Sunday, June 01, 2025

Bio - வாழி

Bio என்ற சொல்லாட்சி பற்றிப் பேசவேண்டும். 50, 60 ஆண்டு காலமாய் ”உயிர்” என்றே நம்மூரில் இணைச்சொல் பழகினார். நானும் கூட நெஞ்சு நெருடல், கேள்வியோடு இச்சொல் பழகினேன். ”உயிரின் வரையறை என்ன? வேதியலோடு உயிர் சேருமா?” என்ற கேள்விகள் இயல்பாய் எழும். பொருள்முதல் வாதருக்கு உயிர் என்பது ஓர் இயக்கம், அல்லது மூச்சுக் காற்று. கருத்து முதல் வாதருக்கோ, அது உடலில் உறையும் ஆவி/ஆன்மா. ஆம். பின்னவர் கருத்தில், இதற்குத் தனியிருப்புண்டு. 

இப்போது ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். உயிர் உள்ள/ போன பொருளுக்கு வேதியலுண்டு. உயிருக்கு வேதியல் உண்டா?  

”உயிருள்ள” என்பதைத் தானே ”வாழ்கிற” என்று நாம் சொல்கிறோம்? அப்புறமென்ன? எந்த நெருடலுமின்றி ”வாழியைப்” bio என்பதற்கு ஈடாய்ப் பழகலாமே? ஏன் சுற்றிவளைத்து உயிரை வேதியலோடு ஒட்டி நாம் ஆகுபெயர் ஆக்குகிறோம்? அது நம்மை நெருளவில்லையா? எங்கெலாம் bio வருகிறதோ, அங்கெலாம் ”வாழியைப்” பயிலலாமே? 

காட்டு: வாழி வேதியல் (Biochemistry), நூக வாழியல் (Microbiology), வாழி நுட்பியல் (Biotechnology),

Tuesday, April 29, 2025

ஒரு நாத்திகரும் அல்குலும்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்

கண்ணில் நல் அஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்பது ஞான சம்பந்தரின் 3 ஆம் திருமுறையில் வரும் 24 ஆம் பதிகத்தின் முதல் பாடல். 

தமிழ்முறைத் திருமணங்களில் தாலிகட்டல் முடிந்தபின்  ”இல்லற வாழ்வு தொடங்கும் இருவரும் எதிர்காலத்தில் சிறக்க வாழும்படி சொல்லி, இப் பதிகத்தின் முதல் பாட்டான இதை திருமணத்தை நெறிப்படுத்துவோர் பாடுவார். பதிகத்தின் மிஞ்சிய 10 பாடல்களும் இதே கருத்தில் போகும். நற்பொருள் சொல்லும் இப்பதிகத்தை (குறிப்பாய் இதில் பயிலும் தமிழ்ச் சொற்களின் பொருள்களை) ஒழுங்காய் விளங்கிக் கொள்ளாது ஒரு நாத்திகர் தன் அரைகுறைப் புரிதலால், முட்டாள்தனமான உந்தலால், பதிகத்தினுள் முறையற்ற (ஆபாச) காமச் சொற்கள் பயில்வதாய்ச் சொல்லியிருந்தார். கீழே ஆங்கிலத்தில் வந்த கருத்தை படியுங்கள்.. 

----------------

In the following poems, 'Dravida Shishu' Thiru Gnana Sambandhar, a Brahmin sage, is appealing to the youngsters attracted to Buddhism and Jainism. "What do you have in these religions? You have to live a dry, womanless life there. Come to Shaivism.  My Lord himself is with a beautiful woman with big breasts, slender waist, long vulva and great character. No celibacy is needed here. You can live happily in our religion." 

---------------

தமிழ் அறியாத பல நாத்திகர் இது போன்ற தவறான புரிதலில் இப்போதும் இருக்கலாம். இக்கூற்றிற்கான காரணம் வேறொன்றுமில்லை.  

மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல

கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,

சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்

பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!     6

எனும் 6 ஆம் பாட்டில் ”அல்குல்” என்ற சொல் வந்துவிட்டதாம்; சம்பந்தர் கெட்ட வார்த்தை எல்லாம் பயின்று புத்த, செயின மாணவரை சிவ நெறிக்குள் அழைப்பதாய் இந்த  நாத்திகர் அலறுகிறார். (கந்தனுக்குப் புத்தி கவட்டிற்குள்ளே ” என்ற சொலவடை நாட்டுப் புறங்களில் உண்டு.) 

இப் பதிகமெழுந்த வரலாற்றையும் சூழ்நிலையையும் குறிப்பிட்ட நாத்திகர் அறியார் போலும். பாட்டெழுந்த காலத்தில் சம்பந்தருக்கு 14-15 அகவை இருந்திருக்கலாம். திருமறைக்காட்டுக் கோயிற் கதவைத் தம் பதிகங்களால் திறந்து மூடிய அப்பர் சம்பந்தரின் அருளிச் செயல்களுக்கு அப்புறம், அவரவர் வழியில் ஏகுவார். பாண்டிய அரசி மங்கையர்க்கரசி, முதலமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் அழைப்பை ஏற்று மறைக்காட்டில் இருந்து  சம்பந்தர் மதிரைக்கு ஏகுவார். 

மதிரையில் செயினரோடு வாதாடி, வெற்றி கொண்டு, அடுத்த நாள் ஒரு சிவமடத்தில் சம்பந்தர்  தங்கியிருந்த போது அவருடைய தந்தை சிவபாத இருதயர் அங்கு வந்துசேர்வார். தந்தையைப் பார்த்த சம்பந்தருக்குச் சொந்த ஊரான சீர்காழியின் இறைவர் நினைப்பு வந்துவிடும்.பதிகப் 11 பாடல்களிலும்  ”சட்ட நாதன் எப்படி இருக்கார்? நலந்தானே?” என்று குறும்போடு இறைவனைப் பற்றிச் சம்பந்தர்  பேசுவார். 

நினைவில் கொள்க. தம் தந்தையாருக்கு முன்னால் சீர்காழி இறைவரை நினைந்து மதிரையில் சம்பந்தர் பாடும் பாட்டு இதுவாகும். தந்தைக்கு முன்னால் 14-15 அகவையில் உள்ள இளைஞர், அதுவும் ஒரு துறவி, காம எழுச்சியில் விழைவோர் சூழப் பாடுவாரோ? அப்படியோர் இழிந்த எண்ணம் இந் நாத்திகருக்கு ஏன் வந்தது? புரியவில்லை. ஒருவேளை விக்டோரிய காலத்துப் பழக்கமோ?

”அல்குல்” என்ற சொல்லுக்குப் பெண்குறி என்ற பொருள் திரிகடுகத்தில் தான் முதலில் எழுந்திருக்கிறது. சங்க காலத்தில் அப்பொருள் இல்லவே இல்லை. சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் கூடப் பெண்குறிப் பொருள் இல்லை. சீவக சிந்தாமணியில்  116 இடங்களில் அல்குல் பயின்றாலும் அது எந்தெந்தப் பொருள்களில் என்று நான் ஆயவில்லை. 

சங்க காலத்தில் அல்குலைப்  பயில யாரும் தயங்கியது போல் தெரியவில்லை. வெகு இயல்பாகவே இச்சொல்லைக் கையாண்டுள்ளார். தவிர, அல்குல் உறுப்பு பெண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண்களுக்கும் உண்டு. மாந்தவுடம்பில் ஒக்கல் (hip) என்றும், இடுப்பு (waist) என்றும் 2 வேறு இடங்களுண்டு. இடுப்பிற்கும் வயிற்றுக்கும் கீழே ஒரு முக்கோணம் போல் காட்சியளிக்கும், சற்று மேடான  உறுப்பே அல்குலாகும். இதிலிருந்து தான் 2 தொடைகளும் மாந்தருக்கு வெளிவந்து நீள்கின்றன. முன்னும் பின்னும் புடைத்து நிற்கும் இப் பகுதி அல்குலாகும்.தவிர, அல்குலின் பின்பகுதி புட்டமாகும்.   

இருப்பினும், இற்றை அகராதிகளில் பெண்குறிப் பொருள் கொடுத்திருப்பது உண்மை தான். சங்கம் மருவிய காலத்தில் (பொ.உ.4 ஆம் நூ.வில்) ஓர் இடக்கரடக்கலாய்ப்  பெண்குறிப் பொருள் எழுந்திருக்கலாம். ஒரு தமிழ்ப் பாட்டில், உரையில் அல்குல் என்ற சொல்லைக் கண்டவுடன், இடம், பொருள் ஏவல், காலம் பார்க்காமல் பெண்குறிப் பொருள் கொள்வது வடிகட்டிய முட்டாள்தனம். பாடலின் சூழ்நிலையைப்  பார்க்க வேண்டாமா? அல்குல் என்பதை இக்காலத்திற் பலரும் சொல்லத் தவிர்ப்பதோடு தப்பாகவும் புரிந்து கொள்கிறோம். பல அகரமுதலிகளிலும் தப்பான பொருளையே கொடுத்துள்ளார். உடற்கூறியல் தெரிந்தவர் இது போல் தவறாய்ச் சொல்ல மாட்டார்.  

சரி, சொல்லின் சொற்பிறப்பியல் பார்ப்போம். உல்> ஒல்> ஒல்கு> அல்கு> அல்குதல் = ஒடுங்குதல், சுருங்குதல், சிறுத்தல். சங்க காலத்தில் துளைப் பொருளை யாரும் இதற்குப் பொருத்தியதில்லை. அல்குதல் என்பது இன்னும் திரிந்து அஃகுதல் (= ஒடுங்குதல், சுருங்குதல்) என்ற சொல்லும் எழும். அல்குதலோடு இன்னும் 2 சொற்களை நிகண்டுகளில் சொல்வர். முதற்சொல் கடிதடம்; இச்சொல் எப்படி எழுந்தது? கடி = இடுப்பு; தடம் = உயர்/மேல் இடம். கடிதடம் = இடுப்பை ஒட்டியுள்ள உயர்ந்த, மேலான இடம். இங்கே பெண்குறிப் பொருள் இல்லை. அடுத்தது நிதம்பம். இதன் பொருளும் உயரிடம் தான்

இனியாவது நாத்திகர்கள் தமிழ் படிக்கட்டும்.

Tuesday, April 08, 2025

கவடி> கbaடி

 கவள்>கவள்+து = கவட்டு என்பது நம் உடம்பில், இடுப்பிற்குக் கீழே இரண்டாய்ப் பிரியும் மூட்டுப் பகுதியைக் குறிக்கும். வேடிக்கைச் சொலவடையாய் “கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே” என்கிறோம் அல்லவா? கவட்டு என்பது கவடு என்றும் சுருங்கும், கவட்டை என்றும் நீளும். கவட்டியென்றும் திரியும்.

எந்நேரமும் கூடும் கவட்டைப் போலவே ஒரு அணியினர் வியகம் (>வ்யூகம்) வகுத்து ”மறு அணியிலிருந்து பாடிக்கொண்டே ஏறி வருபவனைக் (ஏறாளி = rider)” கவைத்து அமுக்கிக் கட்டிப்போடும் ஆட்டத்தைக் கவடி என்கிறோம். எதிரணிக்காரன் பாடிவரும் பாட்டிலும் கூடக் “கவடி, கவடி” என்ற சொல் விடாது சொல்லப்படும். கவடி>கbaடியாகி இன்று இந்தியத் துணைக் கண்டம் எங்கணும் பரவி நிற்கிறது. 

கவடிப் பிடிப்பால் அந்த விளையாட்டிற்குப் பெயர் ஏற்பட்டது.

Friday, January 24, 2025

இணையதளம் தொடர்பான சொற்கள்

 நண்பர் @Udhaya sankar தன் இடுகையில் சில சொற்களைக் கொடுத்து:

----------------------

இணையதளங்களை தமிழில் உருவாக்க நடைமுறை சிக்கல்கள்.  நான் பார்த்தவரை

Menu

Faq's

Features

Hear It

Tutorials

Promote

Timeline

Get in Touch

Stock Photos

Vector Images

அதிகம் தேவைப்படும் இது போன்ற வார்த்தைகளுக்கு எளிமையான தமிழ் வார்த்தைகள் நான் பார்த்தவரை இல்லை

 ------------

என்று கேட்டிருந்தார். கீழே வருவது என் பரிந்துரை.

--------------------

Menu = நுவநை [இன்னின்ன இதில் அடக்கம் என நுவலும் உணவுப் பட்டியல்; நுவ(ல்)நை]

Faq's = அகேவி (அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்)

Features = படிதோற்றுகள் (வினைத்தொகையாய்ப் புரிந்துகொள்க.) 

Hear It = கேட்கவும்

Tutorials = சொல்லிக் கொடுப்புகள்

Promote = முன்நகர்த்து.

Timeline = காலக்கோடு

Get in Touch = தொடுப்பில் வருக.

Stock Photos = அஞ்சறைப் படங்கள்

Vector Images = வேயர்

வேயருக்கான விளக்கம். 

தென்பாண்டி நாட்டில் அக்காலத்தில் திறந்து கிடக்கும் (மாட்டு)வண்டிகள் பாரம் தூக்குவதற்கும், (மாடு அல்லது குதிரை இழுக்கும்) கூட்டு வண்டிகள் ஆட்களைக் கொண்டு செல்வதற்கும் பயனாகின. பெருந்தனக்காரர் வீடுகளில் 60/70 ஆண்டுகளுக்கு முன் கூட்டுவண்டி இலாத வீடே இருக்காது. கூட்டு வண்டியையே ஆங்கிலத்தில் wagon என்றார். மூங்கிற் கூரை கொண்டு வேயப்பட்ட வண்டி. ”கூட்டுவண்டி, வேய்ச்சகடு, வேய்வண்டி” என்று நம் மரபிற் சொல்லப் பெறும். பல நாட்டுப்புற வீடுகளில் வண்டியில் இருந்து கூட்டைக் கழற்றிப் பண்ணையிற் போட்டு வைத்திருப்பார். தேவைப்படும் போது, திறந்த வண்டியில் மூங்கிற் கூரையை எளிதாக மாட்டி ஆட்களைக் கொண்டுசெல்லும் வகையில் மாற்றிவிடலாம். ஆட்களைக் கொண்டு செல்வது (to carry) என்றாலே வேய்தல் வினை வேய்மாடம் போன்றவை உடனே வந்துவிடும். வேய்ச் சகட்டிற்குத் தேவையான மூங்கிலின் குச்சி, அம்பிற்கும் கூடப் பயன்படும்.  மூங்கிலைக் குறிக்கும் இன்னொரு சொல் வேய் ஆகும். அதோடு எச் சகட்டுப் பயணமும் (வண்டிப் பயணமும்) ஒரு திசை நோக்கியே அமையும். திசை, தொலைவு, கூடுகை என்ற மூன்று தன்மைகளையும் உணர்த்தும் சொல் வேய்> வேயர் என்றாகும் தொடர்புள்ள ஆங்கில விளக்கத்தைக் கீழே தருகிறேன்.

[ vector = "quantity having magnitude and direction," 1704, from L. vectophysics) r "one who carries or conveys, carrier," from pp. stem of vehere "carry, convey" (see vehicle) - vehicle 1612, "a medium through which a drug or medicine is administered," 1615 in the sense of "any means of conveying or transmitting," from Fr. véhicule, from L. vehiculum "means of transport, a vehicle," from vehere "to carry," from PIE *wegh- "to go, transport in a vehicle" (cf. O.E. wegan "to carry;" O.N. vegr, O.H.G. weg "way;" M.Du. wagen "wagon;" see wagon). Sense of "cart or other conveyance" first recorded 1656.]}


Wednesday, January 01, 2025

காரணம்

 குல்>குரு->கரு->கரு-த்தல் என்பது தோன்றல் கருத்து வேர். இது பின்னால் அரும்புதலையும் செய்தல் கருத்தையும் சுட்டும் வண்ணம் விரிந்தது. தமிழரின் நிறமாய் நெடுங்காலம் கருப்பையும் ஊடே சிறு வகையில் சிவப்பையும் சொல்வர். உடல் உழைப்பு கூடக்கூடக் கருத்த தோல் மேலும் கருக்கும். சிவத்த தோல் மேலும் சிவக்கும். கருமம், கருக்குதல் போன்றவை செயலைக் குறிக்க எழுந்த பெயர்ச் சொற்களாகும். செய்தற்கு உரிய ஓர் உடல் உறுப்பான கையை கரமென்றும் சொல்வோம். கரணம் என்பது செய்முறையையும், செயலையும் குறிக்கும். கரணி என்பவன் செய்பவன் ஆவான். கரதலம் = கைத்தலம். 

கரு->கார்->காரம் என்பது இன்னொரு இயல்பான வளர்ச்சி. தரு->தார்->தாரம், வரு->வார்->வாரம் என்பது போல் இதுவும் அமையும். காரம் = செயல், தொழில். காரன் = செய்பவன். தொழிலன். சங்கதத் தாக்கத்தால் காரம்>கார்யம்> காரியம் என்று வடதமிழில் (பாகதத்தில்) இது திரியலாம். இன்னும் சிலர் கார்+இயம் = காரியம் என்று இதைக்கொண்டு முற்றிலும் தமிழென்பார். காரம் என்பதன் வழி, தொழில் செய்வானைக் கார, காரு, காரி, காரின், காரிள் என்றும் பாகதத்தில் சொல்வார்.

ஒரு செயலோ, ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களோ நடந்தால் தான், இன்னொரு செயல் நடக்கும் என்று இக்கு நிளை (if condition) அமைந்தால், முதற் செயலைக் காரணம் என்றும் இரண்டால் செயலைக் காரம் அல்லது காரியம் என்றும் வட தமிழில் சொல்வார், காரணத்தைத் தமிழென்று எற்காத பாவாணர் காரணத்திற்கு இணையாய் கரணியம் என்ற புதுச்சொல்லைப் படைத்தார். இன்றோ காரம், காரன் ஆகியவற்றை ஏற்கும் பொழுது காரணத்தையும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கலாம் என எம்போன்றோர் சொல்கிறோம். அணம் என்பது நெருங்கியிருப்பதைக் குறிக்கும் சொல்லாக்க ஈறு.

காவல்

Police - காவலர், Security - பாது காவலர், Watchman - காவலாளி, Bodyguard - மெய்காவலர், Bouncer  - விடுதி காவலர் என்ற சொற்கள் பற்றி யாரோ ஒருவர் ஒருமுறை முகநூலில் கேட்டிருந்தார். காவலை வைத்தே எல்லாவற்றையும் நான் சொல்வது எவ்வளவு நாள் சரி என்று தெரியவில்லை. பயனாளர் பார்வையிற் சொற்கள் வேண்டுமென்றும் அவர் சொல்லியிருந்தார்.   

நகரம், ஊரோடு police ஐ இணைத்துச் சொல்வது பொருத்தமாகும் தான். poly என்பது நகரத்தைக் குறிக்கும். நகரத்தைப் பள்ளி, பாழி என ஒரு காலத்திற் குறித்தோம். (பட்டி = சிறு ஊர்.) பாழிகர்/பாழியர் என்பார் நகரக் காவலர். இன்று இச்சொல்லைச் சொல்ல முடியாது. (பாழி/ பள்ளி என்ற சொற்கள் வேறு பொருளைக் கொள்கின்றன. இத்தனைக்கும் திருச்சிராப்பள்ளி இன்றும் புழக்கத்தில் உள்ளது தான்.) வேறு ஒரு சொல் வேண்டும். முயல்வோம். 

இப்போதெல்லாம் பல ஊர்கள் புரமெனப் படுகின்றன. எனவே புரவகர் என்று police ஐச் சொல்லலாம். புரத்தல்/ புரவுதல் = காத்தல். புரவர் என்பது நகரக் காவலருக்கும் பெருமிதத்தைத் தரும். 

Security என்பது உயிர்களின் சொத்துக்களின் சேமத்தை உறுதிசெய்வது. எனவே சேமுறுதி என்பது Securityக்குச் சரி வரும். சேமுறுதியார் Security ஆட்களுக்குச் சரி வரும்.

Watch = கண்ணுறல். Watchman = கண்ணுறுவார்

Bodyguard  = மெய்க்காவலர்

Bouncer = வேண்டப் படாதவரை இழுத்துப் பிடித்துக் கட்டுபவர். புணைத்தல், பூணுதல் என்பன சேர்த்துக் கட்டுவதைக் குறிக்கும். புணையார் என்பது Bouncer க்குச் சரி வரும்.


எண்ணிப் பாருங்கள்.

Police = புரவர் 

Security = சேமுறுதி 

Watchman = கண்ணுறவார்

Bodyguard = மெய்க்காவலர் 

Bouncer = புணையார் 

காவல் என்பதை gaurd இற்கு மட்டும் பயன்படுத்தலாம். 

அன்புடன்,

இராம.கி.