tendency to tear when characters, not curved in nature, were written on them.
Tamil is one of the very few Indian languages, which does not have its origin related to Sanskrit. It's very difficult to declare any manuscript as the first recorded literary work in Tamil.
----------------------------------
மேலே உள்ள "It's very difficult to declare any manuscript as the first recorded literary work in Tamil" என்ற கடைசி வாக்கியம் என்ன சொல்லுகிறது என்று புரியவில்லை. இந்த வாக்கியம் தமிழ் ஓலைச்சுவடிகளைக் குறிப்பதென்றால் அது ஒரு "விதப்பான ஆவண நிகராட்சி (specific document representation)" என்ற வகையில் சரி; மாறாகப் பொதுவான ஆவணம் (generalized document) என்றால் அது பெரும்பிழை. ஓலைச்சுவடிகள் எவையும் 150 - 400 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை தான். இன்றைக்கு நாம் காணும் ஓலைச் சுவடிகள் ஒவ்வொன்றும், முன்னாளையச் சுவடிகளின் மறு எடுவிப்புகள் (re-editions) என்று தான் புரிந்து கொள்ளுகிறோம். இந்த நிலை தமிழ்ச்சுவடிகளுக்கு மட்டும் உள்ள நிலை அல்ல. தென்னாட்டில் ஓலையில் எழுதப்பட்ட எந்த மொழி ஆவணங்களுக்கும் உள்ள நிலை. இந்த ஓலைச்சுவடிகளின் முதல் எடுவிப்பு (first edition) 150-400 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருந்தால், நம்முடைய வெதணத்தில் (climate) அவை இன்றுவரை தங்கி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எத்தனை மறு எடுவிப்புக்கள் ஓவ்வொரு ஆவணத்திற்கும் நடந்தன என்று கூட நமக்குத் தெரியாது. அதற்காக, அந்த ஆவணங்களின் முதல் எடுவிப்புக் காலம் அண்மையில் தான் இருந்தது என்று சொல்ல முடியுமோ? மொத்தத்தில் இந்த வாக்கியத்தில் ஒரு தெளிவற்ற மயக்கம் இருக்கிறது.
----------------------------------
Most of the scriptures were maintained on Palm leaves and have been difficult to lay hands on. Tolkappiyam is probably the earliest available Tamil text, dated around the 200 BC.
---------------------------------
தொல்காப்பியம் பற்றிய கால மதிப்பீடாய், இதுவும் வரலாற்று அளவில் தவறான புரிதலே. இருந்தாலும் நீக்குப் போக்கு கருதி மேற்கொண்டு பேசாமல் அமைகிறேன்.
---------------------------------
Tolkappiyam describes the languages of the classical period, about 200BC and also has a fair amount of detail about the grammar and poetry of that period. Silappadhigaram or Cilappadhikaram is considered as the most significant epic of the Tamil language. Authored by Illango Adigal, this epic was composed in the second century AD and can be viewed as a log of the lives of Tamil people of that period. This is one of the three surviving Great-Epics in Tamil literature.
The pure Tamil script is addressed as 'Centamil'.
--------------------------------
இதுவும் தவறான புரிதல். செந்தமிழ், கொடுந்தமிழ் என்பன பேச்சு வழக்கைப் பற்றியவை. அவற்றிற்கும் எழுத்திற்கும் தொடர்பு கிடையாது. எழுத்திற்கும் மொழிக்குமான குழப்பம் இந்தக் கட்டுரையில் நெடுகக் கிடக்கிறது. தமிழி என்பது தமிழுக்கென உருவாக்கிய தனி எழுத்து. செந்தமிழ் என்பது வட்டார வழக்குத் தவிர்த்த, தமிழ்கூறும் நல்லுலகில் பலரும் புரிந்து கொள்ளப் படும், தரப் படுத்தப் பட்ட standard Tamil. செந்தமிழும் தனித்தமிழும் (pure Tamil) வெவ்வேறானவை. செந்தமிழுக்குள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறமொழிச் சொற்கள் இருக்கலாம். தனித்தமிழுக்குள் பிறமொழிச் சொற்கள் வாரா. இந்தக் கட்டுரையாசிரியர் செந்தமிழ், கொடுந்தமிழ், தனித்தமிழ், தமிழி, கிரந்தம், பெருமி என்ற தனித்தனிக் கட்டுக்கூறுகளைச் (individual categories) சரியாகப் புரிந்து கொண்டால் நல்லது.
--------------------------------
This does not have the influence of any other language or script in it. But the form of Tamil witnessed in the present day usage oversteps the boundaries set by this form of script.
--------------------------------
இங்குமே எழுத்திற்கும் மொழிக்கும் இடையே கட்டுரையாளர் குழம்பிக் கொள்கிறார். தமிழி எழுத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் செந்தமிழுக்கும் தொடர்பில்லை. தமிழி என்பது தமிழ் என்னும் மொழியை எழுத எழுந்த எழுத்து. "தமிழ் எழுத்து" என்ற சொற்றொடரைச் சுருக்கமாக, குழப்பம் இல்லாமல், மொழிக்குப் புறம்பாய்த் தனித்து இருக்கக் கூடியது என்று உணரும் வகையில், சொல்லுதற்கு எழுந்தது "தமிழி" என்ற சொல். தமிழி என்ற சொல்லை வடபுலத்தில் எழுந்த "லலித விஸ்தாரம்" போன்ற பழைய புத்த, செயின நூல்கள் "திராவிடி" என்ற லிபியாக, பதினெட்டில் ஒன்றாகக் குறிக்கும்.
---------------------------------
Koduntamil, the colloquial Tamil has words, which are borrowed from other languages and is not considered as the actual Tamil script by the purists.
--------------------------------
மறுபடியும் ஒரு தவறான புரிதல். கொடுந்தமிழையும் தமிழி எழுத்துக்களில் எழுதலாம். அப்படிக் கொடுந்தமிழை எழுதும் போது, சில சொற்களின் பலுக்கும் முறை எழுத்துப் பெயர்ப்புச் (transliteration) சிக்கலால் மாறி விடக் கூடும். அப்படி மாறுவது வேறு சிக்கல்; அதைப் பற்றி இங்கு ஆசிரியர் பேசுவதாகத் தெரியவில்லை.
-------------------------------
The script too has been altered to suit words imbibed from other languages.
-------------------------------
தமிழ் எழுத்தை இயல்பாகவும் அரசு முறையிலும் பல்வேறு காலங்களில் திருத்தியிருக்கிறார்கள். அந்த மாற்றங்கள் எல்லாம் வெளிச் சொல்லைக் கடன் வாங்குவதற்காக ஏற்பட்ட திருத்தங்கள் அல்ல. அவை எழுது பொருளில், எழுதும் முறையில், இன்னும் இது போன்றவற்றால், ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய, மொழியால் ஏற்பட்டவை அல்ல.

தமிழ் எழுத்து (=தமிழி), தமிழ் எழுத்தின் நீட்சியான கிரந்த எழுத்து ஆகிய இரண்டுமே தமிழ் நாட்டில் எழுந்தவை தான். தமிழ் எழுத்து தமிழ் மொழியை எழுதப் பிறந்தது. கிரந்த எழுத்து வடமொழியை எழுதப் பிறந்தது. [இந்த அடிப்படையைப் புரியாமல் குழப்பிக் கொள்பவர்கள் மிகப் பலர். கட்டுரையாளருக்குப் புரிவதற்காகச் சொல்லுகிறேன். உரோமன் எழுத்து west european மொழிகளைக் குறிக்க எழுந்தது; சிரில்லிக் சுலாவிக் (slavic) மொழிகளைக் குறிக்கப் பிறந்தது. இரண்டுமே வொனிசியன் (phonician) - எட்ரசுக்கன் (etruscan) என்ற கொடிவழியில் தோன்றியவை தான். இருந்தாலும் உரோமன் எழுத்தில் உள்ள ஆவணத்தில் இரண்டு சிரில்லிக் எழுத்தை இடையே கலந்து எழுதிப் போட்டால் என்ன நிலை வருமோ, அந்த நிலை தான் கிரந்தம் கலந்து தமிழியில் எழுதுவதும்.] காலப் போக்கில் வடமொழி ஊடுறுவல் ஏற்பட்ட காரணத்தால் கிரந்த எழுத்துக்களைக் கொண்டு எழுதப் பட்ட வடசொற்களையும் இடையிடையே பெய்யும் ஒரு மணிப்பவள நடை தமிழ்கூறும் நல்லுலகில் எழுந்தது.

இந்த வரலாறுப் புரிதலை மறைத்துப் பேசுவது சோற்றுக்குள் முழுப் பூசனியை மறைப்பது ஆகும்.
-------------------------------------
Sanskrit may not have had any influence in the origin of Tamil; nonetheless it has affected the Koduntamil to a large extent. A list of words has been borrowed from Sanskrit to suit the colloquial Tamil. These are referred to as 'loan words'. The 'borrowing' process itself started during the development stages of the script and hence certain characters from the Brahmee script have been retained in Tamil to facilitate the writing of these words.
--------------------------------------
இதுவும் தவறு. வடசொற்கள் தமிழில் ஊடுறுவியதால், தமிழ் எழுத்தை யாரும் திருத்தவில்லை. கம்பன் காலம் வரையிற் கூடத் தமிழில் நுழைந்த வடசொற்கள், கிரந்த எழுத்தை உள்நுழைக்காமல், தற்பவமாகவே எழுதப் பட்டன. (தற்பவம் என்பது தமிழியை மட்டுமே வைத்து பிறமொழிச் சொற்களை தன் வயப் படுத்தி எழுதுவது. பவத்தல் = வயத்தல், சார்தல். பவத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த பாவித்தல் என்ற ஈழத்தார் சொல்லை அறிக.) தற்சமம் (தமிழியோடு சில கிரந்த எழுத்துக்களைக் கலந்து தமக்குச் சமமாய்ப் புழங்கும் முறை) பெருகியது விசயநகர வடுகர் ஆட்சியில் தான். இங்கே மேலே கட்டுரையாளர் சொல்லும் வாக்கியத்தில் பெரிய காலப் பிழை விரவி இருக்கிறது.
---------------------------------------
But this has been, and remains, a debatable issue as many of the purists of the Tamil language disagree with the concept.
--------------------------------------
எல்லாவற்றையும் மூடி மறைத்தால் வாதம் இல்லாதது கூட வாதமாய்த் தான் தெரியும். இது போன்ற கட்டுரைகள் உள்ளார்ந்த நிகழ்ப்போடு (agenda) தான் சிலரால் எழுப்பப் படுகின்றன.
--------------------------------------
The Features of Tamil Script
The Tamil script bases its foundation on 12 vowels and 18 consonants. It also supports a special character called Aayutha Ezutthu, details of which are given further on in the article.
-------------------------------------
ஆய்த எழுத்துப் பற்றிக் கீழே எங்கும் காணோம். ஒருவேளை பின்னால் சொல்லுவார்களோ என்னவோ, தெரியவில்லை.
------------------------------------
In addition to these, six letters have been borrowed from Sanskrit, which are called the Grantha letters, to facilitate the writing of the 'loan words'. The Grantha letters are used to write words of English origin as well.
------------------------------------
சங்கதத்தில் இருந்து இந்த எழுத்துக்களைத் தமிழ் கடன் வாங்கவில்லை. மீண்டும் மொழிக்கும் எழுத்துக்கும் இடையே ஆசிரியர் கொள்ளும் அடையாளக் குழப்பம் போல் இருக்கிறது. உரோமன் எழுத்திற்கும் ஆங்கில மொழிக்கும் யாராவது குழம்பிக் கொள்வார்களோ? இந்தியா என்று வந்தால் இந்தக் குழப்பம் பலருக்கும் ஏனோ வந்து விடுகிறது. சங்கதம் என்ற மொழி நகரி, கிரந்தம், சாரதா எனப் பல வகைப் பட்ட எழுத்துக்களில் எழுதப் பட்டது. [இன்றைக்கு கிரந்தம், சாரதா போன்ற எழுத்துக்களின் புழக்கம் மிக அருகிவிட்டது. தமிழரைப் பொறுத்தவரை வடமொழிக்கான கிரந்தத்தின் புழக்கத்தை விட்டு விடுவது பெரும் இழப்பு. கிரந்தம் பெரிதும் கற்று வந்த பெருமானர்களே (brahmins) அதை இன்று நாடாது தொலைத்தெறிவது இன்னும் சோகம். நம்முடைய கண்டுபிடிப்பை தமிழராகிய நாமே ஒதுக்கினால் எப்படி? கிரந்தம் வழி, வடமொழியை நாம் படிப்பதற்கு வாய்ப்பாய் இருந்திருக்கும். எல்லாவற்றையும் நகரிக்குள் மாற்றி நம்முடைய பெருமிதமான அடையாளங்களை நாமே ஏன் அழித்துக் கொள்ள வேண்டும்?] அதே பொழுது, தமிழ் என்பது மொழியோ, தமிழி என்ற ஒரே எழுத்தால் மட்டுமே உரையாசிரியர்கள் காலம் (12-14ம் நூற்றாண்டு) வரை எழுதப்பட்டது. இந்த உரையாசிரியர்கள் காலத்திற்குச் சற்று பின்னால் தான் (பெரும்பாலும் 15ம் நூற்றாண்டில் தான்), கடன் வாங்கிய சொற்களைத் தமிழில் எழுதத் தமிழி என்ற எழுத்து வரிசையோடு, ஒரு சில கிரந்த எழுத்துக்களையும் சிலர் சேர்த்துக் கையாளத் தொடங்கினார்கள். தற்சமம் பரவலாய் ஆனது 15ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான்.
---------------------------------
The 12 vowels of the language have been termed as uyir ezhuthu. These are almost similar to the vowels of other south Indian languages. The vowels generally accompany a consonant but they do appear independently when used at the beginning of a syllable.
--------------------------------
உயிர்கள் சொல்லின் தொடக்கத்தில் மட்டுமே வரும் என்பது முற்றிலும் சரியல்ல. ஓரோவழி, குற்றுயிர்கள் சொல்லின் ஊடே அளபெடைகளாய் வரலாம்.
--------------------------------
What really makes Tamil script unique is that the whole language is written using only 18 consonants. The limited number of letters can be attributed to the fact that a single character is used to depict multiple sound values. For example, the letter /ka/ can be used for both the sounds /ka/ and /ga/. Similarly the letters /ca/, /pa/ and some of the other consonants take on different roles, based on the context in which they are used.
-------------------------------
இந்த அடிப்படை இருப்பதால் தான் கணியில் தமிழை முதல் அடுக்கு (Level 1) முறையிலேயே உள்நுழைக்கலாம் என்றும், இரண்டாம் அடுக்கு (Level 2) முறை தேவையில்லை என்றும் சொல்லுகிறோம். இதை முற்றிலும் ஒதுக்கி, குறியேற்றம் செய்யப் பட்டதால், ஒருங்குறி மூலம் Level 2 முறையில் மட்டுமே கணி நடாத்தம் (computer implementation) செய்ய முடியும்.
------------------------------
It is interesting to observe that sometimes words, which are spelt the same, are the exact opposite in their meanings. Like, the word "tosam" means happiness and the word "dosam" means a blemish. Both these words are written the same way using the Tamil script.
------------------------------
தோசம் என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்ற பொருள் எந்த அகரமுதலியில் இருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லை. தோசம் என்ற சொல்லுக்கு "குற்றம், பாவம், குறை, நாடிக் கொதிப்பு, சன்னி, விடக் காய்ச்சல், குழந்தை நோய் வகை" என்ற பொருட்பாடுகளைத் தான் மு.சண்முகம் பிள்ளையைத் தொகுப்பாசிரியராகக் கொண்ட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட தமிழ்-தமிழ் அகரமுதலி தெரிவிக்கிறது. மற்ற அகரமுதலிகளையும் பார்க்கலாம்.

தவிர இது போன்ற, எதிரெதிரான பொருள்கொண்ட, ஒரே சொற்கள் தமிழில் மட்டும் தான் இருக்கிறது என்று ஆசிரியர் சொல்லுவது வியப்பாக இருக்கிறது.

விக்னேசுவரன் என்ற வடமொழிச் சொல் விக்னத்தைக் கொடுக்கும் ஈசன் என்றும் பொருள் தரும்; விக்னத்தைத் தவிர்க்கும் ஈசன் என்றும் பொருள்படும். இப்படி இரண்டுவித எதிர்ப் பொருள்கள் தருவதால் விகனேசுவரன் என்ற சொல்லைக் கொண்ட வடமொழி விதப்பானது என்று சொல்ல முடியுமா?

solve என்ற ஆங்கிலச் சொல் வேதியலில் வரும் போது கரைந்து உள்ளே போவதைக் குறிக்கும். கணக்கில் வரும் போது, தீர்மானித்து வெளியே எடுப்பதைக் குறிக்கும். ஒன்று உள்ளே போவது; இன்னொன்று வெளியே வருவது. ஒரு பொருள் இன்னொரு பொருளுக்கு எதிரானது.

இப்படி வெவ்வேறு மொழிகளில் விதப்பான பல்வேறு காட்டுக்களைக் கொடுக்க முடியும். மேலே உள்ள வாக்கியத்தின் மூலம் கட்டுரை ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்?
-----------------------------------
The recognition of the phonetic value of the character becomes easier with practice. These alterations are based on the position of the letter. Consider the letter /pa/. It is pronounced so when it's generally at the beginning of a word, but takes on the sound of /ba/ when it between vowels.
------------------------------------
முற்றிலும் தவறு. ஆசிரியருக்குத் தமிழ் தெரியுமா என்ற அய்யமே எழுகிறது. ப என்ற எழுத்து, தனக்கு முன்னால், மெல்லின மெய் (குறிப்பாக அதன் மெல்லின இணையான "ம்") வரும்பொழுது, ba என்று ஒலிக்கிறது. இந்த ஒலி மாறுபாட்டை எழுப்புவன முன்னும் பின்னும் வரும் உயிரொலிகள் அல்ல. சொல்லில் வரும் மெய்ப்பிணைகளால் (consonant combination) அல்லாமல் ஒலி வேறுபாடு தமிழில் எழாது. அடிப்படையே புரியாமல் கட்டுரை ஆசிரியர் எழுதுகிறார்.
------------------------------------
There are situations where the pronunciation is completely random too.
-------------------------------------
குமுகாயத்தில் ஒரு சில குறிப்பிட்ட மக்கள் தங்கள் பலுக்கலில் தவறு செய்வதால் (காட்டாக உயர்நிலையில் உள்ள ஒரு சிலர் சகரத்தை ஷகரமாக ஒலிப்பர்), அது தரமான பலுக்கல் என்று ஆகாது. ஒரு சிலர் ஷரமாக ஒலிக்க, மறுசிலர் ஜகரமாக ஒலிக்க, மிகப்பலர் சகரமாக ஒலிப்பர். இந்த ஒலிப்பு வேறுபாட்டால், தமிழ்ப் பலுக்கல் முறை முற்றிலும் அறவட்டானது (random) என்று சொல்லுவது சரியல்ல. இந்த மொழிக்கென ஒரு செந்தரப் பலுக்கல் (standard pronunciation) உண்டு. அதனோடு வட்டார வழக்குகளைக் குழம்பிக் கொள்ளக் கூடாது. தவிர எழுத்து வரிசை பற்றிப் பேச வந்தவர், ஒலிப்பு வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவது நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
--------------------------------------
Generally the confusion arises in case of the loan words from Sanskrit. Otherwise the letters follow a pretty much a consistent pattern.
All the consonants of the Tamil script have an inherent vowel in them.
-------------------------------------
மெய்யெழுத்துக்களுக்கள் உள்ளார்ந்த உயிர் உண்டு என்று சொல்லுவது மொழியறியாதோர் கூற்று. ஒருங்குறிக் குழப்பத்தின் ஊற்றுக்கண், ஆணிவேர், இங்கே தான் இருக்கிறது. தமிழ் மெய்யெழுத்துக்களுக்கு என உள்ளார்ந்த உயிர் சுத்தரவாகக் கிடையாது. அவை வெறும் மெய்கள்; உயிரில்லாத சவங்கள், மூச்சில்லாத உடல்கள். மெய்யெழுத்துக்களை ஒலிக்க முடியாது என்பதால் தான், முன்னால் உயிர் சேர்த்து, மூடிய அசையாகவோ (மூடசை - closed syllable - காட்டு "இக்"), பின்னால் உயிர் சேர்த்துத் திறந்த அசையாகவோ (திறவசை - open syllable - காட்டு "கி") நாம் பலுக்குகிறோம். இப்படி நாம் பலுக்குவது உயிர்-மெய்க் கூட்டுக்களாகத் தான் அமைகிறது. இந்த அடிப்படை புரியாமல் செயற்கைத் தனமாக ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு, எழுத்துக்களைக் கீற்றுக்களாய்க் (glyphs) குதறி ஏதோ ஒரு முட்டாள் தனமான தேற்றத்தில் (theory) ஒருங்குறிக் குறியேற்றம் படைத்திருக்கிறார்கள். கூடவே நிலைப்புப் பொள்ளிகை (stability policy) என்று சொல்லிக் கொள்கிறார்கள். பரமார்த்த குரு கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

கணிதத்தில் எந்த ஓர் ஒழுங்குள்ள கொத்திற்கும் (ordered set) அடிப்படைகள் (basis) என்று சிலவற்றைச் சொல்லுவார்கள். காட்டாகப் பதின்மக் கணக்கில் 0,1,2,3,4,5,6,7,8,9 எனப் பத்து இலக்கங்கள் அடிப்படை. மற்ற எண்கள் எல்லாம் அவற்றின் கூட்டல், பெருக்கல், எதிர்மறை என ஒரு சில இயக்கங்களினால் (operations)ஏற்படுபவை. பதின்மம் (decimal) தவிர்த்து எண்களை வெளிப்படுத்த இருமம் (binary), எண்மம் (octal). பதினறுமம் (hexadecimal) எனப் பலவகை அடிப்படைகள் இருக்கின்றன.

அதே போலத்தான் ஒரு மொழியிலும் அடிப்படைகள் இருக்கின்றன. தமிழுக்கு அடிப்படை 33 எழுத்துக்கள் என்று தொல் காப்பியர் வகுத்தார். இந்த அடிப்படைகளையும் 12 உயிர், 18 மெய், 3 சார்பெழுத்து என்று பிரித்தார். எந்த ஒரு உருபு அலசலையும் (morphological analysis) இந்த 33 -யை வைத்துத் தான் செய்ய முடியும்.

இந்த 33 -ற்கும் தனித்தனி உருவம் கொடுத்து அவற்றை வித விதமாக முகட்டி(permutation)ச் சொற்களை உண்டாக்கித் தமிழை எழுதலாம் தான். அதாவது உயிர்களையும் மெய்களையும் மட்டுமே வைத்து உயிர்மெய் இல்லாமல் தமிழை எழுதலாம் தான். (அப்படி எழுதுவது 7 1/2 கோடி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாய் இருக்கும்.) இருந்தாலும் புணர்ச்சி, வரலாறு, எழுது பொருள்கள், எழுதுமுறைகள் காரணமாய் உயிர்களும், மெய்களும் போக ஒரு புதிய கட்டுக்கூறு (category) எழுந்தது. அதைச் சரியானபடி புரிந்து கொள்ள வேண்டும்.

12 உயிரும் 18 மெய்யும் மல்கிப் பெருகும் புதுக்கக் கொத்தில் (product set) ஏற்படும் இணைகள் இரண்டுவகைப் படும். அவை தாம் மேலே கூறிய மூடசைகள் (closed syllables), மற்றும் திறவசைகள் (open syllables) ஆகும். எழுதும் போது, குறிப்பாக ஓலையில் எழுதும் போது, வேகம், எளிமை, சிக்கனம் கருதி திறவசைகளுக்குப் புது உருவம் கொடுக்க எழுந்ததே உயிர்மெய் எழுத்துக்கள். க்இ என்று எழுதுவதற்குப் பகரி(substitute)யாய் கி என்று எழுதினார்கள்.

புணர்ச்சி (க்+இ = கி) என்பது இப்படித் திறந்த அசைகள் உருவாவதைக் குறிக்கிறது. புணர்ச்சி புரியவில்லை என்றால் தமிழில் சரியான முறையில் பிழையில்லாமல் தேட (searching)முடியாது; பிழையில்லாமல் வரிசைப் படுத்த (sorting)முடியாது; உருபியல் அலசல் (morphological analysis) செய்ய முடியாது; எந்திர மொழிபெயர்ப்பு (machine translation) செய்யமுடியாது; ஒளியெழுத்து உணரியை (optical character recognition) வேலை செய்ய வைக்க முடியாது. வெறுமே தமிழெழுத்துக்களைக் கணித்திரை(monitor))யில் கொண்டுவந்து படம் காட்டிக் கொண்டு இருக்கலாம். (அதைச் செய்தவுடனேயே, "ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ ம்" என்று தமிழர்கள் குதிப்பது வேறு விதயம். :-))

ஒருங்குறி என்ற குறியேற்றத்தின் பெருத்த குறையே அது புணர்ச்சியை உள்ளார்ந்த (inherently) முறையில் மறுப்பது தான். கி என்னும் உயிர்மெய் பற்றி எந்த இலக்கண அலசலும் செய்தால் அதை க், இ என்ற இரண்டு பொருளுள்ள அடிப்படைகளை வைத்துச் செய்யவேண்டுமே ஒழிய, கி யை க் + ஢ என்று பிரித்து வைத்துக் கொண்டு அலசிப் பார்த்தால் ஒரு மண்ணும் கிடைக்காது. (You have to decompose கி as க்+இ and not as க + ஢). ஏனெனில் கொக்கி " ஢" என்பது இலக்கணத்தால் வரையறை செய்யப் படாத ஓர் உரு. (It is grammatically undefined.)

வெறுமே அகரம் சேர்ந்த மெய்களையும், கூடவே துணைக்கீற்றுக் கொத்தையும் (a set containing this auxilary glyphs - பேசுதற்கு எளிமை கருதி பின் வரும் பத்திகளில் கொக்கி, கால், கொம்பு போன்ற கீற்றுக்களைத் துணைக் கீற்றுக்கள் என்று அழைப்போம்.) பிணைத்து வைத்துக் கொண்டு உருவாகும் கொத்தை, திறந்த அசைக் கொத்திற்குச் (a set of syllables) சமனாகச் சொல்ல முடியாது. கொத்துத் தேற்றத்தில் (set theory) சொல்வதன்படி, புதுக்கக் கொத்துக்களை அவற்றின் அடிப்படைகளைக் கொண்டு பொதியுடைக்க(decompose) வேண்டுமே ஒழிய அறவட்டாகப் (arbitrarily) பொதியுடைக்கக் கூடாது. மீறிச் செய்தால், அடையாளப் புதிரிகளுக்குள் (identity problems) சிக்கிக் கொள்வோம். எந்தக் குறியேற்றம் இந்தப் புரிதலை உள்வாங்கிக் கொள்கிறதோ, அந்தக் குறியேற்றம் தான் தமிழ் மொழிக்கும், இந்திய மொழிகளுக்கும் சரியாக இருக்கும். அந்த வகையில் ஒருங்குறி என்ற குறியேற்றம், மாற்றம் இல்லாவிட்டால், உறுதியாகச் சிக்கலில் விழுந்தே தீரும்.
--------------------------------
It is generally the vowel /a/.
--------------------------------
மெய்களுக்குள் உள்ளார்ந்த அகரம் இருக்கிறது என்று சொல்லுவதற்கு எந்த இலக்கணமும் தமிழில் கிடையாது. இது போன்ற வாசகங்கள் கட்டுரையாளரைப் போன்றவரின் கற்பனையில் மட்டுமே எழுகின்றன. க ங ச ஞ என்று சொல்லும் போது அது ஒலிப்பு எளிமை கருதிச் சொல்லுவதே ஒழிய அவை மெய்யெழுத்து ஒலிப்புகள் அல்ல, உயிர்மெய் எழுத்து ஒலிப்புகளே என்று எல்லாத் தமிழ்ப் பள்ளி மாணவருக்கும் தெரியும். அதைப் புரிய வைக்காத தமிழாசிரியர் கிடையவே கிடையாது.
-------------------------------
Extra strokes are used as diactrics around a letter to vary the sound of the vowel in the letter.
--------------------------------
இது அடுத்த மிகப் பெரிய புரிதற் பிழை. மொழியின் அடிப்படை ஒலிகள்; அந்த ஒலிகளைக் குறிக்கும் வரைகள் அல்லது கீற்றுகள் அல்ல. எழுத்து என்பது ஒலியைக் கண்முன்னே கொண்டு வருவதற்கான படம். அந்தப் படம் ஒன்றிற்கு மேற்பட்ட வரைகளை அல்லது கீற்றுக்களைக் கொண்டிருக்கலாம். கணிக்குள் கொண்டு போகும் போது, எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு போக வேண்டுமே ஒழிய கீற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு அல்ல.
--------------------------------
There are instances when the consonant sound may occur without the need of a vowel. In such cases a dot, called virama, is placed above the letter. This practice is extended to situations where there might be a need for consonant clusters, that is, when two consonants may need to be combined to produce a required sound.
--------------------------------
புள்ளி இல்லாமல் தமிழி எழுத்து இருந்த காலம் ஒன்று உண்டு (>300 B.C). ஏன் புள்ளி எழுந்தது என்பதில் ஒரு பெரும் கதையே உண்டு. அது கல்வெட்டாளர்கள் பலருக்கும் தெரியும். அதைச் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும். அதை இங்கு சொன்னால் கட்டுரை நீளும். மெய்க் கூட்டுக்களை (consonantal conjuncts) உணருவதற்காக புள்ளியிட்டார்கள் என்பதும் நகரி வழி, தமிழியை அடையும் மிகத் தவறான முறை.
--------------------------------
In the Tamil script, each consonant of a cluster is depicted by its corresponding letter accompanied by the virama sign.
--------------------------------
இங்கே இப்படிச் சொல்லிவிட்டு சற்றுமேலே எப்படி மெய்யெழுத்துக்களுக்குள் உள்ளார்ந்த அகரம் இருப்பதாக முரணாய்ச் சொல்ல முடிகிறது? ஒரே கட்டுரையில் முன்னுக்குப் பின் முரணா?
--------------------------------
The other South Indian languages follow a completely different methodology to depict the clusters. Consonants of the cluster are joined together to form a single character, which more often than not has no resemblance to the actual letters.
---------------------------------
மற்ற தென்னிந்திய மொழிகள் கிரந்தம் பயின்றன. எனவே மெய்க்கூட்டுக்கள் ஏற்பட்டன. அவை புள்ளி பழக வில்லை.
---------------------------------
The special character Akh is called the 'Aayutha Ezutthu, which literally translates into "the weapon letter".
--------------------------------
இது அடுத்த தவறு. ஆய்தம் என்பது ஆயுதம் அல்ல. இந்த எழுத்தை ஆயுதம் என்று சொல்லுவது பரவலான புரிதல் பிழை. ஆய்தல் என்பது நுணுகுதல் என்றே பொருள்படும். ஆய்தம் என்ற சார்பு எழுத்து குறிப்பிட்ட வல்லின எழுத்துக்களுக்கு முன்னே வரும். அப்படி வரும் பொழுது அந்த வல்லினம் நுணுகும்; மெலியும். அவ்வளவுதான். ஃ என்பது தனித்து நிற்பதில்லை. அது வல்லினம் சார்ந்தே நிற்கும். எஃகு என்னும் போது கடைசியில் வரும் குகரம் ஃ - இன் இருப்பால் நுணுகி ஒலிக்கும். இதே போல குற்றியலுகரமும், குற்றியலிகரமும் வல்லின மெய்களைச் சார்ந்தே நிற்கும்; கூடவே அந்த வல்லின மெய்களை நுணுகி ஒலிக்க வைக்கும்.
-------------------------------
It is depicted by three dots written in a pattern to resemble the vertices of a small triangle. The name might have been given owing to the resemblance of the letter to the three dots found on the shields of the warriors of the medieval times. Though rarely used on its own, the letter elicits a sound entirely different from akh, when used along with a consonant.
------------------------------
மேலே சொல்லியிருக்கும் வாசகம் ஃ என்பது எல்லா உயிர்மெய் எழுத்துக்கும் முன்னால் வரும் என்பது போல் சொல்லுகிறார். அது தவறு. சில குறிப்பிட்ட வல்லின எழுத்துக்களுக்கு முன்னே மட்டும் தான் ஃவரும்.
------------------------------
The functionality of this letter can be considered to be purely grammatical when it is made use of as a vowel.
------------------------------
இந்த எழுத்தின் வங்குமை (functionality) இலக்கணம் சார்ந்தது அல்ல. ஒலிப்பு சார்ந்ததே. அது யாப்பில் சில இடங்களில் மெய்யைப் போன்றும், சில இடங்களில் உயிரைப் போன்றும் தோற்றம் அளிக்கும். அதனால் தான், அதை மெய்யிலும் சேர்க்காமல், உயிரிலும் சேர்க்காமல், தனித்து வைத்திருக்கிறார்கள். ஆய்தம் பற்றிக் கட்டுரை ஆசிரியர் இன்னும் படிக்க வேண்டும்.
-------------------------------
Tolkappiyam, the book about grammar, kind of suggests that this character is used to produce the effect of a "Glottal Stop" (the sound produced when the vocal cords are pressed together). This might be the reason for the letter being called 'Saarbezhuthu' or a dependent letter in the book. Though this letter was widely used in the early literary works, one can hardly spot them in the modern day literature.
--------------------------------
சார்பெழுத்து பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். ஆசிரியரின் புரிதல் முழுமையில்லாமல் இருக்கிறது. அவர் குற்றியலுகரம், குற்றியலிகரம் பற்றி அறிய மாட்டார் எனத் தோன்றுகிறது.
------------------------------
Conclusion
The script may seem to be very complex and one might find it difficult to learn.
--------------------------------
சுற்றி வளைத்து ஏதேதோ சொல்லி தமிழ் எழுத்து மிகவும் பலக்கியது (complex) என்று சொல்லிவிட்டார். இல்லை என்று நாம் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ளவா போகிறார்? :-)
--------------------------------
But to experience and enjoy the true essence of the epics such as 'Ponniyin Selvan' and other praiseworthy works, it is a necessity to be comfortable with the language and its script. And once you are familiar with the script, you might actually appreciate the complexities of the language that render it unique.
--------------------------------
இந்த எழுத்து இந்திய மொழிகளுக்குள் எளிமையாக இருப்பதால் தான் இந்த அளவுக்கு தமிழ்க் கணிமை கூடியிருக்கிறது. இதை ஆசிரியர் தன் கட்டுரையில் புரிய வைக்கவில்லை.
--------------------------------

13 comments:

வசந்தன்(Vasanthan) said...

கட்டுரையின் முதன்மைக் கருத்துக்குச் சம்பந்தமில்லாதவை.

//தற்பவம் என்பது தமிழியை மட்டுமே வைத்து பிறமொழிச் சொற்களை தன் வயப் படுத்தி எழுதுவது. பவத்தல் = வயத்தல், சார்தல். பவத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த பாவித்தல் என்ற ஈழத்தார் சொல்லை அறிக.) //



அப்ப "பாவித்தல்" எண்டு பாவிக்கிறது சரிதானோ?
இது வடமொழி என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததோடு, அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளேன்.
இன்றுவரை இச்சொல்லைத் தவிர்த்தெழுத முயற்சித்தாலும் என்னால் முடியவில்லை.
********************************

"ஊடுறுவியதால்" என்று ஓரிடத்தில் பாவித்திருக்கிறீர்கள். இது சரியா? "ஊடுருவல்" தானே சரி? அல்லது இரண்டுமே சரியா?

அண்மையில் ஒருவர் கரிசனை என்ற பொருளில் வரும் சொல்லை "அக்கரை" என்று பாவித்திருந்தார். அது எழுத்துப்பிழை என்று நினைத்திருந்தால் அடுத்தடுத்து அப்படியே எழுதப்படுகிறது. எனக்குக் குழப்பமாகி அகராதி பார்க்க வேண்டியதாகிவிட்டது. இப்படியே 'பொருமை', 'பொருப்பு' எனச் சில சொற்களுள்ளன.

தகடூர் கோபி(Gopi) said...

//The script may seem to be very complex and one might find it difficult to learn. //

ஆடத் தெரியாத நடனமாது மேடை கோணல் என்றாளாம்.

இவர்களையெல்லம் தமிழை விட கற்க கடினமான மொழிகளை படிக்க அனுப்பவேண்டும். (காட்டாக ஸ்த்ரீ என்பதை எழுத ஒரே ஒரு கூட்டெழுத்தைப் பயன்படுத்தும் தென்னிந்திய மொழிகள்)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அருமையான பதில்கள். ஒருங்குறி பற்றி வலுவான சார்பெதுவுமின்றி இருந்தேன். உங்கள் வாதங்கள் பல காலமாகவே அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. கீற்றுக்களை அல்லாமல் எழுத்துக்களையே குறிக்க வேண்டும் என்கிற உங்கள் வாதங்களின் பால் இப்போதெல்லாம் சார்பு கொண்டிருக்கிறேன். அடிப்படையில் ஒருங்குறியின் குறிக்கோளும் அது தான் என்பதாகப் படித்த நினைவு இருக்கிறது. இருந்தாலும் இந்த 'இசுக்கி' வந்து ஏற்படுத்திய குழப்பம் தான் இது என்று புரிகிறது. ஆனால் இது குறித்து அதிகமாக ஆய்ந்ததில்லை என்பதால் என்ன செய்வது என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வரும் நாட்களில் இன்னும் கொஞ்சம் இதுபற்றிப் பார்க்க முயல்கிறேன்.

இக்கட்டுரையினூடாகவும் பல நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டு சேர்த்துக் கொள்கிறேன்.

ஒரே ஒரு சிறு பிழையையும் சுட்டிவிடுகிறேன். ஒற்று விட்டுப் போயிருக்கிறது - "நம்முடைய கண்டுபிடிப்பை தமிழராகிய நாமே"

Anonymous said...

கட்டுரைப் பொருளுக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத ஒரு விடயத்தை இங்கே பதிவதற்கு மன்னிக்கவும். கட்டுரையில் ஓரிடத்தில் Standard என்பதற்கு செந்தரம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன். இது செம்மை + தரம் எனப் பிரிக்கப்படலாம் என எண்ணுகிறேன். இந்தத் தரம் என்ற சொல் Quality என்ற பொருளில் பரவலான பயன்பாட்டில் உள்ளது. தரம் என்பது ஆங்கிலத்திலுள்ள grade என்னும் பொருளைத்தான் தருவதாக எனக்குப் படுகிறது. தற்காலப் பயன்பாட்டில் ஆங்கிலத்தில் Quality, grade என்ற இரு சொற்களையும் வேறுவேறு பொருள்தரப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் அகரமுதலிகளில் Quality என்பதற்குப் பண்பு என்ற சொல்லைத்தான் கொடுத்திருக்கிறார்கள். அப்படியாயின், Quality, grade என்னும் இரு பொருளும் விளங்கத் தமிழிலும் எழுதுவது எப்படி? Quality Control, Quality Assurance, Quality Management போன்ற கருத்துருக்களை எவ்வாறு குறித்துக்காட்டுவது?

சாணக்கியன் said...

மிக அருமையானதொரு கட்டுரை. மிகவும் பயனுள்ள வரலாற்று செய்திகளையும் தமிழ் மொழி மற்றும் தமிழி எழுத்து பற்றியும் கூறும் பாதுகாக்கப்ட வேண்டிய கட்டுட்டுரை.

சரி மைக்ரோ சாஃப்டிற்கு உங்கள் வாதத்தை எடுத்துரைத்தீர்களா?

சாணக்கியன் said...

மிக அருமையானதொரு கட்டுரை. மிகவும் பயனுள்ள வரலாற்று செய்திகளையும் தமிழ் மொழி மற்றும் தமிழி எழுத்து பற்றியும் கூறும் பாதுகாக்கப்ட வேண்டிய கட்டுட்டுரை.

சரி மைக்ரோ சாஃப்டிற்கு உங்கள் வாதத்தை எடுத்துரைத்தீர்களா?

சாணக்கியன் said...

பல புதிய சொற்களுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருப்பினும் நடைமுறையில் உள்ள வார்த்தைகளுக்கு புதிய கடினமான வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, logic என்ற ஆங்கில சொல்லிற்கு 'தர்கம்' அல்லது 'தருக்கம்' ஆகிய சொற்கள் பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. இவற்றைத் தவிர்த்து ஓர் புதிய சொல்லை பயன்படுத்தியிருப்பதற்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதுமுண்டோ?

மேலும் comment என்ற சொல்லுக்கு பயன்படுத்தியிருக்கும் 'முன்னிகை' போன்ற சொற்கள் ஆசிரியரால் உருவாக்கப் பட்டவையோ என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறாக இல்லாத நிலையில் இச்சொற்களின் மூலங்களை அடையாளம் காட்டினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

இராம.கி said...

அன்பிற்குரிய வசந்தன்,

பாவித்தல் பற்றிச் சரியான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இதற்கு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கிறேன். பாருங்கள். ஊடுருவல் என்பதே சரி. நான் எழுதிய ஊடுறுவல் என்பது தட்டச்சுப் பிழை. என்னுடைய பதிவுகளில் சிலபொழுது இது போன்ற தட்டச்சுப் பிழைகள், அனுப்புப் பொத்தானை அழுத்துவதற்கு முன், ஒருமுறை மீண்டும் ஆழப் படிக்காமல், சட்டென்று பதிவதால் ஏற்பட்டு விடுகின்றன. வருந்துகிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

அக்கறை சரி; அக்கரை என்பது பிழை. இதே போலப் பொறுமையும் பொறுப்புமே சரி.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கோபி,

தங்கள் வருகைக்கு நன்றி. கூட்டெழுத்து என்ற உத்தி தமிழி எழுத்தில் பயிலாத காரணமும், தமிழி பெருமிக்கு முன்னால் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு அணை சேர்க்கிறது. பெருமியில் இருந்து தமிழி பிறந்திருக்குமானால் கூட்டெழுத்தையும் சேர்த்துக் கடன் வாங்கியிருக்கலாமே? ஏன் புள்ளியைத் தனியே கண்டுபிடிக்க வேண்டும்? எப்படி ஓர்ந்து பார்த்தாலும், நாவலந்தீவில் எழுத்து என்பது தெற்கிட்டுப் பிறந்தது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

தங்கள் முன்னிகைக்கு நன்றி. ஒருங்குறி பற்றிய கருத்துக்களைக் கிட்டத்தட்ட 4,5 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். அதே பொழுது நான் சொவ்வறை (software) யாளன் அல்லன். பலரும் அய்யப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஒரு பக்கம் அளவுக்கு தமிழில் ஒருங்குறியில் word ஆவணம் ஒன்றை உருவாக்கச் சொல்லுங்கள். அதில் வெறுமே search and replace என்ற tracking -யைச் செய்யச் சொல்லுங்கள். அதன் பின் அது குறியேற்றச் சிக்கலா, மைக்ரோசாவ்ட்டின் சிக்கலா என்று அறியலாம். search and replace செய்வதற்கு தமிழ் இலக்கணம் தேவையில்லை. அதைத் தமிழுக்கென்று விதப்பு வேலைகள் செய்யாத மைக்ரொசாவ்ட் நிரலியை வைத்தே நடத்திக் காட்ட வேண்டும். ஓவ்வொரு மொழிக்கும் ஒரு office suite நிரலி எழுத வேண்டுமென்றால் அப்புறம் 65536 பொந்துகள் கொண்ட UTF -8 க்கு பொருளில்லை. கூடியமட்டும் இலக்கணம் வேண்டாத வேலைகளை எல்லாம் அது எந்த மொழியாய் இருந்தாலும் ஒரு office suite நிரலி செய்ய வேண்டும். இன்றைக்கு இருக்கும் தமிழ் ஒருங்குறிக் கொத்து ஒரு முழுமையடையாத கொத்து (incomplete set). அது முழுமையடையாது இருக்கும் வரை நான் கூறிய சிக்கல்கள் இருக்கும். இதற்கு நடுவில் நிலைப்புப் பொள்ளிகை (stability policy) என்ற ஒன்றைக் காரணம் காட்டி எல்லாவற்றையும் unicode consortium மறுத்துக் கொண்டே இருக்கிறது. இதைப் பற்றித் தனியே இன்னொருமுறை எழுதுகிறேன்.

நன்றாக ஆழ ஓர்ந்து பாருங்கள். ஒருங்குறி பற்றிய ஆவணங்களை எல்லாம் படியுங்கள். பின்னால் நீங்களே ஒரு சரியான முடிவிற்கு வருவீர்கள்.

ஒற்றுப் பிழை என் பதிவுகளில் அங்குமிங்கும் கிடக்கத்தான் செய்கிறது. கூடியமட்டும் முயற்சி செய்கிறேன்; ஓரோவழி தவறிப் போகிறது. பிழைக்கு வருந்துகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

ஞானவெட்டியான் said...

"கரிசனம்" என்ற சொல் பயன்பாடு தவறா?
அப்படி ஒரு சொல் இல்லையா?

இளங்குமரன் said...

அன்புடன் இராம.கி அவர்களுக்கு வணக்கம். அருமையான ஆய்வுக் கட்டுரை. விளக்கமாக விளக்கியுள்ளீர்கள்.

வாழ்த்துகள்.

http://aaivuthamizh.blogspot.com/

Anonymous said...

தமிழி பற்றிய உங்களது ஆக்கம் நன்றாக உள்ளது! பாராட்டுக்கள்!

///தமிழுக்கு அடிப்படை 33 எழுத்துக்கள் என்று தொல் காப்பியர் வகுத்தார். இந்த அடிப்படைகளையும் 12 உயிர், 18 மெய், 3 சார்பெழுத்து என்று பிரித்தார். எந்த ஒரு உருபு அலசலையும் (morphological analysis) இந்த 33 -யை வைத்துத் தான் செய்ய முடியும். ///
தமிழின் அடிப்படை எழுத்து 33? 12 உயிர் அறிவேன், 18 மெய் அறிவேன்,ஆய்த எழுத்தும் தெரியும், ஏனையவை யாவை?

தோசம் என்பது தனியே மகிழ்ச்சியைக் குறிக்காது. நான் கேட்டறிந்தபடி, சந்து + தோயம் = சந்தோயம், பின்னர் மருவி சந்தோசம் என்று வந்ததாம்.

///இந்த அடிப்படை இருப்பதால் தான் கணியில் தமிழை முதல் அடுக்கு (Level 1) முறையிலேயே உள்நுழைக்கலாம் என்றும், இரண்டாம் அடுக்கு (Level 2) முறை தேவையில்லை என்றும் சொல்லுகிறோம்.//// கணியில் உள்ள முதலாம் அடுக்கு, இரண்டாம் அடுக்கு என்று எதனைக் கூறுகிறீர்கள்? தமிழை எவ்வாறு அந்த முதலாம் அடுக்கில் இடலாம்?