Thursday, May 30, 2024

தென்கிழக்கு ஆசியரும், தமிழரும்

தென்கிழக்கு ஆசிய நாகரிகங்களோடு  தமிழர்க்குத் தொடர்புள்ளது என்பதை நானென்றும் மறுத்ததில்லை. ”அங்குள்ள கோயில்களைக் கட்டியது தமிழரே” என்று சில வரலாற்றார்வலர் தம் ஆர்வக் கோளாற்றில் சொல்வதைத் தான் நான் மறுக்கிறேன். எதிர்க்கிறேன். ”கட்டியது அவர். துணை செய்தது தமிழர்” என்றுசொல்லுங்கள். முற்று முழுதாய் நீவீர் சொல்வதை நான் ஏற்பேன். 

இப்படி ஓர் அண்ணன்காரத் தோரணையை, தென்கிழக்கு ஆசிரியர் மேல் தமிழர் கொள்வது மிகமிகத் தவறு. கம்போடிய அரசகுடும்பத்திற்கும், பல்லவ அரசகுடும்பத்திற்கும் எவ்வளவு தான் உறவு சொன்னாலும், கம்போடிய அரசரைப் பல்லவர் என்று சொல்வது மிகமிகத் தவறு.  பிள்ளை இல்லாத பங்காளிகளுக்குள் பிள்ளைகளைத் தத்துக் கொடுப்பது ஒரு காலத்தில் தமிழரிடமிருந்த மரபே. ஆனாலும் அவரவர் ”விலாசத்தை”  மதிக்க வேண்டும் என்பதை ஆழப் புரிந்துகொண்டே இம்மரபு தொடர்ந்தது. அவரின் தனித் தன்மை மறுத்து, ”மடையரான உமக்கெல்லாம் நாங்களே சொல்லித் தந்தோம்” என்பது ”கருப்பருக்கும் செவ்விந்தியருக்கும் ஒன்றும் தெரியாது, வெள்ளையர் ஆன நாங்களே அவருக்கு எல்லாம் சொல்லித் தந்தோம்” என்ற இரோப்பியர் குடியேற்ற (colonial) மனப்பாங்கு கொண்டதை ஒக்கும். 

முற்றிலும் இது பொதுக்கை (fascist) மனப்பான்மை ஆகும். இப்பான்மையோடு  தொடர்ந்து நாம் பேசினால், உலகிலுள்ள பெரும்பாலோர் நம்மை மதியார், நமக்கு ஆதரவும் தரமாட்டார். நம்மூரிலுள்ள சில தமிழ் வறட்டு வாதருக்கு இந்தச் சூதானம் என்றுதான் புரியுமோ? தெரியவில்லை.