Thursday, July 09, 2015

பழந்தமிழர் அளவைகள் - 4

வேளாண்மை விரிவில் நீட்டளவைத் தொடர்ச்சியாய்ப் பரப்பளவை பற்றிய கருத்தெழுந்தது. ”சதுரம், செவ்வகம், முக்கோணம், நாற்கோட்டம் (quadrilateral), நாற்பதியம் (trapezium), வட்டம் போன்ற வடிவங்களால் ஆன நிலங்களின் பரப்பை எப்படிக் காண்பது? நிலங்கள் ஒவ்வொன்றும் மேலும் மேலும் பெரிதாகையில் பரப்புகளையெப்படி ஒன்றிற்கு மேல் இன்னொன்றாய் வரிசைப்படுத்துவது?” என்ற அறிவியற் சிந்தனையே பரப்பளவையின் தொடக்கமாகும். Science starts with classification. (பரப்பைக் காணும் வழிகளை வேறொரு கட்டுரையிற் பேசவேண்டும். இக்கட்டுரையில் மேற்சொன்ன கணித வடிவங்களைக் காட்டிலும் பெருக்கல், பழுக்கல், உறழ்தல், lமாறல், குழித்தல் போன்ற கணிதச்சொற்களைப் புரிந்துகொண்டு பரப்பளவைகளைப் பார்க்கப்போகிறோம்.)

ஒரு பக்கத்தை இன்னொரு பக்கத்தாற் பெருக்கிப் பரப்புக் கணக்கிடுவதைச் சதுரம் என்னும் வடிவமே முதலில் எடுத்துக்காட்டியது. சதுரம் ஒரு வடசொல்லென்றே பலரும் எண்ணுகிறார்; உண்மையில் அது தமிழ்ச்சொல்லேயாகும். 4 சம-கரங் கொண்ட சதுரத்தின் சொற்பிறப்பு எளிதானது. தமிழில் எண்ணுச்சொற்கள் 0, 1, 2, 3, 5, 10, 100, 1000 ஐ ஒட்டியெழுந்தன. மற்ற எண்ணுச்சொற்களெல்லாம் இவற்றிலிருந்து பெறப்பட்டவையே. நாலு என்பது ஐந்திற்குறைந்த பொருளில் (ஒருவிரல் மடங்கி) நலிந்த கையைக்குறித்து நலிகை>நாலிகை>நால்கை என்றானது. நலிதலின் இன்னொருசொல் சொதுத்தல் ஆகும்; சொத்தை/சொட்டையென்ற சொல்லையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். சொடுக்கை/சொதுக்கை = நலிந்த கை, (ஒருவிரல் இங்கும் மடங்கியது. இன்னொருவகையிற் சொத்தாங்கை>சோத்தாங்கை என்றாகும், வலக்கைப் பழக்க ஆதிக்கத்தால் ”குறைந்த கை” என்று பொருள்கொண்டு இடக்கையைக் குறிக்கும்.) கையின் இன்னொரு சொல் கரம்.சொதுகரம்>சதுகரம்>சதுரம் என்று இச்சொல்லெழும்.

அடுத்தது செவ்வகம் என்னும் வடிவமாகும். அஃகமென்ற சொல் முனை, கோணத்தைக் குறிக்கும். எல்லா முனைகளிலும் செவ்வையான கோணங் (right angle) கொண்டது செவ்வஃகம்>செவ்வகம் ஆகும். (பார்க்க: http://valavu.blogspot.in/2010/04/5.html).

[சதுரம், செவ்வகம் ஆகிய சொற்களைத் தவிர நாற்கரமென்ற சொல்லை quadrilateral ஐக் குறிக்கும்படி நம் இளம் அகவையிற் பயின்றோம். உண்மையிற் சதுகரம் என்பதற்கும் நாற்கரம் என்பதற்கும் பெருத்த பொருள்வேறுபாடு கிடையாதென்பதால், தெளிவுகருதி “நாலுகோடுகளால் ஆனது நாற்கோட்டம் (quadrilateral)” என்றபொருளில் இப்பொழுது பயிலத்தொடங்கியுள்ளேன். நாற்பதியம் என்பது நாலு இடங்களில் பதிந்தது என்ற பொருளில் எழுந்த சொல்.]

கூடற்கருத்திலிருந்து தொகுதல், மிகுதல். குவிதல், திரளல், முழுமை, பருமையென்ற கருத்துக்கள் பொருள் வளர்ச்சிபெற்று அததற்கான சொற்கள் பிறக்குமென்று. பாவாணர் சொல்வார். பருத்தலிலிருந்து பரத்தல், பருக்கல் வினைகள் உருவாகி இன்னுஞ் சொற்கள் பிறக்கும். பலம் பெலமாவதுபோல, கட்டுதல் கெட்டுதலாவது போலப் பருக்கல் பெருக்கலாகும். பருக்கல் பலுக்கற்றிரிவில் பழுக்கலுமாகும். (மல்கிப்பழுக்கல் = multiplication). கணக்கதிகாரத்தில் பழுக்கல் என்ற சொல் பெரிதும் ஆளப்படும்.

உல்>உறு>உறழ்>உறழ்தல் என்ற கருத்தும் மிகுதல், அதிகரித்தல், பெருக்குதல் பொருளில் வரும். “இருநான்கு உருபும் உறழ்தர” என்பது நன்னூல் 240 ஆம் நூற்பா. பரப்பின் விரிவில் ஒரு வயலில் உழும்போது அடுத்தடுத்த சாலில் மாறிமாறித் திரும்ப நடந்து விரிவை உணர்வதால், ”மாறல்” என்பதும் பெருக்குஞ் செயலைக் குறித்தது. (கணக்கதிகாரத்தில் பல கணக்குகளில் இச்சொல் பயிலும். ”7-ஐ 6-ஓடு மாறு” என்றால் 42 என கணக்கதிகாரத்தில் விடைதருவர். இன்னொரு சோகத்தை இங்கு சொல்லவேண்டும். இந்தக்காலக் கணக்குப்பயிற்சியில் பெருக்கல் என்பதைத் தவிர மற்ற இணைச் சொற்களைத் தவிர்த்துவிட்டோம். இற்றை இளஞ்சிறாருக்கு அவை தெரியாது. multiply என்ற ஆங்கிலச்சொல் வேண்டுமானால் தெரியும். இப்படி விடாத ஆங்கிலத் தாக்கத்தால் நாம் நம் மரபுகளைத் தவிர்த்து, உறவுகளைத் தொடரமுடியாது, ஏதிலிகளாய் அம்போவென்று நிற்கிறோம்.)

குழுத்தல், குழுமுதலென்பது கூடலிற் தொடங்கி சொற்பொருள் வளர்ச்சியிற் குழித்தலாகும். குழுத்தலின் திரிவான கொழுத்தல் திண்மப் பருமனையும், குழித்தலின் திரிவான கொழித்தல் நீர்மப் பருமனையுங் குறிக்கின்றன. குழித்தல் ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குவதற்குப் பயனாகிப் பின் எல்லா எண்களையும் பெருக்குதற்காகியது. (சதுரத்திலிருந்து செவ்வகம் போய்ப் பரப்பைக் காணும் சிந்தனை விரிவை இங்கு அறியலாம்.)

இன்னொரு விதமாயும் பெருக்கல் வினை தமிழர்மரபிற் குறிப்பிடப்பட்டது. (7க்கு 6 நாற்பத்திரண்டு; 8 க்கு 9 = 72 என்றும், ஏழாறு நாற்பத்திரண்டு; எண்ணொம்பது எழுபத்திரண்டு என்றும் 1950 களில் இருவேறு விதமாய்த் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் படித்தேன்.) இங்கே ”க்கு” சொற்சுருக்கம் பெருக்கற்குறிக்கு மாற்றாக வந்துள்ளது. இங்குநாம் உரையாடும் முன்னீட்டில் 11FED என்ற குறிப்புள்ளியில் இருக்கும் குறியீட்டிற்கு used especially with numerals for the dative suffix என்ற விளக்கம் மட்டும் பற்றாது. used as a substitute for multiplication mark with a meaning of "into" and "by". என்ற விளக்கமும் சேர்க்கவேண்டும். இந்தக் குறியீட்டிற்கான மாற்றுக்குறிகளை இக்கட்டுரையாசிரியர் பார்த்திருக்கிறார். அவற்றிலெதை எடுத்துக்கொள்வதென்று துறையறிஞர்தான் முடிவுசெய்யவேண்டும்.
.
பழஞ்சோழநாட்டில் குழி(த்த, குழிக்கிற, குழிக்கும்)) நிலமென்பது வினைத்தொகையாகி 1 பெருங்கோற் சதுரம் அல்லது தண்டச் சதுரத்தைக் குறிக்கும். [தமிழர் நிலமெங்கும் இவ்வரையறையிற் குழப்பம் இல்லை. தண்டத்தின் அளவிற்றான் குழப்பமேற்பட்டது. தண்டமென்ற சொல் தமிழ்தான். இதையும் சிலர் வடமொழியென நினைக்கிறார். அப்படிக்கிடையாது.] இச்சொல் குழியென்றே சொல்லப்பட்டுப் பெயராகியது. (ஆரியபட்டா வாய்ப்பாட்டின் படி) 1 தண்டம் 10 ஆ.அடியாகின், 1 தண்டச்சதுரம் 100 சதுர ஆ.அடியாகும். (தென்புல வாய்ப்பாட்டின்படி) 1 தண்டம் 11 ஆ.அடியாகின், 1 தண்டச் சதுரம் = 121 சதுர ஆ.அடி. (மேலையர் வாய்ப்பாட்டின் படி) 1 தண்டம் 12 ஆ.அடி ஆகின், 1 தண்டச் சதுரம் = 144 சதுர ஆ.அடி. (மேலையர் வாய்ப்பாடே வடமேற்குப் படையெடுப்புக்களின் பின் இந்திய வடபுலத்தில் வாய்ப்பாடானது.) கணக்கதிகாரத்தைச் சரியாகப் பயிலாது, குழியெனும் அளவை புரியாது L2/15-078 என்ற முன்னீடு மேலையர் வாய்ப்பாடான 1 தண்டச்சதுரம் = 144 சதுர ஆ.அடிகளைப் பதிவுசெய்கிறது. நம்மூர் அளவைகளை விலக்கி வேறோர் அளவையைத் தமிழின் நிறைப்பு வளாகத்தில் (supplementary block) நாமேன் பதியவேண்டும்? - என்பது என் கேள்வி.

மேலுள்ள தென்புல வாய்ப்பாட்டில் 1 தண்டம் = 16 சாண் என்பதே பெரும்பாற்பழக்கமாகும். இப்பொழுது ஒருங்குறியிற் செந்தரம்பதிய முற்படுவதால், செங்குழி என்றதைச் சொல்வதே சரியான முறை. (செந்தமிழ், செங்கதம்போற் ”செங்குழி” பயிலலாம்.) ஏனெனிற் பழம்நீட்டளவையில் 16 சாண்கோலையே எல்லாப்பொழுதும் பழகவில்லை. சிலபோது, சிலவட்டாரங்களில் 12, 14, 18 சாண்கோல்களைப் பயன்படுத்தினார். (சாணெனும் அளவிற்கு மாறாய்த் தொல்லாவணங்களில் பாதத்தைக் குறிக்கும் அடியையும் பயன்படுத்தினார். அதை “ஆ.அடி”யோடு குழம்பக்கூடாது.) கோயில்கட்டப் பயனுறுத்திய கோலடையாளத்தைச் சிற்பி கோடிட்டுக்காட்டும் பழக்கமும் பல கோயில்களிலுண்டு. கணக்கதிகாரத்தில் 10, 12, 14, 18 சாண் கோல்களின் வழிப்பெற்ற குழிகளை 16 சாண்வழிப் பெற்ற செங்குழியாக மாற்றும் பயிற்சிக் கணக்குகள் பலவுண்டு. எனவே 11FE0 என்ற குறிப்புள்ளிக்கு நேராக TAMIL SIGN CENGKUZHI OR STANDARD KUZHI என்றிருப்பதே சரியானது.

தவிர 121 சதுர அடியை 1 சிறுகுழி என்றும், 12100 சதுர அடியை 1 பெருங்குழி என்றுஞ் சொல்லும் பழக்கம் சோழநாட்டில் இருந்திருக்கிறது. இதன்படி 1பெருங்குழி = 100 சிறுகுழி என்றாகும். இப் பெருங்குழிக்கு எல்லோரும் அறிந்த வேறொரு பெயருமுண்டு. அதைக் கீழே பார்ப்போம்.
.
11FE0 விற்கு விளக்கமெழுதுகையில் தென்புல வாய்ப்பாட்டையே நாம் பதிவுசெய்யவேண்டும். வேண்டுமெனில் மற்ற வாய்ப்பாடுகளை அடுத்துக் குறிப்பிடலாம். 144 சதுர ஆ.அடி என்பது மேலையர் கெஜத்திலிருந்து பெறப்படும் வழியலகாகும். அதையெடுத்து நம்குறியேற்றத்திற் குறிக்கும் தேவையேயில்லை. குழியைக் குறிக்கும் 11FE0 எனும் குறிப்புள்ளிக்கான விவரத்தில் equals 16 square gejam என்பதற்கு மாறாக, equals 1 square thandam என்றெழுதலே சரி. கூடவே 1 thandam = 11 ft = 132 inch, as per standard Tamil practice; however in certain regions and historical time periods, 1 thandam had variouslly been held equivalent to 11 சாண் (82.5 inch), 12 சாண் (99 inch), 14 சாண் (115.5 inch), 18 சாண் (148.5 inch) என்றுமெழுதலாம். 11FE0 குறிப்புள்ளிக் குறியீட்டில் கு-வை எழுதி மேலே பிள்ளையார் சுழி சேர்ப்பதா, அன்றி லகரஞ் சேர்ப்பதா எனவும், ஒழுங்குமுறை செய்யும் துறையறிஞர் கூடிப்பேசவேண்டும். (பலரும் பிள்ளையார்சுழியே சரியென்கிறார்.)

குழி(நிலத்து)க்கு அடுத்தது மா(நிலம்) ஆகும். மா(த்த, மாக்கிற, மாக்கும்) நிலம் என்று வினைத்தொகையாகவும் (மாத்தல் = அளத்தல். ஆங்கிலத்தில் metre, metrology என்றும், மட்டுதல், மட்டும், மானம் என்றெல்லாம் தமிழிற் சொல்லுகிறோமே அவையெல்லாம் இந்த மாத்தலோடு தொடர்புடையவை. மாத்தல் என்ற சொல் அறிவியலிற் பயன்படும் அருமையான ஊற்றுச் சொல்.), பெருநிலம் என்று பண்புத்தொகையாகவும் பொருத்தி விளக்கஞ்சொல்வர். வினைத்தொகையே சரியான பொருள் தருவதாய் என் ஒருசாற் கருத்து அமையும். மாநிலம் சுருங்கி மாவெனப் பெயரானது. (மா என்னும் அளவை ஓரெழுத்துக் கொண்டது என்று சிலர் எண்ணிக்கொள்கிறார். உண்மையில் அது புரிதல் நீட்சியேயொழிய, அடிப்படை அளவு மாநிலம் என்பதேயாகும்.) வினைத்தொகையும், பண்புத்தொகையும் எல்லோருக்கும் மறந்தேபோனது. மயமதம் என்ற கோயிற் கட்டிட விளக்கநூலில் 8 தண்டம் 1 கயிறென்று சொல்லுவார். கயிறு, தண்டத்தினும் பெரிய அலகாகும். ஒரு தண்டச்சதுரத்தைப் போல 7744 சதுர ஆ.அடிகள் கொண்ட 1 கயிற்றுச் சதுரத்தை எண்ணிப்பார்க்கலாம். (இக்கால 3 ground-7200 சதுர ஆ.அடிகளுக்கும் இது பெரியது.) இக்கயிற்றை நெடுநல்வாடையின் 76-78 அடிகள்

“நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க் கொப்பமனை வகுத்து”

என்றுசொல்லும். அளவை விவரமறியா உரையாசிரியர்,.”பெருந்தச்சர் நூலை நேரேபிடித்து திசைகளைக் குறித்துக்கொண்டு திக்குகளில் நிற்கும் தெய்வங்களை நோக்கி பெரும்பெயர் கொண்ட மன்னர்க்கு ஏற்ற மனையை வகுத்து” என்று பொருந்தச் சொல்வதாய்ப் பொருளெழுதுவார். அளவைகள் தெரிந்தோர் அப்படிப்பாரார்; நூலறிபுலவர் = மனைநூலறிந்த பெருந்தச்சர். நுண்ணிதின் கயிறிட்டு = நுணுகிக் கயிறளந்து. ”தேஎம்” என்பதை அளபெடையாக்கித் தேயத்தைக் குறிப்பதாய்த் திசைப்பொருள் கொள்ளாது, தேயத்தைப் பக்கம், இடமென்று பொருள்கொண்டால் ”கட்டிடநூலறிந்த பெருந்தச்சர் நுணுகிக் கயிறளந்து பக்கங்கொண்டு, தெய்வத்தைநோக்கிப் பெரும்பெயர்மன்னர்க்கு ஒப்ப (வீட்டு)மனை வகுத்து” என நேரடிப் பொருள்சொல்லலாம். கயிறளந்து பக்கம் கொள்ளுதல் என்பது வீட்டுமனையின் பக்கத்தைக் குறிக்கும்.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டுப் பக்கம் 150 ஆண்டுகளுக்குமுன் கூட, பொதுவான வீட்டுமனைகள் 4 ground (80*120 = 9600 சதுர ஆ.அடி) இருக்கும். இவற்றினும் பெரிய செல்வந்தரின் முரட்டு வீட்டுமனைகள் 6 ground (120*120 = 14400 சதுர ஆ.அடி) ~ 2 கயிற்றுச்சதுரம் இருக்கும். நெடுநல்வாடையிற் பேசப்படும் பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனை இரு கயிற்றுச் சதுரமோ. அதற்கும் மேலோ, “பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப” அமைவதில் வியப்பொன்றுமில்லை. கோட்டையின் நடுவில் அரசனின் அரண்மனை இவ்வளவு பெரிதாகவும் அதைச்சுற்றி மற்ற மனைகளும் அரங்குகளும் இருக்கும். அருத்தசாற்றம் விவரிக்கும் மகதமன்னர் அரண்மனையும் இவ்வளவு பெரியதே. இந்த விவரிப்புகள் உண்மையா என்பதை ஏதாவது ஒரு தொல்லாய்வின் மூலம் அறிந்தாற்றான் உண்டு. ஒருவேளை மதுரை சிலைமானுக்கருகில் கீழடியில் காணப்பெறும் தொல்லாய்வு இதை வெளிக்கொணரலாம்.

ground என்றதும் அதே பள்ளப்பொருள்கொண்ட நம்மூர்க் குண்டின் அளவைச் சொல்லத்தோன்றியது. (குண்டும், குழியும் எனும்போது, குண்டு மேடென்று பொருள்கொள்ளும். வெறுமே குண்டெனும் போது பள்ளமென்று பொருள்கொள்ளும்.) குண்டென்பது 3*3 தண்டச் சதுரம் = 33*33 சதுர ஆ.அடி = 1089 சதுர ஆ.அடியெனப் பெருஞ்சோழர் புழக்கத்திலிருந்த அளவையாகும். இங்கே இன்னொரு இணைகோட்டைச் சொல்லவேண்டும். 'ஏர்' (ARE) என்பது ஒரு மெட்ரிக் பரப்பளவு அலகு. ஒரு ஏர் = 100 சதுர மீட்டர் = 1076 சதுர அடி = 32.8 (33) அடி அளவுள்ள சதுரமான மனை. 100 ஏர் கொண்டது ஒரு எக்டேர் = 2.47105 ஏக்கர். 1 ஏக்கர் =  = 43560 சதுர அடி = 208 அடி எட்டரை அங்குலம் சதுரமான புலம்

இக்காலத்து ground -ற்கு நெருங்கிவருவது 20 தண்டச் சதுரம் = 55*44 சதுர ஆ.அடி = 2420 சதுர ஆ.அடியாகும்.

8 தண்டத்தினும் பெரிதாய்ப் 10 தண்டங் குறிக்கும் அலகைப் பரிதேசமென அருத்தசாற்றம் அழைக்கும். (= வெட்டுப்பக்கம் அல்லது வெட்டலகு; பரிதல் வினையை வெட்டற்பொருளோடு பொருத்திச் சூடாமணி நிகண்டு சொல்லும். ஏகதேசமெனும் வடமொழிக் கூட்டுச்சொல்லிற்கு ஒற்றைப்பக்கமென்று பொருள். உத்தேசமென்பதற்கு உட்பக்கமென்று பொருள்.) சதுரம், ஐமுகம், அறுமுகம் போன்ற ஒழுங்கான பல்முக வடிவங்களில் ஒற்றையலகென்ற (unit measure) அளவுண்டு. இவ்வொற்றையலகைத் தான் நாம் பக்கமென்கிறோம். ஒரு நீளக்கோட்டிலும், பரிதேசத்தை அளவுகோலாக்கிப் பரிக்க முடியும். இதற்குச் சரியான தமிழ்ப்பெயரை இன்னும் நானறியேன். ஆனாற் 10 தண்டங்களைப் பக்கமாகக் கொண்ட ஒரு பரிதேசச் சதுரத்தின் பரப்பளவு 100 குழிகளாகி மா(நிலம்) எனப் பெயர் கொள்ளும். (குடிலரின் அருத்த சாற்றம் படிக்கவில்லையெனில், மாவின் சரியான சமன்பாடு நமக்கு விளங்காமலே போய்விடும். வடபுல அளவைகளுக்கும் தென்புல அலவைகளுக்கும் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமைகளை நாம் தொடர்ந்து கவனிக்கவேண்டும். ஒருங்குறியில் பின்ன, சின்னக் குறியீடுகளிற் தெளிவு ஏற்பட அது வகைசெய்யும்.

(மா(நிலம்) என்பது 1/20 வேலி. மா(நிலம்) = 100 குழிகள் = 10*10 தண்டச்சதுரம் = 110*110 சதுர ஆ.அடிகள் = 12100 சதுர ஆ.அடிகள். 1 மா = 100 குழிகளென்பதைப் பெரும்பான்மையளவாகக் கொள்ளலாம். அதேபொழுது, பல்வேறு வட்டாரங்களில் வேறு பல ஒக்குமைகளும் (equalities) இருந்தன. அவற்றை வல்லுநர் வழி அறிந்து மாற்றுவழக்குகளாய் L2/15-078 இற் பதிவுசெய்யவேண்டும்.

மேலும், ஒருமாவிற்கு எத்தனை குழிகள், குழிவரையறைத் தண்டத்திற்கு எத்தனை சாண்கள் என்பதைப் பொறுத்தும் முடிவுகள் வேறுபடும். (முன்னாற் சொன்ன 1 பெருங்குழி என்பது மா(நிலத்திற்கு) இன்னொரு பெயர் என்று இப்பொழுது புரிந்துகொள்ளலாம்.) ஏற்கனவே 0BAA என்ற குறிப்புள்ளிகொண்ட குறியீடு இதைக் குறிப்பதாக L2/15-078 குறிக்கும். அதில் also denotes the fraction one twentieth = maa என்று மட்டும் விளக்கம் எழுதியிருப்பார். கூடவே it also denotes one-twentieth of a veli marked in 11FE1 என்றும், it also denotes 0ne-fifth of a KunRi etai என்று குறிப்பு  எழுதலாம். அப்பொழுதுதான் அதன்பொருள் முழுமைபெறும்.

அதெப்படி மாவிற்குப் பகர உயிர்மெய்யெழுத்து குறியானது?- என்பது அடுத்தகேள்வி. இதற்கு எளிதானவிடை இளம்பூரணர் உரையிலுண்டு. தொல்காப்பிய எழுத்ததிகாரம் 14 ஆம் நூற்பா மகரவடிவம் குறிப்பதாய் “உட்பெறு புள்ளி உருவாகும்மே” எனப்பேசும். (வடிவங்கள் பற்றித் தொல்காப்பியம் பேசுவது பெரிதுங் குறைச்சல். பேசிய சிலவற்றில் இந்த மகரம் ஒன்று.) ”இது, பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று” என்பார் இளம்பூரணர். “புறத்துப்பெறும் புள்ளியொடு உள்ளாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம் (அஃதின்மை பகரத்திற்கு வடிவாம்.)”. இதன்பொருள் வேறு ஒன்றுமில்லை. பகரத்திற்குள் இக்காலக் colon ஐப் போட்டால் ம் என்றாகுமாம். இம்மகரத்தின் உள்ளேயிருக்கும் புள்ளி நாளாவட்டத்திற் குறுங்கோடாக மாறிக் கி.மு.3-இற் கிடைத்த தமிழியெழுத்தில் பகரவடிவின் ஒரு கையிற் குறுக்கே வருவதாய் மாறும். ஆகத் தமிழிக்கும் முந்திய வடிவத்தை தொல்காப்பியர் இங்கு நமக்கு அடையாளங் காட்டுகிறார். (இதைப் படித்தபிறகும் தொல்காப்பியர் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டென்பாரை ஒருகாலும் கடைத்தேற்ற முடியாது. தொல்காப்பியர்காலம் உறுதியாக கி.மு.400-500க்கும் முற்பட்டதே.)

பெருமியின் மகரம் தமிழி மகரத்தினின்றும் வேறுபட்டாலும் சரியான உறவுகாட்டும். தமிழி, பெருமிக்கும் முந்தியதென்பதை மகரவடிவங் கொண்டே சொல்லிவிட முடியும். (ஆனாலும் சிலர் தமிழியைத் தமிழ்பிராமி என்று சொல்லவே அடம்பிடிப்பர்.) மகரத்திற்கான பழங்குறியீட்டைப் பலரும் மாவிற்குக் ஈடாகப் பயன்படுகையில் ஏதோ காரணத்தால் உட்புள்ளி தவிர்த்திருக்கிறார். எனவே தமிழியின் மகரம் (புள்ளி வளைவான) வளர்ச்சி மாற்றம் பெறும்போதே இன்னொரு பக்கம் மாவெனும் அளவைக்குறியீடு தன் உட்புள்ளியை இழந்திருக்கிறது. இந்த அவதானம் மா எனும் அளவையும் குறியீடும் தொல்காப்பியர் காலத்திலே இருந்ததை உறுதியாய் எண்ண வைக்கிறது.

மாவிற்கு அடுத்த பெரிய அளவை வேலியாகும். 1வேலி = 20 மா = 2000 குழி = 50*40 தண்டச்சதுரம் = 550*440 சதுர ஆ.அடிகள் = 242000 சதுர ஆ.அடிகள். வேலியென்பது வேல்கொண்டு வரம்பு கட்டிய இடத்தைக் குறிக்கும். இன்றுங்கூட கற்றூண்களையும் தடிகளையும், முள்மரங்களையும் நிலவரம்பில் நாம் நடுவதைக் காணலாம். மர வேலூன்றப் பெற்றதால் வேலியானது. ஈரெழுத்துச் சொல்லான வேலிக்குக் குறியீடு தேவையா? - என்பது ஓர்ந்துபார்க்க வேண்டியதாகும். லிகரத்தை எழுதி பிள்ளையார்சுழி சேர்ப்பது சரியா என்று விளங்கவில்லை. இக்குறியீடு எப்படி எழுந்ததென்ற வரலாறும் புரியவில்லை. வேலியை வரையறை செய்தபின் நிலமென்ற குறிப்பு வேலியென்றும் பொருள்கொள்ளப்பட்டது. மா(நிலம்) மா(வேலி) என்றும் ஆயிற்று. [மாவேலி என்றும் சேரலத்தார் தங்கள் மூதாதை அரசனான மாவலியாதனை (மகாபலி - பிருங்கலாதன் என்னும் பிரகலாதனின் பெயரன்) பலுக்கற்றிரிவில் அழைப்பர். மாவலி வேறு; மா(வேலி) வேறு.]

அன்புடன்,
இராம.கி.

9 comments:

kutti said...

,JNghd;w jfty;fs; ,izaj;jpy; jukhf fpilf;fhjh vd;w Nfs;tpFwpNahL ,Ug;gth;fSf;F ,J xU tug;gpurhjk;. ed;wp ma;ah.

இராம.கி said...

மேலேயுள்ள முன்னிகை பாமினியில்இருக்கிறது.எனவே அதை ஒருங்குறிக்கு மாற்றிக் கீழே தருகிறேன்.

அன்புடன்,
இராம.கி.
--------------
இதுபோன்றதகவல்கள் இணையத்தில் தரமாக கிடைக்காதா என்ற கேள்விகுறியோடு இருப்பவா;களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நன்றி அய்யா.

GreatSiddha said...

ஐயா, ஈதன் (ஈதல்) என்பது தூமையான ஆண் பால் பெயராக கொள்ளலாமா? பிரனேஷ் என்பதின் தமிழ் பெயர் சொல்லாக்கம் தர இயலுமா? எனது புதல்வர்களுக்கு தூய்மையான தமிழ் சூட்ட ஆவலுடன் உள்ளேன். தமிழ் பெயர் என நினைத்து வேறொன்றை சூட்டி விட கூடாது என்பதால் தங்களுடைய கருத்து மிக உதவியாய் இருக்கும். மிக்க நன்றி அய்யா.

இராம.கி said...

அன்பிற்குரிய பெருஞ்சித்தருக்கு,

இந்தக் கட்டுரைக்கும் உங்கள் வினாவிற்கும் தொடர்பில்லையென்றாலும், நீங்கள் ஓர் உதவி கேட்டிருப்பதால், உடன் செய்யவிழைகிறேன். இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு.

ஈதல் என்ற வினையின் கீழ் வரும் பெயராக ஈதன் என்ற சொல் வராது. ஈகம் என்ற சொல் எதையும் சுணங்காது கொடையளிக்கும் மனப்பாங்கைக் குறிக்கும். ஈகை என்பதும் கொடைப்பொருளையே தரும், ஒரு பையனுக்கு இதை இடும்பொழுது ஈகன் என்று பெயரிடுவதே சாலச்சிறந்தது. ஈகன் என்ற சொல் கொடையாளி என்ற பொருளைக்கொள்ளும்.

ப்ரனேஷ் என்ற சொல் னகரம் மாறியிருக்கும் சங்கதச் சொல்லாகும். ப்ரணேஷ் என்பதே ப்ரனேஷ் என்றாயிற்று. ப்ராணம் என்பது உயிர், மூச்சு,வாழ்க்கை என்ற பொருள்கொள்ளும். ப்ரணேஷ் என்பவன் உயிரின் ஈசன், வாழ்க்கைக்கு ஈசன் என்று பொருள்கொள்ளும். ஆதன் என்பது உயிரைக்குறிக்கும் இன்னொரு தமிழ்ச்சொல். அதற்குத் தலைவன், கடவுள், இறைவன் என்ற பொருளும் உண்டு. பேராதன் என்பது பெரிய ஆதன் என்ற பொருளில் (உயிருக்கு ஈசன் என்பதைக் குறித்து) இந்த ப்ரணேஷிற்கு ஈடாயமையும். தவிர சங்ககாலப் பழஞ்சேரரில் பெரும்பாலோருக்கும், ஆதன் என்ற குடும்பப்பெயர் அமையும். செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பதில் வரும் வாழியாதனுக்கும் ப்ரணேஷ் என்றுதான் பொருள். வீட்டிற் சுருங்கக் கூப்பிடும் போது ஆதன் என்றும், அலுவல் வரிதியாய் முழுப்பெயராய் வாழியாதன் அல்லது பேராதன் என்றும் உங்கள் புதல்வனைக் கூப்பிடலாம்.

ஈகன், வாழியாதன்/பேராதன் என்ற இருபெயர்ளை ஓர்ந்து பாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

GreatSiddha said...

தங்கள் பேருதவிக்கு மிக்க நன்றி ஐயா.

Ganesh said...

Waiting for your writings on Aaseevagam..!!!

mani.pari said...

MANI.PARI, 1)ayya thiruppurambiyam is located at north bank side of kaveri and sowuth bank near kollidam . kollidam is not nor kaveri , kollidam diked latter yars of silappathikaram (it may be after 10th AD by 3rd karikalan. south and north kaveri ar south and north side of myiladuthurai which is ended before kuththalam (dig of watter). the northkaveri is new then south kaveri,south kaveri ended at village of "aaru pathi"(paathiyil ninruvitta aaru ,paathi aaru).2) vanni maram is identy tree of velir . vimala nather (jein monk)having emlam of vanni maram as emblam and "panri" as flag embalm. 3) the word vanni developed as "vanri"(panni), vanri developed as "panri". vanni developed also as "panni". horse also named "vanni". these panri,vannimaram ,kuthirai are related to velir of velpulam (vennnadu). please gaide me am i correct?.by mani.pari "pariadvocate@yahoo.come"

தஞ்சை கோ.கண்ணன் said...

அறிவுசால் பெருந்தகையீர் ! வணக்கம்.
தங்களைத் தொடர்புகொள்ள வழி தெரியாமையால் இணையப் பதிவைப் பயன்படுத்தி உங்கள் முன் அன்பான வேண்டுகோள் : நாக இளங்கோவனும் தங்களிடம் இது பற்றி தெரிவிப்பார்.
துறை சார் தமிழ் அறிஞர்களுக்கும், துறை சரா அறிஞர்களுக்கும் ஒரு வேண்டுகோள் :
(இராமகி, நாக இளங்கோவன் போன்றோர் தயக்கமின்றி பதிவுகளை "The Journal of Tamil Studies" ல் வெளியிட்டால் உலகம் பயன்பெறும். நாம் எல்லை கடந்து உலகளாவிய நிலைபெற இதுவே வழியாகும். )
தரமணியில் உள்ள தனிநாயக அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட "THE INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES" / உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தக்க இசைவைப் பெற்று "The Journal of Tamil Studies" - இதழை தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
ஒரு குடைக்குள் அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும் (தமிழ்/ஆங்கிலம்) கொண்டு வருவது நமது கடமை. அதனைச் செய்ய அவர்களும் அணியமாக உள்ளார்கள். வரவேற்கிறார்கள்.
அவரவர் ஆய்வுக் கட்டுரைகளை தனது இணைய தளத்தில் பதிவு செய்கிறோம். அதனை விடுத்து அல்லது அவற்றை "The Journal of Tamil Studies" இதழில் வெளியிட்டால் ஒரு புள்ளியில் அனைத்து ஆய்வுகளும் சேர்ந்து தமிழன்னை க்கு அணிசேர்க்கும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி உலக மொழியியலார் / The International Linguists விரும்பி ஏற்கும் வண்ணம் அமையும். உலகும் ஏற்கும் மொழிக்கும் இனத்திற்கும் அணி சேர்க்கும்.
அவற்றை தரமணியில் உள்ள தனிநாயக அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட "THE INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES" / உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும், The Journal of Tamil Studies - இதழில் பதிவிட வேண்டுகிறேன்.
The Journal of Tamil Studies இதழின்சிறப்பு:
1951 -ல் தொடங்கப்பட்ட "The Culture" தனிநாயக அடிகளாரின் இசைவைப் பெற்று 1969- ல் இருந்து, அனைத்துலத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் "The Journal Of Tamil Studies" என்ற பெயரில் நடத்தி வந்தது. முறையான இசைவைப் பெற்று 1972 முதல் தொடர்ந்து, அடிகளாரால் தொடங்கி வைக்கப் பட்ட தரமணியில் உள்ள 'உலகத்தமிழ்ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
"
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம்தான் கையில் எடுக்க வேண்டும். அடிகளாரால் தொடங்கியது பாட்டியாலோ தாத்தாவாலோ
அல்ல.

ஆதிமூலம் ஆதிமனிதன் said...

சரியாக சொன்னீர்கள்!