Tuesday, December 31, 2013

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 1

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்ததர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ 
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே. 

என்ற புறநானூற்று 299 ஆம் பாடலைச் சங்கப் புலமைகொண்ட பேரா.இராசம், CTamil குழுவிற் கொடுத்து, அதன் முகன இடைப்பரட்டு (modern interpretation) தன்னை நெடுங்காலங் குழப்பித் துணுக்குற வைப்பதாகவும், பழந்தமிழ்ப் பாக்களைப் பழகியோர் குமுக-மாந்தவியல் அனுமானங்களை விட்டு மொழியியல்நோக்கில் விளக்குமாறும் வேண்டினார். பின் தன்னுடைய http://mytamil-rasikai.blogspot.com/2013/12/new-perspective-on-purananuru-299.html என்ற வலைப்பதிவு இடுகையின் மூலம் கலம்தொடா மகளிரை, மாதவிலக்குற்ற மகளிரென்று பொருள் கூறும் மரபு உரையாசிரியரையும், முகன இடைப்பரட்டரையும் (modern interpreters) மறுத்துப் புதுச்சிந்தனையை எடுத்துரைத்தார். 

[CTamil குழுவென்பது சங்கத்தமிழ் ஆய்விற்காக ஆங்கிலமொழியில் நடத்தப்படும் பன்னாட்டு மடற்குழுவாகும். இதில் உலகெங்கும் இந்தியவியற் சார்புள்ள (அதேபொழுது தமிழாய்வில் விழைவுள்ள) வெளி நாட்டறிஞரே பெரிதும் எழுதுகிறார். மிக அரிதாய்த் தமிழக, ஈழப் பங்களிப்பு அதிலிருக்கிறது. சந்தடிசாக்கில் தமிழாய்வைவிடத் தற்பேணும் நிகழ்ப்பையே (agenda) குறிக்கோளாக்கி ஓரிரு தமிழ்க்கேடரும் அங்கெழுதுகிறார். அதனாற் பலபோதுகளிற் கருத்தாடல் கோடிச் சமன்முடிவு எட்டாதுபோகிறது. இதை மாற்றும்வகையில் தமிழக, ஈழத் தமிழறிஞர் கணிசமாய் அங்கு சேர்ந்துரையாடி நிலை இடித்துரைத்துக் குறைபோக்கவேண்டும். ’தமிழ், தமிழெ’ன மேடைதோறும் முழங்கும் தமிழறிஞர் எத்தனைகாலம் தமிழரிடை மட்டும் உணர்வோடு இயங்குவரோ, தெரியவில்லை. பன்னாட்டு ஆய்வுக்களங்களில் அறிஞர்நடுவே அறிவியல்வழி இயங்குந் தேவையிருக்கிறதே? “மாடு வந்தது, கட்டினாற் கட்டு, கட்டாவிடிற் போ”வெனும் விட்டேற்றிப் போக்கு ”தமிழ்வளர்ச்சிக்கு நல்லதா?”வென ஓர்ந்து பார்க்கவும் வேண்டும் ]. 

இக்கட்டுரை தமிழிலிருப்பது ஆங்கிலத்திலெழுதும் தமிழாய்வோருக்கு வேகத்தடையாகலாம். ”ஆய்வுக் கட்டுரையா? - ஆங்கிலமே அதற்குமொழி”யென ஒத்துப்பாடுவதில் ஒருப்படாதவன் நான். ஆங்கிலத்திற் தமிழாய்வெழுதுவோர் சற்று முயன்றால் கட்டுரையைப் படித்துத் தமிழிலும் எழுதி வளப்படுத்த முடியும். ஆழ முயன்றால் தமிழும் அறிவியல் மொழி தான். பொதுவாக மொழியெழுச்சி, வரலாறு, சொல்லாக்கம், சொல்லாய்வு, தமிழ்க்கணிமை, இலக்கியம், குமுக-மாந்தவியல், மெய்யியலாய்வென வெவ்வேறு கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதுவதைக் காட்டிலும், தமிழில் விரிவாயெழுதவே விழைகிறேன். என் வளவு வலைப்பதிவும் தமிழிற்றான் இருக்கிறது. கலந்தொடா மகளிர் பற்றிய இராசம் அம்மா சிந்தனையிலிருந்து சற்று வேறுபடும் என்கருத்தை இங்கு பதிகிறேன். சங்ககாலப் பின்புலமான இனக்குழுப் பார்வை (tribal point of view) பற்றியும், அணங்காடல் மிடைந்த இனக்குழுச் சமயப் பழக்கங்கள் பற்றியும் எங்காவது சொல்லத்தானே வேண்டும்? அதனால் மொழியியல்-இலக்கிய ஆய்வோடு சிறிது குமுக-மாந்தவியற் கருத்துக்களும் இப்பதிவினுள் வந்துவிட்டன. 

திரு.அரவிந்த் சுவாமிநாதன் என்பார் முகநூலில் (https://www.facebook.com/arvindswam) இரு ஓலைப்படிகளைக் கொடுத்துக் கலந்தொடா மகளிர் பற்றிய தன் தனிக்கருத்தையும், இராசம் அம்மாவோடு தான் உடன்படுவதையும் உரைத்தார். பாட்டின் பாட வேறுபாடுகளைப் பார்க்க இத்தகை ஓலைப்படிகள் பெரிதுமுதவும். ஆய்வாளர் பலரும் இதுபோன்ற ஓலைப்படிகளைப் பாராது உ.வே.சாமிநாதர், சீ.வை.தாமோதரர், சௌரிப்பெருமாள் அரங்கர் போன்ற எடுவிப்பாளரின் (editors) அச்சுப்பதிப்பையே மூலமாய்க் கொள்கிறார். அது முழு ஆய்விற் கொண்டு சேர்க்காது. சுவடிக் காப்பில்லாது, கரையானிலும் காலச் சிதைவிலும் மூலச்சுவடிகள் இன்றழியும் நிலையில், இப் படிகளை (வைத்திருக்கும் முகனை நூலகங்கள்) அவற்றை மாகப்படுத்தி (magnify) jpg படங்களாக இணையத்திற் பதிவது பெரிதும் பயன்தரும். இதற்கான செலவைத் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நூலகங்களுக்கு நிதியாக நல்கலாம். சங்க இலக்கியச் சுவடிகளின் இற்றை அவலநிலையை தமிழக அரசும், தமிழறிஞர் பலரும், உணராதது கவலை தருகிறது.

பாடலின் முதல் 5 வரிகளில் ஈரிடங்கள் தவிர்த்து மற்றவற்றிற்கு முரணின்றி உரையாளர் வழிப் பொருள் சொல்வது அப்படியொன்றுங் கடினமில்லை. ஈரிடங்களில் முதலானது பருத்திவேலி பற்றியது. பருத்தியை வேலியாய் நான் எங்குமே கண்டதில்லை; ஒருவேளை அது பருத்த வேலியோ? அகரம் இகரமாகி ஏட்டுப்பிழையானதோ? சீறூருக்குப் ”பருத்த” முரண்தொடையோ? - என்ற ஐயங்களுண்டு. (முன்னாற் கூறிய ஓலைப்படிகளின் வழி) பாட வேறுபாடுகள் பார்க்கவேண்டும். இன்னோரிடம் ஓய்நடைப் புரவி பற்றியது. இதற்கு உரைகூறும் தளர்ச்சிப் பொருள் பொருந்த வில்லையோ? - எனத் தோற்றுகிறது. ’ஓய்’க்குச் சங்க இலக்கியத்தில் நற்.43-3, 290-3, பதி.60-7, பரி.9-27, கலி.7-1, குறுந்.383-4, அக.91-6, 111-8, புற.299-2 என்ற தொடுப்புக்கள் உண்டு. நற்.43-3 யையும், புற.299-2 யையும் தவிர்த்து வேறிடங்களிற் தளரற் பொருள் சரியாகலாம். ஆனால் நற்.43-3யில் வரும் ”ஓய்பசிச் செந்நாய்”க்கு ”ஓய்ந்த பசிகொண்ட செந்நாய்” என்பதை விட, ”விரட்டி ஓய்க்கும் பசி கொண்ட செந்நாய்” என்பதே சரியாயமையும். அதேபோல புறம். 299-இன் “ஓய்நடைப் புரவிக்கும்” விரட்டி நடக்கும் பொருள்தான் சரியாகும்.  

ஒரு மாட்டை, மாட்டுவண்டியை, மாட்டுமந்தையை, விலங்குச்செறிவை விரட்டிப் போகும்போது, "ஊய்"என்ற வீளைக்கூச்சல் எழுப்புகிறோமே? அங்கு முன்னிலைச் சுட்டொலியே முதலிடம் பெறுகிறது. அச்செயலால், ஊய்த்தலெனும் பிறவினைக்குச் ’செலுத்தல், விரட்டல்’ என்ற பொருட்பாடுகள் எழுகின்றன. ஊய்த்து விரட்டி, முடிவில் மெய்தளர்ந்தும் போகிறோம். விரட்டல் வினையைத் தொடர்ந்து தளரற் பொருள் இயல்பாயெழும். (excessive effort leads to severe energy expenditure and then exhaution.) ஒரு செயலைத் தொடர்ந்து ஊய்த்த காரணத்தால் ஓய்ந்து, தளர்ந்து, ஓய்வென்றாகும். ஒருவர் வாழ்வில் ஓய்ந்துபோனால், "அவருக்கு ஓய்ஞ்சுபோச்சு; ஆளு கதை அவ்வளவுதான்" என்கிறோம். கீழேயுள்ள சொற்றொகுதிகளைப் படியுங்கள்.

உய்த்தல் = முன் தள்ளல், செலுத்துதல்
ஊய்த்தல்>உகைத்தல்>அகைத்தல் = செலுத்துதல், நடத்துதல், விரட்டுதல்
உய்தல்>ஒய்தல் = செலுத்தல்
ஒய்த்தல்>*ஓய்த்தல்>ஓய்ச்சல்>ஆய்ச்சல் = வேகம், விரட்டிச் செல்லுதல்
ஒய்>ஒய்யென = விரைவாக (சிவகங்கைப் பக்கம் பேச்சு வழக்கில் “மாட்டை ஓய்த்து/ஓய்ச்சு விடுறா” - என்று மாட்டை விரட்டி ஓட்டுவதைச் சொல்லுவோம்.) 
ஓய்தல் = தளர்தல், முடிதல், முற்றுந் தேய்தல், முன்னிலை சுருங்கல், இளைப்பாறுதல், அழிதல்
ஓய்தல்>ஆய்தல்>அயர்தல்= தளர்தல்
ஆயம் = வருத்தம்
ஆயாதம்>ஆயாசம் = களைப்பு

மேலுள்ள சொற்றொகுதியைப் பார்த்தால், ஓய்நடைக்குத் தளர்நடையை விட, விரட்டு நடையை முதற்பொருளாய்ச் சொல்வது சரியாகும் எனப்புரியும். (மொழிவளர்ச்சி அப்படித்தானாகிறது. சொற் பயன்பாட்டிற் பொருள் முரண் எழுவது நடக்கக்கூடியதே. நல்மணத்திற் தொடங்கிய நாற்றம் கெடுமணத்தில் முடிந்ததே? We may end up in a contradictory meaning as usage develops over the years.) [உய்தல் பற்றி மேலுமறிய ’உறவுகள்’ என்ற என் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். http://valavu.blogspot.in/2005/04/blog-post_18.html]

ஆனாற் புறம்.299 இல், “அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே” என்ற கடையிரு வரிகளுக்கு, உரையாசிரியர் பலருங் கொடுக்கும் பொருள் உறுதியாய்ச் சிக்கலாகிறது. காட்டாக ஔவை.சு.துரைசாமியாரின் உரையைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

“வருத்துதலையுடைய முருகன் கோயிலில் புழங்குங் கலங்களைத் தொடுதற்கில்லாமல் விலக்குடையராகிய மகளிரைப் போல, போர்க்கஞ்சிப் பின்னிட்டு நின்றொழிந்தன” என்று ஔவை சு துரைசாமியார் சொல்வார். ”முருகன் மகளிரை வருத்துவனென்ற கொள்கையால், ‘அணங்குடை முருகனெ’ன்றார். பூப்புக்காலம் கூட்டத்துக்காகாது என்பதுபற்றி, பூப்புற்ற மகளிர் மனைகளிற் கலந்தொடாது விலகியிருந்து தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழர் மரபு. பூப்புத்தோன்று மகளிர்க்கு அதன்வரவு முன்கூட்டி அறிய வாராமையின், அதன்வரவைத் தாம் விலகிநின்று நாணிக் காட்டும் இயல்பு பற்றி, “கலந்தொடா மளிரின் இகழ்ந்துநின்றவ்வே”யென்றார். ....... பூப்புத் தோன்றக் கண்ட மகளிர், அணங்குடை முருகன் கோட்டத்தை அணுகற்கஞ்சி நீங்குவது போலக் குதிரைகளும் படை கண்டு அஞ்சிப் பின்னிட்டுப் பெயர்ந்தன என்றாவாறாயிற்று” என்பது ஔவை.சு.து.வின் அதிக விளக்கமாகும். 

மற்ற உரைகளும் இதேபோக்கிற் செல்கின்றன. பேரா.ஃஆர்ட்டின் ஆங்கிலப்பெயர்ப்பும் இதே வழியிலிருக்கிறது. ’கலந்தொடா மகளிரை’ இணையமெங்கும் இடைப்பரட்டும் நா.கணேசன் கூற்றும் இப்படியே இழைகிறது. பொன்முடியார் வரிகளுக்கிடை பிளந்து, ’மாதவிலக்கு, தீட்டு’ எனத் தற்குறிப்பேற்றம் சொல்வது முறையா? (இது எந்த அளவிற்கெனில், புறம்299-க்கு மாத விலக்குப் பாட்டென்றே நா.கணேசன் தலைப்புக் கொடுக்கிறார்.) ”வெள்ளைக் காகம் தெள்ளு வானத்திற் துள்ளிப் பறக்கிறது,” என்றொருவர் அரற்றினாற் சிரிக்காதென்ன செய்வது? [மாத விலக்கு என்பது அடிப்படையிற் சுமையேறிய ஆணாதிக்கச் சொல். ஆண், பெண் இருவரிடை சமநிலை பேசும் இக்காலத்தில் இன்னுஞ் சமனான, சுமையிலாத, மாதக்கிடப்பு (monthly lie-down) என்ற சொல்லைப் பயன்படுத்தல் நல்லது. “குருதி வெளியேறி மெய்சோர்ந்து பெண் கிடக்கும் நிலையை ’வெளியே கிடக்கிறாள்’ என்றே எங்கள் பக்கம் பேச்சுவழக்கிற் சொல்வர். 

வெளியே நிற்கிறாள் என விவரித்து ஒரு சொல்லும் கேட்டதில்லை. கலந்தொடா மகளிரின் இகழ்ந்து ’நின்றவ்வே’ - என நிற்றலை அழுத்தி ஒரு மரபார்ந்த புலவர் எப்படிச் சொல்வார்?]இந்தப் பாவிற் கலந்தொடா மகளிர், தண்ணடை மன்னர் தாருடைப் புரவிக்கு உவமையாகிறார். அப்படியாயின்,

 1. சீறூர் மன்னனின் (உழுந்துச்சக்கை உண்டு விரட்டி நடக்கும்) ஓய்நடைப் புரவி யாரைக் குறிக்கிறது? ஆண்களையா, அன்றி வேறொருவகைப் பெண்களையா? 
2. கலந்தொடுதல் எது? (கலத்திற்குச் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலி 7 வகைப் பொருட்பாடுகளைத் தரும்.)  
3. அது கொள்கலனா? அணிகலனா? கருவியா? அல்லது இவையெல்லாங் குறிக்கும் பொதுமைச் சொல்லா? [பல மேலையாய்வாளரும், அவரைப் பின்பற்றுவாரும், கொள்கலனாகவே (vessels) கொள்கிறார். பேரா. இராசமும் கொள்கலனென்றே கொள்கிறார். அதேபொழுது கல்லுதலுக்குத் தோண்டல் மட்டுமே பொருளல்ல.] 
4. கலந்தொடும் மகளிர், கலந்தொடா மகளிர் என இருவகையுண்டா? 
5. காலங் காலமாய் உரையாளர் காட்டும் ’மாதவிலக்குப் பார்வை’ சரிதானா? அன்றி வலிந்து திணிக்கும் ஓரப் பார்வையா? 
6. இகழ்ந்து நின்றவ்வே - என்பதற்குப் பொருளென்ன? (இகழ்தலுக்குப் பின்வாங்குதல் என்றே எல்லா உரையாளரும் பொருள்கொள்கிறார். இது இன்றில்லாப் பொருளாகும். பாடவேறுபாடு கூறி, ”இகழ்ந்து” என்பது ”இகந்து” ஆகுமோ? - என அரவிந்த் சுவாமிநாதன் சொல்வார். இகத்தலுக்குத் தாண்டுதல், கடத்தல், போதல், நீங்குதல், நடத்தல், புறப்படுதல், விட்டுவிடுதல், பிரிதல், பொறுத்தல் போன்ற பொருட்பாடுகளுண்டு.)  

இப்படிக் கேள்விகளெழுகின்றன. மாதக்கிடப்பென்பது பெண்ணின் சினைமுட்டைச் சுழற்சியை ஒட்டியது. பருவப் பெண்ணொருத்தி தன் மெய்வேதியல் (body chemistry) பொறுத்துத் திங்கள் தோறும் வெளிக்கிடக்கிறாள். நாளை கிடப்பென்பதில் தனிமாந்தருக்கு நுட்பியற்தெளிவு கிடையாது. ஆனாற் குற்றுமதிப்பாக வெளிக்கிடப்பு எப்போதென ஒவ்வொரு பெண்ணுக்குந் தெரியும், அல்லது கிடந்தபிறகு, மறுவினை செய்யமுடியும். ”கலந்தொடாப்” பெயரடை மகளிருக்கு வருவதால், கோட்டத்துள் நுழையுமுன் மாதக்கிடப்பு ஏற்பட்டுவிட்டது என்றல்லவா பொருளாகும்? மாதக்கிடப்பு ஏற்பட்டபின் கோட்டத்துள் நுழையுந் தேவை மகளிருக்கேன் வருகிறது? குமுகமரபை மீறிக் கோட்டத்துள் மகளிர் வாராரே? கோட்டம் போர்க்களத்திற்கு உவமையெனில், போர்க்களம் வாராப் புரவி பின்னொதுங்கி இகழ்ந்து நின்றால் என்ன? இகழாது நின்றாலென்ன?. 

இன்னொரு வகையிற் ’கோட்டத்து இகழ்ந்து நின்றவ்வே’ படித்தால், மாதக்கிடப்பு ஏற்படாமற்றான் கோட்டத்துள் நுழைய முற்படுகிறாரோ? - என்று தோன்றுகிறது. அப்படி நுழையும்போது கலந்தொட்டிருப்பாரே? மாதக்கிடப்பிற் கலந்தொடுவதும் கோட்டத்துள் நுழையமுற்படுவதும் முரண்செயல்களாயிற்றே? ஒன்று நடப்பின் இன்னொன்று நடவாதே? கோட்டத்துக் கலந்தொடா- எனுஞ் சொற்புணர்ச்சியை ஆழ்ந்து நோக்கின், இருசெயல்களும் ஒரே நேரத்தில் நடப்பதாய் ஆகின்றனவே? இது எப்படிச் சாலும்? Can two contradictory actions occur simultaneously? 

தவிர, நண்பர் ஹரிக்கிருஷ்ணன் ஒரு தனிமடற் சுற்றில் மகளிரெனும் பன்மைக் குறிப்பைச் சுட்டி, ”ஒரே நேரத்தில் பலர் வெளிக்கிடப்பது அரிதினும் அரிது, பொருந்தா இயலுமையைப் புலவர் குறிப்பரோ?” என்றுஞ் சொன்னார். பேரா. இராசம், ”வெளியே கிடக்கும் மகளிர் குருதிப் போக்கோடு நின்று கொண்டிருக்க மாட்டார்” என்றார்.  

பாட்டின் அடிகளை சொற்புணர்ச்சி ஒழுங்கோடும் தருக்கத்தோடும் பொருத்தினால், மாதவிலக்குப் பார்வையைத் தவிர்ப்பதே இங்கு சரியாகும். உரையிற் சொல்லும் மாதவிலக்குச் செய்தி, விடாது கருப்பாய் (obsession ஆக) நம்மைப் போட்டுக்குழப்புகிறது. மூலவரைக் காட்டிலும் உரையாசிரியர் உய்க்கும் பெருமாளாய்த் தெரிகிறார் போலும். அடுத்த கேள்விக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, October 20, 2013

வடமொழி என்பது சங்கதமா?

தொல்காப்பியத்தில் “வடமொழி” என்ற சொல்லுக்கு சங்கதம் (சமஸ்கிருதம்) என்று நிறைய உரையாசிரியர் உரையெழுதிச் சென்றிருக்கிறார். ஆனாலும் சில அறிஞர் (குறிப்பாகக் கார்த்திகேசு சிவத்தம்பி, தெ.பொ.மீ) அது பிராகிருதம் என்றே பொருள் கொள்கின்றனர். 

http://tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051452.htm என்ற வலைத்தளத்தில் 5.2.1. என்னும் பத்தியில்,

”தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியாகும். தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழியைப் பற்றிப் பொதுவாக வடசொல் எனக் குறிப்பிடுகிறார். அதனால் இச்சொல் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளையும் குறிப்பதாயிருக்க வேண்டும் என்று தெ.பொ.மீ.  குறிப்பிடுகிறார்”  இதை வைத்துத் ”தமிழ்மன்றம்” மடற்குழுவிற் திரு. பானுகுமார் இராசேந்திரன் கீழே வருவதை ஒருமுறை கேட்டிருந்தார்.
-----------------------------------

1. உண்மையில் “வடமொழி” என்பது சங்கதம் மட்டும்தானா? அல்லது பாகதம் என்பதையும் சேர்த்தேப் பொருள் கொள்ள வேண்டுமா?

2. ஆம், அப்படி சேர்த்தே பொருள் கொள்ள வேண்டுமென்றால், "கிடைத்த கல்வெட்டுகளின்படி தமிழுக்கும், பாகத்திற்கும் மட்டுமே முற்காலக் (கி.மு) கல்வெட்டுக்கள் இருக்கின்றன! சங்கத கல்வெட்டோ, மிகவும் பிந்தியது! தொல்காப்பியம் எழுந்த காலம் கி.மு.என்று கொண்டால், அக்காலத்தில் சங்கதத்தில் எழுந்தக்  கல்வெட்டுக்களே இல்லை. அதிகாரப்பூர்வ சங்கதக் கல்வெட்டின் காலம் என்று கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார். சிலர் கி.மு. 150 என்றும் சொல்லுவார்.  எழுத்து இல்லாத மொழிக்கு இலக்கணம் படைக்க முடியுமா?" 

குழும அன்பரின் கருத்தையறிய அவா.
---------------------------------------

தமிழர் பலருக்கும் கூட இக்கேள்வி எழக் கூடும் என்பதால், என் மறுமொழியை 3 மடற்குழுக்களிலும், என் வலைப்பதிவிலும் சேர்த்தே இடுகிறேன். நண்பர் பானுகுமார் பொறுத்துக் கொள்வாராகுக.
 
மொழிவளர்ச்சி என்பது சிக்கிலாத நூற்கண்டில் இருந்து நூலை நீள வலிப்பது போல், எண்ணுதியாய் (quantitative) நிகழ்வதில்லை. கால மாற்றத்தில் மொழி பேசுவோர் எண்ணிக்கை கூடக்கூட எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதாய் மொழி வேறுபாடு கூடுகிறது. ஓரிடத்துப் பேச்சு அங்கு மட்டுமே விதப்பாகி (specialized), இன்னோரிடத்திற் புரிந்தோ, புரியாமலோ போகலாம். ஒருசொல் -  பல்பொருள் தன்மையும், பல்சொல் - ஒருபொருள் தன்மையும் மொழியில் மிகுத்து ஏற்படலாம். இதுவரையிலாத விதப்பான, பொருட்பாடுகள் கூட ஏற்படலாம். (நாற்றத்தின் பொருள் இன்று மாற வில்லையா?) 

மொழித்தொனி கூட, இடத்திற்கிடம் மாறலாம். (தமிழீழம், தென்பாண்டி, வட தமிழகத் தொனிகள் வெவ்வேறானவை. இத்தகை மொழிகளைக் கேட்ட ஓரிரு நுணுத்தங்களிற் (minutes) பேசுவோர் ஊற்று யாருக்கும் புரிந்து விடும்.) இப்படி வேறுபடுவதைத் தான் ”இயல்மொழிக் கிளைப்பு, முரணியக்க மொழிவளர்ச்சி (dialectic language development)” என்று சொல்கிறோம்.

வடவேங்கடம் தென்குமரிக்கு இடையில், ஒரே மாதிரி புரிய வேண்டிய மொழி ஏதோ ஒரு காரணங் கருதிப் பிரிய, ”நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், வடார்க்காட்டுத் தமிழ் (சென்னைத் தமிழ், வடார்க்காட்டுத் தமிழின் இன்னொரு வகை), யாழ்ப்பாணத் தமிழ்” என வட்டார அடிப்படையிற் கிளைகளுக்குப் பெயரிடத் தொடங்குகிறோம். கிளைமொழிகள் ஏற்படுவது, அடிப்படையில் ஓர் இயல்பு வளர்ச்சியே. 

பின்னால் வட்டாரங்களுக்கிடையுள்ள போக்குவரத்துக் குறைவால், கால இடைவெளியால், நுட்பியல் பரிமாற்றங்கள் வளராததால், வெவ்வேறு பொருளியல் வணிக ஆட்சித் தாக்கங்களால், வேண்டி விழையும் அரசியல் குமுக நடைமுறைகளால், இக் கிளைமொழிகள் தனி மொழிகளாய் மாறத் தலைப்படுகின்றன.

2000/3000 ஆண்டு கால வரலாற்றிற் தமிழுக்கும் அப்படி நடந்துள்ளது. வேங்கடத்திற்கு அப்பால் இருந்த அருவத் தமிழும், மங்களூரை அண்ணிய கொங்கணத் தமிழும், வட கொங்கின் கங்கர் தமிழும், குடநாட்டுச் சேரலத் தமிழும் முறையே தெலுங்கு, துளு, கன்னடம், மலையாளம் என வெவ்வேறு கால கட்டங்களிற் திரிந்து, எழுத்தும், சொல்லும், பொருளும் வேறுபட்டு பங்காளி மொழிகளாயின. இவை நம் குடும்ப மொழிகளே, ஆனாற் பங்காளிகள். மொழித் தொடர்ச்சி, விதப்பு, நுணுக்கம் போன்றவற்றில் நமக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே உரிமை இவருக்குமுண்டு.

இவ்விடங்களிற் புழங்கிய தமிழ், வேறு மொழிகளாய் மாறியதை இன்னோர் ஆய்வர் வலிந்து மறுத்து, முந்து திராவிடம் (proto Dravidian) என்றோ, தொடக்கத் திராவிடம் (early Dravidian) என்றோ மாற்றுப்பெயரிற் குறிக்கலாம். நான் அப்படிச் செய்யேன். நெருப்பை அழல் என்பதால் வாய் என்பது வெந்துவிடாது.  அதைச் சங்கதப்படுத்தி அழனி>அக்னி (இருக்கு வேதத்திற் புழங்குகிறது.) என நாம் சொல்லவேண்டியதில்லை. முந்து/தொடக்கத் திராவிடம் என்பது கிட்டத்தட்ட 95/98 % தமிழ் தான். 

திராவிடம் என்பதைத் தயங்காமற் தமிழியம் என்பவன் நான். கல்விச்சாலை அரசியலை (academic politics) நீக்குப்போக்கோடு காப்பாற்ற ’முந்து திராவிடம்’ எனச் சிலர் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன்.

கி.மு.200 களிற் தொடங்கிய, இன்றை மராட்டிய ஔரங்காபாதிற்கு அருகில் கோதாவரி யாற்றங்கரையிலிருந்த படித்தானத்திலிருந்து ஆண்ட நூற்றுவர் கன்னர் அரசில் நாணயம் தமிழ், பாகதம் என்ற 2 மொழிகளிலும் அச்சடிக்கப் பட்டிருந்தது. அதுவொன்றே தமிழின் ஆட்சியெல்லை 2200 ஆண்டுகளுக்கு முன் விந்தியம் வரை இருந்ததை விளக்கும். 

விந்திய மலையையே விண்டு மலை என்று வெங்காலூர் குணா விளக்கம் சொல்வார். சுவையாரமான அதேபொழுது சரியான விளக்கம். இன்னொரு நாள் தைச் சொல்கிறேன். (தமிழின் ஆட்சியெல்லை மூவேந்தர் ஆட்சி எல்லையை விடப் பெரியது. இன்றுங் கூடத் தமிழின் ஆட்சியெல்லை, தமிழ்நாட்டைவிடப் பெரியது தான்.) 

தவிரச் சங்க இலக்கியத்தில், குறிப்பாக மாமூலனார் பாடலில் வரும் ’மொழிபெயர் தேயம்’ என்ற தொடர் மூலம், தமிழும், இன்னொரு மொழியும் - அது பாகதம் என நாணயவியல், கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். - நூற்றுவர் கன்னர் ஆட்சியில் ஒரே நேரத்தில் 2 மொழிகள் ஆட்சி மொழிகளாய்த் துலங்கியது விளங்குகிறது. அப்புறம் என்ன ’முந்து திராவிடம்’ ? யாரை ஏமாற்ற? கொஞ்சமும் தடுமாற்றமின்றி, அதைப் ’பழந்தமிழ்’ எனலாமே?

இந்திய வரலாற்றில் வடபுல/தென்புல நாகரிக, பண்பாட்டு ஊடாட்டங்களை அறிய வேண்டுமெனில் நூற்றுவர்கன்னர் ஆட்சியைப் பல கோணங்களில் ஆய வேண்டும். தாய்வழி உறவு கொண்ட அவர் (கி.மு.230 - கி.பி.220), பாகதத்தைக் கொண்டாடியுள்ளார். [நம் அகநானூறு போலவே அங்கும் ’அகம் எழுநூறு’ என்ற தொகுப்புநூல் எழுந்தது. அகம் என்பது கஹ என்றும், எழுநூறு  என்பது ‘சத்தசை’ என்றும் பாகதத்திற் கூறப்படும்.) 

 தமிழரிடையே பரவிய பெருங்கதை கன்னரின் அரசவையிற்றான் எழுந்தது. (பெருங்கதை உச்செயினியை ஒட்டிய உதயணன் கதையை விவரிக்கிறது.) கன்னர் கல்வெட்டுகளைப் பார்த்தால் வேதநெறியைப் போற்றிய அதே நேரத்தில் வேதமறுப்பு நெறிகளையும் அவர் புரந்தது புலப்படும். தமிழரைப் போலவே சமயப்பொறை அங்கும் மிகுந்திருக்கிறது. 

வடக்கே மகதம் போகும் வணிகச் சாத்துகள் படித்தானம் (இற்றை அவுரங்காபாதிற்கு அருகிலுள்ள பைத்தான்) வழியாகவே சென்றுள்ளன. தவிர, அவ்வரசின் மேற்குத் துறைமுகங்கள் மேலை நாட்டு வணிகத்திற்குக் கால்கோலியுள்ளன.  நம்மோடு இன்னும் பல ஒற்றுமைகள் தென்படுகின்றன.

நூற்றுவர் கன்னர் ஆட்சியில் தென்கிழக்கு திசையிற் பாகதமும், அருவத் தமிழும் ஊடாடிப்பிறந்த மொழியே தெலுங்காகும். நம் பழந்தமிழருக்கு அது வடுகு. பாகதர்க்கு அது தெலுகு/ தெனுகு; [தெல்திசையைத் தெற்கு, தென் திசை என்கிறோமல்லவா? இதைத் தக்கணமென்றுஞ் சொல்வதுமுண்டு. தெலுங்கெனுஞ் சொல்லைத் ’திரிகலிங்கின்’ திரிவாகக் கொள்வது ஆதாரம் இல்லாத கூற்று.] இந்த வடுகு/தெலுகுப் பெயர் விளையாட்டே நமக்கு ஒரு மொழியுண்மையைத் தெரிவிக்கிறது.

நூற்றுவர் கன்னர் தொடர்பாலும், பின்னர் வந்த சளுக்கியர் தொடர்பாலும், கன்னடமும் ஒரு காலத்தில் ’வடுகெ’னப்பட்டது. படகர் என்பார் தமிழ்ப் பலுக்கின் படி வடகரே. சிலம்பிற் பயிலும் “கொடுங்கருநாடர்” என்ற சொல்லே ”கொடுகித் திரிந்த மொழிபேசும் கருநாடர்” என்பதைத் தான் குறிக்கிறது. [”எதிலிருந்து கொடுகியது?” என்ற கேள்வியைச் சேர்த்துக் கேட்டுப் பாருங்கள்; பழங்கன்னடத் தொடக்கம் தமிழில் ஏற்பட்டதென்பது புரியும். சிலம்பின் காலத்தில் தமிழ் அங்கு கொடுகித் திரியத் தொடங்கிவிட்டது. ஆனால் அது வட்டார மொழி நிலை. (சிலம்பைப் படிக்காதவர் கன்னடத்திற்குச் செம்மொழி விருது கொடுக்க முனைந்தார்.)  கேள்வி கேட்கத் தாம் நம்மிற் பலருந் தயங்குகிறோம்.]

வேங்கடம் என்பது சங்ககால முடிவுக் காலத்தில் ஒரு மலை மட்டுமல்ல. இன்று இராயல சீமை எனப்படும் வெம்மைநிலப் பகுதியையும் சேர்த்தே குறித்தது. வெய்யில் கொளுத்தும் வேம்+கடமும் வேங்கடமானது; (சங்க காலத் தொடக்கத்தில் வேங்கடம் என்பது விண்டு>விண்டிய>விந்திய மலை. அதை வேறு கட்டுரையில் சொல்வேன்). சங்ககால இறுதியில் வேங்கடந் தாண்டுவது இராயல சீமையைத் தாண்டுவது என்றே பொருள்படும். 

அக்காலத்தில் கடற் பக்க ஆந்திரப் பகுதி பெருங்காடாய் இருந்தது. (அக் காட்டின் ஊடே சாலை அமைத்து வடக்கே போனது பிற்காலப் பேரரசுச் சோழர் காலத்தில் ஏற்பட்டதாகும்.) சங்க காலத்தில் வடக்கே போகும் சாத்துக்கள் எல்லாம் இராயல சீமையின் பாலைப் பகுதி கடந்து கர்நாடக வழி படித்தானம் (>பைத்தான்) போய், தக்கணப்பாதை வழியாக மகதம் போயின. சங்க இலக்கியத்தில் நூற்றிற்குப் பாதிப் பாட்டுக்கள் பாலைப் பாட்டுக்கள் தானே? 

(தக்கண, உத்தரப் பாதைகளைப் புரிந்துகொள்ளாது இந்தியாவின் தொன்மை வரலாறு புரியாது. தமிழாய்வும் விளங்காது. நம்மூர்த் தமிழறிஞர் இதை என்று உணர்வாரோ தெரியாது.) அன்று பாலையைத் தாண்டி மகதம் போகாது, அன்றேற் கடல்வழி மேற்கு நாடுகளுடனும், தென்கிழக்கு நாடுகளுடனும் வணிகஞ் செய்யாது, தமிழர்  பொருள் சம்பாதிப்பது எப்படி?

விந்தியத்திற்குத் தெற்கிருந்த தமிழ்மொழி எப்படிப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்ததோ, அதுபோலப் பாகதமும் பல மொழிகளாய்த் திரிந்தது. (கத்துவது, ஒலிப்பது கதம். ”என்ன கதைக்குறே?” என்று ஈழத்தில் கேட்பார் இல்லையா? கதைத்தல் = பேசுதல்; பா கதம் = பரவலான பேச்சு. இதைப் பெருகதம் - prakrit - என்றுஞ் சொல்லலாம். 

தமிழ் என்று இன்று தனித்துச் சொல்லுவதில் எத்தனை அருகதை இருக்கிறதோ, அதே போலப் பாகதம் என்பது தனித்தே நிற்கக் கூடிய ஒரு மொழி. அதை மறைத்துச் சங்கதத்திலிருந்து பாகதம் பிறந்ததென்பது பெயரனிலிருந்து தாத்தன் பிறந்தான் என்று சொல்லுவதை ஒக்கும். செந்தமிழிலிருந்து தமிழ் வந்தது என்று சொல்லுவது எவ்வளவு தவறோ அதே தவறு செங்கதத்திலிருந்து பாகதம் வந்தது என்பதாகும்.)

1. பாஷை, (பேச்சென்பதே பாஷையானது. இக்காலத்தில் பேச்சு வேறு, பாஷை வேறென்று சிலர் புரிந்துகொள்கிறார். இரண்டும் வெவ்வேறு பலுக்கல்கள்; அவ்வளவு தான். பாஷை என்பது கி.மு.1500 - 1200 களைச் சேர்ந்த வேத மொழியை அடிப்படையாகக் கொண்டு, சுற்றியிருந்த வழக்கு மொழிகளின் பங்களிப்போடு, இற்றைக்கால இலாகூரைச் சுற்றி இந்தியாவிலும், பாகித்தானிலும் உள்ள இடத்தில் புழங்கிய பேச்சாகும். இதன் செய்யுள் மொழி சந்தஸ் என்று சொல்லப்பட்டது. பாணினி இந்த சந்தஸ்/பாஷா மொழிக்குத் தான் கி.மு.4 ஆம் நூற்றாண்டில் இலக்கணம் எழுதினார்.),

2. மகாராட்டி (இது படித்தானத்தை மையமாகக் கொண்டு கவித்துவம் நிறைந்ததாய்க் கையாளப்பட்ட மொழி, பாகத இலக்கியங்களில் கவிதை மொழியாக மகாராட்டியையே பெரிதும் பயன் படுத்தியிருக்கிறார்),

3. மாகதி (இற்றைத் தென் பீகாரில் 2000 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தை யொட்டி மகத அரசிற் பரவலாகப் பேசப்பட்ட கிளை மொழி, தமிழ், தமிழர் என்பது போல் மாகதி, மாகதர் என்றாகும். பிம்பிசாரன் தொடங்கி நந்தர், மோரியர், சுங்கர், கனகர் போன்றோர் பெரிதும் புரந்த மொழி. தொடக்க கால புத்தத்தின் பேச்சு மொழியும் இதுவே. புத்தத்தின் எழுத்து மொழியான பாலி இதிலிருந்தே பள்ளிகளின் செம்மொழியாகக் கிளைத்தது. இன்று வரை தேரவாதபுத்தம் பாலிமொழியையே இலக்கிய மொழியாய்ப் பயனுறுத்துகிறது. கி.பி.500 களில் எழுந்த மகாயான புத்தம் சங்கதங் கலந்த பாலியைப் பயன்படுத்தியது),

4. அர்த்த மாகதி (பாதி மாகதி என்று பொருள் கொண்டது. மகதத்தின் வடக்கே இருந்த வச்சிரத்தில் பெரிதும் புழங்கிய மொழி. இதையே மகாவீரர் பேசினார். தொடக்க கால செயினத்தின் பரவலான மொழி இதுவே. திகம்பர செயினம் இன்றும் பல்வேறு வகையில் அர்த்த மாகதியைக் காப்பாற்றி வருகிறது. அதே பொழுது சுவேதாம்பர செயினம் சங்கதம் கலந்த அர்த்த மாகதியை ஏற்றுக் கொண்டுவிட்டது.),

5. அங்க மொழி (இற்றை வங்கத்தின் முந்தையக் கட்டம்.)

6. மைதிலி (இன்றும் பீகாரில் இது பரவலான பேச்சு மொழி. மிதிலைப் பக்கது மொழி. பல எழுத்தாவணங்கள் இம்மொழியில் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இற்றை இந்தித் தாக்கத்தால் இந்த வெளிப்பாடு நடைபெறாதுள்ளது. இந்த ஆவணங்கள் வெளிவரவேண்டும்.),

7. சூரசேனி (வட மதுரையைச் சுற்றிவளர்ந்த பேச்சு மொழி. இற்றை இந்தி மொழி என்பது சூரசேனியின் அடியில் வளர்ந்த காரிபோலியின் திரிந்த வடிவமே. சூரசேனி> காரிபோலி> இந்தி.  இந்தி மொழி இந்திய அரசின் முற்றாளுமையில் இன்று பெரிதும் பரவிக்கொண்டுள்ளது. பாகதத்தின் பழைய கிளை மொழிகள் கொஞ்சங் கொஞ்சமாய் அழிந்துகொண்டுள்ளன.),

8. கூர்ச்சரி (இற்றை குசராத்தியின் முந்தை வடிவம்)

என்று ஆங்காங்கு வடபுலத்தில் திரிந்தது. (ஒரு காலத்தில் இவை கிளை மொழிகளைக் குறித்துப் பின் காலவோட்டத்திற் தனி மொழிகளாகின.)  இன்னும் பல்வேறு மொழிகள் (பஞ்சாபி, காசுமிரி, இராசத்தானி, ஹர்யான்வி போன்றவை) இவற்றிலிருந்து பிறந்துள்ளன.

பல்வேறு கிளை மொழிகளைக் கலந்து பாணினிக்கு அப்புறம் கி.மு.300 களில் வடமேற்கிருந்த பாஷாவை (சந்தஸ்) அடிப்படையாக்கிப் படிப்பாளிகள் ஒரு கலப்பு மொழியைப் (சம் கதத்தை = கலப்புப் பேச்சை) உருவாக்கினர். சங்கதத்திற்கு எழுத்துரு கொடுத்தது கி.பி.150 களிற்றான். பாகத எழுத்தை (பெருமி எழுத்தை brahmi script) அப்படியே எடுத்துக் கொண்டார். வெவ்வேறு அரசுகளில் வெவ்வேறு எழுத்து முறைகள் பயன்பட்டன. 

சங்கதம் என்ற பெயரைக் கூடப் பாணினி பகர மாட்டார். அவர் பாஷா, சந்தஸ் என்றே தான் பயிலும் மொழி பற்றிச் சொல்லியுள்ளார். பின்னால் குப்த அரசின் ஆட்சி மொழியாக மாறிச் சங்கதம், செங்கதம் என்றும் (செம்மையான பேச்சாகவும்) மாறியது. சங்கதம்> செங்கதம் தெற்கே வந்து பல்லவர் ஆட்சியில் பாகதத்தை வெளியேற்றி ஆட்சியில் அமர்ந்தது. சாதவாகனருக்குக் கீழ் அதிகாரிகளாயிருந்த பல்லவர் இராயல சீமையிலிருந்து வந்து புது அரசாட்சியை தெற்கே ஏற்படுத்தினர். தெற்கே பல்லவர் ஆட்சிக்குச் சற்று முன்னர் தமிழெழுத்திலிருந்து கிரந்தம் உருவாக்கி சங்கதம் எழுதினார்.

குப்த அரசு பெற்ற சிறப்பின் காரணமாய், அதன் அகண்ட வளர்ச்சியால்,  வெவ்வேறு வட்டாரங்களிலிருந்த இலக்கியங்கள் சங்கதத்திற்குப் பெயர்க்கப் பட்டன. பல மொழிபெயர்ப்பு நூல்கள் சங்கதத்திலுள்ளன. (பெயர் பெற்ற பஞ்சதந்திரமும் ஒரு மொழிபெயர்ப்பு நூலே. பெருங்கதை சங்கதத்தில் மொழிபெயர்க்கப் பட்டது.) 

இன்று எல்லாவற்றிற்கும் சங்கதமே ஊற்றென  உரைபரப்புகிறார். வெற்றிபெற்றோர் வரலாறெழுதுவது போல் அவற்றைக் கொள்ளவேண்டி யுள்ளது. குப்தர் அவையில் காளிதாசன் முதற்கொண்டு பல்வேறு புலவரும் இலக்கியம் படைத்தனர். சங்கதத்தின் உச்ச கட்டம் குப்தர் ஆட்சியிலேயே ஏற்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாய் மற்ற வட்டாரமொழிகளை விழுங்கத் தொடங்கி சங்கதம் எங்கும் பரவத் தொடங்கியது. வடமொழி என்ற சொல் குப்தர் காலத்திற் சங்கதத்தையே குறித்தது.

ஆனாற் சங்க காலத்திற் அது பெரும்பாலும் பாகதத்தையும், படித்தோர் வழி சிறுபான்மை பாஷா/சந்தஸையும் குறித்தது அது இடத்தை வைத்துப் பெயர் இட்ட பழக்கம். அக்காலத்திற் தென்மொழி என்பது தமிழ். ஏனெனில் மற்ற தெற்கத்தி மொழிகள் எல்லாம் கிளைமொழிகளாகவே இருந்தன. இன்று தென்மொழி என்று பொதுப்படத் தமிழைச் சொல்வது சரியாயிருக்குமா? 

வடபுலத்திருந்து வெகுதொலைவில் உள்ள நமக்கு ”வடக்கே இருந்த/இருக்கும் மொழி” எனும்போது இடத்தைவைத்து மொழிக்குப் பெயரிட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் வரலாற்றுப் பொருள் காலத்திற்கு ஏற்ப மாறுபட்டது. காலந்தவிர்த்து தனித்தாற்போல் இச்சொல்லிற்குப் பொருள்கூற முடியாது.

பல்லவர் தாக்கத்தின் பின் பாகதமென்ற புரிதல் தமிழகத்திற் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்துபோனது. பின்னால் ஏற்பட்ட கருத்து மாற்றத்தைச் சங்க காலத்திற்குக் கொண்டுபோய் வலிந்து பொருள் சொல்வது தவறு.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 01, 2013

'விமானம்’

"விமானம் என்றாலே மேலே பறப்பதுதானே?.... ஆகாயம் என்றால் மேல் வெளி.... அப்படியிருக்க விமானத்தை ஏன் ஆகாய விமானம் என்று சொல்ல வேண்டும்?" என்று அண்மையிற் சிங்கையைச் சேர்ந்த திரு. இளங்குமரன் தமிழுலகம் மடற்குழுவிற் கேட்டிருந்தார். ஆகாயவிமானத்தின் சொற்பிறப்பறியக் கோயில்கள், தேர்களின் கட்டுமானங்கள் பற்றிப் படிக்கவேண்டும். எனக்குத் தெரிந்ததை இங்கு உரைக்க முற்படுகிறேன். நம் மரபுகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

தமிழிற் ’காய்ந்து கரிந்தது காயமாகும்’; அகல் காயம், ஒலிப்பு நீண்டு, அகன்ற இருள்வெளி உணர்த்தி, ஆகாயமாகும். விமானமென்பது தமிழ், சங்கதம் என்ற இரு மொழிகளின் கலப்புச் சொல்லாகும். ஆகாய விமானமெனுங் கூட்டுச் சொல்லில், சிலவிடத்து ’ஆகாயத்தைத்’ தொகுத்து, ’விமானமே’ தனித்து நின்று, பறக்கும் ஊர்தியைக் குறிப்பதும் உண்டு. ஆனாற் தொகுப்பு அறியாதோர்க்கு இது குழப்பந் தரலாம். [சில காலம் முன் வரை குழப்பம் வாராதிருக்க, நல்ல தமிழில் வானூர்தி என்றும் புழங்கினர். இப்போது அப்புழக்கம் குறைகிறது. அதனினும் விலகி எங்களிற் சிலர் அட்லாண்டா பெரி. சந்திரசேகரன் பரிந்துரைத்த “பறனை”யையே சுருக்கம், தெளிவு, பயன்பாட்டுப் பெருக்கம் கருதிப் பயில்கிறோம். (பறவையைப் போல்மாக்கிச் செய்தது பறனையாகும்.) பறத்தல் வினை விதப்பானது. மற்ற எளிய ஆற்றங்களிலிருந்து (actions) பிணைத்துப் பெறவியலாத் தன்மை கொண்டது. ’சர்வகலாசாலை’ சரிந்து, ’பல்கலைக்கழகம்’  பரவியது போல, எதிர்காலத்தில் ’விமானமும், வானூர்தியும்’ விலகிப் ’பறனை’யைப் பழகின் நல்லது.]

’எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பதால் ஒவ்வொரு சொல்லிற்கும் பிறப்பும், பொருள்மரபும் இருக்கின்றன. இத்தொடர்ச்சி அறியாமற், சொற்புழக்கம் புரியாது. ”மொழி ஒரு
கருவி; கருத்துப் பரிமாற்றத்திற்கு மட்டுமே இருக்கிறது” எனும் வறட்டுப்பேச்சாளர், மொழிமரபு தெரியாது, நற்றமிழை நக்கலிக்கிறார்; தமிங்கிலத்திற்கும் பரிந்துவருகிறார். முகலுங் காலத்தே (modern times) தமிழ்மரபுகளை மறந்து, பிழைப்பிற்காக வடநாட்டு மரபுகளையும், சமயத் தூண்டலாற் சங்கத மரபுகளையுந் தானே நாம் விழுந்து விழுந்து கற்கிறோம்? இதற்கு மிஞ்சினால் மேனாட்டுப் படியங்களும் (fashions), நுட்பியல்களும் நம்மை உருப்படுத்துமென எண்ணுகிறோம். இம்மரபுகளையும், படியங்களையும், நுட்பியல்களையும் தேடக் கூடாதென்று நான் சொல்ல மாட்டேன். அதேபோது பெருமிதம் ஊட்டும் நம் மரபுகளைக் குறைத்தும் எண்ணமாட்டேன்.

[கட்டடக்கலை பற்றி ஆர்வமுள்ளோர் http://www.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=3. என்னும் அருமையான தொடரைப் படியுங்கள். வள்ளுவர் கோட்டக் கற்றேர் பற்றிய கட்டுரை .http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1116 என்ற இடத்திலிருக்கிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் அடித்தானம் பற்றி ஆழ அறிய http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1018 என்னுஞ் சுட்டியையுந் தொட்டுப் படியுங்கள்.] (அடித்தானம் என்ற சொல்லைத் திருப்பிப் போட்டு அதிட்டானம்>அதிஷ்டானம் என்று சங்கதமாக்கியது வேறொரு கதை. இன்று சிற்ப ஆய்வாளரே தடுமாறித் தமிழ்ச்சொல்லறியாது சங்கதத் திரிவையே ஆளுகிறார். மூலத் தமிழ்ச்சொல் முற்றாக அழிந்தது. தமிழ்-சங்கத மோதல், திரிவுகளில் இப்படி நாமிழந்த தமிழ்ச்சொற்கள் ஏராளம். இதை இன்னொரு பொழுதிற் பேசுவோம்.)

’ஜல சமுத்ரம்’ எனும் இன்னோர் இருபிறப்பியை அறிந்தால், ’ஆகாய விமானம்’ புரியும். ஜலமெனுஞ் சொல் தமிழ் மூலம் காட்டுவது தான். நீர் மிகுத்தோடும்பொழுது ”சலசல” என்று ஓசை எழும்பும். (சரசர, சலசல என்ற ஒலிக்குறிப்புகள் பல தமிழ்ச்சொற்களை உருவாக்கியிருக்கின்றன.) அதன் விளைவாய்ச் சலம்>ஜலம் என்ற பெயர் கொள்ளும். (ஜலம் வடமொழிச் சொல் என்போர் சற்று பொறுக்க வேண்டும். இது போன்ற ஒலிக்குறிப்புச் சொற்கள் பல மொழிக் குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பம் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது.)

’ஜலசமுத்ரம்’ இன்று ’சமுத்ரம்’ எனச் சுருங்கிப் பொருள் கொள்ளப்படுகிறது. ’சமுத்ரம்’ என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பறியத் தமிழில் வாராது முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ் வினையடி சேருதற்பொருள் தரும். குமிதல் தன் வினையாகக், குமித்தல் பிறவினையாகும். குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்துவைத்தது குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். தென்மொழி /வடமொழிப் பரிமாற்றங்களில் [இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருசிலர் சொல்வது போல் ஒருவழி மட்டுமே அல்ல. சங்கதம் மேடு, தமிழ் பள்ளம் என்போருக்கு ஒரு நிகழ்ப்பு (agenda) இருக்கிறது.] குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம் குமுகம் அவர்கள் சமுகமாய் உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி, அவர்கள் புழக்கில் ரகரம் ஊடுருவிச் சமுத்ரம் ஆகும். ஜலமும் சமுத்ரமும் சேர்ந்து ஜல சமுத்ரம் (நீர்க் குமிப்பு) என்ற கூட்டுச்சொல் உருவாகும். நாளாவட்டத்தில் பழக்கத்தால் ’ஜல’ தொகுக்கப் பட்டு ’சமுத்ரம்’ தனித்து நின்று கடலைக் குறித்தது. ’ஜல சமுத்ரம்’ போல ’ஜன சமுத்ரம்’ என்ற கூட்டுச் சொல்லையும் ஊன்றிக் கவனித்தாற் குமித்தல் புரியும். [சமுத்ரத் தீவு>சுமத்ரத் தீவு>சுமத்ராத் தீவு என்றாகும்.] நீர்க்கடல் என்பதில் நீரைத் தொகுத்து கடல் என்றே சொல்கிறோம். குடல்>கடல் என்பது சேர்க்கையைத் தான், குமித்தத்தைத் தான் குறிக்கும். சமுத்ரம் என்பதற்கு நேரிணை கடல்.  

விமானம் என்பது (விதப்புப் பொருள்கொளும்) சங்கத ’வி’ முன்னொட்டும். ’மானம்’ எனும் தமிழ்ச் சொல்லும் சேர்ந்ததாகும். [இதே போல பூதி/விபூதி, செயம்/விசெயம், ஞானம்/விஞ்ஞானம், வாதம்/விவாதம் எனப் பல வி-முன்னொட்டுச் சொற்கள் இருபிறப்பிகளாகின்றன. காட்டாக ’விபூதி’யை எடுத்துக்கொள்ளுங்கள். பூழ்தி>பூதி என்ற தமிழ்ச்சொல் புழுதியின் திரிவாய் நொசிந்த வெண்சாம்பலைக் குறிக்கும். வி-பூதி என்ற விதப்பான (specific) பூழ்தியை - திருநீற்றை - சிவன்கோயிலிற் கொடுக்கிறார். ’ஆன்மா நிலைபெற்றது, அதை மூடும் உடம்பு நிலையில்லாதது;  முடிவில் எல்லா மெய்களும் சாம்பலாகின்றன’ என்றுகுறிப்பது விபூதியாகும். முப்பட்டையாய் நெற்றியிலணிந்து சிவநெறியாளர் ’நிலையிலாமையை’ ஊரிற் பறை சாற்றுவர். இதேகருத்தில் விண்ணவத்தில் திருமண் அணிகிறார்.  அதுவும் நிலையிலாமைக் குறிப்புத் தான். சமயப்புரிசைகள் ஒவ்வொன்றிற்கும் உட்கருத்திருக்கிறது. இந்தக் காலத்தில் விவரந்தெரியாது கேலிபேசி எல்லாந் தொலைக்கிறோம்.]

மானம் என்பது அளவு, மதிப்பென்ற பொருள் கொள்ளும். [மானித்தல் தமிழில் அளத்தற் பொருள் கொள்ளும். ’செரிமானம் (= உணவு செரிக்கும் அளவு), தன்மானம் (=தன்னைப் பற்றிய மதிப்பு), பரிமானம் (ஒரு பொருளைச் சுற்றும் - பரிக்கும் - அளவு), பெறுமானம் (= பெறும் மதிப்பு), வருமானம் (வரும் பண அளவு; ஆகாறு என்ற சொல் வருமானத்திற்கு இணையாய்க் குறளிற் பயில்வது தெரியுமோ?)’ போன்ற சொற்களால், மானத்தின் பொருள்புரியும். it is a measurable quantity.]

கோயில்களிற் பல்வேறு மாடங்களுண்டு. எல்லாவற்றையும் சகட்டு மேனிக்குக் கோபுரம் என்பது சரியல்ல. உண்மையில் வாயில்கள் மேலிருக்கும் உயர்மாடங்கள் மட்டுமே கோபுரங்களாகும் (கோ புரம் = இறை மாடம். மடுத்தது மாடம்; இக்காலத்தில் தரைத்தளத்திற்கு மேல் மடுத்ததை மாடியென்று சொல்ல முற்படுகிறோம். தனி balcony-யும் ஒருவகை மாடந் தான்); காட்டாக,  மதுரைக்கோயிலில் சித்திரைவீதி 4 திசை வாயில்களின் மேலிருப்பவை அரச கோபுரங்களாகும். உள்ளே ஆடி வீதியில் சொக்கர் கோயில் வாயில்களில் இருப்பவை அந்தந்த வாயிற் கோபுரங்களாகும். இதே போல் மீனாட்சி கோயிலில் ஆடிவீதிக்கு முகங்காட்டும் இரு கோபுரங்கள் இருக்கின்றன. இவை தவிரச் சில சின்னக் கோபுரங்களும் கோயிலுள் இருக்கின்றன.

ஆனால் கருவறைகள் மேல் இருக்கும் மாடங்களை விவரமறிந்தோர் கோபுரம் என்னாது, விமானம் என்றழைப்பர். விமானம், கோபுரம் இரண்டிலும் 3,5,7.. என மாடங்கள் இருந்தாலும் விமானத்திற்கும் கோபுரத்திற்கும் கட்டுமான வேறுபாடிருக்கும். கோயில் விமானக் கட்டுமானம் “எத்தனை நிலை மாடம்?” என்று கேள்வி மூலம் உலகோர் வழக்கில் அளக்கப் படுகிறது.  காட்டாகச் சீரங்கம் அரச கோபுரம் 13 நிலை மாடமாகும். மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் 160 3/4 அடிகள் உயர்ந்ததாகும். 

பருந்துப் பார்வையிற் பார்க்கின், கோயில் விமானங்கள் மூலத் திருமேனிகள் இருக்குமிடத்தைக் குறிக்கின்றன. (எல்லாக் கோயில்களிலும் உயர்விமானம் 13 நிலையாய் தஞ்சைப் பெரிய கோயிலில் இருக்கிறது. அது அங்குள்ள கோபுரங்களைக் காட்டிலும் பெரியது.) பழங்காலத்தில் ’இறைவன்’ என்பது கடவுளையும், அரசனையும் சேர்த்தே குறித்தது. ”கோயிற்” சொல்லிலும், கோயிற் புரிசைகளிலும், நிர்வாக நடைமுறைகளிலும் இந்த ஒக்குமை (equality) விளங்கும். அரசன் கோயிலும், தெய்வக் கோயிலும் அக்காலத்திற் பலவகையில் ஒன்று போலிருந்தன. இற்றைக் கோயில் மதில்கள் அற்றைக் கோட்டை மதில்களை மறுபளித்தன. (என் வலைப்பதிவில் ஆங்கிலத் தளபதி அக்னியூ காளையார்கோயில் மதிலை முற்றியதைத் தெரிவித்தேன்.) எனவே அரசன் கருவறையும் விமானம் கொண்டிருக்க வேண்டும். அரசன் ஊருலவும் ஊர்தியும், இற்றைக் கோயிற்றேர் போல் விமானங் கொண்டிருந்திருக்கலாம்.

இற்றைக் கோயிற்றேர்களையும், கோயில் வையங்களையும் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? வையம் என்றவுடன் தடுமாறவேண்டாம். வள்> வளை>வயை>வையை>வையம் என்பது சிலம்பிற் பயிலப்படுகிறது. 50 ஆண்டுகள் முன் நாட்டுப்புறங்களிற் கூட்டு வண்டியைக் குறித்த இச்சொல் இன்று வழக்கற்றுப் போனது. நம் ’வையமும்’ சங்கத ’வாகனமும்’ பொருளாலும், ஒலிப்பாலும் உறவுற்றவை. வாகனத்தையொட்டிய இந்தையிரோப்பியச் சொற்கள் (1520s, from Middle Dutch wagen, waghen, from Proto-Germanic *wagnaz (cf. Old English wægn, Modern English wain, Old Saxon and Old High German wagan, Old Norse vagn, Old Frisian wein, German Wagen), from PIE *woghnos, from *wegh- "to carry, to move" (cf. Sanskrit vahanam "vessel, ship," Greek okhos, Latin vehiculum, Old Church Slavonic vozu "carriage, chariot," Russian povozka, Lithuanian vazis "a small sledge," Old Irish fen, Welsh gwain "carriage, cart;" see weigh) பலவும் இருக்கின்றன. அடிப்படையில் இழுப்பதற்கே இவ்வாகனங்கள் பயன்பட்டன. இழுக்கும் வாகனங்கள் ஊர்திகள் என்றுஞ் சொல்லப்பெறும். 

பின்னால் கோயில் விழாக்களில் இழுப்பதற்கு மட்டுமின்றித் தூக்குவதற்கும் ”வாகனங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். சகடை, வண்டி, தேர் போன்ற இழுப்பு வாகனங்களும், எருது, அரிமா, மூஞ்சூறு, மயில், கருடன், அனுமார், அன்னம் போன்ற தூக்கு வாகனங்களுமாய்ப் பல்லுருக் கொள்ளும். தூக்குவாகனங்களின் அடியில் மூங்கில்களைக் கட்டிக் கோயில் விழாக்களிற் ”பற்றியோர்” தோள்மேல் தூக்கிப் போவர். 6”, 8” விட்டங்கொண்ட முரட்டு மூங்கில்களை இப்போது நம்மூர்ப் பயிரிற் சாத்தாரமாய்ப் பார்ப்பதே இயலாது. (இத்தகை முரட்டு மூங்கில்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளைகின்றன, தவிர, சில கோயில்களில் பழம்பொருளாய் இருக்கின்றன. முரட்டு மூங்கில்களின் வளர்ப்பில் தமிழக அரசு கவனஞ் செலுத்த வேண்டும். மரபு சார்ந்த ஒரு பொருள் நம் கண்முன் அழிந்துகொண்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வாகனச் சொல்லாட்சிகளும், கட்டுமானங்களும் கோயில் கட்டமைப் பொறியியல் (structural engineering) படியாற்றத்தில் (application) வெளிப்படும்.  

ஊருலவர் திருமேனி கொண்டு செல்வதில் இன்னொரு மரத் தூக்கு வாகனம் பற்றியுஞ் சொல்லவேண்டும். குட்டைமிசை போல அடித்தட்டும், அடித் தட்டிற்குக் கீழே 4 கால்களும், மேலே 4 தூண்களும், 4 தூண்களுக்கும் மேலே மூடியதுபோல் ஒரு மேற்றட்டும். மேற்றட்டுப் பக்கங்களில் 4 தாழ்வாரமும் (தாழ்வாரங்களைத் தான் கவோதம் என்பர். கவ்விய உத்தம் = கவ்விய உயர்ச்சி. கவோதம் கபோதமாகத் திரிந்து வடமொழி உருக்காட்டும். நாமும் மயங்கித் தமிழில்லையோ என்று தவிப்போம். கோயிற் தொடர்பான பல சிற்பச்சொற்களை இடைக் காலத்தில் இருபிறப்பி ஆக்கி வைத்திருக்கிறார்.) சேர்ந்து இவ்வாகனமிருக்கும். (மயிலாப்பூர் அறுபத்துமூவர் திருவிழாவில் 63 நாயன்மார் திருமேனிகளை இதுபோலும் தூக்கி வருவதை ஒவ்வோர் ஆண்டும் தொலைக்காட்சியிற் பார்க்கிறோமே, நினைவு வருகிறதா?) ஏராளமான நாட்டுப்புற வீடுகளிலும், கோயில்களிலும் கவோதக் கட்டுமானம் இருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் sun-shade என்கிறார்களே? அதுதான் இது. தவிர மழைத்தூறல்கள் உள்ளிருப்பதை அணுகாதிருக்கவும் இவை வழிசெய்யும்.

ஆக 4 கால்கள், 4 தூண்கள், 1 கீழ்த்தட்டு, 1 மேற்றட்டு, 1 கவோதம் அடங்கிய கட்டுமானத்தில் திருமேனிகளை நிறுத்தி 4 கால்களில் கயிறால் மூங்கில்களைக் கட்டித் தூக்கிச் செல்ல முடியும். இவ்வாகனத்திற்குச் சப்பரம் என்று பெயர். மேலே கூம்பாது சப்பையாக இருக்கிறதல்லவா? பெயர்க் காரணம் அப்படி எழுகிறது.

இழுப்பு வாகனங்களில் வெறுமே 4 மரச்சக்கரங்களும் தேர்க்கால் அச்சுகளும் (தேக்கும், இலுப்பையும் மர வேலைக்குப் பெயர் போனவை) இவை சேர்ந்த தேர்த்தட்டும் கொண்டது சகடை எனப்படும். (இதுவும் இலுப்பையாலானது. சகடை, வண்டி, தேர் செய்ய மரந் தேர்ந்தெடுப்பது பெருங்கலை. சகடையைப் புரிந்து கொண்டால் தேர்க்கட்டுமானம் புரியும்.) சகடு சக்கரத்தையும், சகடை இதுபோல் வண்டியையும் குறிக்கிறது. சகடமென்ற சொல்லும் சகடையைக் குறித்தது. [இன்று ’சகடம்’ மறைந்து எல்லாமே வண்டியானது. எத்தனை சொற்களை நாம் இழக்கிறோம், தெரியுமா? தமிழ்ச்சொற்றொகுதி மறப்பதும் தமிங்கலம் எழக் காரணமாகும்.]

எப்படிக் கோயில் அடித்தானம் பல்லுறுப்புக்களைக் கொண்டதோ அது போலத் தடித்த தேர்த்தட்டும் பல்லுறுப்புகள் பெற்று சிற்ப வேலைப்பாடு கூடி, முழுச்சகடையும் ‘தேரடி’ என்ற பெயர் கொள்ளும். தேர்த்தட்டின் பரிவட்டப் (circumference) பரப்பு பல்வேறு வாகுகளையும், ஒயில்களையுங் காட்டும். இது சதுரமாகவோ (நாகர வகை), எண்கோணமாகவோ (திராவிட வகை), 12, 16 கோணமாகவோ (வேசர வகை) அமையக் கூடும் தேர்த்தட்டின் தடிமன் இரண்டாள் உயரங் கூட இருக்கலாம். திருவாரூர் ஆழித்தேரும், சீவில்லிபுத்தூர் தேரும் மிகப் பெரிதானவை. தேர் செய்யும் தாவதி (ஸ்தபதி = பெருந்தச்சன்) பலவும் செய்து பட்டறிவு கொண்டவராயின் நுணுகிய சிற்ப வேலைகளால், பழனச் (=புராண) செய்திகள் தேர்ச்சிற்பங்களில் விரவும்.

தேர்த்தட்டைச் சுற்றிலும், இடுப்பளவிற்கு, விழையுயரமாய் எழும்பும் மதிற்சுவர் கொடிஞ்சி எனப்படும். [கொடு+இஞ்சி = கொடிஞ்சி, வளைந்த மதிற்சுவர். இதைக் கிடுகென்றும் அழைப்பர். கொடிஞ்சில்/கிடுகு போன்றவற்றால் தேரில் நிற்போர் தம் இடுப்பிற்குக் கீழுள்ள உடலை ஓரளவு அம்புவீச்சிலிருந்து காத்துக்கொள்ளலாம். தேர்செய்யும் நுட்பியல் ஒருசில அகவை முதிர்ந்த தாவதிகளோடு தங்கிப்போய், இன்று தேர்ப்பாகங்கள் பற்றிய கலைச்சொற்களின் உறுதியான பொருட்பாடு பலருக்கும் தெரியாது போனது. இணையத்தில் இதுபற்றிய செய்திகள் தப்பும் தவறுமாய்க் கிடக்கின்றன. தமிழுக்குப் பணிசெய்ய விழையும் ஆர்வலர் மரபு சார்ந்த நிபுணர்களிடம் பேசித் தெளிவறிந்து இவற்றை இணையத்தில் ஆவணப் படுத்த வேண்டும்.] இவையெல்லாம் நம் மரபு. 

தேர்த்தட்டின் மேலிருக்கும் நடுப்பகுதி துணைப்பீடம் அல்லது பார் எனப் படும். அதில்நிற்கும் வில்லாளியின் பார்வை, முன்னிருக்கும் எதையும் நோக்கிச் செயற்படும் வகையில் தடுப்பின்றி இருக்கவேண்டும். துணைப் பீடத்திற்கும் கொடிஞ்சிக்கும் இடையில் தேரோட்டி நிற்பார். தேர்த்தட்டின் மற்ற இடங்களில் போராயுதங்கள் விரவிக் கிடக்கும். தேர்த்தட்டின் கீழே பாதம் என்பது ’வெளித்திட்டு சிற்பவேலைப்பாடுகளைக்’ (projected sculpt work) கொண்டிருக்கும். கொடிஞ்சிக்கும் முன்னால் தேரடியில் தேர்நுகம் பிணைக்கப் பட்டிருக்கும்.

தேர்கள் அலங்கார ஊர்தியாக மட்டுமின்றி, போரிலும் பயன்பட்டன. அலங்கார ஊர்தி கனமாகவும், போர் ஊர்தி எடை குறைந்தும் இருந்தன. பொதுவாகச் சகடைகள் மாடுகளால் இழுக்கப்படும்போது, மாந்தர்கள் ஓட்டுந் தேர்கள், குதிரைகளால் இழுக்கப்படும். (இற்றைக் கோயில் தேர்களில் உள்ள குதிரைப் பொம்மைகள் இதையுணர்த்தும்.) தேரோட்டுபவன், தேர்ப் பாகன், தேர்வலவன் என்றும் அழைக்கப்பட்டான். தேர்ச்சக்கரங்கள் தொடக்க காலத்தில் முழு வட்ட மர உருளைகளாய் இருந்தன. சக்கரங்களுக்கு இருப்புப் பட்டை வார்த்து, இழைத்து, நெரித்து, அணைக்கும் மாழை நுட்பம், பெருங்கற் காலத்தே, கொங்கிற் கிடைத்த இருப்புக் கனிமத்தாற் தமிழர்க்குத் தெரிந்தது, நாட்டுப் புறமெங்கும் கொல்லர் பட்டறைகள் (பட்டடை>பட்டறை என்ற சொல் எழுந்ததே தேர்ப்பட்டை வேலையை வைத்துத் தான்.) வாள், வேல் மட்டுமல்ல, பட்டைகளும் செய்து கொண்டிருந்தன. நாளாவட்டத்திற் சங்க காலத்திலேயே ஆரங் கொண்ட சக்கர அடவுகள் (spoked wheel design) வந்து விட்டன. சக்கரங்களைத் தேர்க்கால்கள் என்றுங் குறிப்பர்.

சக்கரங்களும், ஆரங்களும், தேர்க்கால் அச்சுகளும், அச்சாணிகளும், தேர்த் தட்டும், பாரும், கொடிஞ்சி/கிடுகும், பாதங்களும், தேர்நுகமும் கொண்ட தேரடி மொத்தத்தில் ஓர் உறுதியான கட்டமைத் தொகுவம் (structural integrity) கொண்டிருக்க வேண்டும். இதிற் சிறிது ஆட்டங்காணினும், உறுதியில்லாது போனாலும், தேரடியோடு மேற்கொண்டு சப்பரம், விமானம் எனும் இரண்டு கட்டுமானங்கள் ஒன்றிணைந்து உருவாகுந் தேர் தடுமாறிப் போகும். 

நாட்டுப்புறங்களில் கோயில் திருவிழா நடக்கும் போது சகடைகளில் கடவுட் திருமேனிகளை நிறுத்தி வைத்து, மாடுகளாலோ, மாந்த ஆற்றலாலோ இழுப்பார். (சகடைகளுக்கு வடங்கட்டியிழுத்து நான் எங்கும் பார்த்ததில்லை. தேர்களுக்கே, உராய்வு/இழுப்பு/நகர்ச்சி பொறுத்து 2,4 வடங்கள் கட்டுவது உண்டு.) சகடை, தேரளவிற்குக் கனமாகவும் மீ எடை கொண்டதாகவும் இருக்காது. ஆனாலும் தூக்கு வையத்தையும், அதன் மேலிருக்கும் ஊருலவர் திருமேனியையும் வைத்திழுக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருக்கும். இப்பொழுதெல்லாம் சகடைகள் பெரும் நகரக் கோயில்களிலும், மிகுந்த வறிய கோயில்களிலும் இருப்பதில்லை. நடுத்தரச் செழிப்புள்ள நாட்டுக் கோயில்களிலேயே இருக்கின்றன.

சிலபோதுகளில் கோயிற் சகடையின்மேற் சப்பரத்தை நிறுத்திக் கயிறுகளாற் பிணைத்துத் திருமேனி உலாக்கள் வருவதுண்டு. செல்வஞ் செழிக்கும் கோயில்களில் சப்பரமும், சகடையும் மர வேலைப்பாட்டில் சேர்ந்தே உருவங் கொண்டு, கயிற்றுப் பிணைப்பில்லாது அமைவதும் உண்டு. அதையும் சப்பரம் என்பார். விதந்து சப்பர வண்டி என்பதுமுண்டு. இழுத்துப் போகும் சப்பரமும், தூக்கிப்போகும் சப்பரமும் பயன்முறையால் வேறுபடும். சப்பர வண்டியின் கீழ்த்தட்டுக் கனமாக இருந்து மரச்சிற்ப வேலைப்பாடு சேர்வதே தேரடி எனப்படுகிறது. தேரடி, கனமாகக் கனமாக மாந்த ஆற்றலில் இழுப்பது சரவற்படும். 2,4 என வடமிட்டு பலர் தேரை இழுப்பார்.  

[புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தேர்த் திருவிழாக்கள் பெரும்பாலும் செவ்வாய்க் கிழமையே நடைபெறும். அதனால் தேர்த்திருவிழாவை ஊர்ச்செவ்வாய் என்றே சொல்லுவார்கள். ஊரே திரண்டு கொண்டாடும் விழா இது. ஊர்க்கோயில் வழமையில் சாதிச் சண்டைகள், ஊர்ச்சண்டைகள் எழும் அதிரடி அவலமும் உண்டு. ஊர்ச்செவ்வாயில் ஒருவேளை ஊரே இரண்டுபட்டுக் கூடப் போகலாம். எங்கள் பக்கத்திலுள்ள கண்டதேவி இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.]

பொதுவாக தேரடிகளின் கீழ்த்தட்டுக் கட்டுமானமும் சிற்ப வேலைப்பாடுந் தான் இற்றைக் காலத்தில் அவற்றைப் பார்க்க வைக்கின்றன. இந்தத் தேரடிகளுக்கு மேல் தான் விழாக் காலத்திற் கூம்புகள் [சப்பரத்திற்கு மேலெழும்பும் வெட்டுக் கூம்புகள் (frustum of a cone; இந்தக் கூம்புகளின் அடிச்சுற்று வட்டமாய் இருக்காது. இவை சதுரமாகவோ, பல்கோணமாகவோ இருந்து, தேர்த்தட்டோடு இணங்கும் வகையில் அழகு காட்டி நிற்கும்.) கொடுங்கைகள் (கூம்புகளின் பக்க முனைகளிற் பொருத்தப்படும் மரக்கைகள்), கூவிரம் (கூம்புகளுக்கு மேற் குவிந்து பொருந்தும் அரைக்கோளம்), கலசம் (கூவிரத்திற்கும் மேல் பொருத்தப்படும் கூர்மையான பகுதி; ஒரு காலத்தில் மரத்தாலானது; இந்தக் காலத்தில் மாழையாகவே பொருத்தப்படுகிறது.) போன்றவற்றை உறுப்பாகக் கொண்ட விமானத்தை பயன்பாட்டிற்குத் தக்க உயர்த்தியும், குறைத்தும் எழுப்பித் தேர்களை உருவாக்குகிறார்கள்.

விமானத்திற் கூம்பு கட்டும் வேலைப்பாடு விமானத்துள்ளே பல தூண்களையும், சட்டங்களையும், உத்தரங்களையும் கொண்டிருக்கிறது. (முற்றிலும் கட்டமைப் பொறியியல் - structural engineering - தழுவியது கூம்பையும் கூவிரத்தை மூடினாற் போல் தேர்ச்சீலை வேயப்படுகிறது. தேர்ச்சீலையில் பல பின்னல் வேலைப்பாடுகளும் ஓவிய மெருகேற்றலும் கலந்திருக்கும். விமானத்தின் பரிவட்டத்தில் அழகிய வண்ணந்தீட்டிய ஆல வட்டங்களையும், தோரணங்களையும் தொங்கவிட்டு அலங்கரித்திருப்பார். (பீடுநடையோடு நகர்ந்துவரும் தேரழகு பார்த்துப் பருக வேண்டியதாகும். ’திருவாரூர்த் தேரழகு’ என்பது சொலவடை.) 

சகடை, சப்பரம், விமானம் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த கட்டுமானமே ”தேர்” எனப்படுகிறது. (இந்த 3 கட்டுமானங்களுக்கும் பாகங்கள் உண்டு.) தேர் எனுஞ் சொல்லிற்கு ”உயர்ந்தது” என்ற பொருளுண்டு. ’த’கரம் இல்லாத சொல்லும் ’ஏல்ந்து, ஏர்ந்து’ காணப்படும். ஒருவகை உயர்மரத்தை தேக்கு என்கிறோமே? நினைவு வருகிறதா? தேர்ந்தது உருவத்திலும் கருத்திலும் உயர்ந்து நிற்கிறது.

சகடு-சகடை-சகடம் என்ற சொல்லிணை போலவே உருள்-உருளி-உருளம் என்ற இணையும் உண்டு. இங்கும் முதற்சொல் சக்கரத்தையும், இரண்டாம், மூன்றாஞ் சொற்கள் வண்டியையும் குறித்தன. எப்படிச் சோளம்>சோழம் என்பது வடகிழக்கிற் தெலுங்கில் போய் டகரம் ஆகி (சோடம்; தெலுங்குச் சோடர்கள்) இன்னும் வடக்கே போய்த் தகரமாய்த் திரிகிறதோ, அது போல உருளம்>உருடம்>(உ)ருதம் என்றாகி உகரவொலி மறைந்து அகரவொலி ஏறி ரதமாகும். தமிழரில் பலரும் ரதம்/தேர் வேறானவை என்றெண்ணுகிறார். இரண்டும் ஒருபொருட் சொற்களே. ரதத்தையொட்டி இந்தையிரோப்பியச் சொற்கள் பலவிருக்கின்றன. இன்னும் பார்க்கின், நம் சக்கரத்திற்கும் மேலை மொழிகளில் இருக்கும் chariot, car என்பதற்கும் கூட ஆழ்ந்த தொடர்புண்டு. (மூலந் தெரியாது சிந்தனை மயங்கிய நிலையில், முரணை பேசாது, car ஐச் சகடை/சகடம் என்றழைக்க நம்மில் எத்தனை பேர் முன்வருவர்? மரபோடு பொருத்தா விடின், மகிழுந்து என்ற சுற்றிவளைத்துக் கால காலத்திற்கும் புழங்க வேண்டியது தான்; அன்றேல் கார் என்று கடன்வாங்கி எழுத வேண்டியது தான்.  

நம்மூர்களிற் தேரடி நிலைகொள்ளும் இடங்கள் தேர்நிலைகள், தேர்முட்டிகள் எனப்படும். தேர்நிலையம் என்பதை இணைப்படுத்தியே பேருந்துநிலையம் என்ற சொல் 60/70 ஆண்டுகள் முன் எழுந்தது. தேரடிகளை தகரம் போட்டு மூடி வைத்திருப்பர். விழாக்காலங்களில் தேரடி வீதிகளில் மற்ற கட்டுமானங்கள் சேர்ந்து தேர் உருவாகும். (அண்மைக் காலங்களில் திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் - Bharath Heavy Electricals Limited - உதவியுடன் பல கோயிலார் தேர்ச் சக்கரங்களை முழுக்க எஃகாக மாற்றி வருகிறார். திருவாரூர் ஆழித்தேரிற் தொடங்கிய நுட்பம் இன்று பல தேர்களுக்கும் வந்துவிட்டது. கூடவே சக்கரங்களுக்குத் தாங்கிகளையும் (bearings) பொறுத்துகிறார்கள். தேர் செல்லும் வீதிகள் கற்காரை (concrete) பாவியும் மாறிவருகின்றன. தேர்களை இழுப்பது எளிதாகி வருகிறது. இற்றைத் தொழில்நுட்பம் கொஞ்சங் கொஞ்சமாய் பழைய தேருக்குட் புகுவது சுவையாரமான செய்தியாகும்.) 

சிவ, விண்ணவக் கோயில்களில் நடக்கும் தேர்த்திருவிழா போன்றே, நாக பட்டினம் அன்னை வேளாங்கன்னி, தூத்துக்குடி பனிமய மாதா கோயில் போன்ற கத்தோலிக்க  ஆலயங்களிலும்  சப்பரத் திருவிழா நடைபெறுகிறது.

இவ்வளவு நேரம் தேர்கள், தேரின் பாகங்கள் [தேரடி (இதன் பாகங்களான சக்கரங்கள், ஆரங்கள், தேர்க்கால் அச்சுகள், அச்சாணிகள், தேர்த்தட்டு,  பார், கொடிஞ்சி/கிடுகு, பாதங்கள், தேர்நுகம்),  சப்பரம் (இதன் பாகங்களான கால்கள், தூண்கள், கீழ்த்தட்டு, மேற்றட்டு, கவோதங்கள்) ,  விமானம் (இதன் பாகங்களான கூம்பு, கொடுங்கை, கூவிரம், தேர்ச்சீலை, கலசம்)]பற்றிப் பேசினோம்.

இனி வேறொரு விரிவு பற்றிப் பார்ப்போம். பறவைகள் மாந்தனை என்றுமே ஈர்த்தவை. சிறகுகளைப் ”பக்பக்” (பக் என்ற ஒலிக்குறிப்புச் சொல்லிலிருந்தே பக்கி>பக்சி>பக்‌ஷி>பட்சி என்ற சொற்கள் தமிழிலும் பாகதத்திலுமாய் மாறிமாறிப் புகுந்து உருவாயின.) என்று அடித்துக்கொள்ளும் செயல் (தமிழில் ’பறபற’ என்ற ஒலிக்குறிப்பே பறவை என்ற சொல்லை உருவாக்கியது.) பறத்தலுக்குத் துணையாய் இருப்பதால், தேரில் தேரடியில்லாத சப்பரமும், விமானமும் கொண்ட பகுதியில் இறக்கைகளைப் பொருத்தி வானத்திற் பறக்க முடியும் என்ற கருத்தீடு பரவத் தொடங்கி விமானம் என்ற சொல்லின் பொருட்பாடு மேலும் வியல்ந்தது. சப்பரம் விமானத்துளே பொருந்தியதாயும் அடவு விரிந்தது புப்பக விமானம், எந்திர விமானம், மயில் போன்ற அமைப்பு என்ற தொன்மங்கள் எல்லாம் இப்படியெழுந்தவையே. இவை உண்மையிலே இருந்தனவா, வெறும் கற்பனையா என்பது ஆய்விற்குரிய விதயம்.

இற்றைப் பறனைகளும் தம்முடைய சிறகுகளை விரித்து, வளித்தாரைகளின் (jet streams) ஆற்றலால் பறக்கின்றன. இவற்றை விமானம் என்பது பொருத்தந் தான். அதே பொழுது, பறனை என்பது நாம் எளிதாகச் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. (சப்பரம் போல் அமைப்பிற்றான் இப்பொழுது பயனாளர் பயணிக்கிறோம். பயணி இருக்கைகள் பார்/துணைப்பீடத்திற்கு இணை யானவை. கொடிஞ்சிக்கு அருகில் தேரோட்டி/தேர்வலவன் இருந்தது போல் இன்று பறனையோட்டி/பறனை வலவன் இருக்கிறார். கொடிஞ்சி என்றசொல் cockpit ற்கு இணையானது. தேர்ச்சீலைபோல் இன்று பறனை சுற்றி வனையும் மாழைத்தகடு / நார்த்தகடு இருக்கிறது. விமானத்திற்குள் உள்ள சட்டகங்கள் இன்றும் கட்டமைத் தொகுவம் அளிக்கின்றன. அக்காலத்துக் கூவிரம், கலசம் போலப் பறனையின் வால்ப் பகுதி உயர்ந்து இருக்கிறது. குதிரை / சிறகுக்குப் பகரியாய் தாரை எந்திரப்பொறி பறனையைப் பறக்கச் செய்கிறது.)

உலகமெங்கணும் தேர்கள், சகடங்கள், உருளங்கள் ஒன்றுபோலவே காட்சி யளிக்கின்றன. இவையெலாம் எங்கோ ஓரிடத்தில் நுட்பியலாய் எழுந்தன போலும். பிற்கால வளர்ச்சியான பல்வேறு வண்டிகளும் பறனைகளும் இத் தேர்களிற் தொடங்கியவையே. இவற்றைச் செய்வதில் நமக்கும் ஒரு மரபு இருக்கிறது. இது தெரிந்தால் இற்றை நுட்பியலை நம் வயப்படுத்துவதில் உதவியாய் இருக்குமென்றே இக்கட்டுரை எழுதினேன். தேர் நுட்பங்கள் ஏதோ மேலை நாட்டிற் கடன் வாங்கியவை, நாமெங்கோ காட்டு விலங்காண்டிக் காலத்தில் மாட்டுவண்டி ஓட்டிக் கொண்டிருந்தோம் என்று தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டாம். (’திராவிடம்’ பேசும் ஒருசில தமிழர் இத் தாழ்வு மனப்பான்மையை ஊக்குவிக்கிறார். நம் மரபுகளை ஆழ்ந்து ஆய்வு செய்வதற்கு மாறாய் தாம் வேறெங்கோ பெற்ற அரைகுறை அறிவை கிளிப்பிள்ளையாய் வெளிப்படுத்துவதே சிலருக்குக் கடமை ஆகிறது. கோயில் தொடர்பாய் எது இருந்தாலும் அதை மறுதலிப்பதே சிலருக்கு வாடிக்கையானது.)  பழங்காலப் போக்குவரத்துப் பொறியியலில் நம் பங்களிப்பு கணிசமானதே.

அன்புடன்,
இராம.கி.


 

Thursday, August 29, 2013

கணிநுட்பியலும் தமிழும்

இப்பொழுதெல்லாம் நுட்பக் கட்டுரை எழுதுவதென்றால் 100க்கு 90/95 தமிழர்கள் ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள். (இந்தப் பழக்கம் மடற்குழுக்களிலும் கூடி வருகிறது.) தமிழில் எழுதுவது கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து வருகிறது. தமிழ்க் கணிமை, இணையம் என்று பாடுபடும் உத்தமத்தின் மாநாட்டுக் கட்டுரைகளையே எடுத்துக் கொள்ளுங்கள். சென்ற ஆண்டு 10/15 விழுக்காடு தமிழ்க் கட்டுரைகள் என்றால் இந்த ஆண்டு 1/2 % ஆகவாவது மேலும் இருக்க வேண்டாமா? அப்படி ஆவதாய்த் தெரியவில்லையே? அண்மையில் 2013 மாநாட்டுக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். நொந்து போனேன். அவற்றிலும் அதே கதைதான். (ஆங்கிலம் புறநடையாய் இருக்கவேண்டிய மாநாட்டில் தமிழ் புறநடையாய் இருக்கிறது.)

தமிழிற் கலைச்சொற்கள் இல்லை என்பதெல்லாம் ஆறிய பழங்கஞ்சி. தேடினாற் கிடைக்காதது ஒன்றுமில்லை. (தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்தைப் பிறைக்குறிக்குள் போட்டுக் கொள்ளுங்கள்; எந்தக் குறையுமில்லை.) தமிழை ஏன் புழங்கமாட்டேம் என்கிறோம்? அந்தத் தொகுப்பிற் கலைச்சொற்கள் அவ்வளவு தேவைப்படாக் கட்டுரைகளும் கூட ஆங்கிலத்திற்றான் இருக்கின்றன. தமிழகம் என்றில்லை; ஈழம், மலேசியா, சிங்கப்பூர் என்று வெவ்வேறு நாட்டுப் பேராளர்களும் ஆங்கிலத்தில் எழுதவே விரும்புவது போற் தெரிகிறது. அகவை முற்றிய காலத்தில் ”இந்தத் தமிழைத் தொலைத்து முழுகினால், என்ன?” என்று எனக்குத் தோன்றுகிறது.

”எமக்கு ஆங்கிலந் தெரியும், இந்த நுட்பங்கள் கரதலையாய்த் தெரியும், இவற்றை ஆங்கிலத்திற் சொல்லவுந் தெரியும்” என்று கேட்போருக்கு/பார்ப்போருக்கு ஆடம்பரத் தோற்றங் காட்டுவது தான் நம் குறிக்கோளா? இக்கட்டுரைகளைப் படிப்பது தமிழரும், தமிழ் தெரிந்த பிறமொழியாளரும் தானே? அப்புறமென்ன? தமிழிற் கட்டுரையிருந்தால் குறைந்து போகுமா? அல்லது தமிழிற் சொல்ல நமக்கு வெட்கமா? ”படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்றால் அப்புறம் எதற்கு விழுந்து விழுந்து தமிழுக்குப் பணிசெய்து கொண்டிருக்கிறோம்? அன்றாட வாழ்க்கையிற் தமிழுக்குத் தேவையில்லாத போது, அலுவல் வேலைகளை ஆங்கிலத்தில் வைத்துத் தமிங்கிலர் ஆகும் போது, 10/15 ஆண்டுகளாய்த் தமிழிற் சந்தை ஏற்படுத்தாத போது, அதற்கு அரசிடம் நாம் வேண்டுகோள் வைக்காத போது, மொத்தத்திற் தமிழையே நம் வாழ்க்கையிற் பயன்படுத்தாத போது, தமிழுக்குச் சொவ்வறை படைப்பதும், நுட்பியல்களைக் கொண்டு வருவதும் எதற்கு?

இதில் தமிழ் மக்களும் சும்மா இருக்கிறார்கள், தமிழக அரசும் அப்படித்தான் இருக்கிறது, தமிழ்/கணி அறிஞர்களும் அப்படியே இருக்கிறார்கள். ”பாப்பாத்தியம்மா, மாடு வந்தது; தொழுவத்திற் கட்டினாற் கட்டிக்க. கட்டிக்காட்டிப் போ” என்ற போக்கு யாருக்கு வேண்டும்? உப்பிற்குச் சப்பாணியாய் நாம் ஏன் இருக்கிறோம்? தமிழக அரசின் எந்தத் தளமாவது தமிழிற் கையாளும் வகையில் இருக்கிறதா? தமிழக அரசின் நடவடிக்கைகளை விளக்குவதற்கு வந்த மாநாட்டுக் கட்டுரைகளும் ஆங்கிலத்திற்றான் இருக்கின்றனவே? அரசின் ஆதரவில் பணம் செலவழிக்கும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர், ஆய்வாளர்கள் தமிழில் ஏன் எழுத மாட்டேம் என்கிறார்? தனியார் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் ஆர்வத்திற்றானே தமிழ்க் கணிமையில் வேலை செய்கிறார்? அப்புறம் தமிழிற் கட்டுரை படைத்தால் நிர்வாகம் இவர்களை மதிக்காதா?

தமிழுக்குத் தடை வேறு யாருமில்லை, தமிழராகிய நாம் தானே? ”அவன் கெடுத்தான், இவன் கெடுத்தான்” என்று ஏன் இன்னொருவரை அடையாளங் காட்டிக் கொண்டிருக்கிறோம்? நாம் எழுதும் கட்டுரையைத் தமிழில் எழுத நாம் அணியமாயில்லை, அப்புறம் ”தமிழுக்கு அதைச் செய்துவிடுவோம், இதைச் செய்துவிடுவோம்” என்று பதாகை தூக்கி முழக்குவதிற் பொருளென்ன?  

சரி, எந்தப் பென்னம் பெரிய, வெளிநாட்டு, உள்நாட்டுச் சொவ்வறை நிறுவனமாவது தமிழிற் சொவ்வறை படைக்கிறதா? நாம் தானே அது இது என்று தனித்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம்? தமிழிற் சந்தை இருந்திருந்தால் இந்த நிறுவனங்கள் எல்லாம் ஓடிவந்திருக்குமே? இந்த நிறுவனங்களிடமிருந்து ஒரு கட்டுரையாவது மாநாட்டிற் படைக்கப் பட்டதா? இந்த மாநாடு நடந்ததாவது அவர்களுக்குத் தெரியுமா? அதைப் பொருட்டாக அவர்கள் மதித்திருப்பார்களா? சரி, சில ஆர்வலர்களாற் தூண்டப்பெற்று தமிழிற் தனியே சொவ்வறை படைத்து எதுவாவது பாராட்டிச் சொல்லும் வகையில் விற்றிருக்கிறதா? இந்தச் சொவ்வறைகளை வாங்கும் தேவையோ, எண்ணமோ, ஆதரவு மனப்பான்மையோ, நமக்கு ஏற்பட்டிருக்குமா? தமிழிற் சொவ்வறைச் சந்தை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறோமா? அதற்கு வேலை செய்யாது வெறுமே மாநாடு நடத்தி என்ன பயன்?

நுட்பியல் தெரிந்த நாமே தமிழில் எழுதத் தயங்கினால் அப்புறம் தமிழ் எப்படி நுட்ப மொழியாகும்? வீட்டுக்குள் அரைகுறைத் தமிழ், வீட்டை விட்டு வெளியே வந்தால் தமிங்கிலம் இணைப்பு மொழி, ஆங்கிலம் அலுவலக மொழி, அவ்வப்போது மற்ற தேவைகளுக்குப் பிறமொழிகள் என்றால் அப்புறம் என்னத்துக்கு கணித்தமிழை மெனக்கிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? எல்லாம் நேரத்தைப் போக்கவா? தமிழ்நாட்டிற் தமிழெங்கே பயன்படுகிறதென்று யாராவது சொல்லுங்களேன்?

நம் புலம் எது? நாம் நிலைக்க வேண்டிய காரணம் என்ன?

அன்புடன்,
இராம.கி

பி.கு. இப்படித் திறந்து எழுதிய இராம.கி.யைச் சினந்து கொள்வதாற் பயனில்லை. ஒரு செயல் திட்டம் உருவானாற் பலனுண்டு..

Saturday, August 03, 2013

சில ஆற்றுப் பெயர்கள்

15 ஆண்டுகளுக்கு முன், திரு.நா.கணேசனுக்கும் எனக்கும் இடையே நடந்த தனிமடற் பரிமாற்றத்தில், ஆறுகளின் பெயர்கள் பற்றி சில கருத்துக்கள் தெரிவித்திருந்தேன். அது பலருக்கும் பயனளிக்கும் என்றெண்ணி 1999 திசம்பரில் http://www.egroups.com/group/agathiyar/?start=3146 என்ற பொதுமடலாய் வெளியிட்டேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, வலைப்பதிவிற் சேகரிக்காது போனேன். பின்னால் வேறெதோ தேடப் போய், இணையத்திற் சிக்கியது. ”அடாடா, ஆக்கங்களைச் சேகரிக்கத் தானே வலைப்பதிவு தொடங்கினோம்? பெருமாண்ட இணையத்தில் குறிச்சொல் இன்றிச் சட்டென்று எதுவும் அகப்படாதே?” என்று தோய்ந்து, கிடைத்ததை மறுசீராக்கி, இப்போது வலைப்பதிவிற் சேர்க்கிறேன். தமிழுலகம், தமிழ்மன்றம், தமிழாயம் மடற்குழுக்களிலும் வெளியிடுகிறேன். பொறுத்தருள்க.
--------------------------------
முதலில் தமிழ்ச் சொற்பிறப்பு பற்றிச் சில செய்திகள். (பாவாணருக்குக் கடன்பட்டிருக்கிறேன்.)

ஆ,ஈ,ஊ,ஓ,ஐ போன்ற உணர்வொலிகள் (emotional sounds), ஏ,ஏய்,ஓ,ஏலா,எல்லா போன்ற விளியொலிகள் (vocative sounds), கூ(கூவு), கா....கா(காகம்), இம்(இமிழ்), உர்(உரறு), ஊள்
(ஊளை), குர்(குரங்கு), மா(மாடு), சீத்து(சீறு), ஓ(ஓசை), கர்(கரை), சர..சர(சாரை), சல்(சலங்கை-சதங்கை), கீர் - கீசி போன்ற ஒப்பொலிகள் (imitative sounds), ஊம், சீ,பூ போல் எழுதமுடிகிற குறிப்பொலிகள், மொச்சுக் கொட்டுதல் (smacking), முற்குதல் (clucking), வீளை (whistle) போன்ற எழுதமுடியாக் குறிப்பொலிகள் (symbolic sounds), ஆ-அ-அங்காத்தல், அவ்-கவ்- வவ் போன்ற வாய்ச்செய்கையொலிகள் (simple mouth opening sounds), இங்கு-இங்கா=பால், சோ-சோய்-சோசி=சோறு, டும்டும், பீப்பீ போன்ற குழவி வளர்ப்பொலிகள் (nursery sounds) போன்றவை பல தமிழ்ச் சொற்களின் தோற்றத்திற்குக் காரணமானவை. 

 ஆ,ஈ,ஊ என்று சேய்மை, அண்மை, முன்மைக் கருத்துக்களை சுட்டுஞ் சுட்டொலிகள் (deictic sounds) போன்றவை தமிழ்ச் சொற்பிறப்பிற்கு அடிப்படை ஒலிகள் என்பார் பாவாணர். அதிலும் சுட்டொலிகள், (குறிப்பாக ஊ எனும் முன்மைச் சுட்டொலியே) 75% க்கும் மேலான தமிழ்ச்சொற்களுக்கு அடிவேர் என்றுஞ் சொல்வார். அவர் காட்டும் முறையில் பலபோதுகளில் நான் வேறுபட்டாலும், பாவாணர் கோட்பாட்டு அடிப்படையை ஏற்றுக்கொள்வேன். இதை இம்மடலில் ஆராயப் புகுவது வெகுதூரம் உன்னிப்பு நோக்கிக் கொண்டுசெல்லும். எனவே இப்போது அதைச் செய்ய முற்படவில்லை. கணேசன் கூறிய ப்/வ் சிக்கலுக்கு வருவோம். 

”உ” விலிருந்து உல் முதலடியும், பின் க்,ச்,த்,ந்,ப்,ம் எனும் மெய்களோடு குல்,சுல்,துல்,நுல்,புல்,முல் என்னும் வழியடிகளையும் (1 + 6 = 7) பாவாணர் குறிப்பிடுவார்.
இந்த அடிகளெல்லாமே முன்மைக் கருத்தை முதலிற் குறித்து கால முன், இட முன், முன்னிலை, முன்னுறுப்பு, முற்பகுதி போன்றவற்றைக் காட்டும். முன்மைக்கருத்து என்பது மிக விளைவிப்பானது (productive). இதிலிருந்து பல கருத்துக்கள் ஏற்படலாம்; ஏன் கருத்து வளர்ச்சியால் எண் படிகளின் வழி ஒரு சொற்சுழற்சியே ஏற்படலாம். அதாவது, ”முன்வரல் (தோன்றல்) - முற்படல் - முற்செலவு - நெருங்கல் - தொடல் - கூடல் - வளைதல் - துளைத்தல் ..... மீண்டும் முன்வரல் - என்ற நீள்சுருளாகும் (helix) எண்படிச் சுழற்சியில் ஒவ்வொரு படியிலும் நெருங்கிய கருத்துக்கள் கிளர்ந்து சொற்கள் மாறிமாறி எழுந்துவரும் என்பது அவர் துணிபு.

இச்சொற்பிறப்புக் கோட்பாடு எம்மொழியாளரும் வைக்காத ஒன்று. இதில் சிறப்பென்ன என்றுகேட்டால், மேற்கூறிய 7 வகைச் சொல்லடிகளிலிருந்தும் 7 கருத்துச் சுழற்சிகள் ஏற்படுவதேயாகும். அதனால் எதுகைச் சொற்கள் 7 சுருள்களிலிருந்தும் ஒரே பொருளில் வருவது எளிது. இத்தகைய பல்லடிச் சுருள்களின் கருத்துப்பெருக்கந் தான் தமிழ்ச் சொல்வளத்திற்குக் கரணியம் ஆகும். உல்லெனும் வேரடி போல் வளம் இல்லாததெனினும் இல்லெனும் அண்மைக்கருத்து வேரடியிலிருந்து ”பின்மை - பிற்படல் (இறங்கல்/கீழுறுதல்) - பிற்படுத்தல் (இழுத்தல்)” போன்ற கருத்துக்களிற் சொற்கள் பிறக்கலாம். ஆனால் உல், இல் போலல்லாது (சேய்மைத் தொடர்ச்சி சேய்மையாகவே ஆனதால்) அல்லென்பதிலிருந்து இதுபோன்ற சொற்கள் பிறக்காதாம்.

இனிமேற்றான் "பெண்ணை எனுஞ் சொல் வேணி எனுஞ் சொல்லாகத் திரியுமா? என்ற கணேசனின் கேள்விக்கு விடை வருகிறது. "வகரம் உகரத்தோடு கூடி மொழி முதலில் வாராததால், உகரச் சுட்டடிச் சொற்கள் இற்றைக் காலத்து வகரமுதலாய் இருக்குமாயின், அவை பகர, மகரச் சொற்களின் திரிபென்று அறிதல் வேண்டும்." இதன் படி வண்டியெனும் சொல் பண்டி எனுஞ்சொல்லின் திரிவாகும். முழுங்கு-விழுங்கு, முடுக்கு-விடுக்கு என இன்னுஞ் சொல்லலாம். எந்நிலையில் பகர/மகரங்களில் இருந்து வகரத்துக்குச் சொல் திரிந்தது என்பது சொல்வரலாற்றின் பாற்பட்டது. சில மகர-வகரத் திரிவுகளை இங்கு காட்டுகிறேன்.

முள்>விள்-விளர்-விளரி = இளமை,முற்றாமை
 விள் -விளை -விழை -விழைச்சு = இளமை
விழை-விடை= இளம் பறவை, இளம் காளை
விடை - விடலை = இளைஞன், வீரன்

மழ-(வழ)-வழை=புதுமை
முல்-முள்-மள்-வள்-வரு-வார்-வா-வ. (வருதல்)
முள்-(முடு)-விடு; விடுத்தல் =முற்செல்லுதல்
முள்-(முய்) - (முயம்) - வியம்= முற்செல்லுதல்

நான் மேலுங் கொடுத்துக் கொண்டே போகலாம். இனி திரு. கணேசன் கேட்ட ப்/வ் திரிவுகளில் சிலவற்றைக் காட்டுவேன்.

பரம்-வரம்-வரன் =மேலானது (பார்க்க: உரனென்னுந் தோட்டியான் என்னும் குறள் 24) .
பர-வர-வார்=உயர்ச்சி
பறண்டு -வறண்டு; பறட்டு - வறட்டு, பில்லை-வில்லை=துண்டு, பிசுக்கு -விசுக்கு -விசுக்காணி = சிறியது, சிறிய துண்டு.
புல்-பல்-பால்-வால் - வாலுலகம்=வெண்மணல்,வான்மை=தூய்மை, வாலறிவு =தூய அறிவு.
புள்-பிள்-விள் - விள்ளுதல் = கலத்தல், விரும்புதல்
 பிள்-விள்-விடு;விடுதல் =பிளத்தல்
பிள்-விள்-விடு-வெடு-வெடி
புள்-பிள்-விள்-விள். விளவுதல், விரிவிதல்,விரல்,விருவு,விடர்
புள்-பிள்-விள்-விய்-வ்யம்-வியன் - வியல்-வியலன் - வியாழன்
புள்-பிள்-விள் -விடு -விடர் =குகை
படு-படி-படிவு-வடிவு-வடிவம்
புரி-பரி-வரி; வரிதல் = கட்டுதல்; வரித்தல் = கட்டுதல்;வரி = கட்டும் அரசிறை
பிதிர்தல் -விதிர்தல்
வெள்-வெட்டு-வேட்டு
புள்-புய்-பிய்-(பெய்)-பெயர் - பேர்
பகு-வகு-வகுதி
பாடி-வாடி
பழி-(வழி)-(வயி)-(வய்)-வை; வயை-வசை;வயவு-வசவு
படி-பதி-வதி-வசி-வாசம்
பழமை -வழமை
பழக்கம் -வழக்கம்

இன்னும் பல சொற்களை குறிக்க முடியும். எனினும் விரிவு கருதி விடுக்கிறேன். ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும். இச் சொல்வரலாற்றில் ஒரு சிக்கல் உள்ளது. வகரத்திலிருந்து
தலைகீழாகப் போகும்போது முன்னது பகரமா, அன்றி மகரமா என்று சிலபோது சிக்கல் ஏற்படலாம். காட்டாக,

புல்- பொல்-பொள்-பெள் -வெள்-வெள்ளி
முல்- முள்-விள் -வெள்-வெள்ளி -வெளி

என்று இரு வேறு சொற்றொகுதிகள் அமையும். இவற்றை மேலோட்டமாகப் பார்க்கின், முல், புல் ஆகிய இரண்டுமே வேரடியாகத் தோற்றும். It may seem immaterial as to which one
(mul or pul) is the root, since both have the same meaning. However, deep research may be necessary to identify the correct path. பெண்ணை/வேணி சிக்கலைப் பற்றிய என் கருத்தை இனி அடுத்துக் காணலாம். பெண்ணை எனுஞ் சொல்லின் ஆதி வேரடி புல் என்பதே. புல்-பல்-பல்கு-பலுகு-பலு-பரு-பெரு என்று விரியும். இவையெல்லாமே மிகுதற் பொருளில் வரும். பலவாதல், பல்குதல், பருகுதல்,பெருகுதல் என எல்லாமே மிகுதற் பொருள்பெறும். புல்-புள்-புழு; புழுத்தல் என்பதும் மிகுதல் தான். புல்-(புள்)-(பள்)-பண்-பண்ணை = தொகுதி,மிகுதி. பண்ணை என்பது பண்ணையம் என்றுமாகும். வயலும் தோட்டமும், துரவும் மிகுந்தவரே பண்ணையார். பண்ணை-பணை=பெருமை; பணைத்தல் = பருத்தல், மிகுதல். அடி பெருத்த மரம் பணை-பனை மரம் ஆயிற்று. இது போல, நீர்வரத்து மிகுந்ததால் ஆறு பெண்ணையாயிற்று. இன்னொரு வகையில் பார்த்தால், நெருநல் நென்னல் ஆனது போல பெருநை - பெண்ணை ஆயிற்றெனலாம்.

பெருநை-பொருநை என்பதும் ஆற்றிற்குப் பொதுப் பெயரே. generic பெயரை தனிப்பெயராக நெல்லையின் தாம்பர பெண்ணைக்குச் சொல்வார். இன்னுங் கொஞ்சம் குளிர்ப் பொருள்
ஏற்றித் தண்பொருநை என்றுஞ் சொல்வதுண்டு. தாம்பரம் என்பது தமிழ்ச் சொல்லே. தாம்பரம் சிவப்பென்றே பொருள் படும்.

தும் -தும்பு-துப்பு =சிவப்பு,பவழம்
துப்பு -துப்பம் =அரத்தம்
தும்பு-தோம்பு =சிவப்பு
தோம்பு- (தாம்பு)-தாம்பரம் = சிவப்பு,செம்பு
தாம்பரம்-தாம்பரை-தாமரை = செம்மலர்வகை
தாமரை-மரை.

நாட்டுப்புற மக்கள் தாமரையைத் தாம்பரை என்றே இன்றும் வழங்குவர். தாம்பர பெருநை தாம்பர பெருணை ஆகி தாம்பர ப(ரு/ர)ணி ஆகியுள்ளது. சிலர் பலுக்கும் முறையில் அது தாம்பர வருணி என்றுமாகும். நீங்கள் ஊகிப்பது போல தாம்பர பெருணை - தாம்பர பெருணி - தாம்பர வெருணி - தாம்பரவேணி என்றுமாகலாம். (வெருணி, வேணியாகும் சொல் திரிபு முறை (c1v1c2v2c3v3 > c1V1c3v3) குறித்து ஏற்கனவே இணையத்தில்  எழுதியுள்ளேன்.)

இதே போல கொங்கு நாட்டில் கரூருக்கு அருகில் உள்ள ஆன்பெருநை - ஆன்பொருநை என்றும் அழைக்கப் படுவது உண்டு. ஆற்றிற்கு வரி/வரை என்றும் விரி என்றும் பொதுமைச்
சொற்கள் உண்டு. காட்டு: கோதாவரி, காவிரி. இதனால் பெருநை - பெருவரி என்றும் அழைக்கப் படலாம். ஆன் பெருநை ஆன் பெருவரியாகலாம்.  வட மொழியில் ஆன்பெருவரி - ஆன்பெருவதி-ஆம்ப்ருவதி-ஆம்ப்ரவதி-ஆம்ப்ராவதி-ஆமராவதி-அமராவதி எனப் பலுக்கும் முறையால் அமைவது இயற்கையே.

இதேபோல கரும் பெருநை - கருண் பெருநை - கருண் பெருணை - கருண் பெருணி -கருண் வெருணி - க்ருஷ்ண் வேணி - க்ருஷ்ண வேணி என்று ஆவதும் இயல்பே.

தாம்பர பெருநை, ஆன்பெருநை, தென்பெருநை, வடபெருநை, கரும்பெருநை என்பவை எல்லாம் அந்தந்த ஆற்றின் சிறப்பைக் குறித்து, பின் ஆறெனும் பொருள்படும் பெருநைப் பொதுச்
சொல்லைக் கொண்டுள்ளன. அக்காலத்தில் பொதியமலைக் காட்டின் செறிவால் இரு பருவ மழையிலும் (ஆண்டின் பலநாட்களிலும்) பொதியிலின் புது வெள்ளம் பெருக்கெடுத்தால் அது தாம்பரமாக (சிவப்பாக)த்தான் காட்சியளிக்கும். அடர்ந்த காட்டிற்குள் குறுகிய தூரமே போகும் ஆறு (கான்யாறு) ஆன்(காடு)யாறாகவும், ஆன்பெருநையாகவும் காட்சியளிக்கும்.

இனி, நெடிய தூரத்தில் ஆறு தோன்றிப் பருவகாலத்தில் மட்டுமே பெருக்கெடுத்து மெதுவாய்ப் போகும் ஆறு தெளிந்தே காணப்படும். அவ்வாற்றின் போக்கு (flow rate) குறைந்து, படுகைப்
பரப்பு விரிந்தால் பாசிகளும் செடிகளும் ஆற்றுப்படுகையில் வளர்வது இயற்கை. அப்பொழுது அந்த ஆறு கருப்பாய்த் தெரியும். கரும்பெருநை அப்படி ஏற்பட்டிருக்கலாம்.

ஒரு மலைச்சாரலைப் பிளந்து, அருவியாய்க் கொட்டி விரிந்து வருவதே தமிழிற் சொல்வரலாற்றின் படி 'விரி' என்றாகும். இன்றைக்கும் 'புகையின கல்'லிற்கு (ஹொஹனேக்கல்) அருகில்
அறுத்துக் கொண்டு விரிகிற ஆறு தானே காவிரி? அவ்விடமெல்லாம் கா - காடு தானே? காவிரி என்பது பொருத்தமே.

நீண்ட நெடும் ஆறான கோதாவரியின் சிறப்பே அதன் பெருக்குத் தான். வரிந்துகட்டித் தடங்கொள்ளும் அதை வரி என்பது பொருத்தமே. அதன் படுகை பல்லூழி மாறாவகையில் (காவிரி
தன் படுகையைப் பல முறை மாற்றிக் கொண்டதுபோல் அல்லாது) குற்றமில்லாது இருப்பது அதன் சிறப்பு. கோது - குற்றம், வளைவு என்ற பொருள் கொள்ளூம். கோதாவரி ஒரு கோதாத (=மாறாத) ஆறு. கோதாவரிக்கு வடமொழி கலந்த தமிழில் விருத்த கங்கை, விமலை என்ற பெயர்களை சூடாமணி நிகண்டு கூறும். ஒரு முதிய ஆற்றை (முதிய, மாறாத படுகை கொண்ட ஆற்றை) விருத்த கங்கையென்று அழைத்து இருக்கிறார்; விமலம் என்பதும் குற்றமில்லாதது / மாற்றமில்லாதது என்றே பொருள்படும்.

இதே போல வேகமாக வந்த வரி வெள்ளை நுரை காட்டிவரும். வெள்கை வரி வேகவரி என்று ஆகி வேகவதி என்று திரிந்து வேகை என்று சுருங்கி வடமொழித் தாக்கில் வைகை/வையை என்று உருமாறிப் போய்விட்டது. (அதேபொழுது காஞ்சிக்கு அருகிலுள்ள இன்னொரு வேகவதி வெள்கா என்று ஆழ்வார் காலத்தில் அழைக்கப்பட்டது. வெள்கா>வெஃகா என்றாகும்.)  நாமும் பொருள் விளங்காமல்
'வை-கை/ கையை வச்சாத் தண்ணி வரும்' என்று வேடிக்கைப் பொருள்சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பருவ காலத்தில் மட்டும் வெள்ளம் வந்து பரந்த படுகையில் ஆழமில்லாது சென்று பின் சில நாட்களில் வெய்யிலால் உலர்ந்து, வெறும் நிலத்தடி நீரை மட்டுமே கொண்டிருக்கும் ஆறு
வேய்ப்பாறு; இன்று வைப்பாறு என்று கூறப்பட்டு தூத்துக்குடி/மதுரை மாவட்டங்களைப் பிரித்துக் கொண்டு வறண்ட புவியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்து வெள்ளையான,தெளிவான ஆறு துங்கவரை. துங்கம்-தெளிவு. துங்கவரை-துங்கவதை-துங்கபதை-துங்க பத்ரை (வழமையான வடமொழிச் சொற்றிரிவு)
ஓ -வென்று இரைச்சல் போட்டு, நருந்து கொண்டே வரும் 'வரை' நருவரை - நருவதை-நருபதையாகும். நருபதை இக்காலத்தில் நருமதை என்றும் அழைக்கப் படுகிறது. ஏற்கனவே சொன்னது போல 'வதை>’மதை' யாகவும் மாறலாம். நருதல் = இரைச்சல் போடுவது. நருபவன் - நரலுபவன் = பேசுபவன்; எனவே நரன் = மனிதன். குரங்கிலிருந்து வேறுபட்டவன் இதே போல தால் என்பதும் இரைச்சலே. தால் வரி -தாவரி-தாவதி - தாபதி - தாப்தி. வட இந்தியாவில் 'வதி/வதை' என முடியும் ஆறுகள் எல்லாவற்றிற்கும் சொல் மூலம் தமிழில் உள்ள 'வரி/வரை'யே.

இனி யமுனை என்பதும் சங்க இலக்கியத்தில் தொழுநை என்றே கூறப்படும். இதன் சொல் வரலாறு இன்னும் அறிந்தேனில்லை. கங்கையின் சொல் தோற்றமும் அறிய வேண்டும்.

சிந்து பற்றி திரு கணேசன் indology list -இல் எழுதியதைப் படித்திருக்கிறேன். 'ஈந்து' என்று ஈச்ச மரத்தை ஒட்டிச் சிந்து என்னுஞ் சொல் பிறந்ததாக எழுந்த அவர் கருத்து மாறுபட்டதாக
உள்ளது. நான் அறிந்த வரை சிந்து என்பதற்கு நீர் என்பதே பொருள். சிந்துதல் என்று வினைச் சொல்லே இருக்கிறது. சிந்துதல்-சிதறுதல் என்பதெல்லாம் ஒரு பொருட்சொற்களாகும். சாதாரணமாக தமிழில் வினை சொல் பரந்து பட்டுப் பயன்படும் பொழுது அதனை ஒட்டிய பெயரும் தமிழாகத் தான் இருக்கும். சப்த சிந்து என்னும் பொழுது சிந்து என்பது ஆறு என்னும் பொதுமைப் பொருளில் அல்லவா பயன்படுகிறது? முயன்றால் சிந்துவின் கிளை ஆறுகளுக்கும் சரியான சொல் மூலம் காண முடியும். சிந்து பார்க்க: குளிர்ச்சொற்கள் என்ற என் வலைப்பதிவு இடுகை. http://valavu.blogspot.in/2009/09/blog-post.html

தமிழில் நெகிழும் பொருள்கள் நீளுதலால், நெகிழ்ச்சிக் கருத்தில் இருந்து நீட்சிக் கருத்துத் தோன்றிற்று. செங்குத்து,படுகை என்னும் இருவாகிலும் நீட்சி நிகழும்.

நெகிழ்-நீள்-நீளம், நீள்-நீட்சி,
நீள்-நீர் = நெகிழும் (நீளும்) பொருள்
நீர் - நீல் - நீலம் = கடலின் நிறம்.

எகிப்தின் பேராறான நீல ஆறும் இதே பொருள் கொண்டது தான். வழக்கம் போல் மடல் நீண்டுவிட்டது. நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
 இராம.கி. 

Tuesday, July 23, 2013

படியுரை (affidavit)

இது மரு.புருனோவின் ”பயணங்கள்” http://www.payanangal.in/2010/04/blog-post.html என்ற வலைப்பதிவில் அங்காடித்தெருப் பணியாளர்களின் நிலையும், இளம் வழக்குரைஞர்கள் (Junior Advocates), துணை நெறியாளர்கள் (Asst. Directors) பற்றி மருத்துவர் அளித்த இடுகையில் நான் முன்னால் [06/04/2010] அளித்த முன்னிகையின் படியாகும். affidavit என்ற சொல்லைப் பற்றிய இது, இணையத்தில் வேறொன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது மீண்டும் கைக்குக் கிட்டியது. இதை என் வலைப்பதிவில் இட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்று ஒரு விழைவால் இங்கு பதிவு செய்கிறேன். உங்கள் வாசிப்பிற்கு.

[இப்படிப் பல்வேறு இடங்களில் வெவ்வேறு ஆங்கிலச் சொற்களுக்கு இணையாய்த் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறேன். ஆனால் அவற்றைப் பின்னால் ஓரிடத்திற் சேகரித்து ஆவணப்படுத்தாது விட்டிருக்கிறேன். தொலைந்தவை மிகப்பல. வருத்தந்தான். மீந்தவற்றுள் ஆங்கிலச்சொல்லை அப்படியே அடித்துப் பக்கத்தில் இராம.கி. என்று தமிழில் அடித்துத் தேடினால் கூகுளில் ஏராளங் கிடைக்கும் போற் தெரிகிறது. நான் தொலைத்தது எனக்கே இப்படித்தான் கிடைக்கிறது.]

----------------------------------------
அபிடவிட் என்ற சொல்லைக் கொடுத்து அதன் பின் (ஆணை உறுதி ஆவணம்; ஆணை உறுதி வாக்குமூலம்; உறுதிமொழி ஆவணம்; பிரமாணப் பத்திரம், சத்தியவோலை, உறுதிமொழிப் பத்திரம்) என்ற சொற்களைக் கொடுத்திருந்தீர்கள். இவற்றையெல்லாம் ஏதோ சில அகரமுதலிகளில் இருந்து நீங்கள் திரட்டியிருக்கலாம்.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் ’சட்டத்தமிழ் அகராதி’யில் Affidavit என்பதற்கு [(S.3(3). General Clauses Act). Statement in writing and on oath, sworn before one who has authority to administer oath] என்று சொல்லி ஆணையுறுதி ஆவணம், உறுதிமொழிப் பத்திரம், ஆணையுறுதி என்ற சொற்களைக் கொடுத்து ‘ஆணையுறுதி ஏற்கும் அதிகாரம் பெற்றவர் முன், மெய்யுறுதியாகவும் எழுத்துமூலமாகவும் அளிக்கப்படும் வாக்குமூலம்’ என்று விளக்கமளித்துள்ளார்கள்.

இதேபோல Online Etymological Library இல் “1590s, from M.L. affidavit, lit. "he has stated on oath," third person sing. perf. of affidare "to trust," from L. ad- "to" + fidare "to trust," from fidus "faithful," from fides "faith" (see faith). So called from being the first word of sworn statements.” என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

எனக்கு மேலே கொடுத்துள்ள எந்தச் சொற்கள் மேலும் அவ்வளவு பிடிப்பு வரமாட்டேன் என்கிறது. ஏதோ குறையிருப்பது போல் உணருகிறேன். ஏனென்றால், அவை சுற்றிவளைத்து வழக்கவையில் நடைபெறும் செய்முறைகளை வைத்தே விளக்கம் கொடுப்பது போல் அமைகின்றன. இதற்கு மாறாக நம்முடைய காலகாலமான வழக்கத்தில் இருந்தே ஒரு சொல் காணமுடியும் என்று எண்ணுகிறேன்.

இப்பொழுது யாருக்கோ ஒரு மடல் எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். இதில் முடிவில் எப்படிக் கையெழுத்துப் போடுகிவீர்கள்? “இப்படிக்கு, ............. புருனோ” என்று தானே போடுவீர்கள்? நம்முடைய முப்பாட்டன், எள்ளுப்பாட்டனும் இப்படித்தான் கையெழுத்துப் போட்டிருப்பார்கள். ஏன் பேரரசுச் சோழர் காலத்திலேயே இந்தப் பழக்கம் இருந்ததை “இப்படிக்கு இவை கோயிற் கணக்குச் சீயபுரமுடையான் பெரிய பெருமாள் எழுத்து.” “இப்படி அறிவேன் மருதூர் சங்கரநாராயண பட்டனேன்” என்று (தெ.கல்.தொ.12.கல்.218, 179) என்று குறிப்பிட்டு ”கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி” என்னும் பொத்தகத்தில் (சி.கோவிந்தராசன், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், 1987) வரும்.

”இப்படி, அப்படி, எப்படி” என்னும் போது அதில் வரும் படி என்ற சொல் நடந்து ”பட்டதைச்” சொல்லும் பொருட்பாடு காட்டும். படுதல் = நடவுதல்.

“இன்னபடிக்கு இது நடந்தது”.
”இந்தப்படிக்குச் செய்”
”அப்படியா அவர் சொன்னார்?”
”எப்படி இதுபோல அவன் கேட்கப் போயிற்று?”

எல்லாமே நடந்ததை, நடக்கிறதை, நடக்கப் போவதைக் கேட்பவை தான். படிதல் என்பது படுதல் என்பதைத் தொடர்ந்து எழுந்த வினை. படுதல்>பட்டுதல் என்பதில் இருந்து பட்டகை = fact என்ற சொல் எழுந்தது போல், படிதல் என்பதில் இருந்து படியுரை = affidavit என்ற குறுஞ்சொல்லை உருவாக்க முடியும். வேண்டுமானால் ஆவணம் என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்ளலாம். [என்னைக் கேட்டால் அப்படியொரு சேர்ப்புத் தேவையில்லை.]. நடந்ததை நடந்தபடி உரைப்பது ”படியுரை”. affidavit என்பதும் அது தான். சொல்லும் சுருக்கமாய் அமையும்.பொருளும் விளங்கும். நம்முடைய மரபும் தொடரும்.

நயமன்றத்தில் வழக்குரைஞர் தன் கட்சிக்காரரின் படியுரையைச் சமர்ப்பிப்பதில் எந்தப் பொருட்பாடும் குறையாது. படியுரை என்பது பொதுவான உண்மையல்ல. வழக்காளரின் பார்வையில் “இப்படி நடந்தது” என்று உரைக்கும் ஓர் ஆவணம். அவ்வளவுதான். இரு வழக்காளரின் பார்வைகளும் மாறுபடலாம் அல்லவா? வெவ்வேறு படியுரைகளைக் கேட்டு, படித்து, குறுக்கே கேள்வி கேட்டு, உசாவி, முடிவில் பிழை (குற்றம்) யாரிடம் என்று அங்கே கண்டுபிடிக்கிறார்கள். இதில் உறுதி, ஆணை என்பவையெல்லாம் ஊடுவரும் செயல்கள். பிழை(குற்றம்) நடந்தபோது இருந்தவையல்ல.

affidavit என்பது ”பிழை(குற்றம்) நடந்தபோது வழக்காளர் தன் பார்வையில் எப்படி உணர்ந்தார்?” என்று சொல்வது.

அன்புடன்,
இராம.கி.