Tuesday, May 13, 2008

ஔ - 1

வலைப்பதிவர் இராதாகிருஷ்ணன் முன்பு பிப்ரவரி 23, 2005 - ல் ஓர் இடுகை எழுதியிருந்தார். அதில்......
---------------------------------
"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்; அகராதிதான் கைகொடுத்தது. ஒள வரிசையில் வரும் வார்த்தைகள் கொஞ்சம்தான் எனினும் சில சுவையாக உள்ளன.

ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்.

நன்றி: கழகத் தமிழ் அகராதி

இராதாகிருஷ்ணன்
-------------------------------

என்று எழுதி இருந்தார். பதிவர் குமரனும் ஔவியம் என்ற இதே சொல்லைப் பற்றி 2006ல் 'சொல் ஒரு சொல்' எனும் தம் பதிவில் ஓர் இடுகையைச் போட்டிருந்தார்.

அண்மையிற் திரு.குமரன் தன்னுடைய 'கூடல்' பதிவில் 'ஔவியம்' பற்றி முன்னாள் நடந்த உரையாடல்களைத் தொகுத்து, ஒரு மீள்பதிவு செய்த பின்னர், ஔகாரச் சொற்கள் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து போனேன்.

ஔகாரம் பற்றிய தெளிவு நம்மில் பலர்க்கும் இல்லாததால், சொன்மூலம் தெரியாது தடுமாறுகிறோம். ஔகாரத்தில் தொடங்குவதாய் அகரமுதலிகளிற் காட்டப் படும் சொற்கள் பலவும், உகர, ஒகரத் தமிழ்ச் சொற்களின் வடமொழி மரூஉவாகவோ, வளர்ச்சியாகவோ (அதாவது உள்ளுக்குள் தமிழ் வேரும், வெளிக்குள் வடமொழி உருவும், பலுக்குமாய், இரு பிறப்பிகளாகவோ), அல்லது "அவ்" வில் தொடங்கும் தமிழ்ச்சொற்களின் போலியாகவோ, அமைந்து கிடக்கின்றன.

இங்கே உயிரெழுத்தில் தொடங்கும் சில சொற்களுக்கு மட்டுமே சொற்பிறப்புக் காட்டுகிறேன். [உயிர்மெய் ஔகாரங்களை இதே போல அலசலாம் எனினும், பதிவின் நீளம் கருதி அவற்றைத் தவிர்க்கிறேன்.]

சொன்மூலம் தேடும் இந்த நேரத்தில், கி.பி.500/600க்கு முற்பட்ட கல்வெட்டுக்களில் பழந் தமிழியின் ஔகார எழுத்தைக் காணுவதில்லை என்பதையும் (இதே போன்ற நிலை ஐகாரத்திற்கும் உண்டு), "பிற்காலத்தில் தான் அது வளர்ச்சி பெற்றதோ?" என்ற ஐயம் தமிழறிஞரிடம் இருப்பதையும், தொல்காப்பியர் ஔகாரத்தை ஒப்பிய போதிலும், "அகர உகரம் ஔகாரம் ஆகும்" என்று அந்த ஈரொலியின் (diphthong) தோற்றத்தைச் சொன்னதையும்,

"அம்முன் இகரம் யகரம் என்றிவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வொடு
உவ்வும் வவ்வும் ஔவோர் அன்ன"

என்று நன்னூலார் (எழுத்தியல் 125) ஐகார, ஔகாரப் போலி பற்றிச் சொன்னதையும் இங்கு கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். ஔகாரம் தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்தச் சொற்களின் மூலம் வேறெங்கோ இருக்கிறது என்ற பார்வையை மட்டுமே இங்கு வைக்கிறேன். [அண்மையில் அய் என்று எழுதி ஐகாரம் போக்குவது பற்றி நண்பர் நாக. இளங்கோவன் தன் பதிவில் சொல்லியிருக்கிறார். ஐகாரச் சொற்களிலும் பல சொற்களின் சொற்பிறப்பு வேறெங்கோ இகரத்திலும், எகரத்திலும் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் சொல்ல விழைகிறேன். இன்றைய நிலையில், ஐகார, ஔகாரச் சொற்கள் வடமொழித் தொடர்பால் தமிழில் கூடிக் காட்சியளிக்கின்றன என்று நன்கு உணரமுடியும். அதே நேரத்தில் ஐகார, ஔகாரங்களின் தமிழ்மையை நான் மறுக்கவில்லை; ஒதுக்கச் சொல்லவும் இல்லை.]

1. முதலில் ஔ எனும் ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருட்பாடுகளைப் பார்ப்போம்.

1a. அநந்தன் என்னும் பாம்பைக் குறிக்கும் பெயராக ஔ பயன்படுவதை அகரமுதலிகள் குறிக்கின்றன. இத்தகைய பொருட்பாடு பாம்பின் தோற்றத்தையும் ஔ -வின் இன்றைய உருவையும் ஒப்பிட்டு எழுந்திருக்கலாம். ஔகார எழுத்து கி.பி.500/600க்கு முன்னால் காணப்படாததாலும், அதன் இன்றைய உருவம் கி.பி.1400க்கு முன்னால் இல்லாததாலும், பாம்பு குறித்த பொருட்பாடு வெகுகாலம் கழித்தே, ஒரு 500/600 ஆண்டுகளுக்கு முன் தான் தமிழில் ஏற்பட்டிருக்க இயலும்.

1b. அடுத்தது நிலம் என்னும் பொருள். அவ்வையாரின் "நாடா கொன்றோ காடா கொன்றோ" என்ற புறநானூற்று 187 ஆம் பாடலின் இரண்டாம் வரியில் "அவலா கொன்றோ, மிசையாக கொன்றோ" என்ற ஒரு வரியில் அவல் என்பது பள்ளமான இடத்தையே குறிக்கிறது. பொதுவாய் அம், அல், அன் போன்ற ஈறுகளைத் தவிர்த்தே தமிழ்ச் சொற்கள் வடபுலப் பயன்பாட்டில் திரிகின்றன. தவிர 'அவைதல்' என்பது தமிழில் தட்டையாதலைக் குறிக்கும். குற்றப்பட்ட அரிசி - அவையப் பட்ட அரிசி - அவல் என்று சொல்லப் படுவதில்லையா? இது போக, அவ எனும் குறுஞ்சொல் ஒரு முன்னொட்டாகத் தமிழிலும் வடமொழியிலும் பயிலும்போது, தாழ்ந்த நிலையையும், குறையாகிப் போனதையும், கேடாகிப் போனதையும் குறிக்கும். இந்தச் சிந்தனையில் ஓர்ந்து பார்த்தால், நிலம் என்ற பொருட்பாடு அவைத்தலில் இருந்தே எழ முடியும்.

1c. மூன்றாவது பொருளாய், ஔவென்னும் ஓரெழுத்தொரு மொழியை, விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும் ஒரு வடமொழி முன்னொட்டு (உப சருக்கம்) என்று அகரமுதலிகள் குறிக்கும். ஓ என்னும் ஓரெழுத்தொரு மொழி தமிழில் முன்னொட்டாய் வராமல் இதே பொருட்பாடுகளைத் தனித்து நின்று உணர்த்தும். வடமொழியிலோ, அதே பொருட்பாடுகளில் ஔகாரமாய்த் திரிந்து முன்னொட்டாகப் பயன்படுகிறது.

2. ஒளகம் என்ற சொல் இடைப்பாட்டையும், ஔகி என்பது இடைப்பாட்டுக் கூத்தியையும், குறிப்பதாக அகரமுதலிகளில் அறிகிறோம். இந்தச் சொல்லும் கூடப் பொருட்பாட்டு வகையில் ஓர் இருபிறப்பியே. இதனுள்ளே, வேராய் அடங்கி இருப்பது சுருங்கற் பொருளில் வரும் உல்குதல் ஆகும். உல்கு>உள்கு>உக்கு>உக்கம் என்பது தமிழில் இடையைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல். உக்கம்>உகம்>ஔகம் என்ற திரிவில், வடமொழிப் பலுக்கும் உருவமும் ஏற்பட்டு, இடைப்பாட்டு என்ற புதுப்பொருளைக் கொடுக்கிறது. இடை என்ற பொருள் தமிழில் இருக்க, இடைப்பாட்டு என்பது வடமொழியில் எழுந்த ஒரு புதுப் புடைப்பெயர்ச்சியாகும். [இப்படித்தான், ஒவ்வொரு மொழியும் வேற்று மொழிச் சொல்லைக் கடன்வாங்கிக் கையாளும் போது அதே பொருளோடோ , அல்லது சிறு நீட்சியில் புதுப்பொருள் பெற்றோ, திரிவு காட்டும்.]

இதே போல, உல்கு>ஒல்கு என்னும் போக்கில் அசைதல் என்ற கூத்துப் பொருளையும் கொடுத்து, ஒல்குபவள் ஒல்கி>ஒக்கி>ஔகி என்று ஆவாள். ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி என்ற பொருள் வந்த கதையும் இப்படித்தான்.

இவ்வளவு ஆழம் தமிழ்வேரினுள் இருந்தாலும், இடைக்கால மணிப்பவளப் போக்கில் ஆட்பட்ட அடியார்க்கு நல்லார், சிலம்பின் 14:156க்குக் கொடுத்த உரையில் "தலைப்பாட்டு ஆவது உகம்; இடைப்பாட்டாவது ஔகம்" என்றே உரைப்பார்.

3. அடுத்த சொல் ஒளசரம். இதைக் கோடாங்கல் என்று அகரமுதலிகள் குறிக்கின்றன. உயரம்>உசரம்>ஔசரம்; [கோடு என்பதும் மலையுச்சியைக் குறிக்கும்.] உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் கோடாங்கல். இதை உச்சக்கல் என்றும் நல்ல தமிழில் சொல்லலாம். [ஔசரம் ஒதுக்கலாமே?]

4. அடுத்த சொல் ஔசீரம். இது இலாமிச்சைவேர் (தென்பாண்டி நாட்டில் சொல்லும் பெயர்) அல்லது வெட்டிவேரைக் குறிக்கும். கோடைகாலத்தில் சாளரங்களுக்கு வெட்டிவேர்த் தட்டி கட்டி, அதில் நீரைத் தெளித்து, வெக்கை தணித்துக் கொள்கிறோம் இல்லையா? .அந்த வெட்டிவேரைப் பரப்பி இருக்கையாகவோ, ஆசனத் தட்டியாகவோ, படுக்கையாகவோ போட்டுக் கொள்வதும் உண்டு. தென்னிந்தியாவின் இயற்கைப் புல்லான வெட்டிவேரின் புதலியற் பெயர் Coeus Vettiveroides. இந்தக் கோரைப்புல்லைப் பிடுங்கிப் மேலே இருக்கும் தழையையும், கீழே இருக்கும் வேரையும் வெட்டிவிட்டு நடுவிலுள்ள துண்டை மீண்டும் நிலத்தில் நட்டுப் பயிரிடுவதால், இது வெட்டிவேர் எனப் பெயர் வழங்கப் பட்டது.

இதற்கு ஔசீரம் என்ற பெயர் ஏற்பட்டது கொஞ்சம் வியப்பானது. முறிதலைக் குறிக்கும் இன்னொரு தமிழ்வினை ஒசிதல் ஆகும். இதே சொல் பிறவினையாய் வரும் பொழுது, ஒசித்தல் = முறித்தல், வெட்டுதல் என்ற பொருளைக் கொடுக்கும். வெட்டிவேர் ஒசிவேர்>ஒசிவேரம்>ஒசீரம்>ஔசீரம் என்று இருபிறப்பி ஆகி, வடமொழியோ என நம்மை மருட்டுகிறது. பேசாமல் ஒசி வேர் என்றே நல்ல தமிழில் சொல்லிவிட்டுப் போகலாம். தமிழாவது பிழைக்கும்.

ஔசீரத்திற்கு இன்னொரு பொருளும் கவரி மயிரை வைத்து உண்டு. இமையமலைச்சாரலில் இருக்கும் மாந்தர் தம் குளிரைப் போக்கக் கம்பளிப் போர்வை செய்ய வேண்டி, யாக் எருமையின் மயிரை ஒசித்து (பிரித்து) எடுப்பார்கள்; அந்த மயிர் ஒசி + ஓரி = ஒசியோரி>ஒசீரி என்று சொல்லப்படும். ஓரி என்பது மயிர். ஒசீரிப் பொருளான அந்த மயிர் ஒசீரியம்>ஔசீரியம் என்ற திரிவில் வடநாட்டில் வழங்குகிறது. யாக் எருமை தான் கவரி மான் என்று தமிழில் சொல்லப் படுகிறது. மயிர் போக்கிய கவரி மான் உயிர் வாழாது என்பதால் அதன் உயிர் மயிரில் இருக்கிறதோ என்ற குறைப்புரிதல் அந்தக் காலக் குமுகாயத்தில் இருந்ததால் தான்,

"மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"

என்ற திருக்குறள் எழுந்தது.

5. அடுத்த சொல் ஒளசனம். இதற்கு உப புராணம் என்ற பொருளுண்டு. 'பதினெட்டனுள் ஒன்று' என்பது அகரமுதலிகள் சொல்லுவது. பதினெட்டு உபபுராணங்களின் பெயரை நிகண்டுகளிற் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 'அதென்ன உபம், புராணம்?' என்று கேட்டால், "உள்ளே இருப்பது, உள்விக் கிடப்பது, சேர்ந்து கிடப்பது, உவம்" என்று சொல்ல வேண்டியிருக்கும். உள்வம்>உவ்வம்>உவம் என்ற திரிவோடு, வகர, பகரப் போலியில் உவம்>உபம் என்று ஆகும். இதே போல உள்ந்து கிடப்பது உடம்>உடன் என்று ஆகும். உடம்பு, உடன் போன்ற சொற்கள் தமிழென்றால், அப்புறம் உவம் என்பதும் தமிழ் தான்; ஆனாலும், பலர், உபம் என்ற பலுக்கலில் மயங்கி, அதை வட சொல் என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதே போலப் புராணம் என்ற சொல்லும் பழனம்>பழானம்>பராணம்>புராணம் என்ற திரிவே. புராணத்தின் முன்னைய தமிழ்ச்சொல் பழனமே. (தொன்மம் என்ற சொல்லும் பழனத்திற்கு மாற்றாய்ப் பயிலப்படுகிறது.) டிரங்குப் பெட்டி மாதிரி பழம்புராணம் ஓர் இரட்டைச் சொல். வெறுமே பழனமே அமையும். பெரும் பழனங்களுக்குத் துணை வரும் பழனங்கள் உவப் பழனங்கள் ஆகும்.

இனி, உவம்>உவயம்>உவசம் என்ற வளர்ச்சியில் உவச புராணம் என்ற சொல்லாட்சி எழும். பின் அதைத் தொகுத்து உவசனம் என்று வடமொழியர் ஆக்கிக் கொள்ளுவர். உள்ளே உவம் எனும் தமிழ் வேர்; வெளியே ஒரு வடமொழித் தோற்றம்.

6. அடுத்தது ஔசித்யம். உசிதம் என்ற இருபிறப்பியின் அடுத்த திரிவு ஔசித்யம். உ எனும் தமிழ்ச் சுட்டு உயர்ச்சிப் பொருளில் உயத்தம்>உசத்தம் என்ற திரிவில் தகுதி, மேன்மை என்ற பொருளைக் கொடுக்கும். உகரச் சுட்டு, உயர்ச்சிப் பொருளில், தமிழில் பல சொற்கள் உண்டு. உகரம் ஒகரமாய் மாறியும் அதே பொருளைக் கொடுக்கும். (உயத்தம் என்பதன் மீநிலை வளர்ச்சியான உயர்த்தம் என்ற சொல்லும் தமிழ் தானே? "அவர் ரொம்ப உசந்தவருங்க - ஒசந்தவருங்க".) உசத்தம் என்ற வழக்குச் சொல்லின் ஊடே ஓர் இகரவொலி சேர்ந்து, உசித்தம்>ஔசித்யம் என்று திரிந்து, தகுதி என்ற பொருளை வடமொழியிற் கொடுக்கும். ஒளசித்யம் - தகுதி. நல்ல தமிழில் இதை உயத்தம் என்றே சொல்லலாம். (இப்படியெல்லாம் பேசுதற்கு ஓர் உயத்தம் வேண்டாமா? இவரெல்லாம் இதைப் பேசுவதா? ) உசிதம் என்று கொச்சையாய்ச் சொல்ல வேண்டியது இல்லை.

7. அடுத்த சொல் ஔசீவனம். உவம் என்ற முன்னொட்டைப் பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். உய்யித்தல்/உய்வித்தல் என்னும் வினைச்சொல்லிற்கு வாழுதல் என்றே பொருள் உண்டு. அன்றாடப் பேச்சில் உயிர் என்பது உசிர் ஆவது போல உய்வித்தல் என்பது உசுவித்தல் என்றும் சொல்லப் பட்டும். "என்னடா, உசு உசுன்னு இழுத்துக்கிட்டே ஓடியார்றே. கொஞ்சம் நின்னு மூச்சு விட்டு அப்புறம் சொல்லு". உசுவித்தல்>சீவித்தல் என்ற திரிவில் வடபுலத்தில் மூசுதலைக் குறித்துப் பயன்படும். சீவிதம் சீவனம் போன்ற சொற்கள் உய்யித்தம்/ உய்வனம் போன்றவற்றைக் குறிக்கும் வடபுலத்துச் சொற்கள். உய்வனத்திற்கு உவமாய் இருப்பது உவ உய்வனம். வடமொழியில் இது உப ஜீவனம் ஆகும்; support, livelihood என்ற பொருட்பாடுகளை உணர்த்தும்.

அன்புடன்,
இராம.கி.

9 comments:

Anonymous said...

//உல்கு>ஒல்கு என்னும் போக்கில் அசைதல் என்ற கூத்துப் பொருளையும் கொடுத்து//

இதற்கும் ஓழ் எனும் புணர்ச்சியைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

இராம.கி said...

இல்லை. இது வேறு, அது வேறு.

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

கழக அகராதியிலிருந்து பட்டியலிடப்பட்ட சொற்கள் எல்லாம் பெரும்பாலும் வடமொழிச் சொற்களைப் போன்றே இருக்கின்றனவே என்று எண்ணிக்கொண்டே படித்து வந்தேன் ஐயா. பின்னர் நீங்கள் அதனை விளக்கிக் கூறியிருக்கிறீர்கள். நன்றி.

ஒள என்ற ஓரெழுத்து ஒரு மொழி அனந்தன் என்ற பாம்பைக் குறிக்கும் வடசொல்லாக இருக்குமோ என்று தோன்றுகிறது. தேடிப் பார்க்க வேண்டும். எழுத்தின் வடிவத்தைக் கொண்டு நீங்கள் விளக்குவது புரிகிறது. ஒளகார வடவெழுத்து (நாகரி எழுத்து) பாம்பைப் போல் தோற்றம் தருவதில்லை. ஒளகார கிரந்த எழுத்து தற்கால ஒளகாரத் தமிழ் எழுத்தினை ஒத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒள வடமொழியில் விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் போன்ற பொருட்பாடுகளைத் தரும் உபசருக்கமாக அமையும் சில எடுத்துக்காட்டுகளைத் தாருங்கள் ஐயா. புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

உக்கம் என்பதற்கு இடை என்ற பொருளை திருவாய்மொழி படிக்கும் போது கண்டிருக்கிறேன். அதே சொல்லை கோதை நாச்சியாரும் 'உக்கமும் தட்டொளியும் தந்து' என்று புழங்கும் போது உக்கத்திற்கு விசிறி என்று பொருள் சொல்லப்பட்டதையும் கண்டிருக்கிறேன். இங்கு எப்படி உல்குதல் என்ற வேர்ச்சொல் திரிந்தது என்று சொல்லுங்கள் ஐயா. அங்கு ஒல்கு என்ற வேரைக் கொண்டு அசையும் பொருள் என்ற அருத்தத்தைக் கொள்ள வேண்டுமா?

ஒளசரம் என்பதற்குக் கோடாங்கல் என்ற பொருள் முதலில் புரியவில்லை. இப்போது புரிகிறது. :-)

ஒசித்தல் என்ற சொல்லையும் நாலாயிரப் பனுவலில் கண்டிருக்கிறேன் ஐயா. பெரியாழ்வார் தேவகியாய் பாடும் இடத்தில் வரும். வெட்டிவேரை இனி ஒசிவேர் என்றும் புழங்க வேண்டும்.

நான் புராணத்திற்குத் தொன்மம் என்ற சொல்லையே புழங்கிவருகிறேன். இனி பழனத்தையும் புழங்க வேண்டும்.

அருள் மொழி said...

அய்யா, நல்ல கட்டுரை.
ஓரி = மயிர் என்பதற்கு ஏதேனும் இலக்கியச் சான்று உள்ளதா?

nayanan said...

//ஐகாரச் சொற்களிலும் பல சொற்களின் சொற்பிறப்பு வேறெங்கோ இகரத்திலும், எகரத்திலும் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் சொல்ல விழைகிறேன்.
//

ஐயா, இக்கருத்து நிறைய சிந்திக்க வைக்கிறது. மிகவும் பயனுள்ள அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

ஐயா,

சொற்களின் தோற்றம் (வடமொழியா அல்லது தமிழா என்ற கேள்வி) குறித்த குழப்பத்தினால் பெரும் மனத்தாங்களுக்கு ஆளாகி இருந்தேன். தங்களுடைய கட்டுரையை படித்த பிறகு மிக்க நம்பிக்கை ஏற்படுகிறது. ஓர்குட் வலைத்தளத்தில் தமிழுக்கென்று உள்ள குழுமத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.

குழுமத்தில் உள்ள பலரும் அர்வமுடையவர்களே ஒழிய ஆழ்ந்த தமிழறிவு அற்ற சிறுபிள்ளைகள்.
மேலும் ஒரு சில மூடர்களின் பொய் அல்லது அரைகுறைபுரிதல்/அறிவுடன் கூடிய வாதங்கள் இளைய தலைமுறைகளான நாங்கள் உண்மையை அறிவதற்கு பெரும் தடையாக உலதொவென அஞ்சுகிறேன்.
உதவியை எதிர்நோக்கி,

முகில் என்கிற முத்தம்மாள் லிங்கப்பன் சங்கர் கார்முகிலன்.

கீழுள்ள இணைப்பை சுட்டவும்.
http://www.orkut.co.in/Community.aspx?cmm=21978251

நன்றி!

kalvi Saalai said...

அருமை

Anonymous said...

கவரிமான் என்று எதுவும் கிடையாது. அது கவரிமா. பனிக்காட்டு விலங்கு. மானினம் அன்று. குறளைத் திரித்து உளறக் கூடாது.

இராம.கி said...

பெயரில்லா உளறல்கார்ரே!

மாவும், மானும் விலங்குப் பொதுவிற்கு உள்ள பெயர்கள் தாம். நான் உளறுவதாய்ச் சொல்லி நீர் தான் அரைகுறை அறிவில் உளறுகிறீர். நான் deer என்று சொல்லவில்லை. நீர் அப்படிப் பொருள் கொள்ளுகிறீர். இந்த அவக்கரப் புத்தியை விட்டுக் கொஞ்சமாவது அகரமுதலிகளை, நிகண்டுக்ளைப் பார்க்கக் கற்றுக்கொள்ளும். பிறகு முன்னிகை தரலாம்.