Friday, July 05, 2019

ச‌துரம்

"ச‌துரம் தமிழா? நாற்கோணம் என்பது பொருந்துமா? ச‌துரம் நாற்கோணம் என்றால் செவ்வகம் என்பது தமிழா அல்லது வேறு பெயர்கள் உள்ளனவா?" என்று Prasanna Pna என்பவர் சொற்களம் முகநூல் குழுவில் 2 நாட்களுக்குமுன் ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு மறுமொழிக்கும் விதமாய் நண்பர் கார்த்திக் கரன் (Karthik Karan) http://valavu.blogspot.com/2015/07/4.html?m=1 எனும் என்னுடைய வலைப்பதிவுக் கட்டுரையைச் சுட்டிக்காட்டினார். (நான் ஊர் சுற்றிக் கொண்டு இருந்ததால் இவ்வுரையாடலைச் செல்பேசியில் மோலோடப் படித்ததோடு சரி. முறையாக மறுமொழிக்கவில்லை.) என்கட்டுரையில் சதுரம் பற்றியும், அதன் தமிழ்மை பற்றியும், சொற்பொருளும், சொல்லெழுந்த விதமும் கூறப் பட்டிருந்தது. உரையாடலில் கலந்து கொண்ட பலரையும் அக் கட்டுரை நெகிழ்த்தியது போல் தெரியவில்லை. நாக. இளங்கோவனையும், கார்த்திக் கரனையும் தவிர மற்றோரெலாம் சதுர், வடமொழிச்சொல்லென்றே எண்ணினார் போலும். தமிழின்மேல் அவ்வளவு அவநம்பிக்கை பலருக்கும் உள்ளது. ”இராம.கி.க்கு வேறு வேலையில்லை. இப்படி ஏதோ உளறுவார்” என்றெண்ணி அவரவரின் கருதுகோளுக்கே போய்விட்டார் போலும்..

இதில் வேடிக்கை என்ன தெரியுமோ? வடமொழியெனக் கருதும் பலரும் மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்ப்பதேயில்லை. ஒருசொல் தமிழாவென ஐயுறுவதுபோல் அது சங்கதமாவென ஐயப்படார் போலும். தமிழுக்கு ஒரு ஆய்வுமுறை, சங்கதத்திற்கு இன்னொரு ஆய்வு முறையோ?தம்மை அறியாமலே ”சங்கதம் மேடு, தமிழ் பள்ளம்” எனும் முன்முடிவிற்கு எப்படியிவர் போன்றோர் வருகிறார்? வியப்புத்தான். பொ.உ..250 இலிருந்து பரப்பப்பட்டு வரும் சதுர்வருணக் கொள்கை நம்மை எப்படியெல்லாம் மழுங்கடிக்கிறது? அப்புறமென்ன பகுத்தறிவு பேசுகிறோம்? தமிழ்த்தேசியம் பேசுகிறோம்? நம் சிந்தனைச் செயற்பாட்டிலேயே (thought process)-நாம் அடிமை யுற்றுக் கிடக்கிறோமே? அது எப்படி? மற்றசொற்களைப் போலவே எண்கள் பற்றிய சொற்களிலும் நாம் பிறழ்ந்து கிடக்கிறோம் என்பதே என் புரிதல். ”எல்லாவற்றையும் சங்கதமே கடன்கொடுத்தது. நாம் கடனாளிகள்” என்று நம் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதா, என்ன? எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்தபின்தான் நான் அக்கட்டுரை எழுதினேன். சதுருக்கு எந்த வேரும் மோனியர் வில்லியம்சில் தரப்படவில்லை.

ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியும் கூட எந்த வேரையுங் காட்டாது. (https://www.etymonline.com/), Sanskrit catvarah, Avestan čathwaro, Persian čatvar, Greek tessares, Latin quattuor, Oscan petora, Old Church Slavonic četyre, Lithuanian keturi, Old Irish cethir, Welsh pedwar என்ற இணைச்சொற்களைத் தொகுத்துக் காட்டி,. மொழியியலார் ஏற்றுக்கொண்ட இந்தையிரோப்பிய ஒலிமாற்றங்களைக் கொண்டு ”நாலு” எனும் பொருள் குறிக்கும் முந்தைய இந்தையிரோப்பிய அடிச்சொல்லாக (Proto-Indo-European root) *kwetwer-”ஐக் காட்டி கீழ்க்கண்டவாறு விளக்கம் சொல்லும்.  .

It forms all or part of: cadre; cahier; carillon; carrefour; catty-cornered; diatessaron; escadrille; farthing; firkin; fortnight; forty; four; fourteen; fourth; quadrant; quadraphonic; quadratic; quadri-; quadrilateral; quadriliteral; quadrille; quadriplegia; quadrivium; quadroon; quadru-; quadruped; quadruple; quadruplicate; quarantine; quarrel (n.2) "square-headed bolt for a crossbow;" quarry (n.2) "open place where rocks are excavated;" quart; quarter; quarterback; quartermaster; quarters; quartet; quarto; quaternary; quatrain; quattrocento; quire (n.1) "set of four folded pages for a book;" squad; square; tessellated; tetra-; tetracycline; tetrad; tetragrammaton; tetrameter; tetrarch; trapezium.

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit catvarah, Avestan čathwaro, Persian čatvar, Greek tessares, Latin quattuor, Oscan petora, Old Church Slavonic četyre, Lithuanian keturi, Old Irish cethir, Welsh pedwar. Related Entries: quadri-, quadru-, tetra-, cadre, cahier, carillon, carrefour, catty-cornered, contesseration, diatessaron, escadrille, farthing, firkin, fortnight, forty, four, fourteen, fourth, quadragesima, quadrangle

மேலுள்ளதைக் கூர்ந்துபடித்தால் உங்களுக்கே விளங்கும். க்வெத்தர் என்ற சொல்லின் உள்ளார்ந்த பொருளென்ன? எப்படியது எழுந்தது? - என்று ஏதாவது மேலே கூறப்பட்டுள்ளதா? நாலு என்று கருத்தீடு (concept) இந்தக் க்வெத்தரோடு எப்படி இழைந்தது?.இவர் காட்டுவது தொல்காப்பிய இலக்கணத்தின் படி சொன்மை எனப்படும். பொருண்மை அல்ல. ”நாலு என்ற பொருள் காட்டும் சொல் இப்படி அமையும்” என்று இவர் காட்டுகிறார். ”நாலு என்ற பொருள் க்வெத்தருக்கு எப்படி வந்தது? அதன் பின்புலம் என்ன?” என்ற கேள்வி களுக்கான விடைகள்  எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் விளங்காது.

பல மேலைச்சொற்களுக்கும் இதே நிலைதான். மேலை இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலுக்கும் பாவாணர்வழி சொல்லப்படும் தமிழ்ச்சொற் பிறப்பியலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான். இது தெரியாமல் ”பாவாணர் தவறு, மேலையர் உசத்தி” என்று பலரும் சொல்லிவிடுவார். பத்து உறவுமொழிகளில் உள்ள ஒரு பொருட்சொற்களைத் தொகுத்து முன்கொண்ட விதிகளின்படி இட்டுக்கட்டிய சொல்லாய் ஒன்றைப் படைத்து, அதற்கு முன்னால் ஓர் உடுக்குறியும் போட்டு, இதுதான் முந்தை இந்தையிரோப்பிய மூலச்சொல் என்று ஓதுவதோடு மேலைச் சொற்பிறப்பியல் நின்றுகொள்ளும்.

தமிழ்ச்சொற்பிறப்பியல் அப்படி நிற்காது, ”தமிழிலுள்ள எண்ணுச்சொற்கள் 0, 1, 2, 3, 5, 10, 100, 1000 என்பவற்றை ஒட்டியெழுந்தன மற்ற எண்ணுச்சொற்கள் எல்லாம் இவற்றிலிருந்து பெறப்பட்டவையே” என்ற ஒழுங்கை முதலிற் சொல்லும்..அடுத்து, “நாலு என்பது ஐந்திற் குறைந்த பொருளில் (ஒருவிரல் மடங்கி) நலிந்த கையைக் குறித்து நலிகை>நாலிகை>நால்கை என்றானது” என்று ஒருசொல் பிறந்த பொருளடிப்படையைச் சொல்லும். அடுத்து அதே பொருளின் அடிப்படையில் இன்னொரு சொல் பிறந்ததை இனங் காட்டும். ”நலிதலின் இன்னொருசொல் சொதுத்தல் ஆகும்; சொத்தை/சொட்டையென்ற சொல்லையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். சொடுக்கை/சொதுக்கை = நலிந்த கை, (ஒருவிரல் இங்கும் மடங்கியது. இன்னொருவகையிற் சொத்தாங்கை> சோத்தாங்கை என்றாகும், வலக்கைப் பழக்க ஆதிக்கத்தால் ”குறைந்த கை” என்று பொருள் கொண்டு இடக்கையைக் குறிக்கும்.)” என்று இன்னொரு சொல் வளர்ந்த ஏரணத்தைக் குறிக்கும். இந்த ஏரணம்தான் மேலை முறையில் சொல்லப்படாது. முடிவில் “கையின் இன்னொரு சொல் கரம். எனவே சொதுகரம்>சதுகரம்>சதுரம்” என்று இச்சொல் எழுந்த கதையைச் சொல்லும்.

”எனக்குக் க்வெத்தர் தான் முகன்மை, தமிழ்ச் சதுரம் முகன்மையில்லை” என்பவர் பொருண்மையை ஒதுக்குகிறார். மேலை மொழியாளர் சொல்வதை தலைமேல் கொள்ளுகிறார். பாவாணரைத் தூக்கியெறிகிறார் என்பது விளங்கும். ”இச்சொல் எப்படி எழுந்தது என்பதற்கு அப்புறம் தான் எப்பொழுது எழுந்தது?” என்று பார்க்கமுடியும். இதுதான் அறிவியல் முறை. மேலைச் சொற்பிறப்பியல் முறை பாதிக்கிணறு தாண்டுகிறது.

எங்கள் ஊர்ப்பக்கம் பாதிக்கிணறு தாண்டுவது நம்மை விழுத்தாட்டும் என்பார். கிணற்றைத் தாண்டுவது முகன்மை என்று எண்ணுவோர் பாவணரைப் படிப்பார். அப்புறம் உங்கள் உகப்பு. அடிமையாகவே இருப்போம் என்று நீங்கள் நினைத்தால் நானென்ன செய்யமுடியும்?. உங்களின் பல சொற்களைச் சங்கதத்திற்குத் தானம் செய்துவிட்டு வேறு புதுச்சொற்களைக் கால காலத்திற்கும் தேடிக்கொண்டேயிருங்கள். நீங்கள் வள்ளல் பாம்பரையைச்  சேர்ந்தவர் அல்லவா?!.

அன்புடன்,
இராம.கி.

No comments: