Sunday, June 07, 2009

நல்லாற்றுப் படூஉம் நெறி

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தால் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

- ஆசீவகத் துறவி நரிவெரூஉத் தலையார்.
- புறம் 195.
- திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி

பல்சால்பாளரே! பல்சால்பாளரே!
கயல்முள்ளென நரை முதிர்ந்து கன்னம் திரைக்கும்,
பயனிலா முதுமைப் பல்சால்பாளரே!

கூர்ந்த மழுக் கொண்ட பெருந்திறலோன்,
பாசத்தால் உம்மைக் கட்டிப் பிணிக்கும்
காலத்திற் தான் இரங்குவீரோ?

நல்லது செய்யாமற் போனாலும்
அல்லது செய்யாமை ஓம்புங்கள்

அதுதான்,

எல்லோரும் விரும்புவது,
அன்றியும்
நல்வழிப்படும் நெறியும்
அதுவேயாகும்.

நண்பர்களே!

இணையத்தில் பேசுகின்ற ஒவ்வொரு கருத்தும் பலராலும் (சிங்களவராலும், எதிரிகளாலும்) படிக்கப் படுகின்றன. [தமிழர் முகமூடியுடன், பல சிங்களவர் தமிழ்ப் புலங்களில் ஊடுருவியிருக்கிறார்கள். அதுபோக பல்வேறு உளவாளரும் படிக்கிறார்கள்.] “தமிழர் தமக்குள்ளே உட்பகையால் அடித்துக் கொண்டு இன்னும் குலைந்து கிடக்கிறார். எனவே இன்னும் கடுநடையை நாம் கைப்பிடிக்கலாம்” என்று அவர்கள் பொள்ளிகை (policy) சமைக்கும் காலம் இது. அவர்களின் செயலும் போக்கும், மே 19க்கு அப்புறமும் அப்படியே தமிழினக் குலைவாகத்தான் இருக்கிறது. ”அதைச் செய்வோம், இதைச் செய்வோம்” என்று அரற்றிக் கொண்டிருந்த இந்தியாவின் பேராயக்கட்சி அரசு ஒரு எள்முனையும் நகரவில்லை, வெறும் உப்புக்குச் சப்பாணியாய் ஒப்புக்குக் குரலிடுவதைத் தவிர.

”எங்கிருந்தோ ஒரு ’தேவதூதன்’ ஈழத் தமிழரிடையே தோன்றுவான்” என்று வானத்தைத் அண்ணாந்து பார்க்கும் வெள்ளந்திப் போக்கைத் தவிர உருப்படியாய் ஏதாவது இருந்தால் பேசுங்கள். இனிச் செய்ய வேண்டியதை ஒருசிலர் எடுத்துரைத்தார்கள். அதையொட்டி மற்ற எவர் பேசுகிறார்கள் என்று பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். [இன்னும் மானாட, மயிலாட என்று திரைக்கதை ஒய்யாரங்கள் பேசும் அவலத்தை ஒழித்து என்றைக்கு வெளிவருவோமோ, தெரியவில்லை.]

50000 பேர் மூன்றுநாளில் இறந்ததைப் பற்றி யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள், சிங்களவன் வேதிக் குண்டு போட்டுக் கொன்றதை யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள். அறம் பிறழ்ந்து போர் நடந்ததை யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் புலிகளே காரணம் என்று சொல்லுபவர்கள் “தமிழர்கள் அடிமைகளாய் இருங்கள்” என்றே சொல்லுவதாய்த் தான் எனக்குத் தோன்றுகிறது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சார்பாகவே நீங்கள் பேசுவீர்கள்? எதிர்ப் பக்கத்தைச் சிங்களவனைச் சாடவே மறுக்கிறீர்கள். புலிகளைச் சாடுபவர்களிடம் இருந்து ஒரு சாடல் இன்னொரு பக்கம் பாயுமா என்று பார்க்கிறேன். ஊகூம், ஓர் அம்பும் பாயவில்லை. அவனுக்குக் கொண்டாட்டம் தான்.

இப்படிப் புலிகளை மட்டும் காரணிகளாய்க் காட்டிக் கொண்டிருப்பது ஒருவகைப் புறம் பேசுதலே, வெறுப்புடன் உரையாடுதலே. ஒரு சில குழுமத்தில் மட்டும் தான் இப்படிப் புறம்பேசுதல் நடப்பதாக எண்ணாதீர்கள். தமிழர் இடையே பரவலாக, ஒற்றுமை குலைக்கும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஈழத் தமிழருக்கும், தமிழகத் தமிழருக்கும் இடையே, ஈழத் தமிழருக்கும், புலம் பெயர்ந்த தமிழருக்கும் இடையே, ஈழத் தமிழருக்குள்ளேயே வடக்கு - கிழக்கு என்ற பிரிவு, மலையகம் - யாழ்ப்பாணம் என்ற பிரிவு, முசுலீம் - முசுலீம் அல்லாதோர் என்னும் பிரிவு, வேளாளர் - வேளாளர் அல்லாத பிரிவு என்று எத்தனை பிரிவுகளை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்?

சிங்கமும், நாலு எருதுகளும் என்ற கதை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. நாலு எருதுகளுக்குள் பிளவை உண்டு பண்ணி, ஒவ்வொரு எருதாகச் சிங்கம் அடித்துச் சாப்பிடும். இதுதான் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. இனியும் நடக்கும். இதை அறியாமல், இதைச் சரி செய்யாமல், நம் மக்களின் துயரும் துடைக்க முடியாது. போராட்டத்தை இயன்ற வழிகளில் தொடரவும் முடியாது. 60 ஆண்டு காலத்தில் முதலில் மலையகத் தமிழர்கள், அடுத்து கிழக்கு ஈழத் தமிழர்கள், அடுத்து வடக்கு ஈழத் தமிழர்கள் சாப்பிட்டாய் விட்டது. இனி அடுத்து முசுலீம் தமிழர்கள் இரையாகலாம். நாம் வாளாய் இருந்தால், இனியும் இது போன்ற செயல்கள் தொடரும். மறைவாக நமக்குள்ளே வெறுங்கதைகள் பேசுவதை முதலில் நிறுத்துவோம்.

நம் கண்ணெதிரே, திறந்த வெளிச் சிறையில் இருக்கும் 300000 பேரில் இருந்து 15000 இளையர் (ஆண்களும், பெண்களும்) காணாது போக்கடிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. நாளும் இது அங்கே நடக்கிறது. 300000 பேரில் நிரவலாய்ப் பார்த்தால் இளையர் என்போர் 90000 பேர்தான் இருப்பார்கள். அதில் 15000 பேர் என்பது ஆறில் ஒரு பங்கு. ஆக மொத்தம் வன்னித் தமிழரைக் கிழவரும் சிறாருமாக ஆக்கப் பார்க்கிறார்கள். இன்னும் 30 ஆண்டுகளுக்கு தமிழர் மீண்டும் எழவிடாமல் இருக்க முயற்சிகள் நடக்கின்றன. நாம் என்னடா என்றால் பிண நோட்டம் (post - mortem) பார்த்து எங்கே தப்பு நடந்தது என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். நடந்து முடிந்ததை அலசிக் கொண்டிருப்பதற்கு மாறாய், இன்று நடக்கக் கூடியதை எப்படித் தவிர்ப்பது என்று பார்க்கவேண்டாமா?

”ஈழம் என்ற சொல்லையே எந்தக் கட்சியும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஈழக் கட்சிகள் எல்லாம் சிங்களக் கட்சிகளுக்குள் உருக்குலைய வேண்டும்” என்று மகிந்த அரசு வாய்மொழிக்
கட்டளை பிறப்பித்திருக்கிறது. இன்னும் ”ஐ.நா. உள் நுழையக் கூடாது” என்று ஆணை பிறப்பித்தும், இந்திய வெளிநாட்டுத்துறை அமைச்சரைப் பார்த்து, “நீ யாரடா எங்களைச் சொல்வதற்கு? உன் வாயை மூடிக் கொண்டு கிட” என்று கோத்த அபயாவின் நெருங்கிய தோழர் மூலம் திமிர்ப் பேச்சும் விட்டுக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.

இந்த நேரத்தில் இவற்றைப் பற்றிப் பேசாமல், புலிகளைப் பற்றிப் பேசி நீங்கள் சாதிக்கப் போவது என்ன?

வேண்டுதலுடன்,
இராம.கி.

1 comment:

பூதகணம் said...

தோளும் தொன்றும் இராமகி ஐய
நீளும் துயரும் நீவீர் அறிய
துஞ்சிக் கிடக்கும் காட்டில் அங்கு
அஞ்சிற் காணும் அறிவில் துய்து
கூட்டி அழைத்துக் கூவிக் கத்தி
ஈட்டிக் காயம் காணாது அழுது
ஈட்டும் பயன் யாதினும் இல்லை
இரண்டப் பிளந்து அவணியும் செய்ய
மருண்ட கண்ணுக்கு இருண்டன பேய்
நடப்பதை அறியா நாவினை அசைத்து
தடக்கிட நேரும் தவறும் வழியே
நன்றது காணும் பொருட்டில் நாளும்
வாசித்த வற்றை விளங்க அறிய
சிவனின் தூதர் தோற்ற மளித்து
அவனில் அடங்கும் தமிழர் தேற்று