Monday, August 13, 2007

வேங்கடத்து நெடியோன் - 3

பின்னால் வந்த எல்லா ஆழ்வார் பாடல்களிலும், "வேங்கடத்தான், வேங்கடவன், வேங்கட வாணன், வேங்கடத்துள்ளான், வேங்கடத்து உறைவான், வேங்கடத்து நின்றான், வேங்கடமுடையான், வேங்கட நாடன், வேங்கடக் கோன், வேங்கட மேயோன், வேங்கடப் பொருப்பன், வேங்கட வெற்பன், வேங்கடாத்தரி, வேங்கட வேதியன், வேங்கடத்து ஆயன், வேங்கடத்து எந்தை, வேங்கடத்து அண்ணல், நீள் வேங்கடத்து எந்தை, திருமலையான், வட மாமலை உச்சி, நெடுவரை உச்சி மேலோன், நெடியோன்" என்ற பெயர்களே ஆளப் படுகின்றன. அந்த மலையும் கூட ஆழ்வார் பாடல்களில் வேங்கடம், வடமலை, திருமலை, அண்ணல் மலை என்றே அழைக்கப் படுகிறது.

ஸ்ரீநிவாசன் என்ற பெயர் ஆழ்வார் பாடல்களில் வேங்கடத்தை ஒட்டி எங்கும் குறிக்கப் படவே இல்லை. பெரும்பாலும், அந்தப் பெயர் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே, விண்ணவர் வழக்கில், எழுந்திருக்க வேண்டும். இதை உறுதி செய்ய, பேரரசுச் சோழர்களின் பிற்காலக் கல்வெட்டுக்கள், பிற்காலப் பாண்டியரின் கல்வெட்டுக்கள், விசயநகரப் பேரரசின் கல்வெட்டுக்கள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். அது ஒரு பெரிய வேலை என்பதால், இன்னும் நான் செய்யாதிருக்கிறேன். (புறனடையாக, திருமலை - திருப்பதி தேவத்தானத்தார் வெளியிட்ட "முந்தையக் கல்வெட்டுக்கள்" என்ற தொகுதியை மட்டும் பார்த்துச் சில செய்திகளைக் கீழே சொல்லியிருக்கிறேன்.)

ஸ்ரீநிவாசன் என்ற பெயர் எப்படி எழுந்திருக்க முடியும்? வடமொழிப் பொருளாய் srinivaasa என்பதற்கு மோனியர் வில்லியம்சில் abode of Sri என்று "திருமகள் இவனுக்குள்ளே குடியிருப்பதைச்" சொல்லுகிறது. அதாவது "திரு வாழும் இடத்தான்" என்றே ஸ்ரீநிவாசனுக்குப் பொருள் கொள்ளுகிறது. [தஞ்சாவூர்ப் பக்கம் "திருவாழத்தான்" என்று சொல்வார்களே, நினைவுக்கு வருகிறதா?] ஆனால் சொற்பிறப்பு அதில் காட்டப் படவில்லை. இந்தச் சொல் பயிலும் இடங்களாய், kaavya, chandomanjari, bhaagavata puraana ஆகிய மூன்றும் அந்த அகரமுதலியில் காட்டப் படுகின்றன.

வாய்மொழியாய் தொன்மக் கதைகளாய் இருந்த வடமொழிக் காவியங்கள் எழுத்து வடிவில் எழுந்தது குத்தர்கள் (=குப்தர்கள்) காலத்தில், சங்க காலத்திற்குப் பின்னால் (கி.பி 300-400) தான்; சந்தமஞ்சரியின் காலம் எனக்குத் தெரியவில்லை; தேடிப் பார்க்க வேண்டும். பாகவத புராணம் சேர்ந்த 18 புராணங்கள் பிற்காலத்தில் கி.பி. 600-1400 க்குள் எழுதப் பட்டதாகத் தான் பல ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். ஸ்ரீ - நி - வாசன் என்பதைப் பிரித்து திருமகள் மார்பில் உறைபவன் என்று தலை கீழாகச் சொல்வதும், பொருந்தாதைப் பொருந்தச் சொல்வதாகத் தெரியும் சமய விளக்கம் ஆகும். [பல சமய விளக்கங்கள், நம் வரலாற்றைப் புறம் தள்ளி, தமிழ் வழக்கைப் புறம் தள்ளி, ஏன் வடமொழி இலக்கணத்தையும் கூடப் புறம் தள்ளி, சொல்லப் படுகின்றன. அந்த விளக்கங்களைக் கேட்பவர்களும் ஏதேனும் அவக்காரம் வந்துவிடுமோ என்று எதிர்க் கேள்வி கேட்பதைக் குறைத்துக் கொண்டு விடுகிறார்கள். எல்லாமே chaltha hai என்று ஆகிவிடுகிறது.]

நாம் மேலும் நினைவு கொள்ள வேண்டியது "மேல் திருப்பதியில் தாயாருக்கு இடம் கிடையாது, அங்கே பெருமாள் மட்டும் தான்" என்ற செய்தியாகும். மேலே மூலவரின் பெயர் திருவேங்கடமுடையான் என்றே இருக்கிறது. (அது ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது.); வேங்கடாசலபதி என்பது வேங்கட மலையானைப் பாதி வடமொழியாக்கி இருபிறப்பிச் சொல்லாய்க் கூப்பிடுவது; பாலாஜி என்பது மிக, மிக அண்மைக் காலப் பெயர். ஸ்ரீநிவாசன் என்ற பெயர் பற்றித்தான் இங்கு பேசிக் கொண்டு இருக்கிறோம். மேல் திருப்பதியின் ஊருலவருக்கு (=உற்சவருக்கு) மணவாளப் பெருமாள் என்றுதான் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்; இந்தக் காலத்தில் அதையும் வடமொழியாக்கி கல்யாண வெங்கடேசர் என்று சொல்லுகிறார்கள்; தமிழ்ப்பெயர் போயே போயிந்தி. ஆனாலும் வேங்கடமுடையான் என்ற கருத்து வடமொழிப் பெயர்ப்பின் உள்ளே நின்று தொனிக்கிறது.

தாயார் அலர்மேல்மங்கை (பத்மாவதி என்பது அப்படியே வடமொழிப் பெயர்ப்பு) திருச்சானூரில் தனித்து இருப்பதாக மரபு. (தமிழ்ப் பேச்சுவழக்கில் இது அலமேலு என்று சுருங்கும்.)

கீழ்த் திருப்பதியில் உறையும் பெருமாளுக்குக் கல்வெட்டுகளின் படிக் கோவிந்தப் பெருமாள் என்றே பெயர். (இன்றைக்கு அதையும் கோவிந்தராசனாக்கித் தமிழல்லாத தோற்றம் காட்டுகிறார்கள். இந்தக் கோவிந்தன் பேரில் தான் திருமலையில் பற்றாளர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கூறுகிறார்கள்.) கீழ்த் திருப்பதியில் உள்ள தாயாருக்குப் புண்டரீக வல்லி என்று பெயர். இதுவும் அலர்மேல் மங்கையின் இன்னொரு வடமொழிப் பெயர்ப்புத் தான்.

காலவோட்டத்தில் வெவ்வேறு காரணங்களால், மூலவருக்கே பேர் மாற்றம் செய்த கதைகள் தமிழ்நாட்டுக் கோயில் வரலாறுகளில் நெடுகவே உண்டு. (முட்டாள் தனமாக, தமிழ்ச் சொல்லின் மூலப் பொருள் புரியாமல், வேறொரு வழிப் பொருளைக் கொண்டு, அதை வடமொழிக்கு மாற்றி அதற்கும் ஒரு தொன்மம் படைக்கும் கூத்துக்கள் நிறையவே உண்டு. திருமரைக்காடு, திருமறைக்காடாகி, வேதாரண்யம் என்று மொழிமாற்றம் பெற்ற கதை பலருக்கும் தெரியும். இது போன்ற கதைகள், காதில் பூவைத்திருப்பவர்கள் இருக்கும் வரை, தொடரும்.) காட்டாக, சென்னை முகப்பேரியில் (முகப்பு ஏரி = முகப்பேரி) இருக்கும் சந்தான சீனிவாசப் பெருமாளுக்கு பழைய பெயர் ஒன்று உண்டு. அந்தக் கோயிலில் இருக்கும் 18 ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களைப் படித்தால் மூலவரின் பழைய பெயர் ஆதிகேசவப் பெருமாள் என்று இருந்திருப்பது புலப்படும். ஆனால் வணிக மயமாகிப் போன இன்றைய நாளில் அதற்குப் பெயர் சந்தான சீனிவாசப் பெருமாள் என்று ஆகிவிட்டது. (கோயிலுக்குள் வணிகம் வளர, வளர, கல்வெட்டுக்கள் வெகுவிரைவில் அழிந்து கொண்டிருக்கின்றன. வணிக நோக்கில் நம் கோயில்கள் அழிவது ஏராளம், ஏராளம்.)

எப்படி என்றால், நாம் 40 ஆண்டு கால வரலாற்றிற்கு முன்னால் போக வேண்டும். 1968ல் சென்னையில் ஒரு பெரிய பொருட்காட்சி நடத்தினார்கள். அப்பொழுது அண்ணா நகர் என்னும் குடியிருப்பு உருவாக்கப் பட்டது. இந்தப் பெருமாள் கோயில் ஒரு தனியார் நிலத்தில், அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பொறுப்பில், இன்றைய அண்ணா நகர் ரவுண்டானாவிற்கு அருகில் 1968 -ல் இருந்தது. பின் அண்ணா நகர் அமைந்த போது, நிலம் கொள்முதலில் அப்படியே கல், கல்லாகப் பெயர்த்து, இன்றைய முகப்பேரிக்குப் போயிருக்கிறது. (இத்தனைக்கும் கோயில் 8, 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.) முகப்பேரிக்குப் போன பிற்பாடு தான், மூலவர் பெயர் மாறியிருக்கிறது. முகப்பேரி என்ற புது இடத்தின் பொருளையே மாற்றி யாரோ ஒரு விவரமானவர், "எதில் மக்கள் சிக்குவார்கள்?" என்று பார்த்து, "மகப்பேறு கொடுப்பவர்" என்று ஒரு கதையை இட்டுக் கட்டி, முகப்பேரிக்கு மாறாய் மகப்பேறு என்று இல்லாத பொருள் சொல்லி, மேலும் "சீனிவாசன் என்றால் ஆட்கள் கூடுவார்கள்" என்ற உந்துதலில் "சந்தான சீனிவாசப் பெருமாள்" என்று கூட்டுப் பெயரை உருவாக்கி, அதுவரை இல்லாத ஒரு தொன்மத்தையும் உருவாக்கி, 1993 - 94 ல் அண்ணா நகரெங்கும் ஒரு பெரிய பரப்புரை செய்து, கூட்டம் கூட்டி, இன்று கோயில் ஓகோ என்று இருக்கிறது. (எனக்குப் பிடித்த பெருமாள் கோயில்களில், மூலவரின் திருமேனிகளில், இதுவும் ஒன்று என்பது வேறு புலனம். நான் சொல்ல வருவது இப்படி இட்டுக் கட்டும் தொன்மங்கள் பற்றியே ஆகும்.)

நெடியோன் கோயில் எப்படி ஸ்ரீநிவாசன் கோயில் ஆனது? மீண்டும் ஸ்ரீ - நி - வாசன் என்ற வடமொழிப் பிரிப்பிற்கு வருவோம். வாசன் என்பவன் வசிக்கிறவன். "திரு மார்பில் இருக்க, வசிக்கிறவன்" என்றால் அது மிகவும் பொதுமையாக இருக்கிறது; திருமால் கோயில்கள் எல்லாவற்றிலும் தான், மேலே சிலம்பின் காடுகாண் காதை 11:41-51- இற் சொன்னது போல், விண்ணவன் என்பவன் "நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு" இருக்கிறான். "நலங்கிளர்" என்று சொல்லும் போது திருமகள் ஆரத்தில் இருக்கிறாள் என்று பொருள். திருவும் நலமும் ஒன்றுதான்.

தவிர, பதிதல் என்பற்குத் தமிழில் உள்ள பொருள் "ஓரிடத்தில் இருப்பதும், வசிப்பதும் தான்". பதிதல்>வதிதல் என்று திரியும். வதிதல் என்பது வடமொழிப் பலுக்கில் வசித்தல் என்று ஆகும். திருப்பதியான் என்பதே தமிழ் முறைப்படி ஸ்ரீநிவாசன் என்ற பொருள்தான் கொள்ளும். ஆனால் திருப்பதி என்பது திருமலை அல்லவே? அது மலையடிவார ஊர் அல்லவா? மேலே இருக்கும் திருமேனிக்கு திருப்பதியான் என்ற பெயரை நாம் எப்படிச் சொல்லுவது? திருமலையான் என்றல்லவா சொல்ல வேண்டும்? (திருமலையான் என்ற பேரும் பல விண்ணவர்களுக்கு இருக்கிறதல்லவா?) திரு. ஜி.ராகவன் சொன்னது போல் திருக்குடி என்றெல்லாம் புதிதாகச் சொல்ல வேண்டுவதில்லை. திருப்பதியான் என்ற சொல்லே மேலோட்டப் பொருண்மையைப் பார்த்த வகையில் (ஆழ்ந்த பொருண்மையில் அல்ல) ஸ்ரீநிவாசனுக்கு இணையாய் அமைய முடியும்.

ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது.

வேங்கடத்தில் இருப்பவனுக்கு என்று ஓர் ஓரிமை (uniqueness) இருக்க வேண்டுமே? அது என்ன? ஆறு அரத்து (=அறுத்து) வந்த அரங்கத்தில் இருப்பவன் அரங்கன் என்று ஆனதைப் போல, கீழே தலத்தில் சாய்ந்து கிடப்பவன் தல சயனப் பெருமாள் (கடல் மல்லையில் இருக்கும் பெருமாள்) என்று ஆனது போல, ஒரு விதப்பான பெயர் அல்லவா வேங்கடத்தில் இருப்பவனுக்கு அமைய வேண்டும்? ஸ்ரீநிவாசனில் அப்படி ஒரு விதப்பு இல்லையே? "திருவானவள் தன்னுள்ளே வசிக்க இருப்பவன்" என்பது ஒரு தட்டையான பெயராய், இருக்கும் இடத்திற்குப் பொருந்தாத பெயராய், அமைகிறதே? இத்தனைக்கும் அருகில் திருமகள் இல்லாமல் அங்கே அவன் தனித்து நிற்கிறானே? அப்புறம் எப்படி ஸ்ரீநிவாசன் என்று வரும்? ஆனாலும் அந்தப் பெயர் இன்று வழக்கில் இருக்கிறது.

இனி நி என்ற வடமொழி இடைச்சொல்லிற்கும் வருவோம். அதற்கு என்ன பொருள்? மோனியர் வில்லியம்சில் down, back, in, into, within என்ற பொருண்மைகளைக் கொடுத்து இந்தச் சொல் வினைச்சொல் அல்லது பெயர்ச்சொல்லின் முன்னொட்டாய் சேர்க்கப் படும் என்றும், சில போது எதிர்மறைப் பொருள் கொண்டு தரவும் இது சேர்க்கப் படும் என்றும் குறித்திருக்கிறது. அப்படியானால், இடைச்சொல்லின் பொருள் பார்க்கும் போது, ஓடு, உடன் என்ற பொருட்பாடுகள் இல்லாத நிலையில், திருவோடு உறைபவன், திருமகள் கேள்வன் என்ற இணைச்சொற்களாய்க் காட்டப்படுபவை எல்லாம் பொருத்தம் இல்லாதவையாகவே தோன்றுகின்றன.

ஸ்ரீநிவாசன் என்ற பெயரைக் கல்வெட்டுக்களில் பதிவு செய்ததை, திருப்பதியை ஒட்டி உள்ள கல்வெட்டுக்களில் பார்த்தால் அது மிகுந்த ஆண்டுகள் கழித்து, விசயநகர அரச காலத்தில் தான் பதிவு செய்யப் படுகிறது. காட்டாக, திருமலை-திருப்பதி தேவத்தானம் 1998ல் வெளியிட்ட "முந்தைய கல்வெட்டுக்கள்" என்ற பொத்தகத்தில் 199 ஆம் கல்வெட்டாய், திருமலைக் கோயிலின் முதற் சுற்றாலையில் (=பிரகாரத்தில்) ஆவணப் பதிவு அறையின் (record room) வெளியோடியில் (verandah) வடக்குச் சுவரின் வெளிப்பக்கத்தில் இருக்கும் கல்வெட்டில் 4 வது வரியில், "திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களில் முதலியார் திருக்கலிகன்றிதாஸர் அகரமான ஸ்ரீநிவாச புரத்தில்" என்ற குறிப்பு வருகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1444 அளவில் இருக்கலாம்.

இதே கல்வெட்டில் திருமலைப் பெருமாளின் பெயர் வேங்கடமுடையான் என்றே குறிக்கப் படுகிறது. முதலியார் என்ற வழக்கு அந்தக் காலத்தில் சாதியைக் குறிப்பிடும் சொல் அல்ல; அதற்கு முன்னவர், முதலாகக் கருதப்படும் பெரியவர், என்றே பொருள் உண்டு. கலிகன்றி என்பது திருமங்கையாழ்வாரின் இயற்பெயர். கலிகன்றிதாஸர் என்பது கலிகன்றிக்குத் தாஸர் என்று பொருளில் ஒரு விண்ணவப் பார்ப்பனரைக் குறிக்கிறது. அகரம் என்ற தமிழ்ச்சொல் இன்று அக்ரஹாரம் என்று திரிக்கப் பட்டு வடமொழி போல் தோற்றம் காட்டும் அருமையான தமிழ்ச்சொல். அகரம் என்பது இங்கே பார்ப்பனர் குடியிருப்பு.

ஆக 1444 ல் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீநிவாசபுரம் என்பது கீழ்த்திருப்பதியின் அருகே உள்ள குடியிருப்பு. திருப்பதியான் என்ற பொருளை ஸ்ரீநிவாசன் என்ற சொல் தரும் என்று முன்னே குறித்திருந்ததை நினைவு கொள்ளுங்கள். அடுத்து அதே பொத்தகத்தில் குறிப்பிடப்படும் கல்வெட்டு எண் 201 இலும் இந்த ஸ்ரீனிவாசபுரம் குறிப்பிடப்படுகிறது. தவிர அந்தக் குடியிருப்பினுடைய இயற்பெயரும் சித்தக் குட்டை என்றும் 201- ஆம் கல்வெட்டில் சொல்லப் படுகிறது.

பொதுவாகப் பல்லவர் காலத்தில் இருந்து, சோழ, பாண்டிய, விசய நகர அரசு வரை, அரசர்கள் பல்வேறு காரணங்களுக்காக, ஓர் இயல் ஊரை அங்கு ஏற்கனவே இருப்போரிடமிருந்து வரி காரணங்களால் வலிந்தோ, பணம் கொடுத்து வாங்கி மெலிந்தோ, பெற்று, பார்ப்பனருக்குத் தானமாய்க் கொடுப்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. அப்பொழுது விண்ணவன் கோயிலைச் சேர்ந்த பார்ப்பனருக்கு உரிமையாய் அமைந்தால் அந்த ஊர் திருவிடையாட்டம் என்று சொல்லப் படும். [சிவன் கோயிலுக்குக் கொடுத்தால் தேவதானம் என்றும், அல்லிருமைப் (அத்வைதப்) பார்ப்பனருக்குக் கொடுத்தால் அது பெருமதேயம் (ப்ரம்ம தேயம்) என்றும், சைனருக்குக் கொடுக்கும் போது பள்ளிச்சந்தம் என்றும் சொல்லப் படும்.] இந்த 201 ஆம் கல்வெட்டின் படி சித்தக் குட்டை என்னும் ஊரே ஸ்ரீநிவாசபுரம் என்ற பெயரில் திருவிடையாட்டமாய் மாறியிருக்கிறது. (சித்தக் குட்டை என்ற பெயர் சைன, ஆசீவகம் பற்றி ஓர்ந்து பார்க்கத் தூண்டுகிறது. ஆய்வு செய்ய வேண்டும்.)

202- ஆம் கல்வெட்டிலும், 217 - ஆம் கல்வெட்டிலும் (இதன்படி, ஸ்ரீநிவாசபுரம் என்னும் குடியிருப்பு திருப்பதியில் தென்சீர்மையில் சிங்கர் கோயில் தெருவுக்குத் தெற்கில் இருந்திருக்கலாம்.) 224 - ஆம் கல்வெட்டிலும் (ஸ்ரீநிவாச புரத்தில் வீர நரசிம்ஹப் பெருமாள் கோயில் இருந்தது.) மேற்கொண்டு சில செய்திகளை அறிகிறோம்.

ஆக ஸ்ரீநிவாசபுரம் என்ற சொல் கீழ்த் திருப்பதியை ஒட்டியே இருந்திருக்கிறது. "எப்பொழுது திருமலையின் மூலவருக்கு இந்தப் பெயர் போனது?" என்ற கேள்விக்கு நான் பார்த்தவரை விடை தெரியவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். விசயநகரக் கல்வெட்டுக்களிலும் கூட திருமலையின் மூலவர் வேங்கடமுடையான் என்றே அழைக்கப் படுகிறார்.

இனி, நான் சொல்லப் போவது ஒரு முன்னீடு (proposal) மட்டுமே; இது முடிந்த முடிவு அல்ல. எனவே யாரும் பாய்ந்து வந்துவிடாதீர்கள். எந்த ஓர் ஆய்விற்கும் முதலில் முன்னீடு வேண்டும். பின்னால் அதை நிறுவிக்கலாம், அல்லது, தூக்கிப் போடலாம். எது சரி என்று எனக்கு இப்பொழுது தெரியாது.

பொதுவாய், நெடியோன், உயர்ந்தோன் என்பதைத் தமிழில் நிவந்தோன் என்றும் சொல்லலாம். நிவத்தல் என்பது உயர்தல், வளர்தல், மேலாதல். இவை அத்தனையும் திருவிக்கிரம அவதாரத்தில் நடந்தவையே. நிவத்தலின் இன்னுமொரு வடமொழித் திரிவாய் நிவேதனம் என்ற சொல் கிளர்ந்து தெய்வத் திருமேனிகளின் முன்னால் தமிழ் ஆகம முறைப்படி படையலை உயர்த்திக் காட்டுவது குறிப்பிடப்படும். (படையலை உயர்த்திக் காட்டுவது வேதமுறையே கிடையாது. அது ஆகம முறை. வேத முறையில் கீழ்நோக்கிச் சாய்த்து ஆகுதி ஆக்க வேண்டும்.)

(வேதமுறை வேறு, ஆகம முறை வேறு என்று சொன்னால் பலரும் புருவத்தை உயர்த்தலாம், இது என்ன குழப்பம் என்றும் நினைக்கலாம். வேதநெறிக்காரர்கள், அல்லிருமைக்காரர்கள், கோயிலுக்குள் புகுந்தது எல்லாம் பின்னால் வந்த மரபு. வரலாற்றின் ஒரு பொழுதில் இந்த வேதம், ஆகமம் ஆகிய இருவேறு முறைகளும் தனித்தே வைக்கப் பட்டு இருந்தன. பின்னால் ஏதோ ஓர் உந்துதலில், சேர்ந்து போயின. இந்தக் கால சிவநெறி, விண்ணவ நெறி ஆகியவற்றில் இருக்கும் கோயிலொழுகுகள் ஆகமநெறி, வேதநெறிப் பழக்கங்களின் கூட்டுக் கலவையே ஆகும்.)

நிவேதத்தை மீண்டும் தமிழில் கடன் வாங்கி நிவேத்தியம்>நைவேத்தியம் என்று சொல்ல முற்படுவார்கள். தமிழ்ப் பலுக்கோடு இருக்க வேண்டுமானால் நிவந்தம் என்றே நைவேத்தியத்தைச் சொல்லலாம். நமக்கும் நம் ஆகம முறைகள் ஒழுங்காய்ப் புரிபடும். [கோயிலுக்கென முன்வந்து உரிமையாய் விடும் நிலமும் கூடத் தமிழ்க் கல்வெட்டுகளில் நிவந்தம் என்றே குறிக்கப் படும். முன்வருவதும் தமிழ்மரபில், ஓர் உயர்ச்சி தான்.]

இனி, விந்த மலை என்பது, விஞ்ச மலை என்று போலி ஒலிப்புப் பெறுவதைப் போல, அய்ந்து என்பது அஞ்சு என்று ஆவதைப் போல, நிவந்தன்>நிவஞ்சன் என்று ஆகிப் பின்னால் நிவாஞ்சன்>நிவாசன் என்று மூக்கொலி இல்லாமல் ஆவதும் மொழிப் பலுக்கலில் இயல்பாக அமையக் கூடியது தான். (வந்தாங்க என்பது எங்கள் பக்கம் வந்தாக என்று ஆவது எப்படி? வைதாங்க/வைஞ்சாங்க/வைதாக என்பதெல்லாம் வசை என்னும் பெயர்ச்சொல்லை எப்படி உருவாக்குகிறது?) அப்படி நிவாசன் என்று ஆகும் போது நெடியோன் என்ற பொருளும் நீண்டு நிலைக்கிறது. ஆனால் இதற்குச் சான்று? இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைப்பின் சொல்லுகிறேன். அதே பொழுது, "திருமகளைத் தன் மார்பில் இருக்க வைத்திருப்பவன்" என்ற பொருள் ஏரண முறையில் பார்த்தால் சரியென்று தோன்றவில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். திருமலையான், "நெடியோன்" என்றுதான் தொன்றுதொட்டு 2500 ஆண்டுகளாய் தமிழில் அழைக்கப் பெறுகிறான் என்று அழுத்தமாகச் சொல்லலாம்.

இதுவரை மேலே சொன்னவற்றில் நான் தொடாத ஒரு புலனமும் உண்டு. திருமலையான் நெடியோன் மட்டும் தானா அல்லது இரண்டுருவின் கலப்பா என்ற அய்யத்தைப் பற்றியது. (இங்கே கருத்தியல் கலப்பைச் சொல்லவில்லை; அந்தத் திருமேனியில் நம் கண்களுக்குத் தெரியக் கூடிய சிற்பக் கூறுகளையே பார்க்கச் சொல்லுகிறேன். அந்தப் பெரிய நாமம் .......) கீழே உள்ள பாடலை ஆழ்ந்து படியுங்கள். இது இயல் விவரிப்பா, அன்றி மனத்துள் எழுந்த கருத்தியல் உருவகமா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து

- பேயாழ்வர், மூன்றாம் திருவந்தாதி 63.

அன்புடன்,
இராம.கி.

13 comments:

Anonymous said...

நிறம்பத்தெரிந்து கொண்டேனய்யா....
ஒரே மூச்சில் மூன்று பகுதிகளையும் படித்தேன்.

மிக்க நன்றி...

மெளலி.

Anonymous said...

ஐயா, இலங்கையில் முதலியார் என்ற சொல் ஊர் பெரியவரை குறிப்பிடவே இன்றும் பயன்படுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முதலியார் என்ற வழக்கு அந்தக் காலத்தில் சாதியைக் குறிப்பிடும் சொல் அல்ல; அதற்கு முன்னவர், முதலாகக் கருதப்படும் பெரியவர், என்றே பொருள் உண்டு//

பெருமாளின் படைத் தலைவரையும் சேனை முதலியார் என்றே குறிக்கிறார்கள்!

//நிவந்தன்>நிவஞ்சன் என்று ஆகிப் பின்னால் நிவாஞ்சன்>நிவாசன் என்று மூக்கொலி இல்லாமல் ஆவதும் மொழிப் பலுக்கலில் இயல்பாக அமையக் கூடியது தான்//

//ஸ்ரீநிவாசனில் அப்படி ஒரு விதப்பு இல்லையே? "திருவானவள் தன்னுள்ளே வசிக்க இருப்பவன்" என்பது ஒரு தட்டையான பெயராய், இருக்கும் இடத்திற்குப் பொருந்தாத பெயராய், அமைகிறதே?//

இதற்கான விடையை அடியேனும் தேடிச் சொல்கிறேன் இராம.கி ஐயா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மேல் திருப்பதியின் ஊருலவருக்கு (=உற்சவருக்கு) மணவாளப் பெருமாள் என்றுதான் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்; இந்தக் காலத்தில் அதையும் வடமொழியாக்கி கல்யாண வெங்கடேசர் என்று சொல்லுகிறார்கள்; தமிழ்ப்பெயர் போயே போயிந்தி//

கல்யாண வேங்கடேசர் என்பது உற்சவ மூர்த்தி இல்லை இராம.கி ஐயா!

உற்சவ மூர்த்திக்கு இன்றும் மலையப்ப சுவாமி என்று தான் திருப்பெயர் வழங்கப்படுகிறது. மலையப்பன் என்னும் அழகிய தமிழ்ப் பெயரோடு சுவாமி-யைச் சேர்த்துக் கொண்டார்கள் போல!
மலைக் குனிய நின்றான் பெருமாள் என்றும் வழங்கப்படுகிறார்.

திருமலையில் மொத்தம் ஐந்து மூர்த்திகள் உண்டு.
மூலவரும், மலையப்பரான உற்சவரும் இல்லாது இன்னும் மூன்று திருவுருவங்கள்.

வேங்கடத்துறைவார் என்னும் ஸ்நாபன மூர்த்தி
கல்யாண வேங்கடேசர் என்னும் போக மூர்த்தி
கொலு ஸ்ரீநிவாசர் என்னும் பலி மூர்த்தி

நீங்கள் குறிப்பிடும் மணவாளப் பெருமாள் இந்தப் போக மூர்த்தி தான். இவருக்குத் தான் போகங்களான திருக்கல்யாணம், தினப்படி திருமஞ்சனம், இரவு சயன சேவை எல்லாம் நடைபெறுகிறது.
ஆனால் இவர் உற்சவர் அல்லர்!

உற்சவர் (ஊருலாப் பெருமாள்) மலையப்பன் தான்! அவருக்குத் தமிழ்ப் பெயர் இன்னும் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அது மகிழ்வான ஒன்றும் கூட!

G.Ragavan said...

அப்பாடி.....எவ்வளவு தகவல்கள். பொறுமையாக உட்கார்ந்து படித்தேன். தொடருக்குக் காத்திருக்கிறேன்.

திருக்குடி என்ற பெயரை ஸ்ரீநிவாஸ் என்ற சொல்லுக்கு உருவாக்கினேன். ஆனால் அந்த ஸ்ரீநிவாசத்துக்குள் இவ்வளவு தகவல்கள் இருக்குமென்று இப்பொழுதுதான் தெரிகிறது.

குமரன் (Kumaran) said...

ஐயா. இந்த இடுகைக்கு இன்னும் நிறைய சொல்ல வேண்டும். அருமையாக இருக்கிறது. மீண்டும் வந்து சொல்கிறேன். இப்போதைக்கு உடனே நினைவிற்கு வந்த இரண்டு பாசுரங்களை மட்டும் சொல்லிச் செல்கிறேன்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றும் உடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!

இந்த நம்மாழ்வார் பாசுரம் மிகப்பிரபலம். இங்கே திருவேங்கடத்தானை அடைக்கலமாய்ப் புகும் போது அலர்மேல்மங்கை உறை மார்பா என்றே சொல்லிப் புகுகிறார். அங்கேயே இந்த ஸ்ரீநிவாசன் என்ற பெயருக்கு அடித்தளம் அமைத்தாகிவிட்டது போல் தோன்றுகிறது.

நாச்சியார் திருமொழியில் வரும் பாசுரம்:

மின்னாகத்தெழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னாகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே!

இங்கே தெளிவாக 'வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு' என்கிறாள். நேரடியாக வேங்கடவன் என்றாற் போல் ஸ்ரீநிவாசன் என்று சொல்லாவிடினும் 'திருவானவள் தன் மார்பில் வசிக்க இருப்பவன்' என்ற பொருளில் நேரடியாக வேங்கடவனை இணைக்கிறாள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவ்வளவு விடயத் தொகுப்பு!
நன்றி ஐயா!

இராம.கி said...

அன்பிற்குரிய மௌலி,

வருகைக்கும், கனிவிற்கும் நன்றி

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

விவரத்திற்கு நன்றி. முதலியார் என்ற சாதிப் பெயர் கூட படைமுதலி என்ற அரசப் பதவிகளின் பெயரை ஒட்டியே அமைந்தது. சாதிப் பெயர்த் தோற்றங்கள் பற்றிக் கூட விவரமாய் இன்று எழுதமுடியாமல் இருக்கிறது.

அன்பிற்குரிய கண்ணபிரான் ரவி சங்கர்,

விவரத்திற்கு நன்றி. உங்கள் தேடுதல் தொடரட்டும். செய்தி புதியதாய் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கண்ணபிரான் ரவிசங்கர்,

நீங்கள் இன்றைய வழக்கைச் சொல்லுகிறீர்கள். நான் முந்தைய வழக்கைச் சொல்லுகிறேன். திருமலை, திருப்பதியில் இருக்கும் எல்லாக் கல்வெட்டுக்களும் ஊருலவர் பெயரை மணவாளப் பெருமாள் என்றே சொல்லுகின்றன. அவற்றின் படி, அந்த மணவாளப் பெருமாள் திருமேனி 1000, 1400 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இருந்திருக்க வேண்டும்.

1984-ல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் வெளியிட்ட தி லிட்டில் ப்ளவர் கம்பெனியின் வெளியீட்டிலும் (இரண்டாம் பகுதியில்) ஒவ்வொரு கோயிலின் மூலவர், ஊருலவர் பெயர்கள் கொடுக்கும் போது, திருமலைக்கு கல்யாண வெங்கடேசர் என்றுதான் கொடுத்திருக்கிறார்கள்.

1995 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களில், ஆன்மீகத் துறையின் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்டு, தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூலான "108 வைணவ திவ்ய தேச ஸ்தல வரலாறு" என்னும் பொத்தகத்திலும் கூடக் கல்யாண வெங்கடேசரைத்தான் ஊருலவராகக் குறித்திருக்கிறார்கள். [பின்னால் சொன்ன பொத்தகம், காரைக்குடியில் உள்ள ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. பெரும்பாலான பெரிய பெருமாள் கோயில்களில் வெளியே விற்பனையாகும் பொத்தகம். திருப்பெரும்புதூர் ஜீயர், ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஆகியோர்களாலும் வாழ்த்துரை பெற்றது.]

இன்னொன்றும் சொல்லவேண்டும். ஊருலவர் திருமேனிகள், வெவ்வேறு கொடையாளிகள் ஏற்படுத்துவதால், ஒன்றிற்கும் மேல் ஒரு கோயிலில் இருக்கலாம். கால மாற்றத்தில், புதிய திருமேனிகளைப் புறப்பாட்டிற்கு வைத்துக் கொண்டு, பழையவற்றைக் கோயிலுக்குள் ஒரு சில சடங்குகளில் மட்டுமே எழுந்தருளச் செய்யலாம்.

நீங்கள் சொல்லும் நடைமுறைகள் ஒருவேளை பின்னால் எழுந்திருக்கலாம். அந்தப் புதிய நடைமுறைகளை ஆவணமாக்கிப் பொத்தகங்கள் வந்திருப்பின், நான் அறிந்தேனில்லை.

அன்பிற்குரிய ராகவன்,

திருக்குடியானைக் காட்டிலும், திருப்பதியான் என்றே சொல்லலாம். அதே பொழுது திருமலையான் என்பது இன்னும் சிறக்கும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

உங்கள் முன்னிகைக்கு நன்றி. நீங்கள் இங்கு எடுத்துரைக்கும் பாசுரங்களை அறிவேன். நான் அலர்மேல் மங்கை உறை மார்பன், திருமங்கை தங்கிய மார்பன் என்ற பெயர்களை அறியாதவனும் இல்லை. நான் சொல்ல வந்தது மிக எளிதானது. இந்தப் பொருள் மற்ற ஊர்களில் இருக்கும் பெருமாளுக்கும் பொருந்திவருமே! பின் எப்படி திருமலைப் பெருமாளுக்கு விதப்பாகப் பொருந்தும்? எதனால் இப்படி ஆனது?

நம்மாழ்வார் பாசுரத்தையும், ஆண்டாள் பாசுரத்தையும் படிக்கும் போது பெருமாளின் எத்தனையோ பொதுப்பெயர்களில் ஒன்றை இங்கு எடுத்து வைத்ததாகத் தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் ஆண்டாள் பாசுரத்தில் திருமகளோடு போட்டி போடும் கோணத்தில், ''என் ஆகத்து இளங்கொங்கை பொன் ஆகம் புல்குதற்கு நடுவில், அந்த மார்பில் இவள் தங்கி இருக்கிறாளே" என்ற ஏக்கம் தான் தொனிக்கிறது. ஆக அகவுணர்வு மேலெழும்பிய இந்தப் பாட்டில் "திருமங்கை தங்கிய சீர் மார்பன்" என்று வருவது முற்றிலும் பொருத்தம் தான். ஆனாலும் இது என்ன திருவேங்கடத்தில் மட்டுமா? பரம பதத்திலும், திருப்பாற்கடலிலும் தானே நடக்கிறது? அப்புறம் எப்படி ஸ்ரீனிவாசன் என்பது திருமலையானுக்கு விதப்பாகும்?

இந்தக் கேள்வியின் அடிப்படை அப்படியே நிற்கிறது, நண்பரே! இடத்தோடு பொருந்தாத பொதுமைப் பெயர்களும் பெருமாளுக்கு உண்டு; இடங்களோடு பொருந்திய விதப்பான பெயர்களும் உண்டு. என்னுடைய கூற்று: ஸ்ரீனிவாசன் என்பது ஒரு பொதுமைப் பெயர். எப்படியே அதை வேங்கடத்தோடு பின்னால் வந்தவர்கள் பொருத்தியிருக்கிறார்கள். ஆழ்வார்கள் காலத்தில் இந்தப் பெயர் வேங்கடமுடையானுக்கு விதப்பாய் இருந்ததாய், அவர்கள் பாடல்கள் மூலம் முற்றிய முடிவிற்கு வர இயலவில்லை.

நீங்கள் காட்டிய நம்மாழ்வார் பாசுரத்திலேயே கூட மற்ற பொதுமைப் பெயர்களோடு, திருவேங்கடத்தான் என்ற விதப்புப் பெயர் இருக்கிறது.

ஆண்டாள் பாட்டில், வேங்கடத்தில் உலவும் மேகங்களோடு பேசும் பொழுது, ஒரு கேள்வி எழுப்புகிறாள், அவ்வளவு தான். இங்கும் அதில் ஒரு பொதுமைப் பெயரையே,தான் சொல்லும் கருத்திற்குப் பொருந்திய வகையில், சொல்லுகிறாள். 'வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு' என்பது திருமலைக்கே உரிய விதப்பான பெயராக இருந்தால், அந்த மேகவிடு தூதுப் பதிகம் முழுதும் ஒவ்வொரு பாட்டிலும் ஆண்டாள் சொல்லியிருப்பாளே? சொல்லவில்லையே? அந்தப் பதிகம் முழுக்க வெவ்வேறு பொதுமைப் பெயர்களும், குறிப்புகளும், சில விதப்புப் பெயர்களுமே வருகின்றன.

அதில் வரும் பொதுமைப் பெயர்கள் - வேங்கடத்து என் திருமால், வேங்கடத்துச் சமத்தின் நிறங்கொண்ட தாடாளன், வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கியசீர் மார்பன், இரணியனை உடலிடந்தான், நலங்கொண்ட நாரணன், வேங்கடத்துப் போர்காலத்து எழுந்தருளிப் பொருதவன், பாம்பணையான் ஆகியவை ஆகும்.

அதில் வரும் விதப்புப் பெயர்கள்- வேங்கடத்துச் செங்கண்மால், வேங்கடத்து என் கோவிந்தன், வேங்கடக்கோன் ஆகியவையாகும். இவற்றிலும் செங்கண்மால், கோவிந்தன் என்பவற்றை வேறு காரணங்கள் சொல்லி மறுக்க முடியும்.)

இத்தனைக்கும் இவள் திருமலையானுக்கா வாக்கப் பட்டு வந்தாள், அரங்கனுக்கல்லவா வாக்கப் பட்டு வந்தாள்?

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய யோகன்,

உங்கள் வர்கைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

நிவாசன் எப்படி நிவந்தன் என்பதன் பலுக்கல் திரிபு என்ற உங்கள் முன்னீடு ஏரணத்திற்கு ஏற்றதாக இருக்கிறது ஐயா. நிறுவும் தரவுகள் கிடைத்தால் சொல்லுங்கள் ஐயா.
//
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து

- பேயாழ்வர், மூன்றாம் திருவந்தாதி 63.
//
நீண்முடி இப்போதும் இருக்கிறது. தாழ்சடை இருக்கிறதா தெரியாது. சக்கரம் இணைக்கப்பட்டதாக இருக்கிறது. ஒண்மழு? சூழரவு இருக்கிறது நாகாபரணமாக. பொன்னாண் இருக்கிறது. இவ்வளவு சொல்லிவிட்டு 'தோன்றுமால்' என்று மாலவனைத் தான் குறிக்கிறார் ஆழ்வார். ஆனால் இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து என்று வேறு குறிப்பும் கொடுக்கிறார். நீங்கள் சொல்லும் புலனத்தைப் பற்றி பலர் கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதனை மேலும் பார்க்கவேண்டும்.

வபிமுமு சக்திவேல்ராசா said...

அருமை.
செய்திகள் சான்றுகளுடன்..ஶ்ரீ