Thursday, May 16, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 4

சங்கத் தமிழ்நடை என்பது ஏதோ அந்தரத்திற் குதித்ததல்ல. அப்படியொரு மொழிநடை 2000/2500 ஆண்டுகளுக்கு முன் உருவாக வேண்டுமெனில், நெடுங்காலம் முன்னரே மொழி தோன்றியிருக்க வேண்டும்; இனக்குழு இடையாடலுக்கு ஏந்தாய்ப் புழங்கியிருக்க வேண்டும்; இனக்குழுக்கள் திரண்டு ஓரினமாகுஞ் சூழல் ஏற்பட்டிருக்க வேண்டும்; தனிமாந்த முனைப்பு தொடர்ந்திருக்க வேண்டும்; திணைவளப் பண்ட உருவாக்கம் பெருகியிருக்க வேண்டும்; (மாழை, மணிகள், முத்து, பவளம் போன்ற) பரிமாற்றப் பண்டங்கள் மல்கியிருக்க வேண்டும்; அண்டை அயலோடும், கடல்வழியும், கொடுக்கல் - வாங்கல் கூடியிருக்க வேண்டும்; உவரி மதிப்பு (surplus value) உயர்ந்திருக்க வேண்டும்; பொருளியல் செறிந்திருக்க வேண்டும்.

ஒரு மொழியின் தோற்றத்தை அறிவது மிகவுங் கடினமானது. 60000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தெற்கே, தமிழகப் பரப்பில் (M130) என்னும் தொடக்க கால மாந்தன் இருந்ததாக Y குருமிகள் (Y chromosome) பற்றிய ஆண்கள் ஈனியல் (male genetics) ஆய்வின் வழி (பேரா. பிச்சப்பன், சுபென்சர் வெல்சு போன்றோரின் ஆய்வு) அறிகிறோம். [பெண்கள் ஈனியல் (female genetics) வழியும் இதை அணுகமுடியும். ஆனால் இன்னும் முன்னாற் காலங் காட்டும்.] இதே M130 கூட்டத்தாரின் நகர்ச்சியில் ஒரு பகுதியினராய் ஆத்திரேலியப் பழங்குடியினர் இருந்ததும் இப்பொழுது ஈனியல் ஆய்விற் தெரிகிறது. ஆத்திரேலியப் பழங்குடியினரின் பல சொற்கள் தமிழை ஒத்திருப்பதாயும், பண்பாட்டு நடைமுறைகள் கூடச் சிலவகையில் ஒத்ததாயும் இனவியல் ஆய்வுகள் எழுந்துள்ளன. [ஆத்திரேலியப் பழங்குடி மொழிகளுக்கும், தமிழுக்குமான ஒப்பீட்டாய்வு இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை. தமிழக மொழியியற் துறைகள் இதைத் தொடங்கினால் நல்லது.] 30000 ஆண்டுகளுக்கு முன் M20 எனும் இன்னுமொரு கூட்டத்தார் இந்தியாவில் நுழைந்திருக்கிறார். இத்தகைய பழ மாந்தர் நகர்ச்சியில் தமிழ்த்தோற்றம் எப்பொழுதென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது தவிர, 60000 ஆண்டுகளிற் கீழைக்கடல்/தென்கடல் பல்வேறு காலகட்டங்களில் இந்திய நிலத்துள் ஊடுறுவியிருக்கிறது; பின் விலகியுஞ் சென்றிருக்கிறது. (கடலாய்வு, பழஞ்சூழலியல் ஆகியவற்றின்படி அணுகினால், சங்க இலக்கியம் நினைவுறுத்தும் கடற்கோள்கள் வெறுங் கற்பனையில்லை. இங்கு நடந்திருக்கக் கூடியவைதான். ”அவை மூன்றா? அதிகமா? எப்பொழுது நடந்தன?” என்ற வினாக்களுக்கு இறுதிவிடை இன்னுந் தெரியாது. அக் கடற்கோட் குறிப்புகளைக் கேலி செய்வதையும், ’வரலாற்றுக் காலத்தில் எங்கோ நடுக்கடல் நாடுகளிலிருந்து தமிழர் இங்கு நுழைந்தார்’ என்று கற்பனைக் கதைகள் பேசுவதையும் ஒதுக்கிக் கொஞ்சம் அறிவியலைக் கைக்கொண்டால் நல்லது.

இந்திய முகனை நிலத்திலிருந்து ஈழம்/இலங்கைப் பகுதி இத்தகைய கடற்கோளாலே பிரிந்தது. (இல்லுதல்>ஈல்தல் = பிரிதல். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது ஈழம். இலங்கை என்பதற்கும் இல்லுதல் வினை தான் அடிப்படை. ஈல்தல் ஈர்தல் என்றுந் திரியும். மேலை மொழிகளில் island, isles என்றெழுதி ஈலன், ஈல் என்றே பலுக்குவர். இற்றைக் காலத்தில் இவற்றை ஐலன், ஐல் என்று சொல்வதுமுண்டு. ஈழம் எனும் விதப்புப்பெயர் இப்படி மேலைநாடுகளிற் பொதுமையாய் விரிந்தது போலும்.)

இற்றைத் தமிழகம், கேரளம், தக்கணம் என்பதோடு ஈழம்/இலங்கையும் M130. M20 என்ற பழமாந்தர் வாழ்விடமாய் இருந்திருக்கிறது. 30000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு இலங்கையிற் கிடைத்திருக்கிறது. இந்தப் பெரிய நிலத்திற்றான் பழைய கற்காலம், புதிய கற்காலம், செம்புக்காலம், பெருங்கற் காலம், இரும்புக் காலம் போன்ற பருவங்களைப் பழந்தமிழர் கழித்திருக்கிறார். சென்னைக்குப் பக்கத்தில் பூண்டி நீர்த்தேக்கத்தின் அருகில், அத்திரப்பாக்கத்தில் பழங்கற்காலச் சின்னங்கள் கிடைத்திருக்கின்றன. [இந்தத் தொடர்ச்சியை ஒழுங்காகப் புரிந்து தமிழர் வரலாறு எழுதுவதிற்றான் ஏராளங் குழறுபடிகள் நடக்கின்றன. “தமிழரா> இருக்காது” என்ற அவநம்பிக்கைகள் பல இடத்தும் இழைகின்றன. சங்க காலத்தைக் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளும் மேலையாய்வாளர் இருக்கிறாரே?]

வரலாற்றுக் காலத்திற்கு வந்தால், இதுவரை கிடைத்த தொல்லியற் சான்றுகளின் படி (குறிப்பாகப் பொருந்தல்),இந்த மொழி கி.மு.490 அளவில் எழுத்திலும் புழங்கியது இப்பொழுது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தையச் சான்றுகள் எதிர்காலத்திற் கிடைக்கலாம். [தமிழ்நாட்டிற் செய்யவேண்டிய தொல்லியல் ஆய்வுகள் ஏராளமிருக்கின்றன. நடந்த ஆய்வுகளிலும் கரிமம் 14 யையோ, அதற்கொத்த வேறொரு முறையையோ, பயன்படுத்தி அகழ்பொருள் அகவை காணும் நுட்பம் அரிதே பயில்கிறது. எல்லாம் “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று பரியும் முகம் காட்டி பரிதவிக்கும் “ப்ரமாணத்திலேயே” வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதிற் சங்கத முன்மைக்கு முயலும் அத்துவானக் கட்டுகள் வேறு. ”தமிழ் பிராமிக் கல்வெட்டா? கி.மு.200க்கு முன்னால் எந்தக் காலமும் சொல்லாதே” என்று ஓரிரு பெரியவரைக் காட்டி எழுதப்படா, மீறப்படா, விதி கல்வெட்டாளர் நடுவே உலவுகிறதோ, என்னவோ? பொருந்தல் ஆய்வு முடிவு கேட்டு அதிர்ந்தவரே மிகுதி.]

தமிழகத் தொல்லாய்வில் கிடைத்த வரலாற்றுப் பழஞ்செய்தி கொற்கைக்குக் அருகில் ஆதிச்சநல்லூர் பற்றியது தான். அதன் காலமே இன்னும் முடிவு செய்யப்படாதிருக்கிறது. ”கி.மு.1850, கி.மு. 3000, சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தியது” என்றெல்லாம் விதம் விதமாய்ச் சொல்கிறார். புதுக் கற்காலத் தடையங்களும் தருமபுரி மாவட்டத்தில் அண்மையிற் கிடைத்தன. பூம்புகார் கடலாய்வில் 11000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மாந்தக் கட்டுமானம் தெரியவந்திருக்கிறது. இந்தியக் கடலாய்வு நிறுவனம் மூச்சு விடாது மோனம் காட்டுகிறது. தமிழரும் பேசாதிருந்து, இப்பொழுது தான் தமிழக அரசு ”என்னவோ? ஏதோ?”வென்று விழித்துக் கொண்டு 90 கோடி உருபாக்களை பூம்புகார் ஆய்விற்கென ஒதுக்குகிறது. [இதுபோல ஆதிச்ச நல்லூர் ஆய்வை ஒழுங்காகச் செய்ய தமிழக அரசு ஒரு திட்டம் வகுத்துச் செலவிற்குப் பணம் ஒதுக்குமானால் நல்லது.]

மேலேயுள்ள செய்திகளைச் சொன்னது ஒரு காரணத்தோடு தான். சங்ககால நாகரிகம் எழுவதற்கு அணியமாய், இங்கு தொல்மாந்தனின் இருப்பு இருந்திருக்கிறது. எதுவும் அந்தரத்தில் நடந்துவிடவில்லை. முன்னோனை முட்டாளாக மதித்து நாம் தான் மாற்றோருக்கு அடிமையாக வெற்றிலைபாக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம்.

முதலிரு மாந்தர் நுழைவிற்குப் பின் மூன்றாம் வகை மாந்தர் (M17) இற்றைக்கு 9000 ஆண்டுகள் முன்னும், 3500 ஆண்டுகள் முன்னும் இந்தியத் துணைக்கண்டத்துள் உள்நுழைந்த போது, தமிழ் மொழியுள் மேலும் பல்வகைக் கலப்புக்கள் நடந்திருக்கலாம். [மூன்றாமவர் கலப்பு இந்தியாவில் இன்றளவும் 10/12 விழுக்காடே காட்டுகிறது.] பொதுவாகத் தமிழை உயர்த்துவோர் சொல்வது போல், ”அண்டையரசு மொழிகளின் தாக்கம் தமிழ் மேல் சங்ககாலத்திலும் அதற்கு முன்னுமில்லை, அது கொடுத்தே பழகியது” என்பதும், அன்றிச் சங்கதத்தை உயர்த்துவோர் சொல்வது போல் ”தமிழ் கடன்வாங்கியே பிழைத்தது” என்பதும் ஒன்றிற்கொன்று முரணான, அறிவியல் பொருந்தா நிலைப்பாடுகளாகும். மாந்தர் இனக்குழுக் கலப்பு, தொல்லியல், வரலாறு, பொருளாதாரப் பங்களிப்பு போன்றவற்றைப் பார்த்தால், தமிழும், பாகதமும் கி.மு.520-கி.பி.500 என்ற காலப் பெருவெளியில் ஒன்றிற்கொன்று உறவாடிய மொழிகளாகவே தோற்றுகின்றன. தக்கணப் பாதையின் உறவாடல் மொழிகள் இவையிரண்டுமேயாகும். அதே பொழுது உத்தரப் பாதையின் உறவாடல் மொழிகள் பாகதமும், சங்கதமுமாகும். இந்த 1000 ஆண்டுகளிற் தமிழின் மேல் சங்கதத் தாக்கம் சுற்றி வளைத்தேயிருந்தது.

இனிக் கொஞ்சம் வரலாற்றுக் காலம் பற்றிப் பேசுவோம். நூற்றுவர் கன்னரின் கடைக்காலத்தில் அவரின் தக்காண அரசு சுக்கு நூறாகியது. மேற்கு சத்ரபர், நூற்றுவர் கன்னரின் வடமேற்குப் பகுதியையும், ஆபிரர் என்போர் படித்தானம் சேர்ந்த கன்னரின் மேற்குப் பகுதியையும், வானவாசிச் சூதர் (அவருக்குப் பின் கடம்பர்) வட கருநாடகப் பகுதியையும், ஆந்திர இக்குவாகர் (கி.பி.220-320) கிருட்டிணா - குண்டூர் பகுதியையும், இராயல சீமையைச் சேர்ந்த பல்லவர் (கி.பி.275-600) கன்னரின் தெற்குப் பகுதியையும் பிடித்துக் கொண்டனர். கடம்பருக்குப் பின் கருநாடகத்தில் சளுக்கியர் தலை தூக்கினர்.

இச்சிதறலுக்கு நூறாண்டு கழித்து கி.பி.320 தொடங்கி கி.பி.550 வரை மகதத்தில் குத்தர் (=குப்தர்) அரசாண்டனர். சத்ரப அரசரைப் போல் குத்தரும் சங்கதத்திற்கே முதன்மை அளித்தார். குத்தர் அரசில் வேதநெறி தழைத்தோங்கியது. அரச கருமங்களில் பாகதம் அழிந்து, சங்கதம் குடியேறியது. குத்தர் அரசு விரியச் சங்கதத்தின் எல்லையும் விரிந்தது. குத்தர் கால கட்டமே சங்கதத்தின் உச்ச காலமாகும். [இந்திய வரலாற்றில் ஆர்வங் கொண்டோர் இதை உணரவேண்டும்.] சங்கதம் தூக்கிப் பிடித்த வேத நெறியாளர் சமண நெறிகளுக்கு அணைவான பாகதத்தைத் தூக்கி மிதித்து தம் ஆட்சியை நிலை நிறுத்தினர்.

காளிதாசர், ஆர்யபட்டர், வராக மிகிரர், விட்டுணு சர்மா, வாத்சாயனர் போன்றோர் இலக்கியம், கலை, அறிவியல் என்று பல்வேறு துறைகளைச் சங்கதங் கொண்டு மேம்படுத்தினர். இன்னொரு காப்பியமான வியாச பாரதம் முன்னரே எழுந்திருந்தாலும் குத்தர் அரசின் தொடக்கத்தில் இறுதிவடிவம் பெற்றது. பாரதத்திற்கு முந்தைய காப்பியமான வான்மீகி இராமயணமும் குத்த அரசின் ஆதரவு பெற்று மக்களிடையே பெரிதும் பரவியது. இந்தக் காலத்திற்றான் புகழ்பெற்ற சீனப்பயணியான வாகியான் (Fa hien) இந்தியாவிற்கு வந்தார். மருத்துவம், பண்டுவம் (Surgery) சார்ந்த சுசுருதர் (Susrutha) இக்காலத்திருந்தார். அசந்தா, எல்லோரச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் பெரும்பாலானவை இக்காலத்தைச் சேர்ந்தவையே.

இதே காலகட்டத்திற்குச் சற்று முன்னர் தான், கன்னருக்குப் பின் தக்கணம் படித்தானத்தில் மிஞ்சிய கள்+ ஆபிரர் = களாபிரர்>களப்பிரர் (கருப்பு ஆபிரர்) என்னும் குடியரசர் கருநாடக வழியே தமிழகம் நுழைந்து மூவேந்தரை வீழ்த்தி முடிசூடினர். கி.பி.220 இல் இருந்து கிட்டத்தட்ட கி.பி.550 வரை இவரே தமிழகத்தை ஆண்டார். ”களப்பிரர் யார்?” என்ற கேள்வியில் தமிழக வரலாற்றாய்வர் இன்னுந் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். நூற்றுவர் கன்னருக்கு அப்புறம் தக்கணத்தில் நடந்த சிதறல்களை ஆய்ந்தால் மட்டுமே நமக்கு உண்மை கிடைக்கும்.

இந்தக் களப்பிரர் தமிழரை வெறுமே கொள்ளையடித்த கூட்டமல்ல. இவர் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லிக் கொண்டிருப்பதும் ஆய்வில்லாக் குற்றமேயாகும். தமிழகம் பற்றி நன்கு அறிந்த அரச குடியினராகவே இவர் இருந்திருக்க வேண்டும். பல்லவர், சாளுக்கியர், விசயநகரர் போலவே தமிழ்நாட்டை ஆளவந்த குடியினர் இவராகும். இவர் தோற்றம் கருநாடக / மாராட்டப் பகுதிகளில் எழுந்ததுதான். [தமிழக, கருநாடகம், மாராட்டம் மூன்றிற்குள்ளும் நடந்த கொள்வினை, கொடுப்பினையை நம்மவர் நன்கு ஆயமாட்டேம் என்கிறோம்.]

களப்பிரர் புத்தம், செயினம் போன்ற சமண நெறிகளையே தம் அரசில் முன்னிறுத்தினர். தமக்கு முன்னிருந்த நூற்றுவர் கன்னரின் தாக்கத்தால் பாகதத்தையே ஆட்சிமொழியாகத் தூக்கிப் பிடித்திருக்கக் கூடும். தமிழும் புழங்கியிருக்கலாம். ஆய்வு துலங்காததாற் தெளிவாகச் சொல்லமுடியவில்லை. களப்பிரர் பாண்டிநாட்டைப் பிடிக்காத காலத்தில் மாணிக்கவாசகர் புத்தரோடு வாதம் புரிந்தார். அவருக்குப் பின், மதுரையிலும் களப்பிரர் ஆட்சிக்கு வந்தார்.

பின்வந்த பலரிலும் (களப்பிரர் காலந் தொட்டே) பிறநாட்டு அரசுகள் நம்மூரில் ஆட்சி செய்தபோது, பிறமொழிகள் வலிந்த தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. கிட்டத்தட்ட 1800 ஆண்டு கால பிற மொழித்தாக்கம் என்பது குறைத்து மதிக்கக் கூடியதல்ல. இக்காலத்தில் ஆட்சி மொழி தமிழ் மட்டுமாய் இருந்ததில்லை. அரசு ஆவணங்கள், பண்பாட்டுத் தாக்கம், இலக்கியம், பரிசளிப்பு, கொடை, என்று வேற்று மொழிகள் தமிழகத்திலே பெருமை பெற்றிருக்கின்றன. ஆனாலும் 13/14 ஆம் நூற்றாண்டுவரை பிறமொழி எழுத்துக்களைக் கலந்து எழுதும் நடை இலக்கியத்திற் சிறக்கவில்லை; வடவெழுத்துக்களை ஒருவி எழுதியே இவை தாக்குப் பிடித்திருக்கின்றன. ஆனாற் கல்வெட்டுக்களில் பல்லவர் காலத்திலிருந்து பிறமொழி எழுத்துக்கள் சிறிது சிறிதாக உயர்ந்து வந்திருக்கின்றன.

களப்பிரருக்குப் பின் வந்த பரத்துவாச கூட்டத்தைச் (கோத்திரத்தைச்) சேர்ந்த பல்லவர் தொடக்க காலங்களில் முன்னவரான நூற்றுவர் கன்னரைப் போலப் பாகதத்தைப் போற்றிப் பின் குத்தரை பெருமளவிற் பின்பற்றியதால் சங்கதத்தைத் தூக்கித் தலைமேற் பிடித்தனர். குத்தரின் தாக்கம் பல்லவர் மேற் பெரிதும் இருந்தது. பிற்காலப் பல்லவர் தம் கல்வெட்டுக்களில் மெய்கீர்த்தி பேசப்பட்ட தொடக்கப் பகுதிகளைச் சங்கதத்தில் எழுதி, பொதுமக்களுக்குப் புரியவேண்டிய பத்திகளைத் தமிழிலுமாக எழுதினர். சங்கதம் எழுதுவதற்காகவே கிரந்தம் என்ற எழுத்து முறையைத் தமிழெழுத்திலிருந்து தொடங்கினர். (கிரந்தத் தோற்றம் பற்றிய வரலாற்றாய்வு இன்னுஞ் செய்யப்படாதிருக்கிறது. ’தாத்தன் பெயரனைப் பெற்றான்’ என்பதற்கு மாறாய் ’பெயரனிலிருந்து தாத்தன் எழுந்தான்’ என்ற தலை கீழ்ப் பாடமும் வேதநெறியினராற் பரப்பப்படுகிறது.) தமிழெழுத்தில் கிரந்த எழுத்துக் கலப்பும் சொற்கலப்புஞ் செய்து மணிப்பவள நடைக்குக் கால்கோலினர்.

களப்பிரர் இராயலசீமையைத் தாக்கியதால் பல்லவர் இடம்பெயர்ந்து, தெற்கே நகர்ந்து அங்கிருந்த சோழரைத் துரத்தித் தொண்டை நாட்டிற்கு வந்து தங்கிப் போனார். மகேந்திர பல்லவன் காலம் வரை செயினமே பல்லவர் அரசில் ஓங்கியிருந்தது. அதனால் பாகதம் காஞ்சியிலிருந்தும் கோலோச்சியது. திருநாவுக்கரசர் முயற்சியால் பல்லவன் சிவநெறியிற் சேர்ந்த போது சிவநெறியும், வேதநெறியும் ஒன்றிற்கொன்று உறுதுணையாகி சங்கதத்தைத் தமிழுக்கு ஊன்றுகோலாக்கின. பின்னால் விண்ணவமும் இந்தக் கூட்டணிக்குள் சேர்ந்தது. சிவமும், விண்ணவமும் முன்னால் நிற்க, வேதநெறி பின்னால் உயரத்தில் நிற்க, சமண நெறிகள் கட்டகத் தீர்வாக (systematic solution) தமிழ்நாட்டிற் குத்திக் குலைக்கப்பட்டன.

இதன் விளைவால், தீர்த்தங்கரர் சிலைகளும், புத்தர் சிலைகளும் வயல்வெளிகளில் மண்ணுக்குள்ளும், குளங்களில் நீருக்குள்ளும் அடையத் தொடங்கின. அறப்பெயர்ச் சாத்தன் திருமேனி (முருக்கழிக் குசலர் = மற்கலிக் கோசாலர்) ஐயனாராகிக் தென்னாட்டின் குலக் கோயில்களுக்குள் குடிகொள்ளத் தொடங்கியது. [ஆசீவகம் அடியோடு அமிழ்ந்து உருமாற்றம் பெற்றது. ஐயனார் கோயில்களுக்கும் ஆசீவகத்திற்கும் இருக்கும் உறவை வேறொரு தொடரிற் பார்ப்போம். ஒரேயொரு செய்தி மட்டும் இங்கு சொல்கிறேன். பாண்டி நாட்டில் ஐயனாருக்கும் சிவனுக்கும் உறவு ஏற்றிச் சொல்லப்பட்டது. ஆண்டு தோறும் சிவராத்திரியில் ஐயனார் கோயில்கள் பெரும் விழவு கொள்கின்றன. சிவநெறியோடு ஒட்டுறவு கொண்டிருக்காவிட்டால் ஐயனார் சிலகளும் கூட மகாவீரர், புத்தர் சிலைகள் போல மண்ணுக்குள்ளும், நீருக்குள்ளும் அடைக்கலம் ஆகியிருக்கலாம்.]

தேவதானங்களும் (சிவன் கோயிலுக்குக் கொடுத்த நிலங்கள்), திருவிடையாட்டங்களும் (விண்ணவன் கோயிலுக்குக் கொடுத்தவை), பிரம்மதேயங்களும் (பார்ப்பனருக்குக் கொடுத்தவை) பெருகிப் பள்ளிச் சந்தங்கள் (மூன்று சமண நெறிகளுக்கும் கொடுத்தவை) அருகிப் போயின. இதே காலம் சற்று தள்ளி சம்பந்தர் முயற்சியில் கூன்பாண்டியன், நின்றசீர் நெடுமாறனாய் மாற்றம் பெற்று அரிகேசரி மாறவர்மனானான். “தமிழ் ஞானசம்பந்தர்” தமிழை உயர்த்தியதோடு, சங்கதத்தையும் அருகில் வைப்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். சமண மதங்கள் அழிய அழியப் பாகதம் தூக்கிக் கடாசப் பட்டது. வடமொழி என்ற பெயரின் பொருள் சிறிது சிறிதாய் தமிழகத்திற் மாறத் தொடங்கிச் சங்கதத்தையே அது குறிக்கத் தொடங்கிற்று. சங்கதத் தாக்கம் உறுதியாகப் பல்லவர் காலத்தின் நடுவிலேயே தமிழிற் தொடங்கியது.

கி.பி.400 வரையாண்ட களப்பிரர் காலத்தில் பாகதத் தாக்கம் சற்று கூடியது. கி.பி.400 இல் இருந்து கி.பி.800 வரையாண்ட பல்லவர் பாகதம், சங்கதம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து தமிழை அடுத்த மொழியாகவே வைத்திருந்தனர். பல்லவர் காலத்திற்றான் சங்கதம் தமிழகத்தில் வலுத்த நிலை அடைந்தது. அவருக்குப் பின் வந்த பல அரசுகளும் சங்கதம் அந்த 400 ஆண்டுகளிற் பெற்ற முன்னுரிமையைப் பின்னால் மாற்றவேயில்லை.

பல்லவர் காலத்தில் ஒருங்கெழுந்த, தமிழை உயர்த்துவதாய்க் கொடிபிடித்து அரசு கட்டிய கடுங்கோன் வழிப் பாண்டியரும் பல்லவரோடு போட்டியாற் சங்கதத்திற்கு ஓரளவு முன்னுரிமை கொடுத்தேயிருந்தார். பல்லவருக்குப் பின்வந்த பேரரசுச் சோழர் தம் அரச நடவடிக்கைகளிற் தமிழைப் பெரிதும் பயன்படுத்தியும், வேதநெறி பிணைந்த சிவநெறி கடைப்பிடித்ததாற் சங்கதத்திற்குக் கொடுத்த முதன்மையைக் குறைக்கவேயிவில்லை. இதே பழக்கம் பேரரசுச் சோழர் குடியை முற்றிலும் குலைத்த பேரரசுப் பாண்டியர் காலத்திலும் தொடர்ந்தது.

இதன் பின் பங்காளிச் சண்டையால் பேரரசுப் பாண்டியர் அரசு சீரழிய, அதற்கு வாகாய் வடக்கேயிருந்து வந்த முசுலீம் படையெடுப்புக்களால் தமிழகம் தத்தளித்த காலத்தில் பாரசீகம், துருக்கி மொழிகளின் ஊடாட்டம் அங்குமிங்குமாய் எழுந்தது.

மூவேந்தர், களப்பிரர், பல்லவர் என்ற வரிசையில் தமிழ், பாகதம், சங்கத மொழிகளின் பங்களிப்பைப் பார்க்கும் போது, சங்க இலக்கியங்களுக்குள் விழுந்து சங்கத எச்சங்களைத் தேடாது, பாகத எச்சங்களைத் தேடுவது ஒருவேளை பலன் கொடுக்கலாம். சங்க இலக்கியங்களைப் படித்தாலே, (சேர, சோழ, பாண்டிய நாடுகள், ஈழம், மொழிபெயர் தேயம் போன்ற) வெவ்வேறு வட்டாரப் பேச்சுக்கள் எழுத்துத் தமிழோடு விரவி அதனுள் ஓரோ வழி ஊடுறுவிப் பதிவு செய்யப்பட்டதும், சிலவற்றில் பாகதச் சொற்கள் ஊடுறுவிய நடையும், பலவற்றில் பாகதமில்லாத் தனித்த நடையுமாய் தெற்றெனக் காண்பது புலப்படும். சிலம்பில் மிகக் குறுகிய இடங்களும், மணிமேகலையிற் பெருகிய இடங்களும், பாகதம் ஊடுறுவிய நடைக்குச் சான்றுகளாகும்.

பல்லவர் வலிகுன்றிய காலத்தில் அவருக்குத் துணைசெய்வதாய் உள்நுழைந்த பேரரசுச் சோழர், பின்னாற் பாண்டியரோடு போர்புரிந்து சோழர் அரசை மீள உருவாக்கினர். முடிவில் பல்லவரையும் தமக்குக் கீழ் கொண்டு வந்தனர். உறையூர், புகார் போன்றவை சீரழிந்த காரணத்தால் முத்தரையர் நகரான தஞ்சை சோழரின் புதுத் தலைநகராயிற்று; [முத்தரையருக்கும் களப்பிரருக்கும் இருந்த உறவுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.] பழையாறை தங்குமிடம் ஆயிற்று. பல்லவரையே போல்மமாக்கி, ”சங்கத மெய்கீர்த்தி, தமிழ் உள்ளடக்கம்” என்ற கல்வெட்டுப் பழக்கம் சோழர் அரசிலும் தொடர்ந்தது. தமிழரான சோழர், பல்லவரைப் போன்று சங்கத முன்மைக்கு ஏன் இடங் கொடுத்தார்? - என்பது விளங்காத புதிர். கணக்கற்ற கல்வெட்டுக்கள் சங்கதப் பெருமையை முன்னிறுத்தியே எழுந்துள்ளன. வேதநேறி கலந்த சிவநெறி அவர்களை அப்படியாக்கியது போலும்.

சோழனுக்கும் மீறித் தமிழை உயர்த்தி வைத்து எழுதப்பட்டது கம்பன் காவியமாகும். அது அரசவையில் எழுந்த காவியமல்ல. ஒரு குறுநில மன்னன் கூட அல்லாத பெருநிதிக் கிழவனான சடையப்ப வள்ளல் புரந்த காவியம். சோழன் அதன் ஆக்கத்தில் நுழைந்திருந்தால் மெய்கீர்த்தி ஏதேனும் அங்கு தேவைப்பட்டிருக்கும். சோழரின் ஆட்சி முடிவில் குலோத்துங்கன் காலத்தில் பெரியபுராணம் எழுந்தது.

சோழன் மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பின் கி.பி.1216-1238 இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முடிசூடினான். பேரரசுச் சோழர் மொழிநடையிற் செய்ததையே பேரரசுப் பாண்டியனுஞ் செய்தான். கல்வெட்டுக்களில் பல்லவர் தொடங்கிய பழக்கம் இடைவிடாது தொடர்ந்தது. சங்கதத்தின் உச்சம் பேரரசுப் பாண்டியர் காலத்தும் குறையவேயில்லை. வேத நெறியும், சிவ நெறியும் பாண்டியரிடத்தும் கைகோத்து அரசோச்சின.

1310 இல் முதலாம் மாறவர்மன் குலசேகரனுக்கு அப்புறம் பாண்டியரின் இரண்டு இளவரசரான வீர பாண்டியனுக்கும், சுந்தர பாண்டியனுக்கும் மோதல் முற்றியது. பங்காளிச் சண்டையில் பாண்டியர் முற்றிலும் அழிந்து, தென்காசிப் பக்கம் ஒடுங்கிப் போயினர். மதுரை நகரம் கம்பண உடையாருக்கும், பின் மாலிக்காபூருக்கும், அதன் தொடர்ச்சியாய் முசுலீம் படையாளருக்கும் இரையாகியது. அதன் முடிவில் விசய நகரத்து அரசியல் மேலாண்மையும், நாயக்கர் ஆட்சியும் ஏற்பட்டன. பாண்டியர் முற்றிலும் அழிந்து போனார்.

இதுநாள் வரை பாகதத்திற்கும், சங்கதத்திற்கும் இடங் கொடுத்து தடுமாறிக் கொண்டிருந்த தமிழகத்தில் அரபி, தெலுங்கு, சங்கதம் என்று வேற்றுமொழிகள் பேரரசுப் பாண்டியருக்குப்புறம் ஆட்சி கொண்டன. தமிழ் முற்றிலும் சீரழிந்தது. இந்தக் காலகட்டத்திற்றான் மணிப்பவள நடை விரவிய நாலாயிரப்பனுவல் விளக்கங்களும், சங்கதம் சிதறிய அருணகிரிநாதரின் திருப்புகழும் எழுந்தன.

இந்தக் காலத்தைத் தொடர்ந்து மேலையரின் குடியேற்றக் காலம் தொடங்கியது. போர்த்துக்கேசியம், டேனிசு, டச்சு, பிரஞ்சு என்று போய், முடிவில் ஆங்கிலேயரின் அதிகாரம் ஆட்சிகொள்ளத் தொடங்கிற்று. மேலை மொழிகளும் அரங்கேறத் தொடங்கின.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

Ganesh N said...

First for all sorry for commenting in English. I couldn't resist till I get ways to write it in Tamil.

This is one of the brilliant overview about the Tamil history. Thank you very much sir for such a wonderful and most importantly neutral article.

One questions:

1. I have read Pavarnar's articles about Tamil. With his root word analysis he has proved that around 30% of the words in Prakruit is from Tamil. Whats your take on that.

Ganesh N said...

Ayya,

Please go through this article in case if you haven't gone thro this. It tells the relation between Sumerian and Tamil(In fact the complete site itself).

https://sites.google.com/site/sumeriantamil/ab-be-sa-ba-and-ta-avai-sabai

I have read all your articles,I feel the above mentioned article could add valuable information to your research.

Anonymous said...

Hello. And Bye.

Anonymous said...

பல தகவல்களை அறிந்து கொண்டோம், தம் இறுகலான செந்தமிழ் நடையை இலகுவாக்கி அனைவருக்கும் விளங்குமாறு எழுதினால் நல்லது.

சத்தியப் பிரியன் said...

இந்த கட்டுரை முழுவதிலும் அதாவது சோழர்காலத்தில் சங்கதம் போற்றப்பட்டதற்கு பெரும்பாலும் பெரும்பாலுமென்ன முற்றிலும் சைவ இலக்கியங்களையே உதாரணம் காட்டியுள்ளீர்கள். சங்கதம் ஓங்க வைணவத்தின் பங்களிப்பையும் அது பின்னால் மொழிச் சிக்கலாக மாறாமல் சமயச் சிக்கலாக மாறியதன் நுணுக்கமான காரணங்களையும் ஆயலாமே.