Thursday, May 02, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 2

அக்கால எழுத்தை அடையாளங் காண ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுக்களும் நமக்குக் கிடைத்தன / கிடைக்கின்றன. 200 ஆண்டுகளுக்கு முந்திய அச்சுநூல்கள் கூட உலகப் பரண்களிற் சல்லடை போட்டாற் கிடைக்கின்றன. இக்கால எழுத்துக்களோடு சுவடியெழுத்துக்களை ஒப்பிட்டறியத் தன்மயப் புரிதல்கள் போக, புறமயக் கணக்கீடுகளும், அளவீடுகளும் வந்துவிட்டன. நண்பர் நாக.இளங்கோவன் போன்றோர் அறிதியியல் (informatics) உத்திகளைப் பயன்படுத்தி பழம் இலக்கிய ஆவணங்களின் நடை, கைச்சாத்து போன்றவற்றை அலசியெடுக்க விதப்பு நிரலிகளை விளங்க எழுதுகிறார். ஒழுங்கின்மையைக் குறிக்கும் சாணன் உட்திரிப்பு (Shannon's entropy) போன்ற மடை அளவீடுகளால் (bits measurements) தமிழ் நடையைத் துல்லியமாய் அளக்க முடியும். [சாணன் உட்திரிப்பைப் பயன்படுத்தி ஒரு அளவீட்டு எண்ணுதிக் (quantitative numerical) கட்டுரை தமிழில் வந்திருக்கிறதா? :-)))))]

எதிர்காலத்தில் ”சங்க இலக்கியச் சொல்லாடலில் நிரவலாய் எத்துணை விழுக்காடு வடசொல் இருந்தது? வள்ளுவர் நடையிருந்து எந்தளவு நம் நடை விலகியது? சிலப்பதிகாரத்தில் ஏதெல்லாம் இடைச் செருகல்? மாணிக்கவாசகர் நடைக் கைச்சாத்து (style signature) என்ன? கம்பன் வான்மீகிக்கு எத்துணை கடன் பட்டிருந்தான்? பாரதி மறுமலர்ச்சிப் பாவலன் என்று ஏன் சொல்லுகிறோம்? தனித்தமிழ் இயக்கக் காலத்தில் நடைக் கலப்பு எத்தனை? அதற்கப்புறம் நடை எப்படி மாறியது?” - இத்தனை கேள்விகளுக்கும் எண்ணுதியாய் (numerical) விடை காண ஒருவேளை முடியலாம். மொத்தத்தில் எதிர்காலம் ஒளிமிகுந்தேயுள்ளது. ஆனால் எந்த நடைமாற்றமும், தானே நடந்திருக்குமோ? குமுக மாற்றங்கள், அரசியற் பொருளியற் செயற்பாடுகள், சமயப் பொருதல்கள், வேற்று மொழித் தொடர்புகள், ஆட்சிமொழி ஆணைகள், ஆணத்தி நடவடிக்கைகள் என ஏதோ காரணம் பின் இருக்க வேண்டுமே?

முதலிற் சங்க எழுத்தைப் பார்ப்போம். [“வெவ்வேறு மொழிகள்” என்போர் அதையே எடுத்துக்காட்டாக்குகிறார்கள்.] பலராலும் சங்கத் தமிழைப் படிக்க இயலாதாம். அது வேறு தமிழாம்; பழந்தமிழுக்குப் பாடைகட்டிச் சங்கூதி வெகு நாட்களாயிற்றாம். இவர் கணக்கில் இற்றை மொழியின் அகவை 100 கூட ஆகாததாம்; இக்கருத்தைக் கண்டு வியந்து போகிறோம்.

”நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்ற ஔவையார் கூற்றில் (புறம் 187), ”அவல், ஆடவர்” விளங்கின், இன்றும் இப்பாடல் புரிவது தானே? - என்றாலும் ஏற்கும் பாங்கில் ”வேற்றுமொழி” என வாதிப்போர் இல்லை.

வெறும் 17 ஆண்டுகளுக்கு முந்திய பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கீழ்வரும் நூறாசிரியப் பாட்டுக் (30) கூடத் தான் புறநானூற்றைப் போல் இருக்கிறது.

ஆயுங் காலை நாண் மிகவுடைத்தே!
ஈனாக் கன்றைக் காட்டுநர் கொள்ளும்
ஆ மடிச் சிறுபயன் போல
நாம் அவர்க்கு இளமை நலம் அழிப்பதுவே!

ஆனாலும் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறதே? விளாம்பழம் விண்டு தின்ன விருப்பமா? சற்று வலிந்து ஓட்டை உடைக்கத்தான் வேண்டும். பூப்போலப் பிட்டால் பிய்ந்து வருமா, என்ன?

எழுத்து நடை வைத்துக் காலத்தை முடிவுசெய்வது எனக்கு என்றுமே சரவுகிறது. இக்கால எழுத்தில் ஒருவர் தனித்தமிழ் நடை கொள்வார்; மற்றொருவர் சங்கதச் சொற்களை அங்குமிங்கும். பெய்வார்; மூன்றாமவர் மணிப்பவள நடை பயில்வார்; நாலாமவர் முழுதும் தமிங்கிலம் இசைப்பார். இவற்றை வைத்து இருபத்தோறாம் நூற்றாண்டு நடை இது என்று ஆணித்தரமாய்க் கூற இயலுமோ? [நிரவலாய்ப் பார்த்து ஓரளவு சொல்லலாம். ஆனால் பத்தாண்டு இருபதாண்டுக் கணக்காய் ஆய்வில் நெருக்கிச் சொல்வது கடினமானது.] அலசலைத் தொடருவோம்.

சங்ககால எழுத்து என்பது பனையோலைச் சுவடிகளாற் கிட்டியது. இக்கால நுட்பியல் உதவியின்றி, நிரவலாக, மரபுசார் மருந்து, மூலிகைச் சரக்குகளால் 125/130 ஆண்டுகளே சுவடிகளைப் பாதுகாக்க முடியும். இந்த இடைவெளிக்கு அப்புறம் மீண்டும் மீண்டும் படியெடுத்தே சுவடிகளை முன்னோர் காப்பாற்றியிருக்கிறார். அப்படியெழுந்த ஒவ்வொரு படியையும் புது எடுப்புப் (edition) போன்றே கொள்ள முடியும். எடுப்பிற்கான மாற்றங்கள் அதனுள் என்றுமிருக்கும். 19 ஆம் நூற்றாண்டு முடிவில் அல்லது 20 நூற்றாண்டு தொடக்கத்தில் சங்கப் பழஞ்சுவடிகள் உ.வே.சா.விற்குக் கிட்டும்போது கிட்டத்தட்ட 14/15 ஆவது எடுப்பு வரை நடந்திருக்கலாம். மற்ற இலக்கியங்களுக்கு இன்னும் குறைவாய் ஆகியிருக்கும்.

ஒவ்வொரு படியெடுப்பிலும் எழுத்துப் பிழைகள் (’ஏடுசொல்லி’ உரக்கச் சொல்ல, படியெடுக்கும் ’எழுத்தர்’ ஒன்றாகவா எழுதுவர்? ஊரளவு பிழை உள்ளே இருக்காதா?), எழுத்துரு மாற்றம் (2500 ஆண்டுகளில் தமிழி எழுத்தில் எவ்வளவு மாற்றம்?), நடை மாற்றம் (யாப்பு, சொல்லாட்சி, வாக்கிய மாற்றம், தொடர் மாற்றம், இடைச்சொற் பயன்பாடு, உரிச்சொற் புழக்கம் எனப் பெரிய புலனம்), பொருட்பாடு மாற்றம் (நாற்றம் இன்று நல்ல மணமா?), [கல், மாழை (metal), ஓடு, ஓலை, தாள், அச்சு என] எழுதுபொருள் மாற்றம் (நுட்பியற் தாக்கங்களை இன்னும் ஆய்ந்தோமில்லை) என எல்லாம் நடந்துதான், தமிழிலக்கியங்கள் கிடைத்தன. எழுத்துத் தமிழைப் பேசுவோர், இம்மாற்றங்களை உள்வாங்கித் தான் பேசமுடியும். மாற்றம் ஒன்றே மாறாதது.

கி.மு.500 இன் எழுத்தும், கி.பி.2013 இன் எழுத்தும் அப்படியே ஒன்றல்ல; தொல்காப்பியர் நடையும், சங்க இலக்கிய பாணர்/புலவர் நடைகளும், குறள்/சிலம்பு நடைகளும், தேவாரம், கம்ப ராமாயண நடைகளும், அருணகிரி நடையும், பாரதி/பாரதிதாசன், மறைமலை அடிகளார் நடைகளும், பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடையும் வெவ்வேறு பட்டவை. ஒன்று இன்னொன்றைப் போல இருக்காது. அதில் இலக்கண மாற்றங்கள், அவ்வக்காலக் கொச்சை வழக்குகள், வேற்று மொழி ஊடுறுவல்கள், தற்சம/தற்பவ திரிபுகள், தனித்தமிழ் மீட்டெடுப்புக்கள் என எழுதுவோருக்குத் தக்க விரவிக் கிடக்கும். எல்லாம் கலந்தே தமிழ்மொழி இருந்தது; இருக்கிறது; இருக்கும்.

ஆனாலும், சுவடிகளைப் புரிந்து, தேவையான இடங்களில் முன்னோர் உரையைத் துணையாக்கி, 1920 களில் உ.வே.சா. குறிப்புரையும், 1940 களில் ஔவை.சு.துரைசாமி, வேங்கடசாமி நாட்டார் போன்றோர் விரிவுரையும் எழுதியிருக்கிறார் இவற்றைத் துணையாக் கொண்டு, இக்கால ஆய்வாளர் மேலுஞ் செய்திகளைச் சொல்லுகிறார். இதற்கு என்ன பொருள்? இந்த நடை வேறுபாடு எல்லோரும் அறிந்ததே. அதுவொன்றுங் கடக்க முடியாததல்ல. பொருள் புரியாததல்ல. ”முன்னது வேறு; பின்னது வேறு” என்று எக்கிய நிலையாய் (extreme position) இவற்றைக் கொள்ளக் கூடாது.

[அப்படிப் பார்த்தால் என்னடையும், உங்கள் நடையும் வேறல்லவா? கொஞ்சம் பழகினால் ஒருவருக்கொருவர் புரியாமலா போய்விடும்?] இத்தகை நடை மாற்றம், மொழியாளும் பாங்கு போன்றவற்றால் பெரிய உடைப்பொன்றும் உண்டாகவில்லை. [மாறாக, மொழி நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது. அவ்வளவு தான். அதேபொழுது, மொழிபயில் மாந்தரும் மொழியியற்கை, சூழலியல், மீறி ”அதைக் கலப்பேன், இதைக் கலப்பேன்” என்று ஆட்டம் போடுவது தவறு. அப்படி ஆட்டம் போட்டால் ”உள்ளதும் போச்சுடா, தொள்ளைக் காதா” என்றாகி விடும்.]

மலையிற் புறப்பட்டு கடலுக்கோடும் நீரோட்டமாய் இம்மாற்றங்களைக் கொள்ளவேண்டும். மலையில் எழுகும் ஓடையும், விழுகும் அருவியும், சிதறும் சிற்றாறும், பெருகும் பேராறும், ஒட்டிக் கிடக்கும் ஏரிகளும், கட்டித் திரண்ட கண்மாய்களும், குத்திக் குழித்த குளங்களும், பிய்த்துப் பாயும் வாய்க்கால்களும், அடையும் ஆற்றுமுகங்களும், கடையுங் கழிகளும், கடலிற் புகுதரும் சங்குமுகங்களும் வெவ்வேறு நீரையா கொள்கின்றன? எல்லாம் தொடராய்ச் செல்லும் நீரோட்டந் தானே?. நீரின் சுவை மாறலாம் என்பதே இவற்றின் மாறுபாடாகும். சுனையாக எழும்பும் தலைக்காவிரியும், கருநாடகப் பாக மண்டலத்தில் அமையும் ஆடு தாண்டும் காவிரியும், புகையினக் கல்லில் விழும் அருவிக் காவிரியும், உறையூருக்கு அருகில் அகண்டோடும் பேராற்றுக் காவிரியும், புகாருக்கு அருகில் கடலை அடையும் காவிரியும் ஒன்றா, வேறா?

முதலிரு வகையினர் “வேறு வேறு” என்கிறார். மாற்று வகையினர் “எல்லாம் ஒன்றே” என்கிறார்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைத்த விசயம்... நன்று... நன்றி...

Unknown said...

நன்று

Anonymous said...

Nanri Iyaa,