Tuesday, June 02, 2009

புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்கு

அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக் கருத்து எழுந்தது. இது போன்ற வாசகங்களை எங்கிருந்தோ பரப்புரை ஆவணங்களில் இருந்து தேடிப் பிடிக்கிறார்கள் போலும்.

இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As freedom fighters and belonging to an army, they had certain practices, which we may like or dislike.

சீக்கியர் இனத்தில் குரு கோவிந்த் சிங் , ”கல்சா” என்ற இயக்கத்தைத் (அந்தக் காலத்தில், அது ஒரு அரண - military - இயக்கம் தான்.) தொடங்கி, அதன் எல்லா உறுப்பினரும் 5 அடையாளங்களை எப்பொழுதும் வெளிக்காட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறையை ஏற்படுத்தினார். நீட்ட சடைமுடி(kesh - long hair), சீப்பு (kangha - comb), பிச்சுவாள் (kirpan - dagger), இரும்புக் காப்பு (kara - steel bracelet), குறுங்காற் சட்டை (kaccha - a pair of knicker-bockers) என்ற இந்த அடையாளங்கள் இயக்கத்திற்கு ஒற்றுமையையும், உடன் பிறந்தோர் போன்ற உணர்வையும், ஒக்குமையையும் தந்ததாகவே எல்லோரும் கொண்டார்கள். இந்த அடையாளங்கள் தாங்கள் ஒரு குழு என்ற ஆழ் உணர்வையும் வளர்த்தன. பிச்சுவாள்க் கத்தியை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருப்பதை யாரும் தவறாக இன்றுவரை நினைக்கவில்லை. அது ஒரு வீர உணர்வின் வெளிப்பாட்டாகவே கருதப் பட்டது.

அது போல வெவ்வேறு குழுக்களிடம் வெவ்வேறு அடையாளங்கள் இருந்ததாய் வரலாறு சொல்லுகிறது. இவை சரியா, தப்பா என்று விழுமிய நயப்புகளுக்குள் (value judgements) நான் போகவில்லை. இந்த அடையாளங்கள் இருந்தன என்று மட்டுமே சொல்லுகிறேன்.

காபாலிகர்கள் என்ற வீரசிவ நெறியாளர்கள் இருந்தார்கள். அப்பர் இந்த நெறியை ஒட்டியே இருந்தார் என்பது வரலாறு. [இவர்கள் சுடுகாட்டுச் சாம்பலைத் தான் நெற்றியில் பூசிக் கொள்ளுவார்கள். இவர்களுக்கு இருக்கும் சில விந்தையான பழக்கங்களை இன்று சொன்னால் நமக்குக் கேட்பதற்கு வியப்பாய் இருக்கும்.] காளாமுகர்கள் என்று இன்னொரு வகை சிவ நெறியாளர் இருந்தார்கள். ஞான சம்பந்தர் இந்த வழிக்கு நெருக்கமானவர் என்பதும் ஆய்வு வழி அறியப் பட்டிருக்கிறது. இவர்களுக்கும் விந்தையான நடைமுறைகள், அடையாளங்கள் உண்டு. பல சிவன் கோயில்கள் மயானங்களில் எழுப்பப் பட்டிருக்கின்றன. மற்ற சிவ நெறியாளர்களும் பல்வேறு அடையாளங்களை அணிந்திருந்தார்கள். இதுபோல விண்ணவ நெறியாளர்களிடத்தும் அடையாளங்கள் உண்டு. குழு அடையாளங்களை வைத்து, ஒருவரை “நல்லவர். கெட்டவர்” என்று சொல்லுவது எப்படி?

தென்பாண்டி நாட்டில், முக்குலத்தோரிடையே, வீட்டுக்கு ஒரு வீச்சரிவாள் இருக்கும். முன்னோர் நினைவு நாட்களில் படையலின் போது விளக்கணி செய்யப் பட்டு அது நடுநாயகமாய் இருந்து ஆட்சிசெய்யும். எங்கள் ஊர்ப்பக்கம் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லாச் சாதியினரிடமும் ”கிலிக்கி” என்ற கூர்மையான குத்துக் கம்பி [இரும்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற மாழைகளில் அவரவர் செல்வ நிலைக்கு ஏற்ப வெவ்வேறு மணிகளால் அழகு செய்யப்பட்டுக் கவின்பட இருக்கும்] ஒன்பான் இரவு [நவராத்திரி நாள்] முடிந்து பத்தாம் நாளில் “வெற்றித் திருநாள் [விசய தசமி]” கொண்டாடி ஊரின் நடுவில் இருக்கும் வாழையைப் போய் குத்தி வருவார்கள். இன்றைக்கு வாழை, அன்றைக்கு அது ஒரு விலங்கு, குறிப்பாக எருமை. இன்னும் சொல்லலாம், பல சிவன் கோயில்கள், அம்மன் கோயில்கள், ஐயனார் கோயில்கள், மாலவன் கோயில்களில் கிடாவெட்டு நடந்திருக்கிறது. இன்றைக்கு அதை நிறுத்தி நாமெல்லோரும் பூசனிக்காயை உடைக்கிறோம்.]

ஆயுதம் இல்லாத வீடு, பாண்டிநாட்டில், ஏன் தமிழ்நாட்டில், கிடையாது. [நான் ஆயுதத்தைப் போற்றுகிறேன் என்று எண்ணாதீர்கள். அதன் பின்புலத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன்.] அதற்காகத் தமிழர் எல்லோரும் தீவிரவாதியும் அல்லர்.

சையனைடு குப்பி என்பது ஓர் அடையாளம். அத்தோடு அதை விடுங்கள்.

சிறுவர் புலிகள் இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் மெய்யும் இருக்கிறது, பொய்யும் இருக்கிறது. புலிகளே முன்னால் இந்த நடைமுறை பற்றி பல தன்னிலை விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தத் தவறுகள் அலசப் படத்தான் வேண்டும். [ஆனால் எதிராளியின் அரணமும் இதே குற்றத்தை கிட்டத்தட்ட இதே அளவிற்குப் புரிந்திருக்கிறது. இப்பொழுது புலிகளின் குற்றத்தை விரைந்து பேசும் யாரும் அதைக் கண்டு கொள்ளவே காணோம். வெற்றி பெற்றவன் செய்ததெல்லாம் சரி போலும்.]

”இனி வெடி குண்டுகளை மடியில் கட்டிக் கொண்டு” என்ற கருத்து.

நாம் பார்க்காத இரண்டாம் உலகப் போர்ப்படங்களா? வலிந்த எதிரியைத் தாக்க முனையும் மெலிந்த படை இது போன்ற அதிரடியான போர் உத்திகளை நடத்துவது முன்னும் நடந்திருக்கிறது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும். கௌரவர்களின் சுற்றிவளைப்பை உடைக்க அபிமன்யுவைப் பாண்டவர்கள் அனுப்பியது என்ன செயல் என்று எண்ணுகிறீர்கள்? கரும்புலி வேலை தானே? ”தம்பி, நீ உள்ளே போ, சுற்றிவளைப்பை உடை, நாங்கள் பின்னால் வருகிறோம்” என்று பாண்டவப் பெரியோர்கள் சொல்ல, ஏன் அந்தக் கண்ண பெருமானே சொல்ல, இவன் கரும்புலி வேலை நடத்த வில்லையா? அபிமன்யு செய்தால் அது அறப்போர். யாரோ ஒரு யாழினி செய்தால், அது தீய போரா?

கரும்புலி வேலைகளில் பொதுமக்கள் குறைந்த அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றனரா என்று பாருங்கள். இல்லையென்றால் புலிகள் மேல் குற்றம் சொல்லுங்கள். மடியில் வெடிகுண்டு கட்டிக் கொள்ளும் போர் உத்திகளைப் பற்றிப் பேசுவதற்கு நீங்களும் போர் நிபுணர் இல்லை, நானும் அறிந்தவன் இல்லை. திண்ணையில் உட்கார்ந்து, செய்தித்தாளைப் பக்கத்தில் வைத்துப் படித்துக் கொண்டு, எங்கோ நடந்த போரை/நிகழ்வுகளை நாம் நேரே போய்ப் பார்த்தது போல் அலசி, அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டு, எல்லாவற்றையும் கிடுக்கிக் (criticize)கொண்டு, அட்டைக் கத்தியை வீசிக் கொண்டு, அறப்போர்/ மறப்போர் என்று அடம்பிடித்து இனம்பிரிப்பது நம்மை எங்கு கொண்டு சேர்க்கும்?

இனி ஏழை, எளியவரைக் கவசச் சுவராகக் கட்டிவைத்துப் போர் புரிவது பற்றிப் பார்ப்போம்.

இங்கும் பாருங்கள் வெறுமே வெற்றுச்சொற்களை மட்டுமே வீசுகிறோம். சிங்களவர் கணக்குப் படி சனவரியில் மூவாயிரம் புலிகள் தான் வன்னியில் இருந்தார்களாம், [புலிகளின் கணக்குப்படி அது இருபதாயிரத்திற்கும் மேல்.] அன்றைக்கு அங்கு இருந்த மக்கள் தொகை 3,89,000 பக்கம். கிட்டத்தட்ட 4 இலக்கம். 3000 பேர் 4 இலக்கத்தை மிரட்டிச் சுவராக்கியிருக்க முடியுமா, அதோடு அன்றைக்கு (சனவரியில்) இருந்த களத்தின் சுற்றளவு அஞ்சு கிலோமீட்டர், பத்துக் கிலோமீட்டர் அல்ல, நூற்றுக்கணக்கில் ஆன கிலோ மீட்டர். 4 இலக்கம் மக்களை 20000 பேர் கூட மிரட்டியிருக்க முடியாது. தப்பிக்கிறவர்கள் இந்தச் சுற்றளவில் எங்கு வேண்டுமானாலும் தப்பியிருக்கலாம். ஆனாலும் தப்பவில்லை. புலிகளோடே தான் நகர்ந்தார்கள், ஏனென்றால், 20000 பேருக்கு 5 பேர் என்று வைத்தாலே, 100000 மக்கள் அவர்களின் உறவினராகவே இருப்பர். மீந்துள்ளவர் புலிகளின் நாட்டில் தமிழீழத்தில் [ஆம், அது ஒரு நாடாகவே, சென்ற 7, 8 ஆண்டுகளாய் இருந்தது. இதை எந்தக் கொம்பனும் மறுக்க முடியாது.] வாழ்ந்தவர்கள். அவர்கள் புலிகளை நம்பினார்கள், சிங்களவனைக் கண்டு பயந்தார்கள், எனவே புலிகளோடு பெயர்ந்தார்கள்.

இந்தக் களச் சுற்றளவு சுருங்கச் சுருங்க இது ஒரு முற்றுகை போலவே அமைந்தது. இங்கும் அரண் உண்டு. அவை முல்லைத்தீவின் பாழாய்ப் போன கடற்கரையில் ஒரு முக்கால் வட்டமாய் அமைந்த நிலத்தில் புதைத்த மிதிவெடிகளாய் இருந்தன. சுவருக்குப் பகரியாய் மிதிவெடிகள். மிதிவெடிகளுக்கும் பின்னால் புலிகள், புலிகளுக்கும் பின்னால் பொதுமக்கள். நடுவில் புலிகளின் அமைச்சகம். உலகில் எந்தப் போர்ப் பாசறையும் இப்படித்தான் இருக்கும். [அர்த்த சாத்திரக் காலத்தில் இருந்து இப்படித்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் எந்தக் கோட்டையும், பாசறையும் இருந்தன.] முட்டாள் தனமாக யாரோ ஒரு பெருகபதி (ப்ரஹஸ்பதி) மக்களுக்குப் பின்னால் புலிகள் இருந்தார்கள் என்று சொல்கிறார் என்றால், அவருக்குப் போரைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று பொருள். That person must have been very naive. நாம் எல்லோரும் ஏன் இப்படி விவரம் தெரியாதவர்களாய் இருக்கிறோம்?

நான் புலிகளின் அரண் ஏன் குலைந்தது என்று பேச வரவில்லை. அதைப் பற்றிப் பேசுவது நம்மைப் போர் உத்திக்குள் கொண்டு செல்லும். மக்கள் ஏன் அங்கு இருந்தார்கள் என்று மட்டுமே பார்க்கிறேன். இரண்டாம் உலகப் போரில் இலண்டன் முற்றுகைப் போரில் இலண்டன் மக்கள் ஏன் இலண்டனுக்குள் இருந்தார்கள்? இதே போல செருமன் முற்றுகையின் போது மாசுக்கோ மக்கள் ஏன் உள்ளிருந்தார்கள்?, இதற்கு மாற்றாக ஆங்கில, பிரஞ்சு, அமெரிக்க, உருசிய அரணங்களின் முற்றுகையின் போது பெர்லின் மக்கள் ஏன் உள்ளிருந்தார்கள்? அதே காரணங்களுக்காகத் தான் 1.69, 000 மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு அருகில், மிதிவெடி அரண்களுக்கு உள்ளே புலிப் போராளிகளுக்குப் பின்னே இருந்தார்கள்.

வெள்ளைக்காரன் செய்தால் அது பெரிய தற்காப்புப் போர்? புலிகள் செய்தால் மட்டும் இந்த வகைப் போர் “கோழைப்போர்” ஆகிவிடுமோ?

இது போன்ற உள்ளிருந்து போரிடும் அகப்போர் நிலைகள் இன்று நேற்று இல்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்னிருந்து உண்டு. உழிஞைப் போர் என்பது முற்றுகைப் போர்.

“முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்றாகும் என்ப”

என்பார் தொல்காப்பியர்.

அரணுக்கு உள்ளிருந்து எதிர்த்து நிற்பது நொச்சிப் போர். அது முற்றுகையை உடைப்பது. போர் உத்திகளைப் பொறுத்து, அது சிலசமயம் வெல்லும், சில சமயம் தோற்கும்.

ஒரு நூறாயிரம் போர்களாவது உழிஞை - நொச்சித் திணை வகையில் உலகில் நடந்திருக்கின்றன. நொச்சிப்போர் நடக்கிற போது, மக்களை ஒதுங்கச் சொல்லித் தான் நொச்சிப் படைத்தலைவர்கள் கேட்பார்கள். ஆனால் ”உழிஞைக்காரனிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம், நம்மவர் தோற்றாலும், நடப்பது நடக்கட்டும்” என்று கோட்டைக்கு உள்ளேயே நொச்சிக் கோட்டை மக்கள் தங்கி விடுவார்கள். இதுதான் உலகெங்கணும் நடந்திருக்கிறது.

ஆனால் அந்தக் காலத்தில் அறநெறி இருந்தது. [பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தர்கள் உள்ளே இருந்த மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கப் பார்த்தார்கள். முடிவில் பல மாதங்கள் முற்றுகை நீடித்து, மேற்கொண்டு உணவுப் பண்டம் இல்லாத நிலையில் வேள்பாரி வெளியே வந்தான். போர் தும்பை நிலைக்கு மாறியது. பாரி தோற்றான்.]

இன்றோ, ஊரில் உள்ள அத்தனை புறம்பு முறைகளையும் கொண்டு வந்து, [கொத்துக் குண்டு, ஒளிய (phospherus) வெடிக் குண்டு, நச்சுப் புகைக் குண்டு (phosgene - இது இந்தியாவில் இருந்து போனதாகப் பலரும் சொல்லுகிறார்கள் - உண்மை ஏதென்று தெரியாது.)] அவை அத்தனையும் வானத்தின் வழி விட்டெறிந்து, புலிகளின் நொச்சிப்போரை ஒன்றுமில்லாமற் செய்து, சிங்களவன் முறியடித்து விட்டான்.

முடிவில் வெறும் பீரங்கி வண்டிகளைக் கொண்டே, மூன்றே நாளில், 50000 பேரை மிதித்து உழுதே, கொன்றிருக்கிறான். நாமோ, இதைப் பற்றியெல்லாம் பேசாமல், கொதிக்காமல், புலிகளைக் குறைகூறிக் கொண்டிருக்கிறோம்.

இதைச் செய்தது புலிகளா?

புலிகள் செய்தது தவறான போர் உத்திகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர்களுடைய கருதுகோள்கள் அவர்களை ஏமாற்றிவிட்டன.

“எதிரி அறநெறியோடு போரிடுவான்,
உலகம் ஈர நெஞ்சு கொண்டு உள் நுழைந்து இந்தப் போரை நிறுத்தும்,
சென்னையில் இருக்கும் கிழவர் ஏதேனும் செய்வார்,
தில்லியில் இருக்கும் முட்டாள்களுக்குக் கொஞ்சமாவது விளங்கும்
அல்லது ஏதோ ஒரு ”அற்புதம்” நடந்து இந்திய ஆட்சி மாறும்,
முடிவில் நல்லூர்க் கந்தன் எப்படியாவது காப்பாற்றிவிடுவான்”

என்று ஏமாளித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அதுதான் அவர்கள் செய்த பெருந் தவறு. இல்லையென்றால் வெறும் தொலைபேசித் தொடர்பை [அது மகிந்தவிற்குப் போய்ச் சேர்ந்திருந்தாலும்] நம்பி வெள்ளைக் கொடியேந்திச் சரணடையப் போயிருக்க மாட்டார்கள்.

மொத்தத்தில் ஏமாளிகளாகிப் போனார்கள். இன்றைக்கு ஏமாளிகளை அரக்கர் என்றும், ஏமாற்றியவரைத் தேவர் என்றும் சொல்லுகிறோம். [அதுதானே காலங் காலமாய் நாவலந்தீவு என்று சொல்லப்படும் இந்தியத் துணைக்கண்ட வழக்கம்:-)]

“30 வருட ஈழப் போரில் 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்று குறிப்பிட்டிருந்தவர், அறிவியல் வழிமுறைகளைக் கொண்டு, ”இந்தப் புள்ளிவிவரம் எங்கிருந்து கிடைத்தது? அதன் நம்பகத் தன்மை என்ன? இதன் “நதிமூலம், ரிஷிமூலம்” என்ன? - என்று ஆய்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும்.

எங்கு பார்த்தாலும் ”புலிகள் அதைச்செய்தார்கள், இதைச் செய்தார்கள்” என்று கேட்டு என் செவி மரத்துப் போயிற்று. 30 ஆண்டு ஈழப் போரில் 25000 புலிகள் இறந்திருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். 25ன் கீழ் 70 என்பது 35 விழுக்காடு வருகிறது. அப்பொழுது 20 விழுக்காடு தான் புலிகள் செய்த கொலை என்று மேலே உள்ள கணக்கு சொல்கிறது.

70000, 55% என்ற இரண்டையுமே சரிபாருங்கள் என்றே அந்தக் கணக்குரைத்தவருக்கு நான் மறுமொழியாகச் சொல்ல முடியும்..

எனக்கு இந்தப் புள்ளிவிவரம் எல்லாம் தேவையில்லை. 2007க்கு முன் மூன்றில் ஒரு பங்கு தீவு நிலத்தில், தமிழீழத்தில், வாழ்ந்த மக்களின் அமைதி வாழ்வும், அப்பொழுது அங்கு போய் வந்த எண்ணற்ற மக்களின் நேரடி அறிக்கைகளும் ”அங்கு மக்களால் விரும்பப்பட்ட அரசே நடந்தது” என்ற நிறைவை எனக்குத் தருகிறது. இவ்வளவு பேரைப் புலிகள் கொலை செய்திருந்தால், அப்படி ஓர் அரசு 7,8 ஆண்டுகளுக்கு நடந்திருக்க முடியாது. நல்லூர்க் கந்தன் நன்றாகவே அறிவான்.

மீண்டும் சொல்லுகிறேன். புலிகள் தவறு செய்திருக்கிறார்கள். அவை அலசப் படவேண்டும். ஆனால் சிங்களவனின் கண்ணாடி வழியாகப் பார்த்து அல்ல. தமிழனின் பார்வையில் அவை செய்யப் படவேண்டும். அதே பொழுது, அந்த அலசலுக்கு இது நேரமல்ல.

என் பார்வையில் அவர்கள் போற்றப் படவேண்டிய போராளிகளே. என்ன செய்வது? இந்த முறை தோற்றுப் போய்விட்டார்கள். .

இடையில் நலிந்து போன நம் மக்களைத் தேற்றிக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு ஓர் ஆறுதல் ஏற்பட வேண்டும். கூடிச் செறியும் வேதனைகள் குறைய வேண்டும். ஆனால், தமிழர் அடிமையாகக் கூடாது.

அன்புடன்,
இராம.கி.

33 comments:

இட்டாலி வடை said...

நல்லதொரு கோணத்தில் கொண்டு வந்திருக்கின்றீர்கள்... பிரச்சார யுத்தத்தில் நாங்கள் அதிகம் கவனமெடுப்பதில்லை.. இதனாலேயே தேவையில்லாத பின்னடைவுகள்..

இதை ஒவ்வொருவரும் கவனத்தில் எடுக்க வேண்டும். தமிழனுக்கென்றொரு நாடு ஈழத்திலோ தமிழகத்திலோ மலேசியாவிலோ இல்லை ஆபிரிக்காவிலோ கிடைத்தால் முதலில் சந்தோஷப்படுபவர் நாங்களே...

சந்தனமுல்லை said...

நல்லதொரு கோணத்தில் சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி!

குறும்பன் said...

நன்றாக அலசி உள்ளீர்கள்.

ஆயில்யன் said...

//சிங்களவனின் கண்ணாடி வழியாகப் பார்த்து அல்ல. தமிழனின் பார்வையில் அவை செய்யப் படவேண்டும். அதே பொழுது, அந்த அலசலுக்கு இது நேரமல்ல//

உண்மை ! வெற்றி தோல்விகளில் தோல்வி பற்றி ஆராய்ந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வதுதான் ஒரு யுக்தியாக இருக்கிறது! அதை விடுத்து இனி அவ்வளவுதான் என்று நன்கு வசதியாக அமர்ந்துக்கொண்டு கிடைக்கும் காகிதங்களில் எழுதி தள்ளுபவர்களின் கருத்துக்களையும் நாம் புறக்கணித்தலும் இந்த நேரத்தில் மிக நல்லது!

கட்டுரை அருமை!

தெய்வமகன் said...

மாறுபட்ட கோணத்தில் கதைத்துள்ளீர்கள்.

எங்கோ தமிழருக்கு நாடு வேண்டாம்.அது தமிழீழத்தில் வேண்டும் என்பதே தமிழரின் தாகம்.

Anonymous said...

This is how insurgent methods work. அனைவரும் அறிய வேண்டிய செய்திகள். விளக்கமான இப்பதிவுக்கு நன்றி, அய்யா.

சுந்தரவடிவேல் said...

பதிவுக்கு நன்றி இராம.கி அய்யா!

shangar said...

30 வருடமாய் ஏமாறாமல் காய் நகர்த்தியவர்களை ஏமாற்றியது மூன்றாம் உலகமும் மூன்றாம் உலகையே ஏமாற்ற முடிந்த வஞ்சகர்களும் தான்...

PRABHU RAJADURAI said...

22 சூலை 1946, செருசலேமில் உள்ள பிரிட்டிசு அரசின் அலுவலகங்கள் அமைந்த கிங் டேவிட் விடுதி அரபு உடை அணிந்த நபர்களால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. சுமார் 91 பொதுமக்கள் இந்த குண்டு வெடிப்பில் இறந்தனர் பலர் காயமுற்றனர். ஏறக்குறைய உலகின் முதல் பயங்கர்வாத தாக்குதல் என்று சொல்லப்படக்கூடிய இந்த தாக்குதலை நிகழ்த்தியது, இசுரயீல் என்ற நாடு உருவாக வேண்டுமென்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட யூதர்களின் இயக்கம்.

அந்த இயக்கத்தின் தலைவரான மானேகெம் பெகின் பிர்ட்டிசு அரசால் பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டார்....ஆனால் 1977ல் இவர் இசுரயீலின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்....1978ல் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் பெற்றார்.

1981ல் ஈராக்கின் அணு உலைகளை அத்து மீறி தாக்கினார்

1982ல் சாப்ரா சாட்டில்லா படுகொலைகள் நிகழ்ந்தன

1983ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்

1992ல் பயங்கரவாதி என்று அறியப்பட்ட பெகின் தேசிய தலைவராக இறந்தார்.

1948ல் இசுரயீல் உருவாகாமல் போயிருந்தால், பெகின் ஒரு பயங்கரவாதியாகவே இறந்திருப்பார்....

Anonymous said...

Aiyya! In India, there is a huge group of people who believe in Rajini fights and don't know the background of war. I had been in NCC and read books on war. You have said it well. I had so many questions and I would ask my Appa (Major). He will explain me well.

We can educate people who listen. But, not ones who pretend to. One educated person from India told me that pirabakaran is living overseas. I asked him "What is his address"? . He replied, " I read newspaper". Ability to read is considered literacy.

"epporuL yaar yaar vaayk kEtpinum apporuL
meypoRuL kaaNpathu aRivu"

India has taken its revenge. But it also played the same side as Pakistan and China. Now, these policy makers are wondering, how to get Chinese out of Indian Ocean; they have a base right in Srilanka.

செல்வநாயகி said...

உங்களிடமிருந்து உங்களுக்கே உரிய பார்வைகளோடும், விளக்கங்களோடும். நன்றி இராம.கி. ஐயா.

Thiru said...

மின்தமிழ் குழுமத்தில் பார்த்த இராமகி ஐயாவா!! உங்களின் கோணமும் அலசலும் அருமை. ஆனால் காலம் கடந்த இடுகை போல் மனதில் படுகிறது.புலிகள் மட்டும் அல்ல தமிழர்கள் அனைவரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை முதல் 100 வயது கிழம் வரை தீவிரவாதிகளாக சித்தரிக்க பட்டு அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டியவர்களவே பார்க்க படுகிறார்கள் என்பதே இப்போதைய நிலை.


தனிமை படுத்த பட்ட இனம் இனி இயல்புக்கு வருமா????

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Thiru said...

மின்தமிழ் குழுமத்தில் பார்த்த இராமகி ஐயாவா!! உங்களின் கோணமும் அலசலும் அருமை. ஆனால் காலம் கடந்த இடுகை போல் மனதில் படுகிறது.புலிகள் மட்டும் அல்ல தமிழர்கள் அனைவரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை முதல் 100 வயது கிழம் வரை தீவிரவாதிகளாக சித்தரிக்க பட்டு அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டியவர்களவே பார்க்க படுகிறார்கள் என்பதே இப்போதைய நிலை.


தனிமை படுத்த பட்ட இனம் இனி இயல்புக்கு வருமா????

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Anonymous said...

"30 ஆண்டு ஈழப் போரில் 25000 புலிகள் இறந்திருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். 20ன் கீழ் 75 என்பது 35 விழுக்காடு வருகிறது. அப்பொழுது 20 விழுக்காடு தான் புலிகள் செய்த கொலை என்று மேலே உள்ள கணக்கு சொல்கிறது. "

ஐயா, என்ன கணக்கு இது, விளங்கப் படுத்தவும்!!!

Anonymous said...

நல்லதொரு பதிவு
நிலமையை எடுத்து விளக்கியமைக்கும் நன்றி

தொடரட்டும் பணி

அன்புடன்
அனலை திரு

Anonymous said...

நல்லதொரு பதிவு
நிலமையை எடுத்து விளக்கியமைக்கும் நன்றி

தொடரட்டும் பணி

அன்புடன்
அனலை திரு

இராம.கி said...

அன்பிற்குரிய இட்டாலிவடை,

வரவிற்கு நன்றி.

பரப்புரை மட்டுமல்ல, அனைத்து நாட்டு உறவுகள், குறிப்பாக அங்குள்ள அரசியலாருடன், புலிகள் தொடர்புகளைப் பேணாது போனதும், கதிர்காமர் பலநாடுகளில் முயன்று புலிகளுக்கு எதிராக தடையுத்தரவு வாங்கியதும் போராட்டத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு.

தவிர, சிறாரைச் சேர்த்தது, மற்ற தமிழர்களோடு உறவு பேணாதது எனப் பல தவறுகள் அடுத்தடுத்து நடந்திருக்கின்றன. அவற்றில் ஓரளவுதான் பிற்காலத்தில் சரிசெய்யப் பட்டன. அதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

தமிழீழம் ஈழத்தீவில் தான் ஏற்பட வேண்டும். வேறு எங்கணும் அல்ல. இன்றூ, ஈழம் என்ற சொல்லையே அழிக்க நினைக்கிறார்கள் சிங்களவர்கள். [ஈழம்/இலங்கை என்ற இருசொல்லும் தமிழ்வேரில் இருந்து (ஈல்தல் = பிரித்தல், முகன நிலத்தில் இருந்து பிரிந்த நிலம் - land separated from the mainland = hence an island - என்ற பொருளில் கிளைத்தவையே.]

ஈழம் என்ற சொல்லையே விடச் சொல்லுவதன் மூலம், நம் அடையாளத்தையே அழிக்க நினைக்கிறார்கள் என்றே பொருள்.

எதிர்காலம் எப்படி மாறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்பொழுது செய்ய வேண்டியது, துயருற்ற மக்களுக்கு இயன்ற உதவிகளே.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சந்தனமுல்லை, குறும்பன், தெய்வமகன், கங்கை கொண்டான், சுந்தரவடிவேல்,

வரவிற்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்புள்ள சங்கர்,

30 ஆண்டுகளுக்குப் பின் ஏமாந்ததை அலசுவதில், ஏமாற்றியவர்களின் பின்புலத்தைக் காட்டிலும், நம்முடைய பின்புலத்தைப் பார்ப்பது மிகவும் முகன்மையானது. 2002-2007 வரை நடந்த நிகழ்வுகளில் தான் ஏமாந்திருக்கிறோம். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவிட்டு விட்டோம்.

அதே பொழுது, அதைப் பற்றிப் பேசுவதற்கு இது நேரமல்ல. இன்னும் 4, 5 மாதங்களாவது போக வேண்டும். மனம் தெளிவுற வேண்டும். இப்பொழுது துயருற்றோருக்கு உதவுவதிலே தான் நம் கவனம் முழுதும் இருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பிரபு நாஜதுரை,

மெனாக்கம் பெகின் பற்றி நீங்கள் எழுதியிருந்தது மிகச் சரியான குறிப்பு. வரலாற்றைக் குழப்படியாகப் புரிந்து கொள்ளுகிறவர்கள் இதையெல்லாம் ஏற்க மாடார்கள். அதோடு இப்படி ஒப்பிட்டு அலசுவதற்குத் தமிழர்களுக்குப் பொறுமை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இப்பொழுது தமிழர் பெரிதும் பிளவு பட்டிருக்கிறார்கள். இந்திய மிடையங்களின் (media)துணையுடன் எதிரியின் பரப்புரை தமிழரில் மிகப்பலரைக் குழப்பியிருக்கிறது.

இந்த நேரம் தருக்கம் செய்வதைக் காட்டிலும், நோவுற்றோருக்கு உறுதுணையாக இருப்பதே முகன்மையான கடமை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

Dear Mr. Anonymous,

It is true that many Indian Tamils [other Indians as well] do not know the background of the war. The media censorship [both English and Tamil] has been so effective that many don't know that censorship exists.

This is one area where the Tamil Intellectuals who were aware of the problem did not do their duty since 2002. We did not explain the facts to the general public. We were busy in doing our own pet things rather than concentrating on a historically important issue. There was also not much informed discussion within the Tamil community.

We have also not taken steps to bring out the flaws in the Indian foreign policy viv-a-vis SriLanka and allowed the policy to be guided by Hindu Ram, Subramanyam Swamy, Cho, M.K. Narayanan and the like.

Ram and Co., are not the Tamil experts. There was vacuum and they filled it. Atleast now, new policy experts have to come to the front and start exerting influence in the Indian media so that a year from now, these experts would be called by the powers that be at New Delhi.

The Chinese angle got exposed only since January 2009. This angle has to be seriously researched.

anputan,
iraamaki.

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வநாயகி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய திரு,

அங்கு ஈழம் பற்றிப் பேசினாலே ஏதோ ஒரு தயக்கம் இருக்கிறது. ”அழையாத இடத்தில் நுழையாத விருந்தாளியாய் நான் ஏன் அங்கு இதைச் சொல்ல வேண்டும்?” என்ற எண்ணத்தில் என் வலைப்பதிவிலேயே இதை வெளிப்படுத்தினேன்.

காலம் கடந்த இடுகைதான். அதே பொழுது இப்பொழுது பலரும் நான்காவது போர் தோல்வியுற்றதும், புலிகளைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாய்ச் சொல்லி எழுதுகிறார்கள். புலிகள் செய்த தவறுகளை நேர்மையோடு சொல்லி அலசினால் அதில் எதிர்காலத்திற்கு ஒரு பயன் இருக்கும். அதை விடுத்துச் சிங்களவன் பார்வையிலேயே கொண்டு முடித்தால் எப்படி? எனவே இந்த இடுகை எழுதினேன்.

தமிழர் அனைவரும் தீவிரவாதிகள் என்றுதான் சிங்களவன் இன்று அடையாளப் படுத்துகிறான். இந்திய மிடையங்களும் அதற்கு உறுதுணை போகின்றன. அதை மறுத்து, ”போராட்டம் என்பது பல முகங்களைக் கொண்டது. ஒரு வழியை எதிரி அடைத்தால் இன்னொரு வழி நமக்குத் திறக்கும் என்று மக்களை உணரவைக்க வேண்டும்.

இப்பொழுது தனிமைப்படுத்தப் பட்ட மக்களைத் தேற்றி, அவர்கள் சோகத்தில் இருந்து அவர்களை விடுவித்து, இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டியது நம் எல்லோரின் கடமை. காலத்தைக் காட்டிலும், நாம் எல்லோரும் கூடி, மறுமொழி சொல்ல வேண்டும் என்பதே என் விழைவு.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

பெயரில்லாதவருக்கு,

யாரோ ஒரு கணக்குச் சொன்னவர் 30 ஆண்டுகளில் 70000 ஈழத் தமிழர் இறந்ததாகவும் [இந்தத் தொகையைச் சரி பார்க்கச் சொன்னேன். 30 ஆண்டுகளில் இது இன்னும் கூடைருக்கும் என்றே தோன்றுகிறது.] அதில் 55% புலிகள் கொன்றதாகவும் 45% சிங்கள அரசு கொன்றதாகவும் சொன்னார். [இந்த 55% புல்லிவிவரத்தையும் சரிபார்க்கச் சொன்னேன்.]

நான் இன்னொரு புள்ளி விவரம் சொன்னேன். இந்த 30 ஆண்டு காலப் போரில் புலிகளே (போராளிகளே) 25000 பேர் இறந்திருப்பார்கள். அப்படியானால், 70000, 55% என்ற புள்ளிவிவரங்களை உண்மையென்றே கொண்டு பார்த்தால், 25/70 = 35.7% . என்னுடைய தட்டச்சில் "20ன் கீழ் 75 என்பது 35 விழுக்காடு வருகிறது." என்று அவக்கரமாய் அடித்துவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னபிறகு தான் என் தட்டச்சுப் பிழை புரிகிறது.

சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி. மேலே என் இடுகையில் திருத்திக் கொள்கிறேன்.

கணக்கில் அறிவது:

புலிகள் இறந்தது 35%
புலிகளால் இறந்தது என்று யாரோ ஒருவர் சொல்லுவது 20%
சிங்கள அரசால் இறந்தது 45%

மொத்தம் இறந்தவர் 70000

நான் கூறிய 25000 புலியிறப்புக்கள் தவிர்த்து எந்த எண்களையும் நான் ஏற்கவில்லை. அவர் கொடுத்த புள்ளி விவரத்தின் ஏற்புறாமையை மட்டுமே இங்கு புலப்படுத்துகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய அனலைத்திரு,

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி

அன்புடன்,
இராம.கி.

Mohamed Haneef said...

உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.

ஆனால் எதனையும் முழுமையாக விளங்கிக்கொள்ளாமல் தம்மனம் போக்கில் ஏதேதோ சொல்லுகின்றனர். பின் சொல்வதை சரியென நிறுவ முயற்சிக்கின்றனர். உண்மைக்கு புறம்பான பழிசுமத்தல்களையே தொழிலாகக்கொண்டு இயங்கும் இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை சுட்டி தங்கள் கருத்தை சரியென நிறுவ முயல்கின்றனர்.
இதில் தமிழரில் ஒற்றுமையில்லை எனும் கருத்து வேறு. அறப்போர் பற்றி விளக்கம் வேறு.

மிகவும் கவலையாக இருக்கிறது.

Mohamed Haneef said...

இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டாம் தர அறிவாளிகளின் கருத்து எனும் கூற்று வேறு.

எந்த உண்மையையும் உணராமல் எழுதும் இவர்களே தம்மை முதலாம் தர அறிவாளிகள் என்று நினைத்துக்கொள்கின்றனர் போலும்.

வருத்தத்துடன்.
Mohamed Haneef

இராம.கி said...

அன்பிற்குரிய முகம்மது,

நீங்கள் குறிப்பிடும் புறம்பேசிகள் எதனையும் விளங்கிக் கொள்ள முற்படவே மாட்டார்கள். ஓர் எள்முனையளவும் உருப்படியாய் ஏதும் செய்ய மாட்டார்கள். வெட்டிப் பேச்சில் ஊரையே ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள்.

50000 பேர் மூன்றுநாளில் இறந்ததைப் பற்றி யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள், வேதிக் குண்டு போட்டுக் கொன்றதை யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள். அறம் பிறழ்ந்து போர் நடந்ததை யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் புலிகளே காரணம் என்று சொல்லுபவர்கள் “தமிழர்கள் அடிமையாக இருங்கள்” என்றே சொல்லுகிறார்கள்.

இனிக் கால காலத்திற்கும் உரிமைப் பேச்சை எடுக்கவிடாத படி எதிரி அடித்திருக்கிறான், இவர்கள் புலிகளைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகளின் மேல் எப்பொழுது குற்றம் சொல்லியிருக்க வேண்டும்? இப்பொழுதா? முன்னரா? அல்லது மக்கள் துயர் குறைந்து பிளவுகள் மறைந்து ஒருமைப்பட்ட பின்னரா?

நீங்கள் ஒரு குழுமத்தில் மட்டும் இந்தப் புறம்பேசுதல் நடப்பதாக எண்ணாதீர்கள். தமிழர் இடையே பரவலாக, ஒற்றுமை குலைக்கும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஈழத் தமிழருக்கும், தமிழகத் தமிழருக்கும் இடையே, ஈழத் தமிழருக்கும், புலம் பெயர்ந்த தமிழருக்கும் இடையே, ஈழத் தமிழருக்குள்ளேயே வடக்கு, கிழக்கு என்ற பிரிவு, மலையகம், யாழ்ப்பாணம் என்ற பிரிவு, முசுலீம் முசுலீம் அல்லாதோர் என்னும் பிரிவு, வேளாளர் வேளாளர் அல்லாத பிரிவு என்று எத்தனை பிரிவுகளை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்?

சிங்கமும், நாலு எருதுகளும் என்ற கதை உண்டு. நாலு எருதுகளுக்குள் பிளவை உண்டு பண்ணி, ஒவ்வொரு எருதாகச் சிங்கம் அடித்துச் சாப்பிடும். இதுதான் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது.

இதை அறியாமல், சரி செய்யாமல், நம் மக்களின் துயரும் துடைக்க முடியாது. போராட்டத்தை இயன்ற வழிகளில் தொடரவும் முடியாது.

நானும் கவலுறுகிறேன்.

இருப்பினும் நாம் ஆறுதல் சொல்லுவதை நிறுத்தக் கூடாது. இது கனிவு காட்டும் நேரம். ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருக்கும் நேரம்.

அந்தப் பணியைச் செய்வோம். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

இந்தப் புறம்பேசிகளின் கருத்துக்களைப் புறம் தள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

vanathy said...

உங்களது கருத்துகளுக்கு நன்றி.
பல நாட்களாக பெரிதாக எழுதுவதற்கே மனத்தில் வலிமை இருக்கவில்லை.
வீட்டில் ஒரு முக்கியமானவர் இறந்தால் அதன் தாக்கம் பல காலம் இருக்கும்,அதுவும் முதிர்ந்த வயதில் இறக்காமல் இள வயதில் அகால மரணம் அடைந்தால் அதன் விளைவு தாங்க முடியாததாக இருக்கும். ,அது மாதிரிதான் ஈழத்தில் இறந்தவர்கள் ,ஒருவர் அல்ல பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததையும் ,இன்று உயிரோடு உள்ளவர்கள் அவதிப படுவதையும் பார்க்கும்போது தாங்காத துயரம் இதயத்தை ஆட்கொள்கிறது.
.
ஆனாலும் வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் ,குழந்தைகளையும் வாழ வைக்கவும் காப்பாற்றவும் வாழ்வை இயல்பு நிலைக்குத் திருப்பத் தானே வேண்டும் .
அதே மாதிரிதான் நாங்களும் ஈழத்தில் உள்ள நம் மக்களுக்காக உதவ வேண்டும்..

உயிரா? உரிமையா ?
உணவா ?சமத்துவமா ?
உடையா ?சுய நிர்ணய அடிப்படையில் தன்னாட்சியா? என்ற நிலையில் ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பதில் தவறில்லை.
உலகின் பல வலிமை மிகுந்த நாடுகளும் சேர்ந்து சிங்கள அரசுக்கு உதவி செய்து தமிழரின் உரிமைப்போராட்டத்தை நசுக்கி விட்டார்கள்.
சிங்கள அரசு அளவு கடந்த மமதையில் நடந்து கொண்டிருக்கிறது.
இனிமேல் ஈழத்தில் உள்ள தமிழரின் கதி என்ன என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

வெற்றி பெற்றவர்கள்தான் பெரும்பாலும் வரலாற்றை எழுதுகிறார்கள்.சிங்களவர்களும் தங்களுக்கு சாதகாமாக வரலாற்றைத் திரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
உண்மையில் இறந்த தமிழ் மக்களின் தொகை ஒரு லட்சத்துக்கு மேலே இருக்கும். அதில் பெரும்பாலனவர்கள் சிங்கள அரசினால்தான் கொல்லப்பட்டார்கள்.அதை விட போராளிகளின் தொகை இருபத்தையாயிரத்துக்கு மேலே இருக்கும் .

-வானதி

Vijayakumar Subburaj said...

demonising அரக்கர்கள் ?! :)

அரக்கர் demon-களா ?!

truthseeker said...

ஐயா

உங்களுக்கு ஒரு எதிர்வினை எழுதினேன்.
நீளமாக போனதால் இங்கே பதிய முடியவில்லை

இங்கே பார்க்கலாம்
--
ஐயா,
இந்த எதிர்கருத்தை அனுமதிப்பீர்களா என்று தெரியாது.
இருப்பினும் என் கருத்தை சொல்கிறேன்.
”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?”
இந்த கருத்தை எழுதியவர் சரியாகவே குறித்திருக்கிறார்.
நம் நாட்டில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து பழங்குடி சமுதாயங்களும் வன்முறை போர்களை கொண்ட சமூகங்கள்தான். எல்லா பழங்குடியினரும் மற்ற பழங்குடிகளோடு போர் புரிகிறார்கள். பழங்குடி சமுதாயத்திலிருந்து வந்த நாமும் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அதிசயமானதல்ல.
தொடர்ச்சியை இணைப்பில் படிக்கவும்
http://1unmai.blogspot.com/2009/01/blog-post.html

Anonymous said...

ALL IS FAIR IN LOVE & WAR

//எதிரி அறநெறியோடுபோரிடுவான் என்று புலிகள் எதிர்பார்க்கவேண்டும் என்றால் அவர்கள் அறநெறியுடன் முதலில் போரிடவேண்டும். எந்த இடத்தில் அவர்கள் படுதோல்வியை அடைந்தார்களோ அதே இடத்தில்தான் பல வருடங்களுக்கு முன்னர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்த இலங்கை போலீஸார் 1000 பேரை பாயிண்ட் பிளாங்கில் சுட்டுக்கொன்றார்கள். ஜெனீவா கன்வென்ஷனை காற்றில் பறக்கவிட்டார்கள். இது போல எத்தனை எத்தனையோ அறநெறியற்ற கொலைகளை செய்தார்கள். அப்படி அறநெறியற்று போர் புரிந்த பின்னால், எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிரி அறநெறியுடன் போரிடுவான் என்று எதிர்பார்க்க முடியும்?
//

Madhu said...

Reasonable ,Every Tamilian should realize this, but POOR people got betrayed so they failed,they will raise again even if not the whole world is being informed about the great massacre & genocides done by mahinda rajapakse & his people, slowly & gradually the JUSTICE will be given,TAMILS in Ceylon will get their RIGHT ,& the day is not so FAR,but ... every tamil brethren should reaalize this & support is accross the globe, then it will be bit easier & motivative.. like a brother for another brother.. but still we LIVE amid selfish & notorious people,still the Human Society is reforming!