Wednesday, August 23, 2023

மறதியும் மொழியழிவும்

 பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும். நம்முடைய சொற் குவையை நாமே புழங்காது வைத்திருந்தால், நாளாவட்டத்தில் நாம் ஒருசிலவற்றை மறந்து தான் போவோம். (இதனால் தான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொன்னார்கள்.)

நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு அளவை நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) அதே மேனியில் தொடர்ந்தால், அப்புறம் இன்று இருப்பதில் கிட்டத்தட்ட 15% தமிழ்ச் சொற்கள் பயன்படாது ஒழிந்தே போகும். அப்புறம் அந்தச் சொற்களுக்கு ஈடாய் இன்னொரு மொழிச் சொற்களை அன்றையத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பயன்படுத்தத் தொடங்குவார்; முடிவில் மொழி என்பது மாறிப் போகும். இப்படித்தான் தமிழியக் கிளைமொழிகள் எல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் கொடுந்தமிழில் இருந்து மற்ற மொழிகளாய்க் கிளைத்தன. முடிவில், மகதம் வரை விரிந்திருந்த தென்மொழி, இன்று மாலவன் குன்றத்திற்கும் கீழே குறுகிப் போனது.
நம் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்ததை, 2000-3000 ஆண்டுகள் காப்பாற்றி வந்ததை, நாம் தொலைப்பது அவ்வளவு சரியாகத் தென்படவில்லை. நம் பெற்றோரின் கண்ணுக்கெதிரே தோட்டத் தொழிலாளராய்ப் போன தமிழர்கள் (அது போலத் தெலுங்கர்) போன இடத்தில், ஓரளவு மக்கள் தொகை இருந்தும், தம் அறியாமைப் போக்கால், தம் மொழியைக் காப்பாற்றாது போனார். விளைவு? தமிழும், தெலுங்கும் அந்த இடங்களில் தொலைந்து போயின. முத்தம்மா, முட்டம்மா ஆகி, தண்டபாணி தெண்டாபணி ஆகி, காளிச்சரண் கல்லிச்சரன் ஆகி, சரவணன் சர்வன் ஆகி மொத்தத்தில் தமிழ் அடையாளமே தொலைந்தது. மறவாதீர்! தமிழனுக்குத் தமிழே முகவரி.
உங்களுக்குத் தெரியுமா? ஓலாவ் மொழியைத் தொலைத்த அமெரிக்கக் கருப்பர் (ஓலாவ் மொழி மேற்கு ஆப்பிரிக்க மொழி. ஓலாவ் பேசும் பலர் கருப்பு அடிமையாக அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.) பெருமிதத்தையும் சேர்த்துத் தான் 400 ஆண்டுகளில் அவர் தொலைத்தார். இன்றைக்கும் அவர் முகத்தில் பெருமிதத்தைத் தேட வேண்டியிருக்கிறது. மாறாக, மொழியைக் காப்பாற்றியதால், சுரினாம், ஜமைக்கா, மொரிசியசு, பிஜி போன்ற இடங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தி இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது; இந்த இந்திக்காரர் அரசியல், பொருளியல், கல்வி இன்ன பிற துறைகளில் அந்த இடங்களில் முன்னணியில் தான் இருக்கிறார். அவர் முகத்தில் பெருமிதம் இன்றும் இருப்பதைக் கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் ஓரளவு உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒரு முறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்? வரலாறு அறியாதவர் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.


No comments: