Tuesday, March 20, 2007

அதிட்டம்

சொல் ஒரு சொல் பதிவில் இட்ட இந்தப் பின்னூட்டம், இங்கு தனிப் பதிவாகச் சேமிக்கப் படுகிறது.
-----------------------------------

அதிட்டம் பற்றிய இடுகையைப் படித்தேன். இங்கு பலரும் கூறிய நல்லூழ், ஆகூழ், புண்ணியம், பாக்கியம், (இன்னும் பலர் சொல்லாத நற்பேறு) போன்ற மாற்றுச் சொற்களைப் பற்றி நான் இங்கு சொல்ல வரவில்லை. அதிட்டத்தோடு மட்டுமே தற்போதைக்கு நின்று கொள்கிறேன்.

அதற்கு முன்னால் ஊழ் பற்றிய கருத்து முரணை மாற்று முகத்தான், ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். ஊழ் என்பது determinancy. அது முன்னால் ஏற்பட்ட நிலை. given, a priori, condition. This word does not talk about the right and wrongness of the actions performed. ஊழ் என்பது வெறுமே இயற்கையை மாந்தன் அவதானிப்பதிலேயே புரிந்துவிடும். இலக்கியப் பதிவுகளின் படி பார்த்தால், ஊழ் என்னும் கோட்பாட்டை ஆழ்ந்து உரைத்தவன் தமிழன் தான். ஊழைப் பற்றிய ஒரு சிறப்பான பாடல் நாமெல்லோரும் அறிந்த கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல் ஆகும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

இதைப் பற்றி பெரிய விளக்கமாய் எழுதலாம் என்றாலும், சுருக்கமாய் இங்கு சொல்லுகிறேன். இது போன்ற மெய்யியற் பாட்டுக்கள் சங்க இலக்கியத்தில் ஓரளவு இருக்கின்றன; தமிழரின் அடிப்படைப் புரிதலையும் உணர்த்துகின்றன. இதில் வியப்பு என்னவென்றால், நம்மில் பலரும் இந்தப் புரிதலை இன்றும் கொண்டிருக்கிறோம். தமிழருக்கு இது இயல்பாய் வருவதொன்று.

"எல்லா ஊரும் எங்கள் ஊர்தான்; எல்லோரும் எங்கள் உறவுகள் தான்; தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை; துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான். செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை. வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை. மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;

வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் யாற்று நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் புனையைப் போல, அரிய உயிரியக்கம் ஆனது முன்னால் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை; சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை." [இங்கே காட்சி என்பது ஞானம் என்பதற்கான மாற்றுச் சொல்; இதைத் தரிசனம் என்றும் வடமொழி நூல்கள் கூறும். (தரிசனம் என்பது கூடத் தெரியனம் தான். தெரியனம்>தரிசனம்; தீவம் காட்டியதில் சாமித் தெரியனம் நன்றாய்க் கிடைத்ததா? - தீவம் காட்டியதில் சாமி நல்லாத் தெரிஞ்சுதா?) தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள இருதடப் போக்கை அறியாமல், அதை ஏற்காமல், எல்லாவற்றையும் மேலிருந்து பள்ளம் - வடமொழியில் இருந்து தமிழ் - என்ற ஒரு திசைப் போக்கையே சொல்லிக் கொண்டிராமல், வெறுமே வேதம், வேதம் என்று பாராயணம் பண்ணிக் கொண்டிராமல், பார்த்தால் ஒழிய, இந்திய மெய்யியலை நாம் ஒழுங்காகப் புரிந்து கொள்ள முடியாது. - இராம.கி.]

எல்லோரும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் முதல் வரியை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு "தமிழன் பார்த்தாயா, எப்படிச் சொன்னான், ஆத்தி, உசத்தி" என்று அமைந்து விடுகிறோம். அது சரியில்லை; முழுப்பாடலையும் நாம் ஆழ்ந்து படிப்பதில்லை. (உஷா கொஞ்சம் விதிவிலக்குப் போலிருக்கிறது; பாட்டின் இறுதியில் வரும் இரு வரிகளை தன் நுனிப்புல் வலைப்பதிவில் மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.)

மேலே உள்ள பாட்டில் "முறைவழிப் படும்" என்று சொல்லுகிறது பாருங்கள், அதில் வரும் முறை என்பதில் தான் நியதி, ஊழ் ஆகிய செய்திகள் அடங்கியிருக்கின்றன. இந்திய மெய்யியலில், முறை, நியதி, ஊழ் என்னும் சொற்கள் பெரிதும் பேசப்பட்டிருக்கின்றன. "காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்" என்ற திரைப்பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? அந்தப் பாட்டிலும் ஊழ் பேசப் படுகிறது.

"காட்டாறு ஓடுற ஓட்டத்தில், நாம் என்ன செய்யமுடியும்? முயற்சி செய்யலாம்; ஆனால் ஓரளவுக்குத் தான். அதனால், உன்னை நிரம்பவும் பெரிதாக நினைத்துக் கொள்ளாதே! இயற்கைக்கு முன்னால் நீ ஒரு சுண்டைக் காய்" என்று ஆற்றுப் படுத்துவதாய் இந்த ஊழ்க் கோட்பாடு நமக்குச் சொல்லுகிறது. If you go by dielectical materialism, "a priori order - ஊழ்" indicates the struggle of human beings against the nature.

ஊழுக்கு மாறான ஊழ்வினை என்பது வேறு ஒன்றைச் சொல்லுகிறது. "இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை. இதிலும் வெவ்வேறு சமயங்களும், நம்பா மதங்களும் மாறுபடும். சொல்க்கம் (சொர்க்கம்), நிரயம் (நரகம்) போன்ற கருத்துக்களும் கூட இந்த ஊழ்வினையோடு தொடர்பு கொண்டவை. ஊழ்வினை பற்றி எழுத வேண்டுமானால், உலகாய்தம், ஆசீவகம், செயினம், புத்தம், மீமாஞ்சை, ஆதிசங்கரரின் மாயாவாத வேதநெறியான அல்லிருமை (அல்+துவைதம் = அத்துவைதம்), சிவனெறிக் கொண்முடிவு (சைவ சித்தாந்தம்), போன்ற மெய்யியல் கருத்தீடுகளுக்குள் போக வேண்டும்; அது ஒரு நீண்ட கட்டுரையே ஆகிவிடும். எனவே தவிர்க்கிறேன்.

முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது. அப்படிச் சொல்லுபவர்கள் மீள்பார்வை செய்வது நல்லது. வள்ளுவர் ஊழ் பற்றிப் பேசுகிறாரே ஒழிய, ஊழ்வினை பற்றிப் பேசுவதே இல்லை. நம்முடைய கருத்தை அவர்மேல் ஏற்றக் கூடாது. ஆனால் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று சிலப்பதிகாரம் பேசும். "எந்தப் பொருளில், என்ன விளக்கத்தில் சிலம்பு பேசுகிறது?" என்பது இன்னொரு பெரிய ஆய்வு.

சுருக்கமாய்ச் சொன்னால், தமிழரில் பலரும், ஊழுக்கும் ஊழ்வினைக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிக் கொள்கிறார்கள்.

இனி அதிட்டத்திற்குள் போவோமா?

தமிழில் அடுதல் என்பது சார்தல், சேர்தல் என்ற பொருளைத் தரும் வினைச் சொல். அள் என்னும் வேர். நெருங்குதல் என்ற பொருளுடையது. அட்டுதல் என்பது பிணைத்தல், ஒட்டுதல் என்ற பொருளில் பிறவினையைக் காட்டும். இதே போல அடுத்தல் என்பதும் பிறவினைச் சொல் தான். அடுத்தது = next என்ற பொருளில் சொல்லுகிறோமே, அதைக் கவனியுங்கள். ஒன்றன் பின் ஒன்றாய் அடுத்து இருப்பது அடுக்கு என்றாகும்.

நம் உடம்பை அட்டி, அரத்தம் உறிஞ்சும் புழு அட்டைப் புழு ஆகும். பொத்தகத்தின் இரு மருங்கும் அட்டித்து (ஒட்டி) இருக்கும் கனத்த தாள் அட்டை. அடுத்து என்ற சொல் மென்மேல் என்ற பொருளையும் கொண்டுவந்து தரும். (தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் எல்லோரும்) கடைகளில் (அது எதுவாய் இருந்தாலும்) நமக்கு உதவியாய் இருப்பவரை (assistant) அடுத்தாள் என்று சொல்லுவார்கள். அடுத்தேறு என்ற சொல் மிகை என்ற பொருளில் திருவாய்மொழி ஈடு, முப்பத்தாறாயிரப்படி 3,8,9 -இல் "அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து" என்று பயிலப் பட்டிருக்கிறது.

அடுத்தலின் திரிவான அடர்த்தல் என்ற சொல் செறிதல் என்ற பொருளில் ஆளப் பட்டிருக்கிறது. நாங்கள் எல்லாம் பள்ளியில் படித்த போது, அடர்த்தி என்ற சொல் என்ற சொல் density என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. (இன்றைக்கு திண்ணிமை என்றே நான் புழங்குகிறேன். திணித்தது திண்மம் - denser substance is solid. At the same time solidity is more than density. திண்மத்தனம் என்பது திண்ணிமையைக் காட்டிலும் பெரியது.) (செறிவு என்பதைக் concentration என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்துகிறோம்.) மேலே சொன்ன தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் கடைகளில் அடத்தி என்ற சொல் wholesaler என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. அடத்தியிடம் பொருளை வாங்கிச் சில்லரை வணிகர்கள் வாய்பகரம் (=வியாபாரம் = trade) செய்கிறார்கள்.

சேர்ப்பு என்ற பொருள் நாளா வட்டத்தில் பெரியது என்ற பொருளையும் கொடுக்கும். அட்டக் கரி, அட்டக் கருப்பு என்ற சொற்கள், அடர்ந்த கருப்பு நிறம் என்ற பொருளில் நாட்டுப்புறங்களில் பயன்படுத்துவதை ஓர்ந்து பாருங்கள். "பெருந்தொல்லை" என்ற பொருளில் பயன்படும் அட்டகாசம் என்ற சொல்லையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். மொத்தமாகத் தெரிவு செய்த வரியை (total tax) அடந்தேற்றம் என்று (அடந்து தெரிந்தது) சொல்லும் பழக்கமும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இன்றைக்கு மொத்தவரி என்றே சொல்லி விடுகிறோம்.

"வந்து சேர்ந்தது" என்பதை அடைதல் என்று சொல்லுகிறோம். அடைதலின் பிறவினையாய் அடைச்சுதல் - சேர்ப்பித்தல் என்பதும் சொல்லாட்சி கொண்டிருக்கிறது. வேறு பெயரில் அழைக்காமல், கடலை அடையும் ஒரு குறு ஆற்றை அடையாறு என்றே இங்கு சென்னையில் அழைக்கிறோம். அடைத்தல் என்பது நியமித்தல், விதித்தல் என்ற பொருளும் கொள்ளும். அடைமானம் என்ற சொல் வாங்கிய கடனுக்கு மாறாக நியமித்தது, விதித்தது என்றே பொருள் கொள்ளும். பல பருப்புக்களையும் அரிசியையும் சேர்த்து அரைத்து மாவாக்கிச் சுடும் பண்டத்திற்கு அடை என்றே பெயர் உண்டு. (சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் பெரிதும் விரும்பப் படும் காலை உணவு. "எங்கோ ஒரு ஒழுக்கு (leak) ஏற்படுகிறது, அந்த ஒழுக்கை அடைக்கிறோம். அது அடைப்பு என்று ஆகிறது". மூடுதல், பொருத்துதல் என்ற பொருளும் வந்து சேர்கிறது.

அடைதலின் இன்னொரு திரிவாய் அடைசுதல் என்ற சொல் நெருங்குதல், அளவுக்கு அதிகமாகச் சேர்தல், பொருந்துதல் என்ற பொருட்பாடுகளில் ஆளப்பட்டிருக்கிறது. "என்ன இது, வீடெல்லாம் ஒரே அடைசலாய்க் கிடக்கிறது?" என்பது சிவகங்கை வழக்கு. நாட்டியத்தில் காட்டும் வெவ்வேறு கைப்பொருத்துகளை, அடைவு என்றே சொல்லுகிறோம். சிலபோது இது அடவு என்றும் எழுதப் படுகிறது. அடவுகள் தெரியாமல் நாட்டியம் கற்க முடியாது. இப்படி, வெவ்வேறு பொருத்தங்கள், விதவிதமாய் அமைவதால் (arrangement) அடவு என்ற சொல்லையே இன்று design என்ற சொல்லிற்கு இணையாய்ப் பொறியியலில் பயன்படுத்துகிறோம்." மேலை மொழியிலும் arrangement என்ற கருத்துத் தான் design என்ற சொல் எழக் காரணமாய் இருந்தது. இளமைக் காலத்தில், நான் ஒரு அடவுப் பொறிஞனாய் இருந்தேன் - I was a design engineer in my younger days".

முன்னே சொன்னது போல் டகரவொலி தகரமாய்த் திரிவது தமிழில் உள்ள பழக்கம்; குறிப்பாக வடபுலத்தில் இது இன்னும் விரிவான பழக்கம். இரண்டு துண்டை ஒன்றாய்ப் பொருத்தித் தைத்தலை அத்துதல் என்று வின்சுலோ அகரமுதலி குறிக்கும். "அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம்" என்று பிங்கலம் 2302 குறிக்கும். அத்து என்ற சாரியை கூட சேர்ந்த என்ற பொருளைத் தமிழில் குறிக்கும். "காமத்துப் பகை" (குறுந்: 257) "அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்" (சில. 4, 3) போன்ற சொல்லாட்சிகள் தமிழில் கணக்கற்று உண்டு. "வானம் என்பதைச் சேர்ந்த அணி நிலா" என்ற கருத்தை ஆழ்ந்து புரிந்து கொண்டால் அத்து என்பது எவ்வளவு தூரம் தமிழ் வழக்கைச் சேர்ந்தது என்பது புரியும். "அந்தத் தோட்டத்து மாம்பழம்" என்னும் போது, தோட்டமும் மாம்பழமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவை என்பது புலப்படும். ஆங்கிலத்தில் and என்று சொல்லுவதும் add என்று சொல்லுவதும் ஒரே பொருள் தான். மற்ற மேலை மொழிகளிலும் இது போன்ற சொல்லிணையைக் காண முடியும். இங்கும் தமிழில் அதே பொருள் அடுத்தல் / அத்து என்பதில் வருவதை எண்ணிப் பாருங்கள்.

இனி இரு பிறப்பியாய் அத்தியந்தம் என்ற சொல் "முற்று முழுமையாக, மிகவும்" என்ற பொருட்பாடுகளைக் காட்டும். அத்தித்தல்>அதித்தல் என்பது சிறத்தல், மிகுதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். அதிகம் என்ற பெயர்ச்சொல் மிகுதி என்ற பொருளைச் சுட்டும். காளமேகப் புலவரின் வேடிக்கையான பாட்டு அதிகம் என்ற சொல்லை ஆளும் விதத்தைப் படியுங்கள்.

கண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலுமோ யான் அதிகம் ஒன்றுகேள் - முன்னமே
உன்பிறப்போ பத்தாம் உயர்சிவனுக்கு ஒன்றுமிலை
என்பிறப்பெண் ணத்தொலையா தே.

அதி என்ற முன்னொட்டு மிகுதி, அப்பால், மேல், மேன்மை என்பவற்றை உணர்த்தி வடமொழியில் பயிலும். நான் அறிந்தவரை பாணினியின் தாதுபாடத்தில் அதி என்பதற்கு எந்த வேர்ச்சொல்லையும் காட்டவில்லை. மோனியர் வில்லியம்சே கூட, இதை முன்னொட்டு என்று சொல்லி, அதன் ஊற்றுகை (origin) ஏதென்று சொல்லுவதில்லை. (ஆனாலும் அதிர்ஷ்டம் என்ற வடமொழித் தோற்றம் கொண்ட சொல்லை வடமொழிச் சொல் என்றே பலரும் எழுதி வருகிறார்கள். எனக்குப் புரியவில்லை. நான் எதைக் கவனிக்க மறந்தேன் என்று அறிந்தவர்கள் கூறினால் திருத்திக் கொள்ளுவேன். (பல சொற்களை இது போல வெறும் நம்பிக்கையில் வடமொழி என்று சொல்லும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதிர்ஷ்டம் என்ற தோற்றத்தைக் கண்டு மருண்டு போனால் எப்படி? உண்மையில் அதிட்டியது அதிட்டு>அதிட்டம். இருட்டியது இருட்டைப் போல் என்று புரிந்து கொள்ளுங்கள். அதிட்டம் என்பது வடமொழியிற் போகும் போது, அதிஷ்டம்>அதிர்ஷ்டம் என்று பலுக்கப்படும் ஒரே காரணத்தால் அது வடமொழியாகி விடாது.) குறளுக்கு உரைசொன்ன பரிமேலழகர் "அதி என்பது மிகுதிப் பொருளதோர் வடமொழி இடைச்சொல்" என்று சொன்னதால் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுமா, என்ன?

அதிகத்திற்கு இன்னொரு வலுவான பொருள் உண்டு. "அதிகம்...... பொலிவின் பெயரெனப் புகன்றனர்" என்று திவாகரம் 1672 பயிலும். பொலிவு என்பது சற்று வெளிறிய மஞ்சள் ஓடிய, பொன் நிறம். பொலிவு - அதிகம் நிறைந்தவன் அதிகன்>அதியன். அதிகனின் மகன் அதிகமான்.

தமிழ் மூவேந்தர் மூவரும் அவர்களின் குடியினர் பூசிக் கொண்ட நிறங்களாலே அறியப் பெற்றிருக்கிறார்கள். (அவர்களின் இயற்கை நிறம் கருப்புத் தான்.) தமிழரின் நெடுநாளைய உறவினரான ஆத்திரேலியப் பழங்குடியினரும் அவர்கள் பூசிக் கொள்ளும் நிறங்களினால், அவர்கள் சூடிக் கொள்ளும் அடையாளங்களினால் அறியப் படுகிறார்கள். சாம்பல் (=பாண்டு. பால் நிறம் பாண்டு.) பூசியவர் பாண்டியர் (தமிழரின் திருநீற்றுப் பழக்கம் இந்தக் குடியிடம் இருந்து வந்திருக்கலாம்.)

மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் பூசியவர் கோழியர் (=சோழியர்). குங்குமச் செந்தூரம் இன்றும் தமிழரிடம் விரவிக் கிடக்கிறது.

சார்ந்தது சார்ந்தனம்>சந்தனம். சார கந்தகம் என்பதும் சந்தனத்தையே குறிக்கும். சாரம் = சந்தனம்; சாரத்தில் சகரம் குறைந்த சொல்லான ஆரமும் சந்தனத்தையே குறிக்கும் சாரர்>சேரர் என்போர் சந்தனம் பூசிய இனக்குழுக்கள் ஆவர். இன்றைக்கும் மலையாளத்தில் சந்தனத்தின் முகன்மை புலப்படும்.

திருநீறு, குங்குமம், சந்தனம் எனப் பலவும் விலங்காண்டி நிலையில் வெவ்வேறு தமிழ் இனக்குழுவினர் அணிந்திருந்த இனவேறுபாட்டு அடையாளங்களே.

அதே நோக்கில் மஞ்சள் - பொன் - பொலிவு - நிறம் அணிந்திருந்த இனக்குழுவினர் அதிகர் என்ற இனக்குழுவாய் இருந்திருக்கலாம். மோரியர் காலத்திருந்தே மூவேந்தரோடு அதிகர் ஒருங்கு வைத்து எண்ணப் பட்டதும் இங்கு ஓர்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. அதிகம் என்ற சொல்லின் தமிழ்மை நன்கு புலப்படும்.

அதிகாலை என்ற சொல் காலைக்கு முந்திய பருவத்தைக் குறிப்பதையும் எண்ணிப் பார்த்தால் அதித்தல் என்ற வினைச்சொல்லின் ஆழம் புரியும். அதித்த நிலையை உருவாக்குதலை அதிகரித்தல் என்று சொல்லுவதும் சேர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும். அன்றாட நிலைக்கு மேற்பட்டு அதிகம் செய்தது அதிசெய்யம்>அதிசயம் என்றே ஆகி வியப்பு, சிறப்பு என்ற சொற்களைக் குறிப்பது அதி என்ற முன்னொட்டோ டு சேர்ந்தது தான்.

நான் புரிந்து கொண்டவரை அதிட்டம் என்பது பெரும்பாலும் தமிழாய் இருக்கவே வாய்ப்பு உண்டு. அதற்கான முகன்மையான குறிப்புக்கள் அத்து என்ற சாரியைப் பொருள், அடுத்தல் என்ற வினைச்சொல், அதிகன் என்ற குடியினரின் பெயர் ஆகியவை ஆகும்.

அன்புடன்,
இராம.கி.

(luck என்ற ஆங்கிலச் சொல்லைப் பற்றி இங்கு பேசுவதைத் தவிர்க்கிறேன். அதற்கும், அதை ஒட்டிய மேலைச் சொற்களுக்கும் ஊற்றுகை தெரியாதென்றே அகரமுதலிகள் குறிக்கின்றன. ஊழைப் பற்றிப் பேசும்போது அதைப் பார்க்கலாம்.)

12 comments:

சுந்தரவடிவேல் said...

பல விளக்கங்களுக்கும் நன்றி!

படித்துக் கொண்டிருக்கும்போது தோன்றிய இன்னொரு வார்த்தை "அட்டவணை", வரிசையாக அடுக்கி அமைப்பதால்.

"அடு" என்ற வார்த்தையை ஒட்டியே add என்பதும் தோன்றியிருக்கக்கூடுமென்று தோன்றுகிறது!

நான் தவறவிட்டேனா எனத் தெரியவில்லை, அதிட்டத்தின் 'ட்டம்' எங்கிருந்து வந்ததென்று எனக்கு விளங்கவில்லை.

வெற்றி said...

இராம.கி ஐயா,
தங்களின் பின்னூட்டத்தை சொல் ஒரு சொல் தளத்திலேயே வாசித்து விட்டேன். இருப்பினும் பலரும் அறியும் வண்ணம் தனிப்பதிவாக இட்டமைக்கு மிக்க நன்றி.

அத்துடன் ஒரு ஐயம். நான் சொல் ஒரு சொல் தளத்தில் எழுதிய பின்னூட்டத்தில், ஈழத்தில் எமது ஊரில் அதிஸ்டம் எனும் சொல்லுக்கு யோகம் எனும் சொல்லைப் புழங்குகிறார்கள் என்றும், இச் சொல்லை வைத்து பலருக்குப் பெயர்களும் உண்டு எனச் சொல்லியிருந்தேன்.

என் கேள்வி என்னவென்றால், உண்மையில் யோகம் எனும் சொல் அதிட்டத்திற்கு ஒத்த சொல்தானா? யோகம் தமிழ்ச் சொல்லா? என்பவைதான்.

மிக்க நன்றி.

பணிவன்புடன்
வெற்றி

Anonymous said...

ரொம்ப சுவாரசியமான கருத்துக்களா இருக்குங்க - பூங்குன்றனாரோட அந்த பாட்டு புடிக்குமா எனக்கு அதான் எட்டி பாத்தேன் - அந்த கருத்து புறநானூற்று காலத்திலையா அடேயப்பா! ஆ ... அப்படின்னு ஆரம்பிச்சு ... அவசர அவசரமா அங்க இங்க படிச்சு புரிஞ்சு பாத்தேன் ஒரு தடவை ... சேர சோழ பாண்டியர் நிற வேறுபாட்டு விளக்கத்திலையே அசந்து போய் நிக்குறங்க இன்னும். நின்னு நிதானமா இன்னொரு தடவை படிச்சு தெரிஞ்சிக்கிறேன். ரொம்ப நல்லாயிருக்கு விளக்கம். நன்றி நன்றி.

பூங்குழலி said...

விளக்கங்களுக்கு நன்றி திரு இராம.கி அய்யா அவர்களே..

//அத்து என்ற சாரியை கூட சேர்ந்த என்ற பொருளைத் தமிழில் குறிக்கும்//

இந்த விளக்கத்தினை ஓர்ந்தால்

"தோ.. அந்த ஒத்தப்பனை வரைக்கும் எங்களோட அத்து"

எனச் சொல்லும் கிராமத்து மக்களின் பேச்சு என் நினைவிற்கு வருகிறது...

"அத்து விடுதல்" என்ற சொல்லாடலும் உண்டு.
இதுவும் இதனுடன் தொடர்புடையது என்றே தேர்கிறேன்.

தொடரட்டும் உங்களின் இந்த பணி.

நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய சுந்தர்,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

அட்டவணை என்ற சொல்லையும் இங்கே சேர்த்துக் கொள்ளலாம்.

அடு என்பதற்கும் add என்பதற்கும் இணை சொன்னால், அதில் உள்ள இயலுமையைப் பார்ப்பதற்கு மாறாக தாங்கள் கொண்ட மூடநம்பிக்கையின் காரணமாய் மறுத்துச் சொல்லுவதற்கே பலரும் வருகிறார்கள். என்ன செய்வது? "இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும்" என்று சொன்னால், ஏற்க மறுக்கும் அளவிற்கு "சனாதன" நம்பிக்கை கண்ணை மறைக்கிறது.

அதிட்டத்தின் ட்டம் பற்றிச் சொல்லியிருக்கிறேனே? மேலே கண்ணபுர மாலே பற்றிய காளமேகத்தின் பாடலுக்கும் கீழுள்ள பத்தியில் பாருங்கள்.

"உண்மையில் அதிட்டியது அதிட்டு>அதிட்டம். இருட்டியது இருட்டைப் போல் என்று புரிந்து கொள்ளுங்கள்."

அதிட்டுதல் வினைச்சொல். அதிட்டு என்பது அதில் இருந்து விளையும் பெயர்ச்சொல். அம் என்பது பெரியதைக் குறிக்கும் ஈறு.

அன்பிற்குரிய வெற்றி,

வருகைக்கும் கனிவிற்கும் நன்றி.

யோகம் என்ற சொல் வழிப்பொருள் கொண்டு அதிட்டத்தைக் குறிக்கலாம். ஓகம்>யோகம் என்பது முற்றிலும் தமிழ் தான். ஒத்தது என்பது ஒன்று சேருதல்,பொருந்துதல். "அதற்கு ஒக்க" என்று சொல்லுகிறோமே? அதில் ஒன்றோடு பொருந்த என்று தான் பொருள்.

ஓகம் (யோகம்) செய்யும் போது மனம், மெய் போன்றவற்றை ஒரு சேரப் பொருத்துகிறோம். ஓகத்தின் விளைவால் பல்வேறு சித்துக்கள் கிடைப்பதாகத் தமிழரின் புரிதல் உண்டு. ஓகத்தை ஒட்டிய பல சிந்தனைக் கூறுகளும் தமிழருடையதே. ஓகத்தில் சித்துக்களின் விளைவால் எதிர்பாராத நற்பேறுகள் கிடைக்கிறது என்னும் போது ஓகம் என்பதே அதிட்டத்திற்கு மாறாக பயனாக்கப் படலாம். ஆனாலும் அது முதற்பொருளல்ல. வழிப்பொருள். ஓகத்தின் முதற்பொருள் பொருந்தி நிற்பது.

அன்பிற்குரிய மதுரா,

வாங்க,

பதிவு பிடித்ததற்கு நன்றி. சேர, சோழ, பாண்டியர், அவரின் மற்ற அடையாளங்கள் பற்றித் தனிப் பதிவே போடவேண்டும். இங்கு அதிகர் பற்றிப் பேசவேண்டியிருந்ததால் மூவேந்தர் பற்றிய செய்திகளைச் சுருக்கமாய்ச் சொல்ல வேண்டியதாயிற்று.

நாம் நம்முடைய இனக்குழு (tribal) அடையாளங்களை இன்னமும் தொலைக்காது வைத்திருக்கிறோம் தான். நம்முடைய சிறுதெய்வ வழிபாடுகள், குறிப்பாக அய்யனார், கருப்பர், அம்மன், காளி வழிபாடுகள் சொல்லும் செய்திகள் பல. இந்த இனக்குழு அடையாளங்களின் நடுவில் சமயப் பூச்சு வந்து உண்மையை அறியவிடாமல் தடுக்கிறது.

தமிழர் பலரும் இந்த இனக்குழு தொடர்பான செய்திகளை உணர முற்படுவதாகத் கூடத் தெரியவில்லை. ஒரு பக்கம் பாரத அடையாளம் தேடி, இன்னொரு பக்கம், இந்த பாழாய்ப் போன சாதியில் சீரழிந்து, தமிழர் என்ற அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம். இதைச் சொன்னால், துரோகி என்று நம்மை பெயரிட்டு ஓடோடி வர ஆட்கள் காத்திருக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிர்குரிய பூங்குழலி,

வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்ன உரையாட்டில் அத்து என்பது எல்லை என்பதைக் கூடக் குறிக்கிறது பாருங்கள். ஒரு இயல் மொழியில் (natural language and not artificially made) பொருட்பாட்டு நீட்டம் எப்படிப் போகிறது, பாருங்கள்?

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

தெரியனத்தின் வேரை மானியர் வில்லியம்சிலும் தேடிப் பார்த்திருக்கிறேன் பலநாள்.
தெரியனம், அதிசயம் இரண்டும் வடசொற்கள் என மயங்குற்றிருந்தேன்,
தெளிவித்தீர்கள், நன்றிகள் பல!

-பிரதாப்

பி.கு.: பு.பு.பரத்திக்காட்டிழை கிடைத்தது, நன்றி அய்யா!

siva gnanamji(#18100882083107547329) said...

வணக்கம்.
இரண்டொரு நாட்களாக WEIRD பற்றியப்
பதிவுகள் வருகின்றன.(பார்க்க: ஜி.ராகவனின் இன்றைய பதிவு)

WEIRD என்பதைத் தமிழில் எப்படி குறிப்பிடலாம்?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அதிர்ஷ்டம், யோகம் எல்லாவற்றையும் அவற்றின் வட மொழித் தோற்றத்தை வைத்து விலக்கி வைப்பது பிழை தான். இது போல் பலராலும் ஒதுக்கப்படும் சொற்களுக்கு நீங்கள் தொடர்ந்து விளக்கம் தருவது நன்று. அதி, அத்து , அதிட்டு - சொல் விளக்கங்கள் அருமை. அடைசல் போன்ற சொற்களை எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. ஊர்ப்பக்கம் அத்து விடு என்று சொல்வதை அறுத்து விடு என்றவாறு தான் புரிந்து கொண்டு இருந்தேன். இப்ப அத்து விடு என்றாலே பொருளுடன் தான் இருக்கிறது. புதுகையில் வளர்ந்ததால் சிவகங்களை வட்டார வழக்குகளைச் சுட்டி நீங்கள் எழுதுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அடை இந்த ஊர்களில் மட்டும் தான் பரவலா? நான் தமிழ்நாடு முழுக்கத் தான்னுல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

பயனுள்ள பல தகவல்கள் அய்யா. நன்றி.

"அடைதலின் பிறவினையாய் அடைச்சுதல் - சேர்ப்பித்தல் என்பதும் சொல்லாட்சி கொண்டிருக்கிறது."

என்று படித்த போது குலதெய்வம் கோயிலுக்கு கோழியை 'அடசல்' போடும் எங்கள் வட்டார வழக்கு நினைவுக்கு வருகிறது. சாமிக்குப் படைத்தல் என்னும் பொருளில் நீங்கள் சொல்வதோடு பெரிதும் பொருந்துகிறது.

'அதி' பற்றி ஒரு ்கேள்வி. இதனை 'advanced' என்னும் சொல்லுக்கு இணையாகக் கொள்ளலாமா? காட்டு: advanced control = அதி கட்டுறுத்தல்?

இராம.கி said...

வாங்க பிரதாப்,

தெரியனத்தைத் தர்ஷனமாகவே புரிந்து கொண்டு தண்டனிடுபவர்கள் மிகப் பலர். அதுபோல்தான் அதிசெய்யமும்.

அன்பிர்குரிய ரவிசங்கர்,

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

சிவகங்கை வட்டார வழக்குகள் புதுக்கோட்டையிலும் பரவிக் கிடப்பவை தான். இன்னும் சொன்னால், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இரரமநாதபுரம் மாவட்டங்களிடையேயும், மதுரை, திண்டுக்கள், தேனி ஆகிய பக்கங்களிடையேயும் ஒரு ஓரிமை (uniformity) இருக்கத்தான் செய்கிறது.

அடை வடதமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாத ஒரு பண்டம்.

வாங்க செல்வராஜ்,

கோழியை அடசல் போடுவது நினைவு வந்தது பாருங்கள்; மகிழ்ச்சி. கூடவே முட்டைகள் மீது தன் உடற்சுட்டை வைத்து கோழி அடைகாப்பதையும் எண்ணுங்கள்.

நீங்கள் சொன்ன advanced control என்பதற்கு நேரடியாக அப்படிச் சொல்லிவிடமுடியாது. சொற்பிறப்பு அகரமுதலியில்,

c.1230, from O.Fr. avancer "move forward," from V.L. *abanteare, from L.L. abante "from before," composed of ab- "from" + ante "before, in front of, against," from PIE *anti "against," locative singular of *ant- "front, forehead." The -d- was inserted 16c. on mistaken notion that initial a- was L. ad-. Meaning "to give money before it is legally due" is first attested 1679. The noun is first recorded 1528; advances "amorous overtures" is from 1706. The adj. (in advance warning, etc.) is not recorded before 1910. Advanced in the fig. sense of "far ahead on a course" is from 1534.

என்று போட்டிருக்கிறது. கொஞ்சம் காலம் கொடுங்கள்; ஓர்ந்து பார்க்கிறேன்.

control என்பதற்குக் கட்டுறுத்தல் என்பது சரிதான்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

Got a chance to read this now. As usual excellent article.

My lecturer translated
Control system === AALL Kuvaikal. I am not sure how they are related.