Sunday, August 20, 2006

பஞ்சு

அண்மையில் சம்பந்தம் பற்றி சொல் ஒரு சொல் பதிவில் ஒரு பின்னூட்டு இட்டிருந்தேன். பின்னால் பழைய கட்டுரைகளைக் குடைந்து கொண்டிருந்த போது, 20/10/2001 ல் நண்பர் கணேசனோடு தமிழ் இணையம் (tamil.net) மடற்குழுவில் "பஞ்சு" என்ற சொல் பற்றி உரையாடிக் கொண்டிருந்த இடுகை மீண்டும் கிடைத்தது. அப்பொழுது சவுதியில் இருந்தேன். இப்பொழுது அதைச் சற்றே சரி செய்து இங்கே இடுகிறேன். உங்கள் வாசிப்பிற்கு. அன்புடன், இராம.கி. 

 அன்பிற்குரிய திரு. கணேசனுக்கு, 
-------------------------------------------- 
At 04:53 PM 10/20/2001 +0000, you wrote: 
 பஞ்சு: சொல்லாராய்ச்சி 
------------------------------ 

பஞ்சு என்ற சொல்லுக்குத் திரி, இழை என்றபொருள்கள் உண்டு. விதை நீக்கிய பருத்தியை பந்தாகச் செய்து திரி, நூல், இழை போன்றன செய்யப்படும். பந்து என்ற சொல் பஞ்சு என்பதோடு நெருங்கிய தொடர்புடையது. F. கிட்டெல் என்னும் பாதிரியாரின் கன்னடப் பேரகராதியைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்தன: கன்னடத்தில், 

1) பஞ்சு = A torch (பந்தம் என்னும் தமிழ்ப்பதத்தை ஒப்பிடுக.) 
2)பஞ்சிகெ = The ball or roll of cotton from which the thread is spun. (தமிழின் பந்து என்பதுடன் ஒப்பிடுக). 
தமிழில் பந்து -> பஞ்சு என்றாவதற்கு மேலும் சில சான்று தரலாம். 
விந்தம் (விந்தியமலை) தமிழில் விஞ்சை என்று வரும் (பெருங்கதை), 
ஸந்த்யா என்னும் வடசொல் ஸஞ்ஜெ என்று கன்னடத்தில் ஆகும். 
இது போலவே பந்து -> பஞ்சு என்றானதாகத் தெரிகிறது. 
பந்தி என்றால் இழைபோல வரிசையான அணி. 
பந்திப்பாய் = மிகக் குறுகலான, ஆனால் மிக நீண்ட பாய். 
இந்த பந்து <-> பஞ்சு தொடர்பை வேறொரு சொல்மூலமும் காணலாம். 
<->பஞ்சம் = வரட்சி, வறுமை. 
<->கன்னடத்தில் பஞ்ஜெ என்றால் மலடி/வறடி. 
<->சமற்கிருதத்தில் வந்த்யா என்றால் மலடி. 
<->பூமியைப் பெண்ணாக உருவகம் செய்தல் மரபு. 
<->நிலமகள் அழுத காஞ்சி - புறம்; 
<->நிலம் என்னும் நல்லாள் - குறள். 
<->பஞ்சம் பூமி கொள்ளும்போது, "நிலமகள் மலடுபட்டாள்" என்றல் பொருத்தமே. பஞ்சம், (வரட்சி), பஞ்ஜெ (மலடி) போன்ற சொற்கள் *பந்து என்பதுடன் தொடர்புடையது என்று திருத்தமாகக் காட்டுவது வடமொழிச் சொல்லாகிய வந்த்யா (இது *பந்த்யா என்னும் திராவிடச் சொல்லிலிருந்து வந்திருக்கவேண்டும்). 
<->வந்தி என்னும் வறுமைக் கிழவி பிட்டு விற்றதை மதுரைத் திருவிளையாடல் பேசும். 
<->பந்திலிருந்து இழைத்தெடுப்பது திரி, நூல்; 
<->கன்னடம் துணி வெளுப்போர் திருமணங்களில் பிடிக்கும் பந்தத்தைக் பஞ்சி என்றும், நூல்திரிக்கும் பந்தைப் பஞ்சிகெ என்றும் சொல்வர். 
<->பஞ்சம்(< *பந்தம்) கொண்டு இளைப்பதை வந்தி/பஞ்சை என்ற சொற்கள் காட்டும். குழந்தையில்லாமல் இளைக்கும் தாய் தான் பஞ்ஜெ (மலடி) என்பர் கன்னடியர். 
<->பஞ்சு சொல் பற்றி உங்கள் கருத்தென்ன? 
<->அறிய ஆவல். 
<->அன்புடன், 
<->நா. கணேசன் 
<-> ------------------------------------------------- 
<->
<->பஞ்சு பற்றிய உங்கள் மடல் கண்டேன். ஏற்கனவே பாலாவுக்கு எழுதுவதாக ஒப்புக் கொண்ட பயன்/ஊதியம் பற்றிய மடல் அரைகுறையாகக் கிடக்கிறது. அடுத்து counsel என்பதற்கு என்ன சொல்வது என்று ஆசீப் கேட்டிருந்தார். இதற்கு விடை எழுந்தும், அதை எழுத்தில் வடிக்காது இருக்கிறேன். இயற்கையாகவே உள்ள வேலைப்பளு. (அது தடைப்பட்டுப் போனால், "எதற்காக வந்தாய் இந்தியாவில் இருந்து?" என்ற கேள்வி எழும். சம்பளம் வாங்குகிறேனே!) நடுவே அவ்வப்போது இணையத்தில் சூடான வாக்குவாதங்கள் வரும் போது, மொழியியல் பற்றி எழுதுவது தடைப் பட்டுப் போகிறது. இது மாதிரி மடல்களுக்கு உடன் விடையிறுக்க வேண்டிய கட்டாயம். என்ன பண்ணுவது? உங்களுக்கு விடையிறுப்பதில் சுணக்கம். இனி சொல்லுக்கு வருகிறேன்.
<->
<->தஞ்சைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ப.அருளி தன் "தமிழ், சமற்கிருதம் அற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்" என்ற பொத்தகத் தொடரின் மூன்றாவது தொகுதியில் பந்து என்ற சொல்லைப் பற்றி எழுதியிருக்கிறார். மொத்தம் 5 தொகுதிகள்; படிக்க வேண்டிய, படி எடுக்க வேண்டிய பொத்தகங்கள். சென்னைக் கன்னிமாரா நூலகத்தில் நான் படியெடுக்க முனைந்த போது, என்னால் மூன்றாம் தொகுதியைப் பெறவே முடியவில்லை; மற்ற நான்கை மட்டுமே படி எடுக்க முடிந்தது. பல காலம் முயன்றும், அந்தத் தொகுதி மட்டும் அகப்படவே மாட்டேன் என்கிறது. ஒருவேளை தொலைந்து போனதோ, என்னவோ? எனவே, நானறிந்த வகையில் தொடருகிறேன். 
<->
<-> முதலில் நாம் காணவேண்டிய வேர்ச் சொல் "பல்" இதைப் பற்றி புலவர் இரா. இளங்குமரன் "தமிழ் வளம் - சொல்" என்ற பொத்தகத்தில் எழுதியுள்ளார். 
<->
<->இந்தச் சொல் முதலில் வெண்மைப் பொருளைக் குறித்து, பின் "பல்" என்னும் உறுப்பைக் குறிப்பதாயிற்று. கண்கள் இரண்டு; காதுகள் இரண்டு; பற்களோ நிறையவே இருக்கின்றன. பொருள் நீட்சி பெற்று பல்>பல என்று பன்மைப் பொருளைக் குறிப்பதாயிற்று. பல்லுக்கு நாம் நிறையவே கடன் பட்டிருக்கிறோம். இப்படிப் பல்கிய சொற்கள் பலப் பல. அதில் சில சொற்களை மட்டும் இப்பொழுது பார்ப்போம். 
<->
<-> முதலில் "பத்து" தமிழில் முதல் பத்து எண்ணுப் பெயர்கள் (வட இந்திய மொழிகள், இந்தையிரோப்பிய மொழிகள் ஆகியவற்றிலும் கூட) சில மாந்தனின் உறுப்புக்களில் இருந்து கிளர்ந்தவை தான். (இந்த எண்ணுப் பெயர்கள் பற்றிய நீண்ட கட்டுரை அவற்றின் பெயர்கள், குறியீடுகள், வளர்ச்சி இதையெல்லாம் விவரிக்கும் வகையில் பாதி எழுதப்பட்டதோடு கிடக்கிறது. "இன்று ரொக்கம், நாளை கடன்" என்று கிடக்கும் அந்தக் கட்டுரைக்கு என்று விடிவு பிறக்குமோ? அறியேன். இருப்பினும் இங்கே பத்தை விளக்குமுன், மற்றவை பற்றி கீழே சுருக்கமாக எழுதுகிறேன்; ஒருவேளை புரிபடாமற் போனால், மன்னியுங்கள். முழு விளக்கம் அந்தக் கட்டுரையில் தான் இருக்கிறது.) 
<->
<->முதலில், ஒன்று என்ற எண், ஊனோடு தொடர்பு கொண்டது (மரக்கறிக்காரர் மன்னிக்க! ஊன் தான் மாந்தனை உருவாக்கியது.); 
<->
<->இரண்டு என்பது ஈருவதோடு (துமிப்பதோடு) தொடர்பு கொண்டது; 
<->
<->மூன்று என்பது மூக்கு/துயிக்கை (ஆமாங்க, யானைத் துதிக்கை தாங்க) ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது.(துய்=முக்குத்துளை; துய்ம்பு>தூம்பு = துளையுள்ள குழாய்; தூம்பு>தூப்பு> tube; இரண்டு துளை கொண்ட மூக்கு மூன்று தோல் கொண்டது; குறியீடும் அப்படித்தான்; துய்>த்ருய்>த்ரி என வட மொழியில் மாறும். தமிழில் மூக்கு என்ற சொல்லை ஒட்டியே மூன்று என்ற சொல் கிளர்ந்தது.) 
<->
<->ஐது என்ற சொல் கய்யு (கை)/செய்யோடு தொடர்பு கொண்டது. (செய்கு, சகரம் இழந்து அய்கு/அய் ஆகும். இன்னொரு பக்கம் கன்னடம், துளு வழியே இது பள்>பய்யோடும் தொடர்பு கொள்ளும் பள்>பண்ணு> பண்டு = கை.  பண்டு> பந்து>பஞ்சு = கை. பண்ணு>பாணி = கையில் ஏதோ கொண்டிருத்தல்.  தண்ட பாணி= தண்டத்தைக் கையில் வைத்திருக்கும் முருகன். பள்>பய்=ஹய்=அய். ) 
<->
<->நாலு என்பது நலிந்த (குறைந்த) கையோடு தொடர்பு கொண்டது; நலி+கை> நலிகை>நாலிகை>நாலுகை>நாலு (ஏற்கனவே பலமுறை நான் சொல்லுவது போல, பாமரரிடம் தான் சரியான சொல் இருக்கிறது; படித்தவர்கள் நீட்டி முழக்கி வடிவத்தைக் குலைத்து விடுகிறோம். பொத்தகம் ஒரு எடுத்துக் காட்டு; ககரம் மெலிந்து ஒலித்து, சில பொழுது முற்றிலும் இல்லாமல் போவதற்கு தென் தமிழ்நாடு நல்ல காட்டு: அவுக வர்றாக> அவுஹ வர்றாஹ>அவா வர்ரா)) 
<->
<->ஆறும், ஏழும் எழுந்தவகை உணரச் சற்று நேரம் பிடிக்கும். ஒரு+கை> ஒறுகை> அறுகை> அறுகு> அறு> ஆறு என்று ஆனது (இங்கும் ககரம் காணாமல் போகிறது);
<->
<->இதே போல, இரு+கை> இருகை> இலுகை> எலுகை> எழுகை> எழுகு> எழு> ஏழு என்று ஆனது. (ககரம் மறைந்து போகிறது) 
<->
<->அடுத்தது எட்டு; அய் +துய்>அய்தூ>அய்து>எய்து>எள்து>எட்டு; எள்+ந்+து> எண்டு> எண்ணு அப்புறம் பத்து என்பதைப் பார்ப்போம். அதற்குப் பின் ஒன்பதிற்கு வருவோம். 
<->
<->பல்+து>பல்து>பஃது>பத்து (பல்>பன்; பன்னிரண்டு என்ற எண்ணின் முன்னொட்டு) பத்து>பது; பது+இன்னொன்று = பதினொன்று 
<->
<->தொள்+ந்+பது>தொண்பது (குறைந்த பத்து; தொள்ளுதல் = குறைபடுதல்) தொள்+ந்+து>தொண்டு = குறைந்தது (அதாவது பத்திற்குக் குறைந்தது) தொண்பது> ஒன்பது.  
<->
<->மொத்தத்தில், "ஊன், ஈர், மூ/துய், கய், பல்" இந்த ஐந்தை வைத்துத் தான் முதல் பத்து எண்ணுப் பெயர்கள் தோன்றி இருக்கின்றன. இதே நிலை தான் 
<->
<->இந்தையிரோப்பிய மொழிகளிலும். பல்லில் இருந்து பத்து வந்தது போல தந்தத்தில் இருந்து வந்தது தான் ten. 
<->
<->தொண்டு துவண்டது போல, நொண்டு நுவண்டு போனது; நுவனு>nine ஆனது. 
<->
<->அய்கும் துய்யும் சேர்ந்தது தான் அய்குது>eight. 
<->
<->செய்யும் துவமும் சேர்ந்தது தான் septa; 
<->
<->செய்யும் ஏகமும் சேர்ந்ததுதான் செய்யெக்ஸ்>-six 
<->
<->அய், பய்(பை) (பண்ணுதலின் அடி பய். மேலே பள்>பண்>பண்ணு பற்றிச் சொன்னதைக் கவனியுங்கள்) ஆகி five ஆனது. 
<->
<-> ஊறு ஏற்படுவது குறைவு ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுவது தான். ஊறு>four; 
<->
<->துய்>த்ருய்>த்ரி>three; 
<->துமி>துவி>two; 
<-> ஊண்>ஊணு>ஒண்ணு>one; ஊண்>ஊட்டு>உகட்டு; உள்>ஊண்; உள்> உள்கு> உள்கம்>ஊக்கம்>ஏகம் 
<->
<-> மேலே உள்ளதை விரித்துச் சொல்லாத வரை, நீங்கள் ஏற்கப் போவதில்லை. எனவே, அதைப் பிறிதொருமுறை சொல்லுகிறேன். 
<->
<->இப்பொழுது பல்லிற்கு வருவோம். பல்>பல்து = பெருகுதல் பல்து> பலுது> பருது>பருத்து+இ=பருத்தி = பருத்துக் காணப்படும் பொருள். அதுபோல, பத்து + ஐ = பத்தை, வெள்ளைப் பூண்டில், சுளையாகப் பருத்துக் கிடப்பது பத்தை இதைப் பல் என்று சொல்வாரும் உண்டு. "வெள்ளைப் பூண்டு ஒரு பல்லுக் கொடுங்க" பல்லைப் போன்ற கொட்டையையும், பலவாகச் சுளையும் கொண்ட கனி பலாக் கனி. பலாச் சுளை போல, பருத்தியிலும் பருத்திச் சுளை உண்டு. பருத்தி எடுக்கப் பயன்படும் கொலுக்கு, பல் பல்லாக இருக்கும். இப்படி பல்லப் படுவது தான் ginning and combing. பல்ல(பன்ன)ப் பட்ட பருத்தி பன்னல். (ginned cotton). இதனால், பருத்திக்கே பன்/பன்னு/பஞ்ஞு என்ற பெயர்கள் உண்டு. பஞ்ஞு என்ற பழந்தமிழ்ச் சொல் சேரநாட்டில் ஒரு விதமாகப் பலுக்கப் பட்டு, மற்ற இருநாடுகளிலும் பஞ்சு என்று இன்னொரு விதமாக வழங்கப் பட்டது. இந்தப் பஞ்சையும், மேலே, பண்டிலிருந்து (கையிலிருந்து) விளைந்த பந்து>பஞ்சையும் சேர்த்துக் குழப்பக் கூடாது. பருத்தி ஐந்து பந்துகளாய் வெடிப்பது இணைந்து எழும் இயற்கை விளைவு. அதற்குங் கூடப் பொருளிருக்கலாம். ஆனால் அஞ்சு என்பது கையிலிருந்தே எழுந்தது.

இனிப் பெருகிப் போனது என்பது பொத்தை/பொந்தை என்றும் அழைக்கப் பட்டது. அவன் பொந்தையாக பொதுப் பொது என்று இருக்கிறான் என்றால் பெருத்து இருக்கிறான் என்று பொருள். பொந்து= பெருத்துக் கிடக்கும் தன்மை; பொந்து>பந்து= பெருத்து உருண்டு கிடக்கும் பொருள்; பந்தில் பெரியது பந்தம் (தீவட்டிப் பந்தம்); பந்தம் என்றால் கட்டு, முடிச்சு என்றும் பொருள் (பொன்/பொற்காசு முடிச்சு). இந்தப் பொற்காசு முடிச்சை போட்டியில் வைத்து விளையாடுவதால் அது பந்தயம் ஆயிற்று. பந்து என்ற சொல்லின் அடிப்பொருள் பல்ல(பன்ன)ப் படாத பருத்திக்குப் பொருந்தும். பஞ்சு என்பது விதை எடுத்து சீவி, நூற்பதற்கு அணியமாக உள்ள பொருளைக் குறிக்கும். 

இந்த நுணுகிய பொருள் வேறுபாட்டை நாம் உணர வேண்டும். (பருத்தி raw cotton; பஞ்சு refined cotton). பன்னியது இந்தையிரோப்பிய மொழிகளில் spinning என்றும் ஆயிற்று. (நாம் நூற்றல் என்றே சொல்லுகிறோம்.) பருத்தி, கொட்டை (cotton), பஞ்சு (sponge), நூல், பனுவல், இழை (இது தான் filament, file என்பதோடு தொடர்பு கொண்டது. நாம் file என்பதைத் தமிழ்ப் படுத்த இழையை விட்டுக் கோப்பைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறோம்), திரியீடு (thread), பாவு (warp), ஊடு (weft), துணி இன்னும் நெசவு பற்றிய சொற்களையெல்லாம் உலகத்திற்குக் கொடுத்து, முடிவில் நாம் தொலைந்து நிற்கிறோம்; இனிமேல் தான் மீட்க வேண்டும் 

அய்யா. ஏகப் பட்டது பொருள் தெரியாது போய்விட்டது. பஞ்சைப் பற்றித் தெரிந்த தமிழன், இந்தப் பருத்திப் பஞ்சிழையைக் காட்டிலும், இலகுவான, நொய்வான (denier குறைந்தது) பஞ்சை ஒரு மரத்தில் கண்டான். அது இலவம் பஞ்சாயிற்று. (இங்கே கொட்டை கிடையாது; உடனே பருத்தி வராமல், பஞ்சு என்ற சொல் வந்து விட்டது பாருங்கள்). அந்த மரம் இலவம் பஞ்சு மரம் ஆகி, நாளடைவில் இலவ மரம் ஆனது. 

நீங்கள் சொன்ன பந்திப் பாய். அதுவும் பல்லோடு தொடர்பு கொண்டதுதான். பல்+து>பற்று = கெட்டியாகப் பிடித்துக் கொள் பற்று+இ = பற்றி >பத்தி>பக்தி = இறைமேல் கொண்ட பிடிப்பு; (சிக்கெனப் பிடிப்பேன் எங்கு எழுந்து அருளுவது இனியே!) பல்+ன்+து = பந்து= அடுத்தடுத்த வரிசை (பற்கள் இருப்பதைப் போல) பந்து+அம் = பந்தம்= நமக்கு அடுத்தடுத்து உள்ளவன் = சொந்தக்காரன் பந்து+இ = பந்தி = அடுத்தடுத்து வரிசையாய் இருப்பது; (அந்தத் திருமண வீட்டில் 10 பந்தி நடந்துதான் என்றால் அவ்வளவு வரிசைச் சாப்பாடு நடந்தது என்று பொருள்.) 

பத்தி என்றாலும் வரிசைதான். (சிவகங்கை மாவட்ட வழக்கு. "தம்பி, பத்திலெ உக்காருங்க" - இங்கே பந்தி என்ற பொருள் கிடையாது. இது வேறு வரிசை. செட்டி நாட்டில், வளவில் இருந்து இரண்டாம் கட்டுக்கும் பந்திக் கட்டுக்கும் இடையில் உள்ள குறுகிய இடமும் பத்தி என்றே அழைக்கப் படும்.) பந்திக்குப் போடும் பாய் பந்திப் பாய். 

அடுத்தடுத்து அணிசேர்த்து வரிசையாக்கும் வேலை விரிவாக்கப் பட்டு, ஓலை வேய்வதற்கும் பயன்பட்டது. (வேய்வு>weave; மறுபடியும் பாருங்கள் நெசவுச் சொல்). ஓலை வேயப் பட்ட கொட்டகை, பந்தப் பட்டதால் (கட்டப் பட்டதால்) பந்தல் என்று ஆயிற்று. ஓலையில் வேய்வது ஒரு கட்டு, வரிசை, பிடிப்பு, பற்று; 

இப்படிப் பன்னுவது பின்னுவதும் ஆயிற்று. பின்னல் = embroidery; பந்தனை = கட்டு. அடுத்தது பஞ்சம். இங்கே பேராசிரியர் ப. அருளி தெரிவிக்கின்ற செய்திகளை முதலில் பார்ப்போம். 
 ---------------------------------------------------------- 
"புய்" என்னும் பழம் பெரும் மூல வேரில் இருந்து கிளம்பி "பொய்" என்னும் அரிய கிளை வேர் கிளைத்தது. இதன் பொருள் = துளை என்பதே. புய்+அல் =புயல்= பொழியும் மழை, நீர், முகில், கடுவளி புய்>பெய் = பொழி. புய்> பொய்> பொயி>பொழி = துளை வ்ழி ஒழுகு புய்>பொய்>பொயி>பொசி = துளை வழி ஒழுகு (நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோட புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்) முந்தையத் தமிழ மாந்தன் துளித்துளியாக மேல் நின்று கீழ் வீழ்ந்த மழைத் துளிகளைக் கண்ணுற்று, இத்துளிகள் இவ்வாறு விழ, துளைகள் வழியாகவே ஒழுக்கு நிகழ வேண்டும் என்று தவறாகக் கருதினான் என்ற வரலாற்றை, இச்சொல் தோற்றங்களின் பாங்கு தெரிவிக்கின்றது. பொய் = உள்ளீடின்மை, துளை ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய கிளைவேர் பொய்= துளை, பொந்து, மரப் பொந்து, உண்மையின்மை, பொய் சொல்லுகை, பயன்படாமை, கெடுதல், அவிதல், தவறுதல், வஞ்சித்தல்' 
-------------------------------------------------- 

 இனி நம் சொல்லுக்கு வருவோம். மழை பொய்த்துப் போனது; வானம் பொய்த்துப் போனது. இடம் பொசிந்து போனது (அழிந்து போனது.) பொய்ந்து>பொய்ஞ்சு>பொசிஞ்சு பொய்ஞ்சம்>பொஞ்சம்>பஞ்சம் = அழிந்த நிலை; பயன்படாது போன நிலை; கெட்டுப் போன நிலை; அவிந்து போன நிலை, தவறிப் போன நிலை. இப்படிப் பயிர் விளையாது இருந்த காலமும் பஞ்ச காலம் ஆயிற்று. பயிர் போன்று குழவி பெறாத தாயும் கன்னடத்தில் மலடி என்ற பொருளில் பஞ்சகி என்று அழைக்கப் பட்டாள் போலும். ஆக இந்தப் பஞ்சம் பொய் என்னும் வேரில் கிளைத்தது. மேலே கூறிய விளக்கங்கள் போதும் என்று எண்ணுகிறேன். 
 
அன்புடன், 
இராம.கி.

4 comments:

வசந்தன்(Vasanthan) said...

பத்தி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இதற்கு நாங்கள் இன்னொரு பொருளும் கொண்டுள்ளோம். கூரையையும் பத்தி என்போம்.
இது வீட்டுக்கூரையைக் குறிக்காது மேலதிகமாக நீட்டி வைக்கப்படும் கூரை.
'அங்காலப் பக்கம் ஒரு பத்தி இறக்க வேணும்' என்றால் குறிப்பிட்ட பக்கத்தில் வீட்டின் கூரையை நீட்டி ஒரு கொட்டில் அமைப்பதைக் குறிக்கும். அனேகமாக ஆடுகள் கட்ட, பழைய பொருடகள் போட, மிதிவண்டிகள் தரிக்கவென இப்பதிகள் பயன்படும்.

வசந்தன்(Vasanthan) said...

முதற்பின்னூட்டத்தில் இறுதிவரியில் "இப்பத்திகள்" என்று இருக்க வேண்டும்.

Chandravathanaa said...

வசந்தன் குறிப்பிடுவது போல நாமும் பத்தி இறக்கினோம்.
'அங்காலப் பக்கம் ஒரு பத்தி இறக்க வேணும்' என்றால் குறிப்பிட்ட பக்கத்தில் வீட்டின் கூரையை நீட்டி ஒரு கொட்டில் அமைப்பதைக் குறிக்கும்.

G.Ragavan said...

உள்ளேன் ஐயா. இவ்வளவுதான் இங்கு நான் சொல்ல முடியும். ஆனால் படித்துத் தெரிந்து கொண்டவை நிறைய. மிக்க நன்றி.