Thursday, February 05, 2009

மீளுகிறதா 1965? - 1

---------------------------------------------
"1965 சனவரி 25 ஆம் பக்கல் மாணவர் எழுச்சிப் போராக இந்தியெதிர்ப்புணர்வு வெடித்தது. இப்போர் பிப்ரவரி 12 ஆம் நாள் வரை தீவிரமாக நடந்தது. அக்கால் பேராயக் கட்சி தமிழகத்தில் அரசு வீற்றிருந்தது. திரு.பக்தவத்சலம் முதல்வராக அமர்ந்து, மாணவர்களின் எதிர்ப்புணர்ச்சியைச் சற்றும் பொருட்படுத்தாது, தில்லியாட்சியரின் கையாளாக இருந்து, அடக்கு முறைகளையும், வன்மங்களையும் கையாண்டு, மாணவர்கள் பலரையும் பொதுமக்கள் பலரையும் சுட்டு வீழ்த்தி, நடுவணரசால், 'எஃகு நெஞ்சர்' என்று பாராட்டப் பெற்றார். அக்கால் நடந்த இந்தியெதிர்ப்புப் போரில் ஏற்பட்ட பொதுவிழப்புகளும், உயிரழிவுகளும் நிகழ்ச்சிகளும் பற்பல. அவற்றுள் சில வருமாறு:

1. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரனும் இளங்கோவனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. கோடம்பாக்கம் சிவலிங்கமும் விருகம்பாக்கம் அரங்கநாதனும் தீக்குளித்தனர்.
3. சென்னை, கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்ற கல்லூரி மாணவர்களைக் காவலர்கள் அடித்து நொறுக்கியதில் ஏறத்தாழ 50 மாணவர்கள் படுகாயமுற்றனர்.
4. முப்பது பொது உந்துகள் கொளுத்தப்பட்டன.
5. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் ஒன்றரை மாத காலத்துக்கு மூடப்பட்டிருந்தன.
6. சென்னை நகர வீதிகளில் குதிரைக் காவலர்கள் உலாவந்த வண்ணம் இருந்தனர்.
7. ஆயிரக்கணக்கான மாணவியர் கறுப்புப் புடவை, சட்டையுடன் மதுரை ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
8. சனவரி 25 முதல் 28 வரை 2000 பேர் சிறைப்படுத்தப்பட்டனர்.
9. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டது.
10. காவலர்கள் கல்லூரிகளுள் புகுந்து மாணவர்களை அடிக்கையில் பேராசிரியர்கள் பலரும் காயம்பட்டனர்.
11. சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சி, சிதம்பரம், சேலம், நெல்லை, திருவாரூர், சிவகாசி, பட்டுக்கோட்டை, அரக்கோணம், தாளவாடி, ஆரணி, இராணிப்பேட்டை, வேலூர், ஆலந்தூர், வளவனூர், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, திண்டிவனம், நெய்வேலி, வெங்காலூர், புதுவை, கடலூர், குன்னூர், கும்பகோணம், கடையநல்லூர், திருப்பூர், நாகர்கோயில், காரைக்கால், சாத்தூர், அருப்புக்கோட்டை, வாசுதேவநல்லூர் முதலிய ஊர்களில் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடந்துவந்தன.
12. சென்னைக் கடற்கரையில் இந்திப் பொத்தகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
13. அமைச்சர் மகன் ஒருவனும், காவல் அதிகாரி மகன் ஒருவனும், அமைச்சர் ஒருவர் மருமகனும் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
14. மதுரையில் மலையுந்துக்கும் (Jeep), பேராயக் கட்சி அலுவலகத்திற்கும், தீவைக்கப்பெற்றது.
15. மதுரையில் வடநாட்டினர் உணவு விடுதியைத் தாக்கி அதன் இந்திப் பெயர்ப்பலகைக்கும், குடியரசு நாளைக் கொண்டாட அமைத்த பந்தலுக்கும் தீவைத்தனர்.
16. நாடெங்கும் இந்தியரக்கியின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.
17. சென்னை இசுடான்லி மருத்துவமனைப் பயிற்சி மருத்துவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர்.
18. சென்னை பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து பேராசிரியர்களை அரம்பர்(ரௌடி)கள் என்று கூறி, மாணவர்களைக் காவலர்கள் அம்மணமாக நிறுத்திவைத்து அடித்தனர். மாணவர்களைப் பார்க்கவந்த பெற்றோர்களும் இந்தக் கொடுமைக்கு ஆளாயினர்.
19. திருச்சி கீரனூரில் 20 அகவை முத்து என்பவர் இந்தித்திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டு இறந்தார்.
20. கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன.
21. தொடர்வண்டிகள் கொளுத்தப்பட்டன.
22. சோமனூர், திருப்பூர், கரூர், குறிஞ்சிப்பாடி, திருவொற்றியூர், தக்கோலம், மணப்பாறை, புதுவை ஆகிய தொடர்வண்டி நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
23. சென்னை, வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், திருப்பூர் முதலிய இடங்களுக்குப் பட்டாளங்கள் அனுப்பப்பட்டன.
24. அமைச்சர்கள் சுப்பிரமணியமும், அழகேசனும் வேலைவிடுப்பு நாடகம் நடத்தினர்.
25. கல்கத்தாவிலும் பள்ளிகள் மூடப்பட்டன.
26. கரூரில் காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டார்.
27. திருச்சி மரக்கடை அஞ்சலகம் தீவைக்கப்பட்டது.
28. ஏறத்தாழ 20 தொடர்வண்டி நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.
29. பொள்ளாச்சி நகரமே வெறிச்சோடிக் கிடந்தது.
30. மதுரை, கூடலூரில் இரு காவலர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். திருப்பூரில் இரு காவல் அதிகாரிகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.
31. நூற்றுக்கணக்கான அஞ்சற்பெட்டிகளும், பொதுத்தொலைபேசி நிலையங்களும் தீக்கிரையாகின.
32. கர்னூலிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
33. தஞ்சை அஞ்சலகம், தூத்துக்குடி அஞ்சலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
34. திருச்சி அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் உழவர் முத்து இருவர் மேலும் தீக்குளித்தனர்.
35. சென்னை ஆழ்வார்ப்பேட்டை மாநகராட்சிப் பள்ளிக்குத் தீவைத்தனர்.
36. அனைத்துத் தொடர்வண்டிகளும் ஒரு கிழமை காலத்துக்கு ஓடவில்லை.
37. அரசினர் உந்துக்கள் பதினைந்து நாட்களுக்கு ஓடவில்லை.
38. பஞ்சாபிலும் துமுக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.
39. மொத்தம் 50 உந்து வண்டிகள் கொளுத்தப்பட்டன.
40. புதுவை அரவிந்தர் பாழி தாக்கப்பட்டு தீவைக்கப்பெற்றது.
41. இந்திப்படம் காட்டாதே என்று நாகர்கோவில், சென்னை, கோவை முதலிய இடங்களில் கொட்டகைகள் முன் போராடித் தடுத்து நிறுத்தினர்.
42. செங்கோட்டையருகில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டது.
43. கல்கத்தாவிலும் போராட்டம் தொடங்கியதால், பள்ளிகளை 15 நாட்கள் மூடும்படி கல்கத்தா அரசு ஆணையிட்டது.
44. ஆரணி அஞ்சலகம் சூறையாடப்பட்டது.
45. திருத்தணியில் மாணவர்கள் தொடர்வண்டிக் கடவைக் கதவுகளை உடைத்துத் தூள்தூளாக்கினர்.
46. அனந்தப்பூரில் ஏறத்தாழ 3000 பேர் தொடர்வண்டி நிலையத்தைத் தாக்கினர்.
47. 12 வானூர்திகளில் பட்டாளம் வரவழைக்கப்பட்டது.
48. குடியேற்றத்தில் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் கைகலப்பு நேர்ந்து, காவலர்கள் மாணவர்கள் மேல் 14 முறை துமுக்கிச்சூடு நடத்தினர்.
49. கடையநல்லூரில் தொலைவரிக் கம்பிகள் அறுக்கப்பட்டன.
50. 1965-இல் இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் காவலர்கள் சுட்டதால் இறந்தவர்கள் மொத்தம் 68 பேர். தீக்குளிப்பில் இறந்தவர்கள் 5 பேர்.
தீயிடலில் மாண்டவர் ஒருவர். மக்களால் தாக்கப்பட்டு மாண்ட காவலர்கள் 4 பேர். இறந்த 68 பேரில் குமாரபாளையத்தில் 15 பேர். பொள்ளாச்சியில் 10 பேர். புதுச்சேரியில் 10 பேர்."
---------------------------------------------------------------

மேலே வருவது பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "நூறாசிரியம்" நூலில் உள்ள 51 -வது பாடலின் கீழ் கொடுக்கப் பட்டுள்ள குறிப்புக்களில் இருந்து எடுத்தது.

இன்று பிப்ரவரி 5, 2009. இன்றிலிருந்து சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை (மேலே வரிசையிட்டவற்றையும் சேர்த்து) இப்பொழுது நினைவு கூர்கிறேன். [கூடவே, என்னுடைய 16 அகவை முடிந்து புகுமுகு வகுப்பிற் படிக்குங் காலத்தில், திருச்சியில் நடந்த இந்தியெதிர்ப்பு எழுச்சியையும், அதை அடக்குமுகமாய், முகனைக் காவற் கதவத்திற்கு (Main Guard Gate) அருகில் புனித வளனார் கல்லூரி, லாலி அரங்கின் முன்னால் நானும் பலரும் காவலரால் பட்ட அடிகளையும், அதன்பின் தொடர்ந்த மற்ற காவல் நிலைய நிகழ்வுகளையும், கூட இதே கணம் எண்ணிப் பார்க்கிறேன்.]

இன்றைக்கு 60 ஐத் தொட்டுக் கொண்டிருக்கும் பலரும் ஏதோவொரு வகையில் இது போன்று இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்பட்டிருந்திருப்பார்கள்.

1965 -இல் அன்றைக்கும் நடுவணரசில் பேராயக் கட்சியே (காங்கிரசு) வீற்றிருந்தது. அதன் இந்தி ஆதிக்கப் போக்கால் ஆடிப் போன மாணவர் குமுகாயம், தங்கள் எதிர்காலமே அடைபட்டுப் போனதாய் எண்ணித் திகைப்புற்று, அதன் விளைவால் அன்றைக்குப் போராட்டம் நடத்தியது. பின்னால் இந்தி ஆதிக்கத்தைத் தமிழ்கொண்டு எதிர்க்காமல், அதைத் தொலைத்து, ஆங்கிலம் கொண்டு எழுந்துவந்து தமிழ்க் குமுகாயம் வளர்ந்தது இன்னொரு விதப்பான (ஆனால் அடிப்படையில் சோரம்போன) கதை. அதை இங்கு நான் பேசவில்லை. நான் சொல்ல வருவது பேராயக் கட்சியின் தமிழெதிர்ப்புப் போக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதே. விடுதலைக்கு முன்னாலும், ஏன் விடுதலைக்குப் பிறகு ஒரு பத்தாண்டு காலமும் கூட, பேராயக் கட்சியானது தமிழரிடையே பெரிதும் ஆதரவு பெற்றிருந்தது உண்மை தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராரைச் சார்ந்த அறிவுய்திகளின் முட்டாள் தனமான யோசனைகளைக் கேட்டு, விடுதலை பெற்ற நாளாய், அடிமேல் அடிவைத்துத் தமிழரை ஒதுக்கும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாய், 1957 ல் இருந்து பெற்றதும் உண்மை. ”அறிவுக்கு நான்தான்” என்ற இந்த அறிவுய்திகள் ஒற்றை இந்தியாவை உருவாக்க ஆசைப்பட்டார்கள். அதற்கு பேராயக் கட்சி தலைசாய்த்தது. அந்தச் சாய்ப்பில் ஒரு முகன்மையான பங்கு தமிழரை எழவொட்டாது அடிப்பதும் ஒரு கூறு.

காட்டாக, மற்ற தேசிய இனங்கள் வெளிநாடுகளில் துரத்தப் பட்டபோது (குறிப்பாக, கென்யா, சாம்பியா, தான்சானியா, உகாண்டா ஆகியவற்றில் இருந்து குசராத்திகள் வெளியேற்றப் பட்டபோது), அவர்களுக்காகக் குரல் கொடுத்த இந்திய அரசு, பர்மாவில் தமிழர் துரத்தப் பட்டபோது, ஒரு முனகலோ, எதிர்ப்போ கூடச் செய்யாமல், வெறும் வதந்தியை நம்பிக் கப்பலை மட்டுமே அனுப்பி அகதிகளைக் கொண்டுவந்தது. துரத்தலைத் தடுத்து நிறுத்தவோ, இழப்பை ஈடுகட்ட பர்மிய அரசசங்கத்துடன் மல்லுக் கட்டவோ, எந்த முயற்சியையும் நேருவின் அரசு எடுக்கவே இல்லை. விடுதலை இந்தியாவில் தமிழருக்கு ஏற்பட்ட முதலடி பர்மாத் தமிழருக்கு ஓர் இழப்பும் வாங்கித் தராது இருந்ததே. பின்னால் பஞ்சையாய்ப் பராரியாய் ஓடிவந்தவர்கள் சென்னையில் "பர்மா பஜார்" ஏற்படுத்தியது மட்டுமே மிஞ்சியது.. இதன் விளைவால், தென்பாண்டி நாட்டில் பிழைப்புக் கெட்டு தஞ்சைத் தரணிக்குக் கூலித் தொழிலாளியாய் ஓடியது எவ்வளவு குடும்பங்கள்? வெளிநாட்டு தொடர்பு பட்ட தமிழகத்தமிழரில் 100க்கு 85/90 விழுக்காடு இவர்களே - இன்றையப் புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துகுடி மாவட்டத்தினரே - அதிகம்.

இது போல, அடுத்த சில ஆண்டுகளில், இலங்கையில் இருந்து தோட்டத் தொழிலாளர் விரட்டப் பட்டபோது, அந்த விரட்டலுக்கும் பேராயக்கட்சி அரசு ஓர் எதிர்ப்பையும் காட்டாமல், சிரிமாவோ - சாத்திரி ஒப்பந்தம் போட்டுச் சிங்களனுக்கு, அணைவாகவே இருந்தது. ”தமிழனா, ஓடிப்போ, உங்கள் ஊருக்கு?” இந்திய அரசு சோப்பளாங்கி என்று தெரிந்தவுடன்., அன்றிலிருந்து சிங்களன் இந்தியக்கழுதையின் மீது ஏறி சுமை சுமக்க வைக்காமல் வேறு என்ன செய்வான்? இத்தனைக்கும் சிங்களனின் தாய் மாநிலமான ஒரிய மாநிலம் கூக்குரலே போடவில்லை. இந்திய அரசு எங்கிருந்தோ தொலைந்து போன உறவுக்காரன் என்று சோறுபோட்டு விருந்து வைக்கிறது. மொத்தத்தில் ஒரு வலுவான எதிர்ப்பைக் கொஞ்சம் கூடக் காட்டாமல் இருந்தால் எப்படி? தமிழ் வரலாறு தெரிந்தவர்கள் இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களிடம் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சாரார், "ஒற்றை இந்தியம்" பேசி அதிகாரம் செய்து தமிழ் தேசிய இனம் உலகெங்கும் குலைந்து போக எல்லா வகையான வேலைகளையும் செய்தார்கள். பல்தேச இந்தியா என்ற கொள்கை இன்றுவரை அவர்களால் முற்றிலும் சாகடிக்கப் படுகிறது. [அதாவது இந்தியன் ஆகவேண்டுமென்றால் தமிழன் என்ற உணர்வைச் சாகடி; தமிழனாயும் இந்தியனாயும் ஒரே நேரத்தில் யாரும் இருக்கக் கூடாது.]

இந்தியத் தேசிய இனங்களில் குடியேற்றக் காலத்தில் பெரிதாக வெளிநாடுகளில் பிழைப்புக்குச் சென்றவர்கள் தமிழரும், ஓரளவு தெலுங்கரும், அதற்கும் குறைவாகக் குசராத்திகளும் (ஆனால் செல்வத்தால் பெரியவர்கள்), குசராத்திகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் கூடிய பீகாரிகளும் (ஆனால் செல்வ வளத்தில் குறைந்தவர்கள்) ஆகியோரே ஆவர்.

[இந்தப் பத்தியைக் கொட்டை எழுத்துக்களில் படித்துக் கொள்ளுங்கள்.] ஈழத்தமிழர்கள் இதில் அடங்கவே மாட்டார்கள். அவர்கள் காலங்காலமாய் அங்கேயே வழிவழியாய் வாழ்ந்தவர்கள். இந்தியர்களில் பலருக்கும், ஏன் தமிழகத் தமிழர்களில் கணிசமானவருக்கும் கூட, இந்த உண்மை தெரிவதே இல்லை. அந்த அளவிற்கு முட்டாள் தனமும், வரலாற்று மறதியும் இங்கே வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது..

[உண்மையை ஆய்ந்தால், பழந்தமிழகம் என்று நாமெல்லோரும் சொல்கிறோமே அதைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களின் ஈழத்திற்கும், இன்றையத் தமிழ்நாட்டிற்கும் இடைப்பட்ட இடமும், தமிழ்நாட்டுக் கடற்கரையை ஒட்டிக் கடலுள் நீளும் நிலமும், இதே போல ஈழக் கடற்கரையை ஒட்டிய நிலமும், எனக் கணிசமான இடைநிலம் கடல் கொண்டதைத் தான் நம் சங்க இலக்கியங்களில் கடல்கொண்ட நிலமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறிப்புக்களாய்ப் பார்க்கிறோம். மொத்தத்தில், இன்றைய ஈழமும், தமிழகமும், இவற்றிற்கு இடைப்பட்ட கடல்கொண்ட நிலமும் சேர்ந்தது தான் மூன்றாம் சங்கத்திற்கு முற்பட்ட பழந்தமிழகம். [அப்படி அழிந்த நிலத்தில் இருந்து கரையேறிய நிலந்தரு திருவிற் பாண்டியன் சோழனிடம் இருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடம் இருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பிடித்தான் என்பது வரலாறு. முத்தூர்க் கூற்றம் இன்றைய புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கடற்கரையை ஒட்டியது.] இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஈழம் அழிவதை நம் பழந்தமிழகத்தின் மிச்சசொச்சம் அழிவதாய்த்தான் கொள்ளமுடியும். இது கூடவா, தமிழகத் தமிழர்களுக்குப் புரியவில்லை? அடங்ஙொப்பரானே? அவன் உறவுக்காரண்டா, பங்காளிடா, அதைப் புரிஞ்சுக்குங்க! இந்திய நாட்டின் வடக்கில் இருந்து தமிழினம் சுருக்கப் பட்டு வடமாலவன் குன்றத்திற்குக் கீழ் நெரிந்தது போல், நம் கண்முன்னே இன்னொரு பக்கம் தென்கிழக்கில் ஈழம் சுருக்கப் படுவது தமிழின அழிப்பில்லாமல் வேறு என்ன? இது கூடப் புரியாமல், தலையில் மண்ணாங்கட்டியா இருக்கிறது?]

ஈழத் தமிழருக்கு என்ன நடந்ததோ அதே நடத்தமே இந்திய நடுவண் அரசு .மலேசியத் தமிழருக்கும் செய்தது. எங்கோ இருக்கிற பிஜி நாட்டில் இந்தியர்கள் நசுக்கப் பட்டால் இவர்கள் அலறுவார்கள். ஆனால் மலேசியத் தமிழனுக்குப் பாதிப்பு நேர்ந்தால் இவர்கள், “அது இன்னொரு நாட்டின் உள்நாட்டுச் சிக்கல்” என்று கீதை படிப்பார்கள். இவ்வளவு ஏன்? ஒரு சிறுசெய்தியைச் சொல்லுகிறேன். மொரிசியசு நாட்டில் தமிழ்ப் பாடப் பொத்தகமும், தமிழாசிரியர்களும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட போது, அங்கும் இங்குமாய்த் தனியார்தான் உதவிசெய்தார்களே தவிர, இந்திய அரசோ, தமிழக அரசோ ஒரு துரும்பை எடுத்துப் போடவில்லை. எப்போதும் போல் மெத்தனமாகவே இருந்தன. பொதுவாக வெளிநாட்டுத் தமிழர் என்றால் இந்திய அரசு என்றுமே கண்டுகொண்டது இல்லை. ”எக்கேடோ கெட்டுப் போங்கள், எம்மை வந்து அண்டாதீர்கள்”

பேராய நடுவண் அரசின் இந்தப் போக்கு, நாளடைவில் இந்தியத் தமிழரை நடத்துவதிலும் கூடிவந்தது. 1972க்கு அப்புறம் ஒரு நடுவனரசுத் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவே இல்லை. "வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது" என்ற கூப்பாடு 1980 வரை கூடத் தமிழ்நாட்டில் இருந்தது. அதற்கு அப்புறம் தமிழ்நாடு வேறுவகையில் தன் பிழைப்பை மீட்டுக் கொண்டது. தமிழைத் தொலைத்தது, ஆங்கிலப் படிப்பின் வழியும், தனியார் முயற்சியாலும் இங்கு தொழில் வளர்ச்சியும், பொருளியல் முன்னேற்றமும் ஏற்பட்டன. இருந்தாலும் பல தடைகளை நடுவண் அரசு விதித்தே வந்தது. இன்றைக்கும் தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கும் மற்ற மாநிலங்கள் எதிர்ப்புப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. நடுவண் அரசு ஒருமுறை கூட அவை சட்டப் புறம்பாகநடப்பதை எடுத்துக் கூறித் தடுத்ததே இல்லை. ஆனால், தமிழன் மட்டும் “நான் கற்புள்ளவள்” என்னுமாப் போல தன் நாட்டுப் பற்றைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டுமாம். :-) மற்ற மாநிலங்கள் ஒற்றை இந்தியாவைத் தூக்கிப் போட்டுக் கீழே மிதித்தாலும் இந்த நடுவண் அரசு மாமியார் கண்டுகொள்ளவே மாட்டாள்.

(இன்னும் வரும்)

அன்புடன்,
இராம.கி.

No comments: