Thursday, August 12, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 1

ஒரு முறை ctamil மடற்குழுவில் புறநானூற்று 2 ஆம் பாடலை முன்னுறுத்தி, அதில் வடபுலக் கருத்துக்கள் மிகுத்திருப்பதாகவும், அக்கருத்துக்களைத் தமிழர் பெரிதாய்க் கருதிப் பின்பற்றியதாகவும், தமிழருக்குச் சொந்தமான பண்பாட்டுத் துலக்கம் என்பது கிடையாது போலவும், எல்லாமே pan-Indian culture with regional variations என ஒரு சாராரும், ”அப்படியில்லை, ஒன்றிற்கொன்று வளமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட இருவேறு தனிப் பண்பாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தன; இரண்டுஞ் சேர்ந்ததே இந்தியப் பண்பாடு” என இன்னொரு சாராரும் த்ததம் கருதுகோள்களின் அடிப்படையில் உரையாடல்களை எழுப்பிக் கொண்டார். [நான் உரையாடல்களை அப்படியே சொல்லுக்குச் சொல்  இங்கு எடுக்கவில்லை.] இதுபோல் உரையாடல்கள் காலகாலமாய் நடப்பவை தான்.

பல வெளிநாட்டுத் தமிழறிஞர் இன்னும் ”துபாஷிகள்/பண்டிதர்” சொன்னதை வேத வாக்காய் எடுத்துக்கொண்டு, “வடக்கு மேடு, தெற்கு பள்ளம். மேட்டில் இருந்து பள்ளத்திற்கு நீரோட்டம்” என்ற பார்வையை எத்தனை நாட்களுக்குக் கொண்டிருப்பாரோ? - தெரியாது. Tamil culture and practices are derived from the north எனும் புரிதலையும் என்று மாற்றிக் கொள்வாரோ? - தெரியவில்லை. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை , இந்திய நடுவண் அரசினர் வேறு கொடுத்துத் தொலைத்து விட்டார் :-) அதைக்கண்டும் பலருக்குப் பற்றி எரிகிறது. வேறொன்றுமில்லை.  It is an un-deserved recognition என்ற முணுமுணுப்பும், ”அரசியற் செல்வாக்கால் அடைந்துவிட்டார்” என்ற பொருமலும் ஆங்காங்கே எழுகிறது.

“அடிப்படையில் வடமொழியும் தென்மொழியும் ஒன்றிற்கொன்று நெடுங் காலம் உறவாடியவையே. இங்கிருந்து அங்கு சில கூறுகளும், அங்கிருந்து இங்கு சில கூறுகளும் ஊடுறுவது இயற்கை தான்” என்ற பார்வையை நடுநெறியாளர் ஒரு நாளும் மறைத்ததில்லை. மறந்ததுமில்லை. இப்படி ஒரு பக்கச் சார்பாகவே பார்க்கும் பார்வை, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டு வரை மாறாதிருப்பதை எம் போன்றோர் மறுத்துச் சொல்லி வந்தோமே ஒழிய, எல்லாமே தமிழென எக்காளம் இட்டதில்லை. ஆனாலும் எம் கருத்தைத் தனித்தமிழ்த் தீவிரவாதிகள் (pure Tamil extremists), பொதுக்கை வாதிகள் (fascists) என்று சாயம்பூசுவது தொடர்ந்து நடந்துவந்தது. [இப்படிச் சாயம் பூசுவதே வழக்கமாகிப் போன ஒரு மடற்குழுவில் இருந்தே நான் அகன்றிருக்கிறேன்.] மாற்றுக் கருத்தாய் எதை வைத்தாலும் அதை ஒதுக்கித் தள்ளி மேலைத் தமிழறிஞரை ஒருபாற் கோடவைப்பது தொடர்ந்து நடக்கிறது. ”வடக்கே! இதோ என் சாஷ்டாங்க சரணம், நமஸ்காரம்” என்றபடி பலரும் தாசானு தாசராய் ஆகிப் போனது இன்று நேற்று நடப்பதல்ல.

[யாரோ ஒருவர் அழகாய்ச் சொன்னார்: காசுமீரத்தில் நாலு பேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு இந்தியர் இறந்தார்” என்று வரும். இராமேசுரக் கடலில் நாலு பேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு தமிழ் மீனவர் இறந்தார்” என்றுவரும், ஏதோ தமிழர் இந்தியர் இல்லாதது போற் சொல்லப் படும். இம்மனப்பான்மை இன்று நேற்று ஏற்பட்டதில்லை. இல்லையெனில் 500க்கும் மேற்பட்ட மீனவர் சுடப்பட்டதற்குப் பொங்காத இந்தியர் மும்பை 2611 என்றால் மட்டும் குதிப்பது ஏன்?]

அரசியலை ஒதுக்கிவைத்து சங்க இலக்கியம் வருவோம்.

கால காலமாக தமிழக வரலாற்றைக் கீழிறக்கித் தள்ளுவதே வேலையாக ஒரு சாரார் இங்கு இருந்திருக்கிறார். அவருக்கு வேதத்தைத் தூக்கி வைக்கும் பணி உள்ளபோது, ”எல்லாமே சங்கதம்” என முழக்கம் செய்யவேண்டிய நிலை இருக்கும் போது, தெற்கே ஒரு பண்பாடு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுப் பழமையானது என்று சொல்ல எப்படி மனம் வரும்? அதன் காரணமாய் வையாபுரியாரைத் துணைக்கொண்டு சங்க இலக்கியத்தின் காலத்தை தவறாகப் பொருத்துவது இன்றுவரை மாறவேயில்லை;

[வையாபுரியாரின் தற்சார்புக் கருத்துக்களை மறுத்து இவர் எவருமே கேள்வி எழுப்பியதில்லை. வையாபுரியார் முடிவுகளை கமில் சுவலபிலும் மறுத்தது இல்லை. இன்று கமில் சுவலபில்லின் முன்னெடுப்புகளை மற்ற மேலைத் தமிழறிஞரும் மறுப்பதில்லை. ஹெர்மன் டீக்கன் மட்டும் சிலருக்கு இப்போது எதிராளியாகத் தெரிகிறார்.] சங்ககால வாழ்க்கை முறையை Burton Stein வரையறுத்த Segementary State ஆகவே பார்ப்பதும்  மாற வில்லை. [Burton stein கருத்தை நொபுரு கராசிமா மட்டும் வன்மையாக மறுத்தார்; ஆனால் அவர் தன் ஆய்வுக்குட்பட்ட பெருஞ்சோழர் காலத்தோடு இயல்பாய் நிறுத்திக் கொள்வார். நானறியச் சங்ககால மூவேந்தர் அரசுகள் எப்படிப்பட்டவை, அவற்றின் அரசியற் பொருளாதாரம் என்ன? - என ஆய்ந்து பார்க்க யாரும் முன்வந்ததில்லை.]

தமிழ்நாட்டு ஆய்வாளரோ, இதன் ஆழங்காண மறுத்து ”வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள், சங்கரதாசு சுவாமிகளின் நாடகத்திறம், புதுக் கவிதையும் லிமெரிக்கும்” என விளிம்புநிலை ஆய்வுகளிலே கவனஞ் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஆய்வுப்பட்டத் தலைப்புகளைக் கேட்டால் கண்ணீர் வடிக்கவே தோன்றும். ஏதோ 200 ஆய்வுநூற் பக்கங்களை நிறைத்துவிட்டாற் போதும் என்றாற்போல் எத்தனை நாட்கள் சவலைப் பிள்ளையாய், மூளியாய், மூடமாய்த் தமிழாய்வுகள் தமிழ்நாட்டில் நடக்குமோ தெரியவில்லை. இத்தனைக்கும் புதிய தரவுகள் தொல்லியல்வழி வருகின்றன. கல்வெட்டியல் மூலம் எழுகின்றன. நாணயவியல் புது வரலாறு படைக்கிறது. ஆனாலும் தமிழக வரலாற்றைச் சங்க இலக்கியத்தை புத்தொளி கொண்டு மீள் ஆய்வு செய்ய தமிழியலில் யாருமே அணியமாயில்லை. இல்லையெனில் அச்சு அடித்தாற் போல் ”சிலப்பதிகாரம் கி.பி.2 ஆம் நூற்றாண்டின் பின் எழுந்தது” என்று கீறல் விழுந்த இசைத்தட்டுப் போலத் தமிழறிஞரில் 99.9% பேர் இன்னியம் பாடிக் கொண்டு இருப்பாரா?

ஏன் சங்க இலக்கியத்தில் மீளாய்வே நடப்பதில்லை?- என எனக்கும் புரிவதில்லை. இத்தனைக்கும் சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேலான பாடல்கள் பாலைத்திணையில் உள்ளன. அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடல் தலைவர் வடக்கே போனதாய்ச் செய்திகள் வரும். அப்படி வடபுலத்தில் எங்கே தான் வணிகம் செய்யப் போனார்? வடுகர் யார்? தமிழரின் பொருளியல் எதன் அடிப்படையில் இயங்கியது? இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாரமாய் இயங்கியதா? [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே? மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே? இவையெலாம் எங்கே செலாவணியாகின? வடக்கிருந்த மகதத்திற்கும் தமிழகத்திற்கும் இடையாட்டம் கொஞ்சங் கூட இல்லாது போனதா? மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா? வம்ப மோரியர் எனில் மோரியருக்கும் முந்தியவராய் சங்க காலத் தமிழர் இருந்திருக்க வேண்டுமே? அப்படியெனில் சங்க இலக்கியக் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி? ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை நாமே எண்ணிக் கொள்கிறோம்? வடபுலத்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறாரே ஏன்? Are we so worthless? Was every thing here a derived one? Don't we see a conspiracy in it?

மகதப் பேரரசு அளவிற்கு இல்லாவிடினும் அதற்கெதிராய்ச் சூளுரைத்து, தம் பொருளியலையும் அரசியலையும் தனித்து நிலைநாட்டி 3 பயிர்த்தொழில் அரசுகள் (feudatory states) இங்கிருந்தன என்பதையும், கூடவே வேடுவச் சேகர (hunter-gatherer) குமுகாயக்கூறுகளும் இருந்ததையும், அப் பின்புலத்திற் பார்த்தால் தான் சங்க இலக்கியமும் பழந்தமிழ் வரலாறும் புரிபடும் என்று  இந்த வறட்டுவாதிகளுக்குச் (dogmatists) யார் சொல்வது? சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்துணர்வது எப்போது? ”மகத அரசுகள் எப்போதும் தமிழக அரசுகளுக்கு பகையாய், அதேபோது போட்டியரசுகளாய் இருந்தன” என்ற வரலாற்று உண்மையை யார் உணர்த்துவது?

இப்படிக் கேள்விமேற் கேள்விகள் நமக்குள் அடுத்தடுத்து எழுகின்றன. விடை காண்பதற்குத் தான் ஆட்களைக் காணோம். வையாபுரியார் சொன்னது இன்று வரை மேலைத்தமிழறிஞரிடம் அப்படியே அடிபிறழாமல் உள்ளது. நம்முடைய  மாற்றுக் கருத்துக்கள் பொதுக்கையாகவே (fascist) புரிந்துகொள்ளப் படுகின்றன. நாம் என்ன சொல்ல முடியும்? Am I a fascist?

இதற்கிடையில் காவிரியில் எத்தனையோ ஆடிப்பெருக்கும், அமையுவாவும் (அமாவாசையும்) வந்தாயிற்று.

நானறிந்த வகையில் புறநானூற்று 2 ஆம் பாடலுக்கு என் விளக்கத்தை அடுத்த பகுதியிற் தருகிறேன். இதை ஏற்பதும் ஏற்காததும் படிப்போர் உகப்பு.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Unknown said...

Dear Sir, I am Ganesh. I read your post about Pura naanooru 2m paattu. It was so very informative. I also want to support your views and the questions raised by you. Would like to get in touch with you Sir. My mail id is venshagan@gmail.com. I write poems in www.vallamai.com under the name "Bhuvan Ganesh". I would like to discuss a lot more with you. I am interested in literature and as well as ancient history. Origination of religions is also one of my interest areas. I will be glad if I receive a mail from you.

Thank you.

With Warm Regards,
Ganesh