Sunday, August 06, 2006

தில்லை - 4

ஒரு பெருமாள் கோயிலுக்குப் போகிறோம்; மாயவனைச் சேவித்த பின்னால், அங்குள்ள பட்டர், நாம் குனிந்து ஏற்றுக் கொள்ள, சடாரியையை நம் தலையில் வைக்கிறார்; பின்னர் துழாயும், நீரும் தருகிறார். நீரை என்ன செய்கிறோம்? கொஞ்சம்போல் வாய்க்குள் குடித்து, மிஞ்சியதை நாமே நம் தலையில் தெளித்துக் கொள்கிறோம். சிவன் கோயிலுக்குப் போனாலும்,  சிலபோது அங்கு கொடுக்கும் திருநீரை (தெளிநீர் = ஆராதனை செய்யப்பட்ட தூய நீர்) தலையில் தெளித்துக் கொள்வதுண்டு. (சிவனை முழுக்கு விழைந்தோன் - அபிஷேகப் பிரியன் - என்றும் சொல்வார்.) சிவன்கோயிலில் ஏன் இப்படித் திருநீர் (திருநீறு அல்ல) போன்றவற்றைத் தலையில் தெளித்துக் கொள்கிறோம் என ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா?

வீட்டில் பூசை செய்கிறோம். பூசை முடியு முன், இறைப் படிமத்திற்கு முன் வைத்த பூசைநீரை நம் தலையில் தெளித்துக் கொளகிறோம். ஏன்? கோயில் குடமுழுக்கு நடக்கிறது; கும்பத்தில் சொரிந்ததுபோக மீந்ததை, கோபுரத்தில் இருந்த வாக்கில் குருக்கள் தெளிக்கிறார். அத்துளிகள் தம்மேல் படாதா என்று கூட்டம் முட்டி, மோதி, வாங்கிக்கொள்ளப் பார்க்கிறது. தெளிநீரைத் தம்மேல் கொள்ள அவ்வளவு முனைப்பு பலருக்கும் ஏன்? நம் வழிபாடொட்டிய பல நிகழ்வுகளில் நீருக்கு ஏன் இவ்வளவு சிறப்புக் கொடுக்கிறோம்?

இக்கால வேத - ஆகமக் கலவைநெறியில் (இதை இந்துமதம், சனாதன தருமம் என்று பலர் சொல்கிறார்; நான் வேதாகம நெறி என்பேன். அதில் முக்கால் வாசிக்கும் மேல் நம்மூர் தொடர்பு கொண்டது), வேத நெறிப் பழக்கங்களும், ஆகம நெறிப் பழக்கங்களும் பிரித்துப் பார்க்க இயலா வகையில், அதில் பின்னிப் பிணைந்து, கிடக்கின்றன. எவை ஆகம நெறியில் வந்தவை, எவை வேதநெறி வழி வந்தவை என அடையாளம் காணலாம் எனினும், முற்றிலும் செய்வது சரவலே. எல்லாவற்றையும் பிராமணீயம் என்று சொல்லி இழக்க முற்படும் பகுத்தறிவுக் கூட்டம் நம் ஊரை வெற்றிடமாக்கவே முற்படுகிறது. இம்மறுப்பால், வேதநெறி தழைத்தோங்கவே வழி செய்கிறோம்.

பொதுவாக (வேதநெறி மதங்களுக்கு மாறாக உள்ள) சிவநெறி, விண்ணெறி போன்ற ஆகம வழி மதங்களில் நீருக்கு மேலான உரிமை கொடுப்பார். ஆனால், ஊற்றுகை (original) வேதநெறியாரோ, தெய்வத்திற்குப் படைக்க வேண்டின், வேள்விக்குண்டத்தில் "ஆகுதி"யாக இட்டுவிடுவார். (இற்றை மரபாளரில் - ஸ்மார்த்தரில் - ஊற்றுகை வேதநெறியாராய் இருப்போர் மீக்குறைவு. பலரும் கலவை நெறியே பின்பற்றுகிறார். பழம்போக்கில் பார்த்தால், உத்தர மீமாஞ்சை பின்பற்றும் ஊற்றுகை மரபாளர் சிவன் கோயில், விண்ணவன் கோயில் என எக்கோயிலுள்ளும் வரார். கேரளத்து நம்பூதிகள் பூருவ மீமாஞ்சையைப் பின்பற்றுபவர்.) (ஆகுதி = ஆகியது, ஆகிப் போனது = ஹோ கயா; வேறெந்தப் பொருட்பாடும் இதற்கு இல்லை. துருவித் துருவி வடமொழியுள் அருத்தம் தேடவேண்டாம்.) நெருப்பெனும் இடையாளி, வேண்டும் தெய்வத்திடம் கொண்டு செல்வதாக வேதக்காரர் விளக்கம் கொடுப்பார். அவருக்கு எல்லாமே நெருப்புத் தான். நெருப்பே எல்லா வற்றையும் தூய்மை செய்கிறது என்பது அவரின் புரிதல். ஐம்பூதங்களில் நெருப்புக்குக் கொடுக்கும் முதன்மை வேதநெறிக்கே உள்ளது.

ஆகம நெறியிலோ, நெருப்போடு மற்ற பூதங்களும் வழிபாட்டில் புகுந்து வரும். ஐம்பூதங்களையும் விடாது வழிபாட்டில் கொண்டு வருவார். குறிப்பாக நீர் எனும் பூதம். ஒரு படையல் செய்தால் தெய்வப் படிமத்தின் முன் காட்டி கொஞ்சமாய் நீரைத் தெளித்து வைத்துவிடுவார். நாம் விழையும் தெய்வம் நம் ஈடுபாட்டைப் பார்த்து அதை மனப்பூருவமாய் எடுத்துக்கொள்வதாய் ஆகமக்காரருக்கு ஐதீகம். பின் அப்படையலை பத்தர்கள் (ஒன்றைப் பற்றி நிற்பவர் பற்றர்கள்> பத்தர்கள்> பக்தர்கள். இச்சொல்லின் தமிழ்வேரைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது போல இது இறைப் பற்று.) எல்லோரும் பங்குபோட்டுக் கொள்வார்.

கருப்பருக்கு ஆடுவெட்டினும்  ஆட்டைப் பலிபீடத்திற்கு (நம் கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதற்கே முதலில் பலிபீடங்கள் இருந்தன. இன்று சில கோயில்களில் கால மாற்றத்தால், விலங்குகளைப் பலியிட வேண்டாம் எனும் எண்ணத்தால் உந்தப்பட்டு, சோற்றையும், மற்றவற்றையும் வைத்துப் "பலி" தருகிறோம்; அவ்வளவு தான். சில நாட்டுப்புறக் கோயில்களில் இன்றும் விலங்குகளைப் பலிகொடுக்கும் பழக்கம் உண்டு.) முன் கொணர்ந்து காட்டி சற்று நீர்தெளித்து அது சிலிர்த்துக் கொண்டவுடன், பலி கொடுப்பார். பலி கொடுத்த விலங்குக் கறியை பின் வெட்டி வேகவைத்து, கூடவே கூட்டாஞ் சோறும் வடித்துக் கருப்பருக்கோ, சூலாயுதத்தின் முன்னோ, படையல் செய்து,  படையல் கொடுத்த எல்லோருமாய்ப் பங்குபோட்டுச் சாப்பிடுவார். ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளியும் சென்னைக்கு வடமேற்கே, பெரிய பாளையம், ஆரணிப் படுகையில், கிடாவெட்டிப் பவானி அம்மனுக்குப் பலியிட்டுக் கூடியாக்கி உண்ணும் காட்சி பரவலாக நடப்பது தான். [கூட்டம் கொள்ளாது; ஒரு தடவை போய்ப் பாருங்கள். நாட்டாரியல் பழக்கங்கள், பண்பாடுகள் என்ன, என விளங்கும்.

பெருமானப் பழக்கம் (braminized practices) இல்லாத கோயில்கள் நாளா வட்டத்தில் பெருமான ஆக்கத்துள் வந்துசேரும் நடைமுறைகளையும் காணலாம். திருவேற்காடும், மாங்காடும் இப்படி முழுதும் மாறிவிட்டன. பெரிய பாளையம் விரைவில் மாறிக் கொண்டுள்ளது. கிடா வெட்டுவது இப்போது கோயிலுக்கு வெளியில் வெகுதொலைவில்; இன்னும் சிறிது நாளில் இப்பழக்கம் நின்றே போகலாம். யாருக்குத் தெரியும்?] அது ஏன் ஆட்டின் மேல் நீர் தெளிக்கிறார்? (சிலர் குறும்புத்தனமாய் ஆட்டின் ஒப்புதல் கேட்பதற்காக தண்ணீர் தெளிப்பதாகச் சொல்வார்:-)).

வேறொன்றும் இல்லை; இறை வழிபாட்டில், ஆராதனை (ஆலுதல் = மேலும் கீழுமாய் வட்டமாய்ச் சுற்றுதல்; தீவம், நீர், இன்னும் மற்ற பொருட்களை இப்படி இறைப்படிம முன் வட்டமாய்ச் சுற்றிக் காட்டுவோம். ஆலாதனை> ஆராதனை ஆகும். இசைக்கச்சேரியில் ஆலாவனை செய்வாரும் ஏற்றி இறக்கி வட்டமாய்ச் சுரம் பாடுகிறார். கோயில்களில்  கருவறையைச் சுற்றிவரும் வழி சுற்றாலை - சுற்றும் வட்டம் - ப்ரகாரம் - எனப்படும்.) செய்யப் பட்ட நீரைத் தெளித்தால், இறைவனுக்கு நேர்ந்து கொண்டதாக அருத்தமாம். அவன் அருளுக்கு ஆளாகி விடுகிறோமாம். இறைப் பணியில் ஈடுபடும் போது, நீர் தெளிப்பது  ஒரு குறியீடு. சில போது, எதற்கும் ஒப்பாமல், விட்டேற்றியாக இருப்பவரைப் பார்த்து "அவரைத் தெளிச்சு விட்டாச்சுப்பா?" என்கிறோம் அல்லவா? அதன் உட்பொருளைச் சற்று ஓர்ந்து பாருங்கள்.

இறைமையை ஒட்டி ஒரு பொருளுக்குப் புனிதம் கற்பிக்க நீர் தெளிப்பது முழுக்க முழுக்கத் தென்னாட்டுப் பழக்கம். [இன்று வடபுலத்திலும் பரவி வருகிறது. காட்டாக வடநாட்டு இலிங்கங்களின் மேல் இடைவிடாது நீர் ஒழுக  வைத்திருப்பார்.] கோயிலுக்கருகில் குளம் வெட்டுவது, கோயில் குளத்தில் முழுகி எழுவது, குளித்துப் பின் சாமி கும்பிடுவது, ஈரத்தோடு கோயிலுக்குள் போவது, என இறை வழிபாட்டில் நீருக்கு முகன்மை கொடுப்போம்.

நீரின் குணங்கள் பல. நீருக்கமைந்த பெயர்களும் ஒவ்வொரு குணத்தால் அமைந்தன. காட்டாக, நீர் என்ற சொல் ஈர்க்கும் குணத்தால், ஈரமென்ற சொல்லின் நீட்சியால் ஏற்பட்டது.  (இதேபோலப் பல குணங்களால் எழுந்த நீர்ப்பெயர்களைச் சொன்னால் சொல்லவருவது தவறிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.) ஒரேயொரு விலக்காய், நீரின் இன்னொரு குணத்தால் ஏற்பட்ட சொல்லை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

நீரின் மேற்பரப்பு, ஏனவடிவிற்குத் தகுந்தாற் போல் உருவம் கொள்ளும்; தவிர மேலே ஏற்படும் அசைவிற்குத் தக்கத் துள்ளும்; துள்ளல் கூடினால் தளும்பும்; பின் தெறிக்கும். துள்ளல் = குதித்தல். துள்ளும்போது துள்ளித்ததால், பரப்புத் தந்த விசையால் (பரப்புத் தந்தம் = surface tension; தந்து = நூல், கயிறு. தந்தித்தல் = நூற்றல்; நூற்கும்போது கொடுக்கும் இழுவிசையைத் தந்தவிசை - tensile force - என்கிறோம். tensile force ஐ மிக எளிதாகத் தந்தவிசை எனலாம்.  compressive force = அமுக்கு விசை.) பல்வேறு பரப்பு விசை, ஈர்ப்பு விசைகளால் துளியாகிப் போகும். துள்ளுவதில் துளி பிறக்கும் கதை இது தான்.

துள்ளல் தளும்புதற்கும், தொளதொளப்பதற்கும் வழிவகுக்கும். தந்த விசை கூடக்கூட இழுபடும் கம்பி, நூல், இன்னும் இது போன்றவை, தொளுங்கிப் போகும். எப்படி நெகிழ்வது நீளலுக்குக் காரணமோ, அதுபோல் தொள்வதும், தந்தவிசையின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படுவதே. துளித்தம்>தெளித்தம் என்ற ஆக்கம் இருபிறப்பிச் சொல். துளிக்கக் கூடிய பொருள் . துளுத்தம்> தூள்த்தம்> தூத்தம் என்று பலுக்கப படும். பொத்தகம் புஸ்தகம் ஆனது போல், மீத் திருத்தத்தில் (hyper correction) தூத்தம்>தீத்தம்>தீர்த்தம் ஆகும்.

தெளிப்பது பிறவினை; தெறிப்பது தன்வினை. (தெறியின் வேர் துல்> துறு> தெறு என்றும், தெளியின் வேர் துல்> துள்> தெள்> தெளி என்றும் விரியும்.) துண்டுதுண்டாகப் பிரிவுதும், பிரிந்தவை கூடி பெரிது ஆவதும் நீருக்கும், நீர்போல் நீர்மங்களுக்கும் உள்ள குணம். இன்று தீர்த்தம் என்றால்தான் பலர்க்கும் புரிகிறது. அதன் தமிழாழம் புரிபடாது போகிறது. வேதநெறியில் தெளிக்கும் பழக்கம் கிடையாதபோது, தெளித்தம்> தீர்த்தம் என்றல்லாது, வேறெப்படித் ”தீர்த்தம்”  தோன்றி யிருக்கும்?

தீர்த்தம் கிடைத்தால் இறைவனின் அருள் பெற்றவராய், அவன் பணியில் இணைகிறவராய் ஆகிவிடுவதாய், நம்மூர்த் தொன்மம் நவில்கிறது. எனவே consecrate பண்ண வேண்டுமானால், (மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலியில் வெறுமே consecrate என்று மட்டுமே போட்டிருக்கும். அதன் மரபுவழித் தொடக்கங்கள் தென்னாட்டில் அல்லாமல் நாவலந்தீவில் எங்கும் கிடையாது.) தெளித்தத்தைத் தெளிக்க வேண்டும். ஆகம வழியில், எல்லாச் சடங்குகளிலும் தெளிப்பதில்லாமல் இல்லை. குருவிடம் மாணக்கன் படிப்பு முடிந்தவுடன் தெளிவிக்கப் பெற்று (இங்கே உள்ள 2 பொருட்பாடுகளையும் எண்ணிப் பாருங்கள்.) தெளிவிக்கை (தீக்ஷை) பெறுகிறான். தெளிவிக்கப் பட்டவன் தீக்ஷிதன் ஆகிறான். தெளிவித்த பின்னால் தான் எல்லாச் சடங்கும் உரைகளும் முற்று முழுதாகின்றன. தீர்க்கம் என்ற சொல்லிற்கு "முற்று முடிவு" என்ற பொருள் சடங்குகளை ஒட்டியே எழுந்தது. (கவனிக்க: தீர்க்க சந்தி, தீர்க்க விராமம் என்ற வடமொழிச் சொற்கள்.)

இவ்வளவு தூரம் தீர்த்தம் பற்றிச் சொன்னதற்குக் காரணமுண்டு, தீக்ஷிதர் என்பவர் வேதநெறியையும் ஆகமநெறியையும் கலந்த சமயநெறியில் உருவானவர். அக்கலவை வடபுலத்தில் உருவாகி இருக்கலாம்; அல்லது தென்புலத்தில் எல்லைநகரான படித்தானத்தில் உருவாகி இருக்கலாம். என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. ஆயினும் அதன்வளர்ச்சியின் உச்சகட்டம் தில்லையில் தான். அவ் வளர்ச்சியின் முகடு (mode) நடவரசன்  கருத்தீடு ....... நாம் இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும்.

"தென்னாடுடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை, குறிப்பாகத் தில்லையில் பலரும் கூறும் வாசகத்தின் உட் பொருள் பார்த்தால், "அதென்ன, எந்நாட்டவர்க்கும்? யாரந்த எந்நாட்டவர்?" என்ற கேள்வி யோசிக்க வைக்கிறது. அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

திருச்சிற்றம்பலம்.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

unarvukal said...

திருவாளர் இராமகி அவர்கட்கு

நான் பார்த்த வலைப்பதிவுகள் எல்லாவற்றிலும் சிறந்ததும் வாசித்துக் கொண்டேயிருக்கலாம் என்ற உணர்வைத் தந்தது உங்களின் வளவு வலைப்பதிவு தான் என்பது உண்மை வெறும் புகழச்சியல்ல. தற்செயலாக உங்களின் வலைப்பதிவுக்கு வரநேர்ந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் தமிழ்ப்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். தயவு செய்து ஆடவல்லானுக்கும், தமிழுக்குமுள்ள தொடர்பைத் தொடர்ந்து எழுதுவீர்களென நம்புகிறேன்.

அன்புடன்
ஆரூரன்
www.unarvukal.com

VSK said...

அரிய பல செய்திகளை அரும்படக் கூறும் அருமையான, அறிவான, அழகான பதிவு!
மிக்க நன்றி ஐயா!

nayanan said...

அய்யா, தொடருங்கள். மிக அருமையான
தொடர் இது. நிறைய எழுதுங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

«ñ§½,
þó¾ò ¾£ì¸¢¾÷¸û Àñϸ¢È «ðÞÆ¢Âò¨¾ì ¸ÅÉÓüÈ¡ø þÅ÷¸û ¦¾Ç¢Å¢ì¨¸ ¦ÀüÈÅ÷¸û§À¡Äò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä§Â; ÁÕûÅ¢ì¸ôÀð¼Å÷¸û §À¡ÄøÄÅ¡ ¦¾Ã¢¸¢È¡÷¸û? ¾í¸û ÁÕðº¢Â¡ø Á츨ÇÔõ ÁÕðθ¢È þó¾ ÁÕðʸ¨Ç ¯ÕðÎÅÐ ±ì¸¡Äõ?
¬ÚÓ¸ò¾Á¢Æý